பரிசு சிறுகதை : டோக்ரி மொழி [Dogri] மூலம் : பி.பி.சாத்தே [B.P.Sathe] ஆங்கிலம் : சிவ்நாத் [Shivnath] தமிழில் : தி. இரா.மீனா

தி இரா மீனா 

ரஹிம் அண்ணி புதுப் பெண்ணாக கிராமத்திற்கு வந்தபோது எங்கள் வீட்டுப் பெண்கள் அவளைப் பார்க்கப் போனார்கள். புதுப் பெண்ணின் முகத்தைப் பார்க்க ஒவ்வொருவரும் ஒரு பொருளை பரிசாக எடுத்துப் போக வேண்டும். என் அம்மா அவளுக்கு ஒரு ஜோடி வளையல்களைத் தந்தாள்.என் அத்தை காலுக்குக் கொலுசு கொடுத்தார். என் மூத்த அண்ணி அவளுக்கு சிறிய மெட்டி தந்தார். அவர்கள் வீடு திரும்பிய பிறகு ரஹிம் அண்ணியின் அழகைப் புகழ்ந்து தள்ளினார்கள். சிறியவர்களான எங்களுக்குக் கூட அவளைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை எழுமளவிற்கு.

“என்ன அழகான பெண்! செதுக்கப்பட்ட பளிங்குச் சிலை போல இருக்கிறாள்.” அம்மா சொன்னாள்.

“என்ன கண்கள் ! மின்னிப் பளபளக்கும் கருமையான கண்கள் ! பெண் மிகவும் உயரமும் கூட.” அத்தை சேர்ந்து கொண்டாள்.

“அவள் நிறமாக இருக்கிறாள்; முகம் முழுவதும் புள்ளிகள். அப்படியிருக்கும் போது, ஒரு பெண் உட்கார்ந்திருக்கும் போது அவள் நொண்டியா அல்லது வேறு எதுவும் குறை இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும?” என் அண்ணி சிறிது கடுப்பாகச் சொன்னார்.

“அவள் ஊனம் என்று யார் சொன்னது ?வீட்டின் உள்ளேயிருந்து வரும்போது அவள் மிக இயல்பாகத்தான் நடந்து வந்தாள்” அம்மா பதில் சொன்னாள்.

“முகத்திலுள்ள கரும் சிவப்புப்புள்ளிகள் அவளுடைய சிவந்த முகத்திற்கு இன்னும் அழகு தருகிறது.” அத்தை சேர்த்துச் சொன்னாள்.

“அது கிரேக்க அழகு .ஓர் அரண்மனையின் அலங்காரம். யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” என்று எங்கிருந்தோ அந்த இடத்திற்கு வந்த என் மூத்த அண்ணன் அந்த வாக்கியத்தை முடித்தான்.

“அந்த சலவைத் தொழிலாளி தன் புது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். நாங்கள் இலாம்தீனின் மனைவியைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். பரிசுகளைக் கொடுக்க நாங்கள் அவர் வீட்டிற்குப் போயிருந்தோம்.விளக்கைப் போல அந்தப் பெண் மிக அழகாக இருக்கிறாள்.” அம்மா விளக்கினாள்.

என் மூத்த அண்ணிக்குக் கண்கள் மிக அழகானவை. ஆனால் அவளுடைய நிறம் சிறிது கருமை கலந்தது. உயரம் குறைவு. தன் வெறுப்பை அடக்கிக் கொண்டு “அவள் ஓர் அந்தணப் பெண்ணோ அல்லது ராஜ்புத் பெண்ணோ இல்லை, ஒரு சாதாரணமான சலவைத் தொழிலாளியின் மனைவி.” என்றாள்.

“ஆமாம்,அவள் சலவைத் தொழிலாளியின் மனைவிதான், ஆனால் சாதாரண குலத்தில் அழகிருக்க முடியாதா ?” என் அத்தை உடனடியாக வெடித்தாள்.

“உங்கள் மகனுக்கு அவள் தங்கையைத் திருமணம் செய்து வையுங்கள்,” உள்ளே போனபடி அண்ணி பதிலடி கொடுத்தாள்.அது என்அண்ணனுக்குக் குறிப்பாகச் சொல்லப்பட்ட வார்த்தைதான். என்றாலும் அவளுக்கு ’ கிரேக்க அழகு” என்பதன் அர்த்தம் புரியவில்லை.

ஹம்தீனின் அம்மாவும் எங்கள் அத்தைதான் ,ஆனால் எங்கள் சொந்த அத்தையிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாங்கள் அவளை ’துணி வெளுக்கும் அத்தை’ என்போம்.சில சமயங்களில் இரண்டு அத்தைகளும் சேர்ந்து உட்கார்ந்திருக்கும் போது, நாங்கள் ’அத்தை ’ என்று கூப்பிட இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கும் . அதைப் பார்த்து நாங்கள் குதித்துக் கும்மாளமிடுவோம்.

ஜம்முவிலிருந்து திரும்பும் வழியில் என் அப்பா சரினாசாரிலிருந்துமெதப்தீனை அழைத்து வந்தார். அவருக்குத் தங்குமிடம் கிடைப்பதில் சில தொல்லைகள் இருந்ததால் அப்பா அவரை ராம் நகருக்கு வர வைத்தார். அவருக்குக் கொஞ்சம் நிலமும், இருக்க வீடும் கொடுத்தார். துறை முகத்தில் அவருக்கு வேலையும் கிடைத்தது. அவருடைய மகன்களும் சலவை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர் ஓய்வு பெற்ற பிறகு அவர் மூத்த மகன் குலாப்தீனுக்கு அந்த வேலை தரப்பட்டது.இளைய மகன் இலாம்தீன் சலவை செய்யும் வேலையையே செய்தார். குலாப்தீனின் மகன் சாம்சுவுக்கும் ,எனக்கும் ஒரே வயதுதான். இலாம்தீன் சலவை செய்த துணிகளைக் கொண்டு வரும் போது சாம்சு என் துணிகளைத் தூக்கி வருவான். சாம்சுவின் தாத்தா ஓரிடத்தில் சும்மாஉட்கார மாட்டார்; அரிசி,கோதுமை ஆகியவறை விவசாயம் செய்து வந்தார். நானும் , சாம்சுவும் மெதாப்தீன் வயலுக்குள் போய், பட்டாணிபறித்துத் திருட்டுத்தனமாகச் சாப்பிட்டு மகிழ்வோம்.

இரண்டு,மூன்று நாட்கள் புதுப்பெண்ணிற்கு மவுசு இருந்தது.பிறகு அவள் வீட்டு வேலைகளில் சேர்ந்து கொள்ள வேண்டியதாகி விட்டது. சலவை செய்யும் பெண்மணியும்,அத்தையும் தங்கள்மருமகளை நீரிறைக்க ஊர்க் கிணற்றுக்கு அழைத்துப் போனார்கள். மருமகள் தன் கழுத்து வரை முகத்திரையணிந்திருந்தாள். தலையில்ஒரு குடமும், இடுப்பில் ஒன்றும். பச்சை நிறத்தில் வெள்ளி எம்பிராய்டரி நூலால் பின்னப்பட்ட காலணியும் அணிந்திருந்தாள். மாமியாருக்குப் பின்னால் அவள் நடந்த போது மாமியாரை விட ஒன்றரை இன்ச் அதிக உயரமாக இருந்தாள்.

கிணறு எங்கள் வீட்டருகிலிருந்தது. தொலைவிலிருந்தும்,பக்கத்திலிருந்தும் ஜனங்கள் அங்கு வந்து பாத்திரங்களில் நீர் நிரப்பிக்கொண்டு போவார்கள். நீர் இறைக்கப் போவதற்கு முன்னால் மாமியார் மருமகளை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தாள்.என் தாயையும்,அத்தையையும், அண்ணியையும் நமஸ்கரிக்கச் சொன்னார்.எங்கள் வீட்டுப் பெண்கள் அவளை, “உன் கணவரும் நீயும் நீண்ட காலம் வாழ வேண்டும் “ என்று ஆசீர்வதித்தனர். பிறகு அவர்கள் நீர் நிரப்பிக் கொண்டு அவர்கள் வீட்டிற்குப் போனார்கள். ஆனால் மீண்டும் அவர்கள் எங்கள் வீட்டில் இன்னொரு சலசலப்பு ஏற்படக்காரணமானார்கள்.

“அந்தப் பெண்ணின் நடை மயில் நடனமாடுவது போல இருக்கிறது.”

வயதான அம்மாவும் ,அத்தையும் பாராட்ட வேண்டியதைப் பாராட்டியும், கண்டிக்க வேண்டியதைக் கண்டிக்கவும் செய்கிற மனப்பான்மை உடையவர்கள். ஆனால் என் அண்ணி இளமையானவர்,யாரையும் பாராட்டுவதைப் பொறுக்க மாட்டார். “மயில் கருப்பாக இருக்கும்.இவள் வெள்ளையாக இருக்கிறாள். அதனால் வெள்ளைவாத்து நடனமாடியது போல என்று சொல்வது சரியாக இருக்கும்” என்றாள்.

“மயில் வெள்ளையாக இருக்கிறது என்று சொல்வதால் நாம் எதை இழக்கப் போகிறோம்?” என்றாள் அத்தை வெடுக்கென்று.

அண்ணி அமைதியானாள் — உடனடியாகச் சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது அந்த விவாதத்தை அவள் மேலே வளர்க்க விரும்பவில்லை.

அடுத்த நாள் தண்ணீர் இறைக்கப் போவதற்கு முன்னால் மீண்டும் அவர்களிருவரும் எங்கள் வீட்டிற்கு வந்து, சிறிது நேரம் பேசி விட்டுப் போனார்கள். மருமகளின் வீடு சரினாசாரில் எங்கேயிருக்கிறதென்று எங்கள் வீட்டினர் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

“இவர்கள்தான் சின்ன அத்தை சாச்சி, இவர் பெரிய அத்தை,தாய், என் மகன்கள் அவர்களை அப்படித்தான் கூப்பிடுவார்கள்; நீயும் அப்படிக் கூப்பிடு. இவர்கள் அண்ணி [பாபி], மூத்த மகனின் மனைவி. அவர்களின் கணவரும், குலாபுதீனும் ஒன்றாகப் பள்ளிக்குப் போனவர்கள். நான் பெயர் சொல்லிதான் அவர்களைக் கூப்பிடுவேன் ஆனால் நீ அண்ணி என்றே கூப்பிட வேண்டும் “ என்று மாமியார் சொன்னாள்.

“நாங்கள் சரினாசாரில் கடைகள் இருக்கும் பகுதிக்குத் தெற்கில் வசிக்கிறோம்” மருமகள் சரினாசாரில் தன் வீடு இருக்குமிடத்தை விளக்கிக் கொண்டிருந்தாள்.

இன்னும் சில கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு அவர்கள் போய்விட்டனர். மீண்டும் எங்கள் வீட்டில் விவாதம்.

“எவ்வளவு அழகாகப் பேசுகிறாள், குயில் கூவுவதைப் போல.”

“என்னைப் பற்றியும் இது போலத்தான் முன்பு சொல்லிக் கொண்டிருந்தீர்கள்.” அண்ணி சொன்னாள்.

“நீ யாருக்கும் குறைந்தவளில்லை. உன் குரலும் இனிமையானது தான்.”

சரயு அண்ணி மகிழ்ச்சியடைந்தாள், பழைய நாட்களின் வெறுப்பை அவள் மறந்து விட்டாள்.

பிறகு சில நாட்களில் மருமகளோடு வருவதை மாமியார் நிறுத்திக் கொண்டாள். வீட்டின் பிற வேலைகளில் மூழ்கிப் போயிருக்கவேண்டும். ரஹிம் அண்ணி காலையில் இரண்டு தடவையும் ,மாலையில் ஒரு தடவையும் தண்ணீர் எடுக்க வருவாள். பள்ளிக்குப் போகும் வழியில் நாங்கள் அவளைப் பார்ப்போம். ஒரு நாள் மற்ற பையன்கள் சிறிது தூரம் போய் விட நான் நின்றேன். ரஹிம் அண்ணி வரும் வழிக்கு எதிர் பக்கத்தில். வழக்கம் போல அவள் முகம் கழுத்து வரை மூடியிருந்தது.

“ரஹிம் அண்ணி ,உங்கள் முகத்தை எனக்குக் காட்ட வேண்டும், நான் மிகச் சின்ன பையன்தானே ?” சிறிது தயக்கமாக நான் சொன்னேன்.

“பாவ்ஜி, நீங்கள் என் முகத்தைப் பார்க்க வேண்டுமென்றால், எனக்குப் பரிசு தரவேண்டும்.” அவள் நடந்து கொண்டே பேசினாள்.

நாங்கள் எதிரெதிர் திசைகளில் சிறிது இடைவெளியில் நடந்து கொண்டிருந்ததால் என்னால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

அடுத்த நாளும் அது போலவே நான் மற்றவர்களிடமிருந்து பின்தங்கி நின்றேன்; அவள் வந்த போது “ரஹிம் அண்ணி, உங்களுக்குப் பரிசு தானே வேண்டும், நான் அம்மாவிடமிருந்து வாங்கி வருகிறேன்.”என்றேன்.

“இல்லை, இல்லை, அம்மாவிடமிருந்து வேண்டாம். உங்கள்சொந்த சம்பாத்தியத்திலிருந்து எனக்குப் பரிசு கொடுத்தால்தான் என்முகத்தைக் காட்டுவேன். அதுவரை, நான் திரையை விலக்க மாட்டேன்.” என்று பதில் சொன்னாள்.

ரஹிம் அண்ணி அவள் சொன்னதில் உறுதியாக இருந்தாள். பல ஆண்டுகளாக திரை அணிந்திருந்தாள். எட்டாவது வகுப்பு முடித்த பிறகு,மேலே படிக்க நான் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் போய் விட்டேன். அதன் பிறகு ஒன்றரை வருடத்திற்கு நான் கிராமத்திற்குப் போக முடியவில்லை. எனக்கு இப்போது பதினைந்து வயது, நான் ஒன்பதாம்வகுப்பில் பெயிலாகி விட்டேன். விடுமுறையில் நான் கிராமத்திற்குப் போன போது ரஹிம் அண்ணியைப் பார்த்தேன். “பாவ்ஜி, என்ன வகுப்பில் படிக்கிறீர்கள் ?” என்று கேட்டாள்.

“ஒன்பதாம் வகுப்பு.”

“போன வருஷமும் ஒன்பதாவதில் தானே இருந்தீர்கள்?”

எனக்குப் பேச்சே வரவில்லை. அவள் முன்னால் நிற்க முடியாமல் “ஆமாம்,ஆமாம்.” என்று சொல்லி விட்டு நகர்ந்தேன்.

இரண்டாவது முறையும் ஒன்பதாவதில் பெயிலானதால் அந்த வருடமும் நான் ஊருக்குப் போகவில்லை. பத்தாம் வகுப்பு போன பிறகுதான் வீட்டிற்குப் போனேன். ரஹிம் அண்ணியை அப்போது பார்க்க நேர்ந்த போது “நீங்கள் இப்போது கல்லூரியில் படிக்கிறீர்கள் அல்லவா ?” என்று கேட்டாள்.

“இல்லை, அண்ணி, நான் இப்போது பத்தாவதிலிருக்கிறேன். இந்த தடவை நான் பாஸான பிறகு எனக்கு வேலை கிடைக்கும். என் முதல் சம்பளத்தில் நான் உங்கள் பரிசுக்கு ஏற்பாடு செய்வேன்.”

“இல்லை, பாவ்ஜி, உங்கள் முதல் மாதச் சம்பளத்தை அம்மாவிற்குக் கொடுத்து நமஸ்கரியுங்கள். அவர்கள் தெய்வங்களுக்குப் பிரார்த்தனை செய்வதால், பூஜைக்கு வேண்டிய சாமான்களை வாங்க வேண்டியிருக்கும். நான் என் பரிசிற்காக ஒரு வருடம் காத்திருப்பேன்.”

“ரஹிம் அண்ணி, என் சொந்த அண்ணியின் முகத்தைப் பார்ப்பதுஇவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று எனக்குத் தெரியவேயில்லை.”

“பாவ்ஜி, காத்திருந்து ஒன்றைப் பெற நினைக்கும் போது, அந்த விருப்பம் ஆழமாக வளரும். இளமையின் ஆரம்ப நாட்களில் இருக்கும் உங்களுக்கு ஒரு முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டு விட்டால் அது மறையாது. விருப்பம் நிறைவேற வேண்டுமெனில், தேடிக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் இன்னும் மிகச் சிறிய பையன்தான்.இந்த வயதில் பல திருப்பங்கள் வாழ்க்கையில் ஏற்படலாம், பல விருப்பங்கள் நம்மை விட்டும் போகலாம். ஆனால் உங்களுக்கு ஒருவிருப்பம், என் முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஏன் அதை முடித்து விட நினைக்கிறீர்கள்?அது பக்குவப்படட்டும், உறுதியாகட்டும், அப்போது அது உடையாது.”

இந்த நிமிடம் வரை ரஹிம் அண்ணியின் முகத்தைப் பார்ப்பதுஒரு சின்ன வேடிக்கை, ஒரு வெறும் பொழுதுபோக்கு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், இப்போது அவள் முகத்தைப் பார்ப்பது என்பது வேறு ஒரு வடிவம் எடுத்திருக்கிறது. என் சொந்த சம்பாத்தியத்திலிருந்து பரிசு வாங்கி அவளுக்குக் கொடுப்பதென முடிவு செய்தேன்.

விதியின் தீர்மானம் வேறாக இருந்தது. பத்தாம் வகுப்பு தேறியபிறகு கல்லூரியில் சேர்ந்தேன். மூன்றாண்டுகளில் சம்பாதிக்க என்று எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. படிப்பை முடித்தவுடன் குடும்ப நிலங்களை பார்த்துக் கொள்ள வேறு யாருமில்லாததால் கிராமத்திற்குத்திரும்ப வேண்டியதாகி விட்டது. என் அப்பா இறந்து போனார். என்படிப்புச் செலவுகளை மற்றவர்கள் கவனித்துக் கொண்டனர். சிறிது காலத்தில் எனக்குத் திருமணமுமாகி விட்டது. ஆனால் ரஹிம் அண்ணி திரையை விலக்கவேயில்லை. என்னால் அவளுக்கு பரிசு கொடுக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் “பாவ்ஜி, பரிசு கிடைக்காமல் நான் என் முகத்திரையை விலக்க மாட்டேன்.” என்று சொன்னாள்.

ரஹிம் அண்ணியின் பேரழகை எல்லோரும் பாராட்டினார்கள்.வெள்ளைக்காரப் பெண் போல நிறம் ,தோற்றமும், வடிவமும் கவர்ச்சி ஆனவை. என் மனைவிக்கு ரஹிம் அண்ணியின் மேல் பொறாமை. அவளுடைய காலணிகள் இன்னமும் வெள்ளி நூல் எம்பிராய்டரி அழகோடு, இருக்கின்றன, ரஹிம் அண்ணியின் காலணியில் அந்த வெள்ளி எம்பிராய்டரி நூல் கிழிந்து போய் விட்டது.அதற்குப் பிறகு அவள் அணிந்தது சிவப்புக்காலணி, இப்போது தோல் காலணி என்று சில வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் அவளது நிறம், முக அழகு ஆகியவை அழகான எம்பிராய்டரி காலணியாய்த் தங்கி விட்டன.

“உங்களிடம் ரஹிமு தன் நீண்ட முகத்திரையை மறைத்துக் கொண்டே பேசுவது ஏன் ? “ என்று என் மனைவி ஒருநாள் கேட்டாள்.

“என்னிடமிருந்து பரிசு கிடைத்த பின்புதான், ரஹிமு அண்ணி தன் திரையை விலக்குவாள். சரயு அண்ணி என்னிடம் எப்படிப் பேசுவாளோ அப்படித்தான் அவளும் என்னிடம் பேசுகிறாள்.”

“சரயு அண்ணி, உங்கள் சொந்த அண்ணி, ஆனால் ரஹிமு இஸ்லாமிய இனத்தவள். அவளுக்கு உங்களோடு என்ன உறவு ?”

“கடவுளர் பெயர் வேறு என்பதாலே சகோதரர்கள் உறவு முறிந்து விடாது. இலாம்தீன் என் சொந்த மூத்த அண்ணனைப் போலத்தான்.”

“நீங்கள் அப்படிச் சொல்லலாம், ஆனால் ஜனங்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.”

“போகட்டும், மற்றவர்கள் சொல்வதை நான் பின்பற்ற மாட்டேன். நான் சொல்வதை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்படுவேன்.”

“ஜனங்கள் எதைப் பின்பற்றுகிறார்களோ அதைத்தான் உலகம்பின்பற்றும்.”

“ஆனால் ஜனங்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறாயா?” அவளிடம் இதற்கு பதிலில்லை.

ரம்ஜான் மாதம் வந்துவிட்டது. இசுலாமியர் தங்கள் நோன்பைத் தொடங்கி விட்டனர். “ ரஹிம் அண்ணி, நீங்கள் விரதம் இருப்பதில்லையா?” நான் கேட்டேன்.

“என்னால் நீண்ட நாட்கள் விரதமிருக்க முடியாது. நான் ஒரு நாள்தான் விரதமிருப்பேன். எனக்குப் பசி வந்துவிடும். வெறும் ரொட்டி சாப்பிட்டால் கூட எனக்குப் போதும், ஆனால் சாப்பிடாமலிருக்க முடியாது.”

“எந்த நாளில் விரதமிருப்பீர்கள்?”

“நான் என்று நீர் இறைக்க வரவில்லையோ, அன்று விரதம்
இருப்பேன்.”

“விரதத்தை முடிக்கும் அந்த நேரத்தில் நான் உங்களுக்கு இனிப்பு வாங்கி வருகிறேன்.”

“இல்லை,இல்லை, என் விரதத்தை முடிக்க நீங்கள் இனிப்பு வாங்கித் தருவது சரியல்ல. யார் வாங்கி வரவேண்டுமோ அவர்தான் இனிப்பு வாங்கித் தர வேண்டும்.”

“பிறகு நான் என்ன வாங்கித் தந்தால் பொருத்தமாக இருக்கும் ?”

“பரிசு வாங்கித் தருவது தான் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். எனக்கு அது கிடைக்கும் போது, நான் பெருவிழா நிலாவைப்பார்ப்பேன்.”

“சரி. நீங்கள் பெருவிழா நிலவைப் பாருங்கள். என்னைப் பொறுத்த வரை ,உங்களின் கிரகணத் திரையால் பௌர்ணமி நிலவு பல ஆண்டுகளாக உறையிடப்பட்டிருக்கிறது. “

அதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, ரஹிம் அண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். சாம்சுதான் நீர் இறைக்க வருவான், நான் அவனிடம் அண்ணியின் உடல்நிலை பற்றி விசாரிப்பேன். அவள் உடல்நலம் சீர்கேடு அடைந்து வருவதாகக் கேள்விப்பட்டேன். காய்ச்சல் டைபாய்டாகி,பின் நிமோனியா ஆனது. நிலைமை மோசமாகவைத்தியர் கைவிரித்து விட்டார். ஆங்கில மருத்துவரும் நம்பிக்கை இல்லையென்று சொல்லி விட்டார்.

ஒருநாள் காலை சாம்சு எங்கள் வீட்டிற்கு ஓடி வந்தான்,”நேற்று இரவிலிருந்து அத்தை நிலை மிக மோசமாகி விட்டது. பார்ப்பவர்களிடம் எல்லாம் பாவ்ஜியைக் கூப்பிடுமாறு சொல்கிறார். நான் அழைத்து வருகிறேன் என்று புறப்பட்ட போது “ நான் போகிறேன். கடைசித் தடவையாக அவர் வந்து என்னிடம் தன் முகத்தைக் காண்பிக்க வேண்டும்
என்று பாவ்ஜியிடம் சொல்” என்றாள்.

உடனடியாக நான் சாம்சுவுடன் கிளம்பினேன். ரஹிம் அண்ணி கட்டிலில் மல்லாந்து படுத்திருந்தாள். முகம் திரையின்றி இருந்தது. அழகான பிரேமில், மிக அழகானமுகம், கருப்பு விழிகள், கன்னங்களில் பரவியிருந்த கரும் சிவப்புப் புள்ளிகள் கிரேக்க சிலைகளில் ஒன்றை நினைவூட்டியது. மெதுவாக அவள் பார்வையை என் மீது திருப்பினாள்.

பிறகு மெல்லிய குரலில் ,”பாவ்ஜி, பரிசு பெறுவதற்காக என் திரையை இன்று விலக்கியிருக்கிறேன். நீங்கள் என் முகத்தைப் பார்க்கலாம், உங்கள் முகத்தைப் பார்ப்பதற்காக மட்டும் என் வாழ்க்கை என் கண்களில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் மயானத்திற்கு வர வேண்டும்.உங்கள் பரிசாக ஒரு கைப்பிடியளவு மண்ணை என்முகத்திலிட வேண்டும். இல்லையெனில் ,உங்கள் பரிசை யாசித்து கொண்டே என் புதைகுழிக்குச் செல்வேன்…”
—————————–

நன்றி : Contemporary Indian Short Stories Series III, Sahitya Akademi
Short Story Heading Masahni – B. P .Sathe

 

 

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.