பெரியப்பாவின் வருகை

ஹரன் பிரசன்னா

fallen_umbrella

 

பெரியப்பா வந்திருந்தார்
கையில் குடையுடன்
நீண்ட தாடியுடன்
ஒரு யோகியின் நடையுடன்
ஏற்கெனவே சொல்லி வைக்கப்பட்டிருந்தது போல
வீட்டைத் தேடி
வீடுகளைத் தேடி
பெரியப்பா வந்திருந்தார்
எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடம் விடையிருந்தது
அன்பில் பூத்த தாமரை மலர் ஒன்றை
எப்போதும் அவர் முகத்தில் சுமந்திருந்தார்
மெல்ல விரியும் உதடுகளின் வழியே
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கான
ஏக்கங்களின் விடையை
தெளித்தவண்ணம் சிரித்திருந்தார்
கைக்குட்டையில் இருந்த ரத்தக் கறையை
திட்டமிட்டு அவர் மறைக்கவில்லை என்றாலும்
யாருமே அவரிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை
கயிறின்றி கன்றின் பின்னே ஓடும்
தாய்ப்பசுவைப் போல
நினைவுகள் கட்டுண்டு அவர் பின்னே செல்ல
அவர் திடீரென்று பதற்றமானார்
குடை கீழே விழுந்த நினைவின்றி ஓடினார்
யாரோ ஒருவன்
வடிவுப்பெரியம்மையைப் பற்றிக்
கேட்டதுதான் காரணம் என்றார்கள்
இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
வடிவுப் பெரியம்மை எப்போதும் அப்படித்தான்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.