ராதாகிருஷ்ணன்
“இன்னும் 10 நிமிடம் மட்டும்” என மனதிற்குள் சொல்லி கொண்டேன் , காலை 7 மணிக்கு வந்து நின்றது , வெயிலேறி பின் வெயிலிறங்கி இப்போது இருள் மூடும் நேரம் வரை வந்துவிட்டது . கிளம்பலாம் என எண்ணும் போதெல்லாம் அம்மாவின் சோகமுகம் மனதில் வந்து அந்த எண்ணத்தை தடுத்துவிடுகிறது , அம்மாவின் ஞாபகம் வரும்பொழுது கூடவே அம்மாவிற்கு என்னை விட அவனிடம்தான் பாசம் அதிகம் எனும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடிவதில்லை , இப்போது இந்த எண்ணம் புன்னகைக்க கூடிய விசயமாக மாறிவிட்டது , ஆனால் சிறுவயதில் அப்படியில்லை , இதற்காக தினமும் அம்மாவிடம் மல்லுக்கட்டுவேன் , இத்தனைக்கும் எனக்குதான் எப்போதும் முதலிடம் , இருந்தாலும் எப்படியோ என் மனம் அதை கண்டு பிடித்து விடும் .
சிறுவயதிலேயே அண்ணன் தொட்டாசுனுங்கிதான் , யாரோடும் அளவாகத்தான் பேசுவான் , சொந்தக்காரர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் வரை வீடு பக்கமே எட்டி பார்க்க மாட்டான் , அவன் மலர்ச்சியாக பேசுவது அபூர்வம் , பெண்களை கண்டாலே நாணுவான் , ஒளிந்து கொள்வான் , அம்மா ,சித்தி தவிர அவன் வேறு பெண்களிடமே பேசியதை நான் பார்த்ததே இல்லை . அவன் மாந்தளிர் நிறம் , நெட்டையான உருவம் , பள்ளியில் நெட்டை என்ற கிண்டல் பெயரும் உண்டு , ஆனால் நேரில் யாரும் அப்படி கூப்பிட மாட்டார்கள் , அடி விழும் . சுருள் முடியை எண்ணெய் வைத்து அடக்கமாக சீவியிருப்பான் , நீள முகம் , அப்பாவின் இளவயது புகைப்படத்தினை பிரதியெடுத்தை போலவே இருப்பான் .
அம்மா அடிக்கடி என்னிடம் சொல்லும் ஓர் வாக்கியம் “அவனுக்கு நேரெதிர்டா நீ “என்று , ஆம் ,எனக்கென்று பெரிதாக கவலை ஏதும் இல்லை , என் நண்பர்கள் , கல்வி மற்றும் பணி தோழர்கள் எல்லோரும் இனியவர்களே , எப்போதும் பேசிக்கொண்டிருப்பேன் , திருகான் பழுதாகி எந்நேரமும் ஒழுகும் நீர்குழாய் போல . சிறு வயதுகளில் பண்டிகைகளுக்காக நாட்கள் எண்ணிஎண்ணி காத்திருப்பேன் , இப்போதும் அப்படிதான் , ஆனால் அதை வெளியே காட்டி கொள்வதில்லை , முன்பு எனக்கு ஆடைகள் எடுப்பதில் , கொண்டாடுவதில் விருப்பம் இருந்தது , இப்போது அது அம்மாவிற்கு ஜெஸியாவிற்கும் வாங்கித்தந்து அவர்களை மகிழ்ச்சியடைய செய்வதாக அது மாறியிருக்கிறது , ஆம் ஜெஸியா என் தோழிதான் , அண்ணன் திருமணத்திற்காக காத்திருக்கிறேன் , பின் அவள் என் மனைவியாகி விடுவாள் .
அம்மாவிற்கு வெள்ளையும் சந்தனமும் கலந்த கேரள வகை சீலையை தேடி வாங்கி கொடுப்பேன் ,அவளுக்கு அந்த ரக சேலை மிக பிடிக்கும் , அம்மா அந்த சேலையை குழந்தையின் குதூகலத்துடன் வாங்கி கொள்வாள் . அண்ணா என்னை விட இரு வருடம் மூத்தவன் , கல்வி முடித்த சமயத்தில் அவனுக்கு வேலை அமைய வில்லை, இரண்டு ஆண்டுகள் வேலை கிடைக்காமல் இருந்து , பின் அம்மாவின் புலம்பலை சகிக்காமல் பிடிக்காத ஒரு வேலையில் சேர்ந்து கொண்டான் , வேலை கிடைக்காத நாட்களில் அவன் முகத்திலிருந்த பிற மனிதர்களை எதிர்கொள்ள விரும்பாத வெறுத்த பார்வை அதன் பிறகு அவனில் இருந்து அகலவே இல்லை . எனக்கு படிப்பு முடித்தவுடனே நல்ல பணி அமைந்தது , நான் அவனுக்கு உடை வாங்கி கொடுக்கும் போதெல்லாம் ” ஏன் இவ்வளவு விலை கொடுத்து வாங்கினாய் ” என்று திட்டுவான் , ஆனால் அவனுக்கு என் மீது தணியாத பாசம் உண்டு ,ஆனால் வெளிக்காட்ட மாட்டான் , சிறுவயதில் என்னை இரண்டுபேர் அடித்து விட்டனர் என்று கோபம்கொண்டு இரத்தம் வரும்வரை அவர்களை பிளந்தெடுத்தான் , பின்பு வீட்டுக்கு வந்தும் எனக்கும் ஒரு அறை விட்டான் , இவனிடம் சொல்லாமலே இருந்திருக்கலாம் என அப்போது நினைத்து கொண்டேன் .
இனி காத்திருப்பது வீண் என தோன்றிய சமயத்தில் தூரத்தில் ஒரு வண்டியின் சத்தம் தூரத்தில் இருந்து கேட்டது , இது அண்ணனின் பைக் சத்தம்தான் , rx100 , அண்ணன் இந்த பைக் மீது பைத்தியம் கொண்டவன் , ஒருநாள் மூன்று முறை துடைப்பான் , அம்மா அதை பார்க்கும்போதெல்லாம் “இது போல நீயும் தினமும் குளிடா ” என்று கிண்டலடிப்பாள் , அவன் கண்டுகொள்ளாதது போல குனிந்து நின்று துடைப்பான் , அவன் முகத்தில் புன்னகை இருப்பதை அப்போது காண முடியும் , ஆம் ,அம்மா பேசும் போதுதான் அவனில் சிரிப்பை காண முடியும் , அம்மா வருந்தி வேலை செய்வதை விரும்ப மாட்டான் , தன் முதல் வருமானத்தில் அம்மாவிற்கு வாஷிங் மிசின் வாங்கி கொடுத்தான் , வீட்டின் முன் இருக்கும் தாழ்வான கூரை , அம்மாவின் பலகை இருக்கை, விறகுகள் அடுக்கப்பட்டிருக்கும் பெட்டி , குட்டிவீடு போல காட்சியளிக்கும் கோழிபெட்டி, சமையல் பொருள் அடுக்க வைக்கப்பட்டிருக்கும் ப்ளைவுட்டினால் செய்யப்பட்ட ரேக் என எல்லாம் அம்மாவுக்காக அவன் செய்து கொடுத்தது , அவன் ஏதாவது இப்படி செய்யும் போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்றே கண்டு பிடிக்க இயலாது , கேட்டால் ஏதும் சொல்ல மாட்டான்
கூட நிற்க வைத்து எடுபிடி வேலை வாங்குவான் , பொருளை தொட்டால் கூட திட்டுவான் , முடிவில் பாகங்களை இணைத்து பிரமாதமான பொருளாக ஆக்கிவிடுவான் , “நீ எங்க போய் ஆசாரி வேலையெல்லாம் கத்துகிட்ட “என்று கிண்டலடிப்பேன் , அப்போது அவனில் வெட்க சிரிப்பு தெரியும் .
படிப்பு முடிந்த பிறகுதான் அவன் மாற தொடங்கினான் , பேச்சு மிக குறைந்தது , எங்களூரில் அவனுக்கு சிநேகிதம் என்று அவனுக்கு ஒரே அண்ணா தான் உண்டு , அவர் பெயர் ரகு , திருமணமாகாதவர் , அரசியல், சித்தாந்தம் என சொல்லி வேலைக்கு எதுவும் போகாமல் ஊரூராக சுற்றி கொண்டிருப்பவர் , தடிமனான கண்கண்ணாடி போட்டு , முடியை மேல் நோக்கி வாரி சீவியிருப்பார் , பசை ஏதாவது தடவியிருப்பாரோ என சந்தேகம் வருமளவிற்கு சீவும் முடி கணத்தில் எப்படியிருக்குமோ அதுபோலவே எப்போதும் அவர் முடி இருக்கும் , அடர்த்தியான தாடி , அவர் தன் அழகின்மையை மறைக்கத்தான் தாடி வைத்திருக்கின்றார் என தோன்றும் , ஒருநாள் அதை விளையாட்டாக அண்ணனிடம் சொன்னேன் , அவன் கடிந்து கொண்டான் , “ரொம்ப அழகா இருக்கறதா உனக்கு நினப்போ ” என்று கேட்டான் . ஒருமுறை அண்ணனை தேடி வந்தவர் அண்ணன் வெளியே போயிருந்ததால் என்னிடம் பேச்சு கொடுத்தார் , அதன் பிறகு அவரை பார்த்தாலே தலைதெறிக்க ஓடி விடுவேன் , அகங்காரத்தின் உருவமாக அவர் தெரிந்தார் , மக்கள் எல்லாம் மடையர்கள் போலவும் ,இவர் பெரிய சிந்தனாவாதி போலவும் பேசினார் , பேச்சின் ஸ்வாரஸ்யத்தின் இடையே நான் “அப்பறம் ஏன் னா எப்போதும் பேயறைந்த மாதிரியே இருக்கீங்க” என்றேன் ,” மடையன்” என என்னை திட்டினார் , “சரிங்க புத்திசாலி அண்ணா “என்று திரும்ப சொன்னேன் , கோவித்து பதில் சொல்லாமல் கிளம்பினார் , பிறகு இரவு அண்ணன் வீட்டிற்கு வந்து “எனக்கு திமிர் அதிகமாகி விட்டது” என ஒரு மணிநேரம் அர்ச்சனை பண்ணினான் , அவன் திட்டி கொண்டே சமயலறைக்கு உள்ளே வர நான் தோசையை மெய்மறந்து சாப்பிட்டு கொண்டிருந்தேன் , என்னை பார்த்தவன் “உன்னை திட்டறதுக்கு பதில் சும்மா இருக்கலாம்” என்றான் , கோபம் மறைந்து முகத்தில் சிரிப்பை கட்டுப்படுத்த திணறுவது தெரிந்தது .
பைக்கின் முகப்புஒளி இருளை கிழித்து வந்தது , நிறுத்தியதும் ஒளி அணைத்து மீண்டும் இருள் சூழ்ந்து கொண்டது , என்னை அவன் கவனிக்க வில்லை , மாடி ஏறி கதவு திறந்து உள்சென்றதும் கதவை சாத்தி கொண்டான் , வீட்டில் கூட இப்படித்தான் , தன் அறைக்குள் போய் தாளிட்டு கொள்வான் , அம்மா உண்பதற்காக தட்டும்போது மட்டுமே வெளியே வருவான் , நான் அவன் அறைக்குள் வருவதை விரும்ப மாட்டான் , ஆனால் என் எல்லா விஷயத்திலும் தலையிட்டு அவனே முடிவும் எடுத்து என்னிடம் செயல்படுத்த மட்டும் சொல்வான் , பிடிக்கல என்றால் “மூடிட்டு நான் சொல்றத செய் ” என்பான் , ஆனால் எப்போதும் சரியானதை மட்டுமே எனக்கு தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறான் , என் சிவில் இன்ஜினியரிங் படிப்பு , என் பைக் என என்னுடையதெல்லாம் பெரும்பாலும் அவன் தேர்ந்தெடுத்து கொடுத்ததுதான் .
மூடிய கதவை பார்த்தபடி ஒரு பத்து நிமிடம் பொறுத்திருந்தேன் , பின் படியேறி கதவை தட்டினேன் , கதவை திறந்தவன் ஆச்சிரிய முகபாவத்துடன் என்னை பார்த்தான் , “வா “என்று உள்ளே போனான் , அறையில் இருக்கைகள் ஏதும் இல்லை , ஒரு பாயை எடுத்து விரித்து அமர சொன்னான் அவன் எதிரில் வெறும் தரையில் அமர்ந்தான் , தாடி வைத்திருந்தான் , சட்டை இல்லாத அவன் மேலுடம்பில் அவன் மிக இளைத்திருந்தது தெரிந்தது ,கோபம் வந்து “சோறெல்லாம் திங்க மாட்டாயா ” என்றேன் , அவன் சிரித்த முகத்துடன் என்னை பார்த்தான் , வீட்டில் இருக்கும் போது இருந்த அவன் முகம் அப்போதுதான் திரும்ப வந்தது . பின்
அறையில் கண்களால் அலைந்தேன் ,முதல் தோற்றத்தில் பாழடைந்த வீடு போல இருந்தது ,
பிறகு கவனிக்க அது புது வீடுதான் , சுவரின் நிறமும் , வெளிச்சம் குறைவான மின்விளக்கும் அத்தகைய தோற்றத்தை கொடுப்பதை உணர்ந்தேன் , அவன் அமர்ந்த சுவரின் வலதுஓரத்தில் இருந்த அடுக்கின் மேல் வரிசையில் சில புத்தகங்கள் இருந்தன , அடுத்த அடுக்கில் துணிகள் சுருண்டு கிடந்தன . அவன் ” என்ன பாக்கற ” என்றான் , கொஞ்சம் “வெளிச்சமான லைட்டையாவது போட வேண்டியதுதான ” என்றேன் , அவன் பதிலேதும் சொல்ல வில்லை
“எதுக்கு இந்நேரம் வந்திருக்க” என்றான் , “நான் காலைல வந்தது” என்றேன் ,அவன் முகத்தில் மெல்லதிர்ச்சியும் சோகமும் எட்டிப்பார்த்தன , “போன் பண்ண வேண்டியதுதான ‘என்றான் , “மாசத்துக்கு ஒரு நம்பர் மாத்தறவன் நம்பரெல்லாம் எனக்கெப்படி தெரியும் “என்றேன் , அவன் பதில் சொல்லாமல் இருந்தான்
“ஏன் இப்படி காத்திருக்க , நான் இல்லைனா இன்னொரு நாள் வர வேண்டியதுதான ” என்றான் , “அம்மா பார்த்துட்டு வர சொல்லிச்சு , மூணு நாளா , அம்மாட்ட உன்னை பார்க்கல னு சொன்னா அழும் , அதான் எப்படியும் உன்னை பார்த்துட்டுதான் போகணும் னு இங்கயே இருந்துட்டேன் ” என்றேன் .
“சாப்ட்டயா “என்றான் ,நான் அதை பொருட்படுத்தாது அவனை நோக்கி பார்த்தபடி இருந்தேன் , கண்கள் சந்திப்பதை தவிர்த்தபடி பார்வை வேறுவேறு பக்கம் திரும்பியபடி இருந்தான் .
பிறகு ” ஏதாவது விஷயமா ” என்றான் , ” வேறென்ன ,உன் பிறந்த நாள்தான் , சனிக்கிழமை ,அம்மா உன்னை வீட்டுக்கு கண்டிப்பா வர சொல்லிச்சு , என்னை அலைய விட்டுடாத , போன முறை நீ வராம போனதால என்கிட்ட கொடுத்துவிட்டு , நான் அதை வேற ஒருத்தருக்கு கொடுத்து , நீ அதை சாப்பிட்ட னு பொய் சொன்னேன் , இந்த முறை அப்படி ஏதும் பண்ணிடாத ” என்றேன் . எங்கள் இருவரின் பிறந்த நாளை அம்மா எப்போதும் விமரிசையாக கொண்டாடுவாள் , விமரிசை என்பது உணவில், பாயசம் ,அவில் ,இஞ்சிப்புளி , இரண்டு பொரியல் ,கூட்டு என அமர்க்களப்படும் , என் பிறந்த நாளில் என் நண்பர்களை உணவிற்கு அழைத்து விடுவேன் , அவன் பிறந்த நாளுக்கு யாரையும் அழைக்க மாட்டான் என்பதால் அவன் பிறந்த நாளுக்கும் என் நண்பர்களை அழைப்பேன்! , நாங்கள் வேலைக்கு போகும் வயது வந்தும் அம்மா இவ்வியல்பை மாற்றிக்கொள்ள வில்லை .
இந்த முறை அண்ணனின் பிறந்த நாள் நிகழ்விற்கு ஒரு மாதம் முன்பிலிருந்தே நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள் , “போய் அவனை பார்த்து வா ” ஒவ்வொருநாள் இரவும் எனக்காக வாசலில் காத்திருந்து மலர்ச்சியோடு ‘பார்த்தாயா ” என்பாள் , சோகமும் அண்ணன் மேல் கோபமுமாக வரும் , நாலாவது நாளாக காத்திருந்து இன்றுதான் இவனை பிடித்தேன் , இவன் அறை புறநகர் தாண்டி இந்த பொட்டல்வெளியில் நான்கைந்து வீடுகளில் ஒன்றில் இருந்தது , 7 மணிக்கெல்லாம் இங்கு இருட்டும் நாய்களும்தான் இருக்கும் . இங்கு வரவே கூடாது என்று நினைப்பேன் , ஆனால் அம்மாவிடம் பதில் சொல்ல இயலாத குற்றஉணர்வு இங்கு கொண்டுவந்து என்னை நிறுத்தி விடும் .இன்று காலையில் அவள் இஞ்சிப்புளி செய்து கொண்டிருந்தாள் , அண்ணனுக்கு பிடிக்கும் என்று. அவன் மெதுவான குரலில் ” வேலையிருக்கு ,இன்னொரு நாள் வரேன் ” என்றான் ,
” நீ மூடிட்டு வா ,வேலை நாசமா போட்டும் ” என்று கத்தினேன் , அவன் முகம் துளி கூட அதிர்வு இல்லாமல் இருந்தது . அதை பார்க்க கோபம் வந்தது , பிறகு கோபம் கொள்வது வீண் என்று அமைதியானேன் .
” அண்ணா , இப்ப அம்மாக்கு அடிக்கடி உடம்பு முடியாம ஆயிடுது , அடிக்கடி யதோ நினைச்சு அழறா , நீ வந்தா எல்லாம் சரியாகிடும் , வாரம் ஒருமுறை வா போதும் , அம்மா பழையபடி ஆயிடுவா , என்னை விட உன் மேலதான் அம்மாக்கு பிரியம் அதிகம் “என்றேன் , அவன் தரையை பார்த்தபடி அமைதியாக இருந்தான் .
பிறகு என் மனதிலிருந்ததை வெகுநாளாக அவனை பற்றி எண்ணியிருந்ததை கொட்டிவிட்டேன் .” அண்ணா , நீ புக்கு படிக்கறவன் , அறிவாளி , உன்னோட இந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும் , நீ பேசறது உன்னோட பார்வை எல்லாமே எனக்கு புதுசா தெரியும் , மனசுக்குள்ள உன்னை பெருமையா நினைச்சுக்குவேன் ” , ஆனா இது இப்படி உன்னை தனியாளாக்கும் நான் நினைக்கவே இல்ல , அண்ணா எனக்கு தெரிஞ்சது இதுதான் , வாழ்க்கைக்கிறது சந்தோசமா இருக்கறதுக்குத்தான் , கூட இருக்கறவங்கள சந்தோசமா வச்சுக்கறதும்தான் , ஆனா நீ இப்படி விலகி போயி ,நீயும் இப்படி இருட்டுக்குள்ள உட்கார்ந்து , இதெல்லாம் எதுக்குன்னா ” ,” சரி ,ஏதோ ஒரு விஷயம் சரி னு நம்பி அது பின்னாடி போற , அது கடைசில தப்புனு தெரிஞ்சா என்ன பண்ணுவ , வாழ்க்கையை , உலகத்தை அப்படி ஒரு தியரிலயோ இல்லனா அந்த சோடாபுட்டி ரகு அண்ணா ‘சித்தாந்தம் ‘னு ஒரு வார்த்தை சொல்லுவாரே அதுலயே கொண்டு வந்திட முடியாது “,
” நீ என்ன வேணும்னாலும் செய் ,அதுக்காக ஏன் உன்னோட சந்தோசத்தை கை விடற , நான் உன் fb பக்கத்தை தினமும் பார்ப்பேன் , எப்பவும் யாரையாவது திட்டுவ , கவர்மெண்ட் ,அரசியல்வாதி அதுஇது னு , உன்னோட பிரண்ட்ஸ் லிஸ்ட் ல இருக்குறவனுகளும் இதே ரகம்தான் , சந்தோசமான பதிவே உன்னோடதுல பார்த்ததில்ல , நீ எழுதறது எல்லாம் சரியா கூட இருக்கலாம் , ஆனா சந்தோசம் இல்லாத சரி ங்றது உண்மைல சரியான ஒன்னா இருக்காது , அதுக்கு உதாரணமா உன்னையே சொல்லலாம் , உனக்கு என்ன குறை இருக்கு , ஆனா எப்பவும் வீடு இடிஞ்சு விழந்தவன் மாதிரியே இருக்க . ” என எண்ணுவதையெல்லாம் கொட்டினேன் .
பிறகு அவன் திட்டுவான் என எதிர்பார்த்தேன் , மாறாக புன்னகைத்தான் , “பேசற அளவு வளந்திட்ட ” என்றான் , பின் கொஞ்ச நேரம் ஏதும் பேசிக்கொள்ள வில்லை , பின் அமைதியான குளத்தில் சட்டென சலனங்கள் வந்ததை போல ” எனக்கு நான் கிற என்னமோ , என்னோட சந்தோஷமோ பெரிய விஷயம் இல்ல ,எனக்கு ஒருசில கனவுகள் இருக்கு , நான் சில விஷயங்களை என் கடமையா நினைக்கிறேன் , அதை நோக்கி போறது மட்டும்தான் எனக்கு நிம்மதி கொடுக்கும் , என்னால வீட்டுல உன்னை போல இருக்க முடியாது .. அதான் எனக்கு பதில் நீ சந்தோசமா இருக்கையே அது போதும் ” என்றான் .
மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தேன் ,பின் ” அண்ணா , எனக்கு நீ பேசறது ரகு அண்ணா பேசறததான் ஞாபக படுத்தது , அவரை நான் தன்னைத்தானே வருத்தி கொள்ற ரகம் னு நினைப்பேன் , உண்மைல இங்க ஒரு வசதியும் இல்லாதவன் கூட சந்தோசமாதான் இருக்கான் , சந்தோசம் என்பது வசதில இல்ல ,நீங்களா அவங்களை சந்தோஷமில்லாதவங்களா நினைச்கறீங்க , அதுக்கு காரணம் அவங்களை மேல இருக்கறவங்க சுரண்டராங்க னு நினைச்சுக்குவீங்க , ஆனா இது மனித குணம் , இதே வசதியில்லாதவன் மேல போய் இருந்தானாலும் இப்படித்தான் மத்தவங்களை சுரண்டிட்டு இருப்பான் ,இத மாத்த முடியாது , ஆனா இந்த இயல்புக்கும் சந்தோஷத்துக்கும் சம்பந்தமில்லை , எந்த நிலையிலும் சந்தோசமா இருக்க முடியும் , அம்மா நம்ம இரண்டு பேத்தை அப்பா இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டு வளத்தாங்க , நீயோ நானோ என்ன சோகமாவா வளந்தோம் , அம்மாக்கு அப்பா இல்லாதத தவிர வேறென்ன சோகம் இருந்தது ” என்றேன்
அவன் ஏதும் பதில் சொல்லாமல் எழுந்தான் ,பின் “டைம் ஆச்சு கிளம்பு” என்றான் , பிறகு ஆணியில் மாட்டியிருந்த சட்டையில் கைவிட்டு பணம் எடுத்து என்னிடம் கொடுத்து “வைத்து கொள் “என்றான் , “அண்ணா ,எங்கிட்ட இருக்கு ,வேணாம் என்றேன் ” “பரவால்ல வை ” என்று என் மேல்சட்டை பாக்கெட்டில் திணித்தான் .
நான் முக அசைவினால் விடைபெற்று கிளம்பி வாசல் வந்தேன் , அண்ணா பின்னால் இருந்து ” டே அந்த பொண்ணு கிறிஸ்டினா ” என்றான் , தயக்கம் கலந்த வெட்கத்துடன் திரும்பி பார்த்தேன்.
“பொண்ணு நல்லாத்தான் இருக்கா ” என்றான் சிரித்தபடி , “சரி வரேன் ” சொல்லி படியிறங்கி பைக் பக்கம் வந்த போதுதான் சாவியை மறந்து மேலேயே விட்டு வந்தது ஞாபகம் வந்தது , திரும்பி அறைக்குள் போன போது அவன் ஒரு புத்தகத்தை திறந்து அதனுள் மூழ்கியிருந்தை பார்த்தேன் , அவன் திறந்த பக்கத்தில் அம்மாவின் ஒரு பழைய போட்டோ இருந்தது , சட்டென நான் வந்ததை உணர்ந்து புத்தகத்தை மூடி என்ன என்பது போல் என்னை பார்த்தான் ,” சாவி மறந்துட்டேன்” என்று சொல்லி எடுத்து வெளியே வந்தேன் , பின்தான் அவன் கண்கள் கலங்கியிருப்பதை காண தாங்க முடியாமல் சட்டென வெளியேறியதை உணர்ந்தேன் .
பைக்கை எடுத்து கட் ரோட்டிலிருந்து மெயின் ரோடிற்க்கு வந்து நிறுத்தினேன் , பின்பு திரும்பி அவன் அறையை பார்த்தபோது கதவு மூடப்படாமல் இருந்ததை கண்டேன் .
எழுத்துப் பிழைகள் அதிகமாக உள்ளன. கவனிக்கவும்.
ஏதோ மனோத்தஃதுவக் கதை போல புரியாமல் இருக்கிறதே?அண்ணா ஒரு
eccentric ஆக இருக்கிறாரே?விளக்க முடியுமா?
ராதாகிருஷ்ணன்
radhaengr22@gmail.com