கலைச்செல்வி

பிரசவ வெளி

கலைச்செல்வி

அடிமுதுகு வலியில் துவண்டிருந்தது. வயிற்றின் அசைவுகள் குழந்தை வெளி வருவதற்கான இறுதி முயற்சியில் உயிரை கரைத்துக் கொண்டிருந்தன. வலியை நீட்டியோ நிமிர்ந்தோ அனுபவிக்க இயலாதவண்ணம் இடது கை சிறைப்படுத்தப்பட்டு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. டெட்டனஸ் ஊசி செலுத்தப்பட்ட இடம் வலியால் கடுத்தது. வாழ்வு நித்தியமானது என்ற மாயைக்குள் முழுதாக தன்னை ஒளித்துக் கொண்ட பரபரப்பில் இயங்கியது அந்த பிரசவ வார்ட். ஆர்வமும் எதிர்ப்பார்ப்பும் குரல்களாக கசிய சொந்தங்கள் கதவுக்கு வெளியே காத்திருப்பது நர்ஸ் கதவை திறந்து மூடுவதில் தெரிந்தது. குடும்ப எண்ணிக்கையொன்று கூடுகையில் ஏற்படும் இயல்பான சந்தோஷம்.

என்னையும் சேர்த்து நான்கு பெண்கள் அந்த லேபர் வார்டில் இருந்தோம். சற்றே பெரிய சதுரமான அறை. என்னை தவிர்த்த இரு பெண்களும் உச்சக்கட்ட வலிக்கான காத்திருப்பில் இருப்பது போலிருந்தனர். பக்கத்திலிருந்தப் பெண் பிரசவத்தின் வெகு நெருக்கமான இடைவெளியில் இருப்பதை அவளின் அங்க அசைவுகள் உணர்த்திக் கொண்டிருந்தன. அந்தப் பெண்ணைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த பச்சைத் திரைத் தடுப்புகளினால் உள்ளே நடப்பவை துல்லியமான பார்வைக்கு மறைக்கப்பட்டிருந்தாலும் காட்சிகள் தெளிவற்று தெரிந்துக் கொண்டுதானிருந்தன. மருத்துவரும் செவிலியரும் தாதியுமான சிறு கூட்டம் அவளை சூழ்ந்திருந்தனர். தாளாத வலியில் அவள் முனகியது என் உயிர் வரை ஓடி பய நரம்பை சுண்டியது. எண்ணிப் பார்த்தேன். இந்த பயம் இன்றில்லை.. நாள் தள்ளிப் போன பிறகு செய்த சிறுநீர்ப் பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் காட்டிய அன்று வந்த பயம்.

அன்று குடும்பமே ஆரவாரத்தில் மூழ்கி விட எனக்குள் சந்தோஷத்தை விட பயமே அதிகமாக வந்து உட்கார்ந்தது. இத்தனைக்கும் சினிமா.. சீரியல்களில் வருவது போல் எனக்கு மயக்கம் வரவில்லை. வாந்தி போன்ற தொந்தரவுகளும் இல்லை. மயக்கம் தெளிந்த கதாநாயகிகள் கட்டிலில் போர்வைக்குள் படுத்தப்படி வருங்கால குழந்தையை பற்றி வெட்கமும் ஆசையுமாக கணவருடன் பகிர்ந்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அப்படியேதும் தோன்றாமல் பயம் வந்ததுக் குறித்து பயமாகதான் இருந்தது. ஓருவேளை அடிக்கள்ளி.. என்ற தேய்ந்த வசனத்தை என் கணவர் பேசாததுதான் காரணமோ என்ற எண்ணவோட்டம் உதட்டில் புன்சிரிப்பை வரவழைத்தது.

கர்ப்பவதி.. புள்ளத்தாச்சி என்ற வார்த்தைகளின் புனிதம் ஜீன்களின் வழியாகவும் சமுதாய கற்பிதங்களாலும் என்னுள் கடத்தப்பட்டிருந்தாலும் எதிர்ப்படும் கர்ப்பவதிகளின் மனநிலை குறித்த ஆராய்ச்சி என் மனதில் அனிச்சையாக ஓடிக் கொண்டேயிருந்தது. என் நாத்தனாரின் பிரசவம் குறித்து பேசும்போதெல்லாம் என் மாமியார் “எம்பொண்ணு செத்து தான் பொழச்சா..” என்றது வேறு பயத்தை அதிகப்படுத்தியது. “பொண்ணுக்கு பிரசவங்கறது மறுஜனனம்தான் என்றாலும் இந்த நவீன மருத்துவ யுகத்தில்..’ என்று டி.வியில் பேசிக் கொண்டே போகும் மகப்பேறு மருத்துரின் முதல் வரிகளோடு மனம் நின்று போனது. பெரிய வயிறுடைய பெண்கள் அடுத்து வரும் மாதங்களில் பூந்துவாலைக்குள் குழந்தையை இறுக்கியப்படி நடப்பதுதான் சற்று ஆறுதலாக இருந்தது. இப்போது எனது பழக்கவழக்கங்கள் கூட மாறியிருந்தது. முன்பெல்லாம் கோபம் வரும்போது சாப்பாட்டில்தான் அது வெளிப்படும். ஆனால் இப்போது கோபம் கிளம்பும் போதே சமாதானப்படுத்தப்பட்டதில் சலிப்புதான் வந்தது. ‘சாப்பாட்டுல கோவத்த காட்டாதே.. இப்ப நீ ரெண்டு உயிர்..’ எல்லோரும் சொல்லும் போது பயம் இன்னும் கூடிப் போனது.

வாரிசு ஏக்கத்தை கண்களில் சுமந்திருந்த கணவரிடம் வயிற்றுச்சுமையை தள்ளிப் போட எண்ணும் என் எண்ணம் அரங்கேறாமலேயே அஸ்தமித்துப் போனதில் வயிறு மேடிட துவங்கியிருந்தது. வெளிப்படுத்தியிருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கும்..? சமாதானத்தின் இறுதியிலோ அல்லது சண்டையின் இறுதியோ வயிற்றுச் சுமைக் கட்டாயமாக்கப்பட்டிருக்கும். என் சம வயது பெண்களில் குழந்தைப்பேற்றை தள்ளிப் போட்டவர்கள்.. குழந்தை தரிப்பதற்காக மருத்துவ ஆலோசனையிலிருப்பவர்கள்.. இன்னும் திருமணமாகாதவர்கள்.. இவர்களோடு என்னை ஒப்பிடுவதில் என்னுடைய தாய்மைப்பேறுக் குறித்து என் அம்மாவுக்கும் பெருமைதான். தனது மகள் பெண்ணாக பிறப்பெடுத்ததை பூர்த்தி செய்து விட்டாள் என்ற நிறைவுடனேயே இந்த பத்து மாதங்களும் வளைய வந்திருந்தாள் அவள். என் மனதை வெளிப்படுத்தியிருந்தால் முதலில் ஆச்சர்யம்தான் வந்திருக்கும் அம்மாவுக்கு. ‘இப்டி கூட யாராவது நினைப்பாங்களா..?’ என்பாள். பிறகு நிச்சயமாக மருமகனின் கட்சிக்கு தாவி விடுவாள்.

மூன்றாம் மாதம் வீட்டுக்கு அழைத்து வருவது.. ஐந்தாம் மாதம் மருந்துக் கொடுப்பது.. என நேரங்கள் நெரிசலாகக் கடந்துக் கொண்டிருந்தது. துறுத்தலான வயிற்றை ஆசையாக வருடி புளங்காகிதம் அடையும் கணவருக்கு இப்போதெல்லாம் வயிற்றுக் குழந்தையை தவிர்த்து என்னிடம் பேச விஷயங்களற்றுப் போனது. தடுப்பூசிகள், ஸ்கேன் ரிப்போர்ட் இவைகளோடு மாதாந்திர செக்கப் முடிந்து மருத்துவர் அறையிலிருந்து வெளியே வரும் போது எனது திகில் நிறைந்த கண்களை பார்த்து பதறும் கணவரிடம் ‘பேபி நல்லாயிருக்காம்..’ என்ற வார்த்தைகள் அவரை திருப்திப்படுத்த போதுமானதாக இருந்தது. ஆனால் மருத்துவ செக்கப் செய்யும் முறை என்னை விரக்தியடைய வைத்திருந்தது.

இரவுகள் கூட கலக்கத்திலேயே கழிந்துக் கொண்டிருந்தது. புதிதாக குழந்தைப் பெற்ற உறவுக்காரப் பெண்கள் குழந்தையே உலகமாக மாறி போவதை மனக்கண்ணுக்குள் இருத்தி பார்க்கும் போது வரும் இன்பம், பிரசவம் குறித்த பயத்தில் கரைந்துப் போகும்.  வரப்போகும் குழந்தையை பற்றிய கனவுகளில் மூழ்கியப்படியே மெல்லிய குறட்டையில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு படுத்திருப்பார் கணவர். பத்து பனிரெண்டு குழந்தைகளை உடல் உழைப்பு மிகுந்த அந்த காலக்கட்டத்தில் சர்வசாதாரணமாக பெற்றெடுத்த பாட்டிமார்கள் எனக்கு சாதனையாளர்களாக தெரிந்தனர். மருத்துவச்சி பார்க்கும் பிரசவம்.. வளராத விஞ்ஞானம்.. சமுதாய அழுத்தம்.. புனித வேள்விக்குள் அடைப்படும் தாய்மை இவைகளுக்கு மத்தியில் கயிற்றில் நடக்கும் சாகஸகாரர்களாகவே ஒவ்வொரு பெண்ணும் வாழ்ந்திருப்பதாக எனக்கு தோன்றியது. விஞ்ஞானம் போர்த்திய இன்றைய சமுதாயத்தில் கூட மலடி.. போன்ற ஆண்பாலற்ற சொற்கள் வெகு விமரிசையாகவே வலம் வந்துக் கொண்டுதானிருக்கிறது. தாங்கள் பெறும் குழந்தைகள் குறித்த உரிமையை  பெண்கள் இன்னும் பெறவில்லை என்று ஏதேதோ எண்ணங்கள் மூழ்கடிக்க மீதி இரவும் துாக்கம் தொலைந்தே கடக்கிறது. துாக்கமின்மை பகல்களை அரைமயக்க நிலையிலேயே வைத்திருப்பது போலிருக்கும். “நாள் நெருங்க நெருங்க துாக்கம் வராதுடீ.. இதெல்லாம் வயித்துப்புள்ளக்காக நாம செய்ற தவம்டீ.. குடுத்து வச்சிருக்கணும்..” என்பாள் அம்மா உருக்கமாக.

வயிறு பெரிதானதில் கைகளின் துணையின்றி உட்காரவோ எழுந்துக் கொள்ளவோ.. புரண்டு படுக்கவோ முடியாத களைப்பு நிரந்தரமாக முகத்தில் படர்ந்துப் போனது. “உள்ள இருக்கறது பொம்பளப்புள்ளதான்.. பொண்ணுங்கதான் தாயோட அழகை களவாடிக்கும்பாங்க..” என்ற ஜோதிடம் சொல்லும் அம்மாவுக்கு “இல்லீங்க.. ஆம்பளப்புள்ளதான் அசதிய கொடுக்கும்..” என்பார் மாமியார் விட்டுக் கொடுக்காதவராக. டபக்.. டபக்.. என உள்ளிருந்து வரும் அசைவுகள் சற்று நேரம் வராது போனாலும் பயமேற்பட்டது. ‘குழந்தை மூவ்மெண்ட்டே இல்லையாம்..’ வீடே அல்லோலகல்லோலப்பட்டது. ஸ்கேன் எடுத்ததில் குழந்தை ‘நார்மல்’ என்றது ரிப்போர்ட். நான் தான் நார்மலாக இல்லாமல் நடுக்கத்துடன் பிரசவ தேதியை எதிர்ப்பார்த்திருந்தேன். வளைகாப்பு வளையல்கள் உடைந்து விடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்ததில் யாருடைய உடலுக்குள்ளோ புகுந்துக் கொண்டது போலிருந்தது. என் அலைபேசியிலிருந்து போகும் அழைப்புகளோ அலைபேசிக்கு வரும் அழைப்புகளோ பிரசவத்தைப் பற்றிய பேச்சிலேயே சுற்றி வந்து முடங்கிப் போவது ஒரு வித சலிப்பை தந்தது.

ஒன்பதாவது மாதம் தொடக்கத்திலேயே மருத்துவமனைக்கென பெரிய பேக் ஒன்று எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தது. அம்மாவும்தான். ஃபிளாஸ்க் டம்ளர்கள்.. பெரிய பெரிய டவல்கள் சலவை செய்து புதிதாக்கப்பட்ட வெள்ளை வேட்டிகள் ஸ்பூன் சாத்துக்குடி பிழியும் கருவி குளுக்கோஸ் பாக்கெட்டுகள் நைட்டி நாப்கின் பாக்கெட் என நிரம்பியிருந்த அந்த பேக் கண்ணில் படும் போதெல்லாம் பீதியை கிளப்பிக் கொண்டேயிருக்கும். “மாப்ளை நம்ம பொண்ண நல்லா கவனிச்சுக்குறாரு.. குழந்தை மூவ்மெண்ட்ட வாட்ச் பண்ணிக்கிட்டே இரு.. வலி வர்றாப்பல இருந்தா ஒடனே ஆஸ்பிடலுக்கு கௌம்பிடு.. நேரத்துக்கு சாப்புடுன்னு ஒரே அட்வைஸ்தான் பொண்டாட்டிக்கு..” அம்மாவுக்கு பெருமைப்பட விஷயமிருந்தது. எனக்கோ என் கணவர் என்னிடமிருந்து விலகி விட்டது போலிருந்தது.

தயாராக இருந்த அந்த பெரிய பேக்கிற்கு நேற்று மாலை உபயோகம் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். முதலில் கர்ப்பபையில் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் சிசேரியன் செய்ய வேண்டும் என்றார்கள். எனக்கு அனஸ்தீஷியா அலர்ஜி என்பதால் நார்மல் டெலிவரிக்கு காத்திருப்பதில் பிரச்சனையில்லை என்றார்கள். பெல்விஸ் எலும்பு விரிவடைந்திருப்பது நல்ல அறிகுறி என்றார்கள். இரு வீட்டார் குலதெய்வங்கள் சிறு தெய்வங்கள் என பிரசாதங்களால் எனது நெற்றி நிறைந்திருந்தது. ‘எம்பொண்ணு நல்லப்படியா பெத்து பொழைக்கணும்..’ அம்மாவின் சத்தமான வேண்டுதல் வலியை அதிகரித்தது. பயத்தில் கண்களை இறுக மூடியிருந்த  என்னை இனிமா கொடுக்க அழைத்துச் சென்றனர்.

பொங்கி வழிந்த வயிற்றோடு ஒருக்களித்து கால்களை முன்னும் பின்னுமாக்கி படுக்க சூடான சோப்புத் திரவம் எனக்குள் இறங்கியது. பிறகு கழிவறைக்கும் படுக்கைக்குமாக அலைந்தேன். ‘தண்ணி வழுக்கும்டீ.. பாத்து நட..’ முதுகில் ஒலித்த அம்மாவின் குரல் பலித்தால் தேவலாம் என்றிருந்தது. வலியோடு அவஸ்தைப்படுவதை விட குழந்தையோடு இறந்து போகலாம். கழிவறை கதவை மூடுவதற்குள் கால்களின் வழியே சிறுநீர் வழிந்தோடியது. வழக்கமாக இருப்பது போலின்றி சற்று பிசுபிசுப்பாக இருந்தது அது. நான் அம்மாவிடம் சொல்ல.. அம்மா நர்ஸிடம் அலற.. உடனே பச்சை அங்கிக்குள் நுழைக்கப்பட்டு ஸ்ரெச்சரில் கிடத்தப்பட்டேன். ஸ்ரெச்சரோடு பயணித்த என் கணவரின் பதற்றம் நிறைந்த விழிகள் என்னை கோபப்படுத்தியது. ‘இந்த பதட்டமெல்லாம் வயித்துக் கொழந்த நல்லப்படியா வெளிய வருணும்னுதான்..’ பொறுமலோடு கண்களை மூடிக் கொண்டேன். ஸ்டெச்சர் நகர்ந்தது. மனம் வெறிச்சோடியிருந்தது.

இதுதான் உள்நோயாளியாக எனது முதல் மருத்துவமனை அனுபவம். அறையின் தோற்றம் பயமுறுத்தலாக இருந்தது. பலியாடுகளாக கிடந்த மூவரோடு நானும் சேர்ந்ததில் நால்வராகிப் போனோம். அங்கிருந்த பெண் மருத்துவர் என்னை சோதித்து விட்டு ‘லேபர் பெயின் வர்ட்டும்.. வெயிட் பண்ணலாம்..” என்றபடியே எனது பச்சை உடுப்பை கீழே இழுத்து விடாமலேயே நகர்ந்தார். படுத்தவாறே குனிய முயன்றேன்.  “எழுந்திரிக்காதம்மா.. டிரிப்ஸ் போய்ட்டுருக்கல்ல..” என்றார் ஒரு நர்ஸ். பிறகு நான் கேட்டுக் கொண்டதன் போல் பட்டும்படாமலும் என் உடையை சரிப்படுத்தி விட்டு நகர்ந்தார். உடைப் பற்றிய பதற்றம் நீங்கியதில் மெல்ல கண்களைச் சுழற்றினேன். பக்கத்து படுக்கையிலிருந்த பெண் ஹீனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்தாள்.

நேரம் செல்ல செல்ல அந்தப் பெண்ணின் சத்தம் கூடிக் கொண்டேயிருந்தது. மரணத்தின் உச்சமே ஜனனம். மரணம் என்றால் அது மனதின் அந்தரங்க வலியாக இருக்கலாம். அல்லது உடல் வலியின் உச்சமாக இருக்கலாம். அல்லது நேரடி மரணமாகக் கூட இருக்கலாம். தத்துவார்த்தமான சிந்தனைகள் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது அந்நேரத்திலும். இம்மாதிரியான சிந்தனைகள் எனக்கு புதிததல்ல. எனது பள்ளிநாட்களில் அவ்வவ்போது நான் அள்ளி விடும் வசனங்கள் நீதிபோதனை வகுப்பில் என்னை முன்னிலைப்படுத்தும். பதினோராம் வகுப்பு படிக்கும் போது ஒருமுறை நீதிபோதனை டீச்சர் ‘உன் வயசு ஸிக்ஸ்டீனா.. ஸ்க்ஸ்டீயா..’ என்று கிண்டலடித்தார்.

பக்கத்து படுக்கைப் பெண் வலியில் எனக்கு சீனியர். அவள் அனுபவிப்பதையெல்லாம் இன்னும் சற்று நேரத்தில் நானும் அனுபவிக்க வேண்டும். வாழ்க்கையின் உச்சக்கட்டம். வலியின் உச்சக்கட்டம். பொறுக்கவியலாத வலியை பொறுக்க வேண்டிய கட்டாயம். பிளாஸ்டிக் பக்கெட்டும் கையுமாக அவசரமாக உள்ளே நுழைந்த இரு தாதிகள் பச்சைத்திரைக்குள் ஐக்கியமானார்கள். அந்தப் பெண்ணின் கால்களை இருவர் மடக்கி பிடித்திருப்பது தெரிந்தது. அவள் ஏதோ செய்ய பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அதற்குள் பொல்லாத வலி என்னை திசைத் திருப்பியது. வாய் விட்டு முனகினேன். நர்ஸ் என்னருகே வந்தார். ‘அடிவயித்துல வலி இறுக்கி புடிக்குதா..” என்றார். அப்படிதான் இருந்தது எனக்கும். “வலி வுட்டு வுட்டு வரணும்.. ரெண்டு நிமிஷத்துக்கொரு தடவை வந்து வந்து நின்னுச்சுன்னா பேபி வெளிய வர போவுதுன்னு அர்த்தம்..” வலியின் இறைச்சலுக்குள் மழலையின் குரல் மெலிந்து கேட்டது. அவளுக்கு குழந்தை பிறந்து விட்டது. ஆவலில் தலையை திருப்பிப் பார்த்தேன். அவளைச் சுற்றியிருந்த கூட்டம் குறையவில்லை. இடுப்புக்கு மேல் தான் தெரிந்தாள். பச்சைத்திரையை சற்றே நகர்த்தியிருந்தார்கள். நல்ல உணர்வுடன்தான் இருந்தாள். உடல் தொய்ந்து கிழிந்த நாராகி போனதை முகம் உள்வாங்கி களைப்பை வெளித்தள்ளியிருந்தது. குழந்தை இடைவிடாது அழுதது. அந்த ஒலி அவளை சலனப்படுத்தியிருக்குமோ.. தாங்க முடியாமல் அழுவாளோ.. முகத்தை உற்றுப் பார்த்தேன். சலனங்களற்றிருந்தது அந்த முகம்.

இரண்டு நிமிடத்திற்கு முன் விட்டு போயிருந்த அடி வயிற்றுவலி இப்போது மீண்டும் கவ்வி இழுத்தது. ‘அதே தான்.. அதே தான்..’ மனசு பயத்தில் சில்லிட்டது. “சிஸ்டர்.. சிஸ்டர்..” என்று கத்தினேன். நர்ஸ் வேகமாக வந்தார் என்னிடம். பழக்கப்பட்டுப் போன நிகழ்வாக நான் கால்களை விரித்துக் கொடுக்க “நாலு ஃபிங்கர் கேப் விட்டுருக்கு டாக்டர்..” என்றார் அவசரமாக.

இப்போது அவளிடமிருந்த பச்சைத்திரையை முழுவதும் நீக்கி என்னை நோக்கி நகர்த்தினர். நான் மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டேன். என்ன நடக்கிறது எனக்கு..? மறுத்து போயிருந்தது மனம். உடை மாற்றும் அறையிலோ குளிக்கும் அறையிலோ கூட இதுவரை யாரையும் அனுமதித்ததில்லை நான். கையறு நிலை என்பது இதுதானோ..? “முக்கு.. நல்லா ஸ்டெயிரன் பண்ணி முக்கு.. ம்.. அப்டி தான்.. ம்ஹும்.. பத்தாது.. இன்னும்.. இன்னும்.. இன்னும் பெட்டரா டிரை பண்ணு.. ம்ம்.. அப்டி தான்.. இன்னும் கொஞ்சம்.. இங்க பாரும்மா.. நீ கோவப்ரேட் பண்ணலேன்னா நாங்க ஒண்ணும் பண்ண முடியாது.. கால நல்லா விரிச்சு வக்கலேன்னா பேபி வெளிய வர முடியாது.. முக்கும்மா.. ஏற்கனவே பனிக்கொடம் ஒடஞ்சுடுச்சு.. லேட் பண்ணுனீன்னா பேபிக்கு ஸஃபகேட் ஆயிடும்..” மிதமாகவும் கோபமாகவும் கிரிக்கெட் கமெண்ட்ரி போல தொடர்ச்சியாக வந்த பெண் மருத்துவரின் குரல்கள் என்னை திக்குமுக்காட வைத்தன. சொன்னவைகளையெல்லாம் செய்தாலும் குழந்தை ஏன் வெளியே வரவில்லை..?  விரித்து பிடிக்கப்பட்ட என் கால்கள் வலியில் சோர்ந்திருந்தன. உடலின் கீழ்பாகம் முழுவதும் வலியால் சூழ்ந்திருந்தது. இந்த பிரசவத் தினத்தைக் குறித்து நான் கொண்டிருந்த பயங்கள் ஒன்றுக் கூட மிகையானதல்ல. ‘பிரசவம் ரொம்ப கஷ்டமானதுன்னா இத்தனைக் கோடி ஜனக்கூட்டம் எப்படி பெருகியிருக்கும்’ என்று எனக்கு நானே தேற்றி வைத்தவைகளெல்லாம் பொலபொலத்து உதிர்ந்துக் கொண்டிருந்தன.

சினிமாவில் கதாநாயகி கால்களை வலியில் அடித்துக் கொள்வாள். வேதனையில் துடிக்கும் அவள் முகத்தில் காமிரா படரும் நேரம் வீறிட்ட மழலை ஒலி எல்லா பின்னணி இசைகளையும் நிறுத்தி விட்டு தியேட்டர் முழுதும் எதிலொலிக்கும். வலிகளை மறந்து கதாநாயகி குழந்தையை வாரி அணைத்துக் கொள்வது என் மனக் கண்ணில் ஓடியது. என் பெரியப்பாவின் மகள் குழந்தையை பிரசவித்திருந்த போது அவளை பார்க்க போயிருந்தேன். அப்போது எனக்கு திருமணமாகியிருக்கவில்லை. அவளது ஒருநாள் வயதுடைய குழந்தையை என் பெரியம்மா கைகளில் ஏந்தியிருக்க அக்கா அவஸ்தையாக என்னை பார்த்து சிரித்தாள். இப்போதுதான் அந்த சிரிப்பின் அர்த்தம் எனக்கு புரிந்தது. வலிகளின் உச்சத்தை வென்று வந்த வேதனை சிரிப்பு அது. ‘நான் உங்கம்மாவ பெத்தெடுத்தது உங்க தாத்தனுக்கு கூட ரெண்டு நாளைக்கு பொறவுதான் தெரியும்..’ கூட்டுக் குடும்பத்திலிருந்த என் அம்மாச்சி எட்டாவதாக பெற்றிருந்த என் அம்மாவை பற்றி பேசியது இந்த நேரத்திலும் நினைவிற்கு வந்து ஆச்சர்யப்படுத்தியது.

“அப்டிதான்.. இன்னும் ஒரு தடவ.. அவ்ளோ தான்.. குட்..” பேசிக் கொண்டே இருந்த மருத்துவர் திடீரென வெகு உன்னிப்பானார். உடல் முழுவதும் வலி ஆக்கிரமித்த நேரம். என்னுள்ளிருந்து ஏதோ உருவப்பட்டது போன்ற உணர்வு. உடலை அசைக்கவியலாத நிலையில் பார்வையை மட்டும் திருப்பினேன். மருத்துவரின் கைகளுக்குள் உடலெங்கும் வெள்ளையும் சிவப்புமாக படிந்திருந்த அந்த சின்னஞ்சிறு உருவம் குறித்து மூளையில் உறைக்க எனக்கு சில நொடிகள் பிடித்தது.  ‘விடுதலை.. விடுதலை.. விடுதலை..’ மௌனமாக பாடியது மனம். வீறிட்டு அழுத குழந்தையை ஏந்திக் கொண்டு நகர்ந்தார் ஒரு நர்ஸ். குளிப்பாட்ட சென்றிருப்பாராக இருக்கும். எனது பெட்டில் தொங்கிக் கொண்டிருந்த எனது கேஸ் ஷீட்டில் குழந்தை பிறந்த நேரத்தை பதிவு செய்தார் ஒரு நர்ஸ். எனக்கு என்ன நடக்கிறது என்பது எனக்கே தெரியாத நிலை. நேரடி வலியின் வீச்சு நின்றிருந்தாலும் உடல் முழுக்க வலியும் உதிரமுமாக அவஸ்தை கூடியிருந்தது. தாதி ஒருத்தி அடிவயிற்றை மசாஜ் செய்வது போல அமுக்கியதில் அடிவயிறு வலித்தது. என் வலியையோ அவஸ்தையோ சட்டைச் செய்யாதவளாக கடமையே கண்ணாக இருந்தார் அந்த தாதி. இறுதியாக கட்டி கட்டியாக உதிரம் நிறைந்த வாளி என் படுக்கைக்கு கீழிருந்து அகற்றப்பட்டது. உதிரப்போக்குக்கு நாப்கின் வைக்கப்பட்டது. இரத்தக்கறை படிந்த எனது நீள அங்கிப் போன்ற உடை நீக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த எனது நைட்டி அணிவிக்கப்பட்டது. என்னிடமிருந்த சகலமும் என்னிலிருந்து பிடுங்கப்பட்டு முற்றிலும் மற்றவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த எனக்கு கையில் என்னவோ கட்டப்பட்டது. திருப்பிப் பார்த்தேன். சின்ன டோக்கன். எனக்கும் பேபிக்கும் மூன்றாம் எண் டோக்கன். குழந்தை மாறிவிடாதிருக்க. பூஞ்சையாய் கிடந்த தேகத்தை இரண்டு பேராக சேர்ந்து  மெதுமெதுவாக ஸ்டெரச்சருக்கு மாற்றினார்கள். ஊண்சத்தற்ற உடல் போல சக்கையாக உணர்ந்தேன்.

ஸ்ரெச்சர் லேபர் வார்டை விட்டு வெளியே நகர்ந்தது. யாரையும் பார்க்க ஆவலின்றி கண்களை மூடிக் கொண்டேன். ஆதரவாக அம்மா தலையை கோதுவது தெரிந்தது. சின்ன விசும்பல் சத்தம். அம்மா அழுகிறாள் போல. ‘ரொம்ப கஷ்டப்பட்டுட்டா எம்பொண்ணு..’ அவளின் வாய் முணுமுணுத்தது. கணவனின் விழிகள் குழந்தையை தேடியிருக்கும். ஸ்ரெச்சரின் வீல்கள் வளைந்தன. அறைக்குள் நுழைகிறேன் போலும்.

சுடுநீரில் துடைக்கப்பட்ட உடலும் இதுவரை அனுபவித்த வலியும் துாங்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கியது எனக்கு. அம்மா அழைத்துக் கொண்டேயிருந்தாள். பிரயத்தனப்பட்டு லேசாக விழித்துப் பார்த்ததில் சூழ்ந்திருந்த அனைவரும் வேற்றுக்கிரகவாசிகளாய் தெரிந்தனர். அல்லது நான்தான் இறந்து வேற்றுக்கிரகத்திற்கு வந்து விட்டேனா..? எதுவும் விளங்கவில்லை. ‘சமுதாயமானது தாய்மையை புனிதப்படுத்தி பெண்களை வாய் மூடி மௌனிகளாக்கி மிக சரியாக காய்களை நகர்த்தி மாறாத வெற்றியை தக்க வைத்துக் கொண்டே வந்துக் கொண்டிருக்கிறது. அதன் மிகச்சமீபமான பலி நான்..’ என்று கறுப்பு அங்கியோடு கோர்ட்டில் வாதிடும் போது நான் எழுப்பப்பட்டேன். சிறு அசைவு கூட எனக்கு சாத்தியப்படவில்லை என்பதை அப்போது தான் உணர்ந்தேன்.

“ஏன் இவ்ளோ கும்பல்.. எல்லாரும் கௌம்புங்க..” அதட்டியப்படியே உள்ளே நுழைந்த நர்ஸ் அதே அதட்டலோடு “எழுந்திரிம்மா.. பேபிக்கு பால் குடுக்கணும்..” என்றார். தலையணையில் சாய்ந்து அமர வைக்கப்பட்டேன். குழந்தையை மார்போடு ஏந்துகையில் வலுவின்றி கை நடுங்கியது. அம்மா உதவினாள். “நீங்க நவுருங்கம்மா.. அவளுக்கு பழக்கப்படுத்தணும்..” நர்ஸ் வெகு இயல்பாக குழந்தையை துாக்கி என் கைகளில் வைத்தாள். அவள் சர்விஸில் என்னை போல ஆயிரம் பேரை பார்த்திருந்த அனுபவம் அதில் தெரிந்தது.

“இங்க பாரும்மா.. இத்தன மாசம் சுமந்தது பெருசில்ல.. பெத்ததும் பெருசில்ல.. வளக்கறதுதான் பெரும்பாடு.. குழந்தைக்கு சரியான நேரத்துக்கு பால் குடுக்குணும்.. பசின்னாலும் அதுங்க அழுவும்.. எறும்பு கடிச்சாலும் அழுவும்.. வயித்த வலிச்சாலும் அழுகைதான்.. பேபி எதுக்காக அழுவுதுன்னு நமக்குதான் தெரியணும்.. அழுவாம துாங்கிட்டே இருந்தாலும் அப்டியே விட்டுடக் கூடாது.. எழுப்பி விட்டு பால் கொடுக்கணும்.. பால் குடிக்கும் போதே கூட அதுங்களுக்கு துாக்கம் வந்துடும்.. வாய் வைக்க தெரியாம அல்லாடுங்க.. பால் மூக்குல ஏறிக்காம கவனமாக இருக்கணும்..” ஒப்பிப்பது போல சொல்லியப்படியே நைட்டியை விலக்கினாள். இப்போது உடலின் மேல்பகுதி என் கட்டுப்பாட்டிலிருந்து விலகியிருந்தது. சிறிய சதைக்குவியலில் ஒரு கோடு போலிருந்தது அதன் வாய். குழந்தைக்கும் என்ன செய்ய வேண்டும் என புரியவில்லை. எனக்கும் என்ன செய்ய வேண்டும் என விளங்கவில்லை. நர்ஸின் அனுபவம் வென்றதில் குழந்தை வீறிட்டு பின் எதையோ சப்பி விட்டு துாங்கி போனது. நர்ஸ் கிளம்பிய பிறகு  “அப்டியே மருமகன்மாதிரியே இருக்குதுடீ புள்ள..” என்றாள் அம்மா. அதுவரைதான் நினைவிருந்தது. பிறகு நானும் துாங்கிப் போனேன்.

யாரோ எழுப்பியது யுகங்களை கடந்து மீண்டது போலிருந்தது.  “புள்ளக்கு பசி வந்துருக்கும்.. பால் குடும்மா..” என்றாள் அம்மா. கண்களை திறக்க முடியாத அசதி. குழந்தையை என்னருகே படுக்க வைத்தாள். “கண்ண தொறந்து பாத்து பால் குடுடீ.. மூக்குல ஏறிக்கும்..” திறக்க முடியாதிருந்த கண்களை யாருடைய வருகையோ திறக்க கட்டாயப்படுத்தியது.

இரு வீட்டு ஆட்கள்.. தோழர்கள்.. அக்கம்பக்கத்தோர் என யாரோரோ வந்தபடியே இருந்தனர். ‘பால் குடுக்குறா.. குடுத்தவொடன கூப்டுறன்..” அம்மா சமாதானப்படுத்தும் போது ‘அவங்கள அப்டியே போக சொல்லும்மா.. நான் துாங்கணும்..” என்று சொல்லத் தோன்றியதை அடக்கிக் கொண்டேன். ஆண் உறவினர் மருத்துவமனை செலவுக் கணக்கு கேட்பதும் பெண்கள் அறையை நோட்டமிடுவதும் பிறகு குரலை தழைத்துக் கொண்டு ‘பால் இருக்குல்ல..’ என்று கேட்பதும் எரிச்சலாக இருந்தது. ‘எல்லாரும் வெளிய போய் தொலைங்க.’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. அம்மா கைத்தாங்கலாக பிடிக்க செருப்பணிந்த கால்களுடன் ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வந்தேன். அதற்குள் யாரோ வந்திருந்தார்கள். அப்படியே செருப்பைக் கழற்றி அடித்து விடலாமா என்று தோன்றிய எண்ணத்தை கஷ்டப்பட்டு உள்வாங்கிக் கொண்டேன். அத்துமீறிய அலுப்பில் சற்று கண்ணயறும் அம்மாவை அங்கிருந்த டி.வி ரிமோட்டால் துhக்கி அடிக்க வேண்டும் போலிருந்தது. எங்கு பார்த்தாலும் வெறுமை. யாருமற்ற தனிமை என மனசு ரணக்களமாகியிருந்தது. “ஏன்டீ.. பசிக்குதாடீன்னு தான கேட்டேன்.. அதுக்கு ஏன் இப்டி சள்ளுபுள்ளு வுளுவுற..?” அம்மாவுக்கு சமயங்களில் கோபம் வந்து விடும். துாங்கும் தனது வாரிசைப் பார்த்துக் கொண்டேயிருப்பதும் பார்க்க வருபவர்களை கவனித்துக் கொள்வதுமாக என் கணவரின் நேரங்கள் பிஸியாகவே கழிந்ததில் மூன்று நாட்கள் கடந்தது.

வீடு ஆரத்தி எடுத்து வரவேற்றது. தொட்டில், புதிதாக வாங்கிய டேபிள்ஃபேன், மாற்றம் செய்யப்பட்ட கட்டில்,  என் படுக்கைக்கு அருகே உருவாக்கப்பட்ட புதிய சிறிய படுக்கை என வீடே மாறியிருந்தது. விதவிதமான ருசியற்ற உணவுகள் அதிகமான கட்டுப்பாடுகள் புதிதாக பிறந்திருக்கும் பொறுப்பு இவைகள் எனது தனிமையின் அளவை கூட்டிக் கொண்டே போயின. படுத்தே கிடந்ததில் சற்றே ஊதிப் போயிருந்த என் முகம் மற்றவர்களின் பார்வையில் தாய்மையின் பூரிப்பாக தெரிந்தது. ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைந்த கணவர் பொறுப்பை மாற்றி விட்ட திருப்தியில் குழந்தைக்கான விளையாட்டு சாமான்களை சேகரிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அம்மா குழந்தைக்கான சவரட்டணையில் முழ்கிப் போனாள். குழந்தையை எடுத்துக் கொடுக்க.. பால் குடித்தப்பிறகு துாளியில் போட.. பத்திய சாப்பாடு சமைக்க.. குழந்தையை குளிப்பாட்ட.. உறை மருந்து ஊற்ற.. என அம்மா பிஸியாகி விட சூழ்ந்து நின்ற தனிமை எரிச்சலைக் கூட்டியதில் தொட்டதெற்கெல்லம் எழுந்து விழ ஆரம்பித்தேன்.

ஒரு வாரம் ஓடி விட்டிருந்தது. குழந்தையை குளிக்க வைத்து என்னருகே படுக்க வைத்தாள் அம்மா. “நைட்டி ஸிப்ப இழுத்து வுடுடீ.. புள்ளப் பெத்த மாரு.. ஒருத்தரு கண்ணுப் போல இருக்காது.. திருஷ்டிப்பட்டுப் போச்சுன்னா பால் கட்டிக்கும்..” இயல்பாக சொல்லி விட்டு அம்மா சமையலறைக்கு சென்று விட்டாள். கூச்ச சுவாபியான எனக்குதான் அதிர்ச்சியாக இருந்தது.

‘புள்ள துாங்குதுன்னு பேசாம இருந்துடாதடீ.. கால சுண்டி விட்டு பால் குடு.. புள்ளக்கு பசி வந்துடும்..” கிச்சனிலிருந்து குரல் கொடுத்தாள் அம்மா. குழந்தையைப் பார்த்தேன். உடல் முழுவதும் பவுடர் வாசத்துடன் நெற்றியிலும் கன்னத்திலும் வைக்கப்பட்ட திருஷ்டிப் பொட்டுமாக துாங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டாற் போல் துாக்கத்திலேயே சிரித்தது. அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. குழந்தையின் வலது உள்ளங்காலை மெதுவாக நிமிண்டினேன். எழுந்துக் கொள்ளவில்லை. திரும்ப திரும்ப சீண்டியதில் நான் படுத்திருந்த பக்கம் திரும்பியது. அதன் பிஞ்சுக் கை எதையோ தேடி அலைந்து பிறகு எனது நைட்டியை பற்றிக் கொண்டது.

குழந்தையை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்.

“தல நிக்காத புள்ளடீ.. பாத்து..” என்றாள் அறைக்குள் நுழைந்த அம்மா.

***

மஞ்சுக் குட்டி

கலைச்செல்வி

sometimes__when_i_m_alone_in_my_mind_by_narcissagrey-d736dtd

இரு பக்கமும் காதுகள் வைத்த சில்வர் அண்டா நிறைய பிரியாணி இருந்தாலும் அளவு தட்டில் கூம்பாக எடுத்து கரண்டியால் வழித்து விடும் போது பாதி மீண்டும் அண்டாவுக்குள் விழுந்து விடுகிறது. தட்டில் இருந்த பிரியாணியை சதுரமாக வெட்டப்பட்ட செய்தித்தாளின் மீது வைக்கப்பட்ட சருகு இலையில் கொட்டி கவிழ்த்த போது ஜிவ்வென்று எழுந்த வாசம் நாசிகளை சுண்டி இழுத்தது. எந்த கவனமும் எடுத்ததாக தெரியவில்லை. ஆனாலும் பொட்டலத்தில் கோழியின் எலும்பு பகுதி எடுத்து சாப்பிட தோதாக ஸ்பூன் போல வைக்கப்பட்டு இருந்தது. கொதிக்கும் பிரியாணியில் அமிழ்த்தி வைக்கப்பட்ட முட்டை பருக்கையின் வடிவத்தை உள் வாங்கி கொண்டது.. ஏற்கனவே கட்டப்பட்ட தாள்ச்சாவில் ஒரு பாக்கெட்டும் வெங்காய பச்சடியில் ஒரு பாக்கெட்டையும் அனிச்சையாக எடுத்து போட்டு பிரியாணி கவரை அவனிடம் நீட்ட, அவனும் நுாறு ரூபாய் தாளை நீட்டிக் கொண்டே கவரை வாங்கினான். தெருவோர கடை அது. “ஒண்ணு போதுமா.. இன்னொன்னு கட்டுட்டுமா..”

வழக்கமாக இந்த வாசத்துக்கு இன்னொன்னு கட்டு என்பான். இன்று சாப்பிடும் உடல்நிலையில் இல்லை. வயிறு பிரட்டிக் கொண்டிருக்கிறது. ஒண்ணு போதும்.. சொல்ல வாயெடுத்தான். அலைபேசி ஒலித்தது. அவள்தான்.

”ஆங்.. என்னாது..?”

”குமாரு வந்துருக்கான்.. காசு நாளக்கு தாரேன்னுட்டு இன்னொன்னு கட்டிக்க..”

”காசெல்லாம் இருக்கு..”

”நுார்றுவா தான குடுத்தேன்.. நீ சாப்புடுல..”

”எனக்கு வேணாம்.. வவுறு கொடயறாப்பல இருக்கு.. கஞ்சி எதுனா போட்டுக் குடேன்..”

கஞ்சியெல்லாம் போட்டுக் கொடுக்க மாட்டாள் என்று தெரிந்தும் கேட்டான்.

”சும்மா கெடக்கன் பாரு..” நொடித்தாள். அவள் எப்போதும் சும்மாயிருப்பதில்லை. சில சமயங்களில் சுமந்தும் கொண்டிருப்பாள் என்பது அவனுக்கு தெரியும்.. எப்போதாவது குரூப் ஆர்டிஸ்ட் வாய்ப்பு கிடைக்கும். கவரிங் நகை செட் வாடகைக்கு விடுவாள். அந்த நகை செட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் முதலீடு போட்டது கூட அவன்தான். மனைவி காந்திமதி சிறுவாடாய் சேர்த்து வைத்த தொகை அது. வாயிலும் வயிற்றிலும் அறைந்துக் கொண்டு கதறுவாள் என்பது அவனுக்கும் தெரியும். ஆனாலும் அவனால் எடுக்காமல் இருக்க முடியவில்லை. எப்படியோ பாடுபட்டு பிள்ளைகளை வளர்த்திருப்பாள். பிறந்தது மூன்றுமே ஆண்பிள்ளைகள். ஐந்தும் நான்கும் ஒன்றுமான வயதிலிருந்தன இவன் அவர்களை விட்டு பிரியும் போது. இப்போது பெரியவனுக்கு பனிரெண்டு வயதிருக்கும். தாயுடன் கட்டட வேலைக்கு செல்ல தொடங்கியிருப்பான். நடுவுள்ளவனும் பதினோரு வயதிலிருப்பான். தகப்பனை போல வளர்த்தியான பிள்ளைகள். காந்திமதி அவனையும் தன்னோடு வேலைக்கு அழைத்து சென்றிருப்பாள். வீட்டை விட்டுக் கிளம்பும் போது இவன் தான் எப்பா போவதப்பா.. போவதப்பா.. என்று கதறினான். காந்திமதி கல்லால் அடித்து வைத்தது போல சமைந்திருந்தாள்.. தடுக்கவுமில்லை..கதறவுமில்லை.

குருவிக்கூடு போலெல்லாம் ஒன்றி வாழ்ந்தவர்களில்லை என்றாலும் இப்படி ஓரேயடியாக பிரிந்தும் வந்ததில்லை. மஞ்சுளா என்ற பெயரே அவனை கவரப் போதுமானதாக இருந்தது. பார்த்திபன் ஒரு சினிமாவில் ரம்பாவுக்கு குழி பணியாரம் கொண்டு வந்து நீட்டுவாரே.. அது மாதிரியான ஒரு பரவச நிலையில்தான் இருந்தான் இவனும். இத்தனைக்கும் மஞ்சுளா குரூப் டான்சர்களில் ஒருத்தி. தாயும் மகளுமாக வந்திருந்தார்கள். இருவருமே டான்சர்கள்தான். மஞ்சுளா இருபத்தைந்திலிருந்து முப்பது வயதிற்குள்ளிருந்தாள். மாநிறமான உடல். கல் மாதிரி தேகம். முன்னழகுக்கு பிரத்யேக ஒப்பனைகள் செய்வதில்லை என்பது அவளுடன் நெருங்கி பழகிய பிறகு தெரிந்தது. நல்ல உயரமாக இருப்பாள். அதனாலேயே நடனங்களில் பின் வரிசையில் இருக்க வேண்டிய கட்டாயம்.

மலையடிவார கிராமம் அவனுடையது. ஊரில் அவ்வப்போது படப்பிடிப்புகள் நடக்கும். .அதில் அத்தனை ஆர்வம் இருப்பதில்லை அவனுக்கு. சைக்கிள் கடை வைத்திருந்தான். அவனிடம் வாடகைக்கு சைக்கிள் எடுக்க வந்த பையனுடன் இவளும் வந்திருந்தாள். “வெய்யிலு இம்மாம் கொளுத்துது.. ஆனா ரவக் கூட வேக்லியே..” என்றாள் அவனிடம் பழகியவள் போல. ”மல பக்கம்ல்லாம் அப்டிதான இருக்கும்.. பச்சப்புள்ளயாட்டம் கேக்கறக்கா..“ என்றான் கூட வந்தவன். பத்து சைக்கிள்கள் இருந்தது அவனிடம். மொத்தமாக ஆறு நாள் வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். இரண்டு மடங்கு வாடகை தேறிய சந்தோஷத்தில் இருவருக்கும் டீ வாங்கிக் கொடுத்தான். மலை வாழைப்பழம் கொடுத்தான். மலம் இறுகலாகப் போகிறது. என்பதால் காந்திமதி மதிய உணவோடு கொடுத்தனுப்பியிருந்தாள். வாழைப்பழத்தை தின்று விட்டு சதைப் பற்றான தோலை நகத்தால் வழித்து சாப்பிட்டாள் மஞ்சுளா. “எக்கா.. அதுக்கெல்லாம் கொரங்கு இருக்கு.. பூரா தோலயும் நீயே தின்னுடாத..“ கிண்டலடித்தான் பையன். “அப்டியா… தோலெல்லாம் கொரங்கு சாப்டுடுமா..” என்றாள். தெரிந்த விஷயத்தை புதுசு போல கேட்பதை வைத்து இவளை விவரமில்லாதவள் என்பதா.. பேரம் பேசி சைக்கிளுக்கான முன் பணத்தை கணக்காக எண்ணி வைத்ததில் விவரமானவள் என்பதா என்று கணிக்க முடியவில்லை அவனால். காதின் முன்புறம் வழியே சுருண்டிருந்த முடி அவள் முகத்துக்கு களையைக் கூட்டியது. சற்றே விலகியிருந்தது தெரிந்தும் சேலையை இழுத்து விட்டுக் கொள்ளவில்லை. தாழ்வாக படர்ந்திருந்த மரக்கிளையின் இலையொன்றின் நுனியைக் கிள்ளி காற்றில் பறக்க விட்ட நேரத்தில் அவள் மீது காதல் கொண்டான்.

”பிரியாணி வாங்கியார எம்மா நேரமாக்குவே..?” மஞ்சுளா அலைபேசியில் கடிந்துக் கொண்டாள். எப்போதும் சிடுசிடுப்பாகதான் பேசுவாள். உடம்பு காந்துவது போலிருந்தது அவனுக்கு. கஞ்சியோ ரொட்டியோ வயிற்றை நிரப்பிக் கொண்டு அப்படியே காய்ச்சலில் மல்லாந்து விடுவது ஒரு சுகம். மஞ்சுளாவிடம் வந்து சேரும் வரை அவனது காய்ச்சல் காலம் அப்படிதான் கழிந்தது. இருப்பது ஒரே அறை. அதை மஞ்சுளாவும் குமாரும் நிறைத்திருப்பார்கள். வாசற்படியில் உட்காரலாம்தான். மஞ்சு.. மஞ்சு.. என்று குமார் குழைவது எரிச்சலாக வரும். குமாரை அவளுக்கு பிடிக்காது என்றாலும் ஒன்றிரண்டு பட வாய்ப்புகள் அவனால் வருவதால் அவனை தவிர்க்க முடிவதில்லை.

”மஞ்சு..” அவனின் குரலுக்காக காத்திருந்தவள் போல விரைந்து வந்தாள் மஞ்சுளா. நீட்டிய பையை வாங்கும் போது அவன் கையின் சூடு தெரிந்தது. ஆனாலும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

”காசிருந்தா குடு.. டீயும் பன்னும் வாங்கிக்கிறேன்.. வாயி நரவலா கெடக்கு..” என்றான்.

”காசு.. காசு.. புடுங்கியெடு..” கோபமாக உள்ளே சென்றாள்.

மஞ்சுவுக்கு பூஞ்சை உடம்பு. அடிக்கடி முடியாமல் போய் விடும். சீசனுக்கு வருகிற சாதாரணக் காய்ச்சல் கூட அவளுக்கென்றால் ஆரவாரமாகதான் வரும். மஞ்சள்காமாலை வந்த போது பிழைத்தெழுவாள் என்ற நம்பிக்கையே அற்று போய் அழ தொடங்கி விட்டான். தெரிந்த.. தெரியாத இடமெல்லாம் அலைந்தும் பைசா பெயரவில்லை. கந்து வட்டிக்கு கடன் வாங்க போக வட்டிக்காரன் கை கால்களை முறித்து அடைத்து போட்டு விட்டான். மஞ்சுவோ தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என ஒதுங்கி கொண்டாள். அந்த கடனுக்குதான் இன்னும் ஓட்டல்காரனின் உழைக்க வேண்டியிருக்கிறது.

ஓட்டல் கடையில் விறகு பிளந்து தருவான். அல்லது மூன்று சக்கர வண்டியில் மாவு அண்டாக்களை வைத்து ஓட்டிக் கொண்டு வருவான். தண்ணீர் எடுத்துத் தருவான். மரக்கட்டைகளை லாரியிலிருந்து இறக்கி அடுக்குவான். சிலசமயங்களில் சாக்கடை அடைத்துக் கொண்டால் உள்ளிறங்கி அடைப்பை எடுத்து விடவும் தயங்குவதில்லை. காந்திமதி பார்த்தால் உயிரையே விட்டு விடுவாள் என்று அப்போதெல்லாம் தோன்றும் அவனுக்கு. காந்திமதி பெற்றோருக்கு ஒரே மகள். சிறு வயதிலேயே தகப்பன் இறந்து விட அண்ணன் மகனுக்கு மகளை கொடுத்து விட்ட திருப்தியில் காந்திமதியின் அம்மாவும் போய் சேர்ந்து விட்டாள். அவளின் சேமிப்புதான் அவனுக்கு சைக்கிள் கடை வைக்க உதவியது. குடியிருக்கும் ஓட்டு வீடும் அவளுடையதுதான். மருமகன் கோர்ட் ஆபிசுக்கு முன் அமர்ந்து வாடகை தட்டச்சுப் பொறியில் தட்டச்சு செய்வது அவளுக்கு அத்தனை பெருமையாக இருக்கும். பரம்பரையிலேயே இல்லாத வழக்கமாய் மருமகன் பத்தாவது பாஸ் பண்ணி தட்டச்சு கற்றுக் கொண்டது குறித்தும் முதல் வாரிசே பேரனாக பிறந்தது குறித்தும் பெருமைப்பட்டுக் கொண்டே நிறைவாக இறந்து போனாள்.

காலி சருகுகளை வெளியே வீச வரும்போது இவன் இன்னும் அங்கேயே உட்கார்ந்திருப்பதை பார்த்தாள் மஞ்சுளா. “உசுர வாங்கன்னே வந்து சேந்துருக்க..” முனகிக் கொண்டே உள்ளே சென்றவள் இருபது ரூபாய் தாள் ஒன்றை எடுத்து வந்தாள். குமாரிடம் வாங்கியிருக்கலாம். “இந்தா.. பன்னு வாங்கி தின்னுட்டு எங்கயாவது இருந்துட்டு வா..” என்றாள். இந்த மாதிரி சமயங்களில் இவனே கௌரவமாகதான் நடந்துக் கொள்வான். இன்று உடம்பு அத்தனை துாரம் ஒத்துழைக்கவில்லை.

”வாபார டயத்துல இங்ஙன ஒக்காரதேங்கிறேன்ல்ல..” நீளமான வாசற்படிக் கொண்ட பழைய காலத்து காபிக் கடை. காலத்திற்கேற்ப டைல்ஸ் பதித்து டேபிள் சேர் பளபளப்போடு ஓட்டல் கடையாக மாறியிருந்தது.

ஓட்டல்காரரின் சத்தம் கேட்டு சுதாரிப்பாய் எழுந்தான். மூன்று நாளைய தாடி என்றாலும் சற்று அதிகமாகவே இருந்தது. நாற்பதை தாண்டவில்லை. அதற்குள்ளேயே கண்கள் உள்ளோடி கிடந்தன. அளவுக்கதிகமான உயரம் கொண்ட நாசியும் சிரிப்பது போலவே தோற்றமளிக்கும் அதரங்களும் ஒழுங்கற்றிருந்த மீசை முடிக்குள் பொலிவை இழந்திருந்தன. பவிசோடு இருந்திருந்தால் உடலின் வெண்மை நன்றாகவே பளிச்சிட்டிருக்கும்.

”ஓரமாதானே குந்தியிருக்கன்..” என்றான். கண்கள் கதகதப்பாக இருந்தன. மஞ்சுவோடு தனிக்குடித்தனம் வந்த அன்று பாய்.. தலையணை.. வாளி.. சமையல் பாத்திரம் என துாக்கு சுமைகளை இந்த படிக்கட்டில்தான் இறக்கி வைத்திருந்தான். அன்று மொத்தம் பனிரெண்டு பேருக்கு டிபன் வாங்கிக் கொடுத்தான்.

”பின்னால போய் ஒக்காந்துக்க..” என்றான் ஓட்டல்காரன் சற்று கரிசனமாய். இவனோடு நெருக்கமாகதான் பழகுவான். வியாபாரம் மந்தமாகிப் போனால் இவனிடம் புலம்ப கூட செய்வான். என்றாவது ஒருநாள் ஓசி டீ கொடுப்பான். ஆனால் வியாபாரம் என்று வந்து விட்டால் ஆள் கறார்தான். ஒருமுறை காந்திமதி எப்படியோ தேடி பிடித்து இந்த ஓட்டலுக்கு வந்து விட்டாள். சாயங்கால சமையலுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதிய நேரம் அது. கொத்தோடு அவன் சட்டையை இழுத்து பிடித்துக் கொண்டு நின்றவளை பார்த்ததுமே புரிந்து போனது எல்லோருக்கும். வாய் வார்த்தையாக பேசாமல் படாரென அவள் கையை உதறிக் கொண்டு ஓடினான் இவன். துரத்திக் கொண்டே ஓடி போய் அவனை இழுத்து வந்தாள். கல்லுளிமங்கனாய் நின்றவனிடம் பேசி அலுத்த ஒரு தருணத்தில் கழுத்தில் கிடந்த மஞ்சள் துண்டு கோர்த்த மஞ்சள் கயிற்றை கழற்றி வீசினாள். அவன் தலையை நிமிரவேயில்லை.

அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் வந்தாள் காந்திமதி. இந்த முறை அவன் வீட்டில் இருந்தான். ஆவேசமாக கத்தியதில் காந்திமதிக்கு மூக்கிலிருந்து தண்ணீர் வழிந்தது. இந்த முறையும் மஞ்சள் கயிறை கழற்றி வீசினாள். மண்ணை வாரி இறைத்து விட்டு கதறிக் கொண்டே போனாள். இத்தனை சத்தத்திற்கும் மஞ்சுளா வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. அதற்கு பிறகு காந்திமதியும் அவனை தேடி வரவேயில்லை.

இரவு மணி எட்டை தொட்டிருந்தது. சப்ளையர் ஒருவன் பராசிட்டமால் மாத்திரையும் டீயும் கொடுத்தான். சட்டையில் கிடந்த அலைபேசி அலற பிரயத்தனப்பட்டு எழுந்து உட்கார்ந்து எடுத்தான். “நாளக்கு வெளியூர்ல சூட்டிங்கு இருக்கு.. ராத்திரி பன்னெண்டு மணிக்கு பொறப்புடுணுமாம்.. செத்த கண்ணசந்தாதான் ஒடம்பு தோதுப்படும்.. வாரதுன்னா சீக்ரம் வந்து சேரு.. கதவ சாத்தீட்டு படுக்கப் போறேன்..” என்றாள். அவளை நம்ப முடியாது. பொய்யை கூட நிஜம் போலவே சொல்வாள்.

ஆனாலும் அவளை நினைத்தால் பாவமாக இருந்தது அவனுக்கு. வெளியூர் படப்பிடிப்பு என்றால் சில சமயம் ஒரு வாரம் கூட ஆகி விடும். “ஒடம்பெல்லாம் அடிச்சு போட்டப்பல இருக்கு..“ என்பாள். சுடுதண்ணீர் விளாவித் தருவான். குளித்து முடித்து வருபவளுக்கு ஆட்டுக்கால் சூப் வாங்கி தயாராக வைத்திருப்பான். தலையை ஈரம் போக துவட்டி விடும் போதே அவளின் நெருக்கம் தேவைப்படும் அவனுக்கு. அப்போது மஞ்சுக்குட்டி என்று அழைப்பான். அவளும் மறுப்பு சொல்வதில்லை. அன்றுதான் புதிது என்பது போன்ற ஆவேசம் இருக்கும் இருவரிடமும். எப்போதாவது எழும் மகன்களின் நினைப்பு கூட மஞ்சுக்குட்டியின் அணைப்பில் பஸ்பமாகி விடும்.

மகாராணியின் தோழிப் பெண்ணாக வேடம் கிடைத்த தனது தோழி ஒருத்திக்கு மஞ்சுளா நகையை வாடகைக்கு விட போக கொத்தாக எங்கோ தொலைத்து விட்டு நின்றாள் அந்த பெண். சண்டையில் மண்டை உடைய பாதிக்கு பாதி பணம் தேறியது. அதுவும் பிரியாணி தின்றே தீர்ந்து போனது. சம்பாதிக்கும் பணத்தை அப்படியே அவளிடம் கொடுத்து விடுவான். இன்று அவள் கொடுத்த நுாறு ரூபாய் கூட நேற்று முன்தினம் அவன் கொடுத்ததுதான். அவனுக்கு குடிப்பழக்கம் இல்லாதது இருவருக்குமே வசதிதான். ஆனால் அவளுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவன் நிறைய சம்பாதிக்க வேண்டியிருந்தது.

தட்டு தடுமாறி வீட்டுக்கு செல்லும் போது குளித்து முடித்து புத்துணர்வோடு இருந்தாள் மஞ்சுளா. இப்போதுதான் குமார் சென்றிருப்பானாக இருக்கும். தலையில் ஈரத்துண்டோடு “எனக்கு துாக்கம் வருது.. எங்க போய் தொலஞ்ச..“ என்றாள் கோபமாக. குளித்திருந்தாலும் குடி நாற்றம் மிச்சமிருந்தது. பரோட்டா வாங்கி சாப்பிட்டுருப்பாள் போல. தீர்ந்து போன பார்சல் கவர்கள் அங்கேயே கிடந்தன. அதை அப்படியே அள்ளிக் கொண்டு வந்து தெருவில் எறிந்தான். பிறகு வலதுகையை நீட்டி அதன் மீதே தலையை சாய்த்துக் கொண்டு படுத்துக் கொண்டான். உடல் அசந்திருந்தாலும் கை கால்கள் முறித்தெடுத்ததில் துாங்க இயலவில்லை.

தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து அங்கிருந்து நாற்காலியில் எறிந்துவிட்டு புளிச்.. புளிச்.. என்று தட்டினாள். அவன் மீது நீர் தெளித்ததில் கண்களை சுழித்து முகத்தை மறுபக்கமாக திருப்பிக் கொண்டான். கிளிப்புக்குள் முடியை அடக்கிக் கொண்டாள். பானை மீது கவிழ்த்திருந்த டம்ளரை எடுத்து அதில் பாட்டிலில் மீதமிருந்த சரக்கை ஊற்றினாள். சிறிது தண்ணீரை எடுத்து அதில் கலந்து வாயில் சரித்துக் கொண்டாள். கைகளை ஊன்றி மண்டியிட்டுக் கொண்டே அவனிடம் வந்து ஒருக்களித்து கிடந்த அவனின் இடுப்பில் தலையை சாய்த்துக் கொண்டாள். இடது கை அவன் தோளை அணைத்துக் கொண்டது. வலது கையால் காலருக்குள் கை விட்டு கழுத்தைத் தொட்டாள்.

”ரொம்ப சூடாருக்கு.. டாட்டருட்ட போவமா..?” என்றாள் சற்றே குளறலாக.

”மாத்தர போட்டுருக்கன்..” என்றான். அனிச்சையாக இடது கையை அவள் மீது படரவிட்டான். அவள் அப்படி கவிழ்ந்திருந்தது உடல் வலிக்கு இதமாக இருந்தது.

”கட்டங்கடசீல ஒம் பயலுவ இருக்கானுங்க ஒன்ன பாத்துக்க..” என்றாள்.

”ஆமா.. நாந்தேன் வளத்தேன் பாரு.. அவனுங்க என்ன பாத்துக்க..” என்றான்.

”வளக்காட்டீ.. நீ தகப்பன் இல்லேன்னு ஆயிடுமா..”

சட்டென்று ஜாக்கிரதையானான். குடித்து விட்டால் நிறைய பேசுவாள். நீதிபோதனை வகுப்பெல்லாம் கூட நடக்கும். தெளிந்ததும் இவன் சொன்ன பதில்களாலேயே இவனை மடக்கி போட்டு பிடித்து விடுவாள்.

”அப்ப நீ கை நெறய சம்பாதிச்சும் எங்கிட்ட பிச்ச எடுக்கறாப்பல கெடக்கற.. அப்டிதானே..?”

”அடீப்போடீ.. எல்லா ஆம்பளப்பய பொழப்பும் அதான்..” என்றான் மழுப்பலாக.

”அத அவனுங்க தெனமும் சொல்லிக் காட்டுவானுங்க.. ஒன்ன மாதிரி நெஞ்சுலயே வச்சுக்கிட்டு கழுத்தறுக்க மாட்டானுங்க.. வீடு புடிச்சு கௌரதியா வச்சிருக்க.. நாந்தா ஒன்ன தெரத்தி தெரத்தி வுடுறேன்.. ஏன் இப்டி செய்றடீ பொம்பளேன்னு கைய நீட்டி அடிச்சாலும் அடங்கி போவும் மனசு..”

”நாந்தானே ஒன்ன கூட்டியாந்தேன்.. சோறு போட்டுதானே ஆவுணும்.. சும்மா பேசாம போய் படு..” என்றான்.

”எங்காச ஒனக்கு குடுக்கறதுக்கு நீ என்ன தாலி கட்டுன புருசனா..? நாள மக்காநாளு ஒம் பொண்டாட்டி கூப்டா மசிரே போச்சுன்னு ஓடிப் போயீடுவே..”

”ஆமா போறாங்க.. அவள புடிச்சிருந்தா நா ஏன் ஒம் பின்னாடி ஓடியார்றேன்..?”

உடலை மேலே உயர்த்தி அவன் கன்னத்தி்ல் மெலிதாக முத்தமிட்டாள். ”அப்ப புடிக்காமதான் புள்ள பெத்துக்கிட்டியா..?” அதே கன்னத்தை வலிக்காமல் நிமிண்டினாள்

”இருட்டுல எல்லா பொம்பளங்களும் ஒண்ணுதான்.. ஆனா நீ ரொம்ப பெசலு..” என்றான் உஷாராக. காந்திமதியை பற்றிய பேச்சு எப்போதாவதுதான் வரும். அதுவும் அவளே இழுத்தால்தான் உண்டு. போன முறை குடித்து விட்டு புரண்டுக் கொண்டு கிடந்தபோதும் இப்படிதான் வலிய பேசினாள். அந்த மாதிரி நேரங்களில்தான் அவளிடமிருந்து அன்பான வார்த்தைகள் வரும் என்பதால் அவனுக்கும் சற்றே விட்டு பிடிக்கத் தோன்றும். “ஒன் பொண்டாட்டி புள்ளய பாக்கணும்னு தோணுல..” என்றாள்.

”அத்த வுடு.. வேறா எதுனா பேசு..”

”வேறு என்னாத்த பேச சொல்ற.. அதுங்க கூட போறதுன்னா சொல்லு.. நா பேசி பாக்றேன்..”

”பேசாம இருக்க மாட்டே..” விருட்டென்று வெளியே வந்து விட்டான். எழுந்து போவதற்கும் இன்று உடம்பு ஒத்துழைக்கவில்லை.

”கேக்க நாதியத்து அனாத பொம்பளயா சுத்திக்கிட்டு கெடக்கேன்.. நாலு காசு சேத்து வச்சாதான எம் பொணம் சுடுக்காடு போவும்..”

”இப்ப என்ன சொல்லீட்டேன்னு பெரும்புடியா பேசுற..?” என்றான். இந்த மாதிரி நேரங்களில் அவனின் எந்த பேச்சுக்கும் சமாதானமாக மாட்டாள். வாய் வார்த்தை வலுத்து ஒரு வாரமோ.. பத்து நாட்களோ.. அவன் ஓட்டல் கடையின் ஓரமாக முடங்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.. இவளாக பார்த்து கூப்பிடும் வரை வரக்கூடாது என்ற அவன் பிடிவாதத்தை மழையோ பனியோ கூட அசைத்துப் பார்த்ததில்லை. சில சமயம் மாதக் கணக்கில் கூட பாராமுகமாக இருப்பாள். ஒருமுறை தெருவோர கடையின் சாக்குப்படுதா மறைவில் கிடந்தவனை போலீஸ் தட்டியெழுப்ப, ரயிலடிக்கு போனான். நல்ல துாக்கம் வேறு. அன்று அவனுக்கு சோதனையான காலக்கட்டம் போல. அங்கும் போலீஸ் துரத்தியடிக்க மேம்பாலத்திற்கடியில்தான் அன்று அவனுக்கு வாய்த்தது. விழித்துப் பார்த்த போது மலங்களுக்கு மத்தியில் கிடந்தது தெரிந்தது. பன்றிகள் அசிங்கமாக கடையோர பல்வரை காட்டிக் கொண்டு ஒரு மாதிரியான உருமலில் மலத்தை உண்ண, நாற்றம் சகிக்கவில்லை அவனுக்கு. ஏனோ அன்று நெடுநேரம் வாய் விட்டு அழுதான். அன்று வழக்கத்தை விட அதிகமான விறகுகளை பிளந்துப் போட்டதில் ஓட்டல் முதலாளி மூன்று நேர சாப்பாடும் சொல்லிக் கொள்ளும்படியான கூலியும் கொடுத்தான். மஞ்சுவும் அவனும் பெரிய ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டார்கள்.

காய்ச்சலில் ஏற்பட்ட கையாலாகததனத்தில் அவளை மெல்ல அணைத்துக் கொண்டான்.

”ஒடம்பு ரொம்ப காந்துதுய்யா.. இரு மாத்ர இருந்தா வாங்கியாரேன்..”

கையை விலக்கி விட்டு எழுந்து எங்கோ சென்றாள். வரும்போது கையில் ஒரு டம்ளர் பாலும் இரண்டு மாத்திரைகளும் இருந்தன. மாத்திரையை படக் படக்கென்று விழுங்கினான். தண்ணியாக ருசியற்று இருந்த பால் அவனுக்கு அமிர்தமாக தோன்ற நாக்கில் சூடு பறக்க பறக்க குடித்து விட்டு அவளிடம் டம்ளரை நீட்டினான். அதை வாங்கி ஒரு ஓரமாக வைத்தவள் பாயை விரித்து அவனை படுக்க வைத்துவிட்டு அவன் தலையணையிலேயே தலையை வைத்து அவனை கட்டிக் கொண்டு படுத்தாள். இருவரும் ஏதும் பேசவில்லை என்றாலும் உடல்கள் தன்னிச்சையாக இயங்கின.

அவனும் அவளும் அருகருகே அமர்ந்து சூடாக டீ பருகினார்கள். இந்த மாதம் அவளுக்கு இரண்டு படப்பிடிப்புகள் ஒப்பந்தமாயிருந்தன. அன்று ஒருநாள் படப்பிடிப்பு ஒன்றில் கைரேகை ஜோதிடர் ஒருவர் அவள் கையை நெடுநேரம் பிடித்து திருப்பி திருப்பி பார்த்து விட்டு ஒனக்கு சனிதான் பிரச்சன.. ஒருக்கா திருநள்ளாறு போய்ட்டு வந்துடு.. என்று சொன்னது அவள் நினைவிலேயே இருந்தது. அதை அவனிடம் சொல்ல இருவரும் பஸ்ஸில் அருகருகே அமர்ந்து திருநள்ளாறுக்கு பயணம் செய்தனர்.

ம்ம்ம்.. லேசான முனகலில் விழித்துக் கொண்டாள். “அய்ய.. அம்புட்டும் கனவாக்கும்..“ சலிப்பாக வந்தது அவளுக்கு. மாத்திரையின் வேகம் குறைந்ததில் அவன்தான் முனகிக் கொண்டிருந்தான்.

துாக்கு வாளியை எடுத்துக் கொண்டு டீக்கடைக்கு புறப்பட்டாள். டிரெயின் சத்தம் கேட்டது. மணி அஞ்சாயிடுச்சா.. ஆறு மணிக்கு புது டைரக்டரை பார்க்க குமார் அவளை வரச் சொல்லியிருந்தான். நடையை எட்டிப் போட்டாள். பன்னும் டீயும் வாங்கிக் கொண்டு திரும்பினாள்.

அவனது முனகல் குளறலாக வந்தது போலிருந்தது. என்னாச்சு இந்தாளுக்கு.. ஏழு வருசத்துல ஆள் இப்டி சொணங்கி பாத்ததேயில்லயே.. குனிந்து நெருங்கி அவன் கன்னத்தோடு கன்னம் வைத்து சூடு பார்த்தாள். அந்த முனகல் காந்தி.. காந்தி.. என்று கேட்டது. மீண்டும் உற்றுக் கேட்டாள். காந்திமதியைதான் அழைக்கிறான்.

அவனை எழுப்பினாள். “இந்தாய்யா.. எந்திரி.. இத சாப்டுட்டு படு..” என்றாள். மலங்க விழித்தவன் மறுப்பு சொல்லாமல் வாங்கி தின்றான். “மொத வேலயா டாக்டர்ட்ட போவுணும்..“ என்றாள்.

“ஆமா.. காச்சலுக்கெல்லாம் களுத டாக்டர்ட்ட போறதா..? ரெண்டு நாள்ல்ல எல்லாம் சரியாயிடும்..” என்றான்.

“நா வெள்ளன கௌம்புணும்.. வர ரெண்டு நாளாவும்.. இந்தா காசு.. காச்ச வுட்டோன்ன நீ கௌம்பி உங்கூருக்கு போயீடு..”

அதிர்வாக நிமிர்ந்தான். ”என்னன்னமோ பேசுற..?”

”அதெல்லாம் ஒண்ணுல்ல.. வூட்ட காலி பண்ண சொல்றாங்க.. பேசாம எங்காளுங்களோடு சேந்துக்கலாம்னு பாக்றேன்..”

”நா வேணா ஓட்டல் கடயிலயே தங்கிக்கிறன்.. நீ அப்பப்ப பாத்துட்டு போ..”

”அதெல்லாம் தோதுப்பட்டு வராது.. நீ கௌம்பு..”

”அய்ய்.. இப்டிதான் சொல்லுவ.. அப்றம் எங்கன்னாலும் என்ன தேடி புடிச்சு ஒடியாந்துடுவ.. லுாசு.. போடீ.. என்ன துாங்க வுடு..” என்றான்.

”இல்ல.. நீ கௌம்பு.. ரெண்டு நாளு கழிச்சு நான் வாரதுக்குள்ள ஒன் சட்டத்துணிமணிய எடுத்துக்கிட்டு கௌம்பிப் போயிடு.. நானும் குமாரும் கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கோம்.. நீ இங்கருந்தா தோதுப்பட்டு வராது..“ என்றாள் திடீரென்று தோன்றிய எண்ணத்தை பேச்சாக்கி.

இந்த இரண்டு நாட்களுக்கு எங்கு தங்குவது என்பதுதான் அவளது அப்போதைய சிந்தனையாக இருந்தது.

picture courtesy: Deviant Art