Author: பதாகை

மகத்

– – எஸ். சுரேஷ்-

மலையை விட்டு மலை
மலையை விட்டு மலை
என்று
நெளிந்து நெளிந்து
நெளிந்துச் செல்கிறது சாலை
கீழே சலசல சலவென்று
ஓயாமல் ஓடும் சட்லெஜ் நதியைத் தொட்டு
ஈரத்தை உள்வாங்கி என்னிடம்
விட்டுச் செல்கிறது
காற்று

முன்னால் நிற்கிறது
ஸ்ரீகண்ட மகாதேவ் சிகரம்
தூரத்தில் கின்னர் கைலாஷ் பர்வதம்
வலது பக்கத்தில் சராஹன்
அதற்குப் பின்னால் ஹத்து
வானைத் தொடும் சிகரங்கள்
சிகரங்கள் சிகரங்கள்
எங்கு திரும்பினும் பனி படர்ந்த சிகரங்கள்

பரந்த நீல வானத்தில் ஒரு விண்மீன்
இரண்டு
மூன்று
என்று மெதுவாக வானம் முழுவதும் விண்மீன்கள்

பிரம்மாண்டமான இந்த ஹிமலாய
மலைத் தொடரும் ஒரு சிறு துளிதான்
இந்த மஹாபிரபஞ்சத்தில் –

நடுநாயகமாக நான்.

6174 – க.சுதாகர்

– அஜய். ஆர்-

திரைத்துறையில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதே பாணியில் பல படங்கள் வெளிவருவது போல எழுத்து/ பதிப்புத்துறையிலும் ‘read-alikes’ என்றழைக்கப்படும் புத்தகங்கள் உண்டு. உதாரணமாக சமீபத்தில் ‘Amish Tripathi’யின் ‘Shiva Trilogy’ நாவல்களின் வெற்றிக்குப் பிறகு அதே போல் நம் புராணங்கள்/இதிகாசங்கள் சார்ந்து, அவைஅவற்றில் நடந்ததாகக் கூறப்படும் காலக்கட்டத்தைக் கதைக்களனாய் கொண்டு எழுதப்படும் நாவல்கள் அதிகம் இந்திய ஆங்கிலத்தில் வெளிவருகின்றன (இந்திய vernacular பொது இலக்கியத்தில் இப்படி புராணங்களை/இதிகாசங்களை மறுஉருவாக்கம் செய்வது எப்போதும் இருந்து வந்துள்ளது என்றாலும் இப்போது இந்திய ஆங்கிலத்தில் வருபவை ஒரு புதிய ழானராகவே மாறி உள்ளன).

டான் ப்ரௌனின் ‘டா வின்சி கோட்’ நாவலின் வெற்றிக்குக் பிறகு அதுபோலவே பல நாவல்கள் வெளிவந்து, அவை ‘ancient conspiracy theory’ நாவல்கள் என்றும் வகைபடுத்தப்பட்டு ஒரு குடிசைத் தொழில் போலவே ஆயின. இந்த வகை நாவல்கள் முன்பே வந்து கொண்டிருந்தன என்றாலும் ப்ரௌனின் வெற்றிக்குப் பிறகே அதிகமாக கவனத்துக்கு வந்தன (ப்ரௌனின் pet theoryஆன ‘Illuminati குறித்து ‘The Illuminatus! Trilogy’ எழுபதுகளில் வெளிவந்தன. Ecoவின் இன்ன வகைமை என்று வரையறுக்க முடியாத ‘Foucault’s Pendulum’ நாவலில் conspiracy theoryக்கள் பகடி செய்யப் படுகின்றன). (more…)

கவியின்கண் – 3 “உயவுநோய் அறியாது”

– எஸ். சுரேஷ்-

உயவுநோய் அறியாது

முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே.

ஔவை, குறுந்தொகை, 28 (more…)

ஜோர்பா எனும் கிரேக்கன் – அத்தியாயம் 2

முந்தைய பகுதி: ஜோர்பா எனும் கிரேக்கன் – அத்தியாயம் 1

கடல், இதமான வசந்தகாலம், ஒளியில் நனையும் தீவுகள், கிரேக்கத்தின் அலங்காரமற்ற அழியா திருமேனியின் மீது மென்மழை தெள்ளிய திரையாகப் பரவியது. ஏஜியன் கடலை மரணிப்பதற்கு முன் தன் வாழ்நாளில் கடப்பவன் உண்மையில் பாக்கியவான் என எண்ணிக்கொண்டேன்.

பெண்கள், பழங்கள், சிந்தனைகள்– ஆம் இவ்வுலகின் இன்பங்கள் கணக்கற்றவை. ஆனால் இந்த அற்புதமான வசந்த காலத்தில், கடந்து செல்லும் ஒவ்வொரு தீவின் பெயரையும் முணுமுணுத்தபடி கடலைக் கிழித்துக்கொண்டு பயணிப்பதில் உள்ள மகிழ்ச்சிதான் என்னளவில் மனிதனின் இதயத்தை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் மிகச் சிறந்த மார்க்கம். வேறெங்கும் நிகழ்காலத்திலிருந்து கனவிற்குள் இத்தனை எளிதாக, அமைதியுடன் நுழைந்துவிட இயலாது. எல்லைகோடுகள் ஒன்றோடொன்று கலந்துவிடுகின்றன, புராதனமான கப்பல்களின் கொடிகம்பங்களில் இருந்து கிளைகள் முளைத்து கனிகள் காய்க்கின்றன. கிரேக்கத்தில், தேவையே அற்புதங்களை உண்டாக்கும் அன்னை என்றாகிறது. (more…)

ஆடு அறியாதது

நீங்கள் வெறும் ஆடு
சிங்கமோ புலியோ இல்லை
வெறும் ஆடு
கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு ஆடு
கயிற்றின் நீளம் வரை போய்வரலாம்
இருந்த இடத்திலேயே குதிக்கலாம்
குரல்வளை நோகக் கூச்சல் போடலாம்
அதற்கு மேல் அனுமதியில்லை
வேறு வாழ்க்கை உமக்கு விதிக்கப்படவில்லை

                                                                         – அதிகாரநந்தி