தாலாட்டு -ரபீக் ராஜா

(சிறுகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)

“தம்பி, சீக்கிரம் ஆஸ்பத்திரி போயிருங்க! எ, புள்ளைனா எனக்கு உசுரு!” என்றாள் அந்த வயதான தாய்.

இது போன்ற உணர்ச்சி மிகுந்த வாக்கியங்கள் வேலு பல முறை கேட்டு புளித்தவை.

டாக்டர் வேலுவை அழைத்து, “வேலு, இப்ப மணி 6, சரியா 9.30க்கு இந்த கேஸை சென்னை அப்பல்லோவுல சேத்துரு! ரொம்ப கிரிட்டிக்கல். சென்னை வர தாங்குமானு தெரியல. பீ கேர்ஃபுல்” என்றார். இதுகூட வழக்கமான வார்த்தைகள்தான்.

தனது குலதெய்வமான பதினெட்டாம்படி கருப்பனை வேண்டியவாறே ஆம்புலன்சை ஸ்டார்ட் செய்து திரும்பிப் பார்த்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு உணர்வற்ற நிலையில் ஒரு வாலிபன். முகத்தில் பிராணவாயு முகமூடி அணிவிக்கப்பட்டு இருந்தது. தலையில் பெரிய கட்டு. உடன் அந்த வயதான தாய் மற்றும் இந்த ஹாஸ்பிட்டல் நர்ஸ் ஒருத்தி.

ஆம்புலன்சை கிளப்பி மருத்துவமனை வளாகத்தை கடக்கும் முன்பே அவன் அலைபேசி ஒலித்தது. அழைப்பது மனைவி. மொபைலை எடுக்கலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் 30 நொடிகள் கடந்ததும் அழைப்பை ஏற்றான்.

போனில், “என்னடி? ஒன்னோட பெரிய எளவா போச்சு! சொல்லி தொலை என்ன விஷயம்?” பின்னே உட்காந்திருந்த வயதான தாய் அவனை ஏறிட்டாள்.

போனில் அவன் மனைவி, “சீ, எப்ப பாத்தாலும் உனக்கு வாயில எளவு தான் வரும். எப்ப வீட்டுக்கு வருவீங்க? நாளைக்கு என் பெரியம்மா மகள் கல்யாணம் யாவகம் இருக்கா?”

“ம், இருக்கு! இருக்கு!! அர்ஜென்ட் கேஸ் ஒண்ணு. வை அப்புறம் பேசுறேன்” பதிலை எதிர்பாராமல் அழைப்பை துண்டித்தான்.

வாகனத்தை பைபாஸ் சாலையில் செலுத்தி வேகத்தை அதிகப்படுத்தினான். ஆம்புலன்ஸ் இருட்டைக் கிழித்துக்கொண்டு சீறிப்பாய்ந்தது.

நர்சிடம் வயதான தாய் பேசுவது வேலுவிற்கு மெதுவாக கேட்டது.
“எனக்கு மொத்தம் நாலு பசங்க! அவரு போய் சேந்ததுக்கு அப்புறம் நானே சுயமா உழைச்சு நாலு பேரையும் ஆளாக்கினேன்”

அந்த நர்ஸ் அசுவாரசியமாக, “ம்” என்றாள்.

“என்ன தவிக்க வச்சுட்டு இப்ப மூச்சு பேச்சு இல்லாம இந்தா படுத்துக்கிடக்குரானே, இவன் தான் கடைசி புள்ள. இன்னும் கல்யாணம் கூட பண்ணல. மொத மூணு மகன்களும் பொண்டாட்டி பேச்சை கேட்டுகிட்டு தனி குடித்தனம் போய்டாணுங்க. இவன் இப்ப தான் படிப்பை முடிச்சுட்டு 6 மாசமா வேலைக்கு போய்கிட்டு இருந்தான். அதுவும் இந்த பாழாய் போன கடவுளுக்கு புடிக்கல.”

நர்ஸ், எதுவும் சொல்லவில்லை.

“இவனுக்கு அடிபட்டு ஆஸ்பத்திரில கிடந்த போது கூட இவனோட அண்ணன்கள் மூணு பேரும் எதோ மூணாவது மனுஷன் மாதிரி வந்து பாத்துட்டு செலவுக்கு பணத்தை கொடுத்துட்டு பொண்டாட்டி பின்னாடியே போயிட்டாங்க. அந்த மனுஷன் இப்ப இருந்தா இப்படி நடந்துருக்குமா? உதவிக்கு கூட ஆளு இல்லாம இப்படி அனாதை மாதிரி ஆயிட்டேன்”

இப்பொழுது நர்ஸ் வேறு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டிருக்க வேண்டும்.

“என்ன பண்றது எல்லாத்தையும் பாக்கணும்னு என் தலைல எழுதிருக்கு!” மிக பலவீனமான அழுகை கேட்டது.

சிறிது நேரத்தில் நர்ஸ் மெதுவாக வேலு அருகில் வந்து காதில் வந்து கிசுகிசுத்தாள், “பல்ஸ் ரொம்ப வீக்கா இருக்கு. இன்னும் எவ்வளோ நேரத்துல சென்னைல ரீச் ஆவோம்?”

வேலு, “மாக்சிமம், ஒரு மணி நேரம். பெரிய டிராபிக்ல சிக்காமல் இருந்தா!”

வயதான தாய், “என்னமா ஆச்சு?”

நர்ஸ், “ஒண்ணுமில்லமா! நீங்க பயப்படதீங்க!”

வாகனம் இன்னும் வேகம் பிடித்தது.

நாளை பள்ளி திறக்கும் நாள் என்பதால் சொந்த ஊரிலிருந்து விடுமுறை முடித்து மக்கள் அனைவரும் சென்னை நோக்கி விரைவதால் சாலை முழுவதும் வாகனங்கள் நிரம்பி வழிகின்றன. எனிலும் ஆம்புலன்சுக்கு பொறுப்பாக வழி கொடுத்து விலகி நிற்கிறார்கள்.

வயதான தாய் மீண்டும், “ஏ, புள்ள எப்படியும் பிழைத்து விடுவான். நம்பிக்கை இருக்கு.”

வேலு கண்ணாடி வழியாக நர்சை பார்த்தான். நர்ஸ், வராத புன்னகையை வரவழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

“இவனுக்கு சின்ன வயசுல இருந்து சாதாரண காய்ச்சல் வந்தாக்கூட லேசுல போகாது. ரெண்டு மூணு நாள் சிரமப்படுத்திட்டு தான் போகும். இப்ப இவ்வளவு பெரிய ஆக்சிடென்ட் லேசுல போகாது தான். அந்த பெரிய ஆஸ்பத்திரில சேர்த்தா எல்லாம் சரியா போய்டும். என்ன காசுதான் அதிகமா செலவாகும். அதுக்கு என்ன? ஏ புள்ள சம்பாதிப்பான்.”

இப்பொழுது தான் பேசுவதை யாராவது கேட்க வேண்டும் என்பதை அந்த வயதான தாய் எதிர்பார்க்கவில்லை.

“இவன நா எப்போதுமே திட்டுனது இல்ல! கை நீட்டி அடிச்சதில்ல. ரொம்ப செல்லம். ஏ காலயே சுத்தி சுத்தி வருவான். இவனுக்கு ரெண்டு வயசு இருக்கும் போது பயங்கரமான காய்ச்சல் வந்துச்சு. நடுராத்திரி, பேய் மழை. காய்ச்சல் அதிகமாகி வலிப்பு மாதிரி வந்துருச்சு. என்ன பண்றதுனே புரியல. வலிப்பும் நிக்கல. எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. பழனி முருகனை வேண்டிக்கிட்டு இவன நெஞ்சோடு அணைச்ச பத்தாவது நிமிசத்தில வலிப்பு நின்னு என்ன “அம்மா”னு கூப்பிட்டன். அதே மாதிரி இப்பவும் என்னை “அம்மா”ன்னு கூப்பிடுவான்.”

இப்பொழுது ஏனோ வேலுவிற்கு அந்த தாயின் முகத்தை திரும்பி பார்க்க தோன்றியது.

சிறுவயதில் தாயை இழந்து தந்தையின் வளர்ப்பில் வளர்த்தவன் வேலு. மனைவி இறந்த 6 மாதத்தில் வேறு திருமணம் செய்தார் தந்தை. மாற்றாந்தாய் கொடுமைப்படுத்தவில்லை என்றாலும் பாசம் என்கிற கதகதப்பு அவனுக்கு அரிதாகவே இருந்தது. தன் தாய் உயிரோடு இருந்தால் இந்த வயதான தாய் போல தான் இருந்திருப்பாள் என்று மனதிற்குள் நினைத்து கொண்டான் வேலு.

ஒரு வளைவில் சைரனை ஒலிக்க விட்டு ஒரு ஒரு சரக்கு லாரியை ஒதுங்க வைத்து விரைவாக வண்டியைச் செலுத்தினான்.

சிறிது நேரத்தில் வாகனத்துக்குள் “உஷ்ஷ்ஷ்ஷ்” என்ற சத்தம் கேட்டது. அது என்ன சத்தம்? ஆக்சிசன் சிலின்டரில் ஆக்சிசன் வெளியே போகிறதோ? என்று வேலு ஊகிப்பதற்கு நர்ஸ் டிரைவர் இருக்கைக்கு அருகில் வந்து, “மெதுவா போங்க! இனி அவசரம் இல்ல” என்றாள்.

வேலு திரும்பிப் பார்க்கையில் அந்த தாய் மகனின் கைகளை இறுக்க பிடித்துக்கொண்டு அவன் நெஞ்சில் தனது காதை வைத்துக் எதையோ செய்து கொண்டிருந்தாள்.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.