நெல் – கவியரசு கவிதை

கைவிடப்பட்ட பானையின் உள்ளே
முளை விட்ட நெல்லின் விதை
யாதொரு பயமுமின்றி
வளர ஆரம்பித்திருந்தது

தினமும் அந்த வழியாகச் செல்கிறவள்
தூர்ந்த முலைகளுக்கு உள்ளாக
பால்குடிக்கும் ஒலியைக்  கேட்டு
திடுக்கிட்டு நின்றாள்

பொருள் வழிப் பிரிவுக்கு
முதற்குழந்தையை ஆயத்தப்படுத்துகையில்
வழியில் இருந்த
ஊற்றுகளின் முகங்களில்
பாறைகளை நகர்த்தினாள்.
மலர்களைக் கொய்தெறிந்தாள்.
கிளைகளை வெட்டினாள்.

மூச்சுத்திணறல் காரணமாக
இவளது நாசியிலிருந்து
நெல்லின் இலைகள்
காற்றை எடுத்துக் கொண்ட நேரத்தில்
முதற்குழந்தைக்கு
முத்தம் தந்தாள்

பானையை உடைக்கலாமென்று
முடிவெடுத்த பின் கற்களைத் தேடினாள்
அவள் நகர்த்திய பாறைகள்
பானையைச் சுற்றி வளர்ந்திருந்தன

நெல்லின் வேரைப் பிடுங்குவதற்காக
சுரங்கம் தோண்ட ஆரம்பித்தாள்
ஊற்றுகள் திறந்து கொண்டன

நடுங்கியபடி
மீண்டும் முதற்குழந்தையை அழைத்து
முத்தமிட ஆரம்பித்தாள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.