Author: பதாகை

எனக்குப் பூனைகளைப் பிடிக்காது -மாரியப்பன் சிறுகதை

நல்ல இரவு. எங்கள் வீட்டிற்கு வெளியே இருந்த சாக்கடைக்குச் செல்லும் பொந்திலிருந்து , நடுங்கியபடி எட்டிப் பார்க்கிறேன் நான். எனது அப்பாவும், அம்மாவும், நண்பர்களும் கூப்பிடும் தூரத்தில் தான் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் குரல் எழவில்லை. திடீரென ஒரு கரு வெள்ளம். கருத்த, கொழுத்த பெரிய பெரிய பூனைகளின் படை என் மீது பாய்ந்தது. கத்துவதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல் அவை என்னை பற்களால் இழுத்து வெளியே போட்டன. அவை அனைத்தும்

ஒரே மாதிரி இருந்தன. ஒரே மாதிரி கண்கள், மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்பூண்டு போல், நடுவில் மட்டும் ஒரு சிறிய கரிய தீற்றல். ஊசி நகங்களும் கோரப் பற்களும் காவு கொள்ளத் தயாராகின்றன. மரண பயத்தில் பரிதவிப்புடன் அவர்களைப் பார்க்கிறேன். என்னைக் கைவிட்டவர்களுடன் சேர்ந்து நானும் புன்னகைத்தபடி நிற்கிறேன்.

நெடு நாட்களுக்குப் பிறகு வந்தது இப்படியொரு கனவு. எழுந்து அமர்ந்தேன். நான் A-block 52வது அறையில் இருக்கிறேன் என்று உணர சிறிது நேரம் பிடித்தது. தூக்கம் வரவில்லை. தண்ணீர் குடித்தால் தேவலாம் எனத் தோன்றியது. ஆனால், எழுந்து அவ்வளவு தூரம் தனியே நடந்து மெஸ்ஸிற்குச் செல்ல வேண்டும். பயம்.

எனக்கு தூக்கத்தின் மூன்றாம் சுழற்சியில் இருந்த தினேஷை எழுப்பிக் கூற வேண்டும் போலிருந்தது.

எனக்கு பூனைகளை பிடிக்காது”

எனக்கு இந்த உலகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்பிக் கூற வேண்டும் போல இருந்தது. யாருமற்ற அந்த பின்னிரவில் என்னிடமே நான் பேசத் தொடங்கினேன்

எனக்கு பூனைகளை பிடிக்காது”

ஏன்?”

தெரியாது, காரணமில்லாமல் வெறுக்கக் கூடாதா?”

இல்லை.”

அவை அருவருப்பாக இருக்கின்றன.”

பொய்.”

உண்மை.”

இல்லை

சரி. பொய். எனக்குப் பூனைகளைப் பார்த்தால் அந்தக் கிழவனின் ஞாபகம் வந்து தொலைக்கிறது. அவன் ஆளும் மூஞ்சியும் சிரிப்பும்.”

யார் ?”

தினமும் சரியாக காலை ஏழரை மணிக்கெல்லாம் வந்து எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பான்.

அப்பொழுது எனக்கு 5 அல்லது 6 வயது. அது ஒரு நீளமான காம்பவுண்ட், அதன் கடைசியில் தான் எங்கள் வீடு. வாசலில் இருந்து பார்த்தாலே தெரியும். காலையில் கார்பரேஷன் தண்ணீர் வரும்போது தான் குளித்தாக வேண்டும். காம்பவுண்ட் பாதையில் எங்கள் வீட்டிற்கு வெளியே நின்றுதான் குளிப்பேன். இல்லை நிற்பேன். அம்மா தான் என் மேல் தண்ணீர் கொட்டி, சோப்பு தேய்த்து விடுவார்கள். மோப்பம் பிடித்துக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான்.

அவனது முகம் கோணல் வாயுடைய கிழட்டுப் பூனையைப் போல இருக்கும். காதுகள் மட்டும் ஓநாயுடையவை. முள்ளு முள்ளாக மீசை வைத்துக் கொண்டு, நரைத்த தலையுடன் குட்டையாக இருப்பான். வெள்ளை வேட்டியும் சட்டையும் தான் எப்பொழுதும். அருகில் இருந்த காளிமார்க் சோடா கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

குளித்து யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு வெளியே ஸ்கூல் வேனிற்காக எங்கள் பக்கத்து காம்பவுண்ட் படியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, என் அருகில் தவறாமல் வந்து அமர்வான்.

அவன் என்னிடம் பேசியதெல்லாம் ஒரே வாக்கியம், சிரித்தது ஒரே மாதிரி சிரிப்பு, பார்த்தது ஒரே மாதிரி பார்வை.

உன் குஞ்சுமணியை எனக்குத் தருவியா?”

நான் பதிலே பேச மாட்டேன்.

ஒரே ஒரு முறை “ என் கிட்ட குஞ்சு மணி கிடையாது” என்றேன் எரிச்சலுடன்.

நான் இதுவரை கேட்டதிலேயே மிக அசிங்கமான ஒரு சிரிப்பை சிரித்தான்.

குளிக்கறப்ப ஆடுதுல, அது பேரு என்னது?”

நான் ஒண்ணும் குளிக்கலை. உள்ள என்னைய மாதிரியே ஒரு பையன் இருக்கான். அப்படியே என்னை மாதிரி. அவன் கிட்ட தான் அது இருக்கு”

திரும்பவும் அசலாக அதே கிழட்டுப் பூனையின் சிரிப்பு.

லூசு தாத்தா” என்றேன் மகா எரிச்சலுடன்.

அவன் பேசியதில் என்ன அப்படி தப்பாக இருந்துவிட்டது? சத்தியமாகத் தெரியவில்லை. ஆனால் ஏனோ ஒரு எரிச்சல். ஏதோ காய்ந்த சாக்கடையின் வண்டையில் போட்டு புரட்டியது போல்.

இனி என்னால் நிறுத்த முடியாது,சொல்லித்தான் ஆக வேண்டும்.”

சொல்

எனக்கு குடோன்களையும் super heroக்களையும் கூட பிடிக்காது.”

ஏன் ?”

அப்பொழுது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் வீடு இருந்த இடம் ஒரு நகரின் மிக முக்கியமான மையம். அங்கே எல்லாமே இயங்கிக் கொண்டிருக்கும், கார்கள், பஸ்கள், ஆட்டோக்கள், டூ வீலர்கள், சைக்கிள்கள், ரிக்‌ஷாக்கள், மனிதர்கள். எப்போதாவது, தலைக்கு மேல் கொஞ்சூண்டு தெரியும் வானம் போல, தெரியாமல் விழுந்து விட்டேன் என மன்னிப்பு கேட்டுக் கொண்டே விழும் தூறல் போல, அருகில் அணி வகுத்திருந்த ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளில் இருந்து யாராவது எட்டிப் பார்த்து சிரிப்பார்கள். அதிர்ஷ்டம் இருந்தால், ப்ளாஸ்டிக் ஸ்டம்ப்பையும், பேட்டையும் பாலையும் வைத்துக் கொண்டு வீட்டு காம்பவுண்டுக்குள் தனியாக வேர்ல்ட் கப் ஆடிக் கொண்டிருக்கும் என் மேல் பாவப்பட்டு வந்து இரண்டு ஓவர்கள் விளையாடுவார்கள். என் வயதையொத்த யாரும் சுற்று வட்டாரத்தில் எங்கும் கிடையாது. அந்த ரோட்டில் மொத்தம் இருந்தது பத்து வீடுகள். ஆனால் மூன்னூறு கடைகள் வரிசை கட்டி நின்றன. ஆட்டோமொபைல், டிராக்டர், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல் உதிரி சாமான்கள் விற்கும் கடைகள்.

அன்று சரியான வெயில்.

நடு நிசியில் உறங்கிக் கொண்டிருந்தது அந்த காட்டின் வாயிலில் இருந்த கிராமம். நிலா இல்லாத வானத்தின் கீழ், குதிரைகளுடன் படையெடுத்து வந்த முகமூடிக் கொள்ளையர்கள் ஊரை சூறையாடினர். நகை, பணம், பாத்திரங்கள் என அனைத்தையும் எடுத்து சுருட்டிக் கொண்டு, எதிரில் பட்டவர்களை வெட்டி வீழ்த்தி, ஊரை தீயிட்டுக் கொளுத்தி தப்பித்துச் சென்று கொண்டிருந்தனர்.

இரும்புக்கை மாயாவியான நான் தான் அந்த ஊரின் ஒரே போலீஸ். எதுவுமே அறியாமல் எனது குகையில் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ என்னை உலுக்கி எழுப்பினார்கள், ஊர் கொள்ளை போனது என்று கதறினார்கள்.

வெகுண்டெழுந்த நான், கொடியில் கிடந்த துண்டை எடுத்து முகமூடியாக்கிக் கொண்டு சீறிப் புறப்பட்டேன், கயவர்களை அழிக்க. மலை மேல் ஓடிச்சென்று பார்த்தேன். வெகு தூரத்தில் அவர்களின் தீப்பந்தங்கள் தெரிந்தன. எனது குதிரையை முடுக்கி விட்டு துரத்தினேன்.

இதோ! நெருங்கி விட்டேன்!

என்ன செய்கிறேன் பார்! நான் இருக்கும்போதே இவ்வளவு தைரியமா? முதுகில் இருந்து ஈட்டியை உருவி வீசினேன்.

அம்மா!” என்ற அலறலுடன் சரிந்தது ஒரு குதிரையும் அதன் சுமையும்.

இன்னும் 50 பேராவது இருப்பார்கள்.

பாவம் நீங்கள்! என் கையிலா வந்து சிக்க வேண்டும்? ஹா! ஹா! ஹா!”

கழுத்து முறியும் சத்தம். குதிரையின் கால் முறிந்து கத்தும் சத்தம், மரங்கள் உடையும் சத்தம், இடி வெடிக்கும் சத்தம்.

எனது இரும்புக்கை பட்டவுடன் நொறுங்கித் தூள் தூளாகிப் போய்க் கிடந்தது மொத்த படையும்.

அதோ! ஒருவன் பதுங்கிச் செல்கிறான். கோழை!

நீ கொடுத்து வைத்தவன். என் கையால் சாகப் போகிறாய்!”

மூச்சிழுத்து ஓங்கிய எனது கை, முழு வேகத்துடன் சென்று மெதுவாக இறங்கியது ஒரு நிஜ வயிற்றில்.

ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய், எனது முகமூடியை கழற்றி இடுப்பில் கட்டிக் கொண்டேன்.

ஐய்யோ! விளையாட்டு ஆர்வத்தில் வாசல் வரை கண் மண் தெரியாமல் வந்து விட்டேன்.

யாருடைய வயிறு இது?”

செபாஸ்டியன். பக்கத்துக் கடையில் வேலை பார்க்கும் அண்ணன். என்னோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடும், மேட்ச் பார்க்கும் நல்லவர். 16லிருந்து 19 வயதிற்குள் இருக்கும். அவனுக்கு பூனை மீசை துளிர்த்திருந்தது.

ஆம், எனக்கு பூனைகளைப் பிடிக்காது

அந்த கணத்தில் வெறும் டிரவுசர் மட்டும் அணிந்து, அதற்குத் துணையாக அரைஞான் கயிறும் கட்டியிருந்தேன்.

என்னடா, சட்டை போடாம சுத்திட்டு இருக்க?” என்றபடியே எனது நெஞ்சுக் காம்பை பிடித்து நன்றாக ஸ்க்ரூவை திருகுவது போல திருகி விட்டான் அவன். வலி சுர்ரென்று உச்சந்தலை வரை போனது.

வலிக்குதுண்ணே!” என்று கத்தினேன்.

எங்கள் காம்பவுண்டை ஒட்டியபடி இருந்த ஒரு சிறிய சந்தினுள் இருந்தது அவன் வேலை பார்த்த குடவுன். அங்கே குவியல் குவியலாக இரும்புப் பட்டைகளை வரிசையாக நிறுத்தி வைத்திருப்பார்கள்.

என்னைத் தனது இரும்புக்கரங்களால் தூக்கிக் கொண்டு சென்றான். நான் தாவிக் குதிக்கத் துள்ளினேன். இரும்புப் பிடி. வேகமாக என்னை இரு கைகளிலும் தூக்கி, அவன் உடலோடு அணைத்துக் கொண்டு (நன்றாக ஞாபகம் இருக்கிறது அந்த இரும்பு வியர்வையின் வாசம்) வேகமாகச் சென்று என்னை அந்த குடவுனுக்குள் தூக்கி வீசினான். பட்டைகள் தேய்த்துத் தேய்த்து பிளந்திருந்த தரை என் முதுகை சிராய்த்தது.

சடாரென்று கதவை மூடினான். ஜன்னல்களற்ற அறையின் இருட்டு எங்களை விழுங்கியது. பொதுவாக குடவுன்களில் மின்சார இணைப்பும் இருப்பதில்லை. தீக்குச்சியை பற்ற வைத்து என் கண்களுக்கருகே கொண்டு வந்தான்.

தீக்குச்சி அணைந்து போனது.எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

புது குச்சி. எனக்கு ஏதோ விபரீதம் என்று புரிய ஆரம்பித்தது. நான் பயந்து கண்களை மூடிக் கொண்டேன். கன்னத்தில் பளார் என்ற அறையுடன் மயங்கினேன்.

செபாஸ்டியன்” என்று வெகு தூரத்தில், பல மைல்களுக்கு அப்பால் இருந்து யாரோ கூப்பிட்டார்கள். அந்த கூச்சலில் தான் கண் விழித்தேன். சில நொடிகளில் கதவு திறந்து ஒரு உருவம் வெளியேறியது. கதவு தாழிடப்பட்டது. ஒரு வகை அருவருக்கத்தக்க, பனம்பூவின் நெடியை உண்டாக்கக்கூடிய நாற்றம் உடல் முழுவதும் பரவியிருந்தது, குமட்டிக் கொண்டு வந்தது. கூடவே செபாஸ்டியனும் கதவைத் திறந்து வந்தான். மறுபடியும் இருட்டு.

அதன்பின் இருட்டு என் வாழ்வை விட்டு விலகவே இல்லை,அந்த நொடியில் தான் ஒரு பூனையின் குரூர சிரிப்பைப் போல இருட்டும் எனக்கு அச்சமூட்டுவதாய் இருக்கத் தொடங்கியது.

அந்த மூச்சுமுட்டும் இருட்டில், பிசுபிசுத்த நெடியில், இரும்பாலான ஒரு அறையில், புழுவைப் போல கிடந்த எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் நான் வெறுத்தேன், கடவுள்களை, super heroக்களை, இரும்புக் கைகளை, முக்கியமாக பூனைகளை.

பல ஆண்டுகள் அங்கேயே கிடந்தேன். கத்த வேண்டும் என்று கூட தோன்றவில்லை. எதிர்க்கத் திராணியற்ற ஒரு செடியைப் போல. வலுவற்ற ஒரு நோஞ்சானைப் போல. செத்துப்போன ஒரு சிலையைப் போல. தற்காத்துக் கொள்ள லாயக்கில்லாத முதுகெலும்பற்ற ஒரு கோழையைப் போல.

பல வருடங்கள் கழித்து, ஏதோ புத்தகத்தில் ‘இரும்பு மனிதர்’ என்றிருந்ததை பார்த்தவுடன் எழுதத் தோன்றியது,

இரும்பின் அர்த்தம் வலிமையல்ல. அதிகாரமும் அத்துமீறலும்.”

இரும்பாலானது இந்த அறை, இந்த ஊர், இவ்வுலகு.

போர்க்குணம் கொண்ட ஆடுகள் – ஜிஃப்ரி ஹாஸனின் கதைவெளி – தீரன் ஆர்.எம். நௌஸாத்

ஜிஃப்ரி ஹாஸனின் ஒரு சில புனைவுகளை முக்கியமாக கவிதைகளை நான் ஆங்காங்கே சில சஞ்சிகைகளில் ‘பாலைநகர் ஜிப்ரி” என்ற ஆளடையாளத்துடன் வாசித்திருந்த போதும் அவர் பற்றிய ஒரு ‘நிரந்தர பிம்பம்’ என் மனத்தில் ஏற்பட்டிருக்கவில்லை. அவரது “விலங்கிடப்பட்டிருந்த நாட்கள்” கவிதை தொகுப்பையும் நான் வாசித்திருக்கவில்லை. ஆயின் இரண்டொரு சிறுகதைகளை எதுவரை,மற்றும் பெருவெளி சஞ்சிகைகளில் வாசித்தபோதுதான் ஜிஃப்ரி ஹாஸன் என்ற அவரது இலக்கியப் பிம்பத்தை ஓரளவு உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஜிஃப்ரி ஹாஸன் ஒரு சமூகவியல் பட்டதாரி ஆசிரியர் போர்த்தாக்கமுற்ற ஒரு கிராமத்தில் பிறந்தவர். ஏற்கனவே அவரது ‘அரசியல் பௌத்தம்’ என்ற இலங்கையின் போருக்குப் பின்னரான அரசியலைப் பற்றிப் பேசும் நூல் வெளிவந்துள்ளது. இதுவரை அவரது ஐந்து புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சில சஞ்சிகைகளும் வெளியிட்டுள்ளார். அவரது சமூகவியல் கற்கை நெறி அவரது எழுத்துகளில் வியாபகமாகச் சூழ்ந்து கொடுள்ளது என்பதில் நமக்கு சந்தேகமில்லை. இத் தொகுதியில் ஒட்டு மொத்தமாக அவரது சில நிர்மானிப்புகளை “வேணும்விளையும்” என்று வாசித்த போதுதான் அவரது பிம்பம் பற்றிய என் புரிதல்கள் சில கலைந்து மேலும் சில சேர்ந்து பெறுமதிமிக்க ஒரு புது வடிவம் கிடைப்பதாயிற்று.

02

போர்க்குணம் கொண்ட ஆடுகள் என்ற இம் மேய்ச்சல் வெளியில் நண்பர் ஜிப்ரி ஹாசன் பத்து போர்க்குணம் கொண்ட ஆடுகளை ஓட்டி வந்திருக்கிறார். இவை கொம்புகள் முட்டித் தள்ளுவதையும் இரண்டு கால்களால் உயர்ந்து பாய்வதையும் பற்றிப் பேசவும் எழுதவும் இரசிக்கவும் ஏராளமான சங்கதிகள் உள்ளன.

முடிந்த வரை ஒப்பனைகள் நீக்கிய, மிகையுணர்ச்சி தவிர்த்த, படிமங்கள் அற்ற எழுத்து, ஜிப்ரிஹாசனுடையது. இதனால், பாத்திரங்களின் குனாதிசயக் கலவையை விஸ்தாரமாக விபரிக்க முடியாத ஒரு இடர்பாடு இந்த இடத்தில் ஒரு கதை சொல்லிக்கு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. பாத்திரமே உரையாடல்களில் ஈடுபடும்போது குணாதிசயம் வெளிப்படச் செய்தல் இலகுவான ஒரு மறை உத்தியாகும். மொழியைச் சிதைத்து., கதைகளைச் சிதைத்து., மொழியின் கவித்துவத்தை வெளிப்படுத்துவது என்னும் புதிர்த்தன்மை கொண்டதாகப் புனைவுகளைப் படைக்க முயற்சிக்கும் ஒரு ‘ரண சிகிச்சையை’ ஜிப்ரிஹாசன் செய்து பார்த்திருக்கிறார். இது மீபுனைவுகளின் வெளியை இன்னும் அகலமாகத் திறந்து விடும் என எதிர்பார்க்கலாம்.

கதைசொல்லியையும் கதைக்குள் சேர்த்துக்கொண்டு எழுதக்கூடிய உத்தி இத்தொகுதியிலுள்ள புனைவுகளிலும் ‘தூக்கலாக’ உள்ளன. ஜிப்ரிஹாசன் என்ற கதைசொல்லி புனைவுகளில் ஒரு ‘மறைவார்ப்பாளாராக’ வடிவமைக்கப்பட்டுள்ளார். இது பூஜ்ய பாகைக் கோண எழுத்து முறைக்கு சார்பானது. இந்த முறையை பிடிவாதமாக பேணிக் கொள்ளல் என்பதே அவரது எழுத்தின் ஒரு அசைக்க முடியாத அடையாளமாக உள்ளது. யாருடைய தயவும் இல்லாமல் தன் எழுத்தை மட்டுமே நம்பி நெடுகிலும் தானே கதையைச் சொல்லியும், தானே வாசகனாக இருந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரிய சிரமமான விடயம். மாயப்பொடி தூவும் நடையினருக்கே இது சாத்தியம்.. ஆயினும் அதை இவர் பூஜ்ய பாகைக் கோண எழுத்து முறையில் கச்சிதமாகச் செய்துள்ளார் என்பேன்.

ஜிப்ரிஹாசனின் இந்த உத்தியானது ‘’உனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே எடுத்து கொள்’’ என்ற வாதத்துக்கு வலுச் சேர்த்தாலும்., இது வாசகனுக்கு முழு சுதந்திரம் கொடுத்தாலும், கதைசொல்லியும் உள்ளிருந்தே தன் உணர்வை வாசகனுக்கு ‘’தந்திர ஊசி’’ கொண்டு ஏற்றிவிடுவதை காணமுடிகிறதுமுந்திய நிலையை மறுதலிப்பதாகவும் உள்ளது

…………………தமிழ்ச் சிறுகதைகளில் 98 வீதமானவை அரிஸ்டோடிலிய நியம முறையிலான கதை கூறும் முறையில் அமைந்தவையே. அத்தகைய கதைகள் “தொடக்கம்”, “உச்சம்”, “முடிவு” என அரிஸ்டோடிலிய மூன்று நியம விதிகளையும் கொண்டிருக்கும். கதைகூறும் முறையில் உலகளவில் ஏற்பட்டுள்ள சமகால மாற்றங்கள் மிகக்குறைந்த அளவிலேயே தமிழ்ச் சிறுகதைகளின் எடுத்துரைப்பு முறையில் உள்வாங்கப்பட்டுள்ளன…..” என்று கூறுகிற ஜிப்ரிஹாசன் தன் பல நிர்மானிப்புகளில் இந்த அதி நவீன எடுத்துரைப்பு முறையினைப் பிடிவாதமாகக் கையாண்டுள்ளார்.

எம். ஜி. சுரேஷ் சொல்வது போல “,,,,,,,,,,,,,,,,,நவீனச் சிறுகதைக்கு ஆரம்பம், நடு, முடிவு ஆகிய அம்சங்கள் உண்டு. பின் நவீனச் சிறுகதைக்கு இது கிடையாது. நவீனச் சிறுகதைக்கு மையம் உண்டு. அதாவது கதைக் கரு என்ற ஒன்று உண்டு. பின் நவீனச் சிறுகதைக்கு மையம் என்று எதுவும் இல்லைஇது ஒரு பிரதியை அதன் ஒற்றைத்தன்மையிலிருந்து விடுவிக்கிறது. கலையை அதன் சட்டகத்திலிருந்து வெளியேறி சுதந்திரமாக அலைந்து திரிய அனுமதிக்கிறது. எழுத்தின் பல்வேறு சாத்தியங்களை விரித்துப் போடுகிறது. . “ இக்கூற்று ஜிப்ரிஹாசனின் சில சிறுகதைகளுக்கு நெருக்கமாக வருகிறது

ஜிப்ரி ஹாசனின் எழுத்துகளில் மகா ஆடம்பரங்கள் இல்லை. அதிக இழிந்த மொழி களும் இல்லை தனது கதை, விளக்கம் மற்றும் பல குறிப்பு விபரங்களை முக்கிய பாத்திரங்களின் இயல்புகளை அவற்றின் நடத்தைகள் மூலமே வெளிப்படுத்த முயற்சித்துள்ளார். அதில் பல இடங்களில் வெற்றியும் கண்டுள்ளார். நேரடியாக சொல்லப்படும் சில நிர்மானிப்புகளில் தானும் ஒரு பாத்திரமாக ஆகிவிடுவது அவருக்கு சுலபமாக இருந்துள்ளது.

வெறுமனே கற்பனாவாத வெளிப்படுத்துதல்களில் அவருக்கு சம்மதமில்லை என்பதும் ஒரு புழுவுக்கு சிங்காரமான இறக்கைகள் வைத்துப் பார்ப்பதில் அவர் சமரசம் கொள்ளவில்லை என்பதும் புரிகிறது. மற்றது அவர் தன் கதைகளைத் தேடி விண்வெளிக்குச் செல்லவில்லை. தன்னைச் சுற்றியுள்ள மேய்ச்சல் வெளியிலேயே வேண்டியளவு மேய்ந்துவிட்டு ஆறுதலாக உட்கார்ந்து அசை போட்டிருக்கிறார்.

ஜிப்ரிஹாசனின் கதைப் பிரதிகளை படைப்பு அல்லது புனைவு என்னும் சட்டகத்துள் அடக்கலாமா என்பதிலும் எனக்கு தயக்கம் உண்டு, சம்பந்தப்பட்ட பாத்திரங்களை தேவையானவிடத்து பாவித்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதனாலேயே இவற்றை நிர்மாணிப்புகள் என குறிப்பிட்டேன்.

இனி நண்பர் ஜிப்ரிஹாசன் இத்தொகுதியில் மேய்ச்சலுக்குக் கூட்டி வந்திருக்கும் சில போர்க்குணம் கொண்ட ஆடுகளின் கொம்புகளை கொஞ்சம் சீவிப் பார்க்கலாம்.

03

மண்வாசகம் என்ற புனைவில் ஜிப்ரிஹாசனை நிச்சயமாக நாம் தரிசிக்க முடிகிறது பாலைவனத்துக்குச் செல்லவுள்ள மனிதர்களின் உள்ளார்ந்த இழிநிலை நோக்கு இங்கு பகிரங்கமாகப் பகிரப்பட்டுள்ளது. கானல் நீரும் காணாத கபோதிகள் நிறைவேற்றும் தீர்மானம் சும்மா இருந்த நம்மையும் அடிப்படைவாதிகளாக்குகின்றன

மே புதுன்கே தேசயஎன்ற கதை ஒரு அற்புதமான புனைவு ஆகும். வெறுமனே புனைவு என்று இதனை சொல்ல முடியுமாசம்பவங்கள் என்று சொல்லலாம் சம்பவங்களாக கதையை நகர்த்திச் சென்ற உத்தி இங்கு வெற்றியளித்துள்ளது இடையிடையே தூவியுள்ள மொழி விகடங்கள் புன்முறுவலோடும்மொழிஅவஸ்தைகள் கோபத்தோடும் உட்பாய்ச்சல் செய்துள்ளன உண்மையில் மம்மலி என்ற பாத்திரத்தை நம் தேசத்தின் தமிழ்மொழியில் பணிபுரியும் அரச ஊழியரின் ஒட்டுமொத்தமான ஒரு குறியீடாகவே காண்கிறேன். விகாராதிபதியால் பதிலளிக்க முடியா கேள்விகளுக்கு ஜிப்ரிஹாசனே பதிலளித்து விடுகிறார். ஆத்திரமூட்டும் இந்தப் பதிலை நம்மில் இலகுவாகத் தொற்ற வைக்க ஜிப்ரிஹாசன் எடுத்துக் கொண்ட சொற்கள் மூன்றேமூன்றுதான்இது பௌத்தரின் தேசம் என்றுஆயின் இதற்கு மிகச் சரியான பதில் மே சிங்ஹலே தேஷய என்பதுதான்.

நினைவின் மரணம் என்ற கதையில் திடீரென பெண்ணாக மாறிய ஜிப்ரிஹாசனை விநோதமாகப் பார்க்கிறோம். ஒரு ஆண் படைப்பாளி பெண் என்ற நிலையில் இருந்து கதை சொல்வது ஒரு ‘முரண்அணுகல்’ ஆகும். இதில் பல கதைசொல்லிகள் தோல்வியே அடைந்துள்ளனர;. வாஸந்தி ஆணாக இருந்து கதை சொன்னதை இரசித்த வாசக உலகம் பாலகுமாரன் பெண்ணாக மாறி கதை சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லைஇதே நிலை ஜிப்ரிஹாசனுக்கும் ஏற்பட்டுள்ளது. சில பெண்ணிய நுண்ணுணர்வுகள் ஆண் தன்மை கொண்டு தன்னை அறியாமலே வெளிப்படுதலே இதற்கு காரணம்இக்கதைக்கு எடுத்துக் கொண்ட கரு கூட மிகச் சாதாரணமானதே.

சலீம்மச்சிஎன்ற கதை இன்னொரு சிறப்பான உருவாக்கம் இதில் ஜிப்ரிஹாசன் ஒரு வித்தியாசமான பாத்திரத்தை நமக்கு அறிமுகம் செய்கிறார். மூன்றாம் பாலினமான சலீம்மச்சி போன்ற பரிதாபத்துக்குரிய ஜீவன்கள் ஓரிருவரையாவது நம் வாழ்வில் சந்தித்தே இருப்போம். தமிழ் சினிமாக்களில் இத்தகையோரை ஒரு இழிந்த நகைச்சுவைக்கு பயன்படுத்திக் கொள்வர். ஆயின் அவர்களின் மனவேதனை எவ்வளவு ஆழமானது.. சமூகத்தில் அவர்கள் மீது புரியப்படும் உள வன்முறை எத்துனை கொடுமையானது. சலீம்மச்சியின் பரிதாபகரமான முடிவு கண்டு நாம் அனுதாபப்பட்டாலும் கொடூர உலகிலிருந்து சீக்கிரம் அவன் விடைபெற்றது பற்றி ஒரு நிம்மதி அடைகிறோம் ஜிப்ரிஹாசன் மிக இலாவகமான வகையில் இக்கதையினை நகர்த்திச் சென்ற வகையிலும் அவர் பூசியுள்ள மிகையற்ற ஒப்பனையிலும் கதை உச்சம் பெற்றுவிடுகிறது.

மீதமிருக்கும் கனவுகளின் ஈரம்.. என்பது ஜிப்ரிஹாசனின் இன்னொரு மயிலிறகு. எல்லா பல்கலைக்கழக வாழ்விலும் இப்படி ஒரு மயிறகு கிடைப்பதுண்டு. அது குட்டி போடாமலே கருகுவதுமுண்டு. இப்படி பல கதைகள் படித்தும் கேட்டுமிருந்த போதிலும் ஜிப்ரிஹாசனின் இந்த குண்டூசி அனுபவம் ஒரு இன மாறுபாட்டு காதல்பிரிவாக சுருக்கென்று குத்தும் வலியுடன் உணர முடிகிறது. இதற்கு அவர் தேர்ந்தெடுத்த சொற்சுருக்க நடை பெரிதும் கைகொடுக்கின்றது … ‘’……….இப்படியே போனால் ஒருநாள் குர்ஆனுக்கும் தப்ஸீர் எழுதிவிடுவாள்…’’ என்று ஜிப்ரிஹாசன் கொஞ்சம் மிகை நினைப்பில் நம்மை பயப்படுத்தினாலும், ‘’…………அவளுடனான அந்த உறவில் மிகவும் அபாயகரமான கட்டத்தை நான் அடைந்திருப்பதை அன்றுதான் தீவிரமாக உணர்ந்தேன். அந்த வலியிலிருந்து என்னை மீட்க நான் எப்போதும் நேசிக்கும் இலக்கியத்தாலும் முடிந்திருக்கவில்லை. ……….’’ என்று நம்மை அனுதாபம் கொள்ள வைத்துவிடுகிறார். ஒரு குண்டூசியால் கீறி ஒரு மயிலிறகால் வருடிவிடும் உத்தி இங்கு நம்மை ஈர்க்கவைக்கிறது.

கம்யுனிஸ்ட் என்ற கதை ஜிப்ரிஹாசனின் சிங்களதமிழ் மையல்விசைக் கதையாகும்வளாக வாழ்வில் புகுந்த யாழினியின் வார்ப்புஅவள் மீதான ஒரு ஈர்ப்பை நமக்கு ஏற்படுத்தி மிகுந்த எதிர்பார்ப்புகளோடு கதை நகர்ந்து செல்கையில் திடீரென அவளுக்கும் சுமனதாச சேருக்கும் இடையில் பொத்துக் கொண்டு எழுந்த காதல் யாழினியின் மீதான வார்ப்பில் ஒரு இடறலை தருகிறது தவிரவும் யாழினி சுமனதாச சேரின் வயதை விசாரித்த போது

‘’……….‘ஒருமுப்பத்தஞ்சி’…‘எனக்கு இருபத்திமூணு’ என்றுவிட்டுசிரித்தாள்…..அந்தச்சிரிப்பில் ஒரு குழைவு இருந்தது. ஒருகனவுஇருந்தது. ஒருவெட்கம் தெரிந்தது………………’’

என்று ஜிப்ரிஹாசன் எழுதும் இந்த இடத்திலேயே கதை முடியப் போகும் தரிப்பிடம் தெரிந்து விட்டது.. போர்க்குணம் கொண்ட பெண் ஒரு பூக்குணம் கொண்டவளாய் மாறியதை அறிந்து நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏனெனில் இதுதான் நிஜத்தில் அங்கு நடந்துள்ளது.

இரண்டு கரைகள் ஜிப்ரிஹாசனின் ஒரு இளமைக் கால நட்சத்திரக் கதையாகும். போர்க்காலப் பள்ளிக்கூட நாட்களை அதற்கே உரிய திகிலுடன் கூடிய ஒரு வசீகரத்துடன் சொல்லியிருக்கிறார். தன்னையே இதில் காண்பிப்பதால் அனுபவ நடை கைகொடுக்கின்றது. போர்க்கால இயக்கப் பொறுப்பாளர்களின் நடத்தைகளில் சில விமர்சனங்கள் இருந்த போதிலும் பல நல்ல செயற்பாடுகளும் சினிமாத் தனமான சில சம்பவங்களும் இருக்கத்தான் செய்தன. சிங்களப் பாடசாலை தமிழ் பாடசாலை ஆகியதும் தமிழ் முஸ்லிம் கலவன் பாடசாலை முஸ்லிம் பாடசாலை ஆகியதும் அக்கிராமத்தின் போராதிக்கத்தின் விளைவுகளாகும்.

‘’…………..ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் சந்தரப்பங்களிலிருந்து நாங்கள் தூரமாகிவிட்டிருந்தோம். இப்படியே பலநாட்கள் கழிந்ததில் எங்கள் முகங்கள் ஒருவருக்கொருவர் மறந்துபோயிற்று. பள்ளிக்கூடத்தினுள்ளேயே எங்கள் உறவுகள் மடிந்துவிட்டன. அதற்குள்ளேயே எங்கள் கனவுகளும் மடிந்தன. எங்கள் வாழ்வும் அதன் இயல்பை இழந்து போனது……………….’’ என்று ஜிப்ரிஹாசனோடு சேர்ந்து நாமும் ஆதங்கப்படுகிறோம்

04

….நான் புத்தகங்களின் காட்டில் மூளையை அடகு வைத்தவன்—“ என்று ஜிப்ரிஹாசன் தன்னிலை விளக்கம் தரும் போதும் “………. ஈழப்படைப்பாளிகள் பரந்த வாசிப்பாளர்களாகவும் மனித வாழ்வை நுணுக்கமாக அணுகுபவர்களாகவும் மானுடத்தை முழுதளாவிய அணுகுமுறைக்குட்படுத்துபவர்களாகவும் மாறாதவரை இந்த நிலைமையை மாற்ற முடியாது………..” என்று அவர் விசனிக்கும் போதும் ஒரு எழுத்துப் போராளியாக போர்க்குணம் கொண்ட ஆடாக அவர் உருமாறி வருவது நமக்குப் புரிகிறது.

………புனைபிரதிகளில் புரட்சிகரமான மாற்றங்கள் உள்வாங்கப்படுவதை நான் விரும்புகிறேன். கதைசொல்லிகள் பழைய பல்லவிப் பயணத்தையே நீட்டிக்கொண்டிருக்க வேண்டுமா அல்லது புதிய பாதைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வதா என்பது கதைசொல்லிகளின் சுதந்திரத்தின் பாற்பட்டது.,,’’, என்று தன்பக்க வாதத்தை முழக்கும் ஜிப்ரிஹாசன் சிறுகதைகள் என்ற பெயரால் சொற்சிலம்பாட்டம் ஆடாமல் அளந்தெடுத்த எழுத்துத் துப்பாக்கியால் ‘பட்பட்’டென்று சுட்டு விடுகிற அவரது எழுத்துச் சண்டித்தனத்தை இரசிக்கலாம்.

ஈழத்து சிறுகதை தளம் மீது நண்பர் ஜிப்ரிஹாசன் செய்கிற இந்த எழுத்துப் போர்ப்பிரகடனம் புதிய மேய்ச்சல் வெளிகளை நமக்குத் தரும் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை.. நண்பர் ஜிப்ரிஹாசனுக்கு நமது வாழ்த்துக்கள்.

உள்சுழித்து வளரும் அலை, எறும்புகள் விசேஷமானவை – இரா.கவியரசு கவிதைகள்

உள்சுழித்து வளரும் அலை
வாசனை
தூங்கமுடியாத நோயைப் பரப்புகிறது
இருக்கைக்குப் பின் அமர்ந்து
உந்தித் தள்ளுகிறது காமம்
வாகனங்கள் சீறிப் பாய்கின்றன.
ஒவ்வொரு வீட்டையும்
ஏக்கத்தோடு பார்த்து நகர்பவன்
மெல்லிய ஒளி கசியும் அறைகளிலிருந்து
வெளிவரும் காற்றை
நுரையீரலுக்குள் இறக்குகிறான்
ஓரிடத்தில் நில்லாமல்
விளையாடும் குறுஞ்சுடர்
பாலைமணலாக உடைக்கிறது அவனை.
தற்காப்புக்காக வைத்திருக்கும் கத்தியால்
சுடரை வெட்டுகிறான்
அது அவனை ஊதிச் சிரிக்கிறது.
உள்சுழித்து வளரும் அலை
காயங்களின் இச்சை மீது
கத்தியைச் செருகும் கணங்களில்
நுரைத்துப் பொங்குகிறது கடல்.
விண்மீன்களைப் பிய்த்தெறியும் வேகத்தில்
மேல்நோக்கிச் செல்லமுடியாமல்
வீடுகளை இழுத்துப் பிடித்து வைத்திருக்கும்
பூமியை முத்தமிடுகிறான்
விடியல் வந்து கொண்டிருக்கிறது
அவன் மிகவும் புதியவனாக
அதே வீடுகளின் வழி
போர்வைகள் விற்பவனாக
செல்லும் போது
குரைப்பதை மறந்து
சிரிக்கின்றன நாய்கள்
​​எறும்புகள் விசேஷமானவை
கோடிக்கணக்கான
கவிதை எறும்புகள்
பூமியெங்கும் நகர்ந்து செல்கின்றன.
ஒரு முறை நகர்ந்தாலே
தடங்கள்
கூகுள் மேப்பில் வந்துவிடுவதால்
வானத்திலிருந்து கடவுள் கவனித்துக் கொண்டிருப்பதாக நம்பிய பிறகு
விஷேச எறும்புகளாக மாறி
மரங்கள் தோறும்
துளையிட்டு ஊதுகின்றன.
எறும்புகள் வாசிக்கும் இசை
காட்டு விலங்குகளுக்கு
பெரும்பாலும் புரிவதில்லை
கோபத்துடன் உறுமும் போது
எறும்புகள்
தலையைக் காப்பாற்றிக் கொள்ள
பூமிக்கடியில் பதுங்குகின்றன.
எறும்புகளுக்கு
டைனோசராக மாறி
அச்சுறுத்தும் விலங்குகளைத்
தெறிக்க விட வேண்டும் என்பது
கால்கள் முளைத்த நாளிலிருந்து
சொல்லித்தரப் பட்டிருக்கிறது.
ஒவ்வொரு முறையும்
நசுங்குதல் தவிர
வேறெதுவும் பெரிதாக
நிகழ்ந்து விடுவதில்லை.
எப்போது எங்கு சென்றாலும்
எறும்புகளைத் தேடிப் பிடித்து
தின்று  செரிப்பவர்கள்
எறும்புத்திண்ணிகள் அல்ல
அவர்கள்
எறும்புகளை விடவும் விஷேசமானவர்கள்
லட்சம் எறும்புகள் சேகரித்தும்
வாழ்நாள் முழுதும் ஆராய்ச்சி செய்தும்
ஒரு  எறும்பாக மாறமுடியாதது குறித்து
கோபத்தில் இருக்கும் போது
அவர்களின் தலையிலிருந்து
முடியைப் பிடுங்கி விளையாடும்
இந்தக் குறும்பு எறும்புகளை
என்னதான் செய்வது ?

ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை

இன்று ஓப்பன் பண்ணியே ஆகவேண்டும்” என்று அஜய் முணுமுணுத்துக்கொண்டே வண்டியை முறுக்கினான்.

*

அஜய் பேட்ஸ்மன் இல்லை. பவுலர். புரொபசனல் கிரிக்கெட்டரும் அல்ல. வாரம் முழுவதும் நைட் ஸிப்ட் பார்த்துவிட்டு சனிக்கிழமை காலையில் கிரவுண்டிற்கு முதல் ஆளாக வரும் ஐடி ஊழியர்களுள் ஒருவன். சென்னைக்கு வந்த முதல் வருடம் அவனது கம்பெனியில் கிரிக்கெட் போட்டி அறிவித்தார்கள். போட்டி பற்றிய அறிவிப்பு வந்த உடன் அவனது அணியில் எல்லோரும் எப்படி பரபரப்பானார்கள் என்று அடிக்கடி அஜய் நினைத்துப்பார்ப்பான். யாரெல்லாம் புதிதாக சேர்ந்திருந்தார்களோ அவர்கள் எல்லோரிடமும் கிரிக்கெட் விளையாடுவாயா என்று மேனேஜர் கேட்டார். அஜய் “விளையாடுவேன்” என்று சொன்னவுடன் “பேட்ஸ்மனா?” என்றார். “இல்லை பவுலர்” என்றவனை ஒரு நொடி ஆச்சர்யமாய்ப் பார்த்துவிட்டு “சரி, சனிக்கிழமைக் காலை எம்சிசி கிரவுண்டிற்கு வந்துவிடு. ‘நெட்ஸ்’ இருக்கு.. ஈஸ்ட் தாம்பரம் ஆப்போஸிட்டில் இருக்கிறது” ஒரு சிரிப்போடு அவர் சொல்லிவிட்டுப் போனார். அவர் ஏன் சிரித்தார் என்று அஜய்க்கு புரிந்தது.

கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே அஜய்க்கு இது பழகிப்போன விசயம். முதலாம் ஆண்டின் முதல் வகுப்பில் எல்லோரின் பெயரையும் ஊரையும் கேட்டு வந்த பேராசிரியரிடம், “பேரு அஜய், ஊரு எம்.காட்டாம்பட்டி” என்றான். “என்னடா.. பேருக்கும், ஊருக்கும், ஆளுக்கும் சம்பந்தமே இல்லையே” என்று சொல்லி சிரிக்க மொத்த வகுப்பும் சிரித்தது. “பேரு அஜய்.. ஊரு காட்டுப்பட்டி.. ஹாஹாஹா..அது என்ன எம்.காட்டாம்பட்டி..ஹாஹ.. ஊருக்கு இனிசியல்லாம்” பேராசிரியர் விடுவதாக இல்லை. அஜய்க்கு கோபம் வந்தது. சட்டென்று,”அது ஒரு சுதந்திரப் போராட்ட வீரரோட நினைவா வச்சுருக்காங்க சார்.. அவரு பேரு மணவாளன் தியாகி.. எங்க ஊர்ல இருந்து சுதந்திரப் போராட்டத்துல கலந்துகிட்டு உயிர் நீத்தவர்.. அவரோட பிள்ளைகளா எங்க ஊர்ல இருக்கவங்க நினைக்குறோம்.. அதான் எம். இனிசியல்..” என்று சொல்லிவிட்டு அவரையே பார்த்தான். பேராசிரியர் முகம் சுருங்கியது. வகுப்பில் அமைதி. அஜய்க்கு ஒரே சந்தோசம். தனக்குத் தோன்றிய அந்த திடீர் கதையை நினைத்து சிரிப்பை அடக்கமாட்டாமல் தலையைக் குனிந்து நின்றான். “சரி உட்க்கார்” என்றவர் அதன் பிறகு அவனிடம், கல்லூரி முடியும் வரை, ஒரு சிறு மரியாதையோடு நடந்துகொண்டதாக பலரிடம் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொள்வான் அஜய்.

சனிக்கிழமை கிரவுண்டிற்குப் போனபோது அனேகமாக எல்லோருமே வந்துவிட்டிருந்தனர். எப்படியும் டீமில் எடுக்க மாட்டார்கள் என்று நினைத்து அவசரமில்லாமல் பொறுமையாக கிளம்பிப் போனவனிடம் “என்னய்யா இதான் டைம்மா. ஆபிஸுக்குத்தான் டைம்க்கு வர மாட்றீங்க விளையாடக்கூடவா.. இந்தா பவுலிங் போடு“ எனப் பந்தைக் கொடுத்தார் மேனேஜர்.

அஜய் சற்று குழம்பித்தான் போனான். “எப்போதும் தன்னைப் பார்த்துதானே குழம்புவார்கள் இது என்ன புதுக்கதை” என்று நினைத்துக்கொண்டே சுற்றி மற்றவர்களைப் பார்த்தான். எல்லோர் முகத்திலும் ஒரு மெல்லிய கிண்டல் மறைந்திருந்தது. இந்த தொப்பையை வைத்துக்கொண்டு ‘என்னத்த போடப்போறான்’ என்பதைப்போல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். மேனேஜர் பவுலிங் போடச் சொன்னது கேப்டனுக்கு. ஒருவேளை நன்றாகப் போட்டால் டீமில் எடுத்தாலும் எடுப்பார்களோ என்று யோசித்துக்கொண்டே ‘ரன்அப்பை’ சரி பார்த்தான்.

பாஸ்ட் பவுலரா” என்று மேனேஜர் கேட்டார். “

ஆமா சாஜி, ரைட் ஆர்ம் மீடியம் பார்ஸ்ட்”, “ம்க்கும்” என்று யாரோ சொன்னதுபோல் அவனுக்கு கேட்டது.

முதல் பால் புல்டாஸானது. ஆனால வேகம் நன்றாக இருந்ததால் கொஞ்சம் நம்பிக்கையாய்ப் பார்த்தார் மேனேஜர். அடுத்த பாலைப் போடத் திரும்பியவனிடம். “ஸ்பீட் ஓகே.. பட் குட் லெந்த்ல போடு” என்றார்.

அடுத்தப் பந்து ‘யார்கராய்’ விழுந்தது. சரியாக கேப்டனின் டோவில் அடிக்க அவர் வலியில் காலை உதறிக் கீழே விழுந்தார். “சூப்பர்.. சூப்பர் அஜய்” என நெட்ஸுக்கு வெளியே இருந்து மேனேஜர் கத்துவது கேட்டு அஜய் உற்சாகமானான். “செம யார்க்கர்டா” என டீமில் மற்றவர்களும் பாராட்டினர்.

அடுத்த இரண்டு பந்துகளும் யார்க்கர்ஸ். கேப்டனால் ‘ப்ளாக்’ மட்டுமே செய்ய முடிந்தது. சாஜி இம்ப்ரஸ் ஆகிவிட்டார். ஒரு ஓவர் போட்டுவிட்டு அடுத்தவரிடம் பந்தைக்கொடுத்தவனைப் பார்த்து “வெல் டன் டா.. ஆறு பாலும் கன்டினியஸா எப்படி யார்க்கர் போட்ட.. ஐ எம் இப்ரஸ்ட்.. இந்த வருசம் மேட்ச்சல நீ இருக்க.. ரெடியாயிக்க” என்று சொல்லிவிட்டு கேப்டனிடம் பேசப் போனார்.

அஜய் வாயெல்லாம் பல்லாக சிரித்தாலும் உள்ளூர ஒரு சின்ன உறுத்தல் இருப்பதை வெளியே காட்டமல் இருக்க சற்று சிரமப்பட்டான்.

ஆறு பாலும் எப்படிடா யார்க்கர் போட்ட..?” அவனுக்கே தெரியாது என்பதுதான் உறுத்தலுக்குக் காரணம். பந்தைப் போட ஓடிவரும்போது குட் லெந்தில் போடவேண்டும் என்று குட் லெந்த் இடத்தையே பார்த்துக்கொண்டு ஓடிவந்தாலும் பந்து கையை விட்டு வெளியே போய் யார்க்கராகத்தான் விழுந்தது. அடுத்த பால் நினைத்த மாதிரி போடுவோம் அதற்கு அடுத்தபால் போடுவோம் என்று ஒரு ஓவர் முழுவதும் யார்க்கர்தான்.

எது எப்படியோ மேனேஜர் ஹேப்பி. டீமில் இடம் கிடைத்ததால் அவனும் ஹேப்பி.

அதன் பிறகு அணியில் முக்கிய நபராகிப் போனான் அஜய். டீமில் சேர்ந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. நிறையத் தோல்விகள், சில வெற்றிகள், சின்ன சின்ன சண்டைகள், பல விலகல்கள், புதியவர்கள் வருதல் என பல விசயங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன. அஜயின் பவுலிங் பற்றின சந்தேகங்களும் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருந்தன என்பதில் அவனுக்குத் வருத்தம். அது நன்றாக விளையாடாதபோது அதிகமாகும், நன்றாக விளையாடும்போது அதைவிட அதிகமாகும். கிரிக்கெட் போன்ற விளையாட்டு எப்போதும் ஒரே மாதிரியான சந்தோசத்தையும் துக்கத்தையும்தான் விளையாடும் எல்லோருக்கும் தரும். ஒரு சர்வதேச வீரருக்கும் அஜய் போன்று ஜாலியாக விளையாடுபவருக்கும் ஒரே வித்யாசம் அவர்களின் விளையாட்டில் இருக்கும் தரம் மட்டும்தான். மற்றபடி சந்தோசம், துக்கம், ஏமாற்றம், சோர்வு எல்லாமே விளையாட்டை நேசித்து விளையாடும் எல்லோருக்கும் பொதுதான். ஆனால் அஜய் விசயத்தில் இது அப்படியே நேர்மாறாக நடப்பதாக நினைத்தான்.

ஒரு மேட்ச்சில், ஒரு இடைவெளிக்குப் பிறகு,பவுலிங்கை ஓப்பன் செய்தான். முதல் பந்தை எதிர்கொள்ள நின்றவர் நல்ல உடற்கட்டுடன் இருந்தார். அடிக்க வசதியாக போட்டால் எல்லா பந்துகளையும் சிக்ஸர்தான் அடிப்பார் என்பதுபோல் இருந்தது தோற்றம். அஜய் அவருக்கு “மிடில் அண்ட் ஆப்பில்” போட வேண்டும் என்று முடிவு செய்து ஓவரின் முதல் பந்தைப்போட்டான். ஆனால் கையிலிருந்து பந்து வெளியேறும்போதே தவறு செய்துவிட்டோம் என்று தெரிந்துவிட்டது. உள்ளங்கையில் இருந்து போகையில் அது லெக் ஸ்டம்பை நோக்கி போகப்போகிறது என்று தெரிந்தததால் முழுவதுமாக போவதற்குள் நான்கு விரல்களாலும் ஒரு சிறு அழுத்தம் கொடுத்தான். பவுன்ஸ் ஆகும் என்று நினைத்து அப்படிச் செய்தான். பந்து அவன் முதலில் நினைத்தது போலவே லெக் ஸ்டெம்ப் லைனில் விழுந்தது. ஆனால் அவன் எதிர்பாராதவிதமாக ஸிவிங் ஆகி உள்ளே வந்து ஆப் ஸ்டம்பைத் தட்டியது. அஜையை போலவே பேட்ஸ்மனும் அதை எதிர்பார்க்கவில்லை முதல் பந்திலேயே போல்ட். போல்ட் எடுத்ததை நம்பமுடியாமல் வாய்விட்டுச் சிரித்தான் அஜய். அவன் மட்டுமல்ல டீமில் இருந்த எல்லோருமே சிரித்தார்கள். எல்லோருக்குமே அது மோசமான பந்தாக, பவுண்டரிக்கோ சிக்ஸருக்கோ போகவேண்டியது, தப்பித்தது என்று தெரிந்திருந்தது.

அஜய் அந்த மேட்ச் முழுவதும் நன்றாகப் பந்து வீசினான். இன்ஸிவிங், அவுட்ஸிவிங் என பந்து இரண்டு பக்கமும் திரும்பியது. “மேட்” புதிதாக இருந்ததும் ஒரு காரணம். அவனின் பந்துவீசும் முறையும் ஒரு காரணம். பந்து வீச ஓடத் தொடங்கும் முன் ஒரு குதி குதித்துவிட்டு ஸ்டம்ப் அருகில் வரும்போது கழுத்தை இடப்பக்கம் திருப்பி கையை வலதுபக்கமாய் சாய்த்து வீசுவான். பந்து தரையில் குத்தியவுடம் பேட்ஸமனை நோக்கித்தான் வரும். வெளியே போகாது. ஆனால் அன்று இரண்டு பக்கமும் எப்படி திரும்பியது என்று வழக்கம்போல் அவனுக்கே தெரியவில்லை. யூடியூப்பில் எப்படி ஸிவிங் செய்வது என்று பார்த்துவிட்டு வந்துபோட்ட போதெல்லாம் கோட்டைக் கிழித்து அதன் மேலேயே போவதுபோல் நேராக போகும், இன்றைக்கு என்ன ஆனது என தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். அதை அருகில் இருந்து கேட்டதுபோல் கேப்டன் “உன் கன்ட்ரோல்லதான் இருக்கா இல்லா அதுவா ஸிவிங் ஆகுதா” என்று கேட்டார். சிரித்துச் சமாளித்தாலும் உள்ளூர எரிச்சல் அடைந்தான். “அது என்ன.. தன்னிடம் மட்டும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இப்படி சந்தேகமாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எப்படி போட்டால் என்ன.. நன்றாக போடுகிறேனா இல்லையா… இவர்கள் பவுலிங் போடும்போதோ பேட்டிங் ஆடும்போதோ நான் இப்படிக் கேட்டால் ஒத்துக்கொள்வார்களா” மனதிற்குள் குமைந்தான். அவரிடம் எதுவும் கேட்க்கவில்லை.

அப்போட்டிக்குப் பிறகு அவன் நன்றாக விளையாடினால் மற்றவர்களின் குறைகளைக் குத்திக்காட்ட ஆரம்பித்தான். டீமில் எப்போதுமே நன்றாக விளையாடியவர்கள் பேசும்போது திரும்ப பேசமாட்டார்கள். அதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஒருவரையும் விடாமல் பழித் தீர்த்துக்கொண்டான் அஜய். அவர்களும் பதிலுக்கு அவன் ‘பார்ம்அவுட்’ ஆன சமயங்களில் பவுலிங்கை ஓப்பன் செய்யவிடாமல் பந்து நன்றாக தேய்ந்து பழையதானவுடன் கொடுப்பார்கள். எப்படிப் போட்டாலும் பேட்ஸ்மனின் முன் போய் நின்று “ம்ம்.. அடி” என்கும்.

*

அஜய் கிரவுண்டிற்கு போனபோது யாரும் இல்லை. ‘கிட் பேக்கை’ வைத்துவிட்டு ‘ஸ்ட்ரெச்’ செய்தான். கிரவுண்டை சுற்றி ஒரு முறை ஓடி வந்தான்.

நன்றாக வார்ம் அப் ஆகவேண்டும். இத்தனை நாள் போடாத வேகத்தோடு போடவேண்டும்” போன மேட்ச்சில் நான்கு ஓவரில் முப்பத்தி ஏழு ரன்கள் கொடுத்ததிற்கு டீமில் சீனியர்கள் கிண்டல் செய்ததுதான் அவனின் இந்த ஆவேச பயிற்சிக்கு காரணம்.

டாஸில் வென்று அஜய் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. கேப்டன் உள்ளே போவதற்கு முன் பேசும்போது இன்னைக்கு “மேட் புதுசு போட்ருக்காங்க பந்து நல்லா வரும். ஒழுங்கா போடலன்னா அடியும் செமயா வாங்குவோம்.. அதுனால சேசிங் எடுத்தேன்.பவுலர்ஸ் ஒழுங்கா போடுங்க” என பவுலர்களைப் பார்த்து பேசினார்.

அஜய் ஆர்வத்தோடு சரி என்று தலையாட்டிவிட்டு எல்லோருக்கும் முன் உள்ளே ஓடினான்.

கீப்பரும், கேப்ட்டனும் பீல்டிங்கை செட் செய்தார்கள். எல்லோரையும் நிற்க வைத்துவிட்டு அஜையை பார்த்து, நீ தேர்ட் மேன் போ என்றார்கள்.

ஏமாற்றமாக இருந்தாலும் தேர்ட் மேன்னாய் நிற்பதால் அடுத்த ஓவர் போடச் சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில் போய் நின்றான்.

ஆனால் அஜய்க்கு மேட்ச் முடியும்வரை ஓவரே தரவில்லை. அவனே இரண்டு முறைப் போய் கேட்ட பிறகும் “இரு வெய்ட் பண்ணு” என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். அவனால் நம்பவே முடியவில்லை. இத்தனை வருடங்களில் இதுதான் முதல் தடவை அவனுக்கு பந்து வீச வாய்ப்பே கிடைக்காமல் போனது. முதல் பாதி முடியும்போது கிளம்பி வீட்டுக்குப் போய்விடலாம் என்று கூட நினைத்தான். கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக ஒரு மூலையில் போய் உட்கார்ந்துகொண்டான்.

எதிரணியினர் இருபது ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு நூற்றி நாற்பத்தி ஏழு ரன்கள் எடுத்தனர்.

அஜய் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் நன்றாக ஆரம்பித்தனர். முதல் விக்கெட் ஆறாவது ஓவரில் விழுந்தது. ஸ்கோர் 36/1.

பின் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன.

பவுலிங் தராததால் பேட்டிங் கிடைக்கலாம் என்று ஒரு கணம் யோசித்தான். யாரிடமும் எதுவும் கேட்க்கவில்லை. தந்தால் அவர்களாகவே தரட்டும் என்று காத்திருந்தான்.

பத்து ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் முடிவில் எழுபது ரன்கள் எடுத்தனர். இன்னும் அறுபது பந்துகளில் எழுபத்தி ஏழு ரன்கள் தேவை.

அஜய்க்கு ஓவர்கள் போக போக கோபமும் எரிச்சலும் அதிகமாகிக்கொண்டே வந்தன. ஒரு மேட்ச் முழுவதும் எதுவுமே செய்யாமல் வீட்டிற்குப் போவற்குப் பதில் வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்ற கடுப்புடன் விக்கெட்டுகள் சீக்கிரம் விழ வேண்டத் தொடங்கினான்.

பதினைந்தாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன. அதுவரை நன்றாக ஆடி வந்த கேப்ட்டன் அவுட்டானார். எளிதாக வெற்றி பெறும் சூழ்நிலை மாறி அணி தடுமாறத் தொடங்கியது.

ஒரு வழியாக அஜய்க்கு வாய்ப்பு கிடைத்தது. இருபதாவது ஓவர். அவனுக்குப் பின் ஒரு விக்கெட் இருந்தது. வெற்றி பெற பதினைந்து ரன்கள் தேவை. அனேகமாக மேட்ச் கையைவிட்டு போய்விட்டதுபோலத்தான்.

அஜய்க்கும் பெரிய நம்பிக்கை இல்லை. இப்படி வாய்ப்பு கிடைத்ததிற்கு கிடைக்காமலே இருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டே நான் ஸ்ட்ரைக்கரில் போய் நின்றான். எதிர் முனையில் நின்றிருந்த சீனியர் எதுவும் இவனிடம் சொல்லவில்லை. ரிசல்ட் தெரிந்துவிட்டது என்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டிருந்தார். அஜய் க்ரீசிற்குள் நன்றாக பேட்டை தள்ளி வைத்து நின்றுகொண்டான். போன மாதம் ஒரு முறை ‘மேன்கேட்’ முறையில் அவுட்டானதை அவன் மறக்கவில்லை. முதல் பந்தில் ஒரு ரன் ஓடினார்கள். ஓவரின் இரண்டாவது பந்தை அஜய் எதிர்கொண்டான். ‘ஷாட் பிட்ச்’ பால்தான். ஆனால் பேட்டை தூக்கி பந்திற்கு வருவதற்குள் பந்து எழும்பாமல் வந்து காலில் அடித்து ‘ஷார்ட் பைன் லெக்கிற்குப்’ போனது. ஒரு ரன் ஓடினார்கள். நல்லவேளை ‘எல்பிடபில்யூ’ ஆகவில்லை என்று நினைத்துக்கொண்டான். அடுத்த ஒரு ரன் எடுத்தார்கள். மூன்று பந்துகள் மீதமிருந்தன. முதல் மூன்று பந்துகளில் மூன்று ரன்கள். வெற்றிக்கு இன்னும் பன்னிரெண்டு ரன்கள் வேண்டும்.

அஜய்க்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்றிருந்தது. ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொள்வதற்கு முன்னால் வெளியே நிற்கும் தன் அணியினரைப் பார்த்தான். எல்லோரும் இவனையே பார்த்துகொண்டிருந்தார்கள்.

பவுலர் ஓடிவரத்தொடங்கினார்.

அஜய் ஒரு முடிவெடுத்தவனாய் இறங்கி வரத் தொடங்கினான். பந்து வரும்போது ஏறக்குறைய பிட்ச்சின் நடுவில் இருந்தான். ஹெல்மட் போடாமல் அவ்வளவு தூரம் இறங்கி ஆடுவது ஆபத்தான விசயம். வெறி வந்தவன்போல் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பேட்டை லாங் ஆன் திசையை நோக்கிச் சுத்தினான். பந்து அவன் பேட்டில் பட்டவுடன் ரன் எடுக்க ஓடியவன் இரண்டாவது ரன் ஓடி முடித்தபோதுதான் பந்து பவுண்டரிக்கு போனதைப் பார்த்தான்.

வெளியே நின்றுகொண்டிருந்த அணியினர் உற்சாகமானார்கள். “கமான் அஜய்.. யு கேன் டூ யிட்“ என்று கத்தினர்.

அடுத்தப் பந்தையும் அதே மாதிரி இறங்கி வந்து எதிர்கொண்டான் அஜய். இந்த முறை ‘லாங் ஆப்’ திசையில் நான்கு ரன்கள். திடீரென்று பரபரப்பானது ஆட்டம். வெளியே இருந்து “கமான் அஜய் கமான் அஜய்” என்று கத்தத்தொடங்கினர். எதிரணியினர் பவுலரிடம் சென்று பேசினர்.

அவனுக்கு நெஞ்சு பட பட என்று அடித்தது. அவன் காதெல்லாம் அடைத்தது சுத்தி என்ன நடக்கிறது என்று புரியாததுபோல் ஒரு மெல்லிய நடுக்கத்தோடு அடுத்தப் பந்தை எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்கத்தொடங்கினான். இந்தப் பந்தையும் இறங்கி ஆட வேண்டாம், எப்படியும் ஆப் ஸ்டம்பிற்கு வெளியேதான் போடுவார்கள் நின்ற இடத்தில் இருந்தே அடிப்போம் என்று முடிவு செய்தான். நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த “சீனியர், என்னடா பண்ற.. ட்ரை பண்ணு” என சிரித்தபடி தட்டிக்கொடுத்தார்.

கடைசி பந்தைப் போட பவுலர் ஓடி வந்தார். ஒரு பால். நான்கு ரன்கள். அதுவரை எவ்வளவு நன்றாக விளையாடினாலும் கிண்டலாகவும், சந்தேகத்தோடும் பார்த்து வந்த அணியின் முன் நிரூபிக்க, தனக்கு பவுலிங் மட்டுமல்ல. பேட்டிங்கும் வரும் என்று சொல்ல ஒரு வாய்ப்பு.

பவுலர் பந்தை வீசினார். கடைசி நொடியில், இதையும் இறங்கி வந்தே ஆடலாம் என்று முடிவு செய்து ஒரு அடி எடுத்து வைத்தான். அதற்குள் பந்து வந்துவிடவே முன்னேயும் போக முடியாமல் பின்னாலும் வர முடியாமல் இரண்டிற்கும் நடுவில் மாட்டிக்கொண்டு எந்த திசையில் அடிப்பது என்பதையும் முடிவு செய்ய நேரம் கிடைக்காமல் அப்படியே நின்றுவிட்டான். நான்காவது, ஐந்தாவது பந்துகளை இறங்கி வந்து ஆடியதால் பவுலர் பிட்ச்சின் நடுவிலேயே பந்தைக் குத்தி பவுன்சர் போட்டார். பேட்டை விட்டிருந்தால் எட்ஜ் வாங்கிக் கூட தேர்ட் மேன் திசையில் பவுண்டரி கிடைத்திருக்கும்.

பந்து விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் அடைந்தது.

நான்கு ரன்கள் வித்யாசத்தில் தோல்வி. அஜயின் கண்கள் கலங்கின. எல்லோரும் வந்து கை கொடுத்தார்கள். நன்றாக முயற்சி செய்தான் என்றார்கள். நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த சீனியர், அம்பயர்கள், எதிரணியினர், அவனின் அணியினர் என எல்லோருமே பாராட்டினார்கள். அவனுக்குத்தான் மனம் ஆறவேயில்லை. “நல்லா ஷார்ட்டாதான வந்தது .. டீப் ஸ்கொயர் லெக்ல ஒரு புல் ஆடுவீங்கன்னு நினச்சேன்.. ஏன் மிஸ் பண்ணீங்க” எதிரணி விக்கெட் கீப்பர் தோளில் தட்டி கேட்டுவிட்டுப் போனார்.

எப்படி அந்தப் பந்தை விட்டேன்னு தெரியல..” என்று தன் அணியில் ஒவ்வொருத்தரிடமும் புலம்பினான். “எல்லோரும் பரவால்ல விடு…. நல்ல ‘ட்ரை’தான்” என்றனர். ஒருவர் கூட வழக்கமான கிண்டலைச் செய்யவில்லை. அதில் ஒரு சிறு சந்தோசமடைந்தாலும் அவனுக்கே முதன் முறையாக அவன் மேல் சந்தேகம் வந்தது.

தான் நினைத்தபடி ஒரு நாளும் தன்னை விளையாட அனுமதிக்காதா இந்த விளையாட்டு”. என்றிருந்தது அவனுக்கு.

கிளம்பும்போது என்றுமில்லாத அளவு சோர்வாய் உணர்ந்தான் அஜய்.

வானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் – பவித்ரா கவிதைகள்

வானெங்கும் நெடுவனம்

நிலவை களிமண்னெனப்
பிசைந்து
குழந்தையிடம் கொடுத்து விட்டேன்
ஒளியற்ற இருள்
புலம்பி புலம்பி
அழுதப்படியே நடக்கிறது.
நட்சத்திரங்களை பிடுங்கி
களிமண்ணில் புதைத்து
வீசியெறிகிறது பிள்ளை.
திமுதிமுவென
கிளர்ந்தெழுகிறது பெருவனம்.
கண்ணீரில் உப்பியக்
கிளையொன்று
அசைந்து அசைந்து
மேகத்தை தூசென துடைக்க,
சிலிர்த்து சிரிக்கிறது வானம்.
இப்போது
மண்ணை கழுவிய குழந்தையின்
கரங்களில் அப்பியிருப்பதெல்லாம்
வெறும் நிலாவாசம்.

 

புழுத்தாய்

உறக்கத்திற்கும்
உலாவலுக்குமிடையே
அலுத்துக்கிடக்கும்
சிறுஉயிரென்னை
கைகளில் ஏந்தி
மூலையில் கிடத்தி
துளசியூறிய நீரென
எனதெச்சில்லை சுவைக்கும்
ஈயாகிறது நான்
மார்ப்பிடுக்கில் துடைக்காத
ஈமப்பாலொழுக்கை

நக்கியுண்ணும்
சரீரப்புழுவிற்கு
இன்று நான் தாய்