1
மாலையில் வாடிவிடும் மலர்
அதற்குள் இயற்கையை அனுபவிக்கத் துடிக்கிறது
மண்ணுக்குள் புதைந்திருக்கும் விதை
ஒரு சொட்டு தண்ணீக்காக தவம் கிடக்கிறது
ஆயிரம் கிளைகளைக் கைகளாகக் கொண்ட
மரம் வான்மழையை அணைக்கத் துடிக்கிறது
இருத்தலில் மறைந்திருக்கும் கடவுளைப் போல
மரங்கள் பூத்துக் குலுங்க வேர்கள்
தன்னலத்தை தியாகம் செய்கிறது
உதிர்ந்த சருகுகளை பச்சிலைகள்
விடை கொடுத்து அனுப்புகின்றன
தாய்ப் பறவை வந்து பார்க்குமேயென்று
கூடு சிதைந்திடா வண்ணம்
மரம் காவந்து பண்ணுகிறது
மனிதர்களுக்கு மண்ணை அளித்த இறைவன்
சுதந்திரமாக பறக்க பறவைகளுக்கு
விசாலமான வானை அளித்திருக்கிறான்
மனிதர்கள் தான் சொல்வதை திருப்பிச்
சொல்லும கிளியாய் இருப்பதையே இந்தச்
சமூகம் விரும்புகிறது
மனிதர்களே சுமையை இறக்கி வையுங்கள்
கோபுரம் தாங்கி சிலைகளா கோபுரத்தைத்
தாங்குகிறது
இரவில் உயிர்கள் அமைதியடையும் போது
இயற்கை மனிதர்களுக்கு உறக்கத்தை பரிசளித்து
அடுத்த நாளுக்காக ஆயத்தம் செய்கிறது
சட்டவிதிகளே மனித விலங்கினை
கைவிலங்கு பூட்டி வைத்திருக்கிறது
உண்மையின் வழி சென்றவர்கள்
மரணத்தை வென்று தங்கள் பெயரை
நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்
உலகில் பரிபூரணமாக வாழ்ந்த ஒருவன்
இறப்பிற்குப் பிறகான வாழ்க்கையை
இறைவனிடம் வேண்டி நிற்க மாட்டான்
சத்தியத்தை அவதாரம் தான் பிறப்பெடுத்து
நிலைநிறுத்த வேண்டுமென்பதில்லை
சத்தியத்தின் அலைகள் உனது
உள் மையத்திலிருந்து புறப்பட வேண்டும்
எல்லோரும் செல்ல வேண்டியவர்கள்தான்
சகமனிதனிடம் அன்பை விதைத்தவர்கள்
இந்த உலகில் விருட்சமாக வளர்ந்து
கொண்டிருக்கிறார்கள்
மன்னிக்க முடியாத செயல்களைச் செய்யும்
உனக்கு இறைவன் பாவமன்னிப்பு வழங்குவார்
என நம்புகிறாயா?
வானமண்டலத்தில் சிறுதூசியான பூமிப்பந்தில்
இருந்து கொண்டு உன்னைக் கடவுள் என
எண்ணிக் கொண்டிருக்கின்றாயா
உன் செயலுக்காக நியாயந்தீர்க்கும்
கடவுளை நீ ஏற்றுக் கொள்ளமாட்டாய் அல்லவா
பூமியில் உனக்கு சுவர்க்கக் கனவு தேவையாய்
இருக்கிறது ஆனால் அதனை சிருஷ்டித்த கடவுளின்
சட்டத்திற்கு நீ ஏன் அடிபணிய மறுக்கிறாய்?
2
மனிதர்களே எங்கிருந்து நீங்கள்
அனுப்பப்பட்டு இருக்கின்றீர்கள் என்று
தெரியுமா உங்களுக்கு
வானமண்டலத்தின் பிரம்மாண்டத்தைப்
பொறுத்தவரை இந்த பூமி மிகச்சிறிய
துகள் தானே
இயற்கையின் சட்டதிட்டங்கள்
கடவுளின் சட்டதிட்டங்களைவிடக்
கடுமையானவை என்று உங்களுக்குத் தெரியுமா?
அடைக்கலம் கொடுத்த இயற்கையை
நீங்கள் அலட்சியப்படுத்துகிறீர்கள் அல்லவா
உங்கள் உள்ளுக்குள் செல்லும் காற்று
இயற்கையிடம் சென்று சொல்லிவிடுமல்லவா
நீங்கள் எப்பேர்பட்டவரென்று
இயற்கை நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும்
ஒரே சூரியனைத் தான் அளித்திருக்கும்
அந்த வெளிச்சத்தில் நீங்கள் காட்டு
விலங்கினைப் போல் வேட்டையாடத்தானே
அலைகின்றீர்கள்
உங்கள் உள்ளுக்குள் எரியும்
காமநெருப்பு இறுதியில் உங்களை
சாம்பலாக்கத்தானே செய்யும்
மதம் என்ற கிணற்றுக்குள்ளிலிருந்து வாருங்கள்
நீங்கள் பறக்க விசாலமான
வானம் இருக்கின்றதைப் பாருங்கள்
உங்களது எண்ணஅலைகளின் வக்கிரங்கள் தான்
கடலிலிருந்து ஆழிப்பேரலையாய் எழும்புகிறது
இயற்கை கரியை வைரமாக்குகிறது
நீங்கள் பூமியை பைத்தியக்காரவிடுதியாக்கி
வைத்திருக்கின்றீர்கள்
இயற்கை படைக்கும் போது பிரம்மனாகிறது
அழிக்கும் போது சிவனாகிறது
காக்கும் போது விஷ்ணுவாகிறது
இயற்கையிடம் மனிதன் தப்பமுடியாது
மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம்
சாட்சியாக நிலா மேலே இருக்கிறது
இயற்கை கண்ணாமூச்சியாடுகிறது
பூமிக்குள் இன்னொரு உலகம்
உங்களால் கண்டுபிடிக்க முடியாது
இயற்கையின் மரணச்சட்டம்
மனிதர்கள் எல்லோரையும் சமனாக்கி வைத்திருக்கிறது
சக்கரவர்த்திகள் எல்லாம் ஒருபிடி
மண்ணைக்கூட கொண்டு செல்லாமல் தான்
மயானத்தில் எரிந்தார்கள்
பூமியில் படைப்பு இருக்கவேண்டுமா என
இயற்கை நிர்ணயிக்கும் காலம்
வரப்போகிறது
மனிதனின் அரக்கத்தனத்தால்
இயற்கை விஸ்வரூபம் கொண்டு
பூமியை கபளீகரம் செய்துவிடும்
அந்த நாளில் மனிதஇனத்தை கடவுள்
நியாயந்தீர்த்து விடுவார்.