என்பில தனை வெயில்போலக் காயுமே
அன்பில தனை அறம்
என்ற குறள் நாமறிந்தது. இதற்கு நேரெதிர் தாக்கத்தை விஷால் ராஜாவின் குளிர் சிறுகதை தொடுகிறது.
எல்லாவற்றுக்கும் ஒரு நியாயம் இருக்கும் என்றால், புரிந்துணர்வுக்கான புள்ளி எல்லாரிடமும் உண்டு என்றால், அன்பின் இயல்பும் அறனின் தன்மையும் எப்படிப்பட்டவை?
நாம் காணும் எதுவும் நம்மைத் தொடாது என்றால், அன்பும் அறனும் தம்மைத் தாமே நகைத்துக் கொள்பவையாகாதா?
அசாதாரண குளிர், அசாதாரண மனிதர்கள், அசாதாரண நிகழ்வுகள். இருந்தும் அந்த நாளின் காலைப் பொழுது சாதாரணமாகத்தான் துவங்குகிறது. உணர்வுகளின் ஒடுக்கம், மிகச் சாதாரணமானது. அதில் மிகைகளுக்கு இடமில்லை.
“மரங்களில் சாய்ந்து வீசிய மென் காற்றில் சாமந்தி மணமும் கலந்து வந்தது. அது நாசியில் மயக்கமாக தங்க இன்னொருபுறம் பனியில் தலையைச் சுற்றி குளிரேறிக் கொண்டிருந்தது. காதுகளை அழுந்த மூடி கால்களுக்கு நடுவே முகத்தை புதைத்துக் கொண்டேன். அருகில் யாரோ நடந்து வரும் காலடி சத்தம் கேட்டது. இயல்பாக திரும்பி பார்த்தேன். நல்ல உயரமும் கனமும் கூடிய வாட்டசாட்டமான மனிதர். மடிப்பு விழாத படு நேர்த்தியான உடை. பளபளவென்றிருந்த போலீஸ் காலணிகளில் சீராக அடிவைத்து நடந்து வந்தார்.”