அந்நாளின் இரண்டாம் விதியை நோக்கி
சாலையில் நடந்து கொண்டிருந்தேன்
திடீரென்று புதரிருந்து ஒரு உருவம்
அறைந்துவிடத் தூண்டும் ஒரு இளிப்பு
கைகளில் சங்கு சக்கிரம் கதை தாமரை
சில்லரையைத் தேடினேன்
‘நான் கடவுள்’ என்றது உருவம்
பாவமாக இருந்தது
‘நிஜமாகவே நான் கடவுள்தான்’
ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு
ஒரு பக்கமாக விலகி ஓடினேன்
’டேய்! நில்லு நில்லு’
ஹாண்ட் டிரில் கூட கையில் இல்லை
இவனெல்லாம் என்ன கடவுள்?