– மித்யா –
“ஏன்டா அவன் வருவானா?”
“வருவான்டா. நிச்சயமா வருவான்”
“மணி ஏழு ஆகப்போவுது. எப்போ வருவேன்னு சொன்னான்?”
“வருவான்டா வருவான். நிச்சயமா வருவான். அவனுக்கு நம்ம பணம் வேணும்”
“கை நடுங்குதுடா. சீக்கிரம் வந்தா நல்லா இருக்கும்.”
“வந்து உக்காரு. நீ இப்படி அங்க இங்கேன்னு நடக்காத. போலிஸ்காரன் எவனாவது பாக்க போறான்”
“டேய். அவந்தானா அது”
“என்னங்க. நம்ப பையன் இப்போயெல்லாம் வீட்டுக்கு ரொம்ப ரொம்ப லேட்டா வரான். ஏன்னு கேளுங்க”
“சின்னப்பசங்க. அப்படித்தான் இருப்பாங்க. அதுவும் ஆம்பளப்பசங்க. இந்த வயசுலதான் ஜாலியா சுத்த முடியும். இப்போ லீவ்தானே. வருவான் வருவான்.”
“அதில்லீங்க. பக்கத்து வூட்டம்மா அவன் சிகரெட் புடிக்கறத பாத்தாங்களாம். இன்னிக்கி எங்கிட்ட சொன்னாங்க. நான் வச்சிருந்த காசும் காணோம். ஏதாவது தப்பு தண்டா பண்றதுக்கு முன்னாடி நீங்க ஒரு முறை அவங்கிட்டப் பேசுங்க”
“சும்மாப் படுடீ. ஆம்பள பசங்க சிகரெட் புடிக்கறது சகஜம்தான். நான் புடிக்கறேன். நாளைக்கு அவனும் பீர் குடிப்பான். இதெல்லாம் சாதாரணம். எல்லாம் கண்ட்ரோல்ல இருக்கணும் அவ்வளவுதான்”
“துட்டு கொணாந்தியா?”
“இந்தா ஐநூறு ரூபா”
“டேய். என்ன ஐநூறு ரூபா? ஒரு முறை மூந்து பாக்க பத்தாது இது. போயி சிகரெட் புடிக்கற வழியப் பாரு. இதுக்கு தானாடா நீ என்ன சீக்கீரம் வா சீக்கிரம் வான்னு பேஜார் பண்ண?”
“அடிக்காதண்ணே. அவன் ஐநூறு ரூபா தான் கொண்டுவந்திக்குறான்னு எனக்குத் தெரியாது.”
“நான் நாளைக்கு மீதி பணம் கொடுக்குறேன். இன்னிக்கி எனக்கு குடுங்க ப்ளீஸ். இன்னிக்கி எனக்கு வேணும். இல்லாம நான் போக முடியாது. ப்ளீஸ்…ப்ளீஸ்… நீ சொல்லுடா.”
“அண்ணே குடுண்ணே. நாளைக்கு பணம் கொணாந்து குடுத்துடுவான். ஏமாத்தற பையன் இல்லண்ணே அவன்”
“இப்படி எல்லாம் பிச்ச எடுக்கறவங்களுக்கு குடுத்துகின்னே இருந்தா என்ன எங்காளுங்க க்ளோஸ் பண்ணிடுவாங்க. பணத்த கொண்டா. அப்புறம் இத எடுத்துகினு போ.”
“உங்களுக்கு இருக்குற எல்லா கெட்ட பழக்கமும் அவனுக்கு வரணுமா? ஏன் உங்க புத்தி அப்படி போவுது?”
“ஏ. இன்னா? ரொம்பத்தான் பேசுற. நான் குடிக்கிறேன். நான் சிகரெட் புடிக்கிறேன். என் இஷ்டம். உனக்கு ஏதாவது குறை வச்சேனா? இல்லை அவனுக்குத்தான் குறை வச்சேனா?”
“அதுக்குன்னு பையன் என்ன பண்றான்னு கூட பாக்க மாட்டீங்களா?”
“இந்தக்காலத்து பசங்க ரொம்ப உஷாரு. நம்ம காலம் மாதிரி இல்ல. அவங்களுக்கு நல்லது எது கேட்டது எதுன்னு நல்லாத் தெரியும்.”
“அண்ணே குடுத்துட்டு போண்ணே. நான் அவனுக்கு ஜவாப்தாரி”
“போடா மயிரு. ஜவப்தாரியாம் ஜவாப்தாரி. நீ ஒரு… டேய். விடுறா பைய விடுறா டேய்”
“எனக்கு வேணும். எனக்கு வேணும். நான் காசு அப்புறம் தரேன். எனக்கு இப்போ வேணும். எனக்கு வேணும்.”
“டேய். விட்றா டேய். ரெண்டு பேரையும் கொன்னுடுவேன். விடுங்கா டேய். இன்னிக்கு உனக்கு சாவுதாண்டா மவனே. இனி நீங்க உயிரோட இருக்க முடியாது”
“ஏ. இங்க பார்ரா. யாரோ விழுந்து கிடக்குறான்”
“ஐயோ. ரத்தம்டா. கத்தியால குத்திக்குறாங்க போல இக்குது”
“உயிர் இக்குதா?”
“ஏ போவாத. இது போலிஸ் கேஸ்.”
“போயி போலிசுக்கு சொல்வோமா”
“மென்டலா நீ. நம்ப ஏதோ இருட்டா இக்குதுன்னு இங்க குடிக்க வந்தோம். போலிசுக்கு சொன்னா அவங்க நம்மள உள்ள தள்ளிடுவாங்கோ. யாரும் பாக்குறதுக்கு முன்னாடி கெளம்பிடுவோம்”
“என்னங்க இன்னும் அவன காணோம். அவன் இவ்வளவு லேட்டா வந்ததில்ல.”
“ஒரு ஆம்பள பையன் வெளில போயிட்டு லேட்டா வரான்னா அதுக்கு கவலை பட வேணாம். ஏதோ பொட்ட பிள்ளை வெளியில போயி இருட்டின பிறகும் வரலேன்னா பயப்படணும். செகண்ட் ஷோ சினிமாவுக்கு போயிருப்பான். கம்முன படு”
“அதில்லீங்க….”
“அத பார். யாரோ கதவ தட்டறாங்க. அவனாத்தான் இருக்கும்”
