இருண்மை

சரவணன் அபி

கேட்கப்படாத கேள்வியொன்று
நெய் குறையும் தீபத்தின்
சுடர் போல்

வளி கொண்டு அணையலாம்
ஆயினும்
இன்னும் கேட்கப்படாத கேள்வியின்
ஆன்மா
அங்கேயேதான் உறைகிறது

பிறிதொருகணம்
எனவொன்றில்லை

இறவாத அக்கேள்வியுடன்
தனித்து
அச்சுடர் நோக்கி
அமர்ந்திருப்பதில்
இடரொன்றும் இல்லை

அறிந்தது கொண்டு
அறிந்ததை அளத்தல்
இல்லாதது கொண்டு
இருப்பதை உணர்தல் போலும்

சுடரின் நுனி
துடித்தல் போலன்றி
தவித்தல்
எனவுணர்வதிலும்
இல்லை இல்லை
எனுமொரு நிலை
இல்லை இல்லை

கரைதலென்பதென்ன
இல்லாமற் போவதா
இன்னொன்றாய் இருப்பதா

வெற்றிடம் முழுதும்
நிறைந்து பெருகி
எனவொன்றில்லாத
பிறிதொருகணத்தில்
வழிந்தோடி வெற்றிடமாகி
இன்மையும் இருப்பும்
கரைதலென்பதென்ன
இல்லாமற் போவதா
இன்னொன்றாய் இருப்பதா

சுடரணைந்த இருளுக்குள்
தனித்தவொரு கேள்வியும்
சற்றுமுன்
வேறொன்றாய்
இருந்த ஒளியும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.