தண்டவாளத்தில் உடைந்து சிதறும் சில்லறைகளை சேகரிப்பவன்

மிகச்சரியாக
வாழநினைத்து
இப்போது
தண்டவாளத்தில்
ஒரு ஒழுங்கில்லாமல்
சிதறிக்கிடக்கிறது
அவனின்
உடல் தசைகள்
தொடர்பற்று;
ரத்தசிவப்பு நிறம்
கொஞ்சம் கொஞ்சமாக
அடர்கருப்பாக மாறத்துவங்குகிறது.
சுற்றி நிற்பவர்களின்
அனேக அனுமானங்களும்
சில நிஜங்களும்
குறித்துக்கொள்ளபடுகின்றது
அவனின் கதைக்கான
கடைசி
அத்தியாய
பக்கங்களை
நிரப்புவதற்காய்.
இதோ
அவன் வந்துவிட்டான்
சுற்றி நிற்கும் அனைவருக்கும்
ஒரு கும்பிடு மட்டும் போட்டுவிட்டு
அவன் வேலையை ஆரம்பித்தான்
தசையின்
வாசம்
அவனது
நாசிகளுக்கு
எந்த நெடியையும்
ஏற்படுத்தவில்லை;
ஒவ்வொரு
துண்டுகளையும்
பார்த்துப் பார்த்து
மிகச்சரியாக எடுத்துக்கொண்டிருந்தான்.
அங்கிருப்போரின்
அழுகுரல்,
விசாரணைகள்,
எதுவும்
அவன் செவிகளுக்குள்
இறங்கவில்லை.
மொத்தமாக
எடுத்து ஓலைக்குள் வைத்து
அவிழாமல் அதே சமயம் இறுக்கங்கலற்று
மடித்துக்கட்டி
முடிந்துவிட்டதாய்
சமிக்ஞை செய்கிறான்
பீடியைப் புகைத்தவாறே…
அந்த இடத்தின்
கடைசிக்காட்சியாக
அவன் கைகளில்
சில நூறு ரூபாய்களுடன்
நடந்து போயகொண்டிருக்கிறான்
ஒரு முழுவாரத்தின்
பசித்த வயிறுடன்.
                                                                – பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.