இரண்டு தோசைகள்

(பரிசு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை, எழுதியவர் ராஜா (எ) இளமுருகு)

இரண்டாவது தோசையை வேகமாக பிய்த்து வாயில் போட்டு, டம்ளரில் இருந்த தண்ணீரைக் குடித்தபடியே “குமாரு, கணக்குல எழுதிக்கோ” என்று வேகமாக ஹோட்டல் படியிறங்கி பைக்கில் உட்கார்ந்தேன்.அது நான் தினசரி சாப்பிடும் ஹோட்டல், காலை இரவு என்று 2 வேளை அங்கே சாப்பிடுவது வழக்கம், சில நேரங்களில் மதியம் மட்டும், வாரயிறுதியில் எப்பவாவது இல்லாமலும் கூட போகும். ஹெல்மெட் எடுக்கலாம் என்று திரும்பிய கணத்தில் ஒரு கை நீண்டது. அவருக்கு 45லிருந்து 50 வயதிருக்கலாம். நிறைய முடி நரைத்திருந்தது, சவரம் செய்து எப்படியும் 6 மாதமாவது இருக்கும், குழி விழுந்த கண்கள், அழுக்காக.. இல்லை இல்லை மிகவும் அழுக்காக இருந்தார். உடைகளை அவர் சமீபத்தில் துவைத்திருப்பதற்கான அறிகுறியே இல்லை. எங்கேயோ கீழே கிடந்ததைப் பொறுக்கி அப்படியே அணிந்து வந்திருக்கிறார், இல்லையெனில் யாராவது பழைய துணி கொடுத்திருக்கலாம். எப்படியாக இருந்தாலும் துவைக்கவில்லை.

“என்ன” என்றேன். “சாப்பிட்டு 2 நாளாச்சு சார், ஏதாச்சும் வாங்கிக்குடுத்தீங்கன்னா புண்ணியமாப் போவும்”. நான் அவரை மேலும் கீழும் பார்த்தேன். அவர் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம். இவர் சாப்பிடக் கேட்கிறாரா? இல்லை டாஸ்மாக்கில் கட்டிங் வாங்க கேட்கிறாரா என்று தெரியவில்லை. “சாப்பாடு வாங்கித்தந்தா சாப்பிடுவீங்களா? இல்லை, காசுதான் வேணுமா?” இன்னும் எனக்கு சந்தேகம் விலகவில்லை. “சாப்பிட வாங்கிக்குடுங்க சார், அது போதும்” தொண்டை கமறியது அவருக்கு.

நான் திரும்பி “குமாரு, இவருக்கு எதாச்சும் சாப்பிடக்குடு, என் கணக்குல சேர்த்துக்கோ” என்றேன். “சார், அதெல்லாம் சரியா வராது சார், நான் வெளியில இட்டாந்து தந்துர்றேன், அந்தாளு அங்கனயே சாப்பிட்டுகிடட்டும்” “பரவாயில்லை சார், நான் சாப்பிட்டுக்கிறேன் சார். நீங்க நல்லா இருக்கனும் சார்” “இருக்கட்டும், நீங்க சாப்பிடுங்க” என்று கிளம்பி 4 வது கியரை மாற்றவில்லை, ஏதோ தோன்ற திரும்ப ஹோட்டலுக்கே வந்தேன். அவர் வாசலில் காத்திருக்க குமார் இரண்டு தோசையை பார்சல் செய்து கொண்டு வந்து தந்தான். “அந்தப் பக்கம் போய் சாப்பிடு பெர்சு” என்றான், என்னைக் கண்டு திடுக்கிட்ட குமார் “இல்ல சார், மொதலாளி வந்தா திட்டுவாரு சார், அதான்…” என்று இழுத்தான்.

பெரியவர் பார்சலை வாங்கி பிளாட்பார்ம் வந்து சாப்பிட ஆரம்பித்தார், அவர் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன், சரியான 40வது விநாடியில் இரண்டு தோசைகளையும் சாப்பிட்டு முடித்திருந்தார். கை கழுவ தெருக்குழாய் நோக்கி நகர்ந்தார். நான் அவரைக் கூப்பிட்டேன், அப்படியே குமாரையும். “குமார், இனிமே இவர் சாப்பிட எப்போ கேட்டாலும், என்ன கேட்டாலும் சாப்பிடக்குடு, சரியா” பெரியவர் ஏதோ பேச எத்தனித்தனிப்பதற்குள் நான் அந்த இடத்தைவிட்டு வெகு தூரம் வந்துவிட்டேன். அந்தப் பெரியவருக்கும் எனக்கு ஏதோ தொடர்பு இருப்பதைப் போன்றதொரு உணர்வு, நான் சிறுவனாக இருந்த போது என் தந்தை ஊரை விட்டுப் போய்விட்டாராம். காசியில் சாமியாராகி விட்டதாக சிலர் சொன்னார்கள், இராமேஸ்வரத்தில் பிச்சையெடுப்பதாகவும் சொன்னார்கள். அதுகூட இவருக்கு சாப்பாடு வாங்கித் தருவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஏதோ ஒன்று இப்பொழுது மனம் நிரம்பியிருந்தது, என்னவென்று அறியாத ஓர் இனம் புரியாத சந்தோசம்.

அப்புறம் அந்தப் பெரியவரை சாப்பிடப் போகும்போதெல்லாம் தேடுவேன், பார்த்ததேயில்லை. அடுத்த மாதம் அக்கெளண்ட் செட்டில் செய்யும் போதுதான் கவனித்தேன், கணக்கு சரிவிகிதம் எகிறி இருந்தது, காலை 2 தோசை, இரவு 2 தோசை, இப்படித்தான் வாரம் ஏழு நாட்களும் அவர் சாப்பிட்டிருக்கிறார். ஆச்சர்யமாய் இருந்தது, எப்படி ஒரு மனிதன் காலை இரவு என இரு வேளைகளுக்கும் தோசை மட்டும் சாப்பிட முடிகிறது, சரி, எதுவும் இல்லாமல் இருப்பவருக்கு தோசை கிடைக்கிறதே என்று சாப்பிடுவார் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். அந்த மாதமும் அவரைச் சந்திக்காமலேயே கழிந்தது. அவர் தவறாமல் சாப்பிட வருகிறார் என்று உறுதி செய்தான் குமார். அடுத்த மாதம் கணக்கை செட்டில் செய்யும் போது ஏதோ உறுத்தியது. அந்த ஒரு வேளை மட்டும் வாங்கிக்கொடுத்துவிட்டு விலகியிருக்கலாமோ என்று தோன்றியது. ஆனாலும் மனதில் ஏதோ உந்த பரவாயில்லை என்று விடத்தோன்றியது.

அடுத்த மாதம் பாதியில் குமார் என் செல்போனுக்கு அழைத்தான். “சார், அதான் சார், அந்தப் பெருசு உள்ளாரதான் சாப்பிடுவேன்னு சொல்லுது சார், முதலாளி கத்துறாரு சார். நீ பார்சலே வாங்கிக்கச் சொல்லு சார், பேஜாரா போவுது சார்” என்றான் பதட்டமாக. என்னடா இது பெரிய தொந்தரவாக போயிற்றே என்று “குமார், நீ ஒன்னு பண்ணு, இன்னும் ஒரு வாரத்துக்கு பார்சல் வாங்கிக்கச் சொல்லு, அப்புறமா நான் அவர்ட்ட பேசிக்கிறேன்” என்று கட் செய்தேன்.

கொல்கத்தா போனபிறகு பெரியவர் மனதிலிருந்து காணாமல் போயிருந்தார். திரும்ப சென்னை திரும்ப 10 நாட்கள் ஆகிற்று.

அடுத்த மாதம் கணக்கை செட்டில் செய்யும் போதுதான் கவனித்தேன், கணக்கில் குறைந்தது. குமாரை கூப்பிட்டு விசாரித்ததில் தெரிந்தது, பணம் வாங்கி 4 நாட்கள் ஹோட்டல் உள்ளே வந்தே சாப்பிட்டிருக்கிறார், துணியெல்லாம் புதிதாகப் போட்டிருந்தாராம், ஹோட்டலுக்குள் சாப்பிடுவதை மிகவும் கெளரவமாக நினைத்து சாப்பிட்டாராம். ஆனாலும் காலை, மாலை 2 வேளைகளிலும் 2 தோசை என்கிற கணக்கில் எந்த மாற்றமும் இல்லை. அப்புறம் அவர் என்னை முறை கேட்டிருக்கிறார், அவ்வளவுதான் திரும்ப அவர் வரவேயில்லை. அவரைத் தேடுவதா? இல்லை விட்டது தொல்லை என்று கிளம்பிவிடலாமா என்று ஒரே குழப்பம். இரு தெருக்களில் தேடிப்பார்த்தேன், சிக்கவேயில்லை. நாளடைவில் அவரை மறந்துவிட்டிருந்தேன்.

ஒரு நாள், இரவு 10 மணி வாக்கில் கோயம்பேடு, மார்க்கெட் தாண்டிப் போகையில ஒருவர் அரக்கப் பரக்க என் பின்னாடி ஒருவர் ஓடி வந்தார், சட்டென அடையாளம் தெரியவில்லை. “தம்பி” என்று இரு கை கூப்பினார். அந்த தம்பி என்கிற வார்த்தையிலேயே புரிந்துவிட்டது, அந்த 2 தோசைப் பெரியவர். “நல்லா இருக்கீங்களா தம்பி?”

“நல்லா இருக்கேன், எங்கே இப்பல்லாம் வந்து சாப்பிடறது இல்லை போல. நீங்க இப்ப..” என்று இழுத்தேன்.

“இல்லே தம்பி, பிச்சை எடுக்கிறது இல்லை. நீங்கதான் அதுக்குக் காரணம்..”

ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றேன்

“சொல்லுங்க என்னாச்சு”

“தினமும் உங்க காசுலேயே சாப்பிடுவேன், பிச்சையெடுப்பேன். இப்படியே போயிட்டு இருந்துச்சு. ஒரு மாசம் கழிச்சு, நீங்கதான் காசு தரீங்க. அதுவும் முழுசாத்தான் தரீங்க. ஏன் உள்ளே உக்காந்து சாப்பிடக்கூடாதுன்னு கேட்டேன். அதுக்குக் கோவிச்சிட்டாரு அந்தத் தம்பி..”

“யாரு குமாரா?”

“ஆமா, அந்த சர்வர் தம்பிதான். ஏன்னு கேட்டேன். குளிக்கலை, அழுக்கா இருக்கேன்னு சொன்னாப்ல. சரி இருக்கிற, பிச்சையெடுத்த காசை வெச்சி, சவரம் பண்ணிட்டு, நல்ல துணி போட்டுட்டு போய் 2 நாள் சாப்பிட்டேன். நல்ல துணி போட்டுக்கிட்டதால பிச்சை எடுக்க தோணவும் இல்லை, நல்ல துணி போட்டிருக்கிறதால யாரும் பிச்சை போடவும் இல்லை. அதான் மார்க்கெட் பக்கம் வந்து வேலை தேடினேன். இப்ப இருக்கிற முதலாளி காய்கறி கடை வெச்சிருக்காரு. கூடமாட ஒத்தாசையா இருந்துக்கோன்னாரு. ராவுக்கு அங்கேயே படுத்துக்கவும் சொல்லிட்டாரு. இப்பல்லாம் பிச்சை எடுக்கிறதில்லை தம்பி. ஆனா பிச்சைன்னு கேட்டா காசு குடுக்கிறதில்லை, சாப்பாடு வாங்கித் தந்துடறேன். நீங்க சொல்லிக்குடுத்ததுதான் தம்பி”

எனக்குப் புரியவேயில்லை, சாப்பாடு போட்டா சோம்பேறி ஆகிடுவாங்க என்கிற விதி போய், பிச்சையெடுத்தவர் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.

சிரித்தபடியே “சந்தோசம்ங்க பெரியவரே! எனக்குப் பசிக்குது, நீங்க சாப்பிட்டீங்களா? என்றேன்

“இல்லை தம்பி, இப்பத்தான் முதலாளி கடையைச் சாத்தினாரு. இனிமேதான்..”

“சரி, சர்வர் எனக்கு ஒரு பூரி மசால் குடுங்க. உங்களுக்குப் பெரியவரே..” என்றேன் அவரைப் பார்த்து

“2 தோசை” என்றார்.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.