“அண்ணே, இரவிபுதூர் போற பஸ் எது?” இக்கேள்வியை கடந்து சென்ற பலரிடம் கேட்டும் “ம்ம்ம்க்க்கும்” எனும் பதில்தான் கிடைத்தது. சொந்த ஊர் பேருந்து நிலையத்தில் ஒரு ஊருக்கு செல்லும் வழித்தடம் அறியாமல் நின்றேன். இறையூர் என கூகுலில் தேடினால் பதில் இல்லை. இரவிபுதூர் என்பதே பெயர் எனப் பதிலாய் வந்தது. இப்பேருந்து நிறுத்தமே பள்ளத்தில் இருந்தது, எதிரே எழும்பி கம்பீரமாய் நின்ற தேவாலயத்தில் ஆறு முறை மணியடித்து விவிலிய வசனம் பேசியது ‘கர்த்தராலே கூடாத காரியம் எதுவுமில்லை’. மாடனை வேண்டிக்கொண்ட மனதில் நல்மேய்ப்பரையும் வேண்டிக்கொண்டேன்.
நெற்றியில் திருநீரால் முக்கோடு போட்டு, காதில் சிவப்புக்கல் கடுக்கனோடு, வெற்றிலை குதப்பியவாறே, முன்மண்டை வெற்றிடமான, குலுங்கும் தொப்பையோடு, மங்கிய வெள்ளைச் சட்டையும், மடித்து கட்டிய வேஷ்டியும், லூனார் செருப்புமாய் அருகில் வந்தவர், மாடனாகவோ, மேய்ப்பவராகவோ இருப்பார் எனத் தோணவே அவரிடம் வழி கேட்டேன். ‘இரவிபுதூர் போற பஸ் எதுனே”, கூடவே இவ்வூரிலே வழக்கமான மரியாதை குறிச்சொல் ‘அண்ணாச்சி’யையும் இணைத்துக் கொண்டேன்.
வெற்றிலை சாறு உதட்டில் வடிய மேலும் கீழுமாய் பார்த்தவர் “ஆளு வெளியூரோ, இங்கன இறையூர்னு சொன்னாதான் நம்ம ஆளுக்காருக்கு பிடிப்படும். நானும் அங்கதான் போறேன். ராஜாவூர் பஸ் வரும், மருங்கூர் இப்போதான் போயிருக்கும். யாருக்கு தெரியும், இன்னும் வராம கூட இருக்கும். அவனுக இஷ்ட மயிருக்கு தானே வரான். நிப்போம். தம்பி சாப்டிலா. இல்ல வாங்க காப்பி குடிப்போம்”
வலுக்கட்டாயமாய் கூட்டிக் கொண்டு போனார். “பஸ் வந்தாலும் அவனுக டீ, காப்பி குடிச்சுட்டு தான் எடுப்பான். இறையூருல எங்க. இன்னிக்கு முகூர்த்தம் ஒன்னும் இல்லையே, என்ன சோலி” என்றார்.
சென்னையில் இருந்தாலும் தாத்தா நாகர்கோயில் பழப்பம் மலையாளக் கடையில் இருந்து மாதமிருமுறை வாங்கித் தருவார். கண்முன்னே செந்நிறமாய் குவிந்து கிடந்த பலகாரங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். “தம்பிக்கி பசிக்கோ, மக்கா இதுல ஒன்னு எடு” கடைக்காரரிடம் கேட்டு வாங்கித் தந்தார். அசௌகாரியமாய் உணர்ந்தேன், வாங்கத் தயங்கவே, “பழப்பம் என்ன கோடி ரூவாய்யா, தின்னுப்போ. எம்பயனுக்கா வயசுதான உனக்கு. தின்னு”. முதல் கடியிலே வெல்லமும், ஏலக்காயும், அவலையும் நாக்கு ருசித்தது. “சக்கர பாகு, அவலு உள்ள இருக்கும். வயித்துக்கு நல்லது. இனி மத்தியானம் தான் பசிக்கும்” என்றார் சிரித்தவாறு.
நாங்கள் கடையில் காப்பிக்கும் பழப்பத்திற்கும் காசு கொடுத்து திரும்ப பேருந்தும் சரியாய் வந்தது. ஏறி அவர் அருகிலே அமர்ந்தேன். “இறையூருல யார பாக்கணும், வெளியூரு ஆளு. சொல்லுங்க தெரிஞ்சா நா கூட வாரேன்.”
“தெரிஞ்சவங்க ஒருத்தர பாக்கணும். இறையூர் சுடலமாடன் கோயில் பக்கம் வீடு”
“சரியா போச்சு. நானும் அவன பாக்கத்தான் போறேன். குடும்ப சாமி. பாத்து நாளாச்சு. போய் கும்பிடனும். ரெண்டு மாசமா வீட்டுல ஒருத்தருக்கா கழியாம போகு. போய் மஞ்சன சாத்தி, ஆரம் போட்டு, சாமிக்கு பண்ணனும். யாரும் கண்டுக்காம இருந்திருப்பான். அதான் நம்மள படுத்துகு. எங்க அய்யா வழி சுடல. நல்லா குடுப்பான், சமயத்துல பாடா படுத்துவான். நான்தான் மதியில்லாம ரொம்ப நாள் வராம இருந்திட்டுட்டேன்” கவலையோடு சொன்னார். “சரி, நம்ம கதைய சினிமா எடுக்கலாம், ஒரு பய பாக்க மாட்டான்” சொல்லிவிட்டு அவரே சிரித்தார். வெகுளியாய் தெரிந்தார், நானும் சகஜமாய் பேச ஆரம்பித்தேன்.
“அங்க ஒரு ஆச்சி இருக்கு, சுடலை கோயில் பக்கம் வீடு. அவங்க வீட்டுக்கு போறேன், பேரு பகவதியம்மை”.
கொஞ்சம் அமைதியானவர், “கூனிக் கிழவி வீட்டுக்கா. உங்க சொந்தமா அவ?”
“தெரிஞ்சவங்க, எங்க தாத்தா இங்கையிருந்து மெட்ராஸ் போய் செட்டில் ஆனவரு. அவருக்கு தெரிஞ்சவங்க”
“ஓ அப்டியா. உங்க தாத்தா பேரு:?”
“கிருஷ்ணப் பிள்ளை” என்றதும். முதுகை குலுக்கி கொஞ்சம் இன்னும் இணக்கமாய் “பிள்ளைமாறா, முக சாடை தெரிஞ்சுது. இப்போ உள்ள பிள்ளைகளுக்கு தான் இன்னாருன்னு சொன்னா கொஞ்சம் சங்கடம், அதான் கேக்கல. சுத்தி முத்தி சொந்தமாதான் இருப்போம். பின்ன கடுக்கரை, ஆரம்பலி, காக்கமூரு எல்லாம் அங்கதானே கட்டிக் கொடுப்போம்” என்றார்.
இவ்வூர் சுசீந்தரமாக இருக்க வேண்டும். சாலையின் இணையாக ஆறு ஓடியது. வலப்பக்கம் பெரிய கோபுரம் தெரிந்தது. தாத்தா சொல்லிய கதைகளில் பலமுறை தாணுமாலயன் வருவதுண்டு. படித்துறையில் துணி அலசும் ஒலி கேட்டது. பழைய பாலம் இன்னும் கம்பீரமாக நிற்க, புதிதாய் வழி தவறி சாய்ந்து சாலையில் இணைந்த புதிய பாலம் தெரிந்தது. வண்டி பழைய பாலம் வழியே அக்கரை எனும் ஊருக்குள் நுழைந்தது. வழியெங்கும் இருக்கரையிலும் தெங்கு, அடுத்து பசுமையான போர்வை போலவிருந்த வயலில் நெல் நாற்று காற்றில் மேலும் கீழுமாய் தலையசைத்து வரவேற்பது போலவிருந்தது. அருகே பேச்சு சத்தம் குறையவே அவரைக் கண்டால் உறங்கிவிட்டிருந்தார். சிறிது நேரத்தில் எழுந்து, “ஊரு வந்துட்டு வாங்க இறங்குவோம்” என்றார். வயல்வெளி நடுவே சாலை உணவைத் தேடி ஊரும் கருநாகம் போல நீண்டு போனது.
பழைய ஓட்டு வீடுகள், ஓடு வேய்ந்த பள்ளிக்கூடம், இடையிடையே கான்கிரீட் வீடுகள். சட்டை அணியாத சாரம் அணிந்த திடமான நெஞ்சைக் கொண்ட தாத்தாக்கள்- தாத்தா சாரம் என்று சொல்லியே நானும் கைலியை சாரம் என்றே அழைக்கிறேன்.
“என்ன எங்கோடியா அத்தான் கண்டு நாளாச்சு” பெண்குரல், கேட்டு திரும்பினேன். பசுமாட்டை இழுத்தபடி ஐம்பது வயது பெண்ணொருத்தி.
“மைனி சுகமா, சுப்பிரமணிக்கு ஒரு சம்பந்தம் இருக்கு. ஊருக்கு போகும் முன்னாடி வீட்டுக்கு வாரேன்.”
“சம்பந்தம் வருகு, வழிச் சுத்தம் வேணுலா. தேரூர்ல ஒன்னு வருகு”
“அதான் நானும் சொல்ல வந்தேன். நம்ம சகலப்பாடி முருகன் இருக்கான்லா, அவனுக்க பெரியக்கா பொண்ணு. யோசிக்காத வாரேன் பேசுவோம்.”
“கூட யாரு, ஆளு பிடிப்படலையே”
“மெட்ராஸ்ல இருந்து வராரு, நம்ம ஆளுதான். கூனிக் கிழவிய பாக்கணுமா”
“அது ரெண்டு நாளா இழுத்துட்டுலா கிடக்கு. சீக்கிரம் போவும். அதுக்கு நாளாயிட்டு, சலம்பிட்டு, ஏசிட்டு திரியும். என்ன ஆளோ, நம்ம ஆளு இல்ல. ஊருக்காரன் பேசிட்டு இருக்கான். என்னதான் இருந்தாலும் சுடலை கோயில தூத்து வாறிட்டு கிடந்தா. அதுக்கு சொந்தம் கிந்தம் உண்டான்னு தெரில. முதவாட்டி ஒரு ஆளு அத தேடி வருகு. ஊரு செலவுல பாடை எடுக்கணும்” நடந்துக் கொண்டே வார்த்தைகளை உதிர்த்தபடி சென்றாள்.
“தப்பா நினைக்காதப்போ. பொம்பள அப்படியாப்பட்ட ஆளுதான். வாயில சனி. என்கூட கொஞ்சம் பிடித்தம் உண்டு. நானும் அது சாவ முன்னாடி பாக்கணும். முண்டு கட்டிட்டு இருப்பா. மலையாளத்துக்காரியா இருப்பா போல. எங்க அய்யாக்கு அவள தெரியும். அவருதான் இங்க தங்க இடம் கொடுத்தாரு. சுடல கோயிலு சுத்தி நம்ம இடம்தான். பாவம் ஆளுத் துணையில்லை. தனிக்கட்டை. நம்ம நாளு வந்தா போயிதானே ஆகணும். அது பொறக்கப்பயே முடிவாயிடும். என்ன நா சொல்லது” என்றார் விரக்தியாய்.
மௌனம் மாத்திரமே என்னுள் நிறைந்திருந்தது. நடந்து கொண்டே தாத்தாவின் நினைவுகளை அசைப் போட்டேன். ஆச்சி எனக்கு ஐந்து, ஆறு வயது இருக்கும் போதே இறந்துவிட்டாள். அப்பாவிற்கும் தாத்தாவிற்கும் அவர் இறக்கும் வரை மனக்குறையில்லை. அவராய் படுக்கையில் இருக்கும் போது “என் தங்கம், கண்ணு, சாமி தாத்தா செத்தா. தகவலை இறையூர்ல பகவதியம்மை ஆச்சிட்டு சொல்லணும். தாத்தாக்க ஆச மக்ளே. அப்பனுக்கு தெரியாண்டாம்.” பேசிக்கொண்டே கைகளில் முத்தமிட்டார். யார் பகவதியம்மை, தாத்தாக்கு என்ன பழக்கமோ என்றெல்லாம் யோசிக்க நேரமின்றி அடுத்த இரண்டு நாட்களில் இறந்துவிட்டார். அப்பா ஊருக்கு தகவல் எல்லாம் சொல்லாமல் கண்ணம்மாபேட்டையில் காரியம் செய்தார். ஆச்சி இறந்ததுக்கும் இதேதான் நடந்தது. தாத்தாவும் ஊருக்கு கொண்டு சென்று காரியங்கள் செய்ய ஆசைப்படவில்லை. தாத்தாவின் கதைகள் வீட்டின் எல்லா அறையிலும் நிறைந்து இருந்தன. இரண்டு மூன்று வாரங்களில் வீடு சகஜமாக, எனக்கோ தாத்தா கடைசியாய் முத்தமிட்ட கைகள் அரிக்க ஆரம்பித்தது. கனவிலும் தாத்தா பகவதியம்மை பேரை சொல்லிக்கொண்டே வந்து நின்றார். பெங்களூர் செல்வதாய் சொல்லி நாகர்கோயில் கிளம்பிவிட்டேன்.
“சரி, உங்க தாத்தாக்க ஊரு எது?” நடந்தபடி கேட்டார்.
“அழகியபாண்டியபுரம்”
“அலையான்றமா, பேசி பேசி பக்கத்துல வந்திட்டியே. அங்க எங்க?”
“அதுலாம் தெரியாது”
“அப்பா பேரு என்ன?”
“மணியன்”.
நின்று வித்தியாசமாய் பார்த்தார். “உங்க தாத்தாவ கிட்டுனு கூப்பிடுவாங்களா?”
“ஆமா, ஊருல கிருஷ்ணப் பிள்ளைனா யாருக்கும் தெரியாது, கிட்டுனு சொன்னாதான் தெரியும். சக்கோட்டை கிட்டுனு சொல்வாரு சிலநேரம் சிரிச்சிட்டே”
“லேய், நா உனக்கு மாமா முறைலா. உங்க தாத்தாவும், எங்க அய்யாவும் நல்ல கூட்டுக்காரன்லா. அய்யா சொல்லிருக்காரு கதைலாம். இப்போ புரியுது. நீ சின்னப்பையன். தாத்தா எப்புடி இருக்காரு, அப்பா சுகமா. உங்கூட பொறந்தவங்க எத்தனை பேரு?”
“தாத்தா தவறிட்டாரு, அத அந்த ஆச்சிட்ட சொல்லணும்னு தாத்தா சாவ முன்னாடி ஆசைப்பட்டுச்சு, அதான் வந்தேன்”
“செய், சங்கடம். காலத்தை பாத்தியா மக்கா. எல்லாம் அந்தந்த சமயத்துல நடக்கணும். நீ வரணும்னு தான் அது இழுத்துட்டு கிடக்கு.”
ஆறடியில் நெடுநெடுவென மண்பீடம், சுற்றிலும் பீடம் பின் நின்ற வேம்பின் சருகுகள். முன்னே என்றோ வைத்த வாழையிலை மட்டும் இருந்தது. கொஞ்சம் தொலைவில் வயதான ஓலை வீடு, முன்னே தாழ்ந்திருந்த கூரை பிய்ந்து கிடந்தது. அவரும் கூடவே வந்தார். வீட்டில் உள்ளே எந்த சத்தமும் இல்லை.
“அம்மை வீட்டுல உண்டா, நா எங்கோடியா வந்திருக்கேன்”
“உள்ள வாடே, பிள்ளையை கண்டு நாளாச்சு” எனும் உடைந்த பெண் குரல் உள்ளிருந்து வந்தது.
உள்ளே வா, என்பது போல் என்னைப் பார்த்தபடி அவரும் நுழைந்தார். ஒரே அரை, மண் அடுப்பில் சப்பிய பாத்திரம் ஒன்றில் அரிசி கொதித்தது. அருகே ஆங்கில சி போல வளைந்து, உடலெங்கும் தோல் தளர்ந்து தொங்கியபடி, இருந்த கொஞ்ச நார்ப் போலவிருந்த முடியை முடிந்து வைத்த தலையும், இடுப்பில் சாரமும், மேலே வெள்ளை துவர்த்தும் மட்டுமே கட்டிய ஆச்சி இருந்தாள். இவளா ஊரில் எல்லோரும் ஏசும் ஆச்சி, அப்படியா இருக்கிறாள். இந்நிலையிலும் முகம் மலர்ச்சியாய் இருந்தது. தெரிந்த எங்கோடியா வந்ததில் மலர்ந்திருக்கலாம்.
“பிள்ளைக்கு ஒன்னும் இல்லையெடே. கஞ்சிதான் வைக்கேன். ரெண்டு நாளா மேலு வலி, கையும், காலும் பிடிச்சு நிக்கி. வயசாயிட்டா. வயித்துக்கு பாக்கியம் சமயத்துல கஞ்சி கொண்டாருவ. இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்ல. அதான் எந்திச்சிட்டேன். நீ இரு, நா போய் கலரு வாங்கிட்டு வரேன். கூட யாரு, நா கவனிக்கல. கண்ணு தெரிலியா. யாரு ஒம்பிள்ளையா பிள்ளே?”
“இல்ல ஆச்சி, கோயிலுக்கு வந்தோம். என் பெரிய மைனிக்க மவன். நீ இரு, நா வாங்கிட்டு வாரேன்”
“போல ஆகாதவன் மவனே, இன்னைக்குதான் திடமா இருக்கேன். நா போறேன். நீ இரு,” குனிந்து நடந்தபடியே பொசுக்கென்று நடந்தாள், ஆட்டின் மடிபோல துண்டு விலகி மார்பு அங்குமிங்கும் ஆடியது அவளுக்கு. நான் புரியாமல் விழித்தேன்.
“இரு இப்போமே எல்லாம் சொல்லணுமா, கழியாத பொம்பள. வரட்டும்”
“எவென் வீட்டு மாடுல, பிச்சைக்கார பய இங்க அவத்து விட்ருக்கான். மேய இடம் இல்லையால, இழுத்துக்கட்டுல புலையாடி மவனே” ஆச்சி யாரையோ ஏசியபடி செல்வது காதில் கேட்டது.
“மணியன் ஏதாச்சும் சொல்லுவானா இவள பத்தி, வளத்தவ பாசம், பெத்தவளு மேல இல்ல. அவன ஒன்னும் சொல்லதுக்கு இல்ல மக்கா. எல்லாம் இப்புடித்தா நடக்கணும்னு மேல ஒருத்தன் எழுதிருக்கான்”, எதுவுமே புரியவில்லை. அவளும் வருவது போலில்லை.
“உங்க தாத்தாவ நா கண்டுருக்கேன் சின்னதுல. எம் ஜி ஆர் கலரு, சுருண்ட முடியுமா ஆளு சினிமா நடிகர் கணக்கா இருப்பாரு. இந்த அம்மா எப்புடி பழக்கமோ. உங்க தாத்தாவுக்கு தான் தெரியும். அவங்க அய்யா பழைய ஆளு, நிலமும் தோப்புமா ஜம்முன்னு இருப்பாரு. எங்க அய்யா சொல்லுவாரு” கொஞ்சம் உரிமை எப்படியோ பேச்சில் வந்தது.
“இந்த ஆச்சி யாரு. எங்க தாத்தாவுக்கு என்ன பழக்கம்?”
“இவ ஊரு, குடும்பம்லா தெரியாது. உங்க தாத்தா மேக்க போவாரு அடிக்கடி. இவளுக்கு அங்க பூவாரு பக்கம்னு மட்டும் தெரியும். இவரு அங்க கள்ளு குடிக்கப் போவாருன்னு அய்யா சொல்லுவாரு. அங்க என்ன பழக்கமோ. உங்க ஆச்சிய கட்டுனதுக்கு, அப்புறமா இல்லையானு தெரியல. நிறைய மறந்துட்டு” நிறுத்தி பாக்கெட்டில் இருந்த திருநீரை நெற்றியில் பட்டையிட்டார்.
வெளியே ஆச்சி வருவது போலத் தெரியவில்லை. நான் விடாமல் “அப்புறம்” என்றேன்,
“உங்க ஆச்சிக்கு பிள்ளையில்லை, போகாத கோயில் இல்லையாம். மடில கனம் இல்லை போல. ஒருநாள் நல்லா செவந்த குட்டியை தூக்கிட்டு வந்தாராம். அவன்தான் உங்க அப்பன். வீட்டுல கொண்டாந்த அவரு அப்பா உள்ள விடல. பெரிய சண்டை. கொஞ்ச நாளுல இவ வந்தா, எம்பிள்ளைனு சொல்லி ஒரு நாள் அலையான்றம் முழுக்க ஒரே பெகலம்தான். உங்க தாத்தாக்க அப்பா அவர தலை முழுகி வீட்ட விட்டு விரட்டிட்டார். நல்ல மனுஷன், கேவலத்துல அப்புறம் இங்க வரவேயில்ல. எங்க அய்யா நாரோயில்ல வீடு பாத்து வச்சாரு. உங்க அப்பன் வந்த வீட்டுல ஒட்டிக்கிட்டான். உங்க ஆச்சியும் பிள்ளையில்லையா, செவத்த பய, பாக்க அவ்வளவு லச்சணமா இருப்பான். விட மனசில்லை. கூடவே வச்சுக்கிட்டா. எவன் பாத்தனோ, வத்தி வச்சுட்டான். அதுலாம் பண்டு.” நிறுத்திவிட்டு, ஆச்சி வருகிறாளா என்று நோட்டமிட்டு தொடர்ந்தார் “அங்கேயும் உங்க தாத்தாவ அசிங்கப்படுத்தி, இவளயும் பூவாருல இருந்து கூட்டிட்டு வந்து, ரோட்டுல போட்டு அடிச்சி, சங்கடம். மணியனயும் சம்சாரத்தையும் கூட்டிட்டு ஊர விட்டே போய்ட்டாரு. போறப்ப எங்க அய்யாட்ட இவளுக்கு ஒரு இடம் கொடுத்து பாருன்னு கேட்டாரு. அந்தக்கால பழக்கம்லா. இந்தா இங்க இடம் கொடுத்து அய்யா பாத்துக்கிட்டாரு. அய்யா இருக்க வர உங்க தாத்தாட்ட இருந்து லெட்டர் வரும். அய்யா இங்க வந்து பேசுவாரு. எல்லாம் நாளாச்சு”.
அமைதி மட்டுமே எங்குமே, அவள் வீட்டுக்கு வந்து இரண்டு கலரையும் கையில் கொடுத்தாள்.
“அம்மே, ஆளு பிடிப்படுகா” என்றார் எங்கோடியா,
சிறிது நேரம் பார்த்தவள், “இல்லடே, கண்ணு மங்கி நாளாச்சு. குரல வச்சுதான் இப்போ ஆள பிடிக்கது. புகையா உருவம் தெரியும்”
“உம்பேரன் தான்.”
எதையோ மறந்துவிட்டவள் போல நின்றாள். என்னவெல்லாம் நினைத்திருப்பாளோ, கண்கள் காட்டிக் கொடுத்தது கண்ணீரின் வழியே. எதுவும் பேசவில்லை.
“பிள்ளைக்கு பேரு என்னது?”
குரல் வரவில்லை. “கிருஷ்ணா” என்றேன்.
என் கைகளை பிடித்து முத்தமிட்டாள். எதுவுமே பேசவில்லை,
பின் நான், “தாத்தா தவறிட்டாரு. உங்கள்ட்ட சொல்லணும்னு என்கிட்டே கேட்டாரு முன்னாடியே”.
“நல்ல மனுஷன், என்னா ஐஸ்வர்யம் நிரஞ்ச ஆளு. நன்னி எப்போவும் உண்டு. நீயும் நல்லா வருவா. மணியன் நல்லாருக்கானா,” பேசியபபடியே ஓரமாய் இருந்த தகரப் பெட்டியில் சேலை ஒன்று மூடி வைத்திருந்த புகைப்படத்தை எடுத்தாள். பின் மூடி விட்டு வந்தாள். “சாப்பிட்டுட்டு போ, இங்க எங்க தங்க சொல்ல. சாப்பிடாம போகக்கூடாது.” என்றாள்.
என்னால் தொடர்ந்து அங்கே இருக்க முடியவில்லை “நா போறேன். வேற வேலையிருக்கு. மன்னிச்சிருங்க” என்றபடி எழுந்தேன். எதையோ எண்ணியபடி வந்தவள் மீண்டும் கைகளை பிடித்து முத்தமிட்டாள். மனம் இருண்டு, உணர்வுகள் கூடியது, என்னையறியாமல் குனிந்து அவள் கால்களை தொட்டேன். அவள் கண்ணீர் என் முதுகில் குளிர்ச்சியாய் பட்டது. ஆச்சி வீட்டின் வெளியே வந்து நான் தெரு திரும்பும் வரை நின்று கொண்டிருந்தாள் அவளின் கலங்கிய கண்கள் அதுவரை எனக்கு தெரிந்தது.
எங்கோடியா மாமா பேருந்து ஏற்றிவிடும் வரை கூடவே வந்தார், கைபேசி எண்கள் பரிமாறிக் கொண்டோம். நாகர்கோயில் வந்ததும் சென்னை உடனே திரும்ப மனமில்லை, கன்னியாகுமரி சென்று அறையெடுத்து தங்கினேன். இரவு கடற்கரைக்கு சென்றேன். அலையெல்லாம் ஏதோ சோகத்தை தாங்கி வருவதும் போவதுமாய் தெரிந்தது. சுற்றிலும் சூன்யமாய் உணர்ந்தேன். இரவு தூங்கியதும் நினைவில்லை.
காலை எழுந்து சூரிய உதயம் காண முடிவு செய்தேன். என் அறையில் இருந்தே கடல் தெளிவாய் தெரிந்தது. கைபேசி ஒலிக்கவே எழுந்தேன், எங்கோடியா மாமாதான். ஊருக்கு போய் விட்டேனா என அழைப்பதாய் தோன்றியது. ஜன்னல்களை திறந்தவாறே அழைப்பை எடுத்தேன்.
“மக்கா ஊருக்கு போய்ட்டியா. பயணம்லா வசதியா இருந்துச்சா. அப்புறம் ஆச்சி இறந்துட்டா. எனக்கு இப்போதான் தகவல் வந்திச்சு. உன்ன பாத்த சந்தோசமா இருக்கும். நல்ல சாவு. சொல்லத்தான் கூப்பிட்டேன்” மறுபதில் எதுவுமே எதிர்பார்க்கவில்லை, அழைப்பை துண்டித்துவிட்டார். சூரியன் மெதுவாய் கடலில் இருந்து எட்டிப் பார்ப்பது போலவிருந்தது, மஞ்சள் பந்து, கடல் தங்கம் போல மின்னியது.
அறையில் இருந்து கிளம்பி இறையூர் சென்றேன். ஊர் இயல்பாக இயங்கியது. கொஞ்சம் ஆண்கள் கூரையில் வெளியே நின்றார், கூடவே எங்கோடியாவும் இருந்தார். “மக்கா போலையா, நீ போய்ட்டேன்னு நினச்சேன்”
கூடவே வீட்டுக்குள் வந்தார். எல்லாரிடமும் சொல்லியிருக்கிறார் போல, என்னை அனைத்து கண்களும் வினோதமாய் பார்ப்பது போல தெரிந்தது. உள்ளே சென்றோம் ஆச்சியைப் படுக்க வைத்திருந்தனர். யார் போட்ட மாலையோ பூவின்றி நார் அதிகமாய் தெரிந்தது. வரும் அவசரத்தில் எதையும் நான் யோசிக்கவில்லை. வெளியே பாடை தயாராய் இருந்தது. தனிக்கட்டையாய் இருந்திருக்கிறாள்
எல்லாம் வேகமாய் நடந்தது. காரியங்களில் நானும் இருந்தேன், வாய்க்கரிசி போட்டேன், எரிக் கங்கு எங்கோடியா மாமா இட்டார். அருகில் இருந்த ஆற்றில் குளித்து மீண்டும் அவள் வீட்டுக்கே வந்தேன். தகரப்பெட்டியை திறந்து புடவையை எடுத்தேன் உள்ளே மங்கிய புகைப்படம் ஒன்று தெரிந்தது. அதில் சுருள் முடியும் எம் ஜி ஆர் போல தாத்தாவும், அருகே செம்மீன் ஷீலா போல ஆச்சியும் இருந்தாள். புகைப்படம் சுற்றிய அதே பழைய புடவையை ஆச்சி அதில் கட்டிக்கொண்டு இருந்தாள். அதை நானே எடுத்துக்கொண்டேன். வெளியே எங்கோடியா மாமா நின்றார்.
“வச்சுக்கோ. உங்க ஆச்சி தாத்தா தானே. பிள்ளைக்கு கல்யாண வயசு ஆச்சே. வரன் ஏதாச்சும் வருகா. நம்ம ஊருல பாப்போம், மெட்ராஸ் போய் அப்பாட்ட சொல்லு. மாமாவ பாத்தேன்னு.” பேசிக்கொண்டே இருவரும் நடந்தோம்.