பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறேன்,
பூனை என் மடியில் ஏறித் தூங்க ஆரம்பிக்கிறது,
என் வேட்டியை இரு கைகளாலும் பிடித்து உதறுகிறேன்.
மேலே பறந்த பூனை,
பீதியுடன் கண் விழித்து உடம்பைத் திருப்பி,
கால்களை அகட்டிக் கொண்டு தரை இறங்குகிறது.
ஆக்ரோஷமாக என்னைப் பார்த்து,
“மியாஆவ்வ்வ்” என்று கத்திவிட்டு,
மடியில் ஏறி மறுபடியும் தூங்க ஆரம்பிக்கிறது.
பொழுது நகராத மதியவேளை-
அணைக்க மறந்துவிட்டுத் தூங்குகிறார்கள்
மத்திய வர்க்க மாமிகள்,
சீரியலில் கதறிக் கொண்டிருக்கும் பெண்ணை
உற்றுப் பார்க்கிறது பூனை.