கலைச்செல்வி

மிலியின் சகோதரன்

கலைச்செல்வி

அன்று மோகன்தாஸ் காந்தியை கைது செய்திருந்தார்கள். 1908 ஆம் ஆண்டின் அந்த ஜனவரி பத்தாம் நாளன்று ஜோஹானஸ்பர்க்கின் ஃபோர்ட் பிரிசன் சிறையில் அவரை உடைகளை களையச்செய்து உடல் எடை பார்க்கப்பட்டு அவரது விரல் ரேகைகள் பதியப்பட்டன. பிறகு அவருக்கு சிறைக்கான உடைகள் அளிக்கப்பட்டபோது பொழுது நகர்ந்து மாலையாகியிருந்தது. இரவு உணவுக்காக எட்டு அவுன்ஸ் ரொட்டி கொடுத்து அவரை சிறையறைக்கு அனுப்பியபோது இலண்டனில் சட்டம் பயின்ற அந்த பாரிஸ்டருக்கு அது முன்பின் அறியாத புதிய அனுபவமாகவே இருந்தது. அவரை தவிர அவ்வறையில் பனிரெண்டு கைதிகள் இருந்தனர். அவர் கையோடு எடுத்துச்சென்றிருந்த பகவத்கீதையையும் டால்ஸ்டாய், சாக்ரடீஸ் ரஸ்கின் ஆகியோரின் புத்தகங்களையும் தம்மருகே வைத்துக் கொண்டார். இரவுணவுக்கு பின் மரப்பலகை படுக்கையில் படுத்துக் கொண்டார்.

டிரான்ஸ்வால் அரசாங்கம் கொண்டு வந்த புதிய ஏசியாட்டிக் அவசரச்சட்டத்தின்படி அங்கு வசிக்கும் இந்தியர்கள் அரசாங்கத்திடம் புதிதாக பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்பதிவுச்சான்றிதழை எந்நேரமும் தம்மோடு வைத்திருக்க வேண்டும் என்றும் பதிவுச்சான்றிதழ் இல்லாதவர்கள் கைது செய்யப்படவோ டிரான்ஸ்வாலுக்கு வெளியே அனுப்பப்படவோ வேண்டியிருக்கும் என்ற நிலைக்கு எதிராக செப்டம்பர் 11 ஆம் தேதி எம்பயர் தியேட்டரில் தெளிவான, தீவிரமாக, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால், அவரசச்சட்டத்தின் கசப்பான, கொடுங்கோலான பிரிட்டிஷ் இயல்புகளுக்கு மாறான உத்தரவுகளுக்கு கீழ்படிவதை விட டிரான்ஸ்வாலிலிருந்த ஒவ்வொரு இந்தியரும் சிறைவாசத்துக்கு தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று கூறியதன் பின்னணியில் நடந்த தொடர் போராட்டம் மோகன்தாஸுக்கு ஏராளமான ஆதரவாளர்களையும் சிறை தண்டனையும் பெற்று தந்திருந்தது.

நேட்டாலிலும் டிரான்ஸ்வாலிலும் அவர் கைதானதையடுத்து பல கடைகள் மூடப்பட்டன. அவரது ஐரோப்பிய நண்பர்கள் அவருக்கு ஆதரவாக கூட்டங்கள் போட்டு பேசினர். ரெவரண்ட் ஜோசப் டோக் காந்தியின் போராட்டத்தை மனசாட்சிக்கான வீரம் செறிந்த போராட்டம் என்று வர்ணித்தார். ஃபீனிக்ஸ் குடியிருப்பலிருந்த அவரது மனைவி கஸ்துார் மகன்களை தன்னருகே அமர்த்திக் கொண்டார். ஜோஹானஸ்பர்க்கின் பெல்லீவ்ஈஸ்ட்டில் அவருடன் ஒரே இல்லத்தில் தங்கியிருந்த அவரது உதவியாளரும் வழக்கறிஞருமான ஹென்றிபோலாக் எதையோ இழந்தது போல உணர்ந்தான். அவனது மனைவி மிலிகிரகாமுக்கு இதயத்திலிருந்து ஏதோவொன்று நகர்ந்தது போலிருந்தது. அவள் அதை தன் பழைய நினைவுகளால் இட்டு நிரப்பிக் கொள்ள எத்தனித்தாள். அவர்களுக்கு இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகள் இருந்தனர். அவள் தன் மூத்தமகனை விளையாட அனுப்பியிருந்தாள். குழந்தை உறங்க விரும்பாத நேரத்தில் அதை வலுக்கட்டாயமாக துாங்க வைப்பது சரியல்ல என்பார் காந்தி. இரண்டாவது மகன் பிறந்தபோது மிலியிடம் “குழந்தைக்கேற்றார்போல தாய் தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இரவோ பகலோ எந்த நேரமாக இருந்தாலும் குழந்தை உறங்கும் நேரத்தில் நீயும் துாங்க முயற்சி செய்” என்பார். இப்போது அவளது இரண்டாவது குழந்தை உறங்கிக் கொண்டிருந்தான். ஆனால் அவளுக்குதான் உறக்கம் வராமலிருந்தது.

காந்தியை மிலி முதன்முதலாக லண்டனிலிருந்து ஜோஹென்னஸ்பெர்க்கின் ஜெப்பி ரயில்நிலையத்தில் வைத்து சந்தித்திருந்தாள். நடைமேடையில் அவளுக்கு கணவனாக வரப்போகும் ஹென்றி போலாக்குடன் நி்ன்றிருந்த மோகன்தாஸ் அவளை நோக்கி சிநேகமாக வலதுக்கரத்தை நீட்டியபோது தடித்த உதடுகள் கொண்ட அந்த நடுத்தர வயது மனிதருடன் மனதளவில் இத்தனை நெருக்கமாகி விடுவோம் என்று அவள் கருதியிருக்கவில்லை. ஒருவேளை அவள் திருமணமாகி தென்னாப்பிரிக்கா வருவதற்கு முன்பே அவளிடம் அவர் தன் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டது அவளை கவர்ந்திருக்கலாம். இலண்டனிலிருந்த அவளுக்கு எழுதிய கடிதத்தில், ஃபீனிக்ஸில் காசநோய் மருத்துவமனை நிறுவ இருப்பதால், இலண்டன் அருகே எங்கோ ஒரு டால்ஸ்டாய் பண்ணை இருப்பதாக கேள்விப்பட்டிருப்பதாகவும் முடிந்தால் அங்கு சென்று பார்த்து எவ்விதமான கொள்கைகளின் அடிப்படையில் அது அமைந்திருக்கிறது என்று அறிந்து வருமாறும் எழுதியிருந்தார்.

அவளது கைகள், ரொட்டியை, உடைத்து ஊற்றிய கோழி முட்டைக்குள் முக்கியெடுத்து தணலில் வாட்டிக் கொண்டிருந்தாலும் மனம் அவரை பற்றிய நினைவுகளுக்குள் நழுவியோடியதை அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை.

அப்போது அவளுக்கு திருமணமாகி ஓராண்டு நிறையாத தருணம். ஹென்றிபோலாக் எழுதுஅட்டையில் சொருகப்பட்டிருந்த தாள்களில் மளமளவென்று எழுதிக் கொண்டிருந்தான். அவன் இப்போது ‘இந்தியன் ஒப்பீனியன்’ இதழின் பகுதி நேர ஆசிரியருமாகியிருந்தான். மிலி கிராகாமுடனான அவனது திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அந்த இதழின் ஆசிரியர் எம்.ஹெச்.நாஸர் எதிர்பாராதவிதமாக மரணமடைந்து விட்டார். ஃபீனிக்ஸ் குடியிருப்பில் அவர் இறந்தபோது அவரருகே கீதை புத்தகம் திறந்திருந்ததாம். இதை கேள்விப்பட்ட கஸ்துார், நாஸருக்கு எத்தனை அருமையான சாவு வாய்த்திருக்கிறது என்று சிலிர்த்துக் கொண்டார். மோகன்தாஸ்காந்தியின் உறவினர் சகன்லால் இதழின் குஜராத்தி பக்கங்களை பார்த்துக் கொள்ள போலாக் ஆங்கிலப்பத்திகளை கவனித்துக் கொண்டான்.

மிலி கிண்ணம் நிறைய வறுத்த நிலக்கடலையை கொண்டு வந்து கணவனருகில் வைத்தாள். அவர்களுக்கு அப்போது குழந்தைகள் இல்லை. பூசினாற்போன்ற உடல்வாகு கொண்டவள் அவள். கூந்தலை அழகாக நறுக்கியிருந்தாள்.

“வீட்டை எப்படியெல்லாம் மாத்தி வச்சிருக்கேன்னு எழுந்திரிச்சு வந்து பாருங்க ஹென்றி”

ஜோஹானஸ்பர்க்கில், பெல்லீவ் ஈஸ்ட்டிலிருந்த அந்த வீட்டில் அவர்களை தவிர மோகன்தாஸ் காந்தியும் இந்திய இளைஞன் ஒருவனுமிருந்தனர். அந்த சிறிய வீட்டில் அளவில் சிறியதான நான்கறைகள் மட்டுமே இருந்தன. குளியலறையில் கூட ஒழுங்கான குழாய் அமைப்போ கழிவு நீர் வெளியேற சரியான பாதையோ இல்லாமலிருந்தது. ஆனால் காந்தி தன் வழக்கறிஞர் வேலையை குறைத்துக் கொள்ள எண்ணியிருந்ததால் செலவுகளை கட்டுப்படுத்த சுமாரான வீட்டில்தான் இருந்தாக வேண்டும்.

“கொஞ்சம் வெயிட் பண்ணு மிலி… இந்த ஆர்ட்டிகளை முடிச்சிடுறேன்”

“ப்ளீஸ்… ப்ளீஸ்… இதை பாத்திடுங்க. அப்பறம் பாபூ வந்துட்டா நீங்க அவரோட பிசியாயிடுவீங்க”

பாபு, ஆப்ரிக்க அரசியல் நிறுவனத்தின் கூட்டமொன்றில் கலந்துக் கொள்வதற்காக சென்றிருந்தார். மேலும் அவருக்கு மற்றுமொரு முக்கியமான பணியுமிருந்தது. அனுமதி சீட்டுகள் வழங்குவதில் தாமதங்கள், விண்ணப்பத்தாரர்கள் சாட்சிகளை கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்தப்படுவது, பெண்களுக்கு விதிவிலக்கு கொடுக்க மறுப்பது உள்ளிட்ட பதினாறு புகார்கள் கொண்ட பட்டியல் ஒன்றை அளித்ததன் தொடர்ச்சியாக பிரிட்டோரியாவில் காலனிய துணைச் செயலாளரை சந்திக்க வேண்டியிருந்தது.

ஹென்றிபோலாக் புரொடக்டர் ஆஃப் ஏசியாட்டிக்ஸ் பொறுப்பிலிருக்கும் அதிகாரியான மாண்ட்ஃபோர்ட்சாம்னிக்கு காந்தி எழுத வேண்டிய கடிதங்களுக்கான தரவுகளை சேகரித்து வைத்திருந்தான். அது சம்பந்தமாக மோகன்தாஸ் வந்ததும் கலந்தாலோசிக்க வேண்டியவற்றை தனியாக குறிப்பெடுக்க வேண்டியிருந்தது. தான் கூறும் முன்பே தன் வேலைகளை குறித்துப் புரிந்துக் கொள்ளும் புத்திசாலியான புதுமனைவியின் வேண்டுகோளை மறுக்கவியலாமல் குறிப்புத்தாள்களை அட்டையில் சொருகி வைத்து விட்டு எழுந்தான். ஞாபகமாக தன்னுடன் நிலக்கடலைகள் அடங்கிய கிண்ணத்தை எடுத்துக் கொண்டான்.

மிலி முதலாக அவனை சமையலறைக்கு அழைத்துச் சென்றாள். “இங்க பாருங்க ஹென்றி… கிச்சன்லயே டைனிங்கை செட் பண்ணீட்டேன்”

“ஓஒ ஐரோப்பிய ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களை உள்ளடக்கிய உணவு மேசை இல்லையா இது? பார்த்து பார்த்துதான் செட் பண்ணியிருக்கே” என்றான் ஹென்றி விளையாட்டாகவும் நிஜமாகவும்.

புத்தகங்கள் அடைத்துக் கொண்டிருந்த இடம் இப்போது உண்ணுமிடமாக மாறியிருந்தது. இரவுணவு நேரத்தில் மெதுவாக உண்டு நிறைய பேசிக் கொள்ளலாம். அது மோகன்தாஸுக்கு பிடித்தமானதுதான். உணவு மேசையில் பொதுவாக பிரார்த்தனை பாடலும் பிறகு உணவோடு கலந்த அரசியல் என்றுமிருக்கும். நேற்று கூட காந்தி, ஜுலுக்களின் பாம்பாத்தா கிளர்ச்சி நேட்டாலிலும் பரவி விட்ட நிலையில், இந்தியன் ஒப்பீனியன் இதழில் தான் எழுதியிருந்த கட்டுரைக்கு வந்திருந்த எதிர்வினைகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார். அதில், காஃபிர்களின் கலகம் நியாயமானதா இல்லையா என்று தன்னால் உறுதியாக கூற முடியவில்லை என்றாலும் நேட்டாலில் நாமிருப்பது பிரிட்டிஷ் அதிகாரத்தின் மூலமாகவே என்பதால் காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்வது போன்ற முடிந்த உதவிகளை செய்யவேண்டியது நமது கடமை என்று எழுதியிருந்தார். அதற்காக முன்வரும் தன்னார்வலர்களில் தன் பெயரை முதலாவதாக சேர்த்துக் கொண்டதாகவும் பணவுதவியோடு ஓவர்கோட்டுகள், தொப்பிகள், காலுறைகள் போன்ற பொருளுதவியும் திரட்ட போவதாக கூறினார்.

அவர் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் மிலி. அமைதியான குரலெழும்பாத பேச்சு என்றாலும் அதில் தீவிரவும் தீர்மானமும் இருக்கும். கஸ்துார் பா விடம் பேசும்போது கூடுதல் உரிமையுமிருக்கும். டிராய்வில்லில் இருந்தபோது அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் வருவதை பார்த்திருக்கிறாள். அது பெரும்பாலும் இந்தியாவிலிருக்கும் அவர்களின் மூத்தமகன் ஹரிலாலை பற்றியதாக இருக்கும். அவர் அப்போது ஹரிலாலை தென்னாப்பிரிக்காவுக்கு வரவழைப்பதில் தீவிரமாக முயன்றுக் கொண்டிருந்தார். மோகன்தாஸின் பேச்சில் நகைச்சுவைக்கு குறைவிருக்காது. இலண்டனிலிருந்து வந்து இறங்கியபோது ஹென்றி தனது வருங்கால மனைவியை கண்ட ஆனந்த அதிர்வில், “மிலி… என்னால இதை கொஞ்சமும் நம்ப முடியில…” என்றான். அவன் கண்கள் இதயத்தின் பரபரப்பை நீராக ஏந்தி பளபளத்திருந்தது.

“இந்தியன் ஒப்பீனியனுக்கு அத்தனை சந்தா சேர்ந்துடுச்சா?” என்றார் காந்தி சிரிக்காமலேயே. அவர் தென்னாப்பிரிக்காவிலிருக்கும் இந்தியர்களின் விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியன் ஒப்பீனியன் என்ற இதழை இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஒரு கோடைக்காலத்தில் தொடங்கியிருந்தார்.

மிலி அந்த புதிய நண்பரின் நகைச்சுவைக்கு புன்னகைத்தப்படியே தன்னை நோக்கி நட்பாக நீண்டிருந்த அவரது வலதுக்கரத்தை லேசாக பற்றி குலுக்கினாள். நடுத்தர உயரமும் மெலிந்த தேகமும் கொண்ட இந்த மனிதரா அரசாங்கத்தை வண்டு போல குடைந்துக் கொண்டிருக்கிறார்? தோன்றிய நேரத்திலேயே அவ்வெண்ணம் விடுப்பட்ட விட்டது. ஏனென்றால் அதை விட கவர்ச்சியான ஒரு பண்டம் இப்போது அவளிடமிருந்தது. அது அவளையே அன்புத்ததும்ப பார்த்துக் கொண்டிருந்தது. இதயக்கூடு இன்பத்தில் தாறுமாறாக துடிக்க, அந்த பண்டத்தின் கம்பீரமான ஆகிருதிக்குள் தன்னை ஒப்புக் கொடுக்க எண்ணிய உடலை நகர்த்தி விட்டு வலதுக்கரத்தை மட்டும் முன்னே நீட்டினாள் மிலி. புனிதமான ஏதோவொன்றை பற்றுபவன்போல ஹென்றி அதை ஒற்றியெடுத்து தன் கரங்களுக்குள் பொத்திக் கொண்டான். இரவின் சோம்பலை உதறிக் கொண்டு அந்நாளின் விடியலில் மெல்ல இயங்கத் தொடங்கிய அந்நகரில் அவர்களது காதலுக்கு சாட்சியாக அந்த முப்பத்தாறு வயது பழுப்பு நிற மனிதன் சிறுவனின் உற்சாகத்தோடு நின்றுக் கொண்டிருந்தார். “ஓஒ… காதலர்கள்” சிரித்தபோது அவர் கண்களும் சேர்ந்துக் கொண்டன.

மிலிகிரகாம் கணவனின் கண்களை தன் கரங்களால் விளையாட்டாக பொத்தியவாறு முன்னறைக்கு அழைத்து வந்தாள். கைகளை விலக்கியபோது அந்த அறையின் நேர்த்தி அவனை பிரமிக்க வைத்தது. இரண்டு நாட்களாகவே அவள் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தது தெரியும். ஆனால் வீட்டை இத்தனை அழகாக மாற்றியிருப்பாள் என தெரியாமல் போயிற்று. புத்தகங்களும் அவர்கள் இருவருக்கான பொருட்களும் அங்கு சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “இனிமே பகல் நேர டிஸ்கஷனை இங்கேயே வச்சிக்கலாம்” என்றாள்.

இலண்டனிலிருந்து வந்த நாலைந்து மாதங்களுக்குள் எல்லாவற்றையும் பழகிக் கொள்ள முடிந்த அவளுக்கு அவ்வப்போது எழும் சந்தேகம் மட்டும் இன்னும் தீரவில்லை. ஒருவேளை அவள் வருவதற்கு முன்பே, அதாவது திருமணத்திற்கு முன்பே, மில்லிகிரகாமின் உடல்நிலையை காரணம் காட்டி திருமணத்தை முடிந்தமட்டிலும் தள்ளிப்போடுமாறு வலியுறுத்தி காந்திக்கு போலாக்கின் தந்தை எழுதிய கடிதம் அவளை காயப்படுத்தியிருக்கலாம். “ஹென்றி… உங்க வீட்டாருக்கு உண்மையிலுமே என்னை பிடிக்கலையா? இல்லைன்னா என்மேல அவங்களுக்கு அவ்வளவு அக்கறையா?” என்று கேட்டபோது மில்லி கணவனின் அருகில் நெருங்கிப் படுத்திருந்தாள். இந்த வாய்ப்பு அடிக்கடி கிடைப்பதில்லை என்பது அந்த நெருக்கத்தில் தெரிந்திருந்தது. அவள் அவ்வப்போது தன் திருமணம் ஒரு இலட்சியவாத திருமணம் என்றெண்ணிக் கொள்வாள். ஹென்றிக்கு வழக்கமான கணவர்களை போல தன்னிடம் அதிக நேரம் செலவழிக்க முடியாது என்பதை அவளும் அறிந்திருந்தாள். அதில் அவளுக்கு பெருமையும் கூட. ஏனென்றால் அவளே தீவிர சமூக சீர்த்திருத்தவாதி. பெண்களின் ஓட்டுரிமையை ஆதரித்தவள்.

“இத்தனை நாளுக்கப்பறம் ஏன் திடீர்ன்னு இந்த சந்தேகம்? நான் உன்னை சரியா நடத்தறதில்லையா?”

“இல்லல்ல…” அவரசமாக மறுத்தாள் மில்லி. “ஆனா நம்ப கல்யாணத்தை தள்ளி வைக்க சொல்லி உங்கப்பா பாபுவுக்கு லெட்டர் போட்டுருந்தாரே?”

“அது உன்னோட உடல்நிலைக்காகதானே மிலி. லண்டன்ல வளர்ந்த பொண்ணு நீ. ஜோஹென்னஸ்பெர்க் சூழல் உனக்கு செட்டாவுமோ என்னமோன்னு அவங்களுக்கு பயமிருக்காதா?” ஹென்றி மனைவியை தன் பக்கமாக இழுத்து இறுக அணைத்துக் கொண்டான். இருபதுகளின் இனிமையும் காதலும் அவர்களுக்குள் ஊற்றாக பெருகிக் கொண்டிருந்தாலும் யூதரான கணவனின் வீட்டார் கிறித்துவரான தன்னை நிராகரித்ததும் அதற்காக கணவனை தென்னாப்பிரிக்காவிலிருக்கும் அவனது பெரியப்பா வீட்டுக்கு அனுப்பி வைத்ததும் அவள் மனதில் ஆழமாக தங்கியிருந்தது. உடலோ மனமோ களைத்திருக்கும் சமயங்களில் அவ்வெண்ணம் உயர்வாகவோ அல்லது தாழ்வுணர்ச்சியாகவோ வெளிப்பட்டு விடும். தன் வீட்டாரை விட்டுக்கொடுக்காமல் பேசினாலும் ஹென்றியை அவளுக்கு நிறையவே பிடித்திருந்தது. மாணவனாக இருந்தபோதே யூத வார இதழொன்றில் அரசியல் விவகாரங்களை குறித்து கட்டுரைகள் எழுத தெரிந்திருந்தது அவனுக்கு. கேப்டவுனில் பெரியப்பாவின் வணிக நிறுவனத்தில் பணியாற்றியபோது டால்ஸ்டாயின் எழுத்துகளின் தீவிர ரசிகனாகவும் டிரான்ஸ்வால் கிரிட்டிக் என்ற உள்ளுர் செய்தித்தாள் நிறுவனத்தின் பணியாளனாகவும் இருந்த அறிவார்ந்த கணவனுக்கு மனைவியானதில் அவளுக்கு பெருமைதான். கூடவே மோகன்தாஸ் காந்தி என்ற துணிச்சலான மென்மையான இந்தியர் ஒருவருடன் கணவன் கொண்டிருந்த நட்பும் உரிமையும் அவளுக்கு பிடித்திருந்தது.

திருமணமான கையோடு ஜோஹென்னஸ்பெர்க்கில், டிராய்வில்லில் அவர்கள் தங்கியிருந்த வீடு இதுபோல நெருக்கலின்றி இரண்டு தளங்களையும் எட்டு அறைகளையும் கொண்ட தனித்த வீடாக ஊரை விட்டு சற்று வெளியே நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்தது. அங்கு காந்தியுடன் அவர் மனைவி கஸ்துாரும் இளைய மகன்கள் ராமதாஸும் தேவதாஸும் வசித்தனர். கூடவே தொலைத்தொடர்பு பணிகளை கவனிக்க ஆங்கிலேயே இளைஞன் ஒருவனும் இருந்தான். நாடும் உறவும் புதிதென்றாலும் கஸ்துார் என்ற அவளை விட வயதில் முதிர்ந்த தோழியும் அவள் குடும்பத்தாரும் அதை இயல்பாக மாற்றியிருந்தனர். கணவன் தன்னை இந்தியாவிலிருந்து அழைத்து வரும்போதே குடும்பத்துக்கு தன்னால் குறைந்த நேரமே செலவிட முடியும் என்று கூறியிருந்ததாக பா கூறுவார். ஆனால் பாபு காலையில் சீக்கிரமாகவே எழுந்துக் கொண்டு அன்றைய உணவுக்கான மாவு தயாரிப்பில் மனைவிக்கு உதவுவார். பிறகு கயிறு தாண்டும் பயிற்சி செய்து விட்டு பழங்களை நறுக்கி்த் தருவார். ஐந்து மைல் தொலைவில் ரிஸ்ஸிக் தெருவிலிருக்கும் தன் அலுவலகத்துக்கு நடந்து செல்லும்போது கையில் மதியத்துக்காக கோதுமைரொட்டியோடு, நிலக்கடலையும் வெண்ணெயும் கூடவே சில பழங்களும் எடுத்துச் செல்வார். வழக்குகளை எடுத்துக் கொள்வதோடு, அரசுக்கு கோரிக்கை மனுக்கள் எழுதுவதும் இந்தியன் ஒப்பீியன் இதழுக்கான வேலையில் ஈடுபடுவதுமாக அவரது நாட்கள் கழிந்தன.

மிலியும் பா வும் மாலை நேரங்களில் வீட்டை சுற்றிலுமிருந்த தோட்டத்தை சீர் செய்வார்கள். அப்போது அவள் பா வுக்கு ஆங்கிலம் கற்றுத்தருவாள். மோகன்தாஸ் தன் மகன்களுக்கு குஜராத்தி இலக்கணம் கற்றுத்தருவார். ஹென்றி, பாபு, குஜராத்திக்கு பதிலாக மகன்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தரலாம், என்று மனைவியிடம் அபிப்பிராயப்பட்டிருக்கிறான். ஆனால் அவரிடம் நேரிடையாக சொல்வதில்லை. அவரிடம் விவாதிப்பத்தற்கென்றே வந்தவள் போல மிலி இருப்பதில் ஹென்றிக்கும் கஸ்துாருக்கும் உடன்பாடுதான்.

“காலன்பாக் இங்க வரும்போது சாக்லேட்டோ பொம்மைகளோ வாங்கீட்டு வராதீங்கன்னு சொல்லணும் மிலி…” ரொட்டிக்கான மாவை பிசைந்துக் கொண்டே பேசினார் கஸ்துார். அந்த வீட்டுக்கு அடிக்கடி வருகைத்தரும் ஹெர்மன்காலன்பாக்கின் வாழ்க்கை முறை தன் சின்னஞ்சிறு மகன்களை ஏங்க வைப்பதை அவர் உணர்ந்திருந்தார். மிலி உருளைக்கிழங்குகளை வேக வைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தாள். அவளுக்கு சமையலறை வேலைகள் இப்போதுதான் மெல்ல பழக்கமாகிக் கொண்டிருக்கிறது.

“மிலி… காலன்பாக் வரும்போது இந்த விஷயத்தை ஞாபகப்படுத்திறியா”

“சாரி பா. நான் வேர்க்கடலை மேலேயே என்னோட முழுக்கவனத்தை செலுத்திக்கிட்டிருந்தேன். நீங்க சொன்னதை கவனிக்கல” ஆச்சர்யமாக புருவத்தை உயர்த்திய கஸ்துார் “காலன்பாக் இங்க வர்றப்போ ராமாவுக்கும் தேவாவுக்கும் எதையாவது வாங்கிட்டு வந்துடுறாரு. இது பழக்கமாகிப்போச்சுன்னா அவர் வர்றதை விட அவர் வாங்கீட்டு வர்ற பொருள் மேல பசங்களுக்கு நாட்டம் உண்டாகிடும். ராமா அவரை மாதிரி சூட், ஷுவெல்லாம் போட்டுக்கணும்னு ஆசைப்படறான்”

“அப்டி விரும்பினாதான் என்ன தப்பு பா?” கிழங்குகள் நீராவியில் வேகத்தொடங்கியிருந்தன.

“அப்டீன்னா நீ உங்க பாபுக்கிட்ட சொல்லி மகன்களுக்கு அதெல்லாம் வாங்கித்தர சொல்லு” கணவனிடம் கேட்பதற்கு மிலியை சிபாரிசுக்கு அழைத்திருந்தாலும் கஸ்துாரின் முகத்தில் அவநம்பிக்கைதான் அதிகமிருந்தது. ஆனால் மிலிக்கு அது குறித்து பாபுவிடம் பேசுவதில் எந்த தயக்கமும் இல்லை. ஒருவேளை அவள் திருமணமாகி வரும் முன்பே அந்த மனிதர் ஹென்றியின் வீட்டாரிடம் அவளுக்கு சாதகமாக பேசியதன் காரணமாக இருக்கலாம். அல்லது அந்த பழுப்புநிற மனிதன், தங்கள் திருமணத்துக்கு சாட்சியாக நின்றதில் ஏற்பட்ட அபிப்பிராயமாக இருக்கலாம். அவரை பாபூ என்று அழைத்தாலும் மூத்த சகோதரனாகவே எண்ணிக் கொள்வாள். அதுவே அவளுக்கு அவரிடம் கூடுதல் பிரியமும் உரிமையும் அளித்திருந்தது. காந்தியோ, இந்துவான தான், தன்னுடைய பேச்சில் அடிக்கடி கிறித்துவின் சொற்களையும் போதனைகளையும் பயன்படுத்துவதுதான் இந்த அன்புக்கு காரணம் என்று வம்புக்கிழுப்பார்.

அது உண்மையில்லை என்று அவள் கருதினாலும், அவரது அலுவலகத்தில் கிறிஸ்துவின் படம் இருப்பது குறித்து அவள் மகிழ்ந்திருக்கிறாள். அது குறித்து அவள் மோகன்தாஸிடம் கேட்டபோது அவர், கிறித்துவின் பொறுமையும் மென்மையும் கருணையுமான உரு அவரை கவர்ந்ததாக கூறினார். துாற்றப்படும்போதும் தாக்கப்படும்போதும் திருப்பித் தாக்காமல் மற்றொரு கன்னத்தைக் காட்ட சொல்லி தம் சீடர்களுக்கு உபதேசித்த நிறை மனிதரல்லவா அவர்? என்றார். ஒருவேளை கிறித்துவின் கண்களை போல பாபுவின் கண்களும் கருணையானவையோ? ஆனால் அவரை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்க அவளுக்கு பிடித்திருந்தது.

“ஆனா நீங்க கிறித்துவத்தை ஏற்கலையே பாபூ?”

“ஒரு நல்ல இந்துவாக இருப்பதே நல்ல கிறித்துவனாக இருப்பதுவுமாகும்” பாபுவின் உடனடியான பதில் அவளுக்கு சற்று கோபமூட்டியிருக்க வேண்டும். அவள் இந்தியாவில் நிலவும் சாதி பாகுபாடுகள் குறித்து அறிந்திருந்தாள்.

“கிறித்துவம் போதிப்பதுபோல், உங்கள் மதத்திலும் சகோதரத்துவம் வலியுறுத்தப்படுதுன்னு நெனைக்கிறீங்களா?”

“மிலி… மனிதர்களோட குறைப்பட்ட புரிதல்களை கொண்டு மகத்தான மதங்களின் உண்மையான போதனைகளை குறைத்து மதிப்பிடக் கூடாது. உலகத்தில் நிலவும் போர்களையும் வெறுப்புகளையும் ஏழ்மையையும் குற்றங்களையும் பார்த்த பிறகும் கிறித்துவ உலகம் சகோதரத்துவத்துடன் வாழுதுன்னு சொல்வாயா நீ?

“அதுசரி. மனிதனின் இலட்சியங்கள் எப்போதுமே அவர்களுக்கு எட்டாத தொலைவில்தானே இருக்கின்றன” என்றாள் தொய்வாக.

“நாம் இலட்சியங்களை அடைஞ்சுட்டோம்ன்னா போராடி அடைய எதுவுமே இருக்காதில்லையா?”

தியாசபிகல் சொசைட்டியில் இது குறித்து அவர் ஆற்றிய சொற்பொழிவுகளை அவளும் கேட்டிருந்தாள். இந்துமதம், சமூக விவகாரங்களில் சாதியின் முக்கியத்துவம், சமய விஷயங்களில், பலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம், தார்மீக விஷயங்களில், சுய ஒறுத்தலின் முக்கியத்துவம் என்று மூன்று துாண்களின் மீது நின்றுக் கொண்டிருக்கிறது. சமணமோ வாழும் உயிர்கள் அனைத்தின் மீதும் கவனத்துடன் மரியாதை செலுத்துகிறது. இஸ்லாத்தின் சமத்துவக்கொள்கை சாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் வெகுமக்களின் விருப்பத்துக்குரியதாக இருக்கிறது. இந்த உள்ளார்ந்த பலத்துடன் வாளின் பலமும் சேர்ந்துக் கொண்டதால் அது பலரை மதம் மாற செய்வதாக அவர் ஆற்றிய உரை இந்தியன் ஒப்பீனியன் இதழில் வெளிவந்தபோது, காந்தி இஸ்லாம் மதத்தை அவமதித்து விட்டதாக முஸ்லிம்களிடமிருந்து கண்டனம் வந்ததையும் அவள் அறிந்திருந்தாள்.

“தாழ்ந்த சாதி இந்துக்கள் முஸ்லிம்களாக மாறினால் அது இஸ்லாத்தோட மேன்மையதானே காட்டுது..” என்றான் போலாக்.

அன்று இரவுணவு மேசையில் வழக்கம்போல கஸ்துார் கீதையிலிருந்து சில வரிகளை படித்துக் காட்டி விட்டு, பின் மகன்களுக்கு அதை எளிதாக விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார். “பகவான் கிருஷ்ணன் எல்லா உறவுகளிடத்திலும் சமமாக இருக்கிறார். அவருக்கு நண்பனுமில்லை. பகைவனுமில்லை. அவரை யார் பக்தியுடன் பூஜிக்கிறார்களோ அவர்களிடம் அவர் வந்து விடுவார்” மிலி ஒருவேளை கணவரிடம் சம்மதம் பெற்று விட்டாளெனில் அவர் மகன்களும் கோட்டும் ஷுக்களும் அணி்ந்துக் கொள்வார்கள்.

எல்லோரும் உண்ண ஆரம்பித்தபோது “பாபூ… நாமெல்லாமே இப்போ வெவ்வேறு பொறுப்பில இருக்கோமில்லையா?” மிலி மெல்லப் பேச்சை தொடங்கினாள்.

மோகன்தாஸ் ரொட்டியின் மீது வெண்ணெயை தடவிக் கொண்டே “எந்தவகையான பொறுப்பை பத்தி கேட்கிற?”

“இந்து மதம் பகுத்து வச்சிருக்கற பொறுப்பு பத்திதான் சொல்றேன். ராமாவுக்கும் தேவாவுக்கும் இப்போ விளையாட்டுத்தனமான, பெற்றோரின் அன்பான அரவணைப்பில வளரும் பருவம் இல்லையா?”

மோகன்தாஸ் புன்னகையோடு வேக வைத்த பயிறுகளை எடுத்து ராமதாஸின் தட்டில் பரிமாறினார். தேவதாஸ் எலுமிச்சை பானத்தை பருக எத்தனித்ததை பார்வையாலேயே தடுத்து பாலால் செய்யப்பட்ட பதார்த்தத்தை எடுத்து நீட்ட, அவன் தயங்கி பின் வாங்கிக் கொண்டான். “ம்… சொல்லு” என்றார்.

“அப்றம் மாணவப்பருவம்… பிறகு இல்லறத்தில நுழையணும். அது கவலைகளும் அழுத்தங்களும் நிறைந்த பருவம். அந்த பருவத்திலதான் நீ்ங்களும் பாவும் இப்போ இருக்கீங்க”

“யெஸ்… அதுக்கு பிறகு தியானமும் சிந்தனையுமான மோன நிலையில் வாழ்வின் ஆன்மாவையும் தன் ஆன்மாவையும் காண அவன் தன் கண்களை பழக்கப்படுத்திக் கொள்ளலாம்”

“அப்டீன்னா பெண்களோட நிலை? நீங்க சொல்றத பார்த்தா அவள் தன் புறதேவைகளைத் துறந்து ஆன்ம வேட்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மரணத்துக்கு அப்பாலானதற்கு தன் ஆன்மாவை துணியச் செய்யும் புள்ளியொன்று இந்து சிந்தனையில் இருப்பதாகவே தோணலியே?”

சூட்டும் காலணிகளும் கேட்க சொன்னதற்கு மாற்றாக பேச்சு எங்கெங்கோ திசை திரும்புகிறதே என்ற கவலையோடு கவனித்தார் கஸ்துார்.

ஓ.. மோகன்தாஸ் தன் கரத்தை உயர்த்தி விரலால் சுட்டினார். “வனம் புக வேண்டிய அவசியமோ துறவு கொண்டு கடவுளை தியானிக்க வேண்டிய தேவையோ பெண்களுக்கில்ல… ஒரு ஆணை திருமணம் செய்து குழந்தைகள் பெற்று அவங்கள கவனத்துக் கொள்வதை விட மேலுலகம் போக வேற பயிற்சி தேவையா என்ன அவங்களுக்கு?”

“அதாவது ஆண் அமைதியாக உட்கார்ந்து தியானித்துக் கொண்டிருக்கும்போது அவள் மட்டும் உடற்பாரத்துக்கான சுமைகளை தேர்ந்தெடுத்துக்கணும்னு சொல்றீங்க. பெண் மாபெரும் சக்திங்கிறீங்க. ஆனா நடைமுறையில பெண்ணுங்கிறவ ஆணுக்காக படைக்கப்பட்ட பண்டம் போலதானே நடத்தப்படறாங்க. மனைவியை குறைந்தபட்சம் தனக்கு சமமானவளாக நினைக்கலாமில்லையா… அதுவும் இந்திய கணவர்கள் ரொம்பவும் மோசம். அவங்களுக்கு எல்லாமே வாய்ச்சிருக்கு. மனைவிகளுக்கோ வேலை வேலை வேலைதான்..”

பா அரிந்து வைத்திருந்த பச்சை வெங்காயங்களை கணவனின் தட்டில் எடுத்து வைத்தார். “மிலி… நீ புறத்தோற்றத்தை யதார்த்தம்னு தவறாக புரிஞ்சுக்கிட்டே. “சாமானிய தளத்தில் அவள் ஆணுக்கு ஊழியம் செய்யறதுனால இந்த கருத்து உனக்கு வந்திருக்கலாம். இப்படி யோசிச்சுப்பாரேன்… தன்னை விட சிறியவர்களுக்கு தொண்டு செய்வது மகத்தானவர்களுக்கு ஒரு பெருஞ்செயல் இல்லையா?”

“இதையெல்லாம் பெண்களை அடிமைப்படுத்தறதுக்கு சொல்லப்படுற அலங்கரிப்பு வார்த்தைகள்” சட்டென்று மறுத்தாள் மிலி.

பா மேசையிலிருந்த சாஸரில் மகன்களுக்கு சாலட்டை நிரப்பி வைத்தார். மோகன்தாஸ் விளையாட்டாக குரலை தாழ்த்தி “உனக்கு ஒரு உண்மை சொல்லட்டுமா… ஆண்கள் இன்னும் அந்த இலட்சிய நிலையை எட்டலை. வாழ்வின் உயர்தளங்களில் பெண் ஆணுக்கு சமமானவளாகவும் சொல்லப்போனா உயர்ந்தவளாவும் இருக்கிறாங்கிற உண்மையை அவங்களோட இதயங்களில் உணர்வாங்க… சரி.. அதை விடு… நீ ஏதோ சொல்லணும்னு நெனக்கிறே… ஆம் ஐ கரக்ட்?”

மிலி அதை கண்டுக்கொள்ளாதவள் போல, “பெத்தவங்க அரவணைப்புல இருக்கவேண்டிய பருவத்தில பிள்ளைகளுக்கு வேணுங்கறதை செய்ய வேண்டியது பெத்தவங்களோட கடமையில்லையா? இப்போ இருக்கற காலக்கட்டத்தில கோட்டும் ஷுக்களும் அணியணும் நினைக்கறது சிறுவர்களின் எளிய விருப்பம்தானே?

கஸ்துாரின் கண்கள் பளபளத்தன. ஆனால் அவர் கணவரின் வார்த்தைகள் அத்தனை நாசுக்கானவை. “மனிதன் தனக்குரியதைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவனுக்குரியவர்கள் அவனில் ஒரு பகுதியே”

“ஆனா கணவரோ தந்தையோ தன் மனைவி குழந்தைகள் மேல் உரிமை செலுத்தறதை என்னால ஏத்துக்க முடியாது” என்றபோது காந்தி மெதுவாக ஆப்ரகாம் தன் மகனை கடவுளுக்கு பலிக்கொடுத்த கதையை சொல்லத் தொடங்கினார். தெரிந்த கதையென்றாலும் எல்லோரும் பொறுமையாக காது கொடுக்க வேண்டியிருந்தது.

“பாபூ… நீங்க ஏன் இந்த கதையை இப்போ சொன்னீங்கன்னு தெரியில. ஆனா இந்த கதையினால உங்க பாயிண்ட் இன்னும் பலவீனமா போயிடுச்சு. அவருக்கு விருப்பம்ன்னா அவர் தன்னைதான் பலிக் கொடுத்துக்கணுமே தவிர தன்னோட பிள்ளைய அல்ல”

“இந்த கதை உங்க வேதத்திலதானே இருக்கு? ஆபிரகாம்ட்ட அவரது மகனை பலிக்கொடுக்க சொன்னது உங்க கடவுள்தானே?” வெண்ணெயை தடவிய கோதுமை ரொட்டியை மடித்து வாயில் வைத்தார்.

ஹென்றியோ மற்றவர்களோ எதுவும் பேசவில்லை. மிலி விவாதத்தை தொடரவே விரும்பினாள்.

“கடவுள் ஆப்ரகாமிடம் அப்டியொரு படையல் கேட்டிருப்பாருன்னு தோணல. கடவுள் எப்படிப்பட்டவருன்னு மனிதன் தன் போக்கில் புரிஞ்சுக்கிட்டதோட விளைவு இது. குழந்தையை பிறக்க வைக்கறதில தான் ஒரு காரணிங்கிற உண்மையை அதை அழிக்க பயன்படுத்திக்கிற உரிமையா எடுத்துக்கிட்டான்னா அந்த ஆணை காட்டுமிராண்டின்னுதான் சொல்வேன்”

“அப்டீன்னா நீ உங்க வேதத்தை ஏத்துக்கலைன்னு எடுத்துக்கவா?”

பா எலுமிச்சை பானத்தை மகனை நோக்கி நகர்த்தி வைத்தார். மிலி விடுவதாக இல்லை என்பதை போலிருந்தாள்.

“பாபூ… இது உண்மை நிகழ்வா கூட இருக்கலாம். ஆனா ஆப்ரகாம் ஈசாக்கை பலி கொடுக்கணும்னு கடவுள் எதிர்ப்பார்த்தார்ங்கிறதை நான் நம்பல. தன் மனைவி குழந்தைகளோட உயிர் மேல ஒரு மனிதனுக்கு உரிமை இருக்குங்கிற நம்பிக்கை கூட எனக்கு பிடிக்கல”

“மிலி… இந்த கதையை ஆப்ரகாமோட துயரமும் நம்பிக்கையும் சோதிக்கப்படுறதா புரிஞ்சிக்கிட்டா வேறொரு கோணம் கிடைக்குமில்லையா? கதை கூட அதனாலதான் அவரை மையப்படுத்தி சொல்லப்பட்டிருக்கு”

மிலி அவசரமாக “பாபூ… நீங்கள் சொல்றது இதயத்துக்கு வேண்டுமானால் உவப்பாக இருக்கலாம். ஆனால் என்னோட மூளை அதை ஏத்துக்காது” என்றாள்.

“அப்படின்னா உன் மூளை தவறு செய்யுதுன்னு அர்த்தம். அதை நீ நம்பாதே. யாராவது தன்னோட அவயங்களை பத்தி எப்பவும் நினைச்சுக்கிட்டோ அதிலே பிரத்யேக கவனம் செலுத்திக்கிட்டோ இருப்பாங்களா? அது அவங்களோட ஒரு பகுதி. அவ்ளோதானே? பிற பகுதிகளை கவனித்துக் கொள்ளும்போதே அதுவும் கவனிக்கப்பட்டு விடுகிறது”

“நோ… நோ… பாபூ.. இதுல எனக்கு உடன்பாடில்லைன்னுதானே சொல்றேன். நம் அன்புக்குரியவங்களுக்கு வேணும்னே மரியாதை கொடுக்காமல் இருப்பதும் அதேசமயம் தங்களுடைய நல்ல தன்மைகளை அந்நியரிடத்தில் காட்டுவதையும் என்னால நியாயப்படுத்தவே முடியாது”

அவள் சகோதரனும் பிடிவாதக்காரர்தான். “நீ எப்போதாவது எவரையாவது அவர் எது சொன்னாலும் சரியாயிருக்கும்னு முழுசா நம்பியிருக்கியா?”

“இதுவரைக்கும் இல்ல. அப்படியே நம்புணும்னா அவங்க எல்லையற்ற அறிவுடையவங்களா இருக்கணும்”

ராமதாஸ் சாப்பிட்டு முடித்திருந்தான். அவன் தட்டு காலியானது குறித்த திருப்தி கஸ்துாரின் முகத்தில் பிரதிபலித்தது. அவர் தேவதாஸை உண்ணுமாறு கூறினார்.

”நீ யாரிடமும் மண்டியிட மாட்டாய்… அப்டிதானே?” என்றார் காந்தி கேள்வி கேட்கும் தோரணையில். ஆனால் கண்கள் ஒளிர்ந்தன.

”ஆமா பாபூ… நான் யார்ட்டயும் என்னோட அறிவை முழுசா ஒப்படைக்கமாட்டேன்”

“அப்டீன்னா உனக்கு குரு என்று யாருமே இருக்க முடியாது மிலி”

“பாபூ… நான் சொல்றது அகங்காரமா தெரியலாம். நான் என்னை உண்மையை தேடி செல்பவளா நினைக்கிறேன். அது யாரிடமும் முழுசா கிடைக்காது”

“அதை உன்னால அடைய முடியும்னு நம்புறியா மிலி?“

“இல்ல… உண்மையை கண்டாச்சுன்னு நினைச்சேன்னாலே அது உண்மையில்லேன்னு தெரிஞ்சுடும். எல்லைகளற்ற ஒன்றை என்னோட குறைப்பட்ட அறிவால எப்படி உணர முடியும் சொல்லுங்க?”

“நீ ஒருபோதும் அமைதியடைய முடியாது மிலி” பாபுவின் குரலில் துயரமிருந்தது. எலுமிச்சைச்சாற்றை மெலிதாக உறிஞ்சினார். பா அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். தன் மறைமுக கோரிக்கை நிறைவேறுமா இல்லையா என்பது போலிருந்தது அவரது பார்வை.

“மிலி… ஆன்மாவின் தேவைகளை காணக்கூடிய அகக்கண்ணை மறைக்கும் விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்காம இருக்கறதுதான் நல்லது” என்றார் முத்தாய்ப்பாக. எதிர்பார்த்த பதில்தான். கல்விக்கே அவரிடம் அளவுக்கோல் இருக்கும்போது இம்மாதிரியான சிறுப்பிள்ளைத்தனமான ஆசைகளையெல்லாம் அவர் முன் வைத்து விட முடியாது. கஸ்துாருக்கு ஏமாற்றமாக இருநதது. மூத்த மகன்கள் இருவரும் அருகில்லாதது கூட அவருக்கு ஏமாற்றம்தான். மூத்த மகன் ஹரிலால் இந்தியாவில் தங்கி விட்டதாகவும் அவனுக்கு அவன் தந்தையை போல கல்வி கற்க வேண்டுமென்ற ஆர்வம் இருப்பதாகவும் பா மிலியிடம் கூறியிருந்தார். மோகன்தாஸ் தனது பதிமூன்று வயதான இரண்டாவது மகன் மணிலாலை ஃபீனிக்ஸ் குடியிருப்பிற்கு அனுப்பி விட்டார். ஃபீனிக்ஸ் நிலையம் அருகில் நார்த்கோஸ்ட் லைன் பகுதியில் ஒரு பண்ணையை வாங்கி அதை ரஸ்கின் மற்றும் டால்ஸ்டாயின் சிந்தனைகளை கறாரான வர்த்தகக் கோட்பாடுகளுடன் இணைக்கும் பரிசோதனை முயற்சி அது. இந்தியன் ஒப்பீனியன் இதழின் அச்சுப்பணிகளும் அங்கேயே நடைப்பெற தொடங்கியிருந்தன. இன்னும் முதிராத அந்த குடியிருப்பின் பெரிய நிலப்பகுதியை சுத்தப்படுத்துவதும் தாவரங்களை உண்டாக்கி பேணுவதும் மேலும் மேலும் அறிதலை வளர்க்கும் என்பது அந்த தகப்பனின் கருத்தாக இருந்தது. மகனை கண்காணிக்கும் பொறுப்பை அங்கிருந்த தன் உறவினரான சகன்லாலிடம் ஒப்படைத்திருந்தார்.

இப்போது சிறைக்கு சென்றிருக்கும் இத்தருணத்தில் கூட இந்தியன் ஒப்பீனியன் இதழை சகன்லாலிடமும் ஹென்றி போலாக்கிடமும் ஒப்படைத்திருந்தார். அந்த இதழின் ‘ஜோஹானஸ்பர்க் லெட்டர்’ பகுதியில் ‘Passive Resistance’ என்பதற்கு இணையான இந்தியச் சொல்லுக்கான யோசனைகளை முன்னரே வரவேற்றிருந்தார். வந்திருந்த பல யோசனைகளில் மகன்லால் காந்தியின் “சதாக்கிரகம்“ என்ற வார்த்தை காந்திக்கு பிடித்திருந்தது. “நல்ல நோக்கத்தில் உறுதியாக இருப்பது” என்று சொல்லிப்பார்த்துக் கொண்டபோது அது மிலிக்கும் கூட பிடித்துதானிருந்தது. அதை கொஞ்சம் துல்லியமாக்கி “சத்தியாக்கிரகம்” என்று பாபு சொன்னபோது “வாவ்” என்றாள் மிலி. அவரோ இது passive என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும் பரிசுக்குரிய வார்த்தை கிடைக்கும் வரை இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டு பெருந்தன்மையாக ஒப்புக் கொள்பவர் போல முகத்தை வைத்துக் கொண்டு மிலியை நோக்கினார். அதை கண்டு அவள் சிரித்த போது அவரும் பகபகவென்று சிரித்தார்.

மிலி உறக்கதிலிருந்து எழுந்து அழுத தன் சின்னஞ்சிறு மகனை அள்ளியெடுத்துக் கொண்டாள். அது பாலுக்கான அழுகை. ஹென்றியும் அவளும் இரண்டு குழந்தைகளும் முக்கியமாக காந்தியும் இருந்த வீடு இப்போது யாருமற்ற வெறுமைக்குள் புகுந்துக் கொண்டிருந்தது. நேட்டால் இந்திய காங்கிரஸ் கூட அவர் கைதானதை எதிர்த்து பெரிய கூட்டமொன்று நடத்தியது. அக்கூட்டத்தில் டாக்டர் நாஞ்சி, காந்தி சிறைக்கு சென்றிருப்பது கஸ்துார் பாவுக்குதான் பெரிய இழப்பு என்றாராம். ஹென்றி இதை கூறியபோது மிலிக்கு ஃபீனிக்ஸ் குடியிருப்பிலிருக்கும் பா வையும் அவரது நான்கு மகன்களையும் பார்க்க வேண்டுமாய் தோன்றிய எண்ணத்தை உடனே செயல்படுத்தவும் செய்தாள். பா வுக்கு கணவனை பிரிந்ததில் வருத்தமிருந்தாலும் அதை அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தனது ஏறுமாறான வாழ்விலிருந்து இந்த கலையை அவர் ஏற்கனவே கற்றிருக்க வேண்டும்.

அன்று மிலி, கோட்டும் ஷுக்களும் உங்கள் குழந்தைகளுக்கு சிபாரிசு செய்ய இயலாததற்கு என்னை மன்னித்து விடுங்கள் பா என்று காந்தியுடனான தனது தோல்வியை ஒப்புக் கொண்ட போது, பா, அவர், தான் கற்றுக் கொண்ட குழந்தை ஆங்கிலத்தில் “ஐ டோண்ட் லைக் திஸ் டைப் ஆஃப் ஆடிட்டியூட் ஃப்ரம் ஹி்ம்..” என்றார். மகன்களை இழுத்து வைத்து புராணக்கதைகளை சொல்வதிலும் கீதைக்கு விளக்கம் கூறுவதிலும் பா வுக்கு ஆர்வமிருந்தது. வீட்டு வேலைகள் அதிகமென்பதால் மகன்களுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போவது அவருக்கு வருத்தம்தான். ஆனால் அதை விட வருத்தமான விஷயம் அவரது கணவர் உணவு வகைகளில் பல்வேறு விதமாக பரிசோதனைகள் செய்வது. சில நாட்கள் உப்பில்லாமலேயே உணவுகள் தயாராகும். அடிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களினால் காய்ச்சப்படும் சர்க்கரையை நிராகரிப்பார். குழந்தைகளுக்கு பிடித்தமான வறுத்த உணவுகளெல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய பட்டியலில் இருந்தன. முட்டைகோஸ் சூப்பும் பச்சை வெங்காயமும் அலுத்துப்போயின. மிலிக்கு தன் தோழியின் தாய்மை ஏக்கம் புரிந்திருந்தது.

அவளுக்குமே டிராய்வில்லில் ஆல்பர்மர் தெருவில் பா வோடும் மகன்களோடும் வாழ்ந்த வீட்டிலிருந்து அவர்களை பிரிந்து வந்தது ஏக்கமாகதானிருந்தது. பாம்பாத்தா கலகம் வெடித்தபோது ஆம்புலன்ஸ் படையணியை உருவாக்குவதற்காக மோகன்தாஸ் நேட்டாலுக்கு செல்ல வேண்டியிருந்ததால் மனைவியையும் மகன்களையும் ஃபீனிக்ஸில் குடியமர்த்தினார். அவளுக்கு அந்த பயணம் இன்னும் நினைவிலிருந்தது. இரண்டு பகலும் ஒரு இரவும் பிடித்த அந்த ரயில் பயணம் அவர்களை மிகவும் களைத்துப்போக வைத்திருந்தது. சரியாக அமைக்கப்படாத கடினமான பாதையில் இரண்டு மைல் துாரம் மங்கலான விளக்கொளியில் வழியெல்லாம் பாம்புகள் பற்றிய பயத்தில் நடந்து சென்றதும் தேவதாஸ் களைப்பில் அழுதுக் கொண்டே வந்ததும் அங்கு போய் சேர்ந்துமே இரவு உறங்குவதற்கான ஏற்பாடுகளை அவர்களே செய்துக் கொள்ள வேண்டியிருந்ததும் இப்போது எண்ணினாலும் பயமுறுத்தியது. பண்ணையிலும் பாம்புகளுக்கும் நரிகளுக்கும் பஞ்சமிருக்காது. எதையும் யாரும் கொல்லவோ துன்புறுத்தவோ முடியாது. தண்ணீரை அளவாக உபயோகிக்கும்போதே தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். ஜுலுக்களின் பிரச்சனை வேறு. பண்ணைக்கும் இரயில் நிலையத்துக்குமிடையே ஆயிரம் ஏக்கர் அளவில் பெரிய கரும்புத் தோட்டமிருந்தது. ரயில் நிலையத்திற்கு அருகிலிருக்கும் சிறிய கடையை விட்டால் பொருட்கள் வாங்க வேறிடம் கிடையாது.

கஸ்துார் மிலியின் மகனை கையிலெடுத்துக் கொஞ்சினார். மதிய உணவுக்கு பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தில், தன் கணவர் கைதானதில் தனக்கு வந்து ஏராளமான தந்திகளை எடுத்துக் காட்டினார். அவற்றில் பொதுவாக, இந்தியர்களின் நலனுக்காக திரு காந்தி சுடர் விட்டு பிரகாசிக்கும் தியாகத்தைப் புரிந்திருக்கும் இவ்வேளையில் திருமதி காந்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவர்களது கஷ்டங்களுக்காக எங்களின் உளப்பூர்வமான அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்பதான வாசகங்கள் இருந்தன.

அங்கிருந்து கிளம்பியபோது ஹரிலால் “என்னோட அப்பா முறையான படிப்பு படிச்சிருக்கார். ஆனா எனக்கு மட்டும் ஏன் அது கூடாதுங்கிறாரு?” என்றான் மிலியிடம். முகத்தில் கோபம் அழுத்தமாக படிந்திருந்தது.

“ஹரி… உன்னோட கேள்வி நியாயமானதுதான். இன் ஃபேக்ட், அவர் டர்பனில் இருக்கறப்போ மகன்களுக்கெல்லாம் முறையான கல்வி கொடுக்கணும்னுதான் நினைச்சிருந்தாராம். ஆனா எங்கே எப்படி கல்வியளிக்கறதுன்னு அவருக்கு தெரியில. மிஷனரிகளால் நடத்தப்பட்ட பள்ளிகளில் அவர் சேர்க்க விரும்பல. ஐரோப்பியர்களுக்கான பள்ளிக்கு அனுப்பினா அது அவருக்கு கிடைச்ச சலுகையா போயிடும். அப்படியே சேர்த்தா கூட பிள்ளைகள் இனரீதியான ஏளனத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்.. அப்றம்…

மிலியின் பேச்சை இடைவெட்டினான் ஹரிலால். “எல்லாம் சரிதான். ஆனா முறையான கல்வி அவருக்கு கிடைச்சிருக்கலேன்னா இப்போ செஞ்சிக்கிட்டிருக்க வேலையை அவரால செய்ய முடியாது தெரியுமா?”

மிலி பதிலேதும் சொல்லவில்லை. அவன் அழுத்தமாகவும் கோபமாகவும் “நானும் அவரை போல ஆகணும்” என்றான்.

பல்வேறு எண்ணங்களில் மூழ்கியவளுக்கு பசியாறி விட்டு மடியிலேயே உறங்கிப்போன மகனின் நினைப்பு வந்து உறுத்த அவனை துாக்கி படுக்கையில் கிடத்தி விட்டு காந்தியின் அறையை எட்டிப்பார்த்தாள். அன்றைய தினம், இருக்கும் சிறிய அறைகள் இரண்டை தங்களுக்கொன்றும் பாபுக்கொன்றுமாக ஒதுக்கி விட்டு கணவனை அழைத்துக் காட்டியபோது அவன் “ஓய்… ரெண்டு ரூமையையும் அழகா மாத்திட்டியே?” என்றான். பிரியமான நேரங்களில் மிலியை ஓய்… என்று அழைப்பான்.

“ஆமா… ஒண்ணு நமக்கு… ஒண்ணு பாபுவுக்கு…” என்றாள்.

பாபுவுக்கான அலமாரியில் அவருடைய சட்டப்புத்தகங்கள், சைவ உணவு முறை குறித்த பிரசுரங்கள், குர்ரான், பைபிள், பகவத்கீதை மற்றும் சில இந்துசமய நுால்கள் இவற்றோடு டால்ஸ்டாயின் படைப்புகளும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. முன்வரிசையில் அவற்றை முந்திக்கொண்டு ஜான்ரஸ்கினின் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்ற தலைப்பிட்ட புத்தகம் நின்றிருந்தது. காந்தியின் பல்வேறுப்பட்ட பணிகளில் அடுக்கி வைத்தல் போன்ற உதவிகள் அவருக்கு மிகவும் தேவையாக இருந்தன. ஜோஹானஸ்பர்க்கிலும் டர்பனிலும் அவர் ஆற்றிய சட்டப்பணி அவரது வருமானத்திற்கானது. டிரான்ஸ்வாலிலும் நேட்டாலிலும் இந்தியர்களின் உரிமைகளை காப்பதற்காக எடுக்கப்படும் அரசியல் முன்னெடுப்புகள் அவருக்கு சமூகத்தில் நன்மதிப்பை பெற்றுத் தந்திருந்தது. அவர் நடத்தி வந்த இந்தியன் ஒப்பீனியன் செய்தித்தாளில் அவரெழுதும் கட்டுரைகள் அவருடைய அரசியல் பணிகளுக்கு பிரச்சாரமாக அமைந்தன.

இதழின் வேலைகள் தலைக்கு மேல் ஓடிக் கொண்டிருக்கும்போது வெறுமனே வீட்டை சுற்றிப்பார்த்துக் கொண்டிருப்பது உள்ளத்தை உறுத்த வேர்கடலைகள் இருந்த கிண்ணத்தை மனைவியிடம் நீட்டி “எனக்கு போதும் மிலி… நிறைய வேலையிருக்கு” என்றான் ஹென்றி.

“ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்… இன்னும் ஃபைவ் மினிஸ்ட்ஸ் மட்டும்தான். இதை மட்டும் பாத்திருங்க – கீழே.. கீழே பாருங்க… உங்க காலுக்கு கீழே” என்றாள் துண்டுதுண்டாக. அவன் அப்போதுதான் தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தையும் கூடவே சாளரங்களில் புதிதாக தொங்கவிடப்பட்டிருந்த திரைசீலைகளையும் கவனித்தான். திரைசீலை வாங்குவது தொடர்பாக பாபுவுக்கும் மிலிக்கும் ஏகப்பட்ட வாக்குவாதங்கள் நடந்தும் உடன்பாடு எட்டாமல் வழக்கு அவனிடம் வந்திருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

“திரைச்சீலைகள் வீட்டை அழகுப்படுத்தும்ங்கிறது என்னோட கட்சி. ஆனா பாபு அது இயற்கையான வெளிச்சத்தை காட்சிகளையும் மறைச்சிடும்னு சொல்றாரு” என்றாள் மிலி கணவனிடம் புகார் சொல்லும் விதமாக. அவள் லேசாக கண்ணடித்தது போலிருந்தது ஹென்றிக்கு. காந்தி அவன் சொல்ல வருவதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

அவன் தீவிரமான தொனியில் “அண்ணா எது இயற்கையின்னு நமக்கு தெரியிலன்னு நெனக்கிறேன்” என்றான்.

“ஓ… நோ… நோ… நமக்கது நல்லாவே தெரியும். நமது உள்ளுணர்வின் வழியாக அது மிக தெளிவாக நம்மிடம் பேசுகிறது. ஆனால் அதை நாம கூர்ந்து கேட்கணும்” என்றார் அவரும் தீவிரமாக.

அவர்கள் எண்ணங்களால் வேறெங்கோ செல்வது புரிந்து மிலி விளையாட்டு பேச்சை நிறுத்தி விட்டு கணவனை கெஞ்சலாக பார்க்க, அவன் அவரிடம் பேசி திரைசீலைக்கு ஒப்புதல் வாங்கித் தந்தபோது அவளுக்கு கணவன் மீது சற்று பொறாமையாக கூட இருந்தது. கூடவே நாற்காலிகளுக்கு மெத்தைகள் தைப்பது குறித்தும் அவள் அனுமதி வாங்கிக் கொண்டாள். அன்றிரவு அவனிடம் ரகசியமாக சுவரில் மாட்டுவதற்கு படமொன்று வாங்கியிருப்பதாக சொன்னபோது அவன் அதை காட்டுமாறு கேட்டான். அது அழகான குழந்தையொன்றின் படம். அவன் கண்கள் பளபளக்க நிமிர்ந்தபோது அவள் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

மோகன்தாஸுக்கு மனைவி மகன்கள் அடங்கிய தனது பெரிய குடும்பத்துக்கான பொருள் தேடல் குறித்த கடமையோடு சுயம் அறியும் தேடலும் மதங்களுக்கிடையேயான உரையாடலும் உணவு மருத்துவம் ஆன்மீகம் என்று பெருகிய ஆர்வமும் அவரை ஓரிடம் நிற்காதவராக மாற்றியிருந்தன. கூடவே பிரம்மச்சரியத்தின் மீதும் பிடிப்பு வர தொடங்கியிருந்தது. இவள் பா விடம் இது பற்றி கேட்டபோது அவர் “ஏற்கனவே நாலு பசங்க” என்று சிரித்தார்.

தன் ரசனைக்கேற்ப மாற்றியிருந்த வீட்டை கணவனுக்கு காண்பித்த பிறகு நல்லாருக்கா..? நல்லாருக்கா? வீடு எப்டியிருக்குன்னு சொல்லு ஹென்றி” என்றாள் மிலி கெஞ்சலாக. சிறுபிள்ளையாய் மலர்ந்ததிருந்த மனைவியின் தோற்றம் சட்டென்று நெகிழ்த்த அவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் ஹென்றி. திண்மையான உடற்கட்டும் நேர்த்தியான உருவமும் கொண்ட இருபதுகளின் நடுவிலிருக்கும் யூத இளைஞன் அவன். அடர்ந்த அவன் தலைமுடியும் மூக்குக்கண்ணாடிக்கு பின்னிருந்த அவனது உருண்டையான அறிவார்ந்த விழிகளும் கூரிய நாசியும் அடர்ந்த புருவமும் மெல்லிய உதடுகளும் அந்த நீள்முகத்தில் பொருத்தினாற்போல் அமைந்திருந்த காதுகளும் அவனை மேலும் கவர்ச்சியானவனாக காட்டியது. இந்தியாவுக்கு வருவதற்குமுன்பே அந்நாட்டின் மீது நல்லவிதமான சித்திரம் கொண்டிருந்தான். இந்திய நலன்கள் மீதான முழுஅக்கறையும் பிடிவாதமான குறுகிய மனப்பான்மைக்கும் மதவெறிக்கும் முடிவுகட்ட வேண்டும் என்பதிலும் அவனுக்கு ஆர்வமிருந்தது. தன் சொந்த இனம், குழு அல்லது மதப்பிரிவின் விடுதலையில் அல்லாமல் மொத்த மனித இனத்தின் ஒன்றுபடுதலில் நம்பிக்கை கொண்டிருந்தான்.

“எப்டீ.. எப்டீ மிலி ஒரே நாள்ல இதெல்லாம் சாத்தியம்?” கிண்ணத்திலிருந்த நிலக்கடலைகளை எடுத்து வாயிலிட்டுக் கொண்டான்.

“நான் யாரு? மிலி கிரகாம் போலாக். என்னால எல்லாமும் முடியும்” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டாள் மிலி. எப்படியோ போராடி காதலனுடன் இணைந்து விட்ட திருப்தி அவளுடலை மெருகேற்றி மேலும் மென்மையாக்கியிருந்தது.

“அந்த இந்திய இளைஞனுக்கு இடம்?” அவர்களுடன் இந்திய இளைஞன் ஒருவனும் தங்கியிருந்தான்.

“முன்னறைதான் இப்போ ஃப்ரீ ஆயிடுச்சுல்ல. அவர் அங்கே தங்கிக்கலாம்”

அறைகலன்கள் இல்லாத முன்னறை தங்குவதற்கு ஏற்ற இடமாக மாறியிருந்தது. பாபூ சொல்வதுபோல உடைமைகளுக்கு அடிமையாவது பெரும் பிசகுதான் என்று தோன்றியது ஹென்றிக்கு. அறைகலன்களும் அநாவசிய பொருட்களும் இல்லாதது உடனுக்குடன் வீட்டை விடுப்பதற்கும் வசிப்பதற்கு மட்டுமே கொள்ளத்தக்க இடமாக அதனை கருதுவதற்கும் வாய்ப்பளிக்கும். ஒருமுறை குஜராத்தை சேர்ந்த காந்தியின் சிறு வயது நண்பரொருவர் வியாபாரம் நட்டப்பட்டு பணமுடை ஏற்பட்டுப்போனதால் மனம் நொந்து மோகன்தாஸை பார்ப்பதற்காக டிரான்ஸ்வாலிலிருந்து வந்திருந்தார். அவரின் பின்புலம் காந்திக்கு தெரிந்திருந்தது.

“நீங்க உங்க வீட்ல இருக்கற அவசியமில்லாத பொருள்களையெல்லாம் வித்துட்டா கணிசமான பணம் கிடைக்குமே?“ காந்தியின் தடாலடியான இந்த ஆறுதலை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர்கள் பரம்பரையாக தென்னாப்பிரிக்காவில் தொழில் செய்திருந்தமையால் அவர்களிடம் பொருட்கள் நிறையவே சேர்ந்திருந்தன.

“பரம்பரையாக வந்தவைகளோ பரிசாக கிடைச்சதோ எதுவானாலும் சரி… அதையெல்லாம் பாதுகாப்பதே பெரிய வேலையாகவும் பிறகு அதே கவலையாகவும் மாறிடும். பொருட்களை விட்டு விலகாமல் அவற்றின் மீது அதீதமா பற்று வைச்சிருந்தோம்னா அது ஆன்மாவை காயப்படுத்திக்கிறதுக்கு சமம். உங்களோட பிரச்சனை என்னன்னு சொல்லட்டுமா?” என்றபோது அந்த நண்பர் பேசாமலேயே அமைதி காத்தார். நண்பரின் பேச்சில் அவருக்கு உடன்பாடில்லாமல் இருந்திருக்கலாம்.

மோகன்தாஸ் அதை சட்டை செய்யாதவராக “உங்களிடம் எவ்வளவு பொருள்கள் இருக்குதுங்கிறதை விட உங்களிடம் இருக்கற பொருள்களைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதுதான் முக்கியம். ஒற்றையாடையை மட்டுமே வச்சிருந்த துறவியொருத்தர் அரசரை பார்க்க வந்திருந்தாராம். துறவி உண்மையாகவே பொருளாசையிலிருந்து விடுதலையாகிட்டாரான்னு சோதிப்பதற்காக அரசர் தனது தவவலிமையால அந்த அரண்மனையை எரிச்சிட்டாராம். இப்போ அரண்மனையிலிருந்த அத்தனை பொருள்களோட அந்த ஒற்றையாடையும் எரிஞ்சுப்போச்சு. அந்த துறவி மிகுந்த கவலையாகிட்டார். அரசர், உங்களிடம் இருந்தது ஒரேயொரு ஆடை மட்டும். அதற்கு பதிலா எளிதாக வேறொரு ஆடையை பெற்றுக்கொள்ளலாம். ஆனா என்னோட அழகிய மாளிகைக்கும் அதிலிருந்த அபூர்வமான பொருள்களுக்கும் மாற்றே கிடையாது. ஆனா நீங்கதான் என்னை விட ரொம்ப வருத்தப்படுறீங்கன்னு சொல்லிட்டு அர்த்தத்தோட அந்த துறவியை பார்த்தாராம்” பாபு இதை சொல்லிக்கொண்டே அந்த மனிதரை பார்த்தபோதும் அவர் பேசாமலேயே இருந்தார். மோகன்தாஸுக்கு நண்பரின் எண்ணவோட்டம் புரிந்தாலும் விடாப்பிடியாக “நம் வாழ்க்கைய பொருட்களால் நிறைத்துக் கொண்டால் அதன்பின் நம்மால் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்க முடியாது” என்றார். அவர் கிளம்பிய பிறகு காந்தி, நான் இப்போ என்னோட நண்பருக்கு அன்புள்ள எதிரியாயிட்டேன் என்று சிரித்தது நினைவுக்கு வந்தது ஹென்றிக்கு.

ஹரிலால் கூட கணவரின் அன்புள்ள எதிரியாகி விட்டதாக பா சொன்னார். அப்போது அவர்கள் டர்பனில் பீச்குரோவ் பகுதியில் வசித்திருந்தனர். அந்த வீடு தனியானது என்றாலும் தாராளமான அறைகளையும் ஐரோப்பியரின் வீட்டை போல அறைகலன்களும் அழகான தோட்டமும் கொண்டதாக இருக்குமாம். ஆனால் கிரே தெருவில் வசிக்கும் குஜராத்தி பெண்களை சந்தித்து பேச வேண்டுமென்றால் கூட அதற்கென தனியாக மெனக்கெட வேண்டியிருக்கும் என்றார். அங்கு அவர்களுடன் குஜராத்தி சமையல்காரரும் தமிழ் பேசும் எழுத்தரான வின்சன்ட் லாரன்ஸ் என்பவரும் இருந்தனராம். அவர்களின் பதினாறு வயது மூத்த மகன் ஹரிலால் தகப்பனை போலவே இருப்பானாம். பம்பாய் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதுவதற்காக வேண்டி இந்தியாவிலேயே தங்கி விட்டதில் அவருக்கு நிறைய வருத்தமிருந்தது. ஆனால் மிலியும் ஹென்றியும் அவரை சந்தித்த நாளொன்றில், பா, ஹரிலால் காதலில் விழுந்து விட்டான் என்றார். சற்று பதற்றமாகதான் பேசினார். அது மகிழ்ச்சியிலா? வருத்தத்திலா என கண்டுப்பிடிக்க இயலவில்லை அவர்களால். மகன், இந்தியாவில் ராஜ்கோட் வழக்கறிஞர் ஹரிதாஸ் வோரா என்பவரின் மகளை காதலிக்கிறான் என்றும் அதை கணவனிடம் சொல்லும் துணிச்சல் தனக்கில்லை என்றும் ரகசியமாக கூறினார். ஒருவேளை இதற்கும் மிலியின் சிபாரிசு தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த துணிச்சல் மிலிக்குமே இல்லை. இருந்திருந்தால் அன்று காந்தி அலுவலகத்துக்கு கிளம்பிய பிறகு அவரை மருதாம்பா தேடி வந்த விஷயத்தை அப்போதே கூறியிருந்திருப்பாள்.

அப்போது மருதாம்பா சுப்பையாவின் மீது காதல் கொண்டிருந்தாள். அவள் டாக்டர் பூத்திடன் உதவியாளராக பணியாற்றியவள். தனக்கென சொந்தம் யாருமற்றவள். அது மிலி லண்டனில் இருந்த காலக்கட்டம். சுப்பையா, பிரிட்டிஷாருக்கு ஆதரவாக போயர்களுக்கு எதிராக போரிட வேண்டி தமிழ்நாட்டிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு வந்தவன். கப்பல் பயணம் உடலை முடக்கி இறக்கக்கிடந்தவனை வைத்தியம் பார்க்கும்பொருட்டு மோகன்தாஸ் மிகுந்த நெருக்கடிக்கிடையே பெற்றுக் கொண்டிருந்தார். பிரிட்டிஷாருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அவனை குணம் பெற செய்து, அவர்கள் செய்த உதவிக்கு கைமாறாக ஆம்பலன்ஸ் படையில் அவனை ஈடுப்படுத்தியிருந்தார்.

“பாபூ எதுக்கு பிரிட்டிஷ்காரங்களுக்கு ஆதரவா ஆம்பலன்ஸ் படை உண்டாக்கினாரு? அதுவும் இராணுவ அனுபவமே இல்லாதவங்களை வச்சு?” மிலிக்கு எல்லாவற்றையும் கேட்டு தெரிந்துக் கொள்ளும் ஆர்வமிருந்தது.

ஆம்புலன்ஸ் படையில் இந்தியர்கள் செய்திருந்த உதவியை ஹென்றியும் அறிந்திருந்தான். போர் முனைக்கு அனுப்பப்பட்ட இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் இருபத்தைந்து மைல்கள் நடக்கவும் பல மணி நேரம் உணவும் தண்ணீரும் இல்லாமலிருக்கவும் திறந்த வெளிகளில் படுத்துறங்கவும் வேண்டியிருந்தது. தம்மை சுற்றிலும் குண்டுகள் விழுந்துக் கொண்டிருக்கும் நிலையில் அடிப்பட்டவர்களை பாதுகாப்பிடங்களுக்கு சுமந்து செல்லவும் சிப்பாய்களை முகாம் விட்டு முகாம் தொடர்ந்து பின்தங்கியவர்களை கவனித்துக் கொள்வதுமாக பழக்கமில்லாத வேலைகளில் அவர்கள் ஈடுப்பட்டனர். வேறு சிலர் எதிரியால் கைவிடப்பட்ட ரைஃபிள்களையும் ரவைகளையும் பொறுக்கிக் கொண்டு வர அனுப்பப்பட்டார்களாம். ஸ்பியன்கோப் பகுதியில் கோவேறு கழுதைத்தொடர், சக்தியற்று விழுந்து கிடந்த சிப்பாய்களுக்கு தண்ணீரை சுமந்துக் கொண்டு கோப் குன்றின் அபாயமான சரிவில் ஏறிச் சென்றதாம்.

“பிரிட்டிஷ் பேரரசின் குடிமக்கள்ங்கிற முறையில் பிரிட்டிஷ் தரப்புக்கு ஆதரவு தரலாம்னு அவர் நினைச்சிருக்கலாம். ஏற்கனவே டர்பன்ல டாக்டர் பூத் நடத்திட்டு வந்த ஆஸ்பிடல்ல பாபு தன்னார்வ பணி செஞ்சுட்டிருந்தார். அவர் கூட பாபுவை ஊக்குவிச்சிருக்கலாம். பிரிட்டிஷ்காரங்க ஜெயிச்சா இந்திய மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும்னு பாபுவுக்கு எண்ணிமிருந்தது எனக்கு தெரியும்” என்றான் ஹென்றி.

திடகாத்திரமானவர்களேயே உருக்குலைக்கக்கூடிய இரவு நேர பணிக்கு பிறகு சோர்வாகவும் மன அழுத்தத்தோடும் இருக்கும் சிப்பாய்களை காந்தி, விருப்பு வெறுப்பற்ற பாவத்தோடும் உற்சாகமாகவும் உரையாடலில் தன்னம்பிக்கையோடும் அணுகுவாராம். அவர் அன்பான கண்கள் கொண்டவராக இருந்தார் என்பதாக கண்டவர்கள் சொன்னபோது மிலிக்கு குறுகிய நெற்றியும் கரிய மீசையும் கொண்ட அந்த இந்தியருக்கு கருணை மிகுந்த கண்கள் இருப்பது உண்மைதான் என்றெண்ணிக் கொண்டாள். ஆனால் அந்த கண்களுக்கு மருதாம்பாவின் காதல் தெரிய வரவில்லை.

அப்போது மருதாம்பா ஃபீனிக்ஸ் குடியிருப்புக்கு வந்து விட்டிருந்தாள். குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை இரும்பும் நெளித்தகடுகளையும் கொண்டு அமைத்துக் கொண்டனர். அங்கு நிலம் எந்த தனிநபருக்கும் சொந்தமானதாக இருக்கவில்லை. பாதைகளும் சிறு சாலைகளுமே ஒருவர் நிலத்தை மற்றவர் நிலத்திலிருந்து பிரித்தது. குடியிருப்புவாசிகள் அவரவருக்கு தேவையான பயிர்களை பயிரிட்டுக் கொண்டனர். இந்தியன் ஒப்பீனியன் இதழ் வெளிவரும் நாளில் குடியிருப்பே பரபரப்பில் ஆழ்ந்து விடும். காந்தியும் ஹென்றிபோலாக்கும் கடைசி நிமிடம் வரை கட்டுரைகளை அச்சுக்கு தந்துக்கொண்டேயிருப்பார்கள். ஆயில் இன்ஜின் பழுதாகி விட்டால் கூட இதழ் வேலைகள் நின்று விடாது. இயந்திரத்தின் கைப்பிடிகளை சுழற்றுவதற்கு ஜுலுக்களின் குடியிருப்பிலிருந்து திடகாத்திரமான பெண்கள் வரவழைக்கப்படும்போது மருதாம்பாளும் வரிந்துக்கட்டிக் கொண்டு வேலையில் இறங்கி விடுவாள். கடைசிதாள் அச்சிடப்படும்போது எப்படியும் நடுநிசியாகி விடும். வேலைகளெல்லாம் முடிந்தபிறகு பாபுவையும் பா வையும் அவர்கள் இல்லத்தில் விட்டுவிட்டு இரவு வணக்கம் சொல்லி விட்டு அவரவர் வீடு திரும்பும்போது அடுத்த நாள் பிறந்து விடும்.

மருதாம்பா இளமையின் வசீகரமும் களையான முகமும் கொண்டிருந்தாள். பாபுவின் நடவடிக்கைகளின் மீது புரிதலும் ஏற்பும் கொண்டவளாக, இலட்சியவாதம் பேசுபவளாக இருந்தாள். சேவைகள் செய்வதிலும் ஆர்வமிருந்தாலும் வயது அவளை வென்றிருந்தது. சுப்பையாவின் மீது காதல் வசப்பட்டிருந்தாள். இது பாபுவுக்கு தெரிய வந்தபோது அவர் மிக மிக வருத்தம் கொண்டார்.

”மருதாம்பா பற்றி நான் முழுசா தெரிஞ்சிருக்கேன்னு நம்பினேன். ஆனா அது உண்மையில்ல மிலி…” என்றார்.

“காதல் அத்தனை மோசமான விஷயமா பாபூ?”

“அது அடுத்தக்கட்டத்தை எட்டியிருந்தால் அது மோசமான விஷயம்தானே? மேலும் என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்காம இருந்தது பெரிய தப்பு. ஒருவேளை அவள் ஆதரவற்றவள். யாரிடமும் அவள் பொறுப்பு குறித்து பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லைங்கிற எண்ணம் என் மனசில இருந்திருக்குமோ? அதனால்தான் நான் அவளை சரியா கவனிக்கலையோ?” வருத்தத்தில் தோய்ந்து வந்தது அவரது குரல்.

“இப்டியெல்லாம் நீங்க உங்க மேல பழியை சுமத்திக்க அவசியமில்லை பாபூ”

ஆனால் டாக்டர் பூத்திடம் மருதாம்பாவை ஒப்படைக்கும் வரை அவர் அது பற்றி நிறையவே வருந்தியது அவளுக்கு தெரியும். ஆனால் மருதாம்பா தான் சுப்பையாவிடம் காதல் கொண்டதில் தவறேதும் இல்லை என்று தெளிவாகவே நம்பினாள். அதையே பாபுவிடமும் கூறியிருந்தாள். சுப்பையா இப்போதும் ஃபீனிக்ஸில்தான் இருந்தான். அவன் திருமணம் செய்து கொள்ளாமல் தீவிர பிரம்மச்சரிய விரதத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்றும், தான், அந்த விரதத்தை உரிய காலத்தில் முடித்து வைக்கும்வரை அது தொடர வேண்டும் என்றும் காந்தி கூறியிருந்தார்.

“நீங்க சுப்பையாவுக்கு அப்டி ஒரு தண்டனையை கொடுத்திருக்க வேணாம் பாபூ” என்றாள் மிலி.

“அது தண்டனையில்ல… ஒருவன் பிரமச்சரியத்தை கடைப்பிடித்தானெனில், பூரணத்தை நோக்கி அவனால் தன் முழு கவனத்தையும் செலுத்த முடியும்”

”ஆனால் அது சாமானிய மனித சிரமங்களை புரிந்துக் கொள்ள உதவாது. பாபூ… நீங்க சூசகமாக குழந்தை பெத்துக்கறதே தப்புன்னு சொல்றீங்க”

“இல்ல. நா அதை தவறுன்னு சொல்லல”

”திட்டவட்டமா சொல்லலேன்னாலும் குழந்தை பெத்துக்கறது சதையின் மேலுள்ள வேட்கைக்கு சலுகை கொடுப்பது மாதிரி்ன்னு ஒரு தொனி தெரியுது உங்க நடவடிக்கையில. உடல் வேட்கை ஒண்ணுதான் குழந்தைகளை படைப்பதற்கான ஒரே வழியா இருக்கு. அது இல்லாமபோனா மனித இனமே அழிஞ்சு போயிடும். உடல் வேட்கை அத்தனை கொடுமையான விஷயமா?“

”ஆமான்னு உறுதியா சொல்ல முடியில. ஏன்னா மனித இனம் நாம் நம்பும் பூரணத்துவம் அடையறவரைக்கும் தொடர்ந்து வளர்ந்தாகணுமே. ஆனா வாழ்க்கையில் மாபெரும் லட்சியமும் பணியும் அமையப்பெற்றவர்கள் தங்கள் ஆற்றலையும் பொழுதையும் ஒரு சிறு குடும்பத்தை கவனிப்பதில் செலவழிக்கறது சரியா? அவங்க அதை விட பெரிய பணிக்காக இங்க வந்தவங்க இல்லையா?”

”எனக்கு ஒண்ணு புரிஞ்சுக்க முடியுது பாபூ… பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பது பெற்றோராக இருப்பதை விட உயர்ந்தநிலைன்னு நீங்க நினைக்கிறீங்க”

அவர் பதிலேதும் கூறாது மென்மையாக சிரித்தார். அடுத்தநாள் குழந்தையோடும் கணவரோடும் வந்திருந்த மருதாம்பாவை கூட இதே போன்று மென்மையான சிரிப்புடன்தான் ஆசிர்வதித்திருந்தார். ஏனோ அந்த சிரிப்பை இப்போது பார்க்க வேண்டுமாய் தோன்றிய கணமே, அவர் சிறையிலிருக்கும் உண்மை நெஞ்சை வருத்தியது.

அவசரச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்ததிலிருந்தே அவர் போராட்டம், கூட்டம், அதிகாரிகளை சந்திப்பது, கடிதம் எழுதுவது, மனு போடுவது என்று பரபரப்பாகவே இருந்தார். வீடு திரும்பும்போது இரவு பதினொன்றோ இரண்டோ கூட ஆகி விடும். அன்று வெகுநாட்களுக்கு பிறகு ஒன்பது மணிக்கு உணவு மேசை நிரம்பிய மகிழ்வில் போலாக், அர்னால்டின் Song Celestial பாடலை வாசித்தபோது அதை மோகன்தாஸ் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு அவசரச்சட்டம் குறித்த விவாதம் ஓடியது. அதன் முடிவில் மோகன்தாஸ் மிக வருத்தத்தோடு, “இந்த சட்டம் ஆசிய மக்களின் வருகையை அடைச்சுட்டு அதற்கு பதிலா டிரான்ஸ்வாலை வெள்ளையர்களுக்கான இடமா மாத்திடும்” என்றார். அன்றைய பிரார்த்தனையில் கூட அவர் அளவுக்கதிகமாக உருகியது போலிருந்தது மிலிக்கு.

என்னுயிரை ஏற்றுக்கொள், இறைவா,
அது உனக்கு படைக்கப்பட்ட தாகட்டும்.
என் நொடிகளையும் நாட்களையும் ஏற்றுக்கொள்
அவை, உன் துதியின் நீரோட்டமாகட்டும்.
என் கரங்களை ஏற்றுக்கொள், அவை
உன் அன்பின் உந்துதலில் இயங்கட்டும்.

என் பாதங்களை ஏற்றுக்கொள், அவை
உனக்கென விரைந்து எழில் சேர்க்கட்டும்.
என் குரலை ஏற்றுக்கொள், என் மன்னவன்
உனக்கென நாளும் அது பாடட்டும்.
என் உதடுகளை ஏற்றுக்கொள், அவை
உன் செய்திகளால் நிறைந்திருக்கட்டும்.

என் வெள்ளியும் தங்கமும் ஏற்றுக்கொள்
எனக்கெனச் சிறு துளியும் கொள்ளேன்.
என் அறிவை ஏற்றுக்கொள், என் ஆற்றல்கள்
உன் சித்தம் செயலாய் ஆகட்டும்.
என் முனைப்பை ஏற்றுக்கொள் –
உனதாகட்டும், அது இனியும் எனதன்று.

என் இதயத்தை ஏற்றுக் கொள், அது உனது.
இனியுன் அரச அரியணை யாகட்டும்.
என் அன்பை ஏற்றுக்கொள், இறைவா
அதன் செல்வங்களை உன் பாதங்களில் இடுகின்றேன்.
என்னை ஏற்றுக்கொள், என்றும்
உனக்கே உரியேன், யாவும் உனக்கே!

பாபுவின் குரலிலிருந்த உருக்கம் மிலியின் மனதை நெகிழ்த்தியது.. கர்ப்பிணியான அவள் தனது பகல் நேர நடையை பாபுவின் நடைப்பயிற்சியோடு இணைத்துக் கொண்டாள். “பாபூ… போர்களை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?”

எலுமிச்சைச்செடிகளில் உபரியாக தொங்கிய முட்களை கழித்து அதற்கான உரக்குழியில் போட்டுக் கொண்டே, “ஒரு செயலுக்கோ அதன் விளைவுகளுக்கோ அஞ்சி அச்செயலை செய்யாமலிப்பது அறமல்ல” என்றார் மோகன்.

“புரியில பாபூ… அப்டீன்னா நீங்க போரை ஆதரிக்கிறீக்கன்னு எடுத்துக்கலாமா?” டாக்டர் பூத் அவளை நிறைய நடக்க வேண்டும் என்று கூறியிருந்தாலும் பிரசவநாள் நெருங்கி விட்டதால் நடக்கும்போதே மூச்சிரைத்தது.

“படிப்பினை கிடைக்கறவரைக்கும் பணியாற்ற வேண்டியதுதான். ஒருவேளை உண்மையிலுமே படிப்பினை கிடைச்சிருச்சின்னா அதில் மேலும் ஈடுபடுவதற்கான தேவையே இருக்காது”

“அப்டீன்னா நீங்க போர்களின் ஆதரவாளர்ன்னு எடுத்துக்கலாமா? அன்பு வெறுப்பையும் வெல்லும்னு சொல்வீங்களே பாபூ?“

“யெஸ்.. ஆனா நான் பார்த்தவரைக்கும் என் நாட்டு மக்கள் வன்முறையை தவிர்ப்பது சக மனிதர் மேல இருக்கற அன்பினால் அல்ல. கோழைத்தனத்தாலதான். போர்க்களத்தின் வீரத்தை விட கோழைத்தனத்தின் அமைதி மோசமானது. பயந்து நடுங்கிட்டு இருக்கறத விட சண்டையிட்டு சாகறது மேல். ஆனா ஒரு இந்து என்ற முறையில் எனக்கு போர்கள் மீது நம்பிக்கையில்ல. ஆனால், ஏதாவது ஒரு விஷயம் என்னை ஓரளவுக்காவது அதை ஏற்கச்செய்யுமானால், அது போர்முனையில் நாங்கள் பெற்ற அனுபவமாகவே இருக்கும்”

“ஆம்பலன்ஸ் உதவியி்ன்போது போர்க்களத்தில் செலவிட்ட நேரத்தினால் நீங்கள் அடைந்த விநோதமான சிக்கலான முடிவு இது” என்று சிரித்தாள் மிலி.

“ஆமா… எதுவும் நிலையானதல்ல” அவரும் அவளுடன் சேர்ந்து சிரித்தார்.

அவர் ஹரிலாலுடன் சமாதானமாக போக விரும்பியதை கஸ்துாரிடம் சொன்னபோது பா “இனிமே என்ன செய்ய முடியும்? நிலைமை கை மீறிடுச்சு. ஹரி என் கொழுந்தனோட ஆதரவோடு அந்த பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்டான்” என்றார்.

“கேள்விப்பட்டேன் பா… காந்தி புரொடக்டர் ஆஃப் ஏசியாடிக்ஸுக்கு ஹரிலாலோட பெர்மிட் சம்பந்தமா லெட்டர் போட்டிருக்கார்”

“மகனோட திருமணத்தை பத்தி என்ன நினைக்கிறாராம்?” பா வின் குரலில் ஆர்வமிருந்தது.

“அவருக்கு ஒப்புதல் இல்லேன்னாலும் மகனை மன்னிக்க தயாரா இருக்கறதாலதானே அந்த கடிதத்தையே எழுதியிருக்காரு”

மிலியின் பேச்சிலிருந்த உண்மை கஸ்துாரின் கண்களில் நீரை வரவழைத்தது.

ஹென்றி வீடு திரும்பியபோது விளையாட சென்றிருந்த அவளின் மூத்த மகனும் தகப்பனின் கையை பிடித்தபடி வந்து சேர்ந்திருந்தான். மதிய நேரங்களில் உணவு மேசை ஆட்களின்றி இருப்பது வாடிக்கையென்றாலும், காந்தி சிறைக்கு சென்றிருந்த இந்நாளில் அது மேலும் வெறுமையாக தோன்ற, ஹென்றி தனக்கான உணவை தட்டில் எடுத்துக் கொண்டு முன்னறைக்கு வந்தமர்ந்துக் கொண்டான். மிலி சிறிய தட்டில் ரொட்டியும் துருவிய பாலாடைக்கட்டியும் கேரட்டும் வைத்து மகனுக்கு எடுத்து வந்தாள்.

“பாபுக்கு சிறையில ‘மீலி பாப்’தான் சாப்பிட கொடுக்கிறாங்களா?” அவளுடைய குரலில் வருத்தமிருந்தது. அது அவருக்கு செரிமானக் குறைவை ஏற்படுத்தும்.

“இல்ல… அந்த பிரச்சனையெல்லாம் இப்போ சரியாயிடுச்சு. அவருக்கு மேசை வச்சிக்கவும் பேனா மைக்குப்பி வச்சிக்கவும் கூட அனுமதி கிடைச்சிருக்கு”

“நல்ல விஷயம்தான்”

“ஆமா… ஆனா அதை விட நல்ல விஷயம் என்னான்னா அவர் விரைவில் விடுதலையாகிட வாய்ப்பிருக்கு. பாபுவை சமரசத்திட்டத்தின் ஷரத்துகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த பிரட்டோரியாவுக்கு ஸ்மட்ஸை சந்திக்க அழைச்சிட்டு போயிருக்காங்க. வழக்குகளை திரும்ப வாங்கப்போறதாகவும் கைதிகளை விடுவிக்கப்போறதாகவும் அரசு ஊழியர்களாக இருந்த சத்தியாகிரகிகளை திரும்ப வேலையில சேர்த்துக்கறதாகவும் அதுக்கு பதிலா சத்தியாகிரகிகள் தாமாக முன் வந்து தங்களை பதிவு செஞ்சுக்கணும் ஷரத்து தயாராகியிருக்கு”

“பாபு இதை ஏத்துக்குவாரா?”

“ஏத்துக்கலாம்” என்றான்.

மிலியின் உடல், இரவுபகலாக குழந்தையை கவனித்துக் கொள்வதால் எழுந்த சோர்வினாலும் உறக்கமின்மையாலும் தளர்ந்திருந்தாலும் அவள் கேள்விப்பட்டிருந்த நல்ல செய்தியே அவளை விழித்தெழ வைத்தது. சற்றுநேரம் அதை அனுபவித்தப்படி படுக்கையில் அமர்ந்திருக்க மனம் விழைந்தாலும் செய்ய வேண்டிய வேலைகள் படக்காட்சி போல கண்களில் ஓடின. மூத்தமகன் எழுந்துக் கொள்வதற்குள் உணவு தயாரிக்க வேண்டும். அதற்குள் இளையவன் பாலுக்கு அழுவான். ஹென்றியை கிளப்பி விட வேண்டும். வீட்டு வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும். ஆனால் எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டபோது அந்த மந்திரவார்த்தை மனதிலிருந்து எழுந்து “பாபு இன்று விடுதலையாகி விடுவார்” என்று காதோரம் சொல்லி விட்டு சென்றது.

ஹென்றி இந்தியன் ஒப்பீனியனுக்கான கட்டுரைகளை வேகவேகமாக எழுதிக் கொண்டிருநதான்.

‘நேட்டாலிலிருந்த வெள்ளையர்கள் டிரான்ஸ்வாலில் நடந்து கொண்டிருந்த போராட்டம் பற்றி முடிவெடுக்க முடியாமல் இருப்பார்கள் என்பதும் அந்தக் காலனியி்ன் இந்தியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதும் எதிர்பார்க்கக்கூடியதே. டிரான்ஸ்வாலில் இருக்கும் பதினைந்தாயிரம் ஆசியர்கள், முழு உலகுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இனப்போரை எதிர் கொண்டிருக்கிறார்கள். அந்தப்போர், ஆசியர்கள் எப்போதுமே அடக்கியாளப்பட வேண்டுமா அல்லது சமத்துவமாக நடத்தப்பட, சக மனிதர்களாக கருதப்பட மனிதனும் அடிமையும் என்ற நிலையில் அன்றி, மனிதனும் மனிதனும் என்ற நிலையில் நடத்தப்பட வேண்டுமா என்பதற்கான போராட்டம்…

என்பதாக அவன் எழுதி முடித்து அச்சுக்கு அனுப்பியிருந்த இரண்டு கட்டுரைகளுக்கடியில் அச்சுக்கு அனுப்பமுடியாத பாபுவுக்கு எழுதிய பிரத்யேக கடிதமொன்றும் இருந்தது. “ஒரு மனிதனை அவனது லட்சியமானது இந்த அளவுக்கு பீடித்து அவனை தன் சொந்த சுகத்தையும் தன் உடல் நலத்தையும் சொந்த ஆர்வங்களையும் குடும்பத்தையும் அவனுக்காக வேலை செய்பவர்களின் மகிழ்ச்சியையும் மறக்க செய்வது என்பது மிகவும் அபூர்வமானது. உண்மையை என்ன விலை கொடுத்தேனும் தேடிச் செல்ல வேண்டும் என்ற இப்சனின் கருத்தை நோக்கி நான் மேன்மேலும் நகர்ந்து வருகிறேன். மேலும் மிக உயர்ந்த மனிதன் என்பவன் தன்னந்தனியாக நிற்பவனே என்ற டாக்டர் ஸ்டாப்மேனின் வார்த்தைகளை நாளுக்குநாள் உணர்ந்து வருகிறேன். உங்களை அண்ணா என்று அழைக்கவே என் மனம் விழைகிறது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களே“ என்றிருந்தது.

அன்று இரவுணவுக்கு பிறகு மிலி, உள்ளறையில் குழந்தைகளுக்காக வாங்கப்பட்ட உணவுப்பொருட்களையும் சமையற்சாமான்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது முன்னறையிலிருந்து ஒலித்த குரல் அவளை சட்டென்று மலரச் செய்தது. அவள் ஆர்வமும் அன்புமாக எட்டிப்பார்த்தபோது பாபு, அவளுடைய மகன்களிடம் விளையாடிக் கொண்டிருந்தார். தாயை கண்டதும் பூவாய் மலர்ந்து சிரித்த குழந்தையோடு பாபுவும் சேர்ந்துக் கொண்டார்.

அந்த சிரிப்பில் சோர்வோ பயணக்களைப்போ ஏதுமில்லை.

பூச்செண்டு – கலைச்செல்வி சிறுகதை

அவள் கண்ணாடி சன்னலின் வழியே வெளியே பார்வையை ஓட்டினாள். வழக்கம்போல தெரு அமைதியாக இருந்தது. அக்கொடிய வியாதி இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது என்றபோது யாரும் அத்தனை பெரிய விஷயமாக அதை எடுத்துக் கொள்ளவில்லை. ஒருவர் இரண்டாகி, இருவர் எட்டாகி, எட்டு அறுபத்துநான்கானபோது கூட நமக்கெல்லாம் அது வந்து விடாது என்ற பொது மனப்போக்கு கொண்டவர்களாகவே இருந்தனர். தொட்டுக் கொண்டால் கூட அக்கொடியவியாதிக்கான கிருமி தொற்றி விடும் என்ற உலக சுகாதார மையம் வீரிட்டது. ஏற்கனவே தொட்டதன் துர்பலனை உலகம் அனுபவிக்க தொடங்கியிருந்ததால், ‘நெருங்குதலிலிருந்து விலகியிருத்தல்’ என்ற புதியதொரு கோட்பாட்டை அது கடைபிடிக்கத் தொடங்கியது. வீட்டடங்கு என்ற பதம் எல்லோருக்குமே புதிதென்றாலும் இளைஞர்கள் நாள் முழுக்க வீட்டிலிருப்பதை உணராதவர்களாக இருந்தனர். வசதிப்படைத்த இளைஞர்களை விட வர்க்கத்தட்டுகளில் கீழ்நிலையிலிருந்த இளைஞர்களின் உலகம் அதிகமும் வெளியிலிருந்தது. அரையுலகிற்குள் இருப்பதென்பது, உடலை ஒருபுறமாக சாய்த்து ஒற்றைக்காலில் நொண்டியடிப்பதை போன்றது. நொண்டியடித்தபடியே இருப்பதால் இடுப்பில் வலி ஏற்பட்டது. பிறகு அது பொருளற்றவர்களின் உடலில் பரவத் தொடங்கியது, முக்கியமாக வயிற்றுக்கு. வசதிப்படைத்த இளைஞிகளும் இளைஞர்களும் இணையத்தின் அத்தனை பயன்பாடுகளையும் உபயோகப்படுத்திக் கொள்ளும் மும்மரிப்பான, தீவிரமான ஆவல் கொண்டனர். செயலிகளை புதிதுபுதிதாக பதிவிறக்கம் செய்துக் கொண்டனர். ஆனால் அதன் மீதான ஆர்வம் வடிய தொடங்கியபோது அவர்களிடம் இன்னும் தொழிற்நுட்பம் மீதமிருந்தது. கணினி வழியாக வீட்டுக்குள்ளிருந்து பணியாற்றியவர்களும் வெளியே செல்ல வழியற்ற அன்றாட வருவாய் ஈட்டுவோரும் ஒருமித்து பொறுமையிழக்க தொடங்கியபோது, தொற்று கூடியிருப்பதை காரணம் காட்டி அரசாங்கம் வீட்டுறைவு காலத்தை நீட்டித்திருந்தது.

அவனும் வீட்டுறைவில்தான் சிக்கியிருந்தான். ஆனால் சிக்கியபோது அவன் விடுதி ஒன்றின் அறையிலிருந்தான். அது அலுவல் சார்ந்த பயணம். இரண்டு நாள் கருத்தரங்கிற்காக திருச்சியிலிருந்து பெங்களுரூ வந்திருந்தான். ஒருநாள் ஊரடங்கு ஒரு வாரமாக நீட்டிக்கப்பட்டு கருத்தரங்கு இரத்தாகி, பயண வழிகளும் அடைக்கப்பட்டபோது அவனோடு சேர்ந்து திருச்சியிலிருந்த அவளும் பரிதவித்துப் போனாள். இருவரும் வாட்ஸ்ஆப்பின் காணொலி அழைப்பின் வழியாக பேசி பேசி அதை சரிக்கட்ட முனைந்தனர் “சஞ்சு எங்கருக்கா..” “அவளா..? ஜம்முன்னு என் மேல எப்டி துாங்றா பாரேன்..” காமிராவை கீழிறக்கிக் காட்டினாள். சஞ்சு மல்லாந்திருந்த அவள் வயிற்றின் மீது, உடலை உப்பலாக்கி கழுத்தை வளைத்து உடலில் வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தது. சஞ்சு காக்கடைல் பறவையாக இருக்குமாறு இப்பிறவியில் பணிக்கப்பட்டிருந்தது.

“பொறாமையா இருக்கு..” என்றான். அவளை நோக்கி ஏந்திக் கொள்வது போல கைகளை நீட்டினான். இரவுகளில், தன்னிரு கைகளையும் ஏந்தி அவளை வாங்கி நெஞ்சில் சாத்திக் கொள்வான். அவள் தலையை நிமிர்த்தி அவன் விழிகளை தன் விழிகளால் துழாவுவாள். காமம் கொண்ட அவ்விழிகள் தன்னளவில் சிறுத்திருக்கும். அவளுடைய புற அசைவுகளை அனிச்சையாக எதிர்க் கொள்ளும் அவனுடல், அவளை வீழ்த்துவதிலேயே தொடர்ந்து விழையும். “என் அசைவுகளை உணரு..” என்பாள் உடல்வழியே. “அதுனாலதானே ஒன்னை இறுக்கக் கட்டிக்கிறேன்..” என்பான் செயல்வழியே. நான் விழைவதை நீ விழைவதும், நீ விழைவதை நான் விழைவதுமே பொருந்துகின்ற காமம். ஆழம் தீண்டுவதே காமத்தின் நிறைவு. நுகர்தலே பூக்களுக்கு மணம் உண்டாக்குகிறது.

அந்த வியாதிக்கு காரணமான அந்த நுண்கிருமியை பெரிதாக்கியபோது அது அழகிய பூச்செண்டுபோலிருந்தது. வல்லரசுகள் உருவாக்கியிருந்த வலிமைக் கொண்டவர்கள், வலிமையிழந்தவர்கள் என்ற உலகின் இரு பிரிவுகளை குறுகிய காலத்தில் அக்கொடியநோய் ஒருங்கிணைத்து அனைத்து காதுகளிலும் அப்பூச்செண்டை சொருகி வைத்திருந்தது.

ஊரடங்கும் வீட்டடங்கும் நீட்டிப்பானபோது அவனுக்கான விடுதி செலவை இனி ஏற்றுக் கொள்ளவியலாதென நிர்வாகம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. அந்நேரம் விடுதியும் மூடியாக வேண்டிய நிர்பந்தத்திலிருந்தது. “இப்படியெல்லாம் நடக்கும்னு ரெண்டுநாளுக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தாகூட நா அங்கேர்ந்து கௌம்பியிருக்க மாட்டேன்டா.. நீயும் தனியா அங்க கஷ்டப்பட்டிருக்க மாட்டே..” என்றான் தன்னிரக்கத்தோடு.

“யெஸ்… வெஜிடபிள் கெடைக்கலே மளிகை கெடைக்கலேன்னு ஊரே லோலோன்னு அலையுது… இங்க சமைச்சு வச்ச சாப்பாட்ட சாப்பிட ஆளில்ல… என் ஒருத்திக்காக சமைச்சு நானே சாப்டறதெல்லாம் ஒலக போர்டா சாமி..”

“அதுக்காக சாப்டாம இருந்துடாதே.. நானெல்லாம் இங்க சாப்டறது ஒண்ணுதான் வேலைன்னு செஞ்சிக்கிட்டிருக்கேன்.. நேரங்கெடைக்கும்போது ஏடிஎம்ல கொஞ்சம் பணத்த எடுத்து கைசெலவுக்கு வச்சிக்க.. எல்லாத்தையும் லிக்விட்டா வச்சுக்க முடியாது பாத்துக்க..”

“போதும்.. போதும்.. போரடிக்காத..”

”அதுசரி.. ஒனக்கு இருக்க வீடிருக்கு.. வெளாட சஞ்சு இருக்கா.. நாந்தான் ரொம்ப பாவம்…”

“பொலம்பாத.. எதாது ஒரு வழி கெடைக்காமய போவும்…“ சஞ்சுவை நோக்கி அலைபேசியை திருப்ப அவன் திரைவழியாக அதனை கொஞ்சினான். அது தன் சிறிய அலகைக் கொண்டு திரையை கொத்தியது. அவளை பார்த்து கண்சிமிட்டிவிட்டு “இன்னைக்கு நீ ரொம்ப அழகாருக்கே..” என்றான். இரவுகளில் அடிக்கடி இதை கூறியிருக்கிறான். அவள் சிரித்துக் கொண்டாள். மனைவியின் அழகென்பது அலங்கரிக்கப்பட்ட கோபுரவாயில். கோட்டைக்குள் நுழைந்ததும் கோபுரம் விலகி பின்னே சென்று விடுகிறது. தரிசனம் என்பது கருவறை சிலையை காண்பதல்ல. அதிலுறையும் இறையை கண்டெடுப்பதே. இறை தான் நிறை. அது எடுத்தபிறகும் குறையாது, கொடுத்த பிறகும் மாறாது. மற்றொருவரில் தானாக, தன்னில் மற்றொருவராக. தானென ஏதும் மிஞ்சாததாக.

நவீன உலகம் திகைத்து வியர்த்து அப்பூச்செண்டின் முன் கைக்கட்டி வாய் புதைத்து நின்றது. இத்தனைக்கும் அப்பூச்செண்டு பல இலட்சம் கோடிகளை செலவிடும் அளவுக்கு வல்லமை படைத்த இராணுவம் கொண்ட நாட்டையோ படைபலத்தையோ ஆயுதபலமென்று எதையுமோ கொண்டிருக்கவில்லை. வீடுகள், வீடுகளாகவே இருப்பதால் அவற்றை பதுங்குக்குழிகள் என்று மக்கள் கருதாமலிருக்கலாம். கனவு கண்டு விழித்ததும் எல்லாம் கடந்து விடும் என்பது போல அவர்கள் பகல்களில் உறங்கத் தொடங்கினர். கண்விழித்தபிறகும் சிலருக்கு நடக்கும் நிகழ்வுகள் உண்மைதானா? என்ற சந்தேகமிருந்தது. இலக்கியவாதிகள், இதனை மிக சிறந்த அறிவியல் கதை என்றெண்ணிக் கொண்டு கண்ணுறங்கினர். விழித்தெழுந்த பிறகு, அதையே கருவாக்கி, கதைகள் புனைந்து தங்களுக்குள் படித்துக் கொண்டனர். அது குறித்து காரசாரமாக விமர்சனங்கள் கூட எழுந்தது. எழுத்தை பார்த்து விமர்சனம் செய்யுங்கள், எழுத்தாளர்களை கருதிக் கொண்டு விமர்சனம் செய்ய வேண்டாம் என்று சிலர் பொங்கியெழுந்தனர். அவர்கள் வேற்றுலகவாசிகள் என்பதால் அவர்களை கழித்து விட்டு மீதி உலகம் இயங்கிக் கொண்டிருந்தது. சினிமாவிரும்பிகள் ஹாலிவுட் இயக்குநர்கள் இந்த பூச்செண்டை விட மிக அதிகமாக கற்பனை செய்யும் திறன் படைத்தவர்கள் என இறுமாந்து அதனை தாம் பார்த்த படங்களின் வழியே நிறுவ முயன்றனர். இவர்களையும் கழித்து விட்டு, மீத மனிதர்கள் வீடுகளுக்குள் அடைப்பட்டிருக்க, வெளியுலகில் பொது கட்டுமானங்களும் போக்குவரத்து சாதனங்களும் ஆள்வோரின்றி அயர்ந்துக் கிடந்தன. அதை கண்டு திகைத்த பறவைகள் முதலில் திசை தடுமாறின. பின் மீண்டபோது அவை தாங்கள் இழந்துவிட்ட மர்மதேசங்களை அடையாளம் கண்டன. இயற்கையோ கலைப்பாரின்றி பெருகி வழிந்தது.

அவளுக்கு பெங்களுரிலிருக்கும் தன் தோழியின் நினைவு வர அன்றிரவே அவளிடம் வாட்ஸ்ஆப்பில் “என்ன பண்றே..?” என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு காத்திருக்க, அத்தருணத்திலேயே அவளிடமிருந்து அழைப்பு வந்தது. “ஏய்.. இன்னுமா துாங்கல..?” என்றாள் ஆச்சர்யமாக. “இப்பல்லாந்தான் எப்ப வேணும்னாலும் துாங்கலாம்.. எப்ப வேணும்னாலும் எந்திரிக்கலாம்… எப்போ வேணும்னாலும் சமைக்கலாம்.. எப்போ வேணும்னாலும் சாப்டுலாம்னு ஆயிடுச்சே.. நேரத்துக்கு துாங்கி என்ன பண்ணப்போறே.. ஆனா இது கூட நல்லாதான் இருக்கு… நா காலைல அஞ்சு மணிக்குதான் துாங்க ஆரம்பிப்பேன்.. இப்போ மணி ஒண்ணுதானே..” என்றாள்.

“ஒங்காளு..?”

”ம்க்கும்.. அவரு வெளிநாட்ல மாட்டிக்கிட்டாரு..” என்றாள்.

“அடிப்பாவீ.. அங்கயும் அதே கதைதானா..? எங்காளு ஒங்கூர்ல மாட்டிக்கிட்டாரு.. ஹோட்டல்லாம் குளோஸ் பண்ணீட்டா அவரு கதி அதோகதிதான்…”

“ஏய் இங்கொருத்தி இருக்கேங்கிறத மறந்துட்டீயா..” என்றாள்.

“மறக்காத்துனாலதானே ஒனக்கு போன் பண்ணேன்.. அப்டீன்னா காலைல அவர வர சொல்லுட்டுமா..,” என்றாள். “இதென்னடீ கேள்வீ..?” என்று தோழி கோபம் கொண்டாள்.

அவனை அப்போதே எழுப்பி சொன்னபோது “முன்னபின்ன தெரியா வீட்ல நா எப்படி தங்கறது..? என்றான். “ஒனக்குதான் தெரியாது.. எனக்கு அவள சின்னதுலேர்ந்தே தெரியும்.. சாதாரண நாள்ல யோசிக்க வேண்டியதெல்லாம் இப்போ யோசிச்சுட்டிருக்காத.. அத்தனாம்பெரிய வீட்ல அவளும் அவங்கம்மா மட்டுந்தான்… நீ போயி தங்கறதால அவங்களுக்கு எந்த எடஞ்சலுமில்ல… புரியுதா..?” என்றாள். “போறேன், வேற வழி..” “ஏய்.. ரொம்ப அலுத்துக்காத… ஒரு வாரந்தானே கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கடா…” என்றாள். கிருமியின் பரவல் அப்போது கட்டுக்குள் இருப்பதாகதான் சொல்லப்பட்டது. அடுத்தநாள் அறையை காலி செய்து விட்டு தோழியின் வீட்டுக்கு சென்று விட்டதாக தகவலளித்தான்.

உலகெங்கிலும் அந்த பூச்செண்டு தன் மகரந்தத்தை பரப்பிக் கொண்டிருக்க, மக்கள் தங்கள் வாழ்க்கையின் மீது எவ்வித அவநம்பிக்கையுமற்று அன்றாடங்களை கழித்துக் கொண்டிருந்தனர். எதிர்கால திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தனர். அவள் கூட சஞ்சுவுக்கு மருந்தகத்தில் சொல்லி பேர்ட்ஸ் ஸ்பெஷல் வைட்டமின் டானிக்கை வரவழைத்து ஸ்டாக் வைத்துக் கொண்டாள். “ஒனக்கொரு சஞ்சு மாதிரி எனக்கொரு அம்மா..” என்றாள் தோழி. ஆனால் நடையுடை இல்லாத அம்மா. போட்டது போட்டப்படி கிடக்கும் அம்மா. “நீ செய்றது ரொம்ப பெரிய உதவீடீ.. எல்லாம் சரியானபிறகு ஒருநாளு அங்க வந்து ஒங்கம்மாவ பாத்துட்டு வரணும்…” என்றாள்.

சஞ்சு அவள் வலது கையில் ஏறி வலதுத்தோளில் அமர்ந்துக் கொண்டு க்வீக்.. க்வீக்.. என்று கத்தியது. பசியாக இருக்க வேண்டும். தானியமணிகளை சிறுத்தட்டில் கொட்டி நீட்ட, அது பட்பட்டென்று சத்தமிடும் அலகோடு அவற்றை கொத்தியது. அதில் தெறித்த மணிகள் அவள் நைட்டியில் தரையிலும் விழுந்தது. விரலை நீட்டியதும் சஞ்சு அதில் ஏறிக் கொள்ள அதை கட்டிலில் இறக்கி விட்டுவிட்டு, சிறிய கிண்ணத்தில் தண்ணீரை எடுத்து வந்தாள். சஞ்சு அதில் மூக்கை நுழைத்து ஒரு கொத்துகொத்தி விட்டு தலையை அண்ணாந்து நீரை பருகியது. அவனிடமிருந்து காணொலி அழைப்பு வர, நெட்டுக்குத்தலாக வைத்திருந்த தலையணையில் உடலை சரிவாக்கி அமர்ந்து, அலைபேசியை இயக்கியதும் சஞ்சு தத்தி தத்தி நடந்து வந்து நைட்டியை அலகால் கொத்தி பிடிமானம் ஏற்படுத்திக் கொண்டு மேலெழும்பி, அவள் மார்பிலேறிக் கொண்டது. நைட்டியின் பட்டனை வாயில் வைத்துக் கொண்டு அது கடித்து திருக, “ஏய்.. வாயில போயிட போவுது..” என்று அதட்டியவாறு சஞ்சுவை வயிற்றுக்கு நகர்த்தி விட்டு “ம்.. சொல்லு..” என்றாள். அவள் நகர்த்த நகர்த்த சஞ்சு மேலும் முனைப்போடு மேலேறியது. அதை கண்ணெடுக்காது பார்த்தவன் “நான் சஞ்சுவை ரொம்ப மிஸ் பண்றேன்..” என்றான். அவள் தலையை சாய்த்து சிரித்தாள். ஆட்டம் எதுவாக இருப்பினும், தோற்றவர்கள் வெற்றி பெறும் முனைப்பும், வென்றவர்கள் தோல்வி நேரிடுமோ என்ற தவிப்பும் கொள்வதாலேயே ஆட்டம் தொடர்ந்து களத்திலேயே இருக்க நேரிடுகிறது. அவன் எதோ பேசியபோது அவள் ஏதோ பதிலுறுத்தாள். இருமுனைகளும் ஒன்றையொன்று கவ்வி விலகி அமுதையோ நஞ்சையோ பரிமாறிக் கொள்ளும் நிறைவின் வழியாகதான் ஆட்டம் களைக்கட்டுகிறது. ஆனால் ஆட்டத்தின் மையம் ஒன்றேஒன்றாகதானிருக்க முடியும். மையமென்பது உணரப்படுபவை, உணர்த்துபவையல்ல. நிறைவென்பதே யோகம். அது உடலிருந்து மனதிற்கு எழுவதா..? அல்லது மனம் கொண்ட நிறைவை உடல் சுகிக்கிறதா? எதுவாயினும் முகம் ஆடியை போன்று செயல்பட்டு விடும்.

அந்த தொற்றுக்கிருமி அந்நாட்டின் ஆராய்ச்சிக்கூடத்தின் வழியே உருவாக்கப்பட்டது என்று வல்லரசு அந்நாட்டை சுட்டிக்காட்டி குறை கூறியது. ஏனெனில், அந்நாடுதான் இந்நோய் பரவலின் ஆதாரம். நோயை எவ்வளவு முடியுமோ அவ்வளவு துாரம் உலகின் கண்களிலிருந்து மறைத்து விட்டு, மறைக்கவியலாத காலக்கட்டத்தில்தான் இந்நோய் குறித்து உலகிற்கு அறிவித்தது என்றும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவியலாது உலகு செயலிழந்து நிற்பதற்கு அந்நாடே காரணம் என்றும் வல்லரசு கடுஞ்சொல்லாடியது. வல்லரசு, வல்லரசாகவே நீடிக்க அதற்கு மேலதிக தொழிற்நுட்பமும், விற்பனைக்கான சந்தையும், பணியாற்றுவதற்கான ஆட்களும் தேவைப்படுகின்றன. அது தன்னுடைய கண்டுப்பிடிப்புகளுக்கேற்ப நோய்களையும் தேவைகளையும் உருவாக்கிக் கொள்கிறது என்று குற்றஞ்சாட்டப்பட்ட நாடு, வல்லரசை குத்திக் காட்டியது.

சஞ்சு மெல்லிய விசிலொலி எழுப்பிக் கொண்டே மூடியிருந்த சன்னலின் கம்பியிலேறி விளையாடியது. அதன் நீண்டிருக்கும் கொண்டை மயிர்கள் காற்றில் வளைந்தாடின. “எப்போதான் அங்க வருவேன்னு இருக்கு” என்றான். ”புரியுது” என்றாள் சிரிப்புடன். “என்ன சிரிப்பு வேண்டியிருக்கு? அவன் கண்கள் காமத்தில் சிறுத்திருந்தன. அந்நியரொருவர் வீட்டில் மூன்று வேளையும் உட்கார்ந்து உண்ணுவது சங்கடம் உண்டாக்கும் செயல் என்று பேச்சை மாற்றினான். “அதுக்கென்ன செய்றது? கொஞ்சம் அனுசரிச்சுக்கோ. பே பண்றேன்கிண்றேன்னு எதாது சொல்லி வச்சிராதே. நா என்ன பிஜியா நடத்துறேன்னு அவ கோச்சுக்குவா.” அவளும் அவன் பேச்சை ஏற்றுக் கொண்டவள்போல பதிலளித்தாள். தீவிரநிலையிலிருந்து மீள்வதென்பது அதை எளியப்பேச்சுகளால் கடத்து விடுதலேயாகும்.

அன்றைய கனவில், பெண்ணென பெருகி வந்து தான் கையளித்ததை அவன் உணர்ந்து அறிவதே ஆட்டத்தின் வெற்றி என்றாள். அவனோ அதை அவளே உணர்த்த வேண்டுமென்பதாக புரிந்துக் கொண்டான். இரவு இருளாகி அது அவன் முகத்திலும் பிரதிபலிக்க, அவள் “அசடு வழியுது.. போய் தொடச்சுக்க..” என்பாள் கேலியாக.

அடுத்துவந்த நாட்களும் உலகின் தலையெழுத்தில் மோசமான நாட்களாகவே மாறிக் கொண்டிருந்தன. தொற்றுக்கு மாற்றுமில்லை. மருந்துமில்லை. புழங்கும் கைகளை, நடக்கும் கால்களை, அருகருகே நிற்கும் உடல்களை கழுவிக் கொண்டே இருக்க வேண்டும் என்றனர். யாரும் யார் வீடுகளுக்கும் செல்வதில்லை. விலங்குகள் பம்மி பதுங்கி தலை நீட்டின. விரட்டுவோர் யாருமின்றி திகைத்து, பின் தங்கள் பூர்வபூமியை உணர்ந்து, அலையலையாக வெளிவரத் தொடங்க, அதனை மனிதர்கள் பதுங்கியிருந்தபடியே நேரிடையாகவும் காமிரா கண்களின் வழியாகவும் பார்த்தனர். தலைவர்கள் தங்கள் நாடுகள் சுற்றும் அபிலாஷைகளை ஒதுக்கி விட்டு, நிலைமையை கவனிக்கத் தொடங்கினர். முன்பின் அனுபவமின்மையால் செய்வதறியாது குழம்பி, யாருக்கும் புரியாத கட்டளைகளையும் நலத்திட்டங்களையும் அறிவித்தனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தது மட்டுமே எல்லோருக்கும் புரிந்திருந்தது.

“அய்யோ… இதென்ன கூத்து…? நீ எப்போதான் வருவே…?” என்று திடுக்கிட்டாள் அவள்.

ஆண்டு பலன்களை கணித்து தந்த நிமித்திகர்களையும், சோதிடர்களையும் ஒருசாரார் தேடிக் கொண்டிருக்க, கடவுளர்கள் மனித தொந்தரவின்றி பூட்டிய கதவுகளுக்குள் மோனநிலையில் ஆழ்ந்திருந்தனர். அறம் பிறழ்வதே கலியுக அறமென கொண்டு இயங்கிய உலகிற்கு அத்தனை விரைவாக தன்னை மாற்றிக் கொள்ள இயலவில்லை. முகக்கவச ஊழல், கிருமிநாசினி ஊழல், கையுறை ஊழல் என தொற்று தொடங்கிய அன்றே ஊழல்களும் தொடங்கியிருந்தன. அரசு, இடநகர்தலுக்கென வகுத்து வைத்த காரணிகளான உடல் நலமின்மை, இறப்பு, பிறப்பு, ஏற்கனவே திட்டமிட்ட திருமணம் போன்றவற்றுக்கான செயற்கை சான்றிதழ்களை சரளமாக உற்பத்தி செய்துக் கொண்டிருந்த ஊழ்வணிகத்தின் துணைக்கொண்டு அவன் நகரமுனைந்தபோது, அவன் அலுவலகம் பெங்களுரூவில் முடிக்க வேண்டிய சில பணிகளை அவனிடம் ஏவியதாக அவளிடம் கூறி வருந்தினான்.

பொய்யான காரணங்களோடு மக்கள் நகர்ந்துக் கொண்டிருப்பது பூச்செண்டிற்கு பூச்செண்டு கொடுத்து அழைக்கும் செயல் என்று ஆளும்கட்சிக்கு எதிராக, முகக்கவசமிட்ட முகங்களோடு எதிர்கட்சி வழக்குத் தொடுக்க, நீதிமன்றம், இனி இடநகர்வு அனுமதி பெற வேண்டுமெனில், பிறர் குறுக்கீடின்றி, சம்பந்தப்பட்ட இரு முனையமும் சேர்ந்தாற்போல் இசைவு தெரிவிக்க வேண்டுமென்று ஆணையிட்டது. அதற்கேற்ப விண்ணப்பப்படிவம் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் ஏற்றப்பட்டது. மேலும் இடநகர்வை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

“ச்சே.. மூவ் ஆகறதுக்கு நல்ல சான்ஸ் கெடைச்சுது.. அப்டி என்னதான் ஒங்க கம்பெனிக்கு அர்ஜென்ட் வொர்க்கோ தலைபோற வொர்க்..? செரி வுடு.. கவர்மெண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுட்டும்… மொதவேலையா மைகிரேஷன் பாஸ் அப்ளை பண்ணிட்றேன்.. நீ அக்செப்ட் குடுத்துடு..“ என்றாள் அவனிடம்.

“ரொம்ப வருத்தமாருக்குடீ ஒங்க ரெண்டுபேரையும் நெனச்சா… இத்தன நாள் கழிச்சு கௌம்பும்போது இந்த வேலைய முடிச்சிட்டு வா.. அந்த வேலைய முடிச்சிட்டு வான்னு சொன்னா என்ன அர்த்தம்..” என்று தோழியும் வருந்தினாள்.

வல்லரசு, வைரஸ்களின் பல்வேறு உருமாறுதல்கள் குறித்து அந்நாட்டில் ஆராய்ச்சி செய்யப்பட்டு, அவ்வுருமாற்ற கிருமிகள் அங்கேயே பாதுகாக்கப்படுவதாகவும் அப்படி பாதுகாக்கப்பட்டு வந்த கிருமிகளில் ஒன்றுதான் இப்பூச்செண்டு என்றும் இம்மாதிரியான பூச்செண்டுகள் அங்கு நிறைய உண்டு என்றும் அந்நாட்டின் மீது மேலும் குற்றச்சாட்டை எடுத்து வைத்தது. இந்தியாவில், நீட்டிக்கப்பட்ட ஊரடங்கை மக்களே விரும்பாத நிலையில், பாதிப்புகளும் பலிகளும் உயர்ந்துக் கொண்டிருந்தாலும் பொருளாதார சீர்க்கேடுகளை சரிசெய்யும்விதமாக அத்தியாவசியங்களுக்கு தளர்வு அளிக்கும் முடிவுகளையும் இடநகர்வுக்கான தளர்வுகளையும் அரசாங்கம் வெளியிட்டது.

அவள் விறுவிறுப்பாக மடிக்கணினியை எடுத்து, அவன் வருகைக்கான இணைய அனுமதிச்சீட்டு விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்கினாள். சஞ்சு க்விக்.. க்விக்.. என கத்தியது. அதனை அதற்கான சிறு ஊஞ்சலில் ஏற்றி விட, அங்கும் கத்தியது. மேசையின் இழுப்பறை, கொடிக்கயிறு, சன்னல் கம்பிகள் என அதன் விருப்ப இடங்களிலெல்லாம் விட்டபோதும் அது விடாமல் கத்தியது. அதற்கொரு துணை வாங்க வேண்டும். அதற்கு முதலில் வெளியுலக நிலைமை சகஜமாக வேண்டும். அந்நேரம் அவன் காணொலி அழைப்பில் முகம் காட்டினான். “ஹாய்..” என்றான். “பாஸ் அப்ளை பண்ணிட்டுருக்கேன்.. நீ அக்செப்ட் மட்டும் குடுத்துடு..” என்றாள். சஞ்சு மடிக்கணினியில் ஏறி அதன் உச்சியில் நின்றுக் கொண்டு க்வீக்.. க்வீக்.. என்று சத்தமிட்டது. “சஞ்சுவ கூண்டுல விட்டுட்டு நானே லைனுக்கு வர்றேன்..” அவன் இணைப்பை துண்டித்து விட்டு சஞ்சுவை கூண்டில் விட்டபோதுதான் அவன் முகம் பொலிந்து வழிந்திருந்தது சிந்தையிலேறியது. ஒருவேளை அலுவலகமே அவனை வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விடுமோ..? ஒருவேளை… ஒருவேளை… படபடப்போடு அவனை அழைக்க, அது எடுப்பாரின்றி அடித்து ஓய்ந்தது. மீதமிருந்த ஆன்லைன் விண்ணப்பதை பூர்த்தி செய்து விட்டு, ‘இருதரப்பார் விருப்பம்’ என்ற இடத்தில் அழுத்தியபோது அது சுழன்று உள்ளே சென்று, பின் அவனின் மௌனத்தை காரணம்காட்டி, விண்ணப்பம் நிராகரிக்கபட்டதாக குறுஞ்செய்தி அனுப்பியது.

பிறகெப்போதோ நிரூபணமாகும் ரகசியம், அது ரகசியம் என்பதனாலேயே கசிந்திருந்தது. வல்லரசும் அது கைக்காட்டும் நாடுமிணைந்து உலக மொத்த வர்த்தகத்தையும் தங்கள் காலடியில் அமர்த்திக் கொள்ளும் நடவடிக்கையின் பொய்த்த வடிவம்தான் அந்த பூச்செண்டு என்பதும் அவ்விரு நாடுகளும் உலகிற்கு பெருந்துரோகம் இழைத்து விட்டதென்றும், அவை எத்திட்டத்தையும் எக்காலமும் கைவிடப்போவதில்லை என்றும் ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வதென்பது வெற்று திசைதிருப்பல்களே என்பதும் அறிவுஜீவிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

சஞ்சு விடாமல் க்வீக்.. க்வீக்.. என்று கத்திக் கொண்டிருந்தது.

படித்துறை – கலைச்செல்வி சிறுகதை

மண்டபத்தோடு கூடிய படித்துறை. அதில் படிகளும் மிகுந்திருந்தன. இத்தனை ஜபர்தஸ்துகள் இருந்தாலும் நதி என்னவோ நீரற்றுதான் இருந்தது. அவன் படியில் ஒரு காலும் நதியில் ஒருகாலுமாக கடைசி படிகளில் அமர்ந்திருந்தான். காற்று அளைந்தளைந்து நதியின் வடிவத்தை மணல் வரிகளாக மாற்றியிருந்தது. நீர் மிகுந்து ஓடும் காலம் என்ற ஒன்றிருந்தபோது நதி அத்தனை படிகளையும் கடந்து மண்டபத்தை எட்டிப் பார்த்து விடும். அமாவாசை, நீத்தோர் சடங்கு நேரங்களில் ஊற்று பறிக்கும்போது நீர் கிடைத்தால் அதிர்ஷ்டம்தான். அந்த அதிர்ஷ்டம் சமீபமாக இறந்தோரின் நல்லுாழ் என்ற சம்பிரதாயமாக மாறியிருந்தது. ஆனால் தர்ப்பணத்துக்கோ மற்றெதற்கோ, முன்னெச்சரிக்கையாக குடத்தில் நீரை எடுத்து வந்து விடுகின்றனர், நல்லோர் என்று கருதப்படுவோரின் உறவினர் உட்பட.

”டப டப டபன்ன இத்தனை படி எறங்கி வர்றதுக்காது ஆத்துல கொஞ்சம் தண்ணி இருந்திருக்கலாம்..” என்றாள் அவள். பேச்சொலி கேட்டு திரும்பியவன் அவளை கண்டதும் “வாங்க..“ என்றான்.

நேற்று முழுவதுமாக தன்னை மறைத்துக் கொண்ட நிலா இன்று தயக்கத்தோடு கீற்றாக வெளிப்பட்டிருந்தது. நதியில் முளைத்திருந்த நாணல்கள் கரும்பேய்களாய் காற்றிலாடின. நகர் அடங்கிக் கொண்டிருந்தது. தொலைவிலிருந்த பிரதான சாலையின் போக்குவரத்துகள் வெளிச்சப்புள்ளிகளாக நகர்ந்தன. நேற்றைய தர்ப்பணத்தின் மிச்சங்கள் படியொதுங்கிக் கிடந்தன. சற்றுத் தள்ளிக் கிடந்தது நரகலாக இருக்கலாம். அவள் குப்பையை நகர்த்துவது போன்ற பாவனை செய்து விட்டு அமர்ந்துக் கொண்டாள்.

”துாங்கிருப்பீங்கன்னு நெனச்சன்..” என்றாள்.

”அதான் நீங்க வந்துட்டீங்களே.. எங்க துாங்கறது.. அய்யய்யோ.. சும்மா வெளாண்டேன்.. இன்னும் துாக்கம் வர்ல..”

”சரி.. விடுங்க.. சாப்டாச்சா..”

”நேத்து நெறய தர்ப்பணம்..” இன்று காற்றை உண்டவனாக சிரித்தான்.

பொத்தலும் காரையுமாக பராமரிக்கப்படாத அந்த பெரிய மண்டபத்தின் தரையில் பத்தரை மணியே நடுசாமம் போல சிலர் படுத்துறங்கிக் கொண்டிருந்தனர். அவள் திரும்பியபோது போர்வைக்குள் இருவர் முண்டிக் கொண்டிருந்தனர். அவள் பார்த்ததை அவனும் கவனித்திருக்கக்கூடும். அவள் நிமிர்ந்தபோது அவன் எங்கோ பார்ப்பதாக காட்டிக் கொண்டான். சிறுநடை துாரத்திலிருந்தது அவள் பணிசெய்யும் உணவகம். தங்கலும் அங்குதான். மதியம் இரண்டு மணிநேர ஓய்வுக்கு பிறகு தொற்றிக் கொள்ளும் பரபரப்பு கட்டுக்குள் வர இரவு பத்தாகி விடும்.

”இங்கதான் இருப்பேன்னு கண்டுப்புடிச்சுட்டீங்களே..”

”பெரிய அதிசயமெல்லாம் ஒண்ணுல்லயே..” என்றாள்.

அவனை சென்னை மின்சாரரயிலில் வைத்து அறிமுகம். அப்போது அவள் சர்வருக்கான ஓவர்க்கோட்டில் இருந்தாள். அது மெரூன்நிற ஓவர்கோட். கோட்டின் நீளம் வரை அழுக்குப்படியாமலும் மீதப்பகுதி அழுக்கும் ஈரமுமாகவும் இருந்தது. காலோடு ஒட்டிக் கிடந்த ஈரநைப்பான பேண்ட்டை லேசாக துாக்கி விட்டிருந்தாள். அன்று ரயிலில் கூட்டம் அதிகமில்லை. இறங்கியவர்கள் போக அவனும் அவளுமே மிஞ்சியிருந்தனர். ரயில் ஏனோ நின்றிருந்தது.

”என்னாச்சு..?” பார்வையை அப்போதுதான் ரயிலுக்குள் செலுத்தியிருந்தாள். வெளியே வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.

“தெர்ல..“ உதட்டை பிதுக்கினான். அவள் கழுத்திலிருந்த அடையாள அட்டையை சுட்டிக்காட்டினான்.

அப்போதுதான் கவனித்தவளாக அட்டையை கழற்றி எடுத்து உள்ளே வைத்தாள். சுமாரான தோற்றம் கொண்டிருந்தாள். மிகசமீபமாக முப்பதைக் கடந்திருக்கலாம். முகத்தில் பறந்து விழுந்த முடியை காதுக்கு பின் சொருகிக் கொள்வதை ஒரு வேலையாக செய்துக் கொண்டிருந்தாள். பிறகு கால்களுக்கிடையே வைத்திருந்த பிளாஸ்டிக் பேக்கை உருவி அதன் ஓர ஜிப்பை திறந்து அதிலிருந்து கிளிப்பை எடுத்து முடியை அடக்கிக் கொண்டாள். ஏற்கனவே தலையில் வெளிர் மஞ்சள் நிற கிளிப்புகள் இருந்தன. அணிந்திருந்த சுடிதாருக்கு பொருத்தமான கலராக எண்ணியிருக்கலாம். தோடு கூட வெளிர்மஞ்சள் நிறம்தான். மஞ்சளும் நீலநிறமுமாக வளையல்கள் அணிந்திருந்தாள்.

ரயில் கிளம்பியதும் வெயில் குறைந்து விட்டது போலிருந்தது. அவள் இறங்கிய பிறகும் அவன் ஒருவனுக்காக ஓடுவது போல ரயில் ஓடிக் கொண்டிருந்தது.

மண்டபத்தில் யாரோ படுப்பதற்காக துணியை உதறிப்போட அருகிலிருந்த பெண்மணி எரிந்து விழுந்தாள். “இவங்களுக்கு எல்லாமே அக்கப்போருதான்..” என்றான். இருளில் யாரோ இரும, அதற்கும் கோபக்குரல் எழுந்தது. உறங்கிக் கொண்டிருந்த நாயொன்று தலையை அண்ணாந்து பார்த்து விட்டு மீண்டும் சாய்த்துக் கொண்டது. கொசுக்கள் இரவைக் கொண்டாடி களித்தன.

கையோடு எடுத்து வந்திருந்த பரோட்டா பொட்டலத்தை நீட்டினாள். “தாங்ஸ்..“ என்று வாங்கிக் கொண்டான்.

”இன்னைக்கு ஓட்டல்ல கும்பல் அதிகம் போலருக்கு..” என்றான்.

”கோயில்ல விசேஷம்ன்னாலே இங்க கும்பல் சேர்ந்திடும்..”

”ஒங்கம்மாவுக்கு ஒடம்பு பரவால்லயா..?” என்றான். அவள் அம்மாவுக்கு ஏதோ தீராத உடம்பு. சென்னையில் தோதுப்படாது என்று சொந்த ஊருக்கு வந்து விட, இவள் ஸ்ரீரங்கத்தில் உணவகம் ஒன்றில் பரிமாறுநராக வேலைக்கு சேர்ந்துக் கொண்டாள். தெரிந்த வேலை அதுவாகதானிருக்க வேண்டும்.

”அது கட்டையோடதான் போவும்..” என்றாள் அசிரத்தையாக. அவளுக்கு தம்பியும் தம்பிக்கு மனைவியும் உண்டு.

“பெரியவரு ஒத்தரு.. நெருக்கி எம்பதிருக்கும்.. நாலஞ்சு மகனுங்க.. எல்லாமே பெரியாளுங்க.. ஒத்தரு செரைக்கும்போதே செல்போன்ல முகம் பாத்துக்கிறாரு.. இன்னொத்தரு அய்யய்யோ.. ரொம்ப எடுக்காதீங்கன்னு பதைக்கிறாரு.. ஒத்தரு காதுல ஒட்டவச்ச போனை எடுக்கவேயில்ல.. ஒத்தரு பொண்டாட்டிக்கு பயந்துக்கிட்டு பம்முறாரு..”

”வயசானவர்தான.. சும்மா அழுதுக்கிட்டு இருக்க முடியுமா..?”

”கரெக்ட்தான்.. நா அதை நெனக்கல.. அடுத்தது நாந்தான்னு நம்ப யாருக்கும் தோணுறதில்ல பாருங்களேன்.. அதுதான் வாழ்றதோட சூட்சுமம்னு நெனக்கிறேன்.. இத்தனைக்கும் ஒடம்புக்கும் மண்ணுக்குந்தான் நெரந்தர உறவு.. அதையே மறந்துப்போற அளவுக்கு லௌகீகம் முழுங்கீடுது நம்பள.. என்னையும் சேர்த்துதான்..”

சாப்பிட்ட கையை கழுவிக் கொண்டான். ”ஒங்களுக்குன்னு ஒரு வாசம் இருக்குங்க..” என்றான்.

அவளுக்கு தன்னிடமிருந்து வாசம் கிளம்புகிறதா என்பதில் ஐயம் இருந்தது. நம்பிக்கைதானே எல்லாம்.

”நீங்க அதுலயே பொழங்கீட்டு இருக்கறதால வாசம் புரியில.. கடசியா சாப்ட கஸ்டமர் சப்பாத்திதானே ஆர்டர் பண்ணியிருந்தாரு..”

”ஆமா.. அவ்ளோ நீள மூக்கா..”

“அப்டில்லாம் இல்ல.. எப்பவோ சாப்ட நெனப்பு..” அவன் பெற்றோர்கள் இருவரும் பள்ளி ஆசிரியர்கள். இரண்டு அண்ணன்களுக்கு பிறகு பிறந்தவன். படிப்பதிலோ படிக்க வைப்பதிலோ பிரச்சனையில்லை என்று சொல்லியிருந்தான்.

பிறகொருநாள் அதே மின்சார ரயிலில் பேசிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டபோதுதான் ரயிலடிகளில் ஏதேதோ அவசரங்களில் அவசரமாக விழிகளில் அகப்பட்டு நகர்ந்த தருணங்கள் அவர்களின் நினைவுக்கு வந்தன. “அன்னைக்கு கோட்டோட வந்துட்டீங்கதானே..” நினைவுறுத்துவது போல கேட்டான்.

”ஆமா.. ரயில்ல ஏறுனதுக்கப்பறந்தான் கவனிச்சன்..” அவளுக்கும் நினைவிருந்தது.

ரயிலில் கும்பல் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்க, நெரிசல் குறைவதாய் தெரியவில்லை. அவர்களுக்கு கழிவறையோரமாக நின்றுக் கொள்ள இடம் கிடைத்தது.

“நீங்க எங்க எறங்கணும்..?” என்றாள்.

அவனுக்கு அதுகுறித்த திட்டம் ஏதுமில்லை. இலக்கில்லாத பயணங்கள் அவனுக்கு பிடித்திருந்தன. ரயில்கள் சற்று சுவாரஸ்யம் கூடியவை. ரயிலடிகள் உறங்குவதற்கு இடம் தருபவை. ஆனாலும் தான் சேருமிடத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அவன் ரயில்களுக்கு கூட வழங்கியிருக்கவில்லை.

”எறங்கணும்..“ விட்டேத்தியாக சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள். நல்ல உயரம். அவளை விட இரண்டொரு வயது பெரியவனாக இருக்கலாம். அசட்டையாக உடுத்தியிருந்தாலும் படித்தவன் போலிருந்தான். ”லயோலால பி.காம் டிஸ்கன்டின்யூட்.. அவங்களால வச்சிக்க முடியில.. டிசி குடுத்துட்டாங்க..” என்றான்.

”நாங்கூட பத்தாங்கிளாசு வரைக்கும் போனேன்.. ஜாதி சர்டிட்டு இல்லாம பரிச்ச எழுத முடியில..” அவர்கள் குடியிருப்பை அரசாங்கம் எடுத்துக் கொண்டதாம். பிறகு நடைப்பாதைக்கு வந்து விட்டதாக சொன்னாள்.

”அதும் நல்லதுதான்.. நாலு பக்கமும் சன்னல்.. நடுவுல கதவு.. மூச்சு முட்டிப் போயிடும்…” என்றான்.

பிறகு அவளை ஸ்ரீரங்கத்தில் வைத்து பார்த்த போது ”நீங்கதானா.. நம்பவே முடியில..” என்றான் ஆச்சர்யத்தோடு. அன்று சென்னையில் அவனை தன் வீ்ட்டுப்பக்கம் பார்த்தபோது அவளுக்கும் அதே ஆச்சர்யம்தான் ஏற்பட்டது. ஒருகணம் தன்னைதான் தேடி வந்து விட்டானோ என்று கூட நினைத்தாள்.

”தண்டவாளத்தையொட்டியே நடந்தா ஒங்க வீடு வரும்னு தெரியாம போச்சே..” என்று சிரித்தான்.

”வீட்டுக்கு வாங்களேன்..” என்றாள்.

”இன்னைக்கு லீவா ஒங்களுக்கு..?” என்றான்.

”மாசம் ஒருநா ஆஃப் குடுப்பாங்க.. நாலு மாசமா நான் எடுத்துக்கவேயில்ல.. அதான் நாலு நாளு சேர்ந்தாப்பல லீவு கிடைச்சுச்சு..”

அவள் பாக்கெட்மாவும் இட்லிப்பொடியும் வரும்வழியிலேயே வாங்கிக் கொண்டாள். வரிசையாக இருந்த ஆறேழு வீடுகளில் ஒன்றில் குடியிருந்தாள். இரண்டொரு வயதானவர்களை தவிர்த்து ஆட்கள் அதிகமில்லாத மதிய நேரம். பத்துக்கு பத்து என்ற அளவில் இருந்த முன்னறையில் தொலைக்காட்சி பெட்டி, கயிற்றுக்கட்டில், கொடிக்கயிறு முழுக்க தொங்கும் துணிகளோடு ஒரு ஸ்டூலும் இருந்தது. அவன் அதில் அமர்ந்திருந்தான். பூனையொன்று அங்குமிங்கும் அலைந்தது.

முன்னறையில் பாதி இருந்தது சமையலறை. ஒன்றுக்கொன்று தடுப்பில்லாத நேரான அறைகள். அவள் படபடப்பாக தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள். தட்டில் மூன்றாவது விழுந்ததும் போதும் என்றான். தோசை பிய்ந்து போயிருப்பதால் இன்னும் ஒன்று எடுத்து வரவா என்றாள். அவன் மறுத்து விட பலகையில் அடுக்கியிருந்த டம்ளரில் ஒன்றை எடுத்து கழுவினாள். ஃப்ளாஸ்கில் வாங்கி வந்த டீயை டம்ளரில் ஊற்றும்போது அது மேலும்கீழுமாக சிதறியது.

மெரூன் நிற ஓவர்கோட் போல இந்த நைட்டியும் அவளுக்கு நல்ல பொருத்தம்தான். மேலேறிக் கிடந்த நைட்டிக்கு கீழ் மணிமணியாய் கொலுசு அணிந்திருந்தாள். அவள் டீயோடு திரும்பியபோது அவன் பார்வையை பறித்தெடுத்து, தொலைக்காட்சியிடம் அளித்தான்.

“இந்தாங்க டீ..”

“நீங்க சாப்டல..?”

”ம்ம்.. சாப்டுணும்..”

துளிதுளியாக பருகும் பழக்கம் அவனுக்கிருந்தது. பேசுவதற்கு ஏதுமற்றிருப்பது போல நேரம் கடந்துக் கொண்டிருந்தது. அங்குமிங்குமாக அலைந்து விட்டு ஒருவழியாக தன்னிடத்துக்கு வந்தது பூனை. அவள் எழுந்து கதவை ஒருக்களித்தாற்போல மூடினாள். ”இந்த நேரத்துக்கு ரயிலு கிராசாவும்.. சத்தம் பெருசா கேக்கும்..“ என்றாள்.

அவன் எழுந்துக் கொண்டு, அந்த ஸ்டூலில் காலி டம்ளரை வைத்தான். சுவரோரமாக சார்த்தி வைத்திருந்த துணிப்பையை தோளில் மாட்டிக் கொண்டபோது “கௌம்பியாச்சா..?” என்றாள்.

அவள் படியிலிருந்து எழுந்துக் கொண்டபோது அவனும் அதையே கேட்டான்.. ”கௌம்பீட்டீங்களா.. எனக்கு துாக்கம் வர்ல..” என்றான்.

“மணி பதினொண்ணாச்சு.. இதே ரொம்ப லேட்டு. என் ரூம்காரப்புள்ளைக்கிட்ட ரகசியமா சொல்லீட்டு வந்தேன்..” என்றதற்கு பிறகு இன்றுதான் அவளை பார்க்க முடிந்தது. அதுவும் வழக்கத்தில் இல்லாத மதிய நேரத்தில்.

”எங்கம்மா போய் சேர்ந்துடுச்சாம்..” என்றாள்.

”சாரி..” என்றான். அவள் கைகளில் இரண்டும் தோளில் ஒன்றுமாக சுமந்திருந்தாள்.

”திரும்பி வர்ற நாளாவுமோ..?” என்றான்.

”இல்ல.. நா வர்ல.. தம்பி டிப்பன் கடை வச்சிருக்கான். புருசனும் பொண்டாட்டீயும் எம்புட்டு வேலதான் பாக்குங்க.. நா இருந்தாதான் சரியாருக்கும்..”

”அப்ப இங்க வர மாட்டீங்களா..?”

”எங்கிருந்தா என்னா.. எல்லாம் ஒண்ணுதான்.. இங்க இட்லி, தோசை, பூரி, பொங்கல், சப்பாத்தி, நாண், ஊத்தப்பம், கோதுமை ரோட்டி.. சட்னி.. சாம்பார்.. பீஸ் மசாலா.. சென்னா மசாலான்னு ஒப்பிக்கணும்.. அங்க டிப்பன்க்கடை பாத்தரத்த வௌக்கிக் கமுக்கணும்..”

கையிலிருந்த வெஜிடபிள் பிரியாணி பார்சலை அவனிடம் நீட்டினாள்.

”இல்ல வேணாம். வயிறு சரியில்ல..”

அவள் அதை அவனிடம் வைத்து விட்டு ”சரி.. பாப்போம்.. வர்றேன்..” என்றாள்.

அவன் அங்கேயே அமர்ந்துக் கொண்டான். தொலைவில் அவள் நடந்து போவது தெரிந்தது. பிரியாணி வாசம் பசியை கிளப்பியது. உண்டபோது உணவு பிடிக்காமல் போனது. எழுந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்தான். அப்போதும் அவள் அங்கேயே நின்றிருந்தாள்.

”இன்னும் பஸ் வர்ல..?”

”வந்துரும்..” சொன்ன நேரத்தில் பேருந்து வந்தது. கூட்டத்தோடு அவளும் நெருக்கியடித்து ஏறிக் கொண்டாள். ஓட்டுநர் இன்ஜினை அணைக்காமல், காலி தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டி டீக்கடைக்காரிடம் நீர் நிரப்புவதற்காக கொடுக்க சொன்னார். அவன் அவசரமாக கொடுத்து விட்டு அதை விட அவசரமாக வந்தான். நல்லவேளையாக ஜன்னலோரத்தில் அவளுக்கு இடம் கிடைத்திருந்தது.

“ஒங்க தம்பீ எந்துாரு..?” என்றான்.

ஏதோ சொன்னாள். இரைச்சலில் கேட்கவில்லை.

பேருந்து நகர்ந்து போயிருந்தது.

முத்துபொம்மு – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

கருவேலங்காட்டுக்குள் புதைந்துக் கிடந்தது அந்த குடியிருப்பு. மண்சுவரும் கீற்றுக்கூரையுமாக ஒழுங்கமையாத வரிசைக்குள் வீடுகள் நெருங்கிக் கிடந்தன. படுக்கவும் உடுக்கவும் தவிர்த்து மீதி புழக்கமனைத்தும் வெளியே சிதறியிருக்க, சாக்கடையாக தேங்கிக் கிடந்த புழங்குநீரை ஈக்கள் கொண்டாடிக் களித்தன. பத்தேறிய கரிப்படிந்த பாத்திரங்களை புழங்காத நேரத்தில் உருட்டி விளையாட நாய்களுக்கு அச்சமிருப்பதில்லை. குடங்களில் பத்திரப்படுத்தியிருந்த பிளாஸ்டிக் நீர் சூடேறிக் கிடந்தது. சோற்றுக்கஞ்சியின் தடம் பதிந்த தரைகள், பாயோடு படுக்கையோடு கிடக்கும் வயதானவர்கள் என யாரையும் எதையும் மிச்சம் வைக்காமல் மதிய வெயில் குடியிருப்பை எரிச்சலாய் சூழ்ந்திருந்தது. வெயிலை உறிஞ்சிக் கொண்டு காற்றிலசைந்த கறிவேலஞ்செடிகள் மெலிதாய் மலவாடையை பரப்பியது.

”சோறாக்கி வச்சிட்டு போறதில்லயா..?”

காத்தானின் கேள்விக்கு சோலை பதிலேதும் சொல்லவில்லை. குடத்திலிருந்த நீரை அரிசியில் சரித்து கையால் அளைந்தாள். விரல்களே மூலதனம். பிழைப்பை தேடி இங்கு வந்த பிறகு, ஓட்டலில் பாத்திரங்கள் கழுவித் தள்ளும் வேலை அவளுக்கு வாய்த்திருந்தது. அதிகாலையி்லேயே அங்கிருக்க வேண்டும். ஆனால் அதற்கும் அதிகாலையிலேயே சமையலை முடித்திருப்பாள்.

உலைநீரை அடுப்பிலேற்றியபோது டேக்சா லேசாக சரிந்து நீர் விறகடுப்பில் சிந்த, பாத்திரத்தை நிமிர்ந்தி வைத்தாள். காலை எழுந்ததிலிருந்தே தடுமாற்றம்தான். அவளிடம் குக்கர் ஒன்றிருந்தது. அதை உபயோகப்படுத்த கரண்ட்அடுப்பு வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். வேலை செய்யுமிடத்தில் பார்த்திருக்கிறாள். கரண்ட்அடுப்பில் பாத்திரங்கள் கரிப்பிடிக்காதாம். சூடு ஏறாதாம்… என்ன மாயாஜாலமோ.. ஒருமுறையாவது அந்த அடுப்பில் சமைக்க வேண்டும் என உலை வைக்கும்போதெல்லாம் தோன்றும் வழக்கமான எண்ணம் இன்று தோன்றவில்லை.

”பயலுக்கு சரியான பசி.. பிஸ்கட் வாங்கியாந்துக் குடுத்தேன்..” பேச்சுக் கொடுத்தான் காத்தான்.

”ஆயிடும்.. ஆயிடும்..” என்றாள் வெற்றாக.

கொடியடுப்பில் பருப்பை வேகவிட்டாள். குடிசைக்குள் காய் எதாவது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவசரமாய் வந்தவளை புடவைத் தடுக்கியது. “நவுந்து ஒக்கார்லாமில்ல” பிஸ்கெட் பாக்கெட்டோடு குடிசை வாசலி்ல் அமர்ந்திருந்த மகனை கடிந்தாள்.

”இப்ப எதுக்கு அவன்ட்ட கத்தற..?”

”ஒத்தரயும் ஒண்ணுஞ்சொல்லிடக் கூடாது.. எல்லாம் என் எழவயே எடுங்க..” காய்ந்து சூம்பியிருந்த நாலைந்து கத்திரிக்காய்களை பருப்பில் அரிந்து போட்டாள். புகைந்த அடுப்பில் விறகை நுழைத்து காற்றை ஊத, பற்றிக் கொண்ட விறகை நிதானமாக்கினாள். குடிசைக்குள்ளிருந்த மிளகாய்துாள் டப்பாவை எடுத்துக் கொண்டு  திரும்பியபோது வடித்து விட்டிருந்த கஞ்சியில் கால் வழுக்கியது.

”சனியனே.. போ அங்கிட்டு” சோற்று வாசத்துக்கு கால்களுக்குள் வாலை ஒளித்துக் கொண்டு பம்மிய நாயை விரட்டினாள்.

”நீ சாப்ட்ல..?” காத்தான் சுடசுட சோற்றில் குழம்பை கலந்து பிசைந்துக் கொண்டே கேட்டபோது, சோலை புழங்கியப் பாத்திரங்களை அடுப்பு சாம்பலால் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

”என்னாச்சுல..” கைகளை துடைத்துக் கொண்டே அருகில் வந்தவனிடம் நிமிர்ந்தபோது கண்கள் கலங்கியிருந்தன.

“இன்னிக்கு அப்பிசி ரெண்டு..” என்றாள்.

2

அடித்து பெய்த கனமழை ஓய்ந்திருந்தாலும், ஒளி போதாமையால் படப்பிடிப்பை நிறுத்தியிருந்தான் இயக்குநர் சரண். காற்று சிலிர்ப்பாகவும் வெப்பம் மிதமாகவும் நிலவ, கிளம்ப மனமின்றி ஓடைக்கரையோரமாக கிடந்த பாறையொன்றில் அமர்ந்துக் கொண்டான். உதவி இயக்குநரை தவிர்த்து மீதமானவர்களை அனுப்பி விட்டிருந்தான். மெலிதாக விழுந்த இளந்துாறல் ஓடை நீருக்குள் வட்டவட்டமாக சிலிர்த்துக் கொண்டிருந்தது. பெருங்குடைகளாக பரவியிருந்த கரையோர மரங்களில் வெண்பூக்களாய், துள்ளியெழும் மீன்களுக்காக வெண்கொக்குகள் காத்துக் கிடந்தன. பூவாய் சிதறிய துாறல்களை பூமி பூரிப்பாக உள்வாங்கிக் கொண்டிருந்தது. சிலீரென்றிருந்த ஓடைநீரும் வெதுவெதுப்பாக உடலில் வழிந்த மழைநீரும் மனதை கிளர்ந்தெழுப்ப, கைகளை விரித்து முகத்தை பின்னுக்குத் தள்ளி துளிகளை முகத்தில் ஏந்திக் கொண்டான் சரண்.

எதிரே தெரிந்த மலையடுக்குகள் பால் மார்புகளை திறந்தவாறு மல்லாந்துக் கிடக்கும் மங்கையாய் மதர்த்துக் கிடந்தன. பச்சை மனிதனுக்கு பொன்கொண்டையிட்டது போல அதனுாடே சூரியன் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. ஈரத்தை உறிஞ்சிய புற்கள் கசிய விடும் பசிய வாசம் நாசியை நிறைக்க காலமத்தனையும் இங்கேயே தொலைத்து விடும் பேராவலோடு இயற்கையின் முன் நிராயுதபாணியாக நின்றிருந்தான். இம்மாதிரியாதொரு உந்துதலில்தான் படமெடுக்கும் எண்ணம் தோன்றியதும்.

”சார்.. மழை பெருசாயிடும் போலருக்கு.. கேரவனுக்கு போயிடலாம் சார்..” ஐப்பசி மழை அத்தனை சீ்க்கிரத்தில் விடாது.

”ம்ம்..” என்றான் எழுந்துக் கொள்ளும் எண்ணமேதுமின்றி.

அவனுடைய யூனிட்டில் வளர்மதிக்கு் மட்டுமே அவனையொத்த ரசனையிருந்தது. காடுதான் நாயகன் என்றாலும் அவளை சுற்றியும் கதையை அமைத்திருந்தான். பனிரெண்டு வயதிருக்கும் அவளுக்கு. அவளை கண்டுக்கொண்டதும் அழகான இளங்காலை நேரமொன்றில்தான். கதவை திறந்துக் கொண்டு தெருவில் இறங்கி ஓடியபோது ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நாயொன்று தலையை துாக்கி பார்த்து விட்டு பிறகு அசட்டையாக படுத்துக் கொண்டது. சைக்கிளின் பின்னிருக்கையிலில் கட்டியிருந்த துளசியிலை முட்டையை ஒரு கையால் தாங்கி பிடித்தபடி சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்ற தந்தையின் பின்னோடு நடந்துக் கொண்டிருந்தாள் வளர்மதி. அவன் அவர்களை உரக்க அழைத்தபோது திரும்பிய வளர்மதியின் உதடுகள் புன்னகைத்தப்படியே இருந்தது. அடர்ந்த புருவங்களுக்கு கீழிருக்கும் கரிய உருண்ட விழிகளோடும் மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறத்தில் துறுதுறுப்பான நாசிகளோடுமிருந்த அவளை அப்போதே ஒப்பந்தம் செய்து விட்டான்.

கதையில் உள்ளவாறே நிஜத்திலும் அவளுக்கு காடு பிடித்திருந்தது. இடுப்பிலிருந்து இறக்கி விட்ட குழந்தையாய் ஓடை நீரில் இயல்பாக மீன் பிடித்தாள். மழை பெய்த சகதிகளில் வழியுண்டாக்கிக் நடந்தாள். படுகையெங்கும் உருண்டுக் கிடக்கும் கூழாங்கற்களில், பொடிகளாக சேகரித்து மடியில் கட்டிக் கொண்டாள். நீருக்கும் மரத்துக்குமிடையே நீளமான வால்களை தொங்க விட்டு அலையும் குரங்குகளை பயங்கலந்த பிரமிப்போடு பார்த்து “கொரங்காட்டீ எங்க..“ என்றாள். தாவர இடுக்குகளுக்குள் சொட்டுசொட்டாக நுழையும் சூரியன் தன் மீதிடும் கோடுகளுடன், உடலை அங்குமிங்கும் நகர்த்தி விளையாடுபவளின் பாவனைக் காட்டும் கண்களை அவன் காமிராவுக்குள் ஏந்திக் கொண்டேயிருந்தான்.

பசுங்குகைக்குள்ளிருந்து வனமகள் நீந்தியபடி வர, வழியெங்கும் மலர்கள் உதிர்ந்து அவளை வரவேற்றன. அவள் உடலிலிருந்து கசியம் பசியவாசம் பூமியெங்கும் பரவியது. காட்டின் ஓசையும் நறுமணமும் அதற்கு பக்கவாத்தியங்களாயின. பிரக்ஞைப்பூர்வமான மௌனங்கள் பாடல்களாலும் இசையாலும் கலைந்துப் போவதை அவன் விரும்புவதி்ல்லை. காட்சிகளின்போது கூட காட்டின் ஒலிகளை அதிகமும் பயன்படுத்தியிருந்தான. இயற்கையின் முன் மொத்த அகந்தையும் அழிந்து விடுகிறது. ஆனால் சில கணங்களிலேயே அது முன்பை விட தீவிரமாக எழுந்தும் விடுகிறது. அது காட்டின் அற்புத கணங்களை அவனுக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தது.

.”சார்.. மழ வலுத்திடுச்சு சார்..”

வாய்க்குவாய் சார் போட வேண்டியிருந்தது அவன் இயக்குநர் என்பதால் மட்டுமல்ல.. சரண் மெத்த பணக்காரன் என்பதற்காகவும் இருக்கலாம்.

”செரி.. கௌம்பலாம்…”

சரணை போலவே ஓடையும் மழையை உள்வாங்கிக் கொண்டு பூரிப்பாக நகர்ந்தது.

3

அது ஒரு ஐப்பசி மாத காலை. மழை நான்கு நாட்களாக விடாமல் பெய்ததில் பாதையெங்கும் செம்மண் சேறாக ஓடியது. மரங்களும், புல்பூண்டுகளும் வேரறுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருந்த அந்த நிலத்தில் என்றோ நடப்பட்டிருந்த அந்த சிறு செவ்வக வடிவ கருங்கல் துறுத்தலாய் தொற்றிக் கொண்டிருந்தது. அவர்கள் அங்கு சிறு கூட்டமாய் கூடியிருந்தனர்.

வளமான மண்ணும் சுற்றிலும் மலைகளுமான இதமான சூழலுக்குள் கதகதப்பாய் ஒளிந்திருக்கும் இந்தப்பகுதியில் முன்பெல்லாம் மரங்களடர்ந்திருக்கும். புல்பூண்டு தாவரங்களுக்கும் குறைவிருக்காது. மேய்ச்சலுக்கு வரும் ஆடுகள் பெயருக்கு அங்குமிங்கும் அலைந்து விட்டு இறுதியில் இங்கு தஞ்சமடைந்து விடும். மழை உருவாக்கும் சிறுசிறு ஓடைகளால் நீருக்கும் பஞ்சமிருக்காது. இந்த பகுதியை யாரோ விலைக்கு வாங்கி சொகுதி விடுதி கட்டப் போவதாக பேச்சு அடிப்பட்ட கொஞ்சநாட்களிலேயே முள்வேலி அமைக்கப்பட்டு வெளிநடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

”கும்பல பாத்துட்டு வாச்சுமேனு எதும் வந்து தொலச்சிடப் போறான்.. சீக்ரமா முடிச்சுக்குணும்..” என்று அபிப்பிராயப்பட்டது கும்பல்.

முள்வேலி கிழித்த காயத்திலிருந்த வழிந்த இரத்ததை சட்டை செய்யும் மனநிலையின்றி கூப்பிய கையோடு நின்றிருந்தாள் சோலை. பலியிட முடியாது. கண்டுபிடித்து விடுவார்கள்.

”ஆயி.. தப்புதவருந்தா மன்னிச்சு சுத்த பூசய ஏத்துக்க தாயீ..”

சென்ற ஆண்டு இத்தனை கெடுபிடி இல்லை. கனவில் வந்துக் கொண்டேயிருந்த மகளுக்கு சேவலை பலியிட்டு இரத்தகாவு கொடுத்திருந்தாள். கையில் அமுக்கிப் பிடித்திருந்த சேவல், திமிறலாய் விலகி இறக்கையை படபடப்பத்துக் கொண்டு கட்டியக் கால்களோடு தானாகவே பலிபீடத்தில் அமர்ந்துக் கொண்டது.

”மவளே.. ஏத்துக்க. ஏத்துக்க.. ரெத்த காவ ஏத்துக்க.. ஏத்துக்கிட்டு அவுக வம்சத்தயே கொலயறுக்குணும்.. செய்வியா.. செய்வியா..” தன்நிலையிழந்து ஆவேசப்பட்ட சோலையை அம்சடக்கிய போது வாட்ச்மேன் வந்திருந்தான். மயங்கி சரிந்தவளை தாங்கிப்பிடித்தபடி கலைந்து போனதை நினைத்துக் கொண்ட கூட்டம் அவளை அவசரப்படுத்தியது.

”ஆயி.. சட்டுன்னு ஆவுட்டும்.. வாச்சுமேனு வந்துரப்போறான்..”

காத்தான் மழைக்கு அணையாக குடையை சரித்து பிடித்திருந்தான். சோலை நிறை வயிற்றோடு குனிந்து கல்லிலிருந்த நீரை கையால் வழித்து விட்டாள். மஞ்சளைக் குழைத்து கல்லின் நடுவே பூசி அதன் மீது குங்குமத்தால் பொட்டிட்டாள். கதம்ப மாலையைச் சூட்டி நடுவே காட்டு செம்பருத்தியை வைத்தாள். துாக்கில் எடுத்து வந்திருந்த சர்க்கரைசோற்றை இலையிலெடுத்து கல்லின் மீது வைத்தாள். அதற்குள் மழை கூடியிருந்தது.

“நா தன்னந்தனியா கெடக்கேன்.. தவியாதவிக்கறன்.. விடமாட்டேம்பில.. விட மாட்டேன்..” இரட்டை பின்னலும் காட்டுச்செம்பருத்தி சூடிய தலையுமாக பாவடை சட்டையணிந்த சிறுமி ஒருத்தி முள்வேலியை பிடித்தபடி கத்தியதாக வேலுமணி மேஸ்திரி பதறிக் கொண்டு சொன்னது நினைவுக்கு வந்தது அவளுக்கு.

”மவ கேட்டத நீயும் மறந்துட்டீயா..” என்றாள் அழுகை கொப்பளிக்க நின்ற கணவனிடம்.

4

சரண் என்று பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்த அந்த சொகுசு விடுதியின் அலங்கார புல்வெளியைக் கடந்து, பெரிய போர்ட்டிகோவிற்குள் நுழைந்தபோது சரணின் நனைந்த உடல் நடுங்கத் தொடங்கியது. இயற்கையின் ஈர்ப்பில் மனம் கவிதையாய் உருக, உடன் வந்த பணியாளையும் நகரும் படிக்கட்டையும் மின்துாக்கியையும் ஒதுக்கி விட்டு படிகளில் ஈரம் சொட்ட சொட்ட நடந்து மேலேறி முதல் தளத்திலிருந்த தனது அறையை நோக்கி நடந்தான். அறையின் தடிமனான மரக்கதவின் செதுக்கல்கள் ஓடையிலிருந்து சுழித்து கீழிறங்கும் நீரை போல படிபடியாக உள்ளொடுங்குவதை ரசித்தவாறு நின்றிருந்தவனிடம், யாரோ தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சிநேகமாக சிரிக்க, சூழலிலிருந்து கலைய மனமில்லாதவனின் மௌனம் வந்தவருக்கு கனமாக தோன்றியிருக்கலாம். மேற்கொண்டு யாரையும் சங்கடப்படுத்த விரும்பாமல் அறைக்குள் நுழைந்து, மிதமாக இயங்கிக் கொண்டிருந்த சூடேற்றியை நிறுத்தினான்.  டிகாஷன் துாக்கலாக அரை இனிப்பில் மிதமாக சூட்டில் காபி தேவைப்பட்டது அவனுக்கு. அப்பாவிடமிருந்து அவனுக்கு தொற்றிக் கொண்ட ருசி அது.

உடைகளை மாற்றிக் கொண்டான். ஃப்ளாஸ்க்கிலிருந்த காபியை கோப்பைக்கு மாற்றிக் கொண்டு ஜன்னலோர சோபாவில் அமர்ந்தான். மழை முற்றிலும் நின்றிருந்தது. தெளிந்த வானில் வெண்ணிற மேகம் துணுக்குகளால் விரவியிருந்தன. மலையடுக்குகள் பனித்திரைக்குள் கோட்டோவியங்களாய் தெரிந்தன. அதனுள் உறைந்திருக்கும் மௌனத்தை மேகங்களால் புரிந்துக் கொள்ள இயலும். அவனும் மேகத்தையொத்தவனே. தனிமை அவனுக்கு நிறையவே பிடித்திருந்தது. அதுவும் தந்தையின் இறப்புக்கு பிறகு அதற்கான சந்தர்ப்பங்களை அவனையுமறியாது நிறையவே உருவாக்கியிருந்தான். அறுபது வயதில் எதிர்பாராது நிகழ்ந்த அவரின் மரணத்தை ஏற்றுக் கொள்ளவியலாத தவிப்பே தனிமையை நாட வைத்திருக்கலாம். அன்பை தோழமையாக காட்டத் தெரியாது அவருக்கு. ஆனால் உணர்வின் வழியாக அவர் கடத்தியிருந்ததை அவன் உணர்ந்துக் கொண்டேயிருந்தான்.

இதே மாதிரியான அடைமழை நாளில்தான் அவர் இறந்துப் போயிருந்தார். இதே சொகுசு விடுதியின் தோட்டத்தில் சேற்றில் முகம் பதித்து மரித்துக் கிடந்தவரின் நினைவுகளை ரசனையின் வழியேதான் கடக்க வேண்டும்.

நின்றிருந்த மழை கனத்து பெய்யத் தொடங்கியது.

5

மதியம் அடித்த வெயிலின் சுவடேயின்றி வானம் கருமைத்தட்டிப் போயிருந்தது.

”ஒரு நா அங்க போய்ட்டு வர்லாங்கறேன்..” என்றாள் சோலை.

சொகுசு சுற்றுலா விடுதி கட்டப்பட்ட பிறகு வாழிடம் கை நழுவிப் போக, பிழைப்புக்காக ஊருராய் அலைந்தாலும் முத்துபொம்முவின் நினைப்பு மட்டும் அவர்களுக்குள் மாறாமலேயே இருந்தது.

“போயீ..?” என்றான் காத்தன்.

”உசுருட்ட எடத்தில பலி குடுத்து படயல் போடணும்.. அவ நெனப்பு நமக்கிருக்கமேரி நம்ப நெனப்பு அவளுக்கிருக்குமில்ல.. காத்துல அலஞ்சுட்டிருக்கவள கலங்க வுடக்குடாது”

”கட்டடம் கட்டங்குள்ளவே நம்பள வெரட்டியடிச்சிட்டானுங்க.. கட்டுன கட்டடத்தில ஊசுருட்ட எடத்த எங்கன்னு நீ தேடுவ..  அதும்பக்கங்கூட போ முடியாது பாத்துக்க..”

மழையில் காடுகள் செழித்து, மலையே தீவனமாக தெரிந்ததில் ஆடுகள் கொண்டாட்டத்தில் திக்குமுக்காடிக் கிடந்தன. அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதில் முத்துபொம்முவுக்கும் கொண்டாட்டம்தான்.  நீண்ட கழியும், மதிய சோறுமாக கிளம்பி விடுவாள். வயிறு நிறைந்த திருப்தியில் மசங்கி மசங்கி வரும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு கீழிறங்கும்போது அந்திசாய தொடங்கியிருக்கும். அன்று அந்தி சாயத் தொடங்கிய நேரத்தில் ஆடுகள் ஒவ்வொன்றாக பட்டிக்கு வரத் தொடங்கின, மேய்த்துச் சென்ற முத்துபொம்முவை தவிர்த்து.

மழை பெய்த சகதியில் கால்களை பரப்பியபடி செத்துக் கிடந்தாள் முத்துபொம்மு. பனிரெண்டு வயதின் குழந்தைத்தனமும், பருவம் எய்தும் குமரித்தனமுமான அவளின் இளம்உடல் மரங்களடர்ந்த காட்டுப்பகுதியில் விறைத்து மல்லாந்திருந்தது உடலில் ஆடை ஏதுமின்றி. பதிலாக அது கழுத்தை இறுக்கிக் கிடந்தது.

ஆவேசம் தாளாது ஈரமண்ணை வாரியடித்தாள் சோலை. ”தாயீ.. பெத்த வயிறு ஒலையா கொதிக்குது… என் உசுரு எறியறப்பல ஒங்கொலய அறுத்தவன் வமுசத்தயே கொலயறுக்குணும் தாயீ..” வயிற்றிலறைந்துக் கொண்டாள்.

மழை பேயாய் அடிக்கத் தொடங்க, வீடு முழுமையாக நனைந்துப் போனது.

6

கலவையான எண்ணங்களில் சரணுக்கு உறக்கம் நகர்ந்திருந்தது. அறையின் பின்புற கதவை திறந்து பால்கனிக்கு வந்தான். பால்கனி கண்ணாடி தடுப்புகளால் மூடப்பட்டு சிறுஅறை போன்ற தோற்றத்திலிருந்தது. உடுத்தியிருந்த கம்பளியையும் மீறி குளிர்காற்று சிலிர்ப்பாக உடலில் இறங்கியது. காணுமிடங்கெங்கும் ஆர்ப்பரிப்பாக தோன்றியது வனத்தின் இருள். விளக்குகளை வெற்றிக் கொள்ளும் இருளின் அவ்வொளி, அகத்தின் அடுக்குகளில் ஊடுருவி கண்களை நிறைந்துக் கொண்டே வர, ஒலிகளும் பழகத் தொடங்கின. எங்கோ விழும் அருவியின் ஓசையும், விடாது கேட்கும் சீவிடுகளின் ஒலியும் மெலிதாக எழும் காற்றின் இசையோடு கலந்திருந்தன. இவை மௌனத்தின் மொழிகளாகதானிருக்க வேண்டும். கண்களை மூடி அனுபவித்தான்.

அதேநேரம் இன்னும் ஓரிரு நாட்களில் இங்கிருந்து கிளம்ப வேண்டியிருக்கும் என்ற எண்ணம் அச்சுறுத்தலாக எழுந்தது.  படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்திருந்தன. இது சரணின் இரண்டாவது படம். தந்தையின் திடீர் மரணத்தையொட்டி வெளிநாட்டிலிருந்து திரும்பியவனுக்கு மீண்டும் அங்கு செல்ல மனமில்லாமல்போனது அவனுக்கே புதிராகதானிருந்தது. கூடவே படமெடுக்கும் ஆசையும் தொற்றிக் கொள்ள, முதல் படத்தில் தன்னை நன்றாகவே நிரூபித்திருந்தான்.

உறக்கமும் விழிப்புமாக நகர்ந்த இரவு பறவைகளின் கீச்சொலிகளால் மீள, எழுந்து பால்கனிக்கு வந்தான். இருளும் விலகாத நிலவும் நகராத புத்தம்புதிதான நாள். வானில் நட்சத்திரங்கள் மினுங்கலாய் நடுங்கின. காடு பொழுதுகளுக்கேற்ப ரூபம் கொள்பவை. பழக்கப்பட்ட காட்சிகள் கூட அவனுக்கு புதிது போல தோன்றின.  கண்ணாடி தடுப்பை திறந்தான். காத்துக் கிடந்ததுபோல காடு உள்ளே வரத் தொடங்கியது. துாரத்து காட்டையும் அழைத்துக் கொள்ள விரும்பி பைனாக்குலரை கண்களில் பொருத்திக் கொண்டான்.

மலையடுக்குகள் பெரும்சரிவாக இறங்கி மீண்டன. சிறு குன்றுகளும் அதை தொடர்ந்து சாலைகளும் ஊர்களை அடையாளம் காட்டின. மலையை நீராக சரித்து விட்டதுபோல் அருவி ஆர்ப்பரிப்பாய் கொட்ட, அதன் ஓடையோ எவ்வித பரபரப்புமின்றி நிதானமாக ஒடிக் கொண்டிருந்தது. அதிக உயரமில்லாத மரங்கள் சரிவுகளில் செறிந்திருந்தன. பசும் பரப்பின் மீது மேகங்கள் குவியல் குவியலாக பரவி பின் கரைவதும் தோன்றுவதுமாக இருந்தன. பெரிய மரமொன்று வேரோடு விழுந்து பொக்கையாகி போன இடத்தில் நீர் குட்டையாக தேங்கிக் கிடந்தது. தேன்கூடுகள் ஆங்காங்கே கருத்த பைகளாய் தொங்கிக்கொண்டிருந்தன.

காட்சிகள் மாறிக் கொண்டே வர, அங்கு வளர்மதி நின்றுக் கொண்டிருந்தாள். மிகுந்த ஆச்சர்யத்தோடு காட்சியை துல்லியமாக்கி அவளருகே கொண்டுச் சென்றான். அவளேதான். விடுதியின் வெளிப்புற சரிவில் நின்றுக்  கொண்டிருந்தாள். உடுப்புக்கு மேல் கம்பெனி ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். குளிருக்கு அணையாக கைகளை கன்னங்களுக்கு முட்டுக் கொடுத்து தோள்களை உயர்த்தியபடி நின்றிருந்தாள். இயற்கை மீது இத்தனை ஈர்ப்பா இவளுக்கு..? என்று தோன்றியபோதே, அவளது பாதுகாப்புக் குறித்த பதற்றமும் எழுந்தது அவனுக்கு.

விடுதி உறங்கிக் கொண்டிருந்தது. ஓசையெழுப்பாது வெளியே வந்தான். வானம் மழைக்கான அறிகுறிகளோடு கம்மிக் கொண்டிருந்தது. இன்றும் படப்பிடிப்பு தள்ளிப் போகலாம். அதுவும் நல்லதுதான். கூடுதலாக இங்கு தங்கிக் கொள்ள வாய்ப்புக் உருவாகும். எடிட்டிக், ரீரிகாட்டிங்.. இசைக்கோர்ப்பு என இனி அடுத்தடுத்து வரவிருக்கும் நாட்கள் இயந்திரத்தனமானவை.

உறை அணிந்த கைகளை ஜெர்க்கினுக்குள் விட்டபடியே நடந்தான். விடுதியின் போக்குவரத்துக்காக போடப்பட்டிருந்த தார்சாலை கரும்பாம்பாய் வளைந்தோடியது. விடுதிக்கு எதிர்புறம் மலை சரிந்திருந்தது. வளர்மதி சாலையை கடந்து சரிவை நோக்கி திரும்பியபடி நின்றிருந்தாள். கைகளிரண்டும் இயற்கையை அள்ளிக் கொள்வதுபோல வானை நோக்கி விரிந்திருந்தன.

சாலையை கடந்து அவளருகே சென்றான். இயற்கைக்குள் ஆழ்ந்துக் கிடப்பவளை கலைக்க எண்ணமில்லாமல். ”வளர்மதி..” என்றான் அவளுக்கு கேட்காத குரலில்.

வெளிச்சத்துக்காக செல்போன் டார்ச்சை இயக்க எண்ணி, ஜெர்கினுக்குள் கை விட்டு செல்போனை உருவ, அது லேசாக நழுவியது. அதை பிடிக்க எண்ணிய வேளையில் இடதுகால் சரிவிலிறங்கியது. வலதுகால் உடலை தாங்கவியவாது தடுமாற,  சுதாரிக்கும்முன்பே உடல் வழுக்கி வழுக்கி முனைப்புடன் சரிவில் உருண்ட போது வெட்டிய மின்னல் ஒளியில் அவள் வளர்மதி அல்ல என்று அனிச்சையாக அவன் சிந்தைக்குள் படிந்ததே கடைசி உணர்வாக இருக்கலாம். சூடியிருந்த காட்டுச்செம்பருத்தி அதிகாலையில் மலர்ந்திருக்கலாம்.

அன்றும் அப்படியானதொரு மின்னலொளியில்தான் முத்துபொம்மு பிணமாக கிடந்ததை கண்டுக் கொள்ள முடிந்தது. அவளுடன் சென்ற சிலுப்பி, மதிய சாப்பாட்டுக்கு பிறகு ஆடுகளை ஒருங்கு கூட்டுவதற்காக தானும் முத்துபொம்முவும் ஆளுக்கொரு திசையாக பிரித்து சென்று விட்டதாக சொன்னாள். கூடவே முத்துபொம்மு போன திசையில் யாரோ ஒரு ஆள் சென்றதாகவும் கூறினாள். பிறகு அவருக்கு அறுவது வயதிருக்கலாம் என்றும் சொன்னாள்.

***

 

 

பட்டுவாடா

கலைச்செல்வி

அவனுடையது ஓடைக்கரையில் அமைந்த பசுமையான மலையடிவார கிராமம். தன் வயதொத்த இளைஞர்களோடு ஓடை நீரில் பாய்ந்து குதித்து விளையாடுவதும், அவ்வப்போது சினிமாவும், சனியன்று கூடும் சந்தையில் பெண் பிள்ளைகளை மறைந்திருந்து பார்த்து பரவசமடைவதையும் தற்போதைய பொழுதுப்போக்குகளாய் கொண்டிருந்த அவனது வாழ்க்கையில் இந்த மரணம் எதிர்பாராத ஒரு கையறு நிலை.

நிற்காமல் வழிந்த நீரை துடைக்க முயலாமல் நடந்தான். கண்ணுக்கெட்டிய தொலைவில் குடிசையின் உச்சிகள் தெரியத் தொடங்கின. இது அவனுக்கு புதிய ஊர் அல்ல. அடிவாரத்திலிருந்து சிறிதளவே உயரத்திலிருந்த இந்த ஊரை சேர்ந்த சிறுவர்கள் அவன் வகுப்பில் படித்திருக்கிறார்கள். இப்போது .இறந்துக் கிடக்கும் அவனுடைய அம்மா இங்கு கத்தரி வற்றலும், அப்பளமும், உப்பு மாங்காயும் கொண்டு வருவாள். அதற்கீடாக பண்டமோ, பணமோ வாங்கிக் கொண்டு திரும்புவாள். சோனியாய் திரியும் நாய்கள், சாணம் மொழுகிய களங்கள்.. கால்நடைகள்… வளர்ப்புச் செடிகளை தொடர்ந்து குடிசைகள் தென்படத் தொடங்கின. தபால்களை கொடுக்கவும் சேகரிக்கவுமாக சென்ற அவனது அப்பா இப்போது இங்குதானிருக்கிறார் என்று திடீரென்று அதீதமாக நம்பத் தொடங்கினான். அந்த நம்பிக்கையின் முடிவில் ஆற்றுப்படுத்த முடியாத அழுகை வந்தது.  அவரை பார்த்து விட்டால் போதும் என்று மனதார எண்ணினான்.

கண்ணீரும்கம்பலையுமாக நின்ற அவனை பார்த்ததும் அந்த ஊர் பதறிப்  போனது. நிறுத்தவியலாத அழுகையோடு அவர்களிடம் தகவலை சொன்னான். “அடப்பாவீ.. நல்லாருந்த பொம்பளைக்கு என்னாச்சு திடுப்புன்னு..” என்று அங்கலாய்த்தது. இவன் ஒரே பிள்ளை என்று தெரிந்துக் கொண்டதில், “இந்தப் புள்ளக்கு ஒரு வழிய காட்டி வுடாம அப்படியென்ன அவசரமாம்..“ என்று பரிதவித்தது. அவனுடைய அப்பா நேற்று மதியமே கிளம்பி விட்டதாக வருத்தம் தெரிவித்தது,

”நா கௌம்பறேன்..” என்றவனை நிறுத்தி, “ஒங்கப்பா தபாலு மட்டுமா கொண்டாருவாரு.. நாட்டுல.. தேசத்தில நடக்கற நல்லதுகெட்டத அவரு வாயால கேட்டாதானே கேட்டாப்பல இருக்கும்.. மனுசன் இனிம ஒடஞ்சில்ல போயிடுவாரு..” என்று விட்டு சோற்றையள்ளி இலையில் வைத்தது. அவன் தீவிரமாக மறுத்து அழுதான்.

”தம்பி.. அவுத்தால மல கொஞ்சம் செங்கூத்தா போவும்.. பாத்துக்க.. வேணும்னா யாரவாது அனுப்பி வுடவா ஒத்தாசக்கு..” தவிப்பாய் உபசரித்தார்கள். அதையும் மறுத்து விட்டு கிளம்பினான்.

மலையேற்றம் அத்தனை புதிதில்லை என்றாலும் ஏற ஏற மலை உயர்ந்துக் கொண்டே செல்வது போலிருந்தது. அதுவும் அவர்கள் கூறியது போல செங்குத்தான பாதையாக இருந்தது. இதற்கு மேல் அவனுக்கு எல்லாமே புதிது. தன்னையும் ஒருநாள் அழைத்துச் செல்லுமாறு அம்மா, அப்பாவை கேட்டிருக்கிறாள். அதை நினைத்துக் கொண்டபோது மீண்டும் அழுதான். அப்பா பாசக்காரர்தான். ஆனால் பணியில் இடையூறுகள் வருவதை விரும்புவதில்லை. அவரை இப்போதே பார்த்து கதறி அழ வேண்டும் என்ற தோன்றியது. அந்த எண்ணமே அவனுக்கு நடப்பதற்கான தீவிரத்தை கொடுத்தது. கீழிருந்து பார்க்கும்போது இரட்டை மலைகளாக தெரிந்தவை மேலேறியதும் அடுக்குகளாய் பிரிந்துக் கிடந்தன. ஆயினும் ஆட்கள் ஆங்காங்கு நடமாடியது தெம்பளித்தது. அந்த வழியே வந்தவர்கள் அலுத்து களைத்திருந்த அவனுக்கு நீரோடையை கைக்காட்டி விட்டுச் சென்றனர். கைகளை குவித்து நீரை ஏந்தி முகத்தில் அடித்துக் கொண்டான். பிறகு அப்படியே அள்ளிப் பருகினான்.  பாதை மடிந்து திரும்பி ஊர்களை அடையாளம் காட்டியது. சிறு சமவெளிப் பரப்பு அது. அதில் குடியிருப்புகள் அடர்வாக பரவியிருந்தன

அவனுடைய அப்பாவை அங்கு எல்லோருக்கும் நன்றாக தெரிந்திருந்தது. சேதியை கேள்விப்பட்டதும் அவர்கள், அவனுடைய அப்பாவின் மீது கரிசனம் கொண்டார்கள். அவர் மனம் தேறும் வரைக்கும் எங்கும் அலைய வேண்டாம் என்றும் தபால்களை தாங்களே வந்து வாங்கிக் கொள்வதாகவும் பரிவோடு சொன்னார்கள். மேலே முன்னேறியபோது மலையடுக்குகள் பாதை குழப்பத்தை ஏற்படுத்தின. அவர்கள் மேல் நோக்கி விரலை நீட்டியது எந்த மலையடுக்கை என்று புரியாமல் அங்கேயே நின்றபோதுதான் கால்களின் வலியை உணரத் தொடங்கினான். இத்தனை மக்கள் இங்கு வாழ்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு கால்களை தவிர வேறு பொது போக்குவரத்து ஏதுமில்லை என்பதும் அவனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. இங்கெல்லாம் அதிகபட்சம் மாலை நான்கு மணிக்கு மேல் பாதுகாப்பில்லை என்பார் அப்பா. அதற்குள் அவரை பிடித்து விட வேண்டுமே என்ற கவலை அவனைத் தொற்றிக் கொண்டது. அவன் இன்று விழித்த நேரமே சரியில்லை. இல்லையெனில், இத்தனை பெரிய துரதிர்ஷ்டம் அவனுக்கு வாய்த்திருக்காது. அவனும் அப்பாவும் அம்மாவுமாக இருந்த அன்பான கூடு இன்று சிதைந்திருந்தது. அதை இந்த நொடி வரை அவனால் அப்பாவுக்கு தெரிவிக்க முடியவில்லை. ஒருவேளை அப்பா அருகில் இருந்திருந்தால் அம்மா இறந்திருக்க மாட்டாளோ..? தான் எண்ணியதை உறுதியாக நம்பினான். அம்மாவும் இதே எண்ணத்தோடுதான் இறந்திருப்பாள் என்றும் நம்பினான். ஏதோ ஒரு பாதையில் மனம் உந்தித்தள்ள நடக்கத் தொடங்கினான். நல்லவேளையாக அது சரியான பாதையாக இருந்தது. அப்பா அங்கு வரவேயில்லை என்றார்கள். பிறகு அவன் பதறிப் போனதை உணர்ந்து தபால்கள் ஏதுமில்லாத நாட்களில் அவர் ஊருக்குள் வராமல் செல்வது வாடிக்கையான ஒன்றுதான் என்றார்கள்.

அவன் அந்த பதற்றமான விஷயத்தை சொன்னதும் “எப்போது..“ என்று அதிர்ந்தார்கள். “இன்று அதிகாலை..“ என்றான். அதற்குள் அவர்களுள் ஒருவன் சரிவின் மறுப்பக்கத்திலிருக்கும் குடியிருப்புகளில் அவரின் இருப்பு தென்படுகிறதா என்று பார்த்து விட்டு வருவதாக புறப்பட்டிருந்தான். வேக வைத்த வள்ளிக்கிழங்கும், புளிப்பு ரசமும் கொடுத்தார்கள்.  அவர் நிச்சயம் இங்கிருந்து கிளம்பியிருக்கக் கூடும் என்று ஊகப்பட்டார்கள். அதையே அங்கு சென்று வந்தவனும் ஊர்ஜிதப்படுத்தினான்.

இதற்கு மேல் இங்கு நடமாடுவது அத்தனை நல்லதல்ல என்று வற்புறுத்தினார்கள். அவன் நிலைமையை சொன்னான்.

“பெரியவுங்க.. ஊர்க்காரங்கள்ளாம் இருக்காங்கள்ள.. பாத்துக்குவாங்க.. ராத்தங்கீட்டு போறதுதான் நல்லது..” என்றனர்.

அவர் தபால்களோடு எப்போது கிளம்பினார் என்று அக்கறையாக விசாரித்தனர். செவ்வாய்கிழமை காலையில் என்றான். திங்களன்று அம்மாவுக்கு துணிதுவைக்கும் சோப்புகளும், இரும்பு வாணலியும் வாங்கி வந்தார். பிறகு பொட்டுக்கடலையை மறந்து விட்டதாக அவள் நாக்கைக் கடிக்கவும், மீண்டும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார். அப்போது அவன் ஓடை நீரில் விளையாடிக் களைத்து ஊற வைத்த பருப்புப் போல உப்பி.. வெளிறி.. திரும்பியிருந்தான். அவன் பொறுப்பற்று போனதற்கு அவர் செல்லம் கொடுத்து வளர்த்ததுதான் காரணம் என்று வழக்கம் போல அம்மா குற்றச்சாட்டை வீச.. அவர் “இன்னொருக்கா மந்திரிச்சு கயிறு கட்டுனா தானா சரியாப் போயிடும்..“ என்றார் சமாதானமாக. “ம்க்கும்..“ என்றாள் அம்மா அசுவாரஸ்யமாக. ”தோட்டத்தில மாங்கா செங்காயா வுளுந்துக் கெடந்துச்சு.. எடுத்தாந்து புட்டில போட்டு வச்சிருக்கேன் பாரு.. பச்சடி வச்சா நல்லாருக்கும்..” என்றார் சேறு அப்பிய கால்களை மூங்கில் காலோரம் கழுவிக் கொண்டே. அவரிருக்கும் நாட்களில் வீட்டில் சமையல் தடபுடலாகவே இருக்கும்.

செவ்வாய்க்கிழமை காலையில் கிளம்பினால் சனிக்கிழமை மதிய சாப்பாட்டுக்கு வந்து விடுவார். அன்று மீதமானதுகளே அடுத்தநாளுக்கும் போதுமானதாக இருக்கும். அம்மா புதன்கிழமை இவனுக்காக கோழி வாங்கி வருவாள். அதில் காலும் தலையும் மட்டுமே அவளுக்கு. அப்பா எப்போதும் கோழி சாப்பிடுவதில்லை. அவர் ஞாயிற்றுக்கிழமை ஆட்டுக்கறி குழம்பு தின்ற கையோடு, சந்தைக்கு தேவைப்படும் காய்களை வயலில் அறுத்து கட்டி எடுத்து வருவார்.

இரவு முழுவதும் பனி மூடிய நிலவொளியில் மலை குளிர்ந்துக் கிடந்தது. பதியாட்கள் கேப்பைக்கூழும், கீரையுமாக அவனை உண்ண வைத்தனர். பழக்கமின்மையால், ஊடுருவிய குளிருக்கு அவர்கள் அளித்த போர்வை கால்வாசிக் கூட காணவில்லை. ஆயினும், நடையலுப்பு கண்களை அசத்தியது. அவன் கண்விழித்த நேரத்தில் பளிச்சென்று பகல் புலர்ந்திருந்தது. முப்புறமும் கரும்பாறைகள் உயர்ந்து நிற்க, இயல்பாக தோன்றிய ஓடைப்பள்ளத்தில் உடலை சுத்தப்படுத்திக் கொண்டான். கேழ்வரகு ரொட்டியும் பானகமும் கொடுத்தனர். கிளம்பும்போது இலையில் கட்டிய புட்டுமாவை நீட்டினர்.

பசுமையாக படர்ந்திருந்த வனம் அமைதியாக அவனுடன் வரத் தொடங்கியது. மரங்களின் இடைவெளிக்குள் சூரியன் அவனை பாதுகாப்பாக செலுத்திக் கொண்டிருந்தது. கொடிகள் கூட அனாயசமான புஷ்டியோடு மரங்களோடு எழும்பி நின்று விழுதுகள் போல தொங்கிக் கிடந்தன. சில இடங்களி்ல் தரையே தெரியாத அளவுக்கு செத்தைகள் அடர்ந்திருந்தன. சரிவில் மரங்கள் அடர்ந்திருந்தன. பாதை செங்குத்தாக மேலேறி சென்றது. சிறு பெண்கள் குழுவொன்று பொதுபொதுப்பான ஈரமண் ஒட்டிய கிழங்குகளுடனும் கீரைக்கத்தைகளுடனும் எதிர்புற சரிவிலிருந்து மேட்டுக்கு ஏறிக் கொண்டிருந்தது. காற்று சற்றே வேகம் கூட்டி சுழன்றதில், துாரத்தில் எங்கோ மரக்கிளை முறித்து விழும் சத்தம் கேட்க, அவன் திடுக்கிட்டுப் போனான்.  “ஒங்க பின்னுக்குதான் வர்றோம்.. பயந்துக்க வேணாம்..” என்றார்கள் அந்தப் பெண்கள்.

சிறு வெட்கத்தோடு நடந்தான். நட்டு வைத்த துடைப்பங்களாக ஈச்சம் புற்கள் வழியெங்கும் பரவிக் கிடந்தன. ஆங்காங்கே கூட்டமாக பெண்கள் சீமாறு புல் அறுத்துக் கொண்டிருந்தனர். இடையில் ஓடையொன்று குறுக்கிட்டது. அதன் கரையெங்கும் கோரைகள் ஆளுயுரத்திற்கு முளைத்துக் கிடந்தன. தாழ்ந்து படர்ந்திருந்த மரங்களில் குரங்குகள் தாவி குதிக்க… அதன் நீண்ட வால்கள் ஓடைக்கும் மரங்களுக்குமிடையே பாலம் போல தொங்கின. குரங்குகளின் குதியாட்டத்தில் சருகு இலைகள் ஓடைக்குள் உதிர்ந்தன. குனிந்து ஓடை நீரை அள்ளியடுத்து பருகினான். நல்ல சுவையான நீர். அவனின் பிம்பம் நீரில் விழுந்திருந்தது. “அவருக்கு இவ்ளோ பெரிய பையனா..“ நேற்றிரவு அவர்கள் இவனைக்கண்டு ஆச்சர்யப்பட்டதை எண்ணிக் கொண்டான். ஈரம் செறிந்த கரையில் படர்ந்திருந்த புற்கள் அவன் காலடியில் மசிந்து, பிறகு திமிர்த்து நிமிர்ந்தன.

அடுத்தடுத்த கிராமங்கள் அருகருகே இருந்தன. அவை எல்லாவற்றிலிருந்தும் அப்பா நழுவிச் சென்றிருந்தார். இனி மேலேற வேண்டிய அவசியமில்லை என்பது அவனுக்கு நிம்மதியளித்தது.  அவர்கள் அளித்த கருப்பட்டி காபியை அங்கிருந்த கல்லின் மீது அமர்ந்து அருந்தினான். களியும் கீரை பிரட்டலையும் இலையில் ஏந்தி வந்த பெண் அழகாக இருந்தாள்.

தொலைவிலிருந்த கிராமங்கள் அருகே வரத் தொடங்கியிருந்தன. மலைச்சரிவில் சற்றே ஏறி, அடுத்திருக்கும் தாழ்வான சமவெளி கிராமங்களை முடித்துக் கொண்டு, கீழிறங்க வேண்டியதுதான். கீழிறங்கும்போது பாதைக் குழப்பம் வராது. அதிக நேரமும் தேவைப்படாது என்றார்கள்.  அடிவாரத்திலிருந்து இரண்டு மணி நேர பேருந்து பயணத்திலிருந்தது அவனது கிராமம்.

சூரியன் மரங்களுக்கிடையே பம்மி பம்மி நகர்ந்தது. மதிய நேரத்து வெயில் என்றாலும் குளிர்ந்த உடலுக்கு இதமாகதானிருந்தது. சரிவிலிருந்த குடியிருப்பின் தலைபாகங்கள் தெரிய தொடங்கின. இன்னார் மகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பின் அவர் கிளம்பி விட்டதாக கூறினார்கள். அவர்கள் பேச்சிலிருந்து அப்பாவுக்கு தகவல் எட்டியிருப்பதை ஊகிக்க முடிந்தது. அவனுக்கு தாகம் எடுத்தது.  நீர் வேண்டுமென்றான். குடுவையில் அளித்த நீரை அருந்தி விட்டு, மீதியை முகத்தில் அள்ளித் தெளித்துக் கொண்டான். குடுவையைப் பெற்றுக் கொண்ட பெண் அம்மாவுக்கு என்னாச்சு.. என்றாள் பரிவாக. குபீரென்று பொங்கி வந்த துக்கத்தோடு “செத்துட்டாங்க..“ என்றான் சிதறலாக. அவள் காலைக் கட்டிக் கொண்டிருந்த சிறுவன் எதற்கோ சிணுங்கிக் கொண்டிருந்தான். அவள் ஏதோ தின்பண்டத்தை அவனிடம் நீட்ட, சிறுவன் அழுகையை நிறுத்தி விட்டு அதை சாப்பிட ஆரம்பித்தான். அவனது வலதுக்கையில் கட்டியிருந்த ஆரஞ்சு நிற கயிறு லேசாக அவிழ்ந்து தொங்கியது.

சமவெளியை நெருங்கி வர வர நடமாட்டம் அதிகமிருந்தது. ஆண்களும் பெண்களும் ஏதோ நிமித்தம் அலைந்துக் கொண்டிருந்தனர். எல்லோரையும் விட அவனுடைய அப்பா மட்டுமே கடும் சவாலான வேலை பார்ப்பதாக எண்ணிக் கொண்டான். அதோடு அப்பாவை எல்லோரும் அறிந்திருப்பது பெருமிதமாக தோன்றியது.  அதே நேரம் பழக்கப்படாத தனது கால்களே இரண்டு நாட்களுக்குள் பயணத்தை முடித்துக் கொண்டபோது அப்பாவுக்கு நான்கு நாட்கள் தேவைப்படுவது வியப்பளித்தது.

இறக்கம் சரசரத்து அவனை சமவெளியில் சேர்த்திருந்தது. அங்கும் அப்பா அறிமுகமாகிதானிருந்தார். சொல்லப்போனால் அவன் கொண்டு வந்த சேதியை அவர்களும் கேள்வியுற்றிருந்தனர். ”நாங்கதான் அவர காரு புடிச்சு அனுப்பி வச்சோம்.. நீங்க அவர தேடிக்கிட்டு வாரது தெரியாது தம்பி..” என்றார் அங்கிருந்த ஓட்டல்காரர் ஒருவர்.

”காரு புடிச்சார்ரோம் தம்பி.. செத்த ஒக்காருங்க..” உள்ளே அழைத்துச் சென்றார்.

”கொஞ்சமா சாப்டுக்கங்க.. சடங்குசாத்திரமெல்லாம் முடிஞ்சு சாப்பாட்ல கை வைக்க ரொம்ப நேரமாயிடும்..” பரோட்டாவை பிய்த்து வைத்து குருமாவை ஊற்றினார். “நல்ல மனுசன்.. ஒங்கம்மாவுக்குதான் குடுத்து வைக்கல..” என்று வருத்தப்பட்டார். அதற்குள் கார் வந்திருந்தது. அவனும் சாப்பிட்டு முடித்திருந்தான்.

”எலைய அப்டியே வச்சிட்டு கைய கழுவிக்கங்க தம்பீ.. காரு வந்துருச்சு..” டிரம்மிலிருந்த நீரை முகர்ந்து  ஊற்றினார்.

வலது கையில் கட்டியிருந்த ஆரஞ்சு நிற கயிற்றை இயல்பாக பின்னுக்கு தள்ளிக் கொண்டு கையை கழுவினான். மந்திரித்த கயிறு அது. அப்பாவுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை அதிகம். அந்த சிறுவனின் கையிலும் இதேமாதிரியான கயிறு இருந்தது நினைவுக்கு வந்தது. தொடர்ச்சியாக, தபால் பட்டுவாடாவை அப்பா வேண்டுமென்றே நான்கு நாட்களுக்கு இழுப்பதாக தோன்றியது.

இவன் வீடு திரும்பியபோது அவனுடைய அப்பா சடலத்தின் வலப்பக்கத்தில் குனிந்தபடி அழுதுக் கொண்டிருந்தார். இவன் சடலத்தின் இடதுபுறம் சென்று நின்று கொண்டான்.

 

***