காத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை

ராதாகிருஷ்ணன்

“இன்னும் 10 நிமிடம் மட்டும்” என மனதிற்குள் சொல்லி கொண்டேன் , காலை 7 மணிக்கு வந்து நின்றது , வெயிலேறி  பின் வெயிலிறங்கி  இப்போது இருள் மூடும் நேரம் வரை வந்துவிட்டது . கிளம்பலாம் என எண்ணும்  போதெல்லாம் அம்மாவின் சோகமுகம் மனதில் வந்து  அந்த எண்ணத்தை தடுத்துவிடுகிறது  , அம்மாவின் ஞாபகம் வரும்பொழுது கூடவே  அம்மாவிற்கு என்னை விட அவனிடம்தான்  பாசம் அதிகம் எனும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடிவதில்லை , இப்போது இந்த எண்ணம்   புன்னகைக்க கூடிய விசயமாக மாறிவிட்டது , ஆனால்   சிறுவயதில் அப்படியில்லை , இதற்காக தினமும் அம்மாவிடம் மல்லுக்கட்டுவேன் , இத்தனைக்கும் எனக்குதான் எப்போதும் முதலிடம்  , இருந்தாலும் எப்படியோ என் மனம் அதை கண்டு பிடித்து விடும் .

சிறுவயதிலேயே அண்ணன் தொட்டாசுனுங்கிதான் , யாரோடும்  அளவாகத்தான் பேசுவான் , சொந்தக்காரர்கள்  வீட்டிற்கு வந்தால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் வரை வீடு பக்கமே எட்டி பார்க்க மாட்டான் , அவன் மலர்ச்சியாக  பேசுவது அபூர்வம்  , பெண்களை கண்டாலே நாணுவான்  , ஒளிந்து கொள்வான்  , அம்மா ,சித்தி தவிர அவன் வேறு பெண்களிடமே  பேசியதை நான் பார்த்ததே இல்லை . அவன் மாந்தளிர்  நிறம் , நெட்டையான உருவம் , பள்ளியில்  நெட்டை  என்ற கிண்டல் பெயரும்  உண்டு , ஆனால் நேரில் யாரும் அப்படி கூப்பிட மாட்டார்கள் , அடி விழும் . சுருள் முடியை எண்ணெய் வைத்து அடக்கமாக  சீவியிருப்பான்  , நீள முகம் , அப்பாவின் இளவயது புகைப்படத்தினை  பிரதியெடுத்தை  போலவே இருப்பான் .

அம்மா அடிக்கடி என்னிடம்  சொல்லும் ஓர் வாக்கியம் “அவனுக்கு நேரெதிர்டா நீ “என்று , ஆம் ,எனக்கென்று  பெரிதாக கவலை ஏதும் இல்லை , என் நண்பர்கள் , கல்வி மற்றும் பணி தோழர்கள்  எல்லோரும் இனியவர்களே  , எப்போதும் பேசிக்கொண்டிருப்பேன்  , திருகான் பழுதாகி  எந்நேரமும் ஒழுகும்  நீர்குழாய் போல . சிறு வயதுகளில்  பண்டிகைகளுக்காக நாட்கள் எண்ணிஎண்ணி காத்திருப்பேன்  , இப்போதும் அப்படிதான் , ஆனால் அதை வெளியே காட்டி கொள்வதில்லை , முன்பு எனக்கு ஆடைகள் எடுப்பதில் , கொண்டாடுவதில்  விருப்பம் இருந்தது , இப்போது அது அம்மாவிற்கு ஜெஸியாவிற்கும் வாங்கித்தந்து அவர்களை மகிழ்ச்சியடைய  செய்வதாக அது  மாறியிருக்கிறது , ஆம் ஜெஸியா என் தோழிதான்  , அண்ணன் திருமணத்திற்காக காத்திருக்கிறேன்  , பின் அவள் என் மனைவியாகி விடுவாள் .

அம்மாவிற்கு வெள்ளையும் சந்தனமும்  கலந்த கேரள வகை சீலையை  தேடி வாங்கி கொடுப்பேன் ,அவளுக்கு அந்த ரக சேலை மிக பிடிக்கும் , அம்மா அந்த சேலையை குழந்தையின் குதூகலத்துடன்  வாங்கி கொள்வாள் . அண்ணா என்னை விட இரு வருடம் மூத்தவன்  , கல்வி முடித்த சமயத்தில் அவனுக்கு வேலை அமைய வில்லை, இரண்டு ஆண்டுகள் வேலை கிடைக்காமல் இருந்து , பின் அம்மாவின் புலம்பலை  சகிக்காமல்  பிடிக்காத ஒரு வேலையில் சேர்ந்து கொண்டான் , வேலை கிடைக்காத  நாட்களில்  அவன் முகத்திலிருந்த பிற மனிதர்களை எதிர்கொள்ள விரும்பாத  வெறுத்த பார்வை அதன் பிறகு அவனில் இருந்து அகலவே இல்லை .  எனக்கு படிப்பு  முடித்தவுடனே  நல்ல பணி அமைந்தது , நான் அவனுக்கு￰ உடை வாங்கி கொடுக்கும் போதெல்லாம் ” ஏன் இவ்வளவு விலை கொடுத்து வாங்கினாய் ” என்று திட்டுவான்  , ஆனால் அவனுக்கு என் மீது தணியாத  பாசம் உண்டு ,ஆனால் வெளிக்காட்ட  மாட்டான் , சிறுவயதில் என்னை இரண்டுபேர் அடித்து விட்டனர் என்று கோபம்கொண்டு இரத்தம்  வரும்வரை  அவர்களை பிளந்தெடுத்தான்  , பின்பு வீட்டுக்கு வந்தும் எனக்கும் ஒரு அறை விட்டான்  , இவனிடம்  சொல்லாமலே  இருந்திருக்கலாம் என அப்போது நினைத்து கொண்டேன் .

இனி காத்திருப்பது வீண் என தோன்றிய சமயத்தில் தூரத்தில்  ஒரு வண்டியின்  சத்தம் தூரத்தில் இருந்து கேட்டது , இது அண்ணனின் பைக் சத்தம்தான்  , rx100 , அண்ணன் இந்த பைக் மீது  பைத்தியம் கொண்டவன்  , ஒருநாள் மூன்று முறை துடைப்பான்  , அம்மா அதை பார்க்கும்போதெல்லாம் “இது போல நீயும் தினமும் குளிடா ” என்று கிண்டலடிப்பாள்  , அவன் கண்டுகொள்ளாதது  போல குனிந்து நின்று துடைப்பான் , அவன் முகத்தில் புன்னகை இருப்பதை அப்போது காண முடியும் , ஆம் ,அம்மா பேசும் போதுதான் அவனில்  சிரிப்பை  காண முடியும் , அம்மா வருந்தி வேலை செய்வதை விரும்ப மாட்டான் , தன் முதல் வருமானத்தில்  அம்மாவிற்கு வாஷிங் மிசின் வாங்கி கொடுத்தான் , வீட்டின் முன் இருக்கும் தாழ்வான கூரை , அம்மாவின் பலகை இருக்கை, விறகுகள்  அடுக்கப்பட்டிருக்கும்  பெட்டி , குட்டிவீடு போல காட்சியளிக்கும்  கோழிபெட்டி,  சமையல்  பொருள் அடுக்க வைக்கப்பட்டிருக்கும்  ப்ளைவுட்டினால் செய்யப்பட்ட ரேக்  என  எல்லாம் அம்மாவுக்காக  அவன் செய்து கொடுத்தது , அவன் ஏதாவது இப்படி செய்யும் போது என்ன செய்து கொண்டிருக்கிறான்  என்றே கண்டு பிடிக்க இயலாது , கேட்டால் ஏதும் சொல்ல மாட்டான்

கூட நிற்க வைத்து  எடுபிடி  வேலை வாங்குவான் , பொருளை தொட்டால்  கூட திட்டுவான் , முடிவில் பாகங்களை இணைத்து பிரமாதமான பொருளாக  ஆக்கிவிடுவான் , “நீ எங்க போய் ஆசாரி  வேலையெல்லாம் கத்துகிட்ட  “என்று கிண்டலடிப்பேன்  ,  அப்போது அவனில் வெட்க சிரிப்பு தெரியும் .

படிப்பு முடிந்த பிறகுதான் அவன் மாற தொடங்கினான்  , பேச்சு மிக குறைந்தது , எங்களூரில்  அவனுக்கு சிநேகிதம்  என்று அவனுக்கு ஒரே அண்ணா தான் உண்டு , அவர் பெயர் ரகு , திருமணமாகாதவர்  , அரசியல், சித்தாந்தம் என சொல்லி வேலைக்கு எதுவும் போகாமல்  ஊரூராக  சுற்றி கொண்டிருப்பவர்  , தடிமனான  கண்கண்ணாடி  போட்டு , முடியை  மேல் நோக்கி வாரி சீவியிருப்பார்  , பசை  ஏதாவது தடவியிருப்பாரோ என சந்தேகம் வருமளவிற்கு  சீவும் முடி கணத்தில் எப்படியிருக்குமோ  அதுபோலவே எப்போதும் அவர் முடி இருக்கும் , அடர்த்தியான  தாடி , அவர் தன் அழகின்மையை மறைக்கத்தான்  தாடி வைத்திருக்கின்றார்  என தோன்றும் , ஒருநாள் அதை விளையாட்டாக அண்ணனிடம் சொன்னேன் , அவன் கடிந்து  கொண்டான் , “ரொம்ப அழகா இருக்கறதா  உனக்கு நினப்போ ”  என்று கேட்டான்  .  ஒருமுறை  அண்ணனை தேடி வந்தவர் அண்ணன் வெளியே போயிருந்ததால்  என்னிடம் பேச்சு கொடுத்தார் , அதன் பிறகு அவரை பார்த்தாலே தலைதெறிக்க ஓடி விடுவேன் , அகங்காரத்தின் உருவமாக  அவர் தெரிந்தார் , மக்கள் எல்லாம் மடையர்கள்  போலவும் ,இவர் பெரிய சிந்தனாவாதி போலவும் பேசினார் , பேச்சின் ஸ்வாரஸ்யத்தின் இடையே நான்  “அப்பறம் ஏன் னா எப்போதும் பேயறைந்த  மாதிரியே இருக்கீங்க”  என்றேன் ,” மடையன்” என என்னை திட்டினார் , “சரிங்க புத்திசாலி அண்ணா “என்று திரும்ப சொன்னேன் , கோவித்து  பதில் சொல்லாமல் கிளம்பினார் , பிறகு இரவு அண்ணன்  வீட்டிற்கு வந்து “எனக்கு திமிர் அதிகமாகி  விட்டது” என ஒரு மணிநேரம் அர்ச்சனை  பண்ணினான் , அவன் திட்டி  கொண்டே சமயலறைக்கு உள்ளே வர நான் தோசையை  மெய்மறந்து சாப்பிட்டு கொண்டிருந்தேன் , என்னை பார்த்தவன்  “உன்னை திட்டறதுக்கு  பதில் சும்மா  இருக்கலாம்” என்றான்  , கோபம் மறைந்து முகத்தில் சிரிப்பை கட்டுப்படுத்த திணறுவது தெரிந்தது .

பைக்கின் முகப்புஒளி இருளை  கிழித்து வந்தது , நிறுத்தியதும்  ஒளி அணைத்து மீண்டும்  இருள் சூழ்ந்து கொண்டது , என்னை அவன் கவனிக்க வில்லை , மாடி  ஏறி கதவு திறந்து உள்சென்றதும்  கதவை  சாத்தி கொண்டான் , வீட்டில் கூட இப்படித்தான் , தன் அறைக்குள் போய் தாளிட்டு  கொள்வான் , அம்மா உண்பதற்காக  தட்டும்போது  மட்டுமே வெளியே வருவான் , நான் அவன் அறைக்குள் வருவதை விரும்ப மாட்டான் , ஆனால் என் எல்லா விஷயத்திலும் தலையிட்டு  அவனே முடிவும்  எடுத்து என்னிடம் செயல்படுத்த மட்டும் சொல்வான் , பிடிக்கல என்றால் “மூடிட்டு  நான் சொல்றத செய் ” என்பான்  , ஆனால் எப்போதும் சரியானதை  மட்டுமே எனக்கு தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறான்  , என் சிவில் இன்ஜினியரிங் படிப்பு , என் பைக் என என்னுடையதெல்லாம்  பெரும்பாலும் அவன் தேர்ந்தெடுத்து  கொடுத்ததுதான் .

மூடிய கதவை பார்த்தபடி  ஒரு பத்து நிமிடம் பொறுத்திருந்தேன்  , பின் படியேறி  கதவை தட்டினேன்  , கதவை திறந்தவன்  ஆச்சிரிய முகபாவத்துடன்  என்னை பார்த்தான் , “வா “என்று உள்ளே போனான் , அறையில் இருக்கைகள் ஏதும் இல்லை , ஒரு பாயை  எடுத்து விரித்து அமர  சொன்னான்  அவன் எதிரில் வெறும் தரையில் அமர்ந்தான்  , தாடி வைத்திருந்தான்  , சட்டை இல்லாத  அவன் மேலுடம்பில்  அவன் மிக இளைத்திருந்தது  தெரிந்தது ,கோபம் வந்து “சோறெல்லாம்  திங்க  மாட்டாயா ” என்றேன் , அவன் சிரித்த முகத்துடன் என்னை பார்த்தான் , வீட்டில் இருக்கும் போது இருந்த அவன் முகம் அப்போதுதான்  திரும்ப வந்தது .  பின்

அறையில்  கண்களால் அலைந்தேன்  ,முதல் தோற்றத்தில்   பாழடைந்த  வீடு போல இருந்தது ,

பிறகு கவனிக்க அது புது வீடுதான் , சுவரின்  நிறமும் , வெளிச்சம் குறைவான மின்விளக்கும் அத்தகைய  தோற்றத்தை கொடுப்பதை  உணர்ந்தேன் , அவன் அமர்ந்த  சுவரின் வலதுஓரத்தில் இருந்த அடுக்கின் மேல் வரிசையில்  சில புத்தகங்கள் இருந்தன , அடுத்த அடுக்கில் துணிகள் சுருண்டு  கிடந்தன  . அவன் ”  என்ன பாக்கற ”  என்றான் , கொஞ்சம் “வெளிச்சமான  லைட்டையாவது  போட வேண்டியதுதான ” என்றேன் , அவன் பதிலேதும்  சொல்ல வில்லை

“எதுக்கு இந்நேரம் வந்திருக்க” என்றான் , “நான் காலைல வந்தது” என்றேன் ,அவன் முகத்தில் மெல்லதிர்ச்சியும்  சோகமும்  எட்டிப்பார்த்தன , “போன் பண்ண வேண்டியதுதான ‘என்றான் , “மாசத்துக்கு ஒரு நம்பர் மாத்தறவன்  நம்பரெல்லாம்  எனக்கெப்படி  தெரியும் “என்றேன் , அவன் பதில் சொல்லாமல் இருந்தான்

“ஏன் இப்படி காத்திருக்க  , நான்  இல்லைனா இன்னொரு நாள் வர வேண்டியதுதான ”  என்றான் ,   “அம்மா பார்த்துட்டு வர சொல்லிச்சு  , மூணு நாளா , அம்மாட்ட உன்னை பார்க்கல னு சொன்னா அழும் , அதான் எப்படியும் உன்னை பார்த்துட்டுதான் போகணும் னு இங்கயே  இருந்துட்டேன் ”  என்றேன் .

“சாப்ட்டயா  “என்றான் ,நான் அதை பொருட்படுத்தாது  அவனை நோக்கி பார்த்தபடி இருந்தேன் , கண்கள் சந்திப்பதை  தவிர்த்தபடி  பார்வை வேறுவேறு பக்கம் திரும்பியபடி  இருந்தான் .

பிறகு ”  ஏதாவது விஷயமா ”  என்றான் , ”  வேறென்ன  ,உன் பிறந்த நாள்தான் , சனிக்கிழமை ,அம்மா உன்னை வீட்டுக்கு கண்டிப்பா வர சொல்லிச்சு , என்னை அலைய விட்டுடாத , போன முறை நீ வராம போனதால  என்கிட்ட  கொடுத்துவிட்டு , நான் அதை வேற ஒருத்தருக்கு கொடுத்து ,  நீ  அதை சாப்பிட்ட  னு பொய் சொன்னேன் , இந்த முறை அப்படி ஏதும் பண்ணிடாத  ”  என்றேன் . எங்கள் இருவரின் பிறந்த நாளை அம்மா எப்போதும் விமரிசையாக  கொண்டாடுவாள்  , விமரிசை  என்பது உணவில்,  பாயசம்  ,அவில் ,இஞ்சிப்புளி  , இரண்டு பொரியல் ,கூட்டு என அமர்க்களப்படும் , என் பிறந்த நாளில் என் நண்பர்களை உணவிற்கு அழைத்து விடுவேன் , அவன் பிறந்த நாளுக்கு யாரையும் அழைக்க மாட்டான் என்பதால் அவன் பிறந்த நாளுக்கும்  என் நண்பர்களை  அழைப்பேன்!  , நாங்கள் வேலைக்கு போகும் வயது வந்தும்  அம்மா இவ்வியல்பை மாற்றிக்கொள்ள  வில்லை .

இந்த முறை அண்ணனின் பிறந்த நாள் நிகழ்விற்கு ஒரு மாதம் முன்பிலிருந்தே  நச்சரிக்க  ஆரம்பித்து விட்டாள் , “போய் அவனை பார்த்து வா ”  ஒவ்வொருநாள்  இரவும் எனக்காக வாசலில் காத்திருந்து  மலர்ச்சியோடு  ‘பார்த்தாயா ” என்பாள்  , சோகமும்  அண்ணன் மேல் கோபமுமாக  வரும் ,  நாலாவது  நாளாக காத்திருந்து இன்றுதான் இவனை பிடித்தேன்  , இவன் அறை புறநகர் தாண்டி இந்த பொட்டல்வெளியில்  நான்கைந்து வீடுகளில் ஒன்றில் இருந்தது , 7 மணிக்கெல்லாம் இங்கு  இருட்டும்  நாய்களும்தான்  இருக்கும் . இங்கு வரவே கூடாது என்று நினைப்பேன் , ஆனால் அம்மாவிடம் பதில் சொல்ல இயலாத குற்றஉணர்வு இங்கு கொண்டுவந்து என்னை நிறுத்தி  விடும் .இன்று  காலையில் அவள் இஞ்சிப்புளி  செய்து கொண்டிருந்தாள் , அண்ணனுக்கு பிடிக்கும் என்று. அவன் மெதுவான  குரலில் ” வேலையிருக்கு  ,இன்னொரு நாள் வரேன் ”  என்றான் ,

”  நீ மூடிட்டு வா ,வேலை நாசமா  போட்டும்  ”  என்று கத்தினேன்  , அவன் முகம் துளி கூட அதிர்வு  இல்லாமல் இருந்தது . அதை பார்க்க கோபம் வந்தது , பிறகு கோபம் கொள்வது வீண் என்று அமைதியானேன்  .

” அண்ணா , இப்ப அம்மாக்கு அடிக்கடி உடம்பு முடியாம ஆயிடுது , அடிக்கடி யதோ நினைச்சு அழறா , நீ வந்தா எல்லாம் சரியாகிடும் , வாரம் ஒருமுறை வா போதும் , அம்மா பழையபடி ஆயிடுவா  , என்னை விட உன் மேலதான் அம்மாக்கு பிரியம் அதிகம் “என்றேன் , அவன் தரையை  பார்த்தபடி  அமைதியாக  இருந்தான் .

பிறகு என் மனதிலிருந்ததை  வெகுநாளாக  அவனை பற்றி எண்ணியிருந்ததை  கொட்டிவிட்டேன்  .”  அண்ணா , நீ புக்கு  படிக்கறவன்  , அறிவாளி  , உன்னோட இந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும் , நீ பேசறது உன்னோட பார்வை எல்லாமே எனக்கு புதுசா தெரியும் ,  மனசுக்குள்ள உன்னை பெருமையா  நினைச்சுக்குவேன் ” , ஆனா இது இப்படி உன்னை தனியாளாக்கும்  நான் நினைக்கவே இல்ல , அண்ணா எனக்கு தெரிஞ்சது இதுதான் , வாழ்க்கைக்கிறது  சந்தோசமா இருக்கறதுக்குத்தான்  , கூட இருக்கறவங்கள சந்தோசமா வச்சுக்கறதும்தான்  , ஆனா நீ இப்படி விலகி போயி ,நீயும் இப்படி  இருட்டுக்குள்ள உட்கார்ந்து , இதெல்லாம் எதுக்குன்னா ”  ,” சரி ,ஏதோ ஒரு விஷயம் சரி னு நம்பி அது பின்னாடி போற , அது கடைசில  தப்புனு தெரிஞ்சா என்ன பண்ணுவ  , வாழ்க்கையை , உலகத்தை அப்படி ஒரு தியரிலயோ  இல்லனா அந்த சோடாபுட்டி  ரகு அண்ணா ‘சித்தாந்தம் ‘னு ஒரு வார்த்தை சொல்லுவாரே அதுலயே கொண்டு வந்திட  முடியாது “,

” நீ என்ன வேணும்னாலும் செய் ,அதுக்காக ஏன் உன்னோட சந்தோசத்தை கை விடற , நான் உன் fb பக்கத்தை தினமும் பார்ப்பேன் , எப்பவும் யாரையாவது திட்டுவ  , கவர்மெண்ட் ,அரசியல்வாதி அதுஇது  னு , உன்னோட பிரண்ட்ஸ் லிஸ்ட் ல இருக்குறவனுகளும்  இதே ரகம்தான் , சந்தோசமான பதிவே  உன்னோடதுல  பார்த்ததில்ல , நீ  எழுதறது எல்லாம் சரியா கூட இருக்கலாம் , ஆனா சந்தோசம் இல்லாத சரி ங்றது உண்மைல சரியான ஒன்னா இருக்காது , அதுக்கு உதாரணமா உன்னையே  சொல்லலாம் , உனக்கு என்ன குறை இருக்கு , ஆனா எப்பவும் வீடு இடிஞ்சு  விழந்தவன் மாதிரியே இருக்க . ”  என எண்ணுவதையெல்லாம்  கொட்டினேன்  .

பிறகு அவன் திட்டுவான் என எதிர்பார்த்தேன் , மாறாக புன்னகைத்தான் , “பேசற அளவு வளந்திட்ட  ”  என்றான் , பின் கொஞ்ச நேரம் ஏதும் பேசிக்கொள்ள  வில்லை , பின் அமைதியான குளத்தில்  சட்டென சலனங்கள்  வந்ததை போல ” எனக்கு நான் கிற என்னமோ , என்னோட சந்தோஷமோ  பெரிய விஷயம் இல்ல ,எனக்கு ஒருசில கனவுகள் இருக்கு , நான் சில விஷயங்களை என் கடமையா  நினைக்கிறேன் , அதை நோக்கி போறது மட்டும்தான் எனக்கு நிம்மதி கொடுக்கும் , என்னால வீட்டுல உன்னை போல  இருக்க முடியாது .. அதான் எனக்கு பதில் நீ சந்தோசமா இருக்கையே அது போதும் ”  என்றான் .

மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தேன் ,பின் ” அண்ணா , எனக்கு நீ பேசறது ரகு அண்ணா பேசறததான்  ஞாபக படுத்தது  , அவரை நான் தன்னைத்தானே வருத்தி   கொள்ற ரகம் னு நினைப்பேன் , உண்மைல  இங்க ஒரு வசதியும்  இல்லாதவன் கூட சந்தோசமாதான்  இருக்கான் , சந்தோசம் என்பது வசதில இல்ல ,நீங்களா அவங்களை சந்தோஷமில்லாதவங்களா  நினைச்கறீங்க  ,  அதுக்கு காரணம் அவங்களை மேல இருக்கறவங்க சுரண்டராங்க  னு நினைச்சுக்குவீங்க  , ஆனா இது மனித குணம் , இதே வசதியில்லாதவன்  மேல போய்  இருந்தானாலும்  இப்படித்தான் மத்தவங்களை  சுரண்டிட்டு இருப்பான் ,இத மாத்த முடியாது , ஆனா இந்த இயல்புக்கும் சந்தோஷத்துக்கும் சம்பந்தமில்லை , எந்த நிலையிலும் சந்தோசமா இருக்க முடியும் , அம்மா நம்ம இரண்டு பேத்தை  அப்பா இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டு வளத்தாங்க  , நீயோ  நானோ என்ன சோகமாவா  வளந்தோம்  , அம்மாக்கு அப்பா இல்லாதத தவிர வேறென்ன சோகம் இருந்தது ”  என்றேன்

அவன் ஏதும் பதில் சொல்லாமல் எழுந்தான்  ,பின்  “டைம் ஆச்சு கிளம்பு” என்றான் , பிறகு ஆணியில்  மாட்டியிருந்த  சட்டையில் கைவிட்டு பணம் எடுத்து என்னிடம்  கொடுத்து “வைத்து கொள் “என்றான் , “அண்ணா ,எங்கிட்ட இருக்கு ,வேணாம் என்றேன் ”  “பரவால்ல வை ”  என்று என்  மேல்சட்டை பாக்கெட்டில் திணித்தான்  .

நான் முக அசைவினால்  விடைபெற்று  கிளம்பி வாசல் வந்தேன்  , அண்ணா பின்னால்  இருந்து ”  டே அந்த பொண்ணு கிறிஸ்டினா ”  என்றான் , தயக்கம் கலந்த வெட்கத்துடன்  திரும்பி பார்த்தேன்.

“பொண்ணு நல்லாத்தான் இருக்கா ” என்றான் சிரித்தபடி  , “சரி வரேன் ”  சொல்லி படியிறங்கி பைக் பக்கம் வந்த போதுதான் சாவியை  மறந்து மேலேயே விட்டு வந்தது ஞாபகம் வந்தது , திரும்பி அறைக்குள் போன போது அவன் ஒரு புத்தகத்தை திறந்து அதனுள் மூழ்கியிருந்தை பார்த்தேன் , அவன் திறந்த பக்கத்தில் அம்மாவின் ஒரு பழைய போட்டோ இருந்தது , சட்டென நான் வந்ததை உணர்ந்து புத்தகத்தை மூடி என்ன என்பது போல் என்னை பார்த்தான்   ,” சாவி  மறந்துட்டேன்” என்று சொல்லி எடுத்து வெளியே வந்தேன் , பின்தான் அவன் கண்கள் கலங்கியிருப்பதை  காண தாங்க முடியாமல் சட்டென வெளியேறியதை உணர்ந்தேன் .

பைக்கை எடுத்து கட் ரோட்டிலிருந்து  மெயின் ரோடிற்க்கு  வந்து நிறுத்தினேன் , பின்பு திரும்பி அவன் அறையை பார்த்தபோது கதவு மூடப்படாமல் இருந்ததை கண்டேன் .

2 comments

  1. எழுத்துப் பிழைகள் அதிகமாக உள்ளன. கவனிக்கவும்.

  2. ஏதோ மனோத்தஃதுவக் கதை போல புரியாமல் இருக்கிறதே?அண்ணா ஒரு
    eccentric ஆக இருக்கிறாரே?விளக்க முடியுமா?
    ராதாகிருஷ்ணன்
    radhaengr22@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.