அம்மாக்கள், அப்பாக்கள், அனாதைகள்- ஹென்றி ஜேம்ஸ் கதைகளில் குடும்ப அமைப்பு

கல்ம் டோபீன் (Colm Toibin)

 

வாஷிங்க்டன் ஸ்கொயர் என்ற நாவலில் ஹென்றி ஜேம்ஸ் மிகக் கொடுமையாய் மிரட்டும் ஒரு அப்பாவைப் படைத்தார். இந்த அப்பா தன் மகளின் திருமண தேர்வு முட்டாள்தனமானது என்று நினைக்கிறார், அதைத் தடுத்து நிறுத்தி அவளது விதியைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார். மந்தமானவள் என்று தன் மகளைக் குறித்து நினைத்திருந்த டாக்டர் ஸ்டோபர் கவனிக்கத் தவறியதை நாவலின் வாசகர்கள் காணத் துவங்குகின்றனர்- காதரின் ஸ்டோபர் நுண்ணுணர்வுகள் கொண்டவள் மட்டுமல்ல, ஆழமானவள், உணர்ச்சிகரமானவள் என்றும்கூட சொல்லலாம். ஜேம்ஸ் வாழ்விலும் கலையிலும் மிக முக்கியமாகக் கருதிய ஒரு விஷயத்தை இவ்வாறாகவே அந்த நாவல் நாடகீயத்தன்மையுடன் முன்வைக்கிறது- தன் குடும்பத்தினுள் நிகழும் கட்டுப்பாடும் ஆதிக்கமும் அவரைக் கடுமையாய் பாதித்திருந்தன, பின்னர் ஒரு நாவலாசிரியராக நீண்ட காலம் இயங்கிய அவர் கற்பனை செய்யத் துவங்கிய குடும்பங்களுக்கும் அவை முக்கியமாக இருக்கின்றன.

ஹென்றி ஜேம்ஸின் சகோதரர் வில்லியம் இந்த நாவலாசிரியர் குறித்து இப்படி எழுதினார், “அவர் ஜேம்ஸ் குடும்பத்தின் குடிமகன், பிறிதொரு தேசம் இல்லாதவர்”. தம் குழந்தைப்பருவத்திலும் பதின்பருவத்திலும், ஜேம்ஸ் குழந்தைகள் இருப்பு கொள்ளாத பணக்கார தந்தையால் அட்லாண்டிக்குக்கு இருபுறமும் முன்னும் பின்னும் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் பிரான்சையும் இங்கிலாந்தையும் அறிந்து கொண்டனர், ஆனால் அமெரிக்காவில் வீடு திரும்பிய உணர்வு பெற முடிந்ததில்லை. அவர்களது தந்தைக்கு தொழில் எதுவும் இல்லாததால் அவர் ஐந்து குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதிலேயே தன் நேரத்தைச் செலவிட்டார். ஹென்றிக்கு இருபது வயதானபோது எப்படியாவது ஐரோப்பா போனால் போதும் என்ற எண்ணம் வந்துவிட்டது. அவரது துவக்ககால கடிதங்கள் பணமும் வழிகாட்டுதலும் பெற அவர் தன் பெற்றோரை நம்பியிருந்தார் என்பதை உணர்த்துகின்றன. தான் தொலைவில் இருப்பதற்கு தன் உடல்நலமின்மையைப் பயன்படுத்திக்கொண்டார் என்பதையும் அதைக் கொண்டு அவர் இரக்கமும் கவனமும் பெற்றார் என்பதையும் அறிய முடிகிறது. அவர் வாழ்நாளெல்லாம் தன் குடும்ப விவகாரங்களில் மிகுந்த அக்கறை காட்டினார், ஆனால் அவரது புனைவுகள் பலவற்றில் உள்ள உறவுகளைப் போலவே அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இருந்த உறவும் இருவகைப்பட்டதாய் இருந்தது. ஜேம்ஸ் தன் தனிமையையும், தனித்துவத்தையும், சுதந்திரத்தையும் மிகவும் கவனமாகப் பாதுகாத்துக் கொள்பவராய் இருந்தார்.

அவர் அநாதைகளைப் பற்றி அருமையாக எழுதினார்; தி போர்ட்ரெய்ட் ஆப் தி லேடி நாவலில் வரும் இசபெல் ஆர்ச்சர் பாத்திரம் மிக அருமையானது- அவளது அத்தை அவளை அல்பேனியில் கண்டெடுத்து ஐரோப்பா கொண்டு சென்று வளர்க்கிறாள்; தி விங்க்ஸ் ஆப் தி டவ் நாவலில் வரும் மில்லி தீலின் குடும்பத்தினர் அனைவரும் இறந்து விடுகின்றனர், அவளைச் செல்வம் நிறைந்தவளாய், ஆனால் நிராதரவாய் விட்டுச் செல்கின்றனர். இந்த இருவருமே வாழ்வில் செறிவான ஏதோ ஒன்றைத் தேடுகின்றனர்; இருவரும் புதிய அனுபவங்களை வரவேற்கின்றனர், இவர்களின் வாழ்வில் குறுக்கிட அம்மாவோ அப்பாவோ இல்லாததும் இதற்கொரு காரணமாகிறது. பெற்றோர் இல்லாததால் தம்மைத் தம் விருப்பத்திற்கேற்ப படைத்துக் கொள்கின்றனர். தனிமை மிகுந்த இவர்களின் வாழ்வு செழிக்கலாம், சிறகடித்துப் பறக்கலாம், அல்லது பிறரால் கட்டுப்படுத்தப்பட்டு தரைதட்டக்கூடும் – இவர்களது குடும்பத்தினரே இதைச் செய்பவர்களாய் இருக்கலாம்; இந்த இரு போக்குகளுக்கும் இடையிலான முரண்பாடு இவரது நாவல்களின் அலங்காரமற்ற, உச்சம் தொடும் நாடகீயத் தருணங்களை அளிக்கிறது.

வாஷிங்டன் ஸ்கொயருக்கு அடுத்து அவர் எழுதிய தி போர்ட்ரெய்ட் ஆப் எ லேடி நாவலில் ஜேம்ஸ் இரக்கமற்ற, கட்டுப்படுத்தும் தந்தை மற்றும் எளிதில் வசப்படுவது போலிருக்கும் மகள் என்ற கருப்பொருளுக்கு மீண்டும் திரும்புகிறார். பிளாரன்சுக்கு வெளியே தனிமையில் வாழ்கிறான் கில்பர்ட் ஆஸ்மண்ட். இசபெல் ஆர்ச்சரை மணமுடித்துக் கொண்டதும் தன் மகள் பான்சியை மகத்தான இடத்தில் மணமுடிக்க வேண்டும் என்று கனவு காணத் துவங்குகிறான். காதரீன் ஸ்லோபர் போலவே பான்சியும் வெளிப்பார்வைக்கு மந்தமானவளாய்த் தெரிந்தாலும் ஆழமான உணர்ச்சிகள் கொண்டவள் என்பதை நாம் மெல்ல உணர வருகிறோம். வாஷிங்டன் ஸ்கொயரில் டாக்டர் ஸ்லோபர் தன மகளைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இருண்மையாகவும் கொடூரமாகவும் பான்சியின் தந்தை அவளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதில்லை என்றாலும், அவரது பிரயத்தனங்களிலும் அதே இரக்கமின்மை இருக்கிறது, அதே பிடிவாதம் இருக்கிறது. குடும்பத்தினுள் அதிகாரம் பிரயோகிக்கப்படுவதை அதே தீவிரத்தோடு சித்தரிக்கிறார் ஜேம்ஸ்.

ஹென்றி ஜேம்ஸ் தன் அமமாவுக்கு நெருக்கமானவராக இருந்தாலும், அவரைப் பற்றி மென்மையான உணர்வுகளுடன் கடிதங்களில் எழுதினாலும், தன் புனைவுகளில் அவர் அன்னையர் குறித்து அவ்வளவாக எழுதவில்லை. சொல்லப்போனால், அவரது சிறந்த நாவல்களில் பலவற்றில் அம்மாக்களே கிடையாது. அவர்கள் அனாதைகளுக்கு, அல்லது அரை-அனாதைகளுக்கு உகந்த பாதுகாப்பான இடங்கள். வாஷிங்டன் ஸ்கொயரில் அம்மா இறந்திருக்கிறாள், பேசப்படுவதே இல்லை; தி கோல்டன் பௌலில் ஆடம் வெர்ஜரின் மனைவி, மாகியின் அம்மா, இறந்து நெடுங்காலமாகிறது; தி விங்க்ஸ் ஆப் தி லவ் நாவலில் கேட் க்ரோய் மற்றும் மில்லி தீல் இருவரும் தாயற்றவர்கள். தி டர்ன் ஆப் தி ஸ்க்ரூ நாவலில் இரு குழந்தைகளும் அனாதைகள்.

ஜேம்ஸ் அம்மாக்களின் மிகச் சிறந்தவள் தி அம்பாசடர்ஸ் நாவலின் உத்தம அன்னை திருமதி நியூசம். அவள் மகன், சாட், குடும்பச் செல்வத்தின் வாரிசு, அமெரிக்காவைவிட்டு பாரிசுக்குப் போய் விட்டான். அங்கு களியாட்டங்களில் காலம் கழிக்கிறான். திருமதி நியூசம் தன் மகன் சாட்டுக்கு நல்ல புத்தி சொல்ல லாம்பேர்ட் ஸ்ட்ரத்தரை பாரிசுக்கு அனுப்புகிறார். அவருக்கு லாம்பேர்ட்டைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது. ஆனால் ஸ்ட்ரத்தர், ஜேம்ஸ் பாத்திரங்களில் நுண்மையான ஒருவர், அவரும் பாரிசின் வசீகரங்களுக்கு பலியாகிறார். ஜேம்ஸின் தந்தை தன் குழந்தைகளை ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்லும்போது கூறிய காரணங்களில் ஒன்று, அமெரிக்காவில் அவர்களுக்கு, “புலனறிவு” கற்பிக்கப்படுவதில்லை என்ற எண்ணம்தான். இப்போது சாட், ஸ்ட்ரத்தர் இருவருமே அப்படிப்பட்ட ஒரு கல்வியில் திளைக்கின்றனர், பாவப்பட்ட திருமதி நியூசம் மட்டும் ஊரில் தங்கியிருக்கிறாள்.

அவர் நாவலில் வருவதேயில்லை என்பதில்தான் அவரது ஆற்றல் இருக்கிறது. அவர் கடிதங்கள் அனுப்புகிறார், தன் கருத்துகளை வெளிப்படுத்துகிறார், தன் ராட்சசி மகளையும் மருமகனையும்கூட பாரிஸ் அனுப்புகிறாள். ஆனால் அவள் மட்டும், பிடிவாத உறுதியோடு நிழலில் தங்கிவிடுகிறாள். திருமதி நியூசம் போன்ற ஒரு காத்திரமான பெண்ணோடு மோத விருமப் மாட்டீர்கள். ஜேம்ஸ் எழுதிய புனைவுகளில் பலவும் நேரடியாய் சுயசரிதையின் தன்மை கொண்டவையல்ல, ஆனால் அவற்றில் பல அவரது உணர்வுகளின் வடிவமும் அச்சங்களின் சாயலும் பெற்றிருக்கின்றன. அவர் ஐரோப்பாவில் நீண்ட காலம் தங்கியிருந்த காலத்தில் தான் திரும்ப அழைக்கப்படக்கூடும் என்று அஞ்சியிருக்கலாம், அல்லது, “ஜேம்ஸ் குடும்ப குடிமகன்” என்ற நிலைக்குத் திரும்புவது குறித்து நினைத்துப் பார்த்திருக்கலாம். அவரது தாயார் அவருக்கு எழுதிய கடிதங்களில் வீடு திரும்பச் சொல்லும் அழைப்பின் பல வடிவங்களை நம்மால் எளிதில் காண முடிகிறது.

ஜேம்ஸ் தன் தாயை நேசித்தார். அவரை விட்டு விலகிச் செல்லவும் விரும்பினார். ஒரு நாணயத்தின் இரு முகங்களைப் போலவும், ஒன்றையொன்று மெல்ல முட்டி நிற்பது போலவும் இந்த இரு விருப்பங்களும் ஏதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று நெருக்கமாய் இருப்பது போலிருக்கிறது. தி அம்பாசடர்ஸ் நாவலில் தன் தாயைப் போன்ற ஒரு பாத்திரத்தைப் படைத்த ஜேம்ஸ், அவரைத் தோன்ற அனுமதிக்காமல் சிறிதாமாவது சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். அதே போல், அவர் தன் மகனைக் கட்டுப்படுத்த விரும்பியதில் ஹென்றி ஜேம்ஸ் சிறிதாவது வலியும் உணர்ந்திருக்க வேண்டும், பிடிவாதமாய்த் தொடர்ந்த அந்த விருப்பம் எப்படியும் நிறைவு கண்டிருக்கக்கூடியதுதான்.

நன்றி – புக்பாரம்

ஒளிப்பட உதவி – Robert Fay.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.