கவிதை

அர்ஜுனன் காதல்கள் – ஊர்வசி

வெ. கணேஷ்

அலையிலாக் கடலின்
ஆழத்தில் ஜனனம்;
நித்ய யுவதி வடிவம்;
தேவர், மனிதர், அசுரர், கந்தர்வர்
எண்ணற்றோரைக் கிறங்கடிக்கும்
ஊர்வசிக்கு இது ஒரு
புது அனுபவம்.
மானிடன் ஒருவனின்
மறுதலிப்பு.

அர்ஜுனன் அறைக்கு
சென்று திரும்பியவள்
கண்களில் ஏமாற்றம்.
கரை மீறும் நதியலை போல்
வெகுண்டு
வேகவேகமாய்
அலங்காரத்தை கலைத்தாள்.

உடைகளைக் கழட்டத் தொடங்கியதும்
கொஞ்சம் அமைதி.
மார்புக்கச்சைகளை விலக்கியதும்
மின்னலொளியில் ஒரு முறை
பார்த்த மானிடன்,
புருரவஸ்-சின் நிர்வாண நினைவு.
கூடவே ஜோடி ஆடுகளின் பிம்பமும்.

குரு வம்சத்து மூதாதையனுடன்
முயங்கியதால்
நான் தாய் ஸ்தானமாம்,
வணக்கத்துக்குரியவளாம்,
புணர்வதற்கில்லை என்று சொல்லியனுப்பி விட்டான்.
பாவாடை தரையில் விழவும்
நினைவுக் குளத்திற்குள்
மூழ்கும் முன்னர்
இதழில் புன்சிரிப்பு:
அர்ஜுனனைக் கைபிடித்திழுத்து
அருகிருந்து பார்த்த
அவனது முகம் தோன்றி மறைந்தது-
“புருரவஸ் ஜாடைதான் உனக்கு”

+++++

முட்படுக்கையில்
கிடப்பவன் போல்
புரண்டான் அர்ஜுனன்,
நிர்வாணமாய்
நீச்சலடிக்கும்
ஊர்வசியின்
காட்சி அவன் கனவில்.
ஹ்ம்ம்ம்…
சாபமிட்டுச் சென்றவளை
இனி சந்திக்க முடியாது.
பெருமூச்சு விடுபட்டு
ஊர்வசி சூடிய
ஒற்றை மலரை
விழ வைத்தது.

+++++

“தாயையல்ல அர்ஜுனா,
நீ நிராகரித்தது மகளை…
நிம்மதியாய்த் தூங்கு!”
கண்ணன் சிரிக்கிறான்.

சலாம் குலாமு

– எஸ். சுரேஷ் –

தொப்பி அணிந்து நின்று கொண்டிருந்த
மனித குரங்கு கதவை எனக்காகத் திறந்தது
உள்ளே நுழைந்து ஒரு அறைக்குள் சென்றேன்
இரண்டு சிறுத்தைகள் மான் கறி தின்று கொண்டிருந்தன
கோட் சூட் அணிந்த ஒரு யானை என்னிடம் வந்து
“நீங்க வெஜ்ஜா நான்-வெஜ்ஜா” என்று கேட்டது
“இன்றைக்கு நான் வெஜ்” என்றேன்
“இங்கே வாருங்கள்” என்று வேறொரு அறைக்கு அழைத்து சென்றது

என் பக்கத்து மேஜையில் ஒரு பூனையும் நாயும்
கோப்பையிலிருந்த பாலை நக்கிக்கொண்டிருந்தன
“ஏன் நீங்கள் நான்-வெஜ் சாப்பிடவில்லை?” என்று கேட்டேன்
பூனை என்னை மெளனமாய் முறைத்தது
“இன்றைக்கு சனிக்கிழமை” என்று நாய் கூறியது

சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது
தொப்பி அணிந்திருந்த மனித குரங்கிற்கு
பத்து ரூபாய் டிப்ஸ்ஸாகக் கொடுத்தேன்
உடனே அது “சலாம் குலாமு குலாமு சலாம் குலாமு”
என்று ஒரு முறை குதித்துப் பாடி பணத்தை பெற்றுக்கொண்டு
சலாம் போட்டு என்னை வழியனுப்பி வைத்தது.

 

image credit – Tabatha Yeatts, The Opposite of Indifference

அலையெழுப்புதல்

எஸ். சுரேஷ்

 

படித்துறையின் கடைசி படியில் நின்றுகொண்டு
தும்பிக்கையை தண்ணீரில் விட்டு
“புடு புடு புடு புடு” என்று சப்தம் எழுப்பி
தண்ணீரை கொதிக்கவிட்டுக் கொண்டிருந்தது
குட்டி யானை

திடீரென்று தண்ணீரை பிளந்துகொண்டு
மீனொன்று மேலெழும்பி
“யார்ரா அது இங்க விளையாடறது?”

திடுக்கிட்ட குட்டி யானை “சாரி ப்ரதர்” என்றது,
“நீங்க இருக்கீங்கன்னு தெரியாது”

இன்னொரு மீன் எழும்பி, “விளையாட
வேற இடம் கிடைக்கலையா?” என்று கேட்டது.

குட்டி யானை தலை குனிந்து மௌனமாகியது.
சற்று நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தது.

தண்ணீர் சமநிலைக்கு வந்த பிறகு மறுபடியும்
தும்பிக்கையை தண்ணீரில் விட்டு
“புட் புட் புட்” என்று செய்துவிட்டு
மீன்கள் வெளியே வருவதற்குமுன்
படியேறி ஓடிவிட்டது

பெரியப்பாவின் வருகை

ஹரன் பிரசன்னா

fallen_umbrella

 

பெரியப்பா வந்திருந்தார்
கையில் குடையுடன்
நீண்ட தாடியுடன்
ஒரு யோகியின் நடையுடன்
ஏற்கெனவே சொல்லி வைக்கப்பட்டிருந்தது போல
வீட்டைத் தேடி
வீடுகளைத் தேடி
பெரியப்பா வந்திருந்தார்
எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடம் விடையிருந்தது
அன்பில் பூத்த தாமரை மலர் ஒன்றை
எப்போதும் அவர் முகத்தில் சுமந்திருந்தார்
மெல்ல விரியும் உதடுகளின் வழியே
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கான
ஏக்கங்களின் விடையை
தெளித்தவண்ணம் சிரித்திருந்தார்
கைக்குட்டையில் இருந்த ரத்தக் கறையை
திட்டமிட்டு அவர் மறைக்கவில்லை என்றாலும்
யாருமே அவரிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை
கயிறின்றி கன்றின் பின்னே ஓடும்
தாய்ப்பசுவைப் போல
நினைவுகள் கட்டுண்டு அவர் பின்னே செல்ல
அவர் திடீரென்று பதற்றமானார்
குடை கீழே விழுந்த நினைவின்றி ஓடினார்
யாரோ ஒருவன்
வடிவுப்பெரியம்மையைப் பற்றிக்
கேட்டதுதான் காரணம் என்றார்கள்
இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
வடிவுப் பெரியம்மை எப்போதும் அப்படித்தான்

நின்னையே சரணடைந்தேன்…

சிகந்தர்வாசி

கோடை அருவி போல் உன் கன்னங்களில் ஒற்றைத் துளி விழுந்து உருண்டோடுவது எனக்குத் தெரிகிறது, உனக்குத் தெரியாமல். மூடப்பட்டிருக்கின்றன உன் கண்கள், மோன நிலையில் நீ. இமை போர்த்த விழிகளில் கருங்கல் சிலை, வெம்மையால் சிவந்திருக்கும் உன் முகம்.

கருங்கல் சிலைதான். என் அறிவியல் பார்வை அனைத்தையும் பகுக்கின்றது, எது பகுபடாததோ அது ஒன்றே மிச்சமிருக்கிறது. வெறுமை? சாத்தியம்தான். ஆனால் உன்னைப் போல் நான் அழ முடியாது, ஒரு கற்சிலையைப் பார்த்து. அல்லது, ஒரு ஆதர்சத்தில், ஒரு லட்சியத்தில் என் துக்கங்களைக் கரைத்துக் கொள்ள முடியாது. என் முன்னிருப்பது கற்சிலை. வெறிக்கும் என் கண்களை உயிரற்று வெறித்துக் கொண்டிருக்கிறது.

சிலைக்கு ஒளியூட்டுகிறது தீபாராதனை. என் அருகில் இருப்பவன் ஆனந்த நிலையில் இருக்கிறான். என் எதிரில் நிற்கும் பெண்மணி கண்கொட்டாமல் சிலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள், அவள் இவ்வுலகில் இல்லை. கற்சிலை ஊமையாய் நிற்கிறது, எனக்கு மட்டும். உன்னிடம் அது என்ன சொல்கிறது? அல்லது, உன் ஆசைகளை அதன்மேல் சுமத்துகிறாயா? நீ எங்கு அழக் கற்று கொண்டாய்?

இங்கிருப்பவர்களுக்கு என்ன வேண்டும்? சாந்தி என்கிறாய், ஆனால் சாந்தம்தான் என்ன? துன்பமின்மை? ஆசைகளின் பலிதம்? உன் பிரார்த்தனைகள் இந்தச் சிலையிடம் என்ன சொல்கின்றன? உனக்கு என்ன வேண்டும்? அல்லது, உன் கண்களை மூடிக் கொண்டு அனைத்தையும் கடந்து அப்பால் செல்கிறாயா? ஏதுமில்லா இடத்துக்கு? எல்லாம் உள்ள இடத்துக்கு? இருப்பும் இல்லாமையும் நீங்கிய, பொருளற்ற இடத்துக்கு? கணப்பொழுதேனும் ஆசைகள் அற்றுப் போயினவா?

நான் என்ன கண்டேன்: ஆனந்தம் என் மனம் அனுமதிக்காத ஆடம்பர நிலை. எப்போதும் நான் என்னைக் கண்டு கொள்கிறேன். எப்போதும் நான் பிறரைக் கண்டு கொள்கிறேன். உண்மை என்னை ஒளியை நோக்கிச் செலுத்துகிறது, ஒளி என்னை அண்டங்களைக் கடந்து அழைத்துச் செல்கிறது. எனக்குள் என்ன இருக்கிறது? அதுவா முக்கியம்? உள்ள பொருள், அதை ஆய்கிறது என் உள்ளம். ஆன்மா உள்ளதா, ஆய்வுக்கு உட்பட்டதா? கணிதச் சமன்பாடுகளின் மொழியில் பேசாத எதுவும் எனக்குப் பயன்படாது.

இல்லை. உன்னைப் பார்த்து நான் சிரிக்கவில்லை. நீ கரையேறிவிட்டாய். உன் முன் உள்ள பாதை ஒளிர்கிறது. சாகும்வரை நீ அதில் பயணிப்பாய். மரண கணத்தில் உன் முகம் நிறைவின் புன்னகையாய் மலரும். என் கேள்விகள் உனக்கில்லை. அறிவியலின் தீர்மான்மின்மைகள் உனக்கில்லை. எனவேதான் நீ எப்போதும் என்னருகில், என்னுடன் இருக்க வேண்டும். ஐயங்கள் பாலையாய் என் வாழ்வைச் சுட்டெரிக்கின்றன, நீதான் என் புகல். அவ்வப்போது உன்னைக் கண்டு மகிழ்கிறேன்.

கற்சிலைகளை கடந்து தொடர்கிறது என் தேடல். என் தேடல் தொடர்ந்தாக வேண்டும். மதங்களுக்கு அப்பால், கண்ணீருக்கு அப்பால், இன்பங்களுக்கு அப்பால். என் தேடல் புதிய சமன்பாடுகளை உருவாக்குகிறது. பழைய சிக்கல்களை அவிழ்க்கிறது. புதிய உலகங்களைத் திறக்கிறது. மேலும் மேலும் கடினமான பாதைகள், முடிவற்ற பாதைகள். நான் பயணித்தாக வேண்டும். ஓய்வில்லை எனக்கு. என் கேள்விகள் ஓயும் முன் என் வாழ்வு ஓயும் என்பதை நான் அறிவேன். உனக்குக் கேள்விகள் கிடையாது, கேள்விகள் எழுமுன் பதில்களைப் பெற்றுக் கொள்கிறாய். உனக்கு எப்போதும் உண்டு, இந்தக் கருங்கல் சிலை, அதன் காட்சியும், கண்ணீரில் நீ கரைதலும்.