கலைச்செல்வி

கூடு- கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

எனது பெருவிரலோடு தன் சின்னஞ்சிறு கைகளை கோர்த்துக் கொள்வதில் அவனுக்கு பெருவிருப்பமிருந்தது. அது கிட்டத்தட்ட அதிகாலை பனிக்குள் ஒளிந்துக் கிடக்கும் மலையடுக்குகளை சூரியன் அணுகி நெடுநேரம் கழிந்த பிறகும் நாளிக்குள் மூழ்கிக் கிடக்கும் விருப்பத்தையொத்தது. அதனாலேயே பகல் கனியத் தொடங்குவது அவனுக்கு வாதையாக இருந்தது. பிறகு அதை விட பெரும்வாதைகள் அங்கு நிகழத் தொடங்கின. மரங்களை வெட்டியதாகவும், பறவைகளை சுட்டதாகவும், பன்றிகளை உண்டதாகவும் அவர்கள் வெவ்வேறு காரணங்களை குறிப்பிட்டாலும் குறிகள் எங்கள் நிலத்திற்கானவை என்பதை உணரவியலாத வயது அவனுக்கு. மேற்கு வானில் மறைய எத்தனிக்கும் சூரியனின் செந்நிற ஒளிக்கீற்றுகளை போல நாங்கள் இரத்தம் சிந்தத் தொடங்கியிருந்தோம். அவனோ காடெங்கும் திரிந்தலைந்தலையும் வேட்கை கொண்டவனாக வளரத் தொடங்கினான். உயர்ந்த நெடிய தோற்றம் கொண்டவன் அவன். கரிய நிறமும் சற்றே வரிசை தவறிய பற்களுமாய் இருப்பான். கொழுத்து விளைந்த வயக்காட்டை இரவு நேரங்களில் அவனிடம் நம்பிக்கையாக ஒப்படைக்கலாம். சிறுத்தையின் காலடித்தடத்தில் தன் படர்ந்த பாதச்சுவடை ஒற்றி எடுப்பதில் பெருவிருப்பம் கொண்டிருந்தான்.

அன்று ஆபிசர்கள் கடமான் தேவைப்படுவதாக சொல்லியனுப்பியிருந்தனர். சமவெளிக்கும் எங்களுக்குமான இணைப்பை இவர்களிடமிருந்து நாங்கள் தொடங்கிக் கொண்டதெல்லாம் ஒரு காலம். எப்படியாவது இவர்கள் இணக்கமாகி விடமாட்டார்களா என்று ஏங்கிக் கிடக்கும் காலமிது. அசைவை நோக்கி குத்தீட்டியை எறிவது ஒன்றும் கடினமல்ல. கடமான் தட்டுதடுமாறி சொப்பங்குழிக்குள் விழுந்திருந்தது. கிடைத்த கிளைகளிலும் பிடிமானங்களிலும் கால் வைத்து புதர் அப்பிக் கிடந்த பள்ளத்தினுள் இறங்கினான். நின்று நிதானித்து விருந்து பரிமாறுமளவுக்கு கொழுத்த மான் அது. இவனை கண்டதும் துள்ளியெழ முயன்று, இயலாமையில் மடங்கியது. அதன் தொடையில் குத்தி நின்ற குத்தீட்டியின் வழியே குருதி பெருகிக் கொண்டிருந்தது, அப்போதுதான் அதன் வயிற்றை கவனித்திருக்க வேண்டும். நல்லவேளையாக உள்ளிருக்கும் குட்டிக்கு அடி விழுந்திருக்காது என்ற ஆறுதல்பட்டுக் கொண்டான். குத்தீட்டியின் காயம் வலி ஏற்படுத்தாதவாறு நோகாமல் ஊனான்கொடியால் அதன் கால்களை கட்டி சாக்கில் சாய்த்து வைத்து சாக்கை கயிற்றில் இணைத்தான். கூட்டாளிகள் புன்னைமர கமலையில் கயிறு கட்டி இழுக்க, கடமான் மேலே வந்து சேர்ந்தது.

சூரியன் மலைகளுக்குள் ஒளிந்துக் கொள்ள எண்ணிய தருணத்தில் ஆபிசரின் ஜீப் வந்திருந்தது. கடமான் கண்களுக்கு அகப்படவேயில்லை என்று வாதிட்ட இவனுடைய துணிச்சல் எனக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. குத்தீட்டியின் காயத்தில் இருமுளிச்சாறை பிழிந்து காயம் ஆற்றி அதை ஓட்டி விட்ட பிறகும் நான் நடுங்கிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் அவனோ இந்நேரம் அது குட்டி ஈன்றிருக்கும் என்று கணித்துக் கொண்டிருந்தான்.

யானையின் விநோதமான பிளிறலில் மலை அதிர்ந்தபோதும், கொன்றையில் நீர்மத்தியை தள்ளிக் கொண்டு காற்று எழுந்து வீசியபோதும், கேளை மான்கள் கத்தியபடி சோலைக்குள் ஓடியபோதும் காதுகளை பொத்திக் கொள்ள சொன்னார்கள். பொத்திக் கொண்டோம்.. அவனும் பொத்திக் கொண்டதாகதான் நினைத்தேன். அப்போது அவனுக்கு திருமணமாகியிருந்தது. பறவைகளின் அலமலந்த கீச்சொலிகளில் நல்லதை முன்கூட்டி தெரிவிக்கும் பெருமாட்டிக்குருவிகளின் கீச்சொலிகள் கலந்திருக்கவில்லை என்பதை அவன் உணர்ந்திருக்க வேண்டும். புற்றுக்கருகில் பிரிக்கிகள் சுற்றிக் கொண்டிருந்தன. எறும்புகள் சாரைசாரையாக அணி வகுத்தன. பெருநரிகள் விருகன்கனை கவ்விக் கொண்டு ஓடின. ஆனால் காட்சிகளை பார்க்கக் கூடாதென்றார்கள். யார் அவர்கள்..? எங்களுக்குள் கோழைத்தனமாக எழுந்த கேள்விகள் அவனை உசும்பி துாண்டியிருக்கலாம். எங்களின் கைகளை பின்புறமாக கோத்து கட்டி விட்டு காலால் உணவுத்தட்டுகளை எங்களிடம் எத்தி விட்டபோதுதான் அவனை சந்தர்ப்பங்கள் முடிவு செய்ய தொடங்கியிருக்கும். காடு மழைக்கானது.. பூமியின் செழுமைக்கானது என்பதில் அவர்களுக்கும் கருத்து வேறுபாடில்லைதான். ஆனால் அவர்கள் காட்டில் மழையும் அவர்கள் வீட்டில் செழுமையும் சேருவதை அவன் உணர்ந்திருந்தான். அவர்களுக்கான மாளிகைகள் மிகவும் சௌகரியமானவை. தங்களுக்காகவும் தங்களின் வழிதோன்றலுக்காகவும் அவர்கள் முன்திட்டமிட்டமிட்டுக் கொண்டே இருந்ததை அவன் அடையாளம் காட்டினான். அவனுக்கு கூட்டாளிகள் நிறைய உண்டாகியிருந்தனர்.

மத்தி மரக்கிளையிலிருந்த கூட்டுக்குள் கழிவையும் மெழுகையும் களிமண்ணையும் குழைத்துப்பூசி தன்னைத்தானே உள்ளிருத்திக் கொள்ளும் பெண்ணாத்திப்பறவையின் வழியே அவன் சிறையை உணர்ந்திருக்க கூடும். அது வெளிவரும் நாளுக்காக ஆணாத்தியைப் போல இவனும் ஆவல் கொண்டிருந்தான். உள்ளிருந்தபடியே அலகை நீட்டி ஆணாத்தியிடமிருந்து புழுவோ, பூச்சியோ, இச்சிப்பழமோ, இளுப்பைத்தோலோ பெற்றுக் கொள்வதை காண அவன் மணிக்கணக்கில் காத்துக்கிடப்பதை நானும் அறிவேன். அவனை தீவிரமானவன் என்றார்கள். வாழ்க்கை தொலைந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாகதான் இருந்தான். அவர்கள் குழுமமாக இருந்தார்கள். குழுமமாக எதிர்த்தார்கள். இவனையே தலைவன் என்றார்கள். அவனுக்கு தந்தையாக இருப்பதில் எனக்கு பெருமையே. ஆனால் ஊரெல்லாம் உறவான பின் அவன் இந்த உறவையெல்லாம் எப்போதோ கடந்திருக்கலாம்.

பதியில் அன்று குடிசைகள் கொளுத்தி விடப்பட்டபோது அவனது இரு மகன்களும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். விவசாயத்துக்காக காய்ந்த பயிர்களை கொளுத்துவதும் நிலங்களை மாற்றிக் கொண்டு செல்வதும், எங்களுக்கு புதிதல்ல. என்றாலும் நாங்களும் காய்ந்த பயிர்களாக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் குஞ்சும் குளுவாணிகளுமாக வெளியேறிய தினத்தில் என் மகன் இல்லை. இல்லையென்றால் தலைமறைவாக இருந்தான். அது அவன் சிறைக்கு செல்வதற்கு முந்தைய காலம்.

உலகின் எங்கோ ஒரு மூலையில் தெளிவான சிந்தையுடன் எங்களின் தலைவிதிகள் தீர்மானிக்கப்பட்டன. இதில் இரத்தம் சிந்துவதும், இனம் அழிவதும் அவர்களைப் பொறுத்தவரை ஒருவித களிப்பான விளையாட்டு. அது கலவியையொத்த களிப்பு. அறிவியல் வளர்ச்சி… முன்னேற்றம் என்ற பதங்களை சாமானிய மக்களும் கைக்கொள்ள தொடங்கியிருந்தனர். போனதெல்லாம் போகட்டும்.. ரட்சகன் நானிருக்கிறேன் என்று யாராரோ அறைக்கூவல் விடுத்தார்கள். ஆனால் சமூக விதிகள் என்ற குப்பிகள் சமூகம் முழுமைக்குமானதல்ல. குப்பிகளில் அடைப்பட்டவர்கள் எளியோர் எனவும் குப்பிகளை கையிலேந்தியவர்கள் வலியோர் என்வும் நாங்கள் புரிந்துக் கொள்ள தொடங்கியிருந்தோம். அறைக்கூவல் விடுப்பவர்கள் குப்பிகளை கையிலேந்தியவர்கள். அவர்கள் காமமும் பசியுமாக அலையும் வசந்தகால கரடிகளையொத்தவர்கள். ஏதேனும் நல்லவை நிகழும் என்று கருதினால் அது எங்களை நாங்களே மிக மலினமாக ஏமாற்றிக் கொள்கிறோம் என்று சுலபமாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடிந்தது. பிறகு இந்த செயலுக்காக எங்களை நாங்களே வெறுக்கும்படியாகி விடும்.

ஆனால் என் மகனுக்கு தன்னை தானே வெறுக்கும் நிலை நிச்சயமாக ஏற்பட்டிருக்காது. அவன் தன் செயல்பாட்டுக்கான முழு காரணத்தையும் நன்றாக உணர்ந்திருந்தான். தனது போக்கில் மிக நிதானமானவனாகவும் துல்லியமான அமைதியும் கொண்டிருந்தான். பிடிப்பட்டபோதும் முரண்படவில்லை. யார் மீதும் அதிகாரம் செலுத்த அவன் விரும்புவதில்லை.

மத்தி மரம் அசைந்தசைந்து ஆணாத்தியின் ஏக்கத்தையும் தனிமையையும் அதிகப்படுத்திக் கொண்டிருந்து. இனி அது தன் பெண்டின் சிறகை கோதவோ… கொத்தவோ முடியாது. என் மகனின் குற்றம் நிரூபணம் ஆகி விட்டதாம். தீர்ப்பு மரணதண்டனையாம். இதன் பின்னணியில் கேள்விப்பட்டிராத தேசங்களின் சதிகள் அடங்கியிருக்கிறதாம். மொத்தமாக முடிந்த கதைக்கு முடிவுரையென்று எதை எழுதினால் என்ன.? தன் மீது யாரும் அதிகாரம் செலுத்துவதை அவன் விரும்புவதில்லை. நீங்கள் குற்றம் என்று சொல்வதை நான் வாழ்க்கை என்று சொல்கிறேன் என்று மட்டும் கூறினானாம்.

விசாரணை கைதியாக அடைப்பட்டிருந்த ஆறு வருடங்களில் ஒருமுறை மட்டுமே அவனை பார்க்க அனுமதி கிடைத்தது. அந்த சந்திப்பை அவனது மனைவிக்கும் மகன்களுக்கும் விட்டுக் கொடுத்திருந்தேன். அதில் சுயநலமில்லாமல் இல்லை. அவனில்லாத வாழ்க்கையை நான் பழகிக் கொண்டிருக்கும் தருணத்தில் அவனது சந்திப்பு அதை மொத்தமாக கலைத்து போட்டு விடும் என்று மனதார நம்பியதை நான் வெளியே சொல்லவில்லை.

கால்கள் தானாகவே வாழ்ந்த திசையை நோக்கி அழைத்து வந்திருந்தது. கூடவே அவனின் இரு மகன்களும். இன்று அவனுக்கு நாள் குறிக்கப்பட்டிருப்பதை அவன் மனைவிக்கோ மகன்களுக்கோ தற்காலிகமாகவேனும் எட்டவிடாமல் பார்த்துக் கொள்வது என் வரம்புக்குள் இருந்தது. சிறுவர்கள் விளையாடி களைத்து சோற்றுப்பொட்டலத்தை திறந்திருந்தனர். மத்தி மரத்தடியில் கால்களை நீட்டி அமர்ந்துக் கொண்டபோது கண்களும் இயல்பாக மூடிக் கொண்டன

வாழ்ந்த தடங்களெல்லாம் இந்நேரம் பூண்டோடு அழிந்திருக்கும். தாணிக்காயும் சாதிக்காயும் பூச்சைக்காயும் சீவேப்புல்லும் வள்ளிக்கிழங்குமில்லாத எங்கள் வாழ்க்கையை போல மீதி உயிர்களும் தங்களை பழக்கிக் கொண்டிருக்குமோ.. அல்லது பிடிவாதமாக செத்தழிந்து போயிருக்குமோ..? மனதின் நடுக்கம் கூடிக்கொண்டே போனது. இனி பனியில் நனைந்து உதிர்ந்த இண்டம் பூக்களி்ன் வாசனையில் அவன் கலந்து விடலாம். பாறைசந்துகளில் காத்துக் கிடக்கும் கருஞ்சிட்டுகளுடன் அவன் சுதந்திரமாக கதைக்கலாம். அல்லது வெட்டப்படும் மரத்தின் துகள்களுக்குள் கலந்து காட்டின் பெருவெளியில் கரைந்து போகலாம். கண்களிலிருந்து வழிந்த நீரை காற்று கன்னத்தில் கரையாக்கி கொண்டிருந்தது.

மூடிய விழிகளுக்குள் ஆணாத்தியின் படபடத்த சிறகுகள் பரபரத்துக் அலைந்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. பெண்ணாத்தி கூட்டை தகர்க்கும் நேரம் நெருங்கியிருக்கலாம். இஞ்சிப்புல்லின் மணத்தோடு கதிரிலிருந்து சிறிதுசிறிதாக பிரிந்து விழும் சாமைப்பயிரின் வாசம் காற்றில் கலந்து வீசியது. பெண்ணாத்தி சிறை மீண்டிருக்கும். இனி அவற்றின் வாழ்வு காதலாலும் கீச்சொலிகளாலும் நிறைந்து விடும்.

சிறுவர்கள் கையிலிருந்த சோற்றை ஆத்திகளுக்கு சிதற விட, எங்கிருந்தோ பறந்து வந்த காகமொன்று சோற்றை கவ்விக் கொண்டு பறந்தது.

தொலைவிலிருந்த வந்த ஒலி பெருமாட்டிக்குருவியின் கீச்சொலி போலிருந்தது.

***

 

 

 

 

மாயநதி – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

செங்குந்தான பசுங்கோபுரங்களாய் பூமி உயர்ந்திருக்க, இடையே குளிர்வான நல்லதங்காள் ஓடை சுழித்து நெளித்து நகர்ந்தது. ஓடையின் வழித்தடமெங்கும் பெரிதும் சிறிதுமான கூழாங்கற்கள் நிறைந்து கிடந்தன. காற்று நீரை தொட்டுக் கொண்ட சிலிர்ப்பில் கிறங்கி தவழ்ந்தது. கரையோரமாக ஒதுங்கிக் கிடந்த கூழாங்கல் பாறையொன்றில் அமர்ந்து கால்களை நீரில் நனைத்திருந்தோம்.

”ஆயுசு முழுக்கவும் எங்கூடவே இருப்பியா…” உள்ளத்தில் வழிந்து கிடந்த அன்பை முடிந்தவரை கேள்வியில் இழைய விட்டேன். குரல் அதுவாகவே நெகிழ்ந்து குழைந்தது.

”அப்றம்… இருக்கதானே வேணும்…”

”அப்டீன்னா இதை நிர்பந்தம்னு எடுத்துக்கவா…” என்னால் ஏமாற்றத்தை மறைக்க இயலவில்லை.

”நிர்பந்தமில்ல… அவசியம்…”

”அவசியம்ன்னா… கட்டாயமா…?” குரலில் கடுமை இருந்திருக்கலாம்.

”கட்டாயந்தான்… ஆனா மத்தவங்களோடதில்ல… என்னோடது… எம் மனசோடது… அதுதான் என்னை உங்கூட இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்துது… அன்புதான் நிர்பந்தம்… மனசை தவிர்க்க முடியுமா… இப்ப மனசுன்னு சொன்னது உன்னை…”

நெக்குருகிப் போனேன். அவளிடம் நெருங்கி அமர்ந்தேன்.

நான் எழுந்த வேகத்தில் காலுக்கடியில் பதுங்கிக் கிடந்த கூழாங்கல் லேசாக சறுக்கி விட, ”ஏய்… பாத்து…” என்றாள் சங்கீதா.

”ஏய்… பாத்து…” குளிர்ந்தக் காற்றைவிட சில்லிப்பானக் குரலில் அவள் சொன்னதையே திருப்பி சொன்னேன்… தலையை உயர்த்தி சிரித்தாள். அவளை இடுப்பைச் சுற்றி அணைத்துக் கொண்டேன். அவளும் தோளை வளைத்துக் கொண்டாள். அப்படியே கரையோரமாக நடந்துச் செல்வது எங்களுக்கு பிடிக்கும். ஓடையும் கூடவே நெளிந்தோடி வந்தது. ஓடை நதியோடு கலக்கும் முகத்துவாரப் பகுதி அது. நதியை நெருங்க நெருங்க அதன் தவிப்பையும் துடிப்பையும் என்னால் உணர முடிந்தது. சங்கீதாவும் இதையே நினைத்திருக்கிறாள்… ஆனால் வேறு விதமாக.

“இந்த சின்ன ஓடைய அந்த பெரிய நதி எவ்ளோ பெருந்தன்மையோட ஏத்துக்குது பாரேன்…” என்றாள்.

”இல்ல… அப்டியில்ல… நல்லா பாரு… தன்னோட அடையாளத்தை சிதைச்சிக்க முடியாம ஓடை நதியில விழுந்து தற்கொலை பண்ணிக்குது…”

”ஏ லுாசு… அது ஏன் தற்கொலை பண்ணிக்கணும்… இந்த நதிக்கு எவ்ளோ பேரும் புகழுமிருக்கு… ஆனா இந்த ஓடைக்கு என்ன பேரு…?”

”நல்லத்தங்கா ஓடை…”

”செரி… அது யாருக்கு தெரியும்…”

”ஏன்… ஓடைக்கு தெரியுமே…”

ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்தோம். அவள் சொல்வதை என்னால் ஏற்க முடியாது. நதியோடு கலப்பதால் ஓடையின் அடையாளம் சிதைந்து விடும். பிறகு நதியின் பெயரை முதுகில் சுமந்துக் கொண்டு கடல் வரை செல்ல வேண்டும். விருப்பமில்லை என்றாலும். நீருக்குள் அழுதால் யாருக்கு தெரியப் போகிறது…? நிலத்தில் அழுத என் கண்ணீரையே அம்மாவால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் கல்யாணம் பண்ணி வைக்க போகிறாளாம். அதற்குதான் ஊரிலிருந்து வந்திருக்கிறாள்.

”ஏய்… அழுவுறியா…?”

”இல்ல…”

”இல்ல… அழுவுற… தண்ணீக்குள்ள நின்னுக்கிட்டு அழுதா எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா…?”

சங்கீதாவுக்கு என்னை உணர முடிந்ததை நினைத்து மீண்டும் அழுகை வந்தது. நீருக்குள் இறங்கி வந்து என்னை தோளோடு அணைத்துக் கொண்டாள். அவளின் கைகள் என்னை தழுவிக் கொள்ளும் தருணத்துக்காக எவ்வளவு வேண்டுமானாலும் அழலாம். முரட்டுத்தனமான வலு நிறைந்த, ஒதுக்கி தள்ளவியலாத கைகள் அல்ல அவளுடையவை. அவளுடைய கைகள் மென்மையானவை. என் விருப்பத்தை பொருட்படுத்துபவை.

இன்று காலையில் கூட அப்படிதான். விழிப்பு வந்த பிறகும் அவளுக்காகவே துாங்குவது போல கண்களை மூடிக் கிடந்தேன்.

“ச்சீ… கழுத வயசாவுது… இப்பிடியா துாங்குவ எச்சி வுட்டுக்கிட்டு…” என்றாள்.

காதில் விழாதது போல அப்படியே கிடந்தேன்.

“ஏ கழுத… நடிக்கிறியா… எந்திரி எந்திரி…” முதுகைத் தட்டினாள். உடலை குறுக்கி கால்களை குவித்து கைகளை மடக்கி பக்கவாட்டில் திரும்பி படுத்தேன்.

“ஏன் இப்டி கெடக்க… குளுவுருதா…” தலையணையை நோகாமல் உருவினாள்.

“ம்ம்ம்…“

”படவா… வெயிலு சுள்ளுங்குது… குளுவுருதாம் குளுவுரு… எந்திரி… மொதல்ல…”

”முடியாது… நா எந்திரிச்சா நீ என்ன வுட்டுட்டு போயிடுவே…”

”அப்றம்… எரும வயிசில ஒன்ன துாக்கி கொஞ்ச சொல்றியா…“

”ம்ம்… என்ன கொஞ்சாம யாரை கொஞ்சுவே…”

இங்கிதமேயின்றி யாரோ கதவைத் தட்டினார்கள் பொன்னித்தாயிதான். அறைக்குள் எட்டிப் பார்த்தாள். பொன்னித்தாயி ஏதோ ஒரு வழியில் எனக்கு அத்தை முறையாக வேண்டும். எனக்கு சமைத்துப் போடுவதற்காக அம்மா இவளை நியமித்திருந்தாள்.

”நேத்து ரவைக்கு வச்ச சோறு அப்டியே கெடக்கே தம்பீ…” அவள் பயந்துக் கொண்டே பேசியது எனக்கு எரிச்சலை கிளப்பியது. ‘நான் என்னா புலியா… சிங்கமா… ‘

“எனக்கு கண்ணிருக்கில்ல… பாக்க முடியுமில்ல…”

“அதுக்கில்ல தம்பி… இருக்குன்னு சொன்னேன்…”

”அதுக்கென்ன இப்ப…?” கதவு வழியாக உள்ளே வந்த வெளிச்சம் கண்களை கூச வைத்தது. வண்ணங்கள் ஓடுவதும் மறைவதுமாக இருந்தன. தலை அபாரமாக கனத்தது. இந்த நேரம் பார்த்து சங்கீதாவை காணவில்லை.

”இட்லி சூடாருக்கு… எடுத்தாருட்டுமா…?” தயக்கமாக கேட்டாள். எதுக்கு தயக்கம்… எல்லாம் நடிப்பு… வானம் வரைக்கும் உயரமும் வீடு அளவுக்கு அகலமும் கொண்ட ராட்சசி… ராட்சசி. சங்கீதாவை தவிர உலகம் முழுக்க எல்லாருக்குமே இதே உருவம்தான். முன்பெல்லாம் அம்மாவும் சங்கீதாவை போல சாதாரண உருவத்தில்தான் இருந்தாள். அலுவலகம் முடித்து வரும் அவளிடம் போய் ஒண்டிக் கொள்ளலாம். புதைந்துக் கொள்ளலாம். புதைத்துக் கொள்ளலாம்… “நம்பூருக்கே போயிடலாம்… இல்லேன்னா நீ வேலக்கு போவாத…“ என்று என் பயத்தைக்கூட சொல்லலாம். ஆனாலும் என்னால் சொல்ல முடியாது. எதிர்வீட்டு அண்ணன் தன் பெரிய கைகளால் அறைந்து அம்மாவை கொன்று விடுவான்.

”இட்லி சூடாருக்கு தம்பீ….” அருகே வந்தாள்.

”அதான் சொல்லீட்டீங்களே…” இதை பயந்துக் கொண்டேதான் சொன்னேன். பொன்னித்தாயிக்கும் எதிர் வீட்டு அண்ணனைப் போல விரிந்த விசிறி போன்ற கைகள். விசிறியை அப்படியே குவித்து தொடையின் சதையை அள்ளுவான். வலி உயிர் போய் விடும். அதேசமயம் அம்மாவிடம் அதிகமான பணிவுக் காட்டுவான். எல்லாமே பொய். பொன்னித்தாயி காட்டும் பணிவைப் போல. தலைவலி தாங்க முடியவில்லை.

”அம்மா இன்னும் செத்த நேரத்தில வந்துடுவாங்க தம்பி…”

”எல்லாந் தெரியும்… நீங்க போங்க…” வெளியே அனுப்பி கதவை மூடிக் கொண்டேன்.

அம்மா வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் சென்னையை விடவில்லை தினேஷின் குடும்பத்தோடு அங்கேயே தங்கி விட்டாள். அவ்வப்போது என்னை பார்க்க கிராமத்துக்கு வருவாள். வரும்போதெல்லாம் அழுவாள். அப்பா இறந்ததிலிருந்தே தன்னுடைய வாழ்க்கை அழுகையாகவே மாறி விட்டதாக புலம்புவாள். அப்பா இறந்தபோது நான் ஒன்றாம் வகுப்பில் இருந்தேனாம். தினேஷ் ஐந்தாம் வகுப்பிலிருந்திருப்பான். பிறகு அப்பாவுடைய வேலை அம்மாவுக்கு கிடைத்தது. அதுதான் பிரச்சனையே. அதற்காகதான் சென்னைக்கு போக வேண்டியிருந்தது. நானும் தினேஷும் அம்மாவும் சென்னையில் ஒரு அடுக்ககத்தில் குடியேறினோம்.

மூன்றரைக்கே முடிந்து விடும் ஆங்கிலப் பள்ளியொன்றில் சேர்த்து விட்டிருந்தாள் அம்மா. அவள் திரும்புவதற்கு எப்படியும் ஆறரையாகி விடும். தினேஷுக்கு நிறைய நண்பர்கள்… விளையாடுவதற்கு… விளையாடுவதற்கு… பிறகும் விளையாடுவதற்கு… ஆட்டோவிலிருந்து இறங்கியதுமே விளையாட ஓடி விடுவான். நான் கூடவே ஓடுவேன். ஆனால் அவர்களின் விளையாட்டில் நான் எப்போதும் “ஒப்புக்குச் சப்பாணி…“.தான். நான் தொட்டால் அவுட் இல்லையாம். நான் அடித்தால் ரன் இல்லையாம். நான் பிடித்தால் அது கேட்ச் இல்லையாம். தினேஷும் இதற்கு உடந்தை. எனக்கு அவர்களோடு விளையாடவே பிடிக்கவில்லை. வீட்டுக்கு வந்து விடுவேன்… எதிர் வீட்டு அண்ணன் முதலில் நன்றாகதான் பழகினான் கொஞ்சநாள் கழித்த பிறகு அவன் வேறு ஆளாக மாறிப் போனான். உடம்பெல்லாம் வலி பின்னியெடுத்து விடும்.

வெளியே ஆட்டோ சத்தம் கேட்டது. அம்மா வந்து விட்டாள். அம்மாவும் பிடிவாதக்காரிதான். சங்கீதா இருக்கப்ப எதுக்கு இன்னோரு கல்யாணம்…? எனக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டா அவளோட பாரம் கொறையுமாம்… நான் பாரமா…? சங்கீதாவுக்கு நான் பாரமில்ல… அப்டியே இருந்தாலும் அவளால என்னை சுமக்க முடியும்.

”தலை வலிக்குதுன்னு சொன்னீல்ல… வா… புடுச்சி வுடுறேன்…” அறைக்குள்ளிருந்து அழைத்தாள் சங்கீதா.

அவள் மடியில் மல்லாந்து படுத்துக் கொண்டேன்.

ஜன்னல் வழியே அம்மா எட்டிப் பார்த்தாள். ”சுதாகரு…” என்றாள். பயணத்தில் களைத்திருந்தாள். கதவை திறந்துக் கொண்டு அம்மாவிடம் செல்லத் தோன்றியது. ஆனால் தலை வலித்தது. அம்மாவுக்கு சங்கீதாவை போல அத்தனை இதமாக பிடித்து விடத் தெரியாது. என்னருகில் அமர்ந்து பேசத் தெரியாது. கண்களை இறுக்க மூடிக் கொண்டேன்.

விடுமுறை நாட்களில் என்றாவது ஒருநாள் அம்மா என்னை குளிக்க வைப்பாள். அப்போது ஐந்தாவது படித்திருக்கலாம். சுருள்சுருளான மின்சார நீர் சுடேற்றியை சில்வர் அண்டாவிலிருந்து எடுத்து விட்டு, கொஞ்சம் போல அதில் குளிர் நீரை சேர்ப்பாள். தலையில் நீரை அள்ளி ஊற்றும் போது முகத்தை இரு கைகளாலும் பொத்திக் கொள்வேன். இரு கை முட்டிகளிலிருந்தும் நீர் வடியும். உடலெங்கும் சோப்பை தடவி அழுத்தி தேய்ப்பாள். வலியில் உயிர் போய் விடும். கடைசியான அண்டா நீரை மேலிருந்து கவிழ்ப்பாள். சுடுநீர் டிரவுசருக்குள் தீயாக கொதிக்கும்.

”ஏன்டா… பயலே… பெரியவனாயிட்டீயாக்கும்…” அம்மா டவுசரை நிமிண்டி சிரிக்கும்போது தினேஷும் கூடவே சிரித்தான். கோபமாக வந்தது. இவனால்தான் எல்லாம். அம்மா வரும் வரைக்கும் விளையாடி கொண்டேதான் இருக்க வேண்டுமா…?

”இனிம நானே குளிச்சிக்கிறேன்…“ என்றேன் கோபமாக.

சங்கீதாவின் கைகளுக்குக் கூட அழுத்தம் போதவில்லையா… தெரியவில்லை. அத்தனை வலித்தது. மூடியிருந்த கண்களுக்குள் வெளிச்சம் ஊர்ந்தது. திறந்திருக்கிறேனா… மூடியிருக்கிறேனா என்ற சந்தேகத்தில் இமைகளை பிரித்தேன். அம்மா அங்கேயே நின்றிருந்தாள். அவசரம்… எதற்கெடுத்தாலும் அவசரப்படும் அவளால் எப்படி ஒரே இடத்தில் நிற்க முடிகிறது. அழுது கொண்டிருந்தாள். கண்களை இறுக்க மூடிக் கொண்டேன். எத்தனை முறை அழுதாலும் அடம் பிடித்தாலும் அவன் விடுவதில்லை.

”தலவலி போயிடுச்சா…” என்றாள் சங்கீதா.

”இன்னும் இல்ல… ரொம்ப வலிக்குது… ஓடைக்கு போலாமா…?”

”குளிக்கப் போறியா…?”

”ம்ஹும்…”

”அய்யே… எத்தன நாளாச்சு… நாறப் போவுது… அம்மா வேற வந்துருக்காங்க…”

”பரவால்ல…” என்றேன்.

அங்கிருந்த கூழாங்கல் பாறையில் அமர்ந்துக் கொண்டோம். என் வலது காதை மென்மையாகக் கடித்து ”தலவலி நின்னுடுச்சா…” அவள் கேட்ட தருணத்தில் தலைவலி நின்றிருந்தது.

”ஒங்கம்மாவ பாத்தா பாவமாருக்கு… வயசான காலத்தில அங்கிட்டும் இங்கிட்டுமா அலையிறாக…”

”பாவம்தான்…” என்றேன்.

தாழ்ந்த கிளையில் ஊறிக் கொண்டிருந்த செவ்வெறும்பு கை வழியே என் முகத்தில் ஏறியது. பிறகு அடர்ந்த தலை மயிருக்குள்ளும் தாடி மயிருக்குள்ளும் புகுந்து கொண்டது. சங்கீதா தட்டி விட சொன்னாள்.

”ஆனா அவங்களுக்கு என்ன விட பாலாஜியதான் புடிக்கும்… அவனுக்கு ஆறாங்கிளாசுலயே கைல கட்றதுக்கு வாச்சு வாங்கிக் குடுத்தாங்க…”

”ஏய்… ஒனக்குந்தானே வாங்கிக் குடுத்தாங்க…”

”குடுத்தாங்க… ஆனா லேட்டு… அவனுக்கு பத்தாங்கிளாசு முடிச்சோன்ன வண்டி வாங்கி குடுத்தாங்க… அப்றம் கல்யாணமெல்லாம் பண்ணி வச்சாங்க…”

”ஒனக்குந்தானே கல்யாணம் ஆயிடுச்சு…”

”அவுங்களா பண்ணி வச்சாங்க…?”

”எதோ ஒண்ணு… கல்யாணம் ஆயிடுச்சுல்ல…”

”அப்றம் ஏன் என்ன திரும்பவும் கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க…?“

“ஒங்கம்மாட்ட சொல்லு ஒனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு…”

”அத ஏன் எங்கம்மாட்ட சொல்லுணும்…”

”அவங்கட்ட சொல்லாதுனாலதானே ஒனக்கு கல்யாண ஏற்பாடு பண்றாங்க…”

”அய்யய்யோ… அப்ப நீ…” பதறினேன்.

அவளும் பயந்து போனாள்.

”என்ன மறந்துடாத… ப்ளீஸ்… என்ன மறந்துடாத…” அவள் கெஞ்சியதை பார்த்த போது ஐந்தாம் வகுப்பில் பக்கத்து பெஞ்சில் வெள்ளைக் கலர் சட்டையும் பச்சைக் கலர் பினஃபோர்மும் உடுத்திக் கொண்டிருக்கும் அவளின் பழைய தோற்றம் நினைவுக்கு வந்தது. அன்று டாக்டரிடமும் அதையேதான் சொன்னேன். “அப்டீன்னா ஒன் சங்கீதாவுக்கு இப்போ பத்து வயசா…?” என்றார் டாக்டர்.

”இல்ல டாக்டர்… நா பெருசானப்போ அவளும் பெருசாயிட்டா…” என்றேன்.

அவர் நம்பியதாக தெரியவில்லை.

”ஒனக்கென்ன பத்து வயசா… அந்த டாக்டர் சொல்றாரு…” என்றேன் சங்கீதாவிடம். இரட்டை சடையை பினஃபோர் மீது போட்டிருந்தாள்.

”அடச்சீ… பத்து வயசிலியா கல்யாணம் பண்ணிக்குவாங்க…”

”அதானே…”

அம்மாவுக்கு எப்போதும் புலம்பல்தான். ”கல்யாணம் ஆனா சரியா போயிடுவானா டாக்டர்… எனக்கு பிற்பாடு இவனுக்குன்னு யாருமே இல்ல…. அவங்கண்ணனை பக்கத்திலயே சேக்க மாட்டேங்கிறான்…” டாக்டரிடம் புலம்பினாள்.

”ஆயுசு முழுக்கவும் எங்கூடவே இருந்துடுவியா…”

”இப்பதானே கேட்ட… திரும்பவுமா…”

“பதில் சொல்லேன்… ப்ளீஸ்…”

”இருக்கேன். இருக்கேன்… இருக்கேன்… இருக்கதானே வேணும்… இது நிர்பந்தமுமில்ல… கட்டாயமுமில்ல… ஒனக்கு என்னை பிடிச்சிருக்கு… எனக்கு ஒன்னை புடிச்சிருக்கு… அவ்ளோதான்…”

அவளைக் கட்டிக் கொண்டேன். ஓடையிலிருந்து எம்பி குதித்த மீன்கள் எங்கள் மீது நீரை தெளித்தன. சங்கீதாவை மெல்ல விலக்கினேன்.

”அந்த நதியில வாழறதுக்கு மீனுக்கு இஷ்டமில்ல… அதான் கெடந்து குதிக்குது…” என்றேன்.

”ஆரம்பிச்சிட்டீயா… ஏன் சந்தோஷத்தில யாரும் துள்ளி குதிக்க மாட்டாங்களா…”

”எப்டி சொல்றே…?”

”வருத்தப்பட்டுச்சுன்னா அதோட துள்ளல்ல வேகமிருக்காது… குதிக்கும்போது கைல அம்புடுடும்… எங்க இதை புடிச்சுப் பாரு… இதை… இத… இத… இத…” மீன்கள் ஒவ்வொன்றாக தட்டிக் கொண்டுப் போனது.

சங்கீதாவுக்கு எல்லாமே தெரிந்திருந்தது.

லேசாக சாரல் மழை வீசியது தாழ தொங்கிய மரத்தின் கிளையை வளைத்து பிடித்துக் கொண்டு கால்களை நீரில் அளைய விட்டேன். இருவரும் அங்கிருந்த இலந்தை மரத்தடியில் உட்கார்ந்தோம். அதற்காகவே காத்திருந்தவள் போல சங்கீதா என் தொடையில் தலையை சரித்துக் கொண்டாள். அவளின் தலை மீது என் தலையை கவிழ்த்துக் கொண்டேன். சிறிது நேரம் அப்படியே இருந்தோம்.

”ஏய்… நான் ஒன்னை விட்டு எங்கயும் போ மாட்டேன் தெரியுமா…” சங்கீதா நான் கேட்காமலேயே இந்த ரகசியத்தை என் காதோடு காதாக சொன்னாள். என் கண்ணிலிருந்து நீர் வழிந்து அவள் கண்ணை நிறைத்தது. கையால் துடைத்தெடுத்தேன். இலந்தை மரம் அத்தனை அடர்வாக இல்லாததால் சாரல் அவள் நெற்றி்யை நனைத்திருந்தது.

”பசிக்குது…” என்றாள்.

கைக்கெட்டும் துாரத்தில் கிடந்த இலந்தைப்பழங்களை பொறுக்கி நீட்டினேன்.

”எ… பொறுக்கி… யான பசிக்கு சோள பொறி குடுக்கிறியா…” என்னை அடிக்க கையை ஓங்கினாள். நான் கோபித்துக் கொண்டது போல ஓடையின் மெல்லிய நீரோட்டத்தில் அலைந்தேன். எங்களுக்குள் செல்ல சண்டையும் சமாதானமும் என்றுமே அலுக்காதவை. அவள் கையில் அகப்பட்டுக் கொள்வதற்காக அங்கிருந்த கூழாங்கல்லில் அமர்ந்தேன். நீர் கூழாங்கல்லை தொட்டு அணைத்து நழுவி வளைந்தோடியது. கல்லின் கீழ்பகுதியில் பாசிப் படிந்திருந்தது. சூரியன் இந்த கல்லை விட பெரியவனாக இருக்கலாம். ஆனால் இந்த கல்லை சூடாக்க முடியாது. சூடாக வேண்டிய நிர்பந்தமும் அதற்கில்லை. ஏனெனில் சூரியனுடன் அதற்கு எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை. அந்தண்ணனை எகிறி அடிக்கலாம்… ஓடி ஒளியலாம்… அல்லது அம்மாவிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் அம்மா இல்லாமல் இருக்க முடியாது. சங்கீதாவையும் கொன்று விடுவான். மேக்ஸ் மிஸ்ஸை கூட கொன்று விடுவான். வேண்டாம்… சொல்ல வேண்டாம். யாரிடமும் சொல்ல வேண்டாம். தலை வலித்தது.

”செரி போதும் வா… போலாம்… ஒனக்கு பசிக்குதுன்னு சொன்னீல்ல…”

வீட்டுக்கு திரும்பும்போது எதுவுமே பேச தோன்றவில்லை. மரங்களுக்கு நடுவே இருந்தது வீடு. வீட்டை சுற்றிலும் கூட உயிர்வேலிதான். அம்மா வாசற்படியில் அமர்ந்திருந்தாள். கூடவே பொன்னித்தாயியும் வேறு யாரோ ஒரு ஆளும். அம்மா எப்போதுமே தனியாள் கிடையாது. அப்பா இருக்கும்வரை அப்பா… பிறகு அண்ணன்… இப்போது பொன்னித்தாயி.

”எப்பவாச்சும் கோவிச்சுக்கிச்சுன்னா ஓடை பக்கம் ஒக்காந்துட்டு வருவாப்பல… மத்தப்படி ஆளுக்கு பெரச்சன இல்ல… வீடு… காடு… தோப்பு… காணியெல்லாம் இவனுக்குதான்… பெரியவன் ஒண்ணு கூட வேணானுட்டான்…” அம்மா அந்தாளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

”எங்கொழுந்தனோட மச்சாண்டான் இதங்காட்டி மோசம்… நம்ப சுதாகரு என்ன சட்டைய கிளிச்சுக்கிட்டா அலயுது…” பொன்னித்தாயி சொன்னதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை.

”அதுசரி… இங்கயே சொல்ற வெதத்தில சொல்லி வச்சி கூட்டியாந்துடுங்க… அங்க வச்சி பிரச்சனை ஆயிடாம பாத்துக்கிட்டா போதும்…” என்றார் அந்த ஆள். எனக்கு அந்த ஆளை பிடிக்கவில்லை. என்னை தவிர எந்த ஆண்களும் நல்லவர்களில்லை. அப்பா அக்கறையேயில்லாமல் சீக்கிரமாக செத்துப் போய் விட்டார். அண்ணன், அம்மாவை என்னிடமிருந்து பிரித்து விட்டான். எதிர்வீட்டு அண்ணனை நினைத்தாலே நடுங்குகிறது.

படலை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம்.

எங்களை கண்டதும் அம்மா ஓட்டமும் நடையுமாக எழுந்து வந்தாள். ”அம்மா வந்திருக்கேன்னு தெரியுமில்ல… எங்கய்யா போனே… சாப்ட கூட இல்லையேப்பா…”

பலாப்பழவாசம் என்னை சுண்டி இழுத்தது. கொல்லைக் கதவையொட்டி இருக்கும் பலாமரத்தின் பழம்தான் இத்தனை சுண்டியிழுக்கும் வாசனையை கொண்டிருக்கும். நடுக்கொல்லையில் இரண்டு மரமுண்டு. ஆனால் அதன் வாசனையில் இத்தனை ஆழமிருக்காது. என் கணிப்பும் நினைப்பும் எப்போதுமே தவறாது. பலாச்சுளைகளை உருவி இருவரும் தின்ன ஆரம்பித்தோம்.

அம்மா பின்கட்டு வழியாக கொல்லைப்புறம் வந்திருந்தாள். சமைத்ததெல்லாம் அப்படியே கிடப்பதாக சொன்னாள். தானே சமைத்ததாக சொன்னாள். நிமிர்ந்து அவளை ஏறிட்டேன். குரலைப் போலவே முகமும் கனிந்திருந்தது.

”நீ சாப்டீயா…” என்றேன். முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டேன். வருத்தப்படும் மீன்கள் வலைக்குள் அகப்பட்டு கொள்ளும்.

“எஞ்செல்லம்…” என்றாள். கண்கள் கலங்கியது போலிருந்தது. உள்ளே வருவதற்காக எனக்கு வழி விட்டு விலகி நின்றாள்.

”சாப்பாடு எடுத்து வக்கிட்டுமா…”

”ம்ம்…” சங்கீதாவுக்கும் பசித்தது.

“கத்திரிக்கா வதக்கல் வக்கிட்டுமா…”

”ம்ம்…”

”சுதாகரு… தலமுடி பம்பையா கெடக்கு… வெட்டறதுக்கு ஆளு வர சொல்லுட்டுமா…”

”ம்ம்…”

”அப்டியே தாடியும் எடுத்துக்கலாம்ய்யா…”

தயிர் சாதம் கூட நல்ல ருசியிலிருந்தது.

”நாளக்கு ஒரு எடத்து போவுணும்… காலைல வெள்ளன கௌம்பணும்…”

”எங்க…”

நான் பயந்ததைப் போலவே “ஒனக்கு பொண்ணு பாக்கதான்…” என்றாள்.

”அதான் சங்கீதா இருக்குல்ல…”

”இருக்கு… இருக்குதான்…”

ஏன் இழுக்கிறாள்…?

”அந்த சங்கீதாக்குட்டி இந்த இருவது வருசத்தில் எங்கயிருக்காளோ… எவனுக்கு வாக்கப்பட்டிருக்காளோ…” பொன்னித்தாயிக்கு அம்மாவை கண்டால் தைரியம் வந்து விடும்… வாய் நீளும். கிண்டல் கூட செய்யும்.

”சும்மாரு பொன்னித்தாயி…” அதட்டினாள் அம்மா. பொன்னித்தாயை போல எதிர் வீட்டு அண்ணனை அதட்டவெல்லாம் முடியாது. கெஞ்சினாலும் அடிப்பான்.

”அது கெடந்துட்டு போவுது… நீ என்ன சொல்ற…” என்றாள் அம்மா.

”அதான் சங்கீதா இருக்குல்ல…”

”இருக்குதான்…” மீண்டும் இழுத்தாள்.

எச்சில்தட்டை எடுத்து போட்டு விட்டு என்னருகே வந்து அமர்ந்துக் கொண்டாள்.

”நீ சாப்டீயா…” என்றேன்.

கலங்கினாள்.

”எனக்கப்பறம் ஒன்ன யாருப்பா இப்டி கேப்பா…?”

”சங்கீதா…”

”சரி… சங்கீதாவ பாக்க போவோம்… நாளக்கு…”

“அவ இங்கதானே இருக்கா…“

”ம்மா… இவன் ரொம்ப தெளிவான லுாசு…” என்றான் தினேஷ் ஒருமுறை.

”ஆனா அங்க வர சொன்னாளே… அவங்க வீட்டுக்கு…”

”எங்கிட்ட ஒண்ணும் சொல்லுலயே…”

”அவ உசிரோடு இருந்தாதானே சொல்லுவா…”

அம்மா பேசி முடிப்பதற்குள் எனக்கு வியர்த்து விட்டது.

”அய்யோ… உசிரோடதான் இருக்கா… இவ்ளோ நேரம் எங்கூடதான இருந்தா…”

”இருந்தா… ஆனா இப்ப எங்க…?”

அம்மா சொல்வது போல அவளை காணவில்லை. எங்க… எங்க… எங்க போனா…? குழப்பமாக இருந்தது.

”கொளத்தங்கரயிலேர்ந்து நீ மட்டுந்தானே வந்தே…”

எனக்கு புரியவில்லை. சங்கீதாவும்தானே என்னுடன் வந்தாள். அப்படியானால் எங்கே…? அய்யோ… அம்மா சொல்வது உண்மையா…?

”சங்கீதா…” தரையில் ஓங்கியடித்து அழுதேன்.

அம்மா கைகளை பிடித்துக் கொண்டாள்.

”வுடு அத்தாச்சீ… தம்பி எப்பவாவது இப்டி அழுவும். அப்றம் மொள்ள மொள்ள தானே சரியாயிடும்…” பொன்னித்தாயி சொன்னது கேட்டது.

எப்படி சரியாகும்…? என் சங்கீதா இல்லாமல் எது சரியாகும்…? எல்லாமே தப்பாகி விடும். கடவுளே… கடவுளே… மண்டையே கழன்று விடுவது போல வலித்தது. எனக்காக அங்கே காத்திருப்பாள்… நிச்சயமாக அங்குதான் காத்திருப்பாள்.

”எங்கப்பா போற… பொழுதுபோன நேரத்தில… எல்லாங் காலைல பாத்துக்கலாம்…” அம்மாவின் கையை உதறினேன். இருட்டு சங்கீதாவை பயமுறுத்தி விடும். வாய் விட்டு அழுதேன். அவள் அருகே இருந்திருந்தால் இந்நேரம் என்னை கொஞ்சி சமாதானப்படுத்தியிருப்பாள். அள்ளி அணைத்துக் கொள்வாள். பக்கத்து வீட்டு அண்ணனைப் போல கத்தியை காட்டி மிரட்ட மாட்டாள். தீக்குச்சியை உடலில் வைத்து விளையாட மாட்டாள். யாராவது கேட்டால் என்ன பதில் கொடுக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லி வைத்திருக்க மாட்டாள்.

அம்மா ஓரமாக அழுதுக் கொண்டு நிற்பதும் பொன்னித்தாயி அவளை சமாதானப்படுத்துவதும் தெரிந்தது.

”வருத்தப்படாத அச்சாச்சீ… கல்யாணம் அதுஇதுன்னு புதுசா பேசுறோம்மா… அதுல தம்பி கொஞ்சம் மெரண்டுடுச்சு… அதான்…”

”சரி… அழுவாத… கல்யாணமெல்லாம் வேணாம்…” என்றாள் அம்மா என்னருகில் வந்து.

”நீ நவுரு போ…” அவளை நகர்த்தித் தள்ளினேன். அம்மாவால்தான் சங்கீதா கோபித்துக் கொண்டு குளத்தங்கரைக்கு போய் விட்டாள். வேகவேகமாக நடந்தேன். சங்கீதா… சங்கீதா… சங்கீதா… என் கணிப்பு எப்போதும் தப்பாது.

”சங்கீதா…” அழுதுக் கொண்டே அவளைக் கட்டிக் கொண்டேன்.

வேண்டுமென்றே என் பிடியிலிருந்து நழுவி ஓடினாள். நீர் கூழாங்கல்லை வளைத்து அணைத்து நெளிந்து ஓட… என் கைகளுக்கு அகப்படாமல் அவள் நெளிய… இது செல்லமான சண்டையில்லை… அவளுடைய வலி… அவளை பிரிந்து விடுவேனோ என்ற பயத்தின் வலி… நீருக்குள் அழுதால் யாருக்கும் தெரியாது. சங்கீதா… சங்கீதா… கண்ணீரை மறைத்துக் கொண்டு அவள் நீருக்குள் மறைய… மறைய… அமிழ… அமிழ… நானும் உள்ளே… உள்ளே… ஆழமாக… ஆழமாக… இருளாக… இருளாக… எல்லாமே இருளாக…

சங்கீதாவை இறுகக் கட்டிக் கொண்டேன்.

பெல்ஜியம் கண்ணாடி – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

என்னிடம் பிரதிபலிக்காத கண்ணாடி ஒன்றுள்ளது. ரசமெல்லாம் போகவில்லை. ஒருவேளை பிரதிபலிப்பதற்கு ஏதுமில்லாமல் இருக்கலாம். இதற்கு முன் உடைபட்டிருந்தது என்பதை சட்டென கணிக்க இயலாதளவுக்கு பளிச்சென்று இருந்தது. உடைசல் பெருந்துண்டுகளாக இருப்பது ஒருவகையில் வசதிதான். சிறு வீறல்களெனில் பார்வைக்கு தென்பட்டு விடும். குடிசை யாருடையதோ என்றாலும் அப்படியும் இப்படியுமாக ஓரளவுக்கு அதை பொருத்தி வைத்திருந்தேன். யாரோ இதை பெல்ஜியம் கண்ணாடி என்றார்கள். பிறப்பிடமும் வாழிடமும் முற்றிலும் வேறானவை என்பதாக இதைப் புரிந்துக் கொண்டேன். அதற்கே இருபத்துநான்கு வருடங்கள் தேவைப்பட்டிருந்தது.

“உங்க பேரு..?”

பெல்ஜியத்தில் வைத்தப் பெயரா..?

அந்த மரக்கூண்டை இரு கைகளாலும் பற்றியபடி என்னை தாங்கிக் கொண்டேன். உள்ளங்கையின் ஈரத்தில் மரம் வழுக்கியது. சிமிண்ட் தரை குண்டும்குழியுமாக இருந்தது. அறைக்கு வெளியேயும் உள்ளேயும் கால்கள்.. கால்கள்.. சிலவை சப்பாத்துகளும்  சிலவை செருப்பும் அணிந்திருந்தன. எல்லாமே என்னை நோக்கி நெட்டித் தள்ளியபடி.. மைக்குகளை போல.. ஆர்வம் விழுங்கியவைகளாக.

”உங்க பேரை சொல்லுங்க…” கேள்விகளால் நிறைந்த உலகம்.

கருப்பு அங்கி அவரை வழக்கறிஞர் என்று மூளையில் ஏற்றியது.

”சித்ரலேகா..”

அம்மா தலைமையாசிரியை. மாணவிகளை அழைப்பது போல என்னையும் முழு பெயரிட்டுதான் அழைப்பாள். அப்பாவுக்கு நான் எப்போதுமே பாப்பாதான். தவிர இருவருக்கும் நான் மட்டுமே பாப்பா.

”வயசு..”

இருபத்தியோரு வயதிற்குள் எல்லாமே முடிந்திருந்தது. தொடக்கமும் அதே வயதில்தான். ஆனால் இரண்டுக்கும் இடையே இரண்டு மாத காலங்களிருந்தது. இன்னும் சொல்லப்போனால் என் வாழ்நாளி்ல் நான் தினேஷ் வீட்டில் கழித்த நான்கு மணி நேரத்தை மட்டுமேயும் கணக்காக கொள்ளலாம்.

”அப்பா பெயர்..?”

அதைதான் கெடுத்திருந்தேன் என்று அம்மா தலையலடித்துக் கொண்டு கதறினாள். தினேஷை என் நண்பன் என்ற அளவில் அவளுக்கும் தெரியும். தினேஷ் அவளின் பழைய மாணவனும் கூட.

”தினேஷ் என்பவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு..?” வழக்கறிஞருக்கு நடுத்தர வயதிருக்கும். முகம் கடினமாக தெரிந்தது.

”கேள்வியை நிதானமாக்குங்கள்..” என்றார் நீதிபதி. பெரிய மேசைக்கு பின்புறம் அமர்ந்திருந்தார். சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட தரை அவருடையது.

“லவ்வாடீ பண்றே லவ்வு..” என் விஷயத்தை அம்மா கண்டுப்பிடித்திருந்தாள்.

ஆனால் அப்போது திருமணமுமாகியிருந்தது. முன் திட்டமெல்லாம் இல்லை என்றாலும் சமீபத்தில் நடந்த இதே போன்றதொரு சம்பவம் எங்களை பயமுறுத்த, இரண்டு மாதங்களுக்கு முன் கோயிலிலும் அதை தொடர்ந்து திருமணப்பதிவும் செய்திருந்தோம்.

காதல் என்ற வார்த்தைக்கே அப்பா ஓங்கியடித்தார். அதுவும் தினேஷுடன் என்ற போது, என்னை சுவரோடு ஓடுக்கி கழுத்தைப் பிடித்து உயரத் துாக்கினார். கதவுகளையெல்லாம் அடைத்து விட்டு அம்மா ஓலமிட்டு அழுதாள். சித்தப்பா, பெரியப்பா, மாமா, பெரியப்பாவின் மகன்கள் என எல்லோருடைய ஆதரவும் அவர்களுக்கிருந்தது. தனியாளாய் நான் வாய் கிழிப்பட்டு நின்றேன்.

”இனிம அவன பாக்க மாட்டேன்.. பேச மாட்டேன்னு சொல்லுடீ..”

இரத்தம் கறையாகப் படிந்து வாய் முழுக்க இரத்த வாடை வீசியது. நான் பெரியப்பாவின் மகனை.. அண்ணனை பார்த்து பதில் சொன்னேன். என் வயதையொத்த அவனால் என்னை புரிந்துக் கொள்ள முடியும்.

அவனை பார்க்காமல் என்னால் ஒருநாள் கூட இருக்க முடிந்ததில்லை. எனக்காக அவன் எதை வேண்டுமானாலும் செய்வான். ஆனால் முதன்முதலாக நான் அவனிடம் என்னை வெளிப்படுத்தியபோது ”என்னை உண்மையிலுமே விரும்புனீங்கன்னா.. எனக்காக எதும் செய்ய நினைச்சீங்கன்னா இந்த விஷயத்தை இத்தோட விட்டுருங்க..” என்றான். நான் அவனுக்காக எதுவுமே செய்ததில்லை.

”நான் அவனை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்..”

”அப்டீன்னா அவர் உங்க கணவர்.. அப்படிதானே..” என்றார் வழக்கறிஞர்.

ஆனால் வீடு அவனை ………..ப்பய என்றது. ”உள்ளத சொல்லுடீ.. என்னடீ ஆச்சு..?” அம்மாவின் பயத்திலிருந்த மற்றொரு பரிமாணத்தை அப்போது நான் உணரவில்லை.

அன்று இரவு முழுக்க எல்லோரும் பேசிக் கொண்டேயிருந்தனர்.. தினேஷின் தொடர் குறுஞ்செய்திகளைப் போல. பொதுவாக இரவு நேரத்தில் எங்களுக்குள் செய்தி பரிமாற்றம் இருக்காது. தினேஷ் ஏதோ வித்யாசமாக உணர்ந்திருக்க வேண்டும்.

”அந்த மசிறுதான் புளீக்.. புளீக்குன்னு மெசேஜ் அனுப்புது..” அப்பா கோபமாக என் அலைபேசியை எடுக்க, அதை விட கோபமாக அதை பிடுங்கி ஏதோ பதிலனுப்பினான் அண்ணன். ”ஓடுகாலீ.. பொட்டப்புள்ளய தலைல துாக்கி வச்சுட்டு ஆடுனீங்கள்ள.. இப்ப அனுவீங்க நெல்லா..”

”கொஞ்சம் பேசாம இருங்கண்ணீ.. அண்ணனே முடியாதவரு.. ரொம்ப டென்ஷன்ல வேற இருக்காரு.. எதாவது ஆயிட போவுது..”

நான் சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தேன். அய்யய்யோ.. அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்துட்டா.. கடவுளே.. அப்பா என்று கதறினேன்.

”சொல்லுடீ.. சொல்லுடீ.. இனிம பாக்க மாட்டேன்.. பேச மாட்டேன்னு சொல்லுடீ..” வேகமாக என்னருகே வந்தார் அப்பா. கூடவே பெரியப்பாவும். ”தம்பி பொறுமடா.. பொறும..” என்றார்.

”செரி.. பொறுமையாவே சொல்றேன். இங்காரு பாப்பா.. எல்லாத்தையும் வுட்டுட்டு மொதல்ல படி.. மத்ததெல்லாம் அப்றம் பாத்துக்குவோம்..”

எனக்கு குழப்பமாக இருந்தது. ‘அப்றம்னா.. படிச்சு முடிச்சவொடனே பெரிய அளவில ரிசப்ஷன் வைச்சு ஊரைக் கூட்டி சொல்வாங்களோ..’ கோபத்தில் பேசி விடுவதும் பிறகு அணைத்துக் கொள்வதும் அப்பாவின் குணம்.

”மயிலே மயிலேன்ல்லாம் புருசாரம் புடிக்க முடியாது.. படிப்ப நிறுத்திட்டு சூட்டோட சூடா எவனாயாது பாத்து முடிச்சிட்டாதான் தேவல.. பாவீ.. பாவீ.. ஒத்தையாச்சேன்னு உருவி உருவி வளத்ததுக்கு நல்லா துாக்கி நெஞ்சுல அடிச்சிட்டா.. இனிமகாட்டி வெளில போற வேல வச்சுக்கீட்டீன்னா வௌக்கமாறு பிஞ்சுடும்..” கோபத்தில் உடல் நடுங்க கத்தினாள் அம்மா.

விளக்குமாற்றின் வீசலில் கண்ணாடியில் வீறல் ஏற்பட்டது.

”ஆமாங்க.. தினேஷ் என்னோட கணவன்தான்..” நீதிபதியைப் பார்த்து சொன்னேன். அவரது பார்வையில் கனிவிருந்தது போல தோன்றியது.

”உங்களுக்கு திருமணம் நடந்தது எப்போது..?”

அன்றிலிருந்து சரியாக நான்கு மாதங்களாகி இருந்தது. திருமணத்தன்று எல்லோரும் எப்படி உணர்வார்களோ தெரியவில்லை.. நாங்கள் இருவருமே பயந்திருந்தோம். கோவில் வாசலில் எழும் சிறு சரசரப்புக்கு கூட நடுங்கி ஒடுங்கினோம். இத்தனைக்கும் அந்த மதிய நேரத்தில் அங்கு யாருமேயில்லை.. அர்ச்சகர் உட்பட. சாமி கூட பூட்டியக் கதவுக்குள்தான் இருந்தது. கோவில் வாசலுக்கு வந்ததும் மஞ்சள் கிழங்கு சுற்றிய தாலிக்கயிற்றைக் கழற்றி அவனிடம் கொடுத்து விட்டு, காலேஜ் டைம் முடிஞ்சிடுச்சு.. நா கௌம்பறன்..” என்றேன்.

திருமணம் பதிவாகி இருந்ததால் அதை ரத்து செய்வதற்கு முன் தினேஷ் மீது அப்பா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

”ஏன்டா.. பன்னி மேய்க்கற பயலுக்கு மேசாதி பொண்ணு கேக்குதா.. ஒங்காளுல எவளுக்கும் எதும் இல்லேன்னு இங்க படுத்து எந்திரிக்க வந்தியாடா..”

அங்கிருந்த இரு கான்ஸ்டபிள்களும் அந்த அதிகாரிக்கு கோபம் வரும்போது துாபம் போட்டார்கள்.. ஜோக் என்பதாக கருதிக் கொண்டு எதையோ சொல்லும் போது சிரித்து வைத்தார்கள். சத்தம் போடும் போது முகத்தை அதட்டலாக்கினார்கள் இப்போது சிரிக்க வேண்டியிருந்தது அவர்களுக்கு.

”ஏம்மா.. ஒனக்கு இந்த கட்டாயக் கல்யாணத்தில சம்மதம் கெடயாதுதானே.. பேசி முடிச்சப் பொறவு மாத்தக்குடாது..” என்றார் என்னைப் பார்த்து.

”இல்லேன்னு சொல்லு..” அம்மா என் தொடைசதையை கொத்தாக அள்ளி திருகினாள்.

கண்ணாடியில் வீறல் அதிகமானது.

”ஏன்டா.. ஏன்டா.. ஆயிரம் வேல கெடக்கு.. அத வுட்டுட்டு ஒங்க எழவே எடுக்க சொல்றீங்க..” லத்தியால் மேசையைத் தட்டினார். ”காதல்.. கல்யாணம்னு இனிம ஒன்ன இந்த பக்கம் பாத்தேன் ஊட்டிய முறிச்சுடுவன் ஜாக்ரத..”  என்றார்.

அம்மா என்னை கைப்பிடியிலிருந்து விலக்கவேயில்லை.

பிறகுதான் அவன் என் மனைவியை மீட்டுத் தாருங்கள் என்று நீதிமன்றம் சென்றிருந்தான்.

அப்பா சிலிண்டரை திறந்து விட்டதில் வீடெங்கும் சமையல் வாயுவின் நாற்றம்.

வீறல் ஆழமாகி கண்ணாடி துண்டானது அன்றுதான்.

பெற்றோருடன் செல்லவே விருப்பம் என்றேன் நீதிபதியிடம். எனக்கு முன் நீண்ட மைக்குகளை அப்பா தடுத்துக் கொண்டே வந்தார். என் முகத்தை துப்பாட்டாவால் மூடி வைத்தாள் அம்மா. விறுவிறுவென்று நடக்க வைத்து காரில் ஏற்றினர். என்னருகில் அப்பா வியர்த்து நாறி உட்கார்ந்திருந்தார். அம்மா உட்பட யாருமே பேசிக் கொள்ளவில்லை. அன்று மட்டுமல்ல.. அம்மா மருத்துவ விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருக்க ஆரம்பித்த பிறகு என்னுடன் பேசுவதையே நிறுத்தியிருந்தாள்.

”உங்க கணவர் வீட்டுக்கு எப்போ போனீங்க..?”

அம்மாவுக்கு அன்று மெடிக்கல் போர்டிலிருந்து பதிவுத்தபால் வந்திருந்தது. நீண்ட விடுப்பு எடுத்திருந்ததால் அம்மாவின் பணியிடத்துக்கு வேறு யாரோ முயற்சி செய்வது குறித்த பிரச்சனை மும்முரமாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தை எனக்கு சாதகமாக்கிக் கொண்டேன்.

தினேஷின் வீடு சிறிய குடிசையாக இருந்தது. எங்களைக் கண்டதும் எல்லோருமே பதறிப் போனார்கள். ஆனால் தினேஷின் வார்த்தைகளுக்கு அங்கு பூர்ண கும்ப மரியாதையிருந்தது. வயதை விட.. வருடங்களை விட அவன் நிதானமானவன். என் பெரியப்பாவின் மருமகளை போல எனக்கும் கணவன் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்று தோன்றியது. பூஜையறை என்று ஏதுமில்லை. குடிசையின் கிழக்கு மூலையில் தகரப்பெட்டியை இரண்டாக திறந்து குறுக்கே சிறு கழியை நிறுத்தி, உள்ளே இரண்டொரு சாமி படங்கள் வைத்து பூஜையறையாக்கியிருந்தனர். விளக்கை தேடினேன். கூரையில் சொருகியிருந்த சிறு பித்தளை விளக்கை நீட்டினான். திரி, எண்ணெய் என்று நான் ஏதேதோ கேட்க, “வேணும்னா மெழுகுவர்த்தி வாங்கியாரவா..” என்றான்.

”ஏய்.. அதெல்லாம் வேதக்காரங்க வீட்ல தான் ஏத்துவாங்க…” என்றேன் கிசுகிசுப்பாய். அவனிடம் நெருங்கி நின்றுக் கொண்டேன். இனி ஆயுசு முழுக்க இவனுடன்தான். திருட்டுத்தனமெல்லாம் தேவையில்லை. தினேஷிடம் வந்து விட்டேன்.. இனி என்ன செய்து விட முடியும் என்ற தைரியம் வேறு.

ஆனால் “கொஞ்ச நாளைக்கு வெளியூருக்கு போயிடுங்க..” அவசரப்படுத்தினார்கள் தினேஷின் நண்பர்கள்.

”இதெல்லாம் ஒங்க வீட்டு ஆளுங்களுக்காக டெம்பரவரியா செய்ற ஏற்பாடுதான்.. திரும்பி வந்ததும் காலேஜ்ல சேந்துக்க.. நா வேணும்னா வேலக்கு போறேன்..” என்றான் தினேஷ்.

”அப்டீன்னா என் புள்ளைங்களுக்கு ஒன்ன பத்தி என்னான்னு சொல்லுட்டும்.. உங்கப்பா அரைகொறை என்ஜினியருன்னா..?”

அந்த நேரத்தில்தான் வெளியில் கட்டியிருந்த ஆடு கர்ணக்கொடுரமாக அலறியது. குடிசை வாசலில் தொங்கிக் கொண்டிருந்த சேலைத் தடுப்பை விலக்கியதும் என் தைரியமெல்லாம் வழிந்தோட, தினேஷின் கைகளை பிடித்துக் கொண்டேன். ஆனால் சுதாரிக்கும் முன் என்னை சேர்ந்த மனிதர்களின் ரௌத்திரத்தில் நானும் அவனும் பிரிக்கப்பட்டிருந்தோம்.

அதை தொடர்ந்த நாட்களில் கிடைத்த இடைவிடாத வசவுகளும் அடிகளும் எனக்கு உறைக்கவேயில்லை.

தினேஷுக்கு என்னாச்சு..?

”கடைசியாக தினேஷை எப்போது பார்த்தீர்கள்..?” என்றார் வழக்கறிஞர்.

சாதித் தலைவர் என்னை அசிங்கமாக திட்டியபோது அப்பாவும் கூடவேதான் இருந்தார் பிறகு அவர் அப்பாவையும் திட்டினார்.

”பொட்டப்புள்ளங்கள என்னா மயித்துக்கு படிக்க அனுப்புன..”

”அது ஒரே பொட்டைதாண்ணே அவருக்கு..” சொன்னது யார் என தெரியவில்லை.

”பொட்டப்புள்ளயெல்லாம் ஒரு புள்ளைன்னு ஒண்ணோட நிறுத்திக்கிட்டியாக்கும்.. இந்த சிறுக்கியால இன்னைக்கு சாதி மானமேல்ல எடுப்பட்டு நிக்குது.. வூட்டம்மா என்னா பண்ணுது..”

”எலிமெண்ட்ரி ஸ்கூல்ல ஹெச்செம்மா இருக்காங்க..”

“அரசாங்க பள்ளியொடமா..”

”ஆமா..”

”அப்ப பொட்டச்சீங்க வெளிய அனுப்பீட்டு நீ ஊ..   கெடந்தியா..” அசிங்கமாக சைகைக் காட்டினார். இத்தனை கூட்டம் எதற்கு..? அப்பா ஏன் இப்படி பம்முகிறார்..? பெரியப்பா, சித்தப்பா, அண்ணன்கள், மாமா எல்லோருமே கூட பவ்யமாகதான் இருந்தார்கள்.

”அவுசாரியா போய்ட்ட.. ஆனா கூட உங்கப்பன் மூஞ்சிக்காக நல்லப்பயல கைக்காட்டீ வுடுறன்.. கட்டிக்க..” என்றார் அந்த ஆள் என்னிடம்.

”சரீன்னு சொல்லு சனியனே..” அப்பா வாய்க்குள்ளேயே பேசினார்.

”அந்த மயித்துக்கிட்ட என்ன பேச்சு.. வீட்டுக்கு கூட்டீட்டு போங்க.. ஆளுங்கள அனுப்பி வக்கிறேன்.. எல்லாம் சரியாயிடும்.. ஒண்ணும் மனசில வச்சுக்க வேணாம்..”  அப்பாவிடம் சமாதானமாக பேசி எங்களை அனுப்பி வைத்தார் அந்த ஆள்.

”பெத்தவங்களை காயப்படுத்தினோம்னு உங்களுக்கு தோணவேயில்லையா..” இதற்கு என்ன பதில் சொல்வது என்பது போல வழக்கறிஞரை பார்த்தேன்.

”இந்த கேள்வி தேவையில்லாதது. பதில் சொல்லும் அவசியமற்றது..” என்றார் நீதிபதி எனக்கு ஆதரவாக.

எதுதான் அவசியமானது..? தினேஷிற்கு உயிர் அநாவசியம் என்று என் பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட பிறகு எதுதான் அவசியம்..?

கேள்விகள் சூழ்ந்த உலகமிது..

”இதை தவறு என்று உணர்கிறீர்களா..? அல்லது சற்று நிதானித்திருக்கலாம் என்று யோசிக்கிறீர்களா..? இப்போது உங்கள் மனநிலை என்ன..? இந்த மனநிலையை என்னவாக உணர்கிறீர்கள்..? எனக்கு முன் நீளும் ஒலிப்பெருக்கிகள் ஆன் ரெகார்ட்.. ஆஃப் ரெகார்ட் என்று கேள்விகளை பிரித்து விட்டு, பிறகு ஆஃப் ரெகார்ட்டை ஒலிப்பரப்பியது. எங்கோ நடந்து செல்லும்போது கூட தோ.. அவதான்.. என்று விரல் சுட்டினார்கள்.  “கொஞ்சமாது கவலை இருக்கா.. என்றார்கள். யார் யாரோ ப்ராஜெக்ட் பண்ண போறோம்.. உங்க கிட்ட பேசுணும். என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க.. என்றார்கள்.

அன்றைக்கு விவாதம் முடிந்த தருணத்தில் ”நீங்க எதும் சொல்ல விரும்புறீங்களா..” என்றார் நீதிபதி என்னிடம்.

குழப்பமாக தோன்றினாலும் வழக்கம்போல மௌனமாகவே நின்றிருந்தேன்.

ஆனால் மூன்று வருடங்களை கடந்த பிறகும் அதே குழப்பம் அப்படியே நீடிக்கிறது.

நீதிபதி எதிரில் இருப்பதை போல நினைத்துக் கொண்டு வாய் விட்டு சொன்னேன்..

”நான் என்ன தப்பு செஞ்சேன்னு சொல்லுங்களேன்..”

அப்போது அறுநுாற்று ஒன்றாவது தோசையை திருப்பி போட்டுக் கொண்டிருந்தேன்.

பிறகும் பிறிதொரு கேள்வியிருந்தது.

”தினேஷ் என்ன தப்பு பண்ணுனான்..?”

 

 

சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

வனப்பாதை சுழன்று சுழன்று வாகனத்தை மேலேற்றியது. வாகனம் என்றால் முன்புறம் மகிழுந்து போலவும் பின்புறம் சிறு விலங்குகளுக்கான விசாலக்கூண்டுமாய் வடிவமைக்கப்பட்ட சொகுசு வேன். இருபுறமும் வனம் சரிவான அடுக்குகளாய் இறங்கியிருந்தது. கவிகையால் மூடப்பட்ட வனத்தின் மேற்பகுதி அடர்பச்சையாய் காட்சியளித்தது. இங்கேயே இருந்திருந்தால் சித்ராவின் விதி நிர்ணயிக்கப்பட்டிருக்காதோ.. நழுவிய மனதை நிலைப்படுத்திக் கொண்டு வாகனத்தை இயக்குவதில் கவனத்தைக் குவித்தேன். பொதுவாக நான் ஓட்டுநர் இன்றி தனியே கிளம்புவதில்லை. ஆனால் என் விருப்பத்தின்படியா எதுவும் நடக்கிறது..? குளிரூட்டியை அணைத்து விட்டு பக்கவாட்டு சன்னலை மையமாக கீழிறக்கினேன். குபுகுபுவென்று உள்ளே நுழைந்த காடு சிலிர்ப்பாக என்னை அணைத்துக் கொண்டது. சமீபத்தில் மழை பெய்திருக்க வேண்டும். ஆங்காங்கே நீர் தட்டுப்பட்டது. பசுநிலங்கள் இன்னும்.. இன்னும்.. என முளைப்புக்கு காத்துக் கொண்டிருந்தன.

வனம் என்னை இத்தனை மயக்கிப் போடும் என சமீபமாகதான் உணர்கிறேன். அதற்கு என் பணிச்சூழல் காரணமாக இருக்கலாம். தனியார் உயிரியல் பூங்காவில் புலிகளுக்கான சிறப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன். அங்கு வைத்துதான் சித்ரா அறிமுகம். மீண்டும் சித்ராவுக்குள் புகுந்துக் கொள்வது வண்டியோட்ட உகந்ததல்ல. பார்வைக்குள் மனதை செலுத்தினேன். சூழ்ந்திருந்த பசுமை அகமெங்கும் ஒட்டிக் கொள்ள, காணுமிடமெங்கும் அன்பாக ததும்பி மலையிலிருந்து அருவியாக கொட்டிக் கொண்டிருந்தது. வெறும் மாயையான எண்ணமிது என்பதை மனம் நிர்தாட்சண்யமாக மறுத்து அன்பை வரைந்துக் கொண்டே செல்ல வாகனம் முன்னேறி நகர்ந்தது..

தொழில்நுட்பத்தின் துணையோடு, சிக்கலின்றி விடுதியை அடையாளம் கண்டேன். உள்ளே நுழைந்தபோதுதான் அது விடுதி போன்ற தோற்றத்திலிருக்கும் வனமாளிகை என புரிந்தது. எல்லாம் கம்பெனி ஏற்பாடு. வரவேற்பில் என் விசிட்டிங் கார்டை நீட்ட உட்புறமிருந்த குடிலுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். காட்டேஜ் என்பதை குடில் என்று தமிழ்ப்படுத்தியாக வேண்டும் என்பதால் சொன்னேனே தவிர நவீன வசதிகளைக் கொண்ட அதி நவீன அடுக்ககம் போலிருந்தது அந்தக் குடில். சித்ரா.. பன்னீர்.. காந்தி.. வேதா.. எல்லாருக்குமே தனித்தனிக் குடில்கள்தான். ஆனால் சித்ரா அதை சிறிதும் விரும்புவதில்லை. மூர்க்கமான பிடிவாதம்.. உயிரை காவுக் கொடுக்கும் பிடிவாதம்.

பயணக்களைப்பு இருந்தாலும் குளியல் தேவைப்படவில்லை. அரைமணி நேர ஓய்வு போதுமானதாக இருந்தது. அறையை பூட்டி சாவியை வரவேற்பில் கொடுத்தேன். புருவத்தை உயர்த்திய அவர்களிடம் “நாளைக்குதான் செக் அவுட்.. கொஞ்சம் வெளில நடமாடீட்டு வர்றேன்..” என்றேன். வாகன நிறுத்தத்தில் பொருந்தினாற்போல நின்றிருந்த வேனை திறந்து உள்ளே அமர்ந்துக் கொண்டேன். தரைப்பரப்பெங்கும் செயற்கையான புல்வெளி. நடக்கத் துாண்டியது. வெளிக்காற்று உடலை நடுங்க வைத்தது. புற்கள் கால்களில் மசிந்தன. வனமாளிகையை சுற்றிலும் தடித்த சில்வர் குழாய்களால் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் பாதுகாப்பு கருதி குறுக்கு கம்பிகளால் நிறைந்திருந்தது. அதையடுத்து கோட்டையின் மதிலைப் போல அகலமான சுற்றுச்சுவர்.

சித்ராவின் கோபத்துக்கு பின்னிருக்கும் நியாயம் காடாக அடர்ந்து பரந்திருந்தது. அதன் பெரிய உடலுக்கு.. அதன் பழக்கவழக்கங்களுக்கு.. அதன் சுதந்திரப் போக்குக்கு.. அதன் தனிமை விருப்பத்துக்கு.. ஏற்ற தாரளமான பரப்பு. உயிரியல் பூங்காவின் மொத்த பரப்பும் சித்ராவுக்கே போதாது. மலையடுக்குகள் பனித்திரைக்குள் வரையப்பட்ட கோட்டோவியங்களாய் தெரிந்தன. தெளிந்த வானில் வெண்ணிற மேகம் துணுக்குகளால் விரவியிருந்தன. நான் நிற்கும் இந்த இடம் கூட அவை போன்றதொரு சிகரமாகதான் இருக்க வேண்டும். அங்கு பொசிய பொசிய அண்டிக் கிடக்கும் பசுமை இங்கேயும் இருந்திருக்கும். பின்புறமாக திரும்பிக் குடிலைப் பார்த்தேன். ஐந்து நட்சத்திர விடுதி போல அத்தனை பெரியது.. அத்தனை நவீனமானது.. இத்தனை நவீனங்களையும் இங்கு சேர்க்க எத்தனை இயற்கை செலவாகியிருக்கும்..? நான் பணியில் சேர்ந்த போதுதான் சித்ராவும் வந்து சேர்ந்திருந்தாள். பார்த்தபார்வைக்கே அவளை பிடித்திருந்தது. ஒருவேளை பிறந்த ஊரை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற வேண்டிய என்னுடைய சூழல் சித்ராவின் சூழலை ஒத்திருந்தது கூட காரணமாக இருக்கலாம்.

காட்டைப் போல சித்ராவின் மூர்க்கமும் சமாளிக்க இயலாத பெருவெளிதான்.. பார்வையாளர்கள் சிலரை ரத்தக்காயப்படுத்தியிருக்கிறாள். இவள் மரணத்துக்கு சிபாரிசு செய்த கடிதத்தில் நானும் கையெழுத்திட்டிருந்தேன்.. செய்தாக வேண்டிய நெருக்கடி. நான் திரும்பவதற்குள் சித்ரா இல்லாமல் போகலாம். குடிலுக்குள் வர மறுத்து திறந்தவெளியில் தலையை திருப்பிக் கொண்டு பிடிவாதமாக நின்றிருந்த அந்த கம்பீரமான தோற்றம்தான் இறுதியானதாக இருக்கலாம். இனி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. மரண தண்டனைக்கு நாள் குறித்தாகி விட்டது. தேவைப்பட்டால் ஆட்களை வரவழைத்துக் கொள்வதாக சொல்லி விட்டு அவசரமாக கிளம்பி விட்டேன்.

அதேசமயம் இங்கு வர வேண்டிய தேவையும் இருந்தது. இல்லையெனில் அத்தனை சுலபமாக அனுமதி கிடைத்து விடாது. நாளை காலையிலிருந்து வேலை துவங்க வேண்டும். வேலை என்ன வேலை.. புலியை கண்டுப்பிடிக்கும் வேலைதான். இந்த காட்டில் புலியின் தடம் தென்படுகிறதாம்.. நாட்டில் மனிதத்தடம் தென்படுகிறாம் என்று புலிகளெல்லாம் இப்படி ரூம் போட்டு யோசிக்குமோ..? அது கிடக்கட்டும்.. செயற்கைக் கோள் காமிராவைக் கூட ஏமாற்ற முடியுமா..? ஏமாற்றியிருக்கிறது ஒரு ஒற்றைப் புலி.. அப்படிதான் சொல்கிறார்கள்.. புலியின் தடத்தை கண்டதாக சொன்னவர்கள். அவர்கள் சுரங்கக்கூலிகள். வெறும் கூலிகள் மட்டுமல்ல.. இங்கிருந்து விரட்டப்பட்ட பழங்குடிகள் என்பதால் நிச்சயம் நம்பிதான் ஆக வேண்டும். நம்பியதால்தான் என்னை அனுப்பியிருக்கிறார்கள்.

”சார்.. சாப்பாடு எடுத்து வச்சிறவா…?” பின்னால் திரும்பினேன். குடிலின் பணியாள். உயர்த்தி பொருத்திய தொப்பி.. நேர்த்தியான உடைகள்.. கையுறை.. ஷு அணிந்த கால்கள் என சுத்தபத்தமான மனிதராக தெரிந்தார்.

”பத்து நிமிஷம் கழிச்சு வர்றேனே..” என்றேன்.

சித்ராவுக்கு பிறந்த மூன்று குட்டிகளில் சீத்தாவும் பன்னீரும் துறுதுறுப்பானவை. மாயா பிறந்த ஒரு மாதத்தில் இறந்துப் போனாள். வளர வளர பன்னீரை விட சீத்தாவிடம் துறுதுறுப்பும் துடிப்பும் அதிகம் தெரிந்தது.என் மடியிலும் தொடையிலும் நிமிண்டி விளையாடும்போது அவற்றின் உடல்பலத்தை என்னால் உணர முடிந்தது. சீத்தாவும் பன்னீரும் உணவுரீதியாக தாயை அண்டவிடாமல் பழக்கப்படுத்தப்பட்டது கூட இந்த மரண தண்டனையின் தொடக்கமாக இருக்கலாம்.

இரவு உணவிற்கு பின் அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டேன். டீப்பாயில் வைக்கப்பட்டிருந்த சிகரெட்டை அங்கிருந்த ஒருவர் சிநேகமாக நீட்ட.. தயக்கமாக வாங்கிக் கொண்டேன். அறிமுகத்தொனியில் சிரித்தார். மேற்கொண்டு நகரவியலாத என் மௌனம் அவருக்கு கனமாக தோன்றியிருக்கலாம். மேலும் அவரை சங்கடப்படுத்தாமல் என்னை விடுவித்துக் கொண்டு அறைக்குத் திரும்பினேன். தனிமைதான்.. படுக்கையறை உட்பட எல்லா இடங்களுமே தனிமைதான். விரும்பி அமைத்துக் கொண்டேனா.. அல்லது அதுவாக அமைந்து விட்டதா.. ஏதோ ஒன்று.. தனிமையும் மௌனமும் எனக்கு பிடித்துப் போனது.. மலையடுக்குகளில் உறைந்திருக்கும் மௌனத்தை மேகங்களால் புரிந்துக் கொள்ள இயலும். சித்ராவால் என்னை உணர முடிவது போல. அவள் உணர்வதை என்னாலும் உணர முடியும். அவளுக்கு என் அன்பு தெரியும்… சித்ரா.. என்ற அழைப்புக்கு ஸ்ஸ்ஸ்.. என ஒலிக் கொடுப்பாள். என் அதட்டல் தெரியும்.. என் கடிந்துக் கொள்ளல் தெரியும்.. அடைப்பட்டிருக்கும் கம்பியில் முட்டி என் கவனத்தை கலைக்கும் அவள் கோபம் எனக்கும் புரியும். மெல்ல மெல்ல தணிந்து தெளியும்போது நான் செல்லக் கோபத்தில் நகர்ந்துக் கொள்ள மூச்சுக்காற்றின் சீறலை எச்சிலாக தெறித்து என்னை சமாதானப்படுத்துவாள். எனக்குதான் தெரியவில்லை.. இனி சித்ரா இல்லாத நாட்களை எப்படி கடத்துவது என.

”என்ன சார்.. மனுஷன்ட்ட பேசற மாதிரி புலிக்கிட்ட பேசுறீங்க.. அதுக்கென்ன தமிழா தெரியப் போவுது..?” என்றார் உயிரியல் பூங்கா ஊழியர்.

”ஏன் தெரியாது.. நல்லா தெரியும்..” என்றேன்.

இன்டர்காம் ஒலியில் கலைந்து எழுந்தேன். ”லிக்கர் எதும் வேணுமா சார்..”

”ம்ம்..” யோசித்தேன்.. “இல்ல.. வேணாம்..“

நிச்சயம் உறக்கம் வரப் போவதில்லை. எழுந்து வெளியே வந்தேன். செயற்கை குளிரூட்டியை விட இயற்கை அதிகமாக குளிர்ந்து கிடந்தது. கம்பளியை போர்த்திக் கொண்டேன். இந்த இடத்தில் முன்பு யானைகள் கூட்டமாக வலசை வந்திருக்கலாம். காட்டுப்பன்றிகளும்.. கரடிகளும் மான்களும்.. அவற்றோடு இணக்கமாக பழங்குடிகளும் வாழ்ந்திருக்கலாம். ஏன்.. சித்ராவும் அவள் குடும்பமும் கூட இங்கு உலவியிருக்கலாம். காட்டின் வேட்கை தணியாத நேரங்களில் அறைக்குள் நுழைய பிடிவாதம் காட்டுவாள். அப்போதெல்லாம் அவள் கண்களில் மூர்க்கத்தை விட குழப்பமே மிகுந்து தெரியும். ஏதிலி வாழ்க்கை ஏற்படுத்தியக் குழப்பம். அந்தக் குழப்பத்தில்தான் இரண்டு மனித உயிரை காவு வாங்கியிருந்தாள். அதற்காக விதிக்கப்பட்டதுதான் இந்த மரண தண்டனை.

காட்டையும் விலங்குகளையும் தவிர்த்து மனிதர்கள் உறங்கத்தில் கிறங்கியிருந்தனர். லான், சிறு விளக்கு ஒளியில் வெகு சுத்தமாக தெரிந்தது. தடித்த கண்ணாடி சன்னல்களின் வேலைப்பாடுகள் வெளிப்புறக்காட்சியை முற்றிலும் மறைத்திருந்தன. கதவை திறக்க முயல, காவலாளி விழித்துக் கொண்ட பிறகு திடுக்கிட்டுப் போனார். அவரிடம் சமாதானமாக சிரித்தேன்.

”சார்.. நைட்ல வெளிய போறது பாதுகாப்பில்லைங்க..” என்றார் நன்றாக விழித்துக் கொண்டு.

”இத்தன தடுப்ப மீறி என்ன நொழஞ்சுடும்..? ஸ்வெட்டரை வேன்ல வச்சிட்டு வந்துட்டேன்.. எடுத்துட்டு வந்துடுறேன்..” என்றபடி நடந்தேன்.

வேனிலிருந்து கீழே இறங்கியபோது தான் காவலாளி எனக்கு காவலாக நிற்பதை கவனித்தேன்.

”ஸ்வெட்டருங்க..” என்றார் ஞாபகம் படுத்தும்தொனியில்.

அதை சட்டை செய்யாதவனாக ”அய்யோ.. சாரி.. நீங்க நிக்கறத கவனிக்கல..” என்றேன்.

என் எண்ணத்தை புரிந்தவர் போல ”சில பேரு இப்டிதான் ராத்திரி நேரத்து காட்டை பாக்க விரும்புவாங்க.. வியூ பாயிண்ட்க்கு போலாமா சார்..” என்றார்.

உடனே சம்மதித்தேன். அருகிலிருந்த கூம்ப வடிவ சிறு குடிலுக்கு அழைத்துச் சென்றார். உட்புறமாக அமைக்கப்பட்ட சுழலும் படிகளின் வழியே மேலேறினோம். உயரம் கூட கூட அகலம் குறுகிக் கொண்டே வந்து வட்டவடிவ கான்கிரீட் கட்டுமானத்திற்குள் எங்களை சேர்த்தது. இரண்டு ஆள் நிற்பதற்கேற்ப அகலத்தில் கட்டுமானம் வெளிப்பகுதியில் விரிந்து, சற்றே நெருக்கமான இரும்புக் கம்பிக்குள் அடைப்பட்டிருந்தது.. ஒட்டு மொத்தமாக எல்லாவற்றக்குமான கண்ணாடிக் கதவு. காலடியில் சிறுஒளியை எழுப்பிய மின் விளக்கு என நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட குடில்.

மலைக்காற்று கடும் குளிராக தோன்றியது. பகலில் தெரிந்த காட்சிகள் இரவில் புதிது போலிருந்தன. வானில் நட்சத்திரங்கள் மினுங்கலாய் நடுங்கின. காணுமிடங்கெங்கும் பரவியிருந்த இருள் கண்களுக்கு பழகத் தொடங்க, வனம் புலப்படத் தொடங்கியது. நகரத்து இருளைப் போல வனத்தின் இருள் அமைதியானதல்ல. அது குகையின் அந்தகாரத்தை போல ஆழமானது. மனிதனின் ஆசையை போல முடிவற்றது. சித்ராக்களை கீழிறக்கும் ஆசை.. சட்.. சித்ராவை மறக்க வேண்டும். சீவிடுகளின் ஒலி மனதை இழுத்துப் பிடித்து நிறுத்தியது.. காற்றின் வீச்சுக்கும் நீரோடையின் சலசலப்புக்கும் பக்கவாத்தியம் போல அது ஒலித்தது சீவிடுகளின் ஒலி.. அது மௌனத்தின் ஒலி. காணுமிடங்கெங்கும் ஆர்ப்பரிப்பான வனத்தின் இருள்.. விளக்குகளை வெற்றிக் கொள்ளும் இருளின் ஒளி.. அகத்தின் அடுக்குகளில் ஊடுருவி பரவ.. கண்களை நிறைந்துக் கொண்டே வந்த ஒரு தருணத்தில்.. ஒரு சரிவில்.. ஒளி வெள்ளமென வீச.. திடுக்கிட்டுப் போனோன்.

”அந்த பக்கம் பூரா மைன்ஸ்தான் சார்..” என்றார் காவலாளி என் பார்வையை உணர்ந்து.

அந்த ஒளியில் காடு நகர்ந்து விட, அதன் வழியே செயற்கை வழித்தடங்கள் புலப்பட.. இருளை ஒளி வென்று விட்டது. இந்த ஒளியின் சுவடுகள் தனிமையின் சுகத்தை கலைத்துப் போட்டு விடும். அங்கிருந்த விலங்குகள்.. தாவரங்கள்.. பூச்சிகளின் வாழ்வை குலைத்துப் போட்டு விடும். கனிமவளம் மனிதவளத்தை மேம்படுத்தியதில் வெளிச்சத்தில் இருளை தொலைத்த அவலம்.

சித்ராவை மயக்க ஊசி செலுத்தி வலியில்லாமல் சுட்டுக் கொல்வார்களாம். எதிர்க்கவோ.. பேசவோ எங்களுக்கே உரிமையில்லாத போது காட்டின் குரலை ஓயாமல் கர்ஜித்துக் காட்டும் சித்ராவுக்கு வாழும் தகுதியற்றுப் போவதொன்றும் ஆச்சர்யமல்ல.. அவள் தலைப்புச் செய்தியான நாளுக்கு பிறகு கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. இதே காரணம்தான் முன்பு பழங்குடிகளுக்கும் சொல்லப்பட்டதாக ஞாபகம். பழங்குடிகளால் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று. பிறகு புலிகளும் பூங்காக்களுக்கு இறக்கி விடப்பட்டன. கேட்பதற்கு ஆட்கள் இருக்கும்போது சொல்வதற்கு காரணங்கள் நிறையவே இருந்தன. புலிகள் அடிக்கடி சமவெளிக்கு வந்து விடுகின்றன என்றார்கள். மொட்டைத்தலையிலிருந்து வழிந்தோடுதல் இயல்புதானே.. சரி.. ஏதோ ஒன்று.. புலி-மனித மோதலால் புலிகள் கொல்லப்பட்டு விடுகின்றன என்றார்கள். பழங்குடிகள் இறக்கிவிடப்பட்ட பிறகு தனித்திருந்த புலிகளுக்கு காட்டின் நடப்பைச் சொல்ல ஆங்கிலம் தெரியாமல் போனது சுரங்க அதிபர்களுக்கு வசதிதான்.

அறைக்கு வந்ததோ உறங்கியதோ அனிச்சையாக நடந்திருக்கலாம். துாங்கியது எப்போதென்றே தெரியவில்லை.. விழிப்பு வரும்போதுதான் துாங்கியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். திரைசீலைக்கப்பால் வெளிப்புறக்காட்சிகள் பளிச்சென்றிருந்தன. தேநீரை ஏந்திக் கொண்டு வந்தவரிடம் கட்டஞ்சாயா கிடைக்குமா என்றேன். உடனே கொண்டு வந்தார். சுடுநீர் குடிப்பது போல ஃப்ளாஸ்க்கிலிருந்து இரண்டு முறை ஊற்றிக் குடித்தேன். மனம் சற்றே நிதானப்பட, அறையை காலி செய்து சாவியை ஒப்படைத்து விட்டு கிளம்பினேன்.

இளங்காலை பயணம் உள்ளப்படியே உவகையை ஏற்படுத்த, வாயைக் குவித்து ஒலியுண்டாக்கினேன். கூடவே ஒலித்தது பறவையின் குரலொன்று. வண்டியின் வேகத்தை நிதானப்படுத்தினேன். அடர்வற்ற காடு மனித சஞ்சாரத்தை வெளிப்படுத்தியது. இடையே குறுக்கிட்ட சுரங்கத்திற்கான பாதை இயந்திரங்களை ஏற்றிச் செல்ல தோதாக அகலமாகவும் அதிகாரிகளை அழைத்துச் செல்ல வசதியாக நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருந்தது. பாதையின் இருபுறமும் இடுப்பளவு கான்கிரீட் தடுப்பு. அதுவுமே அகலம் கூடியதாக இருந்தது.

முன்பெல்லாம் வனத்துறைக்கு செல்வாக்கு அதிகம்.. பழங்குடி மக்களிடம் அவர்களுக்கு அதிகாரமும் அதிகமாகதான் இருந்தது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கிறானோ இல்லையோ மயிலையும் மானையும் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று வனத்துறை ஆட்களுக்கு பஞ்சமிருக்காது.. வனத்துறை நண்பரொருவர் மயில் கறியை பிரியமாக உண்பதை பார்த்திருக்கிறேன். நமக்கென்ன..? வனத்துறையினர் பாடு.. அறநிலையத்துறையினர் பாடு.. என்று நினைத்துக் கொள்வேன். இப்போது வனத்துறை ப்ளுகிராஸ் போல ஆகி விட்டது. சினிமாவில் எந்த விலங்குகளையும் வதைக்கவில்லை என்ற கிளியரன்ஸ் சான்றிதழுக்கு நிறைய தொகை வாங்குவதாக கேள்வி. மேல் வரும்படி குறைந்து விட்டதால் இப்படியெல்லாம் இட்டு நிரப்பிக் கொள்கிறார்கள் போல.

வனம் ஏறி இறங்கி அடர்வுக்குள் செல்ல பாதை ஒழுங்கற்று.. நேர்த்தியற்று நெளிந்துக் கிடந்தது. தொடப்படாத காடுகள் தாவரங்களால் வழிந்துக் கிடந்தன. கனிம வேலை தொடங்கும் வரை அதற்கு அனுமதியுண்டு. ஆங்காங்கே ரெட் அலர்ட் போடப்பட்டிருந்த பாதையில் திரும்பினேன். இவை முன்னாள் பதிகளாக இருக்கலாம். நகரில் வாழ்ந்துக் கெட்ட வீடுகள் கான்கிரீட் பாழ்களாக கிடப்பது போல பதிகளின் குடியிருப்புகள் வீடாக உருவம் தாங்கி நிற்கவில்லை என்றாலும் மறைந்து போன வாழ்விடத்தின் வாசம் முற்றிலுமாக அகலவில்லை.

”ஏன் சார்.. சாவுதான் தீர்வா..? கூண்டுக்குள்ளயே அடச்சு போட்டுடுலாம்ல..” கையெழுத்து இடும் முன் ஈனஸ்வரத்தில் கேட்டேன். எனக்கு தெரியும்.. அவர்களின் பயம் சித்ராவின் மீதல்ல.. சித்ராவுக்குள் பொதிந்திருந்த காட்டின் மீதான பயம்.. சித்ராவை நீடிக்க விட்டாலோ.. குட்டிகளுடன் நெருங்கி பழக அனுமதித்தாலோ உள்ளிருக்கும் காட்டை வெளியே எடுத்து விடலாம் என்ற பயம். அதிலும் சீத்தாவுக்கு தாயைப் போன்று மூர்க்கமும் பிடிவாதமும் அதிகம். இத்தனை பெரிய வனத்தில் ஒற்றைப் புலிக் கூட இருக்கக் கூடாது என்ற முடிவின் பின்னிருப்பதும் பயம்தான். பூண்டோடு அழிக்க சொல்லும் வன்மம். புலியை பூனையாக்க வேண்டும். கோவில் யானை போல பூங்காப் புலி.

கானகம் அடர்ந்து நகர்ந்துக் கொண்டிருந்தது. பாதை அருகிக் கொண்டே வந்தது. அவர்கள் குறிப்பிட்ட பகுதி இதுதான் என உறுதி செய்துக் கொண்டேன். தோதான இடம் பார்த்து வண்டியை நிறுத்தி இன்ஜினை அணைத்தேன். பைனாக்குலரை கண்களில் பொருத்திக் கொண்டேன். இன்னும் சிதையாத காடு. மலைச்சரிவுக்கும் பள்ளத்தாக்குக்குமிடையே நீரோடை ஒன்று வளைந்து நெளிந்து ஓடியது. உயரமில்லாத மரங்கள் சரிவுகளில் செறிந்திருந்தன. சரிகையை அவிழ்த்து விட்டது போல் காட்டாறு நுரைத்துக் கொண்டோடியது. பசும் பரப்பின் மீது மேகங்கள் குவியல் குவியலாக பரவியிருந்தன. ஏற ஏற மலையின் உயரம் குறைந்துக் கொண்டே வருவதை போல மேகங்களும் கரைந்து உருமாறிக் கொண்டே இருந்தன. பாதையின் ஓரமாக பெரிய மரமொன்று வேரோடு விழுந்து கிடந்தது. நீர்வீழ்ச்சி நுரைத்து வழிந்தது. மரங்களில் ஆங்காங்கே பைகளை கட்டித் தொங்க விட்டது போல தேன்கூடுகள் தொங்கிக் கொண்டிருந்தன.

கீழே இறங்குவது என்பது முட்டாள்தனமான துணிச்சல் என்பது எனக்கும் தெரியும். ஒற்றைப்புலி மிகுந்த ஆக்ரோஷம் கொண்டிருக்கலாம். தனக்கான உணவு உறுதியான பின்.. நட்பைத் தேடிக் களைத்திருக்கும். பகை கூட அகப்படாத தனிமை குழப்பத்தை உண்டுப் பண்ணியிருக்கும். அதுவே மூர்க்கத்தை முட்டிக் கிளப்பி விடும். புகைப்படத்தில் காட்டப்பட்ட அதன் தடத்திலிருந்த ஆவேசம் அதைதான் சொன்னது. நவீனங்களின் துணையோடு அதை பிடித்து விடுவது சுலபம்தான். பிறகு.. பிறகென்ன பிறகு.. உயிரியில் பூங்காவில் புலியின் நீள அகலங்களில் மற்றுமொரு பூனை உலாவித் திரியும். ஒற்றைப்புலியின் உடனடித் தேவை துணை.. துணை மட்டுமே. உணவோ.. இணையோ.. அடுத்தக் கட்டம்தான். இனத்தோடு இனம் துணையாகும்போதுதான் தன்னுள்ளிருந்து தான் மீள இயலும்.

வாகனத்தின் பின்கதவை திறந்தேன். பாதிக்குமேல் தெளிந்திருந்த மயக்கத்தின் ஊடே என்னை விழித்துப் பார்த்தது அது. விரிந்த அதன் கண்களின் ஒளி ஒரு கணம் சித்ராவை ஞாபகப்படுத்த சிலிர்த்து அடங்கினேன். அதன் வலது பாதத்தில் லேசாக தட்டினேன். தட்டினால் எழுந்து கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தில் முடிந்தவரை விசும்பி எழுந்தது. என் மேலுடலை முன் தள்ளி கைகளை காற்றில் அசைத்தேன். புரிந்துக் கொண்டது. திறந்திருந்த கதவின் வழியே வெளியே பாய்ந்தது.

அதன் கால்களை பஞ்சுப்பொதிகள் போல வனம் தாங்கிக் கொள்ள இடுப்பை அசைத்து அசைத்து நகர்ந்து நகர்ந்து.. என்னை விட்டு விலகி விலகி..

“சீத்தா..“ கதவை மூடிக் கொண்டு வெடித்து அழுதேன்.

ஆழமான பரவல் – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

சாதத்தை தட்டில் கொட்டிக் கொண்டான் கதிர். சாம்பாரில் கிடந்த முருங்கைக்காயை கடமைக்கு உறிஞ்சி விட்டு சோற்றை அள்ளி திணித்தான். ஞாபகம் வந்தவன் போல அவ்வப்போது கேரட் பொறியலையும், வெண்டைக்காய் வதக்கலையும் தொட்டுக் கொண்டான். வாழைக்காய் வறுவலை சட்டை செய்யாமல் இடது கையால் குழம்பை சோற்றில் ஊற்றிக் கொண்டே குப்புறக்கிடந்த கத்திரிக்காயோடு சோற்றை அள்ளி வாய்க்குள் திணித்துக் கொண்டான்.

கதிர் அப்போது சிறுவனாக இருந்தான். கிட்டத்தட்ட குண்டானில் இருந்த முழுச்சாப்பாட்டையும் முடித்தபோதும் வயிறு வலித்தது அவனுக்கு.. ஆனால் பரவலாக வலிக்கவில்லை. வயிற்றின் ஆழத்தில் வலி. அதுதான் தொடக்கம். அதை அப்படியே விட்டுவிட்டால் பரவலாகி விடும். நழுவும் டவுசரால் வயிற்றை இறுக பிடித்துக் கொண்டாலும் வலி நிற்காது. வலி வரும்போதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று புரிய முடிந்தாலும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் போதவில்லை. தங்கை எதற்கோ அடம் பிடித்து அழ, அவள் தட்டிலிருந்த சோற்றை சாப்பிடும் எண்ணத்தோடு அருகே சென்று.. பிறகு அம்மாவின் எரிச்சல் பார்வைக்கு பயந்து விலகி ஓடினான். எங்கு ஓடினாலும் வயிறும் கூடவே வந்து விடுகிறது. பள்ளியில் இருக்கும் போது.. விளையாடும்போது.. ஏன் துாங்கும்போதுகூட வயிறு அவனை விலக்குவதில்லை.

அதை தவிர்த்து வெளியுலகில் அவனுக்கு குறைவில்லை. வயிற்று தொல்லை அவனை படுத்தி எடுத்தாலும் வேலைவெட்டியில் அவனை யாருமே குறை சொன்னதில்லை. அரசாங்க அலுவலகத்தில் தினக்கூலி பணியாளன். டீ..காபி வாங்கி வருவது.. கப் அண்ட் சாசர்களை கழுவுவது.. பியூன் வாஞ்சி கட்டளையிடும் வேலைகளை சிரமேற்கொண்டு செய்வது என எதிலும் குறையில்லை.

கதிரின்  விறுவிறுப்பான நடையில் கழுத்தில் மாட்டித் தொங்க விடப்பட்ட செல்போன் குலுங்கி ஆடியது. அதிகம்போனால் அதில் பத்து பேருடைய எண்கள் சேமிப்பிலிருக்கும். வாஞ்சியிடமிருந்துதான் அடிக்கடி அழைப்பு வரும். டீக்கடையிலிருக்கும் போது.. சாப்பாடு வாங்க செல்லும்போது.. பேப்பர் வாங்கி வரும்போதெல்லாம்.. “கதிரு.. சீக்ரம்..“ “கதிரு சீக்ரம்..“ என்று அவசரப்படுத்துவான். ஞாயிற்றுக்கிழமைகளில் செல்போனுக்கு அதிகம் வேலையிருக்காது. எப்போதாவது குணா அழைப்பான். குணா ஆபிசர் வீட்டில் சமையல் வேலை செய்பவன். இன்று பகல் கடுக்கத் தொடங்கிய நேரத்தில் குணா அழைத்தான்.

”கதிரு.. எங்கருக்க..” குணா அழைத்தபோது திண்ணையில் உட்கார்ந்திருந்தான் கதிர். பொதுவாக விடுமுறை நாட்களில் அருகிலிருக்கும் பஞ்சவர்ணசாமி கோயிலிலேயே விழுந்துக் கிடப்பான். கூட்டத்துக்கும் உபயத்துக்கும் குறைவில்லாத கோவில். தங்கைக்கு உடல்நிலை சரியில்லாததால் அம்மா அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று விட, அப்பாவுக்கு துணையாக இருக்க வேண்டிய நிர்பந்தம் கதிருக்கு.

”வீட்லதான் சார்..” குணாவை சார் என்றுதான் அழைப்பான். குணாவுக்கு முப்பத்துநாலோ.. ஐந்தோ வயதிருக்கும். எப்படியிருந்தாலும் கதிரை விட இரண்டொரு வயது இளையவனாகதான் இருப்பான்.

”ஒடனே கௌம்பி வர்றியா..”

உற்சாகமாக தலையசைத்தான். இதேபோல் இரண்டு முறை அழைத்திருக்கிறான். ஆபிசர் வீட்டுக்கு வருபவர்கள் வாங்கி வரும் பழங்கள்.. இனிப்புகள் எல்லாமே விலையுயர்ந்தவை. குணாவுக்கும் பெரிய மனசுதான்.

”கௌம்பி வர்றியா கதிரு..”

”வர்றன் சார்.. வர்றன் சார்..” என்றான் வார்த்தையாக.

அலுவலகத்தில் வைத்துதான் குணா பழக்கம். தலைமை அலுவலகம் என்பதால் கூட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. கேம்ப் இல்லாத நாட்களில் ஆபிசரை பார்க்க யாராவது வந்துக் கொண்டேயிருப்பார்கள்.  சில நேரங்களில் மதிய உணவுக்கு கூட வீட்டுக்கு செல்ல முடியாத நேர நெருக்கடி வந்து விடும் அவருக்கு. அப்போதெல்லாம் வாஞ்சி குணாவுக்கு போன் செய்து “சாருக்கு சாப்பாடு கொண்டாந்துடு..” என்பான். ஆபிஸ் கார் லஞ்ச் எடுப்பதற்காக வீட்டுக்கு போகும். ஆபிசர் குடியிருப்பும் அலுவலகமும் அருகருகில்தான் இருந்தன. சொல்லப்போனால் கதிரின் வீடும் அந்த பகுதியில்தான் இருந்தது. காரில் தோரணையாக அமர்ந்து வரும் குணாவை கதிருக்கு பிடிக்கும்.

ஆபிசரின் டிபன்கேரியருக்கு ஆபிசருக்குண்டான மரியாதை உண்டு. குணாவிடமிருந்து பவ்யமாக வாங்கிக் கொள்வான் கதிர். முதல் தளத்திலிருக்கும் சாப்பாட்டு அறையில் கொண்டு போய் சேர்ப்பிக்கும் வரை அதே பவ்யம் இருக்கும். பெரிய சைஸ் ஐந்து அடுக்கு கேரியர். கேரியரை பார்த்த முதல் தருணத்தில் ஆச்சர்யமாக இருந்தது கதிருக்கு.

“கேரியருதான் பெருசு கதிரு.. அய்யா கொஞ்சந்தான் சாப்புடுவாரு..”

குணா சொல்வது உண்மைதான். டிபன்கேரியரில் பாதி சாப்பாடு மிச்சப்பட்டிருக்கும். அது கதிருக்கானது. அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருப்பான் குணா. சின்ன சின்ன கப் அன்ட் சாஸர்களை கழுவியே பழகிப் போயிருந்த கதிருக்கு அத்தனை பெரிய டிபன்கேரியரை கழுவுவது பெருமையாக இருந்தது. வட்ட வட்டமான அடுக்குகள்.. ஒன்றோடொன்று பொருந்துவதற்கேற்ப மடித்து விடப்பட்ட விளிம்பு.. கீழடுக்கில் உட்கார தோதாக பள்ளமாக்கப்பட்ட மேலடுக்கு.. கேரியரை தாங்கிக் கொள்ளும் நீளக்கம்பி.. பார்வைக்கே கவர்ந்திழுக்கும் பளபளப்பான சில்வர் வேறு. அதனை சுத்தம் செய்வதற்காகவே பிறப்பெடுத்தது போல எண்ணிக் கொள்வான்.

”சார் ஏன் இவ்ளோ கொஞ்சமா சாப்புடுறாரு..” என்பான் டிபன் கேரியரை பூட்டியக் கொண்டே.

”அவருக்குதான் சக்கர.. ரெத்தக்கொதிப்பெல்லாம் இருக்கில்ல.. அப்றம் சோத்தை தின்னு..? இப்பதான் என் வைத்தியத்தில கொஞ்சம் கன்ட்ரோல் ஆயிருக்கு.. திருப்பி. சோத்தை தின்னா ஏறிக்காதா..?” என்பான்.

”நீங்க டாக்டரா..?”

”ஆமா..”

ஒரு மருத்துவர் சமையல்வேலை பார்ப்பது ஆச்சர்யமாக இருந்தது கதிருக்கு. உடம்பு சரியில்லாத நேரத்தில் தனக்கும் வைத்தியம் பார்க்க சொன்னான். குணாவின் வைத்தியம் புதுமையாக இருந்தது. கதிரின் கைகளை இறுக்கி மூடச் சொன்னான். பிறகு மூடிய விரல்களில் கலர் ஸ்கெட்ச்சில் மாறி மாறி புள்ளிகள் வைத்தான். கலர்தெரபியாம். உடம்பு சரியாகி விடும் என்றான். சென்றமுறை சளிப்பிடித்துக் கொண்டபோது கட்டை விரலில் ஆறேழு மிளகை வரிசையாக வைத்து டேப் போட்டு ஒட்டி விட்டான். சளியெல்லாம் சரியாப் போவும்.. என்றான். ஆனால் அதையும் மீறி காய்ச்சல் வந்து விட, உச்சந்தலை உட்பட அங்கங்கே ஊசியை சொருகினான். வலிக்கவுமில்லை.. ஆமாம் வலிக்கவுமில்லை. ஆபிசருக்கும் இதுபோலதான் செய்வதால்தான் சுகரும் பிரஷரும் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொன்னான், கதிருக்கு புரியவில்லை. அதேநேரம் கேள்வியாக எதுவும் கேட்க தோன்றவில்லை.

ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தை வீடுகள் கொண்டாடிக் கொண்டிருந்ததால் தெருவில் நடமாட்டம் அதிகமில்லை. கதிருக்கு உள்ளபடியே நீளமான கால்கள். அதில் விறுவிறுப்பும் ஏறிக் கொள்ள பதினைந்து நிமிட நடையில் ஆபிசர் வீட்டை எட்டி விட்டான். காம்பவுண்டுக்குள் நுழையப்போகும் தருணத்தில் ஆபிசரின் கார் கதிரைக் கடந்து எதிர் திசையில் சென்றது.

”சார் இப்பதான் கௌம்புனாரு..“ கதிரைக் கண்டதும் குணா உற்சாகமானான்.

”தெரியும் சார்.. பாத்தேன்..”

”சாப்டீயா..”

வயிறு பரவலாக வலித்துக் கொண்டிருந்தது.

”சோறாக்கிட்டேன்.. சாப்டறதுக்குள்ள ஏதோ அவுசர வேலன்னு சார் கௌம்பீட்டாரு..”

”லீவு நாளுன்னா கூட வேலை இருக்குமா..“

”ஆபிசருக்குல்லாம் எல்லா நாளும் வேலயும் உண்டு.. அதுக்கேத்த காசும் உண்டுல்ல..” கண்ணடித்து கலகலவென்று சிரித்தான் குணா.

கதிருக்கு அதெல்லாம் புரிவதில்லை. வாஞ்சி எப்போதாவது கொடுக்கும் காசை அம்மாவிடம் கொடுத்து விடுவான். கூட்டம் நடக்கும் நாட்களில் வாஞ்சியின் தயவால் தீனி… காபி.. டீ கிடைத்து விடும். ஒருமுறை ஆபிசர் இவனை பார்த்து விளையாட்டாக சொன்னது ”புள்ளையாண்டன்..” என்று காதில் விழுந்தது கதிருக்கு.

வாஞ்சி விழுந்து விழுந்து சிரித்து விட்டு “சார் ஒன்னை புள்ளையாருங்கிறாரு.. ஒன் வயித்த பாரு..”என்றான்.

உப்பலாக தனித்து நீண்டிருந்த வயிற்றை தொட்டுக் கொண்டு இவனும் சிரித்தான். ”இந்த வயிறு மட்டும் இல்லேன்னா சூப்பரா இருக்கும் சார்.. வயத்திலதான் சார் எல்லா பிரச்சனயும்.. ஆனா வயிறுதான் சார் பெருமை.. அதான ஒடம்புல முக்கியம்..”

”போடா லுாசு..” என்று கிண்டலத்தான் வாஞ்சி.

”சரி.. கதிரு கொஞ்சம் வெளி வேல கெடக்கு..  நா கௌம்புட்டுமா..  ஆக்கி வச்சதெல்லாம் அப்டியே கெடக்கு.. சாப்டு செத்த நேரம் படுத்தீன்னா பறந்து வந்துடுறன்..” என்றான் குணா.

”நீங்க சாப்டீங்களா சார்..”

”நா வெளிய பாத்துக்கிறேன்.. பாத்து.. பத்ரம். கதவ தாப்பா போட்டுக்க.. நா வரவுட்டு கௌம்பிக்கலாம்.. வருட்டுமா..”

ஆபிசரின் குடும்பம் வெளியூரில் இருக்கிறது. சமையலுக்கு தோதாக குணா கூடவே தங்கிக் கொண்டான். சமையலறையும், முன்கூடமும் புழங்கிக் கொள்ள அவனுக்கு அனுமதியுண்டு. மீதி அறையின் சாவிகள் ஆபிசரிடம் இருக்கும்.

உண்டு முடித்து பிறகு தரையை சுத்தப்படுத்தினான் கதிர். முன்கதவை மூடி தாழிட்டான். வெளியில் வாட்ச்மேன் உண்டு. ஆபிசர் உபயோகிக்கிறாரோ இல்லையோ கொல்லைப்பகுதியில் செடிக் கொடிகளோடு  ஊஞ்சல்.. சறுக்கு.. சிமிண்ட் பெஞ்ச் என ஏக கோலாகலம். பூவரச மர நிழலிலிருந்த சிமெண்ட் பெஞ்சில் கைகளை கோர்த்து தலைக்கு அடியில் முட்டு கொடுத்து மல்லாந்து படுத்துக் கொண்டான். எறும்புக் கூட்டம் ஒன்று தொந்தரவான கோபத்தோடு அங்குமிங்கும் அலைந்து இவனையும் கடித்து வைக்க.. அதை கையால் தள்ளி நகர்த்தினான். மல்லாந்திருந்த உடலில் வயிறு மேடாக ஏறி இறங்கியது. தொங்கிக் கொண்டிருந்த செல்போனை சட்டைப் பையில் போட்டுக் கொண்ட நேரத்தில் அலைபேசி அடித்தது.

”சம்பளத்தில கழிச்சுக்க சொல்லி ஆபிசர்ட்ட பணம் கேட்டுப் பாரேன் கதிரு..” என்றாள் அம்மா.

”அவரு ஊர்ல இல்லம்மா..”

”பெரிய காச்சலாருக்கும்னு சொல்றாங்கப்பா..”

”அதுக்கு நா என்ன செய்யிட்டும்..”

அலைபேசியை அணைத்து சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். கண்களை மூடி வலது கையை நெற்றியின் மீது படுக்கையாக்கிக் கொண்டான்.

தங்கச்சி பாவம்தான்.. ஆனா அதுக்கு ஒண்ணும் புரிய மாட்டேங்குது.. வயித்துவலியதான் காச்ச.. காச்சன்னு சொல்லுது.. நெறைய சோறாக்க சொல்லி சாப்பட வச்சா சரியாப் போயிடும்.. சின்ன வயதில் பாப்பாவும் இவனுமாக சோறு சமைத்து விளையாடியதை நினைத்துக் கொண்டான். இருவரும் சின்னதான மூன்று கற்களைக் கூட்டி அதில் நுழையுமளவுக்கான சின்ன சின்ன சுள்ளிகளை  விறகுகளாக்கிக் கொள்வார்கள். கொட்டாங்குச்சியில் இருக்கும் மண்தான் சோறு. பாதி விளையாட்டில் சோற்றை அள்ளி திங்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்து விடும். அம்மாவிடம் ஓடுவான். பல சமயங்களில் அம்மா வருத்தப்படும். சில சமயங்களில் “அதான் காலைல சாப்டுட்டீல்ல.. அப்றம் என்ன..?“ என்று கத்தும். ”ஆட்டுப்புளுக்க சம்பளத்தில ஒக்காந்து சாப்ட அம்பது பேராம்..” ஊரிலிருக்கும் மாமியார் குடும்பத்தை இழுத்து திட்டும்.

வயிற்றின் ஆழத்திலிருந்து வலி கிளம்புவது போலிருந்தது. இன்னும்  கொஞ்சநேரத்தில் அது வயிறு முழுக்க பரவும். குழம்பும் பதார்த்தங்களும் இருந்தளவுக்கு சோறு அதிகமாக இல்லை. பதார்த்தங்களை அவன் அதிகம் விரும்புவதுமில்லை. மளமளவென்று அங்கிருந்த குழாயில் கைகளை ஏந்தி தண்ணீரை குடித்தான். இருந்தும் வயிற்றில் இடம் பாக்கியிருந்தது. அப்படிதான் தோன்றியது. “ஆனை வந்தாலும் அடங்காதுடா..“ என்பாள் அம்மா. ஆனாலும் சாப்பிடும்போது மற்றவர்களை போல “போதும் எழுந்திரி..“ என்று சொன்னதில்லை.

அம்மாவை தவிர யார் அவனை உட்கார வைத்து சோறிட்டிருக்கிறார்கள்..?  சித்தப்பா வீட்டுக்கு போன ஒரு சமயத்தில் சித்தி “போதும் எழுந்திரி..“ என்று சொல்லியிருக்கிறாள். “வவுறா.. வண்ணாஞ்சாலா..?“ என்று அத்தை திட்டியிருக்கிறாள். கல்யாண வீட்டில் இரண்டொரு முறை அப்பாவுடன் சென்றபோது யாரும் எழுந்திரிக்கச் சொல்லவில்லை. அதேபோல அந்த கோவிலில் அவனை உட்கார வைத்து சோறிட்டதை கதிரால் மறக்கவே முடியாது. அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பா வேறு “இருமுடி காசுல சோத்துக்கும் சேத்துதான் வாங்கிக்குவாங்க.. நல்லா தின்னு.. தின்னு..“ என்று உசுப்பேற்றினார். அப்போது வேலையிலிருந்தார். அரசாங்க வேலைதான். ஆனால் கீழ்நிலை பதவி. அவரை பொறுத்தவரை கீழ்நிலை பதவியில் பியூன் பதவிகள் ஆசிர்வதிக்கப்பட்டவை. அதிகாரியிடம் ஏச்சு..பேச்சுகள் கிடைத்தாலும் அதற்கேற்ப வருமானமும் இருக்கும். வெளியே ஜபர்தஸ்தும் காட்டிக் கொள்ளலாம்.. அதுவும் காசாக்கிக் கொள்ளக் கூடிய ஜபர்தஸ்து. ஆனால் இவர் வகிக்கும் பதவி எதற்கும் லாயக்கில்லை. சம்பளத்துக்கும் சேர்த்துதான். பியூன்களிடம் அன்பாகவும் பணிவாகவும் இருக்க பழகிக் கொண்டார். டீ காசாவாது மிஞ்சும்.. அந்த சகவாசத்தில்தான் இந்த கோயில் பழக்கமானது. இந்த கோயிலில் சிலையை விட  மனித உருவில் நடமாடும் சாமிக்குதான் பக்தர்கள் அதிகம். எப்போதும் கூட்டம் அலைமோதிக் கிடக்கும்.

எப்போது துாங்கினான் என தெரியவில்லை. தலைக்கு மேல் காகம் இடைவிடாமல் கத்த, விழிப்புத் தட்டியது. வாயில் வழிந்த எச்சிலை இடது கையால் துடைத்துக் கொண்டான். துாக்கம் முழுமையாக விடுபடவில்லை. அனிச்சையாக காகத்தை துரத்தும் சைகையில் கையை உயர்த்தினான். எழுந்து உட்கார்ந்துக் கொண்டான். சட்டைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து நேரத்தை பார்த்தான். மணி மூன்றாகியிருந்தது. குணாவின் அழைப்பு தவறியிருந்தது. அப்படியே அழுத்தி மறு அழைப்பு செய்து துண்டித்தான். குணாதான் “நீ மிஸ்ட் கால் குடுத்தா போதும்..” என்று சொல்லியிருந்தான்.

”துாங்கீட்டீயா கதிரு..”

”ஆமா சார்..”

”கௌம்பிடாத.. வந்துடுறேன்..” என்றான். மெல்லியப் பேச்சுக்குரல் கேட்டது. பெண் குரலாக இருக்கலாம்.

”சரிங்க சார்..”

ஒருமுறை ஆபிசர் வெளியே போயிருந்த நேரத்தில் வீட்டை பூட்டி விட்டு குணா எங்கோ கிளம்பி போக, அந்த நேரம் ஆபிசர் வீட்டுக்கு திரும்பி விட வேலை பறிபோகுமளவுக்கு, பிரச்சனையாகிப் போனது. குணாவுக்கு சமையல் வேலை கைக்கொடுத்ததோ இல்லையோ கலர்தெரபி கைகொடுக்க வேலை நீடித்துப் போனது.

”சார்.. நான் அஞ்சாப்பு படிக்கறப்ப செந்தில் தெனைக்கும் மதியானம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போயிடுவான்.. ஒருநா என்னையும் கூட்டீட்டு போனான்.. பருப்பு போட்டு நெய் ஊத்தி அவுங்கம்மா சோறு போட்டாங்க.. நீங்க சமைக்கற மாதிரியே இருந்துச்சு அவங்க சமையலும்..” கதிரின் இம்மாதிரியான பேச்சுகள் அபத்தமாக தோன்றினாலும் அவனின் ஆபத்தில்லாத பேச்சுத்துணை குணாவுக்கு பிடித்திருந்தது.

”அப்டீன்னா என் சமயல் நல்லால்லேங்கிறியா..?”

”இல்ல சார்.. இல்ல சார்.. சூப்பரா சமக்கிறீங்க..”

பிஸ்கெட் பாக்கெட்டை பிரித்து இரண்டு மட்டும் எடுத்துக் கொண்டு மீதத்தை அப்படியே கதிரிடம் நீட்டினான்.

”எத்னாவது படிச்சிருக்க..”

”ஆறாவதோட நின்னாச்சு.. வீட்ல சண்டப் போட்டுட்டு எங்கப்பா காசு குடுக்க மாட்டேன்னு போயிட்டாரு.. அம்மா பிரைவேட் ஸ்கூல்ல ஆயா வேலைக்கு போச்சு.. அப்போல்லாம் இங்க பாருங்க.. இங்க பாருங்க சார்.. இப்டிதான் குனிஞ்சுக்கிட்டே நடப்பேன்..”

”ஏன்..?”

”வயித்துவலிதான்..”

வயிற்றுவலி பிரச்சனையோடு ஒண்ணுக்கு போக வேண்டும் என்ற உணர்வு வேறு. ஆனால் அது கொஞ்சம் வேறுமாதிரியான அவதி. அப்போது அவனுக்கு இருபத்தைந்திருக்கும். கனவு முழுக்க பெண்கள். அதுவும் துணியில்லாத உடல்களோடு. கனவில் கூட பயந்து வியர்த்து போய் கண்களை மூடிக் கொள்ளத் தோன்றும்.. ஆனாலும் திருட்டுத்தனமாக பார்ப்பான். உடனே “ஒண்ணுக்கு“ வருவது போலிருக்க, விழிப்பு வந்து விடும். சில சமயங்களில் பகலில் கூட அப்படியொரு உணர்வு வரும். ஆனால் அது வயிற்று வலியை விட தேவலாம். தீவிரமாக சாமி கும்பிட்டதி்ல்தான் படிபடியாக குறைந்து வருவதாக நம்பினான். இந்த சேதியை வெளியே சொல்லக் கூடாது என்ற சத்தியத்தோடு குணாவிடம் ஒருநாள் பகிர்ந்துக் கொண்டான்.

அந்த கோயிலில் செக்யூரிட்டியாக இருந்தபோது நிஜமாகவே ஒண்ணுக்கு வந்தாலும் அடக்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.. கூட்டம்.. கூட்டம்.. எங்கும் பக்தர்கள் கூட்டம்.. ஒதுங்குவதற்கு சற்று துாரம் நடக்க வேண்டும். பணி நேரத்தில் அதெல்லாம் சாத்தியமில்லை. தங்குவதற்காக கோவில் நிர்வாகம் ஒதுக்கியிருந்த இடத்திலும் அதே நிலைதான். அது முன்னாள் மாட்டுக் கொட்டகை.. நான்கு புறமும் தகரத்தால் தடுத்திருந்தனர். செங்கல் பதித்தத் தரை. பாய்.. தலையணை.. இரண்டு செட் துணிமணிகள்.. ஒரு கடப்பா கல் பதித்த அலமாரி. இவனைப் போல ஏழெட்டு பேர் அங்கிருந்தனர்.. சம்பளம் என்று ஏதுமில்லை. இவனுக்கு செலவுமில்லை. வருடத்திற்கு இரண்டு செட் துணிமணி கிடைத்து விடும். எப்போதும் அவனுக்கு வயிறுதான் பிரச்சனை. நான்கு மணிக்கே குளித்து தயாராகி விடுவான். அதுவரை முணுக்முணுக்கென்றிருந்த வயிறு காலை ஏழு மணிக்கெல்லாம் பெரியதாக ஓலமிடத் தொடங்கும். அந்நேரத்திலேயே பக்தர்கள் கூட்டம் நெருக்கியடிக்கத் தொடங்கியிருக்கும். அதட்டலாக பேசி வரிசையை சரிப்படுத்த அவனால் முடியாது. இருந்தாலும் கெஞ்சலாக சொல்வான்.. நெரிசலில் நழவ விடும் பொருள்களை எடுத்துத் தருவான். சில சமயம் அழும் குழந்தைக்கு பலுான் வாங்க தாய்மார்கள் இவனை பணிப்பதும் உண்டு. என்னயிருந்தாலும் வயிற்று தொந்தரவுக்கு முன் “ஒண்ணுக்கு“ போகும் தவிப்பு ஒன்றும் பெரிதில்லைதான். எட்டு மணிக்கு சூடாக டிபன் கிடைக்கும்.. இட்லி.. பொங்கல்.. சப்பாத்தி.. சில சமயங்களில் பூரி.. தின்ன தின்ன திகட்டுவதில்லை. அப்போது அப்பாவின் ஞாபகம் வந்துப் போகும். அவரால்தான் இந்த  வாய்ப்பு.

”தம்பி மாதிரி பக்தியான பசங்க கோயிலுக்கு தொண்டு செய்ய வந்தா நல்லாருக்கும்..” என்றனர் இருமுடி கட்டி வந்த தருணத்தில். அணுகுவது முன்பின் தெரியாத கோயில் நிர்வாகத்தினர் என்றாலும் இம்மாதிரியான நல்ல சகுனங்கள் காட்டுவது குடும்பத்துக்கு நல்லது என்பதால் அப்பா நெகிழ்ந்திருந்தார்.

”சாப்பாடு.. தங்கறதெல்லாம் ஃப்ரிதான்.. சம்பளம் மட்டும் கொஞ்ச நாளுக்கு குடுக்க முடியாத நெலம..” என்றனர்.

”அய்யோ.. சாமி தொண்டுக்கு சம்பளம் எதுக்குங்க.. நாங்க குடுத்து வச்சிருக்கணும்..”

“நான் இங்கயே இருக்கம்ப்பா..” என்றான் கதிர் யாரும் கேட்காமலே.

”இல்லல்ல.. இருமுடி செலுத்துனா வீட்டுக்கு போயி மாலைய எறக்கி வக்கணும்.. அதான் முறை.. எறக்கி வச்சிட்டு அடுத்த பஸ்ச புடிச்சு ஒடியாந்துடு..” நுாறு ரூபாய் தாளை மடித்து கையில் வைக்க, அப்பாவும் இவனும் நெகிழ்ந்துப் போனார்கள். இவனுக்கு மதியம் உண்ட பாயாசம்.. வடை.. சாம்பார்.. கூட்டு.. எல்லாவற்றையும் மீண்டும் சாப்பிட வேண்டும் போலிருந்தது.

”இப்பதானே சாப்டே..” என்றார் அப்பா. ஆனாலும் பொரி வாங்கிக் கொடுத்தார். பத்து ரூபாய்க்கே கை நிறைந்த பாக்கெட். அங்கிருந்த இரண்டு வருடங்களும் வயிறு அதிக வேதனை கொடுத்ததில்லை. மதிய வேளையில் ஒரு மணிக்கு சாப்பாடு.. இருமுடி சாப்பாடு போல தடபுடலாக இல்லாவிட்டாலும், ஒரு பொறியலும், அப்பளமும் கட்டாயம் இருக்கும். சாப்பாட்டில் அளவு கிடையாது. இருந்தாலும் திரும்ப திரும்ப இவன் கேட்பது அவர்களுக்கு பிடிப்பதில்லை. மதியத்துக்கும் இரவுக்குமான நீண்ட இடைவெளியை கடப்பது பெரிய சவாலாகவே இருந்தது. எட்டு மணிக்கு ஆவலாக இட்லியில் கை வைக்கும்போது “முன்னபின்ன தின்னதே இல்லியாடா நீ..” கிண்டலாக எரிச்சலை காட்டுவார்கள்.

அப்பாவுக்கு திடீரென கையும் காலும் இயக்கமற்று போக, இவனை அம்மா அழைத்துக் கொண்டாள். “அவருக்கு கை வர்லீன்னா நா என்னா பண்ணுட்டும்.. நா வர்ல போ..” என்றான் அம்மாவிடம் கோபமாக. ஆனால் அம்மா விடவில்லை. திரும்பி வந்தபோது தங்கச்சி பாப்பா அநியாயத்துக்கு மெலிந்திருந்தாள். எல்லோரும்தான். “ஒனக்கென்ன.. வயித்துக்கு சோறுக் கெடச்சா சொர்க்கம்தான்.. எங்க பாடு ஒனக்கெங்க புரியப்போவுது..” என்றாள் அம்மா எரிச்சலுடன். அப்பாவுக்கு சம்பாத்தியம் இல்லை. ஆஸ்பத்திரி செலவு வேறு.

இருட்டத் தொடங்கியிருந்தது. தோட்டத்தில் கொசுக்கள் அப்பிக் கொள்ள, எழுந்து வீட்டுக்குள் வந்தான். மளிகைக்கடையில் சரக்கு துாக்கும் வேலையில் இருந்த போது இத்தனை பிரச்சனை இல்லை. இவனின் சம்பளத்துக்கு பதிலாக அம்மா பலசரக்காக வாங்கிக் கொள்வாள். அப்போதுதான் பாப்பாவுக்கு திருமணமானது. பலசரக்குக் கடைக்காரர் கொஞ்சம் கடன் கொடுத்திருந்தார்.. ஆனால் திருமணக்கடன் அடைவதற்கு முன்பே தங்கை வீட்டிற்கு திரும்பி விட, எதிர்த்து நின்ற அம்மாவை “பேக்குங்களையா பெத்துப் போட்டுட்டு தெனாவட்டாவா பேசுற..?” மாப்பிள்ளை ஒருமையில் பேசும்போது இவனும் நின்றுக் கொண்டிருந்தான். அப்போது கூட வயிற்றில் வலி இருந்தது. வலி என்றால் முதலில் ஆழத்தில் இருக்கும். பிறகு மெல்லெழும்பி முன்னகரும். பிறகு வயிறெங்கும் பரவும். கவனம் முழுக்க வயிற்றிலேயே வைத்திருக்க வேண்டியிருக்கும்.

பிறகுதான் யாரோ சொல்லி இந்த அரசாங்க அலுவலகத்தில் எடுபுடி வேலை. “சீக்ரம் ரிடையர் ஆயி கோயில்ல ஒக்காந்துக்குணும்..” என்பான் வாஞ்சியிடம்.

”ஒனக்கென்ன ரிடையர்மெண்ட்..? எப்ப வேணும்னாலும் போயிட்டே இருக்க வேண்டியதுதான்..”

”கோவிலுன்னா சோத்துக்கு பிரச்சனை இல்ல.. அதான்..” என்றான் வாஞ்சி சொல்வதை காதில் வாங்காததுபோல.

”வீட்ல மத்தவங்கள்ளாம் இருக்காங்கள்ள..?”

”அம்மாப்பா செத்துருவாங்க.. தங்கச்சிக்கும் வயித்துவலி.. அதும் செத்துரும்.. எனக்கு யாரு சமைச்சுப் போடுவா..?”

”ஏயப்பா.. காரியக்கார லுாசு நீ.. சாவுறவரைக்கும் ப்ளான் பண்ணீட்டியே..”

மணி எட்டாகியிருந்தது. ”இன்னுமா வீட்டுக்கு போவுல.. தங்கச்சிய பெட்ல வச்சிட்டாங்கடா தம்பீ.. ஒங்கப்பாவ பொரட்டிப் போட கூட ஆளில்ல..”

”வர்றம்மா.. சார் வந்துருட்டும்..” என்றான் குணாவை நினைத்துக் கொண்டு.

”சார் வந்தார்ன்னா நெலமய சொல்லி பணம் கேளுப்பா..” என்றாள் அம்மா ஆபிசரை நினைத்துக் கொண்டு.

கதிருக்கும் கிளம்ப வேண்டும் என்றுதான் தோன்றியது. குணாவுக்கு போன் செய்தான்.

”சார்..” என்பதற்குள் குணா மறித்துப் பேசினான்.

”முக்குக்கடையில பரோட்டா வாங்கீட்டு வர்றன்.. நீ கௌம்பிடாத..”

வயிறு வலித்தது பரவலாக.

அம்மா மீண்டும் அழைத்தாள். அலைபேசியின் சத்தத்தை குறைத்து சட்டைப் பையில் போட்டுக் கொண்டான்.

***