தெளி தேவதை

“நாம் எங்கே செல்கிறோம்?”

வசி கேட்டாள். அகவை பதிமூன்றை அப்போதுதான் தொட்டிருந்தாள். சிறுமியாக இருந்தவள், உடலின் மாற்றங்களால் பருவப்பெண் ஆகியிருந்தாள். பாவாடை சட்டையில் தலை நிறைய மல்லிகைப்பூவும், நெற்றிப்பொட்டுமாக அவளே ஒரு குட்டி அழகியாக அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு உறக்கம் வரவில்லை. அவள் அமர்ந்திருந்த மாட்டு வண்டி, ஜல் ஜல் என்று ஒலி எழுப்பியவாறு மலைகளுக்கிடையேயான பாதையில் சென்று கொண்டிருந்தது. கரடு முரடான பாதையின் கடுமை தெரியாமல் இருக்க மாட்டு வண்டிக்குள் வைக்கோல் அடர்த்தியாக அடுக்கப்பட்டு அதன் மீது பஞ்சுத்துணி அடுக்குகளாக அடுக்கப்பட்டிருந்தது. அதன் மீது தான் வசியும், அவளது தாய் உமாவும் அமர்ந்திருந்தார்கள். போகும் வழியில் தாகத்தைத் தணிக்க வண்டிக் கூண்டின் ஓரம் மண் பானையில், நீர் இருந்தது. ஒரு பாண்டத்தில் பழைய சோறும், மிளகாய் ஊறுகாயும் அவர்களின் பசிக்காய் சேமிக்கப்பட்டிருந்தன. அந்தப் பாண்டம் துணியால் சுற்றப்பட்டிருந்தது. மாடுகள் வயிறார உண்டிருந்தன. ஆதலால் தோய்வின்றி நடந்து கொண்டிருந்தன. எதிர்பார்த்த நேரத்துக்குள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு சேர்ந்துவிடுகிற நம்பிக்கையை அளிக்கும் வண்ணம் நடந்தன.

“ஏன் பாதை வெறிச்சோடியிருக்கிறது? வழமையாக வியாபாரிகளும், நாடோடிகளும், காசிக்குச் செல்வோரும் பயன்படுத்தும் பாதை தானே இது?” என்றாள் தாய் உமா புருவச்சுருக்கங்களுடன்.

“அதுவா… வடக்கே இப்ராஹிம் லோடி சர்க்கார் வீழ்ந்ததையடுத்து புதிய அரசு உதித்திருக்கிறதாம். வழிப்போக்கர்கள் பாபர் என்ற பெயரைப் பயன்படுத்தினார்கள். புதிய அரசின் தேவைக்கென வியாபாரிகள் அங்கே சென்றிருக்கலாம்” என்றார் விகார்.

“சொல் அம்மா, நாம் எங்கே செல்கிறோம்?” என்றாள் வசி மீண்டும்.

“தெளி தேவதையைப் பார்க்க” என்றாள் தாய், உமா.

“தேவதை என்றால்?” என்றாள் வசி.

“நம்மைப் போல் இருப்பவர்கள். நம்மை ரட்சிப்பவர்கள். ஆனால், நம்பவே முடியாத சக்தி படைத்தவர்கள் என்று அர்த்தம்?”

“தெளியிடம் என்ன சக்தி இருந்தது?”

தான் ஒரு குடும்பமாக, பிள்ளை பெற்றெடுத்து வாழ்ந்து செழிப்பது போல் தன் மகளும் வாழ்ந்து செழிக்க வேண்டும் என்று உளமாற விரும்பினாள் உமா. தன் பெற்றோர்கள் தனக்குச் செய்ததை தானும் தன் மகளுக்குச் செய்வதில் குறை ஏதும் வைக்கக்கூடாதென்று விரும்பினாள். அதன் ஒரு பகுதியாகவே அந்தப் பயணமாக இருந்தது. செல்ல இருக்கும் இடத்தின் முக்கியத்துவம் அறிந்தால், வசி, அதன் தூய்மைக்கேற்ப நடந்துகொள்வாள் என்று தோன்றியது.

“உனக்கு அரசன் பார்த்தனாஜன் கதை தெரியுமா?”

“தெரியாதே”

“சொல்கிறேன் கேள். முன்பொரு காலத்தில் பார்த்தனாகென் என்றொரு அரசர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மேரி என்றொரு மனைவியும் இருந்தாள். இந்தப் பிரதேசத்தை அவர்கள் இருவரும் சிறப்பாக ஆட்சி செய்துவந்தனர். அவரது ஆட்சியில் முப்போகம் விளைந்தது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனால், பார்த்தனாகென் தம்பதிக்கு வெகு காலமாகக் குழந்தையே இல்லாமல் இருந்தது”

கால்களை மடித்து அமர்ந்து, முட்டியின் மேல் கைகளை ஊன்றியபடி,

“ம்ம்ம்” என்று சொல்லி ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்தாள் வசி. அப்போது மாட்டுவண்டியின் உட்புற விகாரத்திலிருந்து ஒரு பள்ளி தொப்பென்று அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில், துணி மீது விழுந்தது.

“வீல்ல்ல்ல்ல்” என்று பயத்தில் அலறினாள் வசி. தொடர்ந்து இன்னொரு ஆண் பல்லியும் அதனருகே விழுந்தது.

மாட்டு வண்டியை செலுத்திக்கொண்டிருந்த வசியின் தந்தை விகார் சட்டென வண்டியை நிறுத்திவிட்டு

“என்ன? என்னானது?” என்றார் பதட்டத்துடன்.

வசி கால்களைச் சுருக்கியபடி, பின் பக்கமாய் நகர்ந்து, மாட்டு வண்டிக் கூண்டின் சுவற்றோடு ஒண்டிக்கொண்டிருந்தாள். உமா தன் ஆள்காட்டி விரல்களால் பல்லியைச் சுட்டிக்காட்டினால். அவள் முகத்தில் அசூயை உணர்வு வியாபித்திருந்தது. தன் கைகளால் அந்த பல்லிகளை ஒரு சேரத் தட்டிவிட்டார் விகார். அந்தப் பல்லிகள் வண்டியின் வெளிப்புறம் புல்லில் விழுந்து ஓடி மறைந்தன.

“நல்ல வேளை நசுக்கவில்லை…. கர்ப்பமாக இருந்தது அந்தப் பெண் பல்லி” என்றாள் உமா

“அதனால தான் தள்ளி விட்டேன்” என்ற விகார், தொடர்ந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து அமர்ந்தான்.

“ஒரு கவலம் தண்ணீர் கொடு” என்று கேட்க, மண் பானையின் மூடியைத் திறந்து கோப்பை ஒன்றில் தண்ணீர் மொண்டு எடுத்து உமா நீட்ட, அதை வாங்கி அண்ணாந்து பார்த்தபடி வாய்க்குள் கவிழ்த்து குடித்துவிட்டு கோப்பைத் திருப்பித்தந்தார் விகார். புறங்கையால் இதழோரம் வழிந்த நீரை வழித்துத் துடைத்துவிட்டு மாட்டின் பின்புறம் உதைக்க, வண்டியின் முன் கட்டப்பட்டிருந்த மாடுகள் வண்டியை இழுக்கத்துவங்கின.

உமா, வசி அமர்ந்திருந்த வைக்கோல் மீது படர வைக்கப்பட்டிருந்த இளவம் பஞ்சுத்துணியைத் தட்டி சீராக்கினாள். வண்டியின் கூண்டோடு ஒண்டிக்கொண்டிருந்த வசி, பயத்திலிருந்து மீண்டவளாய் வைக்கோல் தட்டியின் மீது மீண்டும் சரியாக அமர்ந்துகொண்டாள்.

“ஆங்க்..கதையை விட்ட இடத்திலிருந்து தொடரலாம்” என்றாள்.

உமா விட்ட இடத்திலிருந்து மீண்டும் கதைச் சொல்லத்துவங்கினாள்.

“அரசனுக்கும் அரசிக்கும் குழந்தையே இல்லாமல் இருந்தது. ஆதலால் அவர்கள் தங்கள் மந்திரியை ஆலோசித்தார்கள். மந்திரி, அவர்களை இந்த கிராமத்துக்கு ஒரு முறை சென்று வரப்பணித்தார். இந்த கிராமத்தில் தங்கி அரசனும் அரசியும் உறவு கொண்டால் குழந்தை பிறக்கும் என்று சொல்லப்பட்டது. இந்த கிராமத்தில் தான் தெளி இருந்தாள். தெளி கடவுளுக்கு நேர்ந்துவிடப்பட்டவள். அந்தக் காலத்தில் கடவுளுக்கென நேர்ந்துவிடப்பட்டவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும். யாருடனும் உறவு கொள்ளக்கூடாது என்பது விதியாக இருந்தது. அவளின் கண்ணித்தன்மை கடவுளுக்குக் காணிக்கையாக்கப்பட்டது. தெளி, குழந்தை வரம் தேடி வரும் அரசனுக்கும் அரசிக்கும் ஒரு மாத காலத்திற்கு எல்லாமுமாய் இருப்பதாய் ஒப்பந்தமாயிற்று.”

“அரசனும், அரசியும் வந்தார்கள் ஒரு வாரம் தங்கினார்கள். தெளி அவர்களுக்கு வேண்டிய உணவு, மற்றும் இதர பணிவிடைகள் செய்துகொடுத்தாள். ஒரு மாதத்தின் இறுதியில், அரசியை சோதித்த மருத்துவர்கள் அரசி கர்ப்பமடையவில்லை என்றார்கள். ஆனால், அந்த நேரம் தெளி மயங்கி விழுந்தாள். தெளியை சோதித்த மருத்துவர்கள் அவள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்கள். இது அரசருக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஏனெனில், அந்த ஒரு மாத காலமும் தெளி அரசர் மற்றும் அரசிக்கு அருகாமையில், அவர்களின் கண் பார்வையில் தான் இருந்தாள். அவளை அரசர் உள்பட யாரும் தீண்டவில்லை. ஆகையால், அரசிக்குள் உருவான கரு தெய்வ வசத்தால் தெளியை வந்தடைந்தது என்று எல்லோராலும் பேசப்பட்டது. கடவுள் தெளியையே தேர்வு செய்ததாக கொள்ளப்பட்டது.” என்று சொல்லி நிறுத்தினாள் உமா.

“பிறக்கென்ன ஆயிற்று?” என்றாள் வசி கதை கேட்கும் ஆர்வத்தில்.

“தெளிக்கு அது ஒரு நற்செய்தியாய் விளங்கியது. ஏனெனில், தெளி அப்போதிருந்த கிராம மக்களால் இறைப்பணிக்கென நேர்ந்துவிடப்பட்டவள். தன் வயதொத்த பெண் பிள்ளைகள் திருமணம் முடித்து பிள்ளை பெற்றுக்கொண்டிருக்க, ஆலயப்பணிகளுக்காய் தான் மட்டும் நேர்ந்துவிடப்பட்டதன் காரணம் தெரியாமல், அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தாள். எப்படி தாய் தந்தையரை ஒருவர் தேர்வு செய்ய முடியாதோ அதே போலத்தான் இறைப்பணியும் என்பதாக அவளுக்குச் சொல்லப்பட்டிருந்ததை அவள் ஒரு சாபமாகவே பார்த்தாள். அப்படிப்பட்டவளுக்கு, பார்த்தனோஜன் அரசனின் வாரிசை சுமப்பது, அவள் தேடிய விடுதலையை அவளுக்கு அளிப்பதாகவே இருந்தது. அதை அவள் முழுமனதுடன் வரவேற்றாள், சுவீகரித்தாள், அதன் ஒவ்வொரு நொடியிலும் தன் பூரணத்தை உணர்ந்தாள்.”

“தெளி கடவுளுக்கு நேர்ந்துவிடப்பட்டவள் என்பதால் அவள் பிள்ளை பெறும் முன் அரசாட்சிக்குத் திரும்புவது சரியாகப் பார்க்கப்படவில்லை. ஆதலால் அரசரும் கிராமத்திலேயே பிள்ளை பிறக்கும் வரை தங்குவது என்று முடிவாயிற்று. தெளி அரசரின் வாரிசை சுமப்பதால், அவளுக்கு ராஜ மரியாதை கிடைத்தது. சத்தான உணவுகள் வழங்கப்பட்டன. எடுபிடி வேலைகளுக்கு வேலையாட்கள் நியமிக்கப்பட்டார்கள். அரசியும் தெளியைத் தன் சகோதரி போல் பார்த்துக்கொண்டாள். அவளது கருவின் வளர்ச்சியை ஒரு மருத்துவர் தொடர்ந்து பரிசோதித்தார். ஆனால், துவக்கத்தில் மிகவும் திடமாகக் காணப்பட்ட அவர், நாட்கள் செல்லச் செல்ல சற்றே குழப்பமாகவே காணப்பட்டார். ஒரு கட்டத்தில் தெளிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சுவிட சிரமப்பட்ட அவள் இறந்து போனாள். அரசரின் வாரிசுடன் தெளி இறந்தது கண்டு அரசர் மிகவும் துயரத்துக்கு ஆளானார். மருத்துவர்கள் குழந்தையையாவது காப்பாற்றிவிடலாம் என்றெண்ணி அவளது வயிற்றைக் கிழித்துப் பார்த்தனர். உள்ளே ஒரு சதைப்பிண்டம் மட்டுமே காணப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த சதைப்பிண்டத்தில் உயிர் இல்லாதது கண்டு உறைந்தனர். அதே நேரம் அரசி கருவுற்றிருப்பதாக அறியப்பட்டது. எந்த ஆணுடைய உதவியும் இன்றி தெளி தானாகக் கருவுற்றது பின்னாளில் எல்லோராலும் புரிந்துகொள்ளப்பட்டது. தெளி, அரசியை அடைய இருந்த உயிரற்ற சதைப்பிண்டத்தைத் தான் ஏற்று, பதிலாக அரசிக்கு உயிருள்ள கருவைத் தந்திருக்கிறாள் என்று எல்லோராலும் ஒருமனதாக நம்பப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்டது.”

கேட்டுக்கொண்டிருந்த வசி அதிர்ச்சியடைந்தாள். அவளது புருவங்கள் சுருங்கின.

“பிறகு?” என்றாள் ஆர்வமுடன்.

“அவளுக்குக் குழந்தை பிறக்கக்கூடாது, அரசருக்கு வாரிசே கிடைக்கக்கூடாது என்று எண்ணி யாரோ தெளிக்கு விஷம் தந்திருக்க வேண்டும் என்று அனைவராலும் ஒருமனதாக ஊகிக்கப்பட்டது. அரசருடன் வந்திருந்த மருத்துவர்கள், மந்திரிகள், பாதுகாவலர்கள் என அனைவரும் கொல்லப்பட்டனர். தெளி இந்தக் கிராமத்திலேயே புதைக்கப்பட்டாள். அப்படியே தெளி கடவுளாகிவிட்டாள். அதனாலேயே கன்னிப்பெண்கள் ஒரு முறையாவது இந்த கிராமத்துக்கு வந்து தெளியின் காலில் விழுந்து அவளைத் தேவதையாக வரித்து வேண்டிக் கேட்டிக்கொள்ளும் வழக்கம் இன்றளவும் தொடர்கிறது. அப்படி வேண்டிக்கொள்பவர்களுக்கு, எந்த ஆணுடைய உதவியுமின்றி தானாகவே பிண்டத்தை கருவுறும் தன்மையை அடைவதிலிருந்து தெளி விலக்கி வைக்கிறாள் என்றும் தன்னை அண்டி வந்தவர்களின் தாய்மையைத் தெளி பாதுகாக்கிறாள் என்றும் இன்றளவும் சொல்லப்படுகிறது” என்று தெளி கதையைச் சொல்லி முடித்தாள் வசி.

கேட்டுக்கொண்டிருந்த விகார்,

“பலே பலே.. இத்தனை நடந்திருக்கிறதா இந்த கிராமத்தில்? தெளி குறித்து நான் அறிந்திருந்தேன். ஆனால் இத்தனை விளக்கமாக இன்று தான் அறிய நேர்ந்தது” என்றார்.

“ஆமாம்.. எனக்கும் இதுவெல்லாம் என் பாட்டி, முப்பாட்டி சொல்லி தான் தெரியும். தலைமுறை தலைமுறை இந்த கிராமத்து மக்கள் வாய் வழிச் செய்திகளாகக் கடத்தி வரப்பட்ட கதை தான் இது. நானும் திருமணத்துக்கு முன் ஒரு முறை இங்கே வந்திருக்கிறேன்” என்றாள் உமா.

இதற்கு அந்த மாட்டு வண்டி கிராமத்தை அண்டியிருந்தது. மூவரும் மாட்டு வண்டியை விட்டிறங்கினார்கள். விகார், மாடுகளை வண்டியிலிருந்து விடுவித்து அருகாமையில் இருந்த மரத்தோடு பிணைத்துக் கயிற்றால் கட்டினார். பின், கிராமத்தின் மத்தியில் அமைந்திருந்த ஒரு பெரிய ஒற்றைக் கல்லை அண்டினார்கள்.

“இங்கே தான் தெளி புதைக்கப்பட்டாளாம். அதன் நினைவாகவே இந்தக் கல் இங்கே ஊன்றப்பட்டிருக்கிறது” என்றாள் உமா.

மூவரும் அந்தக் கல் முன் நின்று விளக்கேற்றி வணங்கினார்கள். சற்று தள்ளி ஒரு மரத்தில் பல்லியொன்று தெரிந்தது.

அதன் உருவம் சற்று பரிச்சயமாக இருக்கவும் வசி அதனைக் கூர்ந்து பார்த்தாள். அது, விகார் தட்டிவிட்ட பல்லியைப் போலவே இருந்தது. விகார் பல்லியைத் தட்டிவிட்டு வெகு நேரம் இருக்கும். இத்தனை தூரம் ஒரு சிறு பல்லி தங்களை பின் தொடர்ந்து வந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றி சற்று அதிர்ந்தாள் வசி. அந்தப் பல்லி அந்த மரத்தின் அருகாமையில் இருந்த ஒரு ஒற்றையடிப்பாதையில் இறங்கி சரசரவென ஓடியது

உமா பரிச்சயப்பட்ட பாதையில் நடப்பது போல அந்த ஒற்றையடிப்பாதையில் நடக்க, வசியும் விகாரும் அவளைப் பின் தொடர்ந்தனர். அந்த ஒற்றையடிப்பாதை ஒரு தடாகத்தை அடைந்தது. தடாகத்தின் ஓரம் ஏகத்துக்கும் தென்னை மரங்கள் காணப்பட்டன. தடாகத்தின் நீர் தெள்ளத்தெளிவாக இருந்தது.

“தெளி தேவதை இங்கே சமீபத்தில் வந்தது போல் தெரியவில்லை” என்றாள் உமா.

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்றார் விகார்.

“வந்திருந்தால், கொட்டாங்கச்சிகளில் பெண் பல்லிகள் ஆண் துணையின்றி முட்டையிட்டிருக்கும் காட்சியை நாம் கண்டிருப்போம்.”

“ஓ.. அப்படியானால் வந்தது வீணா?”

“இல்லை.. நான் சொல்வது போல் செய்யுங்கள்” என்று சொல்லி உமா, தன் கணவன் விகாரின் செவியில் ஏதோ கிசுகிசுக்க, விகார் ஒரு தென்னை மரத்தில் ஏறி, ஒரு இள நீரைப் பறித்து கீழே வீசினார். அந்த இள நீர் வந்து விழுந்து உருண்டு மோதிய இடத்தில் கரையில் கிடந்த கொட்டாங்கச்சி உடைந்து சிதறியது.

அங்கே தடாகத்தின் முனையில் கூரான முனை கொண்ட பாறை ஒன்று தென்பட்டது. விகார், அந்தக் கூர்மையைப் பயன்படுத்தி, அந்த இள நீரிக்காயின் நார்களை உரித்து கொட்டங்கச்சியை வெளியே எடுத்தார். அதன் இரண்டு எதிரெதிர் முனைகளைத் துளையிட்டார். அங்கே உலவிக்கொண்டிருந்த பெண் பல்லி ஒன்றை எடுத்து அதனுள் இட்டு ஒரு முனையை மரக்குச்சியால் திணித்து மூடினார். அந்த இரண்டாவது துளையின் வாயிலாக, ஜீவித்திருக்கத் தேவையாக பிராண வாயுவை மட்டுமே அந்த பல்லி பெற முடியக் கூடிய அளவிற்கு மிகச் சிறியதாக இருந்தது அந்தத் துளை. பின் அதை வசியின் கைகளில் திணித்தார்.

“வசி, இதனை அந்தத் தடாகத்தில் விடம்மா” என்றாள் உமா.

வசி அது போலவே செய்தாள்.

“இனி கைக்கூப்பி தெளியை வேண்டிக்கொள். உனக்கு அழகழகான அறிவான பிள்ளைகள் உன் கணவனுடன் கூடிப் பிறக்கவேண்டுமென்று” என்றாள் உமா. வசி கீழே உடைந்த கொட்டங்கச்சியை ஒரு கணம் பார்த்தாள். அதனுள் ஒரு காய்ந்த பல்லியின் எலும்புகள் தென்பட்டன. அதனருகே, சிறிது சிறிதாய், பல்லி முட்டையிட்டதற்கான அடையாளங்கள் தோன்றின.

வசி கைகளைக் கூப்பினாள்.

“அவள் சின்னப்பெண். அவளுக்கென்ன தெரியும்?” என்று கடிந்தார் விகார். உடனே உமா, வசியை அண்டி ,அவள் பின்னே மண்டியிட்டு அமர்ந்துகொண்டாள். பின் வசியைத் தன் மடியில் அமர்த்தினாள். பின் அவளின் பின் பக்கமிருந்து, தன் கைகளைச் செலுத்து, அவளது கைகளைக் கூப்பச்செய்து,

“தேவியே, உன்னைச் சரணடைகிறேன். முழுமை என்பது, இரண்டு சமமான பகுதிகளாகிறது. இரண்டும் ஒருங்கே தொடர்ந்திருத்தலே முழுமைக்கு இட்டுச்செல்வதாகிறது. பகுதிகளை உன்னிடத்திலே தேக்கிவிட்டு, முழுமையை எங்களுக்கு அருள்வதற்கு நன்றிகள் கோடி தாயே. உன்னை தொழுகிறேன். பகுதிகளை நீ எடுத்துக்கொள். எங்களுக்கு முழுமையை நல்கு. நீயே முழுமையின் திறவுகோல்” என்றாள் உமா.

வசி, கண்களை மூடிக்கொண்டு உமாவின் வார்த்தைகளை ஒரு மந்திரம் போல் ஆழ் மனதில் ஜெபித்தாள்.

“இனி சற்று காத்திருக்க வேண்டும். தெளி தேவதை இங்கே நடமாடுகிறாள் எனில், ஒரு வாரத்தில் இந்தப் பெண் பல்லி முட்டையிடும். அதை வைத்து நாம் மேற்கொண்டு முடிவு செய்யலாம். இப்போதைக்கு நாம் இங்கே தங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நீங்களும் வசியும் சுள்ளிகள் பொறுக்கி வாருங்கள். இரவுக்கு உணவு தயாரிக்கலாம். நாங்கள் பெண்கள் வண்டியிலேயே படுத்துக்கொள்கிறோம்.” என்றாள் உமா.

உமா கேட்டுக்கொண்டது போலவே அவர்கள் ஒருவாரம் அங்கே தங்கினார்கள். விகாரும், வசியும் சுள்ளிகளைப் பொறுக்க, அவ்வப்போது கிராமத்திற்கு வெளியே சென்று வந்தார்கள். உமா, கிராமத்தில் இருந்தபடி அவர்களுக்கு உணவு தயாரித்தாள். ஒரு வார காலத்தில், வசி தடாகத்தில் விட்ட கொட்டங்கச்சியில் இருந்த பல்லி முட்டையிட்டிருந்தது.

அதே நேரம், வசி உடல் நலக்குறைவாள் பாதிக்கப்பட்டாள். யாருமற்ற கிராமத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டதில் அவளுக்கு மருத்துவம் செய்ய இயலவில்லை. ஜுரமும் தலைவலியும் வயிற்றுப்போக்கும் அவளை சோர்வடையச்செய்தது. அவள் உணவு எடுத்துக்கொள்வதும் தடைபட்டது. அவளின் உடல் நலத்துக்கு என்ன குறை, என்ன தீர்வு என்று எதுவும் தெரியாமல் விகாரும், வசியும் குழம்பினார்கள். யாரை அண்டுவது, எதை அண்டுவது என தீர்மானமில்லாமல் திண்டாடினார்கள். என்ன செய்வதென திகைத்தார்கள். வசி சற்றைக்கெல்லாம் மூச்சு விடவே சிரமப்பட்டாள். இறுதியில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்தாள்.

உமாவும் விகாரும் அழுது புரண்டார்கள்.

‘வசி என்னைப்போன்றே திருமணம் முடித்து, பிள்ளைப் பேறு பெற்று, வாழ்வில் சிறக்க வேண்டுமென்று தானே அவளை இங்கு அழைத்து வர எண்ணினேன். அது இப்படியா முடிய வேண்டும்? என் பிள்ளையை ஆசீர்வதிக்கத்தானே உன்னிடம் அழைத்து வந்தேன், அவளையே எடுத்துக்கொண்டு விட்டாயே’ என்று அழுது புரண்டாள் உமா.

மிகுந்த மன வருத்தத்துடன் வசியின் உடலை அங்கே குழி தோண்டி விகாரும் உமாவும் கனத்த மனதுடன் புதைத்தார்கள். அழுது அழுது வீங்கிய கன்னங்களுடன் அவர்கள் நிதானம் அடைந்தபோது, தெளியின் இறப்பைப் போன்றே வசியினுடையதும் இருந்ததை உணர்ந்துகொண்டார்கள். அது, வசியை தெளி தன்னுடன் அழைத்துக்கொண்டாள் என்று புரிந்துகொள்ளப் போதுமானதாக இருந்தது.

சற்றைக்கெல்லாம் உமா வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாள். விகார், தடாகத்திலிருந்து நீரள்ளி வந்து அவள் முகத்தில் தெளித்து அவளை சுய நினைவுக்கு மீட்டார். மீண்டெழுந்த உமாவின் நாடியை விகார் சோதித்துவிட்டு,

“நீ கர்ப்பமாக இருக்கிறாய். வசி தான் மீண்டும் பிறக்கிறாள்” என்றார் விகார்.

“இல்லை… வசி, இன்னொரு தெளியாகிவிட்டாள். இனி நமக்கும், நம் ரத்த பந்தத்தில் எல்லோருக்கும் வசி தான் தெளி” என்றாள் உமா, வசியின் கல்லரையை வெறித்துப் பார்த்தபடியே.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.