மிர்ணாளினி மதியத் தூக்கம் போட்டு எழுந்தபோது வானம் கருத்திருந்தது. கடைந்த. மோரில் திரளும் வெண்ணெய் போல கருத்த. மேகங்கள் ஆங்காங்கே திரண்டிருந்தன. காற்று குளிர்ந்து வீசியது. மதியம்வரை சூரிய அனலில் கிடந்து வறுபட்ட காற்றில் இப்போது சாரல் சிந்தியது.
மிர்ணாளினி துள்ளியெழுந்து கொல்லைப்புறம் வந்தாள். கொல்லையில் அடர்த்தியான பசுமை கவிந்திருந்தது. இலை இடுக்குகள் வழியாக வானம் தெரிவது அரிதான ஒன்று. இப்போது இன்னும் இருண்டு போயிருந்தது. மிர்ணாளினி துணி துவைக்கும் கல்லில் அமர்ந்தாள்
” மிர்ணா, காபி கலக்கவா……?”
அத்தையின் வெண்கலக் குரல் காதுகளில் மோதியது. புதிதாக பில்டர் போட்டு டிகாஷன் இறக்கி வைத்திருப்பாள். காலை ஒரு முறை, மாலை ஒருமுறை என்று இரண்டு முறைகள் டிகாஷன் இறக்கியாகிவிடும்.
” அப்ப இறக்கி அப்பவே குடிக்கணும். அதுக்கு தனி ருசி.”
அவள் கண்கள் மின்னும். மிர்ணாளினி வந்ததிலிருந்து விழுந்து, விழுந்து கவனிக்கிறாள்.
” ஒரு மாசம் தங்கலாம்னு வந்தேன். ஒரு வாரத்துல ஓட வச்சிடாதே. ”
மிர்ணாளினி குறும்பாகச் சொன்னாள். அத்தைக்குச் சிறுவயதிலிருந்தே மருமகளென்றால் கொள்ளைப் பிரியம். குழந்தை கண்ணுக்கு மை தயாரிப்பதிலிருந்து, தலைக்கு எண்ணெய் காய்ச்சுவது வரை எல்லாமே அத்தைதான்.
” மருதாணியை பட்டு,பட்டா அரைச்சு பட்டுக் கையில இட்டு விடவா……..?” என்று அத்தை கேட்பாள். மிர்ணாளினிக்கு சிரிப்பு பொங்கும். கன்னம் குழிய சிரித்தபடி அவள் கழுத்தைக் கட்டிக் கொள்வாள்.
அத்தை காபியோடு வந்தாள்.
” இன்னிக்கு மழை வரும் போலிருக்கு அத்தை.”
மிர்ணாளினி கால்களை மடக்கி அமர்ந்து கொண்டாள். அத்தை பிளாஸ்டிக் நாற்காலியை கையோடு கொண்டு வந்திருந்தாள். அதில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
மாலை நேரத்தைகாபி கூடுதலாய் ரசிக்க வைத்தது. காபியின்மிடறுகள்தொண்டைக்குழிக்குள்இனிப்பையும், கசப்பையும்சரிசமமாய் இறக்கின.
அத்தை மயில்மாணிக்கப் பூக்களை வெறித்தபடி காபியை உறிஞ்சினாள். தோட்டத்தில் நிறைய பூக்கள் பூத்திருந்தன. வண்ணங்களை குழைத்து ஆங்காங்கே தடவி விட்டது போல பல நிறங்களில் பூக்கள்.
” எனக்குத் துணையா பூக்கள். பூக்களுக்குத் துணையா நான்.”
அத்தை சொன்னாள்.
அவள் முகத்திலும் ஆயிரம் பூக்கள் மலர்ந்திருந்தன. தூறல்விழஆரம்பித்தது. சற்றே கனமானதூறல்கள். சிமெண்ட் தளத்தில் விழுந்தவேகத்தில் காசுகள் போல் வட்டமாய் விரிந்தன.
தூறல்கள் சில்லிட்டிருந்தன. நெற்றியில் ஒன்று, புறங்கையில் ஒன்று, இமைகளை உரசி ஒன்று விழுந்தபோது மொத்த உடலும் சில்லிட்டது. அத்தை உள்ளங்கையை குழித்து தூறல்களை ஏந்திக் கொண்டிருந்தாள்.
” அஞ்சு சொட்டு மழை நீரைப் பிடிச்சுட்டேன்.”
அவளுடைய சந்தோஷத் தளும்பலில் உள்ளங்கை வழிந்தது. அத்தை மறுகை குழித்து நீரை எதிர்பார்த்துக் கிடந்தாள். கனத் தூறல்கள் நின்று ஊசித் தூறல்கள் விழ ஆரம்பித்தன. சல்லடைத் துளைகளிலிருந்து கொட்டும் மாவு போல தூறல்கள் அடர்ந்து விழுந்தன. அத்தை நாற்காலியைத் தூக்கிக் கொண்டாள்.
” கொல்லைப் பக்கக் காட்சி முடிஞ்சது. வா, தெருப் பக்கக் காட்சியை ரசிக்கலாம்.”
மிர்ணாளினியை அழைத்துக்கொண்டுபோனாள். சிட்டவுட்டில் இருவரும் அமர்ந்தனர். வீட்டுக்கு முன்நின்றிருந்தவேப்பமரத்தைமழைகுளிப்பாட்டிக் கொண்டிருந்தது.
தெருவில் நீரோட்டம் அதிகமாயிருந்தது. அவ்வளவு மழை. அத்தை நினைத்துக் கொண்டவள் போல் எழுந்து உள்ளே சென்றாள். இரண்டு நிமிடங்களில் திரும்பி வந்தவள் கையில் மல்லிகைச்சரம்.
” உனக்காக தொடுத்து வச்சேன். இப்பதான் ஞாபகம் வந்தது. ”
தலையில் சூட்டி விட்டாள். பூவின் மணம் அவள் விரல்களில் அப்பிக் கொண்டது.
” ராத்திரிக்கு என்ன செய்யலாம்….. உனக்குப் பிடிச்ச மசால்தோசைப் பண்ணட்டுமா…….?”
” திரும்பவும் உபசரணையா…… நான் வந்து நாலு நாளாகுது. இந்த நாலு நாள்ல ரெண்டு கிலோ எடை போட்டுட்ட. மாதிரி இருக்கு. இப்படியே நீ செஞ்சு போட்டுகிட்டேருந்தா நான் ஊருக்குப் போகும்போது அடையாளம் தெரியாதபடி குண்டாயிடுவேன். அதனால இன்னிக்கு சிம்பிளா கல்தோசை பண்ணிடு.”
” வெறுமனே தோசைன்னு சொல்லிட்டுப் போயேன். எதுக்கு முன்னால கல்லுங்கற அடைமொழி……”
அவள் சிரித்தாள். அடுத்த அரைமணி நேரத்தில் மழை நின்று விட்டது. மேகங்கள் கரைந்து மண்ணில் கலந்து விட்டிருந்தபடியால் வானம் பளிச்சிட்டது. காற்று குளிர்ந்த தன்மைக்கு மாறியிருந்தது.
” கோடை மழைக்கு ஸ்திரத்தன்மை கிடையாது.”
அத்தை சொல்லிவிட்டு எழுந்தாள். ஆறு மணியானால் விளக்கேற்றி சுலோகம் சொல்வாள். சாமிஅறையில் சாம்பிராணி புகைக்கமழ்ந்தது. வீட்டின் தலைவாசல் நேர்மேலே மாமாவின் புகைப்படம். பெரிதாக மரச் சட்டமிட்டகண்ணாடிக்குள் மாமா சிரித்துக் கொண்டிருந்தார்.
அத்தை இறுதியாக அதற்கு சாம்பிராணிக் காட்டினாள். புகை வளையங்கள்மேலெழுந்து காற்றில் பரவின. சுருள், சுருளாக அலைந்துகலைந்தன. அத்தை தூபக்காலை வேகமாக சுற்றியதில் ஒரு துண்டுநெருப்பு கீழே விழுந்தது.
குளிர்ந்த தரையில் அது கனன்று கிடந்தது. அதை இடுக்கியால் கவனமாக எடுத்துப் போட்டாள். இரண்டு முறை அது இடுக்கியிலிருந்து நழுவி கீழே விழுந்தது. அத்தை மூன்றாவது முறையாக வென்று விட்டாள்.
” இப்பதான் கம்ப்யூட்டர் சாம்பிராணி வந்துடுச்சே. அதை வாங்கி வச்சிக்கலாமே….. ”
மிர்ணாளினியின் யோசனையில் அவளுக்கு உடன்பாடில்லை என்பது அவளது முகக்குறிப்பில் தெரிந்தது.
” நான் அந்தக் காலம்டி.”
அத்தை சிரித்துக்கொண்டே சொன்னாள். இரவு வானத்தில் நட்சத்திரங்கள்
நெருஞ்சிமுள்ளைப் போல அப்பிக் கிடந்தன. விமானம் ஒன்றுபூச்சி போல பறந்து போனது. மொட்டைமாடியில் சின்னச், சின்னவட்டங்களாக நீர் தேங்கிக் கிடந்தது.
மாமாவின் பூர்வீக வீடு அது. நூறு வருடங்களுக்கு முன்பே நல்ல வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருந்தது.
” மாமாவோட உயிர் இந்த வீடு” என்று அத்தை ஒருமுறை சொல்லியிருக்கிறாள்.
அந்த வீட்டுக்காக அத்தை தனக்குக் கிடைத்த அரசாங்க வேலையை உதறியிருக்கிறாள். தையல் பயிற்சி முடித்திருந்தவளுக்கு அரசாங்க பள்ளிக்கூடத்தில் தையல் ஆசிரியை வேலை கிடைத்து சென்னைக்குப் போக வேண்டிய சூழ்நிலை உண்டானபோது அதைத் தவிர்த்துவிட்டாள்.
” வேலை வேண்டாம்னு எழுதிக் கொடுத்துட்டியாமே. ஏன்டி அப்படி செஞ்சே……?”
அம்மா பிடித்துவிட்டாள். அத்தை சமாளித்துக் கொண்டாள்.
” ஏகப்பட்டது கிடக்கு. வேலைக்குப் போய் புதுசா எதை சேர்க்கப் போறேன். ”
” ஆனா அது உன் கனவாச்சே…..”
அத்தை எதுவும் சொல்லவில்லை.
நிலவொளியில் அத்தையின் முகம் வரைந்த ஓவியம் போலிருந்தது. முதுமையின் சாயல் அப்பிக்கொள்ளாத முகம். மாமாவின் மறைவுக்குப் பிறகு அவள் பூச்சூடி கொள்வதில்லை. மற்றபடி அவளிடம் எந்த மாற்றமுமில்லை. இந்த ஐம்பது வயதிலும் அவள் இளமையாகவே தெரிந்தாள்.
” நாளைக்குப் பக்கத்துல இருக்க மலைக்கோவிலுக்குப் போகலாம். ரொம்பப் பெரிய மலையெல்லாம் கிடையாது. பத்து நிமிஷத்துல ஏறிடலாம். ”
அத்தை சொல்லிவிட்டு ஈசிசேரில் சாய்ந்து கொண்டாள்.
” தினமும் இப்படி மொட்டை மாடியில உட்கார்ந்து காத்து வாங்கறது வழக்கம். ஏழு மணிக்கு சாப்பிடுவேன். எட்டரை வரைக்கும் நிலவை ரசிப்பேன். ”
” அமாவாசையன்னிக்கு……..?”
மிர்ணாளினி இடைமறித்தாள். அத்தை கண்களைச் சுருக்கிப் பார்த்து சிரித்தாள்.
” இருளையும் ரசிக்கப் பழகிக்கிட்டேன். மையிருள்ல எதையும் அசை போடாம அமைதியா உட்கார்ந்திருக்கறது ஒரு சுகம். அதுவும் எனக்குப் பிடிக்கும்.”
அத்தை சொல்லிவிட்டு கொட்டாவி விட்டாள்.
“தூக்கம் வந்தா கீழே போகலாம்.”
மிர்ணாளினி தயாரானாள்.
” மதியம் தூங்கலை. அதான் இப்ப கண்ணைக் கட்டுது.”
இருவரும் சுருள் வளைவுப் படிகளில் இறங்கினர். கைப்பிடி மரவளைவு வழுவழுத்தது. இந்த வீடு அத்தையின் சொர்க்கம் என்று மிர்ணாளினி நினைத்துக் கொண்டாள். வாரிசுகளற்ற அத்தைக்கு உயிரற்ற இந்த வீட்டின் மீதான பிடிப்பு ஒரு தேவையான ஆசுவாசம் என்று அவள் எண்ணினாள்.
மாமா பெரிய மீசை வைத்துக் கொண்டிருப்பார். கணீரென்று பேசுவார். ஒரு சொல் வந்து விழுந்தால் எதிராளி மறு வார்த்தை பேசமாட்டான். அப்படி மிடுக்காய் வாழ்ந்தவர் ஒருநாள் திடீரென்று வந்த நெஞ்சுவலியில் சட்டென்று முடிந்து போனார்.
மறுநாள் மிர்ணாளினி அத்தையுடன் மலைக் கோவிலுக்குச் சென்று வந்தாள். கோவில் சின்னதாய், அழகாயிருந்தது. யாரோ ஒரு அரசன் கட்டியது என்று சொன்னார்கள்.
” கல்யாணமான புதுசுல அடிக்கடி இந்தக் கோவிலுக்கு வருவோம். அவருக்கு இந்தக் கோவில் ரொம்பப் பிடிக்கும்.”
” யாருக்குத்தான் பிடிக்காது. அற்புதமான சூழல்ல இயற்கையோட பிண்ணணியில கோவில் ரொம்ப அழகா இருக்கு. எனக்கும் இந்தக் கோவிலை அவ்வளவு பிடிச்சிருக்கு அத்தை.”
அத்தை அதன்பிறகு எதுவும் பேசவில்லை. வீடு வரும்வரை அமைதியாக வந்தாள். இரவு உணவுக்குப் பின்பு தலை வலிப்பதாக கூறி சீக்கிரமே படுக்கச் சென்று விட்டாள்.
மொட்டை மாடியில் நிலவு காய்ந்தது. ஒளியை ஒழுகவிட்டுஅது காத்துக் கிடந்தது. சன்னல்வழியே தெரிந்த நிலவைவெறித்தபடி மிர்ணாளினி படுத்துக்கிடந்தாள்.
ஐந்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு வந்தாயிற்று. பறவைகளின் சுதந்திரம் அதன் இறக்கைகளின் வலிமையைச் சார்ந்தது என்பது போல தன்னுடைய மன வலிமையில் தான், தன் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்பதை அவள் நன்றாகவேப் புரிந்து வைத்திருந்தாள்.
ஐந்து வருட திருமண பந்தம் அவனது அர்த்தமற்ற அகங்காரத்தில் குலைவுற்றுப்போனது. மிர்ணாளினிக்கு மூச்சுத்திணறி போகக் கூடுடைத்து வெளியே வந்துவிட்டாள்.
காலையில் அத்தை தெளிவாக இருந்தாள்.
” தலைவலி எப்படி இருக்கு….?”
” சரியாயிடுச்சு……”
அத்தை இயல்பாக சிரித்தாள்.
” நேத்திக்கு திடீர்ன்னு என்னாச்சு அத்தை. கோவில்ல ஒருமாதிரி இருந்தியே.”
அத்தைக்கு சில வேலைகளிருந்தன. அவள் செய்துகொண்டேயிருந்தாள். அவள் அந்தவீட்டிற்கு மகாராணி. அதில்எந்தசந்தேகமுமில்லை. எடுபிடிவேலைகளுக்கு ஆட்களிருந்தனர்.
வீட்டை அழகுபடுத்துவது, சமையல்செய்வது அத்தை. அது அவளதுபொழுதுபோக்கிற்காக. பிடித்ததும்கூட. தனிமை அவளை முடக்கி விடவில்லை. அவள் மகிழ்ச்சியாக இருந்தாள்.
காலை ஆகாரம் மேசைக்கு வந்துவிட்டது. அத்தையின் கைப்பக்குவத்தில் ருசியான பொங்கலும், தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியும் தயாராயிருந்தன.
” சாப்பிடலாம்……”
அத்தை தட்டெடுத்து வைத்தாள். மிர்ணாளினி அமர்ந்தவுடன் கேட்டாள்.
” நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவேயில்லை.”
” அந்தக் கோவில் அவருக்கு ரொம்பப் பிடிச்ச கோவில். நினைச்சா உடனே கிளம்பிடுவார்.”
” அதைத்தான் நேத்திக்கு சொன்னியே.”
” எனக்கும் சிலது பிடிக்கும். ஆனா அதுக்கு முக்கியத்துவம் கிடையாது.”
மிர்ணாளினி, அத்தையைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
” அவருக்குப் பிடிச்சதெல்லாம் எனக்குப் பிடிக்கணும். எனக்குன்னு தனிப்பட்ட அபிப்பிராயம் இருக்கக்கூடாது. அது செல்லாது. அவருக்குப் பிடிச்ச மாதிரி நான் நடந்துகிட்டா அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.”
அத்தை அமைதியானாள். சில வினாடிகளுக்குப் பின் மிர்ணாளினி கேட்டாள்.
” இப்ப……..?”
” இந்தத் தனிமை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ” என்றாள் அத்தை.