சிறப்பிதழ்

பாவண்ணன் – தொடர்ச்சியின் சுவடுகள்

ஶ்ரீதர் நாராயணன்

paavannan

‘உலகு கிளர்ந்தென்ன உருகெழு வங்கம்’ என்று மருதன் இளநாகனாரின் பாடல் (பாலைத்திணையில்) ஒன்று இருக்கிறது. ஒட்டுமொத்த உலகும் கிளர்ந்து எழுந்து ஒரு கப்பலில் ஏறிக் கொண்டது போன்றதொரு சித்திரம். விவிலியத்தில் வரும் நோவாவின் கப்பல் போல. உண்மையில் அப்படியொன்று சாத்தியமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் பார்க்கும் விஷயங்கள், சம்பவங்களை எல்லாவற்றையும் எழுத்தில் ஏற்றி பெரும் படைப்புலகை நிர்மாணிக்கும் சக்தி படைப்பாளிக்கு உண்டு. அதை பாய்விரித்தோடும் கப்பல் போல வாசக பரப்பிடையே தொடர்ந்து எழுதிச் செல்லும் திறன் ஓர் எழுத்தாளனுக்கான வசீகரம். வெறும் குறுகுறுப்போடு கடந்து போகும் வாசிப்பு சுவாரசியத்திற்காக எழுதப்படாமல், ஒரு தொடர்ச்சியின் சுவடுகளை பதிவு செய்யும் அக்கறையோடு எழுதப்படுவதுதான் பாவண்ணனின் எழுத்துலகம். ஒரு காலத்தின் தொடர்ச்சியை, ஒரு கலாச்சாரத்தின் தொடர்ச்சியை, ஒரு தலைமுறையின் தொடர்ச்சியை, மொழியின் தொடர்ச்சியை ஆரவாரமில்லாத நடையில் பதிந்து கொண்டு போகிறார் பாவண்ணன். ஐந்தாறு வருடங்கள் முன்னர் சிங்கப்பூரிலோ வேறெங்கோ ஒரு தமிழர் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பத்திரிகை ஆசிரியர் ‘இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சார்பா பாவண்ணன் இடம்பெற்றிருக்க வேண்டும். அவரொரு மொழித் தூதுவர்’ என்று தனிப்பேச்சில் குறிப்பிட்டார். முற்றிலும் உண்மை. பாவண்ணன் என்னும் பாஸ்கர், இளவயதில் பணிநிமித்தமாக கர்நாடகத்திற்கு புலம்பெயர வேண்டியிருந்தது. அதன் பிறகு கன்னடம் கற்றுக்கொண்டு, பெருமுயற்ச்சியுடன் பல கன்னட ஆக்கங்களை, நாவல்களை, தலித் எழுத்துகளை, நவீன இலக்கிய முயற்சிகளை, கவிதைத் தொகுதிகளை, தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார். கிரீஷ் கர்னாட் மற்றும் ஹெச் எஸ் சிவப்பிரகாஷ் போன்றோரின் பல நாடகங்களும் தமிழில் வாசிக்கக் கிடைத்தற்கு பாவண்ணன் முக்கியக் காரணம்.

வசிக்குமிடத்து மொழியின் இலக்கிய பரப்பை இவ்வளவு விரிவாக தாய்மொழிக்கு கொண்டு வருவது மூலம் அவர் இரண்டு மொழிகளுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அதற்கு மகுடம் வைத்தது போல பைரப்பாவின் ‘பருவம்’ நாவலின் மொழிபெயர்ப்பிற்கு சாகித்ய அகதெமி விருது அமைந்தது. இந்தக் காலக்கட்டத்தில் அவர் தமிழிலும் தீவிரமாக புனைவுகள் மற்றும் கட்டுரைகள் எழுதிக் கொண்டேதான் இருந்திருக்கிறார். எழுதுவது தவிர வேறெந்த விளம்பரமும் இல்லாமல் இருக்கிறார். தன்னுடைய ‘சுவரொட்டிகளின் நகரம்’ என்ற கவிதையில், பொருளற்ற வார்த்தைகளும் கூச்சந்தரும் குழைவுகளும் எப்படி ஒரு நகரத்தின் தன்மையையே மாற்றி விடுகின்றன என்று கூறியிருப்பார். தன்னைச் சுற்றிலும் இருக்கும் நகரம் முழுவதுமாக ஒரு சுவரொட்டியாக மாறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் துயரம் அக்கவிதையில் தெரியும்.

அந்தப் பொருளற்ற வார்த்தைகள்
அந்தக் கூச்சந்தரும் குழைவுகள்
அந்தப் பச்சையான முகஸ்துதிகள்
நாக்குத் தொங்க வாலாட்டிக் குழையும்
நாய்போல நிற்கிறது ஒவ்வொரு எழுத்தும்

மெல்ல மெல்ல இந்கரமே
ஒரு சுவரொட்டி போல மாறிக் கொண்டிருக்கிறது

அதையே சற்று விரித்து, ‘சுவரொட்டி சொக்கலிங்கமாக’ விகடனில் சிறுகதையாக எழுதியிருந்தார். கண்ணைக்கு குத்தும் பொருளற்ற சுவரொட்டிகளிடையே, சமூகத்திற்கு சேதி சொல்லும் பெரியப்பா சொக்கலிங்கத்தையும் பாவண்ணனின் படைப்புக் கண்கள் தவறவிடவில்லை. ஒரே செயலின் இருப்பக்கத்தையும் அவரால் தன் எழுத்தில் கொண்டு வர முடிகிறது. ‘சுவரொட்டி’ சிறுகதையில் ஓரிடத்தில் சொக்கலிங்கம் தன்னையே ஒரு நடமாடும் சுவரொட்டியாக மாற்றிக் கொண்டு கடற்கரையில் பாலிதீன் பைகள் விற்பதை தடுக்க பாடுபடுவார். அந்த சாத்வீகமான போராட்டத்தை, கடற்கரை கடை முதலாளிகள்க் கூட்டம் முதலில் கேலியாலும், பிறகு புறக்கணிப்பாலும், அதன் பிறகு வன்முறையாலும் எதிர்கொண்டு, பிறகு தோற்றுப்போவார்கள். ஒரு எதிர்பாரா தருணத்தில் இறந்துவிட்ட சுவரொட்டி சொக்கலிங்கத்தை, மின்மயானத்திற்கு கொண்டு சென்று, தானே கொள்ளிவைத்துவிட்டு வீடு திரும்புவார் கதைசொல்லி. திரும்பும் வழியில், நகரெங்கிலும் காணும் போஸ்டர்களில் எல்லாம் கதைசொல்லிக்கு,, சொக்கலிங்கத்தின் முகம்தான் பிரகாசமாகத் தெரியும். இத்தேசத்தில் காந்திய சிந்தனை என்று மங்காது தொடர்ச்சியாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்பதை பதிவு செய்யும் படைப்பு அது.

paaimarakappal01

காந்தியின் தாக்கத்தை பாவண்ணனின் எழுத்தில் பல இடங்களில் பார்க்கலாம். ‘பாய்மரக் கப்பலில்’ முத்துசாமி கவுண்டனின் அண்ணன் மகன் காந்தியவாதியாக உருவெடுக்கிறார். இத்தனைக்கும் அதே முத்துசாமிக் கவுண்டனின் சகோதரன் ஒரு நொடி உணர்ச்சி வேகத்தில் உற்றாரைக் கொன்று போட்டு ஜெயிலுக்கு போவதாகவும் ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கும். இரண்டு முனைகளுக்கும் இடையேதான் இந்த நிலத்தின் காதைகள் பலதும் எழுதப்பட்டிருக்கின்றன. அந்தக் கோர சம்பவத்தில் மனைவி வனமயிலை இழந்ததும் நாவாம்ப்பாளை ‘நடுவீட்டுத்தாலி’யுடன் மறுமணம் கொள்கிறார் முத்துசாமி. புரோகிதன் கவுண்டன் வந்து திருமணம் நடத்தி வைக்கும் புதுச்சேரி கவுண்டர் சமூக வழக்குகளை ஆங்காங்கே தெரிந்து கொள்ள வாய்க்கிறது. பிரான்சின் காலனியாதிக்க எச்சத்தினால் ஆட்பட்டு ஃப்ரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து பாரிஸுக்குப் போகும் முனுசாமியும், இந்த ஊரிலேயே ஆன்மிகத்தில் தொலைந்ந்து போகும் ரங்கசாமியும் புதுச்சேரி நிலத்தின் வரலாற்றை சற்று கோடிட்டு காட்டுகின்றார்கள்.

கதையின் தொடக்கத்தில், கோர்க்காட்டு அமாசைக் கிழவரும், முத்துசாமிக் கிழவரும் கடந்த காலத்தை பற்றி மிகவும் ஆதுரமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். கதை முடியும்போது கிழவர் தத்துப்பேரனான பிச்சாண்டியுடன் சேர்ந்து நிலத்தின் மீதான தன் நம்பிக்கயை மீட்டெடுக்கிறார். நான்கு தலைமுறைகளுக்கு இடையேயான சமூக வரலாற்றை முன்-பின்னாக சொல்லிச் செல்கிறது. ஒரு புராண காலத்து வீரனாக வாழ்ந்து, நாடி ஒடுங்கி விழுந்துவிட்ட முத்துசாமிக்கு அந்த நிலத்தின் மீதான நேசம்தான் உயிரை ஒட்ட வைத்து கொண்டிருக்கிறது. முதலில் ரெட்டிகளால் நிலம் பிடுங்கப்படும்போதும், பிறகு பார்த்தசாரதி ஐயரிடம் குத்தகைக்காக கிடந்து தவிக்கும்போதும் அதே நிலத்தின் மீதான் காதல்தான் முத்துசாமியை நிலை நிறுத்துகிறது. திருக்குறளில் ‘இடனறிதல்’ அதிகாரத்தில் ஒரு குறள் வரும். கடலோடும் நாவாயும், நிலத்தில் ஓடும் நெடுந்தேர்ப் பற்றியும் ஒப்பிட்டுச் சொல்லும் குறள் அது. முத்துசாமி நிலம் மீதான பயணம், பாய்மரக்கப்பல் போல மொழி ஆதிக்கம், சாதி ஆதிக்கம், அரசியல் ஆதிக்கம் என்று அலைக்கழிக்கப்பட்டு சென்று கொண்டிருந்தது என்று வாசிக்கும்போது அந்தக் குறள்தான் நினைவிற்கு வந்தது. இடமறிந்து செயலாற்ற வேண்டும் என்னும் வள்ளுவ கூற்றை சற்று மாற்றி, இடம் மாற்றி செயலாற்றுவதன் மூலம்தான் ஒருவன் வரலாற்றில் நிலைப்பெற முடியும் எனக்கூறும் நாவல் பாய்மரக்கப்பல்.

தொடர் இயக்கம் வழியே மட்டும் ஒரு படைப்பாளி வாழ்ந்து கொண்டிருக்க முடியும். அது சாமானியப்பட்டதல்ல. ஒவ்வொரு முறையும் பரீட்சிக்கப்படும் எழுத்தை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். தன்னைச் சுற்றியிருக்கும் புறவுலகின் பாதிப்புகளுக்கு தன்னைத் தொடர்ந்து ஒப்புக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருவரால்தான், அதை அழகுணர்ச்சியோடும் சமூக அக்கறையோடும் மீட்டெடுத்து நமக்கு அளிக்க முடியும். பாவண்ணனின் சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் ‘கிணற்றுக்குள் விழுந்து கிடக்கும் மரப்பாச்சி பொம்மைகள் போல நினைவுகள் அவருள்ளே ஊறிக் கொண்டேயிருக்கின்றன’.

வளவனூரில் இருக்கும் ஏரிப் பற்றி ஒரு கட்டுரையில் விரிவாக பதிகிறார். தென்பெண்ணை ஆறு நிரம்பியதும் வளவனூர் ஏரிக்கு நீர் வரத்தொடங்கி விடுகிறது. ஒருமுறை நிரம்பினால் ஆறு மாதஙளுக்கு நீர் ததும்பியபடி இருக்கும். சிறுவர்களின் கணக்கில் காலாண்டு தேர்வுக்கு நிரம்பத் தொடங்கும் ஏரி முழு ஆண்டுத் தேர்வு சமயம் வரை நிரம்பியபடித்தான் இருக்கும். ஏரியில் புரளும் புதுவெள்ளத்தோடு போட்டிப் போடும் சிறுவர்கள் பற்றிய விவரணைகள் நம்மை அக்காலத்திற்கே இட்டுச் செல்கின்றன. மதுரை பசுமலைக் கண்மாயில் நண்பர்களுடன் நான் போட்ட குதியாட்டங்களூம், கலைநகர் பக்கம் பட்டிமேட்டில் விவசாயக் கிணற்றில் குதித்தோடிய அனுபவங்களையும் ஒப்புநோக்கி பார்த்து மகிழ்ந்த வண்ணம் வாசித்துக் கொண்டு வந்தேன். நடுவே அவருடைய பள்ளித்தோழி சரஸ்வதி ‘நீ குளிக்கப் போகலியா? உனக்கு நீச்சல் தெரியாதா? உனக்கு நான் நீச்சல் கத்துக் கொடுக்கவா?’ என்றெல்லாம் விடாமல் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இவருக்கு விருப்பம் இல்லாததால், ஏமாற்றத்தால் சுணங்கிப் போய், திரும்பிப் போய்விடும் சரஸ்வதியுடன் இவருடைய நீச்சல் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் போய்விடுகிறது. சரஸ்வதியிடம் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தால் பாவண்ணனிடமிருந்து இன்னொரு நாவல் கிடைத்திருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக அவருடைய நண்பன் பழநியின் தம்பி சேகர் அந்த ஏரியில் மூழ்கிப் இறந்து போய்விட அந்த ஏரியின் அமைதி அமானுஷ்யமாக மாறுகிறது.

‘துங்கபத்திரை கட்டுரைகளில்’ அதே ஏரி வறண்டு போய் கிடக்கும் அவலத்தையும் பதிவு செய்கிறார். அவரைச் சுற்றி இருக்கும் நிலங்களும், நீர் நிலைகளும், நதிகளும் தங்களுக்குள் ஒருபகுதியாக அவரைக் கொண்டிருக்கிறது என்பது இப்படியான தொடர் பதிவுகளில் தெரிகிறது. வற்றிப்போயிருக்கும் ஏரியைப் பற்றி குறிப்பிட்ட ‘வாழ்க்கை எனும் சுமை’ கட்டுரை பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது. இதே புள்ளியைத் தொட்டு ‘தீராநதி’ பேட்டியில் ‘சீதையின் துயரம்தானே ராமாயணம், கண்ணகியின் துயரம்தானே சிலப்பதிகாரம், குந்தி, திரோபதை, சுபத்திரை என்ற மூன்று தலைமுறைப் பெண்களின் துயரம்தானே மகாபாரதம்’ என்று குறிப்பிடுகிறார். இந்த பரிவான பார்வையை அவருடைய படைப்பெங்கும் தொடர்ந்து காண முடிகிறது. ‘வாழ்க்கையில் ஒரு நாள்’ எனும் சிறுகதையில் சண்முகவேலன் தொடர்ந்து கொந்தளிக்கும் மனநிலையுடனே இருக்கிறான். அவனுக்கு வாய்த்திருக்கும் தனித்துவ குரல்வளமும், அதன் குழைவும் அதன் வனப்பும் பற்றி பலரும் சிலாகிக்க எப்படியாவது சினிமாவில் சேர்ந்து புகழ் பெற்றுவிட வேண்டும் எனும் தணியாத ஆர்வம். அதற்கான தொடர் முயற்சிகள் தோல்வியில் முடியும்போதெல்லாம் அவனுக்கு ஆற்றாமை மேலோங்குகிறது. அவனுக்கு வரமாக வாய்த்த குரல்வளமே அவனுனை கொந்தளிப்பிலும், ஆற்றாமையிலும் ஆழ்த்தி விடுகின்றன. இந்த முடிவில்லாத சுழலிலிருந்து சண்முகவேலன் விடுதலை பெறும் இடம், வாசிக்கும் நம்மையும் ஆட்கொண்டு விடுதலை பெற்றுத்தருகிறது.

pavannan

கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து வருட தொடர் இயங்குதலுக்கு அப்புறமும் பாவண்ணனின் படைப்புகள் பற்றி கவனம் தந்து பேசும் தரப்புகள் அதிகமில்லை. ஆனால் அவர் அப்படி தன்னை தேங்கச் செய்துகொள்ளாமல் அடுத்த தலைமுறையின் செயல்பாட்டையும் கூர்ந்து கவனித்தபடிதான் இருக்கிறார். அவர் எழுதத் தொடங்கியபோது பிறந்தேயிராத சில புதியவர்களை அவர்களின் ஆரம்ப நிலையிலேயே கவனித்து ஊக்கப்படுத்தும் விழைவைக் கொண்டவராக இருக்கிறார். ‘திண்ணை’ இணையதளத்தில், ‘எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் இரண்டாண்டுகள் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தார். தமிழ் இலக்கியம் படிக்க வரும் புதிய வாசகனுக்கு ஒரு வாசலாக அந்த கட்டுரைத் தொகுப்பு இருக்க வேண்டும் என விருப்பப்பட்டு எழுதினார். சமீபத்தில் எழுத்தாளர் ‘சார்வாகன்’ மறைந்தபோது அவரைப் பற்றிய மிகச்சில பதிவுகளில் முக்கியமானதாக பாவண்ணனின் கட்டுரைதான் அமைந்திருந்தது. புதியவர்களுக்கான அறிமுகமும், பழையவர்களுக்கான அடையாளமுமாக இந்த இலக்கிய தொடர்ச்சியை நிகழ்த்திக் கொண்டிருப்பவர் பாவண்ணன்.

அரசியல் சாய்வுகள் இல்லாத சர்ச்சைகளுக்கு வழிகோலாததொரு நிச்சலனமான எழுத்து இங்கு அவ்வளவாக ஆர்வம் ஏற்படுத்துவதில்லை. எந்த துறைகளிலும் இப்படியானதொரு தொடர் உழைப்பு பிறரிடம் ஒரு மரியாதையாவது ஏற்படுத்தும். ஆனால் தமிழில் தொடர்ந்து எழுதுகிறவர்களின் நிலை வேறு. இன்றைய பரந்து விரிந்த சமூக வலைத்தளத்தில், சினிமா பங்களிப்பு, அரசியல் நிலைப்பாடு, செல்வாக்குத் திறன் போன்ற காரணிகளால் மட்டுமே எழுத்து எடைபோடப்படுகிறது. தீவிர வாசிப்பற்ற, இலக்கிய உலகின் போக்குகளைப் பற்றி அடிப்படைப் புரிதல் இல்லாத, திருகல் பார்வையுடன் ஆவலாதி கூட்டும் குழு அரசியல்களால் நிறைந்திருக்கும் சூழலில், ஓரளவுக்கு நல் வாசிப்பைப் தங்கள் உள்ளே அடைகாத்து வரும் சில நல்ல நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போன்ற பல சிறப்பிதழ் முயற்சிகள் மூத்த படைப்பாளிகளையும், அவர்களை போற்றும் அடுத்த தலைமுறைக்கும் ஊக்கமாக அமைய வேண்டும்.

பாவண்ணனின் பாய்மரக்கப்பல், கலப்படமில்லாத படைப்பூக்கம் என்னும் காற்றை சக்தியாகக் கொண்டு, என்றென்றும் கடலோடிக் கொண்டிருக்க வாழ்த்துகள்.

விளை நிலமும் வேரடி மண்ணும்: பாவண்ணனின் படைப்பாளுமை

திருஞானசம்பந்தம்

IMG_20140727_144132

வயல்வெளிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் பரப்பு அற்புதமாக காட்சி  தரும் ஓவியம் போன்றது. ஒவ்வொரு கணமும் சூரியனின் ஒட்டத்திற்கேற்ப தன் வண்ணத்தையும் அழகையும் மாற்றி மாற்றி காட்சி தரும். சேற்றின் மேற்பரப்பில் மண்புழுக்கள் பயணித்த கோடுகள் வளைந்தும் நெளிந்தும் உருவாக்கும் கோட்டோவியங்கள் வயலெங்கும்  நிரம்பியிருக்கும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையையும் மற்ற கடலோரப் பகுதியையும் திருப்பிப் போட்ட அடர்பெரும் அடைமழையின் ஓதமாக எங்கள் கிராமப் பகுதியிலும் ச்ற்றே பெய்ததால் நெல் நடவு இந்த போகத்தில் சாத்தியமாயிற்று. நெல் வயல் மனித மனம் போன்றே  விசாலமானது. ஆயிரமாயிரம் இரகசிய விதைகளைத் தன்னுள் பொதிந்து  வைத்திருக்கும். அது பயிரோடு சேர்த்து களையையும் வளர்த்தெடுக்கும். அதற்கு பயிரும் களையும் ஒன்றே. பாரபட்சம் பார்க்காதது. வயல் தாய். தாய்க்கு தன் பிள்ளைகளில் பேதம் பார்க்கத் தெரியாது. எல்லாப் பிள்ளைக்கும் ஒன்றே   போல்  தன் முலை சுரக்கும்.

வயல்தான் நம் தாய். மொழிதான் நாம் வளரும் வயல். நம்மை வளர்க்கும் வயல். எனவே நம் மொழியும் நமக்குத் தாயாகிறாள்.

எழுத்தாளர் பாவண்ணனின் படைப்புகள், தமிழின் நவீன இலக்கிய வயல்வெளி பரப்பின் எல்லா திசைகளிலும் படர்ந்திருக்கிறது. பாவண்ணனின் படைப்புகள் தமிழ்நாட்டின் வட மாவட்ட/பாண்டிச்சேரி மண்ணில் வேர்விட்டு, கர்நாடக நிலப்பரப்பின் வளர்ச்சி மற்றும் வாழ் நிலைகளை தன் அநுபவத்தில் உள்வாங்கி, ஒட்டு மொத்த இந்திய மரபின் கலாசார பிண்ணனியை உள்ளடக்கிய எழுத்தாக பரிணாமம் பெற்றிருக்கிறது. அவர் வயலில் எல்லாமும் விளையும். நெல் மட்டுமல்ல, எள்ளும், கொள்ளும், புல்லும் வளரும். ஒவ்வொரு படைப்பும் தமிழுக்கு அறுவடைதான்.

காலத்தின் காலடிச் சுவடுகளில், அன்றாட வாழ்வின் அர்த்தங்கள் மட்டுமல்ல அர்த்தமின்மையின் எச்சங்களும் தொடர்ந்து பயணிக்கின்றன. பயணத்தின் ஒவ்வொரு சிறு கணத்தையும், அதன் ஆகச் சிறந்த வனப்புகளின், வலிகளின் அநுபவப் பதிவுகளையும் செதுக்கியபடி கதை, நாவல், கட்டுரை, விமர்சனம், கவிதை என்று எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

எல்லா கதைகளிலும் அவர் இருக்கிறார். அப்பாவின் அடிக்கு பயந்த சிறுவனாக, வெறும் கருங்கல் தொட்டியாக மாறும் மாயத்தை கண்டு அதிசயிக்கும் பள்ளிக் கூடம் போகும் மணவனாக, குடிசைத் தீயில் தன் பெற்றோரையும் கனவுகளையும் பறி கொடுத்து அநாதையாக நிற்கும் திக்கற்ற இளைஞனாக, பாக்குத்தோட்டத்தையும் தந்தையையும் இழந்து குடும்ப பாரம் சுமக்கும் யட்சகான ஹெக்டேவாக, பெரியம்மாவாக, தாயாக பிள்ளையாக, ஓவியனாக, சாமியாக, செடியாக, தோப்பாக…. இருக்கிறார். காலத்தின் முன்னும் பின்னுமாக கூடு விட்டு கூடு பாய்ந்து, தன் அநுபவங்களை முன் வைக்கும் கதைகள்.

கதைகளில் வரும் பாத்திரப் படைப்புகள் புனையப்பட்டவை  என்றாலும், நம்முடன் வாழும் எளிய மனிதர்கள். எங்காவது ஒரு ஓரத்தில் சிறு அன்பிற்காகவும், ஆதரவுக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கும் உயிர்கள். பெரும்பாலும் அவர்களின் ஏக்கம் நிறைவேறுகிறது. யாராவது கைகொடுத்து தூக்கி விடுகிறார்கள். முடியாத போது அவர்களுக்காக கண்ணீர் விடுகிறார்கள். அவர்களின் கண்ணீர் உண்மையானது. வாழ்வின் மீதான அவநம்பிக்கையை தகர்த்து நம்பிக்கையின் துளிர்களை முகிழ்க்கச் செய்கிறது.

மகாபாரதத்தின் மாந்தர்களை கதைப் பொருளாகக் கொண்டு எழுதாத எழுத்தாளர்களே இந்தியாவில் இல்லை  எனலாம். பல நூறு கதைகளை பல நூறு எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். பாவண்ணனின் மொழியாக்கத்தில் வந்த எஸ்.எல்.பைரப்பாவின் பருவம் என்ற மகாபாரத நாவல் தமிழில் நிகழ்ந்த ஒரு மகத்தான முயற்சி. இதன் பின்னணியில்,2001-ல் வெளியான ஏழு லட்சம் வரிகள் என்ற தொகுப்பு, புராணத்தின் அடிப்படைக் கதைகளின் சிறுசிறு முடிச்சுகளை முன்வைத்து எழுதப் பட்ட கதைகள். அந்தக் கதைகளில், மாவீர்ர்கள், சக்ரவர்த்திகள், காவிய நாயகர்கள், மாமுனிவர்கள், பெருங்கவிஞர்கள் நம்முடன் வந்து பேசுகிறார்கள். தாங்க முடியாத வலிகளின் ரணங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

குணாட்யர் மிகுந்த மன வலியோடு அரசவையிலிருந்து திரும்பி காட்டில் இருக்கும் தன் குடிலுக்கு வருகிறார். பைசாச மொழியில் எழுதப்பட்ட முதல் மாபெரும் காவியம். ரத்தத்தால் எழுதப்பட்டது. இவை இரண்டுமே தீட்டுகள். ஏற்க முடியாது. தத்துவ சாஸ்திரப்படி காவியத்தை அரங்கேற்ற முடியாது என்று முடிவாகச் சொல்லி விட்டார்கள். இதுவரை யாராலும் செய்ய முடியாத மாபெரும் சாதனை. ஏழு லட்சம் வரிகள். தன் ரத்தத் துளிகளைத் தொட்டுத் தொட்டு எழுத்தாணியால் சுவடிகளில் எழுதி முடித்தவை. சமஸ்கிருதம் ஒலிக்கும் அவையில், பைசாச மொழிக் காவியம் தீண்டத்தகாத மொழியாக ஒதுக்கப்படுகிறது.

paruvam-06867

காவியத் தீட்டு. ஒற்றை வார்த்தையால் ஒரு மொழியையும் மக்களையும் எப்படி தள்ளி வைக்க முடிகிறது? இரவெல்லாம் எண்ணி எண்ணி தவிக்கிறார். சீடர்கள் மனம் குமைகிறார்கள். காவியம் படைத்த அதி உன்னத, ஆனந்த பித்து நிலையினை மனம் மீண்டும் அசை போடுகிறது. பைசாச மொழியின் மக்களைத் தன் கண் முன்  நிற்க வைத்து பார்க்கிறார். அவர்களின் கபடற்ற முகமும் சிரிப்பும் அசைந்தாட இரவில், நிலவில் குடிலை விட்டு வெளியே வந்து வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை பார்த்தபடி கண்ணீர்  வடிக்கிறார். தீட்டு என்ற ஒரு சொல் அவரை வாட்டுகிறது. அப்போது தூரத்தில் பாதி இரவில் எழுந்த தன் குழந்தையைத் தூங்க வைக்க ஒரு தாய் பைசாச மொழியில் பாடும் தாலாட்டு கேட்கிறது. மொழியின் இசையும் தாயின் அன்பும் குணாட்யரின் மனதை பொங்க வைக்கிறது.

இவ்வளவு அற்புதமான மொழியை தீட்டென்னும் சாயம் பூசித் தள்ளுகிறார்களே என்கிற சோகம் மனத்தில் தைத்தது.

மெல்ல இருட்டுத் திரை விலகத்  தொடங்கியது.வெளிச்சம் படர ஆரம்பித்தது. திடுமென குணாட்யருக்கு மனம் பொங்கி, இக்காவியத்தை அரங்கேற்ற வேண்டிய இடம் இந்தக் காடுதான் என்றும், இந்த நேரம் தான் என்று தோன்றிய கணம் அவர் மனத்தில் பெரும் விடுதலையுணர்வு  தோன்றியது. அருகிருக்கும் குளத்தில் மூழ்கி எழுந்து குடிலை அடைந்து ஈரத் தோலாடையுடன் அக்கினி குண்டத்தின் முன் உட்கார்ந்தார்.

நெருப்புக்கு தீட்டு இல்லை. தன் காவியத்தின் முதல் சுவடியை எடுத்து வாசித்தார். காவிய ஓசையில் காடே ஸ்தம்பித்ததுகாட்டு விலங்குகள் அவரை நோக்கி வந்தனபறவைகள் பறக்க மறந்தன. மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நின்றனர். வாசித்து முடித்ததும் நெருப்புக்கு அவிசாக்கினார். அரசர் வந்து அவர் காலடியில் வீழ்ந்து மன்னிப்பு கோருவதற்குள் ஆறு லட்சம் வரிகள் நெருப்புக்கு இரையாயின. அவர்  தன் காவியத்தை எரிக்கவில்லை. மக்களை, மக்களின் மொழியை ஒதுக்கிய ஆணவத் தீட்டை எரித்தார். அகங்கார அறியாமைத் தீட்டை எரித்தார். இன்றும் நாம் எரிக்க வேண்டிய தீட்டுக்கள் மீதமிருக்கின்றன.

போர்க்களம் என்று ஒரு கதை. பாற்கடலைக் கடைந்து அமுதெடுக்கும் வேலை. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே சம உழைப்பு, சம பங்கு ஒப்பந்தம். எல்லோருக்கும் அமரர்ஆகத் துடிக்கும் பேராவல். அமுதக் கலசம் கைவசப்பட்டதும் பங்கீட்டில் குழப்பம். மோகினி வேசம் போட்டு ஒட்டு மொத்த அசுரர் குலத்திற்கே துரோகம் இழைத்தவனின் சுயம் உலகறிந்த கதை. எத்தனை ஒப்பந்தம் எழுதினாலும், அதைச் சட்டமாக இயற்றினாலும், எத்தனை பட்டியலிட்டு பங்கு கொடுப்பதாக நடித்தாலும் துரோகம் இன்று வரை தொடர்கிறது. உண்மை ஒருபோதும் அழிவதில்லை. ஆனால் அதை திட்டமிட்டு நூற்றாண்டுகளாக மறைக்க முடியும் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பாவண்ணனின்இலக்கிய பரிணாம வளர்ச்சியில், மனித வாழ்வின் அனைத்து உணர்வுகளையும், அது  நிகழும் சூழலையும் தொடர்ந்து பதிவு செய்திருக்கிறார். அவரின் படைப்புகளும், படைப்போடு இணைந்த படைப்பூக்கச் செயல்பாடுகளும் புதிதாக எழுத வருபவர்களுக்கும், வாசகர்களுக்கும் எப்போதும் தொடர்ந்து உற்சாகத்தையும் நெருக்கத்தையும் கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது. அவரின் படைப்பாளுமை தமிழ் கூறும் மக்களுக்கு விளை நிலமாகவும், மொழிக்கு வேரடி மண்ணாகவும் இருக்கும் என்பது என் திடமான நம்பிக்கை. நம் தாய்மண் நம்மை ஒருபோதும் கைவிடாது.

                                   

மண்ணில் படரும் மலர்கள் – பாவண்ணன் புனைவின் மீதொரு வெளிச்சக் கீற்று

ரா கிரிதரன் 

நிர்மால்யா மற்றும் ஜெயமோகனுடன்

மேல்நோக்கிப் பொழிந்தவை

கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளாகத் தமிழிலக்கியத்தில் தொடர்ந்து உயிரோட்டத்தோடு இயங்கி ஒவ்வொரு தளத்திலும் தனது முத்திரையைப் படைத்து வருவதில் எழுத்தாளர் பாவண்ணனுக்கு நிகரானவர்களது எண்ணிக்கை கைக்குள் அடங்கிவிடும். கவிதை தொடங்கி சிறுகதை, நாவல், கட்டுரை, மொழியாக்கம், சிறார் இலக்கியம் என எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து ஒளி குன்றாது எழுதி வருபவர். வெங்கட் சாமிநாதன் முதற்கொண்டு பல விமர்சகர்களும் பாவண்ணன் எழுத்துகளை அடையாளம் கண்டுள்ளனர். கன்னட இலக்கியத்திலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்து அறிமுகப்படுத்தியவர். தனது வேலைக்காக மொழி தெரியாத கர்நாடக மாநிலத்துக்குச் சென்றவர் முறையாக கன்னடத்தைப் படித்ததோடு மட்டுமல்லாது அன்றாடப் பேச்சு வழக்கிலும் கையாண்டு தமிழுக்கு இணை மொழியாக அதனை தரித்துக்கொண்டவர். எண்பதுகளில் கன்னட தலித் இயக்க எழுச்சியோடு எழுந்த கன்னட இலக்கியத்தை உடனுக்குடன் அறிமுகம் செய்ததோடு மட்டுமல்லாது கர்னாடக மாநிலத்தின் மூத்த மற்றும் சமகால கலைஞர்களோடு தொடர்பு வெளியை ஏற்படுத்தி தமிழுக்கு அறிமுகம் செய்தவர். ஆனாலும் பாவண்ணனின் இந்த பங்களிப்பு விமர்சகர்களிடையே இன்றுவரை பெரிய கவனத்தைக் கவரவில்லை. 2005இல் பைரப்பாவின் மகாபாரத மறு ஆக்கமான ‘பருவம்‘ நாவலுக்கு மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய அகாதெமி பரிசு வெல்லும் போது ஏற்பட்ட சலனத்தோடு அவரது பிற மொழியாக்கங்களும் உடனடியாகக் கவனத்தில் வந்திருக்கவேண்டும். தொன்னூறுகளின் மத்தியிலும் இறுதியிலும் தலித் இலக்கியம் தமிழில் உச்சகட்டத்தை அடைந்த சமயத்திலேனும் அவரது கன்னட மொழியாக்கங்கள் கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் கன்னடத்தில் வெளியான தலித் முன்னோடி எழுத்துகளை அவர் தொடர்ந்து தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்திருந்தார். அப்பிரக்ஞை வளர்ந்திருந்தால் கன்னட மொழியின் வளமையும் புது கருத்துக் களமும் தமிழுக்கு வந்து சேர்த்திருக்கும்.

பாவண்ணன் உருவாக்கிய ஏராளமான ஆக்கங்கள் இன்றும் விமர்சகர்களின் முழுமையான ஆய்வுக்காகக் காத்திருக்கின்றன. நீண்ட காலம் எழுதுபவர்கள் ஓரிரு படைப்புகளின் வெற்றி உருவாக்கும் கூண்டுக்குள் அவர்களாகவே சிக்கிக் கொள்பவர்களாக ஆகிறார்கள். வாசகர்களும் விமர்சகர்களும் சட்டெனத் தொகுத்துக் கூறும்படியாக அவர்கள் படைப்புத் தொகுதிகள் இருப்பதில்லை. அதனால் மேலேழுந்தவாரியான ஒற்றை வரி விமர்சனங்கள் இவ்வகை எழுத்தாளர்களின் படைப்புகளை சரியாக வகுத்துக் கூறுவதில்லை. கூர்ந்த இலக்கிய அளவுகோளும் அவதானிப்பும் கொண்ட விமர்சகர் அவரது பெரும் படைப்புத் தொகுப்பிலிருந்து கவனம் கொள்ளவேண்டிய ஆக்கங்களை அடையாளம் காண வேண்டியது அவசியமாகிறது. தி.ஜானகிராமன், வண்ணதாசன், பூமணி போன்ற படைப்பாளிகளைப் போல அழகியலும் இயல்புவாதமும் முயங்கி நிற்கும் பல படைப்புகளைத் தந்தவர் என அறியப்பட்ட இடத்திலிருந்து எழும்பி இந்திய தொன்மங்களின் மறு ஆக்கம், வரலாற்றுக்கதைகள் (“நிகழ்காலக் காட்சிகள் அளித்த மன எழுச்சியால் இறந்தகாலத்தைத் தேடிப்போன கதைகள்” – பொம்மைக்காரி, சிறுகதைத் தொகுப்பு),  நாட்டாரியக் கதைகள் போன்றவற்றை எழுதியவர் எனும் இடத்துக்கு சென்று அவரது புனைவுலகை அலச வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால் கீழத்தியத் தத்துவத்தேடல் அவரை மரபுக்குள் இழுத்துச் சென்றிருக்கிறது, தொன்மங்களை மீளச்சொல்லச் செய்திருக்கிறது. இருள் பிரிந்ததும் அரும்பிய சுடரொளியும் அதன் வெளிச்சத்தை சக மனிதர் மீது போட்டுப்பார்க்கும் பார்வையும் கொண்ட கதைகள் எனும் நோக்கில் மட்டுமே பார்க்காமல் புனைவின் சாத்தியங்களை பலதிசைகளிலும் நெருங்கிப்பார்த்த கலைஞராக பாவண்ணனை அணுக வேண்டிய அவசியம் உள்ளது.

பாவண்ணனின் படைப்புப் பார்வை

பாவண்ணன் எழுதத்தொடங்கிய எண்பதுகளின் காலகட்டத்தை தமிழ் நவீனத்துவத்தின் அந்திமக்காலம் எனப் பொதுவாக வகுக்க முடியும். நவீனத்துவ விமரிசனத்தின் நேரடியானத் தாக்கத்தை அவரது ஆரம்பகாலக் கதைகளில் காண முடிகிறது. சொல்லப்போனால் 1987 இல் வெளியான அவரது முதல் நாவலான  வாழ்க்கை ஒரு விசாரணை” கூறுமுறை அளவில் மிகக் கறாரான யதார்த்தத் தளத்தை மீறாத கதையாகவே தெரியும். தம்முன் தெரிந்த அனுபவ தர்க்கத்தை எள்ளளவும் மீறாத போக்குடைய நிகழ்வுகளின் தொகுப்பு. நம் கையை மீறிய விசையினால் மனித வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் அலையும் சித்திரம் அதில் கிடைக்கும். மிகத் துல்லியமான நவீனத்துவப் படைப்பு. “வேர்கள் தொலைவில் இருக்கின்றன” எனும் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பின் கதைகளும் பெயரைப்போலவே திசையறியா விதியின் கைகளால் கைவிடப்பட்டோரின் கதைகளாகவே தெரியும். அங்கிருந்து 2003இல் அவர் எழுதி விமர்சகர்களால் சிலாகிக்கப்பட்ட “கடலோர வீடு” சிறுகதையின் பயணம் அவரது படைப்பு மனதின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

bommaikari

அனுபவ தர்க்க உண்மையை மட்டுமே பதிவு செய்வதும் மனித வாழ்வே அவலத்தின் அல்லது இயலாமையின் உறைவிடமாகத் தொனிக்கும் பார்வையிலிருந்து உள்ளுணர்வு சார்ந்த அழகியல் நேர்த்தி கொண்ட பார்வைக்கு சிறுகதைப்பயணம் அவரை செலுத்தியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தின் நவீனத்துவம் மறைந்து பின்நவீனத்துவமும், ஒடுக்கப்பட்ட இனக்குழுக்களின் கதைகள், பாலினங்களைப் பற்றிய அடையாள இலக்கிய காலகட்டமும் வந்து படர்ந்தன.

“கடலின் முன்னிலையில் நிற்கும் போதெல்லாம் என் மனம் தயக்கமும் தடுமாற்றமும் கொள்ளும். பார்வையால் அளக்கமுடியாத அகலமும் நீளமும் கொண்ட கடலை வெகுநேரம் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. கண்கள் தத்தளிக்கத் தொடங்கிவிடும். பார்வை வழியே அக்கடல் உடலுக்குள் இறங்கி படீரென ஒரு அலையாக மோதும். ரத்தம் துள்ளியடங்கும். கடலுக்குள் இறங்கி அலையோடு அலையாக மாறிவிடத் துடிக்கும். ஆழ்மனத்திலிருந்து ஒரு கட்டளை பிறந்து எக்கணமும் என்னைத் தூண்டிவிடக்கூடும் என்று தோன்றும். அந்தத் தடுமாற்றம் மிகவும் பழகிய ஒன்று.” (கடலோர வீடு)

பாவண்ணனின் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்கள் அவரது படைப்புகள் நிகழும் களம் நம் முன்னே கிடக்கும் யதார்த்த உலகம் என்பதை உணர முடியும். சொல்லப் போனால் மிகவும் அடிப்படையான யதார்த்த ஒழுங்குகளை அடைய விரும்பும் பாத்திரங்களை அவர் அதிகம் படைத்துள்ளார். புற உலகின் சமநிலையின்மையால் யதார்த்த வாழ்வோடு பொருந்தி வாழ முடியாதவர்கள். ஆழ்மனதில் தீவிரமான கனவைக் கட்டிச் சுமப்பவர்கள். அந்தக் கனவுக்குள் சுழன்று தங்களைத் தொலைத்தவர்கள். அவர்களுடனேயே வாழும் பிற மனிதர்களை விட வேறொரு உலகில் வாழ்பவர்களாகவே அறியப்படுபவர்கள். இந்த கனவு நிலையில் வெளிப்படும் ஆழ்மனக் குழப்பங்களையும், தங்கள் முரணை விட்டும் வெளியேற முடியாது தவிப்பவர்கள்.

“வெளிச்சம் மண்ணைத் தொடும் நேரத்தில் மரக்கிளைகளில் வந்து அமர்ந்த காகங்கள், தரைநெடுக அம்மா பிய்த்துப்போடும் இட்லித் துண்டுகளைக் காணாமல் குழந்தைகள் கதறுவதுபோல இடைவிடாமல் அலறின. பிறகு கோழிகள் வந்தன. நாய்கள் வந்து வளைய வளைய சுற்றிவிட்டு சென்றன. வாடிக்கையாளர்கள் வந்து வெறும் வாசலை நிமிர்ந்து பார்த்துவிட்டுப் போனார்கள். பள்ளிக்கூடத்தில் சாப்பாட்டு மணியடித்ததும் சிறுவர்கள் கூட்டமாக வந்து முற்றத்தில் நின்று பார்த்துவிட்டு தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு சென்றார்கள். வழிப்போக்கர்களும் பிச்சைக்காரர்களும் “இட்லிக்காரம்மா இட்லிக்காரம்மா” என்று அழைத்துப்பார்த்துவிட்டு ஏமாந்து போனார்கள்” – [“அம்மா” சிறுகதை]

மனிதர்கள் மீது அளவிடமுடியாத பிரியமும் அவர்களது வாழ்க்கை மீதூறும் கரிசனமும் பாவண்ணனின் படைப்புலகில் இயங்கின்றன. அவரது நட்பு வட்டத்தை கவனிக்கும்போது ஒரு படைப்பாளியாக அவரை இயக்குவதும் இந்த காதல் தான் எனத் தோன்றுகிறது. எதையும் உடனடியாக அடையாளப்படுத்தி அரவணைக்கும் அன்பு அல்ல. மாறாக ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அதனதன் இயல்பில் படைப்பு அழகியல் சந்திக்கும் புள்ளிகள் சுட்டிக்காட்டும் இடமாக அவரது புனைவு இயங்குகிறது. “வாழ்க்கை ஒரு விசாரணை” நாவலில் காளியும், ப்ளாஸ்டிக் ஃபேக்டரி எரிந்ததில் தன் சுயநிலை இழக்கும் அத்தையும் (“பொம்மை“) , “ஒற்றை மரம்” பெண்ணின் சாவில் மனித மனதின் கீழ்மையையும் உன்னதத்தையும் கண்டுகொள்ளும் தாயும் காட்டும் தரிசனம் மெய்ஞான உலகின் இயல்பைத் தக்கவைத்திருக்கும். இந்த இயல்பே கூட அவரது படைப்புகளை ஒளிரும் சுடரின் வழிகாட்டலை ஏந்தி நிற்கும் தருணங்களாக அமைத்திருக்கின்றன. வாழ்வின் கரிய பக்கத்தையும், அவலத்தையும் சுட்டும் இடத்திலும் அவரது மனம் ஏதோ ஒரு மேன்மையைத் தொட்டுக்காட்டுகிறது. “கரைக்கக் கரைக்க நிரம்பிக்கொண்டே இருக்கிற நெஞ்சின் பாரத்தைத் தொடர்ந்து கரைப்பதற்காக பாடுவது மட்டுமே அவன் வாழ்வாகிவிட்டது. மிச்சமிருக்கும் உயிரின் சுடர் அணையும்வரை அவன் பாடிக்கொண்டே இருப்பான்” (தளும்பும் மனம் முன்னுரை).

உச்சகட்டமான வெறுப்புணர்வை சொல்லிச்செல்லும் கதைகளில் கூட அவரது பிற பாத்திரங்களின் இயல்பால் ஒரு சமநிலை கூடிவிடுகிறது. ஒரு வாசகராக கதையின் முழுமையை நம்மால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தால் விமர்சகரின் அளவுகோலின்படி குறிப்பிட்ட சுவைக்கு ஒரு மாற்று குறைவோ என எண்ண வைப்பதும் இதனால் தான். வாழ்வின் கரிப்புச் சுவையும் அங்கதமும் வெளிப்படும் அவரது சில கதைகள் முழுமையாக அமையாததும் இந்த ஒரு அம்சத்தினால் தானோ என்றும் நினைக்க வைக்கிறது.

என்னை மிகவும் பாதித்த “வைராக்கியம்” சிறுகதையில் இந்த முரண் நிகழ்வதை வாசகர்கள் உணர் முடியும்.

“மழ நிக்கவே இல்ல. வெறி தணிஞ்சதும் அவன் வேற பக்கமா போய் படுத்துகிட்டான். அந்த மழ சத்தத்தையே வெகுநேரம் கேட்டுகினு படுத்துருந்தேன். கொஞ்ச நேரம் இந்த உலகத்துலயே நான் இல்ல. சட்டுனு பித்து புடிச்சாப்புல ஒரு வேகம் நரம்புங்கள ஒரு முறுக்கு முறுக்கிச்சி. எழுந்து உக்காந்து குடிசைக்குள்ள பாத்தன். கோழிக் குஞ்சுங்களாட்டம் புள்ளங்க ஒரு பக்கம். கெடாவாட்டம் இவன் இன்னொரு பக்கம். திடீர்னு ஒரு யோசன. அப்படியே துள்ளி எழுந்து பொடவய சரியா கட்டனேன். தலமுடியா கொண்டயா சுருட்டி கட்டிகினு பக்கத்துல இருந்த கல்ல பார்த்தேன் கூட வேலிருந்து உழுந்த கல்லு. அத தூக்கி ஓங்கி ஒரே போடா அவன் தலயில போட்டன். ஆன்னு ஒரு சத்தம். மழயில அது பெரிசா கேக்கல. ஏதோ சொல்ல வந்து அப்படியே அடங்கிட்டான். கண்ணுங்க அப்படியே நட்டுகிச்சி. பஸ்ல அடிப்பட்டு உழுந்து நாய் மாதிரி..”

வைராக்கியம் கதை முழுவதும் மிகத் தீவிரமான வெறுப்புணர்வு நம்மைத் தூண்டிவிட்டபடி இருக்கும். கொலை செய்பவளின் மாமனாரின் மேன்மை உணர்வால் அந்த வெறுப்பு சமன்பட்டுவிடும். அதுவே அக்கதையின் உச்சமுடிச்சாகவும் அமைந்திருக்கும்.

பாவண்ணனின் சிறுகதை உலகம்

பாவண்ணன் சிறுகதைகளைப் பற்றி நினைக்கும்தோறும் செடிகளின் பற்றிப்படரும் இயல்பு ஒரு காட்சியாக என் கண்முன்னே நிற்கும். என் தோட்டத்தில் வைத்திருந்த மல்லிகைச் செடி தொட்டியிலிருந்து தழைத்து கனம் தாங்காது கிளைகளை தரையில் சாய்த்திருந்தது. கவனிக்காது விட்ட நாட்களில் கிளையின் அடிப்பாகம் பூமிக்குள் புதைந்திருந்தது. சில நாட்களில் தொட்டியிலிருந்து ரெண்டடி தள்ளியிருக்கும் மண்ணிலிருந்து மல்லிகை செடி துளிர் விடக்கண்டேன். மண்ணுக்கடியில் புதைந்த கிளை படர்ந்திருந்ததைப் பார்த்ததும் வியப்பாயிருந்தது. பற்றிப்படர்வதிலும் தனதென நினைத்து அழுக்கும் சருகும் குவிந்த இடத்திலிருந்து முளைப்பதுமாய் செடிகளுக்கு இருக்கும் ஜீவத்துடிப்பு பரவசம் கொடுக்கும் அனுபவம். பாவண்ணன் உலகில் தெரியும் கதாபாத்திரங்களுக்கும் இந்த குணாதிசயம் உண்டு. நிராயுதபாணியாக சகல கொடுமைகளையும் அனுபவிப்பவர்கள் கூட மனித மனதின் ஈரத்தை ஒரு நொடி அனுபவித்ததுமே புத்துயிர் ஊட்டப்பட்டது போல துளிர்க்கிறார்கள்.

பாவண்ணனின் சிறுகதைகளைப் படித்தவர்கள் மனதில் முதலில் படிவது அவரது அப்பட்டமான எழுத்து முறை தான். வாழ்க்கை பற்றிய நேர்ப்பதிவுகளாக அவை நமக்குக் காட்சியளிக்கும். அவரது பெரும்பாலானக் கதைகள் யதார்த்தத் தளத்தில் எழுதப்பட்டவை. கதை சொல்லி வழியாக அல்லாமல் கதை நம்முன் நிகழும். உடனடியாக நமக்குத் தோன்றுவது கு.அழகிரிசாமியின் புனைவுலகு. கு.அழகிரிசாமி எழுதிய கதைகளின் நேரடியானத்தன்மை ஒரு யதார்த்தத் தளத்தை உருவாக்கினாலும் இடர் மிகுந்த மனித வாழ்வின் மீது நேரடியாகப் பற்று வைத்தவர். ராஜா வந்திருக்கிறார் கதை போல பல கதைகளில் துயர் மிகு சித்திரத்திலிருந்து ஒரு ஒளி பொருந்திய வாழ்க்கைக்கான கனவை அவரால் விதைக்க முடிந்தது. பல கதைகள் தனிமனித அனுபவங்களிலிருந்து விடுபட்டு மானுட மொத்தத்துக்குமான தரிசனமாக மாறியிருந்ததை பல விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த அழகியல் ரீதியைப் பொருத்தவரை கு.அழகிரிசாமியின் நேரடியான பாதிப்பு பாவண்ணன் புனைவில் தென்படுகிறது.

pavannan

வர்ணனைகளிலும் விவரிப்புகளிலும் புத்திசாலித்தமான காய் நகர்த்தல்கள் இல்லாததால் சில சமயம் நேரடியாக கதையை விவரிக்கும் போக்கு காணப்படும். இதனாலேயே சில வரிகளில் முழுமை நோக்கிய தாவல்களோ, தத்துவ தரிசனங்களோ உடனடியாகத் தென்படுவதில்லை. பாவண்ணன் காட்டும் உலகம் ஒரு தனிமனிதனின் அன்றாடப் பிரச்சனை வழியாக வாசகர்களுக்குக் கடத்தப்படுகிறது. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் சிறுவன் ஒவ்வொரு அறையாகச் சென்று தனது அக்காவைத் தேடுவது போல கதாசிரியரும் சிக்கிக்கொண்ட நூல்கண்டு வாழ்க்கையை அறிமுகப்படுத்துகிறார். இங்கு அறிமுகப்படுத்துகிறார் எனும் வார்த்தை முக்கியமானது. அவர் எந்நிலையிலும் வாழ்க்கையை ஆராய்வதில்லை. தத்துவம், வரலாறு, சமூகவியல், கடவுள் என எந்த சிந்தனைக்குப் பின்னாலும் ஒளிந்துகொண்டு அவர் கதாபாத்திரங்களின் வாழ்வை அலசுவதில்லை. அதில் பெரும்பாலும் பாவண்ணன் விருப்பமில்லாதவராகவே தென்படுகிறார் (மரபை மறு ஆக்கம் செய்யும் கதைகளைத் தவிர்த்து). இப்படி வாழ்வின் அர்த்தத்தை ஆவேசமாகத் திணிக்க முற்படாததால் கதாபாத்திரங்களின் போக்குப்படி கதையின் தரிசனம் யதார்த்தமாக விரிகிறது. இது பாவண்ணன் புனைவின் மிகப்பெரிய பலம். இதுவே நாடகீய தருணங்களைக் குறைத்து அவரது கதைகளை பலவீனமாக ஆகும் தருணங்களும் உண்டு.

சொல்லப்படும் கதைகளின் வழியாக ஒரு வாழ்க்கை தருணம் வெளிப்படுவதால், பாவண்ணன் கதைகள் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக மிகையாக எதையும் சொல்வதில்லை. கதாபாத்திரங்களின் அகச் சிக்கல்கள் எவ்விதமான முடிவையும் எட்டாது சுவரில் முட்டி நிற்கும் தருணங்களையும் அவர் சிறுகதைகளாக ஆக்குகிறார். வாழ்க்கையின் ஆட்டத்துக்குத் தகுந்தபடி ஆடும் பாவைகளாக மனிதர்களை சித்தரிக்கும் தருணங்களில் மானுட விழுமியங்கள் கதாபாத்திரங்களுக்கு மீட்சி அளிக்கின்றன.

உதாரணத்துக்கு , மருத்துவமனையில் கற்பழிக்கப்பட்ட மகளுக்காக ரத்தம் சேகரிக்க வந்திருந்த கிராமத்துத் தாயின் கதையைச் சொல்லலாம் (‘ஒற்றை மரம்‘ – பொம்மைக்காரி தொகுப்பு). பாவண்ணன் எழுதிய மிகச் சிறப்பான கதைகளில் இதுவும் ஒன்று. சொன்னதையே அரற்றும் தாய்க்கு சீர்குலைந்த பெண்ணைக் காப்பாற்றும் வழி தெரியவில்லை. கற்பழித்ததில் ரத்தப்போக்குக் கூடிப்போனது மட்டுமல்லாது நினைவும் இழந்துவிட்டாள் மகள். நகர்ப்புற மருத்துவமனை ஆழ்கவனச் சிகிச்சைப் பிரிவில் ரத்தம் கொண்டு வராமல் சிகிச்சை தொடங்க மாட்டோம் எனச்சொல்லும்போது கிராமத்துக் கிழவிக்கு மனம் அவர்கள் சொல்வதில் லயிக்கவில்லை. ரத்தம் வேணும் என்பது மட்டுமே அவளது புலம்பல். அங்கு உதவிக்கு வரும் சிவாவுக்கு இது குற்ற உணர்வைத் தூண்ட அவர் ரத்தம் வாங்குவதற்குக் கிளம்புகிறார். காலை வருவதற்குள் பெண் இறந்துவிடுகிறாள். அம்மா கடைசியில் கும்பிடும் காட்சியில் எழுப்பப்படும் மானுட அவலம் கதையை மிகச் சிறந்ததாக ஆக்குகிறது. ஓரிரவு நம்பிக்கை கொடுத்து கூடவே நின்றிருந்த முன்பின் அறிமுகமில்லாதவரை பார்வையிலிருந்து மறையும்வரை அவளால் கும்பிட்டபடியே இருக்க மட்டுமே முடிகிறது. நெகிழ்வின் உச்சகட்டத்தை பாவண்ணன் இக்கதையில் அடைகிறார்.

கையறுநிலையின் பல படிநிலைகளை தனது கதைகளில் காட்டியுள்ளார் பாவண்ணன். ஒற்றை மரம் போல ‘பொம்மைக்காரி‘ கடந்த பத்தாண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் வெளியான மிகச் சிறப்பான சிறுகதை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் இயல்புவாதக் கதையில் பல ரகங்களை எழுதிப்பார்த்ததோடு மட்டுமல்லாது மரபுக்கதைகளின் மறு ஆக்கங்களிலும், பல செவ்வியல் பாணிக்கதைகளும் எழுதியதில் தனக்கென ஒரு அழகியலை பாவண்ணன் கைகொண்டிருக்கிறார். அதற்கு மிகச் சிறப்பான உதாரணம் ‘பொம்மைக்காரி‘. சிறுகதையின் உச்சத்தை மிகக்கச்சிதமாக சென்றடைந்த ஒரு ஆக்கம். வள்ளியும் மாரியும் பொம்மை செய்து ஊர் சந்தைகளில் விற்பவர்கள். கணவன் எது கேட்டாலும் வாய் திறவாதிருக்கும் வள்ளி மீது மாரிக்கு மிகுந்த எரிச்சல் உண்டு. வாய் திறந்து பதில் சொன்னாலும் “வாய வளக்காதபடி தேவடியா முண்ட” என கைநீட்டவும் செய்வான். அவனுடன் தொழிலுக்குப் போகும்தோறும் அவள் பயத்துடனேயே இருப்பாள். தன் மீதிருக்கும் கோபத்தை அவளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதுவும் அவன் கள் குடித்திருந்தால் வசவுடன் அடியும் விழும். சிங்கத்துடன் வாழும் மான் போல அவள் பயத்துடனேயே வாழ்கிறாள். அவனது நிலையும் ஒன்றும் மதிக்கத்தக்கதாக இல்லை எனும்போது வெளியே கீழ்த்தரமாக அவமதிக்கப்படும் அவனது கோபத்தின் மீது ஒரு இயலாமை கூடுகிறது. பக்கத்து ஊருக்கு தொழில் நிமித்தம் செல்பவர்கள் அங்கிருக்கும் ஊர்க்கார இளைஞர்களால் வம்பிழுக்கப்படுகிறார்கள். காட்டைத் தாண்டி ஓடிவரும் அவர்களைத் துரத்தி மாரியை அடித்துப்போடுகிறார்கள். ஒருவன் மட்டும் வள்ளியைத் தேடி கண்டுபிடித்து உடலுறவு கொள்கிறான். போகும்போது முகத்தில் ஒரு முத்தமிட்டுச் செல்கிறான்.மாரியைத் தூக்கி வந்தபின்னும் அவனிடம் இதைப் பற்றிச் சொல்லாது இருக்கிறாள். குற்ற உணர்வு தாங்காது தற்கொலை செய்துகொள்ளப்போகும் ஆற்றில் கழுத்தளவு நீர் இருக்கும்போது ஒரு நொடி சிலிர்ப்பில் அந்த முத்தம் அவளது நினைவுக்கு வருகிறது. தனது எல்லா கஷ்டத்தையும் அந்த முத்தம் துடைத்துவிடுவதாக எண்ணிக்கொள்கிறாள். இந்த இடத்தில் வாசகனுக்கு மிக இயல்பான பரிவு கூடுகிறது. பிற பாணி எழுத்தாளரின் கையில் இந்த இடம் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக மிகக் கொச்சையாக வெளிப்பட்டிருக்கும். ஆனால், இந்த முடிவைக் கடக்கும் வாசகன் வள்ளி மற்றும் மாரி இருவரின் மீதும் அளவுகடந்த பரிவு ஏற்பட்டுவிடும் என்பதே கதாசிரியனின் வெற்றி.

முன்னர் சொன்னதுபோல ஒரு கதையினூடாக மனம் கொள்ளும் சமாதானங்களின் பல படிநிலைகளை பாவண்ணனால் மிக இயல்பாகக் காட்டமுடிகிறது. இது ஒருவித அக விடுதலைக்கானப் போராட்டம். மனிதனைச் சூழ்ந்துள்ள சமூகப்படிநிலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என மனிதர்களை இணைப்பதற்காக ஏற்படுத்திய ஒவ்வொரு அமைப்பும் முதலியத்தின் பிடியில் சிக்கி அவனைக் கீழ்மையில் தள்ளுவதற்காகப் பயன்படுகிறது என்பதைக் காட்டும் பல கதைகளை உருவாக்கியுள்ளார். எவ்விதமான முயற்சிகளும் அல்லாது கதையின் போக்கில் மிக இயல்பான படிமங்கள் உருவாவதால் அவை மேலதிக விளக்கத்தை கோரி நிற்பதில்லை. உதாரணமாக, பொம்மைக்காரி கதையில் வரும் மாரியின் புற வாழ்வில் எப்படிப்பட்ட அவமானங்களை சந்தித்து வீடு திரும்புகிறான் எனும் சித்திரம் நமக்குக் காட்டப்படுதில்லை (ஒரு முறை அவர்கள் இருவருமாகத் தொழிலுக்குச் செல்கிறார்கள் – அவள் கற்பழிக்கப்படுகிறாள்). ஆனால் அவனது ஆழ்மனம் வெறுப்பால் ஆனதை நம்மால் உணர முடிகிறது. அந்த வெறுப்பே அவள் மீதான அதிகாரமும் வன்முறையுமாக மாறுகிறது. அவனால் முடிந்தது அது மட்டும் தான். கோபமாகத் துரத்தும் இளைஞர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளத் தெரிவதில்லை. அடிபட்டு வீழ்கிறான்; கற்பழிக்கப்பட்ட வள்ளி அவனைத் தூக்கி வீட்டுக்கு வருகிறாள். வாழ்க்கை மீதான வெறுப்பு மட்டுமே அவனிடம் தெரிகிறது. அவன் ஆட்டுவிப்பதுக்கு ஏற்றார்போல வள்ளியும் ஆடும் ஒரு பொம்மைக்காரி தான். அந்த பொம்மைக்கென ஒரு தனி உணர்வும் உள்ளது என்றோ பரிவும் காட்டவேண்டிய தேவை இருக்கிறது என்றோ மாரி உணர்வதில்லை. கள்ளு குடித்தபின் மிருகத்தனமாக உடலுறவு கொண்டுவிட்டு பீடி பிடிக்கச் செல்கிறான் (கள்ளும் பீடியும் அவன் விரும்பிப் பெற்ற பழக்கங்கள் அல்ல, வெளியூரில் தொழில் நிமித்தம் செல்லும் நேரத்தில் பிற வியாபாரிகளிடமிருந்து பெற்றுக்கொண்டது என்கிறார் ஆசிரியர் – இதிலும் ஒரு சமூகத் திணிப்பு உள்ளது. சமூக எதிர்ப்புக்கான ஒரு செயல்). இதே போன்ற இயலாமை கூடியதில் உணர்வு பீறிடும் ‘பூனைக்குட்டி‘ கதையில் இது சரியாக எடுபடவில்லை என்பதையும் வாசகர்கள் உணரலாம்.

சிறுகதைகளில் செவ்வியல் பாணியிலும், மரபை மறு ஆக்கம் செய்யும் கதைகள் பலவற்றை அவர் எழுதியிருப்பதை வாசகர்கள் அறியாமலேயே இருக்கக்கூடும். புது வாசகர்களுக்கு சமூக யதார்த்தக் கதைகள் வழியாகவே பாவண்ணன் படைப்புகளுக்கு அறிமுகம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். அதற்கு ஏற்றார்போல இணையத்தில் தமிழ் படிப்போர் பலருக்குக் கிடைக்கும் அவரது கதைகள் யதார்த்த பாணிக் கதைகளே. இதில் பாவண்ணன் தனி முத்திரை பதித்துள்ளார் என்றாலும் செவ்வியல் பாணியிலும், வரலாற்றை மறு ஆக்கம் செய்யும் கதைகளிலும் தனித்தடம் பதித்துள்ளார் என்றே சொல்லமுடியும்.

சமீபத்தில் வந்த கதைகளில் ‘வெள்ளம்‘, ‘தங்கமாலை‘, ‘பிரயாணம்‘, ‘கனவு‘, ‘இன்னும் ஒரு கணம்‘ போன்றவை மரபை மறு ஆக்கம் செய்யும் கதைகள் என்று சொல்வதை விட காலத்தின் பின்னோக்கிச் சென்று மனிதனின் அடிப்படை விழுமியங்களை அலசிப்பார்ப்பவை எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும். மரபு பற்றிய செவ்வியல் பாணிக்கதைகள் எனும்போது அவை ஒரு காலகட்டத்தின் தத்துவங்களை மானுட தரிசனமாக அடையாளம் காட்டிப் பழக்கப்பட்டவை எனலாம். பாவண்ணன் செய்வது நாட்டார் காவியங்களில் செய்வது போன்று கதாபாத்திரங்களின் அக புற அலைச்சல்களை பதிவிடும் வாழ்க்கை குறிப்புகளாகும். செழுமையான கதாபாத்திரங்களின் அக ஊசலாட்டத்தைப் பற்றிப் பேசும்போது (‘சூரபுத்திரன்’ – வெள்ளம் கதையில், ‘முசே’ – பிரயாணம்) அவை மிக இயல்பாகவே மானுட அடிப்படை விழுமியங்களை நோக்கிச் செல்கிறது. இன்னொரு வழியில் சொல்வதானால், கதாபாத்திரங்களின் வாழ்க்கை சார்ந்த தத்துவங்கள் எவ்விதமான சிந்தனை மரபையும் ஒட்டி இருப்பதில்லை. அவை மனிதர்களுக்கு இடையே நடக்கும் உரசல்களையும், இணைப்புகளையும் சார்ந்த சித்தரிப்புகளாக அமைந்திருக்கின்றன. கருத்துகளை விட கதாபாத்திரங்களை வாசகர்களுக்கு துல்லியமாகக் காட்ட இது வழிவகுத்திருந்தாலும் ஒவ்வொரு காலகட்டமும் அதில் புழங்கும் கருத்து சார்ந்த விழுமியங்களின் பதாகை எனும் சாத்தியத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுகிறது. இதனால் சில வரலாற்றுக் கதைகள் உயிரோட்டமானப் பார்வையைத் தராமல் விலகிவிடுகின்றன.

உதாரணமாக, ‘வெள்ளம்‘ சிறுகதை, தாரணி எனும் அப்சரஸ் அழகில் மயங்கும் பிக்கு மாணவன் சூரபுத்திரனின் குழப்பத்தைக் காட்டுகிறது. ஜென் கவிதைகளிலும், புத்தமதக் கதைகளிலும் பலவாறு புழங்கிய தத்துவ தரிசனமான ‘ஆசையைத் துறத்தல்’ எனும் நிலைக்கு எதிரானக் கதை. மிக எளிமையானக் கதையும் கூட. வெள்ளத்தில் நீரின் நிலை உயர்வது போல தாரணியின் உடல் அசைவுகளுக்குத் தன் மனதைப் பறிகொடுக்கும் சூரபுத்திரன் வழியாகச் சொல்லப்படும் தரிசனம் எது எனும் குழப்பம் வாசகனுக்குத் தோன்றாமல் இருக்காது. சூரபுத்திரன் தன் மனதை முழுவதுமாக இழக்கும் சித்திரம் ஒரு அனுபவம். ஆனால் அங்கிருந்து கதை அந்தளவிலேயே நின்றுவிடுகிறது. ஜென் படிமமாக மாறாமல், கதையை ஒரு வாழ்க்கை சித்தரிப்பாக மாற்றியதால் வரும் எளிமைப்படுத்தலின் சிக்கல். ஆனால், இதே ‘பிரயாணம்‘ கதையின் முடிவில் வீரப்பனுக்குக் கேட்கும் முசேவின் குரல் இறக்கும் மனிதரின் குரல் மட்டுமல்ல, அது ஒருவிதத்தில் மானுட இனத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனை மனிதன் ஏதோ ஒரு காரணத்தால் அடிமைப்படுத்தியிருக்கும் அதிகாரத்தையும் எதிர்த்து உடைக்கும் குரல். முசே-வீரப்பாவைப் பொருத்தவரை அது ஒரு முடிவு. ஆனால் உண்மையில் சாதாரணனான வீரப்பாவின் வாழ்வின் ஒரு பிரெஞ்சு குவர்னர் காட்டிய பரிவு பல தலைமுறைகள் நினைவு வைத்திருக்கும் கதை. காலப்போக்கில் அது கட்டுக்கதையாக மாறும் சாத்தியம் வரலாற்றில் உண்டு என்றாலும் அதிகாரத்துக்கும் வன்முறைக்கும் மட்டுமே பெயர் போன பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிரான குரலாக முசேவைப் பார்க்க முடியும்.

பாவண்ணனின் புனைவு நடை

பாவண்ணனின் புனைவு நடை பற்றிப் பேசும்போது நாம் அவரது சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எனத் தனித்தனியாகப் பேசவேண்டியுள்ளது. நவீனத் தமிழ் சிறுகதை களங்ளில் மிக நுட்பமான இடங்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். இரண்டாயிரம் பக்கங்களுக்கும் மேலாக வரும் அவரது முன்னூறு சிறுகதைகளில் பல பரவலான வாசக கவனத்தை ஈர்த்திருந்தாலும், ஒரு கலைஞனாக அவரை முன்னிறுத்தும் கதைகள் இன்னும் கண்டடையப்படாமல் இருக்கின்றன என்றே நினைக்கிறேன். முப்பது வருடங்களாகத் தொடர்ந்து சிறுகதை சூழலில் ஈடுபடுபவரது கதைகளை விமர்சகர்கள் இன்னும் விரிவாக ஆராயவில்லையோ எனத் தோன்றும்படியாகப் பலவித பாணிகளில் எழுதிய கதைகள் வாசக கவனத்துக்கு அதிகம் வரவில்லை. இயல்புவாத எழுத்தில் ஆழமாகத் தன் முத்திரையைப் பதிப்பவராக அறியப்பட்டவர் பல வரலாற்றுப்புனைவுகளும், நாட்டாரிய மறுவாக்கங்களும் எழுதியுள்ளார்.

“திடீர்னு ஒரு நாளு ராத்திரில பேயறஞ்சாப்புல வந்து நின்னா. துணிங்க ஒரு நெலையில இல்ல. கிழிஞ்சி கந்தலா தொங்குது. ஒடம்புல ஒரே புழுதி. ரத்தம். கேவி கேவி அழுவறாளே தவுத்து பேச்சே வரல. என்னாடி பூரணி என்னாடி பூரணின்னு உலுக்கறன். ஒரு வார்த்த அவளால பேச முடியலை. நாம கேக்கறதே அவ நெஞ்சுக்குள்ள போவலை. பூவாட்டம் என் பொண்ண வச்சிருந்தேன். எந்த முண்டச்சி பெத்த தறுதலைங்களோ நான் பெத்த அல்லித்தண்ட ஆழும் பாழும் அவ்வாறும் சிவ்வாறுமா ஆக்கிட்டானுங்க. ஆதரவு இல்லாத சிறுக்கி நானு. யாருகிட்ட போய் நாயம் கேக்கறது சொல்லு. அந்த ஐயனாரப்பந்தான் எல்லாத்துக்கும் கூலி குடுக்கணும்”, எச்சிலைக் கூட்டி விழுங்கும் போது அந்த அம்மாவின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது – (ஒற்றை மரம், பொம்மைக்காரி தொகுப்பு)

“ஆசையும் அதிர்ச்சியும் கலந்து மின்னும் அவன் கண்களில் குனிந்து முத்தமிட்டாள் அவள். உதறித் தள்ளிவிட்டு தன்வழியே செல்லப் பரபரபத்த அவன் கைகளோடு தன் கைகளைக் கோர்த்து இழுத்துத் தழுவினாள்.தழுவிய நிலையிலேயே புதர்களின் உட்பகுதியை நோக்கி நடந்தார்கள். கால்கள் அசைய மறுப்பதுபோல கனத்த கணத்தில் தரையில் சாய்ந்தார்கள்.காலகாலமாக அவனை அறிந்தவள்போல இடைவிடாமல் பலவிதமான உணர்ச்சிகளைக் காட்டிப் பேசினாள் அவள். குழைந்தாள். கொஞ்சிகொஞ்சிச் சிரித்தாள். மாறிமாறி முத்தமிட்டாள். இறுதியில் தன் உடலை அறியும்படி செய்தாள். தசைகளும் நரம்புகளும் பின்னிப்பிணைந்த இந்த உடனுக்குள் காணக்கிடைக்காத மாபெரும் புதையலைக் கண்ட ஆனந்தமும் பரவசமும் அவன் கண்களில் அலைமோதின” (வெள்ளம் சிறுகதை)

மேலே உள்ளது அவரது கதைகளின் இருவேறு புனைவு நடை. கூறுமுறையில் கதையின் இயல்பை ஒட்டி நிற்பவை. ஒன்று உச்சகட்ட உணர்ச்சி நிலையில் நாடக தருணத்தைக் காட்டும் சித்தரிப்பு. மற்றொன்று, மிக நிதானமாகத் தன்னை மறந்து கூடும் இரு உயிர்களின் காட்சியமைப்பு. நிகழ்ச்சிகளை மிக விரிவாக விவரித்து பலவிதமான உணர்ச்சிகளை கதையின் போக்கில் காட்டிச் செல்வது பாவண்ணனின் பாணி. ஒரு கடைத்தெருவோ, இயற்கைக்காட்சியோ புற இடத்தை ஸ்தாபிப்பதற்காக அவர் அவற்றை இணைப்பதில்லை. மாறாக, கதையின் தீவிரத்தைக் கூட்டவும், கதாபாத்திரங்களின் அக உணர்வுகளை பிரதிபலிக்கும் நோக்கத்துடனுமான புற உலக சித்தரிப்பு இயல்பாக அமைந்துவிடுகிறது. இதனாலே இயல்பை மீறிய தத்துவத்திணிப்பு அல்லது ஆன்மிக சித்தரிப்பை அங்கு நாம் காண்பதில்லை. இதனாலேயே பல கதைகளில் உச்சகட்ட முடிச்சு மிகப்பெரிய திருப்பங்களாகவோ வாசகர்கள் தங்கள் மனதில் உருவாக்கிய முடிவை முழுவதுமாகப் பூர்த்தி செய்வதுவாகவோ இருப்பதில்லை. கதாபாத்திரங்களின் இயல்பான வழக்கப்படி நடப்பதே கதையின் முடிவாகவும் இருந்துவிடுகிறது. இது பாவண்ணன் உலகம் உருவாக்கும் இயல்போடு ஒத்துப்போவதால் சிறுகதையின் நடையை பல இடங்களில் சுவாரஸ்யம் கூட்டாமல் நகர்வது போலத் தோன்றும்.

பாவண்ணன் சிறுகதை நடை அவரது உடனடி முன்னோடிகளான சுஜாதா, ஆதவன் போன்ற நவீன எழுத்தாளர்களின் சாயலை சாராத ஒன்று. நவீன புனைவு நடை எனும்போது நாம் அதில் உடனடித்தன்மையையும், நிகழ்வுகளைத் தாவுவதில் இருக்கும் துரிதத்தையும், சுருங்கச் சொல்லும் மொழியையும் பிரதானமாகக் கூறுகளாகக் கொள்ளலாம்.பாவண்ணனின் உலகில் இப்படிப்பட்ட நவீன புனைவு நடை விரவியிருந்தாலும் அவரை ஒரு ஸ்டைலிஸ்டாக வாசகர்கள் பார்ப்பதில்லை. வேடிக்கைகளை அவர் செயற்கையாகப் புகுத்துவதில்லை. மனித வாழ்விலிருந்து சந்தோஷம், துயரம், நிலையாமை அம்சங்களை இயல்பாகக் காட்டுவதில் கதைக்களனோடு சேர்ந்த நவீன நடை உருவாகிவிடுகிறது. சிறிய வாக்கியங்களில் சுருங்கச் சொல்லாமல் ஒரு முழுமையான சித்திரத்தைக் காட்ட முயல்கிறார். ‘ஒற்றை மரம்‘ கதையில் வரும் தாய் கதை நெடுக புலம்பித் தீர்க்கிறார். திரும்பத் திரும்ப ஒரே போன்றதொரு ஒப்பாரி. ஆனாலும் அதை சுருங்கச் சொல்லி பாவண்ணன் கடப்பதில்லை. இயல்பில் நம்மை சுற்றியிருப்போரது உள்ளார்ந்த உணர்ச்சியை ஒவ்வொரு முறையும் வார்த்தைகளில் காட்டுகிறார். நவீன பாணியில் வெட்டிச் செல்லும் யுத்திகளில் மனம் தோய்ந்தவர்களுக்கு பாவண்ணனின் இந்த கதை கூறும் பாணி வாசிப்பைத் தடை செய்யலாம். கதை காட்டும் உலகுக்குள் வாசகன் ஓரளவு பயணம் செய்தபின்னரே அவனால் அதோடு ஒன்றமுடிகிறது. இதை எதிர்மறை அம்சமாகப் பார்க்கும் விமர்சகர்கள் இருக்கிறார்கள். வாசகர்களும் இவ்விதம் கூறப்படும் கதையில் வாசிப்பின்பம் இல்லை எனக்கூறக்கூடும். திட்டவட்டமான முடிச்சுகளையும், காய்நகர்த்தல்களையும் கொண்டிராது வாழ்வை அதன் போக்கில் பதியும் பாணியால் நம் கற்பனையில் இருக்கும் உச்சகட்டத் திருப்பங்கள் கதையில் இருக்காது. இதனால் வேகமாகப் பக்கங்கள் திரும்பும்படியாக இல்லாத கதைகள் சில இருக்கலாம், ஆனால் நிச்சயமாக சரிவராமல் போன கதைகள் மிகக் குறைவே.

பாவண்ணன் படைப்பின் அழகியல்

பாவண்ணன் வாழ்க்கையிலிருந்து கதைகளை எடுக்கும் கலைஞர். அவரது கதாபாத்திரங்களில் கதைசொல்லிகள் மிகவும் குறைவு. பெரும்பாலானவர்கள் கதாபாத்திரங்களாக வாழ்பவர்கள். அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி பெரிய கனவுகளும், அதீத பேராசையும் இல்லாதவர்கள். பெரும்பான்மையானவர்கள் தங்களுக்கு இடப்பட்ட வாழ்க்கையை அதிக அலட்டல் இல்லாமல் கழிப்பவர்கள். இதனாலேயே இக்கதைகள் காட்டும் தத்துவ தரிசனங்கள் வெளிப்படையாக விவாதிக்கப்படுவதில்லை. மிகவும் உணர்ச்சிகரமான மனிதர்களாக வருபவர்கள்கூட தங்கள் விதி இதுதான் என்றோ, அல்லது தங்களுக்கு நிறைவு தரும் வாழ்வை எட்டிப்பிடிக்க எண்ணியபடியோ காலத்தைக் கழிப்பவர்கள். இதனால் கதை படிக்கும்தோறும் கதாபாத்திரங்கள் அனைவரும் தன்னிச்சையாக உருவாகி வருகிறார்கள்.

புராண மறு உருவாக்கங்களிலும், பிரெஞ்சு காலனிய காலக் கதைகளிலும் பாவண்ணன் ஒரு இறுக்கமான கூறுமுறையைக் கைகொள்கிறார். மொழியிலும் அவர் தனது இயல்பான நெகிழ்வுத்தன்மையை கைவிடுகிறார். உண்மையான கதாபாத்திரங்களைப் பற்றிய கதைகளில் அவர் எல்லை மீறாது புனைவு சாத்தியத்தைக் கையாளவேண்டும் எனும் ஜாக்கிரத்தன்மையோடு செயல்படுவதாக தோன்றுகிறது. பாத்திரங்களின் குணவார்ப்பில் அதீத கவனமும், பண்டைய கால புற சித்தரிப்புகளை வாசகர்களிடம் கடப்பதற்காக மொழியில் கொண்ட நேர்த்தியும் பல நல்ல வகைமாதிரிகளை உருவாக்கிவிடுகிறது. உண்மை கதாபாத்திரங்களைப் பற்றி அச்சுபிசகாமல் எழுதுவது சவாலான காரியம் மட்டுமல்ல. ஆசிரியனின் புனைவு சாத்தியங்களைக் குறுக்கிவிடும் அபாயமும் அதில் உண்டு. பிரபஞ்சனின் வரலாற்று நாவல்கள் ஒரு குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வராததற்கு இந்த காரணமும் முக்கியமானது. அவரது ஆனந்தரங்கப் பிள்ளை, சுப்பையா போன்றவர்களைப் பற்றிய வரலாற்று நாவல்களை இப்போது வாசிப்பவர்கள் இதைக் கண்டறியலாம். இந்த எல்லைகளை பாவண்ணன் உடைத்திருக்கிறார். அதற்கு அவரது கற்பனையும், புனைவு மொழியும், இலக்கிய அறிவும் அதி உபயோகமாக இருந்திருக்கிறது.

எந்தொரு கருத்தியலையும் சாராது எழுதுவதால் பாவண்ணனின் கதைகளில் ஆழ்மனதைத் தொடும் அம்சங்கள் நிரம்பியுள்ளன. வாழ்க்கையைச் சார்ந்த அடிப்படையான கேள்விகளை எழுப்பிக்கொள்வதை இவரது கதைகளில் அதிகம் பார்க்க முடியாது. வாழ்வோடு போராடும் கதாபாத்திரங்களின் அலைச்சல்கள் இருப்பதால் எவ்வொரு கருத்தியலும் இக்கேள்விகளுக்கு பதிலாக அமையாது என்பது அவரது ஆரம்பகட்ட படைப்புகளிலிருந்து காண்கிறோம். ‘வாழ்க்கை ஒரு விசாரணை‘ நாவலில் வரும் காளியின் அலைக்கழிவுகளுக்கும் அதீத கழிவிரக்கத்துக்குமுண்டான அவனது வாழ்க்கைக்கும் பதில் தேடி எந்தொரு கருத்தியலையும் ஆசிரியர் சென்றடையவில்லை. கடவுள் சார்ந்தும் சாராதுமான எவ்விதமான அமைப்புகளையும் ஆசிரியரோ கதாபாத்திரங்களோ சென்று சேர்வதில்லை. அவை வாழ்க்கை எனும் சர்வவல்லமையின் விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் போராட்டங்கள் மட்டுமே. இதனாலேயே படிமங்களும் அக ஓட்டங்களும் மிகக் குறைவாகவே பயன்பட்டிருக்கின்றன. மொழி சார்ந்த நுட்பங்கள் தேடும் வாசகர்களுக்கு பாவண்ணன் சிறுகதை அழகியலில் பெறக்கூடியது அதிகமில்லை.

பாவண்ணனின் செவ்வியல் கதை பாணி

அன்றாட உலகு சார்ந்த விழுமியங்களையும், நவீன மனது அடையும் சிக்கல்களையும் தாண்டிய பெரு வினாக்களையும், மானுட பண்பாடு கடந்த இடர்களையும் சொல்லமுயன்ற கதைகள் எழுதியவராக பாவண்ணன் பொதுவாக அறியப்படுவதில்லை. அவர் எழுதிய “ஏழு லட்சம் வரிகள்” நமது புராணத்தையும் பண்பாட்டையும் மறு ஆக்கம் செய்கிறது. “இன்னும் ஒரு கணம்” , “வெள்ளம்” போன்ற கதைகள் நமது புராண தத்துவ விழுமியங்களின் மீது ஒரு தேடலாக, பாவண்ணன் சொல்வது போல நவீன கேள்விகளுக்கான பதிலை  மரபில் துழாவித் தேடும் கைகளாக செயல்படும் கதைகள். நவீனத்துவக் கதைகள் தனிமனிதனின் தேடல்களை சமூகத்தின் அச்சாணியாகக் கருதும் பண்புடையது என்றால் செவ்வியல் கதைகள் வாழ்வை ஒரு ஒட்டுமொத்தத் தொகுப்பாகக் காண்கிறது. துரியோதனன் கிருஷ்ணை சுயம்வரத்தில் படும் வேதனையை மாறும் கணத்தை ஒரு ஒட்டுமொத்த இதிகாசத்தின் மீது கவிழும் குடையாகக் காட்டும் புனைவுக்கதை.

“கிருஷ்ணையின் மூச்சுக்காற்றும் வியர்வை மணமும் நுகரக்கூடிய நெருக்கத்தில் இருப்பவைபோலத் தோன்றின. காந்தமாக ஈர்த்த்ன அவண் கண்கள். காதோரத்தில் அலைந்தது குழல்கற்றை..எல்லாமே எதிரிலேயே காண்பதைப்போல தோற்றம் தந்து மறைந்தன.அடுத்த கணமே ஒரு யானை தும்பிக்கையால் வளைத்தெடுத்துப் பூமியில் வீசியதைப் போலத் தரை மீது விழுந்தான் துரியோதனன்” [ இன்னும் ஒரு கணம்]

நமக்குத் தெரிந்த கதை என்றாலும் படிமங்கள் மூலம் ஒரு இதிகாச தருணத்தை ஆழத்துக்குச் செலுத்துகிறார். இக்கதையைப் படிக்கும் வாசகர்கள், துரியோதனன் கிருஷ்ணையை மணந்திருந்தால் மகாபாரதம் நமக்குக் கிடைத்திருக்காதோ என எண்ணத் தோன்றும். ஆனால் வரலாறும், புராணமும் அத்தனை எளிமையான முடிச்சில் இயங்கும் வலையல்ல என்பதை பாவண்ணன் தனது கதையின் மூலம் புனைவாக்குகிறார். இப்படியான எண்ணற்ற தருணங்களால் நெய்யப்பட்ட சிலந்திவலை போன்றது அது. அதன் பாரம் ஒவ்வொரு புள்ளியிலும் அமைந்திருக்கிறது. மகாபாரதக் கதைகளை முன்வைத்து ஜெயமோகன் எழுதிய சிறுகதைகள் இணைப்பண்பாட்டு தொகுப்பு என்றால் பாவண்ணன் அவரது செவ்வியல் கதைகள் மூலம் பண்பாட்டு சித்திரிப்பின் பல வகை மாதிரிகளை உருவாக்கியுள்ளார். புத்த பள்ளிகளில் தத்துவம் பயிலும் ஒரு பிக்குவின் அகச்சஞ்சலங்கள் “வெள்ளம்” கதையாகிறது. இப்படியாக ஏழு லட்சம் வரிகள் தொகுப்பு பல தொன்ம தரிசனங்களை மறு ஆக்கமாக்குகியுள்ளது.

இந்த நேரத்தில் சமீபத்தில் எழுதப்பட்டு வரும் வெண்முரசு நாவல் வரிசையுடன் ஒரு ஒப்பீடு செய்வது இருவித பாணிகளை வாசகர்கள் புரிந்துகொள்ள உதவும். பாவண்ணன் தொன்மங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நம்முன் மீண்டும் நிகழ்த்திக் காட்டுகிறார். ஆனால் அவற்றை கலைத்து மீண்டும் அடுக்குவதில்லை. அதிலுள்ள தேடல்களையும், சமூக விழுமியங்களையும் மறு பரிசீலனை செய்வதில்லை. வெண்முரசு போன்ற பண்பாட்டுப் புனைவு நூல்களில் கையாளப்படும் ஒட்டுமொத்த தொகுக்கும் தன்மை பாவண்ணனின் இக்கதைகளில் கிடைப்பதில்லை. அவை நாமறிந்த கதைகளை ஒரு குவிமையத்தை நோக்கி கச்சிதமாக எடுத்துச் செல்லப்படும் கதைகள். உதாரணத்துக்கு, துரியோதனனும் கர்ணனும் கிருஷ்ணை சுயம்வரத்தில் பங்கெடுக்கும் சமயத்தில் இயல்பாக எழும் சில பண்பாட்டுச் சூழல்களுக்குள் கதை செல்வதில்லை. சிறுகதையாகச் சொல்லப்படுவதால் அது ஒரு மையத்தை நோக்கி கச்சிதமாகச் சென்று முடிகிறது. அதாவது புராணமும் தொன்மும் நம்முன் மீண்டும் நிகழ்த்தப்படுகின்றன. அக்கதையின் தேடல் விரிவான சமூகம் மற்றும் பண்பாட்டு சூழலின் பின்புலத்தில் நடப்பதில்லை.

பாவண்ணன் பிரெஞ்சு ஆண்டுவந்த புதுச்சேரி பகுதிகளை மையமாகக் கொண்டு பல வரலாற்றுப் புனைகதைகளை எழுதியுள்ளார். இக்கதைகளும் விரிவான சமூகத்தளத்தில் வைத்துப்பேசப்படாமல் இருந்தாலும் வரலாற்றுப்புனைவுக்காக கச்சிதமான பாணியை உருவாக்கிவைத்திருப்பதாகத் தோன்றுகிறது. மிகச் சிறந்த உதாரணக்கதைகள் – “கண்கள்“, “தங்கமாலை“, “பிரயாணம்“.

வரலாற்று நாயகர்களுக்கு காலம் தாண்டியிருக்கும் புகழுக்கான காரணங்கள் அவர்களது செயல்களின் தன்மை பொருத்து அமைவது. வரலாற்றில் பதியப்படும் அக்கதைகள் நாயகர்களின் செயலுக்கு ஏற்றார்போல பல வடிவங்கள் எடுத்துத் தொன்மங்களாக மாறிவிடும். வரலாற்றை புனைவாக்கும்போது  இத்தொன்மங்களிலிருந்து கதைகளைப் பிரிக்கும் கலை மிகமுக்கியமான அம்சம். அத்தொன்மங்களையும்,கதைகளையும் அப்படியே நிகழ்த்திக்காட்டுவது செய்நேர்த்தியுள்ள கதையாகலாம் ஆனால் அதில் வாசகன் செல்லக்கூடிய ஆழம் குறைவாகவே இருக்கும். ஒரு படைப்பை வாசிக்கும்தோறும் வாசகன் தன்னைத் தொகுத்துக்கொள்கிறான், தனது அற உணர்வை மறுபரிசீலனை செய்கிறான். வரலாற்றுக்கதையில் வாசகன் அவனுக்குத் தெரிந்த புராணத்தோடு அக்கதையை அணுகுகிறான் எனும்போது தொகுத்துக்கொள்ளும் இடைவெளியை அளிக்கும் கதைகள் அவனை ஆழமாக பாதிக்கின்றன.

கண்கள்” கதை கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை வரலாற்று சம்பவத்திலிருந்து எழுதப்பட்டது. ஆனால் மிக ஜாக்கிரதையாக தொன்மத்தின் மாயவலைக்குள் வீழாமல் பாவண்ணன் அக்கதையை வாழ்வின் விசாரணையாக மாற்றியுள்ளார். புதுச்சேரி ஆயி மண்டபத்தின் சரித்திரம் அறிந்தவர்களுக்கு அக்கதை ஒரு ராஜாவின் அற உணர்வைப்பற்றிய நாடகீய தருணமாகக் காட்சியளிக்கும். ஆனால் ஆயியின் குளத்தை பாவமன்னிப்புத் தேடி அலையும் நிம்மதியற்ற மனமாக உருவகப்படுத்தியதில் அக்கதை பல பரிமாணங்களை அடைகிறது. கண்டாமணியின் ஓசையைக் கேட்கும்தோறும் மனநிம்மதியை இழக்கும் தி.ஜானகிராமனின் கதையைப் போல இக்கதையில் பலாப்பழ வாசனையையும், குளத்தையும் நாம் காண்கிறோம். காலந்தோறும் மாறிவரும் அற உணர்வுகளைத் தனது கண்களால் சதா அலசுவதாக அக்குளம் ராயருக்குக் காட்சி அளிக்கிறது. இந்த குளத்தைக் கண்களாக மாற்றி நாம் புதுச்சேரியின் பிரெஞ்சு காலனியாதிக்கத்தையும் அலசமுடியும், பெஞ்சமின் முசே [“பிரயாணம்“] மனசாட்சியாக ஐரோப்பாவரை துரத்தும் விசையாகவும் கொள்ள முடியும்.

“சத்திரத்தில் ஏதோ ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பலாப்பழங்களின் மணம் மூக்கைத் துளைத்தது. தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த ரகுராயரின் மனதில் உடனடியாக பாவங்களையும் பலாவையும் மறைக்கமுடியாது என்ற எண்ணம் எழுந்தது” [கண்கள்]

ஹம்பி நகரிலிருந்து வெளியேறும் கவிராயர் விஜயநகர் சாம்ராஜ்ஜியத்தின் அழிவுக்கான காரணத்தை புதுச்சேரியின் ஆயி மண்டபத்தின் அறப்பிழைவில் கண்டுகொள்கிறார். சாபத்தின் நிழல் நீளும் தூரத்தை யாராலும் கணிக்கமுடியாது. கண்கள் கதையில் தொடங்கும் இந்த நிழல் பிரயாணம் கதையில் பெஞ்சமின் முசேயின் மூச்சில் அடங்குகிறது. பெஞ்சமின் முசே பாரீஸிலிருந்து குவர்னராக எல்லைப்பிள்ளைச்சாவடி வருகிறார். அதிகாரத்தின் வன்முறைக்குப் பழக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டுகொள்ள அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் கொடுமைகளைச் இந்த சிறுமண்ணில் களைய அவர் எடுத்துக்கொள்ளும் பயணம் இது.

இந்த இரு கதைகளிலும் தொன்மங்களிலிருந்து எடுத்தாளப்படும் புனைவு தருணங்கள் இல்லை. சொல்லப்போனால் அரசு அதிகாரத்தின் கச்சிதமான இழையை இருவித ஆட்சியாளர்களின் வரலாற்றிலிருந்து உருவாக்கியுள்ளார். இப்படிப்பட்ட ஆக்கங்களைப் படிக்கும்போது பிரபஞ்சன் எழுதிய வரலாற்றுப்புனைவுகளிலிருந்து வரலாற்று எழுத்து எந்தளவு மாறியுள்ளது என்பதை வாசகன் அறிந்துகொள்ளமுடிகிறது. கம்யூனிஸ்ட் சுப்பையா, பாரதியார், குவர்னர் தூப்ளே, துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை போன்ற பல வரலாற்றுப் பாத்திரங்களைக் கொண்டு வரலாற்றுப்புனைவுகளை உருவாக்கிய பிரபஞ்சன் கற்பனையில் செய்யாத பாய்ச்சல்களை இக்கதைகளில் நாம் காண்கிறோம். அதுமட்டுமல்லாது விரிவான சமூக/ வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ளதால் வரலாற்றில் இல்லாத சாத்தியங்களை பாவண்ணன் தனது கற்பனையினால் நிரப்பியுள்ளதைப் பார்க்கிறோம். ஒரு வரலாற்றுப் பாத்திரத்தின் மீது படிந்து போயிருக்கும் தொன்மங்களையும் வீரக்கதைகளையும் தாண்டி மனித வாழ்வின் விழுமியங்களையும், அடிப்படை உணர்வு நிலைகளையும் ஆராய்கிறார் பாவண்ணன். பிரபஞ்சனின் வரலாற்றுப்புதினங்கள் இத்தொன்மங்களை வேண்டிய மட்டும் பிடித்துக் கொள்வதால் கதாபாத்திரங்களின் அக உணர்வுகளுக்குள் செல்வதற்குப் பெரும் தடையாக அமைந்துள்ளது. “கண்ணீரால் காப்போம்” – பிரபஞ்சனின் வரலாற்று நாவலில் வரும் வ.வே.சு ஐயர், சுத்தானந்தபாரதி,திரு.வி.க போன்றோரின் சித்திரத்தை படிக்கும் வாசகன் தமிழ் இலக்கியத்தில் வரலாற்றெழுத்தின் இந்த நகர்வைக் கண்டுகொள்வான்.

பாவண்ணன் உலகில் மண்ணும் மரபும்

பாவண்ணனின் கதைகளை ஒருசேரப் படிப்பவர்களுக்கு அவர் மனிதனின் இயல்பான நன்னடத்தை மீது அளவுக்கதிகமான அபிமானம் கொண்டிருக்கிறாரோ எனத் தோன்றும். அது ஓரளவுக்கு உண்மையும் கூட. பாவண்ணனின் மண்ணான வட ஆற்காட்டுப்பகுதி மக்களின்  ஓரளவு செழிப்பான விவசாய நிலமும், நகர்ப்புறத்தின் அண்டையில் இருப்பதால் விளையும் வர்த்தக கொடுக்கல்வாங்கல்களும் அவர்களது வாழ்வோடு பிணைந்திருக்கும் ஒன்று. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செஞ்சி, புதுவை இடங்களின் வளமான நிலப்பகுதி இருந்தாலும் நிலக்கடலை, மிளகாய், சம்பா போன்ற விளைச்சல்களால் வருடம் முழுவதும் தொடர்ந்த மகசூல் உள்ள நிலம். அதிக மழைநீரையும் எதிர்பாராததால் வறட்சி குறைவாகக் காணப்படும். கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளாக தெலுங்கு நாயக்கர்களும், தஞ்சை மராத்தியர்களும், சுல்தான்களும் ஆண்ட நிலம் என்பதால் நில உடைமையாளர்களில் பலர் வேற்றுமொழிக்காரர்களாகவும், அருகிலிருக்கும் புதுவை, சென்னை போன்ற இடங்களோடு வர்த்தகத் தொடர்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பாவண்ணன் கதைகளில் வரும் பெரும்பான்மையானவர்கள் சிறு நிலக்காரர்கள் அல்லது நிலச்சுவாந்தார்களுக்கு மாட்டு லாடம் அடிப்பது, தோட்டவேலை செய்வது போன்ற சிறுவேலை செய்பவர்கள். ஓரளவு நகரப்புற ஞானம் உள்ளவர்கள் ஆனால் அச்சுகங்களை எட்டிப்பிடிக்க முடியாதபடி அவர்களது வருமானம் அமைந்திருக்கும். பணச்சேகரிப்பை தலைமுறைகளின் வளர்ச்சிக் குறியீடாகப் பார்ப்பவர்கள்.

வாழ்க்கை ஒரு விசாரணை – நாவலில் வரும் வடிவேலு தாத்தா, வட ஆற்காட்டுப்பகுதி கதைளை சொல்லிச் செல்லும்போது நிலம் கைமாறும் முரணைப் பற்றிப் பேசுகிறார்.முன்னூறு வருடங்களாக தெலுங்கு, மராத்தி பேசும் முதலாளிகளிடமிருந்த நிலம், நில உச்சவரம்பு சட்டத்தின்படி மெல்ல கிராமங்களில் வேலை பார்த்தவர்கள் கைக்கு வருகிறது. அங்கிருந்து புது தலைமுறை ஆட்கள் வர்த்தகத்துக்காக புதுவை, சென்னை, கடலூர் செல்கிறார்கள். நில உரிமையாளர்களுக்கு அதிகாரம் குறையும்போது ஏற்படும் சிக்கல்களைப் பேசும் கதைகள் [அடைக்கலம்], ஜாதியை மீறும் காதல் திருமணங்களின் கருணைக்கொலை [ கனவு ] என மொழி, ஜாதி, பணவசதி என கடந்த நூறு வருடங்களில் கிட்டத்தட்ட தலைகீழாக மாறிய அடையாளங்களை உடைய சமூகத்திலிருந்து வரும் கதாபாத்திரங்கள் நிரம்பிய கதைகள்.

“ஒருதரம் மெட்ராசுக்குப் போய் வந்தவன் எண்ண ஆடற மிஷினைப் பார்த்திட்டு அது மாதிரியே இந்த ஊர்லயும் வாய்க்கணும்னு அலைஞ்சான். மணியக்காரு, கணக்குப்புள்ளயார் யாரயோ பார்த்து எல்லார் வாயயும் பணத்தால அடச்சி மேற்கால பெரிய அளவுக்கு பொரம்போக்குல நெலத்த வளச்சான் கேக்கறவங்களுக்கு ஒண்ணும் சொல்லலைகடசில மெட்ராஸிலேர்ந்து மிஷின் வந்திச்சு..அன்னிலேர்ந்து செக்குக்காரங்க வாய்ல மண்ணு. ஒரு செக்கு ரண்டு செக்கு வச்சிருந்தவன்லாம் பெரிய மனுஷங்கற காலம் மலையேறிப்பூடுச்சி. ஈ ஓட்ட ஆரம்பிச்சிட்டானுங்க. சொத்து அப்படியே கைமாறிடுச்சு” [வாழ்க்கை ஒரு விசாரணை]

“நடுராத்திரி வரைக்கும் இருந்த தணல் தணிஞ்சதுக்குப்பறமா எடுத்து வெளியில போட்டாங்க. ஒடம்பே இல்ல. கரிஞ்ச கட்ட. உருட்டிகினே வந்து தோப்புலயே ஒரு பள்ளத்தத் தோண்டி பொதச்சிட்டாங்க. சாதுப்பெரும தெரியாத சனியனே சனியனேன்னு அதும்மேல துப்பி செருப்பாலயே மிதிச்சாரு தாத்தா..” [கனவு]

கண்ணுக்கெதிராக வர்த்தகத்திலும், சமூக அடையாளத்திலும் திடுமென மதிப்பைப் பெற்ற ஜாதியைப் பார்த்து ஏற்படும் பொறாமை, நகரமயமாக்கத்தின் வசதிகளைப் பரவலாகப் பெற முடியாததில் இருக்கும் ஏக்கம், வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் குலக்கதைகள் மூலமாக ஒரு பிராந்தியத்தை அடையாளப்படுத்துவதை தொடர்ந்து புனைவில் எழுதிக்காட்டியிருக்கிறார். வட்டாரக் கதைகள் எனும்போது உலர்ந்துபோன வாழ்வில் சிறு கீற்றைக் காட்டுவதோடு நில்லாமல் ஒரு தன்னெழுச்சி மூலம் கதாபாத்திரங்களுக்கு அகவிடுதலை அளிக்கவும் செய்கிறார் – ‘’மீண்டும் மீண்டும் தன்னை முத்தமிட்டபடி இருப்பதுபோன்ற எண்ணம் மனதில் பொங்கியது. அவள் வேதனையெல்லாம் அந்த முத்தம் அழுத்தித் துடைத்துவிடுவதைப்போல இருந்தது” – என தன்னைக் கெடுத்தவனையும் புருஷனின் வன்முறையையும் ஒரு தட்டில் நிறுத்தி பொம்மைக்காரியை தற்கொலையிலிருந்து காக்கிறது. மிகத் தீவிரமாகச் சொல்லப்பட்ட பொம்மைக்காரி கதை பாவண்ணனின் புனைவு அழகியலுக்கு ஒரு உச்சத்தைக் கொடுக்கும் கதை. அவரது அழகியலை திட்டவட்டமாக நிறுவும் கதையாகவும் உள்ளது.

Jpeg

பாவண்ணனின் கதைகளில் இயல்பாகவே படிமங்கள் உருவாகி வருவதை முன்னர் பார்த்தோம். ஜெயமோகன் ஒரு கட்டுரையில் – ஒரு வாசனையில் மனிதரையும் அந்த மனிதரைச் சார்ந்த உறவுகளையும் புனைவுக்குள் கொண்டு வர முடியும், என வண்ணதாசன் புனைவு பற்றி தெரிவித்திருப்பார். பாவண்ணனின் கதைகளில் வரும் மனிதர்களை நல்லவர் கெட்டவர் எனத் தரம் பிரித்துப்பார்க்க நமக்கு அனுமதி இல்லை. கதையில் வரும் மனிதர்களும் அவர்களுடன் ஒட்டும் உறவுமாக இருக்கும் தொடர்புகளும் இந்த வாழ்வை தவமாக, வரமாக, சாபமாகக் கொள்ளும் நிலையிலிருந்து விடுபட எண்ணுபவர்கள். வாழ்க்கை ஒரு விசாரணை நாவலில் வரும் காளி, கனவு கதையில் வரும் விஸ்வநாதன், பிரெஞ்சு துபாஷி வீட்டில் திருடச்செல்லும் பொம்மையார்பாளையும் வீரமுத்து அனைவரும் சந்திக்கும் ஒரு புள்ளியாக இது இருக்கிறது. பாவண்ணனின் வாழ்க்கைப் பார்வையில் அவர்களுக்கான விடுதலை நிலை என்பது கொடுக்கப்பட்ட வாழ்வை போராடாமல் ஏற்றுக்கொள்வதிலேயே அமைந்திருக்கிறது. ”பறவைகள்” கதையில் வரும் முதியோர் இல்லம் போல இம்மனிதர்கள் அடைய நினைக்கும் இடமும் இன்னொரு கூண்டு மட்டுமே என்பதை உணராமல் இருப்பவர்கள். பொம்மைக்காரி போல செல்ல நினைக்கும் இடமும் கூண்டே எனும் தரிசனத்தை அடைந்துவிட்டால் தங்களைச் சுற்றியிருக்கும் அவலத்திலும் ஒளிகீற்றைக் கண்டுகொள்வார்கள்.

பாவண்ணன் பலதரப்பட்ட கதைகளை எழுதிய கலைஞனாக அடையாளம் காணப்படவேண்டியது மிகவும் அவசியம். இக்கட்டுரையில் அவரது தமிழ் புனைவை மட்டுமே பிரதானமாக அலசியுள்ளோம். மொழியாக்கத்தில் அவரது சாதனைகள் இதற்குச் சமானமானவை. கன்னட மொழியாக்கங்களில் அவர் செய்த சாதனையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் படைப்பாளிகள் இன்றும் வரவில்லை. முறையாக கல்விமுறையில் பயிலாமல் தன்னிச்சையாகக் கற்றுக்கொண்டே செவ்வியல் ஆக்கங்கள் தொடங்கி வட்டார மொழிகளைக் கையாளும் தலித் இலக்கியம் வரை அவரால் கன்னடத்திலிருந்து மொழியாக்கம் செய்யமுடிகிறது. மொழியாக்கங்களும் தமிழ் புனைவுகளும் அவரை மொழிவெளியின் சாத்தியங்களை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கிறது எனலாம். தொடர்ந்து சிறார் நாவல்கள், கன்னட கவிதை இலக்கியம் எனும் புது திசைகளில் பயணம் செய்யும் பாவண்ணனை நினைக்கும்தோறும் வேலி ஓரங்களில் எதிர்பாராத இடைவெளிகளில் பூக்கும் செடிகள் நினைவுக்கு வருகின்றன. பாவண்ணன் சொல்வது போல, பசவண்ணரின் வசனங்களில் வரும் வரி – எங்கோ மாமரம். எங்கோ குயில். எல்லாவற்றையும் இணைப்பது எதுவோ?

குதிரை வீரன் பயணம் [பாவண்ணன் நேர்காணல்]

Paavannan 21

பதாகை: ஆரம்பத்தில் கவிதை எழுதத்தொடங்கியபோது எண்சீர்விருத்தம், ஆசிரியப்பா வடிவில் எழுதத்தொடங்கி பின்னர் குறுங்காவியங்கள் எழுதியதாக ஒரு பேட்டியில் படித்திருக்கிறேன். நீங்கள் கவிதை எழுதத்தொடங்கியது ஏன்? கவிதையிலிருந்து சிறுகதை எனும் வடிவத்தை கைகொண்டது எப்படி?

பாவண்ணன்: ஏன் தொடங்கினேன் என்கிற கேள்விக்கு நேரிடையான பதிலைச் சொல்வது சிரமம். ஆனால், எப்படித் தொடங்கினேன் என்று விரிவாகச் சொல்லமுடியும். அந்தப் பதிலிலிருந்து இந்தப் பதிலை நோக்கிச் செல்வது ஒருவகையில் எளிதாக இருக்கும். திருக்குறள் வாசிப்புதான் இளம்பருவத்தில் என் இலக்கிய ஆர்வத்துக்கான தொடக்கம். அதைத் தொடர்ந்து வாசித்த பாரதியார் கவிதைகளும் பாரதிதாசன் கவிதைகளும் என்னைக் கவிதைகளின் உலகத்தை நோக்கி அழைத்துச் சென்றன. எங்கள் பள்ளித் தமிழாசிரியர்கள் மிகவும் அன்பானவர்கள். ஒரே ஒரு பாடல் வரியை எங்கள் மனத்தில் பதியவைப்பதற்காக ஒரு வகுப்புநேரம் முழுதும் நீளும் அளவுக்கு அந்த வரி சார்ந்த வரலாற்றையே கதையாக எடுத்துச் சொல்வதில் ஆற்றல் மிகுந்தவர்களாக இருந்தார்கள். நளவெண்பாவிலிருந்து எங்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்த ஒரு நாலுவரி வெண்பாவைச் சொல்லிக் கொடுப்பதற்காக, நளன் சரித்திரத்தையே கதையாகச் சொல்லி விளக்கியவர்கள் அவர்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை, ராமாயணம் கதைகளையெல்லாம் அவர்கள்வழியாக நாங்கள் அப்படித்தான் தெரிந்துகொண்டோம். அச்சமயத்தில் எங்கள் ஊரில் திருக்குறள் கழகம் என்னும் பெயரில் இலக்கிய அமைப்பொன்று இயங்கிவந்தது. மாதத்துக்கு ஒன்றிரண்டு முறைகள் அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து வரும் பேச்சாளர்கள் அந்த அமைப்பில் உரையாற்றுவது வழக்கம். இரண்டுமூன்று நாட்கள் நடைபெறும் அதன் ஆண்டுவிழாவில் கவியரங்கம், உரையரங்கம், இலக்கியப் பேருரைகள் என நடைபெறும். இந்தப் புறச்சூழலால் உருவான மன எழுச்சியும் கவிதைக்கான மனநிலையை அளிக்கக்கூடியதாக இருந்தது. அப்போது நான் பதினொன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் காலை ஏரிக்கரையில் இருந்து திரும்பிவரும்போது தொலைவில் ஒரு நாவல்மரத்தின் அருகில் ஏராளமான காக்கைகள் கூடி இரைச்சலிடும் ஓசையைக் கேட்டேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. வேகமாக நடந்து சென்று அந்த மரத்தை அடைந்தேன். மின்சாரக்கம்பிகளில் சிக்கி உயிரிழந்த காக்கை, குழந்தை எடுக்கமறந்து வைத்துவிட்டுச் சென்ற ஒரு பொம்மைபோல தரையில் கிடந்தது. நூற்றுக்கணக்கான காக்கைகள் இறந்துபோன காக்கையைச் சுற்றிச்சுற்றி பறந்துவந்தன. ஓர் ஊரே கூடிநின்று அழுவதுபோல இருந்தது அந்த ஓசை. அந்தக் குரல் என்னை என்னவோ செய்தது. பதற்றமாகவும் வேதனையாகவும் இருந்தது. என்னால் சில கணங்களுக்குமேல் அங்கே நிற்க முடியவில்லை. வேகமாக நடந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். அன்று முழுக்க அந்தக் காட்சியை என் மனம் நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் மீண்டும்மீண்டும் உருவாக்கி கண்கொட்டாமல் பார்த்தபடி இருந்தது. ஆசிரியர் பாடம் நடக்கும்போது கரும்பலகையில் இறந்துபோன அந்தக் காக்கை தெரிந்தது. நண்பர்களோடு மைதானத்தில் விளையாடும்போதும் அதைப் பார்த்தேன். சாலையில் நடக்கும்போதும் அதைப் பார்த்தேன். இரவுநேரத்தில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, சுவரில் படிந்திருந்த நிழலிலும் அதைப் பார்த்தேன். என் மன அழுத்தம் தாளமுடியாததாக இருந்தது. அன்று இரவு அந்த அனுபவத்தை ஒரு கவிதையாக எழுதினேன். அஞ்சலிக்குறிப்பின் தோற்றத்தைக் கொண்ட அந்தக் கவிதையே என் முதல் கவிதை. மறுநாள் எங்கள் வகுப்பு தமிழாசிரியரிடம் காட்டினேன். அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. எப்போதும் அவர் என்னை ஒரு மாணவனாக நடத்தியதே இல்லை. உரிமையுள்ள ஓர் உறவுக்காரர்போலவே நடத்துவார். அந்தக் கவிதை எங்களிடையே இருந்த உறவை மேலும் வலிமையாக்கிவிட்டது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் எழுதிய கவிதைகளுக்கு அவரே என் வாசகர். அவரே என் விமர்சகர். இப்படித்தான் ஒரு கவிஞனாக நான் எழுதத் தொடங்கினேன். ஆனால் ஏன் தொடங்கினேன் என்பதற்கு எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அன்றைய பதற்றத்தையும் வேதனையையும் கடந்துவர எனக்கு அந்தக் கவிதைதான் உதவியது. அதை ஒரு சிறந்த வழிமுறையாக நான் பயன்படுத்திக்கொண்டேன். கிட்டத்தட்ட என் முதல் சிறுகதையையும் இதே போன்றதொரு சூழலில்தான் எழுதினேன். 1981ஆம் ஆண்டு. தொலைபேசித் துறையில் கர்நாடக மண்டலத்தில் இளம்பொறியாளர் பதவிக்கான நேர்காணலில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்குச் சென்றிருந்தேன். குறிப்பிட்ட நாளில் பெங்களூருக்குச் சென்று திரும்புவதற்குத் தேவையான தொகை என்னிடம் இல்லை. அதைப் புரட்டுவதற்காக எங்கெங்கோ அலைந்தும் தோல்வியே கிடைத்தது. ஒரு கட்டத்தில் என்னால் நேர்காணலுக்குச் செல்லமுடியாமல் போய்விடுமோ என்று அச்சமாக இருந்தது. கடைசி நம்பிக்கையாக ஒரு நண்பனைச் சென்று சந்தித்தேன். அவன் கொஞ்சம் பணம் கொடுத்தான். உடனே அந்தப் பணத்துடன் பேருந்து நிலையத்துக்குச் சென்றேன். அன்று இரவுப்பயணத்துக்கான பயணச்சீட்டை வாங்கிய பிறகுதான் வீட்டுக்குச் சென்றேன். நேரம் குறைவாக இருந்தது. உடனே கைப்பெட்டியில் சான்றிதழ்களை எடுத்துவைத்துக்கொண்டு கிளம்பினேன். சாப்பிட நேரமில்லை. பணத்துக்கான அலைச்சலில் அன்றுமுழுக்கவே நான் சாப்பிட்டிருக்கவில்லை. ஆனால் அதையெல்லாம் யோசிக்க நேரமில்லை. பெங்களூரில் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துகொண்டு கிளம்பிவிட்டேன். மறுநாள் பெங்களூரில் நடந்ததெல்லாம் பெரிய கதை. நிறைய அலைச்சல்கள். மருத்துவச்சான்றிதழ் எடுக்கச் சென்ற இடத்தில் கைச்செலவுக்கு வைத்திருந்த பணத்தை சீல் போட்டுத் தருகிறவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க நேர்ந்ததால் அன்றும் சாப்பிடமுடியவில்லை. மீண்டும் இரவுப்பயணம். ஊர் திரும்பி வீட்டுக்கு நடந்து செல்ல சக்தியே இல்லை. சில மாதங்கள் கழித்து அந்த வேலைக்கான பயிற்சிக்குரிய ஆணை கிடைத்து ஐதராபாத் சென்றுவிட்டேன். ஊரையும் பெற்றோரையும் நண்பர்களையும் முதன்முறையாக பிரிந்து வெகுதொலைவு வந்துவிட்டேன். அந்தப் பிரிவு என்னை நொறுக்கிவிட்டது. என்னால் அந்த வலியைத் தாங்கவே முடியவில்லை. அந்த நேரத்தில் ஊரில் என் அப்பா கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு என் அம்மா மிகவும் துயரத்தில் இருந்தார். என்னுடைய ஓராண்டுப் பயிற்சியில் மூன்று மாதங்கள்மட்டுமே முடிந்திருந்தன. என்னால் என் குடும்பத்துக்கு ஒரு உதவியும் செய்ய முடியாமல் இருந்தது. அக்கணங்களில் என் இடத்தில் என் நண்பர்கள் இருந்து பல உதவிகளைச் செய்தார்கள். இருப்பினும் எனக்குள் பெருகிய குற்ற உணர்வுக்கு அளவே இல்லை. ஒருநாள் பயிற்சியிலிருந்து விலகி வீட்டுக்குச் சென்றுவிடலாமா என்றொரு யோசனை வந்தது. எங்கள் வகுப்புப் பொறுப்பாளரைச் சென்று சந்தித்துப் பேசினேன். நான் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு என் விலகல் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சொன்னார். வேலை கிடைக்கவில்லை என்று ஒவ்வொருவனும் நம் நாட்டில் நாயாய் பேயாய் அலைகிறான். நீ என்னடா என்றால் முட்டாள் மாதிரி விட்டுவிடுகிறேன் விட்டுவிடுகிறேன் என்று சின்னப்பிள்ளைமாதிரி அழுதுகொண்டு வந்து நிற்கிறாய், போ, போய் ஒழுங்காக பயிற்சியை முடிக்கிற வேலையைப் பார் என்று புத்தி சொல்லி அனுப்பிவைத்துவிட்டார். அன்று இரவு மனம் மிகவும் உளைச்சலாகவே இருந்தது. மனசுக்குள் பெரிய பட்டிமன்றமே நடைபெற்றது. உறக்கவே வரவில்லை. பயிற்சிப் பொறுப்பாளரின் சொற்கள் மிக அருகில் ஒலிப்பதுபோல ஒலித்தன. அவற்றின் தொடர்ச்சியாக தற்செயலாக எனது நேர்காணல் பயணம் நினைவில் விரிந்தது. இரண்டு முழுநாட்கள் உணவில்லாமல் அலைந்த அலைச்சல் ஞாபகத்துக்கு வந்தது. என்னமோ அக்கணத்தில் பசியோடு உட்கார்ந்திருப்பதுபோல ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிவிட்டேன். அந்தப் பயணத்தின் ஒவ்வொரு காட்சியும் என் மனத்தில் மீண்டும் நிகழ்ந்தன. பசியின் எல்லையில் பெட்டியில் தேடித் துழாவி கைக்குக் கிடைத்த பத்து பைசாவுக்கு ஒரு வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, தோலைத் தூக்கிவீச மனமில்லாமல் வெற்றிலை மடிப்பதுபோல அதையும் மடித்துக் கடித்துத் தின்றதும். தின்று முடித்து திரும்பிய கணத்தில் பேருந்துக்குள்ளிருந்து என்னையே உற்றுப் பார்த்தபடி இருந்த இளம்பெண்ணின் பார்வையைக் கண்டு துணுக்குற்றதும் துல்லியமான காட்சிகளாகத் தெரிந்தன. தாங்கமுடியாத ஒரு சுமையைத் தூக்கிவைத்ததுபோல மனம் தத்தளித்தது. அக்கணத்தில்தான் அதை ஒரு சிறுகதையாக எழுத முடிவெடுத்தேன். விடியவிடிய உட்கார்ந்து அதை எழுதிமுடித்தேன். அதற்குப் பிறகுதான் என் மனபாரம் மெல்ல இறங்கியது. தாமதமாகச் சென்றேன். கவிதையாக இருந்தாலும் சரி, சிறுகதையாக இருந்தாலும் சரி, எனது மனபாரத்தை சிறிது நேரம் இறக்கிவைத்து இளைப்பாறுவதற்கு உதவும் சுமைதாங்கிக்கற்களாக உதவியிருக்கின்றன.

பதாகை : நாஞ்சில் நாடன் சிறப்பிதழில் வந்த ஒரு கட்டுரையை பாராட்டி, நண்பர் சுனில் கிருஷ்ணனிடம் சோழகக்கொண்டலின் மின்அஞ்சல் முகவரி பெற்றுக் கொண்டீர்கள் என்பது இங்கு நினைவுக்கு வருகிறது. அவர் எழுதிய கட்டுரையும் ஏறத்தாழ இதே போன்ற ஒரு வறிய பின்னணியை விவரிக்கிறது, அல்லவா? உங்கள் குடும்பம் மற்றும் சமூக பின்புலம் குறித்துச் சொல்ல முடியுமா? நீங்கள், சோழகக்கொண்டல் போன்றவர்கள் விவரிக்கும் சூழல் முறித்துப் போட்ட வாழ்வுகள் எண்ணற்றவை. உங்களால் எப்படி எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும், போராடும் உறுதியையும், கசப்பு தட்டாத பார்வையையும் தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது?

உங்கள் ஆரம்பகட்ட எழுத்து வாழ்வில் வழிநடத்திய நண்பர்கள், ஆசிரியர்கள் பற்றி சொல்ல முடியுமா? இலக்கியம் எனும் வகைமைக்குள் வந்ததும் அதன் பல சாத்தியங்களை அறிமுகப்படுத்திய ஆளுமைகள் பற்றி?

பாவண்ணன்: தொடக்கப்பள்ளி காலத்திலிருந்தே எனக்கு நல்ல ஆசிரியர்கள் அமைந்தார்கள். அது என்னுடைய நல்லூழ் என்றே சொல்லவேண்டும். நான் படித்த கோவிந்தையர் பள்ளியின் ஆசிரியர் கண்ணன் மிகமுக்கியமானவர். வள்ளலார் பாடல்களை அவர் வகுப்பில் பாடிக் காட்டி பொருள் சொல்வார். ஆறாம் வகுப்பில் சேர்வதற்காக உயர்நிலைப்பள்ளிக்கு வந்த பிறகு ராமசாமி, அதியமான், ரங்கநாதன், ராதாகிருஷ்ணன், சாம்பசிவம் என தொடர்ச்சியாக நல்ல ஆசிரியர்கள் பாடம் எடுத்தார்கள். அவர்கள் அனைவருமே பாடம் எடுத்ததோடு நின்றதில்லை. பாடத்தோடு தொடர்ச்சியுடைய தகவல்களையும் கதைகளையும் சொன்னார்கள். என் ஆர்வம் எழுத்து சார்ந்து பெருகியிருப்பதைப் புரிந்துகொண்டதும் பிரியத்துடன் பல புத்தகங்களைக் கொடுத்து படிக்கத் தூண்டினார்கள். நான் எழுதிக்கொண்டு செல்லும் கவிதைகளைப் படிப்பதிலோ அல்லது யாப்புத் திருத்தங்கள் செய்துகொடுப்பதிலோ என் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஒருபோதும் சலித்துக்கொண்டதே இல்லை. ஜெயகாந்தனை எனக்கு அறிமுகப்படுத்திய ஆசிரியரும் இருந்தார். நான் அவசியம் மு.வரதராசனாரைப் படிக்கவேண்டும் என்று அறிமுகப்படுத்திய ஆசிரியரும் இருந்தார். அவர்கள் அனைவரையும் மனத்தில் இருத்தி வணங்குகிறேன். இலக்கியம் என்னும் வகைமைக்குள் வந்த பிறகு இராஜேந்திரசோழனும் பிரபஞ்சனும் நான் அவசியமாகப் படிக்கவேண்டிய நூல்களின் பெயர்களைப் பரிந்துரைத்ததுண்டு. ஆனால் தொடர்ச்சியாக உரையாடுவதற்கோ, சாத்தியங்களைத் தெரிந்துகொள்வதற்கோ எனக்கு யாரும் இருந்ததில்லை. சொந்தமாகப் படித்துப்படித்துத்தான் ஒவ்வொன்றையும் தெரிந்துகொள்ளவேண்டியிருந்தது. என் வேலை அமைப்பு முதல் காரணம். வேறொரு மாநிலத்தில் வாழ்ந்துகொண்டு அதற்கெல்லாம் எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்ளமுடியாது. என்னால். நினைத்த நேரத்தில் சட்டென்று எங்கும் புறப்பட்டுவிட முடியாது. பல சமயங்களில் விடுப்பு நாளிலும் வேலை இருக்கும். அடிக்கடி ஊருக்கு போவதையும் திரும்புவதையும் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. நண்பர் ஜெயமோகனுடைய அறிமுகத்துக்குப் பிறகு, பல சாத்தியங்களைப்பற்றி உரையாடியிருக்கிறோம். அவர் பாலப்பட்டியிலும் தர்மபுரியிலும் தங்கியிருந்த காலத்தில் பல முறை சந்தித்திருக்கிறேன். அவருடைய சந்திப்புகளும் உரையாடல்களும் எனக்குப் பலவகைகளில் உதவியிருக்கின்றன. அதையும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தொடரமுடியாமல் போய்விட்டது.

IMG_35890127086157

பதாகை: நீங்கள் தமிழ் கவிதைகள், சிறுகதைகள் எழுதியதை உங்கள் நண்பர்களும், உறவினர்களும் எப்படி வரவேற்றனர்? எவ்விதமான மனநிலைகளை உங்கள் பணியிடத்து நண்பர்களிடையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது?

பாவண்ணன்: என் எழுத்து முயற்சிகளைப் பற்றி என் நண்பர்களுக்கு எப்போதும் பெருமிதம் உண்டு. அதே சமயத்தில் அவர்களுக்குள் ஒரு சின்ன மனக்குறையும் உண்டு. சிறுகதைகளைப்போல கவிதைகளில் தொடர்ச்சியாக நான் பங்களிப்பை நிகழ்த்தவில்லை என்பதுதான் அந்த மனக்குறை. நான் முதன்முதலாக பணிபுரிந்த புதுச்சேரி தொலைபேசி நிலையம் எனக்கு ஏராளமான நண்பர்களைத் தேடித் தந்த இடம். தொலைபேசி நிலையத்தில் இரண்டு தொழிற்சங்கங்கள் உண்டு. நான் இடதுசாரித் தொழிற்சங்க உறுப்பினராக இருந்தாலும், இரு தரப்பினரும் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள். எல்லோருமே என் கவிதைகளுக்கு நெருக்கமான வாசகர்கள். ஓய்வு நேரத்தில் படிப்பகத்தில் என் கவிதைகளைப் படித்துவிட்டு விவாதிப்பார்கள். மகேந்திரன் என்றொரு நண்பர் படிப்பதற்காக எனக்கு பல புத்தகங்களை விலைபோட்டு வாங்கி வந்து கொடுப்பார். அசோகமித்திரனின் ‘வாழ்விலே ஒருமுறை’ தொகுப்பை அவர் கொடுத்துத்தான் நான் படித்தேன். மதியழகன் என மற்றொரு நண்பர் தான் வாங்கி வைத்திருந்த பல சிற்றிதழ்களை எனக்குப் படிப்பதற்காக எடுத்துவந்து கொடுப்பார். மாலைநேரக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தபடி இரவுநேரத்தில் என்னோடு வேலை செய்த நண்பர் பல ஆங்கில எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். என் குடும்பத்திலும் என்னை கெளரவமாகவே நடத்தினார்கள். திருமணத்துக்குப் பிறகு என் மனைவி என்னை இயக்கும் உந்துசக்தியாகவே வாழ்கிறார். கர்நாடகத்துப் பணியிடங்களில் என்னை மிகவும் நன்றாக அறிந்த ஒன்றிரண்டு பேர்களைத் தவிர, பலருக்கு என் எழுத்துப் பணிகளைப்பற்றி எதுவும் தெரியாது. ஓர் எழுத்தாளனாக நான் அவர்களிடம் ஒருபோதும் என்னை வெளிப்படுத்துவதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் நான் ஒரு நேர்மையான, அணுகுவதற்கு எளிய ஆள். கொடுத்த வேலையை குறித்த நேரத்துக்கு முன்னாலேயே வேகமாக முடித்துவிடக்கூடியவன். எந்தப் புதிய தொழில்நுட்பத்தையும் எளிதாகத் தெரிந்துகொள்ளக்கூடியவன். அவ்வளவுதான்.

பதாகை: பதாகை வாசகர்களில் பலரும் உங்களைப் பற்றிய தகவல்களை இங்குதான் முதல்முறை வாசிப்பவர்களாக இருப்பார்கள். எனவே அவர்களுக்காக, உங்கள் கல்வி, மற்றும் பணிச்சூழல் குறித்து சிறிது விளக்கமாகச் சொல்ல முடியுமா – அதாவது, என்ன படித்தீர்கள், என்ன வேலை செய்கிறீர்கள் என்ற விஷயம். மேலும், கடந்த சில மாதங்களாக உங்களைத் தொடர்பு கொண்டதில் நிறைய பயணம் மேற்கொள்கிறீர்கள் என்று தெரிகிறது, சில இடங்களில் தொலைதொடர்பு வசதிகூட இருப்பதில்லை. பணிச்சுமையும் அதிகம் என்று சிலமுறை சொன்னதுண்டு. கடந்த முப்பது ஆண்டுகளில் நீங்கள் எழுதியவை பல்வேறு வகைமைகளில் சாரக்கூடிய ஒரு மிகப்பெரிய body of workஆக இருக்கின்றன. இதற்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது, அதைவிட, உங்கள் நீடித்த படைப்பூக்கத்தின் ரகசியம் என்ன?

சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன் போன்றோர் படைப்புகளில் தன்னெழுச்சிக்குத் தரும் முக்கியத்துவத்தை கிராஃப்டுக்கும் கொடுத்தார்கள். நீங்கள் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் சிறுகதை என்பதை கிராஃப்ட் எனும் வடிவமாகப் பார்க்கும் போக்கும் அதிகமாக அமைந்திருந்தது இல்லையா?

பாவண்ணன்: சிறுகதையை ஒரு கிராஃப்டாக சுஜாதா சொன்னதுண்டு. அது எந்த விளைவையும் உருவாக்கியதில்லை. அவருடைய ஒரு விளக்கம் என்கிற அளவிலேயே அதை எல்லோரும் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் சிறுபத்திரிகை உலகில் அதே வாக்கியத்தைச் சொல்லி விவாதத்தை உருவாக்கியவர்கள் விமர்சகர்களும் விமர்சகர்களாக விரும்பியவர்களும். அது மட்டுமல்ல. எதார்த்தப் படைப்புகளுக்கு எதிர்காலமே கிடையாது, எல்லாம் இனி மாறிவிடும் என்றும் சொல்லப்பட்டது. நியூஸ் ரீல் எழுத்து என்று கேலி செய்யப்பட்டது. இலக்கிய எழுத்து, சாதாரண எழுத்து என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. எல்லாமே ஒன்றுதான். கிராப்ஃட் நுட்பத்தை வைத்துக்கொண்டு இதற்கு மாற்றான எழுத்துகளை உருவாக்குவதன் மூலம் தமிழிலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும் என்றும் சொல்லப்பட்டது. மாயாஜால எழுத்து, அமைப்பியல் எழுத்து என்றெல்லாம் வகைமைகள் கிளம்பிவந்தன. ஆளுக்கொரு வெளிநாட்டு எழுத்தாளரின் பெயரை உச்சரித்தார்கள். நான் எல்லாவற்றையும் கவனித்தேன். பல சமயங்களில் வாயடைத்துப் போய் பார்த்திருக்கிறேன். நாம் கற்றதெல்லாம் எதுவுமில்லையோ என குன்றிப் போயிருக்கிறேன். அதை நான் மறைக்க விரும்பவில்லை. தடுமாற்றத்தில் தவித்திருக்கிறேன். ஓர் ஒற்றையடிப்பாதையில் எந்த அவசரமும் இல்லாமல் நாலாபக்கங்களிலும் வேடிக்கை பார்த்தபடி நடந்துபோய்க்கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது நமக்குப் பின்னால் இரண்டு சக்கர வண்டிகளும் நான்கு சக்கர வண்டிகளும் சர்புர்ரென்று சத்தமெழுப்பியபடி ஒன்றையடுத்து ஒன்றாக வருவதைப் பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? முதலில் அச்சத்தில் நடுங்கி எல்லாவற்றுக்கும் ஒதுங்கி வழிவிட்டு நின்றுவிடுவோம். அப்புறம் திகைப்போடு சில கணங்கள் வேடிக்கை பார்ப்போம். அதற்கடுத்து நாமே ஒரு தடத்தை உருவாக்கிக்கொண்டு நடந்துபோய்க்கொண்டே இருப்போம் அல்லவா? அதுபோலத்தான் நடந்தது. தொடக்கத்தில் அந்தப் பேச்சுகளும் விவாதங்களும் என்னைத் திகைக்கவைத்தன என்பதுதான் உண்மை. ஆனால் எதையும் வெறுக்க நினைக்கவில்லை. வெறுப்பது என் இயல்பே அல்ல. அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தேன். கிராப்ஃட்டுக்கும் மன எழுச்சிக்கும் உள்ள உறவு எத்தகையதாக இருக்கும் என ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்த்தேன். பாரதியாரின் கண்ணம்மா பாடல்களை பள்ளிக்கூடப் பாடத்தைப் படிப்பதுபோல ஒரு சிறுமி படித்துக்கொண்டு செல்வதைக் கேட்பதற்கும் ஒவ்வொரு வரியிலும் இழையோடும் பொருளை உள்வாங்கிக்கொண்டு உயிர்ப்போடு ஒரு பெண் பாடுவதைக் கேட்பதற்கும் வேறுபாடு உண்டு அல்லவா? ஒரு பாட்டைக்கூட, அதற்கே உரிய தன்னெழுச்சியோடு பாடப்படும்போதுதான் நம் மனசுக்கு உவப்பாக இருக்கிறது. இன்னும் ஒருமுறை பாடமாட்டார்களா, நாம் கேட்கமாட்டோமா என்று தோன்றுகிறது. பாடுகிறவருக்கு இருக்கக்கூடிய தன்னெழுச்சி, அந்தப் பாட்டை எழுதியவருக்கு அதைவிட கூடுதலாகவே இருக்கும். தன்னெழுச்சி இல்லாமலோ, மனம் திறக்காமலோ சொல் பிறப்பதில்லை. அந்தச் சொல்லை ஆற்றல் மிக்க சொல்லாக எழுதவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் கனவாக இருக்கிறது. மந்திரம்போல சொல் வந்து விழவேண்டும் என்று வேண்டுகிறார் பாரதியார். என் வழி எனக்குத் தெளிவாகவே தெரிந்தது. நான் அந்த வழியிலேயே நடந்தேன்.

பதாகை: உங்களுடைய ஆரம்பகாலக் கதைகளிலிருந்து வாழ்க்கையை அதன் போக்கில் காட்டும் வடிவத்தை நீங்கள் சிரத்தையாக மேம்படுத்தி வந்துள்ளீர்கள் எனும்போது புனைவுகளில் சோதனை முயற்சிகளை உங்கள் மனம் எப்படி எதிர்கொண்டது?

பாவண்ணன்: புதுமையின்மீது எப்போதும் விருப்பம் கொண்டவன் நான். எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளிலும் எழுதப்பட்ட சோதனைமுயற்சிகள் மிகமிகக் குறைவானவை. அவை புதுமையை நோக்கிய தாவல் அல்ல. வெறும் பாவனைகள். எவ்விதமான கலைவேட்கையும் இல்லாமல் மொழியார்வமும் இல்லாமல் முன்வைக்கப்பட்ட முதிரா முயற்சிகள். தடுமாற்றம் இருந்ததென்றாலும் நான் என் வழியிலேயே மிகமிக மெதுவாக நடந்துகொண்டே இருந்தேன். தேங்கி நின்றுவிடக்கூடாது என்பதனாலேயே என் மனத்தை அக்கணத்தில் மொழிபெயர்ப்பின் பக்கம் திருப்பினேன். அதே நேரத்தில் அம்முயற்சிகளைப் புரிந்துகொள்ளவும் முயற்சி செய்தபடி இருந்தேன். மரபான ஒரு வடிவம் தொடர்ச்சியாக கையாளப்பட்டு கையாளப்பட்டு, ஒரு கட்டத்தில் கைப்பழக்கமாகிவிடும்போது ஒரு சலிப்பு உருவாகும் அல்லவா? அந்தச் சலிப்பைக் கடந்துசெல்வது எப்படி என்பதுதான் பிரச்சினை. அது வெவ்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. அதைப் புரிந்துகொண்டதும், என்னளவில் அதை நான் எப்படிக் கடந்து செல்வது என்று யோசிக்கத் தொடங்கினேன். புதுமைப்பித்தனின் மொத்தத் தொகுப்பு வெளிவந்திருந்த சமயம் அது. அந்தத் தொகுப்பின் காலவரிசை அமைப்பு என் பிரச்சினைக்கு விடையாக இருந்தது. சலிப்பு என்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒவ்வொரு மொழியிலும் எப்போதும் இருக்கக்கூடிய ஒன்றுதான் என்னும் உண்மை உறைத்தது. அகச்சிக்கல் சார்ந்து சில கதைகளை எழுதி முடித்ததுமே, முற்றிலும் புற உலக விவரணைகள்சார்ந்து சில கதைகளை எழுதுகிறார் புதுமைப்பித்தன். சட்டென்று தொன்மம் சார்ந்து ஒரு கதை. பிறகு எப்போதோ ஒருமுறை திடீரென கனவுபோல விரியும் ஒரு கதை. அப்புறம் திடீரென நாட்டார்கதையின் சாயலைக் கொண்ட ஒரு கதை. சட்டெனத் திரும்பி புராணம்சார்ந்து ஒரு கதை. அப்புறம் மறுபடியும் அகம்சார்ந்த ஒரு கதை. அவருடைய கதைகளைப் பின்தொடர்ந்தபோது ஒரு குதிரைவீரனின் பயணத்தைத்தான் நினைத்துக்கொண்டேன். கிராமத்துச்சாலை, நகரத்துச்சாலை, மலைப்பாதை, காட்டுவழி, பாறைகள் அடர்ந்த பாதை, பாலைவனத்தின் பாதை என ஒவ்வொன்றாக கடந்துசென்றபடியே இருக்கிறான் குதிரைவீரன். அவர் எழுத்து ஒவ்வொன்றும் சோதனைதான். நான் செல்லவேண்டிய திசையின் விவரங்களை அத்தொகுப்பின் வழியாகவே அறிந்துகொண்டேன். நாட்டார்கதை, புராணம், தொன்மம் என என் மனம் தொடும் எல்லைவரையில் சென்று புதிய கதைகளை உருவாக்கினேன். முற்றிலும் புதியதொரு ஆட்டத்துக்கு என்னைத் தயார்ப்படுத்திக்கொண்ட புத்துணர்ச்சியை அக்கதைகளை எழுதியதன் வழியாக அடைந்தேன்.

பதாகை: இன்றைக்கு எழுத வரும் புதியவர்களின் கதைகளைத் தொடர்ந்து படித்து வருபவர் என்பதால் இந்த கேள்வி – பொதுவாக ஆரம்பகட்ட எழுத்தாளர்கள் புனைவு வடிவங்களில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் எனப்பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது? சிறுகதைக்கான களன்களின் வறட்சி என இதை எடுத்துக்கொள்வதா அல்லது புதுமைக்கான விழைவாகவா?

பாவண்ணன்: ஆரம்பகட்ட எழுத்தாளர்கள் புனைவு வடிவங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை ஒரு பொது மதிப்பீடாக எடுத்துக்கொள்ள முடியாது. சமீபத்தில் பதாகை நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த சிறுகதைகளைப் படித்தேன். புதிய புனைவு வடிவத்தில் ஆர்வமுள்ள படைப்புகளாக ஒன்றிரண்டு மட்டுமே இருந்தன. மற்ற கதைகள் அனைத்துமே மரபான வடிவத்தில் வாழ்வியல் அனுபவங்களையும் பாடுகளையும் முன்வைத்த சிறுகதைகள். கடந்த ஆண்டு ஜெயமோகன் தளத்தில் இருபது புதிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருந்தார். அவர்களிலும் இரண்டுமூன்று பேரைத் தவிர மற்ற எழுத்தாளர்கள் மரபான வடிவத்திலேயே தம் படைப்புகளை எழுதியிருந்தார்கள். ஆனால் பாதிக்கும் மேற்பட்டவை புத்தம்புதிய களன்களை உடையவை. நாம் எழுதாத களன்கள் ஏராளமானவை இன்னும் உள்ளன. கி.ரா. எழுதிய கோவில்பட்டி வேறு. பூமணி எழுதிய கோவில்பட்டி வேறு. நாளையே வேறொரு எழுத்தாளர் தோன்றி கோவில்பட்டியை எழுதத் தொடங்கினால், அவர் வேறொரு களனைக் காட்டமுடியும். களன்களுக்கு வாழ்க்கையிலும் பஞ்சமில்லை. கதைகளிலும் பஞ்சமில்லை. அதே சமயத்தில் புதிய வடிவத்தை நாடிச் செல்கிறவர்களின் விழைவு என்பது பிழையானதுமல்ல. அது ஒரு முயற்சி. புதிய களனை நாடும் விழைவு எந்த அளவு முக்கியமானதோ, அதே அளவு புதிய வடிவத்தை நாடும் விழைவும் முக்கியமானது. நம் நெஞ்சில் ஒளிரும் சுடரை அந்த அகல் தாங்கவேண்டும்.

pavannan

பதாகை: தமிழ் இலக்கிய சாதனைகள் சிறுகதைகளில் நிகழ்த்தப்பட்டுவிட்டன எனும் வாதத்தை ஏற்றுக்கொண்டால் இனி வரும் காலத்தில் கட்டுரை வடிவிலான கதைகளும், சுய அனுபவங்களை எவ்விதமான உட்புகுத்தலும் இல்லாது அந்தந்த வடிவிலேயே எழுதுவதும் சிறுகதைக்கான போக்காகக் கொள்ளலாமா?

பாவண்ணன்: ஒரு சாதனை நிகழ்த்தப்படும் கணத்துக்கு இணையாக, அந்தச் சாதனையைக் கடந்துசெல்லும் வேகமும் இயல்பாகவே நிகழ்கிறது. நிகழ்த்தப்பட்டுவிட்டன என ஓய்தல் என்பதே இல்லை. அது ஒரு தொடர் இயக்கம். புதிய புதிய புள்ளிகளை நோக்கி நம் பயணம் நிகழ்ந்தபடி இருக்கவேண்டும். கட்டுரை வடிவத்திலான கதைகளையும் சுய அனுபவங்களைக் கொண்ட கதைகளையும் எழுதும் போக்கு எதிர்காலத்தில் தொடரக்கூடும். ஆனால் அவை முக்கியப் போக்காக மாறாது. குறைந்தபட்சம் இன்னும் ஒரு ஐம்பது ஆண்டு காலத்துக்காவது இப்போது உள்ள மரபான கதைகூறல் போக்கே முக்கியப் போக்காகத் தொடரும் என்றே எண்ணுகிறேன். அதற்கான காரணம் இதுதான். நம் சமூகம் இன்னும் முற்றிலும் கல்வியறிவு பெறாத சமூகம். அறுபது விழுக்காடு, எழுபது விழுக்காடு என அரசாங்கப் புள்ளிவிவரம் சொன்னாலும் உண்மையான கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை அதைவிடக் குறைவானதாகவே இருக்கும். இவர்களில் இலக்கியத்தில் புழங்கக்கூடியவர்கள் மிகமிகக் குறைவானவர்களாகவே இருப்பார்கள். அடுத்த ஆண்டே இந்த எண்ணிக்கையில் ஐந்து விழுக்காடு அதிகரிக்கிறது என வைத்துக்கொள்வோம். அதிகரிக்கும் அந்தக் கூட்டத்தில் இலக்கியத்தில் புழங்கக்கூடியவர்களாகவும் நமக்குச் சிலர் கிடைப்பார்கள். அவர்களில் எழுதுபவர்கள் சிலராகவும் படிப்பவர்கள் சிலராகவும் இருக்கலாம். அவ்வாறு எழுத்தைத் தொடங்கும் சிலர் புதுமைப்பித்தனிலிருந்துதான் தொடங்குவார்கள். அதுதான் இயற்கையாக இருக்கும். அவர் தொடங்கிவைத்த கதைப்போக்கிலிருந்துதான் தொடங்கமுடியும். அந்தப் பயணம்தான் அவர்களுக்கு எளிதானதாக இருக்கும்.

பதாகை: இந்திய இலக்கியங்களில் தமிழ் சிறுகதையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? தமிழ் புனைவுகளில் உச்சகட்ட சாதனையாக சிறுகதை வடிவத்தைப் பார்க்கலாமா?

பாவண்ணன்: தமிழ்ச்சிறுகதைகளின் வளர்ச்சி பெருமைக்குரியதாகவும் மகிழ்ச்சிக்குரியதாகவும் இருக்கிறது என்றே சொல்வேன். ஆனால் அதை எழுத்தில் எழுதி நிறுவுவதற்கு தன்னலமற்ற ஓர் ஒப்பீட்டாய்வு நிகழவேண்டும். அப்படி நிகழ்வதற்கான சாத்தியம் இருப்பதாகவே தெரியவில்லை. சாகித்ய அகாதெமி வழியாக ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளிவரும் காலாண்டிதழ் இந்திய மொழிகளின் கவிதை, சிறுகதைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் நாற்பது இதழ்கள் வந்துள்ளன. ஒரு இதழில் ஐந்து முதல் எட்டு சிறுகதைகள் வரை வெளிவருகின்றன. ஐந்து என்றே எடுத்துக்கொண்டாலும் இருநூறு சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இந்த இருநூறு சிறுகதைகளில் எத்தனை சிறுகதை தமிழ்க்கதையாக இருக்கும் என எண்ணுகிறீர்கள்? இரண்டு அல்லது மூன்று இருக்கலாம். அவ்வளவுதான். தமிழல்லாத ஓர் இந்திய எழுத்தாளன் எந்தப் படைப்பு முயற்சியும் இல்லாத மொழி என்றே தமிழை நினைக்கிறான். காரவன் ஆங்கில இதழிலும் இருபது இருபத்தைந்து பக்கங்கள் மாநில மொழிப்படைப்புகளுக்காக ஒதுக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நான் அதைப் படித்து வருகிறேன். என் கண்ணில் ஒருமுறை கூட தமிழ்ப்படைப்பு தென்பட்டதில்லை. நாமே எழுதி, நாமே படித்து, நாமே பாராட்டிக்கொள்கிறோம். இந்திய அளவில் வாசகர்களைப் பெறுவது என்பது சந்தைப்படுத்துதல் சார்ந்த ஒரு செயல்பாடு. அதில் ஓர் எழுத்தாளனாக செய்வதற்கு ஒன்றுமில்லை என்றபோதும் இந்த இடத்தில் சொல்லத் தோன்றுகிறது.

இன்றைய புனைவு வடிவங்களில் சாதனை என்பது நாவல் என்பதே என் எண்ணம். கடந்த நூற்றாண்டில் முதல் பாதியில் கவிதை மாபெரும் சாதனையாக இருந்தது. இரண்டாவது பாதியை சிறுகதை வசப்படுத்திக்கொண்டது. இரண்டாயிரத்துக்குப் பிறகான காலம் என்பது நாவல்களின் காலம் என்றே சொல்லவேண்டும்.

பதாகை: ’பொம்மைக்காரி’ சிறுகதைத் தொகுப்பு முன்னுரையில் “..பல சிறுகதைகளை ..நிகழ்காலக் காட்சிகள் அளித்த மன எழுச்சியால் இறந்தகாலத்தைத் தேடிப்போன கதைகள்” என வகைப்படுத்தியுள்ளீர்கள். இதை இன்னும் விரிவாகச் சொல்லமுடியுமா?

bommaikari

பாவண்ணன்: ஏதேனும் ஒரு அகத்தூண்டுதல்தான் ஒரு படைப்பை எழுதவைக்கிறது. எழுதத் தொடங்கும்வரை என்ன எழுதப் போகிறேன் என எந்த வரையறையும் உருவாவதில்லை. தன்னிச்சையாக கண்ணில் படும் ஏதோ ஒரு காட்சியால் தூண்டப்படும் தருணத்தில் வீணை நரம்பென மனம் அதிர்ந்து உத்வேகம் கொள்கிறது. அதுவே எழுத்து தொடங்கும் தருணம். இதில் வேடிக்கை என்னவென்றால், உத்வேகத்துக்குக் காரணமாக இருந்த காட்சியை எழுதிய தருணங்கள் குறைவானவை என்றே சொல்லவேண்டும். அந்தக் காட்சி நம் மனத்தின் நினைவடுக்குகளில் எங்கோ ஒரு மூலையில் ஒடுங்கியிருக்கும் இன்னொரு காட்சியை இழுத்துவந்து நிறுத்திவிடும். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவம், புத்தம்புதுசாக அன்று காலையில் நிகழ்ந்ததுபோல மீண்டும் நிகழும். ஒரே கணத்தில் அவற்றை இணைக்கும் சரடும் தர்க்கமும் முரணும் கூடிவந்துவிடும். அப்புறம் அந்தப் படைப்பை எழுதுவது எளிதாக இருக்கும். பொம்மைக்காரி தொகுதியில் உள்ள கதைகள் பாதிக்கும் மேல் அப்படிப்பட்டவை. ஒரு கதை உருவான விதத்தை முன்வைத்துச் சொன்னால் உங்களால் எளிதில் புரிந்துகொள்ளமுடியும். ஒருமுறை விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பரொருவரைப் பார்த்துவிட்டு வருவதற்காகச் சென்றிருந்தேன். பார்வையாளர் நேரத்துக்கு முன்னாலேயே சென்றுவிட்டதால் வாசலில் நின்று வருகிறவர்களையும் போகிறவர்களையும் வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். அப்போது அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் வண்டியொன்று வந்து நின்றது. அதிலிருந்து ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டிருந்த ஒரு பெண்மணியை கீழே இறக்கி உள்ளே கொண்டு சென்றார்கள். ஒருசில நொடிகள்தான் அவரைப் பார்த்தேன். என் நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது. தோளிலிருந்து ஒரு பக்கம் முழுதும் தீக்காயங்கள். புவனா புவனா என்று யாரையோ பெயர்சொல்லி அலறிக்கொண்டே இருந்தார். அடிவயிற்றிலிருந்து எழுந்த அந்த அழுகை மனத்தை உருக்குவதாக இருந்தது. மீண்டும் மீண்டும் அந்த ஒரே சொல். இடைவிடாத அழுகை. அலறல். அவ்வளவுதான். அவரை உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார்கள். என்ன விஷயம் என்று பக்கத்தில் சென்று கேட்டேன். தீவிபத்து என்று மட்டுமே சொன்னார்கள். அந்த உருவமும் குரலும் மீண்டும்மீண்டும் மனத்தில் வந்துகொண்டே இருந்தன. பொதுவாக வலிதாளாது அழுகிறவர்கள் அம்மா என்று சொல்லி அழுவதைத்தான் பார்த்திருக்கிறோம். அந்தப் பெண்மணி புவனா என்று சொல்லி அழுததற்கான காரணம் என்னவா இருக்கும் என்பதுதான் என் முதல் யோசனையாக இருந்தது. ஒருவேளை அது அவள் குழந்தையின் பெயராக இருக்கலாம். அந்தக் குழந்தையின் பெயர்தான் புவனாவாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. விபத்தில் இழந்துவிட்ட குழந்தையைத்தான் அவள் அழைத்தபடி இருக்கிறாளோ என்னமோ என்று தோன்றியது. அப்படி வகுத்துக்கொண்ட சமாதானமெல்லாம் ஒரே ஒரு கணம்தான். அடுத்த கணமே அது குலைந்துவிட்டது. விபத்தில் அந்தக் குழந்தையை இழந்திருந்தால், அந்தக் குழந்தையும் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டிருக்க வேண்டும் அல்லவா. ஆனால் வண்டியில் அந்தப் பெண்மணி மட்டும்தானே இருந்தாள். இப்படி கேள்விகள் கிளைவிட்டு கிளைதாவி போய்க்கொண்டே இருந்தன. இரவு முழுதும் அதே சிந்தனை. மறுநாள் காலைநடையின்போதும் அதே சிந்தனை. வீட்டுக்குத் திரும்பும் சமயத்தில் அந்தப் பெண்மணியை மறந்து, அந்த தீவிபத்தைப்பற்றி நினைக்கத் தொடங்கினேன். ஏதோ ஒரு கணத்தில் இருபதாண்டுகளுக்கு முன்பாக நான் நேருக்கு நேர் பார்த்த தீவிபத்தின் காட்சிகள் நினைவுக்கு வந்தன. அப்போது நான் துங்கபத்திரை நதிக்கரையோரம் ஒரு வாடகைவீட்டில் வசித்துவந்தேன். கால்வாயின் மற்றொரு பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்பு இருந்தது. பெரும்பாலும் தமிழர்களும் தெலுங்குமொழி பேசுகிறவர்களும் வாழ்ந்த பகுதி. நள்ளிரவு நேரத்தில் அங்கே தீவிபத்து நிகழ்ந்துவிட்டது. அதற்கு முதல்நாள்தான் அங்கே வசிக்கும் ஒருவரைச் சந்தித்துவிட்டு வந்தேன். நூற்றுக்கணக்கான குடிசைவீடுகள் எரிந்துவிட்டன. நானும் நண்பர்களும் ஓடினோம். நெருங்கமுடியவில்லை. புகைமண்டலம். வெப்பம். ஒருவித இயலாமையுடன் அந்த ஓலங்களையும் கூக்குரல்களையும் கேட்டபடி நின்றிருந்தோம். தீயணைக்க வந்த வண்டிகளுக்குத் தேவையான உதவிகள் செய்தோம். வந்து நின்ற அவசர ஊர்திகளில் ஆபத்தான கட்டத்தில் உள்ளவர்கள் ஏற்றப்பட்டார்கள். அலறி அலறி தன் வலிமையெல்லாம் குன்றி ஒரு கேவலைமட்டும் எழுப்பியபடி இருந்த ஒரு பெண்மணியை தூக்கிவந்து ஏற்றினார்கள். அவர்களுடைய குழந்தை விபத்தில் இறந்துவிட்டது என்று நண்பர்கள் சொன்னார்கள். அந்த அம்மாவின் முகம் எனக்கு அருகில் தெரிவதுபோல இருந்தது. நான் எழுதவேண்டிய கதையின் தொடக்கம் அக்கணத்திலேயே முடிவாகிவிட்டது. இந்த விசித்திரம் வழங்கும் பரவசமும் பதற்றமும் புரிந்துகொள்ளமுடியாதவை. ஆனால் ஒரு எழுத்தாளனாக நான் மீண்டும்மீண்டும் சென்று நிற்க விரும்பும் புள்ளி அது. அப்படிப்பட்ட சின்னச்சின்ன கணங்களே இந்த வாழ்வின் அற்புதக்கணங்கள். நிகழ்கால மனஎழுச்சியால் இறந்தகாலத்தைத் தேடிப்போகும் பயணம் என இதையே குறிப்பிடுகிறேன். இப்படி ஒவ்வொரு கதைக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

பதாகை: இது தொடர்பாக இன்னொரு கேள்வி. ஒரு எழுத்தாளனின் நேரடி அனுபவங்கள் அவனது படைப்பில் எப்படி வெளிப்படுகின்றன, எதை எடுத்து எதை விடுகிறான், அனுபவம் எப்படி புனைவாக மாறுகிறது?

பாவண்ணன்: இது பதில் சொல்வதற்கு சற்றே சிக்கலான கேள்வி. தீவிபத்து சம்பவத்தின் ஞாபகத்தைப் புரட்டி எழுதிய ‘பொம்மை’ கதையையே எடுத்துக்கொள்ளுங்கள். அந்தச் சம்பவம் மட்டுமே அந்தக் கதையில் இல்லை. ஒரு மையத்துக்குத் தேவையான பல விஷயங்களும் அந்தக் கதைக்குள் வந்துவிட்டன. எல்லாமே ஒரு மனப்பழக்கத்தில் வந்துவிடுகின்றன.

பதாகை: பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், பதினெட்டு கட்டுரைத் தொகுப்புகள், இருபதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், சாகித்திய அகாதெமி உட்பட ஐந்து விருதுகள். இத்தனை தீவிரமாக எழுத்தில் இயங்கும் படைப்பாளிகளை கைவிட்டு எண்ணிவிடலாம். இப்போது திரும்பிப்பார்க்கும்போது உங்கள் ஒட்டுமொத்த இலக்கியப் பயணத்தைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன? உங்களுடைய பங்களிப்பைத் தாண்டி தமிழ் இலக்கியத்தின் இடம் எவ்விதம் நகர்ந்திருப்பதாக உணர்கிறீர்கள்?

பாவண்ணன்: நீங்கள் கேட்பது கிட்டத்தட்ட ஒரு சுயமதிப்பீடு. என் பயணம் எனக்கு நிறைவாகவே இருக்கிறது. என் எதிர்பார்ப்புகள் எப்போதும் பெரிதானவை அல்ல. ஒரு வாய் தண்ணீர் என்றொரு கவிதை என் முதல் கவிதைத்தொகுதியில் இருக்கிறது. நான் எதிர்பார்ப்பதெல்லாம் என் களைப்புக்கு ஒரே ஒரு வாய் தண்ணீர். அது எங்காவது ஒரு இடத்தில் எனக்குக் கிடைத்தபடியேதான் இருக்கிறது. யாரோ முகம்தெரியாத ஒருவர் கொடுத்துவிட்டுச் செல்கிறார். அது போதும் எனக்கு. என்னை இந்த மொழியில் நிறுவிக்கொள்ளவோ அல்லது நிரூபித்துக்கொள்ளவோ நான் எழுதத் தொடங்கவில்லை. என் பாரத்தை கரைக்க அல்லது மறந்து கடந்துசெல்ல எழுத்தை நான் அருந்துணையாகக் கொள்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பாக படித்த மா.அரங்கநாதனின் சிறுகதையொன்று நினைவுக்கு வருகிறது. அதன் பெயர் ’சித்தி’ என்று நினைக்கிறேன். ஓடுவதில் மிகவும் விருப்புமுள்ள இளைஞன் ஒரு பயிற்சியாளனால் கண்டடையப்பட்டு மாபெரும் ஓட்டப்பந்தய வீரனாக உருவாக்கப்படுகிறான். அவன் காலடித்தடம் படாத மலைப்பாதையே இல்லை. உலக அளவில் நிகழும் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. அதில் அவனும் கலந்துகொள்கிறான். அவன் பெயர்தான் தேர்வாகும் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். கிட்டத்தட்ட அப்படித்தான் நிகழப்போகிறது என எல்லோரும் கணித்திருக்கிறார்கள். அப்போது ஊடகங்கள் அவனிடம் ஒரு நேர்காணல் எடுக்க வருகிறார்கள். ஏன் ஓடுகிறீர்கள், எதற்காக ஓடுகிறீர்கள், ஓடும்போது எப்படி உணர்கிறீர்கள் என்றெல்லாம் மாறிமாறி கேள்வி கேட்கிறார்கள். இவன் எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாக ‘எனக்குப் பிடித்திருக்கிறது, அதனால் ஓடுகிறேன்’ ’எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, அதனால் ஓடுகிறேன்’ ‘என் மனம் நிறைவாக உணர்கிறது, அதனால் ஓடுகிறேன்’ என்றெல்லாம் பதில் சொல்கிறான். ஊடகங்கள் எதிர்பார்க்கும் பதில்களோ, ‘என் தேசத்துக்காக ஓடுகிறேன்’ ‘என் தேசத்தின் பெருமைக்காக ஓடுகிறேன்’, ‘என் தேசத்தின் கெளரவத்தை உலக அரங்கில் நிலைநாட்டுவதற்காக ஓடுகிறேன்’ என்பவை போன்றவை. அவன் பயிற்சியாளரும் அதைத்தான் எதிர்பார்க்கிறார். அப்படிப்பட்ட பதில்கள்தான் அவனை களத்தில் வாய்ப்பு கிடைக்க உதவும் என்று நினைக்கிறார். அவனுடைய மாறுபட்ட பதில்கள் அவரை அமைதியிழக்கவைக்கின்றன. அமைதியில்லாமலேயே அவனை காரில் ஏற்றிக்கொண்டு ஊருக்குத் திரும்புகிறார். அப்போது முழுநிலா வானில் சுடர் விடுகிறது. அவன் பூரித்த மனத்துடன், இந்த நிலவொளியில் ஓடினால் எப்படி இருக்கும் என்று மகிழ்ச்சியோடு சொல்கிறான். அவர் கோபத்தின் உச்சியில் சட்டென்று காரின் கதவைத் திறந்து ’இறங்கு, இறங்கி ஓடி வா’ என்று சொல்லிவிட்டு அவனை இறக்கிவிடுகிறார். அவன் அவருடைய சொல்லில் உள்ள சீற்றத்தையும் கிண்டலையும் புரிந்துகொள்ளாமல் சட்டென்று இறங்கி நிலவொளியில் மின்னும் பாதையில் ஓடத் தொடங்குகிறான். அந்த முத்துக்கறுப்பனின் மனநிலைதான் எனக்கும். என் மனத்தை உற்சாகத்தால் நிறைத்துக்கொள்வதற்கும் கரைத்துக்கொள்வதற்கும் எனக்குள்ள, எனக்குத் தெரிந்த ஒரே வழி எழுத்து மட்டும்தான். தமிழிலக்கியத்தில் என்னுடைய பங்களிப்பு மிகமிகச் சிறியதுதான். அதை பெரிதாக ஒருபோதும் நான் கருதியதில்லை. கங்கைபோல, யமுனைபோல, காவேரிபோல தமிழிலக்கியம் ஒருபோதும் வற்றாது ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு பேராறு. அதன் கரையில் கால்களையும் கைகளையும் நனைத்து குளிர்ச்சியில் மனம் திளைத்தபடியும் கணந்தோறும் மாறும் அதன் அழகைச் சுவைத்து மனம் பறிகொடுத்தபடியும் காலம் கழிக்கும் பயணியாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன்.

பதாகை: உங்கள் முதல் நாவல் “வாழ்க்கை ஒரு விசாரணை”. வாழ்க்கையின் பலதரப்பட்ட முகங்களைக் காட்டும் படைப்பு எனப் பல விமர்சனங்கள் சொன்னாலும், மையக்கருத்தாக நான் நினைத்தது – மனிதர்கள் எப்படி தங்கள் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள், சரி-தவறு எனக் கொள்ளாது எப்படி வாழ்வதற்கானப் பாதையை மிக இயல்பாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். உங்கள் படைப்புகளில் தொடர்ந்து இது பேசுபொருளாக அமைந்திருக்கிறது. இது உங்கள் வாழ்க்கைப்பார்வை எனக்கொள்ளலாமா?

பாவண்ணன்: அவற்றைத் தொடக்கவரிகளாகக் கொண்டு இன்னும் சில வரிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். அறம் கடைபிடிக்கமுடியாத ஒன்றாக, அதே சமயத்தில் கடந்து செல்வதை கறாராகத் தடுக்காத ஒன்றாகவும் இருக்கும் அம்சம் வாழ்வின் மிகப்பெரிய விசித்திரம். அந்த விசித்திரத்தை மீண்டும்மீண்டும் கண்டடைந்தபடியே இருக்கிறேன். அறம் என்னும் நூல்வேலிக்குள் வாழமுடியாத அவஸ்தைகளை வெறும் அறத்தின் அலகுகளால் மட்டுமே மதிப்பிட்டுவிடமுடியாது. விசை= எடைx வேகம் என்னும் சூத்திரம்தான் நினைவுக்கு வருகிறது. ஒருபக்கம் ஓர் அலகை வைத்த இயற்கை இன்னொரு பக்கம் இரண்டு அலகுகளை வைத்து விளையாடுகிறது. எடையோ வேகமோ மாறும் தருணத்தில் விசையும் மாறிவிடுகிறது. நூல்வேலிக்குள் வாழமுடியாத அவஸ்தைகளை இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். இப்படி இன்னும் கொஞ்சம் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

பதாகை: உங்கள் “வாழ்க்கை ஒரு விசாரணை” நாவலில் வரும் காளியப்பன் மிக யதார்த்தமான பாத்திரமாக வந்துள்ளான். திருடி மாட்டிக்கொள்ளும் தம்பி, திருட்டுப்பழி சுமத்திய பண்ணையார், காசுக்கு விசாரணை செய்யும் போலீஸ்காரர்கள், ஓடிப்போனாலும் பணத்தை அனுப்பும் தம்பி என அவனைச் சுற்றிய உலகம் கருணையும் கொடூரமும் நிரம்பியது. அவற்றில் மிதக்கும் ஓடம் போல காளியப்பன் செல்கிறான். அப்படி ஒரு யதார்த்தத்தை தன்மீது படரவிட்டுக் கிடக்கும் சாத்தியம் இக்கால மனிதனிடம் உள்ளதா? இன்னொரு விதமாகக் கேட்கவேண்டுமென்றால் காளியப்பன் இந்த சமூகத்துக்குக் கொடுப்பது என்ன?

பாவண்ணன்: பெங்களூரில் எலெக்ட்ரானிக் சிட்டியைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த மாபெரும் நகரத்தின் தகவல்தொழில் நுட்ப நிறுவனங்களில் பெரும்பாலானவை இங்கேதான் உள்ளன. எப்போதும் நெரிசலான சாலைகள். பரபரப்பான மனிதர்கள். வாகனங்கள். மடிவாளா என்பது இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு பகுதி. முக்கியமான காய்கறிச்சந்தை மையம். அக்கம்பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் சிறுவியாபாரிகளும் தம் விளைபொருட்களைக் கொண்டுவந்து விற்றுவிட்டுச் செல்லும் இடம். இங்கும் நெரிசலான சாலைகள். பரபரப்பான மனிதர்கள். வாகனங்கள். எலெக்ட்ரானிக் சிட்டியைச் சேர்ந்தவர்கள் மடிவாளா பகுதியை உயர்வானதாகக் கருதுவதில்லை. மடிவாளா பகுதியைச் சேர்ந்தவர்கள் எலெக்ட்ரானிக் சிட்டியை உயர்வானதாகக் கருதுவதில்லை. எலெக்ட்ரானிக் சிட்டியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் மேல்நடுத்தட்டு, உயர்தட்டுப் பிரிவினர்கள். மடிவாளாவின் இருப்பவர்கள் பெரும்பாலும் கீழ்நடுத்தட்டு, கீழ்த்தட்டுப் பிரிவினர்கள். இருவரும் இருமுனைகள். ‘மடிவாளாவ தாண்டி ஊருக்குள்ள போவதற்குள் உயிர்போய் உயிர் வருகிறது’ என்று சொல்வார்கள் மடிவாளாகாரர்கள். ‘எலெக்ட்ரானிக் சிட்டிய தாண்டி போவதற்குள் உயிர்போய் உயிர் வருகிறது’ என்று சொல்வார்கள். இவர்களால் சமூகத்துக்கு என்ன பங்களிப்பு இருக்கிறது என்று கேட்பார்கள் அவர்கள். அவர்களால் சமூகத்துக்கு என்ன பங்களிப்பு இருக்கிறது என்பார்கள் இவர்கள். ஒருவர் கூற்றை ஏற்று இன்னொரு கூட்டத்தை நிராகரித்துவிட முடியுமா என்ன? இருவருடைய பங்களிப்பும் சமூகத்துக்குத் தேவை அல்லவா? இரண்டும் இருவேறு விசைகள். பங்களிப்பு என்பது எல்லாத் தரப்பினர்களாலும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ வழங்கப்படுவது என்பதற்காக சற்றே விரிவாகச் சொல்லவேண்டியதாகப் போய்விட்டது. இதைப் புரிந்துகொண்டால் காளிப்பனை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ளமுடியும் என்பதால் இந்த எடுத்துக்காட்டைச் சொல்ல விரும்பினேன். இந்தச் சமூகத்தில் சட்டம் செயல்படாமல் இருக்கும் ஒரு தருணத்தை, அறம் பிழைத்துவிட்ட ஒரு தருணத்தை அடையாளம் காட்டுவதற்காக உள்ள ஒரு சாட்சி காளிப்பன். அறம், அதற்குச் சாதகமான சாட்சிகளால் மட்டும் நினைவூட்டப்படுவதில்லை. பலியாகிவிழும் சாட்சிகளாலும் நினைவூட்டப்படுகிறது அல்லவா?

 

நிர்மால்யா மற்றும் ஜெயமோகனுடன்

பதாகை: மனிதர்களின் அலைக்கழிப்புகள், துயரம் போன்ற வாழ்வாதாரப்பிரச்சனையைப் பற்றிப் பேசுவது இலக்கியம் என ஒரு தரப்பு உண்டு. புனைவுகளில் வெளிப்படும் உண்மைக்கும், நம்மை சூழ்ந்துள்ள வாழ்வின் நிதர்சனத்துக்கும் இருக்கும் வேறுபாடுகளைப் பற்றி உங்களது கருத்து என்ன?

பாவண்ணன்: புனைவுகளில் வெளிப்படும் உண்மை , நிதர்சனத்தின் ஒரு சின்ன அலகு மட்டுமே. இதில் சந்தேகமே இல்லை. ஆனால் உண்மையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அந்த அலகு எப்படிப்பட்ட அலகு என்பது மிகவும் முக்கியம். சிறகிலிருந்து பிரிந்து, காற்றின் தீராத பக்கங்களில் தன் வாழ்வை எழுதிச் செல்லக்கூடிய இறகாக இருப்பின் அது மிகமிக முக்கியம். வாழ்வின் முக்கியமான ஒரு தருணத்தையே எப்போதும் புனைவு தன் மையமாகக் கொள்கிறது. அந்த முக்கியத்தன்மையாலேயே அது தன் இலக்கியப்பரப்பில் தன்னை நிறுவிக்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் சமயத்தில் எழுதப்பட்ட மண்டோவின் சிறுகதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். பொது நிதர்சனம் என்பது எல்லோரும் அறிந்ததுதான். மதக்கலவரங்களால் நேர்ந்த அழிவின் சித்திரம் ஒரு பெரிய கொடுங்கனவு. அந்த அலங்கோலக் கொடுமைகளிலிருந்து மண்டோ தன் கதைகளுக்காக எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு உண்மையும் நிதர்சனம் பிடித்த கொடியின் நிறத்துக்கு மாறானதாக இருப்பதை உணரலாம். பாத்திரத்தை அவர் இந்து என்றும் இஸ்லாமியன் என்று வகுத்துக்கொண்டாலும், ஓர் அடையாளமாக மட்டுமே அதைப் பயன்படுத்துகிறார். அவர் சுட்டிக் காட்ட விழைவது எப்போதும் மானுடம் கடந்த உணர்வாகவே இருக்கிறது. ’சஹாய்’ அவருடைய சிறுகதைகளில் முக்கியமான ஒரு கதை. ஓர் இஸ்லாமியக் குடியிருப்புக்கு அருகில், இஸ்லாமியர்களால் சுடப்பட்டு சாகும் தறுவாயில் இருக்கும் ஓர் இந்து நண்பனும் அவனுக்கருகில் செல்லும் இஸ்லாமிய நண்பனும் உரையாடும் இறுதிக்கணத்தையே மண்டோ தன் கதைக்காகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். இந்து நண்பன் ஒரு காமத்தரகன். இந்து, இஸ்லாம் என மதத்தைக் கடந்து தொழிலில் ஈடுபட்ட பெண்களுக்கு நல்ல விலையைப் பெற்று வருமானத்துக்கு வழிவகுத்துக்கொடுக்கக்கூடிய தரகன் அவன். புரளக்கூட முடியாமல் கண்ணைத் திறந்து ‘பக்கத்தில் வா’ என்று அழைப்பவனுக்கு அருகில் செல்ல தயங்குகிறான் அவன். எங்கே காப்பாற்றச் சொல்லி உதவி கேட்டுவிடுவானோ என்று நடுங்குகிறான். ஓடிச் செல்லவும் அவனால் முடியவில்லை. மனசாட்சியின் குத்தல் தடுக்கிறது. ஒருவித தவிப்புடன் நெருங்கி குனிந்ததும், தன் கோட்டுப் பையில் ஒரு நகைப்பொட்டலம் இருக்கிறதென்றும் அதைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று விலைமகள் சுல்தானாவிடம் சேர்த்துவிடு என்றும் சொல்லிவிட்டு உயிர் துறக்கிறான். பொது நிதர்சனம் மதச்சண்டைகளையும் மரணங்களையும் புள்ளிவிவரங்களாக மாற்றிவிடுகின்றன. புனைவுக்காக எடுத்தாளப்படும் உண்மை மதம் கடந்த மானுட உணர்வை முன்வைக்கிறது. தாமரை சேற்றில் பிறக்கிறது என்றாலும் சேற்றின் குணமோ மணமோ ஒருபோதும் அதற்கில்லை என்பது சொல்லிச்சொல்லி பழசாகிவிட்ட உவமை. ஆனாலும் இந்த நேரத்தில் அதுதான் நினைவுக்கு வருகிறது. பொதுநிதர்சனம் சேறு என்றால், புனைவு தன் மையமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உண்மை ஒரு தாமரை.

பதாகை: காலங்காலமாக இலக்கியகர்த்தாக்கள் இலக்கியத்தின் லட்சியத்தைப் பற்றி பேசுகிறார்கள். எதை முன்வைப்பதாக இருக்கவேண்டும் இலக்கியமும் கலையும்? அவற்றை முன்வைக்குமளவு இலக்கியம் முக்கியமானதா?

பாவண்ணன்: சமூகத்தில் ஒருவருடன் இன்னொருவர் உரையாடிக் கொள்ளவும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவுமான கருவியாக மனிதன் மொழியைக் கண்டடைந்தான். எழுத்து பழகியதும் எழுத்துக்கும் எண்ணத்துக்கும் இடையிலான இணைப்பையும் புரிந்துகொண்டான். நாளடைவில் இலக்கியம் உருவானது. சமூகத்தின் முகமாக, கண்ணாக அது வளர்ச்சியடைந்தது. ஒரு புனைவு என்பது முக்கியமான ஒரு வாழ்க்கைத்தருணம். வாழ்க்கையைப்பற்றிய மதிப்பீடுகளும் விமர்சனங்களும் அதில் உள்ளது. ஓர் எழுத்தாளன் ஆயிரக்கணக்கான வாழ்க்கைத்தருணங்களை தன் வாழ்நாளில் எழுதுகிறான். இப்படி பல நூறு எழுத்தாளர்கள் இடைவிடாமல் தொடர்ந்து எழுதி எழுதியே இலக்கியம் உருவாகிறது. எண்ணிப் பாருங்கள். கோடிக்கணக்கான வாழ்க்கைத்தருணங்கள் எவ்வளவு மகத்தான தொகை. குறுக்குவெட்டாக, அது இந்தச் சமூகத்தின் இன்னொரு முகத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இலக்கியங்கள் இலட்சியங்களைத்தான் முன்வைக்கவேண்டும் என கறாரான விதியொன்றும் இல்லை. இலக்கியம் இந்த மண்ணின் மீதுள்ள எதைப்பற்றியதுமாகவும் இருக்கலாம். அதற்கு எவ்விதமான கருத்துத்தடையும் இல்லை. அது இலக்கியமாக நிலைத்திருக்கும் அளவுக்கு இலக்கிய அழகியல்களோடு இருந்தால் போதும். இலக்கியம் முக்கியமானதா என்ற கேள்விக்குப் பதிலாக மகாபாரதம் முக்கியமானதா என்றொரு கேள்வியை நமக்கு நாமே கேட்டுப் பார்த்துக்கொள்ளலாம். பாரதத்தில்தான் எத்தனை எத்தனை அரிய மானுட உச்சங்கள். தியாகங்கள். வெற்றிகள். தோல்விகள். அவமானங்கள். சூளுரைகள். குடிவரலாறுகள். குலவரலாறுகள். நேற்றைய உலகத்தைப் புரிந்துகொள்ள பாரதத்தைப் படிப்பது தவிர வேறு வழியே இல்லை. மகாபாரதம் முக்கியமானது என்னும் முடிவை அப்போது நம் மனம் ஏற்றுக்கொள்வதை உணரலாம். நேற்றைய வரலாற்றையும் வாழ்க்கையையும் புரிந்துகொள்ள மகாபாரதம் முக்கியமானது எனில், இன்றைய வாழ்க்கையையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள நாளைய தலைமுறைக்கு இலக்கியம் துணையாக இருக்காதா என்ன?.

பதாகை: செகாவின் சிறுகதை “பச்சோந்தி” உங்களை மிகவும் பாதித்த கதையாகச் சொல்லியுள்ளீர்கள். அது ஒரு கசப்பானக் கதையல்லவா? வாழ்க்கையில் நடப்பவற்றுக்கு நேரடியாகக் காரணம் கண்டுபிடிக்க இயலாது, ஏதோ ஒரு மறைமுகமான கை ஆட்டுவிப்பதுபோல. உலக இலக்கியத்தில் இந்த ஒரு சுவை மட்டுமே மேலெழும்புகிறதா?

பாவண்ணன்: கசப்பாகவே இருக்கட்டுமே. ஆனால் அந்தக் கசப்பு குவிந்த மையத்தில் நம் முகத்தையும் அடையாளமும் தெரியும்படி வைத்துவிடுகிறது அந்தக் கதை. அந்தக் காவலனின் நிலைப்பாடுகளின் நிகழும் திடீர்மாற்றம் ஒரு கசப்பான புன்னகையை நம் உதடுகளில் படரவைக்கிறது என்பது ஒரு பாதி உண்மைதான். ஏதோ ஒரு கணத்தில் ஓர் அரசு ஊழியனின் அவஸ்தையையும் தனக்கென எவ்விதமான நிலைப்பாடும் இல்லாத முதுகெலும்பற்ற தன்மையையும் அது பட்டும் படாமல் சுட்டிக் காட்டுகிறது என்னும் மறுபாதி உண்மையை நம் மனம் எப்படியோ புரிந்துகொள்ளும். நம் மண்ணில் உள்ள அரசு ஊழியர் நிலையும் அதுதான் அல்லவா? ஓர் அரசாங்க அலுவலகத்தில் மூத்த அதிகாரி சொல்லும் அசட்டு நகைச்சுவைகளுக்கெல்லாம் சிரித்துக்கொண்டும் மேம்போக்காக உதிர்க்கும் தத்துவங்களுக்கெல்லாம் ஆமாம் போட்டுக்கொண்டும் அறிவில்லாத விமர்சனங்களையெல்லாம் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டும் மெளனமாக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்கிற எளிய குமாஸ்தா வர்க்கத்தினரை நினைத்துப் பாருங்கள். ஒரு மாற்றுக்கருத்தைக்கூட உங்களால் சுதந்திரமாக வெளிப்படுத்திவிட முடியாது. வெளிப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் நிம்மதியாக உங்களால் வேலை செய்ய முடியாது. நெருப்புக்கு அருகில் இருப்பதுபோலவே இருக்கவேண்டும். உங்களை அறியாமல் நீங்கள் கண்காணிக்கப்பட்டபடியே இருப்பீர்கள். தருணம் பார்த்து, ஆழம் புரியாத ஒரு பள்ளத்தில் நீங்கள் விழவைக்கப் படுவீர்கள். இதுதானே இங்கு நடக்கிறது. செகாவ் தீட்டியிருக்கும் காவலனின் காலடி நிழல் முதுகெலும்பில்லாதவர்களாக மாற்றிவைக்கப்பட்டிருக்கும் குமாஸ்தாக்களின் பாதம்வரைக்கும் நீண்டுவருவதை என்னால் உணரமுடிகிறது. உண்மையிலேயே செகாவ் மிகப்பெரிய கலைஞர்.

பதாகை: கவிதை, சிறுகதை, நாவல் எனும் உலகத்திலிருந்து கட்டுரைகள் எழுதத்தொடங்கியது எப்போது?

பாவண்ணன்: பெங்களூர் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த முக்கியமான நண்பர்களில் ஒருவர் கோ.ராஜாராம். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அவர் அமெரிக்கா சென்றார். திண்ணை என்னும் பெயரில் ஓர் இணைய இதழை அவர்தான் முதன்முதலில் தொடங்கினார். நான் அதில் தொடர்ந்து எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். படித்த புத்தகங்களைப்பற்றிய கட்டுரைகளை நான் அதில் எழுதினேன். ஒரு வாசகனாக அப்புத்தகத்திலிருந்து நான் பெறுவது என்ன என்பதை விரிவாக உரைக்கும் பதிவாகவே ஒவ்வொரு கட்டுரையையும் அமைத்துக்கொண்டேன். ஒரு புத்தகத்துக்கு அரைப்பக்க மதிப்புரைகூட வருவதற்கு இடமில்லாத சூழலில் பக்கக் கட்டுப்பாடுகளே இல்லாமல் நான் விரிவாகவே எழுதினேன். ஒருநாள் பொங்கலுக்கு ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில் நானும் என் நண்பன் பழனியும் உரையாடிக்கொண்டே எங்கள் ஊர் ஸ்டேஷன் பக்கமாக நடந்துகொண்டிருந்தோம். அவனுடைய உறவினர் ஒருவரை இடையில் பார்க்க நேர்ந்தது. பேச்சென அதிகம் எதுவுமில்ல. நலவிசாரிப்பாக ஒன்றிரண்டு வரிகள். அவ்வளவுதான். அவர் போய்விட்டார். நாங்கள் மீண்டும் பேசிக்கொண்டே நடக்கத் தொடங்கினோம். அந்த உறவிக்காரரைப்பற்றி பழனி இன்னும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டேன். அதையெல்லாம் கேட்ட பிறகு எனக்கு ஜானகிராமனின் பாயசம் சிறுகதை நினைவுக்கு வந்தது. நான் அந்தக் கதையை அவனுக்குச் சொல்லி, மனிதர்களின் மனத்தை இயக்கும் விசையைப் பகுத்தறிய முடியாத கையறுநிலையைச் சொன்னேன். நம் மனம் விசித்திரமான ஒரு ஸ்டியரிங். இடது பக்கம் திருப்பினால் இருளுக்கு இழுத்துச் செல்லும். வலதுபக்கம் திருப்பினால் வெளிச்சத்துக்கு இழுத்துச் செல்லும். தடுமாறாமல் பாதையில் ஓட்டத் தெரிந்தவன் மிகப்பெரிய பாக்கியவான் என்று சொன்னேன். நடையிலிருந்து திரும்பும்போது சிறுகதையைப் புரிந்துகொள்வதையும் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதையும் இணைத்து எழுதும் அவன்தான் முதன்முதலாக விதைத்தான். ’எனக்குப் பிடித்த கதைகள்’ கட்டுரை வரிசை அப்படித்தான் தொடங்கியது. அவையும் திண்ணை இதழிலேயே வெளிவந்தன. எல்லாமே புத்தாயிரத்தாண்டின் தொடக்கத்தை ஒட்டி நிகழ்ந்த மாற்றங்கள்.

பதாகை: கட்டுரைகளும் அபுனைவு இலக்கியங்கள் வழியே சுய அனுபவங்களை வரலாற்றுப் பிரக்ஞையுடன் எழுதும் சாத்தியம் அதிகரித்துள்ளது. தமிழில் சிறுகதைகளின் காலகட்டம் முடிவுக்கு வந்ததாக நினைக்கிறீர்களா?

பாவண்ணன்: அபுனைவு எழுத்துகளின் பெருக்கத்துக்கும் புனைவு எழுத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதன் வழி அதற்கு. இதன் வழி இதற்கு. இப்போது எழுதப்பட்டு வரும் அபுனைவு எழுத்து முயற்சிகளைவிட இன்னும் கூடுதலான முயற்சிகள் தேவை என்பது என் எண்ணம். துறைசார்ந்த வல்லுநரின் அனுபவங்கள் இன்னும் இன்னும் வரவேண்டும். கன்னடத்தில் விஸ்வேஸ்வரய்யா தன் பணிக்கால அனுபவங்களை ஒரு தொகுதியாக எழுதியுள்ளார். அருமையான தொகுப்பு. கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டையும் பெங்களூர் விதான்செளத எனப்படும் சட்டசபையையும் அவரே முன்னின்று கட்டியவர். தமிழில் அப்படிப்பட்ட நேரடி எழுத்து இல்லை. ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் அனுபவங்கள் என்னும் தலைப்பில் வார்த்தை இதழில் ஜெயகாந்தனின் நெருக்கமான நண்பரான குப்புசாமி ஒரு கட்டுரைத்தொடரை எழுதினார். மனத்தைத் தொடும் கட்டுரைகள். அப்படிப்பட்ட எழுத்துகள் இன்னும் இன்னும் வரவேண்டும். ஜெமினி கேண்டீன் என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தைப் படித்தேன். ஜெமினி ஸ்டுடியோ நடைபெற்று வந்த காலத்தில் அங்கே கேண்டீன் நடத்தியவர் அந்த அனுபவங்களைச் சுவையாக எழுதியுள்ளார். ஒரு புனைகதைக்கு இணையாகப் படிக்கமுடிந்த புத்தகம் அது. பாரதிமணி எழுதிய பல நேரங்களில் பல மனிதர்கள் பிரபலமான கட்டுரைத்தொகுதி. தில்லி வாழ்க்கையில் அவர் சந்தித்த மனிதர்களையும் அந்த அனுபவங்களையும் ஒரு கோட்டோவியம்போல தீட்டிக் காட்டும் கட்டுரைகள். ஏ.கே.செட்டியாரின் பயணக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனி அனுபவம். சமீபத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டவரும் சிவாஜி ரசிகர் மன்றத்தின் செயலராகவும் இருந்த சின்ன அண்ணாமலையின் கட்டுரைத்தொகுப்பொன்றைப் படித்தேன். ’சொன்னால் நம்பமாட்டீர்கள்’ என்னும் தலைப்பில் அது வந்துள்ளது. ஓமந்தூர் ராமசாமி செட்டியார், ராஜாஜி, கல்கி, காமராஜர், டி.கே.சி. என பல ஆளுமைகள் சாதாரணமாக வந்துபோகிறார்கள். வரலாறு அதன் போக்கில் இயங்கியபடி இருக்கிறது. கட்டுரைகள் அதை நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுகிறது. நல்ல வாசிப்பனுபவம் உள்ளவை. இலக்கியத்தில் இது ஒரு வகைமை. சிறுகதையாக்கம் என்பது முற்றிலும் வேறான நுட்பம். அது இதைத் தேக்கிவிடும் என்பதோ அல்லது இது அதைக் கட்டுப்படுத்திவிடும் என்பதோ, தேவையற்ற அச்சம். இரண்டும் இருவேறு தனிப்பாதைகள். ஒருசில சமயங்களில் ஒரே இடத்தைத் தொடக்கூடிய சாத்தியம் உள்ளவை என்றபோதும்கூட.

பதாகை: ஒரு விஷயத்தை எந்த வடிவில் எழுதுவது என எக்கணத்தில் முடிவு செய்வீர்கள்?

பாவண்ணன்: அகத்தூண்டுதலால் மனம் நிமிரும் கணத்திலேயே, படைப்புக்குரிய வடிவமும் நிழலென அமைந்துவிடுகிறது.

பதாகை: உங்களது கட்டுரைத் தொகுப்புகளைப் படிக்கும்போது பிரமித்த ஒரு விஷயம் – உங்களுக்கு பலதரப்பட்ட கலைவெளிப்பாடுகளில் இருக்கும் ஆர்வம். ஒரு இடத்தில் “உலக ஞானங்களைக் கண்டு பிரமிக்கிறேன்” அப்படின்னு எழுதறீங்க. இந்த பிரமிப்பின் தொடக்கமாக எதைச் சொல்ல முடியும்?

உங்களுக்கு கர்நாடக சங்கீதத்தில் நல்ல ரசனையும் ஞானமும் உண்டு என்று நண்பர் வெ. சுரேஷ் குறிப்பிட்டார். அதே போல், திரை இசையை எல்லாரும் ரசித்தாலும் உங்கள் தேர்வில் ஒரு நுட்பம் தெரியும் என்றார். உங்கள் கதைகளிலும்கூட இசை விவரிக்கப்படுகிறது அல்லவா?

பாவண்ணன்: தெருக்கூத்திலிருந்து அது தொடங்கியது என்று நினைக்கிறேன். என்னோடு சுப்பையா என்றொரு பையன் படித்துவந்தான். எங்கள் வீட்டிலிருந்து நாலைந்து வீடு தள்ளி அவன் வீடு இருந்தது. அவன் அப்பா ஒரு விவசாயி. அவனை படிக்கவைத்துப் பார்க்கவேண்டும் என்பது அவர் ஆசை. ஆனால் அவனுக்குச் சரியாக படிப்பு வரவில்லை. என்னைவிட வயதில் மூத்தவன். ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு இரண்டு ஆண்டுகளாகப் படித்து ஆறாவது வகுப்பில் என்னோடு படித்தான். வயதில் என்னைவிட மூத்தவன். அவன் எப்படியோ ஒரு கூத்துக்குழுவில் சென்று சேர்ந்துவிட்டான். அவன் அப்பாவுக்கு அது பிடிக்கவில்லை. அடித்துப் பார்த்தார். திட்டிப் பார்த்தார். பிறகு அவன் தலையெழுத்துப்படியே விட்டுவிட்டார். எங்கள் தெருக்கோவிலில் ஆடித்திருவிழா சமயத்தில் அவனுடைய கூத்துக்குழுதான் ஆட வந்தது. பொதுவாகவே விடியவிடிய உட்கார்ந்து கூத்துப் பார்க்கும் ஆசைகொண்டவன் நான். அன்று அவனுடைய ஆட்டத்தைப் பார்க்கப் போகிறேன் என்னும் எண்ணத்தால் நான் பரபரப்பாகவே இருந்தேன். திரெளபதை வஸ்திராபரணம். சுப்பையாதான் திரெளபதை. என்னால் நம்பவே முடியவில்லை. அச்சு அசலாக ஒரு பெண்ணைப்போலவே ஒயில்காட்டி அவன் ஆடிய ஆட்டமும் ஒரு அரசிபோல மிடுக்காக நடந்து காட்டிய கம்பீரமும் என்னை பிரமிக்கவைத்தன. எங்கள் சுப்பையாவா அது என்று வாயைப் பிளந்தபடி பார்த்தேன். வகுப்பில் ஆசிரியர் கேட்கிற கேள்விக்கு ஒரே ஒரு வார்த்தைகூட பதிலாகச் சொல்ல தெத்தித்தெத்தி திணறக்கூடியவன் காட்டாற்று வெள்ளமென சொல்மழை பொழிவதை வைத்த கண்ணை எடுக்கமுடியாமல் பார்த்தேன். அன்று இரவு அவனுடைய இரவு. அவன் முகத்தில் பொங்கிய கோபம். ஆவேசம். ஆரவாரம். அழுகை. கெஞ்சல். அவமானத்தில் உடல்குன்றி நின்ற கோலம். ஆத்திரத்தில் வெடித்தெழும் சாபம். அவனுக்குள் ஏதோ ஒரு தெய்வம் புகுந்து ஆட்டிப்படைப்பதுபோல இருந்தது. நம்பமுடியாமல் சலங்கை கட்டிய அவன் கால்களையும் அவன் ஆட்டத்தையும் உரையாடலையும் பிரமிப்போடு பார்த்தபடி இருந்தேன். வகுப்பில் ஆசிரியரின் பிரம்படிக்காக கையை நீட்டியபடி குனிந்து நிற்கும் சுப்பையா வேறு. ஆவேசத்துடன் அடவுகட்டி ஆடி தலைவிரி கோலத்துடன் சப்தமெடுக்கும் சுப்பையா வேறு. மறுநாள் காலையில் அவனை ஏரிக்கரையில் வேலங்குச்சியால் பல்விளக்கியபடி நின்றிருப்பதைப் பார்த்தபோது சாதாரணமாகத்தான் இருந்தான். ‘பிச்சி ஒதறிட்டடா’ என்று அவன் கையைப் பற்றி அழுத்தி என் பாராட்டுதல்களைத் தெரிவித்தேன். ‘உடுடா உடுடா’ என்று சிரித்தபடி அதை அவன் ஏற்றுக்கொண்டது எனக்கு இன்னும் நினைவுக்கு வந்தது. பிரமித்துப் பார்ப்பது என்பது நாம் ரசிப்பதன் வெளிப்பாடு அல்லவா? கோவிலில் மேளக்காரரும் நாதஸ்வரக்காரரும் போட்டிபோட்டுக்கொண்டு வாசிக்கும்போது எழும் விதம்விதமான தாளக்கட்டுகள் பிரமிக்கவைத்திருக்கின்றன. பாட்டுக்கச்சேரிகள், நடனங்கள், சிலம்பாட்டம் என ஏராளமான தருணங்கள் என்னை மலைக்கவைத்திருக்கின்றன. எனக்கு பெரியம்மா முறையாகக்கூடிய ஒரு அம்மா எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தார். எழுதப் படிக்கத் தெரியாதவர். இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு பழைய திரைப்படப்பாடல்களை மணிக்கணக்கில் சோகம் இழைந்தோடும் குரலில் பாடுவார். கேட்கும்போது நமக்கு அப்படியே நெஞ்சை அடைத்துக்கொண்டு வரும். கண்ணீர்த்துளிகள் முட்டும். சமீபத்தில்தான் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். வாழ்க்கையை ஒருநாள்கூட நிம்மதியாக வாழாத அவருக்கு அந்த இசையையே இயற்கை ஒரு வடிகாலாகக் கொடுத்திருக்கிறதுபோகும் என்று நினைத்துக்கொள்வேன். நாள்தோறும் அவர் பாடிய பாடல்களைக் கேட்டபடி வளர்ந்ததுகூட பாட்டின்மீது ஆர்வம் பிறந்ததற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். வாரத்துக்கு ஒரு நாள் புதுச்சேரி கடற்கரையில் டியுப்ளே சிலைக்கு அருகில் பாண்ட் வாசிப்பார்கள். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் அந்த வாசிப்பு நிகழும். கேட்கக்கேட்க மனம் பறக்கும். அப்படியே நம்மை தூக்கிக்கொண்டு வேறொரு உலகத்திற்குக் கொண்டுபோய் இறக்கிவிடும். எனக்கு அமைந்த சூழல் என்னைச் சுவைக்கத் தெரிந்தவனாக சமைத்தது என்று சொல்லலாம். நீங்கள் எது தொடக்கம் என்றொரு கேள்வியைக் கேட்டதுமே பழைய நினைவுகள் பொங்கிப்பொங்கி வருகின்றன. காதையும் மனசையும் கண்களையும் திறந்துவைத்திருந்தபோது எல்லாமே உள்ளே வந்துவிட்டன.

பதாகை: யுகமாயினி இதழில் வெளிவந்த உங்கள் கட்டுரை (அனுபவத் தொடர்) மிகவும் வித்தியாசமானது.சிறுகதைகள் போலவே தோன்றும் கட்டுரைகள் அவை.(தீரா நதியில் நீங்கள் எழுதிய அந்தக் கட்டுரை தொடரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த வேறுபாடு இன்னும் துலக்கமாகவே விளங்கும்) இவற்றுக்கும் சமீபத்தில் வெளிவந்த உங்கள் சிறுகதைகளுக்கும் (பள்ளிக் கூடம் போன்றவை) உள்ள வேறுபாட்டை விளக்க முடியுமா? ஒரு சம்பவத்தை கட்டுரை என்றும் கதை என்றும் எப்படி வகுத்துக் கொள்வீர்கள்?

பாவண்ணன்: கட்டுரைகளைவிட கதைகளுக்கு ஒருசில விழுக்காடுகள் கூடுதலான மதிப்பெண்கள் தரலாம் என்பது என் எண்ணம். ஒரு கட்டுரையின் சாயல் ஒரு கதையிலும் அல்லது ஒரு கதையின் சாயல் ஒரு கட்டுரையிலும் இடம்பெற்றிருக்கலாம். எழுதிச் செல்லும் போக்கில் தவிர்க்கமுடியாமல் அப்படி அமைந்துவிடும். கட்டுரைக்கான சம்பவத்தையும் கதைக்கான சம்பவத்தையும் ஏதோ ஓர் உள்ளுணர்வின் தூண்டுதலால்தான் பிரித்து வகுத்துக்கொள்கிறேன். அக்கணத்தில் மனம் செலுத்தும் திசையில் எழுத்து பறந்துபோகிறது. ஏன் அப்படி என்பதைச் சரியாகச் சொல்லத்தெரியவில்லை என்றே சொல்வேன். சந்தையில் நீங்கள் காய்கறி வியாபாரிகளைப் பார்த்திருப்பீர்கள். வியாபாரம் இல்லாத நேரங்களில் தனக்கு முன்னால் கொட்டிக் குவிக்கப்பட்டிருக்கும் தக்காளி அல்லது கத்தரிக்காய்களில் ஒரு சிலவற்றை எடுத்து ஒரு கூடையில் பிரித்துப் போடுவார். இன்னும் சிலவற்றை எடுத்து வேறொரு கூடையில் போடுவார். இதற்கு ஒரு விலை இருக்கும். அதற்கு ஒரு விலை இருக்கும். எதுவுமோ அழுகலோ அல்லது முற்றிப்போனவையோ அல்ல. அனைத்தும் நல்ல தரத்தில் உள்ளவையாகவே இருக்கும். ஆனாலும் இரண்டாக வகுத்தபடியே இருப்பார்கள். வழக்கமாக நான் காய்கறி வாங்கக்கூடிய ஒரு அம்மாவிடம் ’ எல்லாத்தயும் ஒரே கூடையில வச்சி ஒரே விலையில விக்கலாமே? எந்த அடிப்படையில இப்படி பிரிக்கிறீங்க?” என்று ஒரு நாள் கேட்டேன். அந்த அம்மா புன்னகைத்துக்கொண்டே ‘அதெல்லாம் பழக்கம்தாங்க. காயை தொடும்போதே கைக்கும் மனசுக்கும் தெரிஞ்சிடும்ல?’ என்றார் அவர். மேலும் ‘எல்லாம் ஒரு கைப்பழக்கம் மனப்பழக்கம்தான்’ என்றும் சொன்னார். அந்த அம்மாவிடம் கேட்ட அதே சொற்களைத்தான் நான் உங்களுக்கும் சொல்ல விழைகிறேன். எல்லாம் ஒரு மனப்பழக்கம்தான்.

பதாகை: கபிலர், புரந்தரதாசர், சிலப்பதிகாரம், ஆவுடை அக்காள் பாடல்கள் என சங்க இலக்கியத்திலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை வந்த பக்திப்பாடல்களைப் பற்றிய தீவிரமானக் கட்டுரைகளை முப்பது வருடங்களாக எழுதியுள்ளீர்கள். இந்த காலகட்டத்தில் பலவிதமான ரசனை மற்றும் கோட்பாட்டு விமர்சனங்கள் வந்துபோய்விட்டன. இந்தப் பாதையில் இவ்வகை சங்கம் மற்றும் மரபுக்கவிதைகளுக்கான பார்வை உங்களுக்கு மாறியுள்ளதா?

பாவண்ணன்: கோட்பாட்டு விமர்சனத்தை நான் ஆழமாகப் பயின்றதில்லை. என் பார்வை கோட்பாடு சார்ந்ததல்ல என்பதால், எனக்கு அதில் அதிக நாட்டமும் இருந்ததில்லை. நம்முடைய இலக்கியவளம் ஒரு மாபெரும் புதையல். தேடத்தேட எடுத்தபடி இருக்கலாம். நம்மாழ்வாரின் ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது. ’அவரவர் விதிவழி அடைய நின்றனரே’ என்றொரு வரி அந்தப் பாட்டில் உண்டு. மறக்கமுடியாத வரி. இறைவனை உணரும் வழி இது என நம்பி நீங்கள் ஒரு வழியில் நடந்துசெல்கிறீர்கள். அந்த வழியாக இருக்குமோ, இந்த வழியாக இருக்குமோ என்றெல்லாம் குழப்பம் கொள்ளவேண்டாம். நீங்கள் தொடங்கிய வழியில் சென்றுகொண்டே இருங்கள். நீங்கள் தேடிய இறைவனை நீங்கள் அடைவீர்கள் என்று நம்மாழ்வார் சொல்லியிருக்கும் பக்குவத்தை மறக்கவே முடியாது. மற்றவர்களுக்கு இறைவன் தரிசனம் கிடைக்காதா என்றெல்லாம் வீண்சந்தேகமோ, வீண்குழப்பமோ வேண்டாம். அவரவர்கள் சென்ற வழியில் அவரவர்கள் தேடிய இறைவனை அவரவர்கள் கண்டடைவார்கள். நம் பயணத்தில் தீர்மானமான உறுதியும் பற்றும் இருத்தல் வேண்டும். கடவுளைக் காணும் ஒவ்வொருவரும் அவரவருக்கே உரிய வழிமுறைகளில் இறைவனைத் தேடிக் கண்டடைகிறார்கள். அவரவருக்கும் அவரவர்களுடைய இறையவர் முக்கியமானவர்களாக இருப்பார்கள். சங்கப்பாடல்கள் மீதும் மரபுப்பாடல்கள்மீதும் தீராத விருப்பமுடையவன் நான். எந்த விமர்சனப்பார்வையாலும் அது மாறியதில்லை.

பதாகை: கன்னட வசன மற்றும் கவிதை இலக்கியத்துக்கான அபாரமானத் தொடக்கங்களை உங்கள் கட்டுரைகள் கொடுத்துள்ளன. குறிப்பாக ‘பாட்டும் பரவசமும்’ எனும் கட்டுரையில் அக்கமகாதேவி, மல்லிகார்ஜூனைப் பற்றிப்பாடும் பாடல்களையும் ஆண்டாளின் பாடல்களையும் ஒப்பிட்டு எழுதியது தனிப்பட்ட அளவில் எனக்கு அவரது பாடல்களைத் தேடிக்கண்டடைய உதவியது. பக்தி காலகட்டப்பாடல்களை பரவச நிலையிலிருந்து அணுகியதோடு அப்பாடல்களின் ஆழத்தில் புதைந்துள்ள உணர்வுகளை வெளிச்சம் போட்டுக்காட்டியது. பக்தி, பற்று, நம்பிக்கை போன்றவற்றைத் தாண்டி இப்பாடல்களை எப்படி அணுகுவது?

பாவண்ணன்: நம் மகிழ்ச்சிக்குரிய தருணங்களை அத்தகு பாடல்கள் நமக்கு மீண்டும்மீண்டும் உருவாக்கி அளிக்கின்றன. பக்தி, பற்று, நம்பிக்கை நிலைகளிலேயே அவற்றை ஏற்றுக்கொள்வதில் நாம் ஏன் தயங்கவேண்டும். அறிவியலும் உளவியலும் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் கருவிகள். அவற்றின் துணையோடு அப்பாடல்கள்மீது தாராளமாக ஓர் ஆய்வை நிகழ்த்தலாம். அதனால் எப்படிப்பட்ட பயன் விளையும் என்று தெரியவில்லை. உளவியலின் அடிப்படையில் காந்தியைப்பற்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரையைப் படித்தேன். காந்தி இளமைக்காலத்தில் பாலியல் விருப்பம் உள்ளவராக இருந்தார். அவர் தன்னுடைய தந்தையார் மரணப்படுக்கையில் இருந்த தருணத்தில் பாலியல் விழைவோடு தன் துணைவியோடு இருக்கச் சென்றுவிட்டார். அவர் பிரிந்துசென்ற தருணத்தில் அவர் தந்தையாரின் உயிர் பிரிந்துவிட்டது. அன்றுமுதல் அவருக்கு பாலியல் சார்ந்த குற்ற உணர்வு ஏற்பட்டது. அதனால்தான் பிரம்மச்சரிய விரதத்தை அவர் அனைவரிடமும் முன்வைத்தார் என்று நீண்டு சென்றது அக்கட்டுரை. பெரிய உளவியல் அறிஞர் என்று சொன்னார்கள் அந்தக் கட்டுரை ஆசிரியரை. கடைசியில் அவருடைய அறிவு, காந்தியை எந்தச் சிமிழுக்குள் கொண்டு வந்து அடைக்கப் பார்க்கிறது, பாருங்கள். நம் மக்கள் அப்படித்தான் அவரைப் பார்க்கிறார்களா? பிரம்மச்சரிய விரதத்தைப் பேசியவர் காந்தி என்பதுதான் காந்தியின் பிரதானமான முகமா? ஆண்டாள் பாடல்களையும் அக்காவின் பாடல்களையும் பக்தி புதிய அணுகுமுறைகளில் அணுகி புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சக்கூடிய முடிவுகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றால் அவற்றை நிச்சயம் வரவேற்கவேண்டும். ஆனால், தனிப்பட்ட விதத்தில் எனக்கு நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டாளின் பாடல்களையும் அக்காவின் பாடல்களையும் அணுகுவதே பிடித்திருக்கிறது.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்க கனாக்கண்டேன் தோழி

என்னும் பாட்டை நீங்கள் படித்திருப்பீர்கள். என்ன ஒரு திடமான நம்பிக்கை பாருங்கள். இந்தப் பிறவிக்கு மட்டுமல்ல, ஏழு பிறவிக்கும் எனக்குரியவன் அவன் என்று எவ்வளவு ஆழமாக நம்புகிறாள் ஆண்டாள். ஒரு பாட்டில் கைத்தலம் பற்றிய மதுசூதனனைச் சொன்னவள், இந்தப் பாட்டில் அவன் குனிந்து திருக்கையால் தன் தாள்பற்றும் கணத்தைக் குறிப்பிடுகிறாள். அதைப் படிக்கும்போதே நமக்கு மெய் சிலிர்க்கிறது. கடவுள் வந்து தன் கால்விரலைத் தொடுவான் என்பதில் அவளுக்கிருக்கும் உறுதியை நினைக்கும்போதே பரவசமாக இருக்கிறது. கடவுள் தன் அருகிலேயே இருந்தால் நன்றாக இருக்குமே என நினைப்பவர்களுக்கு இந்த வரி அளிக்கக்கூடிய ஆறுதலையும் நம்பிக்கையையும் நினைத்துப் பாருங்கள். அந்தப் பரவசத்தை வேறு எதைமுன்னிட்டும் நான் இழக்கத் தயாராக இல்லை.

விட்டல்ராவுடன் (1)பதாகை: ‘திறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும்’ எனும் கட்டுரையில் மு.தளையசிங்கத்தின் கோட்டை தொகுப்பு பற்றி எழுதியிருந்தீர்கள். மதுரையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் கல்லூரிப்பெண்களும் ஆண்களும் கேலியாகப் பேசிச் சென்ற கணத்தில் திடுமென உடலைப்பற்றியதாக மாறியதும் தத்தமது நிலையை உணர்ந்து தயங்கும் ஓர் அனுபவக்குறிப்பு வருகிறது. ஒவ்வொரு இளைஞனும் இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தைக் கடந்து வந்திருப்பான். உங்கள் “தங்கமாலை” சிறுகதையைப் படித்ததும் அதேபோன்றதொரு எண்ணம் ஏற்பட்டது. சட்டென சங்க இலக்கியக்கட்டுரையில் தலைவி தலைவனுக்காகக் காத்திருந்து இளைத்தவள் அவன் வந்ததும் விலகிச்செல்லும் சித்திரம் தோன்றியது. இந்திய மண்ணுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருக்கும் இப்படிப்பட்ட உணர்வுகள் சட்டென மனிதர்களைப் பற்றியதாக எப்படி மாறிவிடுகிறது?

பாவண்ணன்: அது உலகப்பொதுவான உணர்வு என்றே தோன்றுகிறது. பைபிளில் ஒரு கதை உண்டு. தன் கணவனின் நம்பிக்கைக்குரிய வணிகன்மீது காதல் கொண்டு உருகுகிறாள் அவன் மனைவி. அவனோ முதலாளிக்கு துரோகமிழைக்க விரும்பாமால் அவள் அழைப்பை மறுக்கிறான். தன் அழைப்பைப் புறக்கணித்துவிட்ட அவன்மீது அவள் தீரா வஞ்சம் கொள்கிறாள். தன் கணவனிடம் வீண்கதை கட்டுகிறாள். தன் வார்த்தைகளை நம்பும்படி செய்கிறாள். இறுதியில் அந்த வணிகனின் தலையை வெட்டி ஒரு தட்டில் கொண்டுவரும்படி தன் கணவனிடம் கேட்டுக்கொள்கிறாள். கிரேக்கப் புராணங்களிலும் இப்படி ஏராளமான கதைகள் உள்ளன.

பதாகை: ‘பருவம்’ போன்ற காலத்தில் மிகப் பின்னே  அமைக்கப்பட்டுள்ள படைப்பை மொழிபெயர்ப்பதற்கும் ‘தேர்’ (ராகவேந்திர பாட்டீல்) போன்ற சற்றே பிந்திய காலம்/நிகழ்காலத்தில் அமைக்கப்பட்டுள்ள  படைப்பை மொழிபெயர்ப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்/சவால்கள் ஏதேனும் உண்டா?

பாவண்ணன்: எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த படைப்பாக இருந்தாலும், ஒரு மொழியில் உள்ள பழமொழிகளையும் மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் நோக்கத்தையும் தொனியையும் சிதைக்காமல் இன்னொரு மொழியில் மொழிபெயர்ப்பதுதான் மிகப்பெரிய சவால். முதலில் அது பழமொழிதானா, மரபுத்தொடர்தானா அல்லது உரையாடலின்போக்கில் உள்ள ஒரு வரியா என்பதை உறுதியாகப் புரிந்துகொள்ளவேண்டும். மீண்டும்மீண்டும் வாக்கியங்களைப் படித்துப்பார்ப்பதுதான் ஒரே வழி. ஏற்கனவே கூடி வந்திருக்கும் பொருளோடு எவ்விதத்தில் அது பொருந்திப் போகிறது என்பதையும் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும். உரையாடலின் போக்கில் அல்லது விவரணையின் போக்கில் ஒரு வரி தீவாக தனித்து நின்றுவிடக்கூடாது. அது வீணான குழப்பத்தைக் கொடுக்கும். என்னைப் பொறுத்தவரையில் மொழிபெயர்க்கும்போது, எனக்குச் சந்தேகமாகத் தோன்றும் இடங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் என் நண்பர்களுடன் கலந்து பேசி தெளிவு பெறுவேன். ஒன்றுக்கு இரண்டு பேரிடம் கேட்டு உறுதி செய்யவும் தயங்கமாட்டேன். ஒரு அத்தியாயத்தை மொழிபெயர்த்து முடித்ததும் கன்னட அத்தியாயத்தையும் தமிழ் அத்தியாயத்தையும் அருகருகில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வாக்கியமாக மாற்றிமாற்றிப் படித்து சரிப்படுத்தி செம்மைப்படுத்திக்கொள்வேன். நேரம் செலவாவதைப் பொருட்படுத்தாமல் ஈடுபடும்போதுதான் ஒரு மொழிபெயர்ப்பு வேலைகளைச் சரியாகச் செய்துமுடிக்கமுடியும்.

பதாகை: ‘பருவம்’ நாவலின் கன்னட மூல பிரதியில் பழங்காலக் கன்னட சொற்றொடர்கள் நிறைய  உபயோகிக்கப்பட்டிருக்கும் என்ற யூகத்தில் கேட்கிறேன், அது தவறாகவும் இருக்கலாம். (உ.ம்  வெண்முரசில் அடிக்கடி உபயோகிக்கப்படும் ‘தீச்சொல்’ என்ற பதத்தைப் போல் பருவத்திலும் நவீன கன்னடத்தில் அதிகம் புழங்காத சொற்கள் உபயோகிக்கப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுவதால்). அத்துடன் ஒப்பிடுகையில் ‘தேரில்’ நவீன கன்னடம் அதிகம் எடுத்தாளப்பட்டிருக்கலாம்.  அப்படி பழங் கன்னட சொற்களை மொழிபெயர்க்கும் போது நவீனத் தமிழிற்கு நெருக்கமாக செய்வது உகந்ததா அல்லது அவற்றுக்கிணையான பழந் தமிழாகச் மொழிபெயர்ப்பது உகந்ததா?

பாவண்ணன்: ’பருவம்’ மகாபாரதத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவலென்றாலும் அது ஒரு நவீன நாவலுக்குரிய எளிய மொழியிலேயே எழுதப்பட்ட ஒன்றாகும். இதற்கு மாறாக, ’தேர்’ நாவலும் ஒரு நவீன நாவலென்றாலும் அதன் ஒரு பகுதி முழுக்கமுழுக்க ஒரு நிகழ்த்துகலையின் சாயலைக் கொண்டிருந்தது. அப்பகுதி சற்றே சவால் நிறைந்த பகுதியாகும். மொழிபெயர்க்கும் முன்பாக மூன்றுமுறை அதை வாசித்தேன். மனத்தளவில் என்னை நானே தயாரித்துக்கொள்ள அந்த இடைவெளி உதவியது. கன்னட நிகழ்த்துகலைக்கு இணையாக தெருக்கூத்து நிகழ்த்துகலையின் சாயலை அதற்கே உரிய மொழியுடன் கொண்டு வந்தேன். நானே ஒரு கலைஞனாக என்னை நினைத்துக்கொண்டு உயர்த்திய தொனியில் பாடவும் பேசவும் ஏற்றதாக அப்பகுதியை வடிவமைத்தேன். முற்றிலும் மொழிபெயர்த்து முடித்த பிறகும், கன்னடத்திலும் தமிழிலும் மாறிமாறிப் படித்து மேலும்மேலும் செம்மை செய்தபடியே இருந்தேன். பழைய சொல்லையோ அல்லது புதிய சொல்லையோ, அதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டுபிடிப்பதோடு மட்டும் மொழிபெயர்ப்பு முடிவடைவதில்லை. அதன் பொருத்தப்பாட்டையும் முழு வாக்கியத்தில் அது உருவாக்கும் தொனியையும் உய்த்துணரவேண்டும். கதைப்போக்குக்கும் உத்தேசிக்கப்பட்டிருக்கும் காலத்துக்கும் உகந்ததாகவும் அமைக்கவேண்டும். திரும்பத் திரும்பப் படித்து செம்மை செய்தபடியே இருப்பதன் வழியாகத்தான் ஒரு மொழிபெயர்ப்பைச் சிறப்புறச் செய்யமுடியும்.

பதாகை: மொழிபெயர்க்கும் போது அதன் மூல ஆசிரியர்களுடன் உரையாடுவது உண்டா? அப்படியெனில், எந்தளவிற்கு.

பாவண்ணன்: இல்லை, மொழிபெயர்க்கும்போது நான் எந்த மூல ஆசிரியருடனும் உரையாடியதில்லை.

பதாகை: பருவம் கன்னட மூலத்தின் மொழி எப்படிப்பட்டது? கன்னடம் தெரிந்த ஒரு நண்பர், அந்நாவல் இக்காலகட்ட கன்னடத்தில் எழுதப்பட்டது. குறிப்பாக பல colloquial வார்த்தைகள் உள்ளடக்கியதுன்னு சொன்னார். மொழிபெயர்க்கும்போது உங்கள் மொழித்தேர்வும், வார்த்தைத்தேர்வும் எப்படி அமைந்தது?

பாவண்ணன்: ’பருவம்’ நாவல் நவீன நாவலுக்குரிய மொழியிலேயே எழுதப்பட்ட ஒன்றாகும். இதிகாசப்பின்னணியில் விசுவாமித்திரரைப்பற்றிய ஒரு நாவல் மகாபிராமணன் என்னும் பெயரில் வந்துள்ளது. அது முழுக்கமுழுக்க செவ்வியல் மொழியிலேயே எழுதப்பட்ட ஒன்றாகும். பைரப்பா அதற்கு நேர்மாறாக தன் பருவம் நாவலை நவீன மொழியிலேயே எழுதியிருந்தார். ஒருவேளை அவர் உருவாக்க நினைத்த தொனி அதற்குக் காரணமாக இருக்கலாம். நிகழ்காலத்துக்குரிய பார்வையில் பாரதத்தை அணுகும் ஒரு வாசிப்பை அவர் சாத்தியப்படுத்த நினைத்தார். அதனால் நிகழ்காலத்துக்குரிய மொழியையே அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டார். அதனால் நானும் கவனமாக அவர் பயன்படுத்திய சொற்களுக்கு இணையான நிகழ்காலச் சொற்களையே பயன்படுத்தினேன்.

பதாகை: ‘பருவம்’ நூல் பதிப்பில் பல பிழைகள் இருந்ததாக நண்பர் தெரிவித்தார். சாகித்திய அகாதமி வெளியீட்டில் இன்று புதிய பதிப்பு வந்திருக்கிறது என்றாலும் பொதுவாக வரும் பிழைகளை எப்படிக் களைவது? பதிப்பு வந்தபோது அவை உங்கள் கவனத்துக்கு வந்ததா?

பாவண்ணன்: பல வேலைகளுக்கிடையில் முதல் மெய்ப்புப்படியை நானே நேரமொதுக்கி திருத்தங்கள் போட்டு சாகித்திய அகாதெமியிடம் கொடுத்தேன். திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு மீண்டுமொரு முறை எனக்கு மெய்ப்புப்படியை எடுத்துக் கொடுக்கும்படியும் அவற்றை மறுபடியும் வாசித்துத் திருத்திக் கொடுப்பதாகவும் சொல்லியிருந்தேன். அதற்கு அகாதெமி நண்பர் சம்மதித்திருந்தார். இந்தத் தருணத்தில் நிர்வாகக் காரணங்களுக்காக சாகித்திய அகாதெமியின் தமிழ்ப்பிரிவு பெங்களூரிலிருந்து சென்னைக்குச் சென்றுவிட்டது. பல மாதங்கள் கடந்தன என்றாலும் மெய்ப்புப்படி வரவே இல்லை. அச்சிடத் தேவையான தாள்கள் வாங்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்றும் அதுவரை புதிய நூல்களின் அச்சாக்கம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் முதலில் சொல்லப்பட்டது. பிறகு நிதி ஒதுக்கீடு வரவில்லை என்றும் சொல்லப்பட்டது. அப்படியே இரண்டாண்டுகளுக்கும் மேல் ஓடிவிட்டது. திடீரென ஒருநாள் தொலைபேசியில் புத்தகம் அச்சுக்குப் போக இருப்பதாகச் சொன்னார்கள். நான் பதறினேன். இன்னும் திருத்தங்கள் போடும் வேலையே முடியவில்லையே என்று கவலையைத் தெரிவித்தேன். அதெல்லாம் நாங்களே முடித்துவிட்டோம் என்று சொன்னார்கள். நான் இன்னொரு முறை படித்துப் பார்த்து வேறு ஏதேனும் திருத்தம் தேவைப்படுமா என கண்டறிந்து, அவற்றைக் குறிப்பிட்டுத் தருவதாகச் சொன்னேன். நேரம் குறைவாக இருக்கிறது, அச்சுக்குச் செல்லவேண்டும் என்று அவர்கள் அவசரப்பட்டார்கள். இன்னொரு முறை பார்த்தால்தான் நிம்மதியாக இருக்கும் என்று நானும் தொடர்ந்து வலியுறுத்தினேன். அதனால் சில நாட்களுக்குப் பிறகு புதிய மெய்ப்புப்படிகள் வந்தன. முதல் மெய்ப்பில் நான் போட்டுக்கொடுத்திருந்த திருத்தங்களில் எழுபது எண்பது விழுக்காடு மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருந்தன. எஞ்சியவை அப்படியே இருந்தன. மீண்டும் படித்து மீண்டும் திருத்தி அனுப்பிவைத்தேன். சில வாரங்கள் கழித்து எல்லாத் திருத்தங்களும் போடப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார்கள். நண்பர்கள் சொல்வதை நம்புவதைத் தவிர வேறு வழியே இல்லை. எல்லா வேலைகளும் சென்னையில் நடந்ததால், என்னால் நேரில் சென்று பார்க்க நேரமோ, அவகாசமோ இல்லாமல் போய்விட்டது. ஒருநாள் புத்தகக்கட்டு வந்தது. பிரித்துப் பார்த்தால் ஏமாற்றமாக இருந்தது. இரண்டாவதாக போட்டுக்கொடுத்த திருத்தங்கள் பேருக்கு ஒன்றிரண்டை அங்கொன்று இங்கொன்றாக மட்டுமே போடப்பட்டிருந்தன. மற்றபடி அவை அப்படியே இருந்தன. என் வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன். அடுத்த பதிப்பு வரும்போது சரிசெய்துவிடலாம் என்று என்னை அமைதிப்படுத்தினார்கள். அவ்வளவுதான். என் கவனத்துக்கு வராமலேயே இப்போது மறுபதிப்பும் வந்துவிட்டது. மறுபதிப்பு வந்துள்ள செய்தியை விளம்பரம் வழியாகவும் நண்பர்கள் வழியாகவும்தான் நானும் அறிந்துகொண்டேன். நான் இன்னும் பார்க்கவில்லை. பிழைதிருத்தம் வேண்டி என்னிடம் அனுப்பாத நிலையில், அநேகமாக முதல் பதிப்பில் உள்ள பிழைகளோடேயே வந்திருக்கிறதா அல்லது யார்மூலமாவது களையப்பட்டு வந்திருக்கிறதா என்று சரியாகத் தெரியவில்லை. சாகித்திய அகாதெமி அமைப்பில்தான் இத்தகு வெளியீட்டுக் கோளாறுகள்.

பதாகை: நீங்கள் வேறு  ஒரு மாநிலத்திற்கு சென்று பணியாற்றி அந்த மொழியை  கற்றுத் தேர்ந்து சிறந்த  மொழிபெயர்ப்பாளராகவும் மலர்ந்திருக்கிறீர்கள். அந்த அனுபவத்திலிருந்து  தமிழக அரசின் இருமொழிக் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள். குழந்தைகள் இளவயதிலிருந்தே இன்னும் நிறைய மொழிகளுக்கு அறிமுகம் ஆவதில் அநுகூலம் உண்டா?

பாவண்ணன்: கல்வித்திட்டத்தில் மொழிப்பாடங்களைச் சீரமைப்பதுபற்றிய புதிய சிந்தனைகளை மேற்கொள்ளவேண்டிய கட்டம் நெருங்கிவிட்டது என்றே எண்ணுகிறேன். அரசுப்பள்ளிகள் குறைந்துகொண்டே வரும் சூழலில் இந்த நெருக்கடி இன்னும் கூடுதலாகவே இருக்கிறது. இப்போதே தனியார் பள்ளிகளில் ஒருவிதமான கல்விமுறையும் அரசு பள்ளிகளில் இன்னொருவிதமான கல்விமுறையும் இயங்கி வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். பயிற்றுமொழித் தேர்வு உரிமை பெற்றோர்களுக்கு உள்ளது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு எல்லோரையும் கட்டிப் போட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் குழந்தைகளுக்கு மொழிகளைப் படிப்படியாக அறிமுகப்படுத்தவேண்டும் என்றே நினைக்கிறேன். பள்ளிப்படிப்பை முடிப்பதற்குள் ஒரு பிள்ளையால் தாராளமாக மூன்று மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பு வரைக்கும் தாய்மொழியில் பேசுவதும் படிப்பதும் மட்டுமே குழந்தைகளின் உளவளத்தை வளமுடையதாக ஆக்கும். தன்னம்பிக்கை அளவைப் பெருக்கும். அதைத் தொடர்ந்து ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தலாம். எட்டாம் வகுப்புக்கு வரும்போது, விருப்பமொழி என்னும் பாடப்பிரிவில் ஒரு மாணவர் தனக்கு விருப்பமான ஓர் இந்தியமொழியைக் கற்றுக்கொள்ளலாம். மூன்று ஆண்டு காலப் பயிற்சியில் அம்மொழியில் எளிதாக உரையாடமுடியும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பள்ளியை விட்டு வெளியே வரும் ஒரு மாணவனுக்கு மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சியும் திறமையும் இருக்கும். இதை நான் எந்த ஊகத்தின் அடிப்படையிலும் சொல்லவில்லை. நேரடியான எடுத்துக்காட்டுகள் உள்ளன. புதுச்சேரியில் பிரெஞ்சு மொழிவழிப் பள்ளிகள் இன்றும் உள்ளன. பிரான்சின் பாடத்திட்ட அடிப்படையில் அங்கே பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆரம்பக்கல்வி முழுக்க பிரெஞ்சு மொழியில் மட்டுமே எல்லாப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. என்னுடைய மாமாவின் பிள்ளைகள் அங்கேதான் படித்தார்கள். ஆறாவது வகுப்புக்கு வந்த பிறகுதான் அவர்கள் ஆங்கிலமொழியைக் கற்கத் தொடங்கினார்கள். இரண்டே ஆண்டுகளில் ஆங்கிலத்தில் அவர்கள் சொந்தமாகப் பேசவும் எழுதவும் முடிகிற அளவுக்கு தேர்ச்சி பெற்றார்கள். பள்ளியிறுதி வகுப்பில் மற்றொரு உலக மொழியைக் கற்கவேண்டும் என்பதால் ஒருத்தி ஸ்பானிஷ் மொழியையும் இன்னொருவன் ஜெர்மன் மொழியையும் தேர்ந்தெடுத்துக் கற்றுக்கொண்டார்கள். பிள்ளைகளுக்கு மொழியை இப்படித்தான் அந்தப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துகிறார்கள். காலம்காலமாக இந்தக் கற்பித்தல் நடைமுறை அங்கே வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. மொழிப்பயிற்சி என்பதை இங்கே அரிச்சுவடியிலிருந்து தொடங்கிக் கற்பிப்பதே மரபான வழிமுறையாக உள்ளது. அதற்கு மாறாக, உரையாடலிலிருந்தே ஒரு மொழி கற்பிக்கப்படவேண்டும் என்பது என் கருத்து. சின்னச்சின்ன சொற்களும் சின்னச்சின்ன வாக்கியங்களும் பழகிய பிறகே வாசிப்புக்கும் எழுத்துக்கும் வரவேண்டும். எழுத்து, வாசிப்பு, உரையாடல் என மூன்றையும் ஒரே தருணத்தில் உள்வாங்கிக்கொள்வது குழந்தைப்பருவத்தில் பாரமான செயலாகவே இருக்கும். வீணான மன அழுத்தத்தை உருவாக்கும். தேவையில்லாமல் தன்னம்பிக்கை அளவை அது குறைக்கும்.

வண்ணதாசனுடன்பதாகை: எழுத வந்தபோதும் இப்போதும் உங்களுக்கு பிற எழுத்தாளர்கள் உடனான தொடர்பு எப்படி உள்ளது? உங்கள் படைப்புகளைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளனரா? நீங்கள் பெற்றதும் கொடுத்ததுமான அனுபவங்கள் என்னென்ன?

பாவண்ணன்: நான் எழுத வந்த தொடக்க காலத்தில் மிகக்குறைவான எழுத்தாளர்களுடன் மட்டுமே எனக்குத் தொடர்பிருந்தது. முதலில் நெருக்கமாகப் பழக்கமானவர்கள் இராஜேந்திர சோழனும் பிரபஞ்சனும். அவர்களுடனான நட்பும் உறவும் அப்படியே இன்றும் தொடர்ந்து வருகிறது. என்னுடைய சக எழுத்தாளர்களில் எனக்கு முதலில் அறிமுகமானவர்கள் சுப்ரபாரதிமணியனும் சங்கரநாராயணனும் ஜெயமோகனும். அதற்குச் சிறிது காலத்துக்குப் பிறகு எஸ்.ராமகிருஷ்ணனும் கோணங்கியும் அறிமுகமானார்கள். மூத்த படைப்பாளி என்கிற வகையில் எனக்கு முதலில் அறிமுகமானவர் ஆ.மாதவன். அவரைத் தொடர்ந்து வண்ணதாசனும் பூமணியும் அறிமுகமானார்கள். அசோகமித்திரனுடனும் சுந்தர ராமசாமியுடனும் மிகவும் பிந்தியே நான் அறிமுகமானேன். தொண்ணூறுகளில் உதகையில் ஈரோடு ஜீவா ஏற்பாடு செய்திருந்த ’சோலைகள்’ சந்திப்பிலும் கலாப்ரியா நடத்திய குற்றாலம் பட்டறையிலும் பல புதிய எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். எல்லா உரையாடல்களும் இலக்கியப்படைப்புகள் பற்றிய பொதுவான உரையாடல்களாக இருக்குமே தவிர, என்னுடைய படைப்புகள்பற்றிய தனிப்பட்ட உரையாடலாக அமைந்தது கிடையாது.

விட்டல்ராவுடன் (1)பதாகை: உங்களுக்கும் இதழாசிரியர்களுக்கும் இருக்கும் தொடர்பு எப்படிப்பட்டது? நீங்கள் சிறுபத்திரிக்கை நடத்தியுள்ளீர்களா?

பாவண்ணன்: இதழாசிரியர்களுடனான உறவை மிகவும் நெருக்கமான ஒன்று எனவும் குறிப்பிடமுடியாது. முற்றிலும் விலகிய உறவு என்றும் சொல்லமுடியாது. என்னால் எழுதமுடியும்போது அவர்களுக்கு எழுதி அனுப்புகிறேன். அவர்களால் வெளியிடமுடியும்போது வெளியிடுகிறார்கள். சில சமயங்களில் ஒன்றிரண்டு இதழ் இடைவெளியிலேயே அனுப்பப்பட்ட என் படைப்பு வெளிவந்துவிடுகிறது. சில சமயங்களில் ஐந்தாறு மாதங்கள் வரைக்கும் கூட காத்திருக்கவேண்டியிருக்கும். நான் சிறுபத்திரிகை எதையும் நடத்தியதில்லை. திசையெட்டும் என்னும் பெயரில் நண்பர் குறிஞ்சிவேலன் மொழியாக்கத்துக்கான ஓர் இதழை குறிஞ்சிப்பாடியிலிருந்து தொடர்ந்து நடத்தி வருகிறார். நான் அதற்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட்டதில்லை. ஆனாலும் அவ்விதழின் ஆசிரியர் குழுவில் என் பெயரும் இடம்பெற வேண்டும் என்ற அவருடைய அன்பு விருப்பத்துக்கு நான் உடன்படவேண்டியிருந்தது. அதனால், என் பெயர் அவ்விதழின் ஆசிரியர் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறது.

பதாகை: நீங்கள் எழுதும் முறை எப்படிப்பட்டது? குறிப்பிட்ட நேரத்தில் தினமும் எழுதுவீர்களா அல்லது உங்கள் மன இயல்புப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுவீர்களா?

பாவண்ணன்: அலுவலகத்துக்குச் சென்று திரும்புவதற்கு மட்டுமே பகல்பொழுது முழுவதும் தேவைப்படுகிறது. இரவு ஒன்பதரை முதல் பன்னிரண்டு வரை என்பதே எனக்குரிய நேரம். இலக்கியத்துக்கான நேரம். படிப்பதற்கும் எழுதுவதற்கும் அந்த நேரத்தைத்தான் பயன்படுத்தவேண்டும். எழுதுவதற்கான மனநிலை பொருந்தி வந்திருந்தால் அன்றைய இரவு எழுதுவதற்கான இரவாகிவிடும். அல்லது வாசிப்பதற்கான இரவாகிவிடும்.

பதாகை: இந்த வருடம் வெளியாகும் உங்கள் படைப்புகள்? ஒரு நாவல் எழுதத்தொடங்கி ஐநூறு பக்கம் வந்ததும் நிறுத்தியிருந்ததாகப் படித்திருந்தேன். இந்த வருடம் அது வெளியாகுமா?

பாவண்ணன்: ’மூன்றாவது நதி’ என்னும் தலைப்பில் பத்து புதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பொன்று வெளிவரவிருக்கிறது. இதுவரை எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தொன்பது சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பொன்று ‘பிரயாணம்’ என்னும் தலைப்பில் வெளிவரவிருக்கிறது. ஒரு நாவல் பாதி வளர்ந்த நிலையில் நின்றுபோயிருப்பது உண்மைதான். இந்த ஆண்டு அதை நெருங்கவே முடியவில்லை. ஓய்வற்ற வேலை. அடுத்த ஆண்டிலாவது தொட்டு முடித்துவிடவேண்டும் என நினைத்திருக்கிறேன்.

பதாகை: கன்னட தலித் இலக்கிய மற்றும் சமூக நூல்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்பு செய்திருக்கிறீர்கள். ராகவேந்திர பாடீலின் தேர் நாவல்கூட சாதியச் சூழலை விவரிக்கும் நாவல்தான். இது போன்ற நூல்களை மொழிபெயர்க்க நேர்ந்தது எப்படி? இது தொடர்பாக இன்னொரு கேள்விதமிழகத்தில் நிலவும் சாதியச் சூழலை உங்கள் படைப்புகளில் போதுமான அளவு பதிவு செய்திருப்பதாக நினைக்கிறீர்களா? நீங்கள் என்ன எழுத தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதில் இது குறித்த எதிர்பார்ப்புகளின் தாக்கம் உண்டா?

பாவண்ணன்: சாதித்தட்டுகளில் இறுதித்தட்டைச் சேர்ந்தவர்களை அடையாளப்படுத்துகிற தலித் என்னும் சொல் புழக்கத்துக்கு வரும் முன்பு தேசிய அளவில் காந்தி ஹரிஜனர்கள் என்னும் சொல்லை உருவாக்கினார். காங்கிரஸ் இயக்கம் ஹரிஜனர்களுக்கு  ஆதரவாக நின்று உழைக்கவேண்டும் என நினைத்தார். நாடு முழுக்க ஹரிஜன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. பள்ளிகள் தொடங்குதல், கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல், நல்ல இலட்சியங்களுடன் வாழ்வதற்கு துணையாக இருத்தல் என அந்த அமைப்புக்கு நோக்கம் இருந்தது. அந்தச் சங்கத்தை முன்னின்று நடத்தும் பொறுப்பை அவர் மேல்சாதியைச் சேர்ந்தவர்கள் ஏற்று நடத்தவேண்டும் என்று விரும்பினார். அது மூன்று வகைகளில் உதவும் என்பது அவர் எண்ணம். ஒன்று, பல தலைமுறைகளாக தன் மூத்தோர் கடைபிடித்து வந்த தீண்டாமைக் கொடுமைக்கு அது ஒரு பிராயச்சித்தமாக இருக்கும்.  இரண்டாவது, பழகிப்பழகி, மனத்தில் உள்ள சுயசாதிப்பற்றைத் துடைத்தெறிய அது ஒரு வாய்ப்பாக இருக்கும். மூன்றாவதாக, இதுகாறும் தம் மக்களை இழிவுசெய்து வந்த ஒரு கூட்டத்தினர் பழையதையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு தம்முடன் கைகோர்த்து நிற்கிறார்கள் என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மனத்தளவில் ஒரு தன்னம்பிக்கையை வழங்கும். மிகக் குறுகிய காலத்திலேயே காந்தியின் கனவு உண்மையானது. நாடு முழுதும் காங்கிரஸ் தொண்டர்களால் தொடங்கப்பட்ட சேவை மையங்கள் மகத்தான வகையில் தம் கடமையை ஆற்றின. சின்ன வயதில் இதை ஒரு நூலில் படித்தேன். அது என் மனத்தில் நன்கு ஆழமாகப் பதிந்துவிட்டது. தொடக்கப்பள்ளியில் எனக்கு ஆசிரியராக இருந்த வள்ளலார் பற்றாளரான கண்ணன் அவர்களின் நெருக்கத்தால் சின்ன வயதிலேயே சாதிப்பிரிவுகளில் சிறிதும் நம்பிக்கையோ பற்றோ இல்லாமல் இருக்கப் பழகிக்கொண்டேன். அது அப்படியே நெஞ்சில் ஊன்றிவிட்டது. கடைசித்தட்டில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு மேலே உள்ள எல்லாச் சாதிகளும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு காலத்தில் சின்ன அளவிலோ அல்லது பெரிய அளவிலோ கொடுமையை நிகழ்த்தியவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. பிதுரார்ஜிதமாக, அந்தப் பாவத்தில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு. அந்தப் பங்கை நாம் முதலில் கரைக்கவேண்டும். அத்துடன் அனைவரும் ஒன்றே என்னும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். காந்தி காலத்தில் சேவை மையங்கள் நடத்தப்பட்டதுபோல, நம் காலத்தில் நம்மால் சாத்தியமாகக்கூடிய ஒன்றைச் செய்யவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் நான் செயல்பாட்டாளன் அல்ல. கலைஞன். மொழியில் வாழக்கூடியவன். என் செயல்களை மொழியில் வழியாகவே நிகழ்த்தவேண்டும் என விரும்பினேன். நான் எண்பதுகளின் தொடக்கத்தில் கர்நாடகத்தில் குடியேறியபோது, அது தலித்துகள் எழுச்சியின் உச்சகட்டமாக இருந்தது. முதல் தலித் கவிதை, முதல் தலித் தன்வரலாறு, முதல் தலித் நாவல் என நவீன கன்னட எழுத்துலகில் தலித்துகளின் அடையாளத்தோடு படைப்புகள் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றிருந்தன. மொழியைக் கையாளக்கூடிய ஓர் இலக்கியவாதி என்கிற வகையில், அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன். முதல் தலித் கவிதைத்தொகுதியை வெளியிட்டவர் சித்தலிங்கையா. அவருடைய தொகுதியிலிருந்து முக்கியமான கவிதைகளை மொழிபெயர்த்தேன். அவருடன் உரையாடி நான் எடுத்த ஒரு நீண்ட நேர்காணல் நிறப்பிரிகை என்னும் இதழில் வெளிவந்தது. தேவனூரு மகாதேவ எழுதிய நாவலைபசித்தவர்கள்என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தேன். முதல் தலித் சுயசரிதையான அரவிந்த மாளகத்தியின்கவர்ன்மென்ட் பிராமணன்  நூலையும் மொழிபெயர்த்தேன். இப்படியே என் படைப்புகள் தொடர்ந்தன. பல படைப்புகளைப் படித்தாலும் அல்லது என் கவனத்துக்கு வந்தாலும் அவற்றில் மிகமிக முக்கியமான ஒன்றையே நான் மொழிபெயர்ப்பதற்கு எடுத்துக்கொள்கிறேன். ஒரு படைப்பின் கலைமதிப்பும் மிகவும் முக்கியம் என்பது என் எண்ணம். பசித்தவர்கள் நாவலுக்குப் பிறகு மிக நீண்ட இடைவெளியில் வெளிவந்ததேர்நாவலை அப்படித்தான் தேர்ந்தெடுத்தேன். புராணத்தன்மையும் நாட்டாரியல் தன்மையும் சமகாலத்தன்மையும் இணைந்த அந்த நாவலின் கூறுமுறை மிகவும் வசீகரமான ஒன்று.

என்னைப் பொறுத்தவரையில் சாதியக்கொடுமைகளை அடையாளப்படுத்தும் சிறுகதைகளை நான் தொடக்க காலத்திலிருந்தே எழுதி வருகிறேன். இளம்பருவத்தில் நான் எங்கள் ஊர்களில் நான் பார்த்த பல சம்பவங்கள் என் நெஞ்சில் ஆறாத வடுக்களாக உள்ளன. அவற்றிலிருந்து குருதி கசியும் தருணங்களில் அவற்றைப் படைப்புகளாக்குகிறேன். சமீபத்தில், தினகரன் தீபாவளி மலரில் நான் எழுதியகடவுள் அமைத்துவைத்த மேடைசிறுகதை சாதியத்தின் பெயரால் நிகழக்கூடிய கெளரவக்கொலையையே மையமாகக் கொண்டிருப்பதை நீங்கள்  படித்திருக்கலாம்.

பதாகை: இப்போது எழுதிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறை எழுத்தாளர்களில் நெடுந்தொலைவு செல்லக்கூடியவர்கள் என்று நீங்கள் யாரை எல்லாம் நினைக்கிறீர்கள்பொதுவாக, இலக்கியத்தில் ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பாவண்ணன்: என் தலைமுறையை அடுத்து உடனடியாக எழுதத்  தொடங்கியவர்களில் பெருமாள்முருகன், எஸ்.செந்தில்குமார், கண்மணி குணசேகரன், என்.ஸ்ரீராம், உமா மகேஸ்வரி போன்றவர்களும் புதியவர்களில் ஜோ.டி.குரூஸ், சு.வெங்கடேசன், கீரனூர் ஜாகிர்ராஜா, எஸ்.அர்ஷியா, லட்சுமி சரவணக்குமார், காலபைரவன், சந்திரா போன்றவர்களும் இலங்கை எழுத்தாளர் சயந்தனும் நெடுந்தொலைவு செல்லக்கூடியவர்கள் என எண்ணுகிறேன். யூமா வாசுகி, சுயம்புலிங்கம் போன்றோரின் படைப்புகள் தொடக்ககாலத்தில் இருந்த வேகத்துடன் தற்சமயத்தில் வெளிவருவதில்லை என்பது வருத்தக்குரியது.

சில சிறுகதை முகாம்களிலும் பட்டறைகளிலும் பல இளம் எழுத்தாளர்களுடன் உரையாட நேர்ந்திருக்கிறது. அப்போதெல்லாம் நான் ஒரு விஷயத்தை கவனத்தில் வைத்துக்கொள்ளும்படி அவர்களிடம் சொல்வதுண்டு. எழுதும்போது நம் மகிழ்ச்சி இருமடங்காகிறது. நம் புரிதல் இருமடங்காகிறது. அத்தருணத்தில் நம்மையறியாமலேயே நாம் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைக் கண்டடைகிறோம். ஒரு புதிய புள்ளியில் நம் மனப்படகு கரைசேர்ந்து நிற்கிறது. இப்படிப்பட்ட அனுபவங்களுக்காக நாம் நம் மனத்தைத் திறந்துவைத்திருக்கவேண்டும். நம் மீது குவிகிற கவனத்தின்மீது நம் கவனம் ஒருபோதும் செல்லத் தேவையில்லை. நம் பயணத்தின் திசை எது, எல்லை எது என நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். இப்படியெல்லாம் சொல்வது வழக்கம். அதையே இந்த இடத்திலும் சொல்ல விழைகிறேன்.


பதாகை:வலை தொகுப்பின் பலக் கதைகளில் குழந்தைகள்அவர்களின் உலகமும் , குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக ஆவது என்ற காலப் பயணத்திலும்  குழந்தைமை  உள்ளதுசிறார்களின்  உலகம்/பால்யப் பருவம்அதன் கனவுகள்/நிராசைகள்   உங்களின் எழுத்தை  எந்தளவுக்கு பாதித்துள்ளதுஇப்படி ஒரே தீம்  ஒரு தொகுப்பில் தொடர்ந்து வருவது தன்னிச்சையான அமைவதாஎழுத  ஆரம்பிக்கும் போது பால்யம் குறித்த உங்கள் எழுத்தில் இருந்த பார்வைக்கும் இப்போதுள்ள பார்வைக்கும் ஏதேனும் மாறுதல்களை பார்க்கிறீர்களா? அவ்வுலகம்   குறித்து விரிவான நாவல் எழுதும் எண்ணம் ஏதேனும் உள்ளதா ?

பாவண்ணன்: பால்யத்தில் திளைக்காத படைப்பாளியாக யாருமே இருக்கமுடியாது என்றே எண்ணுகிறேன். எண்பது வயதைக் கடந்துவிட்ட அசோகமித்திரனுடைய சமீபத்திய சிறுகதைத்தொகுதியில் கூட, பால்யத்தில் இருவிரல்களால் தட்டச்சு செய்த நினைவை முன்வைத்து அழகானதொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். சுந்தர ராமசாமி தன் எழுபது வயதைக் கடந்த நிலையில் பள்ளிக்கூட கால்பந்தாட்ட நினைவுகளை முன்வைக்கும் நாடார் சார்  சிறுகதையை எழுதியிருந்தார். என்னுடைய ஒவ்வொரு தொகுதியிலும் பால்யம் சார்ந்த ஏதேனும் ஒரு சிறுகதையாவது இடம்பெற்றுவிடுகிறது. அதை என்னால் தவிர்க்கமுடிவதில்லை. உண்மையைச் சொன்னால், இப்போதுதான் பால்ய நினைவுகள் மிகமிகத் துல்லியமாக, அவற்றின் நிறங்களுடன் நினைவில் பொங்கியெழுந்தபடி உள்ளன. நீங்கள் குறிப்பிடுவதுபோலவலைதொகுதியில் பால்யகால நினைவுகளை மையமாகக் கொண்ட கதைகள் சற்றே கூடுதலாகவே இடம்பெற்றுவிட்டன.   தற்செயலாக அப்படி அமைந்துவிட்டன. திட்டமிடல் எதுவும் இல்லை. உங்கள் கேள்வியை ஒட்டி, உண்மையிலேயே பால்யம் தொடர்பாக ஒரு நாவல் எழுதினால் என்ன என்றொரு எண்ணம் இப்போது கிளர்ந்தெழுகிறது. நண்பர்களே, இக்கணத்திலிருந்தே அதை அசைபோடத் தொடங்கிவிட்டேன். காலம் எனக்கு எப்படி துணைசெய்யப் போகிறது எனத் தெரியவில்லை. ஒருவெளை, அப்படி ஒரு நாவலை நான் எழுதினால், அதை பதாகை குழுவினருக்கே சமர்ப்பணம் செய்வேன்.

நன்றி : பதாகையில் தொடர்ந்து எழுதுபவர்களில் ஒருவர், இன்னும் பேசப்பட வேண்டும் என்று தான் விரும்பும் எழுத்தாளர் ஒருவர் குறித்து ஒவ்வொரு காலாண்டும் சிறப்பிதழ் தொகுக்கிறார்.. முதல் காலாண்டிதழில் ஸ்ரீதர் நாராயணன், தான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சிறப்பிதழின் பதிப்பாசிரியராக இருந்தார். அடுத்து, நண்பர் சுனில் கிருஷ்ணன், சு வேணுகோபால் குறித்து ஒரு சிறப்பிதழ் தொகுத்தார். இப்போது, தங்களைப் போலவே புதுவையில் பிறந்து புலம்பெயர்ந்து வாழும் நண்பர் ரா கிரிதரன் “பாவண்ணன் சிறப்பிதழ்” செய்ய முன்வந்திருப்பதில் ஒரு முக்கியமான் விஷயம் இருக்கிறது. பதாகையில தொடர்புடையவர்களில் ஒருவரைத் தவிர மீதமுள்ள அனைவரும் தமிழகத்துக்கு வெளியே இருக்கிறோம், தமிழும் அதன் மேன்மை வெளிப்படும் தமிழிலக்கியமும்தான் எங்களை இணைக்கும் பாலமாக இருக்கின்றன. இது போன்ற சிறப்பிதழ்கள் எங்கள் ஈடுபாட்டுக்கு ஒரு பொருள் தருகின்றன, அது மட்டுமல்ல, சிறிய அளவில் நாங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒவ்வொரு காலாண்டும் ஏதோ ஒரு வகையில் எங்களுக்கு நெருக்கமாக இருக்கும் எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுவதும் அவர்களுடன் உரையாடுவதும் மிகப்பெரும் உற்சாகம் தருகிறது. உங்கள் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றிகள்.

தாயினும் சாலப்பரிந்து – பாவண்ணனின் ஒட்டகம் கேட்ட இசை கட்டுரை தொகுதி – வாசகனின் பரிந்துரை

தன்ராஜ் மணி

ottagam_kaetta_isai

நிமிடத்திற்கு நூறு அனுபவ பதிவுகள் முகநூலிலும், வலைப்பூக்களிலும் வெளி வரும் இந்நாட்களில் ,அனுபவ பதிவு வ்கை எழுத்துக்களை வாசிக்கும் எண்ணமே ஒரு மனச்சோர்வை எனக்களிக்கிறது.

ஆனால் இது பாவண்ணனின் அனுபவ கட்டுரைகள். சொற்களின் நெசவு கைவரப் பெற்றவர் தன் அனுபவங்களை எழுதியதை வாசிக்கும் பொழுதே இவ்வகை எழுத்துக்களை எவ்வளவு படைப்பூக்கத்துடன் எழுத முடியும் என்பதை உணர முடிகிறது. தன் அனுபவங்களை பதிவுகளாய் வலையேற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இத்தொகுப்பை  அவை எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டி நூலாக கொள்ள பரிந்துரைக்கிறேன்.

பெரு நகர வாழ்க்கை சார்ந்த அனுபவங்கள், தன் வேலை நிமித்தம் அவர் செல்லும் இடங்களில் அவரை பாதித்த விஷயங்கள் இவையே பல கட்டுரைகளுக்கான கருப்பொருள்.

நாம் அன்றாடம் கண்டும் காணாமல் கடந்து போகும் சமூக அவலங்கள்  புறக்கணிக்கும் யதார்த்தங்கள் ,  கண் முன்னால் கரைந்து மறையும் வாழ்க்கை முறை இவையே இக்கட்டுரைகளின் பேசு பொருள்.  

ஒரு சிறுகதையாய் தான் எழுதமுடியாமல் போன அனுபவங்களை கட்டுரையாக்கி இருப்பதாக முன்னுரையில் பாவண்ணன் சொல்கிறார். இவர் தேர்ந்த கதைசொல்லியாகவும் இருப்பதால் அனைத்து கட்டுரைகளும் ஒரு சிறுகதை வாசித்த அனுபவத்தை கொடுக்கிறது.

ஒரு வகையில் அனுபவ கட்டுரை எழுத்தாளர் தன் அனுபவங்களுடன் சேர்த்து தன்னையும் வாசகர் முன் வைக்கிறார். சிலருக்கு சுபாவமாகவே மனிதரின் நற்பண்புகள் மட்டுமே கண்ணில் படும்,  சக ஜீவராசிகள் படும் அல்லல்களும். பாவண்ணன் அவர்களில் ஒருவர்.

ஒரு புலம் பெயர் பிஹாரிக்கு உதவி புரிதல், சமூகத்தின் ஆகக்கடைசி இடுக்கில் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்தல், குழந்தையை தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கும் தாயின் துயரை தானும் அடைதல் என பாவண்ணன் எனும் மனிதரின் நல்லியல்புகள் இக்கட்டுரைகளின் பேசுபொருளையும் தாண்டி வெளிப்படுகின்றன.

சமூக பொறுப்புணர்வோடு , பிறருக்கென எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல்  நேரம் செலவழிப்பவர்களையும் காண்பது மிக மிக அரிதாகிவிட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இச்சூழலிலும் பாவண்ணன் போன்றோர் மனிதமும் , அன்பும் , நெகிழ்வுமாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பதே பெரும் ஆசுவாசமளிக்கிறது.

நக்கலும் , நையாண்டியும் , வலிந்து வரவழைக்கப்பட்ட நகைச்சுவையும் இல்லாத அனுபவ கட்டுரைகளை நான் படித்து பல காலங்கள் ஆயிற்று. இவை எதுவுமே இக்கட்டுரைகளில் இல்லை என்பது எனக்கு பேருவகை அளித்தது.

இக்கட்டுரை தொகுப்பை வாசித்து முடித்தவுடன் ஒரு நெருங்கிய நண்பரிடம் நீண்ட நேரம் உரையாடிய நிறைவு. விடை பெறும்போது பிரிய மனதே இல்லாமல், குலுக்கிய கைகளை விடாமல் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் , அவர்களின் பிரியம் உங்களை நெகிழச் செய்தால், இந்த கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும்.