வாசிப்பும் விமரிசனமும்

– – கதிர்பாலா –

“புனைவு வாசிப்பின் இடைவெளிகள் – சில அடிப்படை அணுகல் குறிப்புகள்” என்ற பதிவில் சில விஷயங்கள் விடுபட்டுப் போயிருக்கின்றன என்று நினைக்கிறேன்.

“பொதுவாக ஒரு கதையோ கவிதையோ படிக்கும்போது அதைப் பற்றி நாம என்ன நினைக்கிறோம் என்பது மூன்று விஷயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன: பிடித்திருக்கிறது / பிடிக்கவில்லை, புரிகிறது/ புரியவில்லை, இதையெல்லாம் எழுதலாம்/ எழுதக்கூடாது,” என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

இது மூன்று தவிர மேலும் சில எண்ணங்கள் தோன்றும் வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். ஓப்பீட்டளவில் வேறொரு புனைவின் மற்றொரு பிரதியாக இருப்பது, அனுபவப்பூர்வமாக பிடித்திருந்தாலும், சுவையற்று, வரட்டுத்தன்மையுடன் மொழியப்பட்ட புனைவுகள், முழுவதும் பிடிக்காமல் ஏதோ ஒரு பகுதி அருமையான இலக்கிய நயத்துடன் அமைந்துவிடுவது என இன்னும் பல சொல்லலாம். குறிப்பாக பெரும்பாலான எழுத்தாளர்களின் ஒன்றிரண்டு நாவல்களுக்குப் பிறகு, படைப்பூக்கம் இருந்தாலும், பழைய சங்கதிகளே வேறு விதத்தில் சொல்லப்படுவது எரிச்சலூட்டும் அனுபவம். ஐன்ஸ்டைன் 1925 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீன் பிடிக்கச் சென்றிருக்கலாம் என்பார்கள்.

“எந்த ஒரு எழுத்தாளனும், அவன் எவ்வளவுதான் ‘மோசமாக’ எழுதியிருந்தாலும், அதைத் தன் அகத்திலிருந்து எடுத்துக் கொண்டுவந்து உங்களிடம் தருகிறான். நாம் நம் அகத்திலிருந்து கொஞ்சமாவது வெளியே போய் அதை ஏற்றுக்கொள்வதுதானே மனிதனுக்கு மனிதன் அளிக்கக்கூடிய மரியாதை? நம் விருப்பு வெறுப்புகள், சார்பு சார்பின்மைகளைப் பொருட்படுத்தாத புறவய கோட்பாடுகள் ஒரு பாலமாக இருக்கும்,” என்று எழுதுகிறார் பலவேசம்.

“அகத்திலிருந்து எடுத்துக் கொண்டு வந்து உங்களிடம் தருகிறான்,” என்று சொல்வது ஒரு சிலருக்குத்தான் பொருந்தும். எழுத்துத் திறமை இருப்பதாலேயே பலர் எழுதித் தள்ளுகிறார்கள். அதற்கெல்லாம் சம மதிப்பு இருக்க முடியுமா? இதில் ஒரு குழந்தைத்தனமான வழிபாட்டு மனப்பான்மை வெளிப்படுகிறது.

இது தவிர, “நம் விருப்பு வெறுப்புகள், சார்பு சார்பின்மைகளைப் பொருட்படுத்தாத புறவய கோட்பாடுகள் ஒரு பாலமாக இருக்கும்,” என்ற நம்பிக்கையிலும் இதே போன்ற ஒரு குழந்தைத்தனமான கற்பனை வெளிப்படுகிறது. நடுநிலை என்ற சொல் அகராதியில் மட்டும்தான் இருக்க முடியும், தராசில்கூட அதை மிக அபூர்வமாகவே பார்க்க முடிகிறது. எந்த ஒரு புறவயக் கோட்பாடும் மனிதர்களை விருப்பு வெறுப்புகளிலிருந்தும் சார்பு சார்ப்பின்மைகளிலிருந்தும் காப்பதில்லை என்பதுதான் வரலாறு.

மேலும், இத்தகைய ஒரு கொட்பாட்டுக்கான தேவை என்ன? ஒரு படைப்பை மனமார ஒத்துக் கொள்ள முடியவில்லை அல்லது அது பிடிக்கவில்லை என்றால், ஏன் அது குறித்து எழுத வேண்டும்? விமரிசகனுக்கு வேண்டுமானால் இது அவசியமாக இருக்கலாம். மற்றபடி, தான் விரும்பாத படைப்பை மௌனமாய் கடந்து செல்வதுதான் வாசகனுக்கு அழகு என நினைக்கிறேன். பலராலும், அதை எழுதிய எழுத்தாளராலும் மிகவும் சிலாகிக்கப்படும் படைப்பு எனக்குப் பிடிக்காமல் இருக்கலாம். மட்டம் என ஒரு விமர்சகன் எழுதுவதாலேயே வாசகனுக்கும் அப்படியெல்லாம் நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். தனது எல்லைகளுக்குள் அவன் தனது வாசிப்பை விரித்துச் சென்றால் போதுமானது. அவ்வகையில், ஆத்மார்த்தமாக எழுதத் தூண்டும் படைப்பிற்கு மட்டுமே வாசகனின் கருத்து பதியப்பட வேண்டும்.

ஒரு படைப்பு இலக்கியமா இல்லையா என்பது நிர்ணயிக்கப்பட பல காரணிகள் இருக்கலாம். அது முழுக்க முழுக்க அகாடெமிக் இண்டரஸ்ட்தான். இதைத் தீர்மானிப்பதில் வாசகனின் பங்களிப்பு என்ன என்ற கேள்விதான் முக்கியம்..

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.