காலை எல்லோரும் அலுவலகம் செல்லும் நேரத்தில்
அந்த எருமை வோல்வோ பஸ்ஸில் ஏறியது
“காடுபீசினஹல்லி ஒரு டிக்கெட்” என்று இருநூறு நீட்டியது
சில்லறை பணத்தை வாயில் வாங்கிக் கொண்டது
உட்கார்ந்துக் கொண்டிருந்தவரகள்
குளிர் காற்றை அனுபவித்தார்கள்
நின்றுக் கொண்டிருந்தவர்களுக்கு
நெரிசலினால் ஒரே புழுக்கம்
ரேடியோவில் யாரோ ஒருவன்
பாடல் என்ற பெயரில் கத்திக் கொண்டிருந்தான்
எருமை மாடு இதைபற்றியெல்லாம் கவலைப்படாமல்
கம்பியை பிடிக்காமல் நின்றுக் கொண்டிருந்தது
சில்க் போர்டு தாண்டியதும்,
“வண்டியை நிறுத்து, வண்டியை நிறுத்து” என்று கத்தியது
“ஸ்டாப் இன்னும் கொஞ்சம் முன்னாடி”
என்று சொன்ன கண்டக்டரைப் பார்த்து,
“நான் அவசரமாக சாணி போடவேண்டும்” என்றது
சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்திய ஓட்டுனரை
இறங்கும்போது பார்த்து,
“அந்த பயம் இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு இறங்கியது.