Author: பதாகை

பூத சரணம்

விஜயகுமார்

1

தாத்தா சொன்னார், “மேலே வராதேன்னு சத்தம் கேட்டுது பாரு, நான் செதறி அடிச்சு கீழ ஓடியாந்தனாகும். கீழ வர்றதுக்கு முழுசா ரெண்டு நாளாகும். தவறி கால வெச்சோம், பாறையில பெயிண்ட் அடிச்சிடுவோம். சந்தேகமிருந்தா காயம் பட்ட தளும்பப் பாரு.”

“ஆள்திண்ணி பூதம் மலை உச்சிக்கு போறவங்கள விடாதுன்னு சொன்னாங்க” சிறுமி கேட்டாள்.

“நான் இளவட்டம்ல அப்போ. குரல் கேட்டதும் ஓடியாந்துட்டேன். உசுரோட வந்தது நான் மட்டும்தானாக்கும்.”

“அப்போ நீங்க அந்த பூதத்த பாக்கலயா?”

“கீழ ஓடியாறப்ப திரும்பி ஒருவாட்டி பாத்தேன். அது நாலு யானை ஸைஸ்ல எட்டு தென்னைமரம் நெட்டுக்கு இருந்துச்சு. பதினாறு கண்ணு, மூக்கே இல்ல, ஆனா பெரிய வாய்.

“அம்மாடியோ”

“புல்ஷிட்”

“யாரும்லே அது. அவ்ளோ தெகிரியம்னா சஞ்சீவி மலைய ஏறித்தான் பாக்கறது.” கூட்டத்தில் இருந்து பதில் ஏதும் வரவில்லை. “ஆள்திண்ணின்னா என்ன சும்மாவாலே. அது எமனுக்கு பிள்ளையாக்கும். பூதகணத்திலயே பெரிய கணமாக்கும். அதைய அதுவே சாப்பிடும் பூதகணம்லே.”

“அதைய அதுவே சாப்பிடும்ன்னா அப்புறம் எப்படி ஆள்திண்ணின்னு பேரு?” யாரோ ஒருவர் கேட்டார்.

“கேள்வி பெலமாத்தான் இருக்கி. ஆனா சிந்திக்கோணும்லே. அது அனுமாரு தூக்கியாந்த மலை. எல்லா பூதமும் ஓடிப்போக இது ஒன்னு மட்டும் மாட்டிகிடுச்சு. அனுமாரு யாரு. அத இறக்கி விட நேரம் இருந்துச்சாலே. இல்லேல்ல. தங்கூட்டத்த விட்டு வந்த பூதம் சாப்பாட்டு பழக்கம் மாறிலா போச்சுது. தன்னையே தின்ன பூதம் ஆள திங்க ஆரம்பிச்சுது. எல்லாம் டேஸ்ட்டு வந்து போட்டுச்சு. அந்த சிவனோட பூதகணத்த கொல்ல முடியுமா. முடியாதுலே. ஆனா தடுக்க முடியும். மலையோட ஒண்ணாம் அடுக்குல எல்லை அம்மன காவலுக்கு நேந்துவிட்டுப்புட்டாரு ராமரு. அந்த எல்லைய தாண்டி அது கீழ வராதுலே. மனுசங்க கீழ ஜீவிதம் பண்ணலாமல்ல இப்போ.” குழந்தைகள் ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தனர்.

“மலை உச்சில சாமிதான இருக்கும், எப்படி பூதம்?” சிறுமி கேட்டாள்.

“உச்சிக்கு போனதுக்கு பொறவு சாமி என்ன பூதம் என்ன. நம்ம உச்சிலயும் பூதமும் இருக்கி சாமியும் இருக்கி,” தாத்தா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சிலர் நமட்டு சிரிப்புடன் எழுந்து சென்றனர்.

“எங்கலே போறீக” தாத்தா கேட்டார்.

கூட்டத்தில் ஒருவன், “ஹ்ம்ம்.., சாவரதுக்கு…” என்றான். அவர்கள் கூட்டமாக சிரித்தனர்.

“அதுக்கு ஏலே எக்காளச் சிரிப்பு … ஆள்திண்ணிட்ட போங்கலே. சுளுவா உயிர் எடுத்துரும். நீ இருந்ததே தெரியாதும்லே..அகத்தியன் உசுரு உட்டான் பாரு, அந்த மாறி..” கூட்டம் சட்டை செய்யாமல் அப்பால் சென்றது. தாத்தா குழந்தைகளை பார்த்து தொடர்ந்தார். “மொதல்ல உன் பேர உறிஞ்சும் அப்புறம் உன் மனச உறிஞ்சும் அப்புறம் ஒடம்பு உஷ்ணத்த. ஒடம்பு நீரு அப்படியே வழிஞ்சு ஓடிடும். அப்புறம் நரம்பு, சதை கடைசியா எலும்பு.”

“அப்புறம்?”

“மயிரு மட்டும் தான் மிஞ்சும்”

“அய்யே தாத்தா மயிரு சொல்றாரு”. “எல்லாம் டூப்பு டூப்பு.” வாய் பிளந்திருந்த மற்ற குழந்தைகளும் சேர்ந்து பரிகாசம் செய்துவிட்டு எழுந்து ஓடினார்கள். “ஏலே நில்லுங்கலே..” தாத்தா குட்டு வெளிப்பட்ட சிரிப்போடு கை அசைத்து கத்தினார். அவர்கள் ஓடி விட்டார்கள்.

ஒருவன் மட்டும் வயிற்றை பிடித்தவாறு அவரை வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான்.

2

வானை கிழித்துக்கொண்டு சஞ்சீவி மலை செங்குத்தாக நின்றிருந்தது. பல மைல் தூரம் வரை அதன் ஏழு அடுக்குகளும் தெரியும்படி இருந்தது. அதன் அடிவாரத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலும் வீரஆஞ்சிநேயர் கோயிலும் சுற்றுவட்ட மலை கிராமங்களில் பிரசித்தம். அதன் ஐம்பத்தியாறு கிலோமீட்டர் நீளமுள்ள அரைவட்ட முற்பாதி மட்டும் தான் ஊரை நோக்கி இருக்கும். அதன் பிற்பாதி காடு கொண்டுள்ளது. அந்த ஐம்பத்தியாறு கிலோமீட்டர் முழுவதும் வெவ்வேறு மலை கிராமங்கள். கோதண்டராமர் கோயிலின் பின்புறம் உள்ள அகழியில் ஏறி இறங்கினால் மலை ஆரம்பிக்கும் அடிவாரம் வரும். அகழியில் மழை தண்ணீர் நிரம்பியிருந்தால் படகு இல்லை என்றால் படிக்கட்டு பாதை. படிக்கட்டு பாதை மலையின் முதல் அடுக்கு வரை செல்லும். முதல் அடுக்கின் முடிவில் புராதானமான எல்லை அம்மன் கோயில் இருக்கும். அந்த எல்லைக்கு மேல் மனித சஞ்சாரம் நிகழ்ந்ததில்லை என்பது ஊருக்குள் பேச்சு. அதனால் அந்த எல்லையில் அபாய பலகை வைத்திருந்தார்கள்.

“மேலே செல்லாதே! சென்றவர்கள் திரும்பியதில்லை.”

3

“நான் யார்” என்பது போன்ற தத்துவ சிக்கல்கள் ஒரு வயிற்றுவலிக்காரனுக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் வெறும் வயிற்றுவலி என்றுதான் சொல்லுவான். எனக்கு எப்போதாவது வலி இல்லாமல் இருக்கும். அப்படி ஒரு நாளில் தான் இந்தக் கேள்வி என்னை வந்தடைந்தது. உண்மையில் நான் யார்? ஊரார் சொல்வதுபோல் நான் அரைப் பயித்தியமா? ஊரார் அப்படி சொல்வதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. ஏனெனில் என் அண்ணன் ஒரு முழுப் பயித்தியம். என் கிராமத்து தார் சாலையில் கையில் ஒரு போசியுடன் அங்கும் இங்குமாக நடந்துகொண்டே இருப்பான். போசியில் எது விழுந்தாலும் சாப்பிடுவான். விழாவிட்டால் இல்லை. எனக்கு என் பெற்றோர் விட்டு சென்ற ஒரே துணை. மாதம் ஒருமுறை அவனுக்கு சர்வாங்க சவரம் செய்து விடுவேன். கூட நானும் செய்து கொள்வேன். ஏதோ அரை நிஜார் போட்டு வந்த வெளிநாட்டினர் முன்னிலையில் செய்து கொண்டோமாம். அதற்கு தர்மத்திற்கு அடித்தார்கள் அரை நிஜார் போட்ட நம்மூரார். அன்றிரவு அண்ணன் இறந்து போனான். அப்போது எனக்கு நாற்பத்தி ஐந்து வயது. அப்போதிருந்தே எனக்கு வயிற்றுவலி. இந்த வேதனையை யாரிடம் சொல்ல. என்னிடம் பேசுவாரில்லை. வலி இல்லாதபோது நான் பேசிக்கொள்வேன். சொல்லிக்கொள்வேன். கொஞ்சம் இருங்கள் என்னை யாரோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

“டேய்…என்னடா? வயிறு வலிக்குது வாடா..” போய்விட்டான். பார்த்தீர்களா இப்படித்தான். அவர்களும் பேசமாட்டார்கள். ஆனால் வலி நல்லதும் செய்யும்.

இங்கு நான் தனிமையில் இருக்கிறேன். அபாரமான தனிமை. தனிமையே தன் அளவில் எடை மிகுந்தது. அது ஒரு பூதம். அந்த பூதத்தை தாங்கி கொள்ளவே முடியாது. அது அட்டணங்கால் போட்டு அமர்ந்திருக்கும். அதற்கு மருந்தாக மனம் வயிற்று வலியை எதிர்நோக்கி இருக்கும். வயிற்று வலி இல்லாதபோது அதற்கு பதிலியாக ஒரு சாட்டையை எடுத்து என்னை நானே சீடராடிக்கொள்வேன். அது நல்ல துணை. ஆனால் வலி மீண்டும் சஞ்சரிக்கும்போது மூளையின் அனைத்து காந்த அலைகளும் வயிற்றை நோக்கியே இழுக்கும். பூதம் சிறிது ஆட்டம்காணும். ஒற்றை புள்ளியாக வலி தோன்றும் போது இருக்கிறதோ இல்லையோ என்ற அவஸ்தை. சும்மா எட்டிப்பார்த்து விட்டு போய்விட்டால்? வந்ததை எதைக்கொண்டு பிடித்து வைத்திருப்பது. ஆனால் உருண்டு திரண்டு உருக்கொண்டு மின்மினிபோல பிரகாசத்தை சேர்த்து சேர்த்து திடப்பொருள் போல இதோ இருக்கிறேன் என்று வந்து நிற்கும்போது கிடைக்கும் ஆசுவாசம் கோடி புண்ணியம். பூதம் ஓடிப்போகும்.

தாய் தனிமையில் இருப்பதில்லை. வயிற்று வலி எனும் இக்கருவை கண்ணுக்கு கண்ணாக பார்த்துக்கொள்வேன். கருவிற்கு கை கால் முளைக்கும். என்னை ஆங்காங்கே வருடிக்கொடுக்கும். என்னை நிரப்பும்; ஆனந்தத்தில் திளைக்க வைக்கும். பேசிக்கொள்ள, என் குறைகளை முறையிட ஒரு ஜீவனென அது உருவாகி நிற்கும். தனிமையை விட்டு வெகுதூரம் வந்திருப்பேன். குழந்தைகள் கபடமற்றவை. அவை தீங்கிழைக்காது ஆனால் அப்படியேவும் இருக்காது. அது வளரும். வளர்ந்து பெரிய ஆள் ஆகும். கேட்க ஆள் இல்லை ஆதலால் அது என்னை மிரட்டும். அது சிறிதாக இருக்கும்போது செய்த சேட்டைகள் எல்லாம் தொந்தரவாக இருக்கும். தொந்தரவு வளர்ந்து கொடூரமாக மாறும். அப்படி உருப்பெற்ற கொடூரம் என்னை தின்று இல்லாமலாக்கும். என் இருப்பு அடியோடு காணாமல்போய் அது மட்டுமே நின்று ஆடும். மிச்சசொச்சமாக இருக்கும் என் மனம் தனிமையை எதிர்நோக்கி இருக்கும். இது வேறொரு பூதம். இந்த பூதத்தையும் தாங்கிக்கொள்ளவே முடியாது.

இதுதான் என் பெண்டுலம். தனிமைக்கும் வலிக்குமாக ஆடிக் கொண்டிருக்கிறேன். இதன் இனிய பகுதி என்பது நடுவே இருப்பது. பெண்டுலம் மாறும்போது கிட்டும் க்ஷண நேர மத்திமம். மத்திய கதியை பிடித்து நிரந்தரம் செய்வதுதான் சவாலே. சவாலுக்கான ஒரே பதில் பெண்டுலத்தை நிறுத்துவது தான். இரு பூதத்திற்குமான செயல் கலத்தை இல்லாமல் ஆக்குவது. பூதங்களை பூதத்திற்க்கே பலியிடுவது. ஆள்திண்ணியிடம் சரண்புகுவது. சுகமரணம் எய்துவது. உடல் விடுவது. உயிர் பிரிப்பது. இனி கீழ் லோகம் எமக்கு ஆகாது. அதுவும் எம் அண்ணனை அடித்துக் கொன்றவர்கள். பாதாள லோக வாசிகள். நான் மேல் லோகத்திற்கு உரியவன். மோட்ச வீடு எனக்காக திறந்திருக்கும். ஆள்திண்ணி எம்மை இட்டுச் செல்வான். அந்திமம் என்று வந்தவுடன் தான் நான் யார் என்ற கேள்வி முக்கியமாகிவிடுகிறது. இப்போது சொல்லுங்கள் நான் யார். பைத்தியம் எனில் நான் பைத்தியமே. நான் ரோகி எனில் நான் ரோகியே. நான் யோகி எனில் நான் யோகியே. ரோகிக்கும் யோகிக்கும் நடுப்பில் இருப்பவன் போகி. நான் போகி இல்லை. போகியர் அனைவரும் கீழ் லோகத்திற்கு உரியவர்கள். ரோகிக்கும் யோகிக்கும் மட்டுமே கிட்டும் ஒன்று உண்டு. அதுதான் மேல் லோகம். நான் மேல் லோகத்திற்கு உரியவன்.

4

கோதண்டராமரும் வீரஆஞ்சநேயரும் சஞ்சீவி மலைக்கு புறமுதுகிட்டு நின்றிருந்தனர். ஆறுமுகத்திற்கு சில நாட்களாகவே பெண்டுலம் அதி உக்கிரமாக ஆடிக்கொண்டிருந்தது. வலி, தனிமை தவிர வேறு எந்த மெய்ம்மையும் அவன் உலகத்தில் இல்லை. ஒரு சுடர் விளக்காக தூரத்து நட்சத்திரமாக ஆள்திண்ணி பூதம் மட்டும் இருந்தது. அந்திம கால அவஸ்தை அவனை ஆட்கொண்டிருந்தது. சுலபமான முடிவு என்றாலும் சுக மரணம் என்றாலும் அது அறுதி முடிவுதானே. முற்றான மரணம் தானே. இதுவரை தெரிந்ததெல்லாம் துடைத்தெடுக்கப்படும் அல்லவா. கருக்கிருட்டு; நிசப்த பிரவாகம்; பிரபஞ்சத்தையே ஊசி முனையில் நிறுத்திய கனம். மலையின் முதல் அடுக்கில் உள்ள எல்லை அம்மன் கோயிலுக்கும் அடிவாரத்திற்கும் மேலும் கீழுமாக போய்வந்து கொண்டிருந்தான். பெண்டுலம் தறிகெட்டு ஆடியது. அந்த உச்ச விசையில் வலியும் தனிமையும் ஒரு தரப்பாக கருக்கிருட்டு மாற்றுத் தரப்பாக நின்றது. இது என்ன புது பெண்டுலம். இந்த புதிய விதிமுறையை அனுசரிக்கவோ அனுபவ வட்டத்திற்குள் வைக்கவோ அவன் தயாராக இல்லை.

“என்ன ஆறுமுகம்! மேல போகப் போறியா?….” என்ற கேள்வி உதிக்கையில் அவன் “ஆமாம்…..” என்று தீர்க்கமாக சொல்லிக் கொண்டான். அவன் சொல்லிக் கொண்டதாலேயே அம்மனின் எல்லையைத் தாண்டி எட்டு வைத்தான்.

“மேலே வராதே…..” அசரீரி அந்த பிரமாண்ட மலை முழுதும் ஒலித்தது. ஆறுமுகத்திற்கு கண்ணீர் பெருகியது. ஆள்திண்ணி பேசிவிட்டது, மோட்ச வீடு திறந்துகொண்டது. “நான் வாரேன்…. நான் வாரேன்….” என்று கத்திக்கொண்டும் பெண்டுலத்தை இழுத்துக்கொண்டும் பாறையைப் பிடித்து செங்குத்தான மலையில் வெறிகொண்டு ஏறினான். திரும்பிப் பார்க்கவே இல்லை. ஒரு கையில் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டும் மறு கையை பாறையின் மீது ஊன்றியும் கிடுகிடுவென்று ஏறினான். வழுக்கிய செருப்பை உதறினான், மூச்சு வாங்கியது, அடிவயிறு விண்விண்னென்றது. பாறை பிளவுகளை பிடித்து ஏறினான், இடுக்குகளில் முளைத்திருக்கும் செடிசெத்தைகளை பிடித்து ஏறினான். பிடிமானம் ஏதும் இல்லையென்றால் மலையோடு மலையாக சாய்ந்து கை மணிக்கட்டை பாறையில் பல்லிபோல தேய்த்து தேய்த்து ஏறினான். “இனி கீழ் லோகம் எமக்கு ஆகாது. நான் மேல் லோகத்திற்கு உரியவன். மோட்ச வீடு எனக்காக திறந்திருக்கும். ஆள்திண்ணி எம்மை இட்டுச் செல்வான்.” சொல்லிக்கொண்டான். விரல்கள் அனைத்தும் இல்லாதது போல் இருந்தது, வாய் வறண்டது, தொண்டை இறுகியது, தொடைகள் நடுங்கியது. தோள்பட்டை கனத்தது. பாறையின் வெம்மையால் உடல் வெந்தது. பகல் முழுக்க ஏறினான். திரும்பியே பார்க்கவில்லை. “பூதமே சரணம் பூதமே சரணம் பூதமே சரணம்..”, மனம் உச்சாடனம் செய்தது. “இவ்வுலகு எனக்கு வேண்டாம். இவ்வுலகில் எனக்கு எதுவும் வேண்டாம். வாழ்வு மட்டும் அல்ல இவ்வுலகின் மரணம் கூட எனக்கு வேண்டாம். நான் இறைஞ்சுவதெல்லாம் மேல் உலகின் மரணம். நீ மட்டுமே எனக்கு அதை தர முடியும்.”

அவன் ஏறினான். கால நேரம் தெரியாமல் ஏறினான். உடலால் ஏறினான்; எண்ணத்தால் ஏறினான்; உயிரால் ஏறினான். ஏறுவதைத் தவிர அவன் வேறொன்றாக இருக்கவில்லை. வலுவிழந்த கால்கள் எப்போது வேண்டுமானாலும் விட்டுக் கொடுத்துவிடும். தளர்ந்த கைகள் அடுத்த கணம்கூட வழுக்கிவிடும். எவ்வளவு இழுத்தாலும் மூச்சுக்காற்று போதவில்லை. இனி தொண்டையில் ஓட்டையே விழுந்துவிடும். செங்குத்தாக செல்லும் மலையில் இன்னும் இரண்டு எட்டு. உடலின் கடைசி வியர்வைத் துளி வெளியேறும் போது ஒரு சமதளம் தன்னை அறிவித்தது. அதன் நுனியை பற்றி ஏறி உருண்டு தரையில் முதுகை பதிய வைத்தான். உடல் அங்கங்கள் செயல் இழந்தன. மொத்த காற்று வெளியையும் உள்ளிழுத்து விட்டுக் கொண்டிருந்தான். குடல் தன்னால் கழிந்தது. அந்தி படர்ந்து கொண்டிருந்தது. உடல் இல்லாதவன் போல அங்கேயே கிடந்தான். நகர்ந்து செல்லும் ஆகாயம்; சூழ்ந்து செல்லும் காற்று; ஊடுருவிச் செல்லும் ஒளி என முதல் முறையாக கடந்து செல்லும் காலத்தை கண்முன் பார்த்தான். ஒவ்வொரு அங்கமாக மீண்டுகொண்டு வந்தது. தூரத்தில் தண்ணீரின் சலசலப்பு கேட்டது. மூளையின் கட்டளையில்லாமலேயே உடல் அத்திசை நோக்கி ஊர்ந்து சென்றது. அந்த சின்ன சமதளத்தின் ஓரத்தில் ஒரு சுனை. சுனையின் சிறிய தெப்பத்தில் முகத்தை பதித்தான். உயிர் குடித்தான். உடல் சரிந்தான். “மேலே வராதே….” என்ற அசரீரி ஒலித்தது. பூதம் தான் பேசுகிறது என்று உணர்ந்தான். பிரக்ஞை விழித்திருக்க உடலால் தூங்கிப் போனான்.

ஏதோவொரு நாளின் முற்பகலில் அவன் விழித்தான். உடல் எடையின்றி இருந்தது. சுனையை அள்ளிப் பருகினான். கீழ் உலகம் அடியாழத்தில் எங்கோ சென்று கொண்டிருந்தது. “பூதமே சரணம்” என்று தனிச்சையாக வாய் முணுமுணுத்தது. தான் எங்கு செல்ல வேண்டும் என்ற உறுதியை சங்கல்பம் செய்துகொண்டு அக்கம்பக்கம் தேடினான். தண்ணீர் எடுக்குமாறு குவளை போல் எந்த சாதனமும் தென்படவில்லை. இயன்றவரை தண்ணீர் குடித்துவிட்டு மேல் நோக்கி ஏற முற்பட்டான். இரண்டு ஆள் உயரமுள்ள ஒரு நச்சரவம் மேலிருந்து கீழே வந்து கொண்டிருந்தது. இவனை கண்டுகொள்ளாமல் தாண்டி சென்றது. பூத ஒலி கேட்ட பின்பு எதுவும் ஆச்சர்யமில்லை. அவன் முன்னேறி சென்றான். அவனுக்கு இன்று தேர்ச்சி இருந்தது.

அவன் தொடர்ந்து மேலேறினான்.ஆங்காங்கே கள்ளிச் செடிகள் அதன்மேல் இளஞ்செந்நிற பூக்கள். மழைத் தண்ணீர் வழிந்தோடிய தடம் வழுக்கியது. மற்ற இடம் உப்பு படிந்து ஏறுவதற்கு சொரசொரப்பாக இருந்தது. தன்னை ஏதோ கண்கள் கவனிப்பதாக உணர்ந்தான். கூட்டான கண்கள். வான் கழுகுகள் அவனுக்கு இணையான உயரத்தில் பறந்தன. அவைகள் இவனை சட்டை செய்யவில்லை. பூதமா? அதுவும் நாலு கால்களிலா? அது பூதமில்லை குதிரைகள். குதிரை வடிவில் உள்ள பூதமா? கண்கள் நிலைகுத்தி இருந்ததினால் இன்னும் கூர்கொண்டு அவ்வுருவங்களை தெளிவு செய்தது. ஏதோ மறி ஆடுகள். இவ்வளவு உயரத்திலா? அவனை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு மலைப் பாறை மீது படிந்திருந்த உப்பு படலத்தை நக்கி நக்கி உண்ண ஆரம்பித்தன. தன்னை மறந்து பார்த்தான். கள்ளிச் செடிகளை தீண்டாமல் மேலேறினான்.

மீண்டும் கை கால்கள் சோர்ந்தன. உளம் சேர்ந்து சோர்ந்தது. பாறைத் திட்டுகள் வரும்போதெல்லாம் அதில் அமர்ந்து இளைப்பாறினான். வான் கழுகுகள் அவனுக்கு கீழே பறந்து கொண்டிருந்தன. அடி ஆழத்தில் கீழ் உலகம் உறைந்தாற்போல் தென்பட்டது. சூரியன் சுட்டது. பாறை இடுக்கில் காட்டு காந்தள் செடிகள் சில பூத்திருந்தன. இவ்வளவு உயரத்தில் வண்ணத்துப்பூச்சிகளோ வண்டுகளோ, தேனீக்களோ இருக்க வாய்ப்பில்லை என்றுதான் மனம் சொன்னது. நேர்க்காட்சியாக அவைகளை பார்க்க முடியாவிட்டாலும் அவைகளின் இருப்பை ராட்சஸ காந்தள் மலர்கள் அனுமானம் செய்தளித்தன.

காந்தள், தீ எரிவது போல இருந்தது. அடிப்பாகம் மஞ்சளாகவும்.மேற்பாகம் சிவப்பாகவும். அதோடு சேர்ந்து தானும் எரிவது போல் இருந்தது. உயிர்தான் விடவேண்டும் என்றால் இந்த போராட்டம் எதற்கு? இங்கே இருந்து குதிக்கலாம் அல்லது இப்படியே அமர்ந்தும் போகலாம் அல்லது இந்த காந்தள் விதையையோ கிழங்கையோ சாப்பிட்டாலும் போதும். ராட்சஸ காந்தள்கள்; அப்படியானால் ராட்சஸ தேனீக்கள். தேனீக்கள் தன்னை மொய்ப்பதை, உடலை போர்த்துவதை நினைத்துப் பார்த்தான். மெய்சிலிர்த்தது. “மேலே வராதே…” என்ற ஒலி கேட்டது. உடல் விதிர்த்தது. அட்ரீனல் சுரந்தது. கிடைத்த புது சக்திப் பாய்ச்சலில் “பூதசரணம்… பூதசரணம்… பூதசரணம்…” என்று சொல்லிக்கொண்டு மோட்சக் கதவை தட்டுவதற்கு மேலேறினான்.

அவன் வயிறு முதுகெலும்புடன் ஒட்டியிருந்தது. எப்போது சட்டை கிழிந்து இவன் உடல்விட்டது என்று தெரியவில்லை. கன்னங்கரிய உடல் பாறையின் மீது படிந்து ஏறியது. உடல் அவதி ஒரு அங்கமென அவனில் குடியேறியது.

அந்த அந்திப்பொழுதில் சமதளம் அடைந்தான். குளிர்காற்று அவனை பிடித்து வைத்திருந்தது. தண்ணீர் ஓடும் சப்தம். அந்தியின் வெயில் மலையை பொன்னால் போர்த்தியிருந்தது. மலையிலிருந்து வழிந்தோடி வந்த தண்ணீர் ஒரு தட்டையான நீர் பிரவாகத்தை உருவாக்கி மீண்டும் பாறை இடுக்குகளில் வழிந்து மறைந்து கொண்டிருந்தது. பொன்னால் சட்டகமிட்ட ஆடிபோல் அந்த சிறிய பிரவாகத்தை அவன் சொர்க்கமென பார்த்தான். தன் உடலின் ஒரு பாதி அங்கு கிடப்பது போல. ஓடிச்சென்று அணைத்துக் கொண்டான். நீர் அவனை முழுதுமாக ஏந்திக்கொண்டது; அவனை அகமும் புறமுமாக கழுவி எடுத்தது. அவன் அங்கங்கள் மெல்ல மெல்ல தன்னிலை மீண்டன. குளிரியது. இரவில் பாறை இடுக்குக்குள் சென்றான். வெதுவெதுப்பாக இருத்தது. “மேலே வராதே… மேலே வராதே….” என்ற ஒலி மீண்டும் ஒலிக்க அதன் ரீங்காரத்துடன் தூங்கிப்போனான்.

5

சமதளத்தின் விளிம்பில் நின்று எட்டிப் பார்த்தான். வெண்மேகங்கள் படர்ந்திருந்தன. மேலே பார்த்தான். நீல நிறமாக வெறிச்சோடிக் கிடந்தது. எண்ணங்கள் சீரில்லாமல் சிதறி ஓடின. எண்ணத் தொடர்ச்சி இல்லாததால் ஞாபக சரடு அறுந்திருந்தது. எவ்வளவோ அலசிப் பார்த்துவிட்டான் அவன் பெயர் ஞாபகம் வரவில்லை. மூச்சு மட்டும் கனத்திருந்தது. எங்கோ உள்ளிருந்து “பூதசரணம்” என்ற சொல் வந்து விழுந்தது. அதை கெட்டியாக பிடித்துக்கொண்டான். “சரணம் செய்… பூத சரணம் செய்… பூதசரணம்… பூதசரணம்… பூதசரணம்…” என்ற உச்சாடனம் அவனை மேலிழுத்து சென்றது.

பாதி வழியில் உச்சாடனத்தையும் மறந்தான். செல்லும் வழியில் பாறை இடுக்கில் ஒரே ஒரு வாய் தண்ணீர் கிடைத்தது. உறிஞ்சி எடுத்தான். மேலே செல்லும் உந்து விசை மட்டும் தான் அவனில் இப்போது மிச்சமிருந்தது. மேலே சென்றான். அடுத்த சமதளம் அடைந்தான். ஆளைக் கவிழ்க்கும் அசுரக் காற்று. உடல் கசிந்திருந்தது. அங்குமிங்கும் பார்த்தான். எங்கும் தண்ணீர் இல்லை. அப்படியே அமர்ந்தான். மண்ணுமில்லாமல் வானுமில்லாமல் எங்கோ ஆகாசத்தில் அமர்ந்திருந்தான். சொற்கள் என்று அவனிடம் ஏதுமில்லை. தொடர்ச்சியற்ற ஆதி உந்துவிசை மட்டும். அங்குள்ள அநாதி அமைதியோடு அநாமதேயனாக பொருந்திப்போய் இருந்தான். எல்லாவற்றையும் முதல் முறையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏதோவொரு புலரியின் பனிக்காற்று பட்டு பாறையில் ஈரப் பிசுக்கு வழிந்தது. அவன் பாறையை நக்க ஆரம்பித்தான். அங்குள்ள எல்லா ஈரத்தையும் நக்கினான். நாக்கு கிழிந்து குருதி வழிந்தது. அவன் நக்குவதை நிறுத்தவில்லை. திடீரென்று அவன் கால்கள் அமர விருப்பம் இல்லாதது போல் அவனை எழுப்பி நிறுத்தின. நிறுத்தியவனை மேல் உந்தி சென்றது.

இயந்திரம் போல் சென்று கொண்டிருந்தான். மலையின் சஹஸ்ராரத்தில் இருந்து ஏதோ ஒரு சங்கிலி அவனை இழுத்துக் கொண்டிருந்தது. முழுதுமாக அதன் பிடியில் இருந்தான். மேல்விசை அதற்கு அனுகூலமாக இருந்தது. ஒரே பொழுதில் அவன் மலையின் ஆக்கினைக்கு வந்து சேர்ந்தான். அது பெரிய மைதானம் போல் இருந்தது. மைதானத்தின் முடிவில் மலையின் பின்புறம். அது அடர்காடாக படர்ந்து விரிந்து சென்றது.

மைதானத்தின் இடது ஓரமாக மலை மேலும் சில அடிகள் கூம்பு போல உயரம் சென்றது. மைதானத்தின் வலது ஓரமாக ஒரு மாபெரும் குகை. அதன் வாசல் பனைமரம் உயரம் இருந்தது. நினைவின் அடுக்குகள் இல்லாத அந்த பெயரிலி குகையின் ஓரமாக அமர்ந்து நிழலாறினான். உடல் முழுதும் வழிந்தோடும் வறண்டு கிடக்கும் காயங்கள். ஆதி மிருகமென அதை நக்கிக் கொண்டான். அங்கேயே அப்படியே இருந்தான். வலியின் உக்கிரத்தையோ தனிமையின் அருகாமையையோ உணரும் அளவில் அவன் பிரக்ஞை சுடர் விடவில்லை. அந்த பிரக்ஞையும் அணைந்து வெளியுலகம் முற்றாக மூடிக்கொண்டது. மயங்கி விழுந்தான்.

6

முடிவற்ற காலத்தின் ஒரு பொழுதில் அவன் பிரக்ஞை விழித்தது. அவன் தூக்கி எறியப்பட்டது போல் விதிர்த்து எழுந்து நின்றான். சிந்தையில் தொடர்ச்சியற்ற ஏதேதோ சொற்கள். அவன் மலை ஏறி வந்த நினைவு கனவு போல சிதறி சிதறி அலை பாய்ந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். இது ஒரு குகை. தன்னை யார் இங்கு கிடத்தி வைத்தது. இதோ பிரம்மாண்டமான கல் சிம்மாசனம். கல் படுக்கை. இங்கு யாரோ இருக்கிறார்கள். அதன் அருகாமையை உணர முடிகிறது.. “பூதம்… ஆம் பூதம்… அதை தேடித் தான் நான் இங்கு வந்தேன். ஏன் அது இங்கு இல்லை. எங்கு சென்றது. இதோ அதன் ஆயுதம். ஆயுதமே என் உயரம் இருக்கிறது. கோடாலியா அல்லது கதாயுதமா? இதன் கோட்டைக்குள் நான் வந்திருக்கிறேன். அப்படியானால் அதுவே முதல் வெற்றி. அதன் கண்ணில் படக் கூடாது. ஒளிந்திருந்து கவனிக்க வேண்டும். ஒளிந்துகொள்.” ஓடிச்சென்று குகையின் இடுக்குகளைத் தேடி ஒரு விரிசலில் ஏறி அமர்ந்து கொண்டான். உடல் நடுங்கியது. உளம் அதிர்ந்தது. தான் மலையேறி வந்த நினைவை மீட்க முயற்சித்தான். அது மங்கலாக தழலாடியது. “ஏதோ முக்கியமான ஒன்றை மறக்கிறேனே; அதற்குத்தான் இந்த வேள்விப் பயணம். பூதம்….பூதம்… பூதா… பூதா…பூத…பூத… பூதவதம்!!! ஆமாம் பூதவதம்… வதம் செய்… பூத வதம் செய்… பூதவதம்… பூதவதம்…” முதல் குழப்பம் தீர்ந்தது. மனம் அதை பற்றிக்கொண்டது. பற்றிக் கொண்டதை சொல்லி சொல்லி பழக்கம் செய்தது. ஒப்பித்து ஒப்பித்து புதுப்பித்து. குகைக்குள் சுற்றி வந்த காற்றும் பூதவதம்…பூதவதம்.. என்றே முழங்கியது. அப்படியே அமர்ந்துகொண்டான்.

“நாட்கள் ஓடின

இன்று நேற்றைப்போலவே
அலர்ந்தது.

நேற்று இன்றிற்கு
தகவல் சொல்லியது.

இன்று நேற்றை
புனைந்தது கொண்டது.

நாளையை அறிவித்துவிட்டு
இன்று மறைந்தது”

பசித்தது. வானில் இருந்து வந்த பசி. எத்தனை நாட்கள் தான் இப்படியே அமர்ந்திருப்பது. பூதம் வரும் சாடையைக் காணவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கத்தை தளர்த்தினான். இறங்கி குகையை அலசினான். பூதத்தின் இருக்கை; படுக்கை; மலஜல பாறைப் பிளவு, பூதத்தின் கால்தடம் பட்டு பட்டு தேய்ந்த பாறைத் தடம். அவ்விடம் மேலும் பழக்கம் ஆகியது. தயங்கித் தயங்கி வெளியே வந்தான். வெயில் சுட்டெரித்தது. உள்ளே குளிர்ச்சியாக இருந்தது. மைதானத்தை நோட்டம் விட்டான். விந்தையான நிலம் அது. குகையின் ஓரத்தில் சுக்குட்டி செடிகள். அதில் அடர் நீல நிறத்தில் சிறிய சிறிய சுக்குட்டிப் பழங்கள். க்ஷணம் தயங்காமல் பொறித்துப் பொறித்து வாயில் போட்டான். புத்துணர்வு.

மைதானத்தின் விளிம்பையும் கடைசியில் உள்ள காடு ஆரம்பிக்கும் விளிம்பையும் தயங்கித் தயங்கி சென்று தடயங்கள் சேகரித்தான். தடயங்கள் எல்லாம் பூதம் அடர் காட்டிற்குள் சென்றிருக்கும் வாய்ப்பையே சொன்னது.

அவன் திட்டம் தீட்டினான். அங்கு கிடைத்த கூறிய கற்களை சேகரித்தான். காட்டிற்கு சென்று மரத்தடிகளை உடைத்து வந்து அதனுடன் கூறிய கற்களை வெட்டுப்புற்களை வைத்து கட்டினான். வெட்டுப்புற்களை ஒன்றாய் முடிந்து அதனுள் சிறிய கற்களை போட்டு கவண் செய்து வைத்தான். கள்ளிச் செடிகள் பிய்த்து குகை எங்கும் பரப்பி வைத்தான். பாறாங்கற்களை உருட்டி குகையின் மீது வைத்து வெட்டுப்புல் கயிற்றால் கட்டித் தொங்க விட்டான். தன் அறிவு என்ன சொன்னதோ அதுவெல்லாம் தயாரித்து வைத்தான். போருக்கு எந்நேரமும் தயாராக இருந்தான்.

நாட்கள் சென்றது. ஒன்றுமே நிகழவில்லை. “பூதத்திடம் போரிட்டு வெல்வது கடினம். அதனிடம் மண்டியிடுவோம்; நம்பிக்கைக்கு பாத்திரம் ஆவோம். ஏவல் வேலைகளைச் செய்வோம்; தக்க சமயத்தில் சோளியை முடிப்போம். முதலில் அதனிடம் நன்முத்திரை பெறவேண்டும்.” சொல்லிக்கொண்டான். வெட்டுப்புற்களை சீமாறாக கட்டி குகையை பெருக்கினான். காட்டிற்குள் ஒழிகிச்செல்லும் ஓடையிலிருந்து மர ஓட்டில் தண்ணீர் சுமந்து வந்து வாசல் தெளித்தான். பூத இருக்கைக்கு சாமரம் தயாரித்தான். படுக்கைக்கு மஞ்சம் தயாரித்தான். மலர்கள் சூடிக்கொண்டான்.

நாட்கள் சென்றது ஒன்றுமே நிகழாத இடத்தில் ஒன்றுமே நிகழவில்லை. பூதத்தின் வருகைக்கு எந்த சகுனமும் இல்லை. மலையின் விளிம்பில் வந்து நின்று பார்த்தான். மேகக்கூடங்களுக்கு கீழே பரந்து நீண்டு கிடந்த பூமி அந்நியமாகத் தெரிந்தது. பகலில் எந்நேரமும் சூரியன் கடிந்து கொண்டும் இரவில் நிலவு வருடிக்கொண்டும் மீன்கள் அங்குமிங்கும் அலைந்துகொண்டும் இருந்தது. விசாலமாக உணர்ந்தான். விரிந்து கொண்டிருந்தான்.

நாட்கள் சென்றது. அவன் காலடித் தடம் படாத இடம் அந்த மைதானத்திலும் குகையிலும் இல்லை. சுக்குட்டிப்பழம் திகட்டியது. கோவைப்பழம் புதிய வரவு. காட்டிற்குள் பிரவேசிக்க பிரவேசிக்க புதிய பழங்களும் கிழங்குகளும் கிடைத்தன.

நாட்கள் சென்றது. பூதம் என்ற ஒன்று இருக்குமா என்ற சந்தேகம் தோன்றியது. கணம்தோறும் அது வலுப்பெற்றது. இறங்கிச் செல்வோமா என்ற எண்ணம் உதிக்கையில் அவ்விடத்திற்கு பொருந்தாத ஒரு ஒலி கேட்டது. முதலில் மனம் ஏற்க மறுத்தது. ஒலி முணுமுணுப்பாக கேட்டது; உடல் தூக்கிவாரி போட்டது. உடல் குறுக்கிக் கொண்டான். தூரத்தில் ஒரு உருவம் அசைந்தது. பரந்த மைதானத்தில் திடீரென்று அவன் ஒளிவதற்கு ஒரு இடம் இல்லாமல் ஆனது. முணுமுணுப்பு பேச்சொலியாக கேட்டது. உறுமியதுபோல். பிளிறியதுபோல். ஓலமிடுவதுபோல். சடசடவென்று மலையின் சஹஸ்ராரத்திற்கு ஏறினான். குரல் இப்போது தெளிவாகவே கேட்டது.

“மேலே உனக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது..”

விருந்தா? என்னைத் தான். என்னையே தான்.

“என்ன விருந்து மாமா.. எனக்கு கொலைப் பசி..” பெண் பூதக் குரல்.

கணவன் பூதம் மேல் உலகம் அதிர்வது போல் சிரித்தது. மனைவி பூதம் கீழ் உலகம் அதிர்வதுபோல் சிரித்தது. இரண்டு பூதமா? நான் சிறிதும் எதிர்பார்க்காதது. நான் என்ன செய்வேன்? அவர்கள் ஒரு முடிவுடன் வரும்போது நான் மன்றாட முடியுமா? பூதவதம் செய்ய வந்துவிட்டு இது என்ன பயம். உள்ள பயத்தை எப்படி இல்லை என்று சொல்வது. சரி! அவர்களுக்கு விருந்தாவதா அல்லது வீரமரணம் எய்துவதா?

சஹஸ்ராரத்தில் பாறைக்கு பின் மறைந்திருக்கும் அவனுக்கு ஆயுதமென்று ஒன்றும் இல்லை. அவன் காலடியில் இரண்டு பெரிய பாறாங்கற்களை தவிர. இரண்டே இரண்டு கற்கள். அவ்வளவே. அந்தி என்றபோதும் சிறிது வெளிச்சம் இருந்தது. “சீக்கிரம் இருட்டிவிட்டால் இன்று பிழைப்பேன்.” அவனுக்கு பதறியது.

“என்ன விருந்து மாமா? சொல்லுங்க…”

“கொஞ்சம் பொறு. அது தான் என் கல்யாண பரிசு.”

“ருசியா இருக்குமா?”

“அதுக்கு என்ன குறை.”

“நான் ருசியாக இருக்க மாட்டேன். என் காயங்களை நானே நக்கிப் பார்த்திருக்கிறேன். இதை எப்படி பூதத்திடம் சொல்வது. சொன்னாலும் பூதம் விடுமா. என்ன செய்வதென்று தெரியவில்லை. இன்னும் சில நேரத்தில் என்னை கண்டுபிடித்துவிடும்… பிழை செய்துவிட்டேனா… இங்கே வந்திருக்கக் கூடாது…” பயத்தில் மனம் இண்டு இடுக்கெல்லாம் சென்று புலம்பியது.

ஏறிவருகிறது; நெருங்கி வருகிறது; பார்க்கப் போகிறது…

இப்போது அவன் தெளிவாகப் பார்த்தான். முழு உருவத்தையும் பார்த்தான். முகத்தில் அறைந்தார் போல் ஒன்று உணர்ந்தான். கொஞ்சம் கீழே குனிந்து “மேலே வராதே..” என்றான்.

“மாமா.. யார் பேசுறது?”

“ஏய் கொஞ்சம் இரு..”

இன்னும் சற்று குனிந்து “மேலே வராதேன்னு சொன்னேன்ல…..” என்று உறுமினான்.

“ஏய் ஓடு…. ஓடு…. ஓடு…. நிக்காத ஓடு….ஓடு….” மனைவி முன்னால் ஓட; அரை நிஜார் போட்ட கணவன் பின்னால் தலை தெறிக்க ஓடினான்.

ஒரு பாறாங்கல்லை எடுத்து ஓடும் அவர்கள் தலையை குறி பார்த்து எறிந்தான்.

இருளின் மெல்லிய இலைகள்

மலையாள மொழி மூலம்:  கே. ரேகா  
ஆங்கிலம்:  ரீனா சலீல் 
தமிழில்:  தி.இரா.மீனா  

சுமையேற்றப்பட்ட வண்டி

அந்த ரயில் நிலையம் பனியில் குளித்திருந்தது. ஏறுவதற்கு அதிக பயணிகள் இல்லாத சிறு ரயில் நிலையத்தில், பயணச் சீட்டுக்களை வெளியிடும் மிகப் பழைய இயந்திரம் டுக்–டுக் என்னும் ஒலியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அங்குள்ள வாகை மரம் பூக்களைக் கொட்டியிருந்தது. ஒரு பள்ளியிலிருந்து மணியடிக்கும் சப்தம் கேட்டது. அந்த ரயில் நிலையத்தின் உச்சியில் பறவைகள் வந்து உட்காருவதும், பறப்பதுமாக இருந்தன- அந்த நிலையம் பழைய காலத்ததாயிருந்தது.

இன்று அந்த இரவு ரயில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்து்விட்டது. சரியாக இரவு10.35 மணி. பொதுவாக அது பதினொன்று, பதினொன்றரைக்குத்தான் வரும். ஏறுவதற்கு ஏழெட்டுப் பயணிகள் மட்டுமேயிருந்தனர். நான்கு பேர் கொண்ட குடும்பம்— அப்பா, அம்மா, மகள், பேத்தி- நிலையத்தின் தென் பக்கத்திலிருந்த வயல் வழியினூடே வந்திருந்தனர். ரயில் சில நிமிடங்கள் மட்டுமே அங்கே நின்றது. அந்த நேரத்திற்குள் வண்டிக்குள் ஏறுவதென்பது அந்த வயதானவர்களுக்குக் கடினமாகவேயிருந்தது.

அம்மா சுற்றியிருந்த சால்வையை சரியாகப் போர்த்தும் அன்பான பாவனையில் அப்பா சரி செய்ய முயன்றார். அவர் கையைத் தட்டிவிட்டு அவள் ஒதுங்கினாள். தாங்கள் அந்த மாதிரி விஷயங்களுக்கான வயதைக் கடந்தவர்கள் என்று அவள் சொல்வதாக அவர் நினைத்தார். ஒருவித சங்கடம் அவர் முகத்தில் படர்ந்தது.

அவள் ஒரு போதும் தன் விருப்பு, வெறுப்புகளை வெளிப்படுத்தியதோ, கோபம் காட்டியதோ இல்லை. ஆனால் நம்பிக்கையின்மை என்னும் சுமையோடு அவள் வலிந்து இன்று வரை வாழ வேண்டியிருந்தது. இறுதியில் அவள் இந்தத் தேர்வை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அது அவளைக் கிழித்துக் கொண்டிருந்ததை மகளும் உணர்ந்திருந்தாள்.

அம்மாவுக்கு ஐம்பது வயது கடந்து விட்டது. தன் வயதுக்கு அவள் பலகீனமானவள். சர்க்கரை நோய், நெஞ்சு நோய்கள், இரத்த அழுத்தம் என்று எல்லாமுண்டு. வெட்கக்கேட்டுணர்வில் அவள் செய்யும் முதல் பயணமாக இது இருக்கலாம். அவர்கள் ஒரு கணக்கின் சரி, தவற்றை அவர்களின் இளமை நாட்களிலேயே கணக்கிட்டிருக்கின்றனர்.

இது எல்லாவற்றிற்கும் தான்தான் காரணமென்று மகள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். அவள் நிறம் மட்டும் மிகச் சிவப்பானதில்லையென்றால் மற்றவை எல்லாம் அமைதியாக இருந்திருக்கும்! அவளையறியாமலேயே அவள் கை கன்னங்களைத் தொட்டது. ரயில் நிலையத் தரையில் தன் பிரதிபலிப்பைப் பார்த்தாள். அது ஒரு பரிசோதனைக் கூடத்தின் மாதிரி முகம்.

விளக்கை நோக்கி ஒன்றிரண்டு அடி எடுத்து வைத்தாள்
.
உண்மை—என்ன சிவப்பழகு!

அவள் அப்பா இருள் போல கருப்பு, அம்மா ஒயின் போன்ற நிறம். பிறகு அவர்களுக்கு எப்படி இப்படி ஒரு சிவப்பான குழந்தை? அவள் தந்தை சந்தேகப்பட்டிருந்தால் அது ஒன்றும் பெரிய குற்றமில்லை. ஆனால் அதைப் பரிசோதிக்க எடுத்துக் கொண்ட காலம் மிக நீண்டதுதான், அவளுக்கு இப்போது வயது முப்பது.

தன் அப்பாவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவருடைய சந்தேகம் பரவியிருக்கும் முகம்தான் அவளுக்கு நினைவில் வரும். அவள் குழந்தையாக இருந்தபோது அப்பா அவள் கன்னங்களைத் தட்டி விட்டு முடிவில்லாத சந்தேகங்களோடு அவளைப் பார்ப்பார். “அப்படி ஒன்றுமில்லை,” என்று கடைசியில் சிறிது சத்தமாகச் சொல்லுவார். அதைக் கேட்டதும் அம்மாவின் கண்கள் கண்ணீரால் நிரம்பும். குழந்தைகள் வளரத் தொடங்கியதும் அம்மா அதைக் கேட்காமல் இருப்பவள் போலிருக்கக் கற்றுக் கொண்டாள். இந்த நாட்களில், இப்படியான கேள்விகள் தன்னைப் பாதிக்காது என்ற ரீதியில் உதட்டைச் சுழித்துக் கொள்வாள். ஆனால்,அப்பா இளமைக் காலத்திலிருந்தே தனது முணுமுணுப்பைத் தொடர்ந்து கொண்டுதானிருந்தார். முடிவற்ற சந்தேகங்கள்… இந்தப் பயணம் அவருடைய சந்தேகத்தாலான மனதை விடுதலைப்படுத்தலாம்.

தனது நீண்ட பயணத்திற்குப் பிறகு திரும்பும் ஜெய்சன் பணத்தை எதிர்பார்க்கலாம். இந்தச் சோதனை அந்தப் பணத்திற்கு வழி வகுக்கலாம்.
அவளுடைய மகள் தாத்தா வாங்கித் தந்திருந்த சாக்லெட்டைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு இந்தப் பயணம் பிடித்திருப்பது போலத் தெரிந்தது. அவள் வெளுத்த முகம் மகிழ்ச்சியின் அடையாளத்தைக் காட்டியது.

“எதைப் பற்றியும் நினைக்காதே அஞ்சு… கவலைப்படாதே…” அம்மா கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

“அவருக்கு யோசிக்கும் ஆற்றலிலும் நோய் வந்துவிட்டது. அப்படி நினைத்துக் கொள் அவ்வளவுதான்.”

அம்மா அப்பாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். கணவன் சொன்ன அந்தச் சோதனைகளைப் பற்றி நினைத்து தன் மகள் வருத்தமாக இருக்கிறாளென்று அம்மா நினைத்தாள்.

அம்மாவிற்கு ஜெய்சனின் விவகாரங்கள் பற்றி எதுவும் தெரியாது…ஆனால் யாருக்குத்தான் தெரியும்! கடவுளே! அவன் இப்போது எங்கேயிருக்கிறான்? வங்காளத்திலா? திரிபுரா? ஆந்திரா? நிச்சயமில்லை. ஒருவர் மனதிலிருப்பதைக் கொட்டித் தீர்க்க முடிந்தால்… ஆனால் அதற்குச் சாத்தியமில்லை. அவள் தோளின் சுமை மிக அதிகம், அவளால் குனியக் கூட முடியாது.

குழந்தைக்குப் போர்த்துவதற்காக அப்பா பெட்டியைத் திறந்து, சால்வையை எடுத்தார். அவளுக்கு அது பிடித்த மாதிரித் தெரியவில்லை. அவர் பெட்டியை மூடுவதற்கு முன்னால் ரயில் வண்டியின் சத்தம் கேட்டது. அம்மா குழந்தையைத் தூக்கிக் கொண்டு வேகமாக ரயிலில் ஏறினாள்.

அப்பா மேல் பர்த்தில் கஷ்டமின்றி ஏறினார். அம்மா கீழ் பர்த்தில் உட்காரக்கூடக் கஷ்டப்பட்டாள். வாழ்க்கை அப்பாவை விட அம்மாவை மிகுந்த களைப்புக்குள்ளாக்கி இருப்பதை ஒரே பார்வையால் யாராலும் புரிந்து கொள்ள முடியும். அப்பா மட்டும் இந்த விஷயங்களை கவனமாகப் பார்த்திருந்தால், மனம் போராடிக் கொண்டிருக்கிற அக்னிப் பரீட்சையிலிருந்து அவரால் தப்பித்திருக்க முடியும்.

தாத்தாவுடன்தான் படுப்பேன் என்று பேத்தி பிடிவாதம் பிடித்தாலும் சீக்கிரம் முடிவை மாற்றிக் கொண்டாள். இருட்டில் எல்லாக் குழந்தைகளுமே தாயின் சுகமான அரவணைப்பைத்தான் விரும்புவார்கள். நான் ஏன் சந்தேகங்களிலும், பதட்டத்திலும் மூழ்கியிருக்கிற அப்பாவின் பக்கத்தில் படுக்க விரும்பினேன்? அது எப்போதும் உலையின் துடிப்பாகவே இருக்கும். ரயில் விழித்துக் கொண்டு, தூங்கும் மனிதர்களுடன் முன்னே சென்றது.

இந்தப் பயணத்தின் விளைவு என்னவாக இருக்குமென்று முதல் முதல்முறையாக மகள் நினைக்க முயன்றாள். ஒரு வேளை வேறு மாதிரியாக இருந்து விட்டால்? அவள் அவருடைய மகள் இல்லையென்று நிரூபிக்கப்பட்டால்? அம்மா அப்பாவை முட்டாளாக்கி விட்டதாக அவள் வாழ்க்கையின் நாடித்துடிப்பு சொல்லி விட்டால்….

எங்கோ சாலையில் ஒரு வெள்ளை நிறக் காதல் அம்மாவிற்காகக் காத்திருந்து அவளுடைய நிழலாகி, அவள் முடியில் மறைந்து கொண்டு பிறகு அவள் கருப்பையில் இடம்பிடித்து தன் அழுகையால் அப்பாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி- அவளுக்கு இந்த மோசமான எண்ணம் வந்தது. பிறகு அம்மாவை அவளால் எப்படி வெறுக்க முடியும்? அம்மாவை எப்படி எதிர் கொள்வது என்று நினைத்தாள். அம்மாவை மட்டுமல்ல, அவளுக்கு யாரையும் வெறுக்கத் தெரியாது… பொறுக்க முடியாத வலியைக் கொடுத்தவர்கள் வெறுக்கப்படவில்லை. அவள் அம்மாவை வெறுக்க மாட்டாள். அவள் தந்த வலிகள் பாரமாகத் தலையில்… எந்த இருளிலும் அது வலிகளின் மெத்தையாகத்தான் இருக்க முடியும்

’மகிழ்ச்சியாக பயணம் அமையட்டும்“ என்று ரயிலில் எங்கே எழுதப்பட்டிருக்கிறது? கனத்தைக் குறைத்து, பயணத்தை வசதியாக்கும் எந்த யோசனையையும் அவள் பார்க்கவில்லை. ரயிலின் ஒவ்வொரு அசைவிலும் கனம் குறையவேயில்லை. அது அதிகரிக்கத்தான் செய்தது. அவள் தலையில் வலி மலையாக வந்து விழுந்தது..

அந்த ஒத்திராத பூங்கா

அந்த பக்கத்து பர்த்திலிருந்து இருட்டில் தன்னை நோக்கிப் பளபளத்த இரண்டு விழிகளை உணர்ந்து ஒரு குலுக்கலோடு விழித்துக் கொண்டுவிட்டாள். அது ஒரு திருடனாக அல்லது பெண்ணின் உடலில் பரவத் துடிக்கும் விருப்ப நெருப்பாக இருக்கலாம். அந்த விழிகளில் ஏதோ ஒன்றிருப்பதாக அவள் பயந்தாள். அவனுக்கு தாடியிருந்தது. திருடனின் தந்திரம் அந்த முடியில் தெரிந்தது.

ஜெய்சனுக்கும் மீசையுண்டு. ஆனால் அவனுடைய ஒவ்வொரு மயிர்க்காலலும் கருணை இருந்ததாக அவள் நினைத்தாள். அதனால்தான் தனக்குச் சுலபமாகக் கிடைத்திருக்கக் கூடிய பொறியியல் படிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அதிகம் படித்தால் அவனிடமிருந்து தொலைவில் இருக்க வேண்டி வரும். அவள் மேலே மேலே போக வேண்டியிருக்கும். அவள் மிக உயரத்திற்குப் போய் விட்டால் ஜெய்சனிடமிருந்து வெகு தூரம் விலகிவிட நேரலாம், என்று அவளுடைய குறைந்த அறிவு எச்சரித்தது. ஆனால் அவள் ஒரு பட்டப்படிப்புடன் நின்று விட்டால் அவளால் ஜெய்சனைப் பார்க்க முடியும். என்ன வகையான ஒரு தவறான வாதம்!

ரயில் அப்பாவிற்கு ஒரு தொட்டில் போல இருக்க, குழந்தை சிறு சிறு சேட்டைகள் செய்துவிட்டு நன்றாகத் தூங்கிவிட்டது. அம்மா இன்னும் தூங்கவில்லை என்பதை அடித்தட்டிலிருந்து வந்து கொண்டிருந்த ஆஸ்துமா மூச்சு சொன்னது.

இரவு இரண்டு மணியாக இருக்கலாம். அவளால் இப்போது தூங்க முடியாது. ரயில் எங்கேயிருக்கிறது என்று பார்ப்பதற்காக ஜன்னல் கண்ணாடியை லேசாகத் தூக்கினாள். தென்னை மரங்கள், பாக்கு மரங்கள், மற்றும் நிழலால் அந்த இடம் எதுவென்று அறிய முடியவில்லை. இருட்டில் எல்லா இடங்களும் ஒத்ததாகவே இருக்கும். பெண்ணுக்கும் மண்ணுக்குமிடையே ஒப்புமை அங்குதான் தொடங்கியது.

மெதுவான காற்று வந்தது. மரங்கள் விளையாடின. பூமிக்குக்கூட இருட்டில் ஏழு எழிலுண்டு. நிலமும் அதற்கேற்றாற் போல எங்கும் அழகாகவும் குளிர்ச்சியாகவுமிருந்தது. இருட்டில் எல்லாப் பெண்களுக்கும் ஒரே முகம்தான். கன்னிப் பெண்ணின் வாசம் பரத்தைக்கும் உண்டு. பிரம்மம் வரும் கணம் வரை, அரக்கன் கூட தேவகன்னியின் அழகுடையவன்.

அருணுக்கு யட்சினிகளைக் கண்டு பயம். வீட்டின் தென் பகுதியில் பலாமரத்தில் மலர்கள் மலரும்போது காற்று முழுவதும் மலர்களின் மணத்தால் நிரம்பியிருக்கும். அம்மாவின் வயிற்றில் தலையை வைத்துக்கொண்டுதான் அருண் தூங்குவான். மீசை வளர்ந்த பிறகும்கூட. ஏன் அப்படியிருக்கிறான் என்று அம்மா ஆச்சர்யப்படுவாள். அருண் இறந்த பிறகுதான் அப்பா அந்த மரத்தை வெட்டினார். அப்பாவின் முடிவுகள் எப்போதுமே அப்படித்தான் — காலம் கடந்து.

அம்மாவை அக்னியினூடே நடக்க வைக்கும் இந்தச் சோதனைகூட மிகத் தாமதமானதுதான். இந்த மாதிரியான சோதனைகள் இல்லாமல் ஒருவர் வாழ்க்கையைக் கடப்பதென்பது அதிர்ஷ்டம்தான்! அருண் இப்போது இருந்திருந்தால் அவன் மிக வலிமையற்று உணர்ந்திருப்பான். ஆனால் அவனுக்கு அந்தச் சோதனை தேவைப்பட்டிருக்காது. படைத்தவன் அவனுக்கு போதுமான அளவு கருமையைக் கொடுத்திருந்தான். கண்ணிற்கும், கண் இமைக்கும் இடையில் அவனுக்கு அப்பாவைப் போல மச்சமிருந்தது. அருண் அம்மாவின் சௌகர்யமான மண்டலம்.

“அப்பாவிற்கு அஞ்சு அக்காவைத்தான் ரொம்பப் பிடிக்கும்,” என்று அவன் அடிக்கடி சொல்வான், அவன் இளம் பருவம் அந்த நினைவிலேயே கழிந்தது.

தனது பச்சை ஸ்கூட்டரை எதிர்பார்த்து முகப்பில் காத்திருக்கும் அந்த சிறிய பாவாடையை அப்பாவால் தவிர்த்திருக்க முடியாது. அவர் தன் சட்டையைக் கழற்றிய அடுத்த கணம் அவள் பனியனோடும் முண்டோடும் நிற்பாள். அவர் கோயில் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது அவள் கல்லில் உட்கார்ந்து கொண்டு சுலோகங்களைக் கேட்டுக் கொண்டிருப்பாள். தேர்வுகளில் அவள் வாங்கிய அதிக மதிப்பெண்கள், தன் விளையாட்டிலும் சிரிப்பிலும் அவள் காட்டிய கட்டுப்பாடு… அப்பா தவிர்க்க முடியாமல் அவளை நேசித்தார்.

“அவள் ரோஜாவைப் போன்றவள். அவள் எனக்கானவள் என்றிருந்தால்…” என்று தன் நண்பர்களிடம் அவர் சொல்வதைக் கேட்டிருக்கிறாள்.

தன்னுடையவன் என்று நினைத்த அருணை தூரத்தில் வைக்க அவருக்குப் பல காரணங்கள் இருந்தன எனினும் தன் மகளாக நினைக்காத அஞ்சனாவின் மேல் அதிகம் அன்பு வைக்க முடிந்தது.

கருப்பு, வெள்ளைக்கிடையே, தேர்வில் அதிக, குறைவு மதிப்பெண்களுக்கிடையே, எண்ணிக்கை மற்றும் மிட்டாய் அளவுகளுக்கிடையே, ஆழமான முத்தங்கள் மற்றும் அன்பு வெளிக்காட்டுதலினிடையே எல்லா இடங்களிலும் அருணால் அந்த வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது. மகளைவிட, தன் மகன் ஆற்றலில் மிகப் பின்தங்கியிருந்ததாக அப்பா நினைத்தார். வெறுப்பிலிருக்கும் போது அருண் தன் முஷ்டியை இறுக்கிக் கொண்டு, “நீ சிவப்பான அப்பாவின் குழந்தை. என் அப்பாவின் குழந்தையல்ல,“ என்று சொல்வான். அந்த வார்த்தைகளைக் கேட்பதைவிட அவன் முன்னால் தோற்று நிற்பதே மேல். அதனால் மிகச் சிறிய சண்டைகளிலும்கூட அவள் தோல்வியை ஒப்புக் கொள்வாள்.

தோல்வியை ஏற்கும் பழக்கம் அவளுக்கு அங்குதான் தொடங்கியது, தன்னைத் தோல்விப்படுத்திக் கொண்டால், மற்றவனால் ஜெயிக்க முடியும். இந்த பழக்கம்தான் ஜெய்சனை அவள் மீது ஏறி நடக்க வைத்தது. தன் எண்ணக் கூரைகளை வைத்துக் கொண்டு மாளிகைகளைக் கோருவது.

அருணுக்காக அவள் பரிதாபப்படுவது வழக்கம். தான் கருப்பு என்ற வலியில் வாழும் ஒரு குழந்தை. வீட்டில் எல்லோருக்காகவும் அவள் இரக்கப்பட்டாள். அப்பாவிற்குச் சிவப்பு பிடிக்கும், ஆனாலும் ஒரு சிவப்புக் குழந்தை பிறந்தபோது, அதிர்ந்த அவர் அந்தக் குழந்தை தன்னுடையதில்லை என்று நம்பினார். அம்மாவோ வண்ணங்களின் விளையாட்டில்தான் பலியான கதையைச் சொன்னாள் – வெள்ளை கருப்பு இடையில் அவர்கள் எல்லோரும் வலிமையற்ற பாத்திரங்கள். அங்கு கருப்பும்,வெள்ளையும் எப்போதும் சண்டையிட்டன. அந்த மேடையில் அப்பா, அம்மா, அருண், அஞ்சனா எல்லோரும் பார்வையாளர்களே. அது ஒரு கருப்பு வெள்ளை வீடு.

அருணின் பேரில் எல்லாச் சொத்துக்களையும் அப்பா மாற்றியபோதுதான் அம்மா எதிர்ப்புத் தெரிவித்தாள். மதம், ஜாதி பார்க்காமல் மகள் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதால்தான் அவளுக்கு அந்த தண்டனை என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அப்பா அந்த தண்டனையை கடைசி வரை நிலுவையில் வைத்திருந்தது அஞ்சனாவுக்குத் தெரியும். சிவப்பான மகளாக இருந்ததற்கு. தன் கோபத்தைக் காட்டி அந்தச் சண்டையை முடிவு செய்யும் அவருடைய எளிய முயற்சி. அவருடைய எல்லா முடிவுகளையும் போல அதுவும் தாமதமாகத்தான் வந்தது. ஜெய்சன் கொள்கை சார்ந்த மனிதன். அதனால் அந்த நேரத்தில் எதுவும் பிரச்னை ஏற்படுத்தவில்லை.

அப்பா தன் சொத்துக்கள் அனைத்தையும் அருணின் பெயருக்கு மாற்றம் செய்தபிறகு அவன் அழுகையோடு சொன்னது: அவளுக்குப் பாதி கொடுத்து அவளோடு சண்டை போடுவது எனக்கு சந்தோஷமே. எல்லாவற்றையும் சொந்தமாக்கிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. அப்பாவுக்குச் சொந்தமான எதுவும் எனக்குத் தேவையில்லை.” ஆனால் பிறகு அவன் நண்பர்களோடு சேர்ந்து ஆடம்பரமாக அந்தப் பணத்தைச் செலவழித்தான். ”இது நம் மகளின் சாபம்தான்,” என்று அம்மா சொன்னாள். தன் நண்பர்களுடன் பெங்களுர் சென்றிருந்த அவன் விபத்தில் இறந்த செய்தியைக் கேட்டு அப்பா கண்ணீர் சிந்தவேயில்லை என்று அம்மா சொல்வது வழக்கம்.

“அவர் வினோதமான மனிதர்.அவரால் யாரையும் நேசிக்க முடியாது,” என்று அம்மா சொல்வாள்.

அஞ்சனாவிற்கு அருணைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. உள்ளேயிருந்த பர்சில் அவன் அவளைப் பார்த்துச் சிரித்தான். எப்போதுமே சண்டை போடுவது அவன் வழக்கம், தன் வாழ்க்கையைப் பறித்துக் கொண்டதற்காக அவன் கடவுளோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கலாம்.

அருணின் இறப்பிற்குப் பிறகு அம்மா தூக்க மாத்திரை போட்டுக் கொள்ள ஆரம்பித்தாள். அவளை ஆறுதல் படுத்திக் கொள்ள இப்போது எதுவுமேயில்லை. அதனால்தான் ஜெய்சன் எங்கேயிருக்கிறான் என்று அம்மா கேட்டபோது அவள் பதில் சொல்லவில்லை.

ஜெய்சன் ஆதரவற்ற பெண்களுக்கு உதவுவதாக அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். அதனால்தான் அவனுடைய எளிய வாழ்க்கைக்குக் குடை பிடித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் துணி ஆலைகளும், சமையல் தொழிலும் ஒரு மேலுறைதான். எல்லாம் இப்போது தலையைச் சுற்றிக் கொண்டிருக்க, ஜெய்சன் எங்கிருக்கிறான் என்பது அவனுடைய மனைவிக்குக் கூடத் தெரியாது. அவனுடைய எல்லாச் செயல்களும் நல்லவை என்ற வண்ணப் பூச்சு செய்யப்பட்டவை. தன் கால்களை ஊன்றிக் கொள்ள அவனுக்கு மற்றொரு இடம் தேவை. இன்னொரு இடம். தான் ஒரு பெரிய முட்டாள் என்று அவன் உணரும்போது, முதல் முறையாக களைப்படைவான். பிறகு நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.அவன் தனியனாகி விடுவான். தன் மனைவிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாதது மிகப் பெரிய பாவம் என்று அவன் உணர்வான். வாழ்க்கை முழுவதும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் என்ற சத்தியம்.பசியில் மனைவியைத் தவிக்க விட்டு உறிஞ்சுவதற்கு பாலில்லாத நிலையைக் குழந்தைக்குத் தந்து பாவங்கள் செய்தவன் அதற்கான அக்னி பரீட்சையில் இடப்படுவான். அவன் எண்ணங்கள்! அவன் வாழ்க்கை நாசமாகலாம்!

பிறகு ஏன் அவள் மீண்டும் மீண்டும் அவனிடம் போகிறாள்? என்ன விந்தை! எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவள் ஏன் வந்து விடக்கூடாது? அவளால் முடியாது. தொலைவில் தன்னைத் தலை முழுகிவிட்டு வந்தாலும் எஜமானனை மீண்டும் மீண்டும் கண்டு பிடித்து ஓடும் நாய்க்குட்டி போல அவள் இருந்தாள். சிறிய அளவு வாழ்க்கை மிச்சமிருந்தாலும் அவள் ஜெய்சன் இருக்குமிடத்திற்குத்தான் போவாள்.

அப்பாவின் மகள் அவள் என்பது நிரூபிக்கப்பட்டால் தன் சாவில் அருண் விட்டுப் போன பணம் அவளுக்குத் திரும்ப வரும். அதை ஜெய்சனிடம் அவள் சமர்ப்பிப்பாள்.அவன் அதை வைத்துக் கொண்டு உலகக் காதலுக்கு புதிய சாதனங்கள் கண்டுபிடிப்பான். ஒரு நாள் போலீஸ் வரும். அதற்கு முன்னால் அவர்கள் அவளைக் கிழிப்பார்கள். கணவனின் வாழ்க்கையைச் சரிப்படுத்தாத மனைவியின் செயல்களை அளந்து பார்ப்பார்கள். தங்கள் சொந்த உடலோடு அந்த அளவைகளை வைத்துத் திருப்தியடைவார்கள். அவளுடைய பலவீனமான உடல் அவமதிப்பிற்கும் நினைவிற்கும் சரித்திர அடையாளமாக இருக்கும். நான்கு மாதக் கர்ப்பிணியாக இருக்கும் அவன் மனைவி மேல் விழும் அடிகளை தூரத்திலிருந்து அவன் அறிவான். அவன் கவலைப்படமாட்டான், ஏனெனில் அவன் வேறு யாருடைய கண்ணீரையோ துடைப்பதற்கு இருக்கிறான். அவளுடைய குழந்தை போலீஸ்காரனின் முகம் கொண்டதாக இருக்கிறது என்று யாரும் சொன்னதில்லை. ஜெய்சன் அப்பாவைப் போல பலவீனமானவனாக இருந்திருந்தால் அப்படி நினைத்திருக்கலாம்.
.
பக்கத்து பர்த்திலிருந்த அந்தக் கண்களில் இருக்கும் பளபளப்பு அதிகமானது. அந்த மாதிரிக் கண்கள் பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். அதில் அதிக நெருப்பு இருந்தது. அவள் ஜெய்சனைப் பற்றி நினைத்தாள். ஆணின் கண்களில் இருக்கும் நெருப்பின் வாழ்க்கை எவ்வளவு குறுகியது. அது அவளைச் சிரிக்க வைத்தது.தூரத்திலிருந்து பார்ப்பது ,ஒரு பெண்ணைக் கற்பழிக்கும் பலம் ஒன்றை வைத்துத்தான்.அந்தப் பெண் அருகில் வரும் கணம் பலவீனம்,சோர்வு, நம்பிக்கைத் தொலைவு என்று அது பலவீனமாகி விடுகிறது.ஜெய்சனின் திட்டவட்டங்கள் பொதுவான விதியாக இருக்கத் தேவையில்லை. எல்லாவற்றிற்குமே ஜெய்சன் தனது சொந்த விதிகளை வைத்திருந்தான். அவன் கண்களின் வெளிச்சம் என்பது அந்த விதிகள்தான், அது அவனை கருப்பான இருட்டில் தள்ளி விட்டது..

அந்தத் தீர்மானிக்கப்பட்ட ஒன்று

எந்தக் காலத்திலும் எதற்கும் உத்தரவாதமில்லை. முதல் பயம் ஓலமிடும் வயிற்றிற்குச் சிறிது சாப்பாடு கிடைக்குமா என்பது. அவன் அம்மாவின் இரண்டாவது கணவன் வெளியே போன பிறகு தனக்கு ஒரு டம்ளர் தேநீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது.

சதாசிவன் கதகளி கலைஞனான மதனபாரம்பில்லின் மகனா அல்லது சமையல் செய்யும் போத்தியின் மகனா என்று அண்டை வீட்டினர் ஆச்சர்யப்படுவார்கள்! அவனால் பள்ளிக்கூட கட்டணத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்ட முடியுமா என்பது மற்றொரு பயம். அவனால் தேர்வு எழுத முடியுமா என்பது இன்னொரு பயம். பயம் அவனுடைய நிரந்தரமான நண்பன். பத்தாம் வகுப்பை முடித்த பிறகு படிப்பதற்கு எந்த வழியுமில்லை. அவன் கணக்குப்பிள்ளையானான். சம்பளம் கிடைக்குமா, படிப்பைத் தொடர முடியுமா என்று பயந்தான். ஒரு பட்டம் வாங்கினான். வேலை கிடைத்த பிறகும் அவனுக்கு நம்பிக்கையில்லை. அவன் கறுப்பாகவும், ஒல்லியாகவுமிருந்ததால், எந்தப் பெண்ணும் கவரப்பட்டு வரமாட்டாள் என்பது அவனுக்குத் தெரியும். அதனால் அது அவன் வழியல்ல. வேலை கிடைத்து, பிரசன்னாவின் இடத்திற்கு வந்த பிறகும், மனிதர்களின் முகம் பார்த்துப் பேசும் தைரியம் அவனுக்கில்லை. பிரசன்னாவின் தாய் அவனிடம் வந்து தன் மகளைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னபோது வியப்படைந்தான். ”ஒரு தாய் தன் மகளைத் திருமணம் செய்து கொண்டு அவளைக் காப்பாற்றும்படி கேட்டால் அதில் ஏதோ சிக்கல் இருக்கிறதல்லவா?” என்று மக்கள் கேட்டனர்.

அந்தப் பெண் கருப்பாக இருந்தாள். அவள் உடல் பொங்கி வழிந்தது. அவன் கண்ணில் முதலில் பட்டது பெரிய மார்பகங்கள்தான். அதன் பிறகு அந்த மறைமுகமான சிரிப்பு. அவள் சிரித்தபோது எகிறு ஒளிர்ந்தது. ஒரு பல் எகிறின் மேலிருந்தது.

அவனுக்கு அவளைப் பிடித்தது. அவள் கணவனாக ஆசைப்பட்டான். அவள் கர்ப்பிணியாக இருந்தால்கூடப் பரவாயில்லை, அவளை மன்னித்து விடுவான், தனது துக்கங்களை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அவன் அந்த அளவிற்கு பலவீனமானவன்.

ஆரம்பத்திலேயே அவன் ஆத்மா எரிந்தது. பிரசன்னாவின் மூச்சே இது அவளுக்கான வாழ்க்கையில்லை என்று சொல்வதாக இருந்தது. அவன் மனதில் நிரம்பியிருந்த காதல் துருவானது. அவன் உணர்ச்சிகள் ஆவியானது. தான் பலவீனமானவனாக நினைக்கப்படுவோம் என்று பயந்து அமைதியைத் தொடர்ந்தான். கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டான்.

உண்மையாக அவர்கள் ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்குவதற்கு முன்னாலேயே அவள் கர்ப்பிணி என்று அவனுக்குத் தெரியும். தனது சந்தேகங்களை அடக்கிக் கொண்டான். அவளைப் பார்த்தபோது அதிர்ச்சியானான். பிரசன்னா ஒரு கணம் கூட சந்தோஷமாக இல்லை. வெட்கக் கேடான ஒன்றைச் சுமந்து கொண்டிருப்பது போல அவளிருந்தாள்.

“பிரசன்னா என்று உனக்கு யார் பெயர் வைத்தது? அது உனக்குப் பொருந்தவே பொருந்தாது,” என்று அவன் நகைச்சுவையாகச் சொல்ல அவள் கண்கள் கோபத்தில் சிவந்தன. அதற்குப் பிறகு அவன் நகைச்சுவையாகப் பேசவேயில்லை.

குழந்தை பிறந்த பிறகு, அதன் அப்பாதான் சந்தோஷமாகவும், உற்சாகமாகவுமிருந்தார். பிரசன்னா பிணம் போல உணர்வற்றிருக்க அவன் மனம் மீண்டும் சந்தேகங்களால் நிரம்பியது.

அவன் மகள் ஒரு ரோஜா மலராக வளர்ந்தாள். ”இது சதாசிவத்தின் மகளா?” என்று அவர் அலுவலகத்தில் யாரோ கருத்துச் சொல்ல, அந்த இடமே சிரிப்பால் நிரம்பியது.

பிரசன்னாவிற்கு வேலை கிடைத்தபோது ,அவன் எவ்வளவு சந்தோஷப்பட்டான் என்று அவளுக்குத் தெரியாது. அவளுடைய அலுவலகத்திலிருந்த இளைஞர்கள் மற்றும் வலிமையானவர்களுக்கு அந்த வயதில் ஒரு தலைவலியாக இருந்திருக்கலாம். ஆனால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆளில்லை என்பதால், அவளை வேலையை விடச் சொன்னான்.

மகளைப் போல அவருடைய மகன் இல்லை. அவனுக்குச் சிரிக்கத் தெரியாது, இரக்கமோ, அன்போ கிடையாது, ஒரு சந்தேகக் குழந்தை. மகன் வளரும்போது அவன் எந்த விபத்தில் சிக்குவானோ என்று பயந்தார் அவர். அவன் மோட்டார் விபத்தில் இறந்து போனான். பிணக்கிடங்கறையில் அவன் உடலை எட்டிப் பார்த்தபோது அந்த நீண்ட கால பயம் முற்றுப் பெற்றது.

அவர் மகள் இன்னொரு பயம். சோர்வான முகத்துடனிருந்த பிரசன்னாவைக் காயப்படுத்த தன் மகளிடமிருந்து தன்னை தூரப்படுத்திக் கொள்ள முயற்சித்தார். ஆனால் அவள் நெருங்கி நெருங்கி வந்தாள். அருணின் மறைவிற்குப் பிறகு, அது முடிந்தது. அவர் வாழ்க்கையில் மிச்சமுள்ள பயம் மகள்! இல்லை, அவள் ஒரு விடுகதை. அவர் அதையும் விடுவித்தாக வேண்டும். அந்தச் சிறிய நியாயம் வாழ்க்கைக்குத் தேவை. அவள் தன் மகள்தானா என்பதை அவர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஏன் சந்தேகங்களோடு வாழ்ந்து உன்னை எரித்துக்கொள்ள வேண்டும்? சோதனை செய்து விடலாம். நீ திருவனந்தபுரம் போக வேண்டும், அவ்வளவுதான்,” தாசில்தார் சுகுமாரன் ஆலோசனை சொன்னார். முதலில் அது பற்றி தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்வதே அவருக்கு கஷ்டமாக இருந்தது. பிரசன்னாவை சமாதானப்படுதுவதும்தான். தன் மகளிடம் இதை எப்படிச் சொல்வதென்று பயந்தார். அவர் கலக்கத்தைப் பார்த்து, “உங்களுக்கு அப்படியொரு பயமிருக்குமானால் நிச்சயமாக நாம் போயேயாக வேண்டும். நம் நோய்களுக்கான சிகிச்சைக்காகப் போகிறோம். இந்தப் பயணம், உங்கள் ஆயுள் முழுவதும் நீங்கள் அனுபவித்த வேதனைகளுக்கான காயத்தை ஆற்றுமெனில் நாம் கண்டிப்பாகப் போக வேண்டும்…” என்றாள்.

அதுவரை அழுது கொண்டிருந்த பிரசன்னா மகள் இதைச் சொன்னபோது சமாதானமானாள். மலை போன்ற இந்த விசாரத்தை அவர்கள் கடந்தபிறகு, நிழலும், வசதியும் அவர்களுக்காகக் காத்திருக்கலாம். ஓர் ஆழமான குழியாக இருக்கலாம். அப்பா இறந்த பிறகு யாரோ ஒருவர் அந்த ஈர உடையணிந்து சடங்கைச் செய்யலாம். அவள் தன் கைகளைத் தட்டிக் கொண்டு காக்கையை உணவிற்காக அழைக்கும்போது அவள் அப்பாவின் மகள் என்பதில் எந்தச் சந்தேகமுமிருக்காது. காகம் ரத்தவழிச் சடங்கை மட்டுமே ஏற்றுக் கொள்ளும். அது ஒரு சவாலாக எழுமானால் ,எந்த பயமுமின்றி அது அந்தமுக்திக்கான சோற்றைச் சாப்பிட வரவேண்டும்.

எல்லா விசாரணைகள் மற்றும் சோதனைகளுக்குப் பிறகு முடிவு வேறு விதமாக வந்தால்… அவருடைய உடலில் பாயும் ரத்தம் மகளின் உடலில் பாயாவிட்டால்… அப்பாவின் விழிகள் கரிக்கட்டையாக எரிந்து புகை வரும். அம்மா, மகள், பேத்தி எல்லோரும் அந்த அக்னியில் எரிந்து போவார்கள். அது நிச்சயம்.திரும்பி வரும் பயணத்தில் அவர்கள் உடனிருக்க மாட்டார்கள். அவருடைய முடிவுகளின் நெருப்பில் சாம்பலாகி விடுவார்கள்.

கீழ் பர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த அம்மா வேகமாக எழுந்து உட்கார்ந்து அப்பாவைப் பார்த்தாள். அப்பாவின் கண்களில் தெரிந்த உறுதியை அம்மா கவனித்தாள். ஒரு நெருப்பு அங்கு எரிந்தது. அவர் சந்தேகங்களோடிருந்த ஒரு பலவீனமான மனிதனில்லை என்பதையும், ஓர் உறுதியான தன்மையோடு அவரிருப்பதையும் அம்மா உணர்ந்தாள். சாதாரணமாகச் சந்தேகப்படும் தாமஸ் இல்லை. ஆனால் நியாயத்தை எதிர்நோக்கும் பொறுப்புள்ளவன். அவள் பயத்தில் நடுங்கினாள்.

கருப்பும் வெள்ளையும்.

கண்களை இறுக மூடிக் கொண்டு தூங்குவது போல நடிப்பது அவள் பழக்கம். அவளுடன் படுத்துக் கொண்டவர்கள் தூங்கிய பிறகு, அவள் கண்களைத் திறந்து கொண்டு இருட்டை விழுங்குவாள். கடந்த முப்பது வருடங்களாக இதுதான் அவள் பழக்கம். தூக்க மாத்திரைகளின் அளவு அதிகரித்துக் கொண்டு போனாலும் அவளால் தூங்க முடியவில்லை. அவள் கண்களைத் திறந்து கொண்டு படுத்திருந்தால், யாரையோ பார்ப்பதற்காக அவள் விழித்திருக்கிறாள் என்று சந்தேகப்படுவான். இப்படியான ஒரு கணவனுடன் அமைதியாக எப்படித் தூங்க முடியும்? பிறகு ஒரு குழந்தையைப் போல எப்படி அவள் சிரித்து விளையாடியிருக்கிறாள் என்று நினைத்துப் பார்ப்பாள். இந்த நாட்களில் அதுவும் கூட அமைதி தரவில்லை.

சிநேகிதிகள் அவளை காக்கைக்குஞ்சு என்று அழைப்பார்கள். அவள் வளர்ந்த பிறகு அவர்களோடு சண்டை போட்டிருக்கிறாள். சிவப்பான குழந்தை தனக்குக் கிடைக்கும் என்பாள்.

“ஆமாம் ஆமாம். நீ கறுப்பு.உன் அம்மாவும் கறுப்பு. உனக்குக் காக்கையின் நிறத்தில் தான் குழந்தை கிடைக்கும்,” என்பார்கள்.

பள்ளிக்குச் செல்லுமபோது ஆலமரத்தினடியில் இருக்கும் கணபதியிடமும் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் சாமியாரிடமும் “கடவுளே, அவர்கள் சொல்வது மாதிரி ஆகி விடக்கூடாது. தயவு செய்து எனக்குப் பனி வெண்மையில் ஒரு குழந்தை கொடு,“ என்று வேண்டிக் கொள்வாள்.

குழந்தையின் தந்தை சிவப்பாக இருக்க வேண்டும்— அந்த ஆசை அவளுக்குமேலும் சில காலம் இருந்தது; பெண்களுக்கு இந்த மாதிரியான ஆசைகள் உருவாகும் காலத்தில். தனது சிறு வட்டத்தில், அவள் தன் காதலனாக ஒருவனைக் கண்டாள். அந்தக் கோயிலுக்கு வந்த பூஜாரி. அந்தச் சிறு வட்டம் போலவே அவள் உலகமும் சிறியதுதான். கோயில் படிகளின் உயரம் அளவு போன்றதுதான். கோயில் நிலத்தின் அகலம் போலத் தான் அகலமும்.

பூஜையில் கவனமின்றி, மேளமடிப்பவரை பார்ப்பதாக, மந்திரங்களைச் சொல்லும்போதுகூட அவன் மனம் வேறெங்கோ இருப்பதாக பூஜாரியைப் பற்றி பல வதந்திகள் எழுந்தன.இந்த வதந்திகள் பூஜாரியை அவள் காதலிப்பதான நிலையை உருவாக்கியது. கோயில் பூஜையின் போது தனக்குக் கிடைத்த பணத்தை வைத்துக் கொண்டு படித்தான்.

அவளை விரும்பியதாக அவன் சொன்னதில்லை. ஒரு நாளில் இரண்டு முறை, அவள் பூஜைக்கு வருவாள். கண்களை மூடிக் கொண்டு தன் காதலுக்காக வழிபடுவாள். அவனுக்கு அது தெரியும். யார்க்கும் தராத தனது சிரிப்பை அவளுக்குப் பிரசாதமாகத் தருவான். அந்தச் சிரிப்பு, நீண்ட குறிப்பில் அவன் வேறெங்கோ போனபோது, முடிந்தது. அவள் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு இது பெரிய நகைச்சுவையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் சதாசிவத்தால் உரிமை கோரப்படாத ஆறுதலாக இது அவளிடம் தங்கிவிட்டது. அதற்குப் பிறகு அவள் அடிக்கடி அது பற்றி நினைத்தாள். அவள் உலகம் பெரிதாக இருந்திருக்கும்,இரும்பின் உறுதி போல யாராவது அவளைக் காதலித்திருந்தால். கண்களை மூடிக்கொண்டு அவன் பின்னால் போயிருப்பாள். பலவீனமான பூஜாரியைச் சுற்றி அது வட்டமிட்டிருக்காது. ஒரு மனிதனோ அல்லது ஒரு வழியோ கிடைக்கவேயில்லை. அதுதான் அவளது மிகப் பெரிய துக்கம். பூஜாரி போய்விட்ட சில வாரங்களுக்குப் பிறகு சந்திரனின் வரன் வந்தது

.”நம் குமரன்சிரபரணிக்கு அடிக்கடி வரும் பிரசன்னாவைப் பிடித்திருந்தால் அந்த வரனை முடிக்கலாம்,” என்று டெல்லியிலிருந்து சந்திரன் தன் அம்மாவிற்குக் கடிதம் எழுதியிருந்தான்.

பரணி திருவிழாவிற்குப் போனபோது அவள் சந்திரனை நாலைந்து தடவை பார்த்திருக்கிறாள்.அவன் அம்மிணி அம்மாயியின் வீட்டுக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து மீசையைச் வரைந்து கொண்டிருப்பான். சந்திரன் பார்க்க அழகாக இருப்பதாகவும், நல்ல வேலையிலிருப்பதாகவும் எல்லோரும் சொல்வார்கள்.ஆனால் அவளுக்கு அவனோடு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விருப்பமில்லை. அம்மாயி அந்த வரனைப் பற்றிப் பேச்செடுத்தபோது அவள் தன் விருப்பமின்மையைச் சொன்னாள்.

“நீ இதற்காக ஒருநாள் வருத்தப்படுவாய்,” அம்மாயி சொன்னாள். அதற்குப் பிறகு அம்மா அரக்கியாகி விட்டாள். ”உன் மண்டை கர்வத்தால் நீ அதிர்ஷ்டமில்லாதவளாக, வெட்கக் கேடாக இந்த வீட்டிலேயே இருப்பாய்,” என்றாள். அளவில்லாத கோபம் வந்தபோது, அவள் கால்களை இரும்புக் கம்பியால் சுட்டுவிட்டாள்.

சதாசிவன் அந்தக் கிராமத்திற்கு வேலை மாற்றலாகி வந்தபோது, ”தயவு செய்து அவளுக்கு உதவி செய்யுங்கள் சார்,” என்று வேண்டிக் கொண்டாள்.

சதாசிவன் இருண்ட முகத்தோடு வீட்டிற்கு வந்தான். தன் இடது கண்ணால் அவளைப் பார்த்தான். ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை. பிரசன்னாவிற்கும் பேச ஒன்றுமில்லை. தன் விருப்பமின்மையை அவள் வெளிப்படுத்தியிருந்தால் ஒரு பெரிய தண்டனை கிடைக்குமென்பதில் அவளுக்குச் சந்தேகமில்லை.

அடுத்த வாரம், வீட்டின் முன்னால் ஒரு பெரிய பந்தல் எழுந்தது. பெரிய கண்கள், சிவப்பான நிறம், சிரிக்கும் முகம் ஆகியவற்றைத் தான் அவள் விரும்பினாள். அவள் ஆசைக்கு ஒரு தண்டனையாகத்தான் சதாசிவன் இருந்தான். திருமண நாள் நெருங்க நெருங்க கரிக்கட்டையைத் தன் மகளுக்குத் தந்து விட்டோமென்று அம்மா வருந்தினாள். அவளுடைய அவசர முடிவு மகளின் தலைவிதியை அழித்து விட்டது என்ற அந்த வலி சாவு வரை அவளுக்கிருந்தது.

அவள் பட்டத் தேர்வு இன்னமும் முடியவில்லை. தான் கருவுற்றிருக்கிறோமென்று தெரிந்தபோது அவள் ஆச்சர்யமடைந்தாள். குழந்தைகள் ,அன்பான பெற்றோர்களுக்குக் கடவுள் தரும் பரிசு என்று நினைத்தாள். அந்த நம்பிக்கையும் விரைவில் போய்விட்டது. காண்பதற்கு கனவு என்று எதுவுமில்லாமல் அவள் உள்ளம் வெற்றிடமாகி விட்டது.

காதலிக்க ஒரு காரணம், அந்தக் காதல் உயிரை உருவாக்குவது— இந்த நிலைதான் ஒருவரை வாழ வைக்கும். வேர்கள் மனிதனுக்கு மனிதன் நீளும். அவர்கள் பூமிக்குள் வளர்ந்து பூமியைத் தொட்டு வேர்களாகப் படர்வார்கள். அந்த வேர்கள்தான் மனிதர்களை பூமியில் இருத்தும் என்று அவள் நினைத்தாள். அந்த நம்பிக்கையும் சதாசிவத்தால் நடுக்கம் கண்டுவிட்டது. அந்த நாட்களில் அவள் பூமியில் எதையும் நேசித்ததில்லை. வாசனைகள், அதிசயங்கள். நிறங்கள். அவள் எல்லாவற்றையும் வெறுத்தாள்
.
அவள் தேர்வுகளைத் தடுப்பது போலவே வயிறு பெரிதானது. சிவப்புக் குழந்தைக்கான விருப்பம்கூட அவளுக்கில்லை. அவள் அதை விரும்பவில்லை. அவள் முகம் ஏன் சோகத்தால் நிரம்பி இருக்கிறதென்று சதாசிவன் கேட்கவில்லை. குறிப்பான பார்வை, முணுமுணுப்பு ஆகியவற்றால் அவள் வேதனையை அவன் அதிகப்படுத்தவே முயன்றான். காதலற்ற பெற்றோரின் குழந்தையாக ஏழாம் மாதத்திலேயே அது பிறந்துவிட்டது.

குழந்தையை அவள் கையில் கொடுப்பதற்கு முன்னால் பல முறை மருத்துவர் அதை முத்தமிட்டார். ”அவள் புத்திசாலிக் குழந்தை,” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். குழந்தை சிவப்பாக வளரத் தொடங்கிய போதே அப்பாவின் சந்தேகங்களும் வளர்ந்தன.

அதன்பிறகு அம்மா அவளை எல்லையின்றி நேசித்தாள். குழந்தை அதிர்ஷ்டத்தோடு வந்ததாக நினைத்தாள். பல மாதங்களுக்கு முன்னால் எழுதின எழுத்துத் தேர்வினால் அவளுக்கு வேலை கிடைத்தது. கணவனை விட அவளுக்குச் சம்பளம் அதிகம். அதனால் தானோ என்னவோ மூன்று நான்கு மாதங்களில் வேலையை விட வேண்டியிருந்தது.

அவள் உடல் முழுவதும் ரணங்கள்— செங்குத்தாக, குறுக்காக, சாய்வாக – அவமானம், புறக்கணிப்பு, வெறுப்பு, சோம்பல்— அந்தக் காயத்தின் முகம் பல வழிகளில் மாறிக் கொண்டேயிருந்தது. சதாசிவன் ஒருபோதும் சத்தமாகக் கத்தியதோ திட்டியதோ இல்லை. யாருமே செய்ய முடியாத அளவுக்கு கூர்மையான கத்தியை மெதுவாகச் சொருகுவார். தன் மகளின் தந்தை முகமற்ற ஊர் சுற்றியோ என்று பயந்தார். அந்தத் தீயில் தானும், மற்றவர்களும் எரிவதில் அவர் சந்தோஷம் அடைந்தார். மகன் பிறந்த போதும் கூட அவர் பயம் குறையவில்லை. தன்னுடையதில்லை என்று நினைத்த மகளை மிக நேசித்தார், மனைவியை அதில் தோல்வி அடையச் செய்ய முயற்சித்தார்.

அமைதி அல்லது சந்தோஷம் அவருடைய இரு குழந்தைகளுக்குமே தெரியாது. தனக்கு ஏதோ குறைகள் இருப்பதாக நினைத்த மகன் அவமானப்பட்டு இறந்து போனான். மகள் அபாயத்திலிருந்து விலகி விலகி அவமதிப்பிலிருந்து தப்பிக்க முயன்றாள். தனது அவமதிப்பிலிருந்து தன்னை தேற்றிக் கொள்ள முட்டாள்தனமாக வலியைத் தழுவிக் கொண்டாள். தன் அம்மாவிற்கு ஆபத்தான தனது வழிமுறைகள் எதுவும் தெரியாதென்று நினைக்கிறாள். அம்மாவைப் பாதிக்கும் எந்த விஷயத்தையும் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை. தனது ரகசியங்களால் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தாள். தனது வேதனையை யாரும் தெரிந்து கொண்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். தன் தட்டுமாற்றத்தை அம்மா கவனித்து விட்டாள் என்பது கூட அவளுக்குத் தெரியவில்லை.

தன் மகளை ஜெய்சன் எங்கே கட்டிப் போட்டிருக்கிறான் என்று தெரிந்தாலும் அம்மாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முன்பு அவள் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தெருவில் நடக்கும்போது, சாலையில் உள்ளவர்கள் அம்மா கருப்பு, மகள் சிவப்பு, பேத்தி அதிசிவப்பு என்பார்கள். அதைக் கேட்கும் போது அவளுக்குச் சிறிது பெருமையாக இருக்கும். அதை குறிப்பிட்ட ஒரு தொனியில்தான் சொல்வார்கள். அது இன்னும் அவள் காதுகளில் எதிரொலித்தது– அம்மா கருப்பு, மகள் சிவப்பு, பேத்தி அதிசிவப்பு.

கீழ் பர்த்தில் பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறு குழந்தையைப் பார்த்தபோது ,மனம் எரிந்தது – அப்படியொன்றும் அதிசிவப்பில்லை. ரணங்களின் இடையே ஒரு சிறிய நடுக்கம்.

கனவு நடையாளி

அந்த நாள் தொடங்கியது அவ்வளவே. ஆனால் ரயிலுக்குள்ளே பதட்டம் சீக்கிரமாகவே தொடங்கி விட்டது. ஒவ்வொருவரும் பையைத் திறந்து ,மூடிப் பொறுமையின்றி இருப்பார்கள். எந்த நிலையத்தில் ரயில் நிற்கப் போகிறதென்று வெளியே எட்டிப் பார்ப்பார்கள். இதற்கிடையே, வழக்கமான பயணிகளும், ரயில் பாஸ் வைத்திருப்பவர்களும் ஏறி, தூங்குவதைச் சாத்தியமில்லாமல் ஆக்கி விடுவார்கள். எல்லோரும் விழித்தேயாக வேண்டும்.

இருட்டில் அவளை காமப் பார்வை பார்த்த அவன், இப்போது வெளிச்சத்தில் சாதாரணமானவன் போலத் தன் உடைமைகளைக் கட்டி வைத்தான். அஞ்சனாவிற்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. இப்போது அவன் சரியான குடும்பஸ்தன். அவன் பை முழுவதும் மனைவிக்கும் குழந்தைகளுக்குமான பரிசுப் பொருட்களை உள்ளடக்கியதாக இருக்கலாம்.

ஒரு கணவனும் ,மனைவியும் புற்றுநோய்ச் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் போனார்கள்.அவர்கள் மிக நிதானமாக இருந்தனர். சூழ்நிலை அவர்களுக்கு சிறிதும் பொருட்டேயல்ல. தன் தலையிலிருந்த துண்டு விலகியபோது அவள் எரிச்சலடைந்தாள். அவள் குழந்தை சில தடவை அந்தப் பெண்ணைப் பார்க்க அவள் குழந்தையைப் பக்கத்தில் அழைத்து சாக்லேட் தந்தாள். குழந்தையிடம் அதன் பெயரை சில தடவை கேட்டாள். குழந்தை பதில் சொன்னாலும் ,அது தெளிவற்றிருந்தது. அதனால் அவள் அஞ்சனாவைப் பார்த்தாள்.

“அவளுக்கு கொஞ்சம் புத்தி மட்டு” என்றாள் .

அம்மா தன் மகளை அதிர்ச்சியோடு பார்த்தாள். அவள் முகத்தில் ஒரு மாறுதலுமில்லை. வாழ்க்கையைச் சிறிதும் நேசிக்காத ஒருவரின் மனநிலை அது. அம்மாவின் நடுக்கத்தை அது அதிகப்படுத்தியது. இந்தப் பயணம் மட்டும் அவளை நேசிப்பிற்குரியவளாக ஆக்கியிருந்தால்…

சுவாசக் கோளாறுகள் காரணமாக குழந்தைக்கு அறிவு மட்டாக இருக்கிறதென மகள் சொன்னாள். தான் மட்டும் அவளருகிலிருந்து சரியாக கவனித்துக் கொண்டிருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்று அம்மா நினைத்தாள். தன் வாழ்க்கையை அவனோடு அவள் இணைத்துக் கொண்டு பல காலம் கழித்துத்தான் அம்மா அவர்களோடு சேர்ந்திருந்தாள்.

“உனக்கு எந்த வகையிலும் ’அவருடைய பணம் மட்டும் பயன்படாதென்று தெரிந்திருந்தால் ,நீ அவருடைய மகளில்லை என்று நான் நிரூபிக்க விரும்பியிருப்பேன்.” அம்மா மிக மெதுவான குரலில் சொன்னாள். தன்னை அமைதிப்படுத்திக் கொள்ள முயன்றவள் போல கண்களை மூடிக் கொண்டாள்.

அப்போது ரயில் ஒரு நிலையத்தில் நின்றது. பிளாட்பார பெஞ்சில் படுத்திருந்த ஒரு முதியவர் குழாயில் தண்ணீர் குடிக்கப் போனார். அவரருகில் படுத்திருந்த வயதான பெண்மணிக்கு அது காலைப் பொழுதென்பது தெரியவில்லை. லுங்கியால் மூடிக் கொண்டு அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள். அவர்கள் எங்கே ஒன்றாகச் சேர்ந்து தூங்கியிருப்பார்கள் என்று அம்மா யோசித்தாள். தெருக்கள்தான் அவர்களின் புனிதத்தைச் சோதிக்கும் இடம் என்று வேதனையோடும், வியப்போடும் அம்மா நினைத்தாள். வெறுப்பின் ஆழம் அம்மாவின் எலும்புகளைக் குத்திற்று. இந்தச் சோதனையில் தோற்றுவிட்டால் அப்பா சொத்து முழுவதையும் நன்கொடையாகக் கொடுத்துவிட்டு இரக்க மனிதராகி விடுவார். ஆணுக்கும் பெண்ணுக்குமான நேசிப்பு பரிசோதனைச்சாலைகளில் நுண்ணுயிரிகளிடையே சோதிக்கப்படக்கூடாது. தொட்டால் விழித்துக் கொள்ளும் மென்மை அது. இதை உணர முடியாத முட்டாள்கள் சோதனைக்குச் செல்வார்கள்.

திருவனந்தபுரத்திலிருக்கும் ஒரு பழைய நண்பரின் வீட்டுக்கு முதலில் அவர்கள் போவார்கள்.அங்கு யாரெல்லாம் இருப்பார்கள்? நிச்சயமாக அந்த மனிதரின் மனைவியும், குழந்தைகளும். அந்த வருகையின் நோக்கம் மனைவியின் கற்பையும், அப்பா-மகளா என்பதையமறிவதுதான் என்று அந்தக் குடும்பத்திற்குத் தெரிய வரும். அம்மா அவர்களின் இரக்கமான பார்வை, சந்தேகம்…என்று கற்பனை செய்து பார்த்தாள். மனம் குறுகியது.

பூமியில் தனக்கான காற்று இல்லை என்பதை உணர்ந்தாள். வாயும்,மூக்கும் வரண்டது. அம்மா மூச்சு விடத் திணறினாள் அம்மாவின் முதுகை மகள் நீவினாள்.

எத்தனை முகங்கள், சோதனைகள், மூச்சை நிறுத்தச் செய்யும் அளவில், உண்மையை அறியப் போவதற்கு. அப்பாவிற்கு அது சந்தோஷம் தருமா? இந்தச் சோதனைகள் மற்றொரு முடிவைத் தந்தால், அம்மா ஒரு சாகசம் செய்தவள் போல உணர்வாள். எல்லோரிடமும் விருப்பத்தோடு அவள் காட்டிய நேசம், இப்போது அவளைச் சுற்றி வந்து காப்பாற்ற வேண்டும். அந்த நேசிப்பு காற்றின் வழியாக வந்து அவளுடைய மகளின் வாழ்க்கையில் வேர்களையும் கிளைகளையும் பரப்பினால்… நேசிக்கவோ அனபை ஏற்றுக் கொள்ளவோ தெரியாத மனிதனின் மகளாக இருப்பதே மேல். அந்த முகவரி அவளுக்கான புது ஜன்னலைத் திறந்து விடும். அந்த ஜன்னல் வழியாக அம்மா பறவையும், மகள் பறவையும் உயரத்தில் வானத்திற்குள் பறந்து விடும்
.
திடீரென ஆதரவற்ற ஒரு நிலையும், தோல்வியும் அவளை நடுக்கியது. கண்களை மூடிக் கொண்டு இருக்கையில் சாய்ந்தாள். புற்றுநோய் சிகிச்சைக்காகப் போய்க் கொண்டிருந்த பெண்மணி அம்மாவை மெதுவாகத் தொட்டாள்.

அம்மா நிகழ்வுகளை கனவில் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கனவுகளில் வந்த சிவப்பான, அழகான மனிதன் இல்லை… ஒரு கருப்பான மனிதன் கருமையான விழிகளில் முழுக் காதலோடு… மணலில் அவன் பதித்த பாதச்சுவடுகள் ஆழமான காதலாக. அம்மா அவனருகில் நடந்து கொண்டிருந்தாள். அம்மாவின் கன்னங்களில் குழியும் இளமையும் இருந்தது. புன்னகை, மை, நீண்ட பொட்டு, இரட்டை சடை.வழியில் கல்லோ அல்லது தடைகளோ எதிர்ப்பட்டால் அவன் ஓடி வந்து உதவி செய்தான். அவள் தலை குனிந்தாலோ அல்லது முகம் சுளித்தாலோ தன் அன்பைக் கொட்டினான்.

அஞ்சனாவின் அப்பா அந்த நேசிப்பான மனிதர். குழந்தை அஞ்சனா, அம்மா, அந்தக் காதலர் முடிவேயில்லாத வழிகளினூடே நடந்தார்கள். மலைகள், குன்றுகள், பாலைவனங்கள் மற்றும் ஆறுகள், குளங்கள், மேகங்கள் ஆகியவற்றைக் கடந்தனர். அவர்கள் நடந்தபோது வயலெட் பூக்கள் இரு புறங்களிலும் பூத்திருந்தன. சாலைகளில் காய்ந்த இலைகளோடு வயலெட் பூக்கள் பூத்திருப்பதைப் பார்ப்பது எவ்வளவு அழகாயிருக்கும்!

அவனுடைய கைகளுக்குள் அம்மா, மகள் பெருமையும், அன்பும் பாதுகாப்பாக இருந்தன. எந்தக் கையும் அவர்களைத் தொட முடியாது.வானத்தில் இருப்பதைப் போல அவர்கள் பாதுகாப்பாக இருந்தனர். திடீரென்று அம்மாவிற்கு கருப்பு விழிகளோடு இருக்கிறவனைத் தழுவ வேண்டுமென்ற ஓர் ஆசை உந்திற்று.மகளின் கைகளை உதறிவிட்டு முன் நோக்கி வேகமாக ஓடினாள். அந்த வலிமையான கைகளைப் பிடித்துக் கொண்டு ரோஜாக்களின் வாசனையிருக்கிற, சிவப்பு, மஞ்சள் பூக்கள் பூத்திருக்கிற சாலைகளை நோக்கிப் போனாள்.

ரயில் அந்த அறியாத ரயில் நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அம்மா வெளியே பார்த்தபோது அந்த முகம் தெரிந்தது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் கனம் தெரியாமல் ரயிலிலிருந்து இறங்கினாள். அப்பாவும், மகளும் அதை உணர்ந்து கதவருகே போன போது அம்மா இறங்கி ஓடி விட்டாள் .ரயில் வேகமெடுத்தது.

இப்போது ரயிலில் அம்மா ஒரு காட்சியாக.. அவள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. முதலில் அவள் தொலை தூரத்திலிருக்கிற நட்சத்திரமாகத் தெரிந்தாள்.. அதன் பிறகு நீண்ட வரிசையாக.. பின் புள்ளியாக.. பிறகு அவளைப் பார்க்கவே முடியவில்லை
.
வெளியே கருப்புச் சுரங்கம் ரயிலோடு கலந்து சென்றது. அம்மா அந்த அக்னி பரீட்சைக்கு வரமாட்டாள் என்று மகளுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. ரயில் தன் பாரத்தை இழந்து விட்டதைப் போல உணர்ந்தாள். பாரமற்றதாய் ரயில் முன்நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

தன் அம்மாவைப் பார்த்துக் கொண்டே மிக மெதுவாக அவள் நடந்தாள். அவளுக்கும் சிவப்பு, மஞ்சள் பூக்கள் மலர்ந்திருக்கும் வழிகள் தெரிந்தன.

அம்மாவை உடனே பார்க்க வேண்டுமென்ற பிடிவாதமான குழந்தையாக மாறினாள். ரயில் பாரத்தை இழக்க, அவளுள் காற்றின் வேகம் எழுந்தது. அப்பாவின் பலவீனமான கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடினாள். அம்மா அசையும் ஓர் இலையாக வெளியே பறந்ததாக உணர்ந்தாள்.

அவள் விசித்திரமான சாகச காதலோடு கலந்தாள். எதிர்காலப் பிறப்புகளுக்காக, நடுக்கமான நெஞ்சோடு அவள் காத்துக் கொண்டிருக்கலாம். அந்தச் சிவப்புப் பெண் கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்தாள். எதிர்காலத்தில் கருப்பே இருக்கக் கூடாது, சிவப்பு மட்டுமே இருக்க வேண்டும்.

அப்பா ரயிலின் அபாயச் சங்கிலியை இழுப்பதற்கு முன்பாகவே இரண்டு மெல்லிய இலைகள் அம்மாவையடுத்துப் பறந்தன. அம்மாவைப் பார்ப்பதில் அவைகள் உறுதியாக இருந்தன. ’அம்மா கருப்பு, மகள் சிவப்பு, பேத்தி அதிசிவப்பு” என்று அந்த அசையும் இலைகளைப் பார்த்து யாரும் சொல்ல மாட்டார்கள்.
——————-
நன்றி : Indian Literature,
Sahitya Akademi s Bi—Monthly Joirnal Sep / Oct 2012

 

 

 

 

 

 

விடைபெறும் பொழுது

நல முத்துகருப்பசாமி

எதிரில் பயணிக்கும் பயணியை
பயணிக்க விடா வண்ணம்
தக்க வைக்கிறது எதிர்காற்று .

எனையெங்கோ இடம்புரியா
இடத்தில் வேரூன்ற
அடித்துச் செல்கிறது
கூடவே பயணிக்கும் காற்று…

இதற்கும் சேர்த்தே
விடைபெற்று விட்டேன்
வாசல் தாண்டும் பொழுது…

பெண்ணாதல்

ஜெயஸ்ரீ

சுகந்தியின் தங்கைக்கு திருமணம். ஒரு வாரத்திற்கு முன்பே வருமாறு அவள் அம்மா கூறிவிட்டாள். சுகந்தி தன் இரு பெண் குழந்தைகளையும் கிளப்பிக் கொண்டு ஊருக்கு தயாரானாள்.

தயாளன் தனது காரில் அவர்களை ஏற்றி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தான். அவர்கள் ரயில் ஏறியதும் மிக பாசமாய் “மிஸ் யூ சுகந்தி” ஒரு வாரம் எப்படி இருக்க போறேனோ என்று செவலியர் சிவாஜி கணேசன் அளவிற்கு நடித்தான்.

ரயில் கிளம்பிய அடுத்த நொடி “ஹய்யா… என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா… ” என்ற தொனியில் மொபைலை எடுத்தான். ஸ்வேதாவை அழைத்தான்.

“சார்.. சொல்லுங்க சார்..”

“ஸ்வேதா.. எனக்கொரு ஹெல்ப் வேணும். புதுசா நாம யூஸ் பண்ற சர்வர்ல எனக்கு ட்ரபுள் ஷூட்டிங் பண்ண தெரியல. உனக்கு ஆட்சேபனை இல்லன்னா என் வீட்டுக்கு வரமுடியுமா. ஜூம் கால் எனக்கு அவ்ளோ சரிப்பட்டு வரல.. ”

“உங்க வீட்டுக்கா சார்.. ” தயங்கினாள்.

“பயப்படாத மா.. வீட்ல வொய்ஃப் என்னோட இரண்டு பொண்ணுங்களும் இருக்காங்க. தைரியமா வரலாம்…”

“ஹோ.. ஒகே சார். லைவ் லொகேஷன் ஷேர் பண்ணுங்க நான் வரேன்.. ”

“நோ… நோ.. நைட்ல பெண்கள் தனியா வர்றது சேஃப்டி இல்ல. நான் வந்து கூப்பிட்டு போறேன்.. ”

“ஓகே சார்.. நான் ரெடியாயிடுறேன்…”

“சரிம்மா.. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி. நேர்ல பாக்கலாம்.. ”

காரை எடுத்து புறப்பட்டான் தயாளன். இன்னிக்கு ஸ்வேதாவை எப்படியும்…. என்று நினைத்தவாறு. அவன் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து கதவை மூடினான். எதிர்புறமாக கதவு தன்னால் திறந்து மூடியது. ஒரு அரூபம் உள்ளே வந்து அமர்ந்து கொண்டது. அவனால் அதை உணர முடிந்தது. பயந்து விட்டான்.

“யா… யாரு.. “குரல் தழுதழுத்தது. அருகிலிருந்த சாய் பாபா புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டான்.

“நான் ஒரு அதிசய அமானுஷ்யம். என் பேரு ராஜி. எதையும் மாற்றிவிடும் சக்தி எனக்கு இருக்கு. நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். இன்னிக்கு நான் உன் கூட இருப்பேன். ஸ்வேதாவிற்கு கால் பண்ணி இன்னிக்கு வரவேண்டாம் என்று சொல்லிடு… ”

“என்னது அதிசய அமானுஷ்யமா.. அப்படின்னா ஆவியா.. ” பயத்தில் வியர்த்தது அவனுக்கு.

“ஆமா.. ஒரு காம வெறியன் கிட்ட நான் ஏமாந்துட்டேன். தற்கொலை பண்ணி இப்போ ஆவியா சுத்திட்டு இருக்கேன். என்னை உன்னால பார்க்க முடியாது. ஆனா தொட்டு உணர முடியும். என்னால எதையும் மாற்ற முடியும்… ” மீண்டும் ஆணித்தரமாக சொன்னது அந்த அரூபம்.

கைகள் நடுங்கியவாறே தொட்டுப்பார்த்தான். அவளது இடையில் உள்ள வளைவு சுளிவு உணர்ந்தான். நல்ல வாளிப்பான உடல் தான். “அப்போ இன்னிக்கு ஸ்வேதா கேன்சல்.. இவள பாத்துக்கலாம்..” மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

“என்னோட கார் சின்னதா இருக்கு. இதை உன்னால் ஃபார்ச்சுனர் காரா மாற்ற முடியுமா?”

“கண்ணை மூடு”

அரூபம் தன் விரல்களை சுழற்றி ஒரு தடவை சொடுக்கியது.

“கண்ணைத் திற”

அவனுடைய கார் அவன் விரும்பிய ஃபார்ச்சுனர் காராக மாறியிருந்தது. “வாவ்.. உனக்கு ஏதோ சூப்பர் பவர் இருக்கு..” பூரித்து போனான்.

ஸ்வேதாவிற்கு கால் செய்து வேறொரு முக்கிய பணி உள்ளதால் இன்று வரவேண்டாம் என்று கூறிவிட்டான்.

வீட்டிற்கு சென்றதும் எதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று கணக்கிட்டுக் கொண்டே காரை ஓட்டிச் சென்றான்.

கார் வீட்டிற்கு சென்றது.

அவனும் அந்த அரூபமும் இறங்கினார்கள்.

மீண்டும் ஒரு முறை அவன் தொட்டுப் பார்த்தான். “எல்லாம் உள்ள போய் பாத்துக்கலாம் வா… ”

“பார்றா…பேயா இருந்தாலும் பெண் அல்லவா. அதான் வெட்கம் போல.. ”

ராஜி சிரித்தாள். மிக அழகான சிரிப்பு. குழி விழும் கன்னம். சிவந்த உதடுகள். மான் போன்ற விழிகள். கச்சிதமான உடலமைப்பு. பெண்களே பொறாமை கொள்ளும் பேரழகி.

நேரே சென்று ஃப்ரிட்ஜை திறந்தாள். தனக்கு ஸ்ப்ரைட்டும் அவனுக்கு ஸ்காட்ச்சும் எடுத்து வந்தாள்.

“ஹேய்.. நீ சரக்கெல்லாம் அடிப்பியா…”

“பழக்கம் இல்ல. இது உனக்கு தான்”

கோப்பையில் ஊற்றிக் கொடுத்தாள். அவன் குடித்தான். இரண்டு ரவுண்ட் முடிந்தது. அரூபத்தை ஊறுகாய் போல அவ்வப்போது தொட்டுக் கொண்டான்.

“இன்னும் டைம் இருக்கு…” அவன் கையை தள்ளிவிட்டாள் ராஜீ. மூன்றாவது ரவுண்ட் முடிந்தது.

“ஸ்வேதா எத்தனையாவது….?”

“நான் அதெல்லாம் கணக்கே வச்சிக்குறது இல்ல…. நிறைய.. நிறைய.. லிஸ்ட் பெரியது…”

நான்காவது ரவுண்ட் முடிந்தது.

“இப்படி பெண்களை ஏமாற்றி உன் மோகத்தை தீர்த்துக் கொள்வது தப்பில்லையா? உன்னை நம்பி இருக்கும் சுகந்தி இப்படி செய்தாள் ஏற்றுக்கொள்வாயா? உன் இரண்டு பெண் பிள்ளைகளை எவனாவது இப்படி செய்தால் நீ சும்மா விடுவாயா..? இந்தா குடி… ”

ஐந்தாம் ரவுண்ட் முடிந்தது.

“மென் வில் பி மென். ஒரு ஆம்பிள கூப்பிட்டா அவனா நம்பி போறது பொண்ணுங்க தப்பு. நான் யாரையும் பலவந்த படுத்தல. அவங்க விருப்பத்தோட தான் நான்ன்ன்…….. ”

போதை தலைக்கு ஏறி மயங்கி மெத்தை மீது சாய்ந்தான்.

அதுவரை பொறுமை காத்த அரூபம், தனது அதிசய சக்தியை கொண்டு அவனை பெண்ணாக மாற்றியது.

பசி அதிகம் இருந்ததால் அவன் வாங்கி வைத்திருந்த சகல சைட் டிஷ்களையும் தின்று தீர்த்தது. தாகம் தீர ஸ்ப்ரைட்டை குடித்தது.

“இன்று ஸ்வேதாவை காப்பாற்றினேன். அன்று என்னை காபாற்றிக் கொள்ள முடியவில்லை. லிஸ்ட் பெரியதா… நாளை நீ எவன் லிஸ்டில் இருக்க போகிறாய் என்று பார்க்கிறேன்..”

பொழுது விடிந்தது. பெரும் தலைவலியுடன் தயாளன் எழுந்தாள்.

மீசை கொட்டிக் கிடந்தது. நீளமான அழகிய தலைமுடி. கனக்கச்சிதமான எட்டு வடிவத்தில் உடலமைப்பு. அங்க அவையங்களும் அதற்கேற்றாற் போல அமைந்திருந்தது.

அதிர்ந்து ஆடிப்போனாள் தயாளன். “அய்யய்யோ என்ன இது கொடுமை.. பெண்ணாய் எப்படி இருக்கப் போகிறேன்.. என்னை நான் பாதுகாக்கவே அதிக சிரத்தை எடுக்க வேண்டும் போலவே.”

போகும் இடமெல்லாம் அந்த அரூபம் ஆண்களாய் வந்து அவனைச் சீண்டி பழி தீர்த்துக் கொண்டது.

கதாபாத்திரத்தை காணோம்

அரிசங்கர் 

ஆந்தை தன் அலுவலகத்திற்குள் நுழைந்தார். அலுவலகம் சுத்தமாக இருந்தது. உள்ளே ஒரே ஒரு மேஜையும் அதற்கு எதிரில் மூன்று பிளாஸ்டிக் நாற்காலியும் இருக்க, மேஜைக்கு மறுபுறம் ஒரு ரோலிங் சேர் இருக்க நேராக அதில் சென்று அமர்ந்துகொண்டார். வாசல் வழியாகவும் ஜன்னல் வழியாகவும் வந்த வெளிச்சமே போதுமானதாக இருந்ததால் அவர் பகலில் மின்விளக்கை போடுவதில்லை. குளிர் காலம் என்பதால் அவர் மின்விசிறியை போடலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தார். மின்விசிறி போட்டால் குளிர்கிறது. நிறுத்தினால் என்னவோ போல் இருக்கிறது. எதற்கு செலவு என்று போடாமலேயே இருந்தார். காலையிலேயே அவருக்கு கடுப்பாக இருந்தது. எந்த வேலையுமில்லாமல் இருந்தார். சுற்றி ஒருமுறை தன் அலுவலகத்தைப் பார்த்தார். அவருக்கு இடதுபுறம் ஒட்டப்பட்டிருந்த சி.ஐ.டி. சங்கர் என்ற திரைப்படத்தின் பெரிய போஸ்டரை சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். கையில் துப்பாக்கியுடன் ஜெயசங்கர் இவரைப் பார்த்து முறைப்பதுபோலவே இருந்தது. சட்டென அவருக்கு அந்தக் குரல் கேட்டது.

“சும்மாவே இருந்தா எப்படி ஒரு டீ செல்றது…”

குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார். வலதுபக்கமாக இருந்த அலமாரியில் எதையோ தேடியபடி ஒரு பெண்மணி இருந்தார். ஆந்தையைப் போலவே அவரும் ஐம்பது வயது மதிக்கத்தக்கவாறு இருந்தார்.

ஆந்தை தன் கைப்பேசியை எடுத்து டீக்கடைக்கு போன் செய்து ஒரு டீ கொண்டுவர சொன்னார். மீண்டும் சலிப்புடன் அந்தப் பெண்மணியை எரிச்சலுடன் பார்த்து பேச ஆரம்பித்தார்.

“எத்தன துப்பறியும் கதை படிச்சிருக்கேன். ஒரு ரூபாலா மாதிரியோ, வைஜெயந்தி மாதிரியோ, சுசிலா மாதிரியோ எனக்கு ஒரு அஸிஸ்டெண்ட் கிடைச்சிருக்கக் கூடாதா… எனக்குன்னு வந்து வாச்சியே கழுவாத பிரியாணி அண்டா மாதிரி…”

“சும்மா வாய்க்கு வந்த மாதிரி பேசாதீங்க… நான் ஒன்னும் நீங்க சம்பளம் கொடுத்து வெச்சிருக்கற ஆள் இல்ல… வெறும் கற்பனை தான்… அழகா வேணும்னா நீங்க தான் அப்படி கற்பனைப் பண்ணனும்… உங்க மண்டைக்குள்ள என்ன இருக்கோ அதான வரும்…”

“ஓவரா பேசாத கிளம்பு…” என்று அவர் சொன்னதும் அந்த பெண்மணி மறைந்தாள். சற்று நேரத்தில் டீ வர, அதை குடித்துவிட்டு செய்துத்தாளை எடுத்தார்.  முதல்பக்கம் தாண்டுவதற்குள் மீண்டும் கைப்பேசி அடித்தது. வாடகைக்காக உரிமையாளர்தான் அடிக்கிறாரோ என்று பதட்டமாக எடுத்துப்பார்த்தார். டீக்கடைக்காரர் பெயர் இருந்தது. சலிப்பாக எடுத்து “ஹலோ” என்றார்.

“சார்.. ஒரு பார்ட்டி உங்களத்தான் தேடின்னு வருது…”

“சரி சரி.. அவன் உள்ள வர வரைக்கும் அப்படியே பேசிட்டு இரு…”

“இன்னா சார்…”

“ஆள் வர சத்தம் கேக்குது… ஓகே சார்… ஓகே சார்… நோ பிராப்ளம்… எக்ஸ்ரா பேமெண்ட்லாம் வேண்டாம் சார்… நீங்க கொடுத்தே போதும் சார்…” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒரு உருவம் வந்து அவர் எதிரில் நின்றிருந்தது. அதைத் தெரிந்துக்கொண்டு தான் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். வந்த உருவம் அலுவலகத்தை சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்க அவர் போனை வைத்துவிட்டு “எஸ்…” என்றார்.

“உண்மை டிடெக்டீவ் ஏஜென்ஸி…”

“ஆமா… இதுதான் உக்காருங்க…”

வந்தவர் உட்கார்ந்தார். ஆந்தை அவரை ஆராயத் தொடங்கினார். வந்தவர் ஏதோ ஐடி கம்பெனி ஆள் போல் அவருக்கு தோன்றியது. கண்டிப்பாக ரொம்ப மொக்கயான வேலையாகத்தான் இருக்கும் என்று நம்பினார்.

“சொல்லுங்க சார்… நான் உங்களுக்கு என்ன உதவி செய்யணும்…”

“சார்… எனக்கு ஒரு ஆள கண்டுபிடிக்கணும்…”

“ஓ… சொல்லுங்க யாரக் கண்டுபிடிக்கணும்… உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு… முழு விபரத்தையும் சொல்லுங்க…”

“சார் உங்க பீஸ்…”

“மொதல்ல கேஸ சொல்லுங்க சார்… பிஸ்லாம் அப்பறம் பேசிக்கலாம்…”

“அதுவந்து சார்… ஒரு ஆள கண்டுபிடிக்கணும்…”

“அதான் சொல்லிட்டீங்களே…”

“சார்… அவன் ஒரு கொலைய நேர்ல பார்த்த முக்கியமான சாட்சி…”

கொலை என்றதுமே ஆந்தை சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார். வந்தவருக்கு வேர்க்க ஆரம்பிக்க “சார்… கொஞ்சம் கோச்சிக்காம… அந்த ஃபேன் சுவிட்ச போடறீங்களா” என்று வந்தவரையே வேலை வாங்கினார். அவரும் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்று ஃபேன் ஸ்விட்சைப் போட்டுவிட்டு வந்து உட்கார்ந்தார்.

“சொல்லுங்க சார்… என்ன கொலை… எப்ப நடந்தது… எங்க நடந்தது… எந்த ஸ்டேஷன்ல கேஸ் ஃபைல் ஆகியிருக்கு…” என்று ஆர்வத்துடன் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தார். தன் வாழ்நாளில் முதல் கொலை கேஸ் அவரிடம் வந்திருக்கிறது என்ற படப்படப்பு அவரின் உடல் மொழியில் வெளிப்படையாக தெரிந்தது.

“சார் அவன் பேரு என்னன்னு தெரியாது சார்…”

“ஓ… அவனப்பத்தி வேற என்ன தகவல்கள் இருக்கு…”

“எனக்கு சரியா தெரியல சார்…

“என்ன சார் குழப்பறீங்க… எனக்கு மொதல்ல இருந்து முழுசா எல்லாத்தையும் சொல்லுங்க சார்…”

“முழுசா சொல்ல முடியாது சார்… அது நானூறு பக்கம்… நான் சுருக்கமா சொல்றன்…”

“என்னவோ புரியற மாதிரி சொன்னா சரிதான்… சொல்லுங்க…”

“பாண்டிச்சேரில அல்லிகிணறுங்கற ஊர்ல ஒரு கொலை நடந்தது சார். செத்தவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் பெரிய சண்ட… அவ கொஞ்சம் கோவக்காறி… ஆம்பளைங்க கூட சரிக்கு சமமா சண்டைக்கு போவா… அதனால அவதான் அவன கொன்னுருக்கணும்ன்னு ஊர்ல பேசிக்கிட்டாங்க… போலிஸுக்கும் அது வசதியா போச்சு… அவள புடிச்சி உள்ளப் போட்டாங்க… ஆனா அவ அந்தக் கொலைய செய்யல சார்… அந்தக் கொலைய பண்ணது வேற ஒருத்தன். அத ஒருத்தன் பாத்திருக்கான். அவனத்தான் கண்டுப்புடிக்கணும்…”

“ஓஹோ…”

“பாண்டிச்சேரில நடந்தக் கொலைக்கு நீங்க ஏன் சென்னையில இருக்கற டிடெக்டிவ் ஏஜென்ஸிக்கு வரீங்க… அங்கயே எதுவும் இல்லையா…”

“நான் இங்கதானே சார் இருக்கேன்…”

“கொலை எப்போ நடந்தது…”

“அப்படி எதுவும் சரியா சொல்ல முடியாது… சார்… எப்ப வேணும்னாலும் வெச்சிக்கலாம்…”

இப்போது ஆந்தை கொஞ்சம் கடுப்பானார். “சார்… நீங்க தகவல்களை சரியா சொன்னாத்தான் என்னால எதாவது உதவ முடியும்…”

“சார்… நீங்க கேக்கற எல்லா கேள்விக்கும் தான் நான் பதில் சொல்றனே…”

“எங்க சொல்றீங்க…”

“சரி… இப்ப ஒன்னொன்னா கேளுங்க… சரியா சொல்றன்…”

“பாண்டிச்சேரில அல்லிக்கிணறுங்கற கிராமம் எங்க இருக்கு…?”

“அப்படி ஒரு கிராமம் பாண்டிச்சேரில இல்ல சார்…”

“யோவ்… என்ன விளையாடறியா… காலங்காத்தால கடுப்பேத்திகிட்டு… எழுந்து போயா…”

“சார்… ஏன் சார் கோவப்படறீங்க… வழக்கமா நான் தான் டென்ஷன் ஆவேன்…”

ஆந்தைக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. எதிரில் இருப்பது உண்மையிலேயே மனிதன் தானா இல்லை இதுவும் தனது கற்பனையா என்று. மெல்ல எழுந்து எதிரில் இருந்தவனை நெருங்கினார். மெதுவாக அவனைத் தொட்டார். அவன் உடலை அவரால் உணர முடிந்தது.

“என்ன பண்றீங்க சார்…”

“இல்ல ஒன்னுமில்ல…” என்று சொல்லிவிட்டு தன் இருக்கையில் வந்து உட்கார்ந்தார். பிறகு மெல்ல டீ சாப்பிடறீங்களா…” என்றார். எதிரில் இருந்தவர் தலையசைக்க, தனது செல்போனை எடுத்து கடைக்காரனை அழைத்து இரண்டு டீ சொன்னார். பிறகு பெருமூச்சொன்றை விட்டுவிட்டு “சார்… என்னால முடியல… வயசாயிடுச்சி… எதுவா இருந்தாலும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க… இல்லனா டீ வரும் குடிச்சிட்டு கிளம்புங்க…”

“சார்… நான் தெளிவா சொல்றன் சார்… அதுக்கு முன்னாடி… ஒரு நிமிஷம்…” என்று சொல்லிவிட்டு தான் கொண்டுவந்திருந்த பையைப் பிரித்து அதிலிருந்து ஒரு பெரிய பைண்டிங் செய்யப்பட்ட புத்தகத்தை எடுத்து மேஜையின் மீது வைத்தார். ஆந்தை அதையே வைத்தக் கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

“என்ன சார் இது…”

“சார்… இதுதான் நான் புதுசா எழுதியிருக்கற நாவல்…”

ஆந்தை அதைத் தூக்க முடியாமல் தூக்கினார். பிரித்து முதல்பக்கத்தைப் பார்த்தார். அதில் முதல் வரியில் ‘ஒரேக் குத்துல பொட்டுன்னு போயிட்டான்’ என்றும் இரண்டாவது வரியில் ‘நாவல்’ என்றும் மூன்றாவது வரியில் ‘அரிசங்கர்’ என்றும் இருந்தது. அதைப் பார்த்ததும் ஆந்தைத் தலையைத் தூக்கி எதிரில் இருந்தவரிடம் “சார்… உங்கப் பேர கேக்கவே இல்ல…”

“என் பேரு அரிசங்கர்…”

“அப்படின்னா நீங்க ஒரு எழுத்தாளர்…”

“சார்… நான் சொல்லவேயில்ல… எப்படி கண்டுபிடிச்சீங்க சார்…”

அவர் பெருமையாக மெல்ல சிரித்துக்கொண்டார்.

“சரி இப்பவாது கொஞ்சம் தெளிவா சொல்லுங்க பிளீஸ்…”

“சார்… உங்க கையில இருக்கறது என்னோட புது நாவல்… இப்பத்தான் எழுதிமுடிச்சேன்… அதுல ஒரு கொலை நடந்தது… ஆனா கொலையே பண்ணாத ஒரு அப்பாவிப் பொண்ணு ஜெயிலுக்கு போயிடுச்சி… ஆனா கொலை நடந்தப்ப அதப் பாத்த ஒரு சாட்சி இருக்கற மாதிரி தான் நான் எழுதியிருக்கேன்… ஆனா அதுக்கப்பறம் அவன் எங்கப் போனான்னு எனக்கே தெரில நீங்க தான் இந்த நாவலப் படிச்சி அவனக் கண்டுபிடிக்கனும்…”

“ஓ… இது உங்க நாவல் தான… உங்க இஷ்டப்படி இருந்தாதான் என்ன… அவனக் கண்டுபிடிச்சி என்னப் பண்ணப்போறீங்க…”

“சார்… மொத்தம் ரெண்டு விஷயம் சார்… ஒன்னு ஒரு அப்பாவி பொண்ணு ஜெயிலுக்கு போயிடுச்சின்னு எனக்கே கஷ்டமா இருக்கு… ரெண்டாவது நான் இந்த நாவல் படிக்கறதுக்காக எழுத்தாளர் தென்னமரத்துகிட்டக் கொடுக்கப் போறன்… அவரு கொஞ்சம் ஸ்டிரிக்டா பாப்பாரு… லாஜிக் கேள்விலாம் கேப்பாரு… சரியா சொல்லலனா அப்பறம் காலச்சுவடுக்கு ரெகமெண்ட் பண்ணமாட்டாரு… அதனாலத்தான் எனக்கு அந்த சாட்சிய கண்டுப்பிடிச்சே ஆகணும் சார்…”

“எனக்குப் புரிது… நீங்க இதக் கொடுத்துட்டுப் போங்க… நான் படிச்சி கண்டுபிடிச்சிட்டு உங்கள கூப்பிடறன்…”

“ஓகே சார்… உங்க பீஸ்…”

“அதப் பாத்துக்கலாம்… நீங்க கிளம்புங்க…”

“சார்… டீ இன்னும் வரலயே…”

“பழைய பாக்கி நிறைய இருக்கு… டீ வராது… நீங்க கிளம்புங்க…”

அரிசங்கர் மெல்ல எழுந்து வெளியே சென்றதும் ஆந்தை அந்த பெரிய பைண்டிங் செய்யப்பட்ட புத்தகத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டத் தொடங்கினார்.

 

ஒருவாரத்திற்கு பிறகு…

ஆந்தை மிக உற்சாகமாக இருந்தார். அவரது உதவியாளரிடம் தான் இந்த கேஸை முடித்துவிட்டதாக பெருமையாக சொன்னார். அவர் அரிசங்கரின் வருகைக்காகக் காத்திருந்தார். அரிசங்கர் வருவது தாமதமாக அவர் முகம் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டே வந்தது. அவர் உற்சாகம் மெல்ல மெல்ல வடிந்துகொண்டே வர, அவரின் உதவியாளரின் அழகு குறைந்துகொண்டே வந்தது. சரியாக பதினொரு மணிக்கு அரிசங்கர் ஆந்தையின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். ஆந்தை கொஞ்சம் கோவமாக, “என்ன சார் பத்து மணிக்கு வரசொன்னா பதினொரு மணிக்கு வரீங்க.

“சாரிங்க சார்… வர வழியில ஏதோ போராட்டம்… டிராபிக் ஜாம்… அதான்…”

“சரிசரி விடுங்க… உங்க கேஸ் முடிஞ்சிது…”

அரிசங்கரின் முகம் பிரகாசமானது. “சொல்லுங்க சார்… அவன் எங்க இருக்கான் கண்டுபிடிச்சிட்டீங்களா… அந்தப் பொண்ணக் காப்பாத்திடலாமா…”

“கண்டுபிடிச்சிட்டேன்… ஆனா அந்தப் பொண்ணக் காப்பாத்த முடியுமான்னு தெரியல…”

“என்ன சார் சொல்றீங்க…”

“உங்க நாவல்ல நீங்க எழுதியிருக்கறதப் படிக்கறன் கேளுங்க…” என்று சொல்லுவிட்டு புத்தகத்தில் தான் குறித்து வைத்திருந்த ஒரு பக்கத்தை எடுத்து ஆந்தை வாசிக்க ஆரம்பித்தார்.

“அந்தத் தெருவில் எந்த விளக்கும் எரியவில்லை. சில வீடுகளிலிருந்து கொஞ்சம் வெளிச்சம் வந்துகொண்டிருந்தது. கட்டெரும்பு மெல்ல நடந்துவந்துகொண்டிருந்தார். அப்போது மறைவிலிருந்து ஒரு உருவம் மெல்ல வெளிப்பட்டு சத்தமெழுப்பாமல் அவரைப் பின்தொடந்தது. எந்த வெளிச்சமும் இல்லாத இடத்தில் பின்னால் வந்துகொண்டிருந்த உருவம் மெல்ல கட்டெரும்பின் தோளைத் தொட அவர் திரும்பினார். பின்னாலிருந்த உருவத்தைப் பார்த்ததும் மெல்ல புன்னகைத்து ‘டேய் கோழி’ என்றார். அடுத்த விநாடி கட்டெரும்பின் வயிற்றில் தன் கையிலிருந்த  கத்தியால் கோழி ஒரே குத்து குத்தினான். கத்தி ஆழமாக இறங்கியது. வந்த வேலை முடிந்தத் திருப்தியில் கோழி மெல்ல மூச்சுவிட தூரத்தில் யாரோ நிற்பது போல் இருந்தது.”

படிப்பதை நிறுத்திவிட்டு அரிசங்கரை நிமிர்ந்துப் பார்த்தார் ஆந்தை. அரிசங்கர் எதுவும் புரியாமல் அவரைப் பார்க்க, “பிரச்சனையே இந்த கடைசி வரியில தான்.” என்றார்.

“என்ன பிரச்சனை சார்…” என்று தயங்கியவாறே கேட்டார் அரிசங்கர்.

“அவன் கொலை செய்யறத யாரோ பாத்துடறாங்கன்னு எழுதியிருக்கீங்க… அப்படி ஒருத்தன் பாத்தா கொலை செஞ்சவன் சும்மா இருப்பானா… சொல்லுங்க…?

அரிசங்கர் அமைதியாக இருந்தார்.

“ஆனா அந்த இருட்டுல நின்னு கொலையப் பாத்தது யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்…”

“அப்படியா… யாரு சார் அது…”

ஆந்தை மீண்டும் குறித்துவைத்திருந்த வேறு ஒரு பக்கத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.

“கட்டெரும்பு வழக்கமாக வேலையை விட்டு அந்தத் தெரு வழியாகத்தான் வீட்டிற்குப் போவார். அது அவரைத் தெரிந்த அனைவருக்கும் தெரியும். அவருக்கு அந்தத் தெருவில் ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் ஊடுகொள்ளுத்தி. பெரும்பாலான நேரத்தில் கட்டெரும்பு அவர் வீட்டைக் கடக்கும் போது அவர் வாசிலில் நின்றிருப்பார். நடந்துக்கொண்டே சில வார்த்தைகளை ஊடுகொளுத்தியிடம் பேசிவிட்டுச் செல்வார்.” என்று முடித்துவிட்டு அரிசங்கரைப் பார்த்தார்.

அப்போது ஆந்தைக்கு செல்போன் அடிக்க எடுத்துப் பார்த்தார். தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது. தயக்கத்துடன் எடுத்து ஹலோ என்றார்.

“ஆந்தையா”

“ஆமா சார்…”

“சார் இந்த மாச வாடகையும் இன்னும் வரல சார்…”

“சாரி சார்… ராங் நம்பர்…” என்று போனை அணைத்துவிட்டு அரிசங்கரைப் பார்த்தார்.

அரிசங்கர் அமைதியாக இருக்க, ஆந்தைத் தொடர்ந்தார்.

“ஸோ… கேஸ் க்ளோஸ்டு…”

பெருமூச்சொன்றை விட்ட அரிசங்கர், “ரொம்ப தாங்ஸ் சார்… அந்தப் பொண்ண காப்பாத்திடலாம்னு நெனச்சேன்… ம்.. அவ தலையெழுத்து… உங்க பீஸ்…?”

“பீஸ் இருக்கட்டும் விடுங்க… இனிமே தான் முக்கியமான சில விஷயங்களை உங்க கிட்ட பேசணும்…”

“சொல்லுங்க சார்…”

“கட்டெரும்ப வேணா கோழி கொன்னுருக்கலாம்… ஆனா சாட்சி செத்ததும் அந்தப் பொண்ணு தவறுதலா கைதாகி தண்டனை அனுபவிக்கறதுக்கும் நீங்க தான் காரணம். அதாவது உங்க அலட்சியம்… கதாப்பாத்திரத்தையும் கதையையும் நீங்க சரியா நகர்த்தாததுனாலதான் இன்னிக்கு ரெண்டு அப்பாவி ஜீவன் பாதிக்கப்பட்டிருக்கு… அதானால நீங்களும் குற்றவாளிதான்…”

அரிசங்கர் ஆந்தையை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிந்தார்.

“அதனால உங்கள கைது செய்ய போலிஸ் வந்துகிட்டு இருக்காங்க… நான் காலையிலயே தகவல் சொல்லிட்டேன்… ஏன் இன்னும் வரலன்னு தெரில…

“நான் தான் சொன்னனே வர வழியில போராட்டம் நடக்குதுன்னு…”

“ஒகோ… இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நான் கண்டுபிடிச்சிருக்கேன்… நீங்க அந்தப் பொண்ண வர்ணிச்சிருக்கறதப் பார்த்தா உங்களுக்கு அந்தப் பொண்ணு மேல தவறான எண்ணம் இருந்திருக்கு…”

அரிசங்கர் அமைதியாக இருந்தார்.

“நீங்க அந்தப் பொண்ண லவ் பண்ணீங்களா…”

“தெரில சார்…

“சரி… போலிஸ் வரவரைக்கும் வெயிட் பண்ணுங்க… அப்பறம் இன்னொரு முக்கியமாக விஷயம்… உங்க நாவல்ல ஏகப்பட்ட எழுத்துபிழைகள் இருந்தது…”

“சரி பண்ணிடறன் சார்…”

“சரி நான் ரெண்டு டீ சொல்றன்… அதுவரைக்கும் அந்தப் பொண்ண நீங்க முதல் முதல்ல எங்கப் பாத்தீங்கன்னு சொல்லுங்க… நீங்க அந்தப் பொண்ண நிச்சயம் லவ் பண்ணியிருக்கீங்க…”

அரிசங்கர் லேசாக வெட்கப்பட்டார். பின்பு அந்தப் பெண்ணைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

“அது ஒரு அழகான மாலைப் பொழுது சார்….”

*