எஸ். சுரேஷ்

நட்பின் பாரம்

எஸ். சுரேஷ்

கதவை திறந்த மேரியை பார்த்து, “என்ன வெய்யில்பா இந்த ஊர்ல” என்று கூறிவிட்டு, ஹாலுக்குள் நுழைந்து, கையிலிருந்த காகித பைகளை சென்டர் டேபிள் மீது வைத்துவிட்டு, ஏஸீ ஸ்விட்ச்சை ஆன் செய்து, ஃபேன்னுக்கு அடியில் உட்கார்ந்தாள் ஜெயா. மேரியை பார்த்து சிரித்துக்கொண்டே பாயல் உள்ளே நுழைந்தாள். “ஷாப்பிங் முடிஞ்சா?” என்று கேட்ட மேரியிடம், “எங்க. நாளைக்கும் போகணுமாம்.” என்றாள்.

டைனிங் மேஜை மேல் பைகளை வைத்துக்கொண்டிருந்த பாயலை பார்த்து, “ஃபிரிஜ்லேர்ந்து ஒரு பீர் எடு” என்றாள் ஜெயா. மேரி பீர் கேன் எடுத்து ஜெயாவுக்கு கொடுத்தாள். “நீ எதுக்கு கொடுக்கற? அவளே வந்து எடுத்துக் கொள்ளட்டும்” என்றாள் பாயல். “சரி விடுப்பா” என்றாள் மேரி. “நீ சும்மா இருப்பா. மேரி வீடு எங்க அம்மா வீடு மாதிரி” என்றாள் ஜெயா.

“என்னப்பா உங்க ஊரு இப்படி சுடுது” என்று கேட்ட ஜெயாவை பார்த்து மேரி சிரித்தாள். “நீ எங்க சுவிட்ஸர்லேண்ட்லயா பொறந்த?” “எங்க பெங்களூர வந்து பாரு பா. இப்போ சுவிட்ஸர்லேண்ட் போலதான் இருக்கும். அடுத்த வருஷத்துலேர்ந்து நாம பெங்களூர்ல சந்திப்போம்” என்றாள் ஜெயா. “எங்க. உங்க வீட்லயா? அங்க நாம தைரியமா தண்ணி அடிக்கலாமா?” என்று பாயல் கேட்டாள். “அந்த விஷயத்துல பெங்களூரு ஒரு தொல்ல பா” என்றாள் ஜெயா. “ஊர் முழுக்க தண்ணி அடிக்குது, ஆனா உன்னால முடியல” என்று சொல்லிவிட்டு மேரி சிரித்தாள். “இமேஜ் மெயின்டய்ன் பண்ணனும். என்ன பண்ண.”

ஏஸீயின் ரீங்காரம் இப்பொழுது தெளிவாக கேட்டது. குளிர் காற்று ஹாலை நிரப்ப ஆரம்பித்தது. வெளியில் சூரியன் மறையும் முன் வானத்தில் வண்ணங்களை பூசிக்கொண்டிருப்பதை அந்த அபார்ட்மெண்டின் ஐந்தாவது மாடியிலிருந்த அந்த மூவரால் பார்க்க முடியவில்லை. அவர்கள் ஜன்னலை கர்டனால் சாத்தியிருந்தார்கள். ஹால் இருட்டத் தொடங்கியவுடன் மேரி விளக்கை போட்டாள். ட்யூப் லைட் வெளிச்சத்தில் அந்த ஹால் மூலையில் கண்ணாடி அலமாரிக்குள் உயர்தர மதுபுட்டிகள் பளபளத்தன. அதே அலமாரியின் இன்னொரு ஷெல்ஃபில் உயர்ரக கண்ணாடி கோப்பைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அலமாரிக்கு மேல் வட்ட கடிகாரம் மணி ஆறு என்பதை காட்டியது. வீடு திரும்பும் பறவைகள் ஓசையை, வீடு திரும்பும் கார்களின் ஓசை மூழ்கடித்தது. லெதர் சோஃபாவில் ஜெயா ஒய்யாரமாக சாய்ந்தபடி பீர் குடித்துக்கொண்டிருந்தாள். ஆளுயர ஃபிரிஜ் அருகில் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட டைனிங் மேஜைக்கு அருகில் மேரியும் பாயலும் உட்கார்ந்திருந்தார்கள். ஃபிரிஜ்ஜுக்கு பின்புறம் இருந்த சமயலறை இருட்டில் மூழ்கியிருந்தது. ஜெயாவின் தலைக்குப் பின் சுவரில் பெரிய ஓவியம் மாட்டப்பட்டிருந்தது.

“கோவிட் மட்டும் வரவில்லை என்றாள், சில்வர் ஜூப்ளி கொண்டாடியிருப்போம்” என்றாள் மேரி. “ஆமாம். ரெண்டு வருஷம் நாம சந்திக்காமலே இருந்திருக்கோம். இந்த வருஷமாவது முடிந்ததே” என்றாள் பாயல். “நாம் இப்படி வருஷா வருஷம் சந்திப்பதை பார்த்து யாரோ பொறாமைப் பட்டிருக்காங்க. அதுக்குதான் கோவிட் வந்து நம்மை  சந்திக்கவிடாம செஞ்சிது” என்றாள் ஜெயா. மேரியும் பாயலும் உரக்க சிரித்தார்கள். “அவனவன் சைனாக்காரன் தான் கோவிட்ட பரப்பி விட்டாங்கன்னு சொல்றான். நீ என்னன்னா நம்ம உறவுகாரங்க யாரோ தான் கோவிட்டுக்கு காரணம்னு சொல்ற” என்று சொல்லிவிட்டு மேரி சிரித்தாள்.

அதை கேட்காதது போல் ஜெயா, “எனக்கு இன்னொரு பீர் வேண்டும்” என்றாள். மேரி எழுந்து சென்று ஃபிரிஜ்ஜிலிருந்து ஒரு பீர் கேன்னை எடுத்து ஜெயாவிடம் கொடுத்தாள். பிறகு பாயலை பார்த்து, “ஜின் ஆர் வைன்?” என்று கேட்டாள். “வைன்”. மூலையிலிருந்த அலமாரிக்கு சென்று வெவ்வேறு வடிவங்களில் இரண்டு கண்ணாடி கோப்பைகளை எடுத்தாள். பிறகு ஒரு விஸ்கி பாட்டிலும் வைன் பாட்டிலும் எடுத்தாள். பாயல் வந்து கோப்பைகளை வாங்கிக்கொண்டாள். இருவரும் டைனிங் மேஜை மேல் பாட்டிலையும் கோப்பைகளும் வைத்துவிட்டுஅருகில் உட்கார்ந்து கொண்டார்கள். ஏதோ ஞாபகம் வந்தது போல் மேரி எழுந்து சென்று ஃபிரிஜ்ஜிலிருந்து ஐஸ் கட்டிகள்  நிரம்பிய பாத்திரம் ஒன்றை கொண்டுவந்து டைனிங் மேஜை மேல் வைத்தாள். பிறகு ஒரு கோப்பையில் வைன்னையும் இன்னொரு  கோப்பையில் விஸ்கியையும் ஊற்றினாள். விஸ்கி கோப்பைக்குள் இரண்டு ஐஸ் கட்டிகளை போட்ட. பிறகு கோப்பையை மேலே உயர்த்தி, “சீர்ஸ்” என்றாள். பாயல் தன் கோப்பையால் மேரியின் கோப்பையை மெதுவாக தொட்டு “சீர்ஸ்” என்றாள். தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து பீர் கேன்னை மேலே தூக்கி “சீர்ஸ்” என்றாள் ஜெயா.

வைன்னை மெதுவாக ருசித்தபடி பாயல், “நாம மூணு பேருமே ஹைத்ராபாத்ல இருந்தா இது போல அடிக்கடி சந்திக்க முடியும். எம்.டி. வரைக்கும் ஒண்ணா படிச்சோம். இந்த கல்யாணம்னு ஒண்ணு நடக்கலைன்னா இங்கயே இருந்திருக்கலாம். கல்யாணம் செஞ்சிண்டு ஒண்ணும் சாதிக்கல” என்றாள்.“மேரேஜ் இஸ் அ வேஸ்ட் ஆஃப் டைம்” என்றாள் மேரி. ஜெயாவுக்கு போதை சற்று ஏறியது போல் இருந்தது. “நோ” என்று உரக்க சொன்னாள். “உங்களுக்கு அப்படி இருக்கலாம். எனக்கு அப்படி இல்ல. மை பிரகாஷ் லவ்ஸ் மீ. யெஸ். ஹி லவ்ஸ் மீ”

மேரியும் பாயலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சற்று நேரத்துக்கு மௌனம் நிலவியது. அவர்கள் இருவரும் மதுவை ரசித்து அருந்திக் கொண்டிருந்தார்கள். சமையலறைக்கு சென்று சிப்ஸ் பாக்கெட் ஒன்றை மேரி கொண்டுவந்து அதில் பாதியை ஒரு தட்டில் கொட்டி ஜெயாவின் முன் வைத்தாள், மீதியை மேஜை மேல் வைத்தாள். ஜெயா அதற்குள் பீரை குடித்து விட்டிருந்தாள். “இன்னொரு கேன்” என்றாள். “மெதுவா குடி இல்லைனா போதை ஏறிவிடும்” என்று சொன்ன மேரியிடம், “போதை ஏறத்தானே குடிக்கிறது” என்றாள். அவளுக்கு இன்னொரு பீர் கேன்னை கொடுத்தாள் மேரி.

ஜெயாவுக்கு போதையேறிக்கொண்டிருப்பதை மேரியும் பாயலும் கவனித்தார்கள். அவள் வாய் சற்று குளற ஆரம்பித்தது. “மேரேஜ் இஸ் அ வேஸ்ட் ஆஃப் டைம், மேரேஜ் இஸ் அ வேஸ்ட் ஆஃப் டைம்” என்று சொல்லிவிடு சிரிக்க ஆரம்பித்தாள். சட்டென்று சிரிப்பை நிறுத்திவிட்டு, “நாட் ஃபார் மீ, நாட் ஃபார் மீ”, என்று உரக்க சொன்ன பிறகு, “பிரகாஷ் இஸ் எ ஜெம். அவன போல ஒருத்தன் உங்களுக்கு கிடைக்கல. அதுக்கு தான் கல்யாணம் வேஸ்ட்ன்னு சொல்றீங்க. உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்ல. அதுதான் உண்மை. பிரகாஷ் மாதிரி ஒருத்தன் உங்களுக்கு கிடைக்கல, எனக்கு கிடைச்சான். அதுதான் உண்மை. யெஸ். தட் இஸ் தி ட்ரூத். உங்களுக்கு அப்படி ஒருவன் கிடைச்சிருந்தா நீங்களும் என்ன மாதிரி பெரிய ஹாஸ்பிடல் கட்டியிருப்பீங்க. யெஸ். ஐ ஆம் பெட்டர் ஆஃப் தான் யூ. பிரகாஷ், ஐ லவ் யூ”

தன்னை உற்றுப் பார்த்த பாயலின் கண்களை மேரி தவிர்த்தாள். “மேரி, பிளீஸ் மேரி. ஜெயா கிட்ட இத சொல்லாத. உன்ன கெஞ்சி கேட்டுக்கறேன். பிளீஸ்”

“நீ தான் ஜெயாவோட தினமும் கூத்தடிக்கிற. என் மேல ஏண்டா கைய வெச்ச?”

“சாரி, சாரி சாரி. என்ன மன்னிச்சிடு. அவளுக்கு சொல்லிடாத”

“வெக்கமா இல்லடா உனக்கு? அவ என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அது தெரிஞ்சிருந்தும் நீ இப்படி செய்யர. என்ன மாதிரி பொறுக்கிடா நீ?”

“சாரி, சாரி, உங்க சைட்ல இதெல்லாம் சகஜம்தான்னு அப்படி செஞ்சிட்டேன். நான்….”

“என்னடா சொன்ன, யூ சன் ஆஃப் எ பிட்ச். பண்றத பண்ணிட்டு என்ன பேச்சு பேசற.”

“மேரி, ஐ பெக் யூ. உன்ன கெஞ்சிக்  கேட்டுக்கறேன். ஐ ஆம் சாரி. ஐ ஆம் சாரி. இனிமே இப்படி நடக்காது.”

பாயல் மேரியை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள்.

“ஜெயாகிட்ட சொல்லுடி. அந்த ஆளு அவளுக்கு தேவையில்லை. கொஞ்சம் நாள் முன்னால தான், கவிதா கிட்ட ஏதோ பண்ண போயி செருப்படி வாங்கினான். இப்போ உன் மேலயே கைய வெக்கறான். நீ போய் ஜெயவுக்கு சொல்லு.”

“வேணாம்டி. கவிதா ஜெயவுக்கு சொன்னா. என்ன ஆச்சு? இப்போ அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதில்லை. நம்ம இன்னும் ரெண்டு மாசத்துல பட்டப்  படிப்ப முடிச்கிட்டு, ஒவ்வொருவர் ஒவ்வொரு திசைல போக போறோம். இப்போ எதுக்கு இந்த சண்டையெல்லாம்?”

ஜெயா மேரியை பார்த்து, “மேரி, இன்னொரு பீர்” என்றாள். இரண்டு பீர் கேன்களை அவள் முன் வைத்துவிட்டு, சரிந்திருந்த அவளை நிமிர்த்தி உட்கார வைத்தாள் மேரி. ஜெயா பீர் கேனை கையிலெடுத்துக் கொண்டு மறுபடியும் சரிந்தாள்.

வாய் குளறியபடியே, “என் பிரகாஷ் இஸ் அ ஜெம். அவன பார்த்து எல்லோரும் போறாமப்படராங்க. அதுவும் பெண்கள் ரொம்ப போறாமப்  படராங்க. ஏதேதோ கம்ப்ளைண்ட் கொண்டு வராங்க. நான் எல்லாரையும் துரத்தியடிக்கறேன். ஐ பிலீவ் இன் பிரகாஷ். நான் பிரகாஷ நம்புறேன்.”

இந்த முறை மேரியின் பார்வையை பாயல் தவிர்த்தாள், “அந்த ஆளு எல்லா லேடீஸ் ஸ்டாஃப் மேலயும் கையை வெக்க பாக்குறான். அவன் மேல எங்களுக்கு இப்போ மரியாதையே போச்சு. அவன பார்த்தாலே அருவெறுப்பா இருக்கு. அந்த அம்மாக்கிட்ட அவ புருஷன பத்தி சொன்னா நம்மள வேலைய விட்டு தூக்கிடுவாங்க. நீங்க தான் எங்க ரெண்டு பேருக்கும் உங்க கிளினிக்ல வேலை போட்டுக் கொடுக்கணும் டாக்டர் பாயல்”

ஜெயாவின் தெளிவில்லாத குரல் உயர ஆரம்பித்தது, “என்னோட ஹாஸ்பிடல்ல வந்து வேலை செய்யுன்னு பாயலுக்கு சொன்னேன். அவ வரல. அவ சொந்த கிளினிக் நடத்தரா. ஹ ஹ ஹ. என்ன பாரு. நான் ஒரு பெரிய ஹாஸ்பிடலே நடத்தறேன். அந்த ஏரியாவிலேயே பெரிய ஹாஸ்பிடல் என்னோட ஹாஸ்பிடல் தான்.” ஒரு முழுங்கு பீரை குடித்துவிட்டு தொடர்ந்தாள், “என்னோட ஹாஸ்பிடல்லுக்கு டீசண்ட் பீப்பிள்தான் வருவாங்க. சின்ன பசங்க தப்பு தண்டா பண்ணிட்டு என்கிட்ட வரமாட்டாங்க. நான் அவங்க நாக்கு பிடிங்கிக்கர மாதிரி நாலு கேள்வி கேப்பேன். பாயல் அதெல்லாம் கேட்க மாட்டாள்” என்று சொல்லிவிட்டு உரக்க சிரித்தாள். “உனக்கு தெரியுமா மேரி. எங்க ஊர்ல இருக்கிற ஜைனல மோஸ்ட் நான்-ஜட்ஜுமெண்ட்டல் டாக்டர்ன்னு பாயலுக்கு ஒரு பத்திரிகை பட்டம் கொடுத்திருக்கு. அப்படின்னா கல்யாணம் ஆகாம தப்பு தண்டா பண்ற எல்லா பெண்களும் இவ கிளினிக்கு போவாங்க. இவ அவங்கள ஒண்ணும் கேட்கமாட்டா. அவங்க அப்பா அம்மா வயத்துல தீய வார்த்துண்டு இருப்பாங்க. இங்க டாக்டர் அம்மா பசங்கள என்கரேஜ் பண்ணுவாங்க. அதுக்கு தான் அவளுக்கு இந்த பட்டம். தூ.”

மேரியும் பாயலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஜெயா, இருமுறை விக்கிய பிறகு, “என் பொண்ண நான் எப்படி வளர்த்திருக்கேன் தெரியுமா. எனக்கு தெரியாம அவ ஒண்ணும் செய்ய மாட்டா. பாயல பார். அவ பொண்ணு எங்க போறா எங்க வரான்னு இவளுக்கு தெரியாது. என்னா பொண்ண வளர்க்கிறாளோ இவ. என் பொண்ணு என் கூட சண்ட போடரா. ஆனா நான் சொன்ன வழியில தான் அவ நடக்கணும். ஷீ ஹாஸ் டூ லிசன் டூ மீ. யெஸ். ஷீ மஸ்ட் லிசன் டூ மீ” என்று சொல்லிவிட்டு மேஜையை கையால் ஓங்கி அறைந்தாள்.

மேரி பாயலை பார்த்தாள். “ஆண்டி, பிளீஸ் ஆண்டி. எங்க அம்மா உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்னு எனக்கு தெரியும். ஆனா இந்த ஊர்ல உங்கள விட்டா வேற டாக்டர் கிட்ட போக எனக்கு பயமா இருக்கு. பிளீஸ் ஆண்டி. எங்க அம்மாக்கிட்டா சொல்லாதீங்க.”

“ஏன்…”

“பிளீஸ் ஆண்டி. ஒண்ணும் கேக்காதீங்க. நான் இனிமே இப்படி பண்ண மாட்டேன். பிராமிஸ். ஐ பிராமிஸ் யூ”

இருக்கையை விட்டு தள்ளாடியபடி எழுந்த ஜெயா, உவேக் என்று வாந்தி எடுத்தாள். மேரியும் பாயலும் விரைவாக சென்று அவளை கைத்தாங்கலாக பாத்ரூமூக்கு அழைத்து சென்றனர். ஜெயா இன்னும் இரு முறை வாந்தி எடுத்துவிட்டு ஆழ ஆரம்பித்தாள். “ஐ ஆம் ஸாட். ஐ ஆம் ஸாட்” மறுபடியும் ஒரு முறை வாந்தி எடுத்துவிட்டு, “எனக்கு எதுவுமே பிடிக்கலை. எனக்கு எதுவுமே பிடிக்கல. யூ ஆர் மை பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்’ என்று கூறிவிட்டு தேம்பி தேம்பி அழுதாள். மேரியும் பாயலும் மெதுவாக அவளை படுக்கையறைக்கு அழைத்து சென்று, படுக்கையில் கிடத்தி, போர்வையை போர்த்திவிட்டார்கள். பிறகு இருவரும் ஹாலுக்கு வந்து, மௌனமாக மது அருந்த ஆரம்பித்தார்கள்.

 

.

 

 

 

 

 

 

 

 

குர்தயால் சிங்: ஒரு எளிய அறிமுகம்

எஸ். சுரேஷ் 

நேஷனல் புக் டிரஸ்ட் கடையில் ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று சென்றபோது குர்தயால் சிங் என்னும் எழுத்தாளரின் ‘பர்ஸா’ என்னும் நாவல் கண்ணில் பட்டது. அந்த பெயர் அதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை. நண்பர் ராஜ்மோகனை தொலைபபேசியில் அழைத்து “இந்த எழுத்தாளரை நீங்கள் படித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டேன். இந்திய எழுத்தாளர்களைப்  பற்றி விக்கிபீடியாவுக்கு தெரிந்ததை விட ராஜ்மோகனுக்கு அதிகம் தெரியும். “அவர் ஒரு மிக சிறந்த எழுத்தாளர். பஞ்சாபின் முக்கிய எழுத்தாளர். தச்சர் குலத்தை சேர்ந்தவர். தலித் சர்தார்ஜிகளை பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.”

என்னை இரண்டு விஷயங்கள் ஆச்சரியப்படுத்தின. ஒன்று, எனக்கு இவ்வளவு பெரிய ஒரு எழுத்தாளரை பற்றி தெரியாமல் இருந்தது. இரண்டாவது, சீக் சமூகத்திலும் ஜாதி பேதங்கள் இருப்பது. அந்த சமூகத்திலும் தலித்துகள் இருக்கிறார்கள் என்பதை அப்பொழுதுதான் உணர்த்தேன்.

‘பர்ஸா’ என்ற அந்த நாவலை படித்துக்கொண்டிருக்கும்பொழுதே குர்தயால் சிங்கின் ஆளுமையை அறிய முடிந்தது. அந்த நாவலில் ஒரு சமூகத்தின் மொத்த உருவத்தையும் நம் கண் முன் நிறுத்துகிறார். அவர் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ராணா நய்யர் என்பவர் குர்தயால் சிங்கின் பர்ஸாவை ஆக சிறந்த பூஞ்சாபி நாவலாக ஒரு கருத்தரங்கில் சொன்னார். அதற்கு பின் என்னுடன் பேசிய அவர், “பர்ஸா பஞ்சாபின் கலாசாரத்தை அற்புதமாக முன்னெடுத்து வைக்கிறது. இந்த நாவலை படித்தால் எப்படி சீக் கலாச்சாரமும் ஹிந்து கலாச்சாரமும் இணைந்து இருந்தன என்று நமக்கு தெரிய வருகிறது. ஒரு கலாசாரம் என்பது எப்படி மற்ற கலாசாரங்களுடன் உரையாடுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.” குர்தயால் சிங் தலித்களை பற்றி அதிகம் எழுதியிருப்பதை பற்றி நான் சொன்னபொழுது, “ஆனால் அவர் எல்லோரை பற்றியும் எழுதியிருக்கிறார்.  பர்ஸா என்பவர் ஒரு ஜாட் பிராமின். மற்ற நாவல்களில் அவருடைய தச்சர் ஜாதி மக்கள் பற்றியும் எழுதியிருக்கிறார்”.

பர்ஸாவுக்கு அடுத்ததாக நான் குர்தயால் சிங்கின் முதல் நாவலான ‘மர்ஹி தே தீவா’ என்னும் நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்தேன். (ஆங்கிலத்தில் இதற்கு ‘லாஸ்ட் ஃப்ளிக்கர்’ (Last Flicker) என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது). ஒரு தலித் சர்தார்ஜி இளைஞன் தன் நண்பனின் புதிய மனைவி மேல் மோகம் கொள்கிறான். அதன் விளைவுகளை இந்த நூல் விவரிக்கிறது. இது மனதை நெகிழவைக்கும் காதல் கதையாக இருக்கும்பொழுதும், அந்த காதல் கதை நடக்கும் களத்தை நம் கண்முன் குர்தயால் சிங்அற்புதமாக கொண்டுவருகிறார். நமக்கு அந்த காதல் மட்டுமல்ல, அந்த சமூகத்தை பற்றியும் நல்ல ஒரு புரிதல் கிடைக்கிறது.

குர்தயால் சிங்கின் எல்லா நாவல்களிலும் தனி மனிதர்கள் சமூகத்தின் ஒரு சிறிய அங்கமாகதான் காட்சியளிக்கிறார்கள். அவர்கள் சமூகத்துடன் தொடர்ந்து மோதுகிறார்கள். அப்படி மோதும் ஒரு தச்சன் கதைதான் ‘அன்ஹோயீ’. சாலை விரிவுப்படுத்தவேண்டி அரசு அவனுடைய வீட்டை பலிகொள்ள முடிவெடுக்கிறது. தன் வீட்டை எக்காரணத்தினாலும் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று அடம் பிடித்து, அரசுடன் மோதி, போலீசுடன் மோதி, தன் தம்பியுடன் மோதி, எல்லோரையும் ஜெயிக்க வேண்டும் என்று உறுதியுடன் போராடும் எளிய மனிதனின் கதை இது.

அரசு, போலீஸ், சமூகத்தின் பெரிய புள்ளிகள் என்று எல்லோரும் சுரண்டும் எளியவரின் வாழ்கையை தான் குர்தயால் சிங் தன் நாவல்களில் எழுதினார். ‘அந்தே கொடே த தான்’ என்னும் நாவலில் மாறும் காலம் எப்படி ஏழைகளை தாக்குகிறது என்பதை மிகவும் கரிசனத்துடன் சித்தரித்திருக்கிறார். எழுதப்படாத ஒப்பந்தங்கள் எப்படி பணபலத்துடன் மீறப்படுகின்றன என்பதையும், அவைகள் மீறப்படும்பொழுது அரசு எளியவர்களுக்கு எதிராகவே நிற்பதையும் குர்தயால் சிங் தெளிவுப்படுத்துகிறார்.

குர்தயால் சிங் குடும்ப காரணங்களால் பன்னிரெண்டு வயதிலேயே தச்சு வேலை செய்ய ஆரம்பித்தார். ஆனால் அவர் மனது முழுவதும் படிப்பதில் இருந்தது. பல வேலைகளை செய்து கொண்டே அவர் படிப்பை தொடர்ந்து எம்.ஏ. பட்டம் பெற்றார். அவருடைய நாவல் சாகித்ய அகாடெமி விருது  பெற்றிருக்கிறது. அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ  விருது வழங்கியது. ஞானபீடம் விருதும் அளிக்கப்பட்டது. 1933 இல் பிறந்த அவர் 2016 வருடம் மறைந்தார்.

அவருடைய ‘பர்ஸா’,‘Last Flicker’ மற்றும் ‘Handful of Sand’ என்று மூன்று புத்தகங்கள் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் நேஷனல் புக் டிரஸ்ட்டில் கிடைக்கின்றன. ‘அந்தே கோடே த தான்’ ‘In the name of blind horse’ என்ற பெயரில் ராணா நய்யரால் மொழிபெயர்க்கப்பட்டு அமேஜானில் கிடைக்கிறது. ‘அன்ஹோயி’ மற்றும் ‘அத் சாந்த்நி ராத்’ என்னும் நாவல்கள் ராணா நய்யரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இப்பொழுது கிடைப்பதில்லை. யாரும் அவற்றை மறுபிரசுரம் செய்யவில்லை.

ஏழை எளியவர்களை பற்றியும், அவர்களுக்கும் அரசுக்குமான உறவை பற்றியும் அதே சமயம் தனி மனித உணர்வுகளை பற்றியும், குடும்ப சிக்கல்களை பற்றியும் எழுதி ஒட்டுமொத்த பார்வையை அளித்த குர்தயால் சிங் நம் நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று எனக்கு எந்த  சந்தேகமும் இல்லை. நம் நாட்டில் பல எழுத்தாளர்களுக்கு நிகழ்வதுதான் அவருக்கும் நிகழ்கிறது- அவரைப் பற்றி பஞ்சாபுக்கு வெளியே அதிகம் நபர்களுக்கு தெரிவதில்லை. நல்ல இலக்கியம் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குர்தயால் சிங்கை படித்திருக்காமல் இருக்கக் கூடாது.

 

 

புதுயுகம்

எஸ். சுரேஷ் 

சிவசுப்ரமணியம் உரக்கச் சிரித்தார். என்னாச்சு உங்களுக்கு என்று கேட்ட மனைவி சீதாவிடம், அனுஷா என் ரிக்வெஸ்ட் ஆக்ஸெப்ட் செஞ்சிட்டா என்றார். எப்படி? நான் ஒரு ஃபேக் ஐடி உருவாக்கினேன். அந்த ஐடிலிருந்து ரிக்வெஸ்ட் அனுப்பிச்சேன். அவ ஆக்ஸெப்ட் செஞ்சிட்டா. எதுக்குங்க நம்ம பிள்ளைய நாம வேவு பாக்கணும்? உனக்கு இந்த புதுயுகத்தப் பத்தி ஒண்ணும் தெரியாது. நம்ம காலத்துல பசங்க பேரண்ட்ஸ்வீட்லையே இருந்து படிச்சு வேலைக்கு போனாங்க. அவங்க என்ன செய்யராங்கன்னு ஓரளவுக்கு தெரியும். நல்லது கெட்டது சொல்ல முடிஞ்சிது. இப்போ பார். நம்ம பெண் காலேஜுக்கு கான்பூர் போனா, மேல்படிப்புக்கு அமெரிக்க போனா. இப்போ பெங்களூர்ல வேல பண்றா. அவளப் பத்தி நமக்கு ஒண்ணும் தெரியல. சோசியல் மீடியா வழியாதான் அவ என்ன பண்றான்னு தெரிஞ்சிக்கணும். எனக்கு என்னமோ இது சரின்னு படலைங்க. உங்க வேலைக்கு நடுவுல இது எதுக்கு?. நீ கவலப்படாத. நான் பாத்துக்கறேன். அவர் ஒரு பெரிய கம்பெனியில் சீ.எஃப்.ஓவாக இருந்தார். மும்பை மெரின் ட்ரைவில் பல்லடுக்கு குடியிருப்பில் – அரபிக்கடலைப் பார்க்க தோதாக – பத்தாவது மாடியில் கம்பெனி ஃப்ளாட்டில் குடியிருந்தார். அவர் மகள் அனுஷா கான்பூர் ஐ.ஐ.டியில் படிப்பு முடித்து, அமெரிக்காவில் எம்.பி.ஏ பட்டம் பெற்று, பெங்களூரில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருக்கிறாள். அவளுக்கு முப்பது வயதாகியும் இன்னும் திருமணமாகாமல் இருப்பது பெற்றோருக்கு கவலையாக இருந்தது.

தினமும் காலையில் எழுந்தவுடன் பல் தேய்த்துவிட்டு கையில் காஃபி கோப்பையுடன் அரபிக்கடலைப் பார்க்கும் சிவசுப்ரமணியம் இப்பொழுது காஃபி கோப்பையுடன் மொபைலைப் பார்க்க ஆரம்பித்தார். ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என்று எல்லா இடத்திலும் ஒரு பெண்ணின் பெயரில் ஃபேக் ஐடி தயார் செய்து அனுஷாவைப் பின் தொடர ஆரம்பித்தார். அனுஷா இன்ஸ்டாக்ராமில் அதிகம் போஸ்ட் செய்வதால், முதலில் இன்ஸ்டாக்ராமைப் பார்க்க ஆரம்பித்தார். அவள் போஸ்ட் செய்யும் புகைப்படங்களை பார்த்தார். அவற்றுக்கு யாரெல்லாம் லைக் போடுகிறார்கள் என்று பார்த்தார். யாரெல்லாம் கமெண்ட் எழுதுகிறார்கள் என்று பார்த்தார். யாருடன் அனுஷா அதிகமாக உரையாடுகிறாள் என்பதை கூர்ந்து நோக்கினார். ஆண்கள் யாருடனாவது அவள் உரையாடினால் அவன் இன்ஸ்டாக்ராம் பேஜுக்கு சென்று அவன் எப்படிப்பட்டவன் என்பதை பார்த்தார். இவை எல்லாம் செய்ய அவருக்கு தினமும் காலையில் ஒரு மணி நேரம் தேவைப்பட்டது. இந்தப் பழக்கம் மெதுவாக இரவிலும் தொடர்ந்தது.  இரவிலும் ஒரு மணி நேரம் இதற்காக செலவிட்டார். உங்களுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு என்று சொன்ன சீதாவை பார்த்து நாளைக்கு சன்டே. நான் என்ன கண்டுபிடிச்சிருக்கேன்னு சொல்றேன். நீ அசந்துபோயிடுவ.

அடுத்த நாள் மதிய உணவிற்கு பிறகு, சோஃபாவில் சீதாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, மொபைலை கையிலெடுத்தார். இன்ஸ்டாக்ராம் ஓபன் செய்து அனுஷாவின் பேஜுக்கு சென்றார். அனுஷா எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருந்த படங்களை ஒவ்வொன்றாக காண்பிக்க ஆரம்பித்தார். பல படங்களில் அனுஷா தனியாக இருந்தாள். #ootd என்று ஏதோ எழுதியிருந்தது. இது நேஹாதானே? ஆமாம். பல படங்களில் நேஹாவும் கூட இருந்தாள். நேஹா அனுஷாவின் நெருங்கிய தோழி. இருவரும் முதல் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்தவர்கள். அவளும் கான்பூர் ஐ.ஐ.டியில் படித்தாள். பிறகு அவளும் அமெரிக்கா சென்று படித்துவிட்டு இப்பொழுது பெங்களூரில் அனுஷாவின் ரூம்மேட்டாக இருக்கிறாள்.சீதா பார்த்த அந்த படத்தில் அனுஷா குட்டை முடியுடன் ஜீன்ஸ் மற்றும் டீ-ஷர்ட்டில் காணப்பட்டாள். நேஹா அடர்த்தியான தலைமுடியுடன் சல்வாரில் இருந்தாள். நம்ப பொண்ணும் நேஹா போல் முடி வளர்த்து நல்ல டிரஸ் போடலாம் எதுக்கு இது போல் டிரஸ் செய்யணும்? நேஹா முக்கியமில்லை. நான் இப்போ உனக்கு காமிக்கப் போற ஃபோட்டோதான் முக்கியம்.அவர் அனுஷா-நேஹா படத்தைத் தள்ளினார். அடுத்த படம் வந்தது. அதில் அனுஷா ஒரு ஆணின் தோளின் மேல் கை போட்டு நின்றுகொண்டிருந்தாள். அவன் பார்ப்பதற்கு அழகாக இருந்தான். கண்ணாடி போட்ட உருண்டை முகம், அடர்த்தியான சுருள் தலைமயிர். நீல வண்ணத்தில் டீ ஷர்ட். இருவரும் ஒரு மோட்டார்பைக் மேல் சாய்ந்து கொண்டிருந்தார்கள். யாருங்க இந்தபிள்ள? சிவசுப்ரமணியம் சிரித்தார். இதுக்கு தான் நான் வேவு பாக்குறேன். இந்த பிள்ள பேரு சுதீர். அவன் ஒரு கூர்கி. அப்படின்னா? கர்நாடகாவில இருக்கற கூர்க் மாவட்டத்திலேர்ந்து வரான். நல்ல வசதியான குடும்பம். ஏக்கர் கணக்குல அவங்களுக்கு காஃபி எஸ்டேட் இருக்கு. இவன் அவங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ள. எல்லா சொத்தும் இவனுக்குதான். இந்த கணக்கு பாக்கற புத்தி உங்களவிட்டு போகாது. நம்ம பெண் இவன லவ் பண்ணுதா?இங்க பார் இந்த ஃபோட்டோ கீழ என்ன எழுதியிருக்கான்னு. ‘#MyClosestCompanion” லவ் இல்லைனா மிக நெருக்கமான நண்பன்ணு சொல்லுவாளா? அவங்க போஸ் பாத்தாலே அவங்க லவ்வர்ஸ்தான்னு உனக்கு தெரியலையா? ஏங்க, நம்ம பக்கம் ஆளுங்க பார்த்தா ஏதாவது சொல்லப்போராங்க. அதுக்குத்தான் அவ ப்ரோஃபைல் லாக் செஞ்சிருக்கா. என்ன தவிர யாருக்கும் தெரியாது விடு. இவனதான் கல்யாணம் கட்டிப்பாளா? எனக்கு என்ன தெரியும் ஆனா அவ இவன கட்டிக்கிறதா இருந்தா எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. என்னங்க அப்படி சொல்றீங்க. நம்ப மனுஷங்க என்ன சொல்லுவாங்க. அவங்க ஜாதி என்ன. அவங்க பழக்க வழக்கம் என்ன. எப்படிங்க அப்டி ஒண்ணுமே தெரியாம ஒத்துக்க முடியும்? சீதா, காலம் மாறிப்போச்சு. இப்போ நம்ப பிள்ளைங்க கல்யாணம் கட்டிட்டா போதும்ன்னு எல்லாரும் இருக்காங்க. பாக்க அழகா இருக்கான். நல்ல பணக்கார குடும்பம். நல்லா படிச்சிருக்கான். அனுஷாவுக்கு அவன பிடிச்சிருக்கு. இதுக்கு மேல என்ன வேணும். சீதா மௌனமானாள். சிவசுப்ரமணியம் ஒவ்வொரு படமாக தள்ளிக்கொண்டு வந்தார். பல படங்களில் அனுஷாவும் சுதீரும் இணைந்திருந்தார்கள். இணக்கமாகவும் இருந்தார்கள். அனுஷா மற்றும் சுதீர் இருக்கும் படங்களை மட்டுமே பார்த்தார்கள். மற்ற படங்களை எல்லாம் அவர்கள் அதிகம் கவனிக்கவில்லை.

இப்பொழுதெல்லாம் தினமும் இரவில் ஒரு அரை மணி நேரம் அனுஷா வலையேற்றும் படங்களைசிவசுப்ரமணியன் சீதாவுக்கு காட்டுகிறார். பல நாட்கள் அனுஷா தனியாகவோ, நேஹாவுடனோ இருக்கும் படங்கள் வருகின்றன. சில நாட்கள் சுதீரும் வருகிறான். அவன் வரும் படங்களிலெல்லாம் அனுஷா அவன் தோல் மேல் கை போட்டபடி நிற்கிறாள். என்னங்க நாம சைவம், அந்த பிள்ள அசைவமா இருந்தா? இருந்தா என்ன? அவன் கூர்கி. அசைவமாதான் இருப்பான். இந்த காலத்துல எல்லோரும் அசைவம் சாப்பிடராங்க. இதெல்லாம் பெருசா எடுத்துக்கக் கூடாது. சிவசுப்ரமணியம் படத்தை நகர்த்தினார். அடுத்த படத்தில் அனுஷா, நேஹா, சுதீர் மற்றும் வேறொரு ஆண் இருந்தார்கள். அனுஷாவின் தோளில் நேஹா சாய்ந்திருந்தாள், நேஹா சுதீர் தோளில் சாய்ந்திருந்தாள். சுதீர் அருகில் இருந்த ஆணின் தோளில் கையை போட்டுக்கொண்டிருந்தான். எல்லோரும் வலது கையை நீட்டி வெற்றி சைகையை காட்டிக்கொண்டிருந்தனர். எல்லோர் முன்னேயும் அவர்கள் சாப்பிடும் பண்டம் இருந்தது. சீதா இதை பார்ப்பதை பார்த்த சிவசுப்ரமணியம் சுதீர் முன் இருந்த திண்பண்டத்தை கவனித்தார். பின்பு படத்தின் கீழே என்ன எழுதியிருக்கிறது என்பதை படித்தார். “எஞ்ஜாயிங்க் மை பந்தி கறி”. போர்க். பன்றிக்கறி!! சிவசுப்ரமணியம் இதை எதிர்ப்பார்க்கவில்லை. சீதாவின் முகம் மாறி இருப்பதை கவனித்து, ஏதோ சொல்ல வாயெடுத்தார் ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. சீதாவின் முகத்தில் அவருக்கு புரியாத உணர்ச்சி ஒன்று குடிகொண்டிருந்தது. சீதா மெல்லிய குரலில் சொன்னாள் இது நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராதுங்க. அவள் குரலை கேட்டவுடன் சிவசுப்ரமணியமுக்கு பயம் எடுத்தது. மௌனமாக இருந்தார்.

அன்று இரவு அவருக்கு தூக்கம் வரவில்லை. சீதாவின் குரல் அவர் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. ஏசி ரீங்காரமும், கடிகாரத்தில் முள் நகரும் ஓசையும் இரவின் மௌனத்தில் துல்லியமாக அவருக்கு கேட்டன. விட்டத்தை முறைத்து பார்த்தார். சீதா ஏன் இப்படி பயப்படுகிறாள்? அவள் தம்பி, இப்பொழுது அமெரிக்காவில் வசிக்கிறான், மாட்டுக்கறி தின்கிறான். அது சீதாவுக்கு தெரியாது. அவன் இந்தியா வரும்பொழுது வெறும் சைவம்தான் சாப்பிடுவான். அமெரிக்காவில் அவன் சாப்பிடாத ஜந்து இல்லை. இப்பொழுது இந்த பிள்ளை பன்னிக்கறி சாப்பிட்டால் என்ன தவறு? சீதாவுக்கு இந்த புதிய உலகம் புரியவில்லை. இளைஞர்கள் எப்படி இருப்பார்கள், எப்படி ஒருவருடன் ஒருவர் பழகுகிறார்கள், அவர்களில் லட்சியம் என்ன? ஆசைகள் என்ன? இவை எதுவும் சீதாவுக்கு தெரியாது. அவள் உலகம் மாறவில்லை என்ற நினைப்பில் இருக்கிறாள். வெறும் வார இதழ்களை படித்துக்கொண்டும், சீரியல் பார்த்துக்கொண்டும் இருந்தால் இந்த புது உலகம் புரியாது. இதற்கு நாமும் நம் பிள்ளைகளைப் போல் சோசியல் மீடியாவில் சேர வேண்டும். நான் அதை செய்கிறேன். என்னால் அனுஷாவின் முடிவை ஏற்றுக்கொள்ளமுடிகிறது. சீதாவால் முடியவில்லை. அவளை எப்படியாவது சமாதானப்படுத்தவேண்டும்.

அடுத்த நாள் முதல் சீதா படங்களை பார்க்க மறுத்தாள். எனக்கு வேணாங்க என்றாள். சிவசுப்ரமணியம் சுதீரை தினமும் உற்றுப்பார்தார். பிள்ளை அழகாகதான் இருக்கிறான். நல்ல சுருள் முடி,ஆப்பிள் போல் சிவப்பு, ஸ்டைலிஷ் உடை உடுத்துகிறான், முகத்தில் எப்பொழுதும் ஒரு புன்னகை தவழ்கிறது. இவனை எதற்கு மறுக்க வேண்டும். எவ்வளவோ உறவுக்கார பிள்ளைகள் வேறு ஜாதியில் திருமணம் செய்து கொள்ளவில்லையா? ஒருத்தி முஸ்லிமை கல்யாணம் கட்டியிருக்கிறாள். நாம் ஏன் இதற்கு பயப்படவேண்டும். சிவசுப்ரமணியம் சீதாவின் மனதை மாற்றப் பார்த்தார் ஆனால் சீதாவோ ஐயோ. உங்களுக்கு இதெல்லாம் புரியாதுங்க என்றாள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கும் அவள் இப்பொழுதெல்லாம் இறுக்கமானமுகத்துடன் காணப்பட்டாள். சிரிப்பதையே மறந்துவிட்டிருந்தாள். அனுஷாவுடன் பேசும்பொழுதும் அவள் குரல் தீனமாக ஒலித்தது. அம்மாவுக்கு என்ன? ஏன் டல்லா இருக்காங்க? உன்னை பற்றி கவலைதான். அனுஷா அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை.

இரண்டு வாரங்கள் கழித்து அனுஷா, நேஹா, சுதீர் மற்றும் சில நண்பர்கள் சுதீரின் காஃபி எஸ்டேட்டுக்கு சென்று அங்கு ஐந்து நாட்கள் தங்கினார்கள். தினமும் அனுஷா, நேஹா, சுதீர் ஆகியோர் படங்களை இன்ஸ்டாக்ராமில் வலையேற்றினார்கள். சிவசுப்ரமணியம் தினமும் எல்லாவற்றையும் பார்த்தார். இந்த ட்ரிப்பில் அனுஷாவுக்கும் சுதீருக்குமான நெருக்கம் அதிகமானது போல் அவருக்குப் பட்டது. அதிகாலை வேளையில், இலைகள் நடுவிலிருந்து ஊடுருவி வரும் சூரிய கிரணங்கள் அவர்கள் மேல் விழ, இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். வேறொரு இடத்தில் ரோஜா செடிகள் சூழ இருவரும் நடுவில் நின்றுகொண்டு போஸ் கொடுத்தார்கள். இப்படியாக பல புகைப்படங்கள் இருந்தன. எதையும் சீதா பார்க்க மறுத்தாள்.

இந்த ட்ரிப் முடிந்தவுடன் அனுஷா பெங்களூரு சென்றுவிட்டாள், நேஹா மும்பைக்கு வந்தாள். வந்த முதல் நாளே இவர்கள் வீட்டுக்கு வந்தாள். இவர்கள் வீட்டில் வளர்ந்த பெண் என்பதால் உரிமையுடன் சீதாவிடம், ஆண்ட்டி, ஒரு டீ. சுதீர் எஸ்டேட்ல காஃபி குடிச்சி குடிச்சி போர் அடிச்சிடிச்சி. சிவசுப்ரமணியம் அவளுடன் பேச ஆரம்பித்தார். ஃபுல் எஞ்சாய்மெண்டா? எஸ் அங்கிள். அவன் எஸ்டேட் குட்டான்னு ஒரு எடத்துல இருக்கு. பெரிய எஸ்டேட். அருமையான எஸ்டேட். நானும் அனுஷாவும் எஸ்டேட்ட சுத்தி பாத்து ஷாக் ஆயிட்டோம். விதவிதமான மரங்கள். வனிலா இருக்கு, ஆரஞ்சு இருக்கு,பாக்கு மரம் இருக்கு, பெப்பர் இருக்கு. தென்னை, வாழையெல்லாம் கேக்கவே வேணாம். எவ்வளவோ விதமான பூக்கள். தினமும் காலைல பாக்கணுமே அங்கிள். இங்கேல்லாம் பாக்கவே முடியாத பறவைகள் எவ்வளவோ வருது. நானும் அனுஷாவும் தினமும் காலைல அஞ்சு மணிக்கே எழுந்து, குளிச்சு, பறவைகளைப் பாக்க வெளியே வந்திடுவோம். காலைல அந்த பனில நாங்க ரெண்டும் பேரும் நடந்து போவோம். அது ஒரு டிவைன் எக்ஸ்பீரியன்ஸ் அங்கிள். எஸ்டேட் முதல் முறையாக பார்த்திருப்பாள் போல். அந்த மகிழ்ச்சி அவள் பேச்சில் தெரிகிறது என்று நினைத்துக்கொண்ட சிவசுப்ரமணியம் இஸ் சுதீர் எ குட் பாய்?என்று கேட்டார். ரொம்ப நல்லவன் அங்கிள். நானும், அனுஷாவும் ஏதாவது அட்வைஸ் கேக்கணும்னா அவன் கிட்டதான் போவோம். வெரி நான்-ஜட்ஜ்மெண்டல். அப்பொழுது சீதா டீயுடன் வந்தாள். அவளுக்கு நான்-ஜட்ஜ்மெண்டல்என்றால் என்ன என்று தெரிந்திருக்காது என்று சிவசுப்ரமணியம் அவன் யாரை பற்றியும் எந்த முன்முடிவும் எடுக்கமாட்டானாம். அவங்க அவங்க அவங்களுக்கு பிடித்ததை செய்யட்டும் என்று விட்டுவிடுவானம் என்று நீண்ட உரை ஒன்றை கொடுத்தார். சீதா தலையசைத்தாள். ஆண்ட்டி, டீ சூப்பரா இருக்கு. சீதா கஷ்டப்பட்டு சிரிப்பது போல் சிவசுப்ரமணியமுக்கு பட்டது. சோஃபாவில் நன்றாக சாய்ந்துகொண்டு சுதீர் பற்றியும், அவளும் அனுஷாவும் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை பற்றியும் விரிவாக நேஹா சொல்லிக்கொண்டிருந்தாள். குட்டாலிருந்து அஞ்சு  கிலோமீட்டர் தூரத்துல வயநாடு. அது கேரளால இருக்கு. அங்கே பூக்கோடு லேக்ல நானும் அனுஷாவும் ரோ செஞ்சிட்டு போட்ல போனோம். எல்லோருமா திருநெல்லி கோவிலுக்கு போனோம். வழியில மூணு பெரிய யானை பார்த்தோம். கண் விரிய சொல்லிக்கொண்டிருந்தாள். சுதீர் நான்-வெஜ் சாபிடுவானா? உரக்கச் சிரித்தாள். அங்கிள், அவனால நான்-வெஜ் இல்லாம ஒரு நாள் கூட இருக்க முடியாது. பந்தி கறி அவனோட ஃபெவரிட். மதியம் இங்க சாப்பிடு. வேணாம் ஆண்ட்டி. நான் இன்னொரு ஃப்ரெண்ட்ட பாக்கணும். நாளைக்கு முடிஞ்சா  வரேன். இல்லைனா பை. அவள் சென்ற பிறகு அவர் சீதாவை பார்த்தார். அவள் முகம் இன்னும் அதிகம் இறுகியிருந்தது போல் அவருக்கு பட்டது. பிள்ள நல்ல பிள்ளைதான் போல் இருக்கு என்று சொன்னார். சீதா ஏதும் பதிலளிக்காமல் சமையலறைக்குள் சென்றாள்.

நானும் சுதீரும் அடுத்த வாரம் முன்பைக்கு வரப்போறோம். உங்களோட பேசணும். என்ன பேசணும். வந்து சொல்றேன். ஏர்போர்ட்டுக்கு கார் அனுப்பவா? வேணாம். நாங்க டாக்ஸி புடிச்சு வறோம். செய்தியை கேட்டவுடன் சீதா ஆழ ஆரம்பித்தாள். இதை எதிர்பார்க்காத சிவசுப்ரமணியம் அதிர்ச்சி அடைந்தார். இத பாரு. என் பொண்ணுக்கு யார பிடிக்குதோ அவங்களுக்கு கல்யாணம் கட்டிக்கொடுப்பேன். யார் என்ன சொன்னாலும் எனக்கு பரவாயில்லை. சீதா தலையை இல்லை என்பது போல் ஆட்டினாள். இல்லைங்க. இது சரிப்பட்டு வராது. நீங்க புரிஞ்சிக்கமாட்டீங்க. எனக்கு எல்லாம் தெரியும். உன் அழுகையை நிறுத்து. சிவசுப்ரமணியம் மாடியிலிருந்து அபார்ட்மெண்டு கேட்டை பார்த்துக்கொண்டிருந்தார். அனுஷா எந்த நிமிடமும் வரலாம். வாசலில் ஏதாவது வண்டி வந்து நின்றாலே அவருக்கு உற்சாகம் கூடியது. அனுஷா தான் காதலை பற்றி சொல்லப்போகிறாள். அவளுக்கு டென்ஷன் அதிகம் இருக்கும். நான் சரி என்றவுடன் அவள் குஷியில் சிரிப்பாள். அந்த சிரிப்பை பார்க்கவேண்டும். தன் அப்பா இந்த காலத்துக்கு தகுந்தாற்போல் மாறிவிட்டார் என்று அவள் உணர்வாள். அப்பா மேல் அன்பும் மரியாதையும் கூடும். சீதா தான் அழுவாள். சுதீர் முன் அவள் அழுதால் அவன் என்ன நினைத்துக்கொள்வான். சமாளிக்கலாம்.

அரை மணி நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்த பிறகு அவர் எதிர்பார்த்த நிகழ்வு நடந்தது. அனுஷாவும் சுதீரும் டாக்ஸியைவிட்டு இறங்கினார்கள். இரண்டு அடி எடுத்து வைத்த பிறகு அனுஷா சட்டென்று நின்றுவிட்டாள். வேணாம் என்பது போல் தலையை ஆட்டினாள். அவள் அருகே சென்ற சுதீர் அவள் கையை பற்றிக்கொண்டான். அனுஷா அவன் தோல் மேல் சாய்ந்தாள். அவன் அவள் காதில் ஏதோ சொன்னான். சரி என்பது போல் தலையை ஆட்டிவிட்டு அவன் கைகளை அவள் இறுக்கமாக பற்றிக்கொள்ள இருவரும் மறுபடியும் நடக்க ஆரம்பித்தனர். சிவசுப்ரமணியம் லிப்ட் இருக்கும் இடத்தில் நின்றார். கதவு திறந்தவுடன் அவரைக் கண்ட அனுஷா, ஹாய் டாட் என்றாள் ஆனால் முகத்தில் மகிழ்ச்சி இல்லாதது சிவசுப்ரமணியனுக்கு வருத்தம் அளித்தது.. மீட் சுதீர். ஹலோ அங்கிள். ஹலோ. கம் இன். எல்லோரும் வீட்டுக்குள் நுழைந்து சோஃபாவில் உட்கார்ந்தார்கள். டிவியில் ஏதோ ப்ரோக்ராம் ஓடிக்கொண்டிருந்தது. டிவியை அணைத்தார். அம்மா எங்க? சமையலறையில் இருக்கா. வருவா. சரி ஏதோ பேசணும்னு சொன்னியே? ஆமாம் டாட் என்று சொல்லிவிட்டு சுதீரைப் பார்த்தாள். சிவசுப்ரமணியத்திற்கு சிரிப்பு வந்தது. நான் எப்படியும் சரியென்று சொல்லப்போகிறேன். இவள் ஏன் தவிக்கிறாள்? பயப்படாமல் சொல்ல வேண்டியதை சொல் என்று சுதீர் ஆங்கிலத்தில் அவளிடம் சொன்னான். சமையலறையிலிருந்து அழுகை சத்தம் கேட்டது. சிவசுப்ரமணியம் அந்த திசையை நோக்கி முறைத்தார். அனுஷா சுதீர் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு, நான் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருக்கேன். சிவசுப்ரமணியம் புகத்தில் புன்னகை மலர்ந்தது. தலையை குனிந்தவாறு, நான் நேஹாவ… சமையலறையில் அழுகை சத்தம் வலுப்பெற்றதை அவர் கவனிக்கவில்லை.

கணவாய்ப் பாதை

எஸ். சுரேஷ் 

பின்-பார்வதி கணவாய்ப் பாதை தன்னை அழைப்பது போல் அவளுக்கு தோன்றியது. பௌர்ணமி இரவில் வானெங்கும் நட்சத்திரங்கள் அமைதியான நதி போல் நகர்ந்து கொண்டிருந்தன. பாறை மேல் மோதி மேலெழும் பார்வதி நதியின் நீர்த்திவலைகள் நிலவொளியில் பளபளத்தன. வைர விண்மீன்களுக்கு மத்தியில் முத்துபோல் பௌர்ணமி நிலவு ஜொலித்துக் கொண்டிருந்தது. குளிர்க்காற்று அவளைத் தழுவி, ஊடுருவிச் சென்றது. இரு பனிச்சிகரங்களுக்கு இடையில் வெண்பனிக் கம்பளம் விரித்தது போல் நீளும் பின்-பார்வதி பாஸ் தெளிவாக புலப்பட்டது. தான் ஒரு மாய உலகத்துக்குள் நுழைந்துவிட்டோம் என்று அவளுக்கு தோன்றியது.

கணவாய் வழியை உற்று நோக்கிக் கொண்டிருந்த அவளைப் பார்த்து அவன் சிரித்தான். நாளை காலை நாம் பாஸை தாண்டியிருப்போம். அவன் பேசும்போது முகத்தையே அபரிதமான அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் மேல் இருந்த காதல் சூழலின் காரணத்தினால் பன்மடங்கு அதிகரித்திருந்தது.

ஜாக்கெட்- யெஸ், ஷூஸ்- யெஸ், வாக்கிங் ஸ்டிக்- யெஸ், காகில்ஸ்- யெஸ், சாக்ஸ்- யெஸ், டார்ச்- யெஸ், பேட்டரி- யெஸ், போஞ்சோ- யெஸ், வாட்டர் பாட்டில்- யெஸ், காப்- யெஸ். அவன் ஒவ்வொன்றாகச் சொல்ல, அவை எல்லாம் வாங்கியாயிற்றா என்று அவள் சரிபார்த்தாள். அதன் பின், மைசூர் ரோட்டில் டெய்கத்தலன் கடையிலிருந்து கிளம்பி ஜயநகர் தர்ட்வேவ் காஃபி ஷாப்பில், மங்கிய ஒளியில் அவளுக்கு அவன் ப்ரபோஸ் செய்தபோது அந்தக் கடையில் யாரும் இல்லை. சந்திப்பொழுது இரவாக மாறும் தருணம். வீடு திரும்பும் பறவைகளில் ஓசை. அதற்கு தோதாக வாகனங்களின் ஒலிக்கு நடுவே மெல்லிய குரலில், “உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. நீ சரி என்றால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம்.”

அவளுக்கும் அவனை பிடித்திருந்தது. இரண்டு வருடங்களாக அவனுடன் பழகுகிறாள். உத்தரகண்ட்டில் வேலி ஒஃப் ஃபிளவர்ஸ் டிரெக் சென்றபோது அவனை முதல் முறையாக சந்தித்தாள். அந்தச் சந்திப்பு பெங்களூரில் நட்பாக மாறியது. இருவரும் ஒன்றாக காலை வேளையில்   எக்ஸ்சர்சைஸ்  செய்ய ஆரம்பித்தனர். ஜயநகர் பஸ் நிலயத்தில் சந்தித்து, கிருஷ்ணா ராவ் பார்க் வழியாக லால் பாக் வெளிச்சுவரைச் சுற்றி ஓடினர். வார தினங்களில் ஐந்து கிலோமீட்டரும், வார இறுதியில் இருபது கிலோமீட்டரும் ஓடினர். தினமும் ஜெயநகரில் ஒரு ஜிம்மில் ஒரு மணி நேரம் கழித்தனர். இருவருக்கும் ஒரே வகையான உடல்வாகு. ஒல்லியான தேகம், முறுக்கேறிய கால்கள், நீள முகம், மாநிறம், உடம்பில் கொழுப்புக்கு இடமில்லை. டிராக் பாண்ட், டீ ஷர்ட்-  அவன் கை வைத்தது, அவள் கை வைக்காதது- நைக்கி ஷூஸ், கையில் ஃபிட் பிட், காதில் ஹெட்போன் என்று சீருடை உடுத்தியது போல் இருவரும் ஓடினர். சில நாட்களில் இரவு சந்தித்து டின்னர் செய்தனர். அவளுக்கு அவன் கேட்ட உடனே, யெஸ் உன்னை நானும் காதலிக்கிறேன், என்று சொல்லிவிட வேண்டும் போல் இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது. அவள் மனம் மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருந்தது, உடம்பெல்லாம் விவரிக்க முடியாத உணர்வு. அவனை உடனே கட்டிக்கொள்ள வேண்டும் என்று மனம் பரபரத்தது. தன்னை வெளியே விடப் போகிறார்கள் என்று கதவை திறந்ததும் அறிந்து கொண்ட நாய் குதிப்பது போல் அவள் மனம் குதித்தது. ஒரு சிறு புன்னகையுடன், “எஸ்” என்று சொன்னாள். நாம் வீட்டில் எப்பொழுது சொல்வது. டிரெக்கிலிருந்து திரும்பி வந்தவுடன் சொல்லிவிடலாம்.

அன்று இரவு முழுவதும் அவள் தூங்கவில்லை. இப்பொழுது அவளுக்கு ஒரு துணைவன் கிடைத்துவிட்டான். இதுவரையில் இருந்த பயம் இனி தேவையில்லை. இந்த முறை அவள் உச்சத்தை நிச்சயம் தொடுவாள். அவன் என்னுடன் கைகோர்த்து உச்சியில் நிற்பான். உன்னை அலுவலகத்தில் ஃபின்லேண்ட் போகச் சொன்னார்கள். சென்றிருந்தால் இன்று நீயும் பெரிய பதவியில் இருந்திருப்பாய். பிறகு சென்னை சென்று ப்ராஜக்ட் தலைமை பதவி ஏற்கச் சொன்னார்கள். அதையும் உன் பயத்தால் மறுத்தாய். எவ்வளவு நாள்தான் உயரங்களைக் கண்டு அஞ்சுவாய்? நாம் பார்வதி பள்ளத்தாக்கில் இருக்கிறோம். பின்-பார்வதி கணவாய் வழி தாண்டிவிட்டால் நாம் ஸ்பிதியில் உள்ள பின் பள்ளத்தாக்கை அடைவோம். இந்த பக்கம் பார்வதி நதி ஓடுகிறது, அந்த பக்கம் பின் நதி. குலு மாவட்டத்திலிருந்து ஸ்பிதி மாவட்டம் செல்லப் போகிறோம். நாம் நாளைக்கு டிரெக் ஆரம்பிப்போம். எட்டாவது நாள் பின்-பார்வதி பாஸ் கடப்போம். ஒன்பதாவது நாள் முத் என்ற கிராமத்தை அடைந்து அங்கிருந்து காஜா செல்வோம். பிறகு நீங்கள் பஸ் பிடித்து குஞ்சும் பாஸ் வழியாக மணாலி செல்வீர்கள். பின்-பார்வதி பாஸ் 17500 அடி உயரத்தில் உள்ளது. அந்த உயரத்தில் ஆக்ஸிஜென் கம்மியாக இருப்பதால் உங்களுக்கு மூச்சிரைக்கும். இது கடினமான டிரெக். இதை மேற்கொள்ள உடம்பில் தெம்பு வேண்டும்.

கைடு டிரெக் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான். அவனும் அவளும் முதுகில் இருபத்தைந்து கிலோ கனக்கும் பையை சுமந்துக்கொண்டு இருபது கிலோமீட்டர் ஓட்டப்பயிற்சி எடுத்தது ஞாபகம் வந்தது.

நீங்கள் இருவரும் ஃபிட்டாக இருக்கிறீர்கள். உங்களால் இந்த டிரெக்கை சுலபமாக முடிக்க முடியும்.

அவள் முகத்தில் பெருமிதம் பரவியது.

ஷூஸ்- யெஸ், வாக்கிங் ஸ்டிக்- யெஸ், போஞ்சோ- யெஸ். இந்த முறை கசொல் என்னும் இடத்தில் கைடு இந்த கேள்விகளை கேட்க இருவரும் யெஸ் என்று பதில் சொன்னார்கள். இவர்கள் இருவருடன், ஒரு கைடு மற்றும் இரு போர்டர்கள் நடந்தார்கள். போர்ட்டர்கள் இவர்கள் சாமானையும், வழியில் சமைக்க வேண்டிய அடுப்பு மற்றும் பண்டங்களையும் சுமந்து கொண்டு வந்தார்கள். இவர்கள் கிளம்பும்பொழுது இன்னொரு குழுவும் கிளம்பியது. அதில் இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண். அந்த பெண் சற்று பருமனாக இருப்பது போல் இவளுக்கு தோன்றியது. தினமும் உடற்பயிற்சி செய்பவள் போல் தோன்றவில்லை. அவளைப் பார்த்த கைடு இந்த உடம்பை வைத்துக்கொண்டு இவளால் பின்-பார்வதி பாஸ் கடக்க முடியாது என்றான். அந்த மூவரும் உற்சாகமாக இருந்தார்கள்.

முதல் நாள் பயணம் அதிகம் சிரமமில்லாமல் நிகழ்ந்தது. மாலை பார்வதி நதிக்கரையில் எல்லோரும் சேர்ந்து டெண்ட் போட்டார்கள். இவள் ஒரு டெண்டிலும் அவன் ஒரு டெண்டிலும், இன்னொரு பெரிய டெண்டில் கைடு மற்றும் போர்டர்கள் தங்கினர். முதலில் அந்த பெரிய டெண்டில் டீ போட்டு எல்லோரும் குடித்தார்கள். நாம் சட்டென்று உறங்கப் போகக்கூடாது. சற்று நேரம் உடற் பயிற்சி செய்வோம் என்று கைடு சொன்னான். புளூடூத் ஸ்பீக்கரில் பாடவிட்டு இருவரும் கைடுடன் சேர்ந்து பாட்டின் தாளகதியில் உடற்பயிற்சி செய்தனர். வேறொரு குழுவில் வந்த மூவரும் ஏதோ ஹிந்தி பாட்டுக்கு நடனம் ஆடினர். இரவு சப்பாத்தியும் உருளைக்கிழங்கு பொரியலும் சாப்பிட்டுவிட்டு இருவரும் பாறை மேல் உட்கார்ந்து சூழ்ந்திருந்த மலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில்லென்று குளிர்க்காற்று வீசியது. நதி நிலவொளியில் பளபளத்தது. பூச்சிகளின் குரலோசை, நதியின் சலசலப்பு என்று சப்தங்கள் நிறைந்த இடமாக இருந்தது. வானை நோக்கியபொழுது இந்த சப்தங்களை மீறிய ஏதோ ஒரு அமைதி அவள் மனதில் குடிகொண்டது. யாரும் இல்லாத இந்த பிரதேசத்தில் உலகமே எனக்கு சொந்தம் என்று அவள் நினைத்துக் கொண்டாள். அடுத்த நாள் வெளிச்சம் வரும் முன்னே எழுந்து காலைக்கடன்களை முடித்தாள். டிரெக் செல்லும்பொழுது நம் இயற்கை உபாதைகளையெல்லாம் திறந்தவெளியில்தான் போக்க வேண்டும். மூன்றாவது டிரெக் என்பதால் அவளுக்கு இது பழகிவிட்டிருந்தது. காலை பிரட் டோஸ்ட் மற்றும் ஜாம் சாப்பிட்டு, டீ குடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்கள். ஒரு மணி நேரம் நடந்த பின், முதல் தடையைச் சந்தித்தனர். இருபது அடி உயர பாறை அவர்கள் பாதையை மறித்தது. பாறையின் பக்கவாட்டில் ஏறி, இன்னும் மேலே ஏற வேண்டும். பின்பு மெதுவாக கீழே இறங்க வேண்டும். சாகசம் நிறைந்த செயல் இது. கீழே பார்வதி நதி ஓடிக்கொண்டிருந்தது. கால் தவறி கீழே விழுந்தால், தலை பாறை மேல் மோதும், உடல் உருண்டு சென்று பார்வதி நதியில் விழும். பாறையைக் கடக்க வேண்டாம் என்றால் வேறொரு பாதையில் ஒரு மணி நேரம் அதிகம் நடக்க வேண்டும். இரண்டாவது குழுவில் இருந்தவர்கள் பாறையைக் கடக்க தயாரானார்கள். அந்த குழுவில் இருந்த பெண்ணின் முகத்தில் பயம் தெளிவாக தெரிந்தது. இப்படித்தான் செல்ல வேண்டுமா. ஆம். நாம் இப்படி தான் செல்லப் போகிறோம், நமக்கு ஒன்றும் ஆகாது என்றான், அவளுடன் இருந்த ஆண். அவர்களின் கைடு முன்னே செல்ல, ஒருவரின் கையை மற்றவர் பிடித்துக்கொண்டு வெகு ஜாக்கிரதையாக பாறை மேல் நடக்க ஆரம்பித்தனர். ஓரிடத்தில் அந்த பெண்ணின் கால் சற்று சறுக்கியது. ஐய்யோ. கைடு அவள் கையை இறுகப் பற்றியிருந்தான். ஓ மை காட் என்று உரக்க கத்தினாள். அவளுடன் இருந்த ஆண், கூல் டவுன், என்றான். நாங்கள்  உன்னைக் கைவிட மாட்டோம். தைரியமாக வா. மறுபடியும் மெதுவாக நடக்க ஆரம்பித்து பாறையின் பின்னால் மறைந்தனர். அவளுக்கு அந்தப்  பெண்ணின் குரலை கேட்டதும் உடம்பெல்லாம் சில்லிட்டது. முதுகில் வேர்வை துளிகள் உறைவது போல் உணர்ந்தாள். பாறையைப் பார்த்தாள், பிறகு வெகு தூரம் கீழே ஓடும் பார்வதி நதியை பார்த்தாள். பாறையின் மேல் உருண்டால் அதோ கதிதான். அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த அவன் நாம் மேல் வழியாகச் செல்லலாம். நேரம் அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்றான். கைடு முகத்தில் ஏமாற்றம். பாறையைத் தவிர்த்து இன்னொரு பாதையில் நடக்க தொடங்கினர். போர்டர்கள் மட்டும் பாறையைக் கடக்க முடிவெடுத்தனர்.

இரண்டு நாள் கழித்து அடுத்த தடை வந்தது. அவர்கள் பார்வதி நதியைக் கடக்க வேண்டும். நதி பாறைகளின் மேல் மோதிச் சுழன்று வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. தெளிவான நீரோட்டம். ஓரிடத்தில் நதியைக் கடக்க மரக்கிளையை குறுக்காக வைத்திருந்தார்கள். அதன் மேல் வெகு பத்திரமாக நடக்க வேண்டும்.அகலம் மிகவும் குறைவாக இருக்கும் கிளை. சரியாக நடக்கவில்லை என்றால் ஓடும் நதியில் விழ வேண்டும். ஆழம் அதிகம் இல்லை என்றாலும், தண்ணீர் சில்லென்று ஐஸ் கட்டி போல் இருக்கும். துணியெல்லாம் ஈரமாகிவிடும். இன்னும் ஒரு கிலோமீட்டர் முன்னால் சென்றால் தண்ணீருக்குள் இறங்கி நதியைக் கடக்க முடியும். அங்கு கணுக்கால் அளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். இன்னொரு குழுவினர் மரக்கிளை மேல் ஏறி நதியைக் கடக்க ஆரம்பித்தனர். அந்தப் பெண் ஆணின் கையை பிடித்துக்கொண்டு ஏதோ அடிப்பிரதக்ஷிணம் செய்வது போல் அடிமேல் அடி வைத்தாள். நதிக்கு நடுவில் இருக்கும் பொழுது அவர்களுடன் இருந்த இன்னொரு ஆண் கால் வழுக்கி நதியில் தொபீர் என்று விழுந்தான். அந்தப் பெண்ணும் ஆணும் சிரிக்க ஆரம்பித்தனர். விழுந்தவன் எழுந்து அவர்களுடன் சிரித்தான். இந்த குளிர் என்னை கொல்கிறது என்று கூறிக்கொண்டே இடுப்பு அளவு தண்ணீரில் நடந்தே நதியைக் கடந்து, கரையில் துணி மாற்ற ஆரம்பித்தான். அவர்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தவளை பார்த்து, நாம் இன்னும் முன்னே சென்று நதியை கடப்போம். ஆம். எனக்கு இப்படி நதியில் விழுவது பிடிக்காது என்று சொல்லிவிட்டு சிரித்தாள். இருவரும் நடக்க தொடங்கினர்.

நாளை நாம் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். காலை நான்கு மணிக்காவது கிளம்ப வேண்டும். சூரியோதயம் ஆகிவிட்டால் பனி உருக ஆரம்பிக்கும். பிறகு ஏறுவது மிக கடினம். நன்றாக தூங்குங்கள். நாளை நாம் 17500 அடியில் இருப்போம். மூச்சுவிட கஷ்டப்படுவீர்கள். அதனால் நன்றாக உறங்கி தெம்பாக கிளம்புங்கள்.

மாலை ஏழு மணிக்கு எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள். எட்டு மணிக்கு பௌர்ணமி சந்திரன் வானில் பிரகாசித்தான். இரண்டு பனிமலைகளுக்கு நடுவே பின்-பார்வதி பாஸ் தெளிவாக தெரிந்தது. நாளை உச்சியை அடைந்துவிடுவோம். ஆம். நான் முதல் முறையாக இது போன்ற ஒரு உயரமான கணவாய் வழியை தாண்டுகிறேன்..

அவர்கள் கணவாய் வழியை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னும் பதினைந்து அல்லது இருபது நிமிடங்களுக்குள் அவர்கள் அதை அடைந்து விடுவார்கள். மகிழ்ச்சி அவள் மனதில் பார்வதி நதி போல் துள்ளியோடியது. என்னாலும் சிகரங்களை தொடமுடியும் என்று எனக்கும்  இந்த உலகத்திற்கும் உரக்க சொல்லும் நேரம் அதிக தொலைவில் இல்லை. அவள் அவனை பார்த்து சிரித்தாள். அவனும் புன்னகை புரிந்தான். இருவர் முகத்திலும் சாதனையின் ஒளி பரவியிருந்தது. அப்பொழுது தான் அந்த அசம்பாவிதம்  நிகழ்ந்தது. முதலில் ஒரு சிறு கல் உருண்டு வருவது போல் இருந்தது. அவள் அதைப் பார்த்து சிரித்தாள். கைடைப் பார்த்தப்போது அவன் முகம் வெளிறி இருந்தது. ருக்கோ. எல்லோரும் நின்றார்கள். இந்த முறை பெரிய கல் ஒன்று உருண்டு கொண்டு அவர்களை கடந்து சென்றது. மேடம். இஸ் சைட் ஆவோ. அவள் கைடு இருக்கும் பக்கம் செல்ல நினைத்தபொழுது மலையே கீழிறங்குவது போல் பெரிய பனித் திரள் இவர்களை நோக்கி உருள ஆரம்பித்தது. நஹீஂ. ஓ நோ. பாகோ. லெட் அஸ் ரன். அவளால் நகர முடியவில்லை. பனி தன் கைகளைக் கொண்டு அவள் காலை பிடித்துக் கொண்டது போல் அவள் அங்கேயே சிலை போல் நின்று தன்னை நோக்கி வரும் பனித்திரளை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த திரள் பிரம்மாண்டமாக வளர்ந்து கொண்டிருந்தது. விஷ்ணுவின் விஸ்வரூபத்தை அர்ஜுனன் தரிசித்தது போல் அவள் அதை பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் அவள் கையைப் பற்றி இழுத்தபொழுதுதான் அவளுக்குள் திகில் திடீரென்று புகுந்தது. ஐயோ என்று கூக்குரலிட்டாள். பனி அவள் மீது படர்ந்தது. ஐயோ என்ற எதிரொலி இப்பொழுது கேட்டது. வெள்ளைப் பனி அவள் மேல் படர்ந்திருந்தாலும் அவள் இருளுக்குள் தள்ளப்பட்டாள். மூச்சு இரைத்தது. அவள் மேல் பனியின் பாரம் அதிகரித்தது. கையை அசைக்கப் பார்த்தாள். முடியவில்லை. காலை அசைக்கப் பார்த்தாள். முடியவில்லை. மூச்சு திணருவதை நன்றாக உணர்ந்தாள். மெதுவாக ஒரு மெல்லிய ஒளி தூரத்தில் தோன்றியது. பேச்சு சத்தம் கேட்டது. என்னை யாரோ காப்பாற்ற வருகிறார்கள். நான் பிழைத்துவிடுவேன். கண் முழித்துப் பார்த்தாள். அவள் டெண்டில் ஸ்லீபிங்க் பாக்குக்குள் இருந்தாள். கனவு. வெளியில் இன்னொரு குழு மலையேற தயாராகிக் கொண்டிருந்தது. இருட்டு. டார்ச் வெளிச்சம், பேச்சு சத்தம். அவளுக்கு உடம்பு முழுக்க வேர்த்திருந்தது. மூச்சு விடுவது கடினமாக இருப்பதை உணர்ந்தாள். இன்னும் படபடப்பு ஓயவில்லை. தூங்குவதற்கு கண்ணை மூடினாள். ஆனால் தூக்கம் வரவில்லை. வெளியில் பெண்ணின் குரல் கேட்டது. டெண்ட் ஜிப்பை திறந்து வெளியே பார்த்தாள். வேண்டாம். என்னால் மலை ஏற முடியும் என்ற நம்பிக்கை இல்லை. நான் உன்னுடன் இருக்கிறேன். உன்னால் முடியும். சொன்னால் கேள். என்னால் முடியாது. இவ்வளவு தூரம் வந்துவிட்டு கைவிடக்கூடாது. ஆண் அந்த பெண்ணின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான். அவளை அணைத்துக்கொண்டு, நான் இருக்கிறேன். பயப்படாதே. அவர்கள் எல்லோரும் நடக்க தொடங்கினர். அவள் மறுபடியும் ஸ்லீபிங்க் பாக் உள்ளே சென்று கண் மூடினாள்.

அவள் விழித்தபொழுது மெல்லிய ஒளி பரவத் தொடங்கியிருந்தது. டெண்ட்டுக்கு வெளியே வந்தாள். குட் மார்னிங். குட் மார்னிங். என்னை ஏன் எழுப்பவில்லை? நீ தூக்கத்தில் பெரிதாக அலறினாய். நானும் கைடும் உன் கூச்சல் கேட்டு எழுந்தோம். நீ மை காட் மை காட் என்று அரற்றிக் கொண்டிருதாய். அதனால் உன்னை எழுப்பவேண்டாம் என்று சொன்னேன். நீ பயந்திருக்கிறாய் என்று எங்களுக்கு தெரிந்தது. அவளைப் பார்த்ததும் கைடு அருகே வந்தான். நாம் இப்பொழுதே கிளம்பினால் பாஸை கடக்க முடியும் ஆனால் வெளிச்சம் வந்துவிட்டதால் ஒரு சிறிய ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது. என்ன சொல்கிறீர்கள். இன்று தங்கிவிட்டு நாளை அதிகாலையில் ஏறலாமா? ஏறலாம் ஆனால் நாளை வெதர் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. நாளை ஏற முடியவில்லை என்றால் நம் பாடு திண்டாட்டம் ஆகிவிடும். நம்மிடம் உள்ள சாப்பாட்டை வைத்துக்கொண்டு இன்று திரும்பச்  சென்றால் நாம் கசொல் அடைந்துவிடலாம். அதே போல் பாஸை கடந்துவிட்டால் உணவுக்கு அபாயமில்லை. நாளை முடியாவிட்டால் அபாயம்தான். இப்பொழுதே கடப்பதா இல்லை திரும்பிச் செல்வதா?

அவள் குழப்பத்தில் இருந்தாள். சிகரம் தொடவேண்டும். இந்த கணவாய் வழியைத் தாண்ட வேண்டும். ஆனால் அந்த கனவு அவளை அச்சுறுத்தியது. ஒரு வெள்ளை ஸ்மாசனத்தில் நாம் புதைக்கப்பட வேண்டுமா? யாரும் இல்லாத  ஓரிடத்தில் பனிக்கு அடியில் பிணமாய்க் கிடக்க வேண்டுமா? ஆனால் இடர்களை தகர்த்தெறியத்தானே வந்தாய். உயிரைக்  கொடுத்து அதை தகர்க்க வேண்டாம். இல்லை. நானும் எல்லா தடைகளையும் எதிர் கொள்வேன். உயிர் போனபின் தடையேது? அவனைப்  பார்த்தாள். அவன் அவள் மனதில் இருப்பதையே சொன்னான். அவலாஞ்ச் வந்தால் நம் கல்லறை எது என்று யாருக்கும் தெரியாது. அப்பொழுது கைடு அவனிடம் சொன்னான், நீங்க தான் மேடமுக்கு தைரியம் கொடுத்து ஏற சொல்லணும். கொஞ்ச ரிஸ்க் இருக்கு ஆனா இவ்வளவு தூரம் வந்த பிறகு ஏன் திரும்பிப் போகணும்? அவள் அவன் முகத்தை உற்றுப் பார்தாள். அவன் சரி போகலாம் என்று சொன்னால் கிளம்பிவிடுவாள் போல் பட்டது.

அவன் அவளை பார்த்தான். மறுபடியும் பாஸை பார்த்தான். உன் உடல்நலம் நன்றாக இல்லை. உனக்கு பயத்தால் வேர்க்கிறது. இருவரும் பாஸ் இருக்கும் பக்கம் பார்த்தனர். ஏறிக்கொண்டிருந்த பெண் ஒரு இடத்தில் நின்றிருந்தாள். அவள் மூச்சிறைப்பது இவர்களுக்கும் கேட்பது போல் தோன்றியது. அவள் தலையை இல்லை என்பது போல் ஆட்டிக் கொண்டிருந்தாள். முட்டி மேல் இரு கைகளையும் வைத்துக்கொண்டு குனிந்திருந்தாள். அவர்கள் பாதி தூரத்தை கடந்து விட்டிருந்தார்கள். அவர்கள் நின்ற இடத்திலிருந்து மலை செங்குத்தாக இருந்தது. அவன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். தன்னிடம் ஏதாவது கேட்பான் என்று அவள் காத்திருந்தாள். அவன் இருவருக்குமான முடிவை எடுத்துவிட்டிருந்தான். திரும்பிச் செல்லலாம். கைடு முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. இவளுக்கு தன்னுள் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

கசொல் வந்து சேர்ந்தபோது சிக்னல் கிடைத்தது. கைடு இவர்களைப் பார்த்து இன்னொரு குழு பாஸை தாண்டி இன்று காஜாவில் இருக்கிறார்கள். அவர்களின் கைடு எனக்கு இந்த படங்களை அனுப்பினான். அந்த பெண் பின்-பார்வதி பாஸில் கொடி நட்டுக் கொண்டிருந்தாள். அவள் உடம்பு பூரிப்பில் இன்னும் குண்டாகிவிட்டது போல் இருந்தது. குளிர்க் காற்றுக்கு கன்னங்கள் செக்கச்செவேல் என்று இருந்தன. எல்லா பற்களும் தெரியும்படி சிரித்துக் கொண்டிருந்தாள். இன்னொரு படத்தில் மூவரும் உயரே குதித்து அங்கேயே நின்றுவிட்டிருந்தார்கள். நீல வானம், வெள்ளை மேகங்கள், சுற்றிலும் பனி. கண்களுக்கு காகில்ஸ். தலையில் குரங்கு குல்லாய். எல்லா படங்களும் பிரமாதமாக இருந்தன. ஒரு சிறு வீடியோ அவளை கவர்ந்தது. அந்த பெண் பாஸ் அடைவதற்கு பத்து அடிகளே இருக்கும்பொழுது நடக்க முடியாமல் கிட்டத்தட்ட கீழே விழ இருக்கிறாள். அவள் கூட வந்த ஆண் அவள் கையைத்தன் தோல் மேல் போட்டுக்கொண்டு அவளை பாஸ் வரை இழுத்து செல்கிறான். அந்த வீடியோவை அவள் பல முறை பார்த்தாள். அன்று இரவு, நாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம். ஃபிரண்ட்ஸ்சாகவே இருந்துவிடலாம் என்று உறுதியாகச் சொன்னாள்.

தனிமை

எஸ். சுரேஷ் 

                  image credit- Craiyon

எப்பொழுதும் போல் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு பெரிய கண்ணாடி ஜன்னல் அருகில், பிக்சர் விண்டோ என்கிறார்கள், குஷன் நாற்காலியில், கையில் வைன் கோப்பையுடன் அமர்ந்தாள். வெளியே இருள் கவ்வியிருந்தது. கண்கள் பழகப் பழக வடிவங்கள் தெரிய ஆரம்பித்தன. இருபது வருடங்களுக்கு மேலான பழக்கம் இது.

ஊருக்கு வெளியில் இருந்த இந்த வீட்டை இருளுக்காகவே அவள் வாங்கியிருந்தாள். முதலில் நகரத்தில் இருந்தாள். ஆனால் அவளுக்கு வேண்டிய இருள் கிடைக்கவில்லை. தனிமையில் இருளை பார்த்துக் கொண்டிருப்பது அவளுடைய இரவு நேர பொழுதுப்போக்கு. இன்று நிலவொளி அதிகமாக இல்லை என்றாலும் மூன்றாம் பிறையின் ஒளியில் மெதுவாக எல்லாம் தெரிய ஆரம்பித்தன. இப்பொழுது பூனையின் கண்கள் போல் அவளால் இருளில் பார்க்க முடியும். இரவு பத்து மணிக்கு விளக்குகளுடன் மொபைலையும் அணைத்து விடுவாள். செயற்கை வெளிச்சமும் சத்தமும் இல்லாத சூழலை உருவாக்கிக் கொண்டு, வைன் ருசித்தப்படி ஒரு மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்திருப்பாள்.

இருபது வருடங்களாக நிகழாத ஒன்று அன்று நிகழ்ந்தது: இருளின் அமைதியை காலிங் பெல்லின் ஓசை கீறி சிதைத்தது. திடுக்கிட்டு எழுந்த அவளின் கோப்பையிலிருந்து மது சிந்தியது. படபடக்கும் நெஞ்சுடன் காதவருகே சென்ற அவளுக்கு,- அம்மா, உங்கள இப்பொழுதே பாக்கணும்னு ஒருவர் வந்திருக்காரு– என்ற காவல்காரனின் குரல் கேட்டது.

வெள்ளை உடுப்பில் நின்ற டிரைவர் மொபைல் ஃபோனை நீட்டினான் – புரொஃபசர் உங்களோட பேசணுமாம்.

புரொஃபசர்– டிரைவர் அழைத்துச் செல்லும் வீட்டுக்குப் போ. அங்கே இருக்கும் பெண்மணியை பரிசோதித்து அவளுக்கு வேண்டிய மருந்துகள்  கொடு.

புரொஃபசர் பல காலங்களுக்கு முன் அவளுக்கு வாத்தியாராக இருந்திருக்கிறார். அவர் கட்டளையை மீற முடியாது. ஸ்டெதஸ்கோப்பையும் பையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

நகரத்தில் மின்னும் மின்சார விளக்குகளினூடே, பணக்காரர்கள்  மட்டும் வாழும் ஒரு பகுதியில் இருந்த பங்களாவை அடைந்தனர். இரண்டடுக்குகள் கொண்ட வீட்டின் முதல் மாடிக்கு அவள் அழைத்துச் செல்லப்பட்டாள். – புரொஃபசர்– இவர்கள் ராஜபரம்பரையை சேர்ந்தவர்கள்– – காத்திருப்பதற்கான அறையில் அவளை அமர்த்திவிட்டு டிரைவர் எங்கோ சென்றுவிட்டான். அந்த அறை அவள் ஹால் அளவு பெரிதாக இருந்தது. டீக் மரத்தினாலான அலமாரிகள், நாற்காலிகள். பளிங்குத்  தரை பளபளத்தது. பளிச்சிடும் வெண்ணிறச் சுவர்கள். அறை நடுவில் உயர்ரக பெர்ஷியன் கார்பெட். பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் எல்லாம் சுத்தமாக துடைக்கப்பட்டு அதனதன் இடத்தில் இருந்தன. தூசு என்னும் பேச்சுக்கே இடமில்லை. விசாலமான அறை அவள் தனிமையை தீவிரமாக்கியது. இனம் புரியாத பயம் அவள் நெஞ்சை கவ்வியது. இருட்டில் தினமும் உட்கார்ந்திருக்கும் தனக்கு  வெளிச்சத்தில் அச்சம் ஏற்பட்டதை கண்டு அவளே சிரித்துக்கொண்டாள்..

அவளை உள்ளே அழைக்க யாரும் வரவில்லை. வாசல் கதவுக்கு வெளியே பார்த்தாள். எதிரில் ஒரு லான். முதல் மாடியிலும் ஒரு  லான். அதில் இரண்டு வெள்ளை இரும்பு நாற்காலிகள். புல்தரைக்கு அப்பால் இருட்டு. சுவரில் பொருத்தப்பட்ட இரண்டு மின்விளக்குகள் புல்தரையை வெளிச்சத்தில் நனைத்தன. அந்த இரண்டு வெள்ளை நாற்காலிகளும் யாருக்காகவோ காத்திருப்பது போல் அவளுக்கு பட்டது. அந்த பெரிய வீட்டில் எங்கும் தனிமை நிறைந்திருப்பது போல் அவள் உணர்ந்தாள். யாராவது அந்த நாற்காலிகளில் உட்கார்ந்தால் தனிமை விலகும் ஆனால் நாற்காலிகளைப் பார்த்தால் அவை வெகு நாட்களாக யாரையோ எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டபொழுது அவளுக்கே தூக்கிவாரிப் போட்டது.

– அம்மா கூப்பிடறாங்க.

சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட் கட்டலாம் போல் இருந்த ஹாலின் ஒரு மூலையில் சக்கரவண்டியில் ஒரு முதிய பெண்மணி உட்கார்ந்திருந்தாள். ராஜகம்பீரம் என்றால் என்ன என்று அவளுக்கு அந்த பெண்மணியை பார்த்ததும் புரிந்தது. ஐந்து நட்சத்திர விடுதிகளில் நாட்டின் முதன்மை பணக்காரர்களுடனும், முதல்வர் மற்றும் கவர்னருடனும் வெகு இயல்பாக பேசும் அவள் இந்தப் பெண்மையின் முன் மௌனமாக நின்றாள். ஒரு பிரஜை அரசியின் ஆக்ஞை இன்றி பேசக்கூடாது. சுருக்கங்கள் நிரம்பிய முகம், நரைத்த தலைமுடி, மனதுக்குள் ஊடுருவி பார்க்கும் கூர்ந்த பார்வை. அந்தப்  பார்வை அவளை எடை போடுவது போல் இருந்தது. அவள் மனதில் மறுபடியும் ஏதோ ஒரு அச்சம் தோன்றியது.

ராஜமாதா – ஆம் அவள் ராஜமாதாவாகதான் இருக்கவேண்டும் – சைகை செய்ய, பக்கத்தில் இருந்த பெண் ராஜமாதாவின் உடம்புக்கு என்ன பிரச்னை என்பதைக் கூறிவிட்டு மௌனமானாள். ராஜமாதாவைப்  பரிசோதித்து  மருந்துச் சீட்டு எழுதிக் கொடுத்தவுடன் அதை வாங்கிக்கொண்ட பெண் நீங்கள் டீ குடிக்கிறீர்களா? என்று கேட்டதும் ராஜமாதா அவளை உற்றுப் பார்த்தாள். உடனே அந்த பெண் தலை குனிந்து நின்றாள். இல்லை, வேண்டாம், என்று அவள் சொல்லவும், ராஜமாதாவின் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு அந்த பெண் ஹாலைவிட்டு உள்ளே சென்றாள். யாரும் அவளுக்கு நன்றி சொல்லவில்லை. அவள் மட்டும் அந்த அதிபெரிய அறையில் தனியாக நின்றாள். மெதுவாக வீட்டை விட்டு வெளியே வந்தாள். இரண்டு வெள்ளை நாற்காலிகள் மஞ்சள் நிற வெளிச்சத்தில் யாருக்காகவோ காத்துக்கொண்டிருந்தன.

வீட்டுக்கு வந்தவுடன் இருட்டில் மறுபடியும் ஜன்னலருகே உட்கார்ந்தாள். மிகக் கோபமான மனநிலையில் இருந்த அவளால் வைனை ரசிக்க முடியவில்லை. அங்கு சென்று அவமானப்பட்டதை நினைத்து தனக்குள் குமுறினாள். கோபக் கனல் அவளுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இவ்வளவு பெயர் பெற்ற அவளை ஒரு பணிப்பெண் போல் அந்த சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெண்மணி நடத்தினாள். அவள் ராஜமாதாவாக இருந்தால் எனக்கென்ன. உலகிலேயே மிகப் பெரிய பணக்காரியாக இருந்தாலும் பரவாயில்லை, நான் அவள் வீட்டிற்கு இனி செல்லப் போவதில்லை. புரொஃபசரிடம் கறாராக சொல்லிவிடுகிறேன். அன்று இரவு கனவில் இரண்டு வெள்ளை நாற்காலிகள் தோன்றின.

அடுத்த முறை டிரைவர் ஒன்பது மணிக்கே வந்துவிட்டான். அவள் உடனே கிளம்பினாள். முதல் முறை போல் சற்று நேரம் வரவேற்பு அறையில் உட்கார்ந்திருந்தாள். அந்த வீடு ஒரு பூட்டிக் கிடக்கும் ம்யூசியம் போல் அவள் கண்ணுக்கு பட்டது. எல்லா பொருள்களும் பளபளப்பாக இருந்தன ஆனால் எல்லாம் உயிரற்றவையாக இருந்தன. என் வீட்டில் எல்லா பொருள்களும் உயிருடன் இருப்பது போல் எனக்கு தெரியும் ஆனால் இங்கோ எல்லாம் உயிரிழந்த சடலங்களாக இருக்கின்றன. ஏனோ மனிதர்கள் இருந்தாலும் இந்த வீட்டில் உயிர் இல்லை.

இந்த முறை இரண்டாவது மாடியில் இருந்த ராஜமாதாவின்  அறைக்குள் அவளை நுழைய அனுமதித்தார்கள். நான்கு பேர் படுக்கக்க்கூடிய பெரிய கட்டிலில் அவள் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள். படுக்கையறையும் பிரம்மாண்டமாக இருந்தது. ராஜமாதாவை அந்த பெரிய அறையில் பார்த்தபோது உலகமே ராஜமாதாவை கைவிட்டுவிட்டதுபோல் அவளுக்கு தோன்றியது. ஒரு வினாடி அவளுக்காக பரிதாபப்பட்டாள். வாய் திறந்து பேசினால் எங்கு இந்த ஆழ்ந்த மௌனம் கலைந்துவிடுமோ என்ற பயத்தில் பேசாமல் ராஜமாதாவைப்  பரிசோதித்தாள். எல்லா சோதனைகளும் முடிந்தவுடன், இவங்களுக்கு டீ கொண்டுவா, என்று ராஜமாதா சொல்ல, டீ வந்தது. இரவுப்பொழுது அவளுக்கு டீ குடிக்கும் பழக்கம் இல்லையென்றாலும் ஆணையை மீற முடியவில்லை. அது ஆணைதானே? அவள் எங்கு என்னை டீ குடிக்கிறாயா என்று கேட்டாள்? இந்த முறையும் ஒன்றும் பேசாமல் வெளியே வந்தாள். எப்பொழுதும் போல் வெளிச்சத்தில் இரு நாற்காலிகள்.

அடுத்த முறை எப்படியாவது பேசிவிடவேண்டும் என்று முடிவு செய்தாள். இந்த முறை அவளை காக்க வைக்கவில்லை. நேராக ராஜமாதாவின்– அவள் பெயர் தான் என்ன?– அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். டீ குடித்துக்கொண்டே ராஜமாதாவை கேட்டாள் – உங்களுக்கு யாரும் இல்லையா? அவளைச் சுட்டுவிடுவது போல் ராஜமாதா ஒரு பார்வை பார்த்தாள். உன் வேலையை நீ பார் என்று சொல்வது போல் இருந்தது அந்தப் பார்வை. அவள் தலை குனிந்து டீ குடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். வெளியே வரும்பொழுது டீ கொடுத்த பெண்மணி அவள் காதில் மெதுவாக, இரண்டு மகன்கள். இருவரும் வெளிநாட்டில், என்று சொன்னாள்.

அமாவாசை. வீட்டுக்கு வெளியில் நாற்காலியை போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அருகில் வெளிச்சம் எதுவும் இல்லை. இருளும் தனிமையும். அண்ணாந்து ஆகாயத்தைப் பார்த்தாள். விண்மீன்கள் கண் சிமிட்டின. அவள் கூர்ந்து பார்க்கும் பொழுது புது புது விண்மீன்கள் தெரிய ஆரம்பித்தன. விண்மீன்களின் ஒளியில் எல்லாம் தெளிவாக தெரிவது போல் இருந்தது. வைன் சற்று அதிகம் பருகிவிட்டிருந்ததால் காற்றில் மிதப்பது போல் ஒரு உணர்வு. கண்ணை மூடிக்கொண்டாள். கண்ணை திறந்து பார்க்கையில் விண்மீன்கள் மறுபடியும் அவளைப் பார்த்து கண் சிமிட்டின. இப்பொழுது இருள் சூழ்ந்திருக்கும் கடலுக்கு நடுவில் ஒரு மிக பெரிய கப்பலில் இருந்தாள். வலது புறம் திரும்பிய பொழுது பெரிய கட்டில் ஒன்றைப் பார்த்தாள். அதில் ராஜமாதா  ஆகாயத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். எங்கிருந்தோ வந்த ஒளி கப்பலின் ஒரு கோடியில் வட்டமாக விழுந்தது. அந்த வட்டத்துக்கு நடுவில் அதே இரண்டு வெள்ளை நாற்காலிகள்.

இந்த முறை டிரைவர் அவள் ஹாஸ்பிடலின் அலுவலக அறைக்கு வந்துவிட்டான். ராஜமாதா மூன்றாவது மாடியில் வி.ஐ.பி.களுக்கான ஐ‌சி‌யு அறையில் இருந்தாள். சற்று சோர்ந்திருந்தாலும் கம்பீரம் குறையவில்லை. ஆஸ்பத்திரி என்பதால் அவள் தைரியமாக பேசினாள். – வலிக்கிறதா?– ஆம் – ஸிடெரோய்ட் இஞ்ஜெக்ஷன் போடச் சொல்கிறேன் – அவள் ராஜமாதாவை பரிசோதிக்க ஆரம்பித்தாள். பரிசோதித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று ராஜமாதா இவள் கையை இறுகப் பற்றினாள். ஒல்லியாக இருந்தாலும் பிடி பலமாக இருந்தது. அவளுக்கு கை வலிக்க ஆரம்பித்தது. ராஜமாதாவின் வலி அதிகரித்துவிட்டதை அவள் அறிந்தாள். முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக, கண்கள் இரண்டும் இடுங்க, பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டு ராஜமாதா அவள் கைகளை பிடித்து வலுவாக இழுத்தாள். இழுத்தவுடன் அவள் குனிந்தாள். அவள் முகம் இப்பொழுது ராஜமாதாவின் முகத்துக்கு அருகில் இருந்தது. ராஜமாதாவின் கண்கள் விரிந்து அவளை கண்ணிமைக்காமல் உற்றுப் பார்த்தன. அந்த கண்களில் பயம் கூடிக்கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். – என்னை எப்படியாவது காப்பாற்றிவிடு – என்று அவை கதறின. இனி உலகில் அதிகம் நேரம் இருக்கமுடியாது என்று நம்பிய ஒருவரின் பார்வை அது. – நான் உலகை விட்டுச்செல்ல தயாராக இல்லை – அவளால் மூச்சு விட முடியவில்லை. சட்டென்று பிடி தளர்ந்தது. திடுக்கிட்டு ராஜமாதாவை பார்த்தாள். ராஜமாதா வாய் வழியால் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். அங்கு விட்டு விலகப் பார்த்த அவள் கையை மறுபடியும் ராஜமாதா பிடித்துக்கொண்டாள். ஏதோ சொல்ல வருகிறாள் என்று அவளுக்கு தெரிந்தது ஆனால் வாயை விட்டு வார்த்தை வரவில்லை. மறுபடியும் முயற்சி செய்து தோற்றாள். மூன்றாவது முறை, வாழ்க்கையில் யாருக்கும் அதிகம் சொல்லாத அந்த வார்த்தை வெளிப்பட்டது – நன்றி – சில வினாடிகள் கண்களை மூடிக்கொண்டிருந்த ராஜமாதா கண்களை திறந்து – இனி நீ போகலாம் – என்று அவளுக்கு சைகை செய்தாள். இரண்டு நாட்களுக்கு பிறகு ராஜமாதாவை டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாக செய்தி வந்தது. அதற்கு பிறகு அவளுக்கு ராஜமாதா வீட்டிலிருந்து அழைப்பு வரவில்லை.

இப்பொழுதெல்லாம் அவள் இரவு பத்துமணிக்கெல்லாம் தூங்கிவிடுகிறாள். இருந்தாலும் அவ்வப்போது கனவில் அந்த இரு வெற்று நாற்காலிகள் வரத்தான் செய்கின்றன.