Author: பதாகை

பெரியவர்களின் வீடு

நான் பெரியவர்களின் வீட்டில் இருக்கிறேன்
இங்கே நீல நிற வெண்டைக்காய்கள் கிடையாது

உங்களுக்குத் நீல வெண்டைக்காய்களைத் தெரியுமா?
உதிர்த்தால் உள்ளே சிகப்பு நிற விதைகள் இருக்குமே…

இங்கே கோடுகள் கோடுகளாக இருந்தாக வேண்டும்
வட்டங்கள் வட்டங்களாக இருந்தாக வேண்டும்

வண்ணங்களைக் குழைத்து நீரில் கலந்திருக்கிறீர்களா?
தண்ணீரில் வண்ணங்கள் வளர்வதைப் பார்த்திருக்கிறீர்களா?
அதாவது, வண்ணங்களை வீணாக்குவது.

இங்கே கண்ணாடியில் வரையக் கூடாது
நீரில் கலந்த வண்ணங்கள் விரைந்து ஓடுவதை ரசிக்க முடியாது

இது பெரியவர்களின் வீடு
சிறிவர்களுக்கு இடமில்லை; இங்கே இருக்க
நானும் பெரியவளாகத்தான் வேண்டும்.

பெரியப்பாவின் வருகை

ஹரன் பிரசன்னா

fallen_umbrella

 

பெரியப்பா வந்திருந்தார்
கையில் குடையுடன்
நீண்ட தாடியுடன்
ஒரு யோகியின் நடையுடன்
ஏற்கெனவே சொல்லி வைக்கப்பட்டிருந்தது போல
வீட்டைத் தேடி
வீடுகளைத் தேடி
பெரியப்பா வந்திருந்தார்
எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடம் விடையிருந்தது
அன்பில் பூத்த தாமரை மலர் ஒன்றை
எப்போதும் அவர் முகத்தில் சுமந்திருந்தார்
மெல்ல விரியும் உதடுகளின் வழியே
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கான
ஏக்கங்களின் விடையை
தெளித்தவண்ணம் சிரித்திருந்தார்
கைக்குட்டையில் இருந்த ரத்தக் கறையை
திட்டமிட்டு அவர் மறைக்கவில்லை என்றாலும்
யாருமே அவரிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை
கயிறின்றி கன்றின் பின்னே ஓடும்
தாய்ப்பசுவைப் போல
நினைவுகள் கட்டுண்டு அவர் பின்னே செல்ல
அவர் திடீரென்று பதற்றமானார்
குடை கீழே விழுந்த நினைவின்றி ஓடினார்
யாரோ ஒருவன்
வடிவுப்பெரியம்மையைப் பற்றிக்
கேட்டதுதான் காரணம் என்றார்கள்
இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
வடிவுப் பெரியம்மை எப்போதும் அப்படித்தான்

நின்னையே சரணடைந்தேன்…

சிகந்தர்வாசி

கோடை அருவி போல் உன் கன்னங்களில் ஒற்றைத் துளி விழுந்து உருண்டோடுவது எனக்குத் தெரிகிறது, உனக்குத் தெரியாமல். மூடப்பட்டிருக்கின்றன உன் கண்கள், மோன நிலையில் நீ. இமை போர்த்த விழிகளில் கருங்கல் சிலை, வெம்மையால் சிவந்திருக்கும் உன் முகம்.

கருங்கல் சிலைதான். என் அறிவியல் பார்வை அனைத்தையும் பகுக்கின்றது, எது பகுபடாததோ அது ஒன்றே மிச்சமிருக்கிறது. வெறுமை? சாத்தியம்தான். ஆனால் உன்னைப் போல் நான் அழ முடியாது, ஒரு கற்சிலையைப் பார்த்து. அல்லது, ஒரு ஆதர்சத்தில், ஒரு லட்சியத்தில் என் துக்கங்களைக் கரைத்துக் கொள்ள முடியாது. என் முன்னிருப்பது கற்சிலை. வெறிக்கும் என் கண்களை உயிரற்று வெறித்துக் கொண்டிருக்கிறது.

சிலைக்கு ஒளியூட்டுகிறது தீபாராதனை. என் அருகில் இருப்பவன் ஆனந்த நிலையில் இருக்கிறான். என் எதிரில் நிற்கும் பெண்மணி கண்கொட்டாமல் சிலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள், அவள் இவ்வுலகில் இல்லை. கற்சிலை ஊமையாய் நிற்கிறது, எனக்கு மட்டும். உன்னிடம் அது என்ன சொல்கிறது? அல்லது, உன் ஆசைகளை அதன்மேல் சுமத்துகிறாயா? நீ எங்கு அழக் கற்று கொண்டாய்?

இங்கிருப்பவர்களுக்கு என்ன வேண்டும்? சாந்தி என்கிறாய், ஆனால் சாந்தம்தான் என்ன? துன்பமின்மை? ஆசைகளின் பலிதம்? உன் பிரார்த்தனைகள் இந்தச் சிலையிடம் என்ன சொல்கின்றன? உனக்கு என்ன வேண்டும்? அல்லது, உன் கண்களை மூடிக் கொண்டு அனைத்தையும் கடந்து அப்பால் செல்கிறாயா? ஏதுமில்லா இடத்துக்கு? எல்லாம் உள்ள இடத்துக்கு? இருப்பும் இல்லாமையும் நீங்கிய, பொருளற்ற இடத்துக்கு? கணப்பொழுதேனும் ஆசைகள் அற்றுப் போயினவா?

நான் என்ன கண்டேன்: ஆனந்தம் என் மனம் அனுமதிக்காத ஆடம்பர நிலை. எப்போதும் நான் என்னைக் கண்டு கொள்கிறேன். எப்போதும் நான் பிறரைக் கண்டு கொள்கிறேன். உண்மை என்னை ஒளியை நோக்கிச் செலுத்துகிறது, ஒளி என்னை அண்டங்களைக் கடந்து அழைத்துச் செல்கிறது. எனக்குள் என்ன இருக்கிறது? அதுவா முக்கியம்? உள்ள பொருள், அதை ஆய்கிறது என் உள்ளம். ஆன்மா உள்ளதா, ஆய்வுக்கு உட்பட்டதா? கணிதச் சமன்பாடுகளின் மொழியில் பேசாத எதுவும் எனக்குப் பயன்படாது.

இல்லை. உன்னைப் பார்த்து நான் சிரிக்கவில்லை. நீ கரையேறிவிட்டாய். உன் முன் உள்ள பாதை ஒளிர்கிறது. சாகும்வரை நீ அதில் பயணிப்பாய். மரண கணத்தில் உன் முகம் நிறைவின் புன்னகையாய் மலரும். என் கேள்விகள் உனக்கில்லை. அறிவியலின் தீர்மான்மின்மைகள் உனக்கில்லை. எனவேதான் நீ எப்போதும் என்னருகில், என்னுடன் இருக்க வேண்டும். ஐயங்கள் பாலையாய் என் வாழ்வைச் சுட்டெரிக்கின்றன, நீதான் என் புகல். அவ்வப்போது உன்னைக் கண்டு மகிழ்கிறேன்.

கற்சிலைகளை கடந்து தொடர்கிறது என் தேடல். என் தேடல் தொடர்ந்தாக வேண்டும். மதங்களுக்கு அப்பால், கண்ணீருக்கு அப்பால், இன்பங்களுக்கு அப்பால். என் தேடல் புதிய சமன்பாடுகளை உருவாக்குகிறது. பழைய சிக்கல்களை அவிழ்க்கிறது. புதிய உலகங்களைத் திறக்கிறது. மேலும் மேலும் கடினமான பாதைகள், முடிவற்ற பாதைகள். நான் பயணித்தாக வேண்டும். ஓய்வில்லை எனக்கு. என் கேள்விகள் ஓயும் முன் என் வாழ்வு ஓயும் என்பதை நான் அறிவேன். உனக்குக் கேள்விகள் கிடையாது, கேள்விகள் எழுமுன் பதில்களைப் பெற்றுக் கொள்கிறாய். உனக்கு எப்போதும் உண்டு, இந்தக் கருங்கல் சிலை, அதன் காட்சியும், கண்ணீரில் நீ கரைதலும்.

மானுடம் குடியமர்ந்த கோள் : உண்மையின் துலக்கம்

சிகந்தர்வாசி

…சிறிது தேடலுக்குப்பின் இறுதியில் நான் லிண்டா லூ இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தேன். அவள் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தாள். நான் கண்டுபிடித்ததை எல்லாம் பரபரப்பாக அவளிடம் சொல்லிவிட்டு என் கையில் இருந்த காகிதங்களையும் மின் அஞ்சல் பரிமாற்றங்களின் அச்சு ஆவணங்களையும் அவளிடம் காட்டினேன்.

அவை அனைத்தையும் பொறுமையாக படித்துப்பார்த்த லிண்டா, சிறிது நேரம் மௌனமான, ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தாள். அதன்பின், “என் குழப்பங்கள் சிலவற்றுக்கு இவை விளக்கம் அளிக்கின்றன,” என்றாள் அவள்.

“உனக்கு குழப்பமாக இருந்த விஷயங்கள் எவை? இப்போது என்ன புரிந்தது?|

“புரிந்து விட்டது என்று சொல்ல முடியாது, ஆனா மெல்ல மெல்ல கடந்த காலத்தில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைக்கிறது,” என்று சிரித்தாள் லிண்டா.

“என்ன நடந்திருக்கும் என்று நீ நினைக்கிறாய்? இதில் சில விஷயங்கள் எனக்குப் புரிகின்றன, ஆனால் செவ்வாய் பயணம் இங்கு எங்கு வந்தது?”

“இதை ஒவ்வொரு அடியாக யோசிப்போம். முதலில் பூமி என்ற கோள். அங்குதான் நம் மூதாதையர் வசித்திருந்தனர். இங்கிருந்து இரவில் நாம் பூமியைப் பார்க்க முடியும்…” (more…)

கவிதைகளின் இடுகாடு

– சிகந்தர்வாசி 

கருவில் சில இறக்கின்றன,
சொல்லோடு பொருள் கூடாமல்
தரிப்புக்கேற்ற உருவம் கிடைக்காமல்,
கவிஞன் கவிதையைக் கொல்கிறான்.

சில காகிதம் சேர்கின்றன,
கவிஞனின் கரங்களைக் கடந்து.
ஆனால் அவற்றில் தெம்பில்லை,
இங்கொரு சொல் ஊட்டி
அங்கொரு வரி கூட்டி
கவிஞன் ஆகக்கூடியதைச் செய்கிறான்-
அவை உரம் பெற்று
உயிர்த்திருக்க-,
இருந்தும் வளராமல்
மெல்ல உயிர் இழக்கின்றன.

சில உருவம் பெற்றுச் செல்கின்றன
மெய்யுலகில் போராட:
மொழியைக் கொண்டு மருந்திடுகிறான்.
விழுப்புண்களுடன் திரும்பும் கவிதைகளுக்கு
சொல்லை மாற்றி, சொல்லின் பொருள் மாற்றி,
சொல்லின் இடம் மாற்றி, அழுகிய சொற்களை வெட்டி,
அழகிய சொற்களை கூட்டி;
குணம் பெற்று போர்க்களம் திரும்பும் அவற்றில்
சில உயிர் பிழைக்கின்றன. பலவும்,
எடிட்டரின் கத்தரியால் துண்டாக்கப்பட்டு
மரிக்கின்றன.

உயிர் பிழைப்பவை, சில ஆண்டுகள்
மெய்ம்மையில் நடமாடுகின்றன.
சிலரால் மட்டுமே அறியப்பட்டு
மெல்ல காலத்தால் மறக்கப்பட்டு,
பலவும் இயற்கை மரணம் எய்துகின்றன.

அதிர்ஷடமிருந்தால் நம் கவிதையும்
ஒரு மாபெரும் கவிஞன் ஆக்கத்தின் அருகில்
புதைந்து கிடக்கலாம்-
அவை உரையாடிக் கொள்ளலாம்,
தங்கள் காயங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்,
உரமற்ற கரங்களைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம்-
நினைவின் பிடிநழுவிய கவிதைகளை
நினைத்துப் பார்க்கலாம்.

நல்ல கவிதைகள் சிரஞ்சீவிகளாய்
வாழ்ந்துக கொண்டிருக்கின்றன,
விவாதிக்கப்பட்டு, வாசிக்கப்பட்டு,
ஊக்கமூட்டிக்கொண்டு.
புதியன பிறகும் வாசல்கள் ஆகின்றன.

பிற கவிதைகள்,
மரணத்தில் சமத்துவம் அடைகின்றன,
மனிதர்களைப் போல்.