அம்மாவின் வானம்

ஆதவன் கிருஷ்ணா

அம்மாவின் வானத்தில்
சிதையுண்ட
மேகங்களைக் காண்கிறேன்

பொட்டுப் பொட்டாய்
தூர்த்தும் மேகமழைக்குள்
கை நுழைத்துச்
சில்லிடுகிறாள்
(அப்போது துள்ளிக் குதிப்பதற்காகவாவது மழை நீளலாம் என்று தோன்றும்)

தோழிகள்
வெளிர் நீல நிற மழை வானத்தின்
குறுக்காய்
பணிவாய்க் குனிந்து
நிறங்களமைக்கிறார்கள்

அம்மாவின் வானம்
பாதுகாப்பானது
கருணை மிக்கது
வெயிலின் உக்கிரத்தை
திரைப்பது
இரைஞ்சுதலையும் கூடுமானவரை
பரிவோடு அணைத்துக்
கொண்டும் செல்வது
வண்ணாத்திப் பூச்சியின்
மென் வருகையை நினைவூட்டுவது
விளையாடும்
சிறு குழந்தை போல
வெள்ளந்தித்தனமானது

அதில்

கூடும்
குளிர் தரும்
வெண் புகை
அடர்
கரு மேகம்

தாழ்வாய்
உலாத்தும்
கூரலகு தவிட்டு நிற நீள் றெக்கை
கொடும்
பருந்து.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.