அழகியசிங்கர்
மார்ச்சு மாதத்திலிருந்துதான் சாம்பசிவன் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தான். அதற்கு முன் அவனுக்கு அந்தப் பழக்கமில்லை. அவன் பார்த்த வேலையிலிருந்து பிப்ரவரி மாதம் பணிமூப்பு அடைந்திருந்தான்.
மார்ச்சு மாதம் அவன் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவனுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் போலிருந்தது. அதற்குக் காரணம் இருக்கிறது.
அவன் பணிமூப்பு அடைந்ததால் இனிமேல் அடுத்த நாளிலிருந்து வேலைக்குப் போக வேண்டாமென்று நினைப்பு அவனுக்குப் பிடிக்கவில்லை.
காலையில் பரபரப்பாக அலுவலகம் போவதற்குக் கிளம்பிப்போக வேண்டாமென்று நினைக்கும்போது அவனுக்கு என்னமோ மாதிரி இருந்தது.
எதையோ பறிகொடுத்த நிலைக்குப் போனதாக நினைத்தான்.
அப்போதுதான் அவன் நடராஜனைக் கவனிக்க ஆரம்பித்தான்.
காலையில் ஒரு சிகரெட் பிடிக்காமலிருக்க நடராஜனால் முடியாது. நடராஜனும் அவனும் தினமும் நடைப்பயிற்சி செய்வார்கள்.
நடக்கும்போது ஒரு இடத்திலிருந்த பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கிப் பிடிப்பான். சிகரெட்டுக்கு கணக்கு வைத்திருந்தான் நடராஜன் .அன்றிலிருந்து தற்செயலாக நடராஜனுடன் சாம்பசிவனும் அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்.
அன்று மார்ச்சு ஒன்றாம் தேதி.
அன்றிலிருந்து அவனால் அதை விட முடியவில்லை. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு இருந்த பழக்கம் பாக்கெட் பாக்கெட்டாக தொடர்கிறது.
இது என்னடா சனி ஏன் விடமுடியவில்லை என்று அவனையே அவன் நொந்து கொண்டான்.
அவன் சிகரெட் பிடிக்கிற நாளிலிருந்து அவள் மனைவிக்குப் பிடிக்கவில்லை.
திருமணம் ஆகி 30 வருடம் ஆகிறது. ஆனால் ஒரு குறை இரண்டு பேருக்கும் குழந்தை பிறக்கவில்லை. அந்த ஆத்திரமே அவனுக்கு அதிகமாகத் தெரியும்.
மனைவியின் இயலாமையா அவனுடைய இயலாமையா?
இப்போது சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது எப்படி?
சாம்பசிவனுக்குக் குழப்பமாகவே இருந்தது. சிகரெட் பிடிக்க ஆரம்பித்து அவனுக்கு ஒரு வருடம் அனுபவம் கிடைத்து விட்டது. பென்சன் பணத்தில் பெரும்பகுதி சிகரெட் சிகரெட் சிகரெட்.
ஒருநாள் அவன் தூக்கத்தில் அவன் சிகரெட்பிடித்துக் கொண்டிருக்கும்போது அவன் படுத்திருக்கும் படுக்கையெல்லாம் எரிந்து போவதுபோல் கனவு. அவன் திடுக்கிட்டு விழித்தான்.
அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த மனைவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
அன்று நடைப்பயிற்சியின் போது வழக்கமாக நடராஜனுடன் அந்த முனைக் கடையில் சிகரெட் வாங்கும் போது சாம்பசிவன் சிகரெட் வேண்டாமென்று மறுத்து விட்டான். நடராஜனுக்கு ஆச்சரியம்.
வீட்டிற்கு வரும்போதும் அவன் சிகரெட் வாங்கவில்லை. அவன் மனைவிக்கும் ஆச்சரியம். அவன் எப்போதும் சாப்பிடும்போது சிகரெட் பிடிப்பது வழக்கம்.
அதுமாதிரி அவன் செய்யவில்லை என்பதால் ஏன் சிகரெட் பிடிக்கவில்லை என்று மனைவி கேட்டாள்.
அவன் பதில் சொல்லவில்லை.
அன்று முழுவதும் அவன் கலக்கத்துடன் இருந்தான். இரவு நேரம் தூங்கும்போது; அவன் சிகரெட் பிடிக்கவில்லை.
அவன் எதாவது புத்தகம் படிக்கும்போதுதான் சிகரெட் பிடித்துக்
கொண்டிருப்பான்.
அன்று புத்தகம் படித்தும் சிகரெட் பிடிக்கவில்லை.
அடுத்தநாள் காலை எழுந்தவுடன் அவன் சிகரெட்டை நாடிப் போனான்.