லூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்

லூயி க்ளூக்கின் எழுத்தை தான் எந்த அளவு நேசிக்கிறேன் என்பதை ஐரிஷ் கவிஞர் ஈவன் போலாண்ட் 2008 ஆம் ஆண்டு, ஸ்டான்ஃபோர்டில் என்னிடம் சொன்னார். அவர் தனது அலுவலறை புத்தக அடுக்கிலிருந்து க்ளூக்கின் கவிதை நூல்கள் சிலவற்றை எடுத்து எனக்குத் தந்தார்.

அன்று இரவு நான் அவரது கவிதை ஒன்றின் முதல் வரிகளை வாசித்தேன்:

“நீ உயிர்த்திருக்க நான் துயில்கிறேன்.
இது இவ்வளவு எளிய விஷயம்.
கனவுகள் அவையளவில் ஒன்றுமில்லை.
அவை நீ கைக்கொண்டாளும் நோய்மை,
அதற்கு மேல் ஒன்றுமில்லை.”

“ஒரு துக்க கனவு,” என்பது கவிதையின் தலைப்பு. மிக ஆழமான அந்தரங்க உணர்வும் வித்தியாசமான வகையில் உச்சத்துக்கு உயர்ந்ததும் தொன்மத்தன்மை கொண்டதுமானதன் கலவை, அதன் கச்சிதமாய்ச் செதுக்கப்பட்ட, காயப்பட்ட தொனி என்னைத் திகைக்கச் செய்தது.

எமிலி டிக்கின்சன் பற்றிய கட்டுரை ஒன்றில் க்ளூக் எழுதினார்: “தனிமனித அதிகாரத்தைத் துறக்காமல் ஒற்றை வாசகரிடத்தில் இந்த அளவு நம்பிக்கை வைப்பதில் இவ்வளவு வெற்றி காணும் படைப்புத் திரளொன்றை நினைத்துப் பார்ப்பதும் கடினம்.” டிஎஸ் எலியட் கவிதை குறித்து க்ளூக்கின் அவதானிப்பு: “நுண்ணுணர்வு கொண்ட வாசகர்களில் பலர் எதிர்க்குரல் எழுப்புவது குறித்த என் ரசனையைப் பகிர்ந்து கொள்ளாதவர்களாய் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.” கவிஞர் ஜார்ஜ் ஓப்பன் குறித்து எழுதும்போது க்ளூக், “வெற்றிடத்தின் மேதை; கட்டுப்படுத்திக் கொள்ளுதல், பக்க அணிமை, நுட்பங்கள், இவற்றைக் கையாள்வதில் வெற்றி கொண்டவர்,” என்று விவரித்தார்.

க்ளூக்கின் எழுத்து குறித்தும் இதை எல்லாம் சொல்லி விடலாம். அவரது கவிதைகள் நெறிப்படுத்தப்பட்டவை, மிக அதிக அளவில் ஆற்றல் கூட்டப்பட்டவை, கட்டுப்படுத்தப்பட்டவை என்றாலும் தம்மை வெளிப்படுத்திக் கொள்பவை; எதிர்க்குரல் எழப்புவது குறித்து அச்சமற்றவை என்றபோதும் ஒருவேளை அது குறித்த பீதி கொண்டும் இருக்கக்கூடும். “நிறைவடையாதவற்றின் ஆற்றல் பூட்டிக் கொள்வது,” குறித்து அவர் விவரித்திருக்கிறார், படைக்கப்பட்ட அந்த முழுமையான ஒன்று, அதே வேளை தன்னில் நிறைவடையாது நிற்பதன் சக்திகரமான இருப்பை இழக்காதிருப்பது: “பூரண வடிவம் பெற்றது போல் தோன்றும் கவிதைகளை நான் வெறுக்கிறேன், அவை மிக இறுக்கமாய் பூட்டப்பட்டிருக்கின்றன; தீர்மானமான முடிபினுள் மந்தையில் ஒன்றெனச் செலுத்தப்படுவதை வெறுக்கிறேன்.”

அவரது கவிதைகள் ஏதுமற்ற வெளியைத் திறந்து கொடுக்கின்றன. அவரது கவிதைகளின் ஒலிகள் துவக்கத்தில் தம் சந்தங்களிலிருந்து தயக்கத்துடன் வெளிப்படுகின்றன, பின்னர் தீரத்துடன், சில சமயம் சினந்து. உண்மை உரைக்கத் துணியும்போது எத்தகைய தொனியைக் கைக்கொள்ள வேண்டும் என்பதனை க்ளூக் அறிந்திருக்கிறார். மெய்ம்மையில் மிகக் குறைவே சொல்லுக்குரியது என்ற நாசகர, அதே சமயம், ஆற்றல் சேர்க்கும் பிரக்ஞை கொண்டவர் அவர், அதன்பின் குரலெழுப்பும் முயற்சியில் இருள் சக்தி எத்தனை வெளிப்படுகிறது என்பதையும் அவர் அறிவார். அவரது கவிதைகளில் தொனி நிறுத்தி வைக்கப்படுகிறது, வெளிப்பட அனுமதிக்கப்படுகிறது. அவரது ஆக்கங்கள் குரல் நிறைந்தவை, கடினமான பின்விளைவை, அல்லது, ஆன்மாவின் வடிவத்தை, கண்டறியவே அவர் புறப்பட்டது போல, பெரும்பாலும் இக்குரல் அடங்கி ஒலிக்கிறது, தாழ்குரலில் பேசுகிறது.

க்ளூக்கின் மாபெரும் திறமை குறித்தும் அவரது குரலின் தீரம் குறித்தும் உணர்த்தும் அவரது கவிதையொன்று உண்டென்றால், அது அவரது ‘தி வைல்ட் ஐரிஸ்’ தொகுப்பின் முதல் கவிதைதான். அது இப்படி துவங்குகிறது:

“என் வாதைகளின் முடிவில்
கதவொன்றிருந்தது.”

இந்தப் படிமம் தனக்குள் பல ஆண்டுகள் இருந்ததென அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன், அதற்குரிய இடத்தை அவர் பின்னரே கண்டு கொண்டார். அந்தப் புத்தகத்தில் உள்ள கவிதை வரிசையில், க்ளூக் சுத்திகரிக்கப்பட்ட மொழியில் இயற்கையைப் பின் தொடர்கிறார், அவரது குரல் இரக்கத்தாலும் அதிசய உணர்வாலும் நிறைந்திருக்கும் அதே சமயம் ஆற்றல் மற்றும் உழைப்பின் உணர்வும் கொண்டுள்ளது. இவ்வுலகம் வேதனை மற்றும் அதிசய உணர்வுகளுக்கு இடையே நிககும் போராட்டம் என்ற சித்திரத்தை அவரது கவிதைகளில் நாம் காண்கிறோம். இதன் பயனாகவே அவரது கவிதைகள் உருவம் பெற்றன என்ற எண்ணமும் எழுகிறது, துல்லியமான, ஆனால் அதே சமயம் உணர்த்து தன்மை கொண்ட சொற்களுக்கும், ஒலிநயம் மிக்க, ஆனால் அதே சமயம் பூச்சுக்களற்ற நேரடித்தன்மை கொண்ட சொற்றொடர்களுக்கும் க்ளூக்கின் கற்பனையினுள் நிகழ்ந்த போராட்டத்தின் விளைவுகள் என்று தோன்றுகிறது.

வாழும் கவிஞர்களில் வேறு எவரது குரலிலும் இத்தனை உயிர்ப்புத்தன்மை கொண்ட உள்நீரோட்டமும் இவ்வளவு கட்டுப்படுத்தப்பட்ட சந்தங்களும் இருந்தபோதும் இந்த அளவு தம்மை வெளிக்காட்டிக் கொள்ளும், அவசர உந்துதல்கள் கொண்ட ஆக்கங்கள் இருக்குமென்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

நன்றி: The Guardian 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.