Author: பதாகை

நிம்மதி – கா.சிவா சிறுகதை

“ராமகிருஷ்ணன் வீடு இங்க பக்கத்தில்தானே இருக்கிறது ” என என் கணவர் கேட்டவுடனேயே மனதில் திடுக்கென்றது. அவன் திருமணத்திற்கு முன் என்னைக் காதலித்தவன். பேச்சுவாக்கில் சொன்னதை மறந்திருப்பாரென நினைத்தேன். பெயரைக்கூட இந்த அளவிற்கு ஞாபகம் வைத்திருந்தது அச்சத்தை உண்டாக்கியது. “இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் அவரையும் பார்த்துவிட்டு போய்விடுவோம் ” என அவர் கூறியபோது முகத்தைப் பார்த்தேன். அதில் வஞ்சம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் , ஆண்களின் மனம் இம்மாதிரி விஷயத்தில் எப்படிச் செயல்படுமென யாரால் கணிக்கவியலும்.

திருமணம் முடிந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிறந்து ஆறு மாதமான பையனுடன் டவர் பார்க்கில் அமர்ந்து அந்தியில் மரத்தையடைந்த பறவைகளின் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் கேட்டார், “காதலென்றால் என்னவென்று தெரியுமா ”
“எனக்குத் தெரியாது”
“நல்லவேளை , நிம்மதியா இருக்க”
என்றவர் சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு ” எல்லோரும் காதல்னா மகிழ்ச்சி, இன்பம்னு சொல்றாங்க, இதைவிட அதில் வேதனைதான் அதிகம்னு யாருமே சொல்றதில்லை, ஏன்னா, உணராதவங்களால அதைப் புரிந்துகொள்ள முடியாது” எனக் கூறி சூரியன் மறைந்து சாம்பல் பூத்த தனல்போலத் தெரிந்த வானத்தை அமைதியாக சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அவராகவே பேசட்டும் எனக் காத்திருந்தேன்.

” என் மச்சான் போன்ல பேசினான். கலா பத்தி ஏதுவும் என்கிட்ட சொல்லாதடான்னு சொன்னாலும் கேட்கமாட்டேன்கிறான். சரி, அவனும் தன் மனசுல இருக்கிறத யார்கிட்டதான் சொல்லுவான் ” என்று பொதுவாகப் பேசியபடி அமைதியானார். கலா இவரின் ஒன்றுவிட்ட அத்தை பெண். ஜாதகம் சரியில்லையென திருமணம் செய்துவைக்க கலாவின் அப்பா மறுத்து வேறொருவருக்கு திருமணம் செய்துவிட்டாராம். சில நிமிடங்களுக்குப் பிறகு தன் விழிகளைத் துடைத்தபடி “நீ யாரையும் காதலிக்கலை. ஆனா, உன்னை காதலிக்கிறேன்னு யாராவது சுத்தியிருக்காங்களா” எனக் கேட்டார். அப்படியொரு மென்மையாக கேட்டபோது சொல்லலாமா என யோசிக்கத் தோன்றாமல் “ஆமா, ஒருத்தர் இருந்தார். ராமக்கிருஷ்ணண்னு ” எனக் கூறிவிட்டேன். சற்று கூர்ந்து நோக்கி “உங்க ஊர்க்காரரா ” என்றார்
“இல்ல, எங்க பெரியம்மா ஊர். பள்ளிக்கூட விடுமுறைக்கெல்லாம் அங்கதான் போவேன். பெரியப்பாவோட தூரத்து சொந்தம் அவரு. நான் அங்கே போறப்பல்லாம் ஏதாவது வேலையா வந்துட்டுப் போவாரு. எங்கிட்ட ஏதும் பேசியதில்லை. ஆனா பெரியம்மா பையன்கிட்ட சொல்லியிருக்காரு, என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறதா. தம்பிதான் என்கிட்ட சொன்னான். நான் சொல்லிட்டேன், எதுவாயிருந்தாலும் எங்கப்பாக்கிட்ட பேசிக்கட்டுமின்னு. அவருவந்து அப்பாக்கிட்ட பேசறதுக்கு முன்னாடியே நீங்க வந்துட்டீங்க”.
என்று சொல்லிமுடித்தேன். இப்படி லாவகமாக பேசியதற்கு என்னையே மெச்சிக்கொண்டேன், அப்போதும் இந்த நினைவுவந்த வேறு சில தருணங்களிலும்.

“அதற்குப்பிறகு அவரைப் பார்க்கவில்லையா?”
“இல்லை, நாம பெரியம்மா வீட்டிற்கு விருந்துக்காக போனப்ப, தம்பிதான் சொன்னான்.. கல்யாணத்துக்கு வந்தாராம், பின்னால நின்னு பார்த்துட்டு சாப்பிடாமலே கிளம்பிட்டார்னு”.
சற்றுநேரம் யோசித்தவர் கிளம்பலாம் என எழுந்தார்.

அதன்பின் இந்த விஷயத்தைப் பற்றி அவர் பேசியதேயில்லை. ஊருக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டதால் கிளம்பி வந்து அம்மா அப்பாவைப் பார்த்துவிட்டு கண்புரை அறுவை சிகிச்சை செய்துள்ள , பெரியம்மாவையும் பார்த்துவிட்டுப் போகலாம் என இங்கு வந்தோம். பார்த்து நலம் விசாரித்து விட்டு கிளம்பும்போதுதான் இராமகிருஷ்ணன் வீட்டிற்கு போகலாம் எனக்கேட்டார்.
வீட்டிலிருந்த தம்பி ரமேஷைக் கூப்பிட்டபோது சற்று குழப்பத்துடன்தான் கிளம்பினான். என் பையனை தம்பி தூக்கிக்கொள்ள ஒருவயது மகளை என் கணவர் தூக்கிக் கொள்ள நடக்க ஆரம்பித்தோம். “ரமேஷ், இப்ப அவர் வீட்டில் இருப்பாருல்ல” என தம்பியிடம் கேட்டார்.
“இன்னைக்கி வேலையேதும் இல்ல, வீட்டில்தான் இருப்பார்” என்றான்.
“என்ன வேலை பார்க்கிறார்”
“அவங்க தாத்தாவழி நிலம் இருக்குது. அதுக்கு வேலிபோட்டு, போர்வெல் மோட்டார் போட்டு பாதி வாழையும் பாதி நெல்லும் போட்டிருக்கார்”.

நான் தெருவோரங்களில் இருந்த ஆடாதொடை செடிகளையும் கள்ளிச் செடிகளையும் பார்த்தபடி நடந்தேன்.
“”இந்த வீடுதான்” என ரமேஷ் காட்டிய இரும்பு கிரில் கதவருகே நின்றோம். நான்கடி உயர சுற்றுச் சுவர் வெளிர் பச்சை நிறத்தில் இருந்தது. கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த ரமேஷ் திண்ணையோடிருந்த போர்டிக்கோவைக் கடந்து சென்று வீட்டின் கதவைத் தட்டினான். நாங்களும் உடன் சென்றோம். கதவைத் திறந்த ராமக்கிருஷ்ணன் சற்று பெருத்திருந்தார் . ரமேஷைப் பார்த்ததும் புன்னகைத்தவர் உடனிருந்த என் கணவரையும் தொடர்ந்து என்னையும் பார்த்தவுடன் திகைத்தார். “அத்தான்தான் உங்களைப் பார்க்கனும்னு சொன்னார். அதான் கூட்டிக்கிட்டு வந்தேன்” என ரமேஷ் சொன்னதும் திகைப்பு நீங்காமலேயே ” வாங்க, உள்ளே வாங்க ” என்றபடி இன்னொரு கதவையும் திறந்தபடி உள்ளே நுழைத்தார்.

உள்ளே ஒரு சோபாவும் மூன்று நாற்காலிகளும் இருந்தன. அவர் “உட்காருங்க” எனக் கூறவும் ரமேஷும் என் கணவரும் சோபாவில் அமர, நான் நாற்காலியில் அமர்ந்தேன். “அக்கா எங்கே அத்தான் ” என ரமேஷ் கேட்கும்போதே பின்பக்கமிருந்து தன் சிறு மகளை நடக்க வைத்தபடி வந்த ஒல்லியான பெண் “வாங்க.. வாங்க” என புன்னகைத்தாள் .தன் கணவன் முகத்தைப் பார்த்தவுடன் “இதோ வருகிறேன்” என்று அடுப்படிக்குள் நுழைந்தாள் .

இராமக்கிருஷ்ணன் என்ன பேசுவதென்று தோன்றாமல் நிற்க, ரமேஷ்தான் “இவர்தான் எங்க அத்தான். சென்னை அம்பத்தூர்ல ரெஜிஸ்டர் ஆபீசுல வேலை பார்க்கிறாரு. அம்மாவப் பார்க்கிறதுக்காக வந்தாங்க. கிளம்பும்போது உங்களை பார்க்கனும்னு சொன்னாங்க. அதனாலதான் கூட்டிக் கொண்டு வந்தேன்” என்றான். என் கணவர் அவரை நோக்கி புன்னகைக்க அவரும் முறுவலித்தார். இவர் பேச எத்தனிக்கும்போது அடுப்படியிலிருந்து அந்தப் பெண் காபி தம்ளர்களுடன் வந்தாள். பேசும் முயற்சியை கைவிட்டு காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார். நான் காபியை வலது கையிலிருந்து இடது கைக்கு மாற்றிக் கொண்டு அவர்களின் பெண்ணை கையில் பிடித்தேன். அவள் நெளிந்தபடியே அருகில் வந்தாள். அவள் பெயரைக் கேட்காமல் அவள் அம்மாவின் பெயர் என்ன என்று கேட்டேன். “ராமலட்சுமி” என இழுத்துக் கூறியது. என் கணவர் எழுந்து “பேசிகிட்டு இருங்க, இப்போ வந்துவிடுகிறோம்” எனப் பொதுவாகக் கூறிவிட்டு ராமக்கிருஷ்ணனை பார்வையாலும் கையசைவாலும் சற்று வாருங்கள் என அழைத்தபடி வீட்டின் பின்பக்கம் நகர அவரும் பின் தொடர்ந்தார்.

என் பிள்ளைகளுடன் ரமேஷ் விளையாடிக் கொண்டிருக்க அருகில் அமர்ந்த ராமலட்சுமியிடம் அவளின் ஊர், தந்தை ,உடன் பிறந்தவர்கள் பற்றி பொதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவள் கூறிய எதுவும் மனதிற்குள் செல்லவில்லை. பின்னால் சென்றவர்கள் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள், அல்லது பேச்சாகத்தான் இருக்குமா , தம்பியை போய் பார்க்கச் சொல்லலாமா என மனம் படபடத்தது. கணவர் பெரிதாகக் கோபப்பட்டு பார்த்ததில்லை என்றாலும் ராமக்கிருஷ்ணனின் குணம் எனக்குத் தெரியாததால் ஏதாவது சத்தம் கேட்கிறதாவென கூர்ந்திருந்தேன்.

ஐந்து நிமிடத்திற்குப்பின் என் கணவர் முன்னால் வர தொடர்ந்து அவர் வந்தார். வந்தபோது பார்த்ததைவிட சற்று முகம் தெளிவடைந்திருந்தது போலத் தோன்றியது . என் கணவரின் முகமும் மலர்ந்திருந்தது எனக்கு ஆச்சர்யமாகவும் குழப்பமாகவும் இருந்தது. வரும் போதே கிளம்பலாம் என சைகை காட்டியதால் நான் எழுந்தேன். ரமேஷும் பிள்ளைகளுடன் எழ, நான் மகனை கையில் பிடித்துக்கொண்டு “ஆன்ட்டிக்கு பாய் சொல்லுங்க” எனக் கூறியதும் பிள்ளைகள் டாட்டா காட்டின. வருகிறோம் என பொதுவாக நானும் கணவருடன் இணைந்து சொல்ல அவர்கள் தலையாட்டினார்கள்.

ரமேஷ் பேருந்து நிறுத்தம் வரை உடன் வந்து, பேருந்தில் ஏற்றிவிட்டுச் சென்றான். அறுவடைக்குக் காத்திருந்த பழுத்த நெற்கதிர்களில் கவனம் பதித்திருந்தவரிடம் “அவர்கிட்ட என்னங்க பேசினீங்க, ஒன்னுமே சொல்லாம திடீர்னு பார்க்கனும் பேசனும்னு சொன்னதும் என்னால மறுக்கவும் முடியல, ஏன்னு கேட்கவும் முடியல. இப்பவாவது சொல்லுங்க ” என கெஞ்சுவது போலக் கேட்டேன்.
“நீ என்ன நினைக்கிற ”
“என்னால ஒன்னும் நினைக்க முடியல. நீங்களே சொல்லுங்க”
“அதுசரி, உனக்கெப்படி தெரியும். உண்மையா காதலிச்சவங்களுக்குத்தான் தெரியும்” எனக் கூறிவிட்டு தன்னுள் ஆழ்ந்தார். கண்கள் கலங்குவது போலத் தெரிந்தது.
“ஒவ்வொருத்தனும் ஒரு பொண்ண விரும்பறான்னா அந்தப் பொண்ண மற்ற யாரையும் விட தன்னாலதான் மகிழ்ச்சியா வச்சுக்க முடியும்னு நம்பறான். சில சமயத்துல தன்னவிட வேறொருத்தன் அவள சந்தோசமா வச்சுக்குவான்னு புரிஞ்சா விட்டுக் கொடுக்கவும் தயங்க மாட்டான். அப்படியில்லாம தடுக்க முடியாம வேறொருத்தன்கூட கல்யாணம் ஆயிடுச்சுன்னா அவ எப்படியிருக்காளோன்னு கவலை அவனை தினந்தோறும் கொன்னுக்கிட்டேயிருக்கும். எனக்கு மாதிரி “.
“இதெல்லாம் இருக்கட்டும் அவர்கிட்ட என்ன சொன்னீங்கன்னு சொல்லுங்க”
” இனிமே அவன் நிம்மதியா இருப்பான்” என்ற பீடிகையுடன் சொன்னதைக் கேட்டவுடன்
நான் அவர் தோளில் சாய்ந்து கொண்டேன். பதட்டம் குறைந்ததில் விழி கலங்கி ஒருதுளி புடவையில் வழிந்தபோது சற்று ஆசுவாசமாக உணர்ந்தேன். அவர் எதுவும் சொல்லவில்லையோ என யோசித்துக்கொண்டிருந்தபோது “அவனோட பொண்ணு பேரு என்னன்னு கேட்டியா ” எனக் கேட்டார்.
“கேட்கவில்லை”
“கேட்டுத்தான் தெரிஞ்சுக்கனுமாக்கும்” என்றபடி என்னை அணைத்துக் கொண்டவரோடு ஒட்டிக்கொண்டேன்.
அவர் உண்மையை எல்லாம் சொல்லியிருந்தால்கூட பரவாயில்லை. இப்போதே எதையாவது கூறி மழுப்பியிருக்கலாம், மனம் நிம்மதியடைந்திருக்கும். என்னாலும் இனிக் கூறமுடியாது. அவர் இப்போது சொல்லாததற்கு வேறு வஞ்சகத் திட்டம் ஏதேனும் இருக்குமோ. பிறகு எப்படியாவது தெரியும்போது இவரிடம் என் நிலைமை என்னவாகுமோ என்ற எண்ணங்கள் வளர, வெள்ளத்தில் நகரும் இலையில் சிக்கிய சிற்றுயிரென மனம் பதைக்கத் தொடங்கியது.

கசப்பின் சிறுதுளி – தஹர் பென் ஜெலூனின் ‘உல்லாசத்திருமணம்’ மொழிபெயர்ப்பு நாவல் குறித்து பாவண்ணன்

’பறைச்சியாவது ஏதடா, பணத்தியாவது ஏதடா, இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ’ என்பது சிவவாக்கியரின் வரி. அது ‘மனிதர்களிடையில் வேறுபாடில்லை’ என்பதை உணர்த்தும் ஞானவாக்கியம். பதினெண்சித்தர்களில் ஒருவர் அவர். சாதிசமய வேறுபாடுகளைப் பெரிதென நினைக்கும் பித்தர்களைச் சாடியவர். மொழி வேறுபாடு, இனவேறுபாடுகளப் பெரிதெனப் பேசித் திரிகிறவர்கள் கேட்டு மனம் திருந்துபவர்களுக்காக சொல்லப்பட்டதாகவும் நாம் இந்த வாக்கியத்தை எடுத்துக்கொள்ளலாம். சங்க காலத்தில் கணியன் பூங்குன்றனார் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொன்ன மகாவாக்கியத்தின் மற்றொரு வடிவமே இது.

தமிழில் மட்டுமல்ல, இதுபோன்ற அமைதிவாக்கியங்கள் உலகமொழிகள் ஒவ்வொன்றிலும் நிச்சயம் இருக்கக்கூடும். ஆயினும், ஒவ்வொரு நூற்றாண்டிலும் மனிதர்களுக்கு கிறுக்குப்பிடித்து இனத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் ஒருவரையொருவர் கொன்றும் கொலையுண்டும் ஆயிரக்கணக்கில் அழிந்துபோகிறார்கள். சமூக வரலாறு அந்தப் புள்ளிவிவரங்களையெல்லாம் தொகுத்தும் பகுத்தும் வைத்திருக்கும்போது இலக்கியம் அந்தப் புள்ளிவிவரங்களை காட்சியளவில் தொகுத்தும் பகுத்தும் காட்டி மானுடத்தின் சாட்சியாக விளங்குகிறது. சதத் ஹஸன் மண்டோவின் கதைகள் இந்த மண்ணில் நிகழ்ந்த மிகக்கொடூரமான மதமோதல்களின் வரலாற்றுச் சாட்சிகளாக இன்றளவும் உள்ளன.

ஆழ்மனத்தில் ஒரு மனிதனிடம் தன்னை மற்றொருவனுக்குச் சமமானவன் எனக் கருதும் எண்ணமே இல்லை என்றே தோன்றுகிறது. அடுத்தவனிடமிருந்து தன்னை வேறுபட்டவன் என எடுத்துக்காட்ட ஆயிரம் காரணங்களை அது பொழுதெல்லாம் தேடிக்கொண்டே இருக்கிறது. உதடுகள் ‘நாம் அனைவரும் சமமானவர்கள்’ என உச்சரித்தாலும் உள்ளம் ஏதோ ஒரு புள்ளியில் நாம் வேறுபட்டவர்கள் என உள்ளூர மறுகிக்கொண்டிருக்கிறது. அந்த எண்ணமே, ஒரு புள்ளியில் திடீரென வெடிக்கும்போது வெறுப்பாக, வன்மமாக, பகையாக, கொலைவெறியாக உருமாற்றம் பெறுகிறது. தமிழகத்திலும், இந்தியாவிலும் மட்டுமல்ல, உலகமெங்கும் இந்த வெறி மொழிவெறி, இனவெறி, நிறவெறி என்னும் பெயரில் பாசியெனப் படர்ந்து நிறைந்திருக்கிறது. தஹர் பென் ஜெலூனின் பிரெஞ்சு நாவலான ‘உல்லாசத் திருமணம்’ நிறவெறிக்குப் பலியான ஒரு குடும்பத்தின் கதையைச் சித்தரிக்கிறது.

கடந்த நூற்றாண்டின் முப்பதுகளின் பின்னணியில் மொராக்கா தேசத்தில் உள்ள ஃபேஸ் என்னும் நகரத்தில் நாவல் தொடங்குகிறது. வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தேசம் மொராக்கா. வடக்கில் மத்தியதரைக்கடலுக்கும் மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் கிழக்கில் அல்ஜீரியாவுக்கும் தெற்கில் சஹாரா பாலைவனத்துக்கும் இடையில் மொராக்கா இருக்கிறது. அரபு, பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகள் அங்கு பேசப்படுகின்றன. ஃபேஸ் என்பது மொராக்காவில் உள்ள ஒரு நகரம். ஜிப்ரால்டர் ஜலசந்திக்கு அருகில் உள்ள நகரம். இஸ்லாமியர்கள் வாழும் நகரம். அவர்கள் அனைவரும் வெள்ளை நிறம் கொண்டவர்கள். அடிமைமுறை வழக்கத்தில் இருந்த காலம் என்பதால் ஆப்பிரிக்காவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட அடிமைகள் அவர்களிடம் கூலிகளாக வேலை செய்கிறார்கள். அவர்களும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதும் கருப்பு நிறம் கொண்டவர்கள். மொராக்காவே ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடென்ற போதும், மொராக்காவின் வெள்ளைநிற இஸ்லாமியர்கள் கருப்புநிற இஸ்லாமியர்களை ஆப்பிரிக்கக் கருப்பர்கள் என்றும் நீக்ரோ என்றும் அழைக்கிறார்கள். நேரம் கிட்டும்போதெல்லாம் ‘ஆப்பிரிக்கன் ஆப்பிரிக்கன்’ என்று சொல்லி அவமானப்படுத்துகிறார்கள். இந்த நிறவெறி ஒவ்வொருவரின் ஆழ்மனத்திலும் ஆழமாகப் பதிந்துள்ளது.

கருப்பு இஸ்லாமியர்களை அவர்கள் வெறுத்தபோதும், அவர்கள் இல்லாமல் வெள்ளை இஸ்லாமியர்களால் வாழ முடிவதில்லை. குடும்ப வேலைகளுக்கும் கடினமான புற வேலைகளுக்கும் கூலி வேலைகளுக்கும் அவர்கள் தேவைப்ப்டுகிறார்கள். அந்தத் தேவையை ஒட்டியே அவர்கள் அங்கு வந்து சேர்கிறார்கள். ஒருவித வெறுப்பு-விருப்புக்கு நடுவிலேயே அவர்கள் உறவு அங்கு நிலவுகிறது.

ஃபேஸ் நகரத்தைச் சேர்ந்த ஓர் எளிய வெள்ளை இஸ்லாமிய வணிகன் அமீர். திருமணமானவன். நான்கு பிள்ளைகளுக்குத் தகப்பன். தன் மதநூலான குரானின் சொற்படி நடப்பவன் என்பதால் மனிதர்களிடையில் பேதம் பார்ப்பதை பாவம் என்று நினைப்பவன். அவன் வீட்டிலும் கருப்பு இஸ்லாமிய வேலைக்காரர்கள் உண்டு என்றபோதும் அவர்களிடம் நியாய உணர்வோடு நடந்துகொள்பவன். ஆனால் அவன் மனைவி லாலா ஃபாத்மா அப்படிப்பட்டவள் அல்ல. அவளால் பேத உணரவிலிருந்து ஒருநாளும் விடுபட முடிந்ததில்லை.

ஒருமுறை அமீர் கொள்முதலுக்காக தன் பதின்மூன்று வயதுடைய கரீம் என்னும் சிறுவனுடன் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த செனகல் என்னும் ஊருக்குப் புறப்படுகிறான். வட ஆப்பிரிக்க முனையிலிருந்து மேற்கு ஆப்பிரிக்கா வரைக்கும் செல்லும் அந்தப் பயணம் மிகமிகக் கடுமையானது. செனகலில் சிறிது காலம் அவன் தங்கியிருக்க நேர்கிறது. செனகலுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு வீடெடுத்து தங்குவது அவன் வழக்கம். அதேபோல இடைக்காலத் துணையாக ஓர் இளம்பெண்ணை மதமுறைப்படி பணமும் நகைகளும் கொடுத்து உல்லாசத்திருமணம் செய்துகொள்வதும் வழக்கம். தற்காலிகத் திருமணத்துக்கு உல்லாசத்திருமணம் என்று பெயர். அமீர் உல்லாசத்திருமணம் செய்துகொள்பவளின் பெயர் நபு. அவளும் இஸ்லாமியப்பெண்ணே. ஆனால் கருப்புநிறம் கொண்டவள். அவள் வழியாக அவன் அடையும் இன்பம் அவனை மயக்கம் கொள்ளவைக்கிறது. இல்லறம் என்பது இத்தனை இன்பமயமானதா என்பதை முதன்முதலாக அவள் வழியாக அவன் அறிந்துகொள்கிறான்.

கொள்முதல் காலம் முடிந்து அவன் தன் சொந்த ஊருக்குத் திரும்பும் நாள் நெருங்குகிறது. நபு மீது காதல் வசப்பட்டு விடுகிறான் அமீர். அவளைப் பிரிந்து செல்ல அவன் மனம் ஒப்பவில்லை. அவளைத் தன்னோடு அழைத்துச் சென்று இரண்டாவது மனைவியாக ஆக்கிக்கொள்ள அவன் நினைக்கிறான். தன் மகன் கரீமின் எண்ணத்தை அறிய அவன் முதலில் விரும்புகிறான். அப்பாவின் மகிழ்ச்சியைப் பார்க்கும் சிறுவன் அதற்குச் சம்மதிக்கிறான். நபுவுக்கும் அதில் சம்மதமே. அதனால் திரும்பும் காலத்தில் அவளையும் அவன் அழைத்துக்கொண்டு ஊருக்குப் புறப்படுகிறான்.

ஃபேஸ் நகரத்தை நோக்கிய அவர்களுடைய பயணம் தொடங்குகிறது. மெக்னெஸ், ஸகோரா, தாஞ்சியர், ஜிப்ரால்டர், காஸாபிலான்கா, உவர்ஸஸாத், தெத்துவான், மராக்கேஷ், நதூர், செத்தாத், ரபாத் என பல இடங்களை மோட்டார் வாகனம், கால்நடை வாகனம் என பல விதங்களில் பயணம் செய்து கடந்து இறுதியாக அவர்கள் ஃபேஸ் நகருக்கு வந்து சேர்கிறார்கள். இந்தக் கொள்முதல் பயணத்தை மிகநீண்ட காட்சிச் சித்திரமாக தீட்டிக் காட்டியிருக்கிறார் தஹர் பென் ஜெலூன். வாகனத்துக்குள் இருக்கும்போது முதன்முறையாக அவன் மனம் தன் வெள்ளைநிற மனைவி நபுவை எப்படி எதிர்கொள்வாள் என்று நினைத்துக் கலங்குகிறான். அவளுடைய எதிர்ப்புணர்வை தான் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற எண்ணமும் அவனுக்குக் கலக்கத்தை அளிக்கிறது.

அந்தப் பயணத்தில் ஓவ்வொருவருமே நபுவின் கருப்புநிறத்தை ஒருவித ஒவ்வாமையுடன் பார்க்கிறார்கள். ஆனால் அந்நிறத்தை முன்னிட்டு அதை உடனடியாக ஒரு சமூகப்பிரச்சினையாக யாரும் மாற்றவில்லை. அப்படி ஒரு எண்ணமே அப்போது யாரிடமும் இல்லை. நிறப்பிரச்சினை ஒரு குடும்பம் சார்ந்த பிரச்சினையாக மட்டுமே சுருங்கியிருக்கிறது. ஃபேஸ் நகரத்திலிருந்து செனகலுக்கும் செனகலிலிருந்து ஃபேஸ் நகரத்துக்குமான பயணத்தை மட்டுமே விவரிக்கும் முதல் ஐந்து அத்தியாயங்கள் வழியாக நாம் அடையும் எண்ணம் இதுவே. மொராக்கா இஸ்லாமிய மக்களிடையே நிறம் சார்ந்த வேறுபாட்டுணர்வு, வெறுப்பூட்டும் அளவுக்கு ஆழமாகப் பதிந்துள்ளது. ஆனால் குடும்ப அளவிலான வெறுப்பு என்கிற அளவில் மட்டுமே அது படிந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, வெள்ளை நிறத்திலொன்று, கருப்பு நிறத்திலொன்று என நபுவுக்கு இரட்டைக்குழந்தை பிறக்கும்போது, முதல் மனைவியான லாலா, சூனியம் வைத்து நபுவைக் கொல்லும் அளவுக்குக்கூட செல்கிறாள். அதுதான் அவள் செல்லும் வெறுப்பின் எல்லை.

அடுத்த ஐம்பது பக்கங்களில் அமீரின் குடும்பத்தில் பல எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அமீரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகளுக்குத் திருமணம் நடக்கிறது. ஆண்பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்றுவிடுகிறார்கள். உடல்நலம் குன்றி லாலா இறந்துவிடுகிறாள். வணிகமும் சரிந்துவிடுகிறது. வீட்டை வந்த விலைக்கு விற்றுவிட்டு ஃபேஸைவிட பெரிய நகரமான தாஞ்சியருக்குச் சென்று வணிகத்தைத் தொடங்குகிறான் அமீர். அவன் எதிர்பார்த்த அளவு அதில் பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. எதிர்பாராத விதமாக அவனும் மரணமடைந்துவிடுகிறான். நபுவுடைய இரு பிள்ளைகள் ஹுசேனும் ஹசனும் அமீரின் வணிகத்தைத் தொடர்ந்து நடத்துககிறார்கள்.

கருப்பு நிறம் கொண்ட ஹசன் செல்லுமிடங்களிலெல்லாம் இடர்கள் காத்திருக்கின்றன. நகரத்தில் எங்கெங்கும் நிறவெறி தாண்டவமாடுகிறது. ஹசனும் ஹுசேனும் தாமே தமக்குப் பிடித்த பெண்ணைத் தேடிக்கொள்கிறார்கள். ஹுசேனுக்கு ஒரு வெள்ளை இஸ்லாமியப்பெண் கிடைக்கிறாள். ஹசனுக்கு ஒரு கலப்பின இஸ்லாமியப்பெண் கிடைக்கிறாள். ஹசனுக்கு ஒரு மகன் பிறக்கிறான். அவன் பெயர் சலீம். அவனும் கருப்பு நிறம் கொண்டவனாக இருக்கிறான். அவனும் வளர்ந்து இளைஞனாக நகரில் வலம் வருகிறான். நகரத்தில் முன்பிருந்ததைவிட நிறவெறி உச்சத்தில் இருக்கிறது. நடைபாதையில், பேருந்துப் பயணத்தில் அவனைப் பார்க்கிறவர்கள் அருவருப்புடன் பார்த்து வசைபாடுகிறார்கள். அவனை மதிப்பவர்கள் யாருமே இல்லை. அவனை இஸ்லாமியனாக ஒருவரும் ஏற்றுக்கொள்வதில்லை. பொதுமக்கள் தொல்லை என்பதற்கும் அப்பால், அரசு நிர்வாகமும் காவல் துறையும் கருப்பு நிறத்தவரை அந்நியர்களாக கட்டமைக்கின்றன. தகுந்த ஆவணங்கள் இல்லாத சமயங்களில் கருப்பு நிறத்தவரை கேள்விமுறை இல்லாமல் கைது செய்கிறது. ஒரு படி மேலே சென்று அவர்களை அடையாளம் கண்டு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவைக்கிறது. துரதிருஷ்டவசமாக காவலர்களிடம் அகப்பட்டுக்கொள்ளும் கருப்பு நிற சலீம் கைது செய்யப்பட்டு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்படுகிறான். காவல் துறையிடம் அவன் மன்றாடல்கள் எதுவும் பலிக்கவில்லை.

அவனை விடுவிக்கும் இடம் ஒரு காலத்தில் நபு வாழ்ந்த செனகல் நகரம். அவனோடு சேர்ந்து விடுவிக்கப்பட்ட இளைஞர்கள் செனகலிலிருந்து எங்கெங்கோ சென்றுவிட, அவன் மட்டுமே போக்கிடமின்றி செனகலில் சுற்றியலைகிறான். அவனால் அந்த ஊருடன் ஒட்டிக்கொள்ள இயலவில்லை. மீண்டும் தாஞ்சியாருக்கே செல்லவேண்டும் என்று தோன்றுகிறது. தான் பிறந்த இடத்திலேயே வாழவேண்டும் என அவன் நினைக்கிறான். மசூதிகளிலும் விடுதிகளிலும் சிறுசிறு வேலைகள் செய்து பணமீட்டிக்கொண்டு தாஞ்சியாருக்குப் புறப்படுகிறான்.

அமீரும் நபுவும் பயணம் செய்த அதே பழைய பாதை. அரைநூற்றாண்டுக்குப் பிறகு அதே பாதையில் அவன் புறப்படுகிறான். இந்த இரண்டு பயணங்களைப்பற்றிய குறிப்புகளே நாவலின் முக்கியமான அடையாளம். நபுவுக்கு வாய்த்ததுபோல சலீமின் பயணம் அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. எங்கெங்கும் வசைகள். அவமானங்கள். புறக்கணிப்புகள். அவனுடைய கருப்பு நிறமே எல்லோருடைய பார்வையிலும் முதலில் பட்டு முகம் சுளிக்கவைக்கிறது. உணவும் தங்குமிடமும் இல்லாமல் ஒவ்வொரு இடத்திலிருந்தும் துரத்தப்படுகிறான். கிடைக்கும் வேலைகளைச் செய்து பணம் ஈட்டலாம் என்று முயற்சி செய்தபோதும், அவனுக்கு வேலை கொடுப்பவர்கள் யாருமில்லை. அவனைத் துரத்தியடிப்பதிலேயே ஒவ்வொருவரும் குறியாக இருக்கிறார்கள்.

வழியில் இரக்கமுள்ளவர்கள் சிலரையும் அவன் சந்திக்கிறான். அவர்களே அவன் ஆசுவாசம் கொள்ள சிறிதளவு உணவை அளிக்கிறார்கள். தங்க இடமும் அளிக்கிறார்கள். பணம் வாங்கிக்கொள்ளாமல் தன் வாகனங்களில் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரம் வரைக்கும் கொண்டுவந்து விட்டுவிட்டுச் செல்கிறார்கள். எஞ்சிய தொலைவை அவன் கால்நடையாகவே கடந்து பல மாதங்களுக்குப் பிறகு ஊருக்குத் திரும்புகிறான். ஆயினும் குடும்பத்துடன் நீண்ட காலம் அவனால் சேர்ந்து வாழ வழியில்லாமல் போய்விடுகிறது. நருக்குள் கருப்புநிறத்தவர்களின் நடமாட்டத்தை காவல் துறை மட்டுமல்ல, ஒவ்வொருவருமே கண்காணிக்கிறார்கள். அவர்களுடைய பார்வையில் படும்போதெல்லாம் விரட்டுகிறார்கள். கருப்பு நிறத்தவர்களின் நடமாட்டத்தை மற்றவர்கள் அவமானமாகக் கருதுகிறார்கள். நகரத்தின் அழகை கருப்பர்கள் களங்கப்படுத்துவதாக நினைக்கிறார்கள். கருப்பு நிறத்தவர்களுக்கு நகரத்திலும் இடமில்லை, குடும்பத்திலும் இடமில்லை, மனிதர்களின் நெஞ்சிலும் இடமில்லை என்னும் நிலை உருவாகிறது. துரதிருஷ்டவசமாக மீண்டும் அவனை காவல்துறை வேட்டையாடுகிறது. இந்த முறை அவர்களுடைய துப்பாக்கிக்குண்டுக்கு அவன் பலியாகிவிடுகிறான்.

நபுவுக்குக் கிடைத்த பாதுகாப்பு, நபுவின் பேரப்பிள்ளைகளுக்கு இல்லாமல் போய்விடுகிறது. அப்படியென்றால் நாகரிகம் என்பதற்கு என்ன பொருள்? கல்வி, வளர்ச்சி என்பதற்கெல்லாம் என்ன பொருள்? நிறமாற்றத்தை சகித்துக்கொள்ள இயலாத குணத்தைத்தான் நாகரிகத்தின் பெயராலும் வளர்ச்சியின் பெயராலும் நாம் பெற்றிருக்கிறோம் என்பதுதான் மிகப்பெரிய கசப்பான உண்மை. அந்தக் கசப்பின் சிறுதுளி உல்லாசத்திருமணத்தில் திரண்டு நிற்கிறது. பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கும் சு.ஆ.வெங்கட சுப்பராய நாயகர் பாராட்டுக்குரியவர். சிக்கலான இடங்களில் கூட புழங்குதளத்தில் உள்ள சொற்களைக்கொண்டு மிகவும் நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார். புனைவு நூலுக்குப் பொருத்தமான ஒரு மொழி அவருக்கு வசப்பட்டிருக்கிறது.

மனவளர்ச்சி குறைந்த கரீம் என்னும் சிறுவனுக்கு ஒரு பூனை கதை சொல்லும் தருணமொன்று இந்த நாவலில் இடம்பெற்றிருக்கிறது. அந்தப் பூனை ஒரு செல்வந்தர் வீட்டில் தங்கியிருந்தபோது நேரில் பார்த்த நிகழ்ச்சியை கதையாகச் சொல்கிறது. அந்தச் செல்வந்தர் ஊரிலேயே பெரிய மனிதர். பாஷா. பாஷாவுக்கு இளம்பெண்களை மிகவும் பிடிக்கும். அந்த ஊர் மரபின்படி ஒவ்வொரு முலூத் பண்டிகையின்போதும் கன்னி கழியாத ஒரு பெண்ணை பரிசாக அனுப்பிவைக்கவேண்டும். அது ஒரு கட்டாய விதி.

மெலிந்து, கச்சிதமான தோற்றத்துடன் நீண்ட கூந்தலுடன் கூடிய ஒரு இளம்பெண் பண்டியை தினத்தன்று வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகிறாள். நள்ளிரவை நெருங்கும் நேரத்துக்கு சற்றுமுன் பெரியதொரு ‘புயிர் நோஸ்’ என்னும் அரேபிய அங்கியை அணிந்துகொண்டு செல்வந்தரின் முன்னால் வந்து நிற்கிறாள் ஒரு பெண்.

அந்த அறையில் ஓரமாக ஒதுங்கியிருந்து அக்காட்சியைக் கண்டதாகச் சொல்கிறது அப்பூனை. அவளுடன் பேசிச் சிரித்து பொழுதுபோக்கி உறவு கொள்ள முற்படும் சமயத்தில் வந்திருப்பவள் பெண்ணல்ல என்பதையும், பெண்வேடத்தில் வந்திருக்கும் ஆண் என்பதையும் அப்பூனை பார்த்துவிடுகிறது. ஏதோ ஒரு தருணத்தில் பூனை தம்மைப் பார்ப்பதைப் பார்த்துவிடுகிறார் செல்வந்தர். உண்மைக்கு ஒரு சாட்சி உருவாவதை அவர் விரும்பவில்லை. உடனே அந்தப் பூனையை அடித்துத் துரத்திவிடுகிறார்.

மாளிகையைவிட்டு துரத்தப்பட்ட பூனை தெருவில் இறங்கி நடக்கத் தொடங்குகிறது. வழியில் ஓர் ஆங்கிலேயப்பயணி அந்தப் பூனையைக் கண்டு அதைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு செல்கிறார். பயணி அந்தப் பூனையை நல்லபடியாகவே பார்த்துக்கொள்கிறார். எதிர்பாராத விதமாக ஒருநாள் அவர் இறந்துவிடுகிறார். அவருடைய உறவினர்கள் வந்து சேரும்வரை அப்பயணியை அருகிலேயே இருந்து கவனித்துக்கொள்கிறது பூனை. வந்தவர்கள் அவரை அடக்கம் செய்துவிட்டு அப்பூனையை விரட்டியடித்துவிட்டுச் செல்கிறார்கள்.

நாவலைப் படிக்கும் போக்கில் ஒரு வேடிக்கைக்கதை போல இந்தப் பூனைக்கதை தோற்றமளித்தாலும், நாவலின் மையத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு முக்கியக்குறிப்பை அது வழங்குகிறது. விரட்டப்படும் பூனை வெறுத்து, ஒதுக்கி, ஒடுக்கப்படும் இனத்தை அடையாளப்படுத்தும் படிமமாக நாவலில் விரிகிறது. இந்த நாவலில் நிறைந்திருக்கும் நிறவெறித் துன்பங்களையும் சதாகாலமும் மீண்டும் மீண்டும் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்தை நோக்கித் துரத்தப்படும் வேதனைகளையும் புரிந்துகொள்ள இந்தப் பூனைக்கதை நமக்கு உதவியாக இருக்கிறது.

பூனைக்கதையைப் போலவே மற்றொரு இடத்தில் ஒரு பாம்புக்கதையும் நாவலில் இடம்பெற்றிருக்கிறது. பகலில் மனிதனாகவும் இரவில் பாம்பாக மாறி வேட்டையாடும் ஒருவனைப்பற்றிய கதை அது. விரட்டப்படும் பூனை ஒதுக்கப்படும் இனத்தினரைக் குறிப்பிடும் படிமமென நாம் எடுத்துக்கொண்டால், வேட்டையாடிக் கொல்லத் துடிக்கும் பாம்பு இனவெறி கொண்ட கூட்டத்தைக் குறிப்பிடும் படிமமாகும்.

பூனைக்கும் பாம்புக்குமான மோதல் ஒவ்வொரு கட்டத்திலும் வலுத்தபடியே செல்கிறதே, ஒரு தருணத்திலும் அது தீர்வை நோக்கி நகரவில்லை. பூனை பாம்பைக் கண்டு அஞ்சி ஓடுகிறது. ஓடிஓடி ஒளிவதே அதன் வாழ்க்கைவிதியாகிறது. தருணம் கிடைத்தால் பாய்ந்து பாம்பை ஒருமுறை கடித்துக் குதறவும் செய்கிறது. ஆனால் கூட்டமாக வந்து சூழ்ந்துகொள்ளும் பாம்புகளின் நஞ்சுக்கு இறுதியில் இரையாகி மடிகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கைநிலையும் கிட்டத்தட்ட இதுபோலவே இருக்கிறது என்று சொல்லவேண்டும்.

தம் கருப்பு நிறத்தை மறைத்துக்கொள்ள முடியாத ஏழைகள் காலமெல்லாம் ஆதரவைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள், முடிந்தவரை எதிர்த்து நிற்கிறார்கள். மோதல் வலுக்கும்போது தோற்கடித்து கொல்லப்படுகிறார்கள். அவ்விதமாக கொல்லப்பட்ட ஓர் எளிய இளைஞனான சலீம் வாழ்க்கையை இந்த நாவலில் தஹர் பென் ஜெலூன் சித்தரித்துக் காட்டுகிறார்.

ஹஃபீத் என்னும் இளைஞன் கதையின் தொடக்கத்தில் இடம்பெறுகிறான். அமீருக்கு நெருங்கிய உறவினன் அவன். கினியா நாட்டுக்கு கொள்முதலுக்காகச் சென்றிருந்த அவன் தந்தை கினியா நாட்டிலிருந்து அழைத்து வந்திருந்த கருப்பு அடிமைப்பெண்ணோடு சேர்ந்து வாழ்ந்தார். அவர்களுக்குப் பிறந்தவன் அவன். கலப்புக்குழந்தை. தூய இனவாதம் பேசும் மக்கள் பார்வையில் வெறுப்புக்கும் அவமதிப்புக்கும் ஆளானவன். தொடக்கத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு அதிகாரபூர்வமற்ற வழிகாட்டியாக வேலை செய்து கிடைத்த வருமானத்தில் வாழ்ந்துவந்தான். எங்கும் தொடர்ந்து துரத்தும் இனவாதப் பிரச்சினை அங்கும் வந்து அவனை வெளியேற்றுகிறது. அவன் அந்த வழிகாட்டி வேலையை உதறுகிறான். வேறு சில்லறை வேலைகள் செய்து பொருளீட்டுகிறான். தன் தகுதியை வளர்த்துக்கொள்ள வீட்டிலேயே ஒரு நூலகத்தை ஏற்படுத்தி ஏராளமான நூல்களைப் படித்து தன் அறிவை வளர்த்துக்கொள்கிறான். இறுதியில் வாய்ப்பு கிடைத்ததும் கடவுச்சீட்டு பெற்று நாடைவிட்டு வெளியேறி ஸ்டாக்ஹோமுக்குச் சென்றுவிடுகிறான். ஹஃபீத்தை உயிர்பிழைக்க வைத்தது அவனுடைய கல்வியும் நுட்பமான திட்டமிடலும். ஆவேசமும் மோதலும் மூர்க்கரின் முன்னால் எடுபடாது என்பதை அவன் தொடக்கத்திலேயே புரிந்துகொள்கிறான். உயிர்வாழ்வதற்கு உத்தரவாதம் உள்ள இடம் தேடி பறந்துபோய்விடுகிறான். ஹஃபீத்தின் நிலைமைக்கும் சலீமின் நிலைமைக்கும் வேறுபாடு எதுவுமில்லை. ஹஃபீத் சென்ற பாதை வாழ்க்கையை நோக்கி அழைத்துச் சென்றது. சலீம் சென்ற பாதை மரணத்தை நோக்கி அழைத்துச் சென்றது. ஜெலூன் தன் நாவலில் எதைப்பற்றியும் தீர்ப்பு சொல்லவில்லை. மாறாக, தன் நாவலை வரலாற்றின் சாட்சியாக மாற்றுகிறார்.

(உல்லாசத்திருமணம். ஆப்பிரிக்க நாவல். தஹர் பென் ஜெலூன். பிரெஞ்சிலிருந்து தமிழில் சு.ஆ.வெங்கட சுப்பராய நாயகர். தடாகம் பதிப்பகம், 112, முதல் தளம், திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை – 600041)

அலைவு – கமலதேவி சிறுகதை

நிலாவெளிச்சத்தில் மாரியம்மன் கோவிலின் பெரிய வேப்பமரத்தை கண்டதும் கண்களை கசக்கிக்கொண்டு கண்ணன் எழுந்து நின்றான்.முந்தின நிறுத்தத்தில் இறங்கியிருக்க வேண்டும்.

வலதுபுறம் சென்ற வயல்பாதையில் நடந்தான்.இன்னும் மேற்கே நடக்க வேண்டும்.வியர்வையில் கசகசத்த முரட்டுசட்டைக்குள் காற்று புகுந்து எளிதாக்கியது.வரிசையாக நுணா, புங்கை,பனை,ஈச்சம் மரங்கள்.மேட்டுக்காடு. சற்று தொலைவில் களத்தில் மின்விளக்கின் ஔி தெரிந்தது.

வெளிச்சம் அருகில் வரவர அவன் கால்கள் தயங்கின.எதிரே காற்றுபுகுந்த சோளக்காடு பேயாட்டமிட்டது.இங்கே பாதையில் படுத்துக்கொள்ளலாம் அல்லது வந்தபாதையில் திரும்பலாம்.ஊருக்கு செல்லும் கடைசி பேருந்தாவது கிடைக்கும்.

ஊரில் மட்டும் என்ன இருக்கிறது.வீட்டில் தங்கை குடும்பம் இருக்கிறது.ஒருநாளைக்கு சலிக்காமல் சோறு போடுவாள்.எதற்காக திரும்ப திரும்ப இங்கு வர வேண்டும்.ஒருநாள் விடுமுறையில் கடைவிடுதியிலேயே தூங்கியிருக்கலாம்.ஒவ்வொரு முறை ஏதோ ஒன்றால் எட்டிஉதைக்கப்பட்டு இந்த களத்தில் வந்து விழவேண்டும் என்று கணக்கில் எழுதியதை யாரால் மாற்றமுடியும்.

களத்தின் ஓரத்திலிருந்த முருங்கைமரத்தில் சாய்ந்து நின்றான். வாசல்களத்தில் கட்டிலில் சந்திராஅத்தை அமர்ந்திருக்கிறாள்.கொண்டையிலிருந்து பிரிந்த முடிகள் காற்றில் அசைகின்றன.அந்த முகம்,இந்தக்களம்,இந்தப்பாதையை ஆறுமாதத்திற்கு ஒருமுறை பார்த்துவிட வேண்டும்.இல்லையென்றால் தூக்கத்தில் துரத்தும்.

அத்தையிடம் சொன்னால் நம்பமாட்டாள்.அவளிடம் இரண்டுவார்த்தைகள் பேசவேண்டும்.என்ன திட்டினாலும் இதையெல்லாம் வெட்டிவிட முடியவில்லை.சிறுபிள்ளையில் மனதில் விழுந்து விட்டவை.இன்று இல்லையென்றால் நாளை வருகிறவன்தான்.

தட்டை அறுப்பதற்காக வந்து தங்கியிருந்த ஆட்கள் மாங்காய்களை போட்டு குழம்பு வைத்திருந்த வாசம் களத்தை சூழ்ந்திருந்தது.அவர்கள் கூட்டமாக சாப்பிட அமர்ந்தார்கள்.அந்த சிறியபையன் அவர்களை சுற்றிவந்து அவர்களிடம் ஆளுக்கொரு வாய் சோற்றை வாங்கித் தின்றபடி குதித்து குதித்து ஓடினான்.

அவன் சோற்றிலிருந்து திசைமாறி களத்தை சுற்றிவரத் தொடங்கினான். அவன்உயரமிருந்த உருண்டைக்கல்லில் அமர்ந்திருந்த ராயப்பட்டிக்காரர், “தம்புடு வாடா…லட்சணகுஞ்சய்யால்ல..ஒருவாய் சோறு வாங்கிக்க… கத சொல்றேன்..”என்று அவனை அழைத்தார்.கண்ணனுக்கு சிரிப்பு வந்தது.

“கத சொல்லுறியா பாட்டா…கத சொல்லுறியா பாட்டா…”என்றபடி ஓடிவந்து வாயைத்திறந்தான்.அவர் தன்நீண்டுஅகன்ற கையால் சோற்றை எடுத்து வாயில் வைத்தார்.

இருபுறமும் உப்பியக்கன்னங்களுடன், “என்ன கத பாட்டா..”என்றபடி கைகால்களை ஆட்டிக்குதித்தான்.கருத்தப்பயலுக்கு மணியான கண்கள்.உளுந்துக்கு எண்ணெய் தடவி போட்டது மாதிரி வியர்வைக்கு துணியில்லா மேனியுடன் அலைந்தான்.உணவை முடித்தவர்கள் எழுந்து பாத்திரங்களை கழுவி கவிழ்த்தார்கள்.

சோலை அடுப்பின்பக்கம் வந்து அமர்ந்தான். தேர்ந்து எடுத்த சோளக்கருதுகளை கங்கிலிட்டு திருப்பித்திருப்பி பதம் பார்த்தான்.பெண்கள் கிழக்குப்பக்கமாக படுதாவை விரித்து கொண்டிருந்தார்கள்.ஆம்பிளையாட்கள் களத்தில் அங்கங்கே சாய்ந்தார்கள்.

கண்ணன் செருப்புகள் ஓசையெழுப்ப நடந்தான். அத்தை திரும்பிப் பார்த்தாள்.அவன் பாதையிலிருந்து களத்தில் ஏறினான்.சந்திராவிற்கு மனதில் சட்டென்று எதுக்கு இங்க வர்றான் என்று முதலில் தோன்றியது.பின் அதற்காக சங்கடப்பட்டுக்கொண்டு , “இந்நேரத்துல என்ன கண்ணா?”என்றாள்.

“பஸ்ஸீல தூங்கிட்டேன்..இங்க கோயில்கிட்ட எறக்கிட்டு போயிட்டான்..”என்றபடி வாசல் படிகளில் அமர்ந்தான். அவன் மீது வீசிய நெடியை உணர்ந்ததும் சந்திராவிற்கு எரிச்சலாக வந்தது.முகத்தை சுருக்கிக்கொண்டாள்.

“உனக்கு எத்தனவாட்டி சொல்றது? இந்த நெலமையில இங்க வறாதன்னு,”

அவன் ஒன்றும் பேசவில்லை.

“ பெறந்த எடத்துலருந்து இப்பிடியா வருவாங்க,”

“கோவிச்சுகாத அத்த…காலையில வெள்ளனயே எந்திருச்சிருச்சு போயிருவேன்..மாமா இருக்காரா,”

“காத்துக்கு மாடியில் படுத்திருக்காரு….”என்று உள்ளே சென்று தட்டில் சோற்றையும், தண்ணீர் செம்பையும் எடுத்துவந்தாள். அவனுக்கு எவ்வளவு சோறு, குழம்பு ,உப்பு ருசிக்கும் என்று அத்தை கைகளுக்கு தெரியும்.வாழைக்காய் போட்டு காரமான தேங்காய் குழம்பு.இரவில் மீதமிருந்ததை வீணாகக்கூடாது என்று புடையடுப்பில் போட்டு வைத்திருக்கிறாள்.ருசியேறிக்கிடக்கிறது. எத்தனை நாளாச்சு என்று குனிந்து கொண்டே தின்றான்.

அத்தையோடு எதாவது பேச வேண்டும் என்று நினைத்து அருகில் அமர்ந்தான்.அவள் எழுந்து பக்கத்தில் கிடந்த கட்டிலில் படுத்துக்கொண்டாள்.பத்துஆண்டுகளுக்கு முன்புவரை வீட்டிற்கு வந்துவிட்டால் கண்ணா…கண்ணா.. என்று அழைத்து கொண்டேயிருப்பாள்.வளர்ந்தபிள்ளையை மடியில கட்டிக்கிட்டே அலைவியா சந்திரா? என்று சிரிப்பார்கள்.

“அத்த..ஆளுகளோட படுத்துக்கறேன்..”என்று நகர்ந்தான்.கங்கிலிருந்து சோளத்தை எடுத்து அடுப்புக்கல்லில் வைத்துக்கொண்டிருந்த சோலையிடம் , “பக்குவமாயிட்டத…மறுபடி சூட்ல போடறயே,”என்றபடி கால்களை நீட்டி அமர்ந்தான். அவனிடம் சோலை ஒரு சோளக்கொண்டையை நீட்டினான்.

“எங்கருந்து வாரண்ணே,”

“திருச்சியில துணிக்கடையில வேல பாக்கறேன்..எங்க அத்தவூடுதான்..”என்றான்.

சோலை அவனை கொஞ்சநேரம் உற்றுபார்த்துவிட்டு புன்னகைத்தான்.வரண்டு அடர்ந்த தலைமயிர்.கருத்த இதழ்கள்.உள்ளங்கை கால்களில் இரும்படிப்பவனை போன்று கருமை படர்ந்திருந்தது.மெலிந்த உடல்.

“அடிவாங்கின பொழப்பு போலய,”என்ற சோலை பக்கத்திலிருந்த எண்ணெய் பாட்டிலை எடுத்து உள்ளங்கையில் ஊற்றினான்.கைகால்களில் உள்ள கீறல்களை பார்த்தான்.

“சோளக்காட்டு கிழிசல எண்ணமுடியுமா..மொத்தமா தேய்ச்சு வழிச்சுவிடு,”

சோலை கை கால்களில் எண்ணெய் நீவி கீறல்களின் எரிச்சல் முகத்தில் தெரிய ஒரு சோளக்கருதை எடுத்து தட்டினான்.

“இவ்வளவு சொகுசு ஆவாது..குப்பமேனிய கசக்கி தேய்ச்சுவிட்டின்னா..எரியற எரிச்சல்ல வலி மறந்து போவும்..காயமும் பட்டுப்போவும்,”

“அதுவும் சரிதான்..”என்று புன்னகைத்தான்.

எண்ணெய் தடவி முடித்தவர்கள் சோளக்கருதிற்காக கங்கை சுற்றி அமர்ந்தார்கள்.சோலை எடுத்துக்கொடுத்தான்.பயல் மீண்டும் மீண்டும் கதை கதை என்று பாடிக்கொண்டிருந்தான்.

தாத்தா, “பொறுடா… தின்னதும் உடம்புக்கு என்னாவோன்னு வருது..”என்று கைக்கு முட்டுக்கொடுத்து களத்தில் சாய்ந்தார்.அவன் அழத்தொடங்கினான்.

கண்ணன்,“நான் சொல்லட்டா,”என்றான்.

“வேணாம்…பாட்டா தான் கத சொல்றேனுச்சு…”

கண்ணன் வாய்விட்டு சிரித்தான்.சந்திரா அவன் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.இந்தக்களத்தில் எத்தனை கூத்துகளை ஒத்திகை பார்த்திருக்கிறார்கள்.

“கர்ணன் கத சொல்லட்டா?” என்றான்.

“அம்மா தம்பிபாப்பாவ மூங்கிகூடையில வச்சு ஆத்துல விட்டாளாம்.பாட்டா…இத்தன தரம் சொல்லிட்டாரு,”என்று கைகளை விரித்தான்.உடனே அவன் கண்கள் அம்மாவைத் தேடின.அவள் படுத்துக்கொண்டு இவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.உடனே பயல் , “ம்மா..” என்று சிரித்தான்.

கண்ணன்,“சரி…அபிமன்யூ கத சொல்றேன்…”என்று எழுந்தான்.சந்திரா எழுந்து குரல் கேட்கும் தொலைவில் தொட்டிமீது அமர்ந்தாள்.சரியாக அவன் நிற்கும் இடத்தில் பெரியஅண்ணன் நிற்பார்.பொன்னர்,கர்ணன்,ராவணன் என அவர் மாறிமாறி நிற்கும் தோற்றம் சந்திராவின் மனதில் எழுந்தது.

கண்ணன் கைகால்களை குறுக்கி தலையை குனித்து கருவறை குழந்தை என நின்று,”இந்தவயசில் நான் கதை கேட்டன் கதைகேட்டேன்..என்ன கதை கேட்டேன்?அம்பா பாயும் கதைகேட்டன்..”என்ற அவன் உடலசைவுகளை கண்டு பயல் கைத்தட்டி சிரித்தான்.பாட்டா எழுந்து அமர்ந்தார்.

சந்திரா தன் இருஅண்ணன்களை நினைத்துக்கொண்டாள்.விவசாய வேலைகள் இல்லாத கோடைகாலத்தில் இப்படிதான் எங்காவது கூத்து,நாடகம் என்று கிளம்பிவிடுவார்கள்.அவர்கள் பின்னால் சென்றவன் இவன்.கோலிகுண்டு கண்களால் எப்படி பார்ப்பான்.அத்தை என்று அழைத்து முடிக்கும் முன்பே உடல் ஒருஅடி எடுத்து வைத்துவிடும்.

கண்ணனின் மாமா,“நாங்க கூப்பிட்டா பத்துதரத்து ஒரு தரம் என்னாம்ப..வெட்டிப்பயலுக்கு வரிஞ்சுக்கட்டிக்கிட்டு ஓடுறவ..இந்த பொம்பிளைகள என்னன்னு சொல்றது,”என்பார்.

கோலிகுண்டு கண்கள் முரட்டுக்கண்களாக கிறக்கத்தில் அலைபாய்வதை பார்த்திலிருந்து குறையாத ஆற்றாமையுடன் இருக்கிறாள்.நாட்கள் செல்ல செல்ல அவனிடம் பேசுவதற்கு எதுவும் இல்லாதவளானாள்.

எத்தனையோ முறை கண்ணனின்மாமா, “எந்தப்பயக்கிட்ட இந்தப்பழக்கம் இல்லன்னு விரல்விட்டு எண்ணிறலாம்.இதென்ன இத்தனை கோரோசனம்.அறுத்துபோடறாப்ல.அவனிட்ட கொஞ்சம் சகஜமா இருக்கக்கூடாதா..ச்சை.. என்ன புத்தியிது,” என்பார்.

கண்ணன் நிமிர்ந்து நின்றான்.தலைமுடியை முன்னால் இழுத்துவிட்டு இதழ்களை குவித்து கண்களை சிமிட்டியபடி, “இந்தவயசில அம்புவிட்டேன்…மாமனோட சேந்து அம்புவிட்டேன்.குதிரையில் பாய்ஞ்சேன்..எதுக்கு பாஞ்சேன்..”

உடனே பாட்டா, “ ராசகுமாரனா பெறந்திட்டு கேக்றான் பாரு கேள்வி,” என்றதும் சிரிப்பொலி எழுந்தது.

அபிமன்யூவின் கைகள் வேகமாக பாயும்குதிரையின் கடிவாளத்தைப் பிடித்திருந்தன.பயல் தானும் கைகளை அவ்வாறு வைத்துக்குதித்தான்.

“அதா தெரியுதே பச்சமலை கூட்டம். அதுல ஒத்த மலையில பிறந்தேன்.மலையிலருந்து காத்துல தாவி ஏற ஆசப்பட்டேன். மரத்தையெல்லாம் தாவித்தாவி காட்டை அளந்தேன்… ஆமா காட்டை அளந்தேன்..”

பாட்டா கண்களை இடுக்கியபடி அவனைப்பார்த்தார்.

“காட்டுக்குள்ள ஓயாத குருவி சத்தம்.பாத்தா என்னஒத்த பயலுக அம்புவிடுறானுங்க.ஒழிஞ்சிருந்து பாத்து..பாத்து…நானும் அம்பு விட்டேனாக்கும்,”என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தான்.பயல் கைத்தட்டி குதித்தான்.

“பேரரசன் நான்..ஆமா பேரரசன் நான்…பத்து உடன்பிறந்தவர்களுடன் படையாளும் பேரரசன் நானே..”என்று இடையில் கைவைத்து நிலவொளியில் நிமிர்ந்து நடந்தான்.

“குடியுண்டு..தளராத படையுண்டு..பெண்டுண்டு..பிள்ளையுண்டு..நீருண்டு நிலமுண்டு…அவள் வரும் வரை என்னிடம் எல்லாமும் உண்டு..”என்று ஆர்ப்பரித்தான்.கை கால்களை மாற்றி மாற்றி அவன் ஒருவரிலிருந்து மற்றவருக்கும், ஒருகதையிலிருந்து மற்றொரு கதைக்கும் தாவிக்கொண்டிருந்தான்.

பாட்டா குரலை செறுமிக்கொண்டு கதையில வாழ்றவன்..கதையில ஜெயிக்கறான்..கதையில தோக்கறான்,” என்று பெருமூச்சுவிட்டார்.

அங்கங்கே கிடந்தவர்கள் உறங்கிப் போனார்கள்.கண்ணன் மல்லாந்துப் படுத்தபடி வானத்தைப் பார்த்தான்.பக்கத்தில் சோலை உடல்வலியால் அனத்திக் கொண்டிருந்தான்.பாட்டா மெதுவாக எழுந்து கண்ணன் பக்கத்தில் படுத்தார்.அவன் திரும்பி அவரைப் பார்த்தான்.

“என்ன பெருசு தூக்கம் வரலயா..”

அவர் தலையாட்டினார்.

“இந்தவயசுல சோளக்காட்டு வேலைக்கு ஒடம்பு தாங்குமா? எந்தூரு?”

“ராயப்பட்டி.வீட்ல சும்மா இருக்கமுடியல.படிச்சபயலா …வயக்காரவுகளுக்கு ஒறவா?”

“ஆமா.மோட்டார் ரிப்பேர் வேலைக்கு படிச்சேன்,”

“ஒடம்புக்கு என்ன?”

“ஒன்னுமில்ல.படிக்கற வயசுல பழகின பழக்கந்தான்.விடமுடியல,”

காற்றால் திசையழிந்து ஆடிய சோளக்காட்டின் சத்தம் விலங்கின் ஓலம் என கேட்டது.

“என்னா வேகம் பாரு.இப்ப சருகு ஒன்னொன்னும் சவரகத்தியாகும்,”

“அறுக்கறது தெரியாம அறுத்திரும்,”என்று புன்னகைத்தான்.

பின் அவனாகவே, “அப்பா தொரத்தி தொரத்தி அடிச்சாரு..கெஞ்சினாரு.நான் வீட்டவிட்டு ஓடினேன்.பிறவு வீட்ல நிக்கல.வரதும்..போறதுமா தான்,”

“ம்..பெத்தவ,”

“இல்ல.வெளியில போய் எங்கயும் நெலச்சு நிக்க முடியல பெருசு,”

அவர் உதட்டை பிதுக்கியபடி வானம் பார்த்தார்.

“இப்ப துணிக்கடை..”

“ம்…எல்லா ஒடம்பும் ஒன்னுல்ல தம்புடு.சிலது தாங்கும்..சிலது சீரளியும்.நானும் நாலு ஆம்பிளப்பிள்ளைகள பெத்தவனாக்கும்,”

கண்ணன் திரும்பி அவர் முகம்பார்த்துப் படுத்தான்.

“மூத்தப்பிள்ளைக்கு போதை ஆகாது…சின்னவன் ஒடம்பு இரும்பாக்கும்.இதெல்லாம் சின்னதுலருந்து தொட்டு தூக்கி அணச்சு வளக்குறப்பவே நுணுக்கமான தகப்பனுக்கு வெளிச்சமாயிரும்.இவனுகளுக்கு பொண்ணு பாக்கறப்ப எங்கவூட்டு ஆயா என்னயதான் கேக்கும்.இவனோட நுவத்தடிக்கு இந்தப்பிள்ள ஈடுவைக்குமான்னு,”

கண்ணன் சிரித்தபடி, “ஈடா கெடைக்கனுமானா யாருக்கும் கல்யாணம் கைகூடாது..”என்றான்.

“ச்..ஈடுன்னா அப்படியில்லடே.நடுவுலவன் கோவத்தை தூக்கி தலையில வச்சு நடக்கிறவன்.அவனுக்கு தணிஞ்ச பொண்ணு வந்தா நல்லது.அடுத்தவன் பதட்டக்காரன் அதுக்கு தைரியமான பொண்ணு கொண்டுவந்தோம்.அந்தப்பிள்ள பேசினான்னா என்னாலயே மறுத்துசொல்ல முடியாது..”

கண்ணன் தலையாட்டினான்.

“அன்னைக்கி அவனுங்க எஞ்சொல் கேட்டுக்கிட்டானுங்க தம்புடு..இன்னிக்கி நெலம வேற,”

கண்ணன் ஒன்றும் பேசவில்லை.

“கெட்டவன் கெட்டான்னா ஒன்னுல்ல.நல்லவன் வீட்ல ஒருத்தன் கெட்டான்னா ஊர்க்கண்ணுல நிக்கறது பீஷ்மரு களத்துல கெடக்கது போலயாக்கும்…”

பின் யாருக்கோ சொல்வதைப்போல,“ஊருக்குள்ள நல்லபழக்கவழக்கத்தில பேர்வாங்கின மனுசனுக்கு மகனா பெறக்கறது கெட்டவிதி தெரியுமா?” என்றான்.பாட்டா பெருமூச்சுவிட்டபடி வானத்தைப்பார்த்தார்.விண்மீன்கள் அடர்ந்திருந்தன.இரவு கடந்து கொண்டிருந்தது.

குருத்தோலை – பிரவின் குமார் சிறுகதை

மதியம் உணவிற்காக ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பார்சல் இன்னமும் பிரிக்கப்படாமல் சுவரோரமாக அதன் இருப்பிடத்திலேயே கிடந்தது. உடலுடன் பிணைந்திருக்கும் உயிரையும் வலிமையும் தக்க வைத்துக்கொள்வதற்காகவேனும் ஆகாரம் எனும் பேரில் தினமும் எதையாவது உண்டு செரிக்க வேண்டிய நிலை. ஆனால் அதிலும் கூட மனம் ஈடுபட மறுக்கிறது. விரக்கிதியுடனே விருப்பமற்ற இவ்வாழ்வை உணவும் உறக்கமுமின்றி நடைபழக பழகிக்கொண்டிருக்கிறேன்.

மின்விசிறி, லைட் என்று எதையும் போடாமல் அந்த இருண்ட அறையுள் என்னை நானே ஒடுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

மதி அண்ணன் முகத்தில் புன்னகை தவழ நின்றிருந்தார். நீண்ட வருடங்கள் கழித்துப் பார்க்கும் நெகிழ்ச்சியும், பரவசமும் அவர் முகத்தில் தெரிந்தது. நானும் செயற்கையான புன்னகையை வரவைத்துக்கொண்டு அவரை வரவேற்றேன்.

“டேய் ஐசக்கு எப்படிடா இருக்க….? நம்ம செல்வா தான் சொன்னான் நீ ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆய்ட்டனு… அவன் தான் உன்வீட்டு அட்ரஸ் கொடுத்தான்”

பழங்களும் பிஸ்கெட் பொட்டலுமுமாக இரண்டு பக்கமும் பிடித்தபடி மதி அண்ணன் நின்றிருந்தார். சுவற்றோரம் இருந்த பாயை விரித்துப்போட்டு அவரை அமரச் செய்தேன்.

“நான் நல்லா இருக்கேன்னா… எதுக்கு இது எல்லாம் தேவ இல்லாம வாங்கிட்டு வந்த?”

“அட என்னடா நீ… ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்க வரேன் வெறும் கையோடவா வருவாங்க…?”

“சரி கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு நான் போய் டீ வாங்கிட்டு வரேன்”

எழ முற்படும் நேரத்தில் சட்டென்று என் மணிக்கட்டை பிடித்து தடுத்து நிறுத்தினார்.

“அது எல்லாம் ஒன்னும் வேணாம்டா… வரும்போது தான் சாப்ட்டு வந்தேன்.. வேணும்னா ஒரு தம்மு போடுவோம்”

சட்டை பாக்கெட்டில் இருந்து சிகரெட் பெட்டியை எடுத்து நீட்டினார் ஆளுக்கொரு சிகரெட் ஒன்றை எடுத்து புகைக்கத் தொடங்கினோம். சிமெண்ட், பெயின்ட் என்று எதைக்கொண்டும் நிறைவு செய்யாமல் பழுதடைந்த செங்கல்களினால் ஆன அறையின் சுவற்றையே சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தார். இருவருக்கும் காற்று வரும்படி ஓரமாக இருந்த டேபிள் பேனை எடுத்துப் போட்டேன்.

“ஏன் ஐசக்கு இந்த வீட்ல நீ தனியாவா இருக்க… பாத்ரூம் கூட இல்ல போல”

“ஆமானா நான் தனியா தான் இருக்கேன். சாப்புடுறதுக்கும் தூங்குறதுக்கும் மட்டும் வீடு கிடைச்சா போதும்னு இருந்தேன். இந்த வீடு சரியா இருந்துச்சு… பக்கத்துல இருக்க துணி கடைல வேல செய்யுறதுனால போக வரவும் ஈசியா இருக்கு. பாத்ரூம் எல்லாம் தெரு முனையில இருக்க கார்ப்பரேஷன் டாய்லெட்ல போவேன் ஒன்னும் பிரச்சன இல்ல”

“ம்.. அதுவும் சரி தான். நாம ஜெயில்ல வாழ்ந்த வாழ்க்கைய தானே இங்கேயும் வாழுறோம்… சரி உன் வீட்டுக்கு போய் அம்மா அப்பா கூட இருக்குறத விட்டுட்டு இங்க ஏன்டா தனியா கிடக்குற?”

மதி அண்ணன் சிகரெட்டை ஆழமாக உள்ளீழுத்து புகையை வெளியேற்றினார். சிகரெட் கரைந்துகொண்டிருக்க பதில் ஏதும் சொல்ல இயலாத நிலையில் யோசித்தபடி இருந்தேன். அந்த அறை முழுவதும் சிகரெட்டின் வாசம் பரவத் துடங்கியது.

“உன்ன தான்டா கேட்குறேன்.. உங்க ஏரியாவ விட்டுட்டு ஏன் தி.நகர்ல வீடு எடுத்து தங்கிட்டு இருக்க. சரி அம்மா அப்பாவெல்லாம் போய் பார்த்தியா… இல்லையா?”

“இல்லனாஇத்தன வருஷம் கழிச்சு மறுபடியும் நான் எங்க ஏரியாவுக்கு போக விரும்பல.. இப்போ போன என்னைய பத்தியே எல்லாரும் பேசிட்டு இருப்பாங்க. நான் தனியா வீடு எடுத்து தங்கிட்டு இருக்குறது அம்மா அப்பாக்கு தெரியும். அவங்கள யாரையும் என்னைய வந்து பார்க்க வேணாம்னு சொல்லிட்டேன். தங்கச்சி மட்டும் அப்போ அப்போ வந்து பார்த்துட்டு போகும்”

சிகரெட்டை புகைத்து முடித்ததும் அதை அணைப்பதற்கு சுற்றும் முற்றும் இடம் தேடி பார்த்துக்கொண்டிருந்தார். நான் அருகில் இருந்த சிகரெட்டை அணைப்பதற்கு எப்போதும் பயன்படுத்தும் கிண்ணத்தை எடுத்து அவரிடம் நீட்டினேன். சிகரெட்டை அணைத்தபடி

“என்னோவோ ஐசக்கு நாங்க எல்லாம் ஜெயில்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் வாழப்போற கொஞ்ச நாளையாவது குடும்பத்தோடு இருக்கணும்னு நினைக்குறோம். ஆனா நீ ஜெயில்ல இருந்த மாதிரி இப்போவும் தனியா இருக்கணும்னு நினைக்குற”

நான் என் வாழ்க்கையின் புராணங்களை விடுத்து அவர் வாழ்வை குறித்து விசாரித்தேன். செய்ய வேண்டிய கடமைகள் பல தவறவிட்டதால் ஊருக்கு செல்ல விருப்பமில்லாமல் பீச்சில் வேற்கடலை விற்று தொழில் செய்வதாக சொன்னார். குறிப்பிட்ட அளவு பணம் கையில் சேர்ந்ததும் ஊருக்கு திரும்பும் திட்டத்தில் இருப்பதாகவும் சொன்னார். சிறையில் கழித்த நாட்களையும், உடன் சிறையில் இருந்த நண்பர்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மதி அண்ணனும் கிளம்பத் தயாரானார். தெருவின் முனை வரை சென்று வழி அனுப்ப அவருடன் நடந்துகொண்டிருந்தேன்.

“ஐசக்கு கேட்க கூடாதுனு தான் நினைச்சேன் ஆனா மனசு கேட்கலஅந்த செலஸ்டினா பொண்ண போய் பார்த்தியா?

செலஸ்டினா…! நான் கழித்த சிறையின் சுவறுகளில் அவளது பெயரே நினைவின் பக்கங்கலாக பிரதிபலித்துக்கொண்டிருக்கும். அவள் பெயரை வருடுவதிலும் அதை ஆசை தீர ரசிப்பதிலும் தான் இத்தனை கால சிறை தண்டனையை என்னால் கடக்க முடிந்தது. பல கற்பனைகளோடும் ஏக்கங்கங்களோடும் எப்போதும் என் மனத்திரையில் உரையாடிக்கொண்டிருப்பவள் அவள். அவளது குரல், முகம், சிரிப்பு என்று அனைத்தும் இழந்த என்னால் மீண்டும் அவளை நேரில் சந்திப்பதென்பது இயலாது காரியம். நடையின் வேகம் தாமாக குறைந்ததை உணர்ந்தேன். மதி அண்ணன் பக்கம் திரும்பினேன்.

“இல்லனா செலஸ்டினாவ இன்னும் பார்க்கலஅவளுக்கு கல்யாணம் ஆய்டுச்சாம். ரெண்டு வயசுல ஒரு குழந்த இருக்குறதா என் தங்கச்சி சொன்னா”

ஒருவகையில் என்னிடமிருந்து வந்த பதில் மதி அண்ணன் எதிர்ப்பார்த்ததாகவே இருந்திருக்கக் கூடும். எந்தவித அதிர்ச்சியையும் தன் முகத்தில் வெளிபடுத்திக்கொள்ளாமல் இயல்பாகவே பேசினார்.

“தோ பார் ஐசக்குநாங்களாவது அப்போ அப்போ பரோல்ல வெளிய வந்து இந்த உலகம் எப்படி இருக்குனு பாத்துட்டு போனோம். ஆனா நீ அத கூட விரும்பாம உள்ளேயே இருந்துட்ட. இப்போ வெளில வந்ததுக்கு அப்புறம் இந்த உலகம் உனக்கு புதுசா இருக்கும். வாழ்க்கைய தொலைச்சுட்டதா நினைக்காத. இனிமேல் தான் உன் வாழ்க்கையே தொடங்க போகுதுனு நம்பிக்கையோடு இரு… நீயும் வேறொரு வாழ்க்கைய அமைச்சுக்கடா”

ஆட்டோ ஒன்றை பிடித்து மதி அண்ணன் அங்கிருந்து கிளம்பினார். மதி அண்ணன் சொன்னது போல் இவ்வுலகம் முற்றிலுமாக மாறி இருந்தது. குற்றம் புரிபவர்களுக்கென்று சிறை கம்பியைக்கொண்டும், பாதுகாப்பு சுவரைக் கொண்டும் இவ்வுலகத்திலிருந்து இன்னோர் உலகத்தை கட்டமைத்திருந்தார்கள். சிறை காலம் முடிந்து வெளியுலகை பார்க்கும் சந்தர்ப்பத்தின் பொழுது தான் இவ்வளவு வருடங்கள் சிறைவாசியாக உலகத்தோடு பிரிந்து வாழ்ந்ததை உணரமுடிந்தது. சிறையில் இருந்த நாட்களில் வெளியுலகத்தில் வாழும் மனிதர்களை சந்திப்பதற்குக் கூட விருப்பமற்றவனாய் இருந்தேன். செலஸ்டினாவையும், என் குடும்பத்தினரையும் சந்திக்கும் தருணங்களில் மீளவே முடியாத குற்றவுணர்ச்சியால் அவதிக்குள்ளானேன். மிஞ்சும் நாட்களை சிறையிலேயே கழிக்கலாம் என்று நினைத்தாலும் கூட அதற்கான காலத்தை சிறைச்சாலை எனக்கு வழங்கவில்லை. அவசர புத்தியில் அன்று நான் செய்த தவறு தான் இன்று ஒட்டு மொத்த வாழ்க்கையும் திசை திருப்பியது. வீட்டை நோக்கி நடக்கும் நேரத்தில் மனம் பன்னிரெண்டு வருடங்கள் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

பள்ளி முடிந்து வீட்டை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கும் மாணவர்களின் வருகை வீதியில் தெரிந்ததும் கடையின் வாசலுக்கு வந்துவிடுவேன். செலஸ்டினாவின் பார்வை எப்பொழுதும் நான் வைத்திருக்கும் சலூன் கடை பக்கம் திருப்பத் தவறியதே இல்லை. கடையின் வாசலில் நின்று பின்கழுத்து சிகையைக் கோதிக்கொண்டு அவளைப் பார்ப்பதையே தினசரி வேலையாகச் செய்துகொண்டிருப்பேன். எங்கள் வீட்டுப் பகுதியில் வசிக்கும் இளசுகள் பலரும் செலஸ்டினாவுடனான தன் காதலை தெரிவிக்க ரொம்பவே மெனக்கெட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் நானும் இடம் பெற்றிருந்தேன். என் தங்கை மூலமாக என் காதலை செலஸ்டினாவிடம் தெரிவித்தும் கூட அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் இருந்தது. ஒரு நாள் நானாகவே துணிந்து அவளைப் பின்தொடர்ந்துச் சென்றேன்.

“செலஸ்டினா நில்லு” ஆள் அரவமற்ற அத்தெருவில் என் காதலை சொல்ல இது தான் தக்க சமயம் என்று அப்போது தோன்றியது. அவளுக்காக வாங்கி வைத்திருந்த பரிசை அவளிடம் நீட்டினேன். “இத பிடி செலஸ்டினா” கையில் வைத்திருந்த நோட்டை நெஞ்சோடு சேர்த்து பிடித்தபடி சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் கண்களில் பதற்றம் தெரிந்தது “என்ன ஐசக் இது” “இல்ல எனக்கு பயமா இருக்கு இப்போ பிளஸ் டூ முடிச்சதுக்கு அப்புறம் நீ காலேஜ்க்கு போய்டுவ, நானும் உன்ன லவ் பண்ணுறேன்னு நிறைய பேரு உன் பின்னாடி சுத்துவான்க நான் இப்போவே சொல்லிடுறேனே… எனக்கு உன்ன புடிச்சு இருக்கு செலஸ்டினா” சொல்லி முடித்ததும் பின்கழுத்து சிகையைக் கோதிக்கொண்டு தரையையே பார்த்தபடி இருந்தேன்.

அவள் பதிலேதும் சொல்லாமல் நான் கொடுத்த பரிசை வாங்கிச் சென்றாள். நீண்ட நாள் சொல்ல நினைத்து தவித்துக்கொண்டிருந்த காதலை தெரிவித்ததும் அந்நாள் முழுக்க ஊசியை ஆடையாக்கொண்டு அணிவித்ததைப் போன்ற நிலைக்கு ஆளானேன். என் காதலை செலஸ்டினா ஏற்றுக்கொள்வாளாமாட்டாளாஎன்று அந்நாள் முழுக்க மனம் பிதற்றிக்கொண்டே இருந்தது. யோசித்துப் பார்க்கையில் செலஸ்டினா என்னை ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களை விட என்னை நிராகரிப்பதற்கான காரணங்களே அதிகம் இருந்தது. செலஸ்டினா பல நெருக்கடிக்கு மத்தியில் படித்துக்கொண்டிருந்தாலும் வாழ்வின் இலட்சியங்கள் மீது ஓர் பிடிமானத்தோடு வாழ்பவள். அவளுடன் ஒப்பிடுகையில் பல விஷயங்களில் நான் தரம் தாழ்ந்து தான் இருந்தேன். படிப்பில் ஆர்வமில்லாமல் படிப்பை பாதியிலேயே விடுத்து சலூன் கடை வைத்து பிழைப்பபவன் நான். ஆனால் செலஸ்டினா நன்றாக படிக்கக் கூடியவள் டீச்சராக வர வேண்டும் என்பதையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தாள். என் அம்மா வட்டிக்குப் பணம் கொடுத்து பலரிடம் வம்பு தும்பு செய்துக்கொண்டிருப்பாள். ஆனால் செலஸ்டினா அம்மாவோ சமையலறையே கதி என்று சர்ச்சுக்கும் வீட்டுக்கும் அலைந்துகொண்டிருப்பாள். முக்கியமாக செலஸ்டினா ஊரே மெச்சும் அளவிற்கு அழகு கொண்டவள் நான் பல அடாவடித்தனங்களைச் செய்துகொண்டு பின்கழுத்தில் சிகையை வளர்த்துக்கொண்டு பொறுக்கி எனும் அடையாளத்தோடு ஏரியாவிற்குள் சுற்றிக்கொண்டிருப்பபவன். நிச்சயம் என் காதல் நிராகரிக்கப்படும் என்றே தீர்மானம் கொண்டிருந்தேன். மறு நாள் என் காதலின் முடிவை தெரிந்துகொள்ள அவளை பின்தொடர்ந்துச் சென்றேன். நான் அவளைப் பின்தொடர்வதை தெரிந்துகொண்டதும் தன் நடையின் வேகத்தை குறைத்துக்கொண்டாள். சட்டென்று திரும்பி என்னை நோக்கி வந்தவள் ஆள் நடமாட்டம் இல்லை என்பதை அறிந்ததும் தன் கையில் வைத்திருந்த நோட்டின் கடைசிப் பக்கத்தை திருப்பிக் காட்டினாள். “ஐசக்” “செலஸ்டினா” என்று எழுதி இருவரின் பெயரையும் ஓர் ஆர்டின் வடிவத்திற்குள் அடைத்திருந்தாள். “நீ கொடுத்த இங்க பேனா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்லி முடித்ததும் மானின் ஓட்டமாய் என் கண்ணில் இருந்து மறைந்தாள்.

மறுநாள் வேலையிலிருந்து வந்துக்கொண்டிருக்கும் போது எதிரில் கிறிஸ்துவப் பாடல்களை ஒருசேர பாடிக்கொண்டு எதிரில் ஒரு கூட்டம் குருத்தோலை பவனி வந்துக்கொண்டிருப்பதை கவனித்தேன். கையில் குருத்தோலை வைத்துக்கொண்டு தலையில் முக்காடு இட்டபடி சிறியவர்களும் பெரியவர்களும் அப்பவனியில் கலந்துகொண்டிருந்தார்கள். அங்கி அணிந்திருந்த பாதிரியார்கள் இருவர் வழி நடத்த, பவனியில் கலந்துகொண்டிருந்தவர்கள் மனதுக்குள் ஜெபிப்பதபடி அவர்களைப் பின்தொடர்ந்துக்கொண்டிருந்தார்கள். குருத்தோலையால் வடிவமைக்கப்பட்ட சிலுவையை ஒவ்வொருவரும் ஏந்திச் சென்றார்கள். விழி அகலாது அந்த குருத்தோலைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கு பார்த்த குருத்தோலைகள் ஒவ்வொன்றும் மனதினுள் புதைந்திருந்த பழைய நினைவுகளை மீண்டும் கிளரச் செய்தன.

சாம்பல் புதன், புனித வெள்ளி, ஈஸ்டர் தினம், குருத்தோலை பவனி, கிறிஸ்துமஸ், புது வருடம் என்று எந்த ஒரு பண்டிகை வந்தாலும் எங்கள் குடியிருப்புப் பகுதியில் அதற்கான வேலைகளை செய்ய பாதிரியார் என்னைத் தான் முதன்மையாக நிறுத்துவார். அன்றும் அப்படித்தான் குருத்தோலை பவனி நடத்த நண்பர்களுடன் சேர்ந்து அதற்கான வேலைகளில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தேன். சிறுசுகள் ஒரு சிலர் ஓலையில் சிலுவையைச் சரியாக வடிவமைக்கத் தெரியாமல் தினறிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓலையால் சிலுவையை வடிவமைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அன்றைய குருத்தோலை பவனியில் செலஸ்டினாவும் கலந்துகொள்ள வந்திருந்தாள். கையில் ஓலையை வைத்துக்கொண்டு சிலுவையின் வடிவத்தை அப்பின்னலின் வழியே கொண்டு வர எத்தனித்துக்கொண்டிருந்தாள். அவ்வப்போது என் பக்கம் திரும்புவதும், சிலுவை செய்வதுமாக அவளது பார்வை நிலைகொள்ளாமல் சுழன்றுகொண்டே இருந்தது. அவளது முயற்சியைப் பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் என் தங்கை அவள் கையில் இருந்த ஓலையை பிடுங்கி வந்து என்னிடம் நீட்டினாள்.

“இந்தாண்ணா இது செலஸ்டினா அக்காது அவங்களுக்கும் சிலுவ செஞ்சு கொடு”

சிறுவர்கள் வரிசையில் நிற்க தங்களுக்கான இடத்தைப் பிடிக்க ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு விரைந்தார்கள். அவள் கரங்களில் தஞ்சம் கொள்ள என் இதயத்தை சிலுவையின் வடிவில் மெல்ல உருமாற்றிக்கொண்டிருந்தேன். அவளது கண்களை ரசிப்பதற்கே எனது கண்கள் ஆர்வம் கொண்டிருந்தது. நான் அவளைப் பார்த்துக்கொண்டே சிலுவையை வடிவமைத்தேன். முடிந்ததும் அவளிடம் நீட்டினேன் “தாங்க்ஸ் ஐசக்” என்று மட்டும் சொல்லி அந்தக் குருத்தோலையை வாங்கிச் சென்றாள்.

குருத்தோலை பவனியின் பொழுது அவளிடம் ரகசியமாகப் பேசுவதற்கு ஓயாது அவள் பெயரை அழைத்துக்கொண்டே இருந்தேன். சிறிதும் என் அழைப்பை பொருட்படுத்தாமல் கண்டும் காணாதது போல் மனதுக்குள் ஜெபித்தபடி குருத்தோலையை இறுக்கப் பிடித்துக்கொண்டு நடப்பதிலேயே அவள் கவனமாக இருந்தாள். என் நடத்தை அவளுக்குள் ஓர் வெறுப்பை கிளம்பி இருக்க வேண்டும். பவனி முடிந்ததும் என் மீதான கோவத்தை வெளிபடுத்த தேவாலயத்தின் பின் அமைந்திருக்கும் சூசையப்பர் சிலை அருகே என்னைச் சந்திப்பதற்காக வந்தாள்.

“ஏன் ஐசக் ஊர்வலம் அப்போ அப்படி நடந்துக்குற… என்ன அவசரம் உனக்கு…?”

“ஸாரி செலஸ்டினா… இன்னைக்கு நான் தான் வட்டி காசு வாங்க போவேன்னு அம்மா அடம் பிடிக்குது. இன்னைக்கு நைட் நான் வர மாட்டேன். அதான் முன்னாடியே சொல்லிடலாம்னு உன்ன கூப்ட்டேன்”

இன்று கட்டவேண்டிய வட்டி பணத்தை நானாகவே அவளுக்கு நினைவுறுத்தும்படி நேர்ந்துவிட்டது. இன்று கட்ட வேண்டிய வட்டி பணம் நினைவில் தோன்றியதும் தாமாகவே அவளது முகம் இறுகியது. கொஞ்ச நாட்களாக வட்டி பணத்தை வசூலிக்க நான் தான் அவள் வீட்டிற்குச் சென்றுகொண்டிருக்கிறேன். அம்மாவிடம் ஏதாவது காரணத்தைச் சொல்லி அவர்களுக்கான நாட்களை நீடித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இன்று நான் தான் போவேன் என்று அம்மா தீர்மானமாகச் சொல்லிவிட்டாள். அவள் குடும்பத்தின் நிலை எனக்கு நன்கு தெரியும். இரவு நேரத்தில் அவள் வீட்டில் அரிசி பொங்குவதென்பதே அன்றாட வாழ்வில் நிச்சயிக்கப்படாத ஒன்றாக இருக்கும் பொழுது மாதம் தவறாமல் வட்டி பணத்தைக் கட்டுவதென்பது அவள் குடும்பத்தால் இயலாத காரியம். பெயிண்டர் துறையில் போதிய வருமானம் கிடைக்காமல் அவள் அப்பா அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அப்பிடி கிடைக்கும் பணத்தில் தன் குடியின் தாகத்தை போக்கிக்கொள்ளவே மும்முறமாக செயல்பட்டுக்கொண்டிருந்தார். தன் குடும்பத்தின் தேவையை நிவர்த்திச் செய்ய திராணியற்று திரிந்துகொண்டிருப்பதைக் குடியிருப்பு பகுதியில் பலரும் அறிந்திருந்தார்கள். செலஸ்டினா என்ன காரணம் சொல்வது என்று தெரியாமல் மனதுக்குள் யோசித்தபடி அமைதியாக நின்றிருந்தாள். சட்டென்று பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்து அவள் கையில் திணித்தேன்.

“அம்மா வந்து நைட்டு கேட்டா இந்த பணத்த கொடுத்துடு செலஸ்டினா”

நான் விடாப்படியாக அவள் கையில் திணித்தும் அப்பணத்தை வாங்கிக்கொள்ள செலஸ்டினா மறுத்தாள். நீண்ட நேர சமாதானத்திற்குப் பிறகு தான் அந்தப் பணத்தை வாங்கிக்கொள்ளவே சம்மதித்தாள். ஒரு கையில் வட்டி பணத்தையும் மறு கையில் குருத்தோலையை வைத்துக்கொண்டு அங்கேயே நின்றிருந்தாள். அவளின் நினைவாக அந்தக் குருத்தோலையை பொக்கிஷமாக பத்திரப்படுத்திக்கொள்ளத் தோன்றியது. அவளிடம் வெளிப்படையாக அந்த குருத்தோலையைக் கேட்டதும் புருவங்கள் உயர என்னைப் பார்த்தாள். சிரித்த முகத்துடன் “சரி இந்தா பத்திரமாக வெச்சுக்கோ” என்று சொல்லி என் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். என்னிடம் விடைபெறும் அந்தக் குறிப்பிட்ட இடைவேளையில் அவளது பார்வை என் பக்கம் திரும்பிக்கொண்டே இருந்தது.

வீட்டிற்க்கு வந்ததும் செலஸ்டினா நினைவாக வைத்திருக்கும் அந்த குருத்தோலையை எடுத்து பார்க்க வேண்டும் எனும் ஆவல் எழுந்தது. பச்சை நிற இரும்பு பெட்டியின் அடியில் வைத்திருக்கும் குருத்தோலையை எடுத்துப் பார்த்தேன். பல வருட கால சுயற்சியின் மாற்றத்தால் தன் வெளிர் பச்சை நிறத்தை இழந்து காய்ந்து போன நிலையில் அந்தக் குருத்தோலை காட்சியளித்தது. அதை நெஞ்சின் மீது வைத்துக்கொண்டு செலஸ்டினா அருகில் இருப்பது போல் கற்பனை உலகில் அவ்விரவு முழுக்க சஞ்சரித்துக்கொண்டிருந்தேன்.

ஈஸ்டர் தினம் நெருங்கிக்கொண்டிருப்பதால் ஒரு சில நாட்களாக கடையில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே போனது. காதலர்களாக திருமணத் தம்பதிகளாக வரும் வாடிக்கையாளர்கள் பலரை சந்திக்கும் நேரங்களில் செலஸ்டினா பற்றிய ஞாபகங்களே மனதில் ஓடிக்கொண்டிருக்கும். செலஸ்டினா இப்போது தன் குடும்பத்துடன் சேர்ந்து ஈஸ்டர் தினம் கொண்டாடுவாளா? தன் கணவன் குழந்தைக்கு அவள் விருப்பபடியே துணிமணிகள் எடுத்துக் கொண்டிருப்பாளா? வருடம் தவறாமல் என் வீட்டுக்கு வந்து கொடுக்கும் ஈஸ்டர் தின பலகாரங்களை இந்த வருடமும் எடுத்து வந்து கொடுப்பாளா? இப்படி ஏதேதோ கேள்விகள் எழ சேலைகளை விவரித்தபடி வாடிக்கையாளர்களை கவனித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு தம்பதியினர் என்னை நெருங்க அவர்கள் கேட்கும் வண்ணங்களிலான புடவைகளை காட்டிக்கொண்டிருந்தேன். தன் கணவனுடன் சேலை குறித்து பேசிக்கொண்டிருக்கும் அந்த பெண்ணின் குரல் வாழ்வில் எப்போதோ கேட்ட குரல் போல் இருந்தது. தோளில் ஹேன்ட் பேக்கை மாட்டிக்கொண்டு புடவைகளை தொட்டுத் தடவி அதன் வண்ணங்களையும் ஆக்கங்களையும் கவனித்துக்கொண்டிருந்த அப்பெண்ணையே பார்த்தேன். அவளே தான் செலஸ்டினா…! என்னை உற்று கவனித்த ஒரு சில நிமிடங்களில் அவளும் என்னை அடையாளம் கண்டுகொண்டாள். ஆச்சிரியத்தில் அவளது உதுடுகள் மெல்ல விரிந்தது. யாருடைய செவிகளுக்கும் கேட்காத ஐசக்…! என்று அவள் உச்சரிக்கும் அக்குரலின் ஓசையை என்னால் மட்டும் கேட்க முடிந்தது.

இதுபோன்ற சந்திப்பு அமைந்திருக்கக் கூடாது தான். ஆனால் அவள் தன்னைத்தானே மீட்டெடுத்துக்கொண்டு இல்லறவாழ்வை மனநிறைவோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள் என்பதை இச்சந்திப்பின் மூலம் தான் தெரிந்துகொண்டேன். சில சந்திப்புகள் வார்த்தைகளின்றிச் சில நிமிட பார்வைகளைக் கொண்டே அவரவர் வாழ்வின் நிழற்படத்தை கண்முன் விரியச் செய்யும். அவள் வாழ்வின் நிழற்படத்தில் கருப்பு, வெள்ளைகளுக்கு இடம் இல்லை என்றே தோன்றுகிறது. அருகில் நின்றிருந்த அவளது கணவனும், அவள் சிறுவயது பிம்பமென தன்னை தோற்றுவித்து தனது சிரிப்பில் ஆலாபனை செய்துகொண்டிருந்த இரண்டு வயது குழந்தையும் வண்ணங்கள் பல கொண்டு அவள் வாழ்வை அனுதினமும் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொண்டேன். பிரிவும் சந்திப்பும் அதனதன் போக்கில் நடப்பவை என்றாலும் நிராதரவாய் வாழ்ந்துகொண்டிருப்பபவர்களுக்கு அதை எதிர்கொள்வதென்பது கங்குகளுக்கு இடையில் சிக்குண்டு அவதிப்படும் நிலை போலானது. என் நிலை நிச்சயம் அவள் உணர்ந்திருப்பாள். அவள் கண்களில் கண்ணீர் மெல்ல உருபெருவதைக் கவனித்தேன்.

“இங்க எதுவுமே செட் ஆகல வேற கடைக்கு போலாம்”

சட்டென்று அவள் தன் கணவனையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அந்த ஜவுளிக்கடையை விட்டு வெளியேறினாள். மீண்டும் ஒரு பார்வை என் பக்கம் திரும்புமா என்னும் ஏக்கத்தோடு அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். இறங்கும் படிகள் ஒவ்வொன்றும் அவள் இருப்பை உள்ளிழுத்துக்கொண்டே போனது. கடைசி நிமிட கையசைவு போல் அவளது பார்வை என் பக்கம் திரும்பியது. ஏக்கம், இயலாமை, குற்றவுணர்ச்சி, பரிதவிப்பு என்று அனைத்தும் உள்ளடக்கிய பார்வை அது. அப்பார்வையில் அவள் உள்ளக் குமறலின் கேள்வியும் அடங்கி இருந்தது “இப்படி ஒரு நிலைமையிலா ஐசக் உன்ன பார்க்கனும்”

அவள் போனதில் இருந்து எந்த ஒரு வாடிக்கையாளரையும் சரிவர உபசரிக்க முடியாமல் அவதிக்குள்ளானேன். நிச்சயம் என்னைப்பற்றிய நினைவுகளே அவள் மனதில் ஊசலாடிக்கொண்டிருக்கும். தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ஏதேதோ வண்ணங்களிலான புடவைகளையும், மாடல்களையும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மனம் முழுக்க செலஸ்டினாவை பற்றிய நினைவுகளே சுற்றிக்கொண்டிருந்தது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை, அவர்களின் தேர்வை எதையும் கண்டுணர்ந்து நிவர்த்திச் செய்யும் மனநிலையில் நான் இல்லை. மேசையில் விரித்துப் போடப்பட்டிருந்த சேலைகள் ஒவ்வொன்றையும் மடிக்கத் தொடங்கினேன். மனதினுள் புதையுண்டு கிடக்கும் நினைவுகளும் ஒரு சேலையின் வடிவத்தை ஒத்தியது தான். தோன்றும் நேரங்களில் அதைப்பிரித்து அந்நினைவுகளில் பதிந்திருக்கும் சந்திப்புகளை மனத்திரையில் ரசித்தும், அந்நினைவுகளில் கிடைத்த சந்தோஷ தருணங்களை ஸ்பரிசம் கொண்டு அனுபவித்தும், மீண்டும் அந்நினைவுகளாலான ரணங்களையும், துயரங்களையும் மடித்து அலமாரியில் அதன் வைப்பிடத்தில் பொதித்து வைப்பதே நினைவுகள் அவ்வப்போது காலச் சக்கரங்களாக நம் வாழ்வில் செய்துகொண்டிருப்பவை.

கடந்த கால வாழ்வின் சம்பவங்களே மனதை ஓயா அலைகளாக திரும்பத் திரும்ப அதில் சுயலச் செய்துகொண்டிருந்தது. ஜவுளிக்கடைக்குள் பல வடிவங்களைக்கொண்டு அலங்கரிக்கப்பட்ட கண்ணாடியில் எதேச்சையாக என் முகத்தைப் பார்க்க நேர்ந்தது. பாதி வளர்ந்திருந்த முடிகள் நான் மொட்டை அடித்திருந்ததை நினைவு படுத்தின. கன்னத்தசைகள் இரண்டும் உள்ளிழுத்துக்கொண்டு வெயிலில் காய்ந்த மாம்பழத்தோல் போல் சுருங்கி இருந்தது. அங்கங்கே முளைத்திருந்த வெள்ளை மயிர்கள் என் வயதினை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தன. நிமிடத்திற்கு நிமிடம் காரணங்களின்றி கண்ணாடியில் சிகையை ஒழுங்கு படுத்தும் பழக்கம் முற்றிலுமாக என்னிடமிருந்து விலகி இருந்தது. கொஞ்ச வருடங்களாக என் முகத் தோற்றத்தை நான் மறந்திருந்தேன். கண்ணாடியில் பிரதிபலிப்பது என் முகமே அல்ல என்னும் தீர்மானத்திற்கு கூட என்னால் வர முடிந்தது. ஆனால் செலஸ்டினா என் முகத்தை நன்றாக நினைவு வைத்திருக்கிறாள். முதுமையின் வடுக்கள் தோன்றி இளமையின் அடையாளங்களை இழந்த போதிலும் அவள் என் முகத்தை நன்றாகவே நினைவில் வைத்திருந்தாள்.

சலசலப்பு இல்லாத, மனிதர்களின் குரல் கேட்காத ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டும் போல் தோன்றியது. உடன் வேலை செய்யும் நபரிடம் சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக சொல்லிவிட்டுச் பின்புறம் அமைந்த கடையில் பணிபுரிபவர்கள் மட்டும் உபயோகிக்கும் படிகளில் இறங்கி ஜவுளிக்கடையில் இருந்து வெளியேறினேன். தொண்டை அடைத்துக்கொண்டு கண்களில் நீர் தேங்குவதை உணரமுடிந்தது. மதிய உணவு இடைவேளையின் போது வழக்கமாகச் செல்லும் அந்தப் பெட்டி கடைக்கு விரைந்தேன். போதிய இடைவெளி இல்லாமல் முன்னேறிச் செல்ல பைக்குகளும், கார்களும் பிராயத்தனப்பட்டுக்கொண்டிருந்தன. வீதி ஓரத்தில் கடை விரித்திருக்கும் சிறு வியாபாரிகள் போவோர் வருவோரை தன் வியாபாரத்திற்காக அழைத்துக்கொண்டிருந்தார்கள். அந்த நெரிசலான தெருவை கடந்துபோக நீண்ட நேரம் பிடித்தது. சர்பத்தின் நெளிவை போல் வாகனங்களுக்கு இடையில் புகுந்து அந்தப் பெட்டிக் கடையை வந்தடைந்தேன். நெஞ்சில் இருந்த படபடப்பு என் உடலை விட்டு நீங்கி இருக்கவில்லை. சிகரெட் ஒன்றை வாங்கி பற்றவைத்தேன். சரியாக மூன்றாவது முயற்சியில் தான் சிகரெட்டை பற்றவைக்க முடிந்தது. கொஞ்ச வருடங்களாக சிகரெட்டை உள்ளிழுத்து வெளியிடும் புகையின் வாயிலாகத் தான் அழுகையிலிருந்தும், தனிமையிலிருந்தும் என்னை நான் விடுவித்துக்கொள்ள முடிகிறது. விரல் இடுக்குகளில் கரையும் சிகரெட்டின் சாம்பல் மெல்ல என்னை ஆசுவாசப்படுத்தியது.

சரியாக பன்னிரெண்டு வருடங்கள் கழித்து அவள் முகத்தை இன்று தான் பார்த்தேன். உடலில் கொஞ்சம் தசை கூடி இருந்தாலும் சிறுவயதில் பார்த்த அதே முகத்தை இப்பொழுதும் தனதாக்கிக்கொண்டிருந்தாள். மனம் பன்னிரெண்டு வருடங்கள் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது.

செலஸ்டினா என்னை நினைத்து இப்போது மனதுக்குள் எப்படி எல்லாம் புழுங்கிக்கொண்டிருப்பாள்… அன்று கடைசி சந்திப்பின் போது அவளிடம் நான் சொல்லிய அந்த வார்த்தை  “என்னைய அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது செலஸ்டினா ஆனா கண்டிப்பா பார்க்காம இருக்க முடியும், இனி என்ன பார்க்க வராத” இத்தனை வருடங்கள் கழிந்தும் என் வார்த்தைக்கு மதிப்பளித்து கடைப்பிடித்துக்கொண்டிருந்தவளுக்கு இது போன்ற நிலையை நான் உருவாக்கி இருக்கவே கூடாது. அந்த கடைசி சந்திப்பிற்கு பிறகு ஒருபோதும் என்னை சந்திக்க அவள் வந்ததில்லை. அவளுக்குத் தெரியும் ஒருவரின் கண்ணீரை மற்றவர் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் அந்த இரண்டடி தூரத்தில் நிகழும் அந்தச் சந்திப்பு ஆறுதலற்ற வார்த்தைகளைத் தேடி மனதிற்குள் தீச்சுடராய் எரிந்துகொண்டிருக்குமென்று. அவ்வப்போது நிகழும் தன் தங்கையின் சந்திப்பின் மூலம் அவள் வாழ்வின் தடம் சீரமைக்கப்பட்டுகொண்டிருப்பதை அறிந்துகொண்டேன்.

எங்கள் இருவரின் காதல் விவகாரம் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்திருந்தது. என் குடும்பத்தினரோ, செலஸ்டினாவின் குடும்பத்தினரோ எங்கள் காதலுக்கு தடையாக இல்லை. செலஸ்டினா படிப்பிற்கான செலவையும், அவள் குடுபத்தின் செலவையும் நானே பார்த்துகொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் திருமணத் தம்பதிகளாகவே பலரின் பார்வைக்குத் தெரிந்தோம். செலஸ்டினா கல்லூரி படிப்பு முடிந்ததும் ஒருமனதாக இரு குடும்பமும் எங்கள் காதல் திருமணத்தை நடத்தி வைக்க ஆசைப்பட்டார்கள்.

செலஸ்டினா கல்லூரிக்கு செல்லும் நேரங்களில் தினமும் இளைஞன் ஒருவன் காதலிக்கும்படி அவளைப் பின்தொடரும் விஷயத்தைச் செலஸ்டினா என்னிடம் சொல்லியதே இல்லை. ஆனாலும் என் நண்பர்கள் மூலமாக அவ்விஷயம் என் காதிற்கு வந்தது. எங்கெங்கோ விசாரித்து எச்சரிக்கும் முனைப்பில் தான் அவனை சந்திக்கச் சென்றேன். வெறும் பேச்சில் தொடங்கிய சண்டை இறுதியில் கைகலப்பில் போய் முடிந்தது. நான் அவனை கொலை செய்யும் அளவிற்குத் துணிவேன் என்று அப்போது நினைத்திருக்கவில்லை. கோவத்தில் கையில் கிடைத்த கம்பியை கொண்டு அவனை அடித்ததும் வீட்டிற்குத் திரும்பினேன். அதிகாலை போலீஸ்காரர்கள் என்னை தரதரவென்று தெருவில் அழைத்துச் செல்லும் போது தான் அவன் இறந்து போன விஷயமே எனக்குத் தெரியவந்தது. போலிஸ் ஜீப்பில் ஏற்றும் பொழுது கூட்டத்தோடு கூட்டமாக கலங்கிய நிலையில் நின்றுகொண்டிருந்த செலஸ்டினாவை பார்த்தேன். அப்போதைய நிலையில் வெறும் பார்வையைக் கொண்டு மட்டுமே என்னால் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடிந்தது. என் அம்மாவும் தங்கையும் ஜீப்பை தொடர்ந்து என் பின்னே ஓடிக்கொண்டு வந்தார்கள்.

அதற்குப்பிறகான நாட்களில் விசாரணைக்கும், நீதிமன்றத்திற்கும் செலஸ்டினா அலைந்துகொண்டிருந்தாள். நான் சொந்தமாக வைத்திருந்த சலூன் கடையை விற்று வழக்கை நடத்தியும் கூட என்னால் அவ்வளவு சுலபத்தில் வெளிவரமுடியவில்லை. சிறையின் இருளே நிரந்தரமென ஆகிப்போனது. நான் வாழ்வின் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக இழந்திருந்தேன். தோன்றும் நேரங்களில் மனு போட்டு என்னைப் பார்க்க வருவதையே செலஸ்டினா தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருந்தாள். ஒவ்வொரு சந்திப்பின் போதும் வார்த்தைகளின்றி அவள் கண்களின் மொழியால் காத்திருத்தலின் ஏக்கத்தை, பிரிவின் வலியை, இயலாமையின் தவிப்பை அனைத்தையும் அவள் கண்ணீரைக்கொண்டே எனக்கு உணர்த்திவிட்டுச் சென்றாள். என்னால் அவளின் படிப்பு பாதிக்கப்பட்டிருந்தது. அவள் வாழ்வின் பக்கத்திலிருந்து என்னுடைய அத்தியாத்தை முடித்துக்கொள்ள அப்போதே முடிவெடுத்தேன். கடைசிச் சந்திப்பின் போது “என்னைய அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது செலஸ்டினா ஆனா கண்டிப்பா பார்க்காம இருக்க முடியும், இனி என்னை பார்க்க வராத” என்று சொல்லி அவளிடமிருந்து என்னைப் பிரித்துக்கொண்டேன்.

முழுவதும் கரைந்து விரல் இடுக்ககளில் அடைப்பட்டிருந்த சிகரெட்டின் சூட்டை உணர்ந்ததும் நிகழ் உலகிற்கு திரும்பினேன். மீண்டும் ஜவுளிக்கடைக்கு செல்ல விருப்பமில்லாமல் என் அறைக்கு திரும்பினேன். அறைக் கதவை திறந்ததும் இருளின் வாசலை வந்தடைந்ததைப் போல் உணர்ந்தேன். உடலும் மனமும் சோர்வுற்றிருந்தது. இருளின் இருப்பிடத்தைத் தேடி ஓரமாக படுத்துக்கொண்டேன்.

எவ்வளவு நேரம் தூங்கினேன் என்றே தெரியவில்லை. இரவு மணி ஒன்றை கடந்திருக்கும் போது கதவுகள் தட்டப்படும் சத்தம் கேட்டது. இந்நேரத்தில் எவர் என்னைச் சந்திக்கக் கூடும் என்று யூகிக்க முடியாதவனாய் கதவை திறந்தேன். என் தங்கை நின்றிருந்தாள். எதற்கு இந்த நேரத்தில் வந்தாய் என்று கேட்டதற்கு “ஒரு நிமிஷம் வா உன்கிட்ட பேசணும்” என்று படி இறங்கி கீழே அழைத்துச் சென்றாள்.

“அண்ணா சாயங்காலம் செலஸ்டினா அக்கா நீ வேல செய்யுற கடைல உன்ன பார்த்தாங்களாம். வீட்டுக்கு வந்து ஒரே அழ. உன்ன பாக்கணும்னு சொல்லுச்சு அதான்…”

அவள் முழுவதுமாக சொல்லி முடிப்பதற்குள், வியாபாரம் முடிந்து தார் பாயைக்கொண்டு போர்த்தப்பட்ட தள்ளு வண்டிக்கருகில் செலஸ்டினா நின்றிருப்பதைப் பார்த்தேன். மதியம் கடையில் பார்த்த அதே நீல நிற புடவையில் இருந்தாள். ஆள் அரவமற்ற அவ்விரவில் தெரு விளக்கின் துணைக்கொண்டு நாங்கள் மூவரும் நின்றிருந்தோம். என்னைப் பார்த்ததும் செலஸ்டினா சட்டென்று ஓடி வந்து என்னை அரவணைத்துக்கொண்டாள். “என்னை மனிச்சுடுடா ஐசக்…” என் மார்பின் மீது முகம் புதைத்து தேம்பி தேம்பி அழுதாள். என் மார்பில் படிந்த அவள் கண்ணீரின் ஈரத்தை உணர்ந்தேன். பன்னிரெண்டு வருடங்களாக விலகி இருந்த அவள் உடலின் ஸ்பரிசம் இப்போது உணர்கையில் மனதை ஏதோ கனக்கச் செய்தது. என் கரங்களும் அவளை அரவணைத்துக்கொள்ளத் துடித்தது. அவளுடன் பார்த்த அந்த மழலையின் முகமும், அவள் கணவனின் முகமும் சட்டென்று நினைவில் தோன்றியது. அவள் தாயும், மனைவியும் ஆனவள் என்பதை உணர்ந்தேன். தொண்டை அடைத்துக்கொண்டு கண்கள் இரண்டிலும் கண்ணீர் தேங்கி நின்றன. என்னை அரவணைத்துக்கொண்டு அழுகொண்டிருந்தவளை இரு பக்கமும் தோள்களைப் பிடித்து நிறுத்தினேன்.

“சென்னைல தானே இருக்க. ஏன் ஜெயில்ல இருந்து வந்ததும் என்னைய பார்க்க வரல.. என் முகத்தையே முழிக்க கூடாதுனு இருந்துடியா ஐசக் சொல்லு…”

இனி எப்போதும் அழுவதற்கு கண்களில் நீர் இல்லை எனும் அளவிற்கு தேம்பி தேம்பி அழுதாள். என்னால் அவள் கண்ணீருக்கு ஆறுதல் வார்த்தை சொல்ல இயலவில்லை.

“என்னய மறுபடியும் சந்திச்சா நீ எவ்ளோ கஷ்டப் படுவேணு எனக்கு தெரியும் செலஸ்டினாஎல்லாத்தையும் காலம் தான் முடிவு பண்ணுது. யாரும் யாருக்கிட்டயும் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்ல. நான் அன்னைக்கு சொன்னத தான் இன்னைக்கும் சொல்லுறேன்… என்னைய உன்னால நினைக்காம இருக்க முடியாது ஆனா கண்டிப்பா பார்க்காம இருக்க முடியும்… இனிமேல் என்னை பார்க்க வராத”

சொல்லி முடித்ததும் சட்டென்று படியேறி என் அறைக்குச் சென்று கதவை பூட்டிக்கொண்டேன். அவள் என் உடலை விட்டு விலகிய பின்பும் கூட இன்னும் என்னை தழுவிக்கொண்டிருப்பது போல் இருந்தது. மீண்டும் அந்த பச்சை நிறப் பெட்டியை திறந்தேன். மேலிருந்த என் சட்டை, பனியன், பேண்ட் என்று அனைத்தையும் திசை எங்கும் தூக்கி எறிந்தேன். துணிகளுக்கு அடியில் அவள் நினைவாக வைத்திருந்த குருத்தோலை கையில் சிக்கியது.

அதை எடுத்துப் பார்த்த அடுத்தக்கணம் அடக்க முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. கால்கள் இரண்டையும் மடக்கிக்கொண்டு, வெறும் தரையில் படுத்தபடி “என்னைய மன்னிச்சுடு செலஸ்டினா” என்று சொல்லி கதறி அழுதேன். இறுக்கமாகப் பிடித்திருந்த அந்தக் குருத்தோலை என் இரு கரங்களாலேயே நொருங்கிக்கொண்டிருந்தது. இனி அந்த குருத்தோலை உயிர்தெழப்போவதில்லை.

பூட்டிய கதவின் கீழ் வெளிப்புறத்தில் அமர்ந்துகொண்டு அழும் இன்னொரு குரல் கேட்டது. அது செலஸ்டினாவின் குரல்.

யூவின் அழகிய யுவதி – சீனக் கவிதையின் மொழிபெயர்ப்பு – ந.சந்திரக்குமார்

மூலம்: சியாங் செ (1245- c1310) எழுதிய “யூவின் அழகிய யுவதி” என்ற சீனக் கவிதை

பெய்திறங்கும் மழையின் தாளத்தை
என் இளமையில்
விபச்சார விடுதியொன்றின் கூரைமீது
ஒருமுறை கேட்டிருந்தேன்,
நான் படுத்திருக்க அருகில்
மெழுகுத்திரியின் ஒளிவெள்ளத்தில்
மேலாடையும், பெண்மேனியும்
பட்டுபோல் பிரகாசித்திட!

பெய்திறங்கும் மழையின் தாளத்தை
சிறுபடகின் ஓய்வறையின் கூரைமீது
பின்பொருமுறை கேட்டிருந்தேன்,
கீழிறங்கிய கருமேகங்களுக்கு
அஞ்சிய நீர்ப்பறவைகள் ஓலமிட்ட
ஓர் இலையுதிர்காலப் புயலினூடே
பெரியநதி வழி சென்ற என் பயணத்தில்!

பெய்திறங்கும் மழையின் தாளத்தை
இந்த ஆசிரமத்தின் கூரைமீது
இப்போது மீண்டும் கேட்கிறேன்,
முழுதும் வெள்ளையான என் தலைமுடி.
இன்பம், துன்பம், பிரிவு, மீள்சந்திப்பு
என்பன எல்லாம்
எதுவுமே நிகழாதது போல் இருக்க
இரவெல்லாம் பிரவாகமாய்
ஓடுகளின் மேல் பெய்யும்
மழை மட்டும்தான் அப்படியே இருக்கிறது!

 

ஆங்கில மூலம்:

The Fair Maid of Yu
By Chiang Chieh ( 1245- c. 1310)
Translated from Chinese by Kenneth Rexroth

Once when young I lay and listened
To the rain falling on the roof
Of a brothel. The candle light
Gleamed on silk and silky flesh.

Later I heard it on the
Cabin roof of a small boat
On the Great River, under
Low clouds, where wild geese cried out
On the Autumn storm.

Now I
Hear it again on the monastery
Roof. My hair has turned white.
Joy — sorrow — parting –meeting —
Are all as though they had
Never been. Only the rain
Is the same, falling in streams
On the tiles, all through the night