Author: பதாகை

‘மோகனசாமி’ சிறுகதை தொகுப்பு குறித்து கண்மணி கட்டுரை

தொகுப்பிலிருக்கும் 10 சிறுகதைகளுமே ஒருபாலினச் சேர்க்கையைப் பற்றி அந்தரங்கமாகப் பேசுகின்றன. ‘ இது என் சுயசரிதை’, என்று அறிவித்த எழுத்தாளர் வசுதேந்த்ராவின் தைரியம், அவரை அண்ணாந்து பார்க்க வைக்கிறது. பல இடங்களில் வாசகரைக் கசியவைக்கும், தொந்திரவு செய்யும் இந்த நூல் இதுவரை ஆங்கிலம், ஸ்வெடிஷ் உள்ளிட்ட 10 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டத்தில் வியப்பேதுமில்லை. வாசுதேந்த்ரா சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.’மோகனசாமி’, பெங்களூரு சென்ட்ரல் யூனிவர்சிட்டியின் ப்ளஸ் ஒன்றுக்குத் துணைப் பாடமாக அரசாங்கத்தால் அறிவிக்கப் பட்டிருக்கிறது!

நமது மதிப்பீடுகளைப் புரட்டிப் போடும் இந்த அரிய நூலை மொழிபெயர்ப்பு என உணராதவண்ணம் சிறப்புற மொழிபெயர்த்திருக்கிறார் நல்லதம்பி. ஏற்கெனவே விவேக் ஷான்பக்கின் ‘காச்சர் கோச்சரி’ல் நாம் உணர்ந்ததுதான். காமம் சார்ந்த விவரணைகளை விரசமில்லாத மொழி வழுக்கலாக உறுத்தலின்றி சொல்கிறது. அதேநேரம், தேவையான இடங்களில் தகுந்த சொற்களைப் பயன்படுத்தத் தவறவில்லை. ‘கம்ஸூ’, ‘கண்டுஸூளே’ போன்ற சொற்களைப் புழங்கி விளக்குவதன் மூலம் கன்னட மணத்தையும் ஆங்காங்கு சாமர்த்தியமாக தக்கவைத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்.

மோகனசாமி-மயக்கந்தரும் இந்தப் பெயரைத் தவிர வேறெந்த பெயரும் கதைக் களத்தோடு இவ்வளவு இயைந்திருக்காது. நண்பர்களால் அன்போடு ‘மோகனா’ என்றழைக்கப்படும் மோகனசாமி என்னும் கதாபாத்திரத்தின் வழியே சமபாலின சேர்க்கையில் ஈடுபாடுள்ளவர்களின் மனக்கொதிப்பு, அவர்களுக்கு எதிர்கொள்ள நேரும் அவமானங்கள், புறக்கணிப்புகள், தனிமை…..யாவற்றையும் மனதைத் தொடும் விதத்தில், மிகையில்லாது எளிய சொற்களில் விரித்து வைக்கின்றன கதைகள். நேர்மையும் பண்பும் உடைய மோகனசாமி, வாழ்க்கையில் போராடி கௌரவ நிலையை அடைகிறான். அவன், தான் விரும்பும் ஆண்களோடு ரகசியமான காதல், காம வாழ்க்கையைத் துய்ப்பதிலும் வெற்றியடைவது ஆறுதளிக்கிறது. இதிலுள்ள நோய்த்தொற்று குறித்த அபாயங்களையும் பொறுப்பாகக் கோடிட்டுக் காண்பித்திருக்கிறார் ஆசிரியர். தத்ரூபமான பாத்திரங்கள் உயிரோடு நடமாடுகின்றன.

ஏறக்குறைய 15 வருடங்களில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு என்பதால் சில கதைகள் தேவையற்று நீளமாக இருக்கின்றன. முதல் கதையான ‘சிக்கலான முடிச்சி’ல், அலுவலகப் பயணம் நிமித்தமாக விமான நிலையம் செல்லுமுன் காதலன் கார்த்திக் இரவு சாப்பிடுவதற்காக சாம்பார் சமைத்து ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டுச் செல்பவன் மோகனா எனும் மோகனசாமி. அந்த நண்பன் கார்த்திக்கிற்கு பெண்ணோடு திருமணம் நிச்சயமானதும் அதிர்ச்சியடைகிறான் மோகனசாமி. பின்னர் நடைமுறையை உணர்ந்து கூடவே தங்கி உறவாடி வாழ்ந்த கார்த்திக்கை, அவனது உதாசீனத்தைக் கண்ணீரோடு பிரிகிறான்.

‘சைக்கிள் சவாரி’யில் தன் உடல்மொழியைக் கேலி செய்யும் பள்ளித் தோழர்கள் மற்றும் சகோதரியிடமிருந்து தப்புவதற்காக தன்னை, தன் பேச்சை, விளையாட்டை-எல்லாம் சுருக்கிக் கொள்கிறான் மோகனசாமி. எந்நேரமும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியதால் முதல் மதிப்பெண் பெறுகிறான். சைக்கிள் கற்றுக்கொண்டால் தன் உடலின் நளினம் விலகக் கூடும் என்றெண்ணி ஹம்பியில் சைக்கிள் கற்றுக் கொள்கிறான் மோகனசாமி. இருள் கவியும் நேரம் கோயில் பிரகாரத்தில் 2 வெள்ளைக் காரன்கள் புணர்ந்து கிடந்ததைக் கண்டதும், தனக்கு மனப் பிறழ்வல்ல என அமைதியடைகிறான்- புகைகூடப் பிடிக்காத மோகனசாமி. மோகனா சுத்தமானவன்; நாசூக்கானவன்.

‘பேசக்கூடாத பேச்சுகள் வதைக்கும்போது ‘ கதையில், மோகனசாமியைப் புரிந்துகொண்ட அவனது பிராமண அப்பா, உள்ளுக்குள் உடைந்து போனாலும் அவன் மனதை நோகடிக்கவில்லை. ஆனால் மோகனசாமியைத் தன் ஆண்மையின் தோல்வியாக அவர் கருதுகிறார். அதிக மதிப்பெண் வாங்கிய அவனுக்கு அரசாங்கப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தபோதும், வரதட்சிணை வாங்கமுடியாத, வம்சத்தை வளர்க்கமுடியாத மோகனசாமிக்கு எதற்கு சக்தியைமீறி செலவழிக்க வேண்டுமென்று கை கழுகிறார். அதனால் பெங்களூரில் சிறு வேலைகள் செய்தும் வங்கிக் கடனிலும் படித்து முடித்த மோகனசாமி கொடுக்கும் பணத்தைக் கைநீட்டி வாங்கக் கூசுகிறார்.

‘நான்முகன்’ கதையில் 40 வயதான மோகனசாமிக்குப் பணப் பஞ்சமில்லை. ‘முதல் வணக்கம் மற்றும் கடைசி வணக்கத்திற்கு நடுவில் வாழ்க்கையைப் பசுமையாக்கிக் கொள்வதே நம் புத்திசாலித்தனம்’ என்ற கொள்கையுடைய அவன், உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளால் 30 வயதுபோலத் தன்னுடலை வைத்திருக்கிறான். பெருத்துப்போன தன் பழைய கார்த்திக்கை இப்போது அவன் மனம் நாடுவதில்லை. இந்தக் கதையானது ‘கேய்’ வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றம். மோகனசாமி துய்த்துக் கடந்துபோகும் பல்வேறு ஆண்களையும் அவர்களோடான உறவுகளையும் ரசனை கலந்த நகைச்சுவையோடு படம் பிடிக்கிறது கதை.

அவனோடு தங்கியிருக்கும் யோகாசன குருவான ராம்தர் திரிவேதி, ‘’யோகாவைப் போலவே இணைவதும் ஒரு சாதனை. நிம்மதியாக இணைய வேண்டும். சூரியன் மேற்கில் இறங்கும் மாலை வேளையில் கங்கையில் ஓசையில்லாமல் மீனுடன் நீந்தும் சுகம் இந்த சேர்க்கையில் நமக்குக் கிடைக்கவேண்டும். சுகம் என்பது ஒரு தியான நிலை.’’ ஆனால் பிறிதொருவனைத் தேடக் கூடாதென்ற ராம்தரின் நிபந்தனையால் ‘கட்டாயத்திற்காக பத்திய உணவைச் சாப்பிடும் நோயாளியைப் போல அவன் தவித்தான்’.

கோயில் வரிசையில் சட்டையைக் கழற்றிவிட்டு நிற்கும் இளம் தந்தையான சாந்தனுவால் கவரப்பட்ட மோகனசாமியின் எண்ணங்கள் : ‘பொதுவாக திருமணம் நடந்து, ஒரு குழந்தையைப் பெற்ற அப்பாக்களின் தேகம் சிறப்பான கவர்ச்சி கூடியிருக்கும். இன்னும் விரியாத அனுபவமற்ற மொக்கு போலவும் இல்லாமல், மாலைவேலையில் வாடிய பூப்போலவும் அல்லாமல்-விடியற்காலையில் இளம் சூரிய ஒளிக்கீற்றுக்கு முழுமையாக மலர்ந்த பூவைப்போல அவர்கள் பக்குவமாக இருப்பார்கள். துணிவுடன் புதியத்தைத் தேடும் உற்சாகம் அவர்களுக்கு இருக்கும். முகத்தில் சிறப்பான நிறைவு தெரியும். சருமத்தில் அழகாகப் பிரகாசம் கூடியிருக்கும்.’ ஓர் ஆணை இவ்வளவு நுட்பமாக வருணித்து நாம் படித்ததில்லை. சாந்தனுவின் ஒரு வயது குழந்தையோடு அவன் வீட்டில் மோகனசாமியும் சாந்தனுவும் கூடும் காட்சிகள், அவற்றிடையே வரும் தொல்லைகள்…..எல்லாம் வாய்விட்டு சிரிக்கவைப்பவை.

மோகனசாமியின் வீட்டிற்கு உறவுக்காக வரும் பரிச்சயமில்லாத இளைஞன், கணிணி உட்பட்ட பொருட்களைத் திருடிக்கொண்டு ஓடுகிறான். ‘அவயங்களுக்குப் புதிய வடிவம் கொடுக்கக்கூடிய மிகப்பெரும் கலைஞன்’, என்று கருத்த தர்ஷன் சிலாகிக்கப் படுகிறான்.

கிளிமஞ்சாரோ: அற்புதமான கதை; தொகுப்பின் கடைசிக் கதை. ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறுவதற்காகத் தனியே கிளம்பிவந்த மோகனசாமியின் மன அவசங்கள்,இயற்கையின் ஆகிருதி….எல்லாம் மிக அழகாக சொல்லப் பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு:

வயிற்றில் அனலின் சுவடுகூட தெரியாததுபோல தன் உடம்பின் மீது பனிப்போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கிறது!

புரியாத என் மனது வேறு ஏதாவது இரகசியத் திட்டத்தைத் தீட்டுகிறதோ?

மெல்ல விடியத் தொடங்கியது. வெளிச்சம் அவனை உலகுக்குக் காட்டிவிடும். இருட்டின் இரகசியத்தைக் காக்கும் நல்ல குணம் அதற்குக் கிடையாது.

இப்படிப்பட்டவர்கள் தான் எனக்கானவர்களாக வரமுடியும் என்ற கடினமான கட்டுப்பாடுகளைப் போட்டுக் கொண்டால் மட்டுமே நாம் தனிமைப் படுத்தப் படுவோம்.

வாசிப்பின் முடிவில் அலைக்கழிப்பைத் தாண்டி, ஓரினச் சேர்க்கை என்பது வாழ்க்கை முறையின் ஓர் வகைமையே என்கிற எண்ணம் வருகிறது. இதுவே வாசுதேந்த்ராவின் நோக்கம். அதில் அவர் வெற்றியடைந்துவிட்டார். போலியற்ற தன்மை வாசுதேந்த்ரா எழுத்தின் பலம். ஒரு கதையைத் தவிர எல்லா கதைகளிலும் மோகனசாமி இருக்கிறான். கதைகளை அதே வரிசையில் படிக்க, வித்தியாசமான அந்த மனிதனின் பரிணாம வளர்ச்சி படிப்படியாகத் தெரிகிறது. ஒரு நாவலைப் படித்த முழுமையான உணர்வு கிடைக்கிறது. சிக்கலில்லாத மொழியின் வழியாக தமிழ் வாசகர்களைப் புதிய தளத்திற்கு அழைத்துப் போகும் நல்லதம்பி அவர்களுக்கு நன்றி. படிக்கவேண்டிய புத்தகம்.

 

கன்னடத்தில்: வசுதேந்த்ரா தமிழில்: கே.நல்லதம்பி
பதிப்பகம்: ஏகா விலை: 299

சாட்சி சொல்ல வந்தவன் – இரா.கவியரசு கவிதை

சாட்சிக் கூண்டில் ஏறிய போது
தூரத்திலிருந்து முறைத்த குற்றவாளி
முட்டையொன்றை மந்திரித்து  வீசினார்.
அவசரத்தில்
உடைத்துக் குடித்து விட்டேன்.
கோபமுற்றவர்
நாக்கை முழுவதுமாக இழுத்து வைத்து
நான் சொல்லவிருந்த சம்பவத்தை
தடயமில்லாதபடி அழித்துக் கொண்டிருந்தார்.
வயிற்றில் குஞ்சு பொரித்த
சத்தியத் தவளைகள்
சம்பவத்தைத்
தொண்டைக்குள் இழுத்துக் கொண்டன.
தண்டனைப் புத்தகத்தை விரித்தபடி
நான் தவளை போலக் கத்துவதாக
எச்சரிக்கை மணி அடித்தார்
குற்றவாளிக்காக வாதாடியவர்.
சம்பவம் எச்சிலில் கரைந்து கொண்டிருக்க
வளாகத்தில் ஒரு பெரிய குதிரை
கால்களை உயர்த்தியபடி
துள்ளிக் கொண்டிருந்தது.
பிடரியை இழுத்துப் பார்த்த காவலர்
கழுத்தைத் தடவிய போது
“சத்தியம் சாகாது
சத்தியம் பலமாக உதைக்கும்”
என்று பாட ஆரம்பித்தது.
என் பக்கத்தில் நின்ற வழக்கறிஞர்
” இவர் கைரேகையைப் பாருங்கள்
யுவர் ஆனர் ! “
சம்பவத்தின் போது
குற்றவாளியின் சட்டையைக் கிழித்திருக்கிறார்
என்று என் கைவிரல்களை
உயர்த்திக் காண்பித்தார்.
கண்கள் பொய் பேசுவதில்லை என
நீதிபதியை உற்றுப் பார்த்தபடி
சம்பவத்தைச்  சொல்ல ஆரம்பித்தேன்.
வாக்குமூலத்தின்
ஒவ்வொரு சொல்லும்
நான்காகப் பிரிந்து  ஓட
தட்டச்சு செய்தவர் கதற ஆரம்பித்தார்.
அடித்துப் பிடித்து
ஒரே வரிசையில் அடுக்கியபோதும்
சம்பவம்
சேராமல் பிரிந்து கொண்டே இருந்தது.
குற்றவாளி
அடுத்த முட்டையை எடுத்த போது
குதிரை வேகமாகப் பாய்ந்தது
தண்டனைப் புத்தகம்
பறந்து வந்து தாக்கவே
சத்தியம் !சத்தியம் !சத்தியம் !
என்ற பெருமுழக்கத்தோடு
குதிக்க ஆரம்பித்தன
தவளைக் குஞ்சுகள்.
கட்டிடம் அதிர ஆரம்பித்தது
தலைவலி தாங்கமுடியாமல்
சம்பவம் நடந்த இடத்திற்கு
என்னை அழைத்துச் சென்றார்கள்.
உள்ளதை
உள்ளபடியே சொல்வதற்காக
ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய இரவை
இழுத்துக் கொண்டிருந்தேன்
சம்பவம்
அசைந்து அசைந்து
வந்து கொண்டே இருந்தது.

குளிர் உறையும் கனல் – தன்ராஜ் மணி சிறுகதை

அந்த நள்ளிரவில் “தப் தப் தப்” என்று செருப்பு முகத்தில் அறையும் ஓசை தெரு முக்கு திரும்பும் போதே என் வண்டி சத்தத்தை தாண்டி கேட்டது.

செல்வத்தை அவன் மச்சான் நடு ரோட்டில் நிற்க வைத்து செருப்பால் அடித்துக் கொண்டிருந்தான். அவன் மச்சானை விலக்கி வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ரத்தம் வழிந்து கொண்டிருந்த உதட்டில் தண்ணீர் அடித்து துடைத்துவிட்டு செல்வத்தை அவன் வீட்டு முன் படிக்கட்டில் உட்கார வைத்தேன்.

எப்படி இருந்த பையனிவன்

முதலில் இவனை என் வீடியோ கடையில் வைத்துதான் பார்த்தேன், இருந்தால் பத்து, பன்னிரெண்டு வயதிருந்திருக்கும். அப்பொழுது நான் சிவில் எஞ்சினியரிங் டிப்ளமா முடித்துவிட்டு வேலை எதுவும் கிடைக்காததால் அரிசிபாளையம் மெயின் ரோட்டில் சின்னதாக ஒரு கடை பிடித்து வீடியோ காசேட் லைப்ரரி நடத்திக் கொண்டிருந்தேன்

இவனும் குருவியும் ஒரே போன்றிருந்த  ஹீரோ புக் சைக்கிளில் வந்து கடை முன்னால் இறங்கினார்கள். இன்னும் நினைவிருக்கிறது இரண்டும் சிகப்பு கலர்

குருவிதான் உள்ளே நுழையும்போதே கேட்டான், “அண்ணா, ஈ டி எக்ஸ்ட்ரா  டெரஸ்ரியல் இருக்கானா,” என்றான்.

இருக்கு,” என்றேன்

இருவரும் சந்தோஷமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அண்ணா குடுங்கன்னா”

எங்க குடியிருக்கிங்க,” என்றேன்

இங்கதானா, அவ்வை மார்க்கெட் முன்னாடி செய்யட் காதர் ஸ்டீரிட்”

அங்க எந்த வீடு” என்றேன்

எட்டாம் நெம்பர், சுந்தரம் மில்ஸ் வீடு, இவன் பத்தாம் நெம்பர் பருப்பு மண்டி வெச்சிருக்காங்களே வரதராஜன்” 

ராகவன் தம்பியா நீ?”

ஆமாண்ணா,” என்றான் குருவி

சரி, அவன் பேர்லயே எழுதிக்கிறேன். டென் ரூபீஸ், ரெண்டு நாள்ல திருப்பி கொண்டு வந்திரணும் இல்லாட்டி எக்ஸ்ட்ரா கொடுக்கணும்” என்றேன்

சரிணா , நீங்க எனக்கும் , செல்லுக்கும் தனியாவே அக்கவுண்ட் போடுங்க” என்றான் குருவி.

ஏண்டா” என்றேன்.

சாமுண்டி கடைல எங்கண்ணனுக்கும் சேத்து நாங்க காசு கொடுத்தோம். வேணும்னே காசு குடுக்க மாட்டான். அபுறம் என் பாக்கெட் மணி போவும், நீங்க என் பேர்லயும் செல்லு பேர்லயும் ஒரு அக்கவுண்ட் போடுங்க,” என்றான்.

நான் சிரித்துக்கொண்டே, “சரி பேரச் சொல்லு,” என சிட்டையில் பேரும், அட்ரசும் எழுதிக் கொண்டேன்.

இவ்வளவு பேச்சும் நடந்து கொண்டிருக்கையில் செல்லுகடையில் உள்ள காஸெட்டுகளை ஒவ்வொன்றாய் நின்று பார்த்து கொண்டிருந்தான்ஒரு வார்த்தையும் பேசவில்லை

காஸெட்டை கொடுத்தேன்

குருவி “டேய்,” என்றான்.

செல்லு திரும்பி பார்த்துவிட்டு, பாக்கெட்டில் கைவிட்டு ஐந்து ரூபாய் எடுத்து கொடுத்தான்.

குருவி தன் பாக்கெட்டில் இருந்து ஐந்து ரூபாய் எடுத்து இரண்டையும் என்னிடம் கொடுத்தான்.

இது நல்ல டிமாண்ட்ல இருக்க படம், பாத்துட்டு உடனே குடுத்துறனும்,” என்றேன்

சர்ணா, தாங்ஸ்ணா, வாடா” என்றுவிட்டு வெளியேறினான்.

நின்ற இடத்தை விட்டு நகராமல், “குருவி இங்க வா,” என்றான் செல்லு.

குருவி மீண்டும் கடைக்குள் வந்து செல்லின் அருகில் நின்றான். சிட்டையை உற்றுப் பார்த்தேன். சிட்டையில் இருக்கும் பேருக்கும் குருவிக்கும் ஒரு அட்சரம் கூட சம்மந்தமில்லை

டிஸ்ப்ளேவில் இருந்த க்ரேஸி பாய்ஸ் ஆப் த கேம்ஸ் விடியோ காஸெட் அட்டையை சுட்டினான், “இதுவும் எடுக்கலாமா?”  என்றான்

டேய், மொதல்ல இதப் பாப்பம் வாடா,” என்று இழுத்துக் கொண்டு போனான் குருவி.

அதன் பிறகு வாரத்திற்கு இரண்டு முறையாவது இருவரும் கடைக்கு வந்து விடுவார்கள்

ஆங்கில காமெடி மற்றும் சிறுவர் படங்கள் மேல் இருவருக்கும் பெரும் ஆர்வம். அவர்களுக்காகவே நான் பிரிண்ட்களை வரவழைக்கும் அளவுக்கு ரெகுலர் கஸ்டமர்கள் ஆனார்கள். குருவி விடாமல் பேசிக் கொண்டே இருப்பான், செல்லு பேசாமல் புன்னகையுடன் உடன் நிற்பான்ஆனால் சில வாரங்களிலேயே எனக்கு தெரிந்தது செல்லுதான் படங்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கிறான் என, அதில் ஒரு தொடர்ச்சியும் நேர்த்தியும் இருக்கும். ஒருவன் இருவருக்கும் சேர்த்து பேசுகிறான் இன்னொருவன் இருவருக்கும் சேர்த்து யோசிக்கிறான் என நினைத்து கொண்டேன்.

செல்லு மட்டுமல்ல அவன் பிற நண்பர்கள், அவன் வீடு, வீதியாட்கள் என எல்லோருமே குருவியை குருவி என்றுதான் அழைத்தார்கள் என்பது தெரிய எனக்கு சில மாதங்கள் ஆனது. யாருக்கும் பெயர்க் காரணம் தெரியாது , அவன் பெயரில் அவனை அழைத்து நான் யாரையும் பார்த்ததில்லை.

பள்ளிக்கூடம் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் என் கடையில் எப்பொழுதும் இருவரும் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் படம் எடுத்தால் சிட்டையில் எழுதுவதெல்லாம் முதல் வருடத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அவர்களுக்கு வேண்டிய படங்கள் கடையில் இல்லை என்றால் அவர்களே கடை போனில் என் சப்ளையர்களை அழைத்து  ஆர்டர் போட்டு வாங்கி விடுவார்கள். அவர்களுடைய பள்ளி நண்பர்கள் அத்தனை பேரும் வாடிக்கையாக வாங்கும் கடையானது என் கடை. மற்ற பெரிய கடைகள் எல்லாம் பெரியவர்களுக்காக படங்கள் எடுத்து வைக்க இவர்கள் இருவரால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காஸெட் எடுக்கும் கடையாக என் கடை மாறிப்போனது.  

வேறு ஏரியாக்களில் இருந்தெல்லாம் தேடி வந்து வாங்க ஆரம்பித்தனர். சேலத்தில் பேர் சொன்னாலே தெரியும் வீடியோ கடைகளில் என்னுடையதும் ஒன்றானதுகடைக்குள் கிரிக்கெட் உபகரணங்கள் வைப்பது, நண்பர்களோடு உட்கார்ந்து அரட்டை அடிப்பது என இருந்து அவர்கள் பனிரெண்டாவது வகுப்பு போகும் போது ரோட்டில் போகும் பெண்களை கடைக்கு வெளியில் நின்று கொண்டு ரூட் விடுவது என  பள்ளிக் கூடம் போகாத பிற நேரம் முழுதும் என் கடையே கதி என கிடந்தனர் இருவரும்

அவர்கள் பார்க்கும் படங்களும் சிறுவர் படங்களில் இருந்து லாரன்ஸ் ஆப் அரேபியா, ப்ரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் என போய், பேஸிக் இன்ஸ்டின்க்ட் வழியாக இரண்டு மணி நேர முழு நீள நீலப்படம் பார்ப்பது வரை முன்னேறியிருந்தது

என் சப்ளையர் ஒருவன் கேபிள் டி.வி என ஒன்று மெட்ராஸில் புதிதாக வந்திருப்பதாகவும், இனி படமெல்லாம் அதில்தான் ஓடும், வீடியோவெல்லாம் போய்விடும் என்றான். அவன் விபரம் தெரிந்தவன் என்பதால் அவனை முழுமையாக நம்புவது என முடிவெடுத்தேன். அவனிடமே அதற்கான மெட்டீரியலை வாங்கி, கடையை கார்ட்போர்ட் சுவர் வைத்து இரண்டாய் தடுத்து பின் பக்கம் கேபிள் டி.வி சாதனங்களை வைத்துவிட்டு, முன் பக்கம் வீடியா லைப்ரரியாக மாற்றினேன். வீடு வீடாக நடையாய் நடந்து, “தினம் ஒரு படம் போடுவோம்கா, இருவத்தஞ்சு ரூபாதான் மாசத்துக்கு, ரெண்டு மாசம் பாத்துட்டு காசு குடுங்கக்கா,” என கொஞ்சி கூத்தாடி கேபிள் வயர் இழுத்துக் கொண்டிருந்த நேரம். இவர்கள் கடையில் இருந்தால் கல்லாவை பூட்டாமல்தான் வெளியே போவேன்

கஸ்டமர் கொடுக்கும் காசை வாங்கி செல்லும், குருவியும்தான் கல்லாவில் போடுவார்கள். தெரியாமல் அவர்கள் கைக் காசை  போட்டிருப்பார்களே ஒழிய ஒரு நாளும் கல்லாவில் காசு குறைந்ததில்லைபல பேர் அவர்கள் இருவரும் நடத்தும் கடை அது என என்னிடமே சொல்லும் அளவுக்கு கடையையும் அவர்களையும் பிரிக்க முடியாதிருந்தது.

ஒரு நாள் கேபிள் கான்வாஸிங் போய் விட்டு கடைக்கு வர மிக தாமதமாகிவிட்டதுவெளியில் யரும் இல்லை, கேபிள் தடுப்புக்குள் இருவரின் பேச்சு குரல் மட்டும் கேட்டது

நீலப்படம் ஏதாவது பார்க்கிறார்கள் போலவென நினைத்து கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றேன். குருவி கையில் ஒரு புல்லட் பியர் பாட்டிலை வைத்துக் கொண்டிருந்தான். செல்லு நான் உள்ளே வருவது கூட தெரியாமல் பாட்டிலையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கோபத்தில் பாய்ந்து பாட்டிலை பிடிங்கினேன்.

ஏற்கனவே பாதி குடித்துவிட்டிருந்தனர்.

பாபுனா,” என்றான் செல்லு, பாட்டிலுக்கு கையை நீட்டியபடி.

ஏற்கனவே உங்க ரெண்டு பேர் வீட்லயும் நீங்க படிக்காம இங்கயே உக்காந்திட்டு இருக்கிங்கன்னு என்ன திட்றாங்க. இன்னும் இதயெல்லாம் வேற பண்ணிங்கன்னா நாந்தான் உங்களுக்கு ஊத்தி உட்றேனு சொல்லுவாங்க. இன்னையோட சரிடா, இனிமேலு கடப்பக்கமே வராதிங்க. தயவு செஞ்சு கெளம்புங்க மொதல்ல,” என்றேன்

ண்னா இன்னிக்கிதான் ட் ரை பண்லாம்னு வாங்னோம்,” என்றான் குருவி

டேய், போதும், கெளம்புங்க மொதல்ல” 

போறணா, குடிக்காதிங்கன்னு சொல்ணா, கடைக்கு வராதிங்கன்னெல்லாம் சொல்லாத,” என்றான் செல்லு.

பெரிய மனுசா, பன்னண்டாவது படிச்சு மொதல்ல பாஸ் பண்றா. கட இங்கயேதான் இருக்கும், போ,” என்றேன்.

ணா, பாதி பாட்டிலு அப்படியே இருக்கு,” என்றான் குருவி தன் வழக்கமான சிரிப்போடு.

டேய் அடிச்சே புடுவேன், போயிரு பேசாம,” என்றுவிட்டு விடு விடுவென கடைக்கு முன் வந்து சாக்கடையில் மீதி பாட்டிலை கொட்டினேன்.

உண்மையிலேயே கோபமாக இருக்கிறேன் என்பது புரிந்து பேசாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

அடுத்த நாளே வழக்கம் போல் வந்து நின்றனர்.

நான் பேச வாயெடுப்பதற்குள், “உனக்கு நாங்க இங்க குடிக்க கூடாது அவ்ளோதான, குடிக்க மாட்டோம். நீயும் அட்வைஸ் மழைல எங்கள முக்கி எடுக்காத,” என்றான் குருவி.

அதற்குள் ஒரு சிறுவன் வந்து “செல்லுணாஹனி ஐ ஷ்ரங்க் த கிட்ஸ் இருக்கானா” என்றான்.

செல்லு தலையை ஆட்டிவிட்டு கவுண்டர் தட்டியை தூக்கிவிட்டு உள்ளே வந்து கீழிருந்த காஸட்டை எடுத்து சிறுவனிடம் கொடுத்தான்.

காப்பி கம்மியாதான் இருக்கு, போன தடவ மாதிரி லேட் பண்ண, பைன் போடுவேன்,” என்றான் செல்லு.

சர்ணா, உடனே குடுத்துர்ரன்னா. உன் கடைல இல்லாத படமே இல்லனா,” என்றான் சிறுவன் உற்சாகமாக

அவன் கொடுத்த பணத்தை வாங்கினான். கல்லா முன்னால் நின்று கொண்டிருந்த என்னை பார்த்து விலகச் சொல்லி தலையை காண்பித்தான். விலகினேன். கல்லாவை திறந்து காசை போட்டுவிட்டு அருகில் இருந்த சேரில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டான்.

நான் ஒன்றும் பேசாமல் கேபிள் இழுக்கும் பையனை கூட்டிக் கொண்டு தெருவில் இறங்கினேன். அதன் பிறகு ஒரு நாள் கூட அவர்களிருவரும் என் கடையில் வைத்து குடித்ததில்லைப்ளஸ் டூ தேர்வு, நுழைவு தேர்வுக்கு ராசிபுரம் கோச்சிங் என போகும் வரை கடைக்கு வருவதை குறைக்கவும் இல்லை.

இருவருக்கும் ரிசல்ட் வந்தது. என்ஜினியரிங் கட் ஆப் மார்க் இருவருக்கும் நூற்றி இருபதுக்கும் கம்மி. ஒரு வாரம் கடை பக்கமே வரவில்லை. ராகவன் தான் படம் எடுத்து போகும் போது இருவரும் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாகவும் அதுவும் ஒரே காலேஜில் சேர வேண்டும் என அடம் பிடிப்பதாகவும் சொன்னான். தமிழ் நாட்டில் சேர முடியாது, பெங்களூரில் பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லிவிட்டு போனான்

இங்கயே இருந்தா உன் கடைல உக்காந்து பெஞ்ச தேச்சுகிட்டு உருப்படாமதான் போவானுங்க, அங்கயாவது போயி படிக்கறானுங்களானு பாக்கலாம்,” என்றான்.

எனக்கு சங்கடமாக இருந்தது.

ஒரு வாரத்தில் முகமெல்லாம் சிரிப்பாக இருவரும் கையில் ஒரு டெய்ரி மில்க் சாக்லேட் பாருடன் கடைக்குள் நுழைந்தனர். ஒருவன் கையை பிடித்து கொள்ள இன்னொருவன் ஒரு வில்லையை உடைத்து என் வாய்க்குள் திணித்தான்.

டும்கூர் சித்தகங்கால ரெண்டு பேருக்கும் சீட் போட்டாச்சு, அடுத்த வாரம் கெளம்பறோம்” என்றான் குருவி.

அப்படியென்னடா இன்ஜீனியரிங்கே வேணும்னு அடம் பிடிச்சிங்களாம்,” என்றேன்.

பி. டெக் முடிச்சிட்டு ஜி ஆர் ஈ எழுதி யூ எஸ் போயிருவோம் பாபுன்னா, அங்க போயி ஷாரன் ஸ்டோன் மாதிரி ஒரு பிகர கரெக்ட் பண்ணி செட்டில் ஆக வேண்டியதுதான். பக்கா ப்ளானிங்,” என்றான் குருவி வாயெல்லாம் பல்லாக, செல்லு என்னை பார்த்து கண்ணடித்தான்.

அதானே பாத்தேன். என்னடா உருப்பட்டுடிங்களோனு நெனச்சேன்,” என்றேன்.

போறதுக்குள்ள உன் கடைல என்னென்ன படம் இருக்குனு சொல்லிட்டு போறோணா இல்லாட்டி அல்லாடி போயிருவ,” என்றான் செல்லு பெரிதாக சிரித்தபடி.

நேரம் டா. வாங்க இன்னிக்கி என்னோட ட்ரீட் உங்களுக்கு”  

பாவா கடைக்கு கூட்டிச் சென்று அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தேன்

பிச்சு போட்ட கோழி, புறா ரோஸ்ட், கல்டா, முட்டை ரோஸ்ட் என ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.

எங்கோ எனக்குள் இருந்த குற்ற உணர்வு இவர்களுக்கு சீட் கிடைத்ததில் குறைந்து நிம்மதியாய் இருந்தது. அவர்கள் சாப்பிடுவதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதன் பிறகு அவர்களை அதிகம் நான் பார்க்கவில்லை. கேபிள் வேலைகளில் மூழ்கிவிட்டதால் கடையில் வேறு ஆள் போட்டு விட்டேன். கடையில் நான் இருப்பதில்லை என்பதால் ஊருக்கு வரும் போது அவர்கள் கடை பக்கம் வருவது குறைந்தது. ஊருக்கு வந்தால் சாமுண்டி செட்டியார் கடை வாசலில் நின்று நண்பர்களுடன் சிகரெட் குடிக்கிறார்கள் , கேப்டன் பங்க் பக்கத்தில் உள்ள பாரில் குடிக்கிறார்கள் என என் காதுக்கு செய்தி வந்து கொண்டிருந்தது. அவர்களை பார்ப்பதே எப்போதாவது என ஆகிவிட்டதால் பார்க்கும் போது அவர்களிடம் அதையெல்லாம் நான் கேட்பதில்லை.

ஓரு நாள் இருவரும் நான் கடை மூடும் நேரத்தில் இரண்டு சிகப்பு கலர் புத்தம் புது யமஹா பைக்கில் வந்திறங்கினர்.

எப்படா வந்திங்க, என்ன புது பைக்கா?” என்றேன்

பைக் எடுக்கறதுக்குனே வந்தோணா,” என்றான் குருவி.

ஊருக்கு எடுத்திட்டு போறிங்களா?” என்றேன்.

ஆமாண்ணா, முடியவே முடியாதுனாங்க அழுது அடம் பிடிச்சு வாங்கிட்டோம்ல,” என்றான் குருவி.

டேய் பாத்து ஓட்டுங்கடா,” என்றேன், வண்டியை சுற்றி வந்து பார்த்துக் கொண்டே.

ஓட்டி பாருணா,” வண்டியை விட்டு இறங்கி சாவியை கையில் கொடுத்தான் செல்லு.

ஒரு ரவுண்டு ஓட்டி விட்டு கொடுத்தேன்.

என்னுதையும் ஓட்டி பாரு,” என்று குருவி அவன் வண்டியை கொடுத்தான்.

அதையும் ஒரு ரவுண்டு ஓட்டி விட்டு கொடுத்தேன்.

நெம்பர் கூட ஒன்று போலவே இருந்தது இரு பைக்கிலும், ஒரே ஒரு எண் மட்டும் வித்தியாசம்.

லேட்டாச்சு. செந்திலுகிட்ட காட்டணும் இன்னும். கிளம்பறோம்னா, அடுத்த தடவ வரும் போது வரோம்,” என்றான் குருவி

இருவரும் ஒருவர் பின் ஒருவர் காற்றை கிழித்துக் கொண்டு வேகமாக போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்.

ஏதோ ஒரே நாளில் அரை டவுசரில் இருந்து பாண்ட்டுக்கு அவர்கள் மாறிவிட்டது போல இருந்தது எனக்கு

அதன் பிறகு குருவியை நான் மார்ச்சுவரியில் பிணமாகத்தான் பார்த்தேன் , மூன்று மாதம் கழித்து.

லீவுக்கு வந்தவர்கள் பாரில் சென்று குடித்துவிட்டு, நள்ளிரவு தாண்டி போதையில் அண்ணா பூங்கா பெரியார் மேம்பாலம் முதல் ஐந்து ரோடு வரை டூ வீலரில் ரேஸ் விட்டு விளையாடி இருக்கிறார்கள்அப்பொழுதெல்லாம் இரவு பதினோரு மணிக்கு மேல் அவ்வளவு பெரிய ரோடு வெறிச்சோடி போய் கிடக்கும்மூன்றாவது முறை ரேஸ் விடும்போது குருவி கட்டுப்பாடு இழந்து வண்டியை சாலைக்கு நடுவில் இருந்த டிவைடரில் ஏற்றிவிட்டான். வண்டியில் இருந்து தெறித்து, விளக்கு கம்பத்தின் மேல் தூக்கி எறியபட்டிருக்கிறான்.   தலை முதலில் கம்பத்தின் மேல் மோதி, பதினைந்தடி உயரத்தில் இருந்து தலைக் குப்புற ரோட்டில் விழுந்திருக்கிறான்

செல்லு உலுக்கி எழுப்பப் பார்த்திருக்கிறான். தலையில் இருந்து பெருகிய ரத்தத்தை பார்த்து பயந்து மேம்பால இறக்கத்தில் இறங்கி அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு ஓடி ஆட்களை கூட்டி வந்திருக்கிறான்.

குருவியின் உயிர் அவன் தரையை தொடும் முன்பே பிரிந்துவிட்டிருக்கிறது. நேராக மார்ச்சுவரிக்குதான் எடுத்து சென்றிருக்கிறார்கள்.

காலையில் தகவல் தெரிந்தவுடன் கடையை சாத்திவிட்டு சென்றேன். ராகவனுக்கு போலீஸ், ஆஸ்பிடல் சம்பிரதாயங்களுக்கெல்லாம் ஒத்தாசை செய்தேன். குருவியின் உடலை ஆஸ்பிடலில் இருந்தே காக்காயன் சுடுகாட்டுக்கு எடுத்து சென்று புதைத்தோம்

வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு உட்காரும் போதுதான் செல்லின் ஞாபகம் வந்தது

அவனை ஆஸ்பிடலில் பார்த்ததாகவே நினைவில்லை

வண்டியை எடுத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றேன், அவன் அங்கு இல்லை. சாமுண்டி செட்டியார் கடைக்கு சென்றேன். அவன் நண்பர்கள்தான் நின்று தம்மடித்து கொண்டிருந்தார்கள். என்னை பார்த்தவுடன் ஒருவன் என் அருகில் வந்தான்

செல்லு இங்க வர்லணா. கீதாலாயா தியேட்டர்கிட்ட பாத்ததா ராஜேஷ் சொன்னான்,” என்றான்.

குடிச்சிருந்தானா,” என்றேன்,

சற்று தயங்கி விட்டு, “காலைல இருந்தே நிறைய சிரப் அடிச்சிட்டு இருந்தாண்ணா,” என்றான்.

எனக்கு பகீரென்றது. போதைக்காக ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் இருமல் மருந்தை சில மாத்திரைகளோடு சேர்த்து குடிக்கும் பழக்கம் காலேஜ் மாணவர்களுக்கு அந்த சமயத்தில் இருந்தது. செல்லு அதைச் செய்வான் என நான் நினைக்கவே இல்லை.

கீதாலாயா தியேட்டர் போனேன், அவன் வண்டி டூ வீலர் ஸ்டாண்டில் இருந்தது. தளபதி படம் ஓடிக் கொண்டிருந்தது

படம் முடியும் வரை அவன் வண்டிக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன்.

வந்தவன் என்னை பார்த்து வழக்கம் போல் புன்னகைத்தான்.

ண்ணா , சூப்பர் படண்ணா, செக்க காமிரா வொர்க்,” என்றான்.

சாப்டியா?”

இல்லணா”.

வா போய் சாப்புடலாம்”.

ம்”.

நியூ ரெஸ்டாரென்ட் போலாம், நீ முன்னாடி போ”

அவன் தெளிவாகத்தான் ஓட்டிக் கொண்டு போனான், நான் எங்கே விழுந்து விடுவானோ என்ற பயத்தில் அவன் பின்னாலேயே இடை வெளி விடாமல் தொடர்ந்தேன்.

போஸ் மைதானம் பாலம் தாண்டி, ஹென்றி அன் ஊல்ஸி மணிக் கூண்டுக்கு முன் திரும்பி ஹோட்டல் வாசலில் வண்டியை நிறுத்தினான்

அவன் போதையில் இருப்பதற்கான ஒரு அறிகுறியும் இல்லை

நெய் புரோட்டா ஆர்டர் செய்தான். முகத்தில் கவலை ரேகையே இல்லை, அமைதியாக உட்கார்ந்திருந்தான். புரோட்டா வந்தது, இரண்டு வாய் சாப்பிட்டவுடன் ஒமட்டலுடன் வாஷ் பேசினுக்கு ஓடி வாந்தி எடுத்தான்

எடுத்து விட்டு வந்தவன், வேணாம் என்பது போல் தலையாட்டிவிட்டு வெளியே வண்டியில் போய் உட்கார்ந்து கொண்டான்.

நானும் பாதியிலேயே எழுந்து கொண்டு பில்லை கொடுத்து விட்டு அவனருகில் போய் நின்றேன்.

சற்று நேரம் கழித்து “ அழுதியாடா,”  என்றேன்

அவன் ஒன்றும் சொல்லவில்லை

நான் ஒரு கிங்ஸ் பற்ற வைத்துக் கொண்டு அவனுக்கொன்று கொடுத்தேன்.

அழுதுரு செல்லு,” என்றேன்.

அதற்கும் அவன் ஒன்றும் சொல்லவில்லை, புகையை ஆழ இழுத்து கொஞ்சமாக வெளியே விட்டு கொண்டிருந்தான்.

நான் புகையை நுரையீரலுக்குள் இழுத்து தேக்கி கண்ணை கிறங்கி  மூடினேன். குருவியின் முகம் கண்ணுள் வந்ததுஅவன் கோவில் மணி போல் கணீரென்ற சிரிப்பும், ஓலைப்பாயின் மேல் பெய்யும் மழை போல ஓயாத பேச்சும்.

பேசிகிட்டே இருப்பான் தாயோளிஇப்படி அல்பாயுசுல போய்டான்,” வாய்விட்டு சொல்லிவிட்டு என்னையறியாமல் தேம்பி அழ ஆரம்பித்தேன். ரோடு என்னும் பிரக்ஞை எதுவும் இல்லை. ஒன்பது வருடங்கள் என் கண் முன் வளர்ந்த பையன். காலையிலிருந்து அடக்கி வைத்திருந்த துக்கம் அழுகையாய் மடை திறந்து கொட்டி கொண்டிருந்தது.

ஹோட்டலில் இருந்து ஒருவர் வண்டி எடுக்க அருகில் கடந்து போனார். சட்டென்று என்னை திரட்டி கொண்டு, கர்ச்சீப்பால் முகத்தை துடைத்தேன்.

செல்லு ரோட்டை வெறித்து கொண்டு அமைதியாய் உட்கார்ந்திருந்தான்

அவனை தொட்டு திருப்பினேன்

பொறந்ததுல இருந்து கூட இருந்தவன் இப்படி போறதுஎனக்கே தாங்க முடியல உனக்கு எப்படி இருக்கும்னு எனக்கு புரியுது. அவங்கூட இருந்தத எல்லாம் நெனச்சுக்கோ அழுதுருவ,” என்றேன்.

என்னை பார்த்து சிரித்தான்

போலாம் பாபுனா,” என்று வண்டியில் சாவியை போட்டான்

ஏதோ சரியாக இல்லை என புரிந்தது. எதுவும் பேசாமல் அவன் பின்னால் அவன் வீடு வரை வந்தேன். வண்டியை நிறுத்தியவன் நேராக வீட்டிற்குள் போய் அவன் ரூமுக்குள் புகுந்து கொண்டான்

இரண்டு வீடு தள்ளியிருந்த குருவி வீட்டிற்கு நடந்தேன். செல்லின் அப்பா முன்னால் சேரில் உட்கார்ந்திருந்தார்

வீட்டிற்குள் இன்னும் அழுகை சத்தம் கேட்டு கொண்டிருந்தது.

செல்லின் அப்பாவை தோளை தொட்டு தனியாக கூட்டி சென்றேன்

அண்ணா, செல்ல டும்கூருக்கு உடனே அனுப்பி வைங்க. அவன் இங்க இருக்கறது சரியா படல எனக்கு,” என்றேன்.

அவன் சுடுகாட்டுக்கு வராதப்பவே எனக்கு கலுக்குனுதான் இருந்துச்சு. மொதல்ல இந்த பாழா போன பைக்க விக்கணும்,” என்றார்.

சற்று நேரம் கழித்து “தனியா இருந்தா எதாச்சும் பண்ணிக்குவானோனு பயமா இருக்கு பாபு,” என்றார்.

அதெல்லாம் ஒன்னும் பண்ணிக்க மாட்டாணா. அவன் இங்க இருந்தா இதே ஞாபகமா சுத்திட்டு இருப்பான். அனுப்பிடுங்க,” என்றேன்

சாவு வீட்டில் பெருத்த ஓலம் ஒன்று எழுந்தது. சொந்தக் காரர்கள் யாராவது ஊரில் இருந்து வந்திருக்க வேண்டும்.

வீட்டை திரும்பி பார்த்துவிட்டு, “நீ சொல்றதும் சரிதான், எம்பேச்ச எங்க கேப்பான் , அவனம்மாகிட்ட பேசறேன்,” என்றார்

அடுத்த நாளே செல்லு டும்கூர் கிளம்பிப் போனான்.

சென்றவன் ஆறேழு மாதங்கள் சேலம் பக்கமே வரவில்லை. அவன் மறக்கட்டும் என அவன் வீட்டிலும் அவனை வா வென்று சொல்லவில்லை

அதற்குள் எனக்கு கேபிள் டி.வி நன்றாக பிக் அப் ஆகிவிட்டது. லோக்கல் திருவிழா வீடியோ எடுத்து ஒளிபரப்புவது, கடை விளம்பரங்கள் பிடித்து அவற்றை வீடியோ எடுத்து கேபிள் சானலில் ஒளிபரப்புவது என ஆரம்பித்தேன். இடக்குறைவால் வீடியோ கடையை மூடிவிட்டு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அனைத்தையும் அங்கு மாற்றிக் கொண்டேன். இருந்த வேலையில் யாரையும் பார்ப்பதற்கு கூட எனக்கு நேரம் இல்லாமல் போனது.

கோட்டை பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்பை வீடியோ எடுக்க போகும் போது ராகவனை பார்த்தேன்.

அவனை பார்த்தவுடன் நான் கேட்ட முதல் கேள்வியே, “செல்லு எப்டி இருக்கான்? ஊரு பக்கம் வந்தானா?” என்பதுதான்.

ராகவன், “ இங்கதா இருக்கான் ரெண்டு மாசமா. காலேஜ் ஹாஸ்டல்ல டோப் அடிச்சிருக்கான். சீட்ட கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டானுங்க.,“  என்றான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சற்று தணிந்த குரலில், “பெங்களூர்லயே ரீ ஹாப்ல சேத்துவிட்டுருக்காரு வரதண்ணன், அங்க இருந்து செவுரேறி குதிச்சு எங்கயோ போயி மருந்தேத்திகிட்டு பஸ்ஸ புடிச்சு ஊருக்கு வண்டான். சும்மா வந்திருந்தாலும் பரவால்ல ஒரு நர்ஸோட மோதரத்த திருடிட்டு வந்திருக்கான். கர்நாடகா வேறயா வரதண்ணண் படாத பாடு பட்டு , தண்ணியா செலவு பண்ணி போலிஸ் கேஸ் இல்லாம பண்ணியிருக்காரு. மெண்டலாயிட்டான், பாபு,” என்றான்.

வீட்லயேதான் இருக்கானா?” என்றேன்.

கிட்டத்தட்ட பூட்டிதான் வெச்சிருக்காங்க. ஒரு நாளு சாமுண்டி வரைக்கும் நடந்தாவது போய்ட்டு வரேனு அவங்கம்மாகிட்ட ரொம்ப கெஞ்சியிருக்கான். கைல காசெல்லாம் எதுவும் குடுக்காம அனுப்பிவுட்ருக்காங்க. திரும்பி வந்தவன் புல் டைட்டு. காச கீச திருடிட்டானா பார்த்த அதுவும் இல்ல. ஆர்த்திதான் அவன் மைனர் செயின் சின்னதா இருக்க மாதிரி இருக்குனு சொல்லியிருக்கா. செயின்ல பாதிய நகை கடைல வெட்டி வித்திட்டு டோப்பு வாங்கியிருக்கான் பாபு. எனக்கெல்லாம் என்ன சொல்றதுனே தெரில,” என்றான்.

வீட்லயே வெச்சு ட்ரீட்மண்ட் பண்ண முடியாதா?” என்றேன்.

இந்த மாதிரி கேஸ் எல்லாம் ஜெயில் மாதிரி ஒரு ரீ ஹாப் செண்டர்லதான் வெச்சு ட்ரீட் பண்ணனுமாம். மெட்ராஸிக்கோ பெங்களூருக்கோதான் கூட்டிட்டு போவணும். வரதண்ணன் என்ன பண்ணப் போறாருனு தெரியல,” என்றான்

அன்றே சென்று பார்க்க வேண்டும் என நினைத்தேன் , சவுண்ட் மிக்ஸிங் வேலைகள், வேறொரு இடத்தில் மஞ்சு விரட்டு கவரேஜ் என்று பண்டிகையெல்லாம் முடிந்து ஒரு வாரம் கழித்துதான் அவன் வீட்டுக்கு போக முடிந்தது

அவன் வீட்டில் இல்லை. வரதண்ணன் அவனுக்கு மயக்க ஊசி போட்டு ஆம்புலன்ஸில் பெங்களுர் நிம்ஹான்ஸில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்

வீட்டில் யார் முகத்திலும் ஒளியில்லை, வீடே சாவு வீடு போல துக்கம் நிறைந்து கிடந்தது.

அங்கே இருக்க பிடிக்காமல் காபியை அவசரமாய் குடித்துவிட்டு கிளம்பிவிட்டேன்

அதன் பிறகு பல மாதங்கள் கழித்து ஒரு இண்ட் சுஸிகி வண்டியில் என் கேபிள் அலுவலகத்திற்கு வந்து இறங்கினான்

பாபுணா,” என்றான் அதே புன்னகையுடன்.

தோளோடு அனைத்து என்னுடைய ஆபிஸ் ரூமுக்குள் கூட்டி சென்றேன்

எப்டி இருக்கற, எப்படா வந்த பெங்களூர்ல இருந்து?” என்றேன் உற்சாகமாக

நல்லாருக்கனா, ரெண்டு வாரம் ஆச்சி வந்து”

முழுசா வெளிய வண்ட்டியா”

வித் ட்ராயல் எல்லாம் போச்சு, க்ரேவிங்கும் இல்ல. ரெண்டு மாத்தர மட்டும் குடுத்திருக்காங்க. நார்மலாதான் இருக்கேன்”

என்ன பண்ணப் போற, மண்டிக்கு போ போறியா”

இல்லனா, வைஸ்யால பி காம் சேந்துருக்கேன்”

சூப்பர்றா. அவன் சட்டுனு போய்ட்டான் நீ சின்னம்பட்டு போப் போறியோனு ரொம்ப பயந்தட்டண்டா,” இதைச் சொல்லும் போது  என் கண்கள் கலங்கிவிட்டன.

ம்.” சுற்றிலும் பார்த்துவிட்டு, “பிசினஸ் நல்லா பிக் அப் ஆயிருச்சு போலருக்குனா” என்றான்

மெட்ராஸ்காரன் அருணுக்குதான் தாங்க்ஸ் சொல்லணும். டி.வியெல்லாம் பாக்குறியா. சன் டிவி, எம் டிவி , வீ டி வினு நிறைய சானல் வந்துருச்சு,” என்றேன்.

போட்டியா உங்க சானலும் ஓடுதே. உங்க சானல பாத்துட்டுதான் வண்டியெடுத்துட்டு பாக்க வந்தேன்,” என்றான்.

பலமாக சிரித்துவிட்டு, “லொல்லு மட்டும் அப்படியே இருக்குடா உனக்கு,” என்றேன்

 நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பிச் சென்றான்

எனக்கு உண்மையாகவே குருவியும் அவனுடன் இருந்தது போலவே ஒரு உணர்விருந்தது அன்று.

அதன் பிறகு அவனை மீண்டும் அடிக்கடி பார்த்தது அவன் காலேஜ் மூன்றாம் ஆண்டு படிக்கும் போதுதான். அப்பொழுது நான் என் பழைய வீட்டை விற்றுவிட்டு அவன் தெருவிலேயே ஒரு பெரிய வீட்டை வாங்கி  குடி புகுந்திருந்தேன்

ரோட்டில் பார்த்தால் நின்று பேசாமல் போகமாட்டான். ஒரு நாள் பங்க் கடையில் நான் தம்மடித்து கொண்டிருக்கும் போது பார்த்தான், தம்மெல்லம் அடிப்பதில்லை என நான் கொடுத்தும் மறுத்துவிட்டான். மூன்றாம் வருட பரீட்சையெல்லாம் முடிந்துவிட்டது பி எஸ் ஜீ யில் எம் பி ஏ சேரலாம் என்றிருப்பதாக சொன்னான்உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தான், குருவியின் பேச்சு, குருவியின் சிரிப்பு, செல்லின் புன்னகை.

சொன்ன ஒன்றிரண்டு வாரங்களில் அவன் வீட்டைத் தாண்டும்போது ஒரே சத்தமாக இருந்ததுவண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன். வரதண்ணண் உள் கதவை வெளியே இருந்து சாத்தி விட்டு வீட்டு வராண்டாவில் செல்லை பெல்ட்டால் விளாசிக் கொண்டிருந்தார். செல்லின் அம்மா உள்கதவின் கம்பியை பிடித்துக் கொண்டு “ஐயோ அடிக்காதிங்க செத்துற போறான் விட்றுங்க அடிக்காதிங்க,”  என்று கதறிக் கொண்டிருந்தார்.

 நான் சென்று வரதண்ணனை பின்னால் இருந்து  இரண்டு கைகளையும் இறுகப் பிடித்து கொண்டேன். “அண்ணா, மேல கீழ ஏதாவது பட்ற போவுது, கொஞ்சம் பொறுமையா இருங்கண்ணா,” என்றேன்

படட்டும் பாபு பட்டு போய் தொலையட்டும் நாதேறி நாயி,” என்றார் மூச்சிறைக்க.

கொஞ்சம் அவரை அமைதிபடுத்தி , பெல்ட் டை கையில் இருந்து வாங்கிவிட்டு வராந்தா தின்னையில் அவரை உட்கார வைத்தேன்

செல்லு செருப்பு வைக்கும் ஸ்டேண்ட் அருகில் சுவற்றோடு ஒட்டி கால்கள் ரெண்டையும் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான்

உள் வாசல் கதவை நான் திறந்துவிட்டேன், செல்லின் அம்மா ஓடி வந்து செல்லை கையை பிடித்து தூக்கி உள்ளே அழைத்து சென்றார்

வரதண்ணன் சட்டென்று உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார். பஜாரில் எல்லோராலும் பெரும் மரியாதையுடன் பார்க்கப்படும் அவ்வளவு பெரிய மனிதர் குலுங்கி அழுவதை பார்க்க மிகுந்த சங்கடமாக இருந்தது

சற்று அழுகை அடங்கியவுடன், “என்னாச்சுண்ணா?” என்றேன்

திரும்பவும் ஆரம்பிச்சிட்டான் பாபு. சுஸிகி ஆர். ஸி புக்க வெச்சு ஆறு மாசத்துக்கு முன்னாடி மாணிக்கத்துகிட்ட வட்டிக்கு பணம் வாங்கியிருக்கான். இவன் வட்டியும் கட்டல அசலும் திருப்பல. இனிமேல் இவண்ட்ட வாங்க முடியாதுனு தெரிஞ்சி போயி இன்னிக்கி காலைல வீட்டுக்கே வந்து மாணிக்கம் என்கிட்ட சொல்லிட்டான்

இவனுக்கு எதுக்கு இவ்வளவு பணம்னு கூப்புட்டு கேட்டா மாக்கான் மாதிரி அப்படியே நிக்கறான். ரூமுக்குள்ள போயி எல்லாத்தையும் பொரட்டி பாத்தா அலமாரி ட்ராவுக்கு கீழ ஒளிச்சு வெச்சுருக்கான் பாபு. கஞ்சால இருந்து சாரு கோக்கேயினுக்கு போய்ட்டாரு இப்போ.” 

என்னால் நம்பவே முடியவில்லை. “எவ்ளோ நாளாணா?”

யாருக்கு தெரியும். நான் வீட்ல அதிகம் இருக்கறதுல்ல காலைல போனா ராத்திரிதான் வரேன். இவள கேட்டா ஒரு வித்தியாசமும் இல்ல நல்லாத்தான் இருந்தான்றா. ஆர்த்திதான் அஞ்சாறு மாசமா அவன் ரூம்ல அவனே தனியா பேசி சிரிக்கிறானு சொல்லி இருக்கா இவகிட்ட . வயசு பையன் ஏதாவது புஸ்தகம் கிஸ்தகம் படிப்பானு இவ அசால்டா உட்டுட்டா என் கிட்ட சொல்லவே இல்ல.”

ஒரு வேள திரும்ப குருவி ஞாபகம் வந்து…” என்றேன்.

அட போ பாபு. அதெல்லாம் நம்ம சொல்லிக்கலாம் சமாதானத்துக்கு. இவன் ருசி பாத்துட்டான் இனி மேல் உட மாட்டான். அதுவும் இவன உடாது. இவன் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு இத விட்டானானே எனக்கு இப்ப சந்தேகமா இருக்கு,” என்றார்.

நல்லாதான இருந்தான் ட்ரீட்மெண்ட் போய்ட்டு வந்து?”

எப்படி நம்மள ஏமாத்துறதுனு கத்துகிட்டு வந்திருக்கான் ட்ரீட்மெண்ட்ல. ஒத்த ஆம்பள புள்ள பெத்து அவன இப்படி…” அடக்க மாட்டாமல் மீண்டும் அழ ஆரம்பித்தார்.

எந்த வார்த்தையும் அவரை தேற்றாது என தெரிந்து பேசாமல் அவரருகில் உட்கார்ந்திருந்தேன்

செல்லை பார்க்காமலே வண்டி எடுத்து கொண்டு கிளம்பிவிட்டேன்.

அவனை வரதண்ணன் எங்கும் அனுப்பவில்லை. அவனை கிட்டதட்ட சிறையில் வைத்திருப்பதைப் போல் வைத்திருந்தார். அவர் மண்டி மூட்டைக்காரர்கள் இரண்டு பேர்  எந்நேரமும் அவனுடனே இருந்தனர். அனைத்து கட்டுப்பாடுகளையும் மாதம் ஒரு முறையாவது உடைத்து பவுடர் வாங்கிவிடுவான். செயின், பணம், பாத்திரம் என எது கிடைத்தாலும் அதை பவுடராய் மாற்றி விடுவான். வரதண்ணன் சோகத்தில் ஆளே வாடி வதங்கி பாதியாகி போனார்.

நான் பல முறை சொல்லியும் அவனை திரும்பவும் ரீ ஹாப் அனுப்ப அவர் சம்மதிக்கவில்லை. அதில் சுத்தமாக அவருக்கு நம்பிக்கை போய்விட்டது.

ஆர்த்தி காலேஜ் முடித்த கையோடு அவள் கல்யாணத்தை முடித்து வைத்தார். செல்லை கல்யாணத்திற்கு கூட கூட்டி வரவில்லை, அம்மை போட்டிருக்கிறது  என்று மாப்பிள்ளை வீட்டில் சொல்லிவிட்டார்கள்.

ஆர்த்தி கல்யாணத்திற்காகவே உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்ததை போல, அவள் கல்யாணமாகி போன மூன்றே மாதத்தில் ஹார்ட் அட்டாகில் வரதண்ணன் போய் விட்டார்.

அவர் எழவு விழுந்த அன்று படிந்த சாவுக் களை அந்த வீட்டிலிருந்து இன்னும் விலகவே இல்லை. சில சமயம் யோசித்தால் குருவி போனதில் இருந்தே அப்படித்தான் இருந்தது என தோன்றும்

வரதண்ணன் இறந்த பிறகு மண்டி செல்லின் கைக்கு வந்தது. காலையிலேயே பவுடரை இழுத்து விட்டுத்தான் மண்டி பக்கமே போவான். வாயே திறக்காத செல்லு  சிரிக்க சிரிக்க பேசுபவன் என பஜார் முழுக்க பெயரெடுத்தான். அவனுடைய போதை பழக்கம் நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரிந்த விஷயமாக இருந்தது. ஒன்றிரண்டு வருடங்கள் பெண் தேடினாலும் அதன் பிறகு அவனுக்கு வரன் பார்ப்பதையே செல்லின் அம்மா விட்டுவிட்டார். பழக்க வழக்கங்களில் தெரியாவிட்டாலும் நிர்வாகத்தில் போதையின் தாக்கம் நன்றாக தெரிந்தது. முடிவுகள் எதையும் அவனால் எடுக்க முடியவில்லை, எடுக்கும் முடிவுகளும் மோசமானவையாக இருந்தன. பல லாரிகள் ரோட்டை நிறைத்து நிறுத்தி லோடடித்த வியாபாரம் சுருங்கி சில லாரிகள், அரை லாரி, டெம்போ, ஆட்டோ என தேய்ந்து பத்து வருடங்களில் வியாபாரமே இல்லாத நிலை வந்தது

கையிருப்பு காசு தீரும் வரை வீட்டில் உட்கார்ந்து கோக் அடித்து கொண்டிருந்தான்.

வரதண்ணன் மெயின் ரோட்டில் சில கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். அந்த கடைகளை தவிர வேறு வருமானம் இல்லை என்ற நிலை வந்தது. செல்லின் அம்மா கடை வாடகையை அவனை வாங்க விடவில்லை. விட்டால் அதையும் விற்று பவுடர் ஆக்கி விடுவான் என பயந்து தரமுடியாது என சொல்லிவிட்டார்

ஏதாவது வேலை வேண்டும் என என்னை வந்து பார்த்தான். டி டி எச் எல்லாம் வந்து கேபிள் டல்லடிக்க ஆரம்பித்த நாட்களிலேயே நான் விளம்பர படங்கள் எடுப்பது, பெரிய கல்யாணங்களுக்கு  சினிமா போல வீடியோ எடுப்பது என தொழிலை  சற்று மாற்றிக் கொண்டிருந்தேன். அதன் மூலம் எனக்கு நிறைய பெரிய மனிதர்களின் தொடர்புகள் இருந்தது. ட்ரீட்மெண்ட் எடுத்து கொண்டால் எங்காவது சொல்லி வேலை வாங்கி தருகிறேன் என சொன்னேன். அதன் பிறகு என்னை பார்க்க அவன் வரவில்லை. ஒரு வருடம் கழித்து நான் தான் அவனை பார்க்க போக வேண்டியிருந்தது

அவன் பேசும் நுனி நாக்கு ஆங்கிலத்தால் ஒரு பெரிய பைனான்ஸ் கம்பெனியில் மானேஜராக வேலை கிடைத்து சேர்ந்திருந்தான். அவர்கள் அவனை கட்டி வைத்திருக்கிறார்கள் என செல்லின் அம்மா ஒரு நாள் இரவு பத்து மணிக்கு வந்து கதவை தட்டினார். அவரை என் வீட்டிலேயே என் மனைவியுடன் இருக்க சொல்லிவிட்டு என்னிடம் வேலை செய்யும்  ஐந்தாறு பேரை அங்கு நேராக வரச் சொல்லிவிட்டு நானும்  அந்த கம்பெனிக்கு போனேன். செல்லை மானேஜர் ரூம் சேரிலேயே நைலான் கயிற்றால் கட்டி வைத்திருந்தார்கள். அருகில் நின்றிருந்தவர்கள் யாருமே ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்பவர்கள் போல் இல்லை. செல்லின் உதடு தடித்து போய், முகமெல்லாம் வீங்கி இருந்தது

என்னைப் பார்த்தவுடன் கட்டை அவிழ்த்து விட்டனர்

ரெண்டு லட்ச ரூபா கையாடல் பண்டாரு சார், கேட்டா கெத்தா செலவாயிருச்சினு சொல்றாரு,“ வேறோரு ரூமில் இருந்த வந்த சேட்டு பையன் போல இருந்தவன் சொன்னான். இவன் ஒருவன் தான் அந்த கம்பெனியில் வேலை பார்ப்பவன் போல இருந்தான்.

அதுக்காக கட்டி வெச்சு அடிப்பிங்களா. போலிஸுக்கு போக வேண்டியதுதானே?” என்றேன்.

சார் கம்பெனி ரெப்பூடேஷன் டேமேஜ் ஆயிரும் சார். பொய் சொல்றாரு நாலு தட்டி தட்டுனா உண்மை வரும்னு பாத்தோம். இப்பதான் இந்தாளு ஒரு போத பார்ட்டினு தெரிஞ்சது, அதான் வீட்டிக்கி போன் பண்ணோம். சார் இவர் பண்ண வேலையால இந்த ப்ராஞ்சல இருக்க எல்லார் மேலயும் ஆக்‌ஷன் எடுப்பாங்க சார். நாந்தான் இந்த ப்ராஞ்சுக்கு சீனியர் மேனேஜர், என் வேலயே போய்ரும் சார்,” என்றான் நாத்தழுதழுக்க.

அவன் அந்த காசு முழுசா பவுடர் அடிச்சிருப்பான். அஞ்சு பைசா அவன் கைல இருக்காது. அவங்க வீட்லயும் இப்ப இருக்க நிலைமைல ஒன்னும் கிடைக்காது. நீங்க அவன அடிச்சு கொன்னு போட்டுட்டு ஜெயிலுக்கு போலாம் அவ்ளோதான்” என்றேன்

சார் ஏதாவது பாத்து பண்ணுங்க சார். இந்தாளுக்கு வேல கொடுத்த பாவத்துக்கு நான் நடுத் தெருவுல நிப்பேன் போலருக்கு,” என்றான்.

இப்ப நான் இவன கூட்டிட்டு போறேன். என் நம்பர தரேன் நாளைக்கு மத்தியானத்துக்கு மேல கூப்புடுங்க அவங்கம்மாகிட்ட பேசி எவ்ளோ தர முடியும்னு பாத்து சொல்றேன்” 

அவனை ஆஸ்பிடல் கூட்டிப் போய் மருந்து போட்டு வீட்டிற்கு அழைத்து சென்றேன்

பைனான்ஸ் கம்பெனிக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுப்பதாக பேசி, செல்லுடைய அம்மா நகையை அடகு வைத்து அந்த பணத்தை கொடுத்தார்

அதன் பிறகு மாதம் ஒரு தொகையை அவனுக்கு கொடுக்க ஆரம்பித்தார். அப்படியும் ஆறு மாதத்திற்கொரு முறை நகையோ, வெள்ளி சாமானோ மாயமாவது தொடந்து கொண்டுதான் இருந்தது. இப்போது தங்கை மகனின் அரணைக் கொடியை கழட்டி பவுடராக்கிவிட்டு நடு ரோட்டில் செருப்படிபட்டு உட்கார்ந்திருக்கிறான்

நான் போகாமல் நிற்பதை பார்த்துவிட்டு, “ஒரு தம்மு வாங்கி தரியா பாபுணா” என்றான்.

போதை நன்றாகவே இறங்கி இருக்கிறது போல பட்டது எனக்கு.

எந்திருச்சி வா,” என்றுவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

செருப்பெதுவும் போடாமல் அப்படியே நடந்து வந்து வண்டியின் பின்னால் உட்கார்ந்தான்.

புது பஸ் ஸ்டாண்டிற்குள் போய் ஒரு பெட்டி கடையில் கிங்ஸ் வாங்கி அவனிடம் கொடுத்தேன். நான் சிகரெட் இப்பொழுது குடிப்பதில்லை

பற்ற வைத்து இழுக்க ஆரம்பித்தான். சிரிப்பும் மிதப்பும் கண்ணில் இல்லை. முழுதாக போதையிறங்கி நின்று கொண்டிருந்தான்.

இப்படி போதையில இல்லாதப்போ என்ன வாழ்க்க வாழ்றோம்னு ஒரு நாளாவது யோசிச்சி பாத்திருக்கியாடா?” 

அவனுக்கு புகை இழுப்பதில் கவனமெல்லாம் குவிந்திருந்தது

எனக்கு கோபம் ஏறி வந்தது.

உனக்கு நாப்பது வயசுக்கு மேல ஆகுதுஇது வரைக்கும் நீ வாழ்ந்த வாழ்க்க யாருக்காச்சும் உபயோகமா இருந்தததா, உனக்கே கூட இல்ல. உன்ன விட சின்ன பையனெல்லாம் உன்ன நடு ரோட்ல செருப்பால அடிக்கறான். இப்படி வாழனுமாடா. இப்பாவாவது வாடா ட்ரீட்மெண்ட் எடு,”  என்றேன்

ட்ரீட்மெண்ட் எடுத்தா?”

“ம்.. திரும்ப ஒரு மனுசனா வருவஎன்றேன்.

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நீ என்கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது ஒரு வார்த்த சொன்ன ஞாபகம் இருக்காநீதாண்டா அவன்னு, அது உண்மைனா. கோக் ஏத்துனா நான் ரெண்டாள் பாபுணா. குருவி எனக்குள்ள இறங்கிறுவான். அப்புறம் சிரிப்பும் சந்தோஷமும் மட்டும்தான். செல்லா மட்டும் இருந்தன்னா ரெண்டு நாள்ல செத்து போயிருவேன்,” என்றான்.

ஒரு பப் இழுத்துவிட்டு தொடர்ந்தான். “உங்களுகெல்லாம் அவன் செத்துட்டான் எனக்கு இன்னும் அவன் உயிரோடதான் இருக்கான். கல்லுல மந்திரம் சொல்லி சாமிய எழுப்புற மாதிரி என் உடம்புல கோக்கை விட்டு அவன எழுப்புறேன். நான் உசுரோட இருக்க வரைக்கும் அவனும் இருப்பான்” 

இன்னுமாடா உம் பழக்கத்துக்கு குருவி பேர சொல்லிகிட்டு இருப்ப?” என்றேன்.

நிமிர்ந்து என்னை பார்த்தான்பில்டர் வரை கங்கு போய்விட்டது, அதை கீழே போடாமல் விரல்களை விசில் அடிப்பது போல் மடக்கி நடுவில் கங்கின் நுனியில் மெலிதாக ஒட்டிக் கொண்டிருந்த பில்டரை பிடித்து உதட்டில் வைத்து புகையை இழுத்தான், கங்கு உதட்டில் ஒளிர்ந்து அடங்கியது

புத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்

ஒரு நாவல், இரண்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு கதம்ப படைப்பு மற்றும் ஒரு கட்டுரை தொகுப்பு என  பதாகை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு ஐந்து நூல்களை கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது.

கத்திக்காரன்- ஸ்ரீதர் நாராயணன் – சிறுகதைகள். 

ஸ்ரீதர் நெடுநாட்களாக இணைய உலகில் இயங்கி வருபவர். பதாகையின் தோற்றுனர்களில் ஒருவர். அமெரிக்காவில் வசிக்கிறார்.பூர்வீகம் மதுரை. ‘கத்திக்காரன்’ முழுக்க அமெரிக்க பின்புலத்தில் உருவான கதைகள். ‘வானவில்’ அமெரிக்க இந்திய  பதின்மரின் வாழ்வை பற்றி நுண்ணிய சித்திரத்தை அளிப்பது. பியாரி பாபு ஹோரஸ் அலெக்சாண்டர் பற்றிய நினைவுகளை சொல்லும் கதை. ஸ்ரீதரின் கதைகூறும் முறை பிசிறற்ற தெள்ளிய முறை என சொல்லலாம். இரா.முருகன் ஒரு நல்ல முன்னுரையை அளித்திருக்கிறார்.இந்த ஆண்டு ஸ்ரீதரின் தொகுப்பு நன்கு கவனிக்கப்படும் என்று நம்புகிறேன்.

ஒளி – சுசித்ரா – சிறுகதைகள்

சுசித்ரா, சுவிட்சர்லாந்தில் வசிப்பவர். உயிரியல் துறையில் ஆய்வு செய்து வருகிறார். இவரும் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். ஆங்கிலத்தில் வலுவான வாசிப்புடையவர். அண்மையில் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த அவருடைய ‘ஒளி’ முன்னோடி எழுத்தாளர்கள் பலரால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. தொகுதியில் வெளிவந்துள்ள ‘தேள்’ ஒரு நல்ல டிஸ்டோபிய கதை. இரண்டு அறிவியல்புனைவுகளும் வாழ்க்கையின் அடிப்படை வினாக்கள் மீது கட்டி எழுப்பப்பட்டவை. ‘ஹைட்ரா’ எனக்கு பிடித்த கதை. இந்த ஆண்டு மிகவும் பேசப்படும் தொகுதிகளில் ஒன்றாக இது இருக்கும் என நம்புகிறேன். படைப்பூக்கம் கொண்ட எழுத்து. வருங்காலத்தில் முக்கிய எழுத்தாளராக அறியப்படுவார்.

வீடும் வெளியும் – அனுகிரஹா – கதம்ப படைப்பு

அனுகிரஹா  சொல்வனம்  மற்றும் பதாகை ஆசிரியர் குழுவில் இருப்பவர். சேலத்தை பூர்வீகமாக கொண்டவர். பெங்களூரில் வசிக்கிறார். அவருடைய ‘வீடும் வெளியும்’ நூலை படைப்பு கதம்பம் என்றே சொல்ல வேண்டும். தமிழுக்கு இப்படியான வடிவம் முன்மாதிரி அற்றது என எண்ணுகிறேன். நான்கு தலைப்புகளில் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் அவரே வரைந்த ஓவியங்கள் என படைப்பின் எல்லா பரிணாமங்களும் கொண்ட நூல். அனுவின் கவிதைகள் மிக முக்கியமானவை. புதிய கோணங்களை திறப்பவை. அவை இவ்வாண்டு பேசப்படும் என்று நம்புகிறேன்.

இயர் ஜீரோ – காலத்துகள் – நாவல்

‘காலத்துகள்’ பதாகை வழி உருவாகி வந்த எழுத்தாளர். அவருடைய சிறுகதை தொகுப்பும் அடுத்து வர இருக்கிறது. ‘இயர் ஜீரோ’ செங்கல்பட்டில் தொண்ணூறுகளின் மத்தியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒரு மாணவனின் கதை. நினைவுகளின் ஊடாக ஒரு தெறிப்பை காலத்துகள் இந்நாவலில் நிகழ்த்துகிறார். ஒரு தலைமுறையே அவருடைய கதையோடு தங்கள் நினைவுகளை பொருத்திப் பார்க்க முடியும். ஆத்மார்த்தமாக தன்னை கண்டடையும் நோக்கில், தன நினைவுகளை கிளறி எழுத்தாக்கும்போது அதன் நேர்மையின் ஆற்றலால் அப்படைப்பு நம்மை வசீகரிக்கிறது. தமிழில் வந்துள்ள சிறந்த ‘coming off age’ வகையிலான நாவல்களில் ஒன்று காலத்துகளின் ‘இயர் ஜீரோவை’ சொல்லலாம்.

பாண்டியாட்டம் – நம்பி கிருஷ்ணன் – மேலை இலக்கிய கட்டுரைகள்

நம்பி கிருஷ்ணன், அமெரிக்காவில் வசிக்கிறார். சொல்வனத்தில் தொடர்ச்சியாக உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார். அரூ அறிவியல் புனைவு போட்டியில் அவருடைய கடவுளும் கேண்டியும் மூன்றாவது பரிசு பெற்றது. அவர் எழுதிய Ecco homo எனக்கு பிடித்த காந்தி கதைகளில் ஒன்று. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் செறிவான மொழியாக்கங்களை செய்திருக்கிறார். தமிழில் அவர் அளவுக்கு அயல் இலக்கிய வாசிப்பு உரியவர்கள் மிகக் குறைவு என்பது என் கணிப்பு. ‘பாண்டியாட்டம்’ உண்மையில் அப்படி பிரதிகளின் மீது அவர் தாவித்தாவி செல்லும் கட்டுரைகளின் தொகுப்புதான். பெருமைக்குரிய மிக முக்கியமான அறிமுகம் என நம்பியின் இந்த கட்டுரை நூலை கருதுகிறேன். ஓவியர் ஜீவானந்தத்தின் கோட்டுச் சித்திரங்களோடு நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது, கண்காட்சி முடிவதற்குள் வந்துவிடும்  என நம்புகிறேன்.

பதாகை இணைய தளம் தொடர்ந்து செயல்பட காரணமாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி. பதிப்பகமாக மலர்ந்திருக்கும் பதாகையையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய ஆண்டு பதாகை- யாவரும் கூட்டாக வெளியிட்ட

1. பாகேஸ்ரீ- எஸ்.சுரேஷ்- சிறுகதைகள்

2. வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி – – சிறுகதைகள்

3. வளரொளி- நேர்காணல்கள், மதிப்புரைகள்- சுனில் கிருஷ்ணன்

ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன.

இந்த நூல்கள் புத்தக கண்காட்சியில் யாவரும் அரங்கில் (189 & 190) கிடைக்கும். ஆன்லைனில் பெற http://www.be4books.com or Whatsapp no.9042461472யை தொடர்புக் கொள்ளலாம்.

வாஸந்திகா – பானுமதி சிறுகதை

என் அலைபேசி ஒலித்த போது அதிகாலை நான்கு மணி. ஒருவிதத்தில் எதிர் பார்த்தும் கொண்டிருந்தேன்.ஆனாலும், சிறு கலவரம் மனதில். மிக இயல்பாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு மெல்லிய குரலில் ‘சொல்லுங்க’ என்றேன்.”மிஸ்டர். பாலசந்திரனின் நிலை கவலைக்கிடம்;நினைவு தப்புகிறது. நீங்கள் உடனே வரமுடியுமா?” என்றாள் மருத்துவமனையின் தொடர்பாளர்.

எனக்குப் போவதற்கு விருப்பமில்லை.’கீதா இருக்கா இல்லையா அவ பாத்துப்பா’

“அவர் உங்களை மனைவி என்று குறிப்பிட்டிருக்கிறார்;கீதா மேம் தயங்குகிறார்கள்”.

‘சரியாச் சொல்லும்மா;உயிர் போய்ட்தா?’

“கிட்டத்தட்ட”

என் உயிர் போய் முப்பது வருடங்கள் ஆகிவிட்டது என்று சொல்ல நினைத்தேன்,ஆனால் சொல்லவில்லை. ‘வரேன்‘என்று இணைப்பைத் துண்டித்தேன்.தூக்கத்தைக் கலைத்துவிட்டாள்.என்ன செய்யலாம்? பால்கனி கதவைத் திறந்து கொண்டு தெருவைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.பனிக்குளிர்ச்சி நாடிகளில் ஊடுருவியது.மூட்டம் படர்ந்த வானில் ஒன்றும் தெரியவில்லை.பால் வண்டி ஒன்று முகப்பு விளக்குகளை எரிய விட்டுக்கொண்டு வந்து கொண்டிருந்தது.ஒளியென வந்து மூட்டத்தில் தள்ளிய அவன்,என்றுமே ஒரு மாத்திரை குறைவான என் வாழ்க்கை,நானே ஆடுபவளாய், நானே பகடை உருட்டியாய்,என்றுமே பழசு வாய்க்கப் பெற்றவளாய்…இல்லை இதை விரக்தியில் சொல்லவில்லை.முப்பது வருடங்களில் என் வாய் விட்டு மனம் விட்டு ஐந்தாறு முறை மட்டுமே தான் சிரித்திருப்பேன்.அவன் செத்துவிட்டான் என்பதை அவர்கள் நாசுக்காகச் சொல்லிவிட்டார்கள். என்னை எதற்காக மனைவி என்று குறிப்பிட்டான்? தீ வளர்த்து மணந்தவள் மனைவி என்றால், அவனோடேயே வாழ்பவள் யார்?அவளை மனைவி என்று சொல்ல என்ன தடை?ஓ,அவள் புருசன் இன்னமும் அவர்களோடுதான் இருக்கிறான் என்பதுதானா?

போக வேண்டுமா என்ன?மூன்று முடிச்சில் எத்தனை ஆண்டுகள் சிறைப்படவேண்டும்? அவன் என்னோடு இருந்ததே மொத்தமாக ஒரேதரமாக மூன்றே நாட்கள் தானே.நான் நல்ல நிறம்;அவன் மா நிறம்-ஆனால், அழகன்,உயரம் அதற்கேற்ற பருமன், களையான முகவெட்டு,குழி விழும் கன்னங்கள்,எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் கம்பீரம். நான் அவன் மார்பளவிற்குத்தான் இருந்தேன்.என்னிடம் கவர்ச்சி என்பது என் அளவான மார்பகங்களும்,சிறிய பல்வரிசைகளும்தான். இருபத்தியோரு வயதில் எனக்கு வந்த அதிர்ஷ்டம் என உறவு சொல்லியது;தனிமையில் நான் அதைக் குறித்து பெருமிதம் கொண்டேன்.நிச்சயம் ஆகி நடக்க இருந்த இரு மாதங்களுக்குள் அவனுடனான வாழ்க்கைக் கனவுகள்; தனியாகச் சிரித்தும், சிவந்தும்,பித்தியாகி நான் எனக்குள்ளே கொண்டாடிக் கொண்டேன்- இனி எனக்கே எனக்கென ஒருவன்.எதுவும் என்னுடையது, பிறர் உபயோகித்தது இனி எனக்கில்லை.போதும் அந்தக் கடந்த காலம்.அக்காவுடைய ட்ரஸ்,அவள் பேனா,அவள் புத்தகங்கள்,அவள் செருப்பு,அவள் ரிப்பன், வளையல் என எல்லாப் பழசும் எனக்கு.தீபாவளியின் போதுகூட இரண்டு வருடத்திற்கு ஒருமுறைதான் புது ட்ரெஸ்-இரு வேளை சாப்பாடே பெரும்பாடு;இதில் புதிது என்பதற்கெல்லாம் இடமேது?இவ்வளவு ஏன்? என் திரண்ட குளியின் போதுகூட எனக்குப் புத்தாடை இல்லை,பால் பழம் கொடுக்கவில்லை,புட்டு சுற்றவில்லை.அம்மாவிற்கு மனத்தாங்கல் ஏதோ நானே விரும்பி உக்காந்து விட்டதாக.காலைச் சாப்பாடு கூட பழையதுதான்-மத்தியானம் மட்டும் சூடான சாதம், ஜீரா ரசம்;ராத்திரிக்கு மிஞ்சின சாதத்தை இரண்டாகப் பிரித்து மறுநாள் காலைக்குப் பழயதை சேமித்துவிட்டு, மீதியில் தாராளமாகத் தண்ணீர் ஊற்றி மோரில் கலந்து டம்ளரில் அம்மா கொடுப்பாள்.மொத்தம் அம்மா,அப்பாவையும் சேர்த்து நாங்கள் ஒன்பது பேர்.அப்பாவிற்கு மளிகைக்கடையில் கணக்குப்பிள்ளை வேலை;அரிசி, பருப்பு, எண்ணை ஓரளவிற்குக் கடனில் கிடைக்கும்-மாதம் பிறந்ததும் கடன் போக மீதிதான் சம்பளம்.

எனக்கு ஏழு வயது.எனக்கு பிஸ்கெட் திங்க ஆசையா இருந்தது.பக்கத்தாத்து ரமணி தின்னுன்ட்ருந்தான்-நான் வெக்கங்கெட்டு கை நீட்டினேன்;அவன் கொடுத்துருப்பானோ என்னவோ-ஆனா,அதைப் பாத்துண்டிருந்த அக்கா அம்மாட்ட போட்டுக் கொடுத்துட்டா;அம்மா கைல சூடு வச்சுட்டா;அப்றமா அழுதா;பிஸ்கெட்டும் இல்ல அதை அம்மா புரிஞ்சுக்கவுமில்ல.சூடுதான் மிச்சம்.

எல்லாம் பழசுங்கறேனே-வெக்கக்கேடு- கல்யாணப் பொடவ கூட மூத்த அக்காவோடதுதான்-அவ தலைப் ப்ரசவத்ல செத்துப்போனா-அத்திம்பேர் இரண்டாம் கல்யாணம் பண்ணின்டார்-ஆனா, நல்ல மனுஷன்-அவ நகை, பொடவைகளைத் திருப்பித் தந்துட்டார்.அம்மாவும், அப்பாவும் அதுல முக்கா வாசி நகயப் போட்டு காவாசி பொடவையக் கொடுத்து ரண்டு அக்காக்களுடைய கல்யாணத்தை ஒப்பேத்திட்டா.மீந்தது எனக்கு.

ஓசிச் சினிமா காட்டுவா எங்க காலனில-அதுல பாத்திருக்கேன்-ஹீரோ ஹீரோயினுக்கு புதுப்பொடவ, நகயெல்லாம் வாங்கித் தருவான்;தல கொள்ளாம மல்லிப்பூ;எங்காத்ல கிள்ளித்தான் தருவா-அதுவும் மாச முத வெள்ளிக்கிழமைல.கனகாம்பரம், டிசம்பரெல்லாம் கொல்லல மண்டிக்கிடக்கும்-ஆமா, வாசன இல்லாம ஆருக்கு வேணும்?

கல்யாணம் எல்லாவற்றையும் புதிதாக்கும் என நம்பினேன்.அவன் ஊர்வலம் வருகையில் பார்த்துப்பார்த்துப் பூரித்தேன்.தாலி கட்டும் போது ராம சீதா கல்யாணம் என சிலிர்த்தேன்.புகைப்படங்களில் பல் தெரிய சிரித்தேன்;முதலிரவில் அவன் எனக்கெனத் தனிப் பரிசு கொண்டு வந்து தருவானென்று எதிர்பார்த்தேன்.

எனக்கென ஒரு ஆண், அவன் குறும்புகள், அவன் வலிமை, அவன் தன்னம்பிக்கை,கல்யாணம் முடிந்த மறுநாள் தேனிலவு என்று சொர்க்கத்தில் மிதந்தேன்.நான் ஊட்டியில் தேனிலவை அனுபவிக்க ஆசைப்பட்டேன்.ஆனால், அவன் ஏற்காடிற்குத்தான் கூட்டிப்போனான்.சேர்வராயன் மலைக் குன்று.கொண்டை ஊசி வளைவுகளில் அவனை இறுகப்பற்றிக்கொண்டேன்;அவன் சிரித்தான்- வேற வாயிலெடுத்தா சந்தோஷம்-இப்ப எடுத்துடாதே என்றான்;அதற்கு நாணிச் சிவந்தேன்.மரகத ஏரியில் படகுப் பயணம்.அது தானாக ஏற்பட்ட ஒன்றாம்;உள்ளே பெரிய நீரூற்று உள்ளதாம்.அவ்வளவு பெரிய ஏரியை நான் பார்த்ததில்லை;மேகம் ஏரியின் ஒரு கரையில் நின்று தன்னை நீரில் பார்த்துக்கொண்டது;சற்றே சாயும் கதிர்கள் பட்டுஅதன் மேலாடைகள் வெள்ளிச் சரிகையுடன் மின்னின.வானைத் தொட எண்ணி வளர்ந்த மரங்கள் சற்றே வளைந்து அதனுடன் போட்டியிட்டன.காற்று இதமான குளிருடன் இருக்கையில் ஜிவ்வென்று பறவைகள் பறந்து சுழன்று மீண்டும் மரங்களுக்குச் சென்றன.ஆட்கள் குறைவான சிறிய புல்வெளியின் ஓரம் சில தத்தித் தத்தி வந்து எதையோ கொத்திக் கொத்தித் தின்றன. நான் செல்லும் முதல் படகுப் பயணம்.ஏறக்கூட பயப்பட்டேன்-அலாக்காகத் தூக்கி ஏற்றினான்.’படகு கவுந்தா என்ன செய்வ? நா நீந்திப் போயிடுவேன் நீ அவ்ளோதான்’ என்றான்.எனக்கு சுருக்கென்றது.வெண்மையான மேகங்கள் போன இடம் தெரியவில்லை;வானம் இருண்டு ஒளியை மறைக்கப் பார்த்தது.ஒளிச் சிதறல்கள் மேக விளிம்புகளில் சித்திரங்கள் வரைந்தன.மான், புலி, வேடன் என்றும் பயமுறுத்தின.சூரியனின் யாக குண்டத்தில் தீ ஜ்வலிப்போடு எரிய மானும், வேடனும் மறைய புலி மட்டும் நின்றிருந்தது.என்னை முழுங்கப் போகும் புலியா அது? என் தலையை உசுப்பிக்கொண்டேன்.கை கொடுத்து படகில் ஏற்றுபவர்களைப் பார்த்திருக்கிறேன்-இவன் என்னைத் தூக்கி ஏற்றியவன்-இவனா என்னை நட்டாற்றில் தள்ளுவான்?முட்டாளே,உன் கலவரத்தை அவன் இரசித்துக்கொண்டு இருக்கிறான். நான் செல்லக்கோபத்தோடு அவன் மார்பில் குத்தினேன்.படகில் இருந்த மற்றவர்கள் சிரித்தார்கள்.அங்கே பார்த்த கற்களால் ஆன இராமர் கோயிலை நான் மறக்கவேயில்லை.இந்த அவுட்டிங் தவிர முப்போதும் என்னையே சுற்றினான்;கொங்கைகள் மேல் வைத்துக்கிடந்த மலர் மார்பனாகக் கிறங்கினான்.கிள்ளியூர் அருவியில் ஆட்களேயில்லை;நாணமற்று என்னோடுதான் குளிப்பேன் என்று ஒரே அடம்

‘உன் கழுத்துக்கு நெக்லஸ் போடப்போறேன் ஊருக்குப் போனதுமே;ஆனா, உன்பேரு என்னக் குழப்பறது.வாசந்தி சரி, அது என்ன வாசந்திகா’ என்றான்

“அது செஞ்சு லக்ஷ்மியோட பேர்.அவ லக்ஷ்மியோட வனத்ல வேல பாத்தா; விஷ்ணுவ மோகிச்சா,அவருக்கும் இஷ்டம்தான்.கோபத்ல லக்ஷ்மி அவள சபிச்சுட்றா,வனராணியா பூமில பொறன்னுட்டு.இங்கயும் அவ விஷ்ணுவயே கல்யாணம் செய்யணும்னு தவிக்றா;அவரும் நரசிம்மரா வந்து காத்துண்டிருந்தார்.அப்றம் லக்ஷ்மியே மன்னிச்சு கல்யாணமும் பண்ணி வைக்கறா;வசந்த காலத்ல, வனத்ல,வாசன வாசனயா மணம்பரப்பினவ அவ;அதுனால வாஸந்திகா; நான் கூட அப்படித்தான்;”

இதைக் கேட்டு அவன் சொன்னான்’தெரிஞ்சோ தெரியாமயோ நல்ல பேரை பொருத்தமா வச்சிருக்கா’.எனக்குப் புரியாவிட்டாலும் சந்தோஷமாக இருந்தது.காலையா,மாலையா எனப் புரியாத உற்சாக உறவு. ஏற்காட்டில் அந்த லாட்ஜில் இரவின் கேளிக்கைகளில் ஆழ்ந்து உறங்கி எழுந்த பிறகுதான் அது காலை எட்டு மணியெனத் தெரிந்தது.அவன் படுக்கையில், குளியலறையில், வராண்டாவில், ரிஸப்ஷன் ஹாலில், ரெஸ்டாரென்ட்டில் எங்குமில்லை.பணியாளர் வந்தார்- ‘பத்து மணிக்கு காலி செய்யணுங்க; அவரு பணமெல்லாம் கட்டிட்டாரு.ஊருக்கு அவசரமாப் போணுமாம்-ஏதோ கெட்ட சேதி;உங்கள எழுப்பி இதைச் சொல்லப்படாதுன்னு கெளம்பிட்டாரு.நீங்க உங்க ஊருக்குப்போங்க.அவரு வந்து அழச்சுப்பாராம். இந்த டிக்கெட்ட கொடுக்கச் சொன்னாரு’.

எனக்குக் குழப்பமாக இருந்தது; டிக்கெட் கூட வாங்கிக் கொடுத்திருக்கான்-அப்படின்னா முன் திட்டமா?சேச்சே,அவன் நல்லவன்,எனக்கானதை செஞ்சுட்டுத்தானே போயிருக்கான். ஒருக்கால் அவன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லையோ-அவர் கல்யாணத்லகூட சுரத்தா இல்லயே?

என் கடிதங்களுக்குப் பதிலில்லை.அப்பாவும்,அண்ணாவும் நேரில் போனார்கள்.அவன் கீதாவின் வீட்டில் அவர்கள் குடும்பத்துடன் இருப்பதாகச் சொன்னார்கள்.

அவனிடம் நேரில் போய் கெஞ்சினேன், கேள்வி கேட்டேன்,அழுதேன்-அவன் மசியவில்லை

‘உனக்கு கீதாவோட பழக்கம்னா என்ன ஏன் கல்யாணம் பண்ணின்ட?’

“அப்பாவோட புடுங்கல் தாங்காமத்தான். கேக்கணும்னா அவரக் கேளூ.ஆனா,ஒன்னு, நீ எங்களோட இங்க இருக்கறதுல ஒரு கெடுதியுமில்ல;ஒத்துப்போ;கல்யாணம் பண்ணின்டு கைவிட்டாங்கற பேரு எனக்கு வேணாம்; நீ என்ன சொல்ற கீதா?”

‘இதோ பாரு, வாசு(வாசுவாம், வாசு-இவ வச்ச பேரு மாரி கூப்ட்றா) பாலு நல்லவன்;ஊர விட்டுத் தள்ளு;எங்களோட இரு;உனக்கு கொற வைக்க மாட்டோம்’

‘நீ வாய மூடு;குடும்பத்தோட இருக்க;இவனையும் சேத்து வச்சுண்ட்ருக்க.தேவடியாகூட இப்படி செய்ய மாட்டா.நாங்க பேசறதுல குறுக்கிட்டின்னா செருப்பு பிஞ்சுடும்’

அவன் பளாரென்று கன்னத்தில் அடித்தான்;நான் சுருண்டு விழுந்தேன்”தொலைச்சுடுவேன் யாரப் பாத்து என்ன வார்த்த சொல்ற போடி, கோர்டுக்குப் போ விவாகரத்து கேளு,ஜீவனாம்சம் தந்து தொலைக்கிறேன்.”

நான் அடக்க மாட்டாமல் சிரித்தேன்.

குழந்தை பிறந்திருக்கிறது என்ற மிகை சந்தோஷம் நான் கடைசிக் குழந்தை, அதிலும் நாலாவது பெண் என்பதால் என் பெற்றோர்களுக்கு இல்லை.பழசிலேயே இருபத்தியோரு வயது வரை வாழ்ந்திருக்கிறேன்;கல்யாணம் கூட எனக்குப் புதிதாய்த் தெரிந்த பழசுதான்.வயிற்றில் வளரும் சிசுவாவது எனக்கே எனக்கென இருக்குமா?

ஸர்வீஸ் கமிஷன் தேர்வில் வெற்றி பெற்றேன்.என் மகள் பிறந்தாள்;அவன் வந்து பார்த்தான். மாதங்கியெனப் பேர் வைத்தான்.போய்விட்டான்.என் அம்மாவிற்கு இந்த மட்டும் மானத்தைக் காப்பாற்றினானே என்று ஆஸ்வாஸம்.நான் அவனுடன் சேர்ந்திருக்கவில்லை என அவளுக்கு மன வருத்தம்.

தன் அப்பாவைப் பற்றி என் மகள் கேட்க ஆரம்பிக்கையில் அவள் வயது ஆறு.எங்கள் திருமணஃபோட்டோவை பார்த்துக்கொண்டேயிருப்பாள்- திடீரென்று அவனது படத்திற்கு மட்டும் முத்தம் கொடுப்பாள்.அம்மாஅழுவாள்- நான் முகம் திருப்பிக் கொள்வேன்

“உனக்கு ஏம்மா இந்தப் பிடிவாதம்?அப்பாதான் கூட இருக்கச் சொன்னாராமே?ஏன் மாட்டேனுட்ட?பீச்சுக்கெல்லாம் எல்லா அப்பாவும் கூட்டிண்டு போய் தண்ணிலெல்லாம் வெளயாட விட்றா;நீ முத அல பக்கத்ல கூட போப்படாதுங்கற’

இந்தப்பெண்ணும் எனக்கு மட்டுமேயில்லை எனப் புரிய ஆரம்பித்தாலும்,அவளுக்குச் சிறு வயது, போகப் போகப் புரிந்து கொள்வாள் என நினைத்தேன்.அம்மாவிற்கு என் ஆண் நண்பர்கள் என்னைப்பார்க்க வீட்டிற்கு வருவது பிடிக்கவில்லை.சந்தேகப்பட்டாள், பேத்தியைத் தூண்டிவிட்டாள்.

பொறுக்க முடியாமல் ஒரு நாள் சொல்லிவிட்டேன் ‘என்னோட பொறந்தவா ஆறு பேரு’அம்மாவிற்குப் புரியவில்லை.”நா என்ன கேக்கறேன், நீ என்ன சொல்ற?”

‘என் ரணத்த நான் ஆணோட பேசி ஆத்துக்கறேன்;பெத்து ஆத்திக்கமாட்டேன்’

அம்மா இடிந்து போனாள்.மாதங்கி இல்லாத போதுதான் இது நடந்தது.அம்மா என்னுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டாள்.

பதினாறு வயதில் மாதங்கி அவன் வீட்டில் அவனைப் பார்க்கப் போனாள்.பாட்டியுடன் போனாள், தனியாகப் போனாள்.தெரிய வந்த போது’நீங்க ரண்டு பேரும் அங்கயே போயிடுங்க;அவன் இப்ப உங்களுக்கு முக்யம்’

“ஆமாம்மா, அப்பா எனக்கு வேணும்;அவர் மாரியே நான் இருக்கேன்,உயரம், கண்ணு, கலர்,கன்னக் குழி எல்லாமே;அவர்தான் எனக்குத் தார வாக்கணும்;ஒத்துண்டிருக்கார்.ஆனா,உன்னவிட்டுட்டு போமாட்டோம்.உன்ன கெஞ்சிக் கேக்கறேன்;உன் ஆஃபீஸ் மாமால்லாம் என்னயே அசிங்கமா திருட்டுத்தனமா பாக்கறா;எனக்குப் புடிக்கல.”

அப்பாவின் துரோகம் தெரியவில்லை இவளுக்கு;அம்மாவை சந்தேகிக்கிறாள்.கன்னத்தில் அறைந்து வீட்டை விட்டுத் துரத்தலாம்;அங்கேபோய் நிற்பாள்;அவன் ஜெயித்ததாகச் சிரிப்பான்.கீதா உச்சி குளிர்ந்து போவாள்;அம்மாதான் பாவம் தவிப்பாள்,என்னையும் விட முடியாது,இந்த வயதிற்கு அங்கேயும் தங்க மனம் இடம் கொடுக்காது.

“என்னடி, புதுக் கத சொல்ற?”

‘நா கதயெல்லாம் சொல்லல;நீ அப்பாவோட இருந்திருந்தா என் கன்னத்தை உன்ஃப்ரெண்ட் திருட்டுத்தனமா கிள்ளுவானா?இடுப்புலதான் கை போடுவானா?’

‘அப்பவே சொல்றதுக்கென்ன?அவாளை வரவிடாம செய்றதுக்கு அவனும்,உன் பாட்டியும் இதெல்லாம் சொல்லச் சொன்னாளா?’

மாதங்கி என்னை க்ரோதத்துடன் பார்த்தாள்.

இது உண்மையா, பொய்யா? கொஞ்சம் நிஜமோ?சாரங்கன் வழிசல் பேர்வழி,சந்துரு அப்படியில்லையே.

மாதங்கியின் இருவது வயதில் வந்த வரன்கள் சொல்லி வைத்தது போல் அப்பா எங்கே என்று கேட்டார்கள்.அவன் ஒரு முறை துபாயில் இருந்தான்- சிங்கப்பூரில், இலங்கையில், லண்டனில், டெக்ஸாஸில் எங்களுக்குத் தோன்றிய இடங்களிலெல்லாம் அவன் இருந்தான்.ஒரு வரன் அமைந்து அவன் வந்து தாரை வார்த்துக்கொடுத்தான்.

இன்று அவன் இறந்த செய்தி. எனக்கென்ன சந்தோஷம் அல்லது துக்கம் இதில். நான் கீதாவை தொலைபேசியில் அழைத்தேன். ‘மாதங்கி இப்போ தாய்லாந்துக்கு வெகேஷனுக்குப் போயிருக்கா;நீ பேசு, அவ வர வரைக்கும் முடிஞ்சா மார்ச்சுவரில பாடியை வை; நானா? நான் எதுக்கு?யாரோ செத்ததுக்கெல்லாம் நான் போறதில்ல’

நான் வாஸந்திகா; காட்டு வனம்;வசந்தத்தின் அரிய பூ,தனி மணம்,தளிரைத் தொட்டால் பொசுக்கும் தீப் பொறி,குன்றத்தின் காந்தள் மலர்,என்றும் புதியவள்,எனக்கெதற்குப் பழசு?

நான் சிரித்து முப்பது வருஷங்கள் ஆகிவிட்டன. இன்று பொங்கிப் பொங்கி சிரித்துக் கொண்டிருக்கிறேன்.