சிறுகதை

கல்ப லதிகா – பானுமதி சிறுகதை

‘உச்சிக்குக் கீழே உண்ணாக்கு மேலே வச்ச பொருளின் வகையறிவாரில்லை’

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இது தத்துவத்திற்கான சமயமில்லை. தப்ப வேண்டும், நாம் அனைவரும் தப்ப வேண்டும், உயிர்களென, இருப்பதே நாம் நால்வர்தான்.”

‘மேவிய சீவன் வடிவது சொல்லிடின்

கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு

மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால்

ஆவியின் கூறு நூறாயிரத்தில் ஒன்றே’

“உயிர் போகப் போகும் நிலையில் நல்ல தமிழைச் சொன்னதற்கு நன்றி. உலகத் தலைவர்களிலேயே எஞ்சியுள்ள ஒருவர் நம்முடன் இருக்கிறார், அவர் காப்பாற்றப் பட வேண்டும்.”

தலைவர் இடைபுகுந்தார். ‘நம்மில் இளையவன் விமலன். அவன் தாவிக்குதித்தேறி தப்பிக்கட்டும். இது என் கட்டளை.’

அவர்கள் பூமியின் விளிம்பில் நின்றார்கள். மூச்சிற்குத் தவித்தார்கள். மாசு அதிகரித்த காற்று நீலமும், செம்மையுமான புழுதியை வாரி இறைத்தது. கடலலைகள் பூமியை அறைந்து பெயர்த்தெடுக்கத் தவித்தன. போர்கள், உயிர்களைக் கொல்வதற்கு கிருமிகளைப் பயன்படுத்திய போர்கள், இரு நாடுகளின் பகைமையில் உருவான ஒன்று, உலகையே இரு கட்சிகளாகப் பிரித்து பூண்டோடு உயிர்க்குலங்கள் அனைத்தையும் அழித்த போர்கள், மனிதனின் அகங்காரத்தின் விளைவு. அவன் பயன்படுத்திய நச்சு வாயுக்கள் அனைத்து உயிர்களையும் அழித்துவிட்டன. வானில் ஏறும் ஏணி என்ற உடை வடிவமைப்பில் அவர்கள் நால்வரும் பூமியின் மேலே புரண்டு தப்பித்து இன்று விளிம்பிற்கு வந்துவிட்டார்கள். ஜப்பான் நாடு முதன் முதலில் இவ்வகை ஏணிகளைப் பயன்படுத்தியது.

ஏணி என்ற வடிவமைப்பே மடங்கும் நீளும் வகையினால் உயிரிகளின் மூலக்கூற்றின் கட்டமைப்பை ஒத்தது.

‘தனியாக நான் எங்கு செல்வது? உங்களுடனே இருந்து விடுகிறேன்; இல்லை, இறப்பதற்காகச் சேர்ந்து இருப்போம்.’

‘விமலன், மனிதன் இருக்க வேண்டும் என்றென்றும். இயற்கையின் ஆற்றல் மிக்கப் படைப்பு மனிதன்தான். அவன் விண்ணிலிருந்து மண்ணைப் படைப்பான். செய், முயற்சி செய், போராடிச் சாவதில் மேன்மை உண்டு. மேலே போ, உயிரை உற்பத்தி செய்’

‘கழுகுபாட்டை’ இயக்கினான் விமலன். தொற்றி வான்வெளியில் ஏறினான். எங்கே போய் எதைத் தேட, யாருக்காக, எந்த உயிரை அவன் உற்பத்தி செய்ய? எப்படி முடியும்? நியுக்ளியஸ்ஸிற்குள் டி என் எவைச் சுற்றி வைத்திருப்பது எத்தகையதொரு தொழில் நுட்பம்! ஓரு சிறு தேனீர்க் கரண்டியில் உள்ள டி என் எவைக்கொண்டு எத்தகையதொரு பெரிய உலகம், அதன் வெவ்வேறு உயிரிகளைப் படைக்கலாம்! எத்தனைத் தகவல்களைச் செலுத்தலாம் தன்னையே அதனால் நகலெடுக்க முடியுமே! டி என் எவின் ஒற்றை இழையான ஆர் என் எ, எத்தனைத் திறமையாக ரைபோசோம் மூலம் புரதத்தைத் தருகிறது. ஜீனோம் சாதுர்யமானது; சரியான சூழலில் தன்னையே நகலெடுக்கும் திறன்; எல்லாம் சரி, ஆனால் அவன் எப்படி உயிரை உருவாக்குவான்? திசையற்ற பயணத்தில் செல்வதாகத் தோன்றியது அவனுக்கு!

சிற்றெறும்பை உருவாக்க முடியுமா மனிதனால்? ஒரு திசு உயிர் வாழ குறைந்தது மூன்று சிக்கலான மூலக்கூறுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். டி ஆக்ஸிரைபோ நியூக்ளிக் அமிலம், ரைபோ நியூக்ளிக் அமிலம், புரதங்கள். இவற்றை அவன் எங்கே தேடுவான்? முதலில் அவன் வானில் ஒரு இடத்தில் இறங்க வேண்டும். எந்த இடம்? விண்வெளிக் கூடங்களும், இடையில் நிறுவிய விண்வீடுகளும் எங்கே?

அவன் பறக்கும் அந்த ‘பாட்’ திடீரெனத் தாமதிக்கத் தொடங்கியது. அது ஏதோ ஆபத்தை எதிர்நோக்குகிறது. மண்ணில் மட்டுமல்ல, விண்ணிலும் ஆபத்துக்கள், அபாயங்கள். அவன் ‘பாட்’டின் செயல் வேகத்தைக் கூட்ட முயன்றான். இல்லை, பலனேதுமில்லை.

ஒரு சுழலும் கோளினுள் இழுக்கப்பட்டதுதான் அவனுக்கு நினைவிலிருக்கிறது.

*******

சரயூ நதிக்கரை. மண்ணைப் பிசைந்து முட்டையும், முத்தும் கலந்து செறிவூட்டப்பட்ட அரண்மனைக் கட்டிடங்கள், அந்தப்புரங்கள். தாமரை இதழ் அடுக்குகள் போல் மையத்திலிருந்து விரிந்து நாற்சந்திகளில் இணையும் வீதிகள். கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட அரங்கநாதனின் ஆலயம் மிக எடுப்பாக நின்றது. சுற்றிலும் சிறு சுதை உருவங்கள் அமைந்த கோயில்கள். நீர்நிலைகளும், பூங்காக்களும் அழகாக அமைக்கப்பட்டிருந்தன. ஆயுதப் பயிற்சிக் கூடங்கள், நடன சாலைகள், விவாதக் கூடங்கள் தனித்தனியான கட்டட அமைப்பு கொண்டிருந்தன. தலைநகரம் என்பதால் வணிகர்களும், தொழில் செய்வோரும் தெருக்களில் நடமாடிக்கொண்டேயிருந்தனர். கழனிக் காடுகளில் சாய்ந்தாடும் நெற்கதிர்கள், ஏற்றப் பாடல்கள், மண்சட்டிகளில் வடித்த கஞ்சியில் தாளிதம் செய்து சேர்த்த காய்கள், மீன்கள்.

கணிகையர் இல்லங்களுக்குச் சென்று மகிழ்வதில் தான் சத்தியவிரதனுக்கு இன்பம். அவர்கள் அவனுடைய அரண்மனைக்கே வரும் நியதி இருக்கிறது. அவனுக்கு அவர்களின் இல்லச் சூழல்தான் உவப்பானது. உடலைக் கொண்டாடும் உன்மத்தம் பெருகும் இடம். அரசரான தந்தை திரியருனிக்கு தன் மகனின் செயல் எதுவும் பிடிக்கவில்லை. வசிட்டர் செய்யும் எந்த உபதேசமும் அவனுக்குப் புரியவில்லை. அவன் பார்வையில் தந்தையோ, குருவோ மானுட உணர்ச்சியே அற்றவர்கள்.

எத்தனை முயன்றும் சத்தியவிரதனால் தன்னை உடலாக மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது. இக்ஷ்வாகு குலத்தின் இளவரசன். ஆடியில் காணும் அழகிய பிம்பமன்றி அவன் வேறு யாராக இருக்க முடியும்? இந்த உடல், அது உணர்த்தும் போகங்கள், அது அனுபவிக்கும் இன்பங்கள், அதுவன்றி ஏதோ இருக்கிறதாம் உள்ளே, என்ன ஒரு கதை இது! அவன் தன் உடலுடன் தான் சொர்க்கத்திற்குச் செல்வான்.

இதற்கு உதவி செய்ய மறுத்த வசிட்டரின் பசுவை அவன் கவர்ந்து கொன்று தின்று பசியால் வாடுவோருக்கும் பகிர்ந்தான். அதில் விஸ்வாமித்திரரின் குடும்பமும் அடக்கம். ஆனால், வசிட்டர் சாபம் கொடுத்து அவனை ‘திரிசங்கு’வாக்கிவிட்டார்.

அழகிய அவன் உடல் எத்தனை அருவெறுப்பாகிவிட்டது! காண்போரெல்லாம் அவனைத் தவிர்த்தனர். அவன் தந்தை அவனைக் காட்டிற்கு விரட்டிவிட்டார். அவன் தன் அழகிய உடலை மீண்டும் பெறத் தவித்தான். மேலே அமுதம் கிடைக்கையில் அவன் அழகின் இலக்கணமாகிவிடுவான். அவன் சுந்தரன்; ஆம், அவனை உடலுடன் விஸ்வாமித்திரர் சொர்க்கத்திற்கு அனுப்பினார். இந்திரன் அனுமதி மறுத்து கீழே தள்ள, முனிவர் மேலே அனுப்ப நல்ல இழுபறியில் சிக்கிக்கொண்டான் திரிசங்கு. தேவேந்திரனுக்குச் சவாலாக ஒரு சொர்க்கத்தைக் கட்ட ஆரம்பித்து விண்மீன்களையும் படைக்கத் தொடங்கினார் முனிவர். பயந்த இந்திரன் வரம் பல தருவதாகவும், கட்டப்பட்ட அந்த சொர்க்கத்தில் திரிசங்கு இருக்கலாம் என்றும், மேலே புது உலகத்தை உருவாக்க வேண்டாமென்றும் வேண்டினார். அதன்படி திரிசங்கு தனக்கென, தன் உடலுடன் தன் சொர்க்கத்தில் மிதந்துகொண்டிருக்கிறான்.

*******

விமலன் அந்தத் தொங்கும் சொர்க்கத்தில், அயோத்தியின் இளவரசனான ஒருவனை இத்தனைத் தனிமையில் எதிர்பார்க்கவேயில்லை. நிலையில்லாது சுற்றி வருகிறர் அவர்; வானிலும் இல்லை, பாவம் திரிசங்கு மண்ணிலுமில்லை.

விமலனும் கூட உடலோடு சொர்க்கம் வர ஏங்கியவன் என்று அனுமானித்துக் கொண்டான் திரிசங்கு. அது அவனுக்குத் தேவையான உண்மை என்றே நம்பினான். விமலன் எங்கிருந்து வந்திருக்கிறான், எதற்காக வந்திருக்கிறான் என்பதிலெல்லாம் திரிசங்குவிற்கு ஆவலில்லை. ‘இவன் மனித உருவில் இருக்கிறான், அது ஒன்றே போதுமானது. தனிமையாய் எத்தனைக் காலம்;ம்…முனிவர் நல்லவர், இவனை அனுப்பிவைத்துள்ளார். இவனும் அமிர்தம் எடுத்துக்கொள்ளட்டும். நிரந்தரமாகத் என்னுடன் இருக்கட்டும்.’

விமலனோ சிந்தித்தான். ‘இவன் திரிசங்குவாக இல்லாமல், திரிசங்கியாக இருந்தால் உயிரின் தொடர்ச்சியைக் கொண்டு வந்து விடலாம். அதற்கு வழியில்லையே. பெண் சக்திமிக்கவள்; இருவராகப் பிரித்துச் சதி செய்த சிவன் தன்னுடனே சக்தியைப் பாதியாக வைத்துக்கொண்டு பிரியாமல் ஒன்றாக நின்றுவிட்டான்!’

ஆனால், ஜெனோபாட்டில் உள்ள திசுக்களை வைத்து ஏதாவது உண்டாக்கப் பார்க்கலாம். ஆனால், எதில் உருவாக்குவது, நொதிகளுக்கு எங்கே போவது? ராபர்ட் ஷப்பைரோ சொன்னாரே-உயிரின் எல்லா அடிப்படைக் கூறுகளையும் உண்டாக்க முடியும்-அவை விண்கற்களிலும் இருக்கின்றன. இந்தக் கோளில் விண்கற்கள் இல்லாமலா போய்விடும்? உயிரிலித் தோற்றம் எளிய கரிமச் சேர்மத்திலிருந்து, அதாவது,உயிரற்ற பொருண்மத்தில் இருந்து உயிர் இயல் நிகழ்வாகத் தோன்றியது அல்லவா?

திரிசங்கு சொர்க்கம் சுழன்றுகொண்டிருக்க அவர்கள் இருவருமே சுழற்சியின் விசையை உணர்ந்து கொண்டிருந்தார்கள். பூமி சுழல்வது உடலால் உணரப்படும் ஒன்றல்ல; ஆனால்,இது அவர்களைச் சற்று தள்ளாடச் செய்தது. பழக்கத்தின் காரணமாக திரிசங்குவின் சமனிலை மாறவில்லை.முட்டி உருண்டவன் விமலன் தான்.இத்தனையிலும் வியப்பான ஒன்று, திரிசங்குவின் இளமை.அதைச் சொன்ன போது அவன் விரக்தியாகச் சிரித்தான்.

“விமலா, என்னைப் போல் உடலைக் கொண்டாடியவன் யாருமில்லை. உடல் தான் நான்.அதன் இன்ப ஊற்றுகளை அறியாமல் பிதற்றுகிறார்கள். ஆனால்,தனிமையில் இந்த உடலினால் என்ன பயன்? வரம் கேட்கக்கூட தெரியாத முட்டாள் நான்.”

‘ஏன் அமிர்தம் உங்களுக்கு நிறைவளிக்கவில்லையா?’

“மழுங்கடிக்கும் நிறைவுதானது, அனுபவித்த நிறைவா அது? அது போகட்டும், விஸ்வாமித்திரர் உன்னை அனுப்பிவைத்தாரே, அந்தக் கருணைக்கு நான் என்ன செய்வேன்? உன்னை அவரைப் போல் நடத்துவேன், உனக்கு என்ன வேண்டுமோ கேள், கிடைக்கும்; ஆனால், இல்லாததைக் கேட்காதே”

‘உங்கள் நட்பைத்தவிர எனக்கென்ன தேவை?’

“உன் உடைகள் நன்றாக இருக்கின்றன. நான் ஒரு முறை அணிந்து பார்க்கட்டுமா?”

‘எனக்கான ஆடைகள்?’ என்றான் விமலன்.

“என்னுடயதைப் போட்டுக்கொள். பயப்படாதே. என்னிடம் நச்சுக் கிருமிகள் இல்லை. உனக்கு நான் துளி அமிர்தம் கொடுத்திருப்பதால் உன் கிருமிகளும் கொல்லப்பட்டுவிட்டன.”

திரிசங்கு உடை மாற்றுகையில் அவனது மார்பிற்கும், வயிற்றிற்கும் இடையே மான் தோல் திரியில் ஒரு உருளையைப் பார்த்தான் விமலன். ‘அது என்ன, அவர் உடலோடு ஒட்டிய ஒன்றா, அது இந்த உலகத்தின் சிறப்பு அடையாளமா, அவரிடம் கேட்கலாமா, தன்னைத் தப்பாக நினைத்துக்கொண்டு கீழே தள்ளிவிட்டுவிட்டால்.. அப்படியெல்லாம் செய்ய மாட்டார், அவரே தனிமையில் தவித்துக்கொண்டிருக்கிறார். அவர் நட்பாகத்தானே பேசுகிறார்.’

அவன் சிந்தனையின் போக்கைப் புரிந்தவர் போல் அவர் சிரித்தார்.

“இது என்னவென்று தெரிய வேண்டுமா உனக்கு?”

‘நாங்கள் இடுப்பில் ஒன்று இப்படி கட்டிக் கொள்வோம், அதில் உருளையெல்லாம் இருக்காது; சிறு பையனாக இருந்தால் காசு கோர்த்து கட்டுவார்கள்.’

“விமலா, இதில் கல்ப லதிகா இருக்கிறாள்.”

விமலனுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. ஒரு பெண், அழகிய பெயருடன், ஒரு உருளைக்குள் அவன் தேடும் உயிரி, ஆனால், அவள் உயிருடனா இருக்கிறாள்? அவன் மனம் விம்மியது.

திகைப்புடன் அவரைப் பார்த்தான். திக்கித்திக்கி பெண்ணா என்றான்.

“அவள் சாதாரணப் பெண் இல்லை. சக்தி தேவதை. விரும்பும் வரம் தரும் கற்பகக் கொடி.”

‘அவள் உங்கள் இடையில் எப்படி?’

“பூமிக்கும், வானிற்கும் இழுபடுகையில் என் சக்தி குறைந்தது. அந்த நிலையிலும் பெண்களின் பால் ஆசையும் குறையவில்லை. உனக்கே தெரியும், நான் உடல் உபாசகன். விஸ்வாமித்திரர் தன் தவத்தினால் பெண்ணின் கருமுட்டையை உண்டாக்கி உருளையில் அதை வைத்தார். உன் சொர்க்கத்தில் அவள் உடன் வருவாள், உன்னிடம் வரும் அமிர்தத்தை நீ அவள் மேல் தெளி; கற்பகக் கொடியென உன்னைப் பிணைவாள், உன்னை ஆட்கொள்வாள், உன் தனிமையும் போகும் என்றும் சொன்னார்.”

விமலனுக்கு ஆவல் தாங்கவில்லை. ‘நீங்கள் அதையெல்லாம் செய்யவில்லையா?’

“செய்ய நினைத்தேன். ஆனால், மனம் வரவில்லை; மேலும், அவர் என் குரு. என்னைப் புரிந்து கொண்ட தந்தை அவர். அவர் உருவாக்கிய பெண் எனக்குத் தங்கை முறையல்லவா? நான் அவளை வெளிக் கொணர முயலவில்லை.”

விமலன் அப்படியே உருகிவிட்டான். ‘உடலைக் கொண்டாடிய இளவரசன், காமத்தில் முக்குளித்தவன், இடையில் ஒரு பெண், தனிமையில் தவித்தும் இருக்கிறார், அமிர்தமும் வைத்திருக்கிறார், ஆனால், என்ன ஒரு கட்டுப்பாடு?’

உடைகளைத் தந்தவர் உருளையைத் தருவாரா? அமிர்தம் வேண்டுமே அதைத் தருவாரா? கல்ப லதிகாவின் கரு முட்டைகள் இன்னமும் உயிர்ப்புடன் இருக்குமா? சொல்லிப் பார்க்கலாமா, அவருக்கில்லை நமக்கென்று. வேண்டும் வரம் கொடுக்கும் அவள் மூலம் இங்கே உயிர்களைப் பெருக்கலாம். அவர் தந்தையெனப் போற்றும் முனிவர் அமைத்த இந்த உலகின் சக்ரவர்த்தியாக அவர் இருக்கட்டுமே.! அந்த விண்கற்களில் புரத நொதிகள் இருப்பதை நம் ‘பாட்’ சொன்னதே.

அவரிடம் கேட்டான். அவர் சிரித்தார்.

“நாம் கதை பேசிக்கொண்டேயிருக்கலாம். நீ சொல்வதெல்லாம் வியப்பானது. அரசர்கள் இல்லை என்கிறாய், செயற்கை அறிவு, செயலிகள், என்பதெல்லாம் நான் அறியாதவை. ஆனால், இப்போது பூமியும் இல்லை என்பதால் நீ என்னை விட்டுப் போக முடியாதல்லவா? அப்படித்தானே முனிவர் சொல்லியனுப்பினார்?”

‘நீங்கள் போக முடியவில்லை அல்லவா? என்னாலும் முடியாது.’

“நீ எங்கேயும் போக மாட்டேன் என்று சத்தியம் செய். கல்ப லதிகா உனக்குத்தான். ஆனால், பழைய விந்துவால் தான் அக் கரு முட்டையை அணுக முடியும். குறைந்தது பதினோரு மாதங்கள் அதற்கென்ன செய்வாய்?”

அவன் ஆவல் மீதூற அவரைக் கட்டிக் கொண்டான். ‘என் ஜீனோபாட்டில் உள்ள வித்திற்குப் பதினான்கு மாதங்கள் பூமியின் கணக்கில் ஆகிவிட்டன.உங்கள் கோள் தாழ் நிலையில்தான் உள்ளது. எங்கள் பதினான்கு உங்களுக்குப் பன்னிரெண்டாக வரும். புதிய பூமி. உடலின் நிறைவில் பொலியும் பூமி. உயிரிகள் பல்கிப் பெருகட்டும்.’

‘நீங்கள் என்னை நம்புங்கள். முழங்கும் சங்கின் ஒலி நிறைந்த உலகத்தைப் படைப்போம்.ஆனால், அவளுக்கு உருவம் உண்டா?’

“கிடையாது. அவள் கருமுட்டையில் ஒன்றைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் ஒரு சமயத்தில். விண்கல் குடுவையுள் போட்டு விந்தினையும் அமிர்தத்தையும் தெளிக்க வேண்டும். அந்த கர்ப்பம் வளர்ந்து வெளி வருகையில் அவள் உயிருடன் எழுவாள். பின்னர் பெண்ணென நிலைப்பாள்.

புதுமையை உண்டாக்கப் போகும் பழமை. பார்க்கப்போனால் அப்படித்தானே அனைத்தும் உண்டாகியிருக்கின்றன. எதையோ மறைத்து எதையோ காட்டி…அப்பா பாடுவாரே..’மரத்தில் மறைந்தது மாமத யானை, பரத்தில் மறைந்தது பார்முதற் பூதம்.’

ஒருவித பரபரப்பில் அவர் இருக்கையில், அவர் அறியாமல் அவன் இரண்டு முட்டைகளை எடுத்து இரண்டு விண்கல்லிலும் பதுக்கினான். தன் ‘ஜெனோபாட்’டை அதனுள் இட்டு மூடினான். ஆனால், இருமைக்கு வித்திட்ட அவனைப் பார்த்து அவர் கோபத்தில் கத்தினார். செய்வதறியாது திகைத்தார். முனிவர் சபிப்பாரோ எனப் பயந்தார். அவன் இலட்சியமே செய்யவில்லை. தனிமையைச் சொல்லியே அவரை அவனால் வெல்ல முடியும்.

அவனுக்குத் தெரியும்- அதனுள் ஜெனோ நிச்சயமாகத் தன் படைப்பினைச் செய்யும். அது எந்த உயிராயினும் சரி-ஒரு செல், ஒரு ஒட்டுண்ணி, அல்லது செடி,அல்லது ஏதாவது? அப்படியெல்லாமில்லை, அது மனித வித்துதானே? ஆனால் அவள் கொடியாயிற்றே, எதைப் படைப்பாள், எல்லாவற்றையுமா?

விண்கல் தாமரையென விரிந்தது. அதனுள் புரத ஓட்டங்களின் சுவடு போல் ஒன்று தெரிந்தது. விமலன் தவித்தான், அதையே எண்ணிக்கொண்டிருந்ததால் சுவடும், அசைவு போல் ஒன்றும் தோன்றியதோ? பின் அது நின்று போனதையும் பார்த்தோமா அல்லது இல்லையா?

நடுங்கும் குரலால் திரிசங்கு சொல்லலானார் :

‘பூர்ணமத, பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதஸ்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஸ்யதே’

ஒரு செல் தன்னை நகலெடுக்கத் தொடங்கியது. சுற்றும் கோள் ஒரு நீள்வட்டத்தைத் தெரிவு செய்தது. பூமியின் சூரியன் இங்கே தென் கிழக்கில் வருணனாக, இந்திரன் கிழக்கில் சூரியனாக, காற்று தென் மேற்கில் இடம் பிடிக்க, நெருப்பு வடக்கில் எழ புதிய வானம், புதிய உயிர், புது வாழ்க்கை. தங்கள் கண்களின் முன்னே அகிலத்தின் ஒரு பகுதியாக திரிசங்குவின் கோள் 21 வினாடிக்குள் வளர்ந்ததை அவர்கள் வியப்புடன் பார்த்தார்கள். விமலன் அறிந்த பரிணாமக் கோட்பாட்டிற்கு எதிராக பல்வேறு உயிரிகள் ஒரே நேரத்தில் தோன்றின.ஒத்த அம்சம் கொண்ட ஒரே மூதாதைதான் என்ற டார்வினின் கோட்பாடு சிதறுவதைப் பார்த்தான் அவன். சரியே, வௌவாலுக்கு அறிந்த மூதாதை என எதுவுமில்லையே! ஒரு செல் உயிரினம் ஓடி ஒளிந்து கொள்ள வானதியில் மீன்கள் துள்ளுவதை அவர்கள் பார்த்தார்கள். கண்களில் நீர் பெருக திரிசங்கு முதியவனாக சிலையெனச் சமைந்தார்.

அதிர்ஷ்டம் – ராம்பிரசாத் சிறுகதை

என் காரின் ஸ்டியரிங்கை பிடித்திருக்கும் விரல்கள் அதிர்ஷ்டமானவை. இல்லாவிட்டால் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் கணிணிக்களைக் கையாள லகரங்களில் என்னைச் சம்பளம் வாங்க வைத்திருக்குமா? அப்போது எனக்குத் திருமணம் கூட ஆகியிருக்கவில்லை. ஆதலால் அலுவலகத்தில் அன்றாட வேலைகள் முடிந்துவிட்டால் செய்வதற்கு பெரியதாக ஏதுமில்லாத காலகட்டம் அது.

அப்போதுதான் அந்த ஜெர்மன் காரை வாங்கியிருந்தேன். பெயர் வொல்க்ஸ்வேகன்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த காரில் சொகுசாக அமர்ந்தபடி நெடுந்தூரம் பிரயாணம் செய்வது எனக்கு பிடித்தமான ஒன்று. இந்த விதமான கார்களில் அதிர்வுகளை உள்வாங்கி ஜீரணிக்கும் உதிரி பாகத்தைக் கண்டுபிடித்த பொறியாளனின் கைவண்ணம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. எத்தனை பெரிய அதிர்வானாலும் அதை ஒரு அடர் மெளனத்தோடு கடந்து போய்விடும் வகையான இந்த கார்களில் பயணம் என்பது எத்தனை சொகுசாகிவிடுகிறது? வாழ்க்கையில் தொந்திரவுகளையும் ,சங்கடங்களையும், நிர்பந்தங்களையும் நாம் இப்படியே அணுகிவிட்டால் எத்தனை இலகுவாக இருக்குமென்று வண்டி ஓட்டிக்கொண்டிருக்கையிலேயே யோசனை வந்தது.

வண்டியின் உள்ளுக்குள் சில காதல் பாடல்கள் இதழ்களை வருடிக்கொண்டிருந்தன.

அன்று விடுமுறை நாள். நான் சென்று கொண்டிருந்த சாலை ஒரு தொழிற்சாலையை உரசியபடி அமைந்திருந்தது. அதனூடே செல்கையில் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் ரசாயன வாசம் மூக்கைத் துளைக்கும். ஆதலால் அந்த வழியே அதிகம் நடமாட்டம் இராது.

நான் கவனமாக எனது காரைச் சாலையில் செலுத்திக் கொண்டிருக்கையில் தொலைவில் இரு சக்கர வாகனம் ஒன்று சாலையின் நடுவே விழுந்து கிடந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டு நான் எனது காரை நிறுத்தினேன். காரை விட்டு வெளியே வந்த பிறகு தான் இரு சக்கர வாகனத்தின் அருகில் ஒரு மனிதன் கால்கள் அகல விரிந்த நிலையில் விழுந்து கிடந்திருப்பதைப் பார்த்தேன். ஜீன்ஸும், டிசர்டும் அணிந்திருந்தான். அவனுடைய இரு சக்கர வாகனம் மிக மோசமாக சேதமடைந்திருந்ததை வைத்துப் பார்க்கையில் அவன் சந்தித்திருக்கக்கூடிய விபத்து மிக மோசமானதாக இருந்திருக்க வேண்டும் என்று ஊகித்துக்கொண்டேன்.

என்னைச் சுற்றிலும் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை யாருமில்லை. ஆங்கிலத்தில் ‘கோல்டன் ஹவர்’ என்பார்கள். விபத்தில் சிக்கிக்கொண்ட பிறகான முதல் ஒரு மணி நேரம் தான் அது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒரு மணி நேரத்தில் சாகக்கிடக்கும் ஒருவனைக் கூட பிழைக்க வைத்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம். அந்த முக்கியமான ஒரு மணி நேரத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொண்டுவிட நான் அவசரமாக அவனை நெருங்கினேன்.

நான் ஒரு மருத்துவன் அல்ல. ஆயினும் என்.சி.சி.யில் இருந்திருக்கிறேன். ஓரளவுக்கு முதலுதவிகள் செய்யக் கற்றிருக்கிறேன். எத்தனைக்கு என்றால், நீரில் மூழ்க நேர்ந்துவிட்ட ஒருவனை கரையில் இழுத்துப்போட்டு, உயிர் இருக்கிறதா என்று பார்த்து, மூச்சு நின்றிருந்தால், அவன் மார்பில் கை வைத்து அழுத்தி மூச்சை வர வைத்துவிடுமளவிற்குக் கற்றிருந்தேன். ஆனால், அவன் இதற்கெல்லாம் வேலையே வைக்காமல் ஏற்கனவே போய்ச் சேர்ந்துவிட்டிருந்தான்.

அவன் மண்டையில் பலமாக அடிபட்டிருந்தது. தலைமுடியெல்லாம் ஒரே ரத்தம். ரத்தப்போக்கு அதிகம் இருந்ததினாலேயே அவன் இறந்திருந்தான். ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் அந்த ஒரு மணி நேரத்தை நான் எப்போதோ கடந்திருக்க வேண்டும்.

முதல் பார்வைக்கு அவன் அழகாய்த்தான் தெரிந்தான். கல்யாணம், பிள்ளைகள், குறைந்தபட்சம் காதலியாவது இருந்திருக்க வேண்டுமே என்று என் மனம் அடித்துக்கொண்டது. அத்தனைக்கு முகத்தில் ஒரு சிறுபிள்ளைத்தனம். என் கணிப்பில் அவன் வயது இருபதுகளின் மத்தியில் இருக்கலாம்.

அவனுக்கு அருகில் அவனது ஓட்டுனர் உரிமமும், ஒரு வங்கியின் பண இருப்பை சொல்லும் ஒரு சீட்டும் , ஒரு காசோலைப் படிவமும் அதில் அவனுடைய கையெழுத்தும் இருந்தது. அந்த சீட்டைப் பார்த்திருக்கவில்லை என்றால் நான் நூறுக்கு அழைத்திருப்பேன். அந்தச் சீட்டு வெறும் காகிதம் தான். ஆனால் அத்தனை கனமாக இருந்தது. ஏனெனில் அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொகை.

சுமார் ஒரு கோடி ரூபாய்!!

ஒரு கோடி என்கிற இலக்கத்தைப் பார்த்தபிறகு நூறுக்கு போன் செய்வது ஒரு புத்திசாலித்தனமான காரியமாகத் தெரியவில்லை. நீங்கள் கேட்கலாம். ‘நீதான் கணிணி மென்பொருள் துறையில் சம்பளம் வாங்குகிறாயே. உனக்கேன் ஒரு கோடி?’ என்று. நல்ல கேள்வி தான்.

ஆனால், கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் கோடீஸ்வரராகவே இருக்கலாம். உங்கள் பெயரில் நாட்டின் முன்னணி தனியார் நிறுவனம் கூட இருக்கலாம். ஆனால் அகஸ்மாத்தாக, நடுச்சாலையில், எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்! ஒரு கோடி ரூபாய் பெரிய பணம் இல்லை தான்.

ஆனால், எங்கெங்கோ போகிறீர்கள். நீங்கள் மட்டுமா போகிறீர்கள்? பல்லாயிரம் கோடி ஜனம் போகிறது. அவர்களில் யாருக்கோ கிடைக்காமல் உங்களைத் தேடி வந்து ஒரு கோடி பணம் அடைகிறது என்றால் அதற்கென்ன பொருள்?

அதிர்ஷ்டம்!!

அதுவல்லவா முக்கியம்? ஒரு கோடி பணம் என்பது வெறும் ஒரு அடையாளம் தானே. வெறும் ஒரு அடையாளம். அந்த அதிர்ஷ்டத்துக்கான ஒரு அடையாளம். ஒரு கோடி என்பது அந்த அதிர்ஷ்டத்தின் அளவைச் சொல்வது. அது அல்லவா முக்கியம். கேட்கும் போதே கிளர்ச்சி தரும் அளவு அல்லவா? யாரிடமெனும் அண்டி ‘எனக்கு கீழே பத்து ரூபாய் கிடைத்தது’ என்று சொல்லிப்பாருங்கள். நான் சொல்ல வருவது புரியலாம்.

நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருத்தரும் இல்லை. இன்னொருவருக்குச் சொந்தமானதை அவரின் அனுமதி இல்லாமல் எடுத்துச்செல்வது திருட்டு என்றாகிறது. அவனது ஓட்டுனர் உரிம அட்டையில் அவனது பெயரைக் குறித்துக்கொண்டேன்.

சடகோபன்!!

அவன் முகத்தருகே குனிந்து,

“சடகோபன், நான் இவற்றை எடுத்துக்கொள்வதில் உனக்கு ஒப்புதல் இல்லையெனில் நீ தாராளமாக மறுப்புத் தெரிவிக்கலாம்” என்றேன்.

அவனிடமிருந்து எவ்வித சலனமும் இல்லை. எந்தச் சலனுமும் இல்லாதது எப்படி மறுப்பாக இருக்க முடியும்? அந்தக் காகிதங்களை மடித்துப் பைக்குள் வைத்துக்கொண்டு திரும்பி வந்து என் காரில் அமர்ந்தேன். அதை உருமி எழச்செய்தேன். பின் சாலையில் அரைவட்டமடித்து என் வீடு நோக்கி விரட்டினேன்.

வீட்டுக்கு வந்தவுடனேயே அந்த ஒரு கோடி ரூபாயை… இல்லையில்லை… என்னைத் தேடி அடைந்த அதிர்ஷ்டத்தை என்ன செய்வது என்கிற தீவிர சிந்தனையில் ஆழ்ந்தேன். நான் அவன் அளவிற்கு அழகன் இல்லை. ஆனால், எங்கள் இருவருக்கும் ஒரே உயரமும், உடல் வாகும். என் கையில் அவனின் வங்கிக் காசோலையில் அவனது கையோப்பம் இருந்தது. ஆகையால் அவனின் கையோப்பத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் எனக்குப் பெரிதாக ஏதும் சிக்கலிருக்கப்போவதில்லை. ஒரே ஒரு சவாலாக நான் பார்த்தது என்னவெனில், தோற்றம் தான். நான் அவன் போன்றே தெரியவேண்டும். அது எப்படி?

இந்தச் சிந்தனை மருத்துவரும், எனது நண்பருமான அஜீஸை எனக்கு நினைவூட்டியது. அவர் ஒரு மருத்துவரும், ஆராய்ச்சியாளருமாவார். அவருடைய ஆராய்ச்சி என்னவென்றால், ஒரு மனித முகத்தை எவ்விதம் அழகாகத் தோன்ற வைப்பது என்பதுதான். அவரைப் பொறுத்தமட்டில், ஒரு முகத்தில், அது எத்தனை ஒளித்துணுக்குகளை எவ்விதத்தில் வெளியிடுகிறது என்பதைப் பொருத்தே அதன் அழகு அமைகிறது. இந்த அவரின் ஆராய்ச்சியின் ஆச்சர்யமூட்டக்கூடிய அம்சம் என்னவெனில், ஒரு முகத்தை , மிகச்சரியான இடங்களில், மிகத்துல்லியமான அளவுகளில் ஒளித்துணுக்குகளை வெளியிட வைத்து வேறொரு முகமாகவும் காட்டிட இயலும் என்பதுதான்.

இதை நீங்கள் பள்ளிக்கூடங்களில் படித்திருக்கலாம். இது பொருட்கள் எவ்விதம் கண்ணுக்குப் புலப்படுகின்றன என்பதைப் பற்றியது. ஒரு பொருள் எவ்விதம் கண்ணுக்குப் புலப்படுகிறதெனில், அதனில் ஒளித்துணுக்குகள் பட்டு பிரதிபலிப்பதால் தான்.

ஒரு அழகான முகம் பிரதிபலிக்கும் ஒளித்துணுக்குகளுக்கும், ஒரு சுமாரான முகம் பிரதிபலிக்கும் ஓளித்துணுக்குகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை சமன் செய்வதன் மூலம் ஒரு சுமாரான முகத்தைக் கூட அழகான முகமாகவே தோன்றச் செய்துவிடமுடியும். ஒளித்துணுக்குகளை வெளியிடும் நுண் துகள்கள் கொண்ட முகமூடி ஒன்று இதற்கு உதவும். சருமத்தின் வெளிப்புற அடுக்குகளில் புதைக்கப்படும் ஒரு மைக்ரோ சிப்பின் மூலம் இந்த முகமூடியை கட்டுப்படுத்தமுடியும்.

அஜீஸ் எனது நண்பருமாவார் என்பதால் ஏதேனும் பிரச்சனைகள் வரும் பட்சத்தில் அவரைத் தனிப்பட்ட முறையில் எனக்குச் சாதகமாக இயங்க வைக்க என்னால் முடியும் என்பதே தைரியம் தருவதாய் இருந்தது. அதுமட்டுமல்லாமல், அஜீஸ் வேறு சிலருக்கும் அந்த முகமூடியை செய்து தந்திருந்ததும், அவர்கள் எல்லோருமே அந்த முகமூடிகளைப் பயன்படுத்திய பிறகு எந்தப் பக்க விளைவையும் சந்தித்ததாக புகார் தரவில்லை என்பதையும் நான் கவனித்திருந்தேன். ஆதலால், நான் உடனேயே அந்த பரிசோதனைக்கு என்னை உட்படுத்திக்கொண்டேன். அது எப்படி இருந்ததெனில் ஒரு மருந்தகத்தில் நுழைந்து தலைவலிக்கு ஒரு மாத்திரை வாங்குவது போலத்தான் இருந்தது.

அஜீஸ் என்னிடம் ஒரு குடுவை நிறைய திரவ நிலையிலான ஒரு மருந்தைத்தந்தார். அந்த திரவம், ஒரு சிக்கலான தீர்வை மிக மிக எளிதாக்கியிருந்தது. பொதுவாக முகமூடிகள் செய்ய அதிக நேரமாகும். வாரக்கணக்கில் கூட ஆகும். டாம் க்ரூஸ் படங்களில் வருவது போல, ஒரு த்ரீ-டி தொழில் நுட்பத்திலான அச்சு வார்க்கும் இயந்திரம் கொண்டு உருவாக்கப்படும் முகமூடி அல்ல இது. வெறும் திரவம். அதை முகத்தில் முகப்பூச்சு தடவுவது போல் தடவிக்கொள்ள வேண்டும். இப்போது அந்த முகப்பூச்சில் இருக்கும் நுண்ணிய செல்கள் ஒளித்துணுக்குகளை வெளியிடவல்லது. ஒரு முகத்தை வேறொரு முகமாகத் தோன்றவைக்க இரண்டு முகங்களுக்குமுள்ள ஒளித்துணுக்கு வித்தியாசத்தை அதிகப்படியாக அந்த முகமூடி வெளியிட்டால் போதும். அதை ஒரு மைக்ரோ சிப் பார்த்துக்கொள்கிறது.

என் சருமத்தின் டெர்மிஸ் அடுக்கில் ஒரு மைக்ரொ சிப் புதைக்கப்பட்டது. அந்த மைக்ரோ சிப், ஒளித்துணுக்குகள் வெளிப்படுவதைக் கட்டுப்படுத்தியது. நான் யார் போல் தோன்ற வேண்டும் என்பதை நான் அந்த மைக்ரோ சிப்பில் கணிணி மூலம் பதிவு செய்துகொள்ள முடியும். அந்தச் சிப்பிற்கு ஒரு மின்சாரம் தேவைப்பட்டது. அதற்கென அந்த திரவத்தில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை கிரகிக்கும் நுண் சூரியத்தகடுகள் பதிக்கப்பட்டிருந்தன. அது, நான்கு சுவற்றுக்குள் நான் இல்லாதபோது சூரிய சக்தியால் இயங்கும் ஆற்றலைத் தந்தது. நான்கு சுவற்றுக்குள் இருக்கையில், அதற்கு ஒரு பேட்டரியின் தேவை இருந்தது.

அஜீஸ் அதற்குத் தேவையான மென்பொருளை என் கணிணியில் நிறுவித்தந்தார். அதன் மூலம் நான் சடகோபனின் ஓட்டுனர் உரிமத்திலிருந்து அவன் முகத்தை எடுத்து அஜீஸ் தந்த மைக்ரோ சிப்பில் தரவேற்றினேன். பின் வீட்டில் அமர்ந்தபடி ஒரு நூறு முறைக்கெனும் அவனது கையெழுத்தை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்தேன். அவனுடையது அத்தனை கடினமானதாக இருக்கவில்லை.

இப்போது நான் சடகோபனாகியிருந்தேன். ஒரு கருப்புப் பையுடன் நேராக வங்கிக்குச் சென்றேன். வங்கியில் நான் காசாளரை எதிர்கொண்டேன். அவள் தன் சிற்றறையில் அமர்ந்திருந்தாள். என்னை அவள் முன் அமரவைத்தாள். அவள் பெயர் பிரிஸில்லா என்பதை அவளது மேஜையிலிருந்த பெயரட்டையிலிருந்து தெரிந்துகொண்டேன்.

அவளிடம் இப்போது என் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்ட சடகோபனின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு கோடி பணம் எடுக்க விண்ணப்பித்தேன். அடையாளச் சோதனைக்கு சடகோபனின் ஓட்டுனர் உரிமத்தையும் அளித்தேன்.

“பெரும்தொகை இது. சில நடைமுறைகள் இருக்கின்றன, மிஸ்டர் சடகோபன். முடித்துவிட்டு உங்கள் பணத்துடன் வருகிறேன்.” என்றுவிட்டு அவள் அகன்றாள்.

நான் இப்போது காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தேன். உள்ளூர சற்று பயமாக இருந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தேன்.

“நான் ராபர்ட், என்னைத் தொடர்ந்து வா?” என்று என் செவியருகே சொல்லிவிட்டு ஒருவன் சென்றான். கருப்பு நிறத்தில் முழுக்கால் சட்டையும், வெள்ளையில் முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தான். கருப்பு நிறத்தில் தோலால் ஆன பாதணி அணிந்திருந்தான். வெள்ளைச் சட்டை கருப்பு முழுக்கால் சட்டைக்குள் திணிக்கப்பட்டிருந்தது. பார்க்க வங்கி ஊழியன் போலிருந்தான். நான் எழுந்து அவனுடன் நடந்தேன். இருவரும் அந்த வங்கியின் சிற்றுண்டி உணவகத்தில் அமர்ந்தோம்.

“நீ இறந்துவிட்டாய். அது உனக்கு தெரியுமா?” என்றான் அவன் எடுத்த எடுப்பிலேயே.

எனக்கு சட்டென வியர்த்துவிட்டது. நான் அதிர்ச்சி விலகாதவனாய் ராபர்ட்டையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

“நீ அந்த நெடுஞ்சாலையில் செய்ததை நான் பார்த்துவிட்டேன். சடகோபன் வங்கியில் நிறைய பணம். அது தெரிந்து தான் அவன் மீது என் லாரியை ஏற்றினேன். நான் என் வண்டியை மறைவாக நிறுத்திவிட்டு வருவதற்குள் நீ சடகோபனின் உடைமைகளை எடுத்துக்கொண்டு போய் விட்டாய். நான் உன்னைக் கொன்றிருக்க முடியும். சடகோபனை நான் கொலை செய்துவிட்டாலும், அவனது வங்கிக்கணக்கிலிருந்து எப்படி பணமெடுப்பது என்ற குழப்பத்திலிருந்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக நீ என் வேலையை சுலபமாக்கிவிட்டாய். எனக்கு இதுவரை இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீள, எனக்கு லட்சக்கணக்கில் பணம் தேவை. நான் சடகோபன் பணத்தைக் கையாடல் செய்ய ஒரு நியாயமிருக்கிறது. உனக்கு என்ன? இளைஞன். கணிணி பொறியாளன். உனக்கு மருத்துவ காப்பீடு கூட இருக்கலாம். உனக்கெல்லாம் இது தேவையா? நம் இருவரில் அதிக பரிதாபத்தைக் கோருவது நீயா, நானா என்பதை முடிவு செய்துகொள்.”

“இதோ பார். அவனை கொலை செய்தது நான். சடகோபன் இறந்த செய்தி வங்கிக்குத் தெரிந்தால் நீ மட்டுமல்ல, நானும் கூட இந்தப் பணத்தை வெளியில் எடுப்பது முடியாத காரியமாகிவிடும். அவன் உடலை மறைவாக அப்புறப்படுத்தி புதைத்தது நான். ஆதலால், அவனது பணம் முழுக்க என்னையே சேர வேண்டும். அதிர்ஷ்டவசமாக, நீ ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறாய். ஆக உனக்கும் இதில் பங்கிருக்கிறது என்றாகிறது. அதை நான் மறுக்கவில்லை. நான் ஒரு கொள்ளையன். எனக்கு இதெல்லாம் புதிதில்லை. ஆனால், நீ அப்படி இல்லை. உனக்கொரு சமூக இடம் இருக்கிறது. உனக்கு இன்னும் மணமாகவில்லை. இந்தப் பணம் இல்லாவிட்டாலும் உன்னால் சம்பாதித்துவிட முடியும். இந்தப் பணத்தை நீயே எடுத்துக் கொள்ளும்பட்சத்தில், உன்னைப் பற்றிய உண்மையை நான் போலீஸில் சொல்ல வேண்டி வரும். உன் மீது கொலைக் குற்றம் கூட பாயலாம். ஆதலால், இந்தப் பணத்தை நீ எனக்கு முழுமையாகத் தந்துவிட்டால், நீ செய்த வேலைக்காக உனக்கு ஒரு பத்து லட்சம் ரூபாய் தருகிறேன். எப்படிப் பார்த்தாலும் உனக்கு லாபம் தான்.” என்றான் ராபர்ட்.

நான் யோசனையில் ஆழ்ந்தேன்.

“யோசிக்க நேரமில்லை நண்பா. நம்மிடம் அதிக நேரமில்லை.” என்றான் ராபர்ட்.

நான் வேறு வழியின்றி எழுந்து மீண்டும் பிரிஸில்லாவிடம் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது பிரிஸில்லாவும் வந்தாள்.

“ஓரு கோடி பணம். எப்படி வேண்டும் உங்களுக்கு? பணமாகவா? காசோலையாகவா?” என்றாள் அவள்.

“நான் யோசிக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடத்தில் சொல்லட்டுமா?” என்றேன் நான். சரி என்றவள் எழுந்து வெளியே சென்றாள். நான் மீண்டும் தனியே விடப்பட்டேன்.

இந்தப் பிரச்சனையிலிருந்து மீள எனக்கு அதிக வாய்ப்புகளிருக்கவில்லை. வெகு சில வாய்ப்புகளே எஞ்சியிருந்தன.

அதில் முதலாவது, நானே போலீஸுக்குப் போவது. உண்மையை ஒப்புக்கொள்வது. போலீஸ் எனக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு பாதுகாப்பு தரலாம். அதன் பிறகு என்னை ராபர்டிடமிருந்து யார் காப்பாற்றுவது? அவன் என்னை அதற்கு முன்பே பார்த்திருக்கிறான். தவிரவும் நான் ஆள் மாறாட்டம் செய்ய முனைந்தது போலீஸில் எனக்கே எதிராகவும் முடியலாம்.

இரண்டாவது, நான் ராபர்டுடன் ஒத்துழைப்பது. அதற்கு பிரதிபலனாக, லாபத்தில் ஒரு பங்கைக் கோரலாம். ஆனால், பணம் தன் கைக்கு வந்தபிறகு அவன் தான் வாக்குறுதி அளித்ததன் படிக்கு நிற்பான் என்று எந்த நம்பிக்கையும் இல்லை.

மூன்றாவதாக, ஒரு கோடியையும் எடுத்து இல்லாதவர்களுக்கு தானம் செய்துவிடலாம். அப்படிச் செய்தால் ராபர்டுக்கோ எனக்கோ எவ்வித லாபமும் இருக்கப்போவதில்லை. ஆனால், ஒரு வேளை, என்றேனும் ஒரு நாள், ஒரு நெடுஞ்சாலையில், என் புத்தம் புதிய கார் மீது ராபர்டின் லாரி ஏறி இறங்கலாம்.

நான்காவதாக, நான் ஒரு நாள் கால அவகாசம் கேட்கலாம். அந்த அவகாசத்தில் கள்ளப்பணம் தயார் செய்து ராபர்டிடம் தந்துவிட்டு, போலீஸில் ராபர்ட் குறித்து தகவல் தந்துவிடலாம். ராபர்டை போலீஸ் கள்ளப்பணம் வைத்திருந்ததற்காய் கம்பி எண்ண வைத்துவிடலாம். இப்படிச் செய்வதால் நான் சில வருடங்கள் ராபர்டின் தொல்லையின்றி இருக்கலாம். ஆனால் இது போன்ற குற்றங்களில், குற்றவாளிக்கு அதிக காலம் தண்டனையாகக் கிடைக்க வாய்ப்பில்லை. என்றேனும் அவன் என்னைத் தேடி வரலாம்.

ஐந்தாவதாக ,என் முகத்திலிருக்கும் முகமூடியை நான் களைந்து விடலாம். ஆள் மாறாட்டம் என்ற ஒன்றே நடக்கவில்லை என்றாக்கிவிடலாம். ஆனால் அப்படிச் செய்தால் ராபர்ட் என்னை விடப்போவதில்லை. ஏனெனில் அவன் நான் முகமூடி அணியும் முன்பே என்னைப் பார்த்திருக்கிறான். அதுமட்டுமல்லாமல், அப்படிச் செய்வதால் ராபர்டின் கொலைக் குற்றம் குறித்து தெரிந்துகொண்டவன் என்கிற முறையில் நானும் ராபர்ட்டுக்கு உடந்தை என்றாகிவிடவும் கூடும். இது, பின்னாளில் ராபர்ட் வேறு ஏதேனும் சிக்கலில் சிக்கிக்கொண்டாலும் கூட எந்தத் தவறும் செய்யாமலேயே நானும் அவன் பக்கம் நிற்க வைத்துவிடலாம்.

ஆறாவதாக, நான் போலீஸிடம் உண்மையைச் சொல்லிவிடலாம். ஆனால் ஏற்கனவே முகமூடியுடன் பிரிஸில்லா மூலமாக சடகோபனின் அடையாளச்சோதனையை மேற்கொண்டிருக்கிறேன். ஆக, நான் ஏற்கனவே ஆள்மாற்றம் செய்துவிட்டவனாகிவிட்டதால் நான் தண்டனையிலிருந்து தப்பமுடியாது.

ஏழாவதாக, ராபர்ட்டுக்கு இதய நோய் இருக்கிறது. ராபர்ட்டை இதய நோய் மரணத்தில் ஆழ்த்தும்வரை நான் எதையும் செய்யாமல் காலம் கடத்தலாம். ஆனால், அவனின் இதயம் எப்போது நிற்பது? நான் எப்போது இந்தத் தலைவலியிலிருந்து விடுபடுவது?

இப்படியாக நான் யோசனையில் ஆழ்ந்திருந்தபோது பிரிஸில்லா என்னருகே வந்தாள்.

“பணத்தை எப்படி பெற்றுக்கொள்ள இருக்கிறீர்கள், சடகோபன்?” என்றாள் பிரிஸில்லா.

எல்லாவற்றையும் சீர்தூக்கி யோசித்துவிட்டு நான் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். சடகோபன் இறந்துவிட்டான். அதுவும் மிகச்சிறிய வயதில். அத்தனை சிறிய வயதில் அவனுக்கு எப்படி இத்தனை பணம் கிடைத்திருக்கும்? ராபர்ட் சடகோபன் மீது தன் லாரியை ஏற்றிக் கொன்றுவிட்டான் என்பதனாலேயே ராபர்ட் கெட்டவனாகவும், சடகோபன் நல்லவனாகவும் இருந்திருக்க வேண்டியதில்லை. இருவருமே கெட்டவர்களாகவும் இருந்திருக்கலாம். அல்லது ஒப்பீட்டளவில், ராபர்ட்டையும் விட சடகோபன் தீயவனாகவும் இருந்திருக்கலாம். தீய வழியில் கூட இத்தனை பெரிய பணத்தை அவன் அத்தனை சிறிய வயதில் ஈட்டியிருக்கலாம். இப்படி யோசிப்பதிலும் அனுகூலமிருக்கிறது. சந்தேகத்தின் பலனை நான் ராபர்ட்டுக்கு வழங்கலாம் என்று முடிவெடுத்தேன்.

“பணமாகக் கொடுத்துவிடுங்கள்” என்றேன் நான்.

பிரிஸில்லா ஒரு கோடி ரூபாய்ப் பணத்தை என்னிடம் பணக்கட்டுகளாகத் தந்தாள். நான் உடன் வைத்திருந்த கருப்பு நிற தோல் பையில் அவற்றை அடைத்துக்கொண்டேன். வங்கியிலிருந்து வெளியே வந்ததும் அந்தப் பையை ராபர்டிடம் தந்தேன்.

ராபர்ட் பையை வாங்கி அதனுள்ளிருந்த பணத்தைக் கண்களாலேயே எடை போட்டான். பின் அவன் அருகே இருந்த இன்னொரு வங்கிக்குள் பையுடன் நுழைந்தான். அவன் திரும்பி வந்தபோது அவனிடமிருந்த பை காலியாக இருந்தது.

“ஓரு கோடியையும் எனது வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டேன். இருந்தும் உனக்கு வாக்களித்திருக்கிறேன். அதன்படி உனக்கு பத்து லட்சம் தர சம்மதம். எப்போது வேண்டும் உனக்கு?” என்றான் அவன்.

“எனக்கு எதுவும் வேண்டாம்.” என்றேன் நான்.

“நீ உறுதியாகத்தான் சொல்கிறாயா?”

“ஆமாம். எனக்கு பங்கேதும் வேண்டாம்.”

“சரி. நீ நல்ல மனிதன். வந்தனம்.” என்ற ராபர்ட் சிரித்தபடி தன் பாதையில் நடந்தான்.

நான் அருகாமையிலிருந்த தேனீர் அருந்தகம் சென்று ஒரு தேனீர் வாங்கிப் பருகலானேன்.

விதியின் மீதான எனது பிரஞை மிக எளிமையானது.

‘எது உன்னுடையது இல்லையோ, அது நீ எத்தனை முயற்சித்தாலும் உன்னுடையதாகப் போவதில்லை.’ என்பதுதான் அது.

ஒரு கோடி ரூபாய் என்னை, என் வாழ்க்கையை என்னவெல்லாம் செய்திருக்கக் கூடும் என்பது குறித்து ஒரு அவதானம் எனக்கிருந்தது. ஒரு கோடி பணத்தால் ஓரு பத்தாண்டுகளுக்கு நான் உழைக்கவே வேண்டி இருந்திருக்காது. அது என்னை சோம்பேறி ஆக்கவும் செய்திருக்கலாம். அந்தக் கால கட்டத்தில் என் மனம், எந்த வேலையும், இலக்கும் இன்றி செக்குமாடாகி இருக்கலாம். அது என் தன்னம்பிக்கையை தகர்த்திருக்கலாம். எந்த உடல் உழைப்புமின்றி கண்டதையும் தின்று வயிற்றை ரொப்பி தாறுமாறாக எடை கூடிப்போகவும் செய்திருக்கலாம்.

சிலருக்கு பார்க்கும் வேலையைத் தவிரவும் வேறு சில திறமைகள் இருக்கும். இருந்தும் அவற்றிலெல்லாம் கவனம் செலுத்த இயலாமல், வயிற்றுப்பிழைப்புக்காக ஒரு வேலையில் ஒண்டிக்கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். அவ்வாறில்லாமல்

எனக்கு கணிணிக்களுக்கு அறிவூட்டுவதன்றி வேறு எதுவும் தெரியாது. ஆக, பத்து வருடங்கள் வீட்டிலேயே இருக்கும் பட்சத்தில், என் கவனத்தை திருப்பிக்கொள்ள எனக்கு வேறு எந்த தளமும் இல்லை. இப்படி எதுவுமில்லாமல், நான் இந்த சமூகத்திற்கு திருப்பித் தர ஏதுமற்றவனாக, வெறும் பெற்றுக்கொள்பவனாக மட்டுமே இருந்துவிடக்கூடும். அதுமட்டுமல்லாமல், ஒரு கோடிப் பணம் என் மீது ராபர்ட் மாதிரியான அனாவசியமான கேடிகளின் கவனங்களை பெற்றுத்தந்திருக்கக் கூடும். இது என் பிரச்சனைகளை பல மடங்கு பெருக்கிவிடலாம்.. நான் ஒரு சில முதலீடுகளை மேற்கொண்டிருக்கலாம். அவற்றில் ஒரு சில முதலீடுகள் நல்ல பலனளித்திருக்க, ஏனைய முதலீடுகளில் நஷ்டத்தை கண்டிருக்கலாம். இறுதியில் லாபங்களை, நஷ்டங்கள் சமன்பட்டு எனக்கு இறுதியில் எந்த லாபமுமே இல்லாமல் போயிருக்கவும் கூடும்.

என்னிடம் அப்போதிருக்கும் வேலையில் ஒண்டிக்கொண்டிருப்பதே உசிதம் என்று தான் எனக்குத் தோன்றியது. எனக்கு இது குறித்து ஒரு பிரஞை இருக்கிறது. என் பணியானது சவால்கள் நிறைந்தது. சவால்களை தொடர்ச்சியாக சந்திக்கச் சந்திக்கத்தான், தீர்வுகளை உருவாக்க மூளை பழக்கப்படுகிறது. அதிகம் சிந்திக்க சிந்திக்க, மூளையின் நரம்புகள் புதிய புதிய பாதைகளை திறந்தபடியே இருக்கின்றன. இந்த முறையில் தான் பிரபஞ்சத்தன்மைகளுக்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக இருக்கின்றன என்பது என் வாதம்.

அதுமட்டுமின்றி, ஒரு கோடிப் பணம், ராபர்ட் போன்ற மூன்றாம் தர கேடியின் வாழ்க்கையை தலைகீழாக மாற்ற வல்லது. அவன் அத்தனை பெரிய பணத்திற்குத் தகுதியானவன் தானா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவனின் விதியை மாற்ற எனக்கு அதிகாரம் இல்லை. விதி, அந்த ஒரு கோடியின் மேல் ராபர்டின் பெயரை எழுதியிருக்காவிட்டால், என் இடத்தில் ராபர்டை விட பலசாலியான ஒருவனை விதி, அன்று அந்த நெடுஞ்சாலையில் அனுப்பியிருக்கலாமே? என் போன்ற, மென்பொருள் மென்னுடலை ஏன் அனுப்ப வேண்டும்?

சூடான தேனீரை பருகி முடித்தவுடன் நான் வீடு வந்து சேர்ந்தேன். மனதில் ஏதோவோர் இனம் புரியாத நிம்மதி பரவியிருந்தது. ஏனென்று சொல்லத்தெரியவில்லை. ஒரு கோடிப் பணத்தை யாரோ ஒருத்தனுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். மனம் நிம்மதியாக இருந்தது. வினோதமான பிறவி தானே நான்? அப்படித்தான் இருக்க வேண்டும். தோல்வியை கடந்து போகிறேனா? குப்புற விழுந்தாலும் மீசை மண் ஒட்டவில்லை என்கிற ஸ்திதியா? தெரியவில்லை. ஏதோவொன்று. யாரும் பார்க்கவில்லை. யாருக்கும் எதுவும் தெரியாது. என் மானத்துக்கு எந்த சேகாரமும் இல்லை. என் நாட்கள் இதுகாறும் எப்படி இருந்ததோ அப்படியே இனிமேலும் இருக்கும். அது போதாதா?

சில நாட்களில் இந்த நிகழ்வுகளையெல்லாம் நான் மறந்தேவிட்டேன்.

பின்பொரு நாளில் வங்கி வேலையாக அதே இடத்துக்கு மீண்டும் செல்ல நேர்ந்தது. நான் மொக்கை வாங்கிய அதே இடத்தைக் கடக்க நேர்ந்தபோது, ஏதோ தோன்றி, அதே தெருமுனைக்கு வந்தேன். அங்கே லேசான கூட்டம். என்னவாக இருக்குமென்று பார்க்க கூட்டத்தை நெருங்கி எட்டிப்பார்த்தேன். அங்கே ஒருவன் எசகுபிசகாக விழுந்து கிடந்தான். அவனருகே நான் அவனுக்குத் தந்த கருப்புப் பை இருந்தது. அவனைச் சுற்றிலும் கூட்டம் கூடியிருந்தது. யாரும் அவனை நெருங்கவில்லை. அவனிடம் நான் ராபர்டுக்குக் கொடுத்த பை எப்படி என்று குழப்பமாக இருந்தது

நான் அவனை நெருங்கினேன்.

“பார்த்து நண்பா… அந்தப் பையில் வெடிகுண்டு கூட இருக்கலாம்.” என்றான் கூட்டத்திலிருந்து ஒருவன். அப்போது தான் அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவர் கூட ஏன் அவனை நெருங்கவில்லை என்பது புரிந்தது எனக்கு.

“இருக்கட்டும். என்றோ ஒரு நாள் போகப்போகிற உயிர் தானே.” என்றேன் நான். ஏதோ துணிச்சலில் சக்ரவர்த்தி போல. சுற்றி இருந்தவர்கள் என்னை ஒருவிதமாய்ப் பார்த்துவிட்டு மெல்ல கலைந்தார்கள்.

நான் அவன் உடல் நிலையை சோதித்தேன். மார்பு துடிக்கவில்லை. நாடி அடங்கியிருந்தது. கண்கள் லேசாக திறந்திருந்தபடிக்கு நிலைகுத்தியிருந்தது. அவன் அப்போதுதான் இறந்திருக்க வேண்டும். அவனின் சட்டைப்பையிலிருந்து சில காகிதங்கள் உருண்டு விழுந்தன.

அந்தக் காகிதங்களில், அவனது ஓட்டுனர் உரிமமும், வங்கிப் புத்தகமும் இருந்தது. வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் சீட்டு ஒன்றில் அவனது கையோப்பமும் இருந்தது. ஓட்டுனர் உரிமத்தில் அவன் பெயர் ‘மதன்’ என்றிருந்தது.

அவற்றையெல்லாம் சேகரித்து என் சட்டைப்பையில் பத்திரப்படுத்திவிட்டு, போலீஸை அழைத்தேன். எஞ்சியதை போலீஸ் பார்த்துக்கொண்டது.

‘ராபர்டுக்கு நான் தந்த கருப்புப்பை மதனிடம் எப்படி?’ என்று யோசித்த எனக்கு எங்கோ பொறி தட்ட விரைந்து அஜீஸை சந்தித்தேன். அவரிடம் விசாரித்ததில் சில உண்மைகள் புரிந்தது. உண்மையில் கூட்டத்தின் மத்தியில் விழுந்து கிடந்தது, எனக்கு ராபர்டாக பரிச்சயமானவன் தான். அவன் நிஜமான ராபர்ட் இல்லை. அஜீஸ் என்னிடம் சொல்லாமல் அவனுக்கும் முகமூடியை அளித்திருந்திருக்கிறார்.

பின்னாளில் தன் திட்டம் பாழானால் போலீஸிடம் சிக்கிக்கொள்ளக்கூடாதென்று தன் அசலான முகத்தை முகமூடி கொண்டு மறைக்க முயற்சித்திருக்கிறான் மதன். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறான். ஆனால், அவனுக்கிருந்த இதயக்கோளாறு அவனை வீழ்த்திவிட்டது.

இப்போது மதனின் அசலான ஓட்டுனர் உரிமம், அதில் அவனது புகைப்படம், வங்கிக்கணக்கு எண் என எல்லாமும் என் கையில் இருந்தது. அஜீஸின் முகமூடியுடன்.

பிரபஞ்சம் நம் ஒவ்வொருவரின் மீதும் ஒரு தலைவிதியை சுமத்தியிருக்கிறது. ஆயினும், ஒருவரின் முகத்தை வேறொருவர் எடுத்துக்கொள்வதாலேயே, அவரது தலைவிதியையும் எடுத்துக்கொண்டுவிட முடியுமா? தலைவிதி என்பது அத்தனை சல்லிசானதா? ஆனால், பாரிய பிரபஞ்சம் இந்தப் பூவுலகின் ஒவ்வொரு உயிர்களின் நிமித்தம் கொண்டிருக்கும் அர்த்தங்களை முகம் என்ற ஒரு பெளதிக சட்டகத்திற்குள் வைத்து அடைத்துவிடமுடியுமா? அப்படி அடைத்துவிட்டால் ஒருவரின் தலையெழுத்தை மாற்றிவிட முடியுமா? அது சாத்தியமா? என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

விதியின் மீதான எனது பிரஞை முன்னிருந்ததைவிடவும் இப்போது மிக எளிமையானதாகியிருந்தது.

‘எது உன்னுடையதோ அது யார் எத்தனை தடுத்தாலும், உன்னை வந்தடையும்.’ என்பதுதான் அது.

வத்திகுச்சி கோபுரம் – பாவண்ணன் சிறுகதை

அதோ பாருடா, அங்க ஒரு நந்தியாவட்டை மரம். பச்சை பெய்ண்ட் அடிச்ச வீடு. கல்யாணராமன் சார் சொன்ன அடையாளம். அதுவாதான் இருக்கும்.” என்று சுட்டிக்காட்டினான் அண்ணாமலை. நானும் இளங்கோவும் ஒரே நேரத்தில் அந்தப் பக்கம் பார்த்தோம். பேருந்து நிலையத்திலிருந்து பத்தே நிமிடத்தில் நடந்துவந்துவிட்டோம். அதைக்கூட கல்யாணராமன் போனிலேயே சொல்லியிருந்தார். “ஆட்டோவெல்லாம் வேணாம் தம்பி. புது ஆளுன்னு தெரிஞ்சிட்டா அம்பது குடு நூறு குடுன்னு கேப்பாங்க. ஸ்டேன்ட்லேருந்து வில்லினூரு பக்கமா ஒரே ரோடு. மூனாவது லெஃப்ட், ரெண்டாவது ரைட். நடக்கற தூரம்தான்அவர் சொற்கள் ஒவ்வொன்றும் இன்னும் காதில் ஒலிப்பதுபோல இருந்தது.

உற்சாகமாக நடக்கத் தொடங்கிய கணத்தில், இளங்கோ தடுத்தான். கையில் கட்டியிருந்த கடிகாரத்தைக் காட்டி, “நாம பத்து மணின்னுதான் சொன்னம். இன்னும் கால்மணி நேரம் இருக்குது. முன்கூட்டியே போய் நின்னு அவர சங்கடத்துக்கு ஆளாக்கிடக்கூடாதுஎன்று நிறுத்தினான். “போனா என்னடா? ஏன் சீக்கிரமா வந்திங்கன்னு கேப்பாரா?” என்ற அண்ணாமலையின் கண்களில் கேள்வி திரண்டு நின்றது. “ஏதாவது எழுத்து வேலையில இருந்தா, நம்மால கெட்டதா ஆவக்கூடாதுடா, புரிஞ்சிக்கோஎன்றான் இளங்கோ.

சாலைத் திருப்பம் வரைக்கும் மறுபடியும் நடந்துசென்று கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தோம். கேரளா பதிவெண்ணைக் கொண்ட ஒரு சுற்றுலாப் பேருந்து வாகன நெருக்கடிகளில் சிக்கி நின்றிருந்தது. திறந்திருக்கும் ஜன்னல்களில் அடுக்கிவைத்ததுபோல சிறுவர்சிறுமிகளின் முகங்கள். குட்மார்னிங் அங்கிள் என்று கையசைத்த அவர்களின் முகங்களில் சிரிப்பு வழிந்தது. நான் இரண்டு கைகளையும் தூக்கி அசைத்தேன். குழந்தைகள் என்னைச் சுட்டிக்காட்டி சிரிப்பதைப் பார்த்தேன். கல்யாணராமனின் நீலவானம் நாவலில் கடற்கரையோரமாக வந்து நிற்கிற ஒரு சுற்றுலா வாகனத்தைப்பற்றிய சித்திரம் இடம்பெறுவது எனக்கு நினைவுக்கு வந்தது. உடனே இளங்கோவிடம் அதைச் சொன்னேன். “நீல வானம் படிச்சதிலிருந்து உலகத்துல ஒனக்கு எதைப் பாத்தாலும் நீல வானத்துல இருக்கறமாதிரியே தோணுதுபோல” என்று சிரித்தான் அவன்.

சரியாகப் பத்து மணிக்கு கல்யாணராமன் வீட்டுக்கு வந்துவிட்டோம். சுற்றுச்சுவர் கதவிலிருந்து வீடு சற்றே தள்ளியிருந்தது. ஒரு பக்கம் நந்தியாவட்டை, எலுமிச்சை, நாரத்தை மரங்கள். மற்றொரு பக்கத்தில் வாழைகள், கத்தரிக்காய், தக்காளிச் செடிகள். வாழையைச் சுற்றி வெற்றிலைக்கொடி படர்ந்திருந்த்து.

கதவு திறந்தே இருந்தது. குனிந்த தலை நிமிராமல் ஒரு சிறுமி வத்திக்குச்சிகளை அடுக்கி இணைத்து ஏதோ ஓர் ஆட்டத்தில் மூழ்கியிருந்தாள். நாங்கள் நிற்பதை அவள் உணரவே இல்லை. அதற்குள் நைட்டியோடு பின்கட்டிலிருந்து வந்தவர் எங்களைப் பார்த்துவிட்டு வேகமாக வாசலுக்கு வந்துயாரு வேணும்?” என்று கேட்டார். அண்ணாமலை நிமிர்ந்து பார்த்துகல்யாணராமன்…..” என்று இழுத்தான். அதற்குள் அவர் கூடத்திலிருந்து உள்ளறையின் பக்கமாகச் சென்றுஎன்னங்க, யாரோ உங்கள தேடி வந்திருக்காங்கஎன்று தெரியப்படுத்திவிட்டு, அதே வேகத்தில் வாசலுக்கு வந்துவராரு. நீங்க உள்ள வாங்கஎன்றார். அப்போதுதான் அந்தச் சிறுமி எங்களைப் பார்த்தாள். “என்ன கண்ணு இது?” என்று பேசத் தொடங்கிவிட்டான் அண்ணாமலை. “வத்திக்குச்சி கோபுரம். நூறு குச்சியில செய்யணும். ஒரு குச்சி கூட அதிகமாகவும் ஆகக்கூடாது. கொறயவும் கூடாது. அதான் கண்டிஷன்என்றாள்.

கன்னி நிலம், வசந்தத்தைத் தேடி, கூடடையும் பறவைகள் நாவல்களின் அட்டைப்படங்களாக உள்ள மூன்று ஓவியங்களும் தேதி காலண்டருக்குப் பக்கத்தில் சுவரில் தொங்கின. அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இரண்டு கைகளையும் சேர்த்து “வாங்க வாங்க. வணக்கம்” என்று வணங்கியபடியே கல்யாணராமன் வெளியே வந்துவிட்டார். “சரியா சொன்ன நேரத்துக்கு வந்துட்டிங்க. வழி கண்டுபிடிக்க ஏதாவது சிரமமிருந்ததா?” என்றபடி ஆவலுடன் எங்களோடு கைகுலுக்கினார். ”சார், நான் பிரபு. இவன் அண்ணாமலை. இவன் இளங்கோ. எல்லாருமே நெய்வேலிதான் சார்” என்று அறிமுகப்படுத்தினேன். ”எங்க எல்லாருக்குமெ உங்க நாவல்கள் ரொம்ப புடிக்கும். ரோசம்மா ட்ரையாலஜிய பத்தி நாங்க பேசாத நாளே இல்லை சார்”

அப்பா, கோபுரம் தயார், இங்க பாருங்க, ஒரு குச்சி கூட மிச்சமில்லை” என்றபடி கைகளை உயர்த்தி வெற்றிக்குரல் எழுப்பிய சிறுமியிடம் “சரி சரி, அகிலா, இங்க பார். இவுங்ககிட்ட பேசு” என்று அழைத்தார் கல்யாணராமன். எங்களிடம் “எங்க மகள்” என்றார். “நான்தான் மொதல்ல பேசனேன்” என்றாள் அவள். தண்ணீர் நிரம்பிய மூன்று தம்ளர்கள் வைத்த தட்டை எடுத்துக்கொண்டு வந்தவரிடம் “இவுங்க நெய்வேலிம்மா. புது வாசகர்கள்” என்று அறிமுகப்படுத்தினார். பிறகு எங்களிடம் “பரமேஸ்வரி. என் மனைவி” என்று சொன்னார். நாங்கள் வணக்கம் சொன்னோம். அவர் புன்னகையோடு “வணக்கம். எடுத்துக்குங்க. பேசிட்டே இருங்க. டீ போடறன்” என்று திரும்பினார்.

கல்யாணராமன் ஜன்னலோரமாக இருந்த கைபேசியை எடுத்து வத்திக்குச்சி கோபுரத்தை நாலைந்து கோணங்களில் படமெடுத்தார். பிறகு “சரி அகிலா, கலைச்சிட்டு வேற விதமா முயற்சி செய்றியா” என்று கேட்டார். அவள் உற்சாகமாகத் தலையைசைத்தபடியே உட்கார்ந்தாள். அப்போது அவள் தலையைத் தொட்டு புன்னகையோடு அசைத்தார் கல்யாணராமன். பிறகு அருகிலிருந்த மடிப்புநாற்காலிகளை எடுத்துக்கொண்டு “நாம் அப்படி மரத்தடிக்கு போயிடலாமா? பேச வசதியா இருக்கும்” என்றார். அவர் இரண்டை எடுக்க, நான் இரண்டை எடுத்துக்கொண்டு எலுமிச்சை மரத்தடிக்கு வந்தோம்.

நீங்க எழுதறீங்களா? ஏதாச்சிம் பத்திரிகைல வந்திருக்குதா?” என்று கல்யாணராமனே பேச்சைத் தொடங்கினார். “நாங்க வெறும் வாசகர்கள்தான் சார். இதுவரைக்கும் எழுதணும்னு தோணியதில்ல. ஒருவேள அப்படி ஒரு வேகம் வந்தா எதிர்காலத்துல எழுதலாம்……” கூச்சத்தோடு சொன்னான் இளங்கோ.

நான் கல்யாணராமன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். “எழுதற வேகம்லாம் அப்படித்தான் சுனாமிமாதிரி திடீர்னு வந்து ஆள இழுத்துட்டு போயிடும். எழுத்துல திட்டம் போட்டு செய்யறதுலாம் நடக்காத காரியம்” என்றார் அவர்.

எனக்கு நீல வானம் நாவலைப்பற்றி பேசவேண்டும்போல தோன்றியது. அதில் வரும் ராகவன் பாத்திரம் செய்கிற விவாதங்கள் ஒவ்வொன்றும் எனக்கு மிகவும் பிடித்தவை. அதைப்பற்றி பேசத் தொடங்கியதும் சொற்கள் அருவிபோல பொங்கிப்பொங்கி வந்தன. கல்யாணராமன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். “சார், அவன் அந்த நாவலை பத்து தடவைக்கு மேல படிச்சிட்டான் சார். விட்டா மனப்பாடமாவே ஒப்பிச்சிடுவான்” என்றான் அண்ணாமலை. கல்யாணராமனின் சதுரமுகத்துக்கு புன்னகை அழகாக இருந்தது.

இளங்கோ “எல்லாருமே கவிதை கதைனு தொடங்கி படிப்படியா நாவலுக்கு போகறததான் பாத்திருக்கேன். நீங்க எப்பிடி சார் நேரிடையா நாவலுக்குள்ள போயிட்டீங்க?” என்று கேட்டான்.

கல்யாணராமன் “எழுதணும்ங்கற வெறிதான் எனக்குள்ள எழுதற வேகம் உண்டாவறதுக்கு தூண்டுகோல். அப்படி ஒரு நெருக்கடி. அந்த காலத்துல அப்படி ஒரு வாழ்க்க. ஒரு மூட்ட கல்ல தூக்கி என் தலமேல வச்சமாதிரி இருக்கும் அப்ப. அந்த அளவுக்கு பாரம். முதுவுல வச்ச உப்புமூட்டய ஆத்துக்குள்ள உக்காந்து கழுத கரைச்சிக்கிற கத தெரியுமில்ல உங்களுக்கு. அந்த மாதிரி எழுத்துல கரைச்சிகிட்டேன் நான்…..” என்றார். அவருடைய பார்வை எங்களிடமிருந்து விலகி சில நொடிகள் தொலைவில் தெரிந்த வாழைமரங்களின் பக்கம் திரும்பி நிலைத்தது. பெரிய மரத்தைச் சுற்றி ஏராளமான சின்னச்சின்ன கன்றுகள். செய்தித்தாளைச் சுருட்டி வைத்ததுபோன்ற இலைச்சுருள்கள். சுருள்களுக்கிடையில் பறந்து தாவும் சிட்டுக்குருவிகள்.

ஒருகணம் எங்களை நோக்கித் திரும்பிய கல்யாணராமன் “நான் உங்களமாதிரி இருந்த காலத்துலேருந்து சொல்றேன். அப்பதான் எல்லாமே வெளங்கும்” என்றார். “சொல்லுங்க சார்” என்றபடி அவர் முகத்தையே பார்த்தோம் நாங்கள்.

எங்க அப்பாவுக்கு எங்க அம்மா ரெண்டாம்தாரம். கோவில்ல வச்சி மொறயா தாலி கட்டின கல்யாணம்தான். ஆனா தனியா வீடெடுத்து தங்க வச்சிருந்தாரு அப்பா. அம்மாவுக்கு தையல் தெரியும். மார்க்கெட்ல நாலஞ்சி கடையில தொடர்ச்சியா அவுங்களுக்கு ஆர்டர் குடுப்பாங்க. தச்சி முடிச்சதும் கொண்டும் போயி குடுத்துட்டு அம்மா பணம் வாங்கிவந்துடுவாங்க. அப்பா மார்க்கெட்ல ஒரு துணிக்கட வச்சிருந்தாரு. அப்படித்தான் ரெண்டு பேருக்குள்ள பழக்கம். அது கல்யாணம் வரைக்கும் இழுத்துவந்துட்டுது. அம்மாவுக்கு கூடப் பொறந்தவங்க, சொந்தக்காரங்கன்னு சொல்ல யாருமே இல்ல. அவுங்கம்மா மட்டும்தான் அவுங்களுக்கு. அவுங்களும் சின்ன வயசில ரெண்டாம்தாரமா வந்தவங்க. எல்லாம் விதி. வேற எப்படி சொல்லமுடியும்?”

கல்யாணராமனின் முகத்தில் திடீரென ஒரு இருள் வந்து கவிவதைப் பார்க்கமுடிந்தது. அதே நேரத்தில் “அப்பா டீ” என்றபடி இரு கைகளாலும் டீக்கோப்பைகள் வைக்கப்பட்ட தட்டைத் தாங்கியபடி அடிமேல் அடிவைத்து வந்து கொண்டிருந்தாள் அகிலா. அந்தக் குரல் கேட்டுத்தான் கல்யாணராமன் திரும்பினார். “நீ ஜூஸ் குடிச்சியா அகிலா?” என்றபடி கல்யாணராமன் ஒவ்வொரு கோப்பையாக எடுத்து எங்களுக்குக் கொடுத்தார். “இன்னும் இல்லப்பா” என்ற சிறுமியிடம் “சரி, அம்மாகிட்ட போய் ஜூஸ் வாங்கி குடி” என்று சொல்லி அனுப்பினார். ஆவி பறக்கும் கோப்பையையே ஒருகணம் பார்த்திருந்த கல்யாணராமன் முதல் மிடறை சூடாகவே பருகினார்.

சனி ஞாயிறுல மட்டும்தான் எங்க வீட்டுக்கு வருவாரு. மத்த நாள்ல பெரிய வீட்டுல இருப்பாரு. நானும் தங்கச்சியும் பொறந்தோம். அப்பா மெட்ராஸ்ல வேல செய்றவரு, லீவ் நாள்லதான் இங்க வந்துட்டு போவாருன்னு ஆரம்பத்துல எங்ககிட்ட அம்மா சொல்லி வச்சிருந்தாங்க. நானும் அதத்தான் உண்மைன்னு நம்பிட்டிருந்தேன். அப்பறம் படிப்படியா நானே புரிஞ்சிகிட்டேன். எல்லார் ஊட்டுலயும் அம்மா அப்பா சேந்து நிக்கறமாதிரி போட்டோ புடிச்சி வச்சிருக்காங்களே, நீங்க ரெண்டு பேரும் ஏம்மா புடிச்சி வச்சிக்கலைன்னு ஒருநாள் தெரியாத்தனமா கேட்டுட்டன். என்னைக்கும் கோவப்படாத அம்மா அன்னைக்கு கோவத்துல அடிஅடினு அடிச்சிட்டாங்க. முதுவுல தடிப்பு தடிப்பா ஆயிடுச்சி. அப்பறம் ராத்திரி அழுதுகினே வலிக்குதா கண்ணு வலிக்குதா கண்ணுனு தடவிக் குடுத்து மருந்துலாம் தடவனாங்க. எங்க கல்யாணத்தன்னைக்கு ஊருக்கே லீவ் நாளுடா. ஒரு கடையும் இல்ல. அதான் எடுக்கலை, புரிதான்னு பட்டும் படாம சொன்னாங்க. நானும் நம்பிட்டமாதிரி சரிம்மான்னு தலையாட்டிகினேன். அதுக்கப்பறம் எங்க அம்மாவ நான் சங்கடப்படுத்தனதில்ல.”

டீயை அருந்திவிட்டு கோப்பையை கீழே வைத்தார். நாங்களும் அருந்தி முடித்தோம்.

எங்க அப்பா கெட்டவரா நல்லவரானு நெனச்சி பாக்கற நெலயில நாங்க இல்ல. ஆனா அவுருதான் எங்க ரெண்டு பேரயும் படிக்க வச்சாரு. துணிமணி எடுத்துக் கொடுத்தாரு. அந்த நன்றிய நான் ஒருநாளும் மறக்கமாட்டேன். தங்கச்சி ப்ளஸ் டூ முடிச்சிட்டு ஒரு வருஷம் டீச்சர் ட்ரெய்னிங் படிச்சிது. யார்யாரயோ புடிச்சி அத ஒரு ஸ்கூல்ல டீச்சராக்கிட்டாரு அவரு. அம்மா அப்பவும் தச்சிட்டுதான் இருந்தாங்க. நான் டிகிரி முடிச்சிட்டு ஸ்டாஃப் செலக்‌ஷன், பேங்க் எக்ஸாம்னு மாத்தி மாத்தி எழுதிட்டிருந்தன். ஒன்னும் சரியா அமையலை. அந்த கம்பனி, இந்த கம்பனின்னு பேர் சொல்லி எங்கஎங்கயோ என்ன போன்னு அடிக்கடி சொல்வாரு அப்பா. எனக்கு அங்கல்லாம் போவ புடிக்காது. போவமாட்டன். கடைசியில அவனுக்கு சுயபுத்தியும் இல்ல, சொல்புத்தியும் இல்ல, நீயாச்சிம் எடுத்துச் சொல்லக்கூடாதான்னு அம்மாவ திட்டிட்டு போயிடுவாரு.”

கசப்பான ஒரு புன்னகை அவருடைய உதடுகளில் வந்து படிவதை நான் பார்த்தேன். ஒரு கணத்துக்குப் பிறகு அவர் மீண்டும் தொடங்கினார். ”என்னைக்கும் என்ன திட்டி பேசாத அம்மா ஒருநாள் மனசு நொந்து திட்டனாங்க. டெலிபோன் டிப்பார்ட்மெண்ட்க்கு எழுதி போட்டிருக்கேம்மா. இன்னும் ரெண்டு மூனு மாசத்துல பதில் வரும்மான்னு நான் சொன்னத, அவுங்க நம்ப தயாராவே இல்ல. இதே கதையைத்தான் நீ மூனு வருஷமா சொல்லிட்டிருக்க போடானு எழுந்து போயிட்டாங்க. நம்மளவிட வயசுல சின்ன புள்ள சம்பாதிச்சி கொண்டாந்து குடுக்கற பணத்துல சாப்படறமேன்னு ஒரு வெக்கம் வரணும்டா ஒனக்கு. உப்பு போட்டு சாப்படறவனுக்கு அதுதான் அடையாளம்னு அடுப்ப பாத்துகினே சொன்னாங்க. எனக்கு அப்படியே நாக்க புடுங்கிக்கணும்போல இருந்திச்சி.”

நாங்கள் எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் தொடர்ந்து “ஒருநாள் அம்மாகிட்ட குடுக்கறதுக்காக துணிலோட் எடுத்தாந்தாரு அப்பா. என்கிட்ட ஒரு சீட்ட காட்டி இந்த அட்ரஸ்ல போயி பாரு. ஏதோ ஒரு அசிஸ்டெண்ட் வேணுமாம். நம்ம கட பேர சொல்லு. மாசத்துக்கு ரெண்டாயிரம் ரூபா குடுக்கறம்னு சொன்னாங்கன்னு சொன்னாரு. ரெண்டாயிரம் ரூபா ரெண்டாயிரம் ரூபானு திருப்பித்திருப்பி சொல்லறத கேட்ட சமயத்துல எனக்கு தலையில சுத்தியால அடிக்கறமாதிரி இருந்தது. கவுர்மெண்ட் ஆபீஸ்ல அங்க குமாஸ்தா இங்க குமாஸ்தானு போனா கூட அதான் குடுப்பானுங்க தெரிமான்னாரு. நான் சீட்ட வாங்கி பாத்தேன். கம்பெனி மாதிரி தெரியலை. ஏதோ வீட்டு அட்ரஸ். நான் பதில் சொல்லாம சும்மா இருந்தன்.” என்றார்.

திடீர்னு அவர் அம்மா பக்கம் பாத்து சத்தமா பேசனாரு. பேசப்பேச குரல் உடைஞ்சி ஒரு கட்டத்துல அழ ஆரம்பிச்சிட்டாரு. அங்கயும் பசங்க பெரிசாய்ட்டெ இருக்காங்க, தெரியுமில்ல. அத புரிஞ்சிக்கணும். என்னைக்காவது ஒரு நாள் ஊட்ட விட்டு எங்கயும் போவக்கூடாதுனு என்ன புடிச்சி நிறுத்தி வச்சிட்டாங்கன்னா நான் என்ன பண்ணமுடியும். இல்ல, எனக்கே ஒன்னு ஆவுது, அப்ப நீ என்ன செய்வ? இவன ஒரு ஆளாக்கி நிக்க வச்சிட்டா நிம்மதியா இருக்கலாம்னு நெனைக்கறது தப்பா? இப்பிடி வீம்பு புடிச்சி அலயறானே ஒம் புள்ள. தான் இஷ்டத்துக்குத்தான் நடப்பேன்னு ஆளுக்கு ஆள் நெனைச்சாங்கன்னா, அப்பறம் இங்க நான் எதுக்குனு கேட்டுட்டு கண்ண தொடச்சிகினே வெளிய போயிட்டாரு…..”

கல்யாணராமன் என்னைப் பார்த்தபடி ”அம்மா என்கிட்ட ஒரு வார்த்த கூட பேசலை. மனசுக்குள்ள அது எனக்கு உறுத்தலா இருந்திச்சி. வீட்டுக்குள்ள இருக்கவே புடிக்கலை. வேகமா வெளிய வந்துட்டன். கையில பத்து பைசா கெடயாது. நெல்லித்தோப்புக்கு நடந்தே போனேன். அப்பா குடுத்திருந்த அட்ரஸ் சீட்டுல இருந்த வீட்ட கண்டுபிடிச்சன். பெரிய ஊடு. பிரான்ஸ்காரங்க இருக்கற ஊடு மாதிரி இருந்திச்சி. வாட்ச்மேன் தாத்தாகிட்ட விவரம் சொன்னேன். அவர் வாசல்லேர்ந்தே இன்டர்காம்ல தகவல் சொன்னாரு. அப்பறமா என்ன உள்ள போவ சொன்னாரு” என்றார்.

ஒரு காகம் வேகமாகப் பறந்துவந்து நாரத்தை மரக்கிளையில் அமர்ந்து சத்தம் போடாமல் எங்களையே சில நொடிகள் பார்த்தபடி அமர்ந்தது. பிறகு விர்ரென பறந்து போனது.

கூடத்துல ஒரு பிரம்பு நாற்காலியில தடியா ஒரு அம்மா உக்காந்து டிவி பார்த்துட்டிருந்தாங்க. சந்தனக்கடத்தல் வீரப்பன் யாரயோ கடத்திம்போயி காட்டுக்குள்ள வச்சிருக்கறதா செய்தி ஒடிட்டிருந்தது. அவுங்க உட்கார்ந்திருந்த எடத்துக்கு மேல சுவத்துல ஒரு பெரிய படம் ஆணியில மாட்டியிருந்திச்சி. சந்தனமாலை போட்டிருந்தாங்க. தெரிஞ்ச முகமாயிருக்குதேன்னு உத்து பாத்துகினே ஒரு நொடி யோசிச்சேன். ஏராளமான ஆட்கள் பேருங்க மனசுக்குள்ள முட்டி மோதிச்சி. யாரு யாருனு உருட்டிகினே இருந்தேன். சட்டுனு ஞாபகம் வந்திடுச்சி. முத்துசாமி நாயக்கர். பாண்டிச்சேரியில ஹரிஜன சேவா சங்கம் நடத்தனவரு. சுப்பையா கம்யூனிஸ்ட் கட்சிக்கு போயிட்ட பிற்கு சங்கத்தை அவர்தான் பாத்துகிட்டாரு. அந்த அம்மா பக்கமா திரும்பி இவர் முத்துசாமி நாயக்கர்தானன்னு கேட்டேன். ஆமாம்னு அந்த அம்மா தலயாட்டிகினே எங்க அப்பான்னு சொன்னாங்க. அப்பறமா என் பேரு, படிப்பு விவரம்லாம் கேட்டாங்க. எல்லாத்தயும் சொன்னேன். கடைசியா உனக்கு முருகேசன் என்ன வேணும்னு கேட்டாங்க. அப்பான்னு சொன்னேன்.”

நெய்வேலி என்பதாலோ என்னமோ எங்களுக்கு அந்தப் பெயர் அறிமுகமான பெயராக இல்லை. அதனால் அவர் சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தோம். ”முத்துசாமி நாயக்கர தெரிஞ்சிருக்குதுன்னா ஒனக்கு ரோசம்மாவயும் தெரிஞ்சிருக்கணுமேன்னு சொல்லிட்டே அந்த அம்மா என்ன பாத்தாங்க. நாயக்கர் மனைவி, ரெட்டியார்பாளையம் கிறிஸ்து ஆசிரமம்னு சொன்னேன். எங்கம்மாதான் அதுன்னு சொன்னாங்க. சட்டுனு அவுங்க பேர்ல ஒரு மதிப்பும் மரியாதயும் என் மனசுல கூடுதலாச்சி. என் பேரு வெண்ணிலான்னு சொன்னாங்க. நான் கல்யாணராமன்னு சொன்னேன். அம்மாவுக்கு தொண்ணூறு வயசாவுது. இங்கதான் கீழ அந்த அறையில இருக்காங்க. பகல்ல பாத்துக்க ஒரு நர்ஸ், ராத்திரியில பாத்துக்க ஒரு நர்ஸ்னு தனித்தனியா இருக்காங்க அதெல்லாம் கவலயில்ல. அப்பா போயி பதினஞ்சி வருஷமாவுது. அதுலேருந்து அம்மாவுக்கு ஒரே பொழுதுபோக்கு பழைய டைரிங்கள எடுத்து படிக்கறதுதான். அப்பாவுடைய டைரி ஒரு அம்பது இருக்கும். அம்மாவே எழுதன டைரி ஒரு அம்பது இருக்கும். கைக்கு கெடச்ச டைரிய எடுத்து காலையிலேந்து படிச்சிட்டே இருப்பாங்க. அவுங்களா சிரிச்சிக்குவாங்க. அவுங்களா அழுவாங்க. என்னன்னு கேட்டா எதுவும் சொல்ல மாட்டாங்க. படிச்சி படிச்சி அந்த பழைய காலத்த அவுங்க மறுமடியும் மனசுக்குள்ளயே உண்டாக்கிக்கறாங்கன்னு நெனைக்கறேன். அவுங்க இந்த காலத்துக்கே வர விரும்பலை. ரெண்டு பேரும் சேந்து ஒன்னா வாழ்ந்த காலம் மட்டுமே போதும்னு நிறுத்திட்டாங்க. சத்தியாகிரகம், சுதந்திரப்போராட்டம், ஆசிரமம்னு அந்த காலத்துக்குள்ளயே இருக்கணும்னு ஆசைப்படறாங்கன்னு புரிஞ்சிகிட்டேன். ஒரு வகையில அதுவும் நல்லதுதான். இந்த காலத்துல புதுசா தெரிஞ்சிக்க என்ன இருக்குது. அடிதடி, குத்து, பதவிவெறி, பொறாமை அவ்ளோதானே.”

கல்யாணராமனின் குரலில் ஒருவித உற்சாகம் வந்து படிவதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ”இந்த பத்து வருஷத்துல அம்மாவுக்கு மூனுதரம் ஆப்பரேஷன் நடந்திட்டுது. மேக்சிமம் பாய்ன்ட்டுக்கு போயிட்டுது பார்வை. லென்ஸ் வைக்கலாம்ன்னா இந்த வயசுக்கு தாங்காதுன்னு சொல்லிட்டாரு டாக்டரு. ஆனா அம்மாவால படிக்காம இருக்கமுடியலை. பார்வை கொறயுதுன்னு சொன்னதுமே லென்ஸ் வச்சி படிக்க பழகிட்டாங்க. ஆனா அது ஆபத்துன்னு சொல்றாரு டாக்டரு. கண்ணுல துணிய கட்டிகினு கொஞ்ச நாள் எதயும் பார்க்காம இருக்கறது நல்லதுன்னு சொன்னாரு அவர். இப்ப ஒரு பத்து நாளா அம்மாகிட்ட டைரிங்கள குடுக்கறதில்ல. அலமாரியில வச்சி பூட்டிட்டோம். ஆபீஸ் டைம் மாதிரி டென் டு சிக்ஸ். அம்மாவுக்கு நீங்க டைரி படிக்கணும். சிம்பிள். அவ்ளோதான். லஞ்ச் நீங்க இங்கயே சாப்ட்டுக்கலாம்னு சொன்னாங்க. பிறகு வாங்க, அம்மாவ பாருங்கன்னு உள்ள கூப்டும் போனாங்க. வதங்கிப் போன பூசணிக்கொடிமாதிரி ஒரு ஈச்சர்ல படுத்திருந்தாங்க ரோசம்மா. ஒரு காட்டன் நைட்டி. மடியில ஒரு சின்ன துண்டு. அவ்ளோதான்.”

பக்கத்துல ஒரு நர்ஸ் பொண்ணு இருந்தா. வெண்ணிலா மேடம் என்னை ரோசம்மா முன்னால நிறுத்தி டைரி படிச்சி காட்ட ஒரு தம்பி வந்திருக்காரு. ஒன்ன பத்தியும் அப்பாவ பத்தியும் நல்லா தெரிஞ்சி வச்சிருக்காருன்னு சொன்னாங்க. அப்படியே மெதுவா தலய நிமுத்தி உக்காந்தாங்க ரோசம்மா. ரெண்டு கைங்களையும் நீட்டினாங்க. உங்களத்தான் தேடறாங்க, புடிங்கன்னு சொன்னாங்க வெண்ணிலா மேடம். நான் கைய நீட்டி அவுங்க கைய புடிச்சேன். ஈர மணல்ல கைய வச்சமாதிரி எனக்கு சிலுத்து போச்சி. அவுங்க மெதுவா ஒன் பேரென்ன ராஜான்னு கேட்டாங்க. அந்தக் குரல கேக்கும்போது என்னமோ நெஞ்சயே அடைக்கிறமாதிரி இருந்தது. . நான் பேர சொன்னதும் ரெண்டு மூனு தரம் அதயே திருப்பித்திருப்பி சொன்னாங்க. சரிம்மா, நாளையிலேர்ந்து வருவாரு சரியான்னு எழுந்திருந்தாங்க வெண்ணிலா மேடம். நாளைக்கி வரைக்கும் எதுக்கு மேடம் தள்ளிப் போடணும். இப்பவே ஆரம்பிச்சிடலாம் மேடம். வீட்டுல போயி என்ன செய்யப் போறேன், சாய்ங்காலம்வரைக்கும் படிச்சிட்டு போறேன்னு சொன்னன். அவுங்களுக்கு ஒரே ஆச்சரியம். அம்மா, அவரு இப்பவே ஆரம்பிக்கறாராம். படிக்க சொல்லட்டுமான்னு ரோசம்மாகிட்ட கேட்டாங்க. அழகா சிரிச்சிகிட்டே சரின்னு தலயாட்டனாங்க ரோசம்மா. வெண்ணிலா மேடம் அலமாரிய தெறந்து கைக்கு கிடைத்த ஒரு டைரிய எடுத்து குடுத்தாங்க. 1947 டைரி. நானும் அதைப் புரட்டி தோராயமா ஒரு பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பிச்சேன். படிக்க படிக்கத்தான் ரோசம்மா அந்த பழைய டைரிங்கள ஏன் திரும்பித்திரும்பி படிக்கறாங்கன்னு புரிஞ்சிகிட்டேன். உண்மையிலயே அந்த பழைய காலம் கண்முன்னால் விரிஞ்சிது. சாயங்காலம் கெளம்பற சமயத்துல என்ன பக்கத்துல கூப்ட்டு கைய புடிச்சி காட் ப்ளஸ் யூ மை டியர் சைல்ட்னு சொன்னாங்க. ஏன்னு தெரியலை. என் கண்ணுலாம் கலங்கி போயிடுச்சி.”

கல்யாணராமனின் சொற்கள் வழியாக என்னால் அந்தக் காட்சியை கற்பனை செய்துகொள்ள முடிந்தது. எங்கள் கேள்விகளோ, சந்தேகங்களோ அவருடைய பேச்சின் ஒட்டத்தைத் தடுத்துவிடுமோ என அஞ்சி அமைதியாக அவர் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தோம்.

டெலிபோன்ஸ்லேருந்து சீக்கிரமா லெட்டர் வந்துடும்னு நெனச்ச நான் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி வந்தா போதும்னு நெனைச்சிக்கற அளவுக்கு அந்த வேலை எனக்கு ரொம்ப புடிச்சிட்டுது. முதல் மாசம் சம்பளம் வாங்கியாந்த அன்னைக்கு அப்பா எங்க ஊட்ல இருந்தாரு. இப்ப திருப்திதான ஒங்களுக்குன்னு மனசுக்குள்ளயே நெனச்சிகினு நான் அவரு கையிலதான் அந்த பணத்த குடுத்தேன். அப்பா ஒரு நொடி என்ன நிமுந்து பாத்துட்டு சட்டுனு குனிஞ்சி தேம்பித்தேம்பி அழ ஆரம்பிச்சிட்டாரு. எனக்கு ஒடம்பே நடுங்கிட்டுது. அப்பா ஒன்ன பாழுங்குழியில தள்ளிட்டன்னு நெனச்சிக்காத கல்யாணராமா, என் காலத்துக்குள்ள நீ உன் கால்ல நிக்கறத பாக்கணும்னுதான் அப்பா நெனச்சேன். இனிமேல உன் உழைப்புல நீ எந்த உயரத்துக்கு போனாலும் சந்தோஷம்தாம்பான்னு சொல்லிட்டு அம்மாகிட்ட குடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கன்னு கைய காட்டனாரு. எனக்கும் அழுகையா வந்துட்டுது. ரெண்டு பேரயும் நிக்க வச்சி கால்ல உழுந்தன். ரெண்டு பேருமே எனக்கு தின்னூரு பூசிவிட்டாங்க.”

டைரிங்கள படிக்கப்படிக்க ரோசம்மாவ பத்தியும் நாயக்கர பத்தியும் நல்லா புரிஞ்சிகிட்டேன். இங்க கல்வே காலேஜ்ல இண்டர்மீடியட், அப்பறம் மெட்ராஸ்ல பி..வும் லாவும் படிச்சிருக்காரு. அப்பதான் தற்செயலா சைதாப்பேட்டைல ஆயிரக்கணக்குல செருப்பு தைக்கிற தொழில செய்யறவங்க கூடியிருந்த ஒரு கூட்டத்துல காந்தி பேசறத அவரு கேட்டிருக்காரு. எளிய மக்களுக்கான சேவை எந்த அளவுக்கு மகத்தானதுன்னு அன்னைக்கு அவருக்கு புரிஞ்சிது. அன்னைலேருந்து அவர் கதருக்கு மாறிட்டாரு. அவரு வக்கீலா தொழில் செஞ்ச காலத்துல அவருகிட்ட வந்ததுல நூத்துக்கு தொண்ணூறு கேஸ் வாய்க்கா தகராறு வரப்புத்தகராறு கேஸ். சாதித்தகராறு கேஸ். கந்து வட்டி கடனுக்கு நெலத்த எழுதி வைக்கற கேஸ். குடிபோதை கேஸ். அவுங்களுக்கு கல்வி அறிவு இல்லாதது ஒரு பெரிய குறைன்னு அப்ப அவருக்கு தோணுது. பாதிக்கப்பட்டவங்கள்ல பெரும்பாலான ஆளுங்க அடிமட்டத்துல இருந்தவங்க. ஒருநாள் அவுங்க இருக்கற எடத்துக்கே போயி வாங்க, வந்து படிக்க கத்துக்குங்கன்னு கூப்ட்டாரு. ஒரு மரத்தடியில லாந்தர் வெளக்கு வச்சிகினு எழுத்து சொல்லிக் குடுத்தாரு. அவருடைய ஆர்வம் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா வளந்தது. ”

அந்த ஆர்வம் சுப்பையா ஆரம்பிச்ச ஹரிஜன சேவா சங்கத்துகிட்ட கொண்டுவந்து சேத்துது. அவர் செஞ்ச அதே வேலையை கிறிஸ்து ஆசிரமத்துலேருந்து செஞ்சவங்க ரோசம்மா. ஒருத்தவங்க செஞ்ச சேவை இன்னொருத்தவங்களுக்கு புடிச்சிருந்தது. ரெண்டு பேருக்கும் மனசு ஒத்து போனதால ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிகிட்டாங்க. ஒரு இந்துவும் ஒரு கிறிஸ்துவப் பெண்ணும் கல்யாணம் செஞ்சிக்கணும்ன்னா மதம் மாறணும்ன்னு சொல்றதுண்டு. ஆனா, மதமாற்றத்துக்கு இடமில்லாமலே ரெண்டு பேரும் சேந்து வாழ்ந்தாங்க.”

ஒரு டைரியில நாயக்கரு தன்னுடைய சின்ன வயசு அனுபவங்கள எழுதி வச்சிருந்தாரு. அவருடைய அப்பாவுக்கு அவுங்க அம்மா ரெண்டாம் தாரம். அம்மாவுக்கு அம்மாவும் ரெண்டாம்தாரம். அவருக்கு ஒரு தங்கச்சி இருந்தது. அந்த பொண்ண யாரோ ஒரு பிரான்ஸ்காரனுக்கு ரெண்டாம்தாரமா கட்டி வைக்கறாரு அவுங்கப்பா. பத்து காசி சம்பாதிக்க உனக்கு துப்பிருக்கானு அவரு அப்பா அடிச்ச அடியிலதான் வெறுத்து போயி ஒரு அனாத ஆசிரமத்துல வந்து சேந்து படிக்க ஆரம்பிக்கறாரு. அந்த எடத்த படிக்கும்போது மனசே உருகிட்டுது. ஒரு நிமிஷம் கலங்கி நின்னு யோசிக்கற சமயத்துல அவரு வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒன்னுபோலவே இருக்குதேன்னு தோணிச்சி. அவருடைய தொடர்ச்சிதான் நானோன்னு கூட ஒரு எண்ணம் வந்தது. அந்த டைரிகள் மீது திடீர்னு ஒரு பெரிய ஈர்ப்பு வந்துட்டுது.”

மதிய சாப்பாட்டுக்குப் பிறகு ரோசம்மா ஒரு ரெண்டு மணி நேரம் தூங்குவாங்க. அந்த ரெண்டு மணி நேரமும் நான் மறுபடியும் வருஷ வாரியா டைரிகளை படிக்க ஆரம்பிச்சேன். ரெண்டு பேர் வாழ்க்கயையும் என்னால துல்லியமா புரிஞ்சிக்க முடிஞ்சது. ஒருதரம் ஏதோ ஒரு டைரிய படிச்சிட்டிருந்தேன். அது அவரு ஜெயில்ல எழுதன டைரி. அவரு ஜெயில்ல இருந்த சமயத்துல ரோசம்மா கர்ப்பிணியா இருந்திருப்பாங்க போல. ஒவ்வொரு நாள பத்திய குறிப்பிலயும் அவுங்கள பத்தி ரெண்டு வரி இருந்தது. அத நான் படிச்சிட்டு போவும்போது திடீர்னு ரோசம்மா ஏதோ பதில் சொல்றமாதிரி இருந்தது. முதல்ல அது என் கற்பனையோன்னு நெனச்சேன். அவுங்க உதடு அசைவதை கண்ணால பாத்த பிறகுதான் எனக்கே அது புரிஞ்சிது. சட்டுனு படிக்கறத நிறுத்திட்டு பக்கத்துல போய் அவுங்க சொல்றத கேட்டேன். சாம் சாம்னு சொன்னாங்க. முதல்ல எனக்கு ஒன்னுமே புரியலை. ஒரு நிமிஷத்துக்குப் பிறகுதான் தன்னுடைய டைரியில பல இடங்கள்ல மை டியர் சாம்னு அவுங்க எழுதி வச்சிருந்தத நெனச்சிகிட்டேன். அது நாயக்கருக்கு அவுங்க வச்சிருந்த செல்லப் பேர்.”

கிட்டத்தட்ட ஆறுமாசம் தெனமும் ரோசம்மா வீட்டுக்கு போயிட்டிருந்தேன். ரெண்டு பேருடைய வாழ்க்கையும் என் கண்ணு முன்னால நடக்கறமாதிரி இருந்தது. அது என்னமோ ஒரு பெரிய வரலாற்றயே தெரிஞ்சிகிட்டமாதிரியான அனுபவம். ஒருநாள் வழக்கம்போல டைரி படிக்க அவுங்க வீட்டுக்கு போயிருந்தன். வீட்டுல யாருமே இல்ல. வாட்ச்மேன்தான் இருந்தாரு. பெரியம்மா பாத்ரூம்ல வழுக்கி உழுந்துட்டாங்க. தலையில அடி, ஆஸ்பத்திரிக்கு போயிருக்காங்கன்னு சொன்னாரு. உடனே அங்க ஓடனேன். வெண்ணிலா மேடம்தான் நின்னுட்டிருந்தாங்க. வழக்கமா ராத்திரி நேரத்துல வரக்கூடிய நர்ஸ் தூங்கிட்டிருந்தா. அவளுக்கு எதுக்கு தொந்தரவு தரணும்ன்னு அம்மா தானாவே பாத்ரூம் போயிட்டாங்க. திரும்பி வரும்போது கதவுல இடிச்சி தடுமாறி விழுந்திட்டாங்க. தலயில இடுப்புல தோள்பட்டையில எல்லா இடத்துலயும் அடின்னு சொன்னாங்க. அவங்க புருஷன் செக்ரடேரியட்ல பெரிய பதவியில இருக்கறவர். அவரும் அங்கதான் உட்கார்ந்திருந்தார். அவர்தான் என்ன ஐசியுவுக்கு அழச்சிம் போயி ரோசம்மாவ காட்டனாரு. ஏகப்பட்ட குழாய்ங்களுக்கு நடுவில அவுங்க ஒரு ஈரத்துணி மாதிரி கெடந்தாங்க.”

ஆபத்தான கட்டத்த தாண்டிட்டாங்க. ஆனா சுயநினைவே வரலை. ரெண்டு மூனு வாரம் ஆஸ்பத்திரிலேதான் இருந்தாங்க. எப்ப வேணும்னாலும் வரலாம்னு சொல்லிட்டாங்க டாக்டர்ங்க. அதனால அந்த நிலைமையிலயே ரோசம்மாவ வீட்டுக்கு அழச்சிட்டு வந்துட்டாங்க. அவுங்க அறையையே ஐசியுவா மாத்தி கூடுதலா ரெண்டு நர்ஸ் போட்டு பாத்துகிட்டாங்க. அவுங்கள பாக்கவே பாவமா இருந்தது.”

மேடம், ஒரு டைரிய எடுக்கறீங்களான்னு ஒருநாள் வெண்ணிலா மேடத்துகிட்ட கேட்டன். எதுக்குன்னு மேடம் என்ன குழப்பத்தோடு பாத்தாங்க. மேடம், நம்மள பாக்கவோ, நம்மளோட பேசவோதான் அவுங்க நினைவு அனுமதிக்கலையே தவிர, அவுங்களுடைய நினைவு அப்படியே உயிர்ப்போடுதான் இருக்கும் மேடம். நாம படிக்கற சத்தம் அந்த நினைவை நேரிடையாவே போய் நிச்சயம் தொடும்னு சொன்னன். அவுங்க குழப்பமா பாத்தாங்க. எடுங்க மேடம்னு அழுத்தி சொன்னதும் எடுத்து குடுத்தாங்க. நான் ஒரு பக்கத்த திருப்பி படிக்க ஆரம்பிச்சேன். அந்த மேடமும் சரி, அங்க இருந்த நர்ஸ்ங்களும் சரி, என்னை ஏதோ பைத்தியக்காரன பாக்கறமாதிரி விசித்திரமா பாத்தாங்க. ஆனா நான் அதை ஆத்மார்த்தமா செஞ்சேன். சாயங்காலமா வந்த டாக்டர் மட்டும் இதுவும் ஒரு ட்ரீட்மென்ட்மாதிரி இருக்கட்டும், பலன் கெடச்சா நல்லதுதானேன்னு சொல்லிட்டு போனார். அப்பறம்தான் அவுங்க அமைதியானாங்க.”

நான் மறுபடியும் டைரிகளை படிக்க ஆரம்பிச்சேன். முத்துசாமியையும் ரோசம்மாவையும் நெருக்கமா புரிஞ்சிக்கணும்ங்கறதுக்காக நான் ரோசம்மாவின் முதல் டைரியிலிருந்து தொடங்கினேன். என்னைக்காவது ஒருநாள் கண்ண தெறந்து கல்யாணராமான்னு கூப்புடுவாங்கன்னு நிச்சயமா எனக்கு நம்பிக்கை இருந்தது. ஒரு நாளைக்கு ரெண்டு டைரிய படிச்சேன். சில சமயத்துல மூனு கூட படிச்சிருக்கேன். மூனு மாசத்துல ரெண்டு பேருடைய மொத்த வாழ்க்கைய பத்தியும் எனக்கு ஒரு பிடி கெடைச்சிது.”

துரதிருஷ்டவசமா ரோசம்மா கண்ண தெறக்காமயே செத்துட்டாங்க. ஒருநாள் வழக்கம்போல படிக்க போன சமயத்துல அவுங்க வீட்டு முன்னால ஏகப்பட்ட கூட்டம் நின்னுட்டிருந்தது. அத பாத்து திகைச்சி நின்னுட்டன். உயிரில்லாத ரோசம்மா முன்னால நிக்கும்போது என்னால அழுகய கட்டுப்படுத்தவே முடியலை. அஞ்சலி செலுத்தறதுக்கு ஆயிரக்கணக்குல ஆளுங்க வந்து போனாங்க. நாலஞ்சி பாதிரியார்கள் வந்தாங்க. ரோசம்மாவ பெட்டிக்குள்ள வச்சி ப்ரேயர் செஞ்சாங்க. திடீர்னு வெண்ணிலா மேடம் என்னை பாத்து சைகை காட்டி கிட்ட வான்னு சொன்னாங்க. ஓடி போயி நின்னதும் மறந்தே போச்சு, போய் அந்த டைரிங்க எல்லாத்தயும் எடுத்துட்டு வான்னு சொன்னாங்க. மெதுவா எதுக்கு மேடம்னு கேட்டன். அந்த நினைவுகள் அவுங்களுக்கு எவ்வளவு நெருக்கமானவைன்னு உனக்கே தெரியும், அந்த நினைவுகளோடயே அவுங்க போறது நல்லதுதானேன்னு சொன்னாங்க. அதக் கேட்ட்துமே எனக்கு ஒடம்புல அனல்பட்டமாதிரி இருந்தது. எல்லா சடங்குகளும் அடங்குனதும் டைரிங்கள கேட்டு எடுத்துக்கலாம்னு நான் நெனச்சிட்டிருந்தேன். இப்ப வேற வழியே இல்ல. நெஞ்சு கனக்க எல்லா டைரிகளையும் எடுத்து வந்து ரோசம்மாவ வச்சிருந்த பெட்டிக்குள்ள வச்சேன். அன்னைக்கு சாய்ங்காலமே கல்லறையில புதைச்சிட்டாங்க.”

அடுத்த ரெண்டு வருஷத்துல எங்க குடும்பத்துல என்னென்னமோ நடந்துட்டுது. என் தங்கச்சி அவ கூட ஸ்கூல்ல வேலை செய்யற ஒரு கிறிஸ்துவ பையன கல்யாணம் பண்ணிகிட்டு போயிடுச்சி. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். பேரலலைஸ் அட்டாக். ரெண்டும் ஒரே சமயத்துல. எங்களால போய் பார்க்கக்கூட முடியலை. அந்த வீட்டுல யாருமே எங்கள சேக்கலை. ஒரு வருஷம் இழுக்க பறிக்க கெடந்து போய் சேர்ந்துட்டாரு. அம்மாவுக்கு ஏற்கனவே சக்கர இருந்தது. மாத்திரை சாப்ட்டுட்டுதான் இருந்தாங்க. ஆனா ஒருநாள் பெரிசா கால் வீங்கிட்டுது. ஆஸ்பத்திரில எடுக்கணும்னுட்டாங்க. அதெல்லாம் ஒன்னும் வேணாம், என்ன வீட்டுக்கு கூப்ட்டிட்டு போன்னு அம்மா புடிவாதம் புடிச்சாங்க. நான்தான் அவுங்கள கவனிச்சிகிட்டேன். நம்மள பெத்தவங்களுக்கு நாம செய்றம்னு நான் நெனச்சேன். ஆனா அவுங்களால அத ஏத்துக்க முடியலை. நான் இல்லாத நேரத்துல ஒருநாள் தூக்கு போட்டுகினு செத்துட்டாங்க. திடீர்னு உலகத்துல எல்லாருமே என்ன தனியா உட்டுட்டு போயிட்டமாதிரி இருந்தது. அப்ப எனக்கு நடந்த ஒரே நல்ல விஷயம். டெலிபோன்ஸ்ல வேல கெடச்சதுதான்.”

அப்பறம் ஒரு ஆறேழு வருஷம் ஒன்னுமே செய்யலை. திடீர்னு ஒருநாள் ரோசம்மாவயும் நாயக்கரயும் நெனச்சிகிட்டேன். அந்த நூறு டைரிக் குறிப்புகளும் எனக்கு ஞாபகத்துலயே இருந்தது. ஒரு வேகத்துல எல்லாத்தயும் ராப்பகலா எழுதனன். அப்பறமா படிச்சி பாத்து நாயக்கர் சரித்திரம், ரோசம்மா சரித்திரம்னு தனியா பிரிச்சி தொகுத்து எழுதனன். எதுவும் சரியா வரலை. அப்படியே எடுத்து பரண்ல வச்சிட்டேன். ஒருநாள் டிவில ஏதோ ஒரு படம் பாத்துட்டிருந்தேன். ஒரு பொண்ணுக்கு கல்யாணமாகி குழந்தை பெத்துக்கறத புரியவைக்கற மாதிரி ஊட்டு வாசல்ல ஒரு மாமரத்த மொதல்ல காட்டனாங்க. அடுத்ததாக மரம் முழுக்க பூநிறைந்த காட்சி. அதற்கடுத்ததாக காய்கள் குலுங்கும் காட்சி. தொடர்ந்து பழங்களெல்லாம் பழுத்து தொங்கும் காட்சி. பாத்துட்டிருக்கும்போதே எனக்குள்ள ஏதோ மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி இருந்தது. நாயக்கர் சரித்திரத்துல நான் செய்யவேண்டியது என்னனனு எனக்கு ஒரு தெளிவு கெடைச்சிது. பூ, காய், கனி. அந்த சொற்கள் மனசில ஓடிட்டே இருந்தது. உடனே எழுந்து வீட்டுக்கு வந்துட்டேன். பரண்ல போட்டிருந்த கையெழுத்துப் பிரதிய எடுத்து மறுபடியும் படிச்சேன். ரெண்டு மூனு வாரம் படிச்சி ரெண்டு பேருடைய லட்சியவாதமும் ஓங்கியிருந்த காலகட்டம் வரைக்கும் ஒரு பகுதி, அவுங்க காதல் கல்யாண வாழ்க்கைன்னு ஒரு பகுதி, அவுங்க முதுமை கடைசி பகுதின்னு பிரிச்செடுத்தேன். அவுங்க வாழ்க்கைய சரியா பிரிச்சிட்ட மாதிரிதான் இருந்தது. ஆனாலும் திருப்தி இல்லை. மறுபடியும் சோர்ந்துபோய் அப்படியே மேசைமேல போட்டுட்டேன்.”

நாப்பது வயசுலதான் நான் பரமேஸ்வரிய கல்யாணம் செஞ்சிகிட்டேன். என் கூடவே டெலிபோன்ஸ்ல வேல செய்றவங்க. ஒருநாள் நான் இல்லாத நேரத்துல இந்த கையெழுத்துப் பிரதிகளை படிச்சிட்டு என்னங்க இது, நீங்க கதையெல்லாம் எழுதுவீங்களான்னு கேட்டாங்க. நான் இல்லையேன்னு சொன்னேன். அப்ப இது என்னன்னு கையெழுத்திப் பிரதிய காட்டி கேட்டாங்க. நான் நடந்ததயெல்லாம் அவுங்ககிட்ட சொன்னேன். அவுங்க வரலாறு முழுசா தெரியாம அவுங்களபத்தி நீங்க எப்படி எழுதமுடியும்னு கேட்டாங்க. அதனால்தான் பாதியில நிறுத்திட்டேன்னு சொன்னன். வரலாறாதான் நீங்க எழுதமுடியாதே தவிர, நாவலா நீங்க எழுதலாம்னு அவுங்க சொன்னாங்க. தெரிஞ்ச வரலாறுங்கறது ஒரு உண்மை. ஆண்டனாவ திருப்பி சேட்டிலைட் பக்கமா வைக்கறமாதிரி அந்த உண்மையை அதைவிட பெரிய உண்மையை நோக்கி இழுத்துட்டு போனா போதும். உங்க கற்பனையாலதான் அது முடியும்னு சொன்னாங்க. எவ்ளோ பெரிய விஷயத்த ரொம்ப அசால்ட்டா சொன்னமாதிரி இருந்தது.”

எல்லாத்தயும் எடுத்து வீசிட்டு மறுபடியும் எழுத ஆரம்பிச்சேன். அந்த மாதிரி நாலு முறை எடுத்து வீசியிருக்கேன். அஞ்சாவதா தொடங்கி எழுதி முடிச்சதுதான் கன்னி நிலம், வசந்தத்தைத் தேடி, கூடடையும் பறவைகள் நாவல்கள். இத தனித்தனியாவும் படிக்கலாம். சேத்தும் படிக்கலாம். வாசகர்கள் எப்படியோ அதுக்கு ரோசம்மா ட்ரையாலஜின்னு பேர் குடுத்துட்டாங்க. சொல்லிசொல்லி அந்த பேரே இப்ப நெலச்சிபோச்சி.”

நாங்கள் அனைவருமே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தோம். வார்த்தைகளே வரவில்லை. பல நிமிடங்கள் கல்யாணராமனை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென எதையோ பேச நினைத்தவனாக நான் “இந்த அளவுக்கு சிறந்த நாவல்களா வரும்ன்னு நீங்க இத எழுதற காலத்துல நெனச்சிங்களா சார்?” என்று கேட்டேன். கல்யாணராமன் சிரித்துக்கொண்டே “சிறப்பா எழுதணும்னு மட்டும்தான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதனாலதான் பல தரம் திருப்பித்திருப்பி எழுதனேன். ஒங்கள மாதிரியான வாசகர்கள் அந்த நாவல்களைக் கொண்டாடறத பார்க்கற சமயத்துலயும் புதுப்புது கோணங்கள்ல பேசறத கேக்கற சமயத்துலயும் மகிழ்ச்சியாதான் இருக்குது. என் முயற்சி எதுவும் வீண் போகலைங்கற திருப்தி இருக்குது. இந்த மூனு நாவல்களுக்குப் பிறகு கழுகுகள், ஊற்றுக்கண்கள், நீலவானம் மூனு நாவல்களை எழுதிட்டேன். இருந்தாலும் இன்னும் கூட ரோசம்மா ட்ரையலாஜிக்கு கெடைச்ச வரவேற்பு கொறயலை” என்று சொன்னார்.

அண்ணாமலை “நாவல்னா இப்படித்தான் இருக்கணும்னு ஒரு இலக்கணமே இதனால உருவாய்டுச்சி சார்” என்று ஒரு வேகத்தில் சொன்னான்.

அப்பா, புதுசா இன்னொரு கோபுரம் அடுக்கி முடிச்சிட்டேன். வந்து பாருங்க” என்றபடி எழுந்து நின்று கைதட்டி ஆடினாள் அகிலா. நாங்களும் கல்யாணராமனும் மரத்தடியிலிருந்து எழுந்து சென்று கோபுரத்தைப் பார்க்கும்போது சமையல்கட்டிலிருந்து கல்யாணராமனின் மனைவியும் வந்துவிட்டார். ஜன்னலோரத்தில் வைத்திருந்த கைபேசியை எடுத்து அந்த வத்திக்குச்சி கோபுரத்தைப் படம்பிடிக்க நல்லதொரு கோணத்துக்காக அங்குமிங்குமாக நகர்ந்தார் கல்யாணராமன்.

நிழல் ஒன்று – ஸ்ரீரஞ்சனி சிறுகதை

ஜன்னல் கண்ணாடிக்கூடாக வெளியே வெறிச்சுப் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர். மேப்பிள் மரத்தில் ஒரு சில அரும்புகள் துளிர்விட்டுக்கொண்டிருந்தன. அங்கும் இங்குமா சில பறவைகள் பாடிக்கொண்டிருந்தன. ஆனால் தெரு மட்டும் வெறிச்சோடிப் போயிருந்தது. தேடிப்பிடித்தால் காணக்கூடியளவில் மிகச் சிலர் ஆளுக்கு ஆள் வெகுதொலைவில் முகமூடிகளுடன் வேகமாக நடந்துகொண்டிருந்தனர். பக்கத்திலிருந்த பூங்காவில் அணில்கள் மட்டும் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தன. குளிரோ, வெய்யிலோ எதுவானாலும் ரிம் ஹோட்டன்ஸ் கோப்பி வாங்குவதற்காகக் காத்திருக்கும் கார்களையும் மனிதர்களையும் அவன் பார்த்து நீண்ட நாட்களாகியிருந்தது.

மேசைமேல் ஏற்றப்பட்டிருந்த கதிரைகளும், கலகலத்திருக்கும் அந்தவிடத்தில் இருந்த மயான அமைதியும் அவனுக்குப் பூதாகரமாகத் தெரிந்தன. இந்த அமைதி, இந்த வேலை, கனடாவுக்கு மனைவி சாந்தியின் வரவு … என அவன் வாழ்வுடன் தொடர்பான அனைத்துமே பதிலற்ற கேள்விகளாக மெதுமெதுவாக விசுவரூபமெடுத்துக் கொண்டிருந்தன.

கெதியிலை புரோமோசனுக்கு அப்பிளை பண்ணோணும். அப்பத்தான் சாந்தி வரேக்கே சிலவுக்குக் கட்டுபடியாகுமெண்டு நினைச்சுக்கொண்டிருக்க, ம்ம், சத்தமில்லாமல் நான் யுத்தம்செய்வன் எண்டு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிற இந்தக் கொரோனா வந்து நிலைமையை அடியோடு மாத்திப்போட்டுது, சீ…’

அவன் மனசுக்குள் பொங்கிய விரக்தியை, தொற்று வராமல் இருக்கிறதே பெரியவிஷயமென்ற அறிவு சமாதானப்படுத்த முயன்றபோது, மாற்றக்கூடியவற்றை மாற்றக்கூடிய வல்லமையையும் மாற்றமுடியாதவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனவலிமையையும் வளர்த்துக்கொள் என எங்கோ வாசித்த ஒரு வாசகம் அவன் நினைவுக்கு வந்து அவன் இதயத்தை ஆதரவுடன் தடவிக்கொடுத்தது.

சனியன் பிடிச்ச கொரோனா எண்டு திட்டுறதாலை எனக்கு நானே மனவுளைச்சலை உண்டாக்கிறதைத்தவிர வேறு என்னத்தைச் சாதிக்கப்போறன்,” என்ற அவனின் சிந்தனையை வேலையைப் பொறுப்பேற்க வந்திருந்த டொமினிக்கின் குரல் குலைத்தது.

சரி, நாளைக்குச் சந்திப்பம்.” என பேப்பருக்குள் மூழ்கிப்போயிருந்த மனேஜருக்கு ஆங்கிலத்தில் சொல்லிப்போட்டு வெளியே வந்த சுந்தர் கதவைத் திறக்கவும் பானு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

, பானு! உங்களைச் சந்திப்பன் எண்டு நான் எதிர்பார்க்கவேயில்லை. என்ன இண்டைக்கு நீங்க வெள்ளனத் தொடங்கிறியளா?”

வேலைநேரங்கள் மாற்றப்பட்டிருந்ததால் மூன்று கிழமையாக அவனுக்கு அவளைச் சந்திக்கக்கிடைக்கவில்லை. அவனின் முகம் அவனையறியாமலே மலர்ந்தது.

ரிம் ஹோட்டன்ஸில் அவனுக்கு அவள்தான் வேலைபழக்கினாள். அப்படி ஆரம்பித்த அறிமுகம் நல்லதொரு நட்பாக அவர்களிடையே மலர்ந்திருந்தது.

பானு அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையை மேவியதொரு கலக்கம் அவளின் கண்களில் அவனுக்குத் தெரிந்தது.

இல்லை, சுந்தர். மனேஜர் வந்து சந்திக்கச் சொன்னார். கையும் ஓடேல்லை, காலும் ஓடேல்லை. அதாலை வெள்ளனவே வந்திட்டன்,” சொல்லிக்கொண்டே ஜக்கற்றைக் கழற்றினாள், அவள்.

!”

அவனின் அந்த ‘ஓ’ அவனுக்கே குழப்பத்துடன் ஒலித்தது. நாளைக்குச் சந்திப்பம் என அவன் மனேஜருக்குச் சொல்வதே அடுத்த நாள் வேலை இருக்கிறதென அவனுக்கு அவனே உறுதிப்படுத்திக்கொள்ளத்தான். பானு ஒரு மேற்பார்வையாளர் என்பதால் … அதிகம் பேர் வேலைசெய்யத் தேவையில்லாத நேரத்தில் மேற்பார்வையாளர் ஏனென வேலையை விட்டு அவளை நிற்பாட்டப் போறாரோ … அவனின் மனம் பானுவுக்காகக் கலங்கியது.

ஓடிக்கொண்டிருந்த மெசின் ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டதால், ஆறு மாதத்துக்கு முன்பாக வலது கையின் இரண்டு விரல்களை அவளின் கணவன் இழந்திருந்தான். காலம் அவனின் உடல் காயத்தை ஒருவாறாகத் தேற்றிவிட்டிருந்தாலும்கூட, அவனின் மனக் காயம் நாள் ஆக ஆக கூடிக் கொண்டிருந்ததை சுந்தர் அறிவான். அது பானுவை மிக அதிகமாகப் பாதிப்பதும் சுந்தருக்குத் தெரிந்ததே.

கடைசியாக அவன் அவளைச் சந்தித்தபோது, பிளாஸ்ரர் போடப்பட்டிருந்த அவளின் நெற்றியின் வலது பகுதியில், தழும்பு ஒன்று முன்தள்ளிக்கொண்டு நிற்பது அவளின் முகத்தில் அசைந்தாடிக்கொண்டிருந்த அந்தச் சுருட்டை முடிக்கிடையிலும் தெளிவாகத் தெரிந்தது.

அன்று அந்தக் காயம் பற்றி விசாரித்த அனைவருக்கும் குளியலறையில் விழுந்துபோனேன் என்றே அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். தேநீர் இடைவேளையின்போது, அவள் அருகில் சென்று, “பானு, ஆ யூ ஓகே, என்ன நடந்தது?” என மெல்லிய குரலில் அவன் கேட்டபோது அவள் கண்களைக் கண்ணீர் நிறைத்தது. தலையை இடமும் வலமுமாக ஆட்டியவள், பிறகு சொல்கிறேன் என்பது போல வாயை அசைத்தாள். பின்னர் வேலை முடிந்துபோகும்போது அவள் அவனைப் போனில் அழைத்தாள்.

பானு,” என அவன் சொல்லும்முன்பாக ஓங்கி ஒலித்த அவளின் கேவல் அவன் மனதைக் குடைந்தது. “சனிக்கிழமை களைப்பாயிருக்கு எண்டு இவர் சோபாவிலை படுத்திருந்தவர். இந்தச் சின்னன் ரண்டும் ஒண்டை ஒண்டு கலைச்சுக் கொண்டு ஓடித் திரிஞ்சுதுகள். அந்தச் சத்தத்திலை அவற்ரை நித்திரை போட்டுது. கோவத்திலை அவர் பெரிசாக் கத்தினார், பத்தாததுக்கு சுமிக்கு அடிச்சும்போட்டார்… தேத்தண்ணியோடை போன நான் ஏனப்பா அடிச்சனியள், அதுகள் சின்னப் பிள்ளையள் விளையாடமல் என்ன செய்யுங்கள், நீங்க உள்ளுக்குப்போய்ப் படுக்கிறதுதானே எண்டு சொன்னன். அவ்வளவுதான் … என்னடி நீ எனக்குப் படிப்பிக்கிறியோ எண்டு தேத்தண்ணிக் கோப்பையைப் பறிச்சு எனக்கு வீசினார். வலியிலை நான் கத்த பிள்ளையள் அதை மிஞ்சி அலறிச்சுதுகள்…” கண்ணீரினூடு வந்த அவள் குரலில் இயலாமை ஒலித்தது.

, ஐ ஆம் வெரி சொறி பானு, வெரி சொறி எனக்கென்ன சொல்லுறது எண்டே தெரியேல்லை…” என்று மட்டும்தான் அவனால் சொல்லமுடிந்தது.

அன்றிரவு சாப்பிடவோ, நித்திரைகொள்ளவோ அவனால் முடியவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு உருண்டபடியிருந்தான். அவனின் சிறுபிள்ளைப் பராய நினைவுகள் மாறிமாறி அவனின் நினைவுக்கு வந்து அவனைக் கஷ்டப்படுத்திக்கொண்டிருந்தது.

இந்தத் தனிப்படுத்தல் காலத்தில், பிள்ளைகளின் மேலான, பெண்களின் மேலான வன்முறை அதிகரித்திருக்கிறது என்பதை ஊடகங்கள் சொல்லிக்கொள்ளும் பொழுதுகளிலெல்லாம் பானுவின் முகமே அவன் கண் முன் நிழலாடும். மனதில் அச்சமேற்படும். கூடவே, வலியிலேயே வாழ்க்கையை முடித்துக்கொண்ட அவன் அம்மாவின் அழுகைச் சத்தம் அவனுக்குள் பரிதாபமாய் ஒலிக்கும்.

என்ன யோசனை சுந்தர், எல்லாம் ஓகேயா?” அவர்களுக்குள் இருந்த அந்த மௌனத்தைப் பானு உடைத்தாள்.

வாழ்க்கையின் வினோதங்களை நினைச்சுப்பாத்தன் பானு…. எங்கடை நாட்டிலை இருந்தது ஆக ரண்டே ரண்டு மொழியள்தான், இருந்தும் மற்ற மொழியிலை இரண்டு சொல்லுக்கூட எங்களுக்குத் தெரியாது. இப்ப இங்கை இன்னொரு மொழியை அரைகுறையாய்ப் பேசி வாழுறம். அங்கேயே ஒருத்தரின்ரை மொழியை ஒருத்தர் படித்து, ஒருத்தரை ஒருத்தர் விளங்கிக்கொண்டிருந்தால் இனப்பிரச்சினை இப்பிடி உச்சத்துக்குப் போய் இவ்வளவு அழிவு நிகழாமல் தடுத்திருக்கலாமோ, எங்கடை வேலையளைப் பாத்துக்கொண்டு நாங்களும் அங்கேயே நிம்மதியாக இருந்திருக்கலாமோ எண்டெல்லாம் இப்ப என்ரை மனம் தத்துவவிசாரணை செய்யுது, பானு,” என்றான் சுந்தர்.

ம்ம், சரி, அதை விடுங்கோ, குடும்பத்துக்குள்ளை ஒருத்தரை ஒருத்தர் விளங்கி, ஆளுக்கு ஆள் மதிப்புக் கொடுத்து நடக்கிறதே சிலருக்குப் பெரும் பிரச்சினையாயிருக்கு! இப்ப பஸ்சிலை வரேக்கை மனுஷபுத்திரனின்ரை ஒரு கவிதை படிச்சன், கேளுங்கோ…”

ஒருமைபன்மை

எந்தக் கணத்தில்

என்னை அழைப்பதில்

பன்மையிலிருந்து

ஒருமைக்கு மாறினாய்?

பன்மையிலிருந்து

ஒருமைக்கு மாறும்போது

ஆட்டத்தின் ஒரு விதி மாற்றப்படுகிறது

சீட்டுக்கட்டில் ஒரு சீட்டு

ரகசியமாக இடம் மாறுகிறது

ஓசையில்லாமல் ஒரு பூனை

அறைக்குள் நுழைகிறது

கிணற்றுத் தண்ணீரின் சுவை

திடீரென மாற்றமடைகிறது

ஒரு அனுமதிச் சீட்டின்

ஓரத்தில் கிழிக்கப்படுகிறது

உண்மைதான் பானு, உறவு ஒண்டு நெருக்கமா வரேக்கே எவ்வளவு சந்தோஷப்படுறம். மரியாதையை, உரிமையை விட்டுக் கொடுக்கிறதிலைகூட ஒரு மகிழ்ச்சியை அனுபவிக்கிறம் ஆனால் பிறகு மற்ற ஆள் அதைத் துஷ்பிரயோகம் செய்யேக்கைதானே ….,” அவனால் தொடரமுடியவில்லை.

வீட்டுக்குள் 24 மணி நேரமும் பானு அடைந்து கிடக்கவேண்டியிருந்தால் அவன் கண்கள் கலங்கின, இதயம் வலித்தது. அவனது உள்மனம் அம்மா என ஓலமிட்டது.

அவள் மனேஜரிடம் போய்வரும்வரை அங்கேயே காத்திருந்தவனுக்கு அவள் சொன்ன செய்தி ஆச்சரியம் தருவதாக இருக்கவில்லை.

பானு, நான் சொல்லிமுடிக்கும் வரைக்கும் குறுக்கிடாமல் கேட்பீங்களா?” கேட்டவன் பானுவின் கண்களைப் பார்த்தபடி அவன் தீர்மானத்தை உறுதியுடன் கூறினான்.

கொரோனாப் பிரச்சினை இருக்கும்வரைக்கும், இந்த வேலையிலை எனக்குக் கிடைக்கிற காசை அரசாங்கம் தாற காசு ஈடுசெய்யும். இந்தப் பிரச்சினை ஓய்ஞ்சாப் பிறகு திரும்ப இங்கை நான் வரலாம், அல்லது வேறையொரு வேலையைத் தேடலாம். ஆனா… இந்த வேலை உங்களுக்கு எவ்வளவு முக்கியமெண்டது, உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். ஒரு சுப்பவைசராக இருந்திட்டு சும்மா பணியாளராக இருக்கிறது, உங்களுக்குப் பரவாயில்லையா, பானு? நீங்கள் சரியெண்டு சொன்னால் மனேஜரோடை நான் கதைக்கிறன் …”

அவனுக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாத பானு கண்மல்க அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

ரண்டு மீற்றர் இடைவெளியைப் பேணவேணுமெண்டதாலை உங்கடை இந்தக் கும்பீட்டை மன்னிச்சுவிடுறன்,” எனச் சிரித்தபடி மனேஜரிடம் சென்றான் சுந்தர்.

ஆக்ஸ்ட் 7, 2018 – சங்கர் சிறுகதை

அவன் ஏறுவதற்கும் ரயில் கிளம்புவதற்கும் சரியாக இருந்தது. கூட்டத்தில் அடித்துப் பிடித்து ஏறும் வழக்கமே குமாருக்கு கிடையாது. அதுவும் அன்றைக்கு ஒட்டுமொத்த மகிந்திரா வேர்ல்ட் சிட்டியும் பரனூர் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டது. எப்போது வேண்டுமானாலும் அறிவித்துவிடுவார்கள் என்று பேசிக்கொண்டார்கள். சிலர் அறிவித்துவிட்டார்களென்றார்கள். இரண்டு ரயில்களை விட்டுவிட்டு மூன்றாவது வரும்வரை அப்படி ஒன்றும் பிரச்சனை வராது என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

குமாருக்கு காலையிலிருந்தே மனது சரியில்லை. ஒற்றைத் தலைவலி உயிரை வாங்கியது. கூட்டம் குறைந்தது மாதிரியே தெரியவில்லை. அடுத்து வந்த ரயிலையும் விட்டால் வீட்டிற்குப்போக நேரம் ஆகிவிடும் என்பதால் எப்படியோ சிரமப்பட்டு ஏறினான். அவன் இருந்தப் பெட்டியில் குறைந்தது நூறு பேராவது ஏறியிருப்பார்கள். ஒருவர்மேல் ஒருவர் உரசிக்கொண்டும், இடித்துக்கொண்டும் வரும் மக்களைப் பார்க்கும்போது குமாருக்கு வளைக்குள் முண்டியடித்துக்கொண்டிருக்கும் எலிகளைப் பார்ப்பதுபோலிருந்தது. பரனூரிலிருந்து சிங்கப்பெருமாள் கோவில் வருவதற்குள் பல முறை அவன் பின்னால் நின்றிருந்த மனிதர் அவன் மேல் விழுந்தார். சாதாரன நாட்களில் எல்லோரும் எல்லோரிடமிருந்தும் ஒரு அடி தள்ளிதான் நிற்பார்கள். தெரியாமல் கை கால் பட்டால் கூட விஷத்தைக் கொட்டுவதுபோல் இருக்கும் பேச்சு. இன்று வேறு வழியில்லை என்று அமைதியாக இருந்தான். அசாதாரண சூழ்நிலைகளில் மனிதர்கள் எவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமோ அவ்வளவு நெருக்கமாக இருக்க முயல்கிறார்கள். மற்றவர்களின் கைகளை இறுக்கப் பற்றிக்கொள்கிறார்கள். தனக்குத்தானே சமாதானாம் சொல்லிக்கொண்டான்.

கடந்த ஐந்து வருடங்களாக இந்நாளில் வரும் கனவு இந்த வருடமும் வந்தது என்பதுதான் அவன் தலைவலிக்குக் காரணம். ஊரே பதட்டமாக வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலும் அவன் மனம் முழுவதும் அதுதான் ஓடிக்கொண்டிருந்தது.

முதன் முதலில் கனவு வந்தபோது அம்மாவிடம் சொன்னான். விபூதி போட்டு கையில் ஒரு கயறு கட்டிவிட்டாள். “பயப்படாத, சித்திக்கிட்ட வேண்டிக்க” என்று அவன் சித்தியின் படத்தின் முன் நிறுத்தி வணங்க வைத்தாள். அடுத்தடுத்த வருடங்களில் அவளிடம் என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. சொன்னால் பயந்துபோவாள். வேறு யாரிடம் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.

காலையில் எழுந்ததும் மொபைலில் தேதியைப் பார்த்தான். நினைத்ததுபோலவே ஆகஸ்ட் ஏழு. குமாரின் நினைவடுக்குகளில் மிக ஆழமாக ஊடுருவியிருக்கும் நாள். எட்டு வருடங்களுக்கு முன்பு அவன் சித்தி மண்ணென்னையை ஊற்றி தன்னைத்தானே எரித்துக்கொண்ட நாள்.

*

காயத்ரி சித்தி சாகும்போது அவளுக்கு வயது முப்பத்தி எட்டுதான். வீட்டில் எல்லோருமே நன்றாக தூங்கி எழுந்திருந்த ஒரு அதிகாலையில் குமாரின் சித்தப்பாவிடமிருந்து அழைப்பு வந்தது.அவன் அம்மாதான் போனை எடுத்தாள். ஒரு நிமிடம் பேசியிருப்பாள். “ம்ம்.. ம்ம்ம்” என்பதைத் தவிர ஒரு வார்த்தைப் பேசவில்லை. கண்ணீரைத் துடைத்துக்கொண்டே போனை வைத்துவிட்டு குமாரிடமும், அவன் தந்தையிடமும்,”கிளம்புங்க.. காயத்ரி அக்னி ஸ்னானம் பண்ணிட்டா” என்றாள்.

காயத்ரி குமாரின் அம்மாவின் தங்கை. கூடப் பிறந்த ஏழு பேர்களில் கடைக் குட்டி. அவள் பிறந்தபோது இனி குழந்தை வேண்டாம் அதனால் சாவித்ரி என்று பெயர் வைக்கலாம் என்று குமாரின் தாத்தா சொன்னாராம். அந்தக் காயத்ரியைத்தான் இவள் வயிற்றில் இருந்த நாள் முழுவதும் ஜபித்துக்கொண்டிருந்தேன் எனவே காயத்ரிதான் என்று பாட்டி பெயர் இட்டிருக்கிறார். காயத்ரி, பி.எஸ்.சி அக்ரி முடித்தக் கையோடு அரசாங்கத்தில் வேலைக் கிடைத்து; தஞ்சாவூர் போய்விட்டாள். பதிமூன்று வருட அரசாங்க வேலை. கடைசியாக கலைஞர் கொண்டு வந்த உழவர் சந்தையில் அதிகாரியாக வேலைப் பார்த்தாள். வருடத்திற்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருவாள். இடையில் திருமணத்திற்கு கேட்டு வந்த பல இடங்களைச் சொந்த சாதியில் திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லி நிராகரித்துவிட்டாள். “எல்லாம் கோழப் பசங்க” என்ற ஒரு வரிதான் எப்போதுமே அவளின் பதிலாக இருக்கும் என்று குமாரின் அம்மா அடிக்கடிச் சொல்லிச் சிரிப்பதைக் கேட்டிருக்கிறான்.

கோழப் பசங்க…முதன் முதலில் கேட்டபோது கோபமாக வந்தது அவனுக்கு. சித்தி எப்படி அப்படிச் சொல்லலாம் என்று முறுக்கிக்கொண்டிருந்தவனை வீட்டில் யாரும் சமாதானப்படுத்த முயலவில்லை. மாறாக “அவகிட்ட கேட்டு வச்சுராதடா.. அதுக்கப்றம் நீதான் ரொம்ப பீல் பண்ணுவ” என்று பயமுறுத்தினார்கள். “அது எப்படிமா அப்படி சொல்லலாம்..ஏன் அப்படி சொன்னா…” “விடுடா.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி… உன் சித்தி ஒரு மாதிரி.. அவ மனசுல எப்படியோ ஒரு எண்ணம் அப்படி வந்துருச்சு… ஒரு காலத்துல எங்கப்பா வெளிய போனா இடுப்புல கத்தி இல்லாம இருக்காது..ஊர்ல ஒரு பெரியவர் கூப்ட்டு.. பொம்பளப் புள்ளைங்கள பெத்து இருக்க.. இதெல்லாம் வேண்டாம்ன்னு” சொல்லிருக்காரு.. அன்னைக்கு மாறுனவரு அதுக்கப்றம் ஒரு சொல் தேவைக்கு அதிகமா வெளியவிட மாட்டாரு.. எல்லாத்துக்குப் பின்னாடியும் காரணங்கள் இருக்கும்.. அதல்லாம் எல்லாருக்கும் புரியவைக்க முடியாது..அவசியமும் இல்ல” அம்மாவின் பேச்சிலிருந்து தாத்தாவிற்கும் சித்திக்கும்தான் ஏதோ பிரச்சனை ஆகியிருக்கிறது என்று நினைத்தான். எப்போதும் பூஜை அறையில் பார்த்த தாத்தாவை கத்தியோடு குமாரால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. அவனுக்குத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்றிருந்தது.

“என்னைக்காவது ஒரு நாள் கேட்க்காம விட மாட்டேன்மா” என்றான். கடைசி வரை அவளிடம் அதைப் பற்றிக்கேட்க்கவில்லை.

*

ரயில் கிளம்பிய பத்தாவது நிமிடத்தில் குமாரின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நபர் மீண்டும் சிரித்தார். பரனூரில் ஏறியதிலிருந்தே அவரைக் கவனித்துக்கொண்டு வந்தான். திடீர் திடீரென சிரித்தார். யாரைப் பார்த்து எதற்கு சிரிக்கிறார் எனத் தெரியாததால் அவரைக் குழப்பத்துடனேயே கவனித்து வந்தான் குமார். “இருக்கும் கூட்டத்தில் எள்ளைப் போட்டால் எண்ணையைக் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது, இந்தாளுக்கு மட்டும் எங்கிருந்துதான் சிரிப்பு வருமோ” என முனகிக்கொண்டே பின் தாங்க முடியாமல். “என்னாச்சு சார்?” எனக் கேட்டான்.

“திரும்பிப் பாருங்க.. அங்க ஒருத்தர் நிக்குறார்ல…” ஒரு ஊரே நின்றுகொண்டிருக்கும் இடத்தில் யாரைச் சொல்கிறாரென பார்த்தவனிடம் “கருப்பு கலர் சட்ட..சொட்ட மண்ட.. போனத் திருடப் பாத்தார்.. ஏறுறப்ப கூட்டமா இருக்கேன்னு போன பாக்கெட்ல போட்ருந்தேன்.. போன் வரவும் எடுப்போம்ன்னு பாக்கெட்ல கையவிடுறேன் இவர் கை உள்ள இருக்கு.. கையப் பிடிச்சுட்டு திரும்புனா விருட்டுன்னு உருவிட்டு படிக்கட்டுப் பக்கம் போய் நிக்குறார்”. என்றார்.

குமார் பயந்துபோய் தன் பாக்கெட்டில் கைவிட்டுப் பார்த்தான். போன் இருந்தது. அவருக்கு ஒரு ஐம்பது வயதேனும் இருக்கும் போலிருந்தது.

“இவங்களுக்கெல்லாம் நேரம் காலமே கிடயாதா சார்.. பத்திரமா வீடு போனா தேவலன்னு அவன் அவன் ஓடிட்டு இருக்கான்.. இப்பக் கூட…”

அவர் அதற்கும் சிரித்தார். பின் தன் கைப்பேசியில் மூழ்கிப்போனார்.

மறைமலை நகர் தாண்டி ரயில் ஓடத்தொடங்கியது.

*

குமாரும் அவன் பெற்றோரும் தஞ்சாவூர் போய் சேர்ந்தபோது காயத்ரியை மருத்துவமனையில் சேர்த்திருந்தார் அவன் சித்தப்பா. சமைத்துக்கொண்டிருக்கும்போது சேலையில் தீப்பற்றிவிட்டது என்று போனில் சொன்னவர் நேரில் பார்த்தபோது ஒரு வார்த்தைப் பேசவில்லை.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாள் காயத்ரி சித்தி. குமாரின் குடும்பம் போனபின்பு அவன் அம்மாதான் உடன் இருந்தாள்.ஐசியூவிற்கு வெளியேயே நின்றான் குமார். கதவுகள் திறக்கும்போதெல்லாம் சித்தி தெரிகிறாளா என்று பார்க்க முயன்றான். நான்காவது நாள் அம்மாவே அவனை அழைத்துக்கொண்டுபோனாள். உள்ளே யாரையோ காட்டி “இதுதான் உன் சித்தி பார்த்துக்கோ” என்றாள்.

பிறந்த மேனியாய்க் கிடந்தாள் காயத்ரி சித்தி. இல்லை… இப்படியா பிறந்திருப்பாள்… கருகிப்போய்.. சதைக் குவியலாய்க் கிடக்கும் இவளா காயத்ரி சித்தி.. எரியாத பாகம் ஏதேனும் இருக்கிறதா.. அதில் சித்தியைக் கண்டுபிடித்துவிட மாட்டோமா என அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவனின் தோளில் தட்டி மீண்டும் வெளியே அழைத்து வந்தாள் அவன் அம்மா.

*

பொத்தேரியில் கூட்டம் சற்று குறைந்தது. இருபது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அதைவிடக் குறைவான வயதிருக்கும் பெண்ணும் ஏறினார்கள். அவர்கள் ஏறியதிலிருந்தே பெட்டியிலிருந்த பலரின் கண்கள் அந்தப் பெண்ணின் மீதுதான் இருந்தன. துக்க வீட்டில் வாய் நிறையப் புன்னகையோடு வரும் குழந்தையைப் பார்க்கும்போது மனதில் தோன்றும் சிறு அமைதியை குமார் அவளைப் பார்க்கையில் உணர்ந்தான். தமிழ்ப் பெண்போல் இல்லை முகம். பால் நிறம். சுருட்டை முடி. கண்களில் லேசான பயம். கூட வந்தனவனின் தோள்களில் தலை சாய்த்துக்கொண்டாள். ஏதோ முணுமுணுத்தாள். அவன் தலையில் தட்டிக்கொடுத்தான். “நான் இருக்கும்போது ஏன் பயப்படுகிறாய்” என்று அவன் சொல்வது குமாருக்கு கேட்டது.

குமாருக்கு அவன் சித்தப்பாவின் முகம் கண் முன்னே வந்துபோனது. ஏறக்குறைய இதையேதான் காயத்ரியை அழைத்துக்கொண்டு முதன் முதலாக வீட்டிற்கு வந்தபோது மகாலிங்கமும் சொன்னார். திருமணமே செய்துகொள்ளப்போவதில்லை என்றிருந்த காயத்ரியை இரண்டு வருடங்கள் துரத்தி, சம்மதிக்க வைத்தது மகாலிங்கத்தின் சாதனைதான். குமாரின் அம்மாவிற்கு தன் தங்கையின் மீது அலாதிப் பிரியமும், மரியாதையும் உண்டு. வீட்டில் அதிகம் படித்தவள் என்பதோடு இத்தனை வருடங்கள் தனியாக எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொண்ட அவளின் மன தைரியத்தைப் பாராட்டாமல் இருந்த நாளே இல்லை. நிச்சயம் நல்லவனைத்தான் தேர்ந்தெடுத்திருப்பாள் என்று நம்பினாள். ஆனாலும் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. வீட்டுப் பெரியவர்களையெல்லாம் விட்டுவிட்டு தன்னிடம் வந்து நிற்கும் தங்கைக்கு சம்மதம் சொல்லும் அளவிற்கு அவள் நம்பிக்கை பெரியதாய் இல்லை.

மகாலிங்கமும் சிரிக்கச் சிரிக்கப் பேசினார். “உங்கள் தங்கையைப் போன்ற தைரியசாலிப் பெண்ணிற்குத்தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன்” என்றார். உண்மைதான். அசாத்தியமான நெஞ்சுரம் கொண்டவள் காயத்ரி சித்தி. இல்லையென்றால் நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டப் பின் சிலையைப்போல் இரண்டு நிமிடங்கள் அப்படியே நின்றிருப்பாளா…

*

காயத்ரி ஏழு நாட்கள் மரணத்தோடு போராடிவிட்டு இறந்துபோனாள். முதல் நாளே “சிக்ஸ்டி பெர்சன்ட் பர்ன், பிழைக்க வாய்ப்பில்லை” என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். “உன் கூட வந்தர்றேன்க்கா.. என்னக் கூட்டிட்டுப் போயிடு.. இனி நீ தான் என்னப் பாத்துக்கனும்..இப்படி ஆகிருச்சு.. என்னால எதுவும் செய்ய முடியாது இனிமே” என்று உயிர் பிரியும் கடைசி நொடி வரை சொல்லிக்கொண்டே இருந்தாள் என அம்மா சொன்னபோது குமார் உடைந்து அழுதான். யாரின் துணையும் தேவையில்லை என்று இருபது வயதிலிருந்தே வாழ்ந்து வந்தவள் முடிவில் இப்படியா பேசவேண்டும் என்று புலம்பியவனைத் தேற்ற முடியாமல் அவன் குடும்பம் தவித்தது. குமாருக்கு காயத்ரி சித்தி என்றால் தனிப் பிரியம். “எப்போ ஊருக்கு வந்தாலும் அவ மடி மீது ஏறிக்கிட்டு இறங்கவே மாட்ட.. திரும்பக் கிளம்பும்போது பஸ்ல ஏறி உக்காந்துட்டு உன்ன ஜன்னல் வழியா தூக்கிப் போடுவா” எத்தனை முறை அம்மா சொன்னாலும் ஒவ்வொருமுறையும் புதிதாய்க் கேட்பதுபோலவே கேட்பான். சிறிது காலம் அவள் சொல்லாமல் இருந்தால் இவனே, “அப்போ சித்தி அடிக்கடி என்னப் பாக்க வருவாளாமா” என எடுத்துக்கொடுப்பான். ஆறேழு வயதில் “மயில் மாதிரி இருக்காமா சித்தி” என அவளைக் கொஞ்சுவான். ஒரு நாள் அவள் குரல் மயிலின் குரல் போலவே மாறிப்போகுமென்பது தெரியாமல்…

“கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு உன்ட்ட சொல்லிட்டுத்தானமா பண்ணிக்கிட்டா.. ஒரு வார்த்த நம்மள்ட்ட சொல்லிருந்தா நாம விட்ருப்போமா” “சுடு சொல்க்காரிடா.. அவ வாக்குதான் அவள வாழவும் வச்சது.. இப்போ சாகவும் அடிச்சிருச்சு.. யாருமே வரலனாலும் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன்னு சொல்லிட்டுப்போனா..எப்படி நம்ம கிட்ட வருவா… கொள்ளி கூட அவளே வச்சுக்கிட்டா.. பாவி” குமாரின் அம்மாவிற்கு எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. சிறுவயதிலிருந்தே அவளின் துடுக்குத்தனத்தையும், முன் கோபத்தையும் அவர்கள் வீட்டிலிருந்த எல்லாரையும் விட அவள் நன்றாக புரிந்துவைத்திருந்தாள். காயத்ரியும் அதனலாதான் “யாரும் வரலன்னாலும் பரவால்ல நீ என்ன சொல்ற” என்று மகாலிங்கத்தைக் கூட்டிக்கொண்டு அவளிடம் வந்து நின்றாள். மரண வாக்கு மூலம் வாங்க வந்த பெண் நீதிபதியிடம் சமையல் செய்யும்போதுதான் சேலையில் நெருப்பு பிடித்தது என்று அவள் சொன்னபோது “நானே உன்ன கழுத்த நெறிச்சுக் கொன்றுவேண்டி” என்று ஆத்திரப்பட்டுக் கத்தினாள். காயத்ரியின் உதடுகள் பிரிந்து மூடின. அவள் எதையோ சொல்ல முயன்றாள். பின் முடியாமல் அமைதியாகிவிட்டாள்.

சாகப்போகும்போது கூட கணவனைப் பற்றி ஒரு வாய்த் திறக்காத அவளை நினைத்து அவளின் குடும்பம் நொந்துபோனது.

*

குமாரின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துக்கொண்டே இருந்தது. காயத்ரி எரிந்தபோது அவன் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அந்த ஒரு வேளையோடு போயிருக்கும். இப்படிக் கனவில் ஏன் வந்து தீயாய் நிற்கிறாள் என்று அவனுக்குத் தெரியவில்லை. சாவை வலியத் தேடிப்போகும் பெண்கள் ஏன் தங்களின் உடலை தாங்களே அழித்துவிட்டுப் போகிறார்கள். தீக்குளிப்பவர்களின் கணக்கெடுத்தால் பெண்கள்தான் அதில் அதிகம் இருப்பர்..

*

ரயில் தாம்பரத்தை நெருங்கியது. “பயந்து சாவுறானுங்க.. இப்போ என்னா ஆச்சு.. எல்லாரும் அமைதியாத்தான் நடக்குது.. இந்த மீடியாக்காரனுங்க சும்மாவே மக்கள பயமுறுத்துறாங்க..” குமாரின் நினைவலைகளை அறுத்தது ஒரு குரல். தலைமுடிகள் நரைக்கத் தொடங்கியிருந்த மனிதர் ஒருவர் போனில் திட்டிக்கொண்டிருந்தார். போனை வைத்தப்பின்பும் திட்டுவதை நிறுத்தவில்லை.

“முன்ன மாதிரிலாம் இல்லங்க.. எல்லாருமே மாறிருக்காங்க..எதுக்குப் பயப்படனும்.. நாம பயந்தாதான் அத வச்சுக்கிட்டு எவனாவது எதாவது பண்ணுவான்..” அவர் பேசிக்கொண்டே போனார். “பயம்.. பயந்தாகொள்ளிங்க…” குமாருக்குத் தன் கனவின் அர்த்தம் விளங்கத் தொடங்கியது.

இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் காயத்ரி குமாரின் அம்மாவிடம் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டுப் போய்விடும்படி சொன்னாளாம். “இத மட்டும் எனக்காக செஞ்சுருக்கா.. உன்ட்ட வேற இனிமே எதுவும் கேக்கல… இனி எங்க கேக்குறது…”

“அதச் சொன்னப்ப அவ கண்ணோரம் கண்ணீர் வழிஞ்சதுடா… கடைசியா ஒருவாட்டி அழுதா.. நாம் சாகுற வர இனி அழனும்”

காயத்ரி மரணப் படுக்கையில் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் அவள் இல்லாதுபோன இத்தனை வருடத்தில் திரும்பத் திரும்பச் சொல்லி அவளை நினைவில் நிறுத்திக்கொண்டது குமாரின் குடும்பம். குழந்தைகள்தான் பாவம் என்று இரண்டு வருடங்கள் முன் வரைக்கும் கூட வருத்தப்பட்டனர். ஒருவகையில் கையாலாகாதத்தனத்தை, குற்றவுணர்ச்சியை மறைக்க மீள மீள அவளைப் பற்றி பேசுகிறோமா என்று அவ்வபோது குமாருக்கும் தோன்றும். அப்படி எண்ணம் வரும்போதெல்லாம் தனக்காக கடுமையாக வாதாடிக்கொள்வான். அப்போது இருந்த குடும்ப சூழ்நிலையில் எப்படிச் சாத்தியம்.. மகாலிங்கம் பிரச்சனை வரலாம் என்று எதிர்பார்த்து ஆட்களை வரச் சொல்லியிருந்தான். அவர்களையெல்லாம் மீறி என்ன செய்திருக்க முடியும்.. அவன் என்ன சமாதானம் சொல்லிக்கொண்டாலும் “எங்கள விட்டுட்டுப் போகாத பெரிம்மா” என்று அழுத அந்தக் குழந்தைகளின் முகங்கள் அவன் நிம்மதியை அவ்வபோது வந்து கலைத்துப்போட்டுக்கொண்டே இருந்தன. “என் பிள்ளைய விட்டுட்டீங்கள்ல” என்று தீப்பிழம்பாக காயத்ரி கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

*

தாம்பரம் சானடோரியமில் இறங்கினான் குமார். உடலளவிலும் மனதலளவிலும் சோர்ந்துபோயிருந்தான். நடைமேடை முழுவதும் ஓட்டமும், நடையுமாக மக்கள் போய்க்கொண்டிருந்தனர். சட்டென்று அவனுக்கும் அந்தப் பதட்டம் தொற்றிக்கொண்டது. அடுத்த நொடியே ரயிலில் அந்த மனிதர் சொன்னதுபோதுபோல் தேவையில்லாமல் பயப்படுகிறோமோ என்றும் நினைத்தான். இருந்தும் அவனால் தைரியத்தை வரவைத்துக்கொள்ள இயலவில்லை.பைக்கை மறுநாள் வந்து எடுத்துக்கொள்ளலாமா, ஆட்டோ எடுப்போமோ என யோசித்துக்கொண்டே வெளியே வந்தவனுக்கு பத்தடியில் ஒரு கூட்டம் கைகளில் கொடியுடன் வருவதைப் பார்த்தாபோது வியர்க்கத் தொடங்கியது. அவர்கள் கடந்துபோகும் வரை அமைதியாக நின்றான். கூட்டம் அமைதியாகத்தான் போனது. இருந்தும் குமாருக்கு அவர்கள் தலைகள் மறைந்தபின்தான் மூச்சே வந்தது.

பைக்கைக் கிளப்பியதிலிருந்து எதிரில் போவோர் வருவோர்களைப் பார்த்துக்கொண்டே ஓட்டினான். இரண்டு வண்டிகளுக்கு மேல் சேர்ந்தார்போல் எதிரில் வந்தால் ஓரமாக நிறுத்தி அவர்கள்போனபின் கிளம்பினான். எப்போதும் எஞ்சின் மேல் வைக்கும் ஹெல்மெட்டை ஸ்டாண்டிலியே போட்டுக்கொண்டான். ஐந்து நிமிடத்தில் வரும் வீடு ஏன் இன்னும் வரவில்லை என வாய்விட்டுப் புலம்பினான். அவனை யாரேனும் பார்த்தால் எங்கேயாவது திருடிவிட்டு வருகிறாயா என்று கேட்ப்பார்கள். ஒருவழியாய் வீட்டை அடைந்தவுடன் ஹெல்மெட்டைக் கழட்டி வண்டியிலேயே வைத்துவிட்டு கதைவைத் தள்ளிக்கொண்டு உள்ளே ஓடினான். தன் அறைக்குள் நுழந்தவுடன் பையைத் தூக்கி ஒரு மூலையில் எறிந்துவிட்டு பெட்டில் விழுந்தான். சிறிது நேரம் அப்படியே கிடந்தான். தலைவலிவிட்டதுபோல் இருந்தது. காலையிலிருந்து உணர்ந்த அழுத்தம்போய் அவன் மனம் சற்று ஆசுவாசமாய் உணர்ந்தது.

அப்போது அவனுக்கொரு குரல் கேட்டது. சரியாகக் காதில் விழவில்லை. சட்டென்று எழுந்துகொண்டான். அசையாமல் அப்படியே நின்றான். நிச்சயம் பரிச்சியமான குரல்தான். அவன் காதில் விழுந்தது கூட ஏற்கனவே கேட்ட விசயம் மாதிரிதான் இருந்தது. இரண்டாம் முறை அந்தக் குரல் கேட்டது. இம்முறைத் தெளிவாகக் கேட்டது.

“எல்லாம் கோழப் பசங்க…..”