கடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்

கடப்பதெப்படி

இருமலுக்குப் பயந்து
புகைக்கக் கற்கவில்லை ..
நாற்றம் பிடிக்காமல்
நாடவில்லை மதுவை ..
மயக்கும் பிறவற்றோடு
பழக்கம் ஏதுமில்லை ..
இல்லத்திலிருக்கும் மஞ்சமோ
தாத்தா காலத்தியது ..

கருந்தேநீர் உறிஞ்சியபடி
கொடுங்கவிதை இரண்டை  எழுதித்தான் கடக்கவேண்டும்
இன்றைய மனக்கொந்தளிப்பை

நிரப்புதல்

வசித்த பறவைகள்
வேறிடம் தேடிக்கொண்டன

மண்ணால் மூடப்பட்ட இடத்தில்
சிறு செடிகள் முளைத்தன

நிழலில் அணைத்தபடி
ஒய்வெடுக்கும் பூனைகள்
அங்கு நிறுத்தப்படும்
வாகனங்களின்மேல்
துயில்கின்றன

அண்டை வீட்டின் வண்ணம்
அடையாளமாக கூறப்படுகிறது

புதிதாக திறந்த கடையில் பழங்களும் கிடைக்கின்றன

அம்மரத்தை அகழ்ந்ததால்
தோன்றிய என் அகஅகழியை
நிரப்புமென நிறுவியுள்ளேன் …
சிறு போன்சாய் தொட்டியை

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.