மலர்ந்த முகம் அல்லது 1972 – சென்ட்ரல் சிவில் சர்வீஸ் பென்ஷன் விதி

தருணாதித்தன்

“இதுதான்  நீங்கள் தேடும் ஸ்டூடியோவாக இருக்க வேண்டும் “ என்றான் ரகு ராவ்.

அந்தத் தெருவே ஒரு நூற்றாண்டு காலம் பின்னே சென்ற மாதிரி இருந்தது. மேலே துருப் பிடித்த தகரத்தில் வர்ணம் மங்கி “ப்ருந்தாவன் ஸ்டூடியோ”. முகப்பில் மங்கிய அரக்கு நிறத்தில் மடிப்புக் கதவு. மேலிருந்து கீழ் வரை முழுவதும் படங்கள். வித விதமான வடிவங்களில் நிறங்களில் வெள்ளி தங்க இழைகளுடன் ஃப்ரேம்கள். பழையகால கறுப்பு வெள்ளை படங்கள்தான் அதிகம் இருந்தன. ஆனால் துல்லியமான படங்கள். ராஜ்குமார் ஒரு மாட்டு வண்டியில் கையில் சாட்டையுடன் சிரித்துக் கொண்டிருந்தார். மைசூர் மகாராஜா அம்பாரி யானையுடன் நின்றிருந்தார். ரோஜாப் பூக்கள் வண்ணம் வழிந்து கொண்டு இருந்தன. சரோஜா தேவி பக்க வாட்டில் திரும்பி புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

“ தாத்தா இது தானா, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ?” என்றேன். தாத்தா மேலே போர்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். தாத்தாவுக்கு வயது தொன்னூற்று நான்கு. அவர் ஒல்லியாக உயரமாக  இருந்தார். தலையில் உதிரியாக அறுவடை முடிந்த நிலம். வெண் புருவங்கள் மட்டும் நல்ல அடர்த்தி.  போன வருடம் வாங்கிய சட்டை, அது கூட சற்று தொள தொளப்பாக இருந்தது. டிமென்ஷியா, அதாவது வயதான பிறகு வரும் நினைவுக் கோளாறு. பெரும்பாலான சமயங்களில் நாம் பேசுவது புரிகிறதா என்று தெரியாது, முகத்தில் உணர்ச்சியே இருக்காது. தானாக திடீரென்று காஞ்சீபுரம் கருட சேவைக்கு போன போது என்று ஆரம்பிப்பார். கதை அய்ம்பது வருடங்களுக்கு முன் அப்போது சாப்பிட்ட கோவில் புளியோதரையாக இருக்கலாம் இல்லை கூட்டத்தில் காணாமல் போய் திரும்பக் கிடைத்த என்னுடைய அத்தையாக இருக்கலாம்.

“இதுதான்னு நினைக்கிறேன் “ என்று பக்கத்திலிருந்த ஹோல்சேல் பட்டுப் புடைவைக் கடையைப் பார்த்து பாட்டி சொன்னாள். பாட்டியைப் பார்த்தால் எழுபது என்று சொல்லலாம். உண்மையில் எண்பத்து ஏழு வயது. சற்று பருத்த உடல் வாகு. தாத்தாவுக்கும் சேர்த்து பாட்டி பேசுவாள்.  தாத்தாவையும் பாட்டியையும் ஒன்றாகப் பார்த்தால் லாரல் ஹார்டி நினைவுக்கு வரக் கூடும்.

“நாங்க கல்யாணத்துக்குப் பிறகு முதல்ல வெளியூருக்கு வந்தது இங்கதான். அப்பதான் இங்க வந்து ரெண்டு பேருமா சேர்ந்து படம் எடுத்தோம். கூடவே இங்க ஒரு மைசூர் சில்க் புடைவை வாங்கினோம், மயில் நீலம் மெல்லிசா அரை இன்ச்தான் ஜரிகை, ரொம்ப வருஷம் இருந்தது “

நாங்கள் போன இடம் பெங்களூரின் பழைய வணிக வட்டாரம். தாத்தா பென்ஷன் தொடர்ந்து வாங்குவதற்கு இரண்டு பேருடைய புகைப் படம் எடுத்து அனுப்ப வேண்டும். பாட்டிதான் திடீரென்று இந்தக் கடையைத் தேடி படம் எடுக்க வேண்டும் என்றாள். ரகு ராவுக்கு இந்த வட்டாரம் எல்லாம் தெரியும்.

ஸ்டூடியோவில் முகப்பில் சிறிய அறை இருந்தது. அதையும் தாண்டி படம் எடுக்கும் அறை தெரிந்தது. காலணிகளைக் கழற்றி விட்டு உள்ளே சென்றோம். சிவப்பு நிற ரெட் ஆக்சைடு சிமென்ட் தரை குளிர்ச்சியாக இருந்தது.

அங்கே ஒரு பக்கம் கொக்கி வைத்த ஜன்னலுக்கு அருகில் பழைய தேக்கு மர மேசையில் ஏகப்பட்ட ஓசையுடன் ஒரு கம்ப்யூட்டர். பாதி பிய்ந்து தொங்கிய முனைகளுடன் ஒரு வயர் நாற்காலியில் ஒரு சிவப்புச் சதுர குஷன். அதன் மேல்  ஆழ்ந்து இருந்தவர் ஒரு கணம்  நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் மானிட்டரைப் பார்த்தபடி ஒற்றை விரல்களால் அடிக்க ஆரம்பித்தார். மானிட்டர் பின் புறம் புடைத்து மேசையிலிருந்து வெளியே நீட்டியபடி ஓரத்தில் தொற்றிக் கொண்டிருந்தது. நரைத்த நீண்ட தாடி, அடர்த்தியான மீசை, தடித்த கருப்பு ப்ரேமில் தடித்த கண்ணாடி, முகத்தில் ஒரு செயற்கையான புன்னகைகூட காட்டவில்லை.

ராகு ராவ் “ சார்” என்று நீட்டினான். அவர் திரும்பி பார்த்து இடது கை ஆள்காட்டி விரலை உதட்டில் மேல் வைத்து கண்களைச் சுருக்கினார்.

நாங்கள் சுவற்றில் இருந்த படங்களைப் பார்க்க ஆரம்பித்தோம். கொண்டை முடியுடன் மை இட்ட தவழும் குழந்தை, நாற்காலியில் கணவன் ,மனைவி அருகில் புடைவைத் தலைப்பைப் போர்த்தி நின்று கொண்டிருக்க அருகில் ஒரு பூந்தொட்டி, விதான் சௌதா மேகங்களுக்குள் சில்லவுட், காலை சூரியோத்தில் பசவங்குடி கோவில் கோபுரம், லால்பாக் பூக் கண்காட்சி வண்ண மயமாக என்று நிறைய  இருந்தன. அவர் சுமார் ஏழு நிமிடங்களுக்குப் பிறகு ஏதோ முடித்து விட்டு, ஆனால் திருப்தி இல்லாமல்  ம் ஹூம் என்று தலையை அசைத்து கடைசியாக ஓங்கி கீபோர்டில் தட்டினார். ஒரு பென் ட்ரைவைப் பிடுங்கி எடுத்தார். நாங்கள்தான் நடுவில் வந்து அவர் தவத்தைக் கலைத்து விட்டோமோ இப்போது ஏதாவது சாபம் விடக் கூடும் என்று தோன்றியது.

அவர் மறுபடியும் எங்களைப் பார்த்தபடி “ ம் “ என்றார்.

ரகு ராவ் தாத்தாவையும் பாட்டியையும் காண்பித்து, “ இவங்களுக்கு ஒரு படம் எடுக்க வேண்டுமாம் “ என்றான்.

அவர் நெற்றியைச் சுருக்கினார் “ படம் எடுக்க இங்கே எதற்கு வந்தீர்கள் ? “ என்று வாயால் கேட்கவில்லை.

அதற்குள் நான் “ இவர்கள் கல்யாணம் ஆன புதிதில் இங்கேதான் வந்து முதல் கலர்ப் படம் எடுத்துக் கொண்டார்களாம்” என்றேன். நான் பாட்டியைப் பார்த்து “ அய்ம்பது வருடங்களுக்கு மேலே இருக்குமா பாட்டி ? “ என்றேன். பாட்டி “ சரியாக அறுபத்து ஆறு வருடங்களுக்கு முன்” என்றாள். அப்போது பாட்டிக்கு வயது கணிசமாகக் குறைந்த மாதிரி தோன்றியது.

ஸ்டூடியோ ஆசாமி முகத்தில் புன்னகை எழும்பியது – மேகங்கள் விலகி ஒரு கணம் சூரியன் தெரிவது போல.

“ அப்போது என் அப்பா இருந்திருப்பார் “ முதல் முறையாக அவர் பேசினார். முகம் மலர்ந்தது. அப்போது இந்தப் பேட்டையிலேயே எங்களுடையதுதான் பெரிய ஸ்டூடியோ, நான்கூட விடு முறை நாட்களில் இங்கேதான் இருப்பேன் “

பாட்டி சந்தர்ப்பத்தைப் சரியாக பயன் படுத்திக் கொண்டார் “ ஆமாம் அப்போது நாங்கள் வந்து படம் எடுத்துக் கொண்ட போது, குடை வைத்து லைட்டிங்க் சரி செய்தது ஒரு சின்னப் பையன் தான், அது நீங்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் “ என்றாள்.  இந்த முறை சூரியன் மேகங்களுக்குள் அவசரமாக மறையவில்லை. பாட்டி விடாமல் “ உங்கள் அப்பா கூட அதிகம் பேச மாட்டார் என்று நினைவு- எல்லாம் கண்ணாலேயே குறிப்பு, அதிகம் போனால் ம், ம் ஹூம் தான் “ என்றாள். தாடிக்காரர் இப்போது நாற்காலியிலிருந்து எழுந்தார். உடல் அசைவில் விறுவிறுப்பு.

“என்ன மாதிரி படம் வேண்டும் ?” என்றார்

தாத்தா ஒரு நாய்க்குட்டி படத்தில் கவனமாக இருந்தார்.

“பென்ஷன் வாங்க புதிய போட்டோ கொடுக்க வேண்டுமாம், நாங்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் படம், நான் தான் இங்கே வந்து எடுக்க வேண்டும் ஆசைப் பட்டேன்” என்றாள் பாட்டி.

தாடிக்கார் உற்சாகமாக “ சரி உள்ளே வாருங்கள் என்றார்.

உள் அறையில் இருட்டாக இருந்தது. நிழையும் போதே ஒரு மட்கிய வாசனை. மங்கலான ஒரு லைட் மட்டும் போட்டார். நான் சுற்றிலும் பார்த்தேன். தரையில் வெளுத்துப் போன கார்பெட், அங்கங்கே ஓட்டை.

“படம் எடுக்கும்போது லைட் வரும் “ என்று என்னைப் பார்த்தபடி காமிராவை எடுத்து ஏதோ லென்சைத் திருகிக் கொண்டிருந்தார்.

அந்த அறையில் ஒரு புறம் பாதி ரசம் போன கண்ணாடி ஆள் உயரத்தில் இருந்தது. அதற்குப் பக்கத்தில் ஒரு பெரிய பாண்ட்ஸ் பவுடர் டப்பா, சிந்திய பவுடர், கூடவே ஒரு நீள சீப்பு, உதிர்ந்த தலை மயிர்கள்.  இன்னொரு புறம் திரை போல கருப்புத்துணி , ஸ்டாண்டில் வெள்ளைக் குடை, ஒரு பக்கம் நைலான் கயிறு கொடி மாதிரி கட்டி இருந்தது, அதில் ஒரு நிறம் வெளுத்த கருப்புக் கோட்டு தொங்கியது.

தாடிக்காரர் ஒரு மர பெஞ்சு இழுத்து வந்தார். அந்த பெஞ்சு உட்கார்ந்து பழசு ஆனதிலேயே வழ வழப்பாக இருந்தது.

“இரண்டு பேரும் இதில் உட்காருங்க” பாட்டி மிக உற்சாகமாக ஆகி விட்டார்.

“இதே பெஞ்சுதான் என்று நினைக்கிறேன், உங்க அப்பா ஒரே நிமித்தில் எடுத்து விட்டார். எங்க வீட்டில ரொம்ப நாள் ப்ரேம் செய்து ஹாலில் மாட்டி இருந்தோம் “

பாட்டி, கையைப் பிடித்து தாத்தாவை உட்கார வைத்தார்.

“நான் இந்தப்பக்கம் தான் உட்கார வேண்டும் இல்லையா ?” தாடிக்கார் இது என்ன கேள்வி என்பது போல முறைத்தார்.

“அவரை இங்க பார்க்கச் சொல்லுங்க “

பாட்டி தாத்தாவிடன் மெதுவாக ஏதோ சொன்னாள். தாத்தா எதையும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

பாட்டியே அவர் முகத்தை காமிராவைப் பார்க்கும்படியாகத் திருப்பினார்.

தாடிக்காரர் இன்னும் நிறைய விளக்குகளைப் போட்டார். அறை வெளிச்சத்தில் மூழ்கியது. சற்று சூடு வாசனை வந்தது.

அவர் காமிராவில் கோணம் பார்த்து, ஃபோகஸ் சரி செய்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்குத் திருப்தி இல்லை. காமிராவை வைத்து விட்டு, பாட்டியிடம் “ அவரை முகத்தில் ஜீவனுடன் பார்க்கச் சொல்லுங்க” என்றார்.

பாட்டி குனிந்து மறுபடியும் தாத்தாவிடம்

“ உங்களுக்கு ஞாபகம் இல்ல ? இங்கதான் நாம வந்து முதல் முதலா படம் எடுத்தோம்”

. தாத்தா முகத்தில் சற்று சலனம். ஆனால் எழுந்து போய் விடுவார் போல இருந்தது,

தாடிக்காரர் “ பாட்டி, இப்படி முகம் இருந்தால் எனக்கு படம் எடுக்க வராது. மனசு முழுக்க மலர்ந்து முகத்தில் வர வேண்டும் “

 

மலர்ந்த முகம்

பாட்டி இப்போது எழுந்தாள். தாத்தாவுக்கு எதிரே இடுப்பில் கையை வைத்துக் கொண்டு பொய்க் கோபத்துடன் “ என்ன இது இப்படி அடம் பிடிக்கறீங்க ? ஒழுங்கா சிரிச்ச மாதிரி முகத்த வெச்சுக்குங்க,” குரலை மாற்றி நைச்சியமாக “ இல்லா விட்டால் நான் உங்கள் கூட பேச மாட்டேன் “ என்றாள்.

தாத்தாவின் முகம் இளகியது, திடீரென்று

“ அப்படிச் சொல்லாதேடி, உன்னை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள் ?” என்றார்.

தாடிக்காரர் “தாத்தா அப்படியே கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம், பாட்டி நீங்க போய் அவர் பக்கத்துல உட்காருங்க “ என்றார்

பாட்டி குனிந்து தாத்தா காதில் ஏதோ சொன்னாள். சொல்லும்போதே முகம் வெட்கத்தில் சற்று சிவந்த மாதிரி இருந்தது. தாத்தாவின் காலரை சரி செய்து விட்டு உட்கார்ந்தாள், தாத்தா திரும்பி பாட்டியைப் பார்த்து புன்னகைத்து விட்டு இன்னும் நெருங்கி உட்கார்ந்தார். இரண்டு பேர் முகமும் மலர்ந்தன.

ஃப்ளாஷ் ஒலித்தது. தாடிக்கார் படம் எடுத்தார்.

——

அத்துடன் தாத்தா, பாட்டி, நான், ரகு ராவ், தாடிக்கார் என்று எல்லோரும் மகிழ்ச்சியாக சிரிக்க சுபம் என்று முடிந்திருக்கலாம்.

—–

 

1972 – சென்ட்ரல் சிவில் சர்வீஸ் பென்ஷன் விதி

 

பாட்டி எழுந்தாள். தாத்தாவுக்கு எதிரே இடுப்பில் கையை வைத்துக் கொண்டு பொய்க் கோபத்துடன் “ என்ன இது இப்படி அடம் பிடிக்கறீங்க ? ஒழுங்கா சிரிச்ச மாதிரி முகத்த வெச்சுக்குங்க,” குரலை மாற்றி நைச்சியமாக “ இல்லா விட்டால் நான் உங்கள் கூட பேச மாட்டேன் “ என்றாள்

தாத்தாவின் முகம் இன்னும் இறுகியது. உரத்த குரலில்

“போடீ” என்றார்.

இல்லா விட்டால் அவர் எழுந்து போய் விடுவார் போல இருந்தது.

தாடிக்காரர் பார்த்தார் “ பாட்டி நீங்க வெளியில போய் சற்று நேரம் இருங்க, ரெண்டு பேரையும் தனித் தனியாக எடுக்கறேன் “

நான் “ சேர்ந்து எடுக்க வேண்டும் இல்லையா ?” தாடிக்காரர் தேவை இல்லை என்பது போல கை அசைத்தார்.

பாட்டி கோபத்துடன் ஏதோ சொல்லி விட்டு வேகமாக வெளியே சென்றாள்.

தாடிக்காரர் “தாத்தா இப்ப நல்லா சிரிங்க “ என்றார்

தாத்தா முகம் மலர்ந்தது.

தாடிக்காரர் என்னிடம் திரும்பி இப்போது பார்த்தாயா என்பது போல பெருமையாக பார்த்தார். “ அவங்களையும் தனியா எடுத்துட்டு, டிஜிடலாக சேர்த்து விடுவேன் “ என்றார்.

தாத்தா தெளிவாக

“ அவசியம் இல்லை, தனித் தனியாக படம் கொடுக்கலாம். இதுக்குத்தான் கவர்ன்மென்ட் சர்குலரில் சி சி எஸ் 1972 – சென்ட்ரல் சிவில் சர்வீஸ் பென்ஷன் விதிகளின் படி தனியாகவும் படம் அனுப்பலாம் என்று ஒரு விளக்கம் அனுப்பினார்கள். அவர்களுக்குத் தெரியாதா இது போல தேவை வரும் என்று ? வாத்வானி அப்படின்னு ஒரு டெபுடி செக்ரெடரி கை எழுத்து போட்டு அனுப்பி இருந்தான் “ என்றார்.

“  நீங்க எடுங்க “ என்று அழகாக போஸ் கொடுத்தார்.

ஃப்ளாஷ் ஒலித்தது. தாடிக்கார் படம் எடுத்தார்.

தாத்தா மறுபடியும் “ஓட்ட வைக்க வேண்டியதில்லை” என்றார்.

 

 

4 comments

  1. Very nicely written crisp short story;
    The narration is vivid and with seamless flow;
    Brings the Old Bangalore view into our imagination well.
    The choice of two endings is a different approach too.
    Highlighting the Dementia issue in elderly persons is the object and the (anti)climax does that perfectly.

    1. Nicely captured the way of life and cultural nuances of pre – globalisation days in South India. So much attention to details like ” Cynthia Powder” 😊, the final icing in the cake is the Thatha’s knowledge of central civil service pension rules and his excitement about it. Keep writing.

  2. Very crisp. Realistic. Woven very
    nicely around the simple, normal
    Photo session of Thatha and Patti.
    Congrats.
    Bala

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.