– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியங்கள்: யாத்ரீகன் –
‘இதுதான் காந்தி கணக்குல எழுதறது’ என்று சொல்லி சிரித்தான் செல்லா.
‘இனியும் இந்த கணக்கு முடிக்கிற பஞ்சாயத்தெல்லாம் நீயே பார்த்துக் கொள் செல்லா. என்னால் இந்த கடைசிநிமிட பிரஷர்களை சமாளிக்கவே முடிவதில்லை’ வெள்ளிக்கிழமை இரவு ஒன்பதரை மணிக்கு தெருமுக்கு டெலியிலிருந்து (Deli) வாங்கி வந்திருந்த பீட்சாவை சாப்பிட்டுக் கொண்டே, டயட் சோடவைக் குடித்துக் கொண்டே, நடுநடுவே புலம்பிக் கொண்டிருந்தார், ரீத்து சுக்லா.
வயதானவர். அடுத்த மாதத்தோடு ரிடயர்மெண்ட் ஆகிறது. இன்னமும் மாதாந்திர அக்கவுண்டிங்கை முடிக்க படாதபாடு படுகிறார். இந்த முறை, சரியாக வெள்ளிக்கிழமை கணக்கை முடிக்க வேண்டும். அந்நேரம் பார்த்து எட்டே முக்காலுக்கு வந்து சேர்ந்த ஃபைலில் தகராறு. அசெட் மேனேஜ்மெண்ட் டிபார்ட்மெண்ட்டில் இன்னொரு வயதான அம்மணி டாலியாகாத கணக்கு ஃபைலை அனுப்பிவிட்டு வீட்டிற்கு போய்விட்டார். இன்னும் அரைமணிநேரத்தில் பேட்ச்சை லெட்ஜரில் ஏற்றித்தள்ள வேண்டும்.
‘என்ன செய்வது செல்லா. இனி பார்பராவை தேட முடியாது. பேட்ச் ஓடுவதற்குள் இந்த கணக்கை சரி செய்ய முடியாதா’ என்று இறைஞ்சினார், சிறிய வித்தியாசம்தான். ஏழு செண்ட்டுகள். அவசர அவசரமாக ஈஆர்பி-யின் புறவாசல் வழியாக ஏழு செண்ட்களை சேர்த்து கணக்கை நேர் செய்து, அதற்கு வேண்டிய SOX ஒப்புதல்களுக்கான சாங்கியங்களை முடித்துவிட்டு ரீத்து அம்மையாரைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தி சிரித்தான்.
‘ஓக்கே மிஸ்டர் காந்தி. கார் வரை கொஞ்சம் துணைக்கு வாயேன். அடுத்த மாதத்திலிருந்து இந்த சொத்து பராமரிப்பு கணக்கு, டாக்ஸ் கணக்கு எல்லாம் நீ ஒருத்தனாக ஜமாய்’ என்று கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினார் ரீத்து அம்மையார்.
அவனுடைய முழுப்பெயர் செல்லமுத்து காந்தி. இந்தியாவில் இருந்தவரை சி. காந்தி. இங்கே வந்ததும் செல்லமாக ‘செல்லா காந்தி’யாகி விட்டான்.
ரீத்து அம்மையாரை அனுப்பிவிட்டு, வழியில் பியர் கெக் ஒன்றைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு போய் வாரயிறுதியை கொண்டாட திட்டம் போட்டது அவருக்கு எப்படி தெரிந்ததோ…
‘நாளைக்காலை ஒரு சின்ன ஹெல்ப் செய்கிறாயா செல்லா? இங்கே நமது கோவில் கம்யூனிட்டி ஹாலில் பியாரிபாபுவின் ‘காந்தி கதா’ நிகழ்ச்சி ஏற்பாடாகியிருக்கிறது. ரவீந்திரனுக்கு ஏதோ அவசர வேலையாக நியூயார்க் போக வேண்டுமாம். நீதான் கொஞ்சம் போய் பியாரிபாபுவைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும்’ என்றார்.
‘நாளைக்கு என்ன விசேஷம்?’ என்று செல்லா கேட்டதும் தலையில் அடித்துக் கொண்டார் அவர்.
‘உனக்கு எப்படி காந்தி என்று பெயர் வைத்தார்கள்?’ என்று சற்று கோபமாகவேக் கேட்டார் ரீத்து அம்மையார்.
‘நேற்று காந்தி ஜெயந்தி இல்லையா. அதற்குதான் நாளை சனிக்கிழமையன்று, பியாரி பாபுவின் பிரசங்கம். வீட்டிற்குப் போய் பாபுவின் அட்ரஸை அனுப்பி வைக்கிறேன். குவேக்கர் டவுன் இங்கிருந்து ஒன்றரை மணி நேரம்தான். பார்த்துக் கூட்டிக் கொண்டு வா. மிகவும் வயசானவர்’ என்று சொல்லி செல்லாவின் வாரயிறுதி திட்டங்கள் அனைத்தையும் குழிதோண்டி புதைத்து விட்டு காரில் ஏறிப் போய்விட்டார்.
உண்மையில் செல்லமுத்து என்பது அவனுடைய அப்பா பெயர்தான். பொதுப்பணித்துறை காண்டிராக்ட் விவகாரம் ஒன்றில் வெட்டுக்குத்து கேஸாகி, அவன் பிறந்த வருடம்தான் அப்பாவிற்கு சாதகமாக தீர்ப்பாகியிருந்தது. இதே போல ஒரு வியாழக்கிழமையில் வந்த காந்தி ஜெயந்தியன்றுதான் அவனுக்கு பெயர் சூட்டுவிழா வைத்திருந்தார்கள். அவனுடைய அப்பத்தா நெகிழ்ச்சியோடு ‘காந்தின்னு பெயர் வைங்க தலைவரே’ என்று எடுத்துக் கொடுக்க நகராட்சி சேர்மன் இருநூற்றியொன்று ரூபாய் பணமும், கழுத்தில் ஒரு சங்கிலியும் போட்டு அவனுக்கு காந்தி என்று பெயர் சூட்டியிருந்தார். ஊரில் இருந்தவரைக்கும் அந்தப் பெயர் அவனுக்கு விசேஷ கவனத்தையும், வேண்டாத தொல்லைகளையும் கொடுத்துக் கொண்டிருந்தது. கல்லூரிக்காலத்தில் ஹாஸ்டல் நண்பன் மார்த்தாண்டனின் காதலுக்கு ஆதரவாக இறங்கியபோது போலிஸ் ஸ்டேஷன் வரைக்கும் பஞ்சாயத்து போய்விட்டது. பெண்ணின் தகப்பனார் பெரிய மில் அதிபருக்கு உறவு என்பதால் போலிஸில் அடி பின்னி எடுத்துவிட்டார்கள்.
‘காந்தின்னு பேர வச்சிகிட்டு… காலித்தனம் பண்ணுது பாரு மூதேவி…’ என்று சொல்லி சொல்லியே அந்த கான்ஸ்டபிள் மிதித்தார்.
இங்கே ஜேஸ்டன்வில்லுக்கு வந்தபோது அவனுடைய முழுப்பெயரான செல்லமுத்து காந்தி பலருக்கும் ஆச்சரியமான விஷயமாக இருந்தது.
‘சள்ள….மத்து.. கேண்டி… நீங்கள் இந்தியரா? த லேண்ட் ஆஃப் மகாத்மா?’ என்றுக் கேட்டுவிட்டு சற்றுநேரம் இமைக்காமல் பார்ப்பார்கள்.
முதன்முதலாக ரீத்து சுக்லா அம்மையாரை இன்டர்வ்யூவில் பார்த்தபோது, ‘உன் பெயர் ஒன்றே போதும். வேறெதுவும் எனக்கு தெரிய வேண்டாம்’ என்று சொல்லி வேலைக்கு எடுத்துக் கொண்டுவிட்டார். ஆயிற்று இரண்டு ஆண்டுகள். அடுத்த மாதம் அவர் ரிடயர்மெண்ட்டுக்கு அப்புறம் அந்தப் பணியிடம் அவனுக்குத்தான் நியாயமாக வந்து சேரவேண்டும். சொல்லமுடியாது. முழுமையாக நடக்கும்வரை அவர் மனம்கோணாமல் நடந்து கொள்வது என்றுதான், அந்த சனிக்கிழமை காலை விரைவாக குவேக்கர் டவுனுக்கு சவாரி விட்டான்.
ஒரே பெயரில் இருந்த குறுக்குத்தெரு நெடுக்குத்தெரு குழப்பங்களை எல்லாம் தாண்டி சரியான வீட்டு எண்ணை கண்டுபிடித்து விட்டாலும், அப்பிரதேசத்தின் ஐரோப்பியத்ன்மை அவனை சற்று குழம்பச் செய்தது. இங்கே யார் பியாரி பாபு என்று இருக்கப் போகிறார்கள்.
காலிங் பெல் அடித்ததும், கதவைத் திறந்து வந்தவர் நிச்சயம் இந்தியர் இல்லை.
இவன் திருதிருவென முழிப்பதைப் பார்த்ததுமே அவர், ‘ஜேஸ்டன்வில்லிருந்து வருகிறீர்களா? உள்ளே வாருங்கள். ஜார்ஜ் தயாராகவே இருக்கிறார்’ என்றார்.
‘இல்லை, நான் பியாரி பாபு என்பவரைத் தேடி…’ என்று அவன் குழறலாய் சொன்னது அவர் காதுகளில் சரியாக விழவில்லை. வீட்டிற்குள் திரும்பி ‘ஜார்ஜ்… ஜார்ஜ்… அவர்கள் வந்துவிட்டார்கள்’ என்றார்.
பிறகு அவன் பக்கம் திரும்பி,
‘தூங்கியிருப்பாரா இருக்கும். இப்போதெல்லாம் அடிக்கடி தூங்கிவிடுகிறார். சர்க்கரை அதிகமாகிவிட்டது.‘ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார்.
மாடிப்படியின் முடிவில் வலதுபக்க அறையில் நீண்ட சாய்வுநாற்காலியில் அமர்ந்திருந்த நெடிதுயர்ந்த உருவத்தின் அருகே போய், தோளை அசைத்து ‘ஜார்ஜ், ஜார்ஜ்… கிளம்பு. ஜேஸ்டன்வில்லிருந்து வந்திருக்கிறார் பார்’ என்று அழைத்தார்.
சுவர் முழுவதும் பலவகைப் படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மேஜையில் அடுக்கிவைக்கப்பட்ட பேப்பர் கட்டுகள் எல்லாம் பழைய வாசனையுடன் மியூசியத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. செல்லா படங்களில் இருந்த முகங்களை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தான். உயரமான ஆங்கிலேயருடன், ஷெர்வானி உடையில் இந்தியர் ஒருவர் கைகுலுக்கும் படத்தின் அருகே வந்தபோது பின்னாலிலிருந்து அவர் குரல் கேட்டது.
‘இரு நாடுகளின் சுதந்திர போராட்ட சிற்பிகள் இவர்கள். அடையாளம் தெரிகிறதா?’ என்றார்.
திரும்பிப் பார்த்தால், சாய்வுநாற்காலியில் இருந்த மனிதர்தான் எழுந்து அவனுக்கு அருகில் வந்து நின்றுகொண்டிருந்தார்.
‘நான் ஜார்ஜ் அலெக்ஸாண்டர். அது என் அங்கிள் ஹொரேஸ் அலெக்ஸாண்டர். காந்தியின் முதன்மை சீடர். உலக அரங்கில் காந்தியை முன்னிறுத்திய குவேக்கர்களின் (quaker) பிரதிநிதி. அருகிலிருப்பவர் தீபக் வோரா. இந்திய அரசாங்கத்தின் பத்மவிபூஷன் விருதை அளிக்க வந்தபோது எடுக்கப்பட்ட படம். மிஸ்டர் வோராதான் இன்றைக்கு தெற்கு சூடானின் விடுதலைக்கு முக்கிய காரணகர்த்தா. எப்பேர்ப்பட்ட மனிதர்கள் பாருங்கள்’ என்றார். அப்பொழுதுதான் கவனித்தான் ஜார்ஜ் கைகுலுக்க கரங்களை நீட்டிக் கொண்டு நின்றிருந்தார்.
‘நான் செல்லா காந்தி. ஜேஸ்டன்வில் விழாவிற்கு உங்களை அழைத்துப் போக வந்திருக்கிறேன்’
அவன் பெயரைக் கேட்டதும் புருவத்தை தூக்கி ‘காந்தி…? ‘ என்று கேள்விக்குறியோடு பார்த்தார்.
‘என் அப்பா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். காந்தியின் கட்சி…. அந்த அபிமானத்தால் எனக்கு காந்தி என்றுப் பெயரிட்டார்’ என்றான் அசட்டு சிரிப்போடு. பெயர்சூட்டு விழாவின் பின்னணி நாடகங்கள் தெரிந்தால் என்ன நினைத்துக் கொள்வாரோ.
‘ஓ! காந்தியைப் பையனாக பெற்றது அவருடைய பாக்கியம்’ என்று அவன் கையைப் பிடித்து குலுக்கினார்.
‘ஆனால், காந்தியின் பையனாக இருப்பதுதான் கஷ்டம். என் அங்கிளுக்கு பையன் இருந்திருந்தால் அவனை காந்தி என்றுதான் பெயரிட்டிருப்பாரா இருக்கும்’என்றார்.
பிறகு பக்கத்திலிருந்த அம்மணி பக்கம் திரும்பி ‘மெலீசா, நான் கிளம்புகிறேன். இரவு உணவுக்கு காத்திருக்க வேண்டாம்’ என்றார்.
‘சரி! இன்று காலை கூட ஜேக் ஃபோன் செய்தான். டிசம்பரில் ஒரு லாட் கொண்டு வருகிறார்களாம். நீ எதற்கும் ஒருமுறை யோசிக்கலாம் என்கிறான் அவன்’ என்றார் மெலீசா.
‘ஓ! அந்த ஜேக் ஓர் ஏமாற்றுப் பேர்வழி. அவனை நம்பும் நீ ஓர் ஏமாளி’என்றார்.
‘இந்த பிடிவாதம்தான் புரிய மாட்டேன் என்கிறது. அவன் கேட்பது போல் ஒருமுறை அந்த பெட்டியை திறந்துதான் காட்டிவிடேன். அரிய பழம் பொருட்களை இப்படியா கவனிப்பாரன்றி போட்டு வைப்பது. அப்புறம் யாருக்கும் பலனளிக்காமல் போய்விடும் ஜார்ஜ். நாசமாக்காதே’ என்று அலுத்துக் கொண்டார் மெலீசா.
‘இங்கே பார். இன்னும் இரண்டு வருடங்களில் (மார்பின் இடதுபுறத்தை தட்டியபடி) இந்த வால்வு காலாவதியாகிவிடும். அப்புறம் மொத்தமாக என்னையே கொண்டு போய் ஏலத்தில் விட்டுவிடுங்கள். இப்போது ஆளை விடுங்கள்’ என்றார். பிறகு செல்லாவை பார்த்து மென்மையாக தலையாட்டிவிட்டு, தொப்பியை அணிந்து கொண்டு கிளம்பிவிட்டார்.
மெலீசா கவனித்துக் கொண்டிருக்கும்போதே அவருடைய அறையைப் பூட்டி சாவியைப் பையில் போட்டுக் கொண்டார்.
‘புதையலை காக்கும் பூதம் போல இருக்கிறாய் ஜார்ஜ்’ என்றார் மெலீசா. பிறகு செல்லாவிடம் ஒரு சிறிய கைப்பையைக் கொடுத்துவிட்டு,
‘இது ஜார்ஜின் மருந்து பை. அவருக்கு என்ன வேளைக்கு என்ன சாப்பிட வேண்டும் என்றெல்லாம் தெரியும். ஆனால் சாப்பிடத்தான் மறந்துவிடுவார். முக்கியமாக சாப்பிடுவதற்கு முன்னால் இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொள்ள சொல்லுங்கள்’ என்றார். இவ்வளவுதான் என்னால் செய்ய முடியும் என்கிற ஆயாசம் அவர் குரலில் இருந்தது.
செல்லாவின் சிறிய காரில் ஜார்ஜ் சற்று முடக்கிக் கொண்டுத்தான் உட்கார வேண்டியிருந்தது. அவ்வளவு அருகில், தெரிந்த முதுமையையும் மீறி, அவரிடம் ஏதோ ஓர் ஈர்ப்பு இருந்தது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
சம்பிரதாயமாக,
‘இந்த நாள் உங்களுக்கு இனிமையாக இருக்கும் என நம்புகிறேன். எங்கள் ஊருக்கு நீங்கள் வருகை புரிவதற்கு மிகவும் நன்றி’என சொல்லி வைத்தான்.
‘இரண்டு பை-பாஸ்கள் ஆகி மூன்று ஸ்டண்டுகளும் (stent), ஒரு செயற்கை இருதயவால்வுமாக நடமாடிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் எனக்கு போனஸ்தான் பையா. இந்தக் கிழவனை நினைவில் வைத்திருந்து அழைக்கும் உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். மிஸஸ் சுக்லா நலமாக இருக்கிறாரா?’
‘ஓ! மிக நன்றாக இருக்கிறார். அவர்தான் பியாரிபாபு-வைக் கூட்டிக் கொண்டு வா என்றார். நான் இப்படி ஒரு கோராபாபுவை எதிர்பார்க்கவில்லை’ அதிகபிரசங்கித்தனமாக உளறிவிட்டோமோ என்று நாக்கைக் கடித்துக் கொண்டான்.
வாய்விட்டு சிரித்தவர் ‘எல்லாம் இந்த ஜேக் வெய்ன் செய்த வேலை. அவன்தான் அங்கிள் ஹொரேசுக்கு காந்தி எழுதிய கடிதங்களைப் பற்றி அநியாயத்திற்கு செய்திகளை பரப்பிவிட்டு இப்படியொரு பெயர் வந்துவிட்டது. அப்படித்தான் இந்த ‘காந்தி கதா’ நிகழ்ச்சியும் வளர்ந்துவிட்டது. எங்கள் ஃப்ரெண்ட்ஸ் கூட்டத்தைப் பொறுத்தவரை பாபு என்றால் அது எப்போதும் மிஸ்டர். காந்திதான்’ என்றார்.
‘அதென்ன ஃப்ரெண்ட்ஸ் கூட்டம்?’ என்றான்.
‘உனக்கு குவேக்கர்களை பற்றி எதுவும் தெரியாதா? உன்னைச் சொல்லி குற்றமில்லை. பெரும்பாலான இந்தியர்களுக்கு தங்கள் நாட்டின் சுதந்திர வரலாறு பற்றி அறியப்படாத பக்கங்களில் ஒன்றுதான் காந்திக்கும் ஃப்ரெண்ட்ஸ்க்குமான பந்தம். இந்தியா போன்றதொரு கலாச்சார பிளவுகள் கொண்ட நாடு சுதந்திரத்திற்கு தயாரானதா என்ற மேலையுலகினரின் சந்தேகத்தைப் போக்க பெரும் முனைப்பு கொண்டு பங்காற்றியது குவேக்கர்களின் இயக்கம்தான். முக்கியமாக அங்கிள் ஹொரேஸ்தான் காந்தியின் முக்கிய சீடராக தன்னை அமைத்துக் கொண்டு, ஆங்கிலேய அரசிற்கு அவருடைய முக்கியத்துவத்தை உணர்த்த படாதபாடு பட்டார். ‘
அவனை சிலநொடிகள் உற்றுப் பார்த்தவர், சற்று சுரத்திழந்த குரலில் ‘ஜேக் சொன்னது போல இந்த காலத்திற்கு இதெல்லாம் மறந்து போன வரலாறு’ என்றார்.
‘ஜேக் யார்?’ என்றான் செல்லா.
‘ஹ…’ மெலிதாக கைகளை புறந்தள்ளுவது போல உதறியவர் ‘அவன் கிடக்கிறான் தந்திரக்காரன். அவனைப் போன்ற பிசினெஸ்மேனுக்கு எல்லாமே காசுதான். அங்கிள் ஹொரேஸுக்கு காந்தி எழுதிய கடிதங்களை எல்லாம் என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போய்விட வேண்டும் என்று ஆறு வருடங்களாக கனவு கண்டு கொண்டிருக்கிறான். அவர்கள் இருவருக்குமிடையே இருந்த உறவு மிகவும் அற்புதமானதொன்று. காந்தியின் அந்தரங்க நண்பர்களில் ஒருவர் அங்கிள் ஹொரேஸ். உனக்குத் தெரியுமா? காந்தி தன்னுடைய வாழ்நாளின் பெரும் இலட்சியமாக கனவு கண்டு கொண்டிருந்த இந்திய சுயராஜ்யம் நனவான போது, அவர் தன்னுடைய அரசியல் சீடர்கள் யாருக்கும் எட்டாத இடத்தில் இருந்தார். இந்திய சுதந்திரம் என்பது வெறும் அரசியல் நிகழ்வாக அவர் பார்க்கவில்லை. அக்காலத்திற்கு தன்னுடைய மிகப் பெரும் பொறுப்பென கலவரங்கள் நடந்த பகுதிகளில்தான் பயனம் செய்தார். அன்று பாபுஜியோடு கல்கத்தாவில் இருந்த ஒரே சீடர் அங்கிள் ஹொரேஸ்தான்’
அங்கிளைப் பற்றி பேசும்போதெல்லாம் ஜார்ஜுடைய குரலில் மெலிதாக இழைந்தோடும் பெருமையின் சாயல் அவனுக்கு புன்னகையை வரவழைத்தது.
‘எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. அப்பொழுது எனக்கு பத்து வயசுதான். அன்று அதிகாலையில் நான் உறங்கிக் கொண்டிருந்த மேல்தள அறையிலிருந்து இயற்கை உந்துதலுக்காக வெளியே வந்தேன். மகா அவசரம். அப்பொழுதுதான், அந்த மறக்கமுடியாத நிகழ்ச்சி நடந்தது. திறந்திருந்த சாளரம் அருகே அதன் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார் பாபுஜி. அதிகாலை வெயில் நீண்டு அவர் மேல் படர்ந்திருக்க, ஜன்னலுக்கு வெளியே ஒரு கொடிக்கம்பத்தில் இந்திய மூவர்ணக் கொடி பறந்து கொண்டிருந்தது. அவர் அமைதியாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அசாதாரண அமைதி. இந்தப்பக்கம் அங்கிள் ஹொரேஸ். அப்போது வங்காளத்தில் நடந்துகொண்டிருந்த கலவரங்கள் பற்றி உனக்கு தெரியும்தானே. அப்படியான ஒரு நெருக்கடி காலத்தில் காந்தியின் இருப்புதான் அங்கே அவர்களுக்கு மிகப் பெரும் கொண்டாட்டம். நான் நடந்து வந்து கொண்டிருந்த அரவம் கேட்டதும் திரும்பிப் பார்த்த பாபு, என்னை இருகைகள் நீட்டி அழைத்து, மேலே தூக்கி, ஜன்னலுக்கு வெளியே அந்த காட்சியை சுட்டிக் காட்டினார். சிறுநீர் முட்டிக் கொண்டு வந்ததால், அவஸ்தையில் நெளிந்தபடி அவர் பிடியில் இருந்து கீழே இறங்கிவிட்டேன்.” என்றார்.
“இன்னமும் சிறிது நேரம், அந்த கைகளில் இருந்திருக்கலாம். வெகுகாலத்திற்கு என் மனதில் உறைந்து போன தருணங்கள் அவை. அதற்குத்தான் அந்த அவஸ்தை உண்டாயிற்றோ என்னவோ. எவ்வளவு பெரிய சரித்திரத்தின் மகத்தான தருணங்கள் இந்த சாதாரணனின் நினைவில் உறைந்து போய்விட்டன பார்’ உணர்வு மேலீட்டால் ஏற்பட்ட சோர்வால் சற்று பின்தள்ளி சாய்ந்து கொண்டார். சில நொடிகளில் அப்படியே தூங்கியும் போய்விட்டார்.
கம்யூனிட்டி ஹாலுக்கு வந்து சேர்ந்தபோது செல்லா எதிர்பார்த்ததற்கு மேல் கூட்டம் இருந்தது. வெளிவாயிலேயே ரீத்துவின் கணவர் ராஜீவ் சுக்லாவும் இன்னபிற கமிட்டி உறுப்பினர்களும் பெரும் மரியாதையுடனும் புல்லரிப்புடனும் ஜார்ஜை வரவேற்றனர்.
ரீத்து அம்மையார் அவனிடம் மலர்ந்த முகத்துடன்,
‘நீதான் அவர் கூடவே இருந்து, கவனித்துக்கொண்டு, அவரை வீட்டிற்கு கொண்டுபோய் விட வேண்டும். அவரொரு பொக்கிஷம். காந்தியை நேரில் பார்த்த புண்ணியாத்மா. இவரைப் பார்ப்பதற்கு நாமெல்லாம் தவம் செய்திருக்க வேண்டும்’ என்றார்.
அருகில் நின்ற ஜெகதீஷ் மேனன் ‘நிஜமாகவே பொக்கிஷம்தான். அவர் மாமாவின் பழைய பெட்டி ஒன்று அந்த காலத்திலேயே தொலைந்து விட்டதாம். ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளிலேயே. எங்கோ பூட்டிக் கிடந்த மரைன் லாக்கரில் ஒன்றில் இத்தனை காலமும் கிடந்திருக்கிறது. இப்போது ஹொரேஸ் காலமாகிவிட்டதால், அந்த பெட்டி பியாரி பாபுவிடம்தான் வந்து சேர்ந்திருக்கிறது என்கிறார்கள். ஜேஸ்டன்வில் ஹெரால்டில், பெட்டியின் போட்டோவை எல்லாம் சேர்த்து செய்தி போட்டிருந்தார்களே’.
உடன் ராமகிருஷ்ணன், ‘அதில்தான் காந்தி தன் கையால் நெய்த கதர் தொப்பியெல்லாம் இருக்கிறதாமே. அவர் ஹொரேசுக்கு கொடுத்த பரிசாம்’ என்றார்.
மேனன், ‘அட, பாபுஜியின் உயில் ட்ராஃப்ட், லெட்டர்ஸ் என நிறைய ஹொரேஸ் சேகரித்திருந்தாராம். இந்திய தேசத்து பறவைகள் பற்றி அரிய குறிப்புகள், புத்தகங்கள் என நிறைய. ஏலத்தில் போட்டால் அரை மில்லியனுக்கு பக்கமாக போகும்.’ என்று சொல்லி பெருமூச்சு விட்டார்.
ரீத்து சுக்லா அந்த சம்பாஷனையை விரும்பவில்லை என்பது அவருடைய முகக்குறிப்பிலிருந்து தெரிந்ததால் செல்லா அதற்குமேல் அதைப் பற்றி கேட்கவில்லை.
‘காந்திஜி எப்போதும் மோகன்தாஸ் என்றோ, பாபு என்றோதான் தன் கடிதங்களில் கையெழுத்திடுவார். ஹொரேசுக்கு எழுதிய சில கடிதங்களில் பியாரி பாபு என்று கையெழுத்திடுவாராம். ஹொரேஸுக்கு கிட்டத்தட்ட ஹரிலால் காந்தியின் வயதுதான். அவர்களின் உறவு தந்தை-மகன் உறவு போன்றது காந்தியின் கையெழுத்துக்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா’ நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போனார் மேனன்.
மேனனின் அதி விகசிப்பு, காந்தியை மலிவாக மதிப்பிடுவதிலேயே சுற்றிக் கொண்டிருப்பதை விரும்பாத ரீத்து அம்மையாரின் வேதனையை உணர்ந்தவனாக செல்லா, மேனனை இடைமறித்து,
‘புரோகிராம் எப்போது தொடங்கும் மேடம்? அவருக்கு மருந்தெல்லாம் கொடுக்க வேண்டும் என்று கொடுத்தனுப்பியிருக்கிறார்கள்’. என்றான்.
‘ஆ! இதோ ஒரு அரைமணியில் ஆரம்பிச்சிட வேண்டியதுதான். ஒரு சின்ன ஃபேன்ஸி டிரெஸ் நிகழ்ச்சி. அப்புறம் சில குழந்தைகள் டான்ஸ் புரோகிராம். அப்புறம் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுட்டு பாபுவோட புரோகிராம் தொடங்கிட வேண்டியதுதான்’. என்றார்.
இதோ அதோவென ஜார்ஜ்ஜின் ‘காந்தி கதா’ நிகழ்ச்சி தொடங்க இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாக பிடித்தது.
பெரியவர் கம்பீரமாக மேடையில் ஏறி பேச ஆரம்பித்தார். பத்து வயதில், அவர் முதன்முதலாக அங்கிள் ஹொரேஸோடு பெர்மிங்காமிலிருந்து இந்தியாவிற்கு கப்பல் பயணம் மேற்கொண்டது. சேவாகிரம ஆசிரமத்தில் பாபுஜியின் தினப்படி நடவடிக்கைகள், இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டிற்காக காந்தி லண்டன் போனது, அங்கே அவருடைய பொதுஜன தொடர்பாளராக ஹொரேஸ் பணியாற்றியது. வைஸ்ராய் இர்வினோடான உறவு சீர்பட ஹொரேஸ் மேற்கொண்ட உத்திகள் என்று வரிசையாக பேசிக் கொண்டே வந்தார். அந்த வயதிலும் அவருடைய குரலின் அழுத்தம் குறையாமல் கோவையான சொற்பொழிவு. காந்திஜியின் ஆசிரமத்தில் அவர் இருந்த அனுபவங்களை பல்வேறு துணுக்குகளாக சொல்லிக் கொண்டு வந்தார். காந்தியின் ஆசிரம வாழ்க்கை முறைப் பற்றி நிறைய குட்டி குட்டி கதைகள் சொன்னார். காந்தியின் அரசியல் பயணத்தை, அதன் நிகழ்வுகளை வரிசை கிரமமாக அவர் பிரவாகமாக சொல்லி முடிக்க, கூட்டம் ஆரவாரத்துடன் கைதட்டியது.
முத்தாய்ப்பாக,
‘உங்களைப் போன்ற இன்றைய சந்ததியினர் காந்தியைப் பற்றி ஆர்வம் காட்டுவது எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. நம்முடைய பாபுஜியின் நீண்ட நிழல் நம் எல்லோர் மேலும் கவிழ்ந்திருக்கிறது. இது இன்னமும் பல தலைமுறைகள் கடந்து நீண்டு போய்க்கொண்டேயிருக்கும். இந்த பழுதடைந்த இருதயத்தின் எண்ணப்படும் நாட்களில் ஒன்றிரெண்டையாவது அதிகப்படுத்தும் அளவுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறீர்கள். இதோ இன்றைக்கு ஓர் இளைய காந்தியை நேரடியாக சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்’ சைகையால் செல்லாவை மேடைக்கு அழைத்தார். இதை சற்றும் எதிர்பாராத செல்லா வியர்த்துப்போய் படபடப்புடன் அவர் அருகில் சென்றான்.
‘ஏதோ ஓர் அபிமானத்திலோ, அதிர்ஷ்டத்தாலோ இவரும் காந்திய மரபின் ஒரு துணுக்காக இருக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அதற்காகவே இந்த இளைய காந்தியை வாழ்த்த வேண்டும். காந்தியத்தின் பிரதிபலிப்பை நாம் தொடர்ந்து அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்ல உறுதி எடுப்போம்’என்று சொல்ல கட்டுண்டது போல் கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் பெரும் கரவொலியுடன் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செய்தது.
மாலை விருந்து முழுவதும் பெரியவரை சுற்றி பலரும் பேசிக்கொண்டிருந்தனர். அவருடைய காந்தி அனுபவங்களை விட மீண்டும் கிடைத்த ஹொரேசின் பெட்டியைப் பற்றித்தான் அதிகம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
காலையில் குவேக்கர் டவுனுக்கு செல்லும்போது இருந்த தயக்க மனநிலை மாறிப்போய் மிகுந்த மன எழுச்சியோடு இருந்தான் செல்லா. ஜார்ஜ் அவனை ‘இளைய காந்தி’ என்று அழைத்தது அவனை மிகவும் உணர்ச்சிவயப்பட வைத்தது. குவேக்கர் டவுனுக்கு திரும்பும் வழியில்,
‘அஹ்! இது போன்ற நிகழ்ச்சிகள் இன்னமும் ஓரிரெண்டு செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். என்ன கொடுத்து வைத்திருக்கிறதோ’ கார் ஜன்னலுக்கு வெளியில் கவிந்து கொண்டு வரும் இருளைப் பார்த்தபடி சொன்னார் ஜார்ஜ்.
‘ஏன் இப்படி! இன்றுதானே உற்சாகத்தில் ஆயுள் நீடிப்பதாக பேசினீர்கள். இப்பொழுது என்ன சோர்வு? இன்னும் பல நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருப்பீர்கள் பியாரி பாபுஜி!’ என்றான்.
ஜார்ஜின் வீட்டை அடைந்தபோது அந்தி சாய்ந்து இருட்டிக் கொண்டிருந்தது.
காலையில் பார்த்த அதே தோற்றத்துடனே மெலீசா அம்மையார் இருந்தார். ஜார்ஜ் அவனை காப்பி அருந்திவிட்டு போகுமாறு வேண்டிக் கொண்டார்.
‘பாபுஜி! அந்த பிரசித்தி பெற்ற பெட்டியை ஒருமுறையேனும் நான் பார்க்க முடியுமா? காந்திஜி கையால் நெய்த குல்லாய் கூட அதில் இருக்கிறது என்று சொல்கிறார்களே’ சமையலறையில் இருக்கும் மெலீசாவின் காதுகளில் விழுந்துவிடாமல் சன்னமாகக் கேட்டான்.
‘குல்லாயா? இன்னும் என்னவெல்லாம் அந்தப் பெட்டியில் இருக்கிறதாம்?’ சிரித்துக் கொண்டே கேட்டார் ஜார்ஜ்.
‘காந்தியின் உயிலின் முதல் வரைவு இருக்கிறது என்கிறார்கள். அவ்வளவு முக்கியமான ஆவணங்கள் எல்லாம் கெடாமல் பாதுகாக்க வேண்டும். பணத்திற்காக சொல்லவில்லை நான்…’ செல்லா மென்று விழுங்கினான்.
‘ஹஹா! நீ சொல்வதைப் பார்த்தால் எப்படியும் நான் அசந்த சமயமாகப் பார்த்து அந்தப் பெட்டியை உடைத்து திறந்து மெலீசாவிடம் கொடுத்துவிடுவாய் என்று நினைக்கிறேன்.’ என்று சொல்லி சிரித்தார்.
‘நீங்கள்தான் சொல்லுங்களேன். அதில் அப்படி என்னதான் இருக்கிறது’ அடங்காத ஆர்வத்துடன் கேட்டான் செல்லா.
‘ஓரளவுக்கு தெரியும். அங்கிள் ஹொரேஸ் தொலைந்து போன லக்கேஜ் பற்றி அப்பொழுதே புகார் கொடுத்து வைத்திருந்தார். காந்தி சம்பந்தமான டாக்குமெண்டுகளையும், மற்றும் இந்தியாவில் சேகரித்திருந்த ஆர்னிதாலஜி (Ornithology) குறிப்புகளையும் பெட்டியில் வைத்திருந்ததாக விவரமாக எழுதியிருக்கிறார். மத்தபடி காந்தி நெய்த குல்லாய் எல்லாம் அந்த ஏலக் கடைக்காரன் ஜேக் பயல் கிளப்பிவிட்டிருக்கிறானா இருக்கும்’ என்றார்.
‘அதனால் என்ன பாபுஜி! திறந்து பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது’ என்றான்.
சற்று நேரம் அவனையே இமைக்காமல் பார்த்தார் ஜார்ஜ். அவன் கழுத்தை சுற்றி கையால் வளைத்து முகத்துக்கு அருகே இழுத்து,
‘ஆனால், மிஸ்டர். இளைய காந்தி, அங்கிள் ஹொரேஸின் லக்கேஜில் தொலைந்து போனது, இரண்டு பெட்டிகள் என்றும் குறித்து வைத்திருக்கிறார். மற்றொரு பெட்டியில் வெறும் சட்டை பேண்ட்டு சூட்டுகள் மட்டும்தான். இப்போது கிடைத்திருப்பது எந்தப் பெட்டி என்று யாருக்கும் தெரியாது. ஜேக் போன்ற ஆசாமிகள் அது பொக்கிஷப் பெட்டி என வெகுவாக பரப்பி விட்டிருக்கிறார்கள். பேராசைக்காரர்கள்’ என்றார்.
சிரித்துக் கொண்டேதான் அவர் சொன்னார். ஆனால், அப்போது அவர் கண்களில் மின்னி மறைந்த உணர்ச்சியை செல்லாவால் வகைமைபடுத்த இயலவில்லை.
‘அதனால் என்ன பாபுஜி. திறந்து பார்த்தால் அது பொக்கிஷ பெட்டியா, பழந்துணி பெட்டியா எனத் தெரிந்து விடப் போகிறது. அதை ஏன் செய்ய விட மாட்டேன் என்கிறீர்கள்…’ எனக் கேட்கும்போதுதான் அவனுக்கு சுரீரென உறைத்தது, ஜார்ஜ் தன் காலம் முடியும்வரை அந்தப் பெட்டியை திறக்க யாரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று.
அதற்குள் மெலீசா அம்மையார் ஹாலுக்குள் பிரவேசித்து செல்லாவிடம் காப்பி கோப்பையை கொடுத்தார். மேற்கொண்டு வேறெதுவும் பேசாமல் காப்பியை குடித்தவன் குட்நைட் என்றுச் சொல்லிக்கொண்டு புறப்பட்டான். அவன் கிளம்பும்போது ‘இளைய காந்திக்கு, அன்புடன் பியாரிபாபு’ என்று எழுதி, கையெழுத்திட்ட ‘காந்தி கதா’ புத்தகம் ஒன்றை அவனுக்கு பரிசளித்தார் ஜார்ஜ் அலெஸாண்டர்.
செல்லா வீடு திரும்பியதும் ஊருக்கு போன் செய்து, ‘நாந்தான், காந்தி பேசறேன். சும்மாத்தான். நாளாச்சுல்ல’ என்றான். அவனை காந்தி என்று இன்னும் நான்கைந்து முறை சொல்லிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
பியாரிபாபு காந்தியைப் பற்றி சொன்ன சில கதைகள்:-
ஆசிரமத்தில் ஒருமுறை ஐரோப்பிய பத்திரிகையாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தபோது, பிரசித்திப்பெற்ற பீட்டர்மரிட்ஸ்பர்க் இரயில் நிலையத்தில் அவர் அவமானப்பட்ட நிகழ்ச்சி பற்றி பேச்சு வந்தது. ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டதும் காந்தியின் மனசில் சொல்லொண்ணா பயம் நிலவியதாம். அங்கிருந்த ஓய்வு அறைக்கு போவதற்குக் கூட அவருக்கு பயமாக இருந்தது. அங்கேயும் வெள்ளையர் யாரேனும் இருந்து ‘சாமி’களை (அக்கால தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களை குறிக்கும் ரேசிஸ்ட் சொல்) வெளியே துரத்த சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று. இத்தனைக்கும் அவர் சட்டம் பயின்று பெரிய சட்ட நிறுவனத்தின் பொறுப்பான பதவியில் இருக்கிறவர். ‘அந்த ஓய்வறையின் கதவுகள் வரைக்கும் நான் நடந்து சென்ற தூரம்தான் என்னை இன்னமும் நடத்தி சென்று கொண்டிருக்கிறது’ என்றார்.
ஒருமுறை பாபுஜி முன்னால் ஒரு பிரச்னை வந்தது. ஆசிரமத்தில் நூல் நூற்க வரும் சிறுவர்களிடம் அவ்வப்போது கேள்விகள் கேட்டு சோதிப்பார் பாபுஜி. நன்றாக பதில் சொல்பவர்களை விட தட்டுதடுமாறி பதில் சொல்பவர்களையே அதிகம் குறிப்பிட்டு பாராட்டுவார். இதனால் குழப்பமடைந்த சில சிறுவர்கள் அவரிடமே இதைப் பற்றி கேட்டனர். அவரும் அதற்கு பதிலாக ‘நான் உங்களில் யார் புத்திசாலி என்று ஒப்பிட்டு அளக்க இந்தக் கேள்விகளை கேட்கவில்லை. ஒரு புத்திசாலி தன்னை ஒரு முட்டாளோடு ஒப்பிட்டு பெருமை அடைவதால் அவனுடைய ஆணவம் கூடி, அறிவுத்திறன் மழுங்கிவிடும். அது அவனுக்கு அழிவையேத் தரும். தொடர்ந்து முயற்சி செய்து தன்னை மேம்படுத்திக் கொள்ள விழைபவர்களை ஊக்குவிக்கவே இந்தக் கேள்விகளைக் கேட்கிறேன்.” என்றார். அவர் விளக்கத்தைக் கேட்ட சிறுவர்கள் தங்களிடையே போட்டி மனப்பான்மையை கைவிட்டு சமத்துவம் பேணத் தொடங்கினர்.
காந்தி தன்னுடைய வேலைகளை வரிசைப்படுத்திக் கொள்வது சமயத்தில் வேடிக்கையாக இருக்கும். அதிக சோர்வுற்ற சமயங்களில் உடனடியாக தூங்கப் போய்விடுவார். ஓரிரு நிமிடங்களில் மீண்டும் விழித்தெழுந்து வேலைகளை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து செய்து கொண்டிருப்பார். சமயத்தில் தூக்கத்தில் கூட சில வேலைகளை முடித்து விட வேண்டும் என்று திட்டமிடுவார். தூங்கிக் கொண்டிருக்கும்போதே (மற்றொருவரால்) முகச்சவரம் செய்துகொண்டு விட வேண்டும் என்பது அதில் ஒன்று. சில நிமிடங்களே தூங்குகிறார். அதையும் கெடுக்க வேண்டாமே என்று நினைக்கும் ஆசிரமவாசிகளிடம் ‘நான் இப்படியாக இருக்கும்வரை இயல்பாக இருக்கிறேன் என்று பொருள். எப்போது நீண்ட நேரம் உறங்குகிறேனோ, அப்பொழுது என் அந்திமம் தொடங்கி விட்டது என்று பொருள்’ என்றார். ஆனால் இறக்கும்வரை அவர் ஒரு சக்தி கேந்திரமாகத்தான் இருந்தார்.
ஆசிரமக் கூடத்தில் பாபுஜியின் சொற்பொழிவைப் கேட்க வந்த விவசாயி ஒருவர் தன் மகளையும் தூக்கிக் கொண்டு வந்தார். குளிர்காலம் தொடங்கிவிட்டிருந்த காலத்தில் மேல்சட்டை இல்லாமல் பாபுஜி இருப்பதைப் பார்த்த அந்தக் குழந்தை மறுநாள் ஒரு சட்டையோடு பாபுஜியைப் பார்க்க வந்துவிட்டது. பாபுஜிக்காக அந்த குழந்தையின் அம்மா தைத்துக் கொடுத்த சட்டையாம் அது. குழந்தையின் குதூகலத்தையும் அந்த விவசாயக் குடும்பத்தின் அன்பையும் பாபுஜி எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்று ஆசிரமவாசிகளுக்கு பெரிய கேள்விக்குறி. காந்திஜி அந்தக் குழந்தையிடம் அவர் அம்மாவுக்கு தன்னுடைய நன்றியை சொல்லிவிட்டு, என்னுடைய நாற்பது கோடி சகோதரர்களுக்கும் அவரால் சட்டை தைத்து கொடுக்க முடியும் என்றால் இந்த சட்டையை ஏற்றுக் கொள்கிறேன் என்று அன்போடு சொன்னார். சிறு குழந்தையின் எளிமையான மனதை, தன் அன்பால் பொதுநல சிந்தனைபால் திருப்பிவிட்டார்.
காத்தியினுடன் தொடர்புடைய எல்லாம் பல தலை முறை தாண்டியும் நினைவு கொள்ளப்படும் சரி அவை பின் பற்றப்படுமா. அதற்கான இயக்கமாக இம்மாதிரியான கதைகள் ஆரோக்கியமான ஆரம்பம்.