லட்சுமிஹர்
மேலும் கீழுமாக ஒழுங்கற்று அடுக்கப்பட்டிருந்த கிஃப்ட்கள் அவர்கள் பார்வைக்குத் தென்பட்டது. இதுவரை இருவரும் பேசத் தொடங்கி அதை எப்படித் தொடர்வது என்று தெரியாமல் இருந்த நேரம், கலர் கலர் பெட்டிகளான அந்தக் கிஃப்ட்களைப் பற்றிய பேச்சு ஆரம்பிக்க அது தன்னை இழந்தது.
இருவரும் ஒருவருக்கொருவர் அருகில் அமர்ந்திருந்தாலும் அவ்வளவு நெருக்கம் என்று சொல்ல முடியாது. இப்போதைக்கு இடைவெளியை பேச்சு நிரப்பத் தொடங்கியிருந்தது . அவள் சூடியிருந்த பூவின் வாசனை இவனை ஒருவித போதைக்குள் தள்ளிவிட முயன்று கொண்டேயிருக்க முத்தங்கள் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அவள் எளிதில் கையாண்டு விடலாம், என்ன பெரிய விசயம் . என்று தான் இருந்தாள். ஆனால் இங்கு, இப்போது கொஞ்சம் உதறல் . பட்டுக்குள் பறக்க முயன்றவளாய் . இந்த நிலையை எப்படிக் கையாள்வது என்று அட்வைஸ் கேட்டுத் திறமையாகச் செயல் படக்கூடிய இடமா என்ன?. எப்படியோ இதில் மற்றவர்களின் கேலி வேறு. “மொத ராத்திரி பொண்ணு, எவ்வளவு ரூபாய்க்கு புடவை எடுத்தா என்ன ” கலுக் சிரிப்பு.
கிஃப்ட்களை ஒவ்வொன்றாக, இருவரும் பிரிக்கத் தொடங்கினர். முதலில் தயங்கிய அவளை நீயும் பிரி நமக்கு வந்தது தான என்றான். பெரு மூச்சு விட்டுக்கொண்டாள். “எப்பயும் கொடுக்கும் பார்மாலிட்டி் கிஃப்ட்கள் தான ” என்றவனைப் பார்த்த இவள், ஒரு பச்சை நிற கிஃப்ட் பாக்சை எடுத்து நீட்டினாள்.
‘என்னவென்று’ மூஞ்சியை வைத்துக்கொண்டு பார்த்தவனின் முகப் பாவனை எப்படி மாறப் போகிறது என்பதை அறிய ஆவலாக அவளின் முகம் சிவந்திருந்தது.
பெயர் எழுதப்படாத கிஃப்ட். .
பச்சை கலரால் சுற்றப்பட்டு கைக்கு அடக்கமாக இருந்தது அது . அவனுக்குத் தெரியும், ஆனால் அவளுக்கு . என்ற பாவனையில் அதை வாங்காமல் பார்த்தான்.
” இத நீங்களே பிரிங்க ” என்றாள்.
அவன் அதைத் தயக்கத்தோடு வாங்கிக்கொண்டு பிரிக்க மனமின்றி, அதைக் கையிலேயே வைத்திருந்தான். அவன் முகம் பல நினைவுகளை இவளுக்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.
இதிலிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டுமா என்று கூட யோசித்தாள் . அப்பா சொல்வது இப்போது மீண்டும் காதிற்குள் . எல்லாத்தையும் (உச்சு) விளையாட்டா எடுத்துக்கக் கூடாது ( உச்சு ). மீண்டும் ஒரு முறை விளையாடி விட்டதாகத் தோன்றியது அவளுக்கு .
இந்த நிலை முன்னே இருந்த இடைவெளியை நிரப்பிய பேச்சிற்கும் விடுதலை கொடுத்தது.
அறை சுதந்திரமாக இருவரையும் கைது செய்திருந்தது.
கையில் அந்தக் கிஃப்டை வைத்திருந்தவனின் முகம் இப்போது அவளை நோக்கியிருந்தது , அவள் எதிர் பார்த்தது போலில்லாமல், நினைவுகளை அள்ளிவரும் சிரிப்பு அவன் முகம் எங்கும் பரவி இருந்தது, இவளுக்கு ஆச்சரியம். அவனைச் சுற்றி இவள் மண்டைக்குள் பின்னப்பட்டிருந்த காதல் கதைகள் சுக்குநூறாக உடைத்திருந்தது அந்தச் சிரிப்பு.
அப்போ இது காதல் கதை இல்லை போல இந்தப் பெயர் எழுதாத கிஃப்ட் பின்னால் என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அவன் விலகிக் கிடந்த இடைவெளியை நிரப்பத் தொடங்கினான்.
” இத பிரிக்க பயமா இருக்கு ”
“. ”
” பயமா இருக்கு ” என்று அவன் மறுபடி சொல்லும் வரை அவனையே பார்த்துக்கொண்டே இருந்தாள் பதிலேதும் சொல்லவில்லை.
” எப்படி இத கரெக்டா எடுத்த ”
“. “.
” ஹே. என்னாச்சு ” என்று அழுத்தி கூறியவன், அவளின் மௌனத்தைக் களைத்தான்.
” ஆங். ஒன்னும் இல்ல ”
சரி என்பது போல முகத்தை வைத்துக்கொண்டு தலையாட்டினான். பின் பேச தொடங்கினான்.
அவனின் குரலுக்கு இருக்கும் தனித்த அடையாளத்தைக் கண்டு கொண்டாள். அவளோடு இறுதி வரை தன்னுடன் பிணைக்கப்பட்ட அந்தக் குரலை, அவள் உள்வாங்க . கோபமோ, பாசமோ எதுவானாலும், அவள் காதுகளில் கேட்கப் போகும் அந்தக் குரலை கவனித்தாள், அவளின் தந்தை குரலுக்குப் பதிலாக இருப்பதை. அப்பா எப்போதும் அதிர்ந்து பேச கூடியவர். கணவனின் குரலை அவள் எதனோடு ஒப்பிட போகிறாள். என்று யோசித்துக்கொண்டிருந்தவளை அந்த ஹே தடுத்தது. இதற்கடுத்து தான் அவன் கூற வந்த விசயத்திற்குள் உள் நுழைய வேண்டியிருந்தது.
” எதனால பயம்னு கேக்க மாட்டியாடி? ”
அவளுக்குச் சிறுவயதில் இருந்தே’ டி ‘ போட்டு பேசுவதோ, அவளோடு படிக்கும் பிள்ளைகள் ‘ என்னாலே ‘என்று பேசுவதோ சுத்தமாகப் பிடிக்காது. பெயர் சொல்லித்தான் கூப்பிட வேண்டும் இல்லை என்றாள் திரும்பி கூடப் பார்க்க மாட்டாள்.
” இந்து ” என்றாள்.
” அவன் ஓ. கேட்க மாட்டியா இந்து? ” என்றான் அவளை ஏற்று.
” என்ன ” என்பது போல ஒரு சமிங்கை.
கையில் வைத்திருந்த பெயர் இல்லாத கிஃப்ட் பின்னால் இருக்கும் பயத்திற்கு ஒரு கதையை ஆரம்பித்தான்.
‘ நிறையக் கதை சொல்லியே, உங்க அப்பா என்ன ஏமாத்திருவாரு ‘ என்று அம்மா சொல்வது ஞாபகம் வந்தது அவளுக்கு . ‘ அது கதைனு உனக்குத் தெரியும்ல , அப்பறோம் ஏன் கேக்குற.” என்பாள். ‘ அவரு சொல்றது நல்லாருக்கும் ‘ என்று அம்மா வெட்கப் பட்டுக் கொள்வாள். அப்பாவி ஜீவன்கள் தான் பெண்கள் என்று தோன்றும். ‘ நானும் தான்’ என்று மனதிற்குள் இல்லாமல் வெளியே கேட்கும்படி சொல்ல, கதையை ஆரம்பிக்கப் போனவன் ” என்ன நானும்தான் ” என்றான். அவள் மனதிற்குள் நினைத்ததை அவனிடம் சொல்ல சிரித்துக்கொண்டான்.
” ஆரம்பிக்கவா. ” என்றவனின் குரலில் நெருக்கம் கூடியிருப்பது இதழ் முத்தங்களுக்கான முன்னேற்பாடு, இன்னும் நெருங்கி வந்து அமர்ந்தான் தோள்கள் உரச.
” உங்க அப்பா பேசுறத கேட்டுருக்கியா. ” என்றாள் அம்மா ஒரு நாள் திடீரென்று.
” ஏன் திடீருனு, என்ன ரொமான்சா ” என்றதற்கு, அதெல்லாம் ஒன்னும் இல்ல என்பது போல மூஞ்சிய வைத்துக்கொண்டு அம்மா.
” ரெண்டு வார்த்தை நடுவுல ‘உச்சு ‘ கொட்டிப்பாரு ” என்று சொல்லி சிரித்துக்கொண்டாள். இதுவரை அவள் நினைத்தது கூடக் கிடையாது, அம்மா எதையெல்லாம் அப்பாவிடம் கவனித்திருக்கிறாள்.
” எதனால அப்படியாம் “.
” தெர்ல ”
” ம்ம்ம். ”
அம்மா சொன்னபின், அப்பா பேசும் போது கவனித்தவளுக்கு ” உச்சு ” தரிசனம் கிடைத்தது.
அம்மா மட்டும் தான் கவனித்திருக்கிறார் என்று பார்த்தாள். அப்பாவும் அப்படிதான் அம்மாவின் நகர்வை வைத்தே ” அவளுக்கு (உச்சு ) உடம்பு செரியில (உச்சு ) எப்பயும்) வாயத் தெறந்து (உச்சு ) சொல்ல மாட்டா ” என்பார்.
அம்மா உடம்பு வலியிலும் சிரிப்பதை பார்த்து ” ( உச்சு )என்ன கொழுப்பு இவளுக்கு (உச்சு ) பாரேன்” என்பார் அப்பா என்னைப் பார்த்து.
அம்மா என்னிடம் ” இரண்டு உச்சு ” என்று சொல்லிச் சிரிக்கத் தொடங்குவாள். கவனிப்பு வாழ்வில் எப்படிப்பட்டது ?. அடுத்தவர்கள் மீதான அக்கறையின் பித்தாகி எதையும் அதன் போக்கில் ரசிக்கத் தெரிந்திருந்த கவனிப்பு இன்னும் வாழ்க்கையின் மீதான பிடிப்பை இறுக்கி கொள்கிறது. வாழ்வின் அடிப்படையாய். அந்த நிலையிலிருந்து ஒட்டிக் கொண்டது தான் இந்தக் குரல் கவனிப்பு .
அவன் சொல்லத் தொடங்கி இருந்தான் . இவள் கவனிக்கத் தொடங்கியிருந்தாள் .
” கண்டிப்பா என் பிரண்ட்ஸ் வேலையா தான் இருக்கும் ”
” ஏன் ”
” இதுக்குள்ள என்ன இருக்கும்னு நெனைக்குற ”
” பிரிச்சா தான் தெரியும் ”
” அவசர படுற ”
“.”
” இதுக்குள்ள நம்ம நெனைக்குற மாதிரி புதுசாலா எதுவும் இருக்காது ”
“அப்படி இல்ல, கிஃப்ட் கிஃப்ட் தான ”
“அதுவும் சரிதான், பேரு போடாம கொடுக்குறப்பவே நான் கண்டு புடுச்சுட்டேன் ”
“.”
அவன் மறைக்க என்னென்னவோ சொல்லி தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்தான். கோமாளியாக . தன் நண்பர்களின் விளையாட்டு என்று .
ஆனால் அவனுக்குள் இந்த கிஃப்ட் ஆயிஷா கொடுத்தது என்று தெரியும். கல்யாண மேடையில் இந்த கிஃப்டை அவள் கொடுத்த போது பெயர் இல்லை என்பதை அறிந்தே இருந்தான். பழைய நினைவுகளின் சின்ன உரசல் . இதைத் தனியாக எடுத்து வைக்க முயன்றும், அவன் மனைவியின் கைப்பட்டு அவனிடமே வந்திருக்கிறது. இதைச் சமாளிக்கக் கதைகளை ரெடி தயார் செய்து கொண்டிருக்கிறான்.,
” இத பாத்தாலே தெரில “.
“தெரில “.
” எனக்குக் கூச்சமா இருக்கு ”
“. ” அவள் கண்டு பிடித்துவிட்டது போல நடிக்க. அவனின் குரல் எதையோ நினைத்து அதுக்குப் பொருந்தாத வேஷம் போட்டு மேடையில் ஆடிக்கொண்டிருந்தது. அவள் விட்டுவிட்டாள்.
அவன் அதைத் தள்ளி வைத்துவிட்டு அடுத்த கிஃப்ட்களைப் பிரிக்கத் தொடங்கி இருந்தான். அவள் கண்டுகொள்ளாததைக் கவனித்துத் தான் இருந்தான். கண்டுகொள்ளாமல் இல்லை. பெரிதுபடுத்தவில்லை.பின்னால் அதைப் பற்றி அவள் கேட்டாள் என்ன சொல்லுவது…
கிஃப்ட்கள் பிரிக்கப் பிரிக்கக் கம்மியானது. அவன் கையில் மற்றுமொரு பெயர் போடாத கிஃப்ட் .
ஆச்சரியமானவன் அருகில் இருந்தவளிடம் திரும்பி ” இது எனக்கு இல்ல ” என்றான் பதட்டமாக.இருவரும் சிரித்து விட்டனர். அமைதி நிலவியது. காலையில் இருந்து கல்யாண மேடையில் நின்றிருந்த களைப்பில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தவர்களுக்கு அது சொளகர்யமாக இருந்தது. ஏசி இருபதில் இருந்தது. முதல் இரவுக்காக அலங்கரித்து இருந்த மெத்தை உறங்கி கொண்டிருக்க கண்ணாடி அவளின் முகத்தை ஏந்தக் காத்துக் கொண்டிருந்தது. அறையெங்கும் கல்யாண மாலையின் மணம் புணர்ந்து கிடந்தது .
அப்பா முதலிரவின் போது தன் காதல் தோல்வியின் கதையை அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அம்மா இப்போதும் சண்டை வந்தாள், அதை இழுக்காமல் இருக்க மாட்டாள்.
” உங்களுக்கு அவளோட கம்மல் தான் பிடிக்கும் ” . அதே கவனிப்பு. ” ஏன் பா மொத ராத்திரில உன் காதல் படத்தை ஓட்டிருக்க ” என்று. சொல்லும்போது அப்பா சொன்ன ஒரே அட்வைஸ் இதான் ” நோ காதல் ஷோ “. .
” நோ, காதல் ஷோ ” .
இருந்தும்.
அவள் தன் தலையில் வைத்திருந்த பூவை எடுத்து அருகில் வைத்தாள்.’ ஏன் ‘ என்பது போலப் பார்த்தவனுக்குப் பதிலேதும் இல்லை.அவனிடம் பெயர் இல்லாத கிஃப்டை நீட்டும் போது. தன்னுடைய பின் கதையைச் சுருக்கமாகச் சொல்லிவிட வேண்டும் என்று தான் இருந்தாள். ஆனால் அது வேறு விதமாகப் போனது. அவன் அதே பச்சை நிறத்தில் கை அடக்கப் பெயர் இல்லாத இன்னொரு கிஃப்ட் பாக்சை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
அவள் அதைப் பார்த்து விட்டு.ஏற்கனவே அவன் வைத்திருந்த கிஃப்ட் பாக்ஸ் பக்கத்தில் வைத்தாள். இரண்டும் ஒன்று போல இருந்தது . இருவரின் இடைவெளியில் .
ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். பின் இரண்டு கிஃப்ட்களையும் பார்த்தனர்.என்ன சொல்லவென்று தெரியாமல் இருந்தவர்களுக்கு ஏசி நடுக்கத்தைக் கொடுத்ததா என்று தெரியவில்லை.
அவள் பேச ஆரம்பித்தாள்.
” அந்தப் பிங்க் கலர் சாரில அவங்க அம்மா கூட வந்த முஸ்லீம் பொண்ணு தான ”
” ஆமா ”
“பேரு.? ”
” ஆயிஷா . ”
ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அவன் பேசத் தொடங்கியபின் ” அந்தப் பிளாக் குர்த்தால ட்ரிம் பண்ணி ஹைட்டா வந்தவன் தான ”
” இல்ல ”
” இல்லையா ”
” இல்ல ”
” அப்பறோம் ”
” கண்டு புடுச்சுக்கோங்க ”
இருவர் மனதிலும் இப்படி ஆரம்பித்திருக்கக் கூடாது என்பது போலத் தோன்றியது. அவனே ஆரம்பித்தான்
” ஏன் உனக்குப் பூ வைக்கப் பிடிக்கல ”
” பிடிக்காது. ”
” அப்பறோம் என்ன பிடிக்கும் உனக்கு.?. ” என்றான் .குரலில் இருந்த அக்கறையைக் கவனித்தவளாய் ” அது வந்து. ”
கவனிப்பாரின்றி, பிரிக்கப்படாமல் கிடந்தது இரண்டு கிஃப்ட்கள்.
***