Author: பதாகை

கூண்டுக்குள் பெண்கள் – விலாஸ் சாரங் தொகுப்பு குறித்து காளிப்ரஸாத்

கூண்டுக்குள் பெண்கள் – விலாஸ் சாரங் ( தமிழில்:- ஆனந்த் ஸ்ரீநிவாசன்)

ஆங்கில/ மராத்திய எழுத்தாளரான விலாஸ் சாங் எழுதிய ”த தம்மா மேன்” ( தமிழில்: தம்மம் தந்தவன் ) நாவல் வழியாகவே அவரை முதன் முதலில் அணுகுகிறேன். புத்தரின் வாழ்வைத் தத்துவ ரீதியிலாகவோ, போதனைகள் வழியாகவோ அணுகும் முறை உண்டு. ஆனால் இவர் அந்த நாவலில் புத்தரை அவரது அலைச்சல்களைக் கொண்டே அவதானித்தவர். புத்தரின் போதனைகள் அத்தனை இருந்தாலும் அவர் அந்த ”த தம்மா மேன்” நாவலில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ஒரு போதனை குறிப்பிடத்தக்கது.

 

சகோதரா! நீ உனக்குள் ஒரு தீவை உருவாக்கிக் கொண்டு அங்கேயே இருப்பாயாக! உனக்கு உன்னைத் தவிர வேறு யாரிடமும் அடைக்கலம் கோராதே! யாருக்கும் புகலிடமும் அளிக்காதே! உன் தீவாக தம்மத்தை எண்ணிக்கொண்டு அதற்குள் மட்டுமே வாழ்ந்து வா! ’ என்பதாகும் அது

 

அவரது சிறுகதை தொகுப்பான கூண்டுக்குள் பெண்கள் தொகுப்பைப் படிக்கும் போது, அந்த வரிகளை அடைய அவர் மேற்கொண்ட சோதனைகளோ இந்த கதைகள் எல்லாமே என்று எனக்குத் தோன்றியது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நிலப்பகுதிகளில் இருந்தும் இவர்  இத்தனை ஆண்டுகளாக் எழுதிய கதைகளின் நாயகர்/நாயகிகள் அனைவருமே வேறு வேறு வகைகளில் தனித்தலையும் புத்தர்களாகவே இருப்பது எனக்கு அப்படித் தோன்றச் செய்தது. 

தமிழக எழுத்தாளர்களில்  கி.ராஜநாராயணன் வரிசை இலக்கியவாதிகளை கதை சொல்லிகள் என்றும் அசோகமித்திரன் வகை இலக்கியவாதிகளை ”கதை எழுதுபவர்கள்” என்றும் விமர்சகர் பார்வையில் எழுத்தாளர் ஜெயமோகன் பிரிக்கின்றார் (இலக்கிய முன்னோடிகள்).  விலாஸ் சாரங் -ன் இந்த தொகுப்பைப் படித்தவரையில் அவர் இவ்விரண்டில் அசோகமித்திரன் வழியில் வருபவர் என்பதை அவர் எழுத்தில் வெளிப்படும் வெறுமை, அங்கதம் இவ்விரண்டையும் வைத்து எளிதாக சொல்லிவிடமுடியும். இவரைத் தமிழின் நவீனத்துவ எழுத்தாளர்களில் இணை வைத்துப் புரிந்து கொள்ளலாம்

 

உதாரணமாக, அசோகமித்திரனனின் ”தப்ப முடியாது” என்கிற சிறுகதையை சொல்லலாம்.  குழந்தைக்கு வைத்தியம் பார்க்க ஒரு குடிசைவாழ் பெண்மனி சேர்த்து வைத்திருந்த பணத்தை அவளது குடிகார  கணவன் எடுத்துக்கொண்டு குடிக்கக் கிளம்புகிறான். அதைத் திரும்பப் பெறக் கத்திக் கூப்பாடு போட்டுக்கொடு வரும் அவனது மனைவியை அடித்துப் போட்டுவிட்டுக் கிளம்புகிறான் அவன். அதை அங்கு ஓரமாக திருட்டு தம் அடிக்க வந்த அந்தக் கதையின் நாயகன் பார்த்துக் கொண்டிருக்கிறான். இரவு படுக்கையில் அவன் அந்த சம்பவத்தைப்பற்றி சிந்தித்தித்துக் கொண்டே இருப்பான். ”பாவி இப்படி பண்ணிடானே அந்தக் குழந்தை என்னவாகும்” என்று அவன் யோசிப்பான்.. அப்படியே அந்த எண்ணம் வளர்ந்து ’அருகில் இருந்த நான் அவனை அதட்டியிருந்தால் அவன் போயிருப்பான்’ என்று தன் மீது அவன் கோபம் திரும்பும். அப்போது அவன் இன்னொரு மனம் அவனிடம் ’நீ இன்றும் தப்பு செய்யவில்லை.. விருப்பு வெறுப்பு இன்றி அதைப் பார்த்துக் கொண்டிருந்தாய்..அதை தத்வமஸி என்று உபநிடதம் சொல்கிறது’ என்று ஆசுவாசப்படுத்தும். அப்போது அந்த முந்தைய மனம் மீண்டும், ‘நீ என்ன கிழித்தாய்! இப்படில்லாம் சொல்லி உன் கோழைத்தனத்தை மூடிக் கொள்ளாதே’ என்று குத்திக் காட்டும்.. அவன் அப்படியே உறங்கிப் போவான். அந்தக் கதை இப்படி முடியும்..” அப்படியே யோசித்தபடி நான் தூங்கி விட்டேன்.. மறுநாள் காலை நான் எழுந்து பார்த்தேன்.. எல்லாம் சரியாக இருந்தது..” என்று. அசோக மித்திரன் கதைகளில் வரும் ’நான்’ மிக முக்கியமானது. விலாஸ் சாரங் கதைகளும் இதேபோல துவங்கி ‘நான்’ என்றே தன்னிலையில் எழுதப்பட்டு செல்வதையும் ஒருவித அங்கதத்தில் முடிவதையும் ஒப்பிட்டுக் காண முடிகிறது. ஒரு அபத்த சூழ்நிலையை தத்துவார்த்தமார்க்கும் முயற்சியும் ஒரு அரிய சூழலை அபத்தமாக்கும் முயற்சியும் இவர் எழுத்தில் தென்படுகின்றன.  உதாரணமாக, தன் நண்பனின் தாயின் பிணத்தை எரிக்கையில் அதில் குளிர்காயும் ஒரு தருணம். மற்றொன்று இதில் வரும் ஈக்கள் கதையில் அவர் ஒவ்வொரு ஈயாக எப்படி தப்பவிட்டு எப்படி கொன்று அதை சித்ரவதை செய்து பாடாய் படுத்துகிறார் என்று சொல்லிவந்து அதை இறுதியில் ‘ நான் இப்பொழுது சுய இன்பம் செய்வதில்லை என்று சொல்லி முடிப்பது. புத்தரின் சிலையை எரித்து ஒரு துறவி குளிர்காயும் அந்த புகழ்பெற்ற ஜென்கதையை நாம் இங்கு நினைத்துப் பார்க்கலாம்

 

கிட்டத்தட்ட இந்த சிந்தனையையே பலவிதங்களில் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார் விலாஸ் சாரங். அவருக்கு இந்தியப் புராணங்களின் மீது ஒரு பெரும் பயிற்சி இருக்கிறது. அதே நேரத்தில் அதை ஒரு நவீனத்துவனின் நோக்கில் காணும் பார்வையும் இருக்கிறது. 

 

இந்திரனின் ஆயிரம் கண்கள் என்கிற தொன்மத்தை அவர் எடுத்துக் கொள்கிறார். அவர், அந்த இந்திரனிடமிருந்து வரும் மணத்தை  அழிவின்மையின் மணமாக மாற்றுகிறார். இந்திரன் ரிஷி பத்தினிகளொடு அவர்கள் அறியாமல் உறவு கொண்டவர். அவன் இந்திரன் என்பதைப் பத்தினிகள் உணர்ந்ததே இல்லை. ஆனால் சிகப்பு விளக்குப் பகுதியில் விபச்சாரியாக இருக்கும் சம்பா அவனின் முதற்தொடுகையிலேயே ’நீங்க இந்திரன்தானே’ என்று கேட்கிறாள். இந்திரன் அவளுக்கு ஆயிரம் கண்களை அளிக்கிறான். அவளது பார்வையைக் காணமுடியாத ஆண்களும் பெண்களும் தங்கள் பார்வையைத் திருப்பிக் கொள்கின்றனர். அவளை எதிர்கொள்ள அவர்களால் முடியவில்லை.  தன் உண்மையைப் சாதாரணப் பெண்களின் பார்வையிலிருந்து மறைத்து ஒரு பிம்பத்தை கட்டியெழுப்பி விடலாம். ஆனால் ஒரு விபச்சாரிப் பெண்ணிடம் ஒருவன் பீற்றிக் கொள்ள முடியுமா என்ன? அந்தக் கதையின் முடிவில் மக்கள் அவளைத் தெய்வமாக்கி தசரா விழாவில் அவளை துதிக்க ஆரம்பிக்கிறார்கள். இதுவே அவர் தன் அங்கதத்தை வெளிப்படுத்தும் இடமாக இருக்கிறது. இதேபோல ஓம்லிங்கம், தெய்வங்களின் புரட்சி, கஸ்தூரிமான் என்று இவர் சில தொன்மங்களைக் கையாளும் கதைகளிலும் இவ்விதமான நவீனத்துவரின் பார்வையை நாம் காணமுடிகிறது

அந்த நவீனம் என்பது அவர் தன் எழுத்துக்களைக் கையாண்ட முறை என்றும் சொல்லலாம். அதைக் கொண்டு அவர் மரபையோ தொன்மத்தையோ நிராகரிக்கவும் இல்லை. அதை தற்காலத்துடன் பொருத்துகிறார். அதிகநாள் மும்பையில் நிலை கொண்டிருந்தாலும் அவர், அவர் தன் பணி நிமித்தமாக பல தேசங்களில் வாழ்ந்திருக்கிறார். அவரது படைப்புகள் உளகளாவிய ஆங்கிய பத்திரிக்கைகளில்தன வந்திருக்கின்றன. சொல்லப்போனால்,  அவர் பிற்காலத்தில் மராத்தியில் எழுதிய படைப்புகளுமே அவர் முதலில் ஆங்கிலத்தில் சொற்றொடர்களை அமைத்துப் பின் அதை மராத்திக்கு மாற்றியவைகள் தான். இதுபோல பல உலகின் பல தேசங்களில் வசித்த எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களை எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் அந்த தேசத்தின் பெயர் சொல்லியே எழுதியிருக்கிறார்கள். ஒருபக்கம் அ.முத்துலிங்கம் ஒவ்வொரு நாட்டின் மனிதர்களின் உன்னதத்தை அறியாமையை எழுதியிருக்கிறார். மற்றொரு பக்கத்தில் சென்ற வருடம் சிறுகதை தொகுப்பு வெளியிட்டிருக்கும் எழுத்தாளர் சிவா கிருஷ்ண முர்த்தி அவர்கள் ஒவ்வொரு நாட்டு மக்களின் உள்ளார்ந்த கீழ்மையை எழுதியிருக்கிறார். அந்த இரு எல்லைகளையும் வைத்துப் பார்க்கையில் விலாஸ் சாரங் தன் கதைகளில் தான் பணிபுரிந்த நாடுகளின் பெயரை அரிதாகவே குறிப்பிடுகிறார். சில கதைகளை வைத்து நாம் யூகிக்க முடிந்தாலும் அதை அவர் சொல்லாததன் காரணம் அவர் தனிப்பட்ட மனிதன் குறித்துதான் எழுதுகிறார் என்பது மட்டுமே. அவர் மொழி தேசம் என்று மனிதர்களை பிரித்துக் காட்டுகையில் அவர்களின் பின்புலம் தேவையற்ற குழப்பங்களை எற்படுத்தி கதையை திசை திருப்பிவிடும் என்று கூட கருதியிருக்கலாம். எந்த தேசமானாலும் அவர் கதாபாத்திரங்கள் ஒரு அறையில், ஒரு வீட்டில், ஒரு வாடகை குடியிருக்கில், ஒரு டார்மென்ரியில் இருக்கும் மனிதர்களே. கூண்டுக்குள் இருக்கும் பெண்களே அவரது கதை மாந்தர்கள். 

 

அவர்கள் தனக்குள்ளே ஆழ்ந்தவர்களாக இருக்கிறார்கள். இண்ட்ரோவெர்ட் என்று சொல்வோம் இல்லையா அப்படி.  அவர்கள் அதிகம் மற்றவர்களிடம் வெளிப்படுவதில்லை. அவர்கள் ஒருவித சுயஆய்வு செய்கிறார்கள். ’வரலாறு தன் பக்கம்’ என்று சொல்லிக் கொண்டு அவர்கள் தனித்து இருக்கிறார்கள். அப்பொழுது அங்கு உலகியலுடனோ அரசியலுடனோ  ஒரு தத்துவத்துடனோ அவர்கள் மோதிக் கொள்கிறார்கள். அல்லது குறைந்த பட்சம் அவர்கள் வெளித்தள்ளிய கருத்துக்களே பல்லியாக மீண்டும் அவருக்குள் திரும்புகின்றன. அவரது சிறுகதைகள் அந்த தருணத்தில்தான் நிகழ்கின்றன. விலாஸ்சாரங் அடிப்படையில் ஒரு கவிஞர் என்பதும் அவரது இந்த உள்ளொடுங்கிய கதைத் தனைக்கு காரணமாக இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. மரபு எழுத்துகளுக்கு உரை எழுதுவது பண்பாடு. நவீன எழுத்துக்கள் ஒவ்வொரு வாசகனுக்கும் அந்தரங்கமானவை. ஆகவேதான், இவர் ஒரு நவீன எழுத்தாளர் என்பதாலேயே அவரது கதைகளுக்கு உரை எழுதுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது. அவரது மற்ற பரிணாமங்கள் குறித்தும் பார்க்கலாம்

 

விலாஸ் சாரங் என்கிற ஒரு கவிஞன் வெளிப்படும் தருணம் அவரது கதைகளில் மிக முக்கியமானதாக விளங்குகின்றன. கவிஞர்கள் கதைகள் எழுதும்போது அந்த அனுபவம் சில வரிகளில் நமக்கும் வந்துவிடும். யூமாவாசுகியின் ரத்த உறவு நாவலில் சுவீட் கடையின் பெயரை அந்தச் சிறுவன் மைக்கில் சொல்லும் தருணம்.. வேட்டை என்கிற சிறுகதையில் அவர் அந்த வாழை மரங்களை வெட்டும் தருணம்.. பிரான்ஸிஸ் கிருபா, கன்னி நாவலில் “ சிலுவையே! நீ உணர்ந்தது மீட்பரின் இறப்பையா அல்லது உயிர்ப்பையா “ என்று கேட்கும் தருணங்களில் இதை எழுதுபவன் நாவலாசிரியன் அல்ல கவிஞன் என்று நாம் உணர்வது நிகழும். எழுத்தாளர்களின் அபூர்வ வரிகள் இவ்வகையில் எழுந்து வரும். ”முகிலில் வாழ்கிறது அணையா நெருப்பு” என்று துவங்கும் ஜெயமோகனின் வெண்முகில் நகரம் நினைவுக்கு வருகிறது. ( உண்மையில் இந்த இடத்தில் விலாஸ் சாரங் இருந்தால் ஒரு பிராக்கெட்டில்(!) இந்த பேச்சாளர் இதையெல்லாம் படித்திருக்கிறார் என்று ஒரு ஆச்சரியக் குறியும் போடுவார் என்பதை நான் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். இடையூறுக்கு மன்னிக்கவும்.. )

 

ஆம் கவிதை வரிகள் பற்றி மீண்டும் வருவோம்.. சில கவித்துவ வரிகள் இவரது சிறுகதைகளில் வெளிப்படுகின்றன. இவரது ஒரு வரி எனக்கு தேவதச்சனை நினைவூட்டியது..

துணி துவைத்துக் கொண்டிருந்தேன். காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்.

தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்.. காதில் விழுகிறது.. குருவிகள் போய்விட்ட நிசப்தம்.

அடுத்த துணி எடுத்தேன்.. காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகளின் சப்தம்

 

இது தேவதச்சனின் கவிதை

 

மேற்கண்ட கவிதையை என்னைத் தேடச் செய்தது..விலாஸ் சரங்கின் வரலாற்றின் முடிவு என்கிற கதை. இந்தக் கதையைப் பற்றி முதலில் குறிப்பிடவேண்டும். இந்தக் கதையே இந்தத் தொகுப்பின் சிறந்த கதையாகவே எனக்குப் பட்டது. காரணம் அவரை எவ்வாறெல்லாம் நாம் பகுக்கலாமோ அல்லது அவர் தன்னை தொகுப்பின் கதைகளை ஐந்தாகப் பிரிப்பதன் மூலம் (வேட்கைச் சூழல், கடலோர நகரம், சிற்றுயிர்கள், நிவானத்தின் தரிசனம் குலாக்கின் நிழல் ) அவர் தன்னை எப்படிப் பகுத்துக் கொள்கிறாரோ அந்த அனைத்திற்கும் பொதுவான கதை அது. அதை எந்த பிரிவில் வைத்தலும் அதனுடன் ஒன்றியிருக்கும். 

 

முன்பு சொன்ன தேவதச்சன் கவிதைக்கு வருவோம்.. அந்தக் கதையில் ஒரு கதாபாத்திரம் ஒவ்வொரு வரலாற்று இடத்திற்கும் போய் அங்கு இருக்கும் நிசப்தத்தைப் பதிவு செய்கிறது. அந்தக் கதை முழுக்கவே உள்ளொடுங்கியவனை சந்திக்க  அவரது மாணவன் வருவதைப் பற்றியது.. அதில் ஒரு வரி,

”‘தனித்திருப்பவன் தன் ஷூவை உள்வெளியாக அணிகிறான். மற்றவன் எதிர்பார்க்காதபடி என்றோ ஒருநாள் கையில் துப்பாக்கியுடன் வருகிறான். யாருடைய காலடிகள் பின்னோக்கிப் பதிகின்றன?’ என்று ஒரு எழுதுறார். வேறொரு கதையில் ‘என் காலணியின் நாடாக்களின் நிலைமை  விவாதத்திற்கானது அல்ல.. நானும் அதைக் கோரவில்லை..’ என்று ஒரு வரி.. அவரது மொழிக் கச்சிதத்திற்கு அவர் ஒரு கவிஞர் என்பதும் முக்கியமான காரணம். என்று தோன்றுகிறது. அந்த கச்சிதத்தையும் அங்கதத்தையும் மொழிபெயர்ப்பில் அப்படியே கொண்டு வந்திருக்கும் ஸ்ரீநிவாசன் அவர்களின் மொழிபெயர்ப்பும் முக்கியமாக இந்த இடத்தில் குறிப்பிடப் படவேண்டும்

 

முன்பே சொன்னது போல அவருக்கு இந்திய தத்துவங்களையும் தொன்மங்களையும் எழுதுவதில் மிகவும் விருப்பம் இருக்கிறது. அவரது ’த தம்மா மேன்’ புத்தகம் முழுதுமே இது குறித்த பார்வையையும் அதில் தன் கருத்தை அதைச் சார்ந்தும் எதிர்த்தும் எழுதியிருக்கிறார். நேராகவோ அங்கதமாகவோ அந்தக் கருத்துக்கள் வெளிப்படும்

 

சாவுமரம் கதையில் வரும் பாபா சிரசாசனம் செய்யும்போது, தன் ஆசிரமத்தில் இருக்கும் மண்டையோட்டு மரம் வானில் வேர் கொண்டு புவியில் கிளைபரப்பும்  தலைகீழ் மரமாக காண்பார். இதை பல இடங்களில் எழுத்தாளர் ஜெயமோகன் தன் படைப்புகளிலும் உரைகளிலும் குறிப்பிட்டிருக்கிறார். அது ஞானிகள் நமக்கு அளித்த கொடை. வானில் வேர்கொண்டு மண்ணில் கிளைபரப்பி  விரிந்திருக்கும் நம் மரபு அளிக்கும் ஞானத்தின் குறியீடு. இந்த மரம் என்னும் குறியீட்டை விலாஸ் சாரங் அவர்களும் பல இடங்களில் கையாளுவார். ’த தம்மாமேன்’ முழுக்கவே மரங்களை வைத்து கொண்டு செல்வார். ஆனால் அதையே இங்கு பகடியாக குறிப்பிடுகிறார். அப்படி எழுந்து வந்த ஞானம் இப்பொழுது தன் ஓவியங்களின் வழியாக விபூதி  கொட்டும் பாபாவிடம் வந்து நிற்பதன் அபத்தம் அது. 

 

இதைத் தாண்டி இதுல் இருக்கும் அரசியல் கதைகள். இந்திய வல்லூறு வின் வாக்கு மூலம் கதை அவர் முன்பே எழுதியிருந்தாலும் சமீபத்தில்தான் அந்த சைவ அசைவ உணவு விவாதமானது என்பது நினைவுக்கு வந்து. வேறொரு கதையில் இந்தியாவில் இராணுவ ஆட்சி வரும் என்பது அவருக்கு ஒரு  கனவில் தோன்றுகிறது. அதேநேரம், அவரது மற்ற கதைகளை விடவும் அவரது இந்த கதைகள் நாம் அறிந்த முடிவை நோக்கி நம்மை இட்டுச் செல்வதும் நாம் படித்த கதையையே மீண்டும் படிக்கும் எண்ணத்தை உண்டாக்குகின்றன. 

  மற்றும் ஒரு குறிப்பிடத் தக்க ஒன்று குரூர அழகியல். அந்த பீபத்ஸம் என்பதும் கூட வெறும் அதிர்ச்ச்சிக்காக அவரால் பயன் படுத்தப்படவில்லை

 தேவதேவன் தன் கவிதை ஒன்றில் சொல்வார்:         

’கடலோரம் வெளிக்கிருந்து /கால்கழுவி எழுந்த பின்புதான் /கடலும் வானமும் தன் ஆகிருதி காட்டிற்று’ ஆம்.. அத்தனை பிரம்மாண்டம்தான் என்றாலும் அவனவனுக்கு அவனவன் அவசரங்கள் அவஸ்தைகள் முக்கியம்.  அதில் முக்கிக் கொண்டிருப்பவனிடம் சென்று ஒரு ஆகாயத்தின் கடலின் அழகைப் பேசுவதைத்தான் அவர் தன் அந்தக் கதைகளில் சுட்டுகிறார். உலகியல் பிரச்சனைகளில் திளைத்துக் கொண்டு இருப்பவனிடம் கவித்துவத்தைக் காட்டிக் கொண்டு இருக்கும் ஒரு அபத்தம் உண்டு.  அதைத்தான் விலாஸ் சாரங் கும் பகடி செய்கிறார்.  ஒரு விதத்தில் அது அவரையே அவர் சுயபகடி செய்து கொள்வதாக வெளிப்படுகின்றன. அதனால்தான் அவர் தன் கதைகளை பெரும்பாலும் தன்னிலையில் எழுதுகிறாரோ என்றும் தோன்றுகிறது 

 

இந்த தொகுப்பைப் படித்ததும், அவர் கதைகளில் வெளிப்படும் ’இடம் /காலமற்ற தன்மையும்,’ ’கவித்துவமும்,’ ’பீபத்ஸம் எனப்படும் குரூர அழகியலும்தான்’ அவரது தனித்தன்மையாக நம் நினைவில் நிற்கின்றன. அந்த தருணங்களில்தான் அவரது  எழுத்துக்கள் உச்சம் பெறுவதும் நிகழ்கிறது . நாம் நம் அலுவலகத்தில் வேறு தேசத்தின் நேரத்தில் ஆழ்ந்து வேலை செய்திருக்கலாம். சில நேரங்களில் நம் வாசிப்பில் கால நேரம் பார்க்காமல் ஆழ்ந்திருக்கலாம். அதன்பின் நிகழ்காலத்திற்கு மீள்கையில் யதார்த்தத்த்தைக் கண்டு திகைத்து நிற்கும் ஒரு கணநேரத் தருணம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.  தன் கதைகளில் இவ்வாறு காலமும் தூரமும் வைத்து  விளையாடும் விலாஸ் சாரங்-ன் கதைகள் நமக்கும் அத்தகைய ஒரு திகைப்பைத்தான் அளிக்கின்றன

 

ஆதன் வாழ்க – வளவ.துரையன் கட்டுரை

மனத்தில் என்றும் மன்னனே!

சங்க கால மக்கள் “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று தம் வாழ்வை நடத்தினர். அரசன் முறையாக ஆட்சி செய்து குடிமக்களை நன்கு ஓம்பி வந்தால்தான் தங்கள் வாழ்வு சிறக்கும் எனக் கருதினர். ஐங்குறுநூறு இதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஐங்குறுநூற்றின் மருதத் திணையில் அடங்கி உள்ள வேட்கைப் பத்தில் உள்ள பத்துப் பாடல்களிலும் இதைக் காண முடிகிறது. வேட்கை என்பது விருப்பம் என்று பொருள் படும். தாய், தலைவி, தோழி ஆகியோரின் விருப்பத்தைக் கூறுவதால் இது வேட்கைப் பத்தாயிற்று

தலைவன் தலைவியைப் பிரிந்து புறத்தொழுக்கத்தில் நெடுநாள் ஈடுபட்டான். பின்னர் “இது தகாது” என உணர்கிறான். தலைவியோடு கூடி வாழ வருகிறான். அப்பொழுது அவன், “நான் உங்களைப் பிரிந்திருந்த காலத்தில் நீங்கள் என்ன கருதினீர்கள்” என்று கேட்கிறான். அதற்கு விடையாகத் தோழி கூறுவதாகப் பத்துப் பாடல்களும் அமைந்துள்ளன, எல்லாப் பாடல்களுமே அப்பொழுது ஆண்டு கொண்டிருந்த அவினி என்னும் பெயருடைய சேர மன்னனையும் அவன் குடியாகிய ஆதன் என்பதையும் வாழ்த்தி, “வாழி ஆதன் வாழி அவினி” என்றே தொடங்குகின்றன. எந்த ஒரு செயலும் மன்னனை முதன்மைப்படுத்தி அவனை வாழ்த்திய பிறகே மக்கள் தொடங்கினர் என்று இதன்வழி உணரலாம்.

தோழி,

வாழி ஆதன் வாழி அவினி
பசிஇல் ஆகுக! பிணிசேண் நீங்குக”
என்வேட் டோளே யாயே யாமே”

என விடை கூறுகிறாள். “நாங்கள் மன்னன் வாழ்க என்றும், நாட்டில் பசி இல்லாமல் போகட்டும், நோய் அகன்று போகட்டும் என நினைத்திருந்தோம்” என்பது இதன் பொருளாகும். மன்னன் சிறப்புடன் வாழ்ந்து சிறப்பாக ஆட்சி செய்யும் நாட்டில் பசியும், நோயும் இருக்காது. அப்ப்டிப்பட்ட நாட்டை விரும்பினோம் என்கிறாள். உறு பசியும் ஓவாப்பிணியும் இல்லாததுதான் நாடு என்பார் வள்ளுவர்.மற்றொரு பாடலில், தோழி,

வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக” என்கிறாள்.

அதாவது நம்அரசனுக்குப் பகை இல்லாமல் போகட்டும், அரசன் பல்லாண்டு வாழட்டும் என்று நினைத்திருந்தோம். ஒரு நாட்டுக்குப் பகைவர் இருந்தால் எப்பொழுதும் போர் நடந்துகொண்டே இருக்கும். மக்கள் அமைதியாய் வாழமுடியாது என்று இது கூறுகிறது. மேலும் தங்கள் மன்னன் பல்லாண்டு சிறப்புடன் வாழவேண்டும் என்றும் விரும்புவதாக அவள் கூறுகிறாள்.

இப்படி ”நாட்டில் தீமை இல்லாமல் போகட்டும்; பால் வளம் பெருகட்டும்; நெல் மிகுதியாக விளையட்டும்; பொன் மிகுதியாகக் கிடைக்கட்டும் என்றெல்லாம் நாங்கள் நினைத்திருந்தோம் என்று தோழி இப்பாடல்களில் கூறுகிறாள். தலைவனைப் பிரிந்து வருத்தத்தில் இருந்த போதும் மன்னனைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் நினைத்த மக்களின் வாழ்வை எண்ணி நாம் பெருமைப்படத் தோன்றுகிறது.

தூரதேசத்து ஓடையின் ஒரு துளி – காஸ்மிக் தூசி கவிதை

கனநீரின் சுவையாய்
ஊற்றெடுக்கிறது
உச்சிவெயிலில்
கோணிய தென்னையின் கீழ்
நிற்கும்
கிணற்றின்
நீலநிற ததும்பல்.

ஆலிங்கனத்தின்
வெம்மையாய்
உடல் எங்கும்
பரவி நிறைகிறது
நிரம்பிய நீள் சதுரத்தின்
குளுமை.

சென்ற பிறவியின்
நினைவு போல
நாசியில் ஆழத்திலிருந்து
கிளர்ந்து எழுகிறது
நீந்திக்கடந்த
குளத்து நீரின்
மீன் மணம்.

சகதி படிந்த
பாதங்களின்
நீர் ஊறிய வெளுப்பு,

மோட்டார் அறையின் மேலிருந்து
ஓடிவந்து குதித்து
மூழ்கும்போது
உண்டாகும்
செவியின் அடைவு,

தெறித்து அறையும்
அலைகளில் நனைந்து
பளபளப்பு கூடிய
கிணற்றுச் சுவரின்
கருங்கல் அடுக்கு,

அலையாடித் தளும்பும்
நீர்ப்பரப்பின்
விளிம்பில்

சிவந்த பிளவால்
துளாவி
காற்றின்
ஒரு பருக்கையை
அவசரமாய் அள்ளிக்கொண்டு
கல்லிடுக்குள் மறையும்
கருத்த நீர்ப்பாம்பு.

நெடிய
ஜலக்கிரீடையின் முடிவில்
நிழலை நீளமாக்கிக்காட்டும்
வெயிலில்
நடுங்கியபடி,

நீர் ஊறி வெளுத்த கைகளை
கட்டிக்கொண்டு
மூச்சு வாங்கி
நிற்கையில்,

மார்பு மேல் இறுக்கிய
நாடாவின் நழுவலில்
காணக்கிடைத்த குவைகளின்
காம்புகள் முறைக்கும்
முழுமையின் அசைவு,

அனைத்தும்
இன்னொரு
தூர தேசத்தின்
மலையடியில்
இது வரை கண்டிராத
ஓடையின்
ஒரு துளியில்
ஒளிந்திருக்கிறது.

எவர் சொன்னது?
தூய நீர்
மணம் நிறம் சுவை
அற்றதென?

​காணாமல் போனவர்கள், கனவு! – வி.பி கவிதைகள்

​காணாமல் போனவர்கள்

பூட்டிய வீட்டைப் பார்க்காமல்
முன்தின மழையால் நனைந்த வாசலில்
நின்றுக் கொண்டு
சூரியனோடு  கதவைத்
தட்டிக்கொண்டிருக்கி​​றேன்

சிறு சத்தத்திற்கும் சலனப்படும் இவர்கள்
இப்பொழுது மட்டும் எப்படி?

கலைந்த பொருட்களை
மீண்டும் மீண்டும்
அடுக்கி வைக்கும்
பெயரிலி விளையாட்டில்
சலித்துப் போக
ஒளிந்துக் கொண்டிருப்பார்களோ?

பிடித்தவர்கள் இடத்திற்கு
யாரும் அறியாமல்
ரகசியமாக  போய் வர
கிளம்பிருக்கலாம்

பாதாள உலகின் வாசல்கள்
கடந்து இருப்பது
எதுவென்று அறிய
சென்றிருக்கலாம்

காற்றின் அலைவரிசைகளில் ஒன்றை
தனக்கென்று வாங்கி வர
திட்டம் இருந்திருக்கலாம்

கடைசியாக,
காணாமல் போனவர்களின்
காலின் தடம்
அமைதியற்ற கேள்விகளில்
ஆழமாக பதிந்திருப்பதை
அறிகிறேன்!

கனவு!
சூரியப்பாதம் விளையாடும் மரக்கிளை
வான்மழை சிறைப்பிடிக்கும் வீடு
விதவிதமாய் பூக்கள் சூடும்  மொட்டை மாடி
உப்பரிகை சாளரங்களில்
வேடிக்கை பார்க்கும் பச்சை தேவதை
மந்தகாசம் உதிர்க்கும் மனித வாகனம்
அடர்ந்த இருட்டில்
கண் மூடி கனவு காண்கிறது
அடுத்த நகரமாய்
ஆகப் போகும் காடு!

வானின் பிரஜை – விஜயகுமார் சிறுகதை

சரியாக மூன்று வருடங்களுக்கு முன்புதான் என் அப்பா பட்டாம்பூச்சியாக மாறிப்போனார். மாறிய கையோடு காற்றில் கலந்து மறைந்தும் போனார். எனக்கும் அவருக்குமான இடைவேளை பல ஒளி ஆண்டுகளாக ஆகிப்போனது. மறைந்து போனவர் சிலவற்றை விட்டும் சென்றிருந்தார். சில கடன்களை, பல சொத்துக்களை. அதனால் பெரிய இழப்பு ஒன்றுமில்லை. அவர் விட்டுச்சென்ற வேறொன்று இத்தனை நாள் மறைந்திருந்தது. இப்போது தான் வெளிவந்தது. அது ஒரு தவிப்பு. அணையாத தீச்சுடர் போலான பரிதவிப்பு. இதோ இந்த டாக்டர் முன் அமர்ந்திருக்கும்போது கூட நான் அறிந்திருக்கவில்லை. இனி வரும் நாட்கள் இப்படி மாறிப்போகும் என்று.

இடது கை மேற்புறம் வீங்கிய கொப்பளங்களுடன் இந்த கிளினிக்குக்கு வந்தேன். கண்களால் அளந்து பார்த்த டாக்டர் கையுரையை மாட்டிக்கொண்டார். கோபளங்களை நீவிப்பார்த்து பிதிக்கினார். நான் அவர் முக உணர்ச்சிகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். மெல்லிய கணநேர கீற்றென ஒரு அருவருப்பான சுளிப்பு அவர் கண்களில் தோன்றி மூக்கு வழியாக இறங்கி உதட்டுக் கோணலாக முடிந்தது. ஏனென்று தெரியாமலேயே என் அகம் அதை படம்பிடிக்க புறம் அதை பிரதி செய்தது. அவர் பழக்கப்பட்ட சகஜ பாவனைக்கு மீண்டார், நான் அந்த பிரதியிலேயே நின்றேன்.

ம்ம்ம்….” என்று உறுமி ஒரு முடிவுக்கு வந்தார். பெட்ரோலியம் ஜெல்லி என்ற களிம்பை எடுத்து கொப்பளங்கள் மீது தடவினார். காற்று புகாத வன்னம் அதை இறுக கட்டினார்.

என்ன ஆச்சுங்க?” என்று கம்மலாக கேட்டேன்.

அவர் ஒன்றும் பேசாமல் ஃபோர்செப்ஸை ஸ்டரிலைஸ் செய்தார்.

சார்…..”

சமீபமாக எங்கயாவது போனீங்களா?”

நான் பெருசா எங்கேயும் இல்லீங்களேஎன்று சொல்லிவிட்டு யோசித்தேன். “வீடு கடை அவ்வளவுதான்.”

என் கையின் மேற்புறம் இட்ட கட்டு இறுகி வந்தது.

வீடு எங்கே இருக்கு? ஏதாவது தோட்டங்காட்டுக்கு உள்ளேயா? அங்க ஏதாவது பட்டாம்பூச்சி தேனீ ஈ அந்த மாதிரி தொந்தரவு ஏதாவது இருக்கா?”

புரியாதது போலவும் இல்லை என்பது போலவும் தலையசைத்தேன்.

அந்த கட்டை தொட்டு இந்த இடத்தில ஏற்கனவே புண்ணு இருந்துச்சா?” என்று கேட்டார்.

ஆமாங்க டாக்டர். அது சும்மா கீறல் தான். ஆனா கொஞ்சம் ஆழமா.”

கொப்புளங்களுக்கு உள் ஏதோ குடைந்தது. ஊரியது.

இருங்க காமிக்கிறேன்என்றவாறு கட்டை அவிழ்த்தார்.

அதற்குள்ளாகவா என்று யோசித்தேன்.

கொப்பளங்கள் வீங்கி சிவந்திருந்தது. அதன் நுனி வெடித்திருந்தது. ஏதோவொன்று கொப்பளங்களுக்குள் இருந்து அதன் தோற்றுவாய் வழியாக உமிழ் நீர்போல வெளித்தளியது.

இம்முறை நான் முகம் சுளித்தேன்.

டாக்டர், “பொறுங்க இதுக்கே இப்படின்னா?”

ஒரு கையில் கொப்பளங்களை லேசாக பிதுக்கி மறுகையில் அந்த இடுக்கி போலுள்ள ஃபோர்செப்ஸைக் கொண்டு கொப்பளங்களின் தோற்றுவாய்க்குள் விட்டு அதை இழுத்தார். அது ஜவ்வு போல வெளியே வந்தது. அதை மேஜை மேல் உள்ள ட்ரேயில் போட்டார். அது கீழே கிடந்து நெளிந்தது. என் வயிற்றிலிருந்து அமில நீர் கிடுகிடுவென மேலே வந்ததை கட்டாயப்படுத்தி உள் அழுத்தினேன்.

புழு

சார்! என்ன சார் இது!!”

இது லார்வா. ஏற்கனவே இருந்த காயத்தின் மேல ஏதோ ஒரு பூச்சி முட்டை வச்சிருக்கு. அது உங்களுக்குள்ள வளர்ந்துட்டு இருந்திருக்கு. காயம் ஆச்சுன்னா டிரீட்மெண்ட் எடுக்கணும். கண்டுக்காம விட்டா இப்படித்தான். இருங்க இன்னும் முடியல

அவர் மீண்டும் என்னுள் நுழைந்து மேலும் இரண்டு புழுக்களை பிரசவித்தார்.

மீண்டும் மேலெழுந்து வந்த அமில நீரை வெளியே ஓடி சென்று கக்கினேன். அப்பாவின் ஞாபகம் வந்தது.

சுத்தம் செய்துகொண்டு உள்ளே வந்தேன். உபகரணங்கள் எடுத்துக்கொடுக்கும் பெண்மணி தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். உள்ளே ஏதாவது இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்து விட்டு அருந்தினேன்.

அந்த டிரேவில் உள்ள புழுக்களை ஒரு முறை பார்த்தேன். அது உயிரற்ற கிடப்பது போலிருந்தது. டாக்டர் ஏதேதோ சொல்லிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. என் பார்வையை அவற்றின் மீது இருந்த விளக்குவதுமாக பதிப்பதுமாக இருந்தேன்.

பொறுண்மயாக வெளியே வந்தவை சூட்சுமமாக என் உள்ளே சென்று கொண்டிருந்தது.

பார்வையைத் திருப்பி டாக்டரை பார்த்தேன். டாக்டர் என்னை பார்த்துவிட்டு அந்த அம்மாவை பார்த்து கண்களால் ஏதோ சமிக்ஞை செய்தார். அவள் அந்த டிரேயை எடுத்துக்கொண்டு வெளியே உள்ள பூந்தோட்டத்திற்கு சென்றாள். டாக்டர் என் கொப்பளங்களை சுத்தம் செய்து கட்டுப் போட்டுக் கொண்டிருந்தார். நான் அவற்றைப் பார்க்காமல் திரும்பிக்கொண்டேன். வெளியே அந்த அம்மாள் சிறிய குழி ஒன்றைத் தோண்டி அந்த புழுக்களை உள்ளே போட்டு மூடிக்கொண்டிருந்தாள்.

புதைக்கிறாளா நட்டுவைக்கிராளா?

கொப்பளங்களை பிளந்து புண்ணாக்கி சுத்தம் செய்து மருந்திட்டு கட்டுப் போட்டார். எனக்கு அப்பாவின் புழுக்கள் ஞாபகம் வந்தது. அவை என்னுடைய புழுக்களை விட சிரியவைகள். ஆனால் உயிர்ப்புடயவைகள். இப்படி செத்தது போல் கிடைக்காது.

அதை நினைக்கும் போது மூச்சு கனத்து வந்தது. சட்டென்று போனை எடுத்து அதன் பக்கங்களை திருப்பி அப்பாவுடைய புழுக்களின் படங்களை எடுத்து டாக்டரின் முகம் முன் நீட்டினேன்.

டாக்டர்! அப்பாவுக்கும் இந்த பிரச்சனை இருந்திருக்கு. இங்க பாருங்க..”

அவர் கையை சுத்தம் செய்து கொண்டு வந்து போனை வாங்கி உற்றுப் பார்த்தார். “இது லார்வா மாதிரி தெரியலையே.”

நான் போனை வாங்கி மீண்டும் பல பக்கங்களை திருப்பி அப்பாவுடைய பழைய ரிப்போர்ட்டை அவருக்கு காண்பித்தேன்.

அவரும் கொஞ்சம் ஆர்வமாக சற்றுநேரம் போனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். “இது ஒருவகை கிருமி. உங்க பிரச்சனை வேற. ஏன் இவ்வளவு சீரியஸ் ஆகற வரைக்கும் விட்டீங்க? அவரோட கிருமிகள் முத்தி புழுக்களை உண்டாகிடுசே.”

அடுத்தடுத்த பக்கங்களை புரட்டினார். அதில் கடைசி பக்கத்தில் அப்பாவின் புண்ணுகள் அழுகிய நிலையிலும் அதிலிருந்து ஒரு புழு வெளிவரும் நிலையிலும் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு போனை என்னிடம் நீட்டியவாறு, “ஏன் இந்த கண்டிஷனுக்கு விட்டீங்க? என்ன ஆச்சு?” என்றார்.

சார் அவர் ஒரு சாமியார் மாதிரி சார்.”

…” என்றவாறு லேசாக சிரித்துவிட்டு, “அவரது வேற உங்களுக்கு வேற. உங்களுக்கு லார்வா; அவருக்கு இன்பெக்சன்.”

ஆமா சார் அவர் கடைசி வரைக்கும் என் பேச்சைக் கேட்கவே இல்லை. கடைசி நேரத்தில் எப்படியோ அட்மிட் பண்ணினோம். ஆன்டிபயாடிக்ஸ் கூட வேலை செய்யல. குணப்படுத்த முடியாத அளவுக்கு ரத்தத்துல கலந்திடுச்சு.”

ஒன்னும் பயப்பட வேண்டாம். யூ ஆர் ஆல்ரைட்என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார். வீடு வரும் வரை எல்லாம் புழுக்களே. என் புஜங்களில் இருந்து வெளியே வந்த புழுக்கள் மீண்டும் என் எண்ண அடுக்குகளில் போய் அமர்ந்து இருந்தன. என் தலையில் நீந்தின; மூக்கில் ஊரின; கண்களில் மிதந்தன; தொண்டையில் சுருண்டன; வயிற்றில் இறங்கின. ஐயோ என்னென்னமோ செய்தன. வழி நெடுகிலும் எச்சில் துப்பிக் கொண்டே வந்தேன்.

வீடு வந்து கதவை அடைத்துக்கொண்டேன். ஒரு சின்ன விடுதலை. வீடு அலங்கோலமாக இருந்தது. அம்மா இருக்கும் வரை வீடு அழகாய் இருந்தது. அப்பா இருக்கும் வரை ஏனோ இருந்தது. இப்போது பீடை பிடித்திருக்கிறது.

அவசர அவசரமாக சுத்தம் செய்தேன். பழைய சாமான்களை வெளியே வீசினேன். ஏறக்குறைய அனைத்தையுமே தான். சமையலறையை மூன்று முறை சுத்தம் செய்தேன். கழிவறையை நான்கு முறை. எல்லா அறைகளும் சுத்தம். நக்கி எடுக்காத குறை மட்டும்தான். இனி கிருமிகளும் இல்லை புழுக்களும் இல்லை.

முருகா….”

இரண்டொரு நாட்களில் எச்சில் துப்புவது நின்றிருந்தது. யோசித்துப் பார்க்கையில் அப்பாவும் இப்படித்தான் துப்பிக் கொண்டிருந்தார். அவரிடம் ஒரு பீங்கான் இருந்தது. அவர் துப்புவதை நிறுத்தி விழுங்க ஆரம்பிக்கும்போது முற்றிலுமே புழுவாக மாறியிருந்தார். அவர் புழுவாக மாறியிருந்தது எங்களுக்கோ ஏன் அவருக்கோ வெகுகாலம் தெரிந்திருக்கவில்லை. ஒரு நாள் அவருக்கு தெரிந்திருக்கக் கூடும் அதனால்தான் என்னவோ பட்டாம்பூச்சியாக மாறி எங்களை விட்டுப் பிரிந்து சென்றார்.

அப்பாவுக்கு வலி சகிப்புத்தன்மை அதிகம். அவரது வலிகளுடன் அவர் சமரசம் செய்து கொண்டவர். அம்மா இருக்கும்போது அவரை மகரிஷி என்று கிண்டல் செய்த ஞாபகம். ஒருமுறை வெளியே சென்றவர் பாதங்கள் அனைத்தும் இரத்தக் கறையுடன் வந்து நின்றார். “எதுத்தாப்புல வந்த வண்டி இடிச்சிருச்சு. சுண்டுவிரல் பிஞ்சு தனியா வந்துருச்சு.” என்று கையில் வைத்திருந்து சுண்டுவிரலை காண்பித்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் எனது மன்றாட்டலை சிரித்தவாறே புறந்தள்ளினார். அந்த சுண்டுவிரலை தோட்டத்துத் தென்னை மரத்தடியில் புதைத்து வைத்தார். அவரை அவரே கிள்ளி எடுத்து புதைத்து வைத்தது போல. அப்படித்தான் அவரது முதல் புண் உருவானது. முதல் புழுவும் அப்படித்தான் இருக்கும். இப்போது அந்த தென்னை மரத்தை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதை அப்பாவாக கற்பனை செய்து கொண்டிருந்தேன். இப்போது அப்பாவின் புழுக்களாக.

அப்பா!! காயம் பெருசாகிகிட்டே இருக்குது. ஒழுங்கா ஆஸ்பத்திரி வந்து பாருங்க


இந்த காயம், என் காயத்தை திங்கும்

நான் எரிச்சலுடன்,”சும்மா லூசு மாதிரி உளறிட்டு இருக்காதீங்க. அம்மா போனதிலிருந்து இப்படி கொஞ்சம் கொஞ்சமா உங்களையும் அழிசிகிட்டு என் நிம்மதியும் கெடுக்காதீங்க. சாகரதா இருந்தா ஒரேடியாக செத்திடுங்கஎன்று சொல்லி முடித்து விட்டுத்தான் அதன் நியாயத்தை உணர்ந்தேன்.

அவர்,”ப்ராப்த கர்மா…..”

கருமம்பாஅங்க பாருங்கப்பா அந்த காயம் அழுகி புழு புடிச்சு கிடக்குது. அப்புறமா காப்பாத்த முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு. இந்த அவஸ்தை வேண்டாம் உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்.”

எனக்கு என் புழு, உனக்கு உன்னுது, அவனவனுக்கு அவனதுஎன்று சொன்னவரை பார்க்க பைத்தியம் போல் இருந்தார்.

நான் சலிப்புடன், “அப்பா! உங்களுக்காக இல்லைனாலும் எனக்காக. உங்க பிரெண்ட்ஸ்காக, வாங்க ஆஸ்பத்திரிக்கு போவோம். இவ்வளவு ஆஸ்தி இருக்கு, அனுபவிக்கனும்னு ஆசை இல்லையா.”

நான் வானின் பிரஜை. மண்ணவர்கள் மீது எனக்கு பிடிப்பு இல்லை.”

அரக்கிருக்கு..” என்று அவர் காதில் படும்படி சொல்லிவிட்டு வெறுப்பாய் வெளியேறினேன்.

அவரது வாக்கு முகூர்த்தம்! இப்போது என் புழுவை நான் கண்டுகொண்டேன்.

சித்ராவின் அழைப்பை துண்டித்து விட்டு வீடு புகுந்தேன். மீண்டும் அவைகள். செய்த சுத்தம் அரை நாட்களுக்குள்ளாகவா காலாவதியாகும். என்னையும் வீட்டையும் மீண்டும் சுத்தம் செய்தேன். களைத்திருந்தேன். டிவியில் தோணி விளாசி கொண்டிருந்தார். படுத்துக் கொண்டிருந்த நான் சோறு உண்ணாமலேயே தூங்கிப்போனேன்.

பின்விடியலில் எழும்போது புழு என்னை முந்தியிருந்தது. ஓடிச் சென்று குளித்து புழு நீக்கம் செய்தேன். ம்ஹீம்ம்!!! முடியவில்லை!!!. புந்தியில் புழு படம் எடுத்து ஆடியது. அப்பாவின் கிறுக்கு எனக்கும் பிடித்துக்கொண்டது.

வீடு முழுதும் துப்பினேன். சமையலறையில் முற்றத்தில் கழிவரையில் ஒரு இடம் விடாமல். தோட்டம் முழுதும் துப்பி அலைந்தேன். அப்பா விரல் நட்ட இடத்தில் துப்பிக் கொண்டே இருந்தேன். என்மேல் துப்பினேன். கால்களில் துப்பினேன் கைகளில் துப்பினேன். கட்டை அவிழ்த்து கொப்புளங்கள் மீது துப்பினேன். கத்தி எடுத்து கொப்பளங்களை கீறினேன். பெரிய விரிசலாக்கி உள்ளே தேடிப்பார்த்தேன். அங்கே புழுக்கள் இல்லை. எப்படி இருக்கும்? அவைகளைத்தான் அந்த ஆஸ்பத்திரியில் நட்டு வைத்துள்ளார்களே. அவைகள் துளிர்விட்டு முளைப்பதர்க்குள் களையெடுத்தாக வேண்டும்.

சித்ரா பலமுறை அழைத்திருந்தாள். அவளிடம் பேச பிடிக்கவில்லை.

விரைந்து சென்று ஆஸ்பத்திரி பூந்தோட்டத்தில் அவைகளை புதைத்த இடத்தில் தேடினேன். காணவில்லை. ஐயோ காணவில்லை. எங்கோ தப்பித்து விட்டது. தப்பித்து மறைந்திருக்கின்றன. மறைந்து உற்பத்தி ஆகின்றன. உற்பத்தியானது என்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இனி விடுதலை என்பதே இல்லையா?

வீடு வந்து சேர்ந்தேன். சோர்ந்திருந்தேன். கொஞ்சமேனும் கவன மாற்றம் தேவை. கணினியை கிழப்பி ஆபாச படம் பார்த்தேன். அமெரிக்க வகை ஜப்பானிய வகை கருப்பினம் அடிமைத்தனம். என்னை நானே உசுப்பிவிட்டு அயர்ந்தேன். கொஞ்சம் விடுதலை. எப்படியோ, ஏதோ ஒரு புழு நாசினி.

சித்ராவுடன் அவ்வப்போது பேசினேன். ஆனாலும் பார்ப்பதை தவிர்த்து வந்தேன். அவள் என்ன யூகித்திருந்தாள் என்று சொல்ல முடியவில்லை.

ஆபாசம் என்னும் நாசினியும் சில நாட்களுக்குள் காலாவதியாகிவிட்டது. திக்கற்று இருந்தேன். சித்ரா வீடு வந்தாள். அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே உடைந்து அழுதேன். விழப் போனேன். ஓடிவந்து என்னை தாங்கினாள்.

பிதற்றி அழுதேன்.

வேண்டாம்டாவேண்டாம்டா…‌ எல்லாம் சரியாகி போய்விடும்என்று என்னவென்று தெரியாமலேயே சமாதானம் சொன்னாள். என்னை ஏந்திக் கொண்டாள். கைத்தாங்கலாக என்னை உள்ளே அழைத்து சென்று அமரவைத்தாள். என்னை எதுவும் கேட்காமலேயே சமாதானம் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

நான் இருக்கேன் உனக்கு. அப்பாவையும் அம்மாவையும் நினைச்சு பீல் பண்ணாத. உனக்கு யாரும் இல்லன்னு நினைக்காத. நான் இருக்கும் போது நீ அப்படி நினைக்கலாமா? ”

தன் இருப்பை தேவைக்கு அதிகமாகவே பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தாள். அருகில் இன்னும் ஒரு ஜீவன் இருப்பது ஒரு வகையில் சமரசம் தான். அவள் என்னை கவனித்துக் கொண்டாள். நான் அவளை கவனித்தேன். சமைத்தாள்; பரிவோடு பரிமாறினாள்; அருகிலேயே இருந்தாள்; இருந்து புழுக்களின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.

என்னாச்சு?” என்று கேள்விக்கு நான் அமைதியாக இருந்தேன். “மனசுல இருக்கறத சொல்லு. ஷேர் பண்ணாத்தான ஆகும்.”

என்னன்னு கேட்டா என்னன்னு சொல்றது? கொஞ்ச நாளாவே…”

கொஞ்ச நாளாவே?”

அது இதுன்னு யோசிக்க தோணுது. தலைக்குள்ள ஏதோ ஒன்னு கெடந்து கொடையுதுஎன்று தலையைக் கீழே போட்டவாறு சொன்னேன்.

கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லேன்என்று என் முகவாயை தூக்கிக் கேட்டாள்.

அவளது அக்கறை வழக்கமான காதல் பாசாங்கு காட்டியது. அந்த பாசாங்கின் உந்துவிசையால் நான் அடி ஆழத்திற்கு சென்று அமைதியாக இருந்தேன். அங்கிருந்து தொடங்கினேன்.

நாம என்ன செய்றோம் எதுக்கு இங்க வந்திருக்கிறோம். இதெல்லாம் என்ன. நம்மளோட இச்சை…. இந்த இச்சை இருக்கே அது தான் அடிப்படை. அது தான் இவ்ளோ இம்சை. புழு மாதிரி பிறக்கிறோம். சாப்பிடுறோம் தூங்குறோம் பெருசாறோம். ஆனா வளர்றோமா? மறுபடியும் ஏன் புழு மாதிரியான வாழ்க்கை. நாம பொழைக்கிறதுக்கு இந்த இச்சை தேவை. ஆனா அதிலேயே தான் சுத்திகிட்டு இருக்கனுமா. இச்சையின் விளைவு இச்சை தானா. விடுதலையே இல்லையா. புழுக்களாக பிறந்தா புழுக்களாக தான் சாகணுமா. அந்த சட்டகத்துக்குள் நம்மை யார் அடைச்சது. அந்த இறுக்கத்தில் இருந்து எப்படி வெளியே வர்றது.” என்று பிதற்றி முடிக்கும்போது சோர்வுற்று இருந்தேன்.

டேய் என்னடா இதெல்லாம்ஏன் இப்படி உளர்ர …வேண்டாம்டா… பயமா இருக்கு…

இல்ல சித்ரா எதைப் பார்த்தாலும் எனக்கு ஒரு வெறுப்பா இருக்கு. உன்ன பார்த்தாலும் என்ன பார்த்தாலும் நமக்குள்ள இருக்கிற உறவு பார்த்தாலும். உண்மையிலேயே நமக்குள் இருக்கிறது என்ன. இது என்ன உறவு.”

அவள் காதல்என்று பரிதாபமாகச் சொன்னாள்.

அவள் பதிலைத் தாண்டி நான் பேசிக்கொண்டு சென்றேன் நமக்குள் எவ்வளவு சாத்தியம் இருக்கு. ஆனா நாம ஒரு புழு மாதிரி வாழ்ந்திட்டு இருக்கோம்.” அவளிடம் சொல்ல சொல்ல எனக்கு திரண்டு வந்தது. இந்த பாசாங்கு இப்போது எனக்கு ஒரு புழு நாசினி. என் குரல் லேசாக தழுதழுத்தது.

அவள் “அழாதே” என்றாள். என்றவுடன் நான் அழ ஆரம்பித்தேன்.

அவள் என்னை அணைத்தாள். அணைத்துக்கொண்டதால் ஆக்கிரமித்தேன். ஆக்கிரமித்ததால் நெகிழ்ந்தாள். நெகிழ்ந்ததால் எல்லை மீரினேன்.

அவள் கீழ்படிந்தாள் நான் வன்முறை செய்தேன்.

அவளது அங்க திரட்சி எனக்கான இடைக்கால விடுதலை. உறவாடி முடித்தோம். சக்தி விரயம் ஏதோ ஒருவகையில் சமரசம். உறவுக்குப் பின்னான வெறுமை ஒரு ஆசுவாசம். நோக்கங்கள் இல்லை அதனால் தத்தளிப்பு இல்லை. அவஸ்தைக்கு சற்றுநேரம் விடுமுறை. சுற்றி யாரும் இல்லை. நானும் என் புழுக்களும் மட்டுமே. எங்கள் ஆதார விசையின் மேல் அமர்ந்திருந்தோம்.

செய்வதற்கு ஒன்றும் இல்லை. ஆகையால் என் புழுக்களை நேர்கொண்டு சந்தித்தேன். அதன் வடிவம்; இயங்குவிசை; ஆற்றல். அதன் சார்பு; காரணகாரிய சுழற்சி என்று விஸ்வரூப தரிசனமாக என்மேல் கவிழ்ந்தது.

என் புழுக்களை வெளித்தள்ளாது, அதனோடு உள்ளடங்கிய நான்.

சமரசம்

அவைகளும் நானும் மட்டும். ஏதோ நீண்ட நாள் பழகியவர்கள் போல. ஒருவரையொருவர் அறிந்தவர்கள் போல. உண்மைதான் அவைகள் என்னோடு பிறந்து என்னோடு வளர்ந்தவைகள். ஒருவிதத்தில் என்னை கட்டுமானித்தவைகள். கட்டுமான கச்சாப் பொருட்கள். என்னுடைய சிறிய வடிவங்கள். அவைகளுடைய சிற்சில சுழற்சிகள் எனது மொத்தமான சுழற்சி. எப்போதும் இருப்பவைகளை சமீபமாகத்தான் கண்டுகொண்டேன். பல நூறு பல ஆயிரம் புழுக்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இயக்கம். ஒன்றிலிருந்து ஒன்று உருவாகிறது வளர்கிறது முழுப் பரிமாணம் கொள்கிறது. பின்பு தேய்ந்து சுருங்கி ஒன்றுமில்லாமல் ஆகி மற்றொன்றை உருவாக்குகிறது.

நான் கண்கள் மூடி படுத்திருந்தேன். அவைகள் மேலும் அணுக்கமாக தெரிந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆனால் அடிப்படை விசை என்னவோ ஒன்றுதான்.

காமப் புழு உயிர் பெருக்கம். ஆசைப் புழு அனைத்தின் உள்ளடக்கம். வீரப் புழு வீண்வேலை. கருணைப் புழு அரவணைப்பின் பெருஞ்செயல். பயப் புழு உருவப் பாதுகாப்பு. பக்திப் புழு அருவப் பாதுகாப்பு. மேல் அடுக்கின் புழு. அடி ஆழத்தின் புழு. இன்னும் எவ்வளவோ.

நான் அமைதியாக இருப்பதயே உரையாடலின் சமிஞ்ஞையாக எடுத்துக்கொண்டு என்னாச்சு? ஏன் அமைதியா இருக்க? ஹாப்பியா தான இருக்க?” என்றாள்.

நான் உதடுகளை அழுத்தி சின்னதாக சிரித்துவிட்டு ஒரு பெருமூச்சு விட்டேன்.

சில வினாடிகள் அமைதியாக கடந்தன.

அவள் என்னை நோக்கி திரும்பி, இடது கையை தலையணையில் ஊன்றி பாதி உடலை மேலெழுப்பி என்னை கண்களால் அளந்தாள். இப்போது கேள்விகளே இல்லையென்றாலும் நான் பதில் சொல்லும் இடத்தில் வந்த நின்றேன். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் ஓரிரு வினாடிகள் உக்கிரமாக கடந்தன.

சும்மா ஏதோ டிப்ரஷன்…

என்ன டிப்ரஷன்?”

சரியா சொல்ல தெரியல…

ட்ரை பண்ணேன்…என்றாள்.

……..

நீ ஹேப்பியா தான இருக்க? உன் சந்தோஷம் எனக்கு முக்கியம். உன் கஷ்டத்தை என் கூட ஷேர் பண்ணிக்கோ.” என்று வளவளத்தாள்.

மெல்லிய கோபப் புழு என் முன் வந்து நின்றது. அவள் பேச்சை துண்டிக்கும் பொருட்டு நான் ஏதோ சொல்ல ஆரம்பித்தேன். “நான் சொல்றது உனக்கு புரியுமான்னு தெரியல. கொஞ்ச நாளாகவே எனக்கு இப்படி தோணிட்டு இருக்கு. இதோ இந்த காயம் ஆனதுல இருந்து.”

அவள் ஆர்வமாக நிமிர்ந்து அமர்ந்தாள்.

நான் சொற்களால் என்னை நானே கிளறிக் கொண்டேன். “நாம நினைக்கிற மாதிரி இல்லை இந்த டிசைன். இங்க வேற ஒன்னு இருக்கு. நம்மளுக்கு உள்ளேயே வேற சில விஷயங்கள் வாழ்ந்துகிட்டு இருக்கு. நம்ம உடம்புக்கு உள்ள பாக்டீரியாக்கள் இருக்கில்ல; அத மாதிரி. அதுங்களுக்குன்னு லைப் சைக்கிள் இருக்கு. அது சொல்ற மாதிரி தான் நாம நடந்திக்கிறோம். நம்ம வாழ்க்கையும் அமையுது. நாம தப்பிக்கவே முடியாது.” என்று ஆரம்பித்து சுழற்றி சுழற்றி வெவ்வேறு சொற்களில் தொடர்பற்று நீட்டிக்கொண்டிருந்தேன். என்னை நானே தோண்டிக் கொண்டிருந்தேன்.

மெல்லிய விசும்பல் ஒலி கேட்டுத்தான் நிறுத்தினேன். அவளை நோக்கி திரும்பினேன். அவள் கண்களை சந்தித்தேன். அதில் துக்கமும் தண்ணிறக்கமும் கருணையும் ஒன்று சேர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்தது. அது வெறும் பாசாங்கு தான் என பளிச்சென்று தெரிந்தது. குற்றமற்ற பாசாங்கு. அவளிடமும் என்னிடமும் அனைவரிடமும் இருக்கும் பாசாங்கு. தூய்மையானதும் கூட. இப்பிரம்மாண்டமான உலகில் நம் இருப்பின் தனிமையை மறைக்கும் திரை இவ்வாறான பாசாங்குகள்.

அப்படியான ஒரு கனமான திரையை அக்கணமே எடுத்து என் மேல் கவிழ்த்துக் கொண்டேன்.

அவளையும் அவளது புழுக்களையும் அணைத்துக் கொண்டேன்.

அவள் விசும்பியவாரே, “ஏன் இப்படி எல்லாம் பேசுற எனக்கு பயமா இருக்கு. நீ ஹாப்பியா இல்லையா? ஏதாவது சைகார்டிஸ்ட்ட பாக்கலாமா? ப்ளீஸ் சொல்லு. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.”

நான் அவளை அணைத்தவாறே வேண்டாம் என்பது போல் தலை ஆட்டினேன்.

அவள், “ப்ளீஸ் எனக்காக!!!”

நான் வேண்டாம் என்றேன்.

வேண்டாம்னா? என்ன பண்ணலாம்; நீயே சொல்லு; எதுவா இருந்தாலும் பரவால்ல சொல்லு.”


நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.”

அதை கேட்ட மாத்திரத்திலேயே அவள் அழுகையும் சிரிப்புமாக ஏதோ பாவித்தாள். “நெஜமாவா?”

ஆமா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்; நான் அதுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தேன்; அதுதான் என்னோட மருந்து. நீதான் என்னோட மருந்து. கல்யாணம் பண்ணிக்கலாம். குழந்தை பெத்துக்கலாம். நல்ல முறையா சம்பாதிக்கலாம். சந்தோசமா வாழலாம்.”

அவள் என்னை மீண்டும் அணைத்துக் கொண்டாள். அவளை அன்பாக விலக்கி அவள் முகத்தை இரு கைகளால் ஏந்தி அவளை நோக்கினேன். அவளுக்கு கண்ணீர் ஊற்றெடுத்தது. வழிந்த தடத்தில் வழிந்தது. புதிய தடத்தில் வழிந்தது. என்மேல் ஒரு கரிசனை புழு. எனக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது. உச்சம் தொட்டு தரை தொட்டு உச்சம் தொட்டது.

அவள்,”ஆமாண்டா, நாம கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா நீ இப்படி டிப்ரஸ்டா இருக்கக்கூடாது. உனக்கே தெரியும் எனக்கு வீட்ல எவ்ளோ பிரச்சனைன்னு. அப்பா ஒருமாதிரி, சித்தி வேறமாதிரி, தம்பி என்கூட பேசவே மாட்டான். ஆபீஸ்லயும் பாலிடிக்ஸ். நீ மட்டும் தான் எனக்கு நார்மல். நாம சந்தோசமா வாழனும்; புது வாழ்க்கை; சந்தோஷமாக கவலையே இல்லாம; நீயும் நானும் மட்டும். எனக்கு வேற எதுவும் தேவையில்லை. நீ பக்கத்துல இருந்தா எல்லாம் ஆட்டோமேட்டிக்கா சால்வ் ஆயிடும்.” என்று தழுதழுத்த குரலில் ஆரம்பித்து தெளிவாக முடித்தாள்.

ஆமா, எல்லாமே மறந்து ஒரு நார்மல் லைஃப் வாழனும். நல்ல சம்பாதிக்கணும். புது வீடு வாங்கணும். ஒரு கார் வாங்கணும். பூர்வீக சொத்து ரெடி பண்ணனும். பேங்க் பேலன்ஸ் ஏத்தணும். பெருமையா வாழனும். ஆமா! ஆமா! ஆமா! ஆமா சித்ரா.” என்று நான் சொல்லி முடிக்கும்போதே தெரிந்தது நான் மெல்ல மெல்ல சமரசமாகிக் கொண்டிருக்கிறேன் என்று.

ஆனால் சித்ரா அவளது ஞாபக அடுக்குகளில் இருந்த துயரங்களை பட்டியலிட ஆரம்பித்தாள். முதலில் அவள் அப்பாவிலிருந்து ஆரம்பித்து அம்மா வழியாகவும் சித்தி வழியாகவும் வந்து தம்பியில் ஒரு வட்டம் சுற்றி அலுவலகத்தில் நீட்டி நிறுத்தினாள். நான் ம்கொட்டியவாறு அவைகளை பிரதிபலித்துக் கொண்டிருந்தேன்.

இரவு முழுவதும் நான் எனது புழுக்களுக்கும் அவள் அவளது புழுக்களுக்கும் தீனி சமைத்தோம். நாங்கள் உறவில் திளைத்தோம். பந்தத்தில் கட்டுண்டோம்.

எல்லாம் முடிவானது; நானும் முடிவு செய்திருந்தேன்.

சில நாட்கள் கழித்து பெண் பார்த்தல் என்ற சாங்கிய நிகழ்வு ஒரு சுபதினத்தில் நடந்தது. அப்பா ஸ்தானத்தில் சில மிடுக்குகளையும் அம்மா ஸ்தானத்தில் சில மோஸ்தர்களையும் சித்ரா வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். என் அப்பாவின் சொத்து சித்ரா வீட்டாரை ஏற்கனவே சம்மதமும் சாந்தமும் அடைய வைத்திருந்தது. சிலர் குதூகலிக்க கூட செய்தார்கள். என் வீட்டார்கள் யார் அவள் வீட்டார்கள் யார் என்று பிரித்து அறியமுடியவில்லை. எல்லாம் ஒரே போல் மினுக்கினார்கள். இப்போது நானும் அவர்களில் ஒருவன். அதுவே என் மருந்து. அவர்களுள் ஒருவனாகத்தான் இருந்தேன். கொஞ்ச நாட்களாகத்தான் இந்த நோவு. இனி மீண்டும் அவர்களாகவே ஆகிவிடுவேன். சிறந்த ஏற்பாடு சிறந்த தீர்வு சிறந்த மருந்து.

நான் சுற்றிலும் கவனித்தேன். வசதியானவர்கள் தான் போலும். அனைத்தும் பிரம்மாண்டமாக இருந்தது. அங்கே மென்மைகள் அலங்காரமாகவும்; அலங்காரங்கள் பகட்டாகவும் இருந்தது. அவர்கள் அனைவரும் சொல்லி வைத்தார் போல் கடந்தகால மேன்மைகளையும் நிகழ்கால வசதிகளையும் வருங்கால வாய்ப்புகளையும் முகத்தில் பூசினார் போல் காணப்பட்டார்கள். இனி நானும் இவர்களில் ஒருவன். நினைக்கும் போதே குமட்டியது அடிவயிற்றிலிருந்து அமில நீர் மேல் எழும்பி தொண்டையைத் தொட்டு கீழ் இறங்கியது.

என்னை சுற்றி எங்கும் அவர்களே நிறைந்திருந்தார்கள். கொசகொசவென்று. எனக்கு ஏதோ இருப்பு கொள்ளவில்லை. ஒரு கடும் நெடி அடித்தது. ஏதோ அழுகிய சீழ் பிடித்த காயத்தின் நெடி. இல்லை இல்லை, அதில் மொய்க்கும் புழுக்களின் நெடி. நான் முகம் அகம் சுளித்தேன்.

என்னருகில் பட்டாடை உடுத்திய ரோலக்ஸ் வாட்ச் கட்டிய தங்க காப்பு பூட்டிய ஒரு புழு ஏங்க!! நல்ல நேரம் முடிய போகுது. சம்பிரதாயத்தை எல்லாம் முதல்ல முடிச்சுடுவோம்.” என்றது.

அதற்கு பச்சை பட்டு சேலை உடுத்திய நகைகளால் போர்த்திய பொருந்தா உதட்டுச் சாயம் பூசிய மற்றொரு புழு ஒரு ரெண்டு நிமிஷம்; பொண்ணு வந்துவிடும்என்றது.


என் காதருகே வந்து இன்னொரு புழு, “நல்ல பெரிய இடமாத்தான் புடிச்சிட்டஎன்று சிரித்தவாறு சொன்னது.

சில கிழட்டுப் புழுக்கள் வந்து அமர்ந்தன. சில இளைய புழுக்கள் பேசி மகிழ்ந்தன.

அப்போது வெண் மஞ்சள் சேலை உடுத்திய அலங்காரம் செய்த அழகிய புழு ஒன்று சபையில் வந்து நின்று அனைவருக்கும் நமஸ்கரித்து அமர்ந்தது.

அருகில் ஒரு புழு, “பொண்ணு லட்சணமா இருக்குல்லஎன்று பொதுவாக சொன்னது. சபையிலுள்ள மூத்த புழு ஒன்று அனைவருக்கும் கேட்கும்படியாக கல்யாண நிச்சய வாசகங்களை உரக்கப் படித்துக் காண்பித்தது.

எனக்கு எல்லாம் மங்களாகவே தெரிந்தது மங்களாகவே ஒலித்தது. சபை முழுக்க புழுக்கள். புழுக்களால் ஆன புழுக்கள். ஒவ்வொரு புழுக்களுக்கு ஒவ்வொரு சுழற்சி ஒவ்வொரு விசை.

அப்போது ஒரு புழு, “என்ன மாப்பிள்ளை சந்தோஷமா?” என்றது.

அதற்கு மற்றொரு புழு,”சந்தோசம் இல்லாம என்ன இப்போ..”

அப்புறம் என்ன கம்முனு இருக்காரு. வாழ்க்கையை நினைத்து கவலைபடுறாரோ…”

அட கல்யாணம் ஆகப் போவதில்லை! கவலையும் வரும் சந்தோஷமும் வரும்; அதெல்லாம் போகப் போக சமாளிச்சுக்குவாங்க. இல்ல நம்மல பார்த்து தெரிஞ்சு கிட்டும்; என்ன இப்போ.”

எனக்கு இருப்பு கொள்ளாமல் தன்னிலை தாண்டவமாடியது. கடும் நெடி என்னைச் சுற்றி வீசியது. எனக்கு அப்பாவின் நினைவு ஒரு மின்னல் போல் வந்தது.

இனி எனக்கு கல்யாணம் நடக்கும். சந்தோஷங்கள் நிகழும். பொறுப்பு கூடிவரும். வாரிசுகள் பிறக்கும் அல்லது பிறக்காமலும் போகும். ஆனால் கவலை பிறந்தே தீரும். பொருள் ஈட்டுவேன். ஈட்டிய பொருளுக்குத் தக்கவாறு ஆளுமை முடைவேன். ஆணவம் சமைப்பேன். அதிகாரம் செய்வேன். தின்று கொழுப்பேன். இளைத்துச் சாவேன். புழுவாய் வாழ்வேன். ஆனால் பெரிய புழுவாய். எங்கும் ஊர்ந்தே செல்வேன் நெளிந்தே கிடப்பேன்.

என்னைச் சுற்றிலும் பார்த்தேன். நூறுஆயிரம் புழுக்கள். ஆனால் ஒரு பட்டாம்பூச்சி கூட இல்லை. நூறுஆயிரம் வாய்ப்புகள்; நூறுஆயிரம் சாத்தியங்கள். ஆனால் ஒரு பட்டாம்பூச்சி கூட இல்லை. ஆனால் அத்தனையும் சாத்தியங்கள். புழுக்கள் மண்ணில் உழல்பவை. பட்டான் வானிற்க்கு செல்பவை. அப்பாவைப் போல.

அத்தனையும் வாய்ப்புகள் அத்தனையும் வாய்ப்புகள். பட்டான் வாய்ப்புகள்.

அட சொல்லுங்க மாப்பிள்ள! கம்முனு இருக்கீங்க!”

எனக்கு உரக்க கத்த தோன்றியது. “நான் வானத்தின் பிரஜைஎன்று.