Author: பதாகை

கடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்

கடப்பதெப்படி

இருமலுக்குப் பயந்து
புகைக்கக் கற்கவில்லை ..
நாற்றம் பிடிக்காமல்
நாடவில்லை மதுவை ..
மயக்கும் பிறவற்றோடு
பழக்கம் ஏதுமில்லை ..
இல்லத்திலிருக்கும் மஞ்சமோ
தாத்தா காலத்தியது ..

கருந்தேநீர் உறிஞ்சியபடி
கொடுங்கவிதை இரண்டை  எழுதித்தான் கடக்கவேண்டும்
இன்றைய மனக்கொந்தளிப்பை

நிரப்புதல்

வசித்த பறவைகள்
வேறிடம் தேடிக்கொண்டன

மண்ணால் மூடப்பட்ட இடத்தில்
சிறு செடிகள் முளைத்தன

நிழலில் அணைத்தபடி
ஒய்வெடுக்கும் பூனைகள்
அங்கு நிறுத்தப்படும்
வாகனங்களின்மேல்
துயில்கின்றன

அண்டை வீட்டின் வண்ணம்
அடையாளமாக கூறப்படுகிறது

புதிதாக திறந்த கடையில் பழங்களும் கிடைக்கின்றன

அம்மரத்தை அகழ்ந்ததால்
தோன்றிய என் அகஅகழியை
நிரப்புமென நிறுவியுள்ளேன் …
சிறு போன்சாய் தொட்டியை

பாதாளக்கரண்டி – கமலதேவி சிறுகதை

குப்பைமேனிகளும், வெட்டுக்காயப்பூண்டுகளும் ,தும்பைகளும் சூழ தனித்துக்கிடந்த அந்தக்கிணறு அவர்கள் கவனத்திலிருந்து நழுவியிருந்தது.எப்போதாவது எட்டிப்பார்க்கும் சிறுபிள்ளைகளாலும், பறக்கத்தெரியாமல் பறந்து விழுந்துவிடும் கோழிகளாலும் துணுக்குற்று, “என்ன மண்ணாங்கட்டிக்கு இத திறந்து போட்டுருகானுங்க,”என்று அதன் பக்கத்தில் வருவார்கள்.

செடிகள் அடர்ந்து சிறுபிள்ளைகளும் கிணற்றை மறுதலிக்கும் மழைகாலத்தில் பரவிய காய்ச்சலால் அது மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.ஊரின் தெற்குத்தெருவான கணபதிபாளையத்தின் மையத்து நாற்சந்தியிலிருந்தது அந்தக்கிணறு.

ப்ளீச்சிங் பவுடர் கொட்டப்பட்டு மீண்டும் தனிமையில் அமர்ந்த அதை லட்சுமி அம்மாவின் திடீர் இறப்பு எழுப்பியது.அன்று கூடிய கூட்டத்திற்கு இடம் பற்றாமல் ஆட்கள் கிணற்றின் சுற்றுசுவரிலும் முன்னால் போடப்பட்டிருந்த சிமெண்ட் தளத்திலும், சுற்றுசுவர் மட்டத்திற்கு இடிக்கப்பட்டிருந்த மோட்டார் அறைசுவர்களிலும் அமர்ந்தார்கள்.

ட்ரம்ஸ் அராஜகம் இல்லாமல் ஆட்களை அதிரபதற வைக்காமல் தப்புகள் தாளமிட்டன.சத்தம் தாளமுடியாதவர்களின் சொல்லமெல்ல முடியாத சங்கடமான சொல்கேட்காமல் லட்சுமிஅம்மாள் போகும்நேரத்திலும் உறுத்தாமலிருந்தாள்.

ஆட்களின் சந்தடியால் கிணற்றுள் சலனம். கிணற்றின் உள்சுவரில் ஏறஇறங்க வைக்கப்பட்டிருந்த கால்பிடி குழிகளில் கூடு கட்டியிருந்த சிட்டுகள் ‘விருட்’ என எழும்பவும், மேலிருந்து கீழே ‘சர்’ என பாயவுமாக சலசலத்தன.

அடுத்தவீட்டின் முன்திண்ணையில் அமர்ந்திருந்த வீரய்யன்பாட்டா, “இந்தக்கேணி வெட்டுனப்ப எனக்கு ஐஞ்சாறு வயசிருக்கும்.இங்கனயே பழியாக்கெடப்பம்.எங்கள மூக்கன் விரட்டிக்கிட்டே இருப்பாரு,”என்றார்.

பாட்டாவிற்கு பக்கத்தில் சேகர்,“மூக்கன்னா?”என்று புருவங்களை உயர்த்தி நெற்றியை சுருக்கினான்.வெள்ளைவேட்டியை கொஞ்சம் சுருட்டியபடி திரும்பி அமர்ந்தான்.

“செவப்புகல்லுதோடு கல்ஒட்டரோட முப்பாட்டனாரு,”

“ வம்சந்தொட்டு நம்மளோட தின்னு, தூங்கி, செத்து கூடவே வராங்களோ.அவுங்களும் நம்ம ஊருல பூர்வீகமான ஆளுகளா பாட்டா?”

“ஆமய்யா…அந்தகாலத்தில திருப்பதி வரைக்கு போய் வந்தவரு அவரு ஒருத்தருதான்.இந்தக்கேணி வெட்டறதுக்கு அவரு சாதிசனத்துல சூட்சுமுமான ஆளுகள கூட்டியாந்து வேலைய முடிச்சாரு..”

“முன்னாடிவீட்டுகாரவுங்கதான் இந்த சுத்துசுவரு கட்டி வருசமெழுதி முடிச்சாரு.நம்ம ஊருக்கு வயசு கம்மி.நம்ம காடுதிருத்தினப்பவே அவுங்களும் கூட இருந்தாங்களாம். எங்கப்பாரு சொல்வாரு.நம்மஊருல இங்கருக்கற பழையஆளுக எல்லாரும் பூர்வீகந்தான்.அவங்க தொழில்காரவங்க.நம்ம பாட்டனுங்க நிலத்துலக் கெடந்தாங்க.அப்பெல்லாம் தாயா பிள்ளையா இருந்தோம்,”

“வாய்க்கு வந்தத உலராத பாட்டா..”என்றவன் நிறுத்தியபின் அவனே, “எல்லாருட்டயும் சும்மா மேம்பாக்கு பழக்கம்.அதுனால என்ன ஆகப்போகுது,”என்று சிரித்தான்.

“நீங்க என்ன சொத்தெழுதி தருவீங்களா,”என்ற பாட்டா கேலியாக ஒருசிரிப்புடன் நிறுத்தினார்.

“என்னன்னு சொல்லு பாட்டா..”

“சொன்னா கோவிச்சுக்கப்பிடாது..”

“இல்ல சொல்லு..”

“பொம்பளைக்கு வைக்கிற கெடுபிடிய சாதிசனத்துக்கும் வச்சுப்புட்டீங்களே..”என்றப்பின் வாயிலிருந்த புகையிலையை காறித்துப்பினார்.

வெற்றிலைத்துகள்களை துப்பிவிட்டு முற்றிலும் வெண்மையான தாடிமீசையை தோள்துண்டால் துடைத்தார்.பின்,“அவங்ககுடும்பத்து கஷ்டகாலத்துல ஏகாதேசிக்கு சாமிக்கும்பிட நெல்லு இல்ல. கம்மஞ்சோறாக்கியா சாமி கும்படறது? முன்னாலவீட்டு நாய்க்கரு மனசொடிஞ்சு போனாரு.இந்த பக்கத்திலிருந்தவங்க அரிசி நெல்லு பருப்பு எல்லாத்தையும் கொண்டாந்து அவருவீட்டு வாசல்ல போட்டம்.மொதநாளு அரிசிய திரிச்சி கிண்டிப்போட்டாங்க.வெல்லங்காய்ச்சர பரதன் கரும்புப்பால் கொண்டாந்தான். பானகம் கலக்கி குடுத்தாங்க.ராவுக்கு மாவுவெல்லம் சேத்துத்தின்னுட்டு தண்ணியக் குடிச்சுப்பிட்டு இங்கனதான் ஒக்காந்தோம். நாய்க்கரு ராமாயணக்கதைய சொல்லிக்கிட்டு இருக்கப்பவே பயக முருங்க மரத்தையே ஒடிச்சு கொண்டாந்தானுங்க.இருக்கற காயெல்லாம் போட்டு ஒரு குழம்பு.முறுங்கீர வதக்கி விடியகாத்தால வெளிச்சம் வர நேரத்துக்கு சாமியக்கும்பிட்டாச்சு.வெளிச்சம் துலங்குற நேரத்துல நாய்க்கரு தெருவுல நின்னு தலைக்கு மேல கையெடுத்து கும்பிட்டு சீரங்கம் இருக்கற திக்கைப்பாத்து, “ ரங்கா.. உங்கதவு எங்களுக்கும் தெறந்திருச்சுய்யான்னு,” சொல்லிட்டு எங்களையும் பாத்தாரு .அவரு நின்னக்கோலம் நெஞ்சுக்குள்ள அப்பிடியே இன்னிக்கும் நிக்கிது.இந்தத்தெருவுல விடியகாத்தால வரிசயா இலையப்போட்டு தின்னோம்.குந்தானியில நெல்லப்போட்டு ஆம்பளையும் பொம்பளையுமா குத்திப் புடைச்சோம். இந்தத்தெருவே வேலசெஞ்சம்.நல்லது கெட்டது எல்லாத்துக்கும் இந்தக் கேணி தண்ணிதான்,”என்றபடி கண்கள் வேறுகாலத்திலிருக்க ஆள் இங்கு அமர்ந்திருந்தார்.

“பாட்டா..பாட்டா..”

“அடுத்த ஏகாதேசிக்கு நாங்களும் வீட்ல சாமிகும்பிட தொவங்கி இன்னிக்கு நாப்பதுவருசமாச்சு.உங்க வீதிக்காரவுங்களுக்கு இந்தப்பழக்கமெல்லாம் இல்ல,”

சேகர்,“என்ன பட்டா என்னிய ‘உங்க’ன்னு சொல்லி பிரிச்சுவிட்டுட்ட,”என்று சிரித்தான்.

அவர்கள் பேசியதைக் கேட்டபடி தங்கம்மா முட்டிகால் வலியோடு எழுந்து அசைந்து நடந்துவந்து கிணற்றுக்கு முன்னாலிருந்த சிமெண்ட் தரையில் அமர்ந்தார்.அந்தக்கம்பத்தில் நிறைமாசக்காரியாக தான் கட்டி வைக்கப்பட்டு அடிவாங்கிய வலியோடு கிணற்றைப் பார்த்துக்கிடந்த அந்த ராவை நினைத்துக்கொண்டார்.பூஞ்சோலை யாருக்கும் தெரியாமல் நீச்சுத்தண்ணியில் உப்புப்போட்டு வாயில் ஊற்றியது நெஞ்சிலிருக்கிறது.மெதுவாக அந்தப்பொருளை எடுத்திருக்கூடாது என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

நீர்மாலைக்காக ஆண்கள் செல்லும்போது கிணற்றை சுற்றியிருந்த ஆண்கள் கலைந்தார்கள்.வசந்தா வந்து அமர்ந்தாள்.பக்கத்திலிருந்த சந்திரா, “ என்னப்புள்ள பழைய நெனப்பா,” என்று ஆட்களுடன் நடந்து செல்லும் ரகுராமனை பார்த்தபடி கேட்டாள்.வசந்தா கால்களை ஆட்டியபடி, “நான் தப்பிச்சேண்டி,”என்று சிரித்தாள்.

“எங்கண்ணனுக்கு என்னவாம்..கொஞ்சம் குண்டாயிருச்சு,”

“ரொம்ப…”

“வசந்தா,”என்றழைத்த சரவணனை பார்த்து தலையாட்டினாள்.

“எங்காளு எப்பிடின்னு பாக்கறல்ல.அங்க அவப்படற பாடுகள கேக்கமுடியல.பயபுள்ள அவளப் போட்டுபடுத்தறான்.எங்கையில கெடச்சிருக்கனும்,”என்று சிரித்தவள் கிணற்றின் கைப்பிடி சுவரைத் தடவி புன்னகைத்தாள்.

விடிந்தும் விடியாத மெல்லிருளில் வாளிகள் கிணற்றினுள் அடிவாங்கும் சத்தமும், இறைக்கும் வேகத்தில் தண்ணீர் சிந்தும் ஒலிகளும், குடத்தில் ஊற்றும் சத்தமும் ,கொலுசொலிகளும்,வளையல் ஓசைகளும்,சலங்கை வைத்த குடங்களின் மெல்லிய கலகல ஒலிகளும்,பசங்க சைக்கிள்களில் குடங்களை வைத்து நகர்த்தும் சத்தமுமாக இருக்கும் கிணறு பின்மதியத்தில் தான் ஓரிரு ஆட்களுடன் அமைதியாவது மனதில் ஓட கிணற்றை எட்டிப்பார்த்தாள்.தன் வாளி எப்போதும் இடிக்கும் அந்தமுடக்கிலிருக்கும் சிறுகல்புடைப்பை பார்த்தாள்.ரகுராமன் அதில் இடிக்காமல் லாவகமாக சட்டென்று கையைநீட்டி வாளித் தண்ணீரை காப்பாற்றிவிடுவான்.

பார்வதி,“நாப்பது வருஷத்துக்கு முன்ன சரியா மழயில்ல.ராமுழுக்க வாளி சத்தந்தான்..ஊறஊற எறச்சுக்கிட்டே இருக்கறதுதான் வேல.பெய்யற காலத்துல ஒருமுழகயித்துல மொள்றதுக்கு தண்ணி வந்துரும்.போர் போட்டு போட்டுதான் தண்ணி எறங்கிருச்சு,” என்று சற்றுசுவரில் அமர்ந்தாள்.

தலையைத்தூக்கி மூக்கணாங்கயிறு அற்ற அழகுமுகத்துடன், நல்லஉயரத்தில், செவலை நிறத்தில், சற்றுசதைப்பிடிப்பான உடலுடன், நேரேபார்த்து நடந்து வந்து சாமிமாடு கிணற்றடியில் நிற்கும்.

யாராவது வாளியைக் கொண்டு வந்து வைக்கும் வரை இறைப்பவர்களை பார்த்துக் கொண்டிருக்கும்.யாரையும் துரத்தியதோ முட்டியதோ இல்லையென்றாலும் அது வரும்வழியில் தள்ளியே நடந்தார்கள்.பார்வதி இறைக்கும் நேரத்தில் அது வந்ததும்வராததுமாக முதல்ஆளாக,செல்லமாக அதை வைதுகொண்டே, எத்தனை அவசரத்திலும் தண்ணீர் வைப்பாள்.மையிட்டதைப்போன்ற அழகிய பெரிய கண்களை விரித்தும் சுருக்கியும் அது நீர்உறிஞ்சுவதை இடுப்பில் கைவைத்து பார்த்தபடி, “ உன்னப்போல ஒருப்பிள்ளை வேணும்,” என்பவளைப் பார்த்து கேலி செய்யாதவர்கள் இல்லை.

அன்னம் தெருவிளக்கு கம்பத்தை பிடித்துக்கொண்டு நின்றாள்.எதிர்புறம் நின்ற மாணிக்கம் அருகில் வந்து, “இந்த கெணத்துல வச்சிதான் உங்கள கல்யாணமான புதுசில அண்ணின்னு கூப்டேன்,”என்றார்.

அன்னம்,“மாசமா இருக்கயில எனக்கு எவ்வளவு தண்ணி எறச்சி ஊத்தியிருப்பீங்க,”என்றவளின் கண்கள் மின்னின.

மாணிக்கம்,“அதுக்கூட செய்யாம அண்ணின்னு எதுக்கு கூப்படனும்.உங்க மாமியா திட்டுனாலும் எனக்கு வாளிக்கயிறு குடுப்பீங்கள்ல.இப்பெல்லாம் பத்துவாளி சேந்தாப்ல இழுக்க முடியாதுங்கண்ணி,” என்று சிரித்தார்.

வாளி கிணற்றுக்குள் விழுந்த அன்று தாயம்மா அழுது கிணற்றடியில் உட்கார்ந்துவிட்டாள். ராசு வீட்டில் பாதாளக்கரண்டி இருந்தது. ஓடிப்போய் வாங்கி வந்தார்கள்.வாழைப்பழத்தாரில் சீப்புகள் உள்ளதைப்போல மேல்நோக்கி வளைந்த கம்பிகளால் ஆனது அந்தக்கரண்டி.நீர் அலையடங்கியதும் மெதுவாக பாதாளக்கரண்டியில் இரண்டு வாளிக்கயிறுகளை முடிந்து கிணற்றில் விட்டார்கள்.மெதுவாக சுற்றி வந்து தட்டுப்பட்டவைகளை தேடி எடுக்க பழைய வாளி,மாட்டுமணி,கொடுவாள் எல்லாம் சிக்கிக்கொள்ள தாயம்மா வாளி மாட்டவே இல்லை.

பிரபாவதி,“சுத்துசுவர் மேலநின்னு எறச்சி தவறிவிழுந்துட்டேன்.தமிழண்ணன் யோசிக்காம குதிச்சு என் பின்னாடியே கயித்தப்பிடிச்சு ஏறுச்சு.ஒவ்வொரு ஓட்டையிலயும் கால்பதறுச்சு. பின்னாடி காலப்பிடிச்சு வச்சு பேசிக்கிட்டே ஏறினத சாவற வரைக்கும் மறக்கமுடியாது,”என்று கிணற்றை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கிணற்றையே பார்த்துக் கொண்டு,“இத்தன மனுச இருக்கயில.அந்த ஊருல கட்டிக்கிட்டு நாதியத்து கெடக்கறேன்.உங்களையெல்லாம் இப்படி நல்லதுகெட்டதுல பாக்கறதுதான். என்னிய எட்டின கையாக்கிட்டீங்க ,”என்றாள்.

தமிழ்மாறன்,“ தொலைவாயிருகேன்னு கேட்டதுக்கு.. அந்தஊர்ல விதியிருக்க நம்ம என்னப்பண்றதுன்னு உங்கய்யன் சொன்னாரு.இருக்கற எடத்துல இருக்கவங்கதான் நம்ம மனுசங்க,”என்றார்.

தெற்குபக்கச்சுவரில் சாய்ந்து கால்நீட்டியிருந்த ரெங்காயி அப்பாயி, “இந்தக்கேணிக்குக்கு ஒரு மானக்கதயிருக்குள்ள,”என்றுத் துவங்கி எதிராளிகளின் கவனத்திற்காக நிறுத்தி பின்தொடர்ந்தாள்.

“மேற்காலவூட்லதான் முதல்ல குடிதண்ணிக்கேணி வெட்டுனாங்க.அந்தக் கிழவி தண்ணியெடுக்க வரவுங்கள ஏசிட்டே இருப்பா.ஒருநா சண்ட முத்திப்போயி தான் பொதுவுல கெணறு வேணுன்னு வெட்டினது.சந்தானம்ஆசாரியார்தான் பொறுப்பெடுத்து நின்னாரு.அப்பெல்லாம் அவுங்க அம்புட்டு சம்பத்துள்ள ஆளுக,”

மாணிக்கம்,“இன்னைக்கும்தான்,”என்று பெருமூச்சுவிட்டார்.பேச்சு கலைந்து பரவத்தொடங்கியது.

“நம்மூருல பொம்பள விழுந்து செத்து தண்ணிய எறச்சி காலிபண்ணின கேணின்னு இல்லாதது இதுமட்டுந்தான்,”

“சுத்துசுவரு எடுத்த பின்னாடி இங்கன வச்சிதான் ராமயணமகாபாரத கத சொல்றது.தெய்வங்காக்கற கேணி.பாழடஞ்சிப்போயிடும் போலயே..”

“நம்மளால என்ன பண்ணமுடியும் பொதுசொத்து,”

“ஐஞ்சாறுவருஷத்துக்குமுன்ன ஊருக்குள்ள தண்ணியில்லாதப்ப பயலுவலா சேந்து மண்ணிழுத்து தூர்வாரி எடுத்தானுங்க.நமக்கு தண்ணி வேணுங்கறப்ப செய்யமுடிஞ்சுதில்ல,”

“அன்னிக்கு தூர்வாரி எறச்சோம்.கைவேல செய்யறதுன்னா யாரு செய்யலங்கறா.இன்னிக்கி தண்ணி தெளிஞ்சு நிக்குது.மனுஷருக்கு எறைக்க முடியல.மோட்ருக்கு காசு போடனுமில்ல,”

பாட்டா, “புலக்காரத்துல இல்லாத நகைநட்டை பெட்டியில போட்டு பூட்டி வைக்கனும்ய்யா.திருத்தமா இருக்கான்னு பாத்துக்கிடனும்.அத செய்யாம நமக்கு வேணுங்கறன்னிக்கி நகை அதுவா குதிச்சு வருமா?”என்று மூச்சுவாங்கியபடி பேசிவிட்டு மெதுவாக காலெடுத்து வைத்து நடந்தார்.

“விடும்..போதும்,”என்ற குரல் பேச்சின் திசையை மாற்றியது.கிணற்றின் கதைகளுடன் கும்பலும் கலைந்தது.லட்சுமிஅம்மாவின் திடீர் மரணத்துடன் கிணறும் அங்கிருந்தவர்களின் மனதை சுற்றிக்கொண்டு பேசும் பேச்சிலிருந்தது.

அன்று கார்த்திகை தீபம்.பின்வீட்டம்மா கேணியின் வடமேற்கு மூலையில் ஒருஅகலை வைத்துவிட்டு சென்றாள்.மோட்டார் சுவரின் சிறுமறைவில் சுடர் அசையாமல் நின்றிருந்தது.

கையில்அகலுடன் வந்த இளம்பெண் தான் நின்ற இடத்தை குனிந்து பார்த்தாள்.ஒருகை சுடரை காற்றிடமிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்தது. சிட்டுக்குருவிகளின் குளம் இருந்த இடம் என்ற எண்ணம் அவள் மனதில் எழுந்தது .காலுன்றி நின்று இறைப்பதற்கான பள்ளங்கள் அவை.அதில் சிட்டுகள் முழுகி தலையை உதறி விருட்டெனப் பறக்கும்.தானும் சிட்டாய் பிறந்திருக்கக் கூடாதா என்று தினமும் நினைப்பாள்.

இருளில் ஒருஅசைவு தெரியவும் திடுக்கிட்டுப் பார்த்தாள்.சுப்பன்ஆசாரி மோட்டார் அறையிலிருந்து நிமிர்ந்து அமர்ந்தார்.கலைந்த தாடிதலைமுடியுடன் கைலியை விடாமல் ஒருகையால் பிடித்துக்கொண்டு அலைபாயும் விழிகளுடன் அவளைப் பார்த்து சிரித்தார்.அவள் அகலை சுற்றுசுவரின் மீது வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று பொறிக்கடலையை சிறுபையில் எடுத்து வந்து தந்தாள்.

வாங்கிக்கொண்டவர், “தாத்தன் கேணி..”என்று நெஞ்சில் கைவைத்துக் காட்டினார்.முழுநிலவின் ஔியில் காற்றில் பறந்துக்கொண்டிருந்த அவரின் முடிக்கற்றைகளும்,விரிந்த கண்களும்,முகமும் சோபை கொண்டன.

அவளும், “ஆமா மாமா….தாத்தா கிணறு,”என்று தேய்ந்த சுற்றுசுவரை தொட்டுக்காட்டினாள்.இரண்டுபேரும் கிணற்றை எட்டிப்பார்த்தார்கள்.அவர் தலையை சாய்த்து வாய்விட்டு சிரித்தார்.உள்ளே கரியநீர் மினுமினுத்துக் கிடந்தது.

உயிர்(ப்) போர் – பானுமதி சிறுகதை

இன்று நான் அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன்.இளங்கலை மருத்துவம் பயின்ற அதே இடம்.படிப்பை முடித்து கிராமத்தில் மூன்று வருடங்கள் பணியாற்றி, யு.எஸ்ஸில் முதுகலை அறுவை சிகிச்சைப் படிப்பும்,’மல்டிபிள் ஸ்க்ளீரோஸ்’ பற்றியும் ஆராய்ந்து, அதற்கான டாக்டரேட் பெற்று அங்கேயே பணியாற்றும் நான் சென்னைக்கு ஒரு மாநாட்டின் பொருட்டு வந்திருக்கிறேன்.உலக மருத்துவர்கள் கூடி முக்கியமாக நரம்புச் சிதைவு, வெண்படலம் எனப் பொதுவாக அறியப்படும் நோய்கள் குறித்து விரிவாக விவாதித்தோம்; கருத்தரங்கங்கள் நான்கு நாட்களாக நடைபெற்று நேற்று மாலையுடன் முடிவடைந்தன. என் மரியாதைக்குரிய மருத்துவர் எம் கே எஸ் அவர்களைச் சந்திக்க இப்போது போய்க்கொண்டிருக்கிறேன். நான் சென்னைக்கு மாநாட்டிற்கு வரப்போவதாகவும், அவரை மாநாடு முடிந்த பிறகு சந்திப்பதாகவும் சொன்ன போது’கடவுள் நம் விருப்பங்களை எப்படியோ நிறைவேற்றுகிறார்’ என்றார்.ஆம், நான் அவரது அன்பு மாணவி, அவரோ எனக்கு எல்லாமுமாக இருப்பவர்.என் உழைப்பு, வெற்றி, தோல்வி, நான் பட்ட அவமானங்கள்,என் சொந்த வாழ்வில் சந்தித்த வேதனைகள் எல்லாம் அவருக்கு மட்டுமே முழுதாகத் தெரியும்.

விடுதியை விட்டு வெளி வருகையில் சென்னை அதன் பலக் குரல்களுடன் விழித்துக் கொண்டிருந்தது.வைக்கோல் கன்றுக்குட்டியை இடுக்கியபடி இன்னமும் பசுவை ஒருத்தர் ஓட்டிச் சென்றார்.எட்டும் போதெல்லாம் நாவால் சுவரொட்டிகளை அது நக்கிக்கொண்டே சென்றது.வண்ண வண்ணக் குடங்கள் அணிவகுத்து தாகம், தாகம் என்றன.காகங்கள் திடீரென்று ஒன்றாகக் கிளம்பிப் பறந்து, தங்கள் ஒன்றரைக் கண்களால் சூரியனைப் பார்த்து வந்தனம் செய்தன.முக்கிய வேலை இருப்பதைப் போல் நான்கு நாய்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடின.விடுதியின் வாசலில் இருந்த செம்பருத்தி மலர்ந்தும் மலராமல் யோசித்துக் கொண்டிருந்தது.முல்லைக் கொடிகளில் வண்ணத்துப் பூச்சிகள் காத்து நின்றிருந்தன.எதிர் சாரியில் முன்னிருந்த அதே பாழடைந்த வீடு.அதன் சட்டச் சிக்கல்கள் இன்னமும் தீரவில்லை போலிருக்கிறது. முள்வேலியில் கரட்டோணான்உனக்கு இங்கு என்ன வேலை?’ எனக் கேட்பது போல் தலையை நிமிர்த்திப் பார்த்தது.காய்ந்த நத்தைக்கூடுகளையும், எறும்புச் சாரிகளையும் பார்க்கையில் இனம் தெரியா வேதனை வந்து சென்றது.தெருவோர நடைபாதைக் கடைகளில்கௌசல்யா சுப்ரஜா ராமனைஎழுப்பிக் கொண்டிருந்தார்கள்.கோயில் வாசலைக் கடக்கையில் நாகஸ்வரத்தில் பூபாளம் கேட்டது.கதம்ப நினைவுகள், கதம்ப வாசனைகள், என் மண்ணின் மணம் இதை அசை போட்டவாறே நான் மருத்துவ மனையின் நீள் நெடும் பாதையில் சென்று எம் கே எஸ்ஸின் அறைவாயிலைத் தட்டிவிட்டு உள்ளே சென்றேன்.

மருத்துவத்தையே ஒரு தவமாகச் செய்யும் மாமனிதர்.கருணையாலேயே பாதி நோய்களைப் போக்கியவர்.நோயின் மூலக் காரணங்களைக் கண்டறிந்து குணப்படுத்தும் வெகு சிலரில் இவரும் ஒருவர்.ஸ்டெத் இருந்தாலும் கைகளால் நாடி பார்ப்பதை இன்று வரை கடைபிடிப்பவர்.அதிலும், கழுத்துக் குழியிலும், கணுக்கால் மேல் மூட்டிலும் நாடியைப் பரிசோதிப்பார்.இருப்பவரிடம் அதிகம் பெற்று இல்லாதவர்க்கு இலவச மருத்துவம் பார்க்கும் நவீன ராபின் ஹூட்.எப்போதும் வெள்ளைக் காற்சட்டை, மேல்சட்டை,மருத்துவர் அணியும் வெள்ளை மேலங்கி, தும்பையென வெளுத்த தலை இவ்வளவுதான் அவர்.

வா, வா விரூபாக்ஷி.எப்படி இருக்கிறாய்?உன் அடுத்த கட்ட ஆய்வு எந்த நிலையில் இருக்கிறது?”

நான் அவரைக் கீழே விழுந்து வணங்கினேன்.பொது விஷயங்கள் பேசிய பிறகு அவர் என்னைப் பார்க்க விரும்பிய காரணத்தைச் சொல்வதற்கு முன்னால் ஒரு காணொலிக் காட்சியைப் பார்க்கச் சொன்னார்.

இனிய ஹம்மிங்குடன் அந்தக்காட்சி துவங்கியது.சில வினாடிகளில் இராக ஆலாபனையாக மாறியது. ‘மோக்ஷமு கலதாஎன்று அந்தப் பெண் குரல் கெஞ்சிக் கொஞ்சியது. சாரமதி சிறு மகவெனப் பிறந்து,சிரித்து, நான்கு கால்களால் தவழ்ந்து,திடுமென எழுந்து நின்று சிறு அடிகள் நடந்து, ஒரே பாய்ச்சலில் விரைந்தோடி,காற்சதங்கைகள் குலுங்க,சிறுமியாய், யுவதியாய்,அமைதியான பெண்ணாய் .., எப்படிச் சொல்ல நான்? பாடுபவளுக்கு 30 வயதிருக்கலாம்.சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். மெலிந்த உடல்,தீர்க்கமான கண்கள்,களையான முகத்திற்கு சோபை சேர்த்த கவலையை நான் பார்த்தேன்.மூன்று வயது குழந்தை ஒன்று அவள் மடியில் ஏற முயற்சிப்பதும்,உடனே வழுக்கி ஓடுவதுமாக இருந்தது.எல்லாவற்றையும் விட அந்தக் குரல், அதன் பாவம், நேர்த்தி, கமகம்,ஸ்தாயீ,ஸ்ருதி,ஆதிக் காலம் தொட்டு அவனை வேண்டிக்கொண்டேயிருந்த அத்தனை உயிர்களின் பிரார்த்தனைகளையும் சேர்த்து மன்றாடும் இசைச் செதுக்கல்கள்.ஆணின் குரல் போன்ற அடர் அடுக்குகளும், பெண்மைக்கே உரித்தான இன் குரலும் எப்படி ஒருமித்தன இக்குரலில்!அழுத்தம், கம்பீரம், இனிமை, துயரம்,ஆற்றாமை, கெஞ்சுதல் என வண்ணக் கோலங்கள் காட்டும் குரல். மிகத் தெளிவான உச்சரிப்பு;உள் மனச் செவியில் ஒலிக்கும் நாதம். நான் இதுவரை இப்படி யார் பாடியும் கேட்டதில்லை.

என் உணர்வுகளை என்னால் அடையாளம் காண முடியவில்லை.கடலில் சறுக்கி விளையாடி,அலைகள் மேல் எழுந்தேன் ஒரு முறை; மறுமுறை அலைகள் என்னை மூழ்கடிக்கக் கீழே விழுந்தேன்.குறுக்குத்துறை குமரன் கோயிலின் குகை வழியில் செல்வது போல் இருந்தது. மலையின் மேல் உள்ள சுனையில் குளிர் நீரில் முழு நிலா குளிப்பதைப் பார்ப்பது போலிருந்தது.யாருமற்ற வனத்தில் உள்ளே பூத்திருக்கும் சௌகந்தியின் வாசம் வந்தது; இல்லையில்லை இது நிஷாகந்தி. சேற்று வயலாடும் மீன்களின் குதூகலம்;கான் அதிர நடந்து மரக்கிளையை ஒடித்து வாய்க்குள் அடக்கும் பிடி. பொற்றாமரைக் குளத்தின் கரையில் வரையப்பட்ட மாக்கோலங்கள், வண்ண வண்ணப் பூச் சொரியும் பூவாணம். நான் சிரமப்பட்டு நீண்ட மூச்சிழுத்து என்னை சுதாரித்துக்கொண்டேன். ஆனால், கண்ணீர் வழிவதை நிறுத்த நினைக்கவில்லை.

காணொலி முடிந்த பின்னும் நானும் அவரும் ஒரு அரை மணி நேரம் ஒன்றும் பேசவில்லை.எங்களுடைய கல்லூரி நாட்களில் வகுப்புகள் முடிந்த பிறகு விருப்பமானவர்களோடு அவர் தென்னிந்தியக் கர்னாடக இராகங்கள்,அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி இவற்றையெல்லாம் பற்றி குறைந்தது இருவது நிமிடங்களாவது பேசுவார். 72 மேளகர்த்தா இராகங்கள் 72 முக்கிய நரம்புகளை உடம்பில் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைச் சொல்வார். வீணை என்பதே நம் முதுகெலும்பும், நரம்புக் கோர்வையும்,உள்ளிருந்து இலங்கும் சக்தியின் புற வடிவம் என்பார்.இசை என்பது கலைகளின் அற்புதம் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.இசை உபாசகரான அவருக்கு இசையின் மேதமை கைவரப் பெற்ற ஒரு பாடகி எம் எஸ் நோயால் அவதியுறுவதைப் பொறுக்க முடியாமல்தான் என்னிடம் பேச நினைத்திருக்கிறார். நான் அந்தத் துறையில் உலகளவில் பேர் சொல்லும் ஒரு பெண்; அவருடைய மாணவியாக நான் எப்போதுமே பெருமைப்பட்டிருக்கிறேன்.

இவ பேரு சந்தோஷி.நகை முரணான பேர்ன்னு தோண்றதா?.அவளுக்கு மல்டிபிள் ஸ்க்ளீரோஸ் மிகத் தீவிரமாக இருக்கு. எப்போ ஆரம்பிச்சிதுன்னு அவளுக்குத் தெரியல்ல.என் பரிசோதனை,அனுபவம் இதெல்லம் வச்சுப் பாத்தா ஆறேழு வருஷத்துக்கு மேல ஆயிருக்கும்.அவா ஊர்ல எம் எஸ்ஸைப் பத்தித் தெரிஞ்ச டாக்டர்கள் இல்ல போலிருக்கு. இப்போ அட்வான்ஸ்ட் ஸ்டேஜ்.இவ படிச்சவ.கல்யாணத்துக்கு அப்றமும் வேல பாத்திருக்கா.ஒரு கொழந்த இருக்கு.ஆறேழு வருஷமா ஏகமா செலவு பண்ணிருக்கா. வேலைக்கும் போக முடியல்ல; வருமானமும் கொறஞ்சுடுத்து. இப்ப செலவத் தாள முடியல அவ குடும்பத்தால.ஹஸ்பென்ட் நல்லவன்தான்.ஐ டில இருந்திருக்கான். போறாக்குறைக்கு ஆள் குறப்ல அவன் வேல போய்டுத்து”

மிதமான வேகத்தில் வரும் கடலலைகள் சுனாமியின் போது கொள்ளும் பேயுரு என் முன் எழுந்தது.என்ன சொல்வதென்று தெரியவில்லை.

இப்ப டபிள் விஷனாய்டுத்து இவளுக்கு. வெளிச்சமே இடஞ்சலாயிருக்கு.முழங்காலுக்குக் கீழ உணர்ச்சியில்ல.பசி அமோகமாயிருக்கு.”

சின்ன வயசு. நாபிலேந்து ப்ராண சக்திய எழுப்பிக் கரஞ்சு கரஞ்சு பாட்றா.இப்ப என்ன ட்ரீட்மென்ட்ல இருக்கா?’

ஸ்டெராய்ட். ஆனா, அதைத் தொடரப் படாதே; அப்பப்ப மரிஜ்வானா கொடுக்கறோம்.ஓரல் மெடிகேஷன் வேறெதுவும் செல்லுபடியாயில்ல. நீ இந்த ஃபைலப் பாரு. நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன்.”

சாக்ஷாத் காரணி சத் பக்தி, சங்கீத ஞான விஹினிலுகு’ என்னை அந்தப் பாட்டின் அனுபல்லவி சுற்றிச்சுற்றி வந்தது.பிரணவ மந்திரமான ‘ஓம்’அதிலிருந்து பிரவகித்த சப்த ஸ்வரங்கள்ச ரி க ம ப நி.உயிர் காற்றும் அனலும் இயைந்துஓமி’ன் அதிர்வலைகளைக் கொணரும் இசை.அவள் பாவத்தில் பக்தி இருந்தது, நாதத்தில் அவள் ஜீவன். அவளுக்கு எம் எஸ் அதுவும் மிகக் கடுமையாக! அந்த நாத பிந்துக்கள் இவளின் குரல் மூலம் அத்தனை உயிர்களின் குருதியிலும் கலக்கும் வல்லமை பெற்றவை.இன்றோடு முடியப் போகும் இசை அல்ல இவளுடையது.இதை இன்று பதிவேற்றிவிடலாம்;ஆனால், அவள் இசையில் நாளை செய்யப் போகும் மாயங்களை எப்படிப் பதிவு செய்வது? அவள் பிழைக்க வேண்டும், எப்படியாவது.எப்படிச் செய்யப் போகிறோம் இதை?எம். கே.எஸ் இதில் என்னை மிகவும் முக்கிய இடத்தில் வைத்திருக்கிறார். நான் என்ன செய்யப் போகிறேன்?

கல்லூரியில் முதல் வருடத்தில்ராகிங்போது பயந்து ஊருக்குத் திரும்பிவிட்டேன்.இவர் வீட்டிற்கே வந்துவிட்டார்.’நல்ல மூளைய வீணாக்குவாளா?’ என்ற அவரது கேள்வி எனக்கு நம்பிக்கை தந்தது.துணிச்சலுடன் எதையும் எதிர் கொள்வது அவர் பயிற்றுவித்ததுதான். மூன்றாம் ஆண்டு படிக்கையில் என் தந்தை ஒரு விபத்தில் இறந்து போனார்.பொருளாதாரச் சிக்கல்;படிப்பை நிறுத்த வேண்டிய சூழல்.இத்தனைக்கும் அரசுக் கல்லூரிதான். விடுதிக்கும், மெஸ்ஸிற்கும்,உபகரணங்களுக்கும் செலவு செய்ய முடியவில்லை.அப்போதும் நான் வாய்விட்டுச் சொல்லாமலே என்னைப் புரந்தவர் இவர். எல்லாவற்றிற்கும் மேலாக இன்னமும் நினைவில் நடுங்கச் செய்யும் அந்த நள்ளிரவு. அன்று சொந்த ஊருக்குப் போய் திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் பேருந்து இயந்திரக் கோளாறால் நின்றுவிட்டது.அவர்கள் அதைச் சரி செய்து சென்னைக்கு வந்து சேர இரவு பன்னிரண்டு ஆகிவிட்டது.விடுதியை நெருங்கும் போது எங்கிருந்து வந்தார்களோ இருவர் என்னைச் சுற்றி வளைத்தனர். ஒருவன் இடுப்பிலும், மற்றவன் தோளிலும் அழுத்தமாகக் கைகளை வைத்தார்கள்.நான் திமிறிக் கதறுகையில்சர்ப்ரைஸ் ரவுன்ட்முடிந்து திரும்பிக் கொண்டிருந்த எம். கே எஸ் பதறிக் கொண்டு விரைந்து ஓடி வந்தார். பாஞ்சாலியைக் காத்த கண்ணன்.அவர் எழுப்பிய சத்தத்தில்அந்தக் கயவர்கள் ஓடி விட்டனர்.ஒரு அப்பாவைப் போல் என்னைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற உத்தமர்.’ஒரு ஃபோன் பண்ணிட்டு வரமாட்ட நீ, அசட்டுப் பெண்ணேஎன்றார்.’யார்ட்டயும் சொல்லக் கூடாது. மறந்துடணும், என்ன?’ என்றார்.

நல்ல நிலைக்கு வந்த பிறகு நான் பணத்தைத் திருப்பிக் கொடுக்கையில் இவர் சொன்னது இதுதான்பணத்தை யாராவது ஏழயோடப் படிப்புக்குக் கொடு.

இவர் மட்டும் இல்லையெனில் என் வாழ்வு என்னவாகியிருக்கும்?இவருக்குப் பட்ட நன்றிக்கடனை நான் எப்படித் தீர்க்கப் போகிறேன்? பணத்தால் அதை ஈடு செய்ய முடியுமா?

அவருடன் நான் அவளிருக்கும் தளத்திற்கு நடந்து செல்கையில்குறையொன்றுமில்லைஎன்று பாடிக்கொண்டிருந்தாள்.அவள் நிலையில் இந்தப் பாடல் சங்கீத லஹரியாக என்னுள் பிரவகித்தது.அந்தப் பாடல் முடிவடையும் வரை உள்ளே போக வேண்டாம் என்று அறை வாயிலிலேயே நின்றோம். உள்ளே சிறு ஜோதியின் வெளிச்சம் மட்டுமிருந்ததே,அந்த இருட்டிற்குக் கண்கள் பழகிய பிறகுதான் தெரிந்தது.

சந்தோஷி, இவ பெரிய டாக்டர். விரூபாக்ஷின்னு பேரு.உன்னப் பத்தி சொல்லிருக்கேன்.அவ கிட்ட மனம்விட்டுப் பேசு. நான் நாளைக்கி வரேன்.

அவள் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள்.பிறகுமேம், என் பிரச்சனை என்னன்னு தெரியுமில்லையா?’ என்றாள்.

தெரியும். டாக்டர் எல்லாம் சொன்னார்.”

என்னதான் ஆயிண்டு இருக்கு உள்ள? என்னக் கொல்லப் போறதா?’

இதென்ன பேச்சு?உனக்கு நோய் எதிர்ப்பு கொறஞ்சிருக்கு.அது நரம்பு மண்டலத்த பாதிச்சிருக்கு. குறிப்பா,நரம்புகளைப் போத்திக் காக்கற நரம்புக் கொழுப்ப அழிச்சு நரம்பு நார்கள வீங்க வச்சிருக்கு. இதுக்கெல்லாம் நல்ல மருந்து நிறைய வந்தாச்சு. நீ பயப்படவே வேணாம்

நான் கஷ்டப்பட்டுண்டு,குடும்பத்தக் கவனிக்காம,பாரமாத்தான் இருக்கணுமா?’

அப்படின்னு யார் சொன்னா? உனக்குப் பூரணமா குணமாகும். நம்பிக்கைதான் வேணும்.உன்னப் பத்திச் செல்லு

நான் நன்னாத்தானிருந்தேன்.கல்யாணம் ஆன புதுசில பாடல;அது அவாளுக்கெல்லாம் அவ்வளவா புடிக்கல்லேன்னு புரிஞ்சுண்டு நானாத்தான் நிறுத்தினேன்.கட்டுப்பாடுன்னு சொல்ல முடியாது. ஏதோ புரிஞ்சுக்காம நடந்த வின அது. எங்கள்து லவ் மேரேஜ். எல்லாம் நன்னாத்தான் இருந்தது. தனியா இருக்கறச்சே பாடுவேன், குளிக்கறச்சப் பாடுவேன்.ஆஃபீஸ் ஃபங்க்ஷன்ல பாடுவேன்.அப்றமா வீட்லயும் பாட ஒத்துண்டாங்க.

ஒரு நா ஸ்கூட்டில வீட்டுக்குத் திரும்பி வரச்சே, ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். காயமெல்லாம் பெரிசாயில்ல, வீக்கமில்ல; உள்ள என்னமோ ஆயிருக்கணும்.ஆனா, அப்றமா, தல வலிக்க ஆரம்பிச்சுது,திடீர்ன்னு கண்ணு மங்கலாகும்,அப்றம் எல்லாம் பளிச்சுன்னு இருக்கும்.நடக்கறச்சே தரை சில சமயம் கால்லேந்து நழுவற மாரித் தோணும்.என்னென்னவோ டெஸ்ட் எடுத்தா,ஊசியும், மருந்துமா ஆச்சு. ஒரு நா காலைல ஏந்துக்கப் பாத்தேன் படுக்கைலேந்து. பாதம் ஊணல,சுரண அத்துப் போச்சு.எங்கெங்கோ அலஞ்சு இவரக் கண்டுபிடிச்சோம்.ஆனாலும், இப்ப என் நில எனக்கே மோசம்னு தோன்றது.’

அப்படியெல்லாம் நெனைக்காதே.எம் கே எஸ் மாரி திறமையான டாக்டர்ஸ் அபூர்வம்.உன்ன சரி பண்ணிடலாம்.டயர்டா இருக்கா?தூங்கு. சிஸ்டர் ,பெட்டை சரி பண்ணி இவங்களப் படுக்க வைங்க

அவளுக்கு நம்பிக்கை கொடுத்திருந்தாலும் எனக்கு அவள் நிலை கவலைக்கிடமாகத்தான் இருந்தது.இங்கே சென்னையில் வைத்து என்ன அட்வான்ஸ்ட் ட்ரீட்மென்ட் தர முடியும்?நான் யு.எஸ்ஸிற்கு அவளை என் செலவில் அழைத்துச் செல்லலாம்,ஆனால், மருத்துவச் செலவுகள்,அதற்கென்ன செய்வது?அவளும், குடும்பமும் இதற்கு ஒப்புவார்களா?ஒருக்கால் அவளுக்கு பெரிய அபாயம் ஏற்பட்டுவிட்டால்,சட்டம் என்னை எந்த விதத்தில் பாதிக்கும் அல்லது பாதுகாக்கும்?இங்கே இவர்கள் செய்யும் அதே மருத்துவத்தைத் தொடர்வதற்காக எம் கே எஸ் என்னைப் பார்க்க நினைத்திருக்க மாட்டார்.அப்படியென்றால் என்ன என்னிடம் எதிர்பார்க்கிறார்?

அவர் மற்ற நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது அவளது மொத்த மருத்துவ வரலாற்றைப் படித்து குறிப்புகள் எடுத்தேன்.”சாப்பிடப் போகலாம் வாஎன்று அவர் அழைத்தவுடன் நாங்கள் வெளியே போய் சாப்பிடப் போகிறோம் என்று நினைக்கவில்லை. எங்கள் வளாகத்தில் உள்ள உணவுவிடுதியைத் தவிர்த்துவிட்டு அவர் நகரின் புகழ் பெற்ற உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்.

சந்தோஷிக்கு சி சி ஆர் 5 என்ற மரபணு இல்லை அல்லது இப்போது செயலற்றுப் போய்விட்டது.” என்றார்

ஒரு கணம் நான் திணறிப் போனேன்.டி என் வை எவ்வளவு ஊன்றிப் படித்து அதை நினைவிலும் வைத்திருக்கிறார் இவர்!

சரிதானா, டாக்டர்?” என்றார் சிரித்துக்கொண்டே.

ஜீன் எடிடிங் இங்கு உண்டா, சார்?’என்றேன்

அது அவள் இருக்கும் நிலைக்கு இப்ப ஒத்து வருமான்னு தெரியல. அது இங்கே இன்னமுமில்லை

அப்படின்னாஎன்ன செய்யலாம்?’

நீ தான் சொல்லணும். உன் ஆராய்ச்சிலஎலியிலவெற்றி கடச்சுதுன்னு சொன்னியே?”

டாக்டர்.. அது அது..’

தெரியும்.அது மனுஷங்களுக்கு இன்னமும் செய்யப்படல்ல.ஆனா, உயிர் ஆபத்து இல்லாத முற தான அது

ஆமா,சார்.ஆனா ப்ளாஸ்மா மாத்தறதுங்கறதோட ஜீன் எடிட் செய்ய நேர்ந்தாலும் நேரலாம்; அதை இரகசியமாச் செய்யறதுல ஆபத்து இருக்கே

தெரியும் விரூ.இந்த ஜீனியஸ்ஸ, அவ இறுதிய நெருங்கிண்டு இருக்கான்னு தெரிஞ்சப்றம் எனக்கு இதுதான் வழின்னு தோணித்து

நான் மலைத்துப் போனேன்.ப்ளாஸ்மாவை அவள் குருதியிலிருந்து நீக்கி புது ப்ளாஸ்மாவைச் செலுத்துவது, தேவையென்றால் சிசிஆர்5 எடிட் செய்வது,அதுவும் மனித இனத்திற்கு இப்போது சாத்தியமாக்கக் கூடிய முறையில் சட்டங்கள் இல்லை. ப்ளாஸ்மா மாற்றுதல் சட்டப்பூர்வமானதுதான் ஆனால், மரபணு அமைத்தல், களைதல் வழி முறை, முழுதும் உறுதியான வழிமுறை இருக்கிறது. சட்டம் ஒத்துக்கொள்ளவில்லையே?அவள் பாடல் ஜீவனோடும், லயத்தோடும் உலகின் அத்தனை அரங்குகளிலும் ஒலிக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றது.

ஆனா, டாக்டர்..’

அவகிட்ட இதைப் புரிய வைக்க முடியும்;அவ ஹஸ்பென்ட ஒத்துக்க வைக்க முடியும்.பாட்றதுக்கு அவளுக்கு வாய்ப்பு தரதாச் சொன்ன பல சபாக்காராளும், திரையிசைக்காராளும் அவளுக்காககிரவுட் ஃபன்டிங்செஞ்சு பணம் கொடுக்கறா.அவ விமானப் பயணச் செலவு என்னோடது.தங்கறத்துக்கும், ட்ரீட்மென்டுக்கும் இந்த ஃபன்ட்ல எடுத்துக்கலாம்.போறாத்துக்கு நீ கொஞ்சம் போடு.”

டாக்டர்…’ நான் தழுதழுத்தேன்.ஒரு பெண்ணிற்காக, அவளின் இசைக்காக மனித நேயம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.நான் நேரில் பார்த்திராத அத்தனை மனிதர்களையும் ஆரத் தழுவிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.இத்தனை யோசனையுடன் அனைத்தையும் செய்திருக்கும் இந்த மாமனிதரின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒத்திக்கொண்டேன்.

உன்னால முடியும் விரூ. யாருக்கும் என்ன மருத்துவம்னு தெரியாது.அத இரகசியமா வச்சுப்போம். உன் அஸிஸ்டென்ட்ஸ் உன்னக் காட்டிக் கொடுக்க மாட்டாங்க இல்லயா? இவ குடும்பத்துக்கு மட்டும் விளக்கிச் சொல்லிடுவோம்.என்ன சொல்ற?”

நான் நினைத்தேன்இதில் நான் பிடிபட்டால் என்ன ஆகிவிடும்? நான் தொடர்ந்து மருத்துவராக இருக்க முடியாது. ஒருக்கால் சந்தோஷி வேறு காரணங்களுக்காக இறந்து போனாலும் நான் குற்றம் சாட்டப்பட்டு சிறை செல்ல நேரிடலாம்.ஆனால், என் மருத்துவம்,மூல இசையைக் காப்பாற்றுமானால், சந்தோஷியின் இசை உலகின் அரங்குகளிலெல்லாம் ஒலிக்குமானால், இதைச் செய்வதில் எனக்கு என்ன குறை?அப்படியே ஒன்று நேர்ந்தாலும் அது நான் என் குருவிற்குச் செலுத்தும் காணிக்கைதானே?

வானம் துடைத்து விட்டதைப் போல் தெளிவாக இருந்தது.தன் குழந்தையையே விமானத்தில் ஏறும் வரை பார்த்துக்கொண்டிருந்தாள்.அவளுக்காகச் சிறப்பு இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவள் கைகளைப் பற்றித் தட்டிக் கொடுத்தேன்.

பாஸ்டனில் அதிகாலையில் தென்பட்ட வானத்தைப் பார்க்கையில்நீல வானம் தனில் ஒளி வீசும் முழு மதியோ உன் முகமே?’ என்று ஊத்துக்காட்டின் பாடலை அதி அற்புதமாகப் பாடினாள்.மாலையில் தோட்டத்தில் இருக்கையில்தூய தாமரைக் கண்களும்என்ற ஆழ்வார் பாசுரம் தோடியில்.ஆஹீர் பைரவி, யமன் கல்யாணி, மால்கோஷ்,சங்கராபரணம், பஹாட், சாரங்கா, கேதார கௌளை, சஹானா,சிவரஞ்சனி,மஹதி,கீரவாணி,அமிர்த வர்ஷினி அவள் பாடாத இராகம் இல்லை.அதைக் கேட்டு கண்ணீர் சிந்தாமல் என் உதவியாளர்களும் இருந்ததில்லை.

முதல் வாரம் அவளை வெளிச்சம் குறைவான அறையில் வைத்துப் பரிசோதித்தோம்.அவளுக்கு வயதிற்குத் தகுந்த தெம்பில்லை.பாடும் நேரம் தவிர்த்து அவள் தனக்குள்ளேயே தலைவலியாலும்,டபிள் விஷனாலும் சுருங்கிக் கொண்டாள்.வீட்டைப் பற்றிய ஏக்கமும் இருந்தது.என் உதவியாளர் சில்வியா சென்னையில் அவள் கணவனுடன் பேசி அவன் குரலையும்,குழந்தையின் குரலையும் பதிவு செய்து உடனே சந்தோஷிக்குப் போட்டுக்காட்டினாள்;அவள் நிலையில் முன்னேற்றம் சிறிது வந்தது. தினமும் பேச ஏற்பாடுகள் செய்தோம்;அவளுக்கு செல் திரையோ, ஸ்கைப்போ ஒத்துவரவில்லை.

முதலில் ப்ளாஸ்மாவை மாற்றிப்பார்க்கலாம் என்று தீர்மானித்தோம்.அவளை அமைதிப்படுத்துவது என்பது மிகச் சவாலாக இருந்தது.உறக்கமே இல்லாமல் படுத்துக்கிடந்தாள்;லாரன்ஸ் கேட்டான்

உங்கள் இசையில் உறங்க வைக்க ஒன்றுமில்லையா?” அவன் கையைப் பற்றிக் குலுக்கினேன்.’மணி நூபுர தாரி, ராஜ கோபாலாஎன்ற நீலாம்பரி கீர்த்தனை என் நினைவில் வந்தது.அவளையே பாட வைத்து,அவளைக்கேட்க வைத்து தூங்கச் செய்தோம்.

மேத்யூ,ப்ளாஸ்மா சவ்வில் புரதம் அவளுக்கு எதிராகச் செயல்படுகிறது; நல்ல புரதங்களை எதிர்த்து அவளது செல்களை அவைகளே அழித்து வருகின்றன.நம்மிடம் அவள் உடலில் செலுத்தத்தக்க ப்ளாஸ்மா இருக்கிறது;இவள் நாலு மணி நேரம் இதைத்தாங்குவாளா என்பதுதான் கேள்வி

விரூ,பிரித்துப் பண்ணலாம்;பார்க்கலாம்; நம்பிக்கையோடு இருப்போம்

இரு கைகளிலும் ஊசி பொருத்தப்பட்டு அவள் உடலிலிருந்து இரத்தம் ஒரு ஊசி வழியாக மெஷினுக்குச் சென்று அலசி பிரிக்கப்பட்டு மறு ஊசிவழியாக அவள் உடலுக்குள் செல்ல வேண்டும்.அன்று ஒரு மணி நேரம் மட்டும் அதைச் செய்வதாக இருந்தோம்;ஆனால், அரை மணிக்குள்ளாகவேஅலாரம்அடித்தது.அவள் உடலிலிருந்து சென்ற இரத்தம் மெஷினில் உறையத் தொடங்கியது.அவளுடைய இரத்த அழுத்தம் மிக மிகக் குறைந்தது.ப்ளாஸ்மா மாற்றுவதை அப்படியே நிறுத்தி அவள் க்ரூப்ரத்தத்தை நேரடியாக உள்ளே செலுத்தினோம்.;பிழைத்துக்கொண்டாள்.

மறு நாள் மேத்யூவிரூ, உடனே வாஎனப் பதறினான்.

அவள் குருதியில் இரத்தத்தட்டுக்கள் குறைந்து அலர்ஜி ஏற்பட்டு உடலெங்கும் வட்ட வட்ட பளப்பள கொப்புளங்களாகத் தெரிந்தது.மீண்டும் ஸ்டெராய்ட்கள்.

நாங்கள் நால்வரும் குழம்பினோம்;ப்ளாஸ்மா மாற்ற நிலையை இவள் எம் எஸ் தாண்டிவிட்டது எனப் புரிந்தது.ஒரு வழிதான் இருக்கிறது;துணிந்து செய்ய வேண்டியதுதான்.

கிரிஸ்பர் செயல்முறையில் புது நுணுக்கம் என்ற சோதனை என்று சொன்னோம் அரசிடம். மனிதர்கள் மேல் இந்த சோதனை இல்லை எனவும் சொன்னோம்.அனுமதி கிடைத்தவுடன் சி சி ஆர் ஐய்ந்தை எடிட் செய்தேன்;அனைத்தையும் நானே, நான் மட்டுமே, பிறர் அறியாமல் செய்ததாகக் கோப்புகள் ஏற்படுத்தினேன்.அவள் உடலுக்குள் இனி போர் இல்லை.

ஆறு மாதங்கள் கழித்து அவள் ஊர் திரும்புகிறாள். சக்கர நாற்காலியில் வந்தவள் தன் கால்களால் நடந்து சென்னைக்குச் செல்லும் விமானத்தில் ஏறினாள்.மிகுந்த மகிழ்ச்சியுடன் என் மருத்துவ ஆய்வகம் திரும்பினேன். அங்கே *எஃப் டி வின், சி பி ஆர் பிரிவு ஆட்கள் என் உதவியாளர் லாரன்சைக் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

எந்தரோ மஹானு பாவுலு அந்தரிக்கி வந்தனமுஎன்று சந்தோஷியின் ஸ்ரீ இராகம் காதுகளில் ஒலித்தது.

*(FDA- Food and Drug Authority.CBER- Center for Biologics Evaluation and Research)

இரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே – எஸ்.ஜெயஸ்ரீ

தமிழில் சிறுகதை, நாவல் வடிவங்கள் பரவலாக வெளிவருவது போல் நாடகங்கள் வருவதேயில்லை. நண்பரும், எழுத்தாளருமான பாவண்ணன் தொடர்பு கிடைத்த பிறகே, அவரது மொழி பெயர்ப்பில் கிரீஷ் கர்னாட் அவர்களுடைய நாடகங்களை கன்னடத்திலிருந்து தமிழுக்கு அவர் கொடையளித்திருப்பது தெரிந்து வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அக்கினியும் மழையும், பலிபீடம், நாகமண்டலம் எல்லாம் அப்படி வாசித்ததுதான். பாவண்ணன் இது வரை அவருடைய எட்டு நாடகங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார். சமீபத்தில் வெளி வந்திருப்பது அவருடைய இரண்டு நாடகங்கள். அவை “சிதைந்த பிம்பங்கள்” மற்றும் ”அஞ்சும் மல்லிகை” ஆகியவை.
.. இரண்டு நாடகங்களுமே, மனப் பிறழ்வு சார்ந்த நிகழ்வுகளே. சிலர் மட்டுமே மனப் பிறழ்வு நோய்க்கு ஆட்பட்டவர்கள் என்று இனம் கண்டு கொள்ளப்படுகிறார்கள். அவர்களுடைய நடை, உடை, பாவனைகளில் தெரியும் மாற்றங்கள் அவர்களை வெளியுலகுக்கு அப்படி அடையாளம் காட்டி விடுகிறது. இவைகள் வெளி விகாரங்கள் மட்டுமே. வெளிப்படையாக எந்த வித அடையாளங்களும் இல்லாமல், மன விகாரங்களுடன், மனமும், புத்தியும் வக்கிரமாக சிந்திக்கக் கூடியவர்களுமாக இருக்கிறார்கள் பலர்.
. படிக்கும் படிப்போ, வாங்கும் பட்டங்களோ, பரிசுகளோ என்று எதற்குமே சம்பந்தமே இல்லாமல், மனதில் அழுக்குகளைச் சுமந்து திரிபவர்களாக, அந்த அழுக்குகளை சமயம் வாய்க்கும்போது, எல்லா இடங்களிலும் பரப்பி, தன்னை நிலை நாட்டிக் கொண்ட தவறான புரிதல் கொண்டு மகிழ்கிறார்கள். இந்த விதமான மனிதர்கள் உண்மையிலேயே பரிதாபத்திற்குரியவர்கள். இரண்டிலும் அடிப்படையில் பெற்றோரை லேசாகக் கோடிட்டுக் காண்பிக்கிறது. அதை நாம் நாடகங்களை கூர்ந்து வாசிக்கும்போது கவனிக்கக் கிடைக்கிறது
—————
”சிதைந்த பிம்பம்” நாடகம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி வழியாகத் தொடங்குகிறது,. திருமதி மஞ்சுளா நாயக் ஒரு ஆங்கில நாவலுக்காக விருது வாங்கியிருக்கிறார், அவரது பேட்டியும், அதைத் தொடர்ந்து, அந்த நாவலின் தொலைக்காட்சிப் படமும் ஒளிபரப்பபபடும் என்பதாக ஆரம்பிக்கிறது நாடகம்.நாவலாசிரியரைப் பேட்டி எடுக்கிறார்கள். அவரும், நாவல் உருவான விதம், அதன் பாத்திரங்கள் பற்றியெல்லாம் பதிலளிக்கிறார். முடிக்கும்போது, தன்னை கன்னட எழுத்துலகம் பாராட்டாமல், பழிக்கிறது என்று சொல்லி முடிக்கிறார். அப்போதுதான் உண்மையிலேயே நாடகம் தொடங்குகிறது.
அவளுடைய மனசாட்சி பேச ஆரம்பிக்கிறது. ”உருவம்” என்ற பாத்திரமாக அது மஞ்சுளாவோடு உரையாடுகிறது. உரையாடும்போதுதான் கதையின் உண்மையான மனித முகங்கள் வெளிப்படுகிறது. மஞ்சுளாவுக்குத் தங்கை மாலினி. அவளுக்கு இடுப்புக்குக் கீழே செயலில்லை. எனவே, அவள் மேல் பெற்றோருக்கு அளவு கடந்த பாசம். இளமையில் அவளுக்கே நிறைய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். பெற்றோர் இறந்தவுடன் அவளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அக்காவாகிய மஞ்சுளாவின் தலையில் விழுகிறது. மஞ்சுளாவுக்குத் திருமணமும் ஆகி விட்டது தங்கையைத் தன்னோடு அழைத்து வந்து விடுகிறாள். அவள் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாள். அவள் கணவன் ப்ரமோத்குமாரை விரும்பித்தான் மணந்திருக்கிறாள். தங்கையை வசதியாகத்தான் பார்த்துக் கொள்கிறாள். அந்தத் தங்கை இறந்து போன இரண்டு வாரங்களுக்குள் இந்த நாவல் வெளி வந்து விடுகிறது. அவள் உருக்கமாக பேட்டி கொடுக்கிறாள்.
ஆனால், உண்மையில் அந்த நாவலே தங்கை மாலினி எழுதியதுதான். தங்கை இடுப்புக்குக் கீழே செயலற்றவளாக இருந்தாலும், ஆங்கிலத்தில் பெரும் புலமை படைத்தவளாக இருக்கிறாளே என்ற பொறாமை அக்காவுக்கு. அதைத் தீர்த்துக் கொள்ள, மாலினி எழுதிய நாவலைத் தன்னுடைய நாவல் என்று பறை சாற்றிக் கொள்கிறாள். அவள் பாவம் என்று கண்ணீர் விட்டது எல்லாம் பொய் என்ற உண்மை வெளிப்படும்போது அவளுடைய பிம்பம் சிதைகிறது.
அந்தத் தங்கை, பெற்றோருக்குப் பிறகு தன்னைத் தாய் போன்று கவனித்துக் கொள்ளும் அக்காவின் கணவரின் மேலேயே தவறான ஆசைப் படுகிறாள். மற்றவர்க்கு முதலில் அவள் மேல் தோன்றும் பரிதாப பிம்பமே சிதைந்து போகிறது.
மஞ்சுளாவின் கணவன் ப்ரமோத் தன் மச்சினிக்குத் தந்தை போன்று இருக்க வேண்டியவனே தவறான எண்ணம் கொண்டு அவளோடு பழகுகிறான். இந்த இடத்தில் ஒரு வசனம் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது. மஞ்சுளாவிடம் உருவம் ப்ரமோத் அவளோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டதில் சிக்கல் இருந்ததா என்று கேட்கும்போது அவள் சொல்லும் பதில்,”அவனுக்கு இடுப்புக்குக் கீழே செயல்படாத தன்மை எதுவும் இல்லையே” என்பது. ஆண்கள்,. பெண்களைத் தங்கள் உடல் சுகத்திற்காக பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை என்பதற்கு ப்ரமோத் போன்ற ஒருவன் ஒரு சிறந்த பாத்திரப்படைப்பு. அவன், மாலினி இறந்த பிறகும், , அவளைக் கவனித்துக் கொள்வதற்காக வந்து கொண்டிருந்த தாதியை வரச் சொல்லலாமே என்று சொல்கிறான் .மஞ்சுளாவுக்குத் தன் காதலைச் சொல்லும்போதே அவளுடைய தோழி லூசிக்கும் காதல் கடிதம் கொடுத்து, அதை அவள் அப்போதே மறுத்தவள்.ஆனால், அவன் மஞ்சுளாவைப் பிரிந்தவுடன், லூசியுடன் போய் ஒட்டி கொள்கிறான். அவன் படித்தவன், ஒரு இளம்பொறியாளர் என்கின்ற பிம்பம் சிதைந்து, அவன் ஒரு பெண். பித்தன்
என்ற பிம்பமே தெரிகிறது.
இப்படி எல்லோரும் வெளியில் ஒரு பிம்பமாகவும், மனதிற்குள் வேறொன்றாகவும் இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்கின்ற கேள்வி எழுகிறது.
மஞ்சுளாவுக்கு சிறு வயதிலிருந்தே, பெற்றோர் தங்கை மேல் அன்பாக இருப்பது மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. மேலும், அவள் உடல் குறைபாட்டுடன் இருந்தாலும், அதிக அறிவும், அழகும், திறமையும் உடையவளாக இருப்பதும் மனதில் பொறாமையை உண்டாக்குகிறது. பெற்றோர், மாலினி குறையுள்ள குழந்தையாக இருப்பதால் அவள் பெயரில் வீட்டை வாங்கி வைத்திருப்பது தான் முக்கியமானவள் இல்லையோ என்ற உணர்வை ஆரம்பத்திலேயே ஏற்படுத்தியிருக்கிறது. குறைபாடுள்ள குழந்தை மேல் பெற்றோருக்கு இயற்கைவாகவே அதிக அன்பும், அக்கறையும் தோன்றுவதுண்டு. ஆனால், அதே, மஞ்சுளா, தங்கை மேல் அக்கறை காட்டியது போல் பெற்றோர், தன் மேல் அக்கறை காட்டியிருந்தால், தானும் இன்னும் கூட வாழ்க்கையில் சிறப்பாக இருந்திருக்க முடியும் என்று மனம் கொள்ளா தாழ்வுணர்ச்சி கொள்ள வைத்து விட்டது. அதனாலேயே,, அவளை வெற்றி கொள்ளும் சந்தர்ப்பத்திற்காக ஏங்க வைத்து விட்டது.. தங்கை உயிருடன் இருக்கும் வரை அதை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அவள் இறந்த பிறகு, அவள் எழுதிய நாவலை தான் எழுதியதாக உலகத்துக்கே அறிவித்து, அதற்கான பரிசினைப் பெறுவதில் ஒரு பொய்யான சுகத்தைத் தேடிக் கொள்கிறாள்.
பொறாமை, தாழ்வுணர்ச்சி, காமம், பொய்மை இவையெல்லாம் மனித மனங்களில் கசடுகளாக ஆழ் மனதில் தங்கி விடுகின்றன. நிச்சயம் ஒவ்வொருவர் மனதிலும் இந்த கசடுகள் சேர்வதற்கான வாய்ப்புக் கூறுகள் அமைந்து விடுகின்றன. இந்தக் கசடுகளை நீக்கிக் கொண்டு வாழத் தெரிந்தவர்கள் சிறப்பாகவே வாழ்ந்து விடுகிறார்கள். மற்றவர்களோ, அவற்றை நீக்க முடியாமல், வெளியில் ஒரு மாதிரியும், உள்ளுக்குள் வேறு மாதிரியும், சிதைந்த பிம்பங்களாக வாழ்ந்து திரிகிறார்கள்.
—————————–
“அஞ்சும் மல்லிகை” யில் தம்பி சதீஷும், அக்கா யாமினியும் இங்கிலாந்தில் தங்கிப் படிக்கிறார்கள். அங்கு அவனுக்கு ஜூலியாவும், அவளுக்கு கௌதமும் நண்பர்களாகக் கிடைக்கிறார்கள். யாமினி ஓவியம் பயிலவதற்கும், சதீஷ் ஒரு இளம் விஞ்ஞானியாகவும் அங்கு வருகிறார்கள்.
சதீஷ்- ஜூலியா நட்பு காதலாக வளர்கிறது. கௌதம் யாமினி மேல் அன்பு கொள்கிறான். ஆனால், அதை அவள் எந்த இடத்திலும் ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை. இடையில் டேவிட் என்று ஒரு வெள்ளையன் வருகிறான். ஏனோ அவனை யாமினிக்குப் பிடிக்கிறது. ஆனால், அவனோ, இவளை ஒரு இந்தியக் குரங்கு என்றும், கறுப்பி என்றும் அவமானப்படுத்தித்தான் பயன்படுத்திக் கொள்கிறான் ஆனாலும், அவளுக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ, அவளால் அவன் பிடியிலிருந்து வர முடியவில்லை. கௌதமின் உண்மையான அன்பை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவளுடைய மனப்பிறழ்வு வெளிப்பட்டு மனநோய் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள்.
அப்போது யாமினி, தன் தம்பி சதீஷைத் தனக்குப் பிடிக்குமெனவும், தானும் அவனும் தங்கள் பழைய வீட்டில் நெருக்கமான உறவு கொண்டிருந்ததாகவும் அதனால் தன் வயிற்றில் அவனுடைய கரு உருவாகியது என்றும் நிறைய கதை பகிர்ந்து கொள்கிறாள். ஜூலியாவால் நம்ப முடியவில்லை.
ஒரு நாள், ஜூலியா தற்கொலை செய்து கொண்டதாகத் தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் சதீஷிடம் சொல்கிறாள். பிறகு அவளே அவள் காப்பாற்றப்பட்டு விட்டாள் என்றும் சொல்கிறாள். அப்படிச் சொன்னவள், ஒரு பித்து நிலை கொண்டு, தன்னையே வறுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் இறந்த பிறகு, ஜூலியா, சதீஷிடம், அவனுடைய வீட்டின் பழைய படம் ஒன்றைக் காண்பிக்கிறாள். அது ஒரு அக்காவும், தம்பியும் ஒரு வீட்டின் முன் சேர்ந்து நிற்கும் ஒரு வங்கப் படத்தின் காட்சி என்று சதீஷ் சொல்கிறான். ஜூலியா யாமினிக்கு ஏதோ மனப் பிறழ்வுதான் என்று தெளிவு பெறுகிறாள்.
இந்த நாடகத்திலும், பெற்றோர் ஒரு ஆண் பிள்ளை மேல் அதிக கவனமும், அக்கறையும் காட்டி,பெண் பிள்ளையை வீட்டு வேலை செய்யவும், வீட்டுத் தேவைக்காகவும் பள்ளிக் கூடத்தை நிறுத்துவதும் செய்திருக்கிறார்கள். பெற்றோரின் இந்த பழக்கத்தை, கவனித்து வளரும் ஒரு ஆண் குழந்தை, தானும், தன் சகோதரியை மதிக்காமல் இருக்கக் கற்றுக் கொள்கிறது. அவளுக்குப் பெற்றோர் செலவு செய்வதைக் குத்திக் காட்டுகிறது.
இந்த தாழ்வுணர்ச்சியால், யாமினி ஓவியம் கற்றுக் கொள்ளவென்று தம்பியோடு வந்திருந்தாலும், அவளுக்கு அது கைகூடவில்லை.
இந்தக் கசப்புணர்வுகள், யாமினியின் மனதில் கசடுகளாகத் தங்கி விடுகின்றன. இவையே, அவளை ஒரு மன நோயாளியாக ஆக்கியிருக்கிறது.
தாழ்வுணர்ச்சிதான் மனநோய்க்கு முதற்காரணம் என்றே சொல்லலாம்.
யாமினியின் தாழ்வுணர்ச்சியே, தன்னுடைய கையை தன் தம்பியின் தோழி ஜூலியாவின் கையோடு ஒப்பிட வைக்கிறது . அன்புக்கான ஏக்கமே டேவிட் போன்ற ஒரு பெண்பித்தனிடம் தன்னை ஒப்புவிக்கச் செய்கிறது. பெற்றோரின் கரிசனமும், அன்பும் கிடைக்கப் பெறாத தனக்கு,இவற்றை அதிகமாகப் பெறுகின்ற தம்பியை தன்னோடு உறவு கொள்பவன் என்று கற்பனை செய்யவைக்கிறது. .
ஒரு இடத்தில் மல்லிகைச் செடியைப் பிடுங்கி பண்படுத்தி வேறொரு இடத்தில் நட்டு வைப்பார்கள் என்று யாமினி சொல்வதாக வருகிறது. அவள் பெற்றோரும் இவளுக்கு மனநோய் இருக்கிறது என்று தெரிந்தே அவளை இங்கிலாந்துக்கு அனுப்பியிருக்கலாம். யாமினியும், ஒரு அஞ்சும் மல்லிகையாகத்தான் அனுப்பப்பட்டிருக்கிறாள் என்பதை வாசகனால் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிகிறது.
——————–
இந்த மனப் பிறழ்வுக் கதைகளை கிரீஷ் அருமையான நாடகங்களாகச் செய்திருக்கிறார்.. மிகவும் த்ரில்லிங்காக படைக்கப்பட்டிருக்கும் விதம் வாசகனை கட்டிப் போடுகிறது. பாவண்ணனின் அருமையான மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு நாடகம் வாசிக்கிறோம் என்ற நினைப்பையே ஏற்படுத்தாமல், அத்துணை சிறப்பாக இருக்கிறது.
இந்தப் புத்தகங்களை அழகாக குறுந்தகடு வடிவில் அச்சிட்டிருக்கும், காலச்சுவடு பதிபகத்தார் பாரட்டுக்குரியவர்கள்.

நிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம் – பாவண்ணன்

சென்னையை நாங்கள் பெயரளவில் மட்டுமே தெரிந்துவைத்துக்கொண்டு அதை எப்போது பார்ப்போம் என ஏங்கியிருந்த ஒரு காலம் உண்டு. அப்போது அந்த நகரத்தைப் பார்த்தவர்கள் சொல்கிற ஒவ்வொரு செய்தியும் எங்களுக்குக் கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும். சொந்தக்காரர் ஒருவரின் திருமணத்துக்காகச் சென்னைக்குச் சென்று திரும்பிய எங்கள் ராமதாஸ் சார்கலச்சி உட்ட தேன்கூட்டிலேருந்து தேனீக்கள் பறக்கறமாதிரி எந்தப் பக்கம் பாத்தாலும் ஆளுங்க பறந்துகிட்டே இருக்காங்கடாஎன்றார். இன்பச்சுற்றுலா சென்று திரும்பிய முத்தம்மாள் பாட்டிஉயிர்காலேஜ் செத்த காலேஜ்னு புதுசுபுதுசா பல விஷயங்கள் அந்த ஊருல இருக்குப்பாஎன்று அடுக்கினார். கட்சி மாநாட்டுக்காக போய்வந்த சொக்கலிங்கம் மாமாஒரு ஊடு கூட நம்ம ஊருல இருக்கறமாதிரி கூரை ஊடு இல்ல பாத்துக்கோ. எங்க திரும்பனாலும் வரிசவரிசயா கல்லு ஊடுங்க. எல்லாமே ரெண்டு மாடி மூணு மாடி. எல்..சி.னு ஒரு கட்டடம். பதினாலு மாடி. எப்படி கட்டனாங்களோ தெரியலை. உலகளந்த பெருமாளாட்டம் மெளண்ட் ரோட்ல நிக்குது. நிமுந்து பாத்தா கண்ணே கூசுதுஎன்று சொல்லும்தோறும் அவர் வியப்பு பலமடங்காகப் பெருகியபடி இருந்தது. உடல்பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்று திரும்பிய கமலக்கண்ணன் பெரியப்பாமூர்மார்க்கெட்னு ஒரு எடம் ஸ்டேஷன் பக்கத்துலயே இருக்குது. வத்திப்பொட்டி அடுக்கனமாதிரி ஏகப்பட்ட கடைகள். அம்மா அப்பாவ தவிர எல்லாமே அங்க காசுக்கு கெடைக்குது. எல்லாமே கால்விலை, அரைவிலைனு பேரம் பேசி வாங்கலாம்என்று பெருமையாகச் சொன்னார். அனந்தநாயகி சித்திபட்டணத்துல உங்க பெரியண்ணன் சமுத்திரக்கரைக்கு ஒருநாள் சாயங்காலம் அழச்சிட்டு போயிருந்தான். அங்க என்ன மாதிரி காத்து தெரியுமா? எழுந்து வரவே மனசில்ல. அப்படி ஒரு சொகமான காத்துஎன்று சலிக்காமல் சொல்லிக்கொண்டே இருந்தார்.

சென்னை சார்ந்து சொல்லப்பட்டவை அனைத்தும் ஒவ்வொரு விதமென்று தோன்றினாலும் ஒவ்வொருவரும் தனித்தனியாக தாம் கண்ட உண்மைகளையே சொன்னார்கள். துண்டுகளாக சிதறிவிட்ட காகிதத்துணுக்குகளைச் சேகரித்து அடுக்கி, அதன்மீது தீட்டப்பட்டிருந்த கோட்டோவியத்தை மீட்டுருவாக்கம் செய்வதுபோல அவர்கள் சொன்ன தகவல்கள் சார்ந்து சென்னை நகரத்தின் சித்திரத்தை மிக எளிதாகத் தீட்டிக்கொள்ள முடியும். வெகுகாலத்துக்குப் பிறகு அந்த நகரத்தைச் சுற்றி அவர்கள் சொன்னதையெல்லாம் நானே பார்த்துத் தெரிந்துகொண்டேன்.

காந்தியடிகளோடு சேர்ந்து பணியாற்றியவர்களும் அவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பியவர்களும் காந்தியடிகளைப்பற்றி எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமானவை. காகா காலேல்கர், சுசிலா நய்யார், மகாதேவ தேசாய், நாராயண் தேசாய், மனுகாந்தி என எண்ணற்றோர் தம் நினைவிலிருந்து காந்தியடிகள் தொடர்பான பல நிகழ்ச்சிகளை எழுதிவைத்திருக்கிறார்கள். அவை அனைத்தையும் மையப்படுத்தி ஒரு வாசகனால் காந்தியடிகளின் உருவத்தைத் தீட்டிவிடமுடியும். பத்மபூஷன் விருது பெற்ற இந்தி எழுத்தாளர் விஷ்ணு பிரபாகர் கவிதை, சிறுகதை, நாவல்கள், கட்டுரைகள், குழந்தை இலக்கியம் என எல்லாத் தளங்களிலும் எழுதியவர். காந்தியடிகளின் வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை பல நூல்களிலிருந்து எடுத்துத் தொகுத்து அவர் 1954இல் இந்தியில் எழுதிய புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1970இல்உழைக்காமல் உண்பவன் திருடன்என்னும் தலைப்பில் முதல் பதிப்பாக வெளிவந்தது. காந்தியடிகளின் 150வது பிறந்தநாளையொட்டி இப்போது இரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது. ஒரே அமர்வில் படிக்கத்தக்க வகையில் ஆர்வமூட்டும் பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நூலாக எழுதியிருக்கும் விஷ்ணு பிரபாகரும் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் மா.பா.குருசாமியும் நம் வணக்கத்துக்குரியவர்கள்.

ஒருமுறை வங்காளப்பகுதியில் காந்தியடிகள் பயணம் செய்தார். ஒரு ஜமீன்தார் வீட்டில் அவர் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஜமீன்தார் வீட்டில் எண்ணற்ற வேலைக்காரர்கள் நாலாபக்கமும் ஓடி வேலை செய்தபடி இருந்தார்கள். ஒருநாள் வழிபாட்டுக்காக வீட்டுத் தாழ்வாரத்தில் உட்கார்ந்தார் காந்தியடிகள். அங்கு வெளிச்சம் கண்ணைக் கூசும் அளவுக்கு அதிகமாக இருந்தது. அதனால் விளக்குகளை அணைத்துவிடும்படி காந்தியடிகள் கேட்டுக்கொண்டார். ஜமீன்தார் அமர்ந்திருந்த இடத்துக்குப் பின்னால் கைக்கெட்டும் தொலைவிலேயே விளக்குப்பித்தான் இருந்தது. ஆனாலும் அதை அழுத்த அவர் தன் வேலைக்காரரை அழைத்தார். அவர் வராததால் மீண்டும் அழைத்துவிட்டுக் காத்திருந்தார். இதைக் கண்ட காந்தியடிகள் மெளனமாக எழுந்து சென்று தானே விளக்குப்பித்தானை அழுத்திவிட்டுத் திரும்பி வழிபாட்டைத் தொடங்கினார். பிறகு சொற்பொழிவின்போதுமனிதனுக்கு உடலுழைப்பு மிகவும் அவசியம். ஆனால் தற்காலத்தில் படித்தவர்களும் பணம் படைத்தவர்களும் உடலுழைப்பை வெறுக்கிறார்கள். ஆனால் இது தவறு. உழைக்காமல் உண்பவன் திருடன் என்பது கீதை சொல்லும் வாக்கியம்என்று சொல்லி முடித்தார். தற்செயலாக, உரை முடிந்து அனைவரும் எழுந்திருக்கும் தருணத்தில் மேசை மீதிருந்த பீங்கான் கோப்பை தவறி விழுந்து சுக்குநூறாக உடைந்தது. உடனே எழுந்துவந்த ஜமீன்தார் குனிந்து தரையில் சிதறிக்கிடந்த பீங்கான் துண்டுகளை எடுக்கத் தொடங்கினார். ஓசை கேட்டு ஓடி வந்த வேலைக்காரர்கள் அக்காட்சியைக் கண்டு நம்பமுடியாதவர்களாக திகைத்து நின்றார்கள். பொதுவில் சொல்லப்பட்ட ஒரு சொல் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

இத்தகு எண்ணற்ற நிகழ்ச்சிச்சித்திரங்களால் இந்தப் புத்தகம் நிறைந்திருக்கிறது. ஒருமுறை காகா காலேல்கர் குழந்தைகள் சொற்களைக் கற்றுக்கொள்ள உதவும் வகையில் குஜராத்தி மொழியில் நடைவண்டி என்ற தலைப்பில் ஒரு நூலை உருவாக்கியிருந்தார். அழகழகான ஓவியங்கள். வழவழப்பான தாள்கள். ஒரு புத்தகத்தின் விலை ஐந்தணா. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆவல் காரணமாக ஒருநாள் அவர் காந்தியடிகளிடம்நீங்கள் நடைவண்டி புத்தகத்தைப் பார்த்தீர்களா?” என்று கேட்டார். “ஆம். பார்த்தேன். அழகாக இருக்கிறது. ஆனால் யாருக்காக இந்தப் புத்தகத்தை நீங்கள் தயாரித்தீர்கள்?” என்று கேட்டார். காகா காலேல்கர் பதில் சொல்லாமல் குழப்பத்துடன் அவரையே பார்த்தபடி நின்றிருந்தார். கோடிக்கணக்கான ஏழைக்குழந்தைகளிடம் கல்வியைக் கொண்டுசென்று சேர்க்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. கடையில் ஏற்கனவே ஒரு புத்தகம் இரண்டணாவுக்கு கிடைக்கிறதென்றால், உங்கள் புத்தகம் காலணாவுக்குக் கிடைக்கவேண்டும். ஏழைக் குழந்தைகள் உங்கள் புத்தகத்தை எப்படி விலைகொடுத்து வாங்குவார்கள்?” என்று மென்மையான குரலில் கேட்டார் காந்தியடிகள். அவர் கேட்ட கேள்வி பொருள்பொதிந்த ஒன்றாக காலேல்கருக்குத் தோன்றியது உடனே ஆமதாபாத் சென்று அப்புத்தகத்தின் மலிவுப்பதிப்பைத் தயாரித்து ஐந்து பைசாவுக்கு விற்கும்படி செய்தார்.

தினமும் இரவில் படுக்கப்போகும் முன்பாக காந்தியடிகளின் தலையில் கஸ்தூர்பா எண்ணெய் தேய்த்துவிடுவார். அது ஒரு பழக்கம். ஒருநாள் கஸ்தூர்பா மிகவும் தாமதமாக வந்தார். காந்தியடிகள்ஏன் இன்று தாமதம்?” என்று கேட்டார். “சமையலறையில் நிறைய வேலைகள். இன்று இரவு ராம்தாஸ் ஊருக்குச் செல்கிறான் அல்லவா? மூன்று நாட்களுக்கு உதவும் வகையில் அவனுக்குத் தேவையான வழிச்சாப்பாட்டைத் தயாரிக்கத் தொடங்கினேன். அதை முடிக்க தாமதமாகிவிட்டதுஎன்றார் கஸ்தூர்பா. உடனே காந்தியடிகள்இன்று ராம்தாஸ் செல்கிறான். நாளை துளசி செல்வான். நாளைக்கு மறுநாள் சுரேந்திரன் செல்வான். இப்படி யாராவது ஒருவர் ஒவ்வொருநாளும் ஆசிரமத்திலிருந்து சென்றுகொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவருக்காகவும் நீ இப்படி உணவு தயாரித்துக் கொடுக்கமுடியுமா?” என்று கேட்டார். அதற்குக் கஸ்தூர்பாஅவன் நம் மகன். அதனால் செய்தேன். மற்றவர்கள் விருப்பத்துக்கு என்னால் எப்படி சமைக்கமுடியும்?” என்று கேட்டார். காந்தியடிகள் அவருக்குப் புரியும் வகையில்இது சத்தியாகிரகிகளின் ஆசிரமம். இங்கு வசிக்கும் ஒவ்வொருவரும் தம் பெற்றோரைத் துறந்து வசிப்பவர்களே. நம்மையே பெற்றோராக மனதார நினைப்பவர்கள். தாய்க்கும் மகனுக்கும் இடையிலிருக்கும் உறவை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அது ஒரு வீடு என்னும் எல்லைக்குள் மட்டுமே செல்லுபடியாகும். இதுவோ சத்தியாகிரகிகளின் ஆசிரமம். இங்கு எல்லோருக்கும் என்ன கிடைக்குமோ அதுதான் ராமதாசுக்கும் கிடைக்கவேண்டும்என்று சொல்லி புரியவைத்தார்.

தண்டி யாத்திரையின்போது சத்தியாகிரகிகள் அனைவரும் ஒரு கிராமத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு உணவும் வழிபாடும் முடிந்ததும் அனவரும் உறங்கிவிட்டனர். காந்தியடிகளின் படுக்கைக்கு அருகில் ஒரு சின்ன விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. இரண்டு மணியளவில் காந்தியடிகளுக்கு விழிப்பு வந்துவிட்டது. உடனே எழுந்து உட்கார்ந்துகொண்டு திரியை ஏற்றிவிட்டு எழுத உட்கார்ந்தார். எண்ணெய் தீர்ந்துபோய்விட்டதால் விளக்கு அணைந்துவிட்டது. ஆனாலும் காந்தியடிகள் எழுதுவதை நிறுத்தவில்லை. தற்செயலாக உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த ஒரு தொண்டர்எப்படி பாபு உங்களால் இந்த இருளில் எழுதமுடிகிறது? யாராவது ஒருவரை எழுப்பியிருக்கலாமே. விளக்கெரிய ஏதேனும் செய்திருக்கலாமேஎன்றார். காந்தியடிகள் புன்னகைத்தபடியேஎல்லாரும் சோர்ந்து உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். யாரையும் எழுப்ப மனமில்லை. இருட்டில் எழுதும் பழக்கமுண்டு என்பதால் கவலையில்லைஎன்று பதில் சொன்னார்.

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக காந்தியடிகள் தில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தருணம். உண்ணாவிரதம் தொடங்கி பதின்மூன்று நாட்கள் கடந்துவிட்டன. அவர் உடல்நலம் குன்றி படுக்கையில் படுத்திருக்கிறார். அவர் முழு ஓய்வில் இருக்கவேண்டும் என்றும் யாரையும் சந்தித்து உரையாடக்கூடாது என்றும் மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். ஆண்ட்ரூஸ் அறைக்குக் காவலாக நின்றிருந்தார். யாரோ ஒரு கிராமத்துத் தம்பதியினர் தொண்டர்களின் கட்டுக்காவலை மீறி காந்தியடிகள் படுத்திருந்த அறைவரைக்கும் வந்துவிட்டனர். ஆனால் ஆண்ட்ரூஸ் அவர்களைத் தடுத்துவிட்டார். அத்தம்பதியினருக்கு ஒரே மகன். அவனுக்கு பல நாட்களாக காய்ச்சலில் படுத்த படுக்கையாக இருக்கிறான். அவர்கள் ஊரில் ஒருவர் தண்ணீர் எடுத்துச் சென்று காந்தியடிகளின் பாதங்களைக் கழுவி, அந்நீரைக் கொண்டுவந்து மருந்தாக அளித்தால் மகன் நோய்நீங்கிப் பிழைத்துவிடுவான் என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார். அந்த எண்ணத்தோடு தண்ணீர் நிறைக்கப்பட்ட சொம்போடு அவர்கள் வந்திருந்தார்கள். காந்தியடிகளுக்கு அச்செய்தி தெரிவிக்கப்பட்டது. காந்தியடிகள் அத்தம்பதியினரை அருகில் அழைத்தார். மெல்லிய குரலில்உங்களுக்கு ஆண்டவன் மீது நம்பிக்கை இல்லையா? இருக்குமெனில், அந்த நம்பிக்கையை ஒரு சாதாரண மனிதன் மீது இறக்கி, ஆண்டவனை ஏன் ஏளனம் செய்கிறீர்கள்? என்னுடைய பாதங்களைக் கழுவி, கழுவிய அழுக்கான நீரை மருந்தாகக் குடிக்கவைக்க எண்ணுவது எனக்கும் அவமானம், உங்களுக்கும் அவமானம். முதலில் உங்கள் மகனை ஒரு நல்ல மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் வழியைப் பாருங்கள்என்று அறிவுரை சொன்னதோடு மட்டுமன்றி, தன் எதிரிலேயே அவர்கள் சொம்பில் இருந்த தண்ணீரைக் கீழே கொட்டும்படியும் செய்தார்.

தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த காலத்தில் காந்தியடிகள் ஒரு சைவ உணவு விடுதியில் காலையிலும் மாலையிலும் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அந்த உணவுவிடுதியில் ஆல்பர்ட் வெஸ்ட் என்னும் நண்பர் அறிமுகமானார். அவர் அதே ஊரில் அச்சகமொன்றை நண்பருடன் சேர்ந்து நடத்தி வந்தார். திடீரென அந்த நகரை கொள்ளைநோய் தாக்கியது. எண்ணற்ற இந்தியர்கள் அதில் பாதிப்படைந்தார்கள். காந்தியடிகள் நோயாளிகளுக்குத் தேவையான பணிவிடைகள் செய்வதில் ஈடுபட்டார். குறிப்பிட்ட நேரத்தில் அவரால் உணவு விடுதிக்குச் செல்லமுடியவில்லை. இரு நாட்களாக அவர் உணவு விடுதியின் பக்கம் வராததால் மூன்றாவது நாள் ஆல்பர்ட் வெஸ்ட் காந்தியடிகளைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார். கதவைத் திறந்தபடி வந்த காந்தியடிகளைப் பார்த்த பிறகுதான் அவர் ஆறுதலடைந்தார். பிறகு மெதுவாக ‘நான் உங்களுக்கு ஏதேனும் உதவி செய்யட்டுமா?” என்று கேட்டார். உடனே காந்தியடிகள் புன்னகைத்தவாறே ”நோயாளிகளுக்கு பணிவிடை செய்வீர்களா?” என்று கேட்டார். “தாராளமாகச் செய்வேன்” என உடனே அவர் ஒப்புக்கொண்டார். காந்தியடிகள் அவரை நெருங்கி தோளைத் தொட்டு தட்டிக்கொடுத்தபடி “உங்களிடமிருந்து இப்படிப்பட்ட பதிலே வரும் என எனக்குத் தெரியும். இந்த வேலைகளைச் செய்ய இங்கு பலர் இருக்கிறார்கள். இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகைக்குத்தான் எனக்கு உங்கள் உதவி தேவை. டர்பன் சென்று அந்தப் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டால் எனக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார். அடுத்த நாளே டர்பனுக்கு வண்டியேறிச் சென்று பத்திரிகையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் வெஸ்ட்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியதும் கோகலேயைச் சென்று சந்தித்தார் காந்தியடிகள். ”உங்களுடைய வேலைத்திட்டத்தை முடிவு செய்வதற்கு முன்பாக ஓராண்டுக்காலம் நாட்டைச் சுற்றிப் பாருங்கள்” என்று அனுப்பிவைத்தார் கோகலே. சரியாக ஓராண்டுக்கு பிறகு திரும்பி வந்த காந்தியடிகளிடம் “இந்தியாவைப்பற்றி உங்கள் கருத்தென்ன?” என்று கேட்டார் கோகலே. நீண்ட பெருமூச்சு விட்டபடி காந்தியடிகள் “எங்கும் ஒரே பேச்சுமயமாக உள்ளது. யாரும் நாட்டுக்காக உள்ளபடியாக சாகத் தயாராக இல்லை” என்று வருத்தத்துடன் சொன்னார். அதைக் கேட்டு அவர்கள் அருகில் அமர்ந்திருந்த டாக்டர் ஹரிபிரசாத் தேசாய் சீற்றமடைந்தார். “பஞ்சாபில் லாலா லஜபதிராய் இருக்கிறார். மகாராஷ்டிரத்தில் திலகர் இருக்கிறார். வங்காளத்தில் புரட்சிகர இளைஞர்கள் பலர் உயிர்த்தியாகத்துக்கு தயாராக இருக்கிறார்கள். இவர்களை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லையா?” என்று கேட்டார். அதற்குக் காந்தியடிகள் “புரட்சிகர இளைஞர்கள் சாகத் தயாராக இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அவர்களுடைய வழிமுறையை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதனால் அவர்களை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். திலகர் மீது நான் பெருமதிப்பு வைத்திருந்தேன். அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது தாம் ராஜதுரோகி அல்ல என்பதை நிரூபிக்கும் பொருட்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முயற்சி செய்தார். அதைக் கண்டு நான் வருந்தினேன். “இன்று இந்தியாவில் நடைபெறும் ஆட்சியின் தன்மையை நான் எதிர்க்கத்தான் செய்வேன். இது குற்றமென கருதப்படுமானால், அக்குற்றத்தை நான் மீண்டும் மீண்டும் செய்வேன். நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் வழங்குங்கள். நீங்கள் என்னை விடுவித்தாலும் கூட இதே குற்றத்தைத் திரும்பத்திரும்பச் செய்வேன் என்று திலகர் ஏன் சொல்லவில்லை என்று தோன்றியது” என்று சொன்னார். கோகலேயும் தேசாயும் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள். “தீமையை தீமையால் வெல்லவேண்டும் என்று திலகர் நம்புகிறார். நான் தீமையை சத்தியத்தால் வெல்லமுடியும் என்று நம்புகிறேன். இதுவே எங்கள் இருவருக்கிடையில் உள்ள கருத்து வேற்றுமை” என்று தொடர்ந்து சொன்னார் காந்தியடிகள்.

இப்படி அறுபத்தெட்டு காட்சிச் சித்தரிப்புகளோடு இந்த நூலை உருவாகியுள்ளார் விஷ்ணு பிரபாகர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் காந்தியடிகளின் அர்ப்பணிப்புணர்வு, தியாகம், அனைவரையும் ஒன்றெனக் கருதும் நேய உணர்வு, கடுமையான உழைப்பு, சத்தியத்தின் மீதான அவருடைய பற்று ஆகியவற்றை எடுத்துக் காட்டும் விதமாக அமைந்துள்ளது. காந்தியடிகளை அறிந்துகொள்ள விழைகிறவர்கள் ஓர் எளிய ஆரம்பக் கையேடாக இத்தொகுதியைப் படிக்கலாம்.

(உழைக்காமல் உண்பவன் திருடன் – விஷ்ணு பிரபாகர். தமிழில்: மா.பா.குருசாமி. காந்திய இலக்கியச் சங்கம். மதுரை. விலை ரூ.120)