பிச்சைக்காரனின் வரவு

 – ஆதவன் கிருஷ்ணா – 

 

எப்பொழுதும் போல
விடியவில்லை நேற்றைய
காலை
காகங்கள் கும்பலாக
கரைந்து
சூழ
வெட்டு ஓடுகளினின்று
ஊசிகளாய் இறங்கிய
மங்கலான வெளிச்சம்
துடைப்பமிடா அலைந்தோடும்
புள்ளித் துகள்களுள்
படரத் துடித்தன
அழைப்பு மணியின்
பித்தானுக்கு சுவர்க்கோழி
பதில் சொன்னது
இராசி பலன் சொல்லிகள்
தேவையற்றுப் போனார்கள்
நீண்டு வந்த இரயில்
வண்டியின் குரல் அடங்கிப்போயிருக்க
காலையில் அபூர்வமாய்
வரவுற்ற
பிச்சைக்காரன் மட்டும்
நிரந்தரமாக வீட்டுக்குள் தங்கிவிட்டான்
சிறுவர்கள் கூட்டமாக முற்றத்திலிட்ட கோலத்தின் மேல்
பீய்ச்சி அடித்த
பெருநீரின் நாற்றம்
அகாலத்தின் கனவொன்றில்
வந்து போனது
என் நம்பிக்கை சரிதான் அங்கு
அவள் கோலமிழந்த காட்சியில்
ஒரு நடிகையைப் போலவே
இல்லை வழக்கம் போல்
இவன் விரல்கள் சூப்பிக்கொண்டு
தவழ்ந்துகொண்டிருந்தான்
புனித சிலுவை அணிந்து
கண்ணாடிப் பெட்டிக்குள் வாழும்
என் கண்களில் இலை முனை வழி சொட்டும் நீரென விழ ஆரம்பித்த
நேரத்தில்
பிச்சைக்காரன் கையளித்து
என்னை
அழைத்துச் செல்கிறான்
மீள இயலா கனவொன்றிற்கு

௦௦௦

 

ஒளிப்பட உதவி – dreamstime

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.