உயரக் கம்பத்தின் வடக்குமூலையில்
கருநீல இறக்கையை விரித்து
ஒரு பறவை எழும்புகிறது
தொற்றினாற்ப்போல நூற்றுசொச்சப்
பறவைகளும் எழும்பிப் பறக்கின்றன.
காவ்-காவ்; காவ்-காவ் எனக்
குரலெழுப்பிக் கொண்டே
வானில் சிறு வட்டங்களிட்டு
கம்பிகளில் மீண்டும்
வந்தமர்கிறது.
அலைஅலையாக தொடர்கிறது
பறவைகளின் ஆட்டம்.
வாகன நெரிசல்களுடனும்
வியர்வை வழிதல்களுடனும்
அண்ணாந்து நோக்கி
குதூகலிக்கும் கூட்டத்தில்
நானும் ஒருவனாய்
தெறிக்கும் துளியென
ஒரு நீளவால் பறவை மட்டும்
அருகிலிருந்து ஆட்டத்தை
ரசித்துக் கொண்டிருக்கும்
மக்னோலியா மரத்தின்
உச்சியில் சென்றமர்கிறது.
