Author: பதாகை

மனிதன்

பத்ரா காட்டினுள் ஓடும் 
நதியின் கரையில் 
பக்கத்தில் ஒரு புலி வந்து உட்கார்ந்தது 
 
இரத்தக் கறையாக இருந்த அதன் வாயை பார்த்துவிட்டு 
“என்ன சாப்பிட்டாய்?
 வாயைச் சற்று திற”
 
அகலமாய் திறந்த வாயினுள் 
பார்த்தேன் 
 
முயல்கள், மான்கள், காட்டெருமைகள், குரங்கு,
மயில்கள், காட்டுப் பன்றிகள்.
 
“நிறைய விழுங்கி இருக்கிறாய்”
 
“பசிக்கும் பொழுது தின்றுதானே ஆகவேண்டும்.
உன் வாயைத் திற”
 
வாயினுள் எட்டி பார்த்துவிட்டு 
என்னை பீதியுடன் பார்த்தது 
 
சோகமாக தலையை ஆட்டிக்கொண்டு 
காட்டினுள் புலி 
 
மெதுவாக மறைந்தது 
                                                        – எஸ். சுரேஷ்

வாசவதத்தை – 2

– ஸ்ரீதர் நாராயணன் –

சிந்தாமணி தூபம்
ராஜகிருகம்
சூன்யத்தின் இசை

“அதிகாரம் என்பது செலுத்துவதற்கு மட்டுமல்ல, ஏற்றுக் கொள்வதற்கும் உகந்ததாக இருக்க வேண்டும்” விஷ்ணுகுப்தர் அடிக்கடி சொல்வதுண்டு. பெரும் சுண்ணாம்புக்கற்களைக் அடுக்கி வைத்து, இடைவெளியில் சிறிய கற்களை உடைத்து நிரப்பி, எழுப்பப்பட்டு, இரண்டு அடுக்கு சுற்றுசுவர்களை கொண்ட ராஜகிருகக் கோட்டையைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு விஷ்ணுகுப்தரின் போதனைதான் நினைவுக்கு வருகிறது. ஹர்யாங்கர்களின் பேரரசனான ஷ்ரேனிகனின் காலத்திலிருந்தே ராஜகிருகம் தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டது என்று சொல்கிறார்கள். கோசலம், காசி, பாஞ்சாலம், கலிங்கம், குரு வம்சத்தார், இக்ஷ்வாகுகள், மைதிலர்கள், சுரசேனர்கள், லிச்சாவியரிலிருந்து சிந்துநதி தீரத்து மாத்ரர்கள்வரை ராஜகிருகத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில் எவருக்கும் சுணக்கம் இருந்ததில்லை. (more…)

காதலர் தினம்

எதிரே, பார்க் பெஞ்சில் இருக்கும் பையன்
அவளை நோக்கிச் சாய்கிறான்
காத்திருக்கிறாள் அவள்
 
உதடுகள் சந்திக்க
 
கண் அகலாமல் பார்க்கிறார்
அவள் முகம் விலகி மறைவதை
உதடு பிரியாமல் அவள்
மெல்லச் சிரித்துக் கொள்வதை
 
மகிழ்ச்சியைத் தணிக்கும்
குற்றவுணர்வு
 
அந்தி வெயிலின் ஒளியில் 
களைத்த தன் கண்களை
மூடிக் கொள்கிறார் முதியவர்

மணநாள் இரவின்
நிலை கொள்ளாத் தவிப்பு
தொடுகையில்
அதிரும் அவள் உடல்
மெல்ல அவிழ்ந்த சேலை

படர்கையில் கூடிய
மல்லிகை மணம்
                               – எஸ். சுரேஷ்

பிப்ரவரி 14

நெருக்கமாக க்ஷவரம் செய்யப்பட்ட முகம்
ஏதேதோ செய்து திருத்தப்பட்ட முகம்
காற்றில் அலையும் கேசம்
புதிய வாசனை
கண்களை இம்சிக்கும் நிறத்தில்
இறுக்கமான உடை
இரண்டு வருடங்களையாவது
குறைத்துக் காண்பிக்க வேண்டிய நிர்பந்தம்
எதற்கென்றே தெரியாதொரு அசட்டுப் புன்னகை
பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது
ஆனால் இத்தனை பேரும் என்ன,
போருக்கா போகிறார்கள்?

ஏதோ, ஐம்பது  பேராவது வீழ்ந்தால் சரி.

– அதிகாரநந்தி

கிணற்றுப் பிரசங்கி

அந்தக் கிணற்றில் ஒரு தவளை இருக்கிறது

இலக்கியம் என்கிறது இசை என்கிறது
ரசனை என்கிறது கலை என்கிறது
அரசியல்கூடப் பேசுகிறது
லோகக்ஷேமத்தைப் பற்றிக்கூடச் சிந்தித்திருக்கிறது
வறுமையை ஓடஓட விரட்டுவேன் என்கிறது

எந்தப் பிரச்சனை குறித்தும் பேசும் தவ
வலிமையை அடைந்து விட்டிருக்கிறது
முந்தாநாள் நடந்த பிரசங்கத்தில்கூட
கிணற்றுள்ள தவளைகளெல்லாம் ஆச்சரியப்பட்டுப் போயின
எவ்வனொரு சிந்தனைச் செறிவென்று கொண்டாடின.

 

– அதிகாரநந்தி