எழுத்து

காணாமல் போன சுருட்டு – நித்யாஹரி சிறுகதை

எனக்கு அறிமுகமான முதல் பேயின் பெயர் பாண்டிச்செல்வி. அவள் தெருமுக்கில் இருந்த வீட்டில் வசித்தவள். சிறு வயதிலேயே  தற்கொலை செய்து கொண்டதால் அவள் பேயாக உலவுவதாகவும் , பூட்டியிருக்கும் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டு இரவில் பார்ப்பவர்களிடம் எல்லாம் தண்ணீர் கேட்டு வருகிறாள் என்றும் பல கதைகள் உலாவின.

நாங்கள் நான்காம் வகுப்பில் இருந்தபோது எங்களுடன் படித்த தேவி பாம்பு கடித்து இறந்து போனாள். அதற்கு பின் எங்கள் வகுப்பின் மூலையில் ஸ் ..ஸ் .. என்று பாம்பின் சத்தம் கேட்பதாகவும் சில சமயம் கால்களில் ஏதோ நெளிவது போல இருப்பதாகவும் கடைசி பெஞ்ச் பிள்ளைகள் கூறியது கேட்டு பெஞ்ச் மேலே சம்மணமிட்டபடியே  பகலெல்லாம் அமர்ந்திருந்தோம்.

சில பேய்கள் இரவு காட்சி முடிந்து வருபவர்களிடம் டபுள்ஸ் கேக்குமாம். ஆலமரத்தடியில் செல்லும்போது கீழே குனிந்து எதுவும் எடுக்க கூடாது, பொடனியில் பேய் அடித்துவிடும் என்ற கதையை உண்மையென்று பல காலம் நம்பினேன். பாட்டி வீட்டிற்கு ஜாம கோடாங்கி ஒருவன் வந்து நடுநிசியில் குறி சொல்லுவான். பகலில் வந்து காசு வாங்கும்போது அவன் கூறும் பேய் கதைகள் எல்லாம் அதிபயங்கரமாக  இருக்கும். மொட்டை கிணறு, பழைய காரை வீடு, பள்ளியின் டாய்லட் மூலை  என்று பேய் வசிக்க ஊருக்குள் தனியாக இடமிருந்தது.

அப்போது எங்களுக்கு பதினோரு வயதிருக்கும். நான் ,பிரபு மற்றும் யாமினி மூவரும்  ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வந்தோம். வழக்கமாக பள்ளிக்கு குதிரை வண்டியில் சென்று வருவோம். ஜல் ஜல் என்று அதன் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் மணிகள் ஓசை எழுப்ப, டொக் டொக் என்று அதன் கால் குளம்பிகளின் ஓசை தெறிக்க லேசான ஆட்டத்துடனும் மிதமான வேகத்துடனும்  சாலையில் பயணித்து பள்ளி சென்று வருவோம். சில சமயங்களில் குதிரை பாரம் இழுக்க முடியாமல் திணறி ரோட்டோரமாக அவ்வப்போது உட்கார்ந்து விடும். அப்படியான சந்தர்ப்பங்களில் கீழே இறங்கி நாங்கள் விளையாட ஆரம்பித்துவிடுவோம். குதிரை வண்டிக்கார அண்ணன் அதற்கு தண்ணீர் கொடுத்து எழுப்பி எங்களை அழைக்கும் வரை விளையாடியபடி இருப்போம்.

அப்படி ஒரு நாள் மாலை வீடு திரும்பும்போது குதிரை ரோட்டில் அமர்ந்துகொண்டது. அங்கிருந்து வீடு வெறும் அரை  மைல் தூரம் மட்டுமே என்பதால், இறங்கி நடந்துவிடலாம் என்று நாங்கள் வண்டியிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பிக்க ,  சரக் சரக்கென்று காலணிகளை  தரையில் தேய்த்தபடி  வினீத்தின்  பாட்டி எதிரே நடந்து வந்துகொண்டிருந்தார். எங்கள் தெருவில் தான் அவரும் வசிக்கிறார்.எங்களை பார்த்ததும் மைய்யமாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு எங்களை கடந்து சென்றார்.மறுநாள் மாலை வீடு திரும்பும் போதும்  குதிரை மக்கர் செய்தது , வண்டியை விட்டு நாங்கள் இறங்கினோம் ,எதிரே வினீத் பாட்டி சரக் சரக்கென்ற சப்தத்துடன் எங்களை கடந்து போனார், அதே மைய்யமான புன்னகை. மறுநாளும் இதே கதை குதிரை ரோட்டில் அமர்ந்தது,இறங்கினோம்,எதிரே வினீத் பாட்டி,சரக் சரக் சத்தம்,புன்னகை.

அதற்கு மறுநாள் ஞாயிற்று கிழமை. நாங்கள்  திப்புவின் வீட்டு  வராந்தாவில் அமர்ந்து பரமபதம் விளையாடி கொண்டிருந்தோம். விளையாட்டில் பிரபுவின் அக்கா ப்ரீத்தியும், திப்புவும் எங்களுடன் இணைந்துகொண்டார்கள். அவர்கள் இருவரும்  எங்களை விட மூன்று வருடம் பெரிய பிள்ளைகள். நாங்கள் ஐவரும் “சீக்ரட் ஃபைவ்” கேங் என்று கூறிக்கொண்டு வெயிலே பரிதாபப்படும் அளவிற்கு சுற்றி திரிவோம். பல துப்பு துலக்கும் வேலைகளை செயல் படுத்துவது என்பது தான் சீக்ரெட் ஃபைவ் கேங்கின் குறிக்கோள். ஆனால் அன்று வரை சீக்ரெட் பைவ்வின் செயல்பாடுகள் என்ன என்பது எங்களுக்கே சீக்ரெட்டாக இருந்தது என்பது தான் உண்மை.

திப்பு வீட்டு தொலைக்காட்சியில் ஏதோ  ஒரு பேய் படம் ஓடிக்கொண்டிருந்தது. அது ஒரு ஹிந்தி  படம். அதில் வந்த பேய் ஒரு அலங்கார  பிரியயையாக இருந்தது. கதாநாயகியின் வித விதமான ஆடைகளை  அணிந்து அழகு பார்க்கும், நடு ராத்திரியில் எல்லாம் அடுப்பங்கரைக்கு சென்று சமைத்து சாப்பிடும். நீண்ட கூந்தலுடன் வந்து அது சாப்பிடும்  காட்சி திரையில் ஓடிக்கொண்டிருந்தது.

“பேய்  சாப்பிடுமா??” என்றாள்  யாமினி

“உயிரோட இருந்தப்போ சாப்பாட்டுக்காக ஏங்கியிருக்கும். அந்த ஆசைய இப்படி நிறைவேத்துது போல” என்றாள் பிரீத்தி.

” ஜஸ்ட் எ மிஸ்ஸு ரெண்டு விழுந்திருந்தா பாம்பு கடி வாங்கிருப்ப, தப்பிச்சுட்ட ” என்று பிரபு பரமபத காயினை நகர்த்த, சரக்கு சரக்கென்று ரோட்டில் யாரோ நடந்து போகும் சப்தம் தெளிவாக கேட்டது.

“இது வினீத்தோட பாட்டி தான” என்று நிமிர்ந்து வெளியே பார்த்தான் திப்பு

“அவங்களே தான்” என்று நிமிர்ந்து பார்க்காமலே ஆமோதித்தாள் ப்ரீத்தி

“அடிக்கடி இந்த நேரத்துக்கு இவங்க மட்டும் இந்த பக்கமா போறாங்க. எங்கன்னு தான் தெரியல ” என்றான் திப்பு

“ஆமா நானும் பார்த்திருக்கேன் ”

“நானும் பார்த்திருக்கேன் ”

“நானும் பார்த்திருக்கேன் ”

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அந்த பார்வையில் அப்படி அவங்க எங்க தான் போறாங்கன்னு போய் பார்த்தா என்ன என்கிற கேள்வி இருந்தது. எங்கள் சீக்ரட் ஃபைவ்விற்கு முதல் வேலை வந்துவிட்டது என்ற உற்சாகத்துடன் எழுந்து  மாடிப்படிக்கட்டில் ஏறி நாங்கள்  பால்கனிக்கு போய் பார்க்கையில் வினீத்பாட்டி தெரு எல்லை அருகே சென்றுகொண்டிருந்தார்.

யாரையும் சட்டை பண்ணாத சாவகாசமான நடை அவருடையது. அங்கே இருக்கும் ஒரு அரசமரத்தை கடந்து எங்கள் பார்வையை விட்டு அவர் அகன்றதும் நாங்கள் வேகமாக  மாடிப்படி ஏறி மொட்டை மாடிக்கு சென்று பார்த்தோம்.அரச மரத்தை தாண்டி இருக்கும் ரோட்டை கடந்து சரிவில் இறங்கி அடர்ந்து இருக்கும் சீமை கருவேல புதர்களுக்குள்  நடந்து மறைந்தார்.

‘நாம அங்கேயே போய் பார்த்தால் என்ன?’ என்று அனைவருக்கும்  தோன்றவே அவசரமாக படியிறங்கி,வீட்டை விட்டு வெளியேறி, ரோட்டில் இறங்கி  வேகமாக ஓட ஆரம்பித்தோம். எங்கள் தெருவை தாண்டி, அதற்கு அடுத்திருக்கும் அரச மரத்தையும் தாண்டி அந்த சாலை வரை சென்ற நாங்கள் சட்டென நின்றோம். அதை கடந்து இதுவரை நாங்கள் யாரும் சென்றதில்லை. அந்த சீமை கருவேல முள் செடிகளுக்குள் இறங்கி நடக்க தயக்கமாக இருந்தது.

“இதுவரைக்கும் இதை தாண்டி யாரவது போயிருக்கீங்களா?”

“ம்ஹூம் ”

“இல்ல”

“நஹி ”

“லேது”

அனைவரும் சில நொடிகள் யோசித்தோம் .

திப்பு  தான் துணிந்து இறங்கினான். அவனுக்கு பாட்டி எங்கே போனார் என்பதை விடவும் ப்ரீத்தியின் முன் சாகசம் நிகழ்த்துவதே நோக்கமாக இருந்தது.அதன் பிறகு பிரபு இறங்கி நான்கு அடி  எடுத்து நடந்துவிட்டு பின்னால் திரும்பி தயங்கி நிற்கும் எங்களை பார்க்கவும் துணிந்து நாங்களும் குதித்தோம். அந்த ஒத்தையடி பாதையை மிகவும் ஜாக்கிரதையாக கடக்க வேண்டியிருந்தது. சற்று பிசகினாலும் முட்கள் கிழிக்க காத்திருந்தன.

ஒருவழியாக அந்த முட்ச்செடிகளை கடந்து செல்லவும் அது ஒரு பெரிய வெட்ட வெளியாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பாட்டியை காணவில்லை ஆனால் பசுமையான அந்த காட்சி கண்களை நிறைத்தது. வலது பக்கம் சற்று தூரத்தில் இருப்பது  ரயில் பாதை,அந்த பக்கம் சென்றிருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை என்பதால் இடது பக்கம் தான் சென்றிருப்பார் என்ற யூகத்தில் நடக்க ஆரம்பித்தோம். தூரத்தில் கொஞ்சம் மரங்களும் ஒரு சின்ன மண்டபமும் இருந்தது . இப்படி ஒரு இடம் ஊர் எல்லையில் இருப்பதை அப்போது தான் நாங்கள் பார்க்கிறோம். அந்த மண்டபத்தை நோக்கி நாங்கள்  நடக்க ஆரம்பித்தோம். வழியில் ஒரு சின்ன வறண்ட ஓடை குறுக்கிட்டது .அதில் இறங்கி மேடேற முற்படும்போது  அந்த ஓடையின் சிறு பள்ளத்தில் ஒரு அண்ணாவும் அக்காவும் எதிரெதிரே அமர்ந்து ஏதோ பேசி கொண்டிருந்தார்கள். நாங்கள் மேடேறி  செல்ல ஆரம்பித்தோம். திப்பு மட்டும் அந்த இடத்தை பார்த்து வைத்துக்கொண்டதுபோல இரு முறை திரும்பி பார்த்துவிட்டு நடந்தான்.நாங்கள் அந்த மண்டபத்தை நெருங்கியதும் பார்வையைசுழலவிட்டோம்அங்கும் வினீத்ப்பாட்டி இருப்பதாக தெரியவில்லை. மண்டபத்திற்கு பின்னே ஒரு சாலை இருந்தது. நாங்கள் மண்டபத்தின் அருகே செல்ல செல்ல எங்களை சுற்றி ஒரு நெடி படர்வதை நுகர முடிந்தது.

புருவத்தை சுருக்கி ‘இது என்ன’ என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள திப்பு மட்டும் அதை இழுத்து சுவாசித்து “இங்க யாரோ இப்போ சுருட்டு குடித்து” என்று அவன் கூறி கொண்டிருக்கும் போதே ஒரு மரத்தின் பின்னாலிருந்து  எதிர்பட்டார் வினீத் பாட்டி.

திடீரென்று ஒரு மரத்தின் பின்னாலிருந்து அவர் தோன்றவும் பக்கென்றது எங்களுக்கு. எங்களை அங்கே சற்றும் எதிர்பார்க்காததால் திக்கென்றிருக்க வேண்டும் அவருக்கு.

இரு நொடி அப்படியே அசைவற்று நாங்கள் பார்க்க அவர் சட்டென சுதாரித்த்து தன் கையிலிருந்த சுருட்டை வாயில் வைத்து இழுத்து புகையை வெளியே விட்டார்.ஒரு பெண் அதுவும் ஒரு வயதான பாட்டி புகைக்கும் காட்சி வினோதமாக இருக்கவே நாங்கள் அவரை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவர் ஓரக்கண்ணால் எங்களை பார்த்தபடியே அவசரமாக புகைத்து முடித்து விட்டு அந்த மிஞ்சி போன சுருட்டை காலில் போட்டு தேய்த்து விட்டு எங்களை நோக்கி வந்தார். அதே சரக் சரக் சப்தம்.அனால் அந்த புன்னகையில் வித்தியாசம் தெரிந்தது.

“என்ன பிள்ளேளா இந்த பாட்டி சுருட்டு குடிக்கிறாளேனு தெகச்சு போயி நிக்கிறீங்களா ?? இப்படி உட்காருங்க” என்று அந்த சிறு மண்டபத்தில் போய் அமர்ந்துகொண்டார்.

நாங்கள்  எதுவும் பேசாமல் அவர் எதிரே போய் அமர்ந்தோம்.

” அது…நான் பொறந்து வளந்தது  கேரளாவுல ஒரு மலை கிராமம். எப்போவுமே சிலு சிலுனு இருக்கிற குளிர்  பிரதேசம். ” என்றவாறே வாயை சேலை தலைப்பால் அழுந்த துடைத்தபடி தொடர்ந்தார்.

“அப்போ நாங்க தேயிலை பறிக்க காலைலயே கிளம்பி மலை ஏறி போவோம். குளிர் உடலை நடுக்கும். எல்லாருக்கும் ஒரு சுருட்டு குடுப்பாங்க. குடிச்சா அப்படியே இதமா இருக்கும். அப்பறம் தான் வேலையே ஆரம்பிப்போம்,ஆரம்பிக்கவே முடியும். அப்படி வந்தது தான் இந்த பழக்கம். அப்படியே பழகிருச்சு. இப்போவும் விட முடியாம தொடர்ந்துகிட்டிருக்கு என்றவாறே கையில் இருந்த சுருட்டு பாக்கெட்டை எடுத்து ஒரு கவரில் வைத்து இடுப்பில் சொருகிகொண்டார்.

“அதுக்கு ஏன் இவ்ளோ தூரம் வர்றீங்க பாட்டி ?”

“அது… நான் சுருட்டு பிடிக்கிறது யாருக்கும் பிடிக்காது. நான் தான் இதை விட முடியாம தினம் இங்க வந்து ஒன்னு சாப்ட்டு போவேன் இதுல இன்னொரு விஷயமும் இருக்கு” என்றவர் முகத்தில் ஒரு பூரிப்புடன் கூடிய சிரிப்பு வந்து மறைந்தது.

அவர் ஏதோ சுவாரஸ்யமான பிளாஷ் பேக் சொல்ல போகிறார் என்று அதை கேட்கும் ஆர்வத்தில் கண்கள் விரிய அவரை பார்த்துக்கொண்டிருந்தோம்.

“அப்போ எனக்கு பதினெட்டு வயசிருக்கும். வயசுல நான் அவளோ அழகா இருப்பேன். இப்போவும் தானே” என்று  கேட்டுவிட்டு பலமாக காரை பற்கள் தெரிய சிரித்துக்கொண்டார் .

ஆனால் எவ்வளவு முயன்றும் அவர் சின்ன வயசில் எவ்வளவு அழகாக இருந்திருப்பார் என்று எங்களால் யூகிக்க முடியவில்லை.

“அப்போ எனக்கு மனசு முழுக்க அவுக தான். அவருக்கும் நான்னா அவளோ இஷ்டம். ஆனா லவ்வு கிவ்வுனு எதுவும் சொல்லிக்கலாம் இல்ல.தினம் ஒன்னா தான் எல்லாரும் மலை தோட்டத்துக்கு போய் திரும்புவோம். தினம் எவ்ளோ பேசினாலும் எங்களுக்கு தீரவே தீராது. எப்போவும் கல கலனு ஏதாவது பேசிட்டே இருப்பார். நான் அமைதியா அத ரசிச்சுட்டு இருப்பேன். மலைக்கு போயிட்டு சாயங்காலம் திரும்புறப்போ ஒரு சின்ன சுனை ஒன்னு இருக்கும். அது ஒரு டிசம்பர் மாசம் நல்ல குளிர் காலம் ,அன்னைக்கு சுனை பக்கத்துல உட்கார்ந்து ரெண்டு பேரும் சுருட்டு பிடிச்சுட்டே கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தோம்.”

நாங்கள் அந்த காட்சியை கற்பனை செய்து பார்த்துக்கொண்டோம்.சிரமப்பட்டு சிரிப்பை அடக்கி கொண்டு அவர் பேசுவதை கவனித்து கொண்டிருந்தோம்.

“அப்படி ஒரு நாள் எங்களுக்கு நடுவுல ஒரு சுருட்டு  பாக்கெட்டை பிரிச்சு வச்சுட்டு  பேசிட்டிருந்தோம். மொத்தம் அஞ்சு இருக்கும் ஒரு பாக்கெட்ல. முதல்ல ஆளுக்கு ஒன்னா எடுத்து பிடிச்சோம். அப்பறம் கொஞ்ச நேரத்துல

“குமுதூ ….குமுது குட்டி ”

“ம்ம் ”

“ரொம்ப குளிருதுல அப்படியே கொஞ்சம் அனவா இதமா”னு ஆரம்பிச்சாரு

“அனவா இதமா? ”

“இல்ல.. அப்படி ஏதும் கிடைச்சா நல்லாருக்கும்ல” அப்படினு அவரு சாடையா என்ன கேட்குறார்னு புரிஞ்சு புரியாத மாதிரி “அனவாதானே” னு பாக்கெட்ல இருந்து ஒரு  சுருட்ட எடுத்து அவர்  வாயில வச்சுவிட்டேன்.

காதல் ப்ராதாபத்துல ரெண்டு பேரும் ஒரே காற்றை தான் சுவாசிச்சுட்டு இருக்கோம்ங்கிற நெனப்பே பறக்கிற மாதிரி இருந்துச்சு.

அப்பறம் நானும் ஒன்னு எடுத்து அவரோட சுருட்டுலயே  பத்த வச்சுக்கிட்டேன்.

இப்போ அவரு என் வாயில இருக்குற சுருட்ட தனக்கு கொடுக்கனும்னு கேட்குறாரு. நான் வீம்புக்குனே இன்னொன்னு பாக்கி இருக்குல்ல அத எடுத்துக்கோனு பாக்கெட்டை  பாக்குறேன் வெறும் பாக்கெட் தான் இருக்கு மிச்சம் இருந்த ஒன்ன காணோம்.

இப்போதான மூனு  இருந்துச்சு உனக்கொன்னு எனக்கொன்னு போக பாக்கி ஒன்னு இருக்கனுமேன்னு நான் அவங்கள குழப்பமா பார்க்கவும் அவரு அப்ப தான் சுத்தி முத்தி பார்க்கிறாரு, அப்பறம் வானத்தை பார்க்கிறாரு. அப்போதான் கவனிக்கிறோம் நல்லா இருட்ட ஆரம்பிச்சிருச்சு அன்னைக்கு அமாவாசை வேற, எங்க ரெண்டு பேர் மனசுலயும் இப்போ இருக்கிறது ஒரே நெனப்பு தான்,”

சிறிய இடைவெளி விட்டார். நாங்கள் இமைக்க மறந்து அவரையே பார்த்து கொண்டிருந்தோம்.

“அது  சுருட்டு பேய். அதுவா தான் இருக்கனும்னு ரெண்டு பேருக்குமே பட்டுச்சு. ரெண்டு பேரும் எதுவும் பேசிக்காம அந்த இடத்தை விட்டு கிளம்பினோம். வேக வேகமா ரோட்டுக்கு வந்ததும் தான் நிம்மதியாச்சு.

சின்ன வயசுல குளிர் தாங்காம செத்து போனவங்க தான் இப்படி சுருட்டுக்கு ஆசைப்பட்டு பேயா சுத்துறாங்கன்னு எங்க ஊரு பக்கம் கதை சொல்வாங்க. நிறைய பேருக்கு இப்படி அனுபவமும் இருந்திருக்கு.

அதுக்கு அப்பறம் இருட்டிறதுக்கு முன்னாடியே சுனையை விட்டு கிளம்பி வீட்டுக்கு திரும்பிட்டிருந்தோம். அப்ப தான் எங்க அப்பா எனக்கு பக்கத்து ஊர்ல ஒரு மாப்பிள்ளையை பார்த்தாரு. இந்த விசயத்த என்கிட்டயே சொல்லாம வச்சிருந்திருக்காரு.

ஒருநாள் நாங்க வேலைய முடிச்சுட்டு மலையை விட்டு இறங்கிட்டு இருக்கோம். எங்க அப்பா பார்த்த அந்த மாப்பிள்ளை  யாருக்கும் தெரியாம என்ன பார்க்கனும்னு சொல்லி விசாரிச்சு மலைக்கு வந்துட்டான்.

நீதான் குமுதவல்லியா??நான் யாருன்னு தெரியுதா?ன்னான்.

நான் முழிக்கவும், நாந்தான் உன்னைய கட்டிக்க போற மாப்பிள்ளை. உங்க அப்பா சொல்லலையா?னு கேட்டான், எனக்கு திக்குன்னுச்சு.

நீங்க யாருன்னே எனக்கு தெரியாதே வழிய விடுங்கனு விலகி நடக்கிறேன்.

அம்மாடி இவ்ளோ நீளமா  முடி வச்சுருக்கியே உன்னுது தானா  இல்ல சவுரி முடியானு என் முடிய பிடிச்சு இழுத்துட்டான்

முடில இருந்து கைய எடுன்னு அவன் கைய நான் தட்டிவிட சரியா இவுக அவன ஓங்கி ஒரு அரை விடவும் அவன் அப்படியே தடுமாறி கீழ விழுந்துட்டான்.

அவன் சுதாரிச்சு எந்திரிக்கங்குள்ள இன்னும் ரெண்டு அடி போட்டு, குமுதாவை நாந்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன், நீ வந்த வழிய பார்த்து போயிடுறது நல்லதுன்னாரு.

அவன்  எந்திரிச்சு, அடுத்த மாசம் எனக்கும்,அவளுக்கும் தான் கல்யாணம் நடக்க போகுது அவங்க அப்பா வாக்கு குடுத்துட்டாரு பாக்குறியானு சொல்ல ரெண்டு பேருக்கும் சண்டை பெருசாயிருச்சு. ஆட்கள்  சேர்ந்துட்டாங்க. எல்லாரும் வேடிக்கை பார்க்க அவனை அடி வெளுத்துட்டாரு, அவன் பொழச்சா போதும்னு  ஓடிட்டான்.”

இதை கூறும்போது பாட்டி முகத்தில் அப்படி ஒரு பெருமித சிரிப்பு.அந்த சிரிப்புடன் கூடிய முகத்தை பார்க்கும்போது சின்ன வயசில் அவர் அழகாகத்தான்  தான் இருந்திருக்க வேண்டும் என்று அப்போது தோன்றியது.

“அன்னைக்கு தான் முடிவு பண்ணேன் கட்டுனா இவரை மாதிரி ஒரு வீரனத்தான் கட்டனும்னு .அப்பறம்  பிடிவாதமா நின்னு, எங்கப்பாவை சம்மதிக்க வச்சு அடுத்த மாசமே நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணத்துக்கு அப்பறமும் அந்த சுனைக்கு அடிக்கடி போய் சுருட்டு பிடிச்சுட்டு, பிடிச்சதை சாப்பிட்டுட்டு மணிக்கணக்கா பேசிட்டு வருவோம். இப்போ அவரில்லேனாலும் இந்த சுருட்டு பிடிக்கிறப்போ எல்லாம் அவர் கூட இருக்கமாதிரி மனசு லேசாயிடும். இதெல்லாம் அனுபவிக்காம நூறு வருஷம் வாழ்ந்து என்ன பிரயோசனம் சொல்லு” என்று கூறி சிரித்தார் பாட்டி.

இப்போது பாட்டி எங்கள் மனதுக்கு நெருக்கமானவராக மாறிப்போனார்.

“என்ன பிள்ளேலா கதை நல்லா இருந்துச்சா? நீங்களும் இப்படி ஒரு வீரன தேர்ந்தெடுத்து கட்டுங்க” என்று அவர் கூற திப்பு ஒரகண்ணால் ப்ரீத்தியை பார்த்துக்கொண்டான்.

சரியாக அந்த பக்கமாக பாட்டியை தேடிக்கொண்டு வண்டியில் வினீத் அப்பாவும் வந்து சேர்ந்தார்.

“ஆஸ்ப்பித்திரி போகனும்னு சொல்லிட்டு இங்க என்ன பண்றம்மா ” என்று அவர் கேட்டதும்

பாட்டிக்கு சட்டென்று ஒரு பதட்டம் ஒட்டிக்கொண்டது. அவர் இடுப்பிலிருந்த சுருட்டை எடுத்து திப்புவின் கையில் அவசரமாக திணித்துவிட்டு கிளம்பி போய் வண்டியில் அமர்ந்துகொண்டார்.

“ஆமா  இத்தனை பேரு இங்க என்ன பண்றீங்க?” என்று வினீத் அப்பா எங்களை பார்த்து கேட்க நாங்கள் என்ன கூறுவதென்று தெரியாமல் திரு திருவென்று விழித்தோம்.

“நான் தான் இவங்களுக்கு கதை சொல்றேன்னு கூட்டிட்டு வந்தேன்” என்று பாட்டி கூறிவிட்டு “எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க கண்ணுகளா” என்று டாடா காட்டிவிட்டு ஆஸ்ப்பித்திரிக்கு கிளம்பி போனார். அவர் சென்றதும் தான் வீட்டுக்கு சொல்லாமல்  இவ்ளோ நேரம் இங்கிருந்தது உரைத்தது.

“ஐயோ கண்டிப்பா எங்க வீட்ல தேட ஆரம்பிச்சிருப்பாங்க வாங்க ” என்று நான் கிளம்ப

“இந்தா இதை நீயே வினீத் பாட்டிகிட்ட குடுத்துரு” என்று திப்பு அவன் கையிலிருந்த சுருட்டை என்னிடம்  திணித்தான்.

“ஐயோ நான் இதை வச்சு என்ன பண்றது? இந்தா பிடி” என்று நான் யாமினியின் கையில் தர

“எனக்கு வேணாம்பா”  என்று அவள்  பிரபுவிடம் தர, அவன் “எங்க வீட்ல இதை பார்த்தாங்கன்னா அவளோதான்” என்று திப்புவிடமே தந்தான்.

“சரி இந்த  இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்புவோம்” என்று ப்ரீத்தி சொல்லவும். ஆமா அத  முதல்ல செய்வோம் என்று நாங்கள் ஐவரும் நகர்ந்து வேக வேகமாக நடக்க ஆரம்பித்தோம்.

அந்த ஓடையை கடக்கும் போது மறக்காமல் அந்த பள்ளத்தை அனைவருமே பார்த்தோம். இப்போது அந்த அண்ணாவும் அக்காவும் அருகருகே அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.

அந்த சீமை கருவேல மரங்கள் அருகே வரும்போது திப்பு தான் கேட்டான் “ஆமா இப்போ யாருகிட்ட சுருட்டு இருக்கு? மறக்காம வினீத் பாட்டிகிட்ட குடுத்துருங்க ”

“உன்கிட்ட தான இருக்கு” என்றதும் சட்டென்று நின்றான்.

கையை விரித்து “இல்லையே நான் பிரபுகிட்ட கொடுத்துட்டேன்”

“அடப்பாவி நாந்தான் உன்கிட்ட குடுத்தேன் நீ திரும்ப தரல”

“என்கிட்டே இல்ல”

“என்கிட்டயும் இல்ல”

“என்கிட்டயும் இல்ல”

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

“அங்கேயே கீழ போட்டுட்டு வந்துட்டோமா? திரும்ப  அந்த மண்டபத்துக்கு போய் பார்த்திருவோம், அவங்க காதல் சின்னத்தை அவங்ககிட்டயே குடுத்துருவோம்” என்று ப்ரீத்தி புறப்பட்டாள். அனைவரும்  மண்டபத்திற்கு ஓடினோம். இப்போதும் அந்த ஓடையை தாண்டும்போது மறக்காமல் அந்த பள்ளத்தை  பார்த்தோம்.இப்போது அந்த அண்ணன் அந்த அக்காவை தோளோடு சேர்த்துப்பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.

நாங்கள் மண்டபத்திற்கு சென்று தேட ஆரம்பித்தோம். பாட்டி புறப்பட்ட இடத்தில் தான் அது கீழே விழுந்திருக்க வேண்டும் என்று துழாவ ஒன்றும் சிக்கவில்லை. அது ஒரு சின்ன இடம் ஐவர் தேடியும் அந்த சுருட்டு பாக்கெட் கிடைக்கவே இல்லை.

“ஹே திப்பு நீ தான வச்சுருக்க?”

“என்னாது நானா??” என்று தன்  பாக்கெட்டை வெளியே இழுத்து காண்பித்தான். ஒன்றும் இல்லை.

பிரபுவிடமும் இல்லை.  நானும் ப்ரீத்தியும்,யாமினியும் ஒளித்துவைக்க வாய்ப்பில்லை. அப்போ எங்கு போனது என்று சிந்தித்த நொடி கிட்டத்தட்ட எல்லாருடைய முகமும் ஓரே நேரத்தில் கலவரமானது.

“அப்போ அந்த சுருட்டு பேய் ” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்த பிரபுவின்  வாயை பொத்தினாள் ப்ரீத்தி

“டேய் ஏண்டா நீ வேற பீதியை கெளப்பிகிட்டு” என்று அவள் வானத்தை பார்க்க ஆரம்பித்தாள் அப்போதுதான் உணர்கிறோம் இருட்ட ஆரம்பித்துவிட்டது. வானத்தில் நிலாவும் காணோம்.எங்கிருந்தோ நிஜமாகவே காற்றில் ஒரு சுருட்டின் மணம் பரவியதை அனைவரும் உணர்ந்தோம்.

வாங்க போய்டலாம் என்று திப்பு தான் முதலில் ஓட ஆரம்பித்தான்.

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று ப்ரீத்தி கத்தவும் முன்னால் ஓடிய திப்பு திரும்பி வந்து அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு “எல்லாரும் வாங்க சீக்கிரம்” என்று ஓட ஆரம்பித்தான்.

எல்லாரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக ஓட சிறிது தூரத்திலேயே  யாமினி தொம்மென்று கால் இடறி விழுந்தாள் . அவளை தூக்கப்போகும் போது குனிந்தால் பொடனியில் அடிக்கும் பேயின் ஞாபகம் வர குனியாமல் வானத்தை நிமிர்ந்து பார்த்தபடியே அவளை தூக்கிவிட்டு மீண்டும் வேகமெடுத்து அந்த பதட்டத்திலும் ,பீதியிலும் ஓடையில் திடுமென்று குதித்து ஓட பள்ளத்திற்குள்  அந்த அக்காவின் மிக அருகில் முகம் வைத்து பேசி கொண்டிருந்த அண்ணன்  பதறி போய் விலகி என்னமோ ஏதோ என்று இருவரும் எழுந்து கொண்டார்கள்.நாங்கள் மேடேறி சீமை கருவேல மரங்களை பொருட்படுத்தாமல் ஊடே புகுந்து ஓடிய ஓட்டம் நாங்கள் இதுவரை எங்கள் வரலாற்றில் ஓடாத ஓட்டம். பேய்த்தனமான ஓட்டம் ச்சை வெறித்தனமான ஓட்டம்.முட் புதரினூடே ஓடும் போது நன்றாக இருட்டிவிட்டதால்  பதட்டம் இன்னும் அதிகரித்தது.

முட்களின் கீறல்களை எல்லாம் பொருட்படுத்தாமல் ஓடிப்போய் ரோட்டில் தான் நின்றோம். ஊருக்குள் வந்து ஆட்களை பார்த்ததும் தான்  கொஞ்சம் நிம்மதி வந்தது.

மூச்சிரைத்தது, பேச்சு குழறியது,நா வறண்டு போனது. இயல்பாய் இயங்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

“சுருட்டு பேய் வேலையா தான் இருக்குமோ” என்றான் திப்பு

சில நொடிகள் கழித்து “எனக்கென்னமோ…” என்று இழுத்தான் பிரபு

“என்னமோ…என்ன டா முழுசா சொல்லு”

“இல்ல எனக்கென்னமோ அந்த சுருட்டு பேயே ….”

“சுருட்டு பேயே???.. ..சொல்ல வந்ததை முழுசா சொல்லுடா ”

அடி வயிறு என்னமோ செய்தது.

” இல்ல…எத்தனை வருசமா நமக்கு வினீத் பாட்டிய தெரியும். என்னைக்காவது அவங்க இவ்ளோ கல கலனு  பேசி பார்த்திருக்கோமா? அப்புறம் அவங்க பேசுறப்போ அவங்க கண்ண கவனிச்சீங்களா அப்படியே ஒளிருச்சு. அவங்கள பார்த்து மெரண்டு போய் தான் குதிரையும் மக்கர் பண்ணி உட்கார்ந்திருக்கும்னு தோணுது” என்று அவன் கூறவும் எங்கள் அனைவருக்கும் இதய துடிப்பு எகிறி அடித்தது.

அவன் சொல்லவும் தான் யோசித்தோம் உண்மையில் வினீத் பாட்டி இவ்வளவு கலகலப்பான ஆள் கிடையாது.

“அதுவுமில்லாம எங்கயாவது பாட்டி சின்ன பசங்களுக்கு உக்காந்து லவ் ஸ்டோரி சொல்வாங்களா?”

பிரபு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக எங்களுக்கு திகில் கூடி கொண்டே இருந்தது.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல அவங்க சுருட்டு குடிச்சதும்  பழைய நெனப்புல நம்மகிட்ட மனசு விட்டு பேசிருக்காங்க அவளோதான். “

எனக்கு பாட்டி கதை கேட்டப்போ இருந்தே ஒரு டவுட். என் கூட வாங்க என்று ஓட ஆரம்பித்தான் பிரபு. நாங்கள் அனைவரும் மூச்சிரைக்க மீண்டும் தொடர்ந்து ஓடினோம்.வேகமெடுத்து ஓடியவன் வினீத் வீட்டிற்கு சென்று தான் நின்றான்.

எதற்கு ஒரு கூட்டமே இந்த இரவு வேளையில் இப்படி இங்கே வந்திருக்கிறது என எதிர்பார்க்காத பார்வையில் வரவேற்ற வினீத்திடம் பிரபு கேட்டான் “ஹே வினீத் உங்க பாட்டி பேரு என்ன டா? ”

“அமுதவல்லி”.

நேர்ச்சை – பானுமதி சிறுகதை

சிவன் கோயிலை ஒட்டி அதன் வடக்கே அந்தக் குளம் இருந்தது. நாற்புறமும் படிக்கட்டுகள் சீராக அமைக்கப் பட்டிருந்தன. நடுவில் நீராழி மண்டபம் காணப்பட்டது. மெல்லிய அலைகள், காற்றுக்குத் தன்னை ஒப்புவித்த இரகசியங்களைச் சொல்லின. குளத்தின் கீழ் படிக்கட்டில் கூட சப்பணமிட்டு அமரலாம் போலிருந்தது. பெரிய குளம். நீர் பளிங்கு போல் தெளிவாகத் தெரிந்ததில் வானம் ஒரு கடலென அதில் இறங்கி வந்ததைப் போலத் தோன்றியது. வட மேற்கில் குளத்தை ஒட்டிய பெரும் திண்ணை போன்ற அமைப்பில் அரச மரத்தின் கீழ் காலத்தின் சாட்சியாக பிள்ளையார் ப்ரும்மாண்டமாக அமர்ந்திருந்தார். இருபது வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்தவற்றைத்தான் இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் அருகில் முணுக்முணுக்கென்று ஒரு தீபம் எரிந்து கொண்டிருந்தது. சுடரின் திசையைத் திருப்பி அதை அலைக்கழியாமல் செய்துவிட்டு ஒரு பெண் அவர் முன்னே கைகளைக் கூப்பி நின்றாள்-என்ன வேண்டுதலோ, முகம் நெகிழ்ந்து இறைஞ்சிக் கொண்டிருந்தது.

குளத்து நீரில் அந்த முகம் எழும்பி வந்தது; இவளைப் போலவே உடைந்து அழக் கூடுமென அச்சம் தந்த முகம். அரிய நாச்சி அம்மனின் கரு விழிகள் உறுத்துப் பார்த்திருக்க நான் நிலை கொள்ளாமல் தவித்த அந்த நாள். அம்மன் சின்னாளப் பட்டில் செம்மஞ்சள் நிறத்தில் புடவை அணிந்திருந்தாள்; நெற்றியில் படியும் கருங்குழற் கற்றையை சிறிதே காட்டி முடியை முற்றும் மறைத்திருந்த அந்தக் கிரீடம். அம்மன் அடியாளும் முடியற்றுத் தானிருந்தாள். அந்தத் தலையை மறைத்தது அவளது சேலை முந்தானை. அம்மனின் முகவாய்க்குழிவும், அவளின் கொங்கைகளிடையே வளைந்து இறங்கிய ஆரமும், இடை மேகலையும், வலது கரத்தில் ஏந்திய சூலமும், இடது கை சுட்டிய திருப்பாதமும்… என் கண்கள் அம்மனின் கணுக்காலையே பார்த்தன. வலக்காலை இடது தொடையில் வைத்து அமர்ந்திருந்த அந்தக் கோலத்தில் நான் நட்சத்திரக் குறி கொண்ட அந்தக் கணுக்காலையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவள் காவி நிறத்தில் சேலையும், வெள்ளை நிறத்தில் இரவிக்கையும் அணிந்திருந்தாள். பின் கொசுவம் வைத்து கிராமத்துப் பெண்களைப் போல் சேலை கட்டியிருந்தாள். முண்டனம் செய்த தலை, அதில் சேலைத் தலைப்பையே முண்டாசு போல சுற்றியிருந்தாள். கடைசல் பிடித்த தேகம், சராசரியை விட அதிக உயரம், கைகள் கால் முட்டியைத் தொட்டன. நகைகள் எதுவும் அணியவில்லை, கழுத்தில் மட்டும் ஸ்படிக மணி மாலை இருந்தது அவளது வலது கணுக்காலிலும் அதே நட்சத்திரக் குறி.

வில்வம், கொன்றை, நந்தியாவட்டை, நாகலிங்க மரங்கள் கோயில் வளாகத்தில் காணப்பட்டன. இப்போது நான் உட்கார்ந்திருக்கும் குளத்திற்குத் தெற்கேதான் இந்த அம்மன் கோயில். நான் அரிய நாச்சி அம்மனை ஏறெடுத்தும் பார்க்க முடியாமல் தத்தளித்துக் கொண்டு இங்கே உட்கார்ந்திருக்கிறேன். சியாமா இன்னமும் அங்கேதான் இருக்கிறாள். சியாமாவின் பிடிவாதம் தெரிந்த ஒன்றுதான் எனக்கு.

நாகஸ்வர ஒலி சிவன் கோயிலிலிருந்து வந்தது. பளபளவென்ற செப்புக் குடங்களில் குளத்தில் நீர் சேந்த வருகிறார்கள். நீர் நிரப்பும் சமயத்தில் ருத்ரம் சொல்லப்பட்டது; நிரம்பிய குடங்கள் கோயிலை நோக்கிச் செல்கையில் அப்பர் பாடலான ‘யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது’ என்ற பாடலை ஓதுவார் பாடுகையில் விதிர்த்துப் போனேன். சுவடே தெரியாமல் தான் நான் அதைச் செய்தேன்; கண்ணீர் ததும்பும் அவள் முகம் என்னிடத்தில் அதைத் தான் கேட்டது. அந்த நேரம் நான் அம்மனை நினைக்கவில்லை, இவர்களின் மரபை, தொன்மத்தை எதையும்…அந்தப் பசுங்குடில், மண் மெழுகிய தரை, மண் விளக்கு, மண் சட்டிகள், மண் கூஜாக்கள், மண்ணாலே திண்டமைத்துச் சமைத்த படுக்கை என்னை வேறொரு உலகிற்குக் கூட்டிப் போயிற்று.

நான் ஒரு தனி ஆய்வாளன். ஊர்களைச் சுற்றுவதில் தான் என் இருப்பையே உணர்வேன். ஒவ்வொரு இடமாகப் போய் அவர்களிடம் இருக்கும் வாழ்வியல் முறைகள், அவர்கள் கொண்டாடும் தெய்வங்கள் மற்றும் பண்டிகைகள், அவர்களிடம் சொல்வதற்கு மீதமுள்ள கதைகள் எனக்குப் பிடித்தமானவை. நீங்கள் கூட படித்திருக்கலாம்- ‘சஞ்சாரி’ என்ற பெயரில் நான் எழுதும் கட்டுரைகளை. என்னது-படித்ததில்லையா? நிஜங்கள் பிடிக்காது போலிருக்கிறது உங்களுக்கு. நான் சுவடிகள் படிப்பேன். அப்படித்தான் கிராமமும் இல்லாது நகரமுமில்லாது இருக்கும் இந்த ஊருக்கு ராகவன் சொல்ல வந்தேன். அவன் என் அண்ணன். நான் பிறப்பதற்கு முன் எங்கள் குடும்பம் இங்கே வசித்ததாம். அங்கே வந்த போதே ஏதோ பரபரப்பாக உணர்ந்தேன். என் உள் மனம் ஓடு ஓடு என்றது. இல்லை, என்னால் முடியவில்லை. நான் இருபது நாட்கள் தங்கினேன். சியாமா பிறந்த அன்று இரவில் அவளைக் கடத்தி ராகவனிடம் கொடுத்து ஜபல்பூருக்கு அனுப்பி வைத்தவன் நான்.

திரும்பவும் மேளச்சத்தம் கேட்டது. ‘சக்கனி ராஜ’ பாடலை ஆரம்பித்தார் அவர். ஆம், நல்ல பாதை இருக்க சந்து பொந்துகளில் அலையும் மனதை மாற்று இராமா என்று இறைஞ்சுகிறார் தியாகையர் இதில். ஆம், அவள் அப்படித்தான் கேட்டாள். அந்த மண் அறையின் பின் பாகத்தில் இரு பிரிவாகப் பிரிந்த நந்தவனம் பூக்களால் செழித்து வாசனையால் அழைத்தது. வளர்பிறையின் பதினான்காம் நாள் நிலவு வானில் பூரித்திருந்தாள். வெள்ளிக் கிரணங்கள் செடி, கொடி, பூக்களின் மேல் இருள் ஒளியென தவழும் காற்றில் மாயம் காட்டின. அர்த்தஜாம பூஜைக்காக அடித்த கோயில் மணி ரீங்கரித்துக் கொண்டு சுனாதமாகக் கேட்டது. நீண்ட பளபளப்பான வாலுள்ள பறைவைகள் இரண்டு கிளையிலிருந்து எழுந்து தாவிப் பறந்து சிறு நடனமிட்டு கூட்டுக்குத் திரும்பின. கொடி சம்பங்கி எங்கோ மறைந்திருக்கிறது தன் வாசத்தை மட்டும் என் நாசிக்கு அனுப்பி விட்டு. நான் இரவுப் பறவை. மூக்குத்திகள் மினுக்கும் வானம், இன்று நிலவின் ஒளியில் சற்று மங்கல்தான். ஒலிகள் அடங்கிய இந்தச் சூழல் மனிதர்களிடம் நிறையப் பேசுகிறது. அந்த மண் குடிலைத் தவிர ஆலய வளாகத்தில் மின் விளக்குகள் இருந்தன. அந்த நந்தவனத்தை ஒட்டி அமைந்திருந்த பெரிய அறையில் பிரிவு வாரியாக அடுக்கப்பட்டிருந்த ஏடுகளைப் படித்துக் கொண்டிருந்தவன் நிலாவில் நனைய சற்று வெளியில் வந்தேன். அதன் முகப்பில் அவளை எதிர்பார்க்கவில்லை. அந்தக் கோயிலின் வாழும் அம்மனென நேர்ந்து விடப் பட்டவள் அவள். அம்மனின் தினப்படி அலங்காரம் அவள் பொறுப்பு. மாலைகட்டுவது, சந்தனம் அரைப்பது, காலை, மதியம், மாலை, இரவு என்று நாலு வேளை பூஜையின் போதும் சங்கு ஊத வேண்டும்; அம்மனுக்கான நிவேதனங்களை அவள் தான் செய்ய வேண்டும். ஆடிக் கொடை, ஆவணி ஞாயிறு,, புரட்டாசி அஷ்டமி, மார்கழி ஆதிரை, தைப் பூசம் ஆகிய நாட்களில் பரிவட்டம் அவளுக்குத்தான் முதலில் கட்டுவார்கள்.

அந்தக் கோயிலில் அம்மனுக்கு சிலை செய்தவன் எப்படி அப்படி ஒரு நட்சத்திரக் குறியை கணுக்காலில் அமைத்தான் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவளின் முப்பாட்டனாருக்குப் பாட்டனார் கோயில் கட்டி அதில் அரிய நாச்சியை உக்கிர முதல் தெய்வமென வழிபட ஆசைப்பட்டாராம். அவருக்குக் குழந்தைகளில்லை. ‘கருணையும், சாந்தமுமாக உன்னை நினைத்திருந்தேன்; உன் அழகில் ஒரு குறையில்லை;ஆனால், ஏன் பல முறை செதுக்கியும் அந்தக் குறி உன் பாதத்தில்?மூளியான சிலை என்று கோயிலையே கை விட இருந்தேன். ஒரு நாடோடி வந்தார்-“அம்மா வந்திருக்காடா, பரதேசிப் பயலே;கட்றா கோயில.” மறு பேச்சு உண்டா அதுக்கு?’ கோயில் சின்னதாக, நந்தவனம் பெரிதாக முதலில் இருந்திருக்கிறது. இப்போது பிரகாரத்தைப் பெரிதாக்கியிருக்கிறார்கள்; ஆனால் மரங்களை அழிக்கவில்லை.

ஒரு குழந்தைக்காக ஏங்கி ஏங்கி அவர் அம்மனையே சுற்றியிருக்கிறார். அவர் மனைவியோ அவரை இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறாள். அவள் கண்ட கனவைச் சொல்லும் முதல் ஏடு இன்னமும் இங்கிருக்கிறது. “ஆயிரங் கண்ணுடையாள்;கையில் அமுதக் குடமுடையாள்; தாயாக வரம் தந்தேன்; குறியோடு குதலை வரும்;அதை மகிழ்வோடு எனக்குத் தா;பின்னும் பேறுண்டு;பெண் மகவு என் ஆணை” என்றாள்” என்று அந்த அம்மா புன்னகையும், வருத்தமுமாக அழுதிருக்கிறார். முதல் பெண் வலது கணுக்காலின் மேலே நட்சத்திரக் குறியோடு பிறக்க முதல் வருட நிறைவில் அவள் கோயிலுக்கு நேர்ந்து விடப் பட்டிருக்கிறாள். அவளுக்குப் பிறகு பிறந்த இரு ஆண்குழந்தைகளுக்கு அக்குறிகளில்லை. சொல்லி வைத்தது போல் ஒரு தலைமுறை விட்டு மறு தலைமுறையில் முதல் பெண் குழந்தை அப்படித்தான் பிறந்திருக்கிறது. கணக்குப் படிப்பும், ஜோதிடமும், திருமுறைகளும், எழுதுவதும் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. ஒரு கட்டளையென இதைச் செயல்படுத்த வேண்டி ஏடுகளில் பதிவு செய்திருக்கிறார்கள்.

வாசலில் நின்றிருந்த வாழும் அம்மனை நான் வணங்கினேன். கண்களில் நீர் கோர்த்து முத்துச் சரம் போல் கன்னங்களில் ரச மணியாக உருண்டது.

“உன்னிடம் ஒரு உதவி வேண்டும்; அதை இரகசியமாகச் செய்ய வேண்டும். ஒரு அரை மணிக்கு முன்னால் பெண் பிறந்திருக்கிறாள், காலில் அந்தக் குறியோடு; பிள்ளை இன்னும் அழவில்லை; தாய் மயக்கத்தில் இருக்கிறாள். இந்தக் குழந்தையை எங்காவது எடுத்துக்கொண்டு போய்விடு. இந்த மண் சூழ்ந்த வாழ்க்கை என்னோடு போகட்டும். நான் அம்மனின் அடியாள் தான். ஆனால், என் வாழ்க்கையில் அவளுக்குத் தானே முக்கிய இடம். என் இளமை, என் கனவு, என் குடும்பம் என்று எதுவுமே இல்லையே; என் தனிமைகள் இவர்கள் அறியாத ஒன்று. திரும்பத் திரும்ப செய்யும் இதில் ஒரு யந்திரத்தனம் வந்து விட்டது. என்னால் முடிந்தது இவளை உன்னிடத்தில் கொடுப்பதுதான்.”

நான் திகைத்தேன்; இது என்ன விபரீதம்? இவர்களின் குல தர்மப்படி இந்தக் குழந்தை கோயில் சொத்தல்லவா? பிறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு நான் எங்கு போவேன்? நான் அவளுக்குப் பதில் சொல்ல வாயெடுத்தேன். அவள் குழந்தையை என் காலடியில் வைத்தாள். பதறினேன்.

“பயப்படாதே. உன் தகப்பனை எனக்குத் தெரியும். அவர் எனக்குத் தோழனாக இருந்தவர்; அதனாலேயே அவமானப்பட்டு துரத்தப்பட்டவர். உடலை வைத்து கன்னிமையைக் கணிக்கும் இந்த உலகில் நான் இன்னமும் கன்னிதான்; அவர் குரு எனக்கு. போ, எடுத்துக் கொண்டு போ. உன் காரில் எல்லாம் வைத்திருக்கிறேன். உன் அப்பாவின் நல்லொழுக்கத்தின் மீது ஆணை.”

காரில் சிறு பிரம்புத் தொட்டிலில் படுக்கை போட்டு முன்பக்க சீட்டின் அடியில் வைத்திருந்தாள். இரு ஃப்ளாஸ்க்-வென்னீரும், பசும் பாலும்; அதில் சிறு குறிப்பு; குட்டிஃபீடிங் பாட்டில், இங்க் ஃபில்லர், முக்கோண முக்கோணங்களாய் தைத்து அடுக்கப்பட்ட நாப்கின்கள். ஆறு சிறு துண்டங்கள்-நுனியில் முடிச்சிட்டு குழந்தைக்கு அணிவிக்க. மற்றொரு கூடையில் எனக்கான பழங்கள், தண்ணீர். நான் திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே என் பெட்டி, என் குறிப்புகள் உள்ள புத்தகங்கள், என் இதர சாமான்கள் டிக்கியில் ஏறின.

நான் கிராதிக் கம்பிகளுக்கிடையே தூங்கா விளக்கில் அரிய நாச்சியைத் திரும்பிப் பார்த்தேன்; அம்மன் உறுத்துப் பார்ப்பதைப் போல், சூலத்தை ஏந்தி அருகில் வருவது போல், என் உடல் சிலிர்த்தது. இதுவும் அவள் செயல்தான் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

ராகவன், சியாமாவை ஏற்றுக் கொண்டது பெரிதில்லை; அமுதா அந்தக் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள். ஒரு வாரத்திற்குப் பிறகு அவள் காரில் பதுக்கி வைத்திருந்த கடிதத்தை நிதானமாகப் படித்தேன்.

“ஆசிகள். இந்த விண்மீன் குறி எனக்குப் புரியாத ஒன்றுதான். அதில் ஏதோ செய்தி இருக்கலாம் அல்லது இல்லாமலும். இந்த வாழ்வு இதன் மூலம் விதிக்கப்பட்டதைத் தவிர நான் ஒரு செய்தியும் அறியவில்லை. ஆனாலும், இந்த விந்தையை முற்றாகத் தள்ள முடியவில்லை. ஏன் தலைமுறை விட்டு தலைமுறை இப்படிப் பெண் பிறக்க வேண்டும்? ஏன் ஆண் குழந்தைகள் இக்குறியில்லாமல் பிறக்கின்றன? என் முப்பாட்டனாரின் பாட்டானார் மனைவி அம்மனிடம் தன் முதல் பெண்ணை நேர்ந்து விடுவதாக வேண்டிக் கொண்டிருக்கலாம்; அதை அம்மனின் கட்டளையெனச் சொல்வதை வசதியாக உணர்ந்திருக்கலாம். அவள் அம்மன் பெயரைச் சொல்லி இதைச் செய்ததால் அப்படியே தொடரட்டும் என்று அம்மனும் விளையாடிக் கொண்டிருக்கலாம். எதுவாகத்தான் இருக்கட்டுமே.

உனக்கு சில கேள்விகள் இருக்கலாம். அன்று பிறந்த குழந்தைகள் இரண்டு. ஆனால், அந்த இன்னொரு பெண் குழந்தைக்கு நட்சத்திரக் குறியில்லை. உன்னிடம் கொடுத்த குழந்தைக்குத்தான் இருந்தது. யாரும் அருகிலில்லை; இரு குழந்தைகள் பிறந்தது அவர்களின் அம்மாவிற்கே தெரியாது. எனக்கு இது எவ்வளவு வசதி! நீ நன்றாக வளர்த்து அவளை எல்லோரையும் போல் வாழவிடுவாய் என எனக்குத் தெரியும்; நீ என் குருவின் மகன்.

நான் இன்னும் தீவிரமாக அம்மனிடம் பக்தி செய்வேன். என் விழைவுகள் வேறாக இருந்தாலும், நான் அம்மனின் அடியாள் தான். அப்படித்தான் இருக்கவும் முடியும். இனி நட்சத்திரக் குறியோடு பிறப்பவர்களை என்ன செய்வாய் என நீ கேட்கலாம்; அது காலத்தின் கையிலுள்ள பதில். ஆசிகள்.”

அரிய நாச்சி கோயிலிலிருந்து சியாமா குழப்பங்களுடன் வந்தாள்.’ சித்தப்பா, இந்த ஸ்டார் மார்க்’ என்றாள். “நீ பயோ டெக் படிக்கிறாய் கண்டுபிடி” என்றவாறே காரை இயக்கினேன்.

எச்சிலை – சிபி சரவணன் சிறுகதை

வெயில் தன்னை முழு நிர்வாணமாக்கி கொளுத்தியது. இன்ன வெயில் என சொல்ல முடியாத அளவுக்கு மண்டையை சூடாக்கியது பூவரச மர இலைகளுக்கு மத்தியில் நானும்,நாட்டு துரையும் நின்றிருந்தோம், சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் எங்கே போய் ஊர் சுத்தலாம் என யோசித்து கொண்டிருந்தோம்.

நாங்கள் இருவரும் அரசு மாணவர் விடுதியில் தங்கி படிக்கிறோம். பெற்ற அப்பனும்,ஆத்தாளும் இருந்தும் அவர்களின் கையாலாகாத தனத்தால் எங்களுக்கு நேர்ந்த கதி இது.எங்கள் பள்ளியில் பெரும்பாலான மாணவர்கள் வீட்டிலிருந்து வருபவர்கள். அவர்கள் மத்தியில் விடுதி மாணவர்கள் ஆன நாங்கள் அசுத்தமானவர்களாகவே பாவிக்கப்பட்டோம்.

நாட்டு துரைக்கு அம்மா கிடையாது. அவள் தன் பழைய காதலனோடு ஓடிப் போய் விட்டாளாம். அப்பா அவரும் ஒரு குடி பழக்கத்துக்கு அடிமையானவர்.

அவனுக்கு எல்லாமே பாட்டிதான். போன வருடம் இந்த கிழவியும் இவனை விட்டு பிரிந்து விட்டது இதனால் வேறு வழியில்லாது இந்த மாணவர் விடுதியில் சேர்த்திருந்திருக்கிறான்.

இந்த விடுதியை பற்றி சொல்ல வேண்டுமென்றால் சுருக்கமாக சீர்திருத்தப்பள்ளி எனலாம் . பழைய காலத்து பங்களா ஒன்றை விலைக்கு வாங்கி சுண்ணாம்பு அடித்து அங்கே எங்களை கைதிகளாக வளர்த்தார்கள். கட்டபொம்மனை போல கருத்த மீசையும், பன்றியின் உடலை ஒத்த உடல்வாகுடைய ராமர் தான் எங்கள் சமையல்காரர். சமையல்காரர் மட்டுமல்ல! வார்டன் ,பெற்றோர், சர்வாதிகாரி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

விடுதியில் மொத்தம் 50 பேர் படித்தோம் .அதில் 40 பேருக்கு தாயோ தந்தையோ யாராவது ஒருவர் இல்லாமல் இருப்பர். அவர்களின் நான் பாக்கியசாலி என சொல்லலாம். சரியாக பத்து வயசு இருக்கும் என நினைக்கிறேன்.அம்மா என்னை ஒரு இரும்பு பெட்டியோடு இங்கு வந்து சேர்ந்தார்.

எனது பெற்றோருக்கு ஊர் முழுக்க கடன் . கடன்காரர்கள் தொல்லை தாங்காது

மஞ்சள் நோட்டீஸ் விட்டுவிட்டு கேரளாவில் ஒரு ஏலக்காய் தோட்டத்தில் கூலிகளாக கிளம்பினார்கள். என்னை யாரும் கவனித்துக் கொள்ள முடியாது என்பதால் இந்த ஜெயிலில் தள்ளினார்கள். இங்கே படிக்க எந்த வித கட்டணமும் தேவையில்லை. அரசாங்கமே எல்லாம் பார்த்துக் கொள்ளும் என்ற வார்த்தையைக் கேட்டு என் பெற்றோரும் நம்பித்தான் சேர்த்தார்கள்.

” என்னத்தா? என் பிள்ளையை பாத்துகிறாப்புல பாத்துக்கமாட்டனா? இங்க இருக்குற அம்பது பிள்ளைகளும் நான் அப்பேன் மாதிரி தா !! நீ சங்கடப்படாம போத்தா! !

என ஒவ்வொரு முறை சமையல்காரர் எதையாவது ஐஸ் வைத்து பேசி அம்மாவிடம் 500 ரூபாய் வாங்கி விடுவார் .அது மறுநாளே ஒயின்ஷாப் கல்லாப் பெட்டியில் போய் விழுந்துவிடும். இந்த விடுதியில் வந்த புதிதில் அழுதுகொண்டே இருந்த நான்,

இதற்குமேல் இந்த அழுகை என்பது எந்த தீர்வையும் தராது என புரிந்து கொண்டேன்.

வார்டனை பொருத்தவரை என்றாவது ஒரு நாள் வருவார். அரிசி மூட்டைகளை கணக்கு பார்த்துவிட்டு ஜெகா வாங்கிவிடுவார். மற்ற எல்லாத் தேவைகளையும் ராமர் தான் பூர்த்தி செய்வார். செய்வான் என்றால் சரியாக இருக்கும்

தினமும் சோறு என சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதையாவது ஒன்றை போடுவார்கள் ஒவ்வொரு முறையும் சாதம் குவித்த வட்டகையில் குனிந்து சோறு வாங்க முடியாது அவ்வளவு நாற்றமடிக்கும். காவி நிறத்தில் இருக்கும் மட்டமான ரேசன் அரிசி தான் எப்போதும்.

தினமும் காலையில் சட்னி என சொல்லி கொண்டு ஒன்றை ஊற்றுவார்கள்.ஒரு கைப்பிடி அளவு பொரியலையை வைத்து 50 பேருக்கு சட்னி அரைத்தால் எப்படி இருக்கும்? வெறும் தண்ணி தானே வரும்? வாயில் வைத்து திங்க முடியாத அளவு சுத்தமாக ஒப்பாது. நானும் நாட்டு துரையும் சமையல் கட்டிலிருந்து மிளகாய்பொடியை திருடி வைத்து கொண்டு அதை டவுசர் பாக்கெட்டில் போட்டு வைத்து ஒரு வாய் சோறு, ஒரு நக்கு மிளகாய் பொடி என தின்போம். மதியம் பப்பாளி சாம்பார். தொடர்ந்து வாரம் ஐந்து நாளும் பப்பாளிதான் . அந்த மரங்கள் விடுதியை சுற்றி அதிகமிருப்பதால் இந்த ஏற்பாடு. இரவில் ரசம் ராமர் அக்குலை சுரண்டி,சுரண்டி புளியை கரைத்த ரசம்.

இதை பற்றி மேலும் சொன்னால் எனக்கு வாந்தி வந்து விடும் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் சரியான பொருட்களை தான் தரும் ஆனால் இந்த ராமரும் வார்டனும் சேர்ந்து தரமான பொருட்களை எல்லாம் விற்று விட்டு ,மட்டமான பொருட்களை வைத்து எங்களுக்கு சமைத்துப் போடுவார்கள்.

இதை தின்று, தின்று என் நாக்கு கூட என்னிடம் தற்கொலை செய்து கொள்கிறேன் என கெஞ்சியிருக்கிறது. அப்போதெல்லாம் எனக்கு வயிற்றுக்குள் ஏதாவது கற்களைப் போட்டு நிறுத்தி விடலாமா என தோன்றும்.

நாட்டு துரைக்கு தினமும் உணவில் உள்ள புழுக்களை கண்டுபிடிப்பது ஏகப்பிரியம்.

எங்கள் விடுதியில் அவனைப் போல் யாரும் இந்த கலையை அவ்வளவு நேர்த்தியாக செய்ய முடியாது. இப்படி செத்த சோற்றை தின்னும் எங்களுக்கு என்றாவது சில பணக்கார வீட்டு விசேச சோறு வரும். அப்போதெல்லாம் நாக்கில் எச்சில் ஊறும் . அதிலும் கேசரி, பொங்கல் எல்லாம் கிடைத்து விட்டால் ஏக சந்தோஷம். என்றாவது ஒரு நாள் அப்படி சோறு போடுவார்கள். எங்களிடம் அவர்கள் எதிர்பார்ப்பது ஒரு துளி சிரிப்போடு ,வாய்திறந்து சொல்லா முடியாத நன்றி தான்.

அம்மா வருடத்திற்கு இரண்டு முறை வருவாள் அப்படி வரும்போது 50 ரூபாய் தந்து பார்த்து செலவு செய்து கொள் என்பாள். நாட்டுதுரைக்கு அப்படி யாரும் வருவது கிடையாது.ஈவு, இரக்கம் கருணை இவற்றின் மீது நாங்கள் நம்பிக்கையற்று இருந்தோம். ஆனால் எப்போதாவது விழுந்த மழை போல அவை எங்கள் மேல் விழுவதுண்டு.

மேலும் வார இறுதி நாட்களில் இருவரும் வேட்டைக்கு போவோம். வேட்டைக்கு என்றால் முயல் வேட்டைக்கு தான். அப்படி போகும் போது நிறைய களவாணித்தனம் செய்வதுண்டு. தென்னந் தோப்பில் தேங்காய் திருடுவது, மாம்பழம் திருடுவது இப்படி பல திருட்டு வேலை செய்வோம். கொட்டை முந்திரி பழத்தில் சாருக்கு எந்த ஒரு குளிர்பானமும் ஈடு செய்ய முடியாது அவ்வளவு தரமான சுவையாகயிருக்கும். என்றாவது புரோட்டா திங்க வேண்டும் என்ற ஆசை வந்தால் நேராக ஊர் கடைசியில் உள்ள நாட்ராயன் கோயிலுக்குப் போவோம் அங்கே உண்டியல் நிறைய சில்லறைகள் இருக்கும். அதை தலைகீழாக குலுக்கி சில்லறைகளை எடுத்து புரோட்டா வாங்குவோம். கருப்பசாமிக்கு அவ்வப்போது படையல் வைப்பார்கள். அதையும் கூட திருடி விடுவோம். மாதத்தில் இரண்டு முறையாவது கோயிலில் கிடா வெட்டுவார்கள் அன்று போனால் கடைசி பந்தியில் உட்கார்ந்து ஒரு கட்டு கட்டுவோம்.

அன்றைக்கும் அப்படித்தான் போலீஸ்காரன் வீட்டு விருந்து. நிறைய கார் வந்திருந்தது போலீஸ்காரன் மகளுக்கு காது குத்து. வகை வகையாக சமைத்து கொண்டிருந்தார்கள். அன்று சனிக்கிழமை வேறு .வேகமாக எழுந்து வந்து விட்டதால் நேராக முல்லை பெரியாற்றில் போய் குளித்து விட்டு வந்து கோயில் பக்கத்தில் உள்ள பூவரச மர நிழலில் நின்று இருந்தோம்.

எங்களுக்கும் அந்த கோயில் பூசாரிக்கும் சுத்தமாய் ஆகாது. நாங்கள் அந்தப் பக்கமாய் போனாலே அடிப்பார். இதனால் அவர் போன பிறகு போய் சாப்பிடலாமென காத்திருந்தோம். ஆனால் அவர் போவதாயில்லை. போலீஸ்காரர் ஏதாவது பணம் தருவார் என காத்திருந்தார் போலிருக்கிறது.

நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு பக்கத்தில் தான் குப்பை தொட்டி. நிறைய எச்சை இலைகள் குவிந்து கிடந்தன. எச்சில் இலைகளில் இருந்து வந்த கறிக் குழம்பின் மணம் எங்களை ஏதோ செய்தது. அதை எறும்புகள் மொய்த்துக் கொண்டே ஊர்ந்து போனது. வாசத்தை நுகர்ந்து கொண்டே நின்றிருந்த எங்கள் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்தது. என்னை பார்த்த நாட்டு துரை

” இந்த பூசாரி தாயோலி போய் தொலையிரானானு பாரு,வகுறு வேற சொரண்டுதே? ”

” டேய் அவேன் இருக்காண்டா, போன தடவை அடிவாங்கினத மறந்துட்டியா?

” அதுக்கு இவெல்லாம் ஒரு ஆளுன்னு பயந்தா வேலைக்கு ஆகுமா? நம்ம சாப்டா இவனுக்கு ஏன்டா எரியுது?”

” இருடா இப்பதான் சாமி தாத்தா சாப்பிட போறாரு அவர் உள்ளே போனதும் நம்ம போவோம்”

நான் சொல்லி முடிப்பதற்குள் சாமி தாத்தா பந்தியில் போய் உட்கார்ந்தார். உடனே நாட்டு துரை

” நான் போறேன் வந்தா வா ”

என. முன்னாடி ஓடினான். நானும் அவனை தொடர்ந்து போனேன் கோயில் மண்டப வாசலில் போலீஸ்காரர்கள் சிலர் வெத்தலை போட்டு கொண்டு பேசினார்கள். அவர்கள் யாரும் எங்களை கண்டு கொள்வதாய் இல்லை. கோயில் மண்டப வாசலில் நின்றிருந்த அடி குழாயில் கையை கழுவிவிட்டு உள்ளே போனான் அவனுக்கு இருந்த பசியில் என்னை கண்டு கொள்ள வேண்டுமென்று தோன்றவில்லை.

வாசலில் நின்றிருந்த போலீஸ்காரரின் மனைவி

” தம்பி கொஞ்சம் பொறுப்பா இன்னும் பந்தி முடியல, முடிஞ்சதும் கூப்பிடுறேன்” என்றாள்.

இதை கவனித்துக் கொண்டிருந்த பூசாரி நாட்டு நாட்டுதுரையை நோக்கி வேகமாக வந்தார். வெளியே வந்ததும் அவனின் பொடணியில் கை வைத்து வெளியே தள்ளினார். அவர் கையிலிருந்த சோற்று பருக்கை நாட்டுத்துரையின் பொடணியில் அப்பியது. உடனே அந்த அக்கா

” ஏன்ணே !! சின்னப்பயலே போய் அடிக்கிற”

” இல்லமா இவங்க சொன்னா கேக்க மாட்டாங்க! ரெண்டுபேரும் நம்பர் ஒன்னு பிராடு பயலுக, இப்படிச் செஞ்சாத்தான் அடங்கு வாங்க”

என பூசாரி சொன்னதும் அந்த அக்கா எங்களை ஒரு புழுவைப் போல பார்த்தாள். அப்போது எனக்கு உடம்பெல்லாம் ஏதோ மலைவண்டு கொட்டியது போல இருந்தது. பிறகு நாட்டு துரையும் ,நானும் மீண்டும் அந்த பூவரச மரத்தடியில் நின்றோம். கடுப்பான நாட்டுத்துரை

” இந்த கிழட்டு பூசாரி சிக்கட்டும். ஒருநாள் இல்லனா ஒரு அடி கொடுக்கத் தான் போறேன்.”

என்றான். நான் அவனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு கோயிலுக்குள் போய் பார்க்கலாம் என நடந்தேன். அங்கே போனதும் இலையில் படையல் வைத்து இருந்தார்கள். கருப்புசாமியின் முன்னே தேங்காய், வாழைப்பழம் , இப்படி எல்லா ஐட்டமும் இருந்தது .இலையிலிருந்த சோறை ஒரு பிளாஸ்டிக் பையில் அள்ளி போட்டேன். பிறகு வாழைப் பழம்,தேங்காய்,கறி இப்படி எல்லாவற்றையும் அள்ளியாயிற்று.

இனிமேல் அவர்களிடம் போய் நிற்க வேண்டியது இல்லை. உடனே போய் சாப்பிடலாம் என எனக்கு தோன்றியது யாருக்கும் தெரியாமல் கோவிலின் பின்புறமாக வேகமாக ஓடினேன். அங்கே நாட்டு துரையை காணவில்லை . குப்பைத் தொட்டிகள் சத்தம் கேட்டது. அருகில் போய் பார்த்தால் உள்ளே கிடந்த எச்சை சோற்றை தின்று கொண்டிருந்தான். என்னை பார்த்ததும் கண்டுகொள்ளாமல் அவன் அப்படி செய்தது எனக்கு மேலும் வெறியேறியது. பளார் என அவனை அறைந்தேன்.

“த்தா எந்திரிடா ? ” என மிரட்டியதும் பயந்து எழுந்து என் பின்னே வந்தான்.

நான் கையில் இருந்த பையை தூக்கி எறிந்து விட்டு வேகமாக நடக்க அவனும் என்னை தொடர்ந்தான்.

மீண்டும் நாங்கள் ஆற்றுக்கு போனோம். அங்கே போய் கொஞ்ச நேரம் குளித்தோம். நாட்டுத்துரை எதுவும் என்னிடம் பேசவில்லை. பின்பு கொஞ்ச நேரத்தில் மீன்கள் பாதி செத்தும்,சாகாமலும் நீர்ப்பரப்பில் நீந்தியடி வந்தது.

” யாரோ மீன்பிடிக்க வெடி வைக்கிறார்கள்” என்றான் அவன்.

“டேய் அது வெடியில்லடா, மருந்த கலக்கி விடுவாங்கடா ”

மீன்கள் அரை உசுராய் நிந்தியது. நான் அவற்றை பிடிக்க முயன்ற போது கையிலிருந்து நழுவி ஓடியது.

” சரி,துண்டை எடு மீன பிடிப்போம்” என முடிவெடுத்து மீன்பிடிக்க ஆயத்தமானோம். சில பெரிய மீன்களும் சிக்கியது. பிறகு இருவரும் மேலே வந்து ஆற்றோரத்தில் தீ மூட்டி மூங்கில் குச்சியில் ஒவ்வொரு மீனாக சொருகி,எங்கள் டவுசரில் ஒட்டி இருந்த உப்பு, மிளகாயை தடவி காய்ந்த தென்னஞ் சோகைகளை வைத்து தீ மூட்டி மீனை சுட்டோம். நாட்டுதுரை மீனை சுவைத்து கொண்டே என்னை பார்த்தான். எனக்கு லேசாக சிரிக்க வேண்டும் போலிருந்தது .அதற்கு முன்னமே அவன் கையில் வைத்திருந்த வறுத்த மீன்களை பார்த்து குறும்புன்னகை செய்தான்.

பிறகு மறுபடியும் ஆற்றில் கொஞ்ச நேரம் குளித்து விட்டு ஜட்டியை தலையில் மாட்டி கொண்டு வயல் வரப்புகளின் ஊடே ஓடினோம். திடிரென நான் வழுக்கு வரப்புக்குள் விழுந்தேன். என் உடலில் ஆங்காங்கே சகதிகள். நாட்டுதுரை சிரித்து கொண்டே கை கொடுத்து தூக்கி விட்டான். என் தோலில் கைபோட்டு என்னை மெதுவாக கூட்டிப் போகும் அவன் சட்டையிலும் சகதிகள் ஒட்டியிருந்தது. ஆனால் அதை பற்றி அவன் முகம் அவ்வளவாய் அலட்டிக் கொள்வதாயில்லை.

நிறைவு – உஷாதீபன் சிறுகதை

முப்பத்தஞ்சும் முப்பத்தஞ்சும் எழுபது ரூபா பஸ்காரனுக்குக் கொடுத்து சாமி கும்பிட வந்திருக்குகோயிலுக்குள்ளே, அதுவும் சந்நிதியிலே, இது என்ன கஞ்சத்தனம்? சற்றே குரலைத் தாழ்த்தி, மெதுவாகத்தான் கேட்டான் ரமணன். ஆனாலும் இவன் பேசியது அங்கு நிற்பவர்களின் காதில் விழுந்திருக்கும் போலும்? வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தவர்களின் கவனம் மூலஸ்தானத்தில் இருந்த சாமியிடமிருந்து இங்கே இடம் பெயர்ந்தது.

பின்னால் நிற்பவர்கள் ம்ம்….நகருங்கநகருங்கஎன்று நெருக்கியடிக்க, வரிசையிலிருந்து விலகினான் இவன். முன்னால் நின்று கொண்டிருந்த சாரதாவும், இவனோடு சேர்ந்து நகர்ந்தாள். ஸ்பெஷல் என்ட்ரன்ஸ பத்து ரூபாபத்து ரூபாஎன்று ஆங்கிலத்தில் கூவி, சந்நிதிக்கு வெளியே ஒரு மேஜை நாற்காலி போட்டு அமர்ந்து, வரும் பக்தர்களை இழுத்துக் கொண்டிருந்தார்கள் சிலர். ஒரு போர்டைத் தொங்கவிட்டுக்கொண்டு அமர வேண்டியதுதானே? ஏனிப்படிக் கூவி விற்க வேண்டும் என்று தோன்றியது. .

இலவச தரிசனத்திற்கும், சிறப்பு வழிபாடு இடத்திற்கும் இடைப்பட்ட தூரம் மிகக் குறைவாக இருந்தது. நாலைந்து அடி முன்னால் சென்று கும்பிட வேண்டுமானால் அதற்குப் பத்து ரூபாயா? இதுவே போதுமே என்று பலரும் நினைக்கக் கூடும் என்று தோன்றியது.

அர்ச்சகர் ஒவ்வொருவராக அருகில் வந்து பக்தர்களால் கொடுக்கப்படும் சூடம், பூப்பந்து, பூமாலை, அர்ச்சனைத்தட்டு என்று சேகரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் பயபக்தியோடு பெயர், நட்சத்திரம், என்று கேட்பதை உடனடியாகவும், யோசித்து யோசித்தும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவற்றை அங்கேயே சேர்த்து, மந்திரங்களோடு கோர்த்து, முணுமுணுத்தவாறே நகர்ந்தார் அர்ச்சகர். சுவாமி சந்நிதியில் அர்ச்சனையை முடித்துவிட்டு, அம்பாள் சந்நிதியில் நுழைந்திருந்தோம் நாங்கள். அங்கே அம்பாளின் திருக்கோலத்தைப் பார்த்தவுடன் மனதுக்குள் கிளர்ந்த பக்தியிலும், அந்தக் காட்சி சொரூபத்தில் தன்னை இழந்த நிலையிலும் சாரதா படபடப்பாய்ச் சொன்னாள்.

ஓடிப்போயி ஒரு அர்ச்சனைச் சீட்டு வாங்கிட்டு வாங்க.. – வெளியே கையைக் காண்பித்தாள். வெறும் அர்ச்சனைச் சீட்டா? – புரியாமல் கேட்டான் இவன். போதும்….மந்திரம் சொல்லிப் பண்ணுவார்ரெண்டு ரூபாதான்வாங்கிட்டு வாங்க.. –பரபரத்தாள் சாரதா.

என்ன சாரதா நீ? வெறும் அர்ச்சனைச் சீட்டை வாங்கிட்டு வரச்சொல்றே? அப்படியே ஒரு அர்ச்சனைத் தட்டும் வாங்கிட்டு வர்றேனே?

வேண்டாம்அதுக்கு வேறே பதினைஞ்சு ரூபா தனியாக் கொடுக்கணும். ஏற்கனவே சுவாமி சந்நிதியிலேதான் அர்ச்சனை பண்ணியாச்சேஅது போதும்.. அதுக்குத்தான் நான் முதல்லயே சொன்னேன்;… இங்கேதான் எல்லாரும் அர்ச்சனை பண்ணுவாங்கன்னுநீதான் அங்கே பண்ணுவோம்னே. எங்கே பண்ணினா என்ன? எல்லாம் சாமிக்குத்தானே? பரவால்லே, போய் அர்ச்சனை டிக்கெட் வாங்கிட்டு வாங்கஅவள் விரைசல் படுத்தியதில் மேலும் அங்கே நிற்க மனமின்றி, வாசலை நோக்கி விரைந்தான் ரமணன்.

சாரதா ஏனிப்படிச் செய்கிறாள்? என்னவோ போலிருந்தது அவள் செய்கை. யாருமே வெறும் அர்ச்சனை டிக்கெட் மட்டும் கொடுத்து அர்ச்சனை செய்யச் சொன்னதாகத் தெரியவில்லை. இல்லாத வழக்கத்தை அவள் உண்டு பண்ணுவது போலிருந்தது. ஏற்றுக் கொள்வார்களா? முடியாது என்றால் இன்னும் கேவலமாயிற்றே? போக,வர பஸ்ஸ_க்கே நூற்றைம்பது நெருக்கி ஆகிறது. அவ்வளவு செலவழித்து ஒரு கோயிலுக்குச் சாமி கும்பிட வரலாம்., அங்கே ஐம்பதோ, நூறோ செலவழித்து நிறைவாகக் கும்பிட்டுச் செல்லக்கூடாதா? அதற்கு ஏன் மனசு சுணங்குகிறது? இதிலென்ன சிக்கனம்? இது சிக்கனமா அல்லது கஞ்சத்தனமா? சுவாமி சந்நிதியில் அர்ச்சனை பண்ணிவிட்டால், அம்பாள் சந்நிதியிலும் அர்ச்சனை பண்ணக் கூடாது என்று உள்ளதா என்ன? ஏதேனும் ஐதீகம் உண்டோ? அதற்கு ஒரு இருபது முப்பது செலவழித்தால் என்ன? குடியா முழுகிவிடும்? மனது நினைக்கிறது. அது நல்ல காரியம் என்று தோன்றுகிறது. பிறகென்ன தயக்கம்? எதைச் செய்தால் மனது நிம்மதிப்படுமோ அதைச் செய்துவிட வேண்டியதுதானே? பக்தியையும் சிக்கனமாகத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நியதி போல் அல்லவா இருக்கிறது இவள் செய்வது? பிறகு ஊருக்குத்திரும்பி சே! தப்புப் பண்ணிட்டோம்அம்பாளுக்கும் ஒரு அர்ச்சனை நிறைவாப் பண்ணியிருக்கலாம்? என்று எண்ணி துக்கப்படவா? இந்த நேரத்தில் சாரதா இப்படிச் சுங்கம் பிடிப்பது சரியில்லை என்றே தோன்றியது இவனுக்கு.

நுழைவாயிலில் இருந்த கடைக்குப்போய் ஒரு அர்ச்சனைத் தட்டு வாங்கினான். அதில் எல்லாம் இருக்கிறதா என்று கவனமாகப் பார்த்துக் கொண்டான். தேங்காயைச் சுண்டிப் பார்த்து டிக்டிக். என்று சத்தம் வருகிறதா என்று சோதனை செய்தான். சரியாக நடுவில் உடைய வேண்டும். இல்லையென்றால் அதுவேறு மனதுக்கு சந்துஷ்டி. காதுக்கு அருகே வைத்து குலுக்கிப் பார்த்தான். உள்ளே தண்ணீர் கலகலத்தது. இந்த மனது சங்கடப் படாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் பழக்கி வைத்திருக்கிறார்கள்? ஆனால் அடிப்படையாக எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறை இருப்பது புலப்பட்டது. ஒரு மாலையையும் வாங்கித் தட்டில் வைத்துக் கொண்டு, கௌன்ட்டருக்கு வந்து அர்ச்சனை டிக்கெட்டை வாங்கி, தட்டில் தேங்காய் அடியில் பாதுகாப்பாய் செருகிக் கொண்டு வேகமாய் உள்ளே நுழைந்தான்.

வாங்கவாங்க..சீக்கிரம்ஏன் இவ்வளவு நேரம்? இவனைப் பார்த்ததும் பரபரத்தாள் சாரதா. அர்ச்சனைத் தட்டை அவளிடம் நீட்டியதும், அவள் முகம் சுருங்கியது போலிருந்தது. வரிசையாய் வாங்கி வந்து கொண்டிருந்த அர்ச்சகரிடம் பயபக்தியோடு நீட்டினாள். அவள் பெயர், என் பெயர், ரெண்டு குழந்தைகளின் பெயர் என்று சொல்ல ஆரம்பித்தாள். :டுத்துஅடுத்துஎன்று எல்லாவற்றையும் கேட்டு, அங்கேயே முணுமுணுத்தவாறே மேலும் சிலரின் தட்டை வாங்கி கழுத்துவரை அடுக்கிக்கொண்டு கர்ப்பக் கிரஹம் நோக்கி விரைந்தார் அர்ச்சகர். கூட்டம் அதிகமாய்த்தான் இருந்தது. இன்னும் பலர் அர்ச்சனை பண்ணக் காத்துக் கொண்டிருந்தார்கள். சாரதாவின் முழுக் கவனமும் நேர் உள்ளே சந்நிதானத்தில் இருந்தது. இந்நேரம் பார்த்து கழுத்துச் சங்கிலியில் எவனும் கட்டிங் போட்டால்கூட அவள் உணரப் போவதில்லை.. கன்னத்தில் மாறி, மாறி டப்பு, டப்பு என்று போட்டுக்கொண்டு, பயபக்தியோடு கும்பிட்டுக் கொண்டிருந்தாள் சாரதா.

அவளையும் அவளின் தீவிரமான முரட்டு பக்தியையும் பார்த்து, ரசித்துக்கொண்டே சந்நிதியை நோக்கிக் கை கூப்பினான் இவன். தீபாராதனை…..தீபாராதனைகும்பிடுங்கஎன்றாள் திடீரென்று இவனைப் பார்த்து. கவனிச்சிட்டுத்தானே இருக்கேன்.. என்றான்.; கூட்டத்தில் பலரும் கவனிக்க அவள் அப்படிக் கூறியதில் சிரிப்புத்தான் வந்தது. கண்மூடிக் கும்பிடலுக்கு இடையே பக்கவாட்டில் நின்ற சாரதாவின் நெற்றியில் கவனம் போனது. அங்கும் இங்குமாக ஒரு சீரின்றி இமைக்கு நடுவிலிருந்து தலை வகிடு ஆரம்பிக்கும் இடம்வரை பல இடங்களில் குங்குமம், சந்தனம், விபூதி என்று அப்பியிருந்தாள் அவள். போதாக்குறைக்கு கையில் வேறு குவித்து மூடிக் கொண்டிருந்தாள். செல்லாத்தாசெல்ல மாரியாத்தா.. என்ற பாட்டு ஞாபகத்துக்கு வந்தது இவனுக்கு. அங்கே தூண்லே மாட்டியிருக்கேகிண்ணம்அதுலே போடுஇப்படிக் குவிச்சு வச்சிட்டு எப்படிக் கும்பிடுவே… – இருக்கட்டும்இருக்கட்டும்இவ்வளவு பக்தியிருக்குநிறையக் கோயில்களுக்குப் போகணும்கும்பிடணும்ங்கிற ஆசையிருக்குஒரு வேளை அதனாலதான் இந்தச் சிக்கனப் புத்தி வருதோ? –மீண்டும் நினைத்துக் கொண்டான். ஆனாலும் வெறும் அர்ச்சனைச் சீட்டை வாங்குங்கள் என்று அவள் சொன்னது ஏனோ பொருத்தமாகத் தெரியவில்லை சூடத் தட்டை ஏந்தியவாறே அர்ச்சகர் வர பல கைகள் தீபத்தை நோக்கி முன்னேறின. நீளும் கரங்களின் வேகத்தைப் பார்த்தால் எங்கே சூடம் அணைந்து போகுமோ என்றிருந்தது. சில்லரைக் காசுகள் தட்டில் விழுந்தன. பின்னாலேயே ஒருவர் தீர்த்தம் கொடுத்துக் கொண்டு வந்தார். அவர் பின்னால் இன்னொருவர் குங்குமமும் பூவும். சட்டென்று இவன் கழுத்தில் ஒரு பூமாலை விழுந்தது. லேசாகப் புன்னகைத்துக் கொண்டே கைகூப்பி ஏற்றுக்கொண்டு மாலை போட்டவரின் கையில் பத்து ரூபாய் நோட்டு ஒன்றைத் திணித்தான் அவர் முகம் மலர்ந்தது. குங்குமம் கொடுத்தவருக்குப் பின்னால் வந்த ஒருவர் அர்ச்சனைக்குக் கொடுத்தவா தட்டை வாங்கிக்குங்கோ.. என்றவாறே டக்கு டக்கென்று உயர்த்தி நீட்டினார். இங்கேஇங்கே.. என்றவாறே தட்டை வாங்கிக்கொண்டனர் பலரும். கூட்டத்தில் உண்மையிலேயே அர்ச்சனைக்குக் கொடுத்தவர்கள் மட்டும்தான் தட்டு வாங்குகிறார்களா என்று தேவையில்லாமல் சந்தேகம் வந்தது இவனுக்கு. சாரதாவும் கைகளை நீட்டினாள். யார் தட்டு யாருக்கு வந்தது என்று ஒரு சந்தேகமும் எழுந்தது. எல்லாமும் ஒன்றுபோல் இருந்தன. எது வந்தால் என்ன?. தனக்கு சரி, அவளுக்கு? அவளைப்போன்றேதானே மற்ற பெண்களும் என்று தோன்றியது. வாங்க போவோம்.. என்றவாறே கண்களில் ஒற்றிக்கொண்டு இவனிடமும் நீட்டினாள் சாரதா. தொட்டுக் கும்பிட்டுக்கொண்டே வெளியே வந்தான்.

அடுத்த கூட்டம் முன்னேறியது இப்போது. கோயிலில் சில இடங்களில் கட்டிட மராமத்துப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. விதானக் கற்கள் ஆட்டம் கண்டிருக்கின்றன என்பதாகச் செய்தி படித்திருந்தான். . புஷ்கரணியில் (தெப்பக்குளம்) உள்ள மண்ணை நீக்கிவிட்டு சிமிண்ட் கான்கிரீட் போட்டதால் கோயில் கட்டடத்தின் அஸ்திவாரம்; ஈரப்பதம் அற்று பாதிக்கப்பட்டது என்பதாகவும் ஒரு செய்தி ஞாபகத்துக்கு வந்தது. அருகேயிருந்த சின்னச் சின்ன சந்நிதிகளைக் கும்பிட்டுவிட்டு வந்து கொண்டிருந்தாள் சாரதா. சாவகாசமாய் வரட்டும் என்று அவள் திருப்தி கருதி ஆசவாசமாய் ஓரிடத்தில் காத்திருந்தான். கொஞ்ச நேரத்தில் சாரதா அங்கங்கே தன்னைச் சுற்றியவாறே வந்து சேரப் புறப்பட்டான்.

அங்கங்கே கோயிலின் பல பகுதிகளில் தூண்களுக்குக் கீழே அமர்ந்துகொண்டு, தேங்காய்களை உடைத்து, சில்லுப்போட்டும், பழத்தை உரித்தும், தொன்னையில் வாங்கிய பிரசாதங்களை ருசித்துக்கொண்டும் பலர் தின்று கொண்டிருந்தார்கள். வாசலுக்கு முன் பாட்டையில் யானை ஒன்று உரித்துப்; போட்ட தென்னை மட்டைகளுக்கு நடுவே நின்று கொண்டு ஆடிக் கொண்டிருந்தது. அதன் உடம்பில் தொங்க விட்டிருந்த வஸ்திரமும், மணியும், அது ஆடுவதனால் எழுந்த மணிச் சப்தமும், கேட்க இனிமையாயிருந்தது. ஒரு குழந்தையைக் கட்டாயமாகத் தூக்கி, அது பயத்தில் கதறக் கதற, அதன் தந்தை, மேலே அமர்ந்திருந்த பாகனிடம் அதைக் கொடுத்துக் கொண்டிருந்தார். குழந்தை மேலும் குரலெடுத்து அழ, அதைப் பார்த்துப் பலரும் சிரித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகளுக்கு சீர் தட்டவே தட்டாதாக்கும்.. –என்று யானை மேல் ஏற்றுவதைக் காட்டிச் சொல்லிக் கொண்டிருந்தது ஒரு பெண். ஒவ்வொன்றாகப் பார்த்தவாறே வந்து கொண்டிருந்தார்கள் இவர்கள். கோயிலுக்கு வந்தா உட்காராமப் போகக் கூடாதுஒரு நல்ல இடமாப் பாருங்கசாரதா சொன்னதுபோல் நல்ல இடம் எது என்று தேடத் துவங்கினான் இவன். அதோ, அங்கே போய் உட்காருவோம். என்றவாறே ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி நடந்தான.;

அப்பாடா.. என்றவாறே ஆசுவாசப்பட்டுக்கொண்டு அமர்ந்தாள் சாரதா. இவன்; அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தது எதற்கு என்பது போல், மேலே விதானத்தில் இருந்த ஓவியங்களையும், சிற்பங்களையும் ஒவ்வொன்றாக ரசித்துக் கொண்டிருந்தான். திடீரென்று கத்தினாள் சாரதா. என்னவோ, ஏதோவென்று பதறிப் போனான் இவன். என்ன? என்ன? என்னாச்சு? என்றான் பதிலுக்குப் பதட்டத்துடன்.உடம்புக்குஏதேனும் உபாதையோ? என்று தோன்றியது. ஐயையோஎன்னங்க இது? என்றாள் அர்ச்சனைத் தட்டைக் காண்பித்து. இவன் ஒன்றும் புரியாமல் பொறுமையின்றி, விஷயத்தைச் சொல்லு என்றான் எரிச்சலுடன். இந்தக் குடுமித் தேங்காயையும், ஒரு பழத்தையும் அர்ச்சகருக்குக் கொடுக்க விட்டுப் போச்சேங்க…? என்றாள் சாரதா. அவள் முகம் துக்கத்தில் சுருங்கியது அட…! இதுக்குத்தான் இப்படிக் கத்தினியா? நான் என்னவோ ஏதோன்னு நினைச்சேன்என்றவாறே தூணில் சாய்ந்தான். சாயாதீங்கஎண்ணைப் பிசுக்கு….ஒட்டிக்கிடும்.. பதறினாள் சாரதா. இவனுக்கு ரொம்பவும் ஆசுவாசமாய் இருந்தது. ஏங்க, ஒண்ணு செய்றீங்களா? சிரமம் பார்க்காம இதைக் கொண்டுபோய் அர்ச்சகர்ட்டக் கொடுத்துட்டு வந்திடறீங்களா? புண்ணியமுண்டுங்கஒரு பழமும், ஒரு மூடித் தேங்காயும் அவருக்குக் கொடுக்கணும். சாஸ்திரமுண்டாக்கும இவனுக்கானால் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. என்ன நினைச்சிட்டிருக்கே நீ? வெளையாடுறியா? நானென்ன சின்னப்பிள்ளைன்னு நினைச்சியா? சும்மா ஓடிட்டிருக்கிறதுக்கு? அவருக்கு தட்சணை பத்து ரூபாய் கொடுத்தாச்சுல்ல, அத்தோட விடுஇதுக்குன்னு ஒரு தரம் என்னால போக முடியாது. அங்கென்ன எடம் காத்தாடவா கிடக்கு? ஒரே இடிபிடி. கூட்டப் புழுக்கத்துல அரை மணி நேரம் நின்னதுல, வேர்த்து விறுவிறுத்து எனக்கு மயக்கமே வந்திடுச்சு. கால் கடுத்துப்போய் அப்பாடான்னு இப்பதான் உட்கார்ந்திருக்கேன். திரும்பவும் போங்கிறியே? இங்கே யாராவது கேட்பாங்க..அவுங்களுக்குக் கொடுஅதுவும் புண்ணியந்தான்… – நிறுத்தாமல் சொல்லிக்கொண்டே போனான் ரமணன். அப்போது சாரதாவின் குரல் மீண்டும் இவனைத் துணுக்குறச் செய்தது. அய்யய்யஇங்க பாருங்களேன்…! என்றவாறே அர்ச்சனைத்தட்டை முன்னே நீட்டினாள் என்ன? என்றவாறே கூர்ந்து பார்த்தான் ரமணன். ஒன்றும் புரிந்தபாடில்லை. இவளுக்கென்று ஏதாவது தோன்றிக்கொண்டே இருக்குமோ? இவள் சென்டிமென்டுக்கு ஒரு அளவேயில்லையா?

நல்லாப் பாருங்க.. என்றாள் மீண்டும். ..எல்லாந்தானே இருக்கு?; பதிலிறுத்தபோது சட்டென்று என்னவோ தோன்றியது. அட, ஆம்மா…!! – என்றான் உடனே. இப்போது எல்லாமும் தெளிவாகத் தெரிந்தன. . நூலில் கட்டிய பத்தியும் சுருட்டிக்கட்டிய வெற்றிலையும், பொதிந்த சூடமும், பொட்டணமிட்ட கற்கண்டும், பழமும், மாலையும், கசங்கிய அர்ச்சனைச் சீட்டோடு வைத்தது வைத்தமேனிக்கு அப்படியே அமிழ்ந்திருந்தன கூடையில். என்னங்க இது? சாரதாவின் குரலில் மெல்லிய சோகம். அப்டியே வந்திருக்கு!…இல்ல? – அவளைப் பார்க்கவே பாவமாய் இருந்தது இவனுக்கு. சரி, விடுகூட்டம் அதிகமானாலே எல்லாமும் நெகிழ்ந்து போறதும், நீர்த்துப் போறதும் சகஜந்தான். சந்நிதிக்குள்ள போயிட்டுத்தானே திரும்பியிருக்குகண்ல ஒத்திக்கோஅவ்வளவுதான். அழுத்தமாய்ச் சொன்னான் ரமணன். இவன் பதிலில் அவளுக்குத் திருப்தி வந்ததா தெரியவில்லை. பக்தியும், அனுஷ்டானங்களும், நியமங்களும் அதைக் கடைப்பிடிப்பவர்களின் மனம் சார்ந்த, அறிவு சார்ந்த படிமங்களாயிற்றே

மலையேற்றம் – வளவ.துரையன் சிறுகதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன் போல கண்ணன் இன்றும் அஞ்சலகம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி விட்டான். கடந்த பத்து நாள்களாகத் தொடர்ந்து நடக்கும் படையெடுப்பு இது. சென்னை இயக்குநர் அலுவலகத்திலிருந்து நெருங்கிய தொடர்புடைய ஒருவர் உத்தரவு போட்டாகிவிட்டது என்று பதினைந்து நாள்களுக்கு முன் தகவல் சொல்லி அனுப்பினார். அதிலிருந்தே இன்றைக்கு வருமோ என்று நாள்தோறும் அவன் சென்று கொண்டிருக்கிறான்.

காலையில் எழுந்திருக்க வேண்டியது. குளித்துச் சிற்றுண்டி முடித்துக் கிளம்பிவிட வேண்டியது. அவன் அம்மா கூட, “ஏண்டா வந்தா கொண்டுவந்து கொடுக்கப் போறாரு; தெனம் போயிட்டு வரணுமா” என்று சொல்லியும் பார்த்து விட்டார். முதல் படைப்பை அச்சில் பார்ப்பது, முதல் முதல் நீச்சல் கற்றுக் கொண்டு தனியே நீச்சல் அடித்துக் குளிப்பது, முதல் முதல் மிதிவண்டியை யார் துணையுமில்லாமல் செலுத்துவது, முதல் முத்தம் இவையெல்லாம் போல முதல் முதல் வேலை கிடைக்கும் உத்தரவைத் தன் கையில் தானே வாங்குவது மிக மகிழ்ச்சி என அவன் நினைத்ததில் தவறொன்றுமில்லை.

அவன் இல்லத்திலிருந்து அஞ்சலகம் நடந்து செல்லும் தொலைவுதான். ஆனால் காதலிக்குக் காத்திருக்கும் காதலனுக்குக் காலம் மிகவும் நீண்டுகொண்டே போவது போலத் தொலைவும் நீள்கிறதே என் எண்ணினான். தமிழ் படித்தவனுக்கு உவமை கூட அதே போக்கில்தானே வரும். அவன் தெருவின் கடைசிக்குப் போய் வலப்புறம் திரும்பினால் ஐநூறு மீட்டர் தொலைவில் ஒரு விநாயகர் கோயில் இருக்கும். அதோடு அத்தெரு முடியும். பின் இடப்பக்கம் திரும்பிச்செல்ல வேண்டும். அத்தெருவின் இறுதியில்தான் அஞ்சலகம் இயங்கி வருகிறது.

இன்றைக்கு என்னவோ இந்த விநாயகரைச் சுற்றிச்செல்ல வேண்டும் எனத் தோன்றியது. சுற்றும்போது, “புள்ளயாரே! இன்னிக்கு உத்தரவு வந்திட்டா நாளைக்கு மூணு சுத்து சுத்தறேன்” என்று வேண்டிக்கொண்டான். பெரும்பாலும் இவனைப் போன்று வேலையில்லாமல் இருப்பவர்கள், சில வணிகர்கள், கடிதம் இன்று கண்டிப்பாய் வரும் எனத் தெரிந்தவர்கள் என்று ஒரு கூட்டம் அஞ்சலகத்தில் எப்போதும் காத்திருக்கும். ஆனால் யாரும் உள்ளே செல்ல மாட்டார்கள். அந்தந்தத் தெருவிற்கு வரும் அஞ்சல்காரர்கள் அஞ்சலகத்திற்கு எதிரில் இருக்கும் வீடுகளின் வராந்தாக்களில் கடிதங்களுடன் வந்து உட்கார்ந்து கொள்வார்கள்.

பெரும்பாலும் தொடர்ந்து வரும் அஞ்சலகப் பணியாளர்கள் அவரவர் தெருவில் உள்ளவர்களை அறிந்திருப்பர். எனவே பதிவுத்தபால், பணவிடை தவிர மீதி உள்ளவற்றை அங்கேயே வந்து கேட்பவர்களிடம் தந்துவிடுவார்கள். இதனால் அவர்களுக்குச் சுமையும் குறையும். இவனைப் பார்த்தவுடனேயே, “கண்ணா, இன்னிக்கு ஒனக்கு வந்திருக்கு” என்று அரசு முத்திரை இடப்பட்ட ஓர் உறையைக் கொடுத்தார். வாங்கிக் கொண்டுவந்தவன் சற்றுத் தள்ளி நின்றுகொண்டு பிரித்தான். உத்தரவுதான் இயக்குனர் அலுவலகத்திலிருந்து வந்திருந்தது. மகிழ்ச்சியால் அவன் உள்ளம் துள்ளிக் குளித்தது. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள பக்கத்தில் யாருமே இல்லையே என எண்ணினான். ஓட்டமும் நடையுமாய் வீட்டிற்குச் சென்றான். நுழையும் போதே, ”அம்மா எனக்கு உத்தரவு வந்தாச்சு” என்றான். “அப்பாடா; இன்னிக்காவது வந்ததே” என்றார் அம்மா. அதற்காகவே காத்திருந்தவர் போலத் தோட்டத்திலிருந்து குளித்துவிட்டு வந்த அப்பா “என்னா ஊர்லப் போட்டிருக்காங்க” என்று கேட்டார்.

”மாதனூர்னு போட்டிருக்கு” அம்மா, ”எங்க இருக்கு அந்த ஊரு” என்று கேட்கக் கண்ணன் “மதுரை மாவட்டமாம்; திருமங்கலம் பக்கத்துல” என்றான். அப்பாவின் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது. அவர் கேட்டார். “நீ படிச்சு முடிச்சு எத்தனை வருஷம் இருக்கும்” “அஞ்சு வருஷம் ஆயிடுச்சுப்பா” ”பாரு கண்ணா; தமிழ் படிச்சு முடிச்சவனுக்குத் தமிழ்நாட்டில வேலை கெடைக்க அஞ்சு வருஷம் ஆயிருக்கு?” “அதுக்கு இவன் என்னா செய்வான்” என்றார் அம்மா.

“ஏன் இவன் கூடத்தான் மைக்கப் புடிச்சுக்கிட்டுக் கத்தினான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழில் படிக்கறவங்களுக்கு மொதல்ல வேலை கொடுப்போம்னு. இல்லையான்னு கேளு” “ஆமாம்பா; அதெல்லாம் தேர்தல் நேரத்துல சொல்றதுதான?” “ஆமாண்டா கண்ணா, நெறவேத்தற மாதிரி சொல்லணும்’ சொன்னவரு கூடப் போய்ச் சேந்துட்டார். இப்ப இந்த ரெண்டு வருஷத்துல என்னா நடந்துச்சு?” கண்ணனுக்கு அரசியல் ஆர்வம் வரக்காரணமே அவன் அப்பாதான்.

கண்ணன் பள்ளியில் படிக்கும்போதே மேடையில் நன்கு பேசப் பழகிவிட்டிருந்தான். அவனுடைய தமிழ் ஆர்வத்தைப் பார்த்துதான் கண்ணனின் அப்பா அவனைத் தமிழ் படிக்கவைத்தார். படிப்பை முடித்தவுடன், “போடா நூலகம் போ! நெறைய எடத்துலப் படிப்பகம் நடத்துறாங்க இல்ல; அங்க வர்ற தெல்லாம் போய்ப் படி. வேலை கெடக்கலேன்னு வீட்லயே இருந்தா சோம்பல்தான் வரும்” என்றார் அவர்.

படிப்பகங்கள் பலவற்றுக்கும் போய் வந்தவன், ”அப்பா அங்க வர்றதெல்லாம் கட்சிங்க இதழ்களா இருக்கு” என்றான். ”இருக்கட்டுமே! அரசியல் செய்தியும் தெரியட்டுமே!” என்றவர், மேலும் “ஒனக்கு எது புடிக்குதோ அந்தக் கட்சியிலச் சேந்தாக்கூட நான் ஒண்ணும் சொல்லமாட்டேன். நல்லபடியா பொழுது போகணும்” என்றார் சிரித்துக் கொண்டே. எதிர்பாராமல் அவனும் ஒரு கட்சியில் சேர்ந்து மேடைகளிலும் பேச ஆரம்பித்தான். என்னென்ன பேச வேண்டுமெனக் கட்சி சொல்லிக் கொடுத்தது.

தேர்தல் மேடைகளில் கட்சியின் வாக்குறுதிகளைக் கண்ணன் அள்ளி வீசினான். அவன் விருப்பப்படி அவன் சேர்ந்த கட்சியே ஆட்சிக்கு வந்தது. ஆனாலும் தேர்தல் பேச்சுகள், வாக்குறுதிகள் என்பது வேறு, அரசாங்க நடைமுறைஎன்பது வேறு என்று பின்னர்தான் அவன் தெரிந்து கொண்டான். தேர்தல் வாக்குறுதிகள் என்பது அந்த நேரத்தில் வாக்குகள் பெறவே என்று அவனுக்குக் கட்சி மேலிடம் உணர்த்த அவன் நொந்து போனான்.

“கண்ணா என்னா ஊருன்னு சொன்ன?” என்று கேட்டார் அம்மா. “அதாம்மா மாதனூரு; ஏம்மா?” ”இல்ல. எங்கியோ கேட்ட பேரா இருக்குதுன்னு பாக்கறேன்” அப்பா உடனே, “ஏண்டா இங்க லால்குடி, இல்லன்னா சமயபுரம் பக்கத்துல எடம் இல்லியாமா?” ”தெரியலப்பா” “ஏன்னா கிட்டக்க இருந்தா வாராவாரம் வரலாம்; இப்ப மாசம் ஒரு தடவைதான் வர முடியும்” அதற்குள் அம்மா, “டேய், ஞாபகம் வந்திருச்சு” என்று கூறிச் சிரித்தாள். அப்பா கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு அவளை வியப்புடன் பார்த்தார். அவரே கேட்டார், ‘எங்க இருக்கு?” “எங்க இருக்குன்னு எனக்குத் தெரியல” “அப்பறம் என்னா” “இல்லீங்க; நாங்கள்ளாம் சின்ன வயசுல ஒரு பாட்டுப் பாடுவோம்” ”எப்பம்மா” “ஒளிஞ்சிக்கற வெளயாட்டு வெளையாடுவோம் இல்ல; அப்பதான்”

அப்பா இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா தொடர்ந்தார். ”அப்ப கண்டுபிடிக்கறவன் செவுத்துப் பக்கம் திரும்பிக்கிட்டுக் கண்ணை மூடிக்கிட்டு, “மாதனுருப் போவலாம்; மலையேறக் கூடாது; ஆதனூருப் போவலாம்; ஆத்துலக் குளிக்கக் கூடாது; போதனூருப் போவலாம்; பொய்சொல்லக் கூடாது; வாதானூருப் போவலாம் வழி கேக்கக் கூடாது”ன்ற பாட்டை மூணுதடவை சொல்லணும். அதுக்குள்ள ஒளிஞ்சிக்கறவங்க எல்லாரும் ஓடிப் போய் மறைஞ்சிக்கணும்” என்று கூறி முடித்தார்.

“அந்த மாதனூர்தானா இது” என்று கேட்டுச் சிரித்தார் அப்பா. “அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க” என்று அம்மாவும் கீழே குனிந்து கொண்டு சிரித்தார். ஒரு சில நாள்களுக்குப் பின் இருவர் முகத்திலும் சிரிப்பு வந்தது குறித்து கண்ணனுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அவன் தந்தைக்கு ஓய்வூதியம் வருவதால் குடும்பம் ஓடுவதில் தடையேதும் இல்லை. அவரும் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர்தாம். இருந்தாலும் தமிழ்க்கல்லூரியில் படித்து அதற்குப் பிறகு ஒரு பயிற்சியும் முடித்து வேலை கிடைக்காமல் கட்சி, இலக்கியம் என்று சுற்றிக் கொண்டிருந்தவனைப் பார்த்து இருவருக்கும் மன ஒரத்தில் வலி எப்பொழுதும் இருந்து கொண்டுதான் இருந்தது.

அப்பா அந்தக் காலத்து ஆள். அதனால் அவர் கண்ணனிடம். “நீ திங்கக்கெழமை வேலையில சேரணும் இல்ல; அதால இங்கேந்து ஞாயித்துக்கெழமை காலையிலேயே கெளம்பிடு. திருச்சி போயி மதுரை வண்டி மாறிப் போய் மாலையிலதான் சேருவ” என்றார். ”சரிப்பா” என்றான் கண்ணன்.

பெரம்பலூரிலிருந்து கிளம்பும்போதே காலை மணி ஒன்பது ஆகிவிட்டது. மதுரை போய்ச்சேரும்போது இரண்டாகி விட்டது. அங்கேயே ஒரு விடுதியில் மதிய உணவை முடித்துக் கொண்டான். உணவுண்ட விடுதியிலும் பேருந்து நிலையத்திலும் விசாரித்ததில் திருமங்கலம் போய்த்தான் போக வேண்டும் என்றார்கள். எனவே திருமங்கலம் செல்லும் வண்டியாகப் பார்த்து ஏறிக் கொண்டான்.

திருமங்கலத்தில் விசாரித்ததில் அங்கிருந்து மாதனூர் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. தெரிந்தது. நடந்துதான் போக வேண்டும். இல்லையெனில் ஆட்டோ வைத்துக் கொண்டு போகலாம். மாலை மணி நான்காகி இருந்தது. நிறுத்தத்தின் பக்கத்திலிருந்த ஒரு தேநீர்க்கடைக்குச் சென்றான். அங்கு தேநீர் குடித்துக் கொண்டிருக்கும்போதே “மாதனூர் எப்படிங்கய்யா போகணும்?” என்று கேட்டான். “இப்படியே ரோட்லயே அரை மைலு போனீங்கன்னா வடக்கே ஒரு மண்சாலை போகும்; இங்கிருந்தே ஆட்டோவுலப் போயிடுங்க” என்று சொல்லியவர். “அதோ அவரு கூட மாதனூருப் போக வழிதான் கேட்டாரு” என்றார்.

கடைக்காரர் காட்டியவர் எழுந்து வந்தார். கண்ணனைப் போலவே தோளில் ஒரு பையும், கையில் ஒரு பெட்டியும் வைத்திருந்தார். கண்ணனும் அவரும் வெளியில் வந்தனர். தன் பெயர் கேசவன் என அறிமுகப்படுத்திக் கொண்டார். இருவரும் பேசிக்கொண்டே ஆட்டோ பிடிக்கச் சற்று நடந்து சென்றனர். கேசவன் மாதனூர் பள்ளியில் கணக்காசிரியராகப் பணியில் சேர வந்திருப்பவர் என்பது தெரிந்தது. ஆட்டோக்காரர் அடிக்கடி மாதனூருக்குச் சவாரி போவார் என்பது அவர் பேச்சில் தெரிந்தது. “தம்பிங்களா! ஒங்களக் கொண்டு போயி ஊர்த்தலைவரு ஊட்ல உடறேன். அவரு பாத்துத் தங்க எடம் சாப்பாடு வசதியெல்லாம் செய்வாரு” என்றார்.

“அங்க ஓட்டலு எல்லாம் இருக்குதில்ல” என்றான் கேசவன். ”அதெல்லாம் கெடையாதுங்க; ரெண்டு டீக்கடை இருக்குங்க, அப்பறம் ஒரு இஸ்திரி போடற கடை; சின்னதா மளிகை, ஷாப் சாமான் எல்லாம் விக்கற பொட்டிக்கடை மூணு இருக்குங்க; அதான்; சுத்தமான கிராமமுங்க; திருமங்கலத்துக்குதான் எல்லாத்துக்கும் வரணும்” கண்ணனும் கேசவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆட்டோ வடக்கே மண்சாலைக்குத் திரும்பியதும் சிறிய மலை ஒன்று தெரிந்தது. “அதோ தெரியுது பாருங்க மலை. அது அடியிலதான் ஊரு இருக்கு” என்றார் ஆட்டோக்காரர்.

ஆட்டோக்காரர் விவரம் சொன்னதும் ஊர்த்தலைவர், “வாங்க தம்பிங்களா” என்று வரவேற்றார். மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. அப்பொழுது ஒருமுறை குளித்திருப்பார் எனத் தெரிந்தது. வயது ஐம்பது இருக்கலாம். தலையில் நிறைய முடிகள்; பின் நோக்கி வாரப்பட்டிருந்தன. மார்பில் புலிநகம் கோர்த்த பவுன் சங்கிலி ஆடியது. சுத்தமான எட்டுமுழ வெள்ளை மல் வேட்டி கட்டி மேலே ஒரு துண்டை போர்த்திக் கொண்டிருந்தார். இரு கைகளின் மணிக்கட்டுகளிலும் பல வண்ணக் கயிறுகள் கட்டிக் கொண்டிருந்தார்.

ஆட்டோக்காரர் சென்றபின் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார். வீடு அந்தக் காலத்து ஓட்டு வீடு. நடுவில் கூடமும் நான்கு பக்கங்களிலும் தாழ்வாரமும் இருந்தன. ஒரு பக்கத் தாழ்வாரத்தில் நிறைய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “ஒக்காருங்கப்பா; இதுல தமிழு யாரு? கணக்கு யாரு” என்று கேட்டதும் இருவருக்கும் வியப்பு ஏற்பட்டது. ”என்னாப்பா ஆச்சரியமா இருக்கா? ரெண்டு நாளு முன்னாலதான் ஹெட்மாஸ்டர் வந்து ரெண்டு பேரை புதுசா போட்டிருக்காங்க; கணக்குக்கு ஒருத்தரு, தமிழுக்கு ஒருத்தருன்னு சொல்லிட்டுப் போனாரு” என்றார்.

உடனே கண்ணன் எழுந்து, ”அப்ப ஐயாவுக்கு நாங்க வர்றது முன்னாடியே தெரிஞ்சிருக்கு” என்றான் சிரித்துக்கொண்டே. அவர் உடனே அவனைப் பார்த்து, ”தம்பி, ஐயான்னு சொல்றதால நீங்கதான் தமிழ் படிச்சவருன்னு நெனக்கறேன். ஒங்க பேரு என்ன?’ ”என் பேரு கண்ணன்” என்றவன் ”இவருதான் கேசவன்; கணக்கு எடுக்க வந்திருக்காரு” என்றான். உடனே அவர் சிரித்துக் கொண்டே, “ஓ! ரெண்டு பேரும் பெருமாளுங்களா? நானும் கோவிந்தராஜுதான்; ஊர்ல கோவிந்தன்னு கூப்பிடுவாங்க” என்றார். பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் மனைவி இருவருக்கும் காப்பி கொண்டுவந்தார். அவரும் ”வாங்க வாங்க ரெண்டு பேரும்” என்று வரவேற்றார்.

காப்பியை ஆற்றிக் கொண்டே, “ஐயா ஒங்க புள்ளங்க….”என்று இழுத்தான் கண்ணன். “ரெண்டு பேருப்பா; ஒருத்தன் கோயம்புத்தூரு; இன்னொருத்தன் திருச்சி. ரெண்டு பேரும் கல்யாணம் ஆயிக் குழந்தை குட்டிகளோட இருக்காங்க; பதினைஞ்சு நாளுக்கொரு தடவை காருல வந்திடுவாங்க” என்றார் கோவிந்தன். “போன வாரம் கூடத் திருவிழாவுக்கு வந்திருந்தாங்க” என்று சொல்லிவிட்டு அவர் மனைவி உள்ளே சென்றார். கோவிந்தன், “சரி, வாங்க ஒங்க வீட்டைப் பாக்கலாம்?” என்று எழுந்தார். “எங்க வீட்டுக்கா?” என்று கேட்டான் கேசவன்.

அவர் வீட்டுக்கு எதிரே இருந்த ஒரு சிறிய வீட்டைத் திறந்தார். அது ஒட்டுப் போட்டுக் கட்டிய மாடி வீடு. ஒரு சமையலறையும், இரு அறைகள் இருந்தன. “கண்ணா! புதுசா வேலைக்கு வந்து சேர்றவங்க தங்கறதுக்குன்னே இதைக் கட்டினேன். பள்ளிக் கூடம் கொண்டுவந்திட்டாப் போதுமா? வந்து வேலை செய்யறவங்க தங்க வசதி செய்யணும்ல? மொதல்ல வர்றவங்க இங்கதான் தங்குவாங்க. அப்பறம் வசதிக்குத் தகுந்தாற்போல மதுரையிலேந்து இல்லன்னா திருமங்கலத்துலேந்து வருவாங்க” என்று சொல்லிக் கொண்டெ தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

தோட்டத்துக் கதவைத் திறந்த உடனே காற்றுப் பிய்த்துக் கொண்டு வந்தது. “அப்பா: காற்று வேகமா வீசுதே” என்றான் கேசவன். “ஆமா பின்னாடியே மலை இருக்குதில்ல; ராத்திரி கூட தூக்கம் வர்ற வரை ஒங்க ரூம்ல இருக்கற கயித்துக் கட்டிலுங்கள வாசல்ல போட்டுப் படுத்துக்கலாம் கொஞ்சநேரத்துல குளிர் வந்துடும்; அப்ப உள்ள போயிடலாம். நானும் வெளியிலதான் கொஞ்சநேரம் படுப்பேன்” என்றார். அவர். அவர் வீட்டின் பின்னால் மலை எழுந்து நின்று அவர்களைப் பார்ப்பது போல இருந்தது.

தோட்டத்தில் கிணறு இருந்தது. கோடியில் கழிப்பறை இருந்தது. அறைகளில் இருந்த மின்விசிறிகளைப் போட்டார். ஒவ்வோர் அறையிலும் கதவு போட்ட அலமாரியும் மேசை நாற்காலிகளும் இருந்தன. ”எல்லாமே சரியாச் செஞ்சிருக்கீங்க” என்றான் கேசவன். ”தம்பி! நாலு வருஷமா போராட்டம் நடத்தித்தான் இதை ஐஸ்கூலாக்கி இருக்கோம். போன வருசம்தான் பத்தாவது வந்தது. பணம் கட்டிப் பத்து வருஷமாயிடுச்சு. அமைச்சர் சிபாரிசெல்லாம் எடுபடல; கடைசியில எல்லாரையும் கூட்டுக்கிட்டுய் போயி திருமங்கலத்துல சாலை மறியல்னு ஒக்காந்துட்டேன். அப்பறம்தான் விடிவுகாலம் பொறந்தது. வற்றவங்க இங்க என்னா வசதின்னு கேக்கக்கூடாதில்ல” என்றார் கோவிந்தன்.

அவ்வப்பொழுது மழை பெய்வதற்கு இவரைப் போல ஊருக்கு ஒருவராவது இருப்பதுதான் காரணமோ என்று நினைத்தான் கண்ணன். “கதவு தொறந்தே இருக்கட்டும் ஊடு புடிச்சிருக்குல்ல” என்று கேட்டார் கோவிந்தன். “புடிச்சிருக்கா? என்னாங்க நீங்க? இந்தக் கிராமத்துல எங்க தங்கறதுன்னு கவலைப்பட்டேன். இது தேவலோகம் போல இருக்கு” என்றான் கேசவன்.

“அப்படியா தம்பி; தேவலோகம் பாத்திருக்கீங்களா” என்று அவர் சிரிக்க கண்ணனும் கேசவனும் கூடச் சேர்ந்து சிரித்தனர். ”ஊர்ல ரெண்டு டீக்கடை இருக்கு; காலையில அங்க போயிக் குடிச்சுங்க; அப்பறம் ஒரு ஊட்ல சொல்லிடறேன்; டிபன் காலைக்கும், ராத்திரிக்கும் வந்திடும். மதியத்துக்குச் சாப்பாடு வந்திடும் ஆனா சைவச் சாப்பாடுதான்; பள்ளிக் கூடம் நம்ம தெருவுக்கு அடுத்த தெருவுதான்” என்று கூறிச்சிரித்தார் கோவிந்தன்.

கண்ணனுக்கும் கேசவனுக்கும் மாதனூர் கிராமம், பள்ளி இரண்டுமே பிடித்து விட்டது. ஆசிரியர்கள் அனைவருமே இவர்களை விட மூத்தவர்கள். எல்லாரும் கோவிந்தன் சொன்னதுபோல மதுரை அல்லது திருமங்கலத்திலிருந்து வந்தனர். பத்து நாள்களில் கண்ணனும் கேசவனும் நெருக்கமாகி விட்டனர். கோவிந்தனும் அவர்களின் குடும்ப விவரங்கள் அறிந்து கொண்டார். அந்த சனி ஞாயிறுகளில் கண்ணனும் கேசவனும் சொந்த ஊருக்குச் சென்று வந்தனர். கேசவனுக்கு சமயபுரம் என்று இருந்தது இருவரும் சேர்ந்து செல்ல வசதியாயிருந்தது.

இப்படியே ஒரு மாதம் ஓடியது. ஒரு நாள் பௌர்ணமி. நிலா பால் போலக் காய்ந்து கொண்டிருந்தது. தூக்கம் வரும் வரை மூவரும் கட்டில்களை நெருக்கமாகப் போட்டுக் கொண்டு அரசியல், சினிமா, சமயம் சார்ந்தவற்றப் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அன்றும் அதுபோலப் பேசிக்கொண்டிருந்தனர். காற்று மெல்லியதாக சில்லென்று வீசிக் கொண்டிருந்தது. கோவிந்தன் வளர்க்கும் நாய் சுற்றிச் சுற்றி வந்து காற்று வரும் திசை நோக்கி முகத்தை வைத்துப் படுத்துக் கொண்டது.

“இன்னும் கொஞ்ச நேரத்துலயே குளிர ஆரம்பிச்சிரும் போல இருக்கு?” என்றான் கேசவன். ”ஆமாம் தம்பி மலைக்காத்துல்ல” என்றார் கோவிந்தன். ”இந்த மலைக்கு என்னாங்க பேரு?” என்று கேட்டான் கண்ணன். “பொதுவா இந்த மலையை மாதனூரு மலைன்னு சொல்வாங்க; ஆனா…..” “ம்…..சொல்லுங்க” ”இந்த ஊரு பெரியவங்க காட்டேரிக் கன்னி மலைன்னு சொல்வாங்க” “ஐயோ; பேரக் கேட்டாலே பயமாயிருக்க” என்றான் கேசவன். “ஆமாங்க; இதுல யாரும் ஏறவே கூடாதா?” என்றான் கண்ணன்.

”ஏன் யாராவது சொன்னாங்களா” “இல்லீங்க; இந்த ஊருன்னு சொன்னதுமே என் அம்மா மாதனுரு போனாலும் மலையேறக் கூடாதுன்னு அவங்க சின்ன வயசில பாடின ஒரு பாட்டைச் சொன்னாங்க” என்று பதில் சொல்லிய கண்ணன் அந்தப் பாட்டை முழுதும் பாடிக் காண்பித்தான். கோவிந்தன் சிரித்தார். ”இப்படி ஒரு பாட்டு இருக்குன்னு இந்த ஊருலக் கூட யாருக்கும் தெரியாது. பரவாயில்லயே; ஒங்க ஊரு வரை வந்திருக்க?” என்றார். ”அதாலதாங்கக் கேட்டேன்” “என்னவோ தெரியலப்பா; மலை மேல ஒரு சாமி இருக்குன்னு சொல்றாங்க” “நீங்க போயிப் பாத்திருக்கீங்களா” என்றான் கேசவன். அவனுக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது என்பது அவன் கேள்வியிலிருந்து தெரிந்தது.

“இல்ல தம்பி, இந்த ஊருல யாரும் சாமி கும்பிடன்னு போக மாட்டாங்க; ஆடு மாடு மேய்க்கறவங்க யாராவது போயிட்டு வந்து சொல்வாங்க அங்க ஒண்ணும் இல்ல. மூணு கல்லுதான் இருக்குன்னு” கண்ணனுக்கு இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. “மேல போக எவ்ளோ நேரம் ஆகுமுங்க” என்றூ கேட்டான். ”மாடு மேய்க்கறவங்க சொன்னதுதான் ஒரு ரெண்டு மணி நேரம் ஆகுமாம்” கேசவன் கேட்டான் “வெளியூர்க்காரங்க ஏறலாம் இல்லியா?” ”போவலாம்; ஆனா அதிகமா யாரும் போனதில்ல; யாராவது ஆராய்ச்சி அது இதுன்னு வந்திட்டுப் போவாங்க; அவங்களும் அங்க ஒண்ணும் இல்லீங்கன்னுதான் சொன்னாங்க”

“ஏண்டா நீ ஏறப் போறியா” என்றான் கண்ணன். “டேய்’ போட்டுப் பேசும் அளவிற்கு இருவருமே நெருக்கமாகி விட்டார்கள். ”ஆமாண்டா; வர்ற சனி ஞாயிறுதான் ஊருக்குப் போறதில்லையே; சும்மா ஏறிட்டு வரலாமே” “நீ சொன்னா சரிதான்; ஏறிட்டு வரலாம்; ஏங்க நீங்க என்னா சொல்றீங்க?” “ஒண்ணும் பயமெல்லாம் இல்ல தம்பி; வெயிலுக்கு முன்னால போயிட்டுத் திரும்பிடுங்க; அடிவாரமே ரெண்டு மைலு இருக்குமாம். கையிலத் தண்ணி பாட்டிலு, பிஸ்கட்டு எல்லாம் கொண்டு போங்க”

“வாங்க வாத்தியாருங்கள்ளாம் எங்கக் கிளம்பிட்டீங்க. தண்ணி பாட்டிலு, பிஸ்கட் கேக்கறீங்க” என்று கேட்டார் தேநீர்க் கடைக்காரர். இவரிடம் சொல்லலாமா என்பது போலக் கேசவன் கண்ணனைக் கண்களால் பார்க்க ”சொல்லு” என்று கண்ணன் ஜாடை காட்டினான். “சும்மாதான இருக்கோம்; மலை ஏறிப் பாக்கலாம்னு போறோம்” “எந்த மலையில” “இங்க வேற எந்த மலை இருக்கு; இந்த மாதனூரு மலையிலத்தான்”

அவர் ஒன்றும் பேசவில்லை. கண்ணாடித் தம்ளர்களை வெந்நீர் ஊற்றிக் கழுவ முனைந்தார். கழுவி இருவருக்கும் தேநீர் கொடுத்தார். “கேட்டீங்க; ஒண்ணும் பதிலே சொல்லலியே” அவர் சற்று சும்மா இருந்ததைப் பார்த்துக் கேசவன் என்னென்னவோ நினைத்தான். கண்ணனைப் பார்த்தான். கண்ணன் தண்ணீர்ப் பாட்டில்களையும் பிஸ்கட்டுகளையும் எடுத்ததைப் பார்த்த அவர், “என்னா ஏதும் பிரார்த்தனையா” “அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க; சும்மாதான இருக்கோம்; போயிப் பாக்க்கலாமேன்னுதான்”

“அப்படியா ஜாக்கிரதையாப் போயிட்டு வாங்க” என்றார். “ஏங்க இப்படிச் சொல்றீங்க?” “ஒண்ணும் இல்ல; யாராவது வழி காட்டினா நல்லது; இல்லன்னா வழி தவறிப்போயிடும். அடிவாரம் வரை மண்ரோடு நல்லா இருக்கும். மலைமேலப் பாதை கெடையாது, சில எடத்துலப் பாறை மேலகூட ஏறிப் போகணுமாம்; வேற ஒண்ணும் பயமில்ல; ஆட்டுக்காரங்க சொன்னாங்க” என்றார்.

இருவரும் கிளம்பினார்கள். கிளம்பி விட்டார்களே தவிர இருவர் மனத்திலும் இனம் தெரியாத ஒரு பீதி இருந்தது. ஆனால் ஒருவருக்கொருவர் எதுவும் சொல்லிக் கொள்லவில்லை. கேசவன் கைக்கடியாரத்தைப் பார்த்தான். ”மணி ஏழு ஆயிட்டுது பாத்தியா? இன்னும் சீக்கிரமே கெளம்பி இருக்கணும்” “ஏண்டா தேநீர் குடிச்சுட்டுதான கெளம்பணும்” ”சரி வேகமா நட” “ஓடறதுக்கா போறோம்” “எல்லாத்தையும் பாத்து ரசிக்கணும்னா மெதுவாதாண்டா போவணும்” அரை மணி நடந்திருப்பார்கள். மலை போய்க்கொண்டே இருப்பது போலத் தெரிந்தது.

வழியில் இருபுறமும் கருவேலமரங்கள் அடர்த்தியாய் இருந்தன. அரசின் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் நடப்பட்டவை இப்போது மரங்களாக வளர்ந்து அந்த இடமே காடாக மாறி விட்டிருந்தது, அம்மரங்களில் பல பறவைகள் கூடு கட்டி இருந்தன. மரங்களிலிருந்து கீழே விழும் காய்களை ஆடுகள் கூட்டம் கூட்டமாகத் தின்று கொண்டிருந்தன. காட்டைத் தாண்டும்போது பாதை சற்று வளைந்து வலப்புறம் திரும்பிற்று. இப்போது கேசவன் திரும்பிப் பார்த்தான். “டேய், நாம வந்த வழியே காணோம் பாரு” என்றான்.

“ஆமாண்டா, சுத்தமா மறைஞ்சு போயிடுச்சு” இப்போது வெட்டவெளியாக இருந்தது. ஆங்காங்கே மூன்றடி உயரத்திற்குச் சிறுசிறு புதர்கள் தோன்றியிருந்தன. ஒவ்வொரு புதரும் ஏதோ சண்டை போட்டுக் கொண்டது போலத் தள்ளித் தள்ளியே இருந்தன. ஒரு புதரிலிருந்து மற்றொரு புதருக்கு நரிகளும்., முயல்களும் ஓடிக்கொண்டிருந்தன. இப்போழுது சாலை இடப்புறம் திரும்பியது. ”என்னா அருமையா இருக்குடா” என்றான் கண்ணன். நடுவில் மண்சாலை ஆறு போல ஓட இருகரைகளாக அடர்த்தியான மரங்கள் காடு போல வளர்ந்து இருந்தன. மாமரம், தேக்க மரம், பூவரச மரம் இவற்றுடன் சில வேப்ப மரங்களும் இருந்தன. பறவைகளின் கூச்சல் வானைப் பிளந்தது.

நேர்க்கோடு போல சாலை இருந்ததால் சற்றுத் தொலைவில் உள்ளவையும் மங்கலாகத் தெரிந்தன. திடீரென்று கேசவன் “அதோ பாருடா” என்று மெல்லிய குரலில் காட்டினான். சற்றுத் தொலைவில் சாலையின் ஓரத்தில் மரத்தடியில் ஏதோ வெண்மையாய் ஒரு மூட்டை கிடப்பது போல இருந்தது. “என்னடா பயமா இருக்கா” என்றான் கண்ணன். “பயம் ஒண்ணும் இல்ல” “அப்பறம் என்ன? ஏதோ மாதிரி பேசற? “அதெல்லாம் ஒண்ணுமில்ல”

பேசிக்கொண்டே அருகில் சென்றதும்தான் அந்த மூட்டை ஒரு கிழவர் எனத் தெரிந்தது. அவர் பக்கத்தில் நீண்ட ஒரு கழி கிடக்க, அவர் கீழே தரையில் குனிந்து கோடுகள் கிழித்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார். இருவரும் அவரைப் பார்த்தும் பார்க்காதது போலப் போகலாம் என அவரைத் தாண்டும் போது, “ஏன் புள்ளங்களா? பாத்தும் பாக்காத மாதிரிப் போறீங்களே? மலை ஏற அவ்வளவு அவசரமா?” என்று அவர் கேட்டது காதில் விழுந்தது.

இருவரும் நின்றுவிட அவர் தன் பக்கத்தில் இருந்த பித்தளைத் தூக்கை எடுத்துக் கொண்டு, எழுந்து அருகில் வந்தார். “ஏம்பா அப்படி ஆச்சரியமாப் பாக்கறீங்க? இங்க வேற எதுக்கு வயசுப் புள்ளங்க போவாங்க?” என அவர் கேட்டதும்தான் கேள்வி பதில் இரண்டையும் அவரே சொல்லிக் கொள்வது தெரிந்தது. ”நீங்க இங்க என்னா செய்யறீங்க தாத்தா” என்று கேட்டான் கேசவன். “நான்தாம்பா முனுசாமி; இங்க ஆடு மாடு மேய்க்கறவன்”” அப்படீங்களா? எங்க ஆடு மாடு ஒண்ணையும் காணோம்” என்றான் கண்ணன். ”எல்லாத்தையும் காட்டு உள்ள ஓட்டி விட்டிருக்கேன். சூரியன் மேக்க உழும்போது அதுங்க இதே எடத்துக்குத் தானே வந்திடும். எல்லாரும் ஊட்டுக்குப் போயிடுவோம். சரி கெளம்புங்க”

இருவரும் ஆச்சரியப்பட்டனர். “எங்க தாத்தா” என்றான் கண்ணன், “மலை ஏறத்தான்” “நீங்களுமா” “ஏன் என்னால முடியாதுன்னு நெனக்கறீங்களா? மூணு பேரும் வேணா ஓடுவமா? யார் மொதல்ல வராங்கன்னு பாத்திருவோம்” ”அதெல்லாம் வேணாம் தாத்தா, வாங்க” என்றான் கேசவசன். யாரும் பேசவில்லை. மரங்களில் இருந்து பறக்கும் பறவைகளைப் பார்த்துக்கொண்டே கண்ணனும் கேசவனும் சென்றனர். ஒரு மயில்கூட ஒரு மரத்தில் இருந்தது. இவர்களைப் பார்த்ததும் வரவேற்பது போல அகவியது. ”இந்த மாதனூரு மலையில மிருகம் ஏதாவது இருக்கா தாத்தா” என்று கேட்டான் கேசவன்.

“அதெல்லாம் ஒண்ணும் கெடையாது. மொசலு, பாம்பு, நரி சின்னச்சின்னதா எலிங்க, காட்டுப் பன்னிங்க இதான் இருக்கு; இன்னொரு தடவ மாதனூரு மலைன்னு சொல்லாதீங்க; மலை கோச்சுக்கும்; இதும் பேரு காட்டேரி கன்னி மலை.” கண்ணன் உடனே கேட்டான். “ஏன் தாத்தா அந்தப் பேரு?” “தம்பி, அது பெரிய கதை.” “சொல்லுங்க தாத்தா?” என்றான் கேசவன் ஆர்வமுடன்.

“அந்தக் காலத்துல இந்தத் திருமங்கலம் சமீனு ரொம்பப் பெரிசா இருந்திச்சு. சுத்துப் பட்டுல இருக்கற பத்துப் பாஞ்சு சமினுங்க எல்லாம் இது கீழ அடக்கம். மதுரையே இதுக்குக் கப்பம் கட்டிச்சு. ஆண்ட சமீன்தாருங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க; சனங்கக்கிட்ட வரி கொஞ்சமா வசூல் செஞ்சு நல்லதையே செஞ்சாங்க; அதால சமீந்தாரை எல்லாரும் ராசா ராசான்னுதான் கூப்பிட்டாங்க; அவருக்கு ஒண்ணுன்னா உசிரையும் கூடக் குடுப்பாங்க”

ராஜபூபதின்னு ஒரு சமீன்தாரு இருந்தாரு. அவரு தங்கமானவரு. அவரு பொண்டாட்டி கோமளவல்லி. அவங்களும் சனங்க மேல ரொம்பப் பிரியமானவங்க. என்னா ஒரு கொற என்னான்னா அவங்களுக்கு ஆண்வாரிசு இல்ல; அவருக்கப்பறம் ஆம்பளப் புள்ள இருந்தாத்தான சமீன்தாரா வரமுடியும். ஆனா அந்தக் கவலையைத் தீக்கறதுக்கு ஒரு பொம்பளப்புள்ள இருந்திச்சு.

அதும் பேரு மரகதம். அந்தப் புள்ளக்குக் கல்யாணம் ஆயிடுச்சான்னா அதுதான் அடுத்த சமீந்தாருன்னு ஒரு வழக்கம் இருந்திச்சு. அதுக்கு என்னா செய்வாங்கன்னா எந்த சமீன்லயாவது கல்யாணம் ஆகறதுக்கு ரெண்டு மூணு புள்ளங்க இருந்தா அதுல ஒரு பையனப் பாத்து வச்சுக் கல்யாணம் செஞ்சிடுவாங்க. அந்தப் பையனும் இங்கியே தங்கிடுவான்.

ஆனா இந்தப் பொண்ணு விசயத்துலு ஒரு சங்கடம் இருந்திச்சு. பொண்ணு பாக்கறதுக்கு அப்படியே ரதி மாதிரி இருக்கும். செவப்புன்னா அந்த மாதிரி செவப்பு எங்கியுமே பாக்க முடியாது. அழகுன்னா அப்படி ஒரு அழகு. எட்டயபுரம், சிங்கம்புணரி, ராமநாதபுரம், பாளையங்கோட்டைன்னு எல்லா சமீன்லேந்தும் புள்ளங்க வந்து பாத்தாங்க. பொண்ணோட திருமங்கலம் சமீனே வருதுன்னு எல்லாருக்கும் சந்தோசம்தான். ஆனா எல்லாரும் சொன்ன ஒரே கொறை, பொண்ணு ஒரே குண்டு. பாத்துட்டுப் போனவங்க சொன்னதும் தப்பில்ல. மரகதம் கொஞ்சம் என்னா அதிகமாவே குண்டுதான்.

ஒடம்பு செவப்பா இருந்து முகம் நல்லா அழகா இருந்து என்னா பிரயோசனம்னு சொன்னாங்க. அதிலும் எட்டயபுரம் சமீன்தாருப் பையன் “எங்கூருலப் பட்டணப்பிரவேசம் செய்யணும்னா பல்லக்கு தூக்க யாருமே வரமாட்டாங்க”ன்னு சொல்லிச் சிரித்ததுதான் பூபதிக்கும் கோமளவல்லிக்கும் ரொம்ப வருத்தமாப் போச்சு. போரூர்லேந்து வந்தவன் ஏதாவது வைத்தியம் செஞ்சு பொண்ணை எளைச்சு வையுங்க; அடுத்த நாளே நான் வந்து கட்டறேன்” என்றான்.

பூபதி ஒடனே அவரு சமீன்லேந்து மட்டுமில்ல கேள்விப்பட்ட எடத்திலேந்து எல்லாம் வைத்தியரை வரவழச்சுப் பாத்தாரு. அவங்களும் வந்து அரண்மனையிலேயே தங்கினாங்க. தெனம் மூலிகை கொண்டுவந்து அறைச்சுக் குடுத்தாங்க. என்னென்னமோ சூர்ணம், லேகியம் மருந்தெல்லாம் குடுத்தாங்க. அப்படியே ஒரு வருசம் ஓடிப் போச்சு. பட்டணத்துலேந்து வெள்ளைக்கார வைத்தியரை வரவழச்சாங்க. அவரும் வந்து பாத்து ஒரு வருசம் என்னென்னமோ செஞ்சு பாத்தாரு. தெனம் ஓடச்சொன்னாரு. மருந்து மாத்திரை எதுலயும் ஒடம்பு எளக்கல. முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

ஒரு நாளு வெளியூர்லேந்து ஒரு சாமியாரு வந்தாரு. ஒரு அம்பது வயசிருக்கும். நல்ல செவப்பான ஒடம்பு. தேக்குமரம் போலக் கட்டை. கண்ணில அப்படி ஒரு தேஜஸ். நெத்தி முழுசும் விபூதி பூசியிருந்தாரு. தோள்ல ஒரு பச்சை மூட்டை;. கால்ல மரத்தாலான கொறடு. கையில அவரு ஒசரத்துக்கு ஒரு பூண் போட்ட கழி. அரண்மனைக்குப் போனவரு அங்க வாசல்ல எல்லாரும் கிண்ணம் வச்சுக்கிட்டு வரிசையா நிக்கறதைப் பாத்து என்னா விசயம்னு கேட்டாரு. எங்க ராசா அவரு பொண்ணு எளைக்கணும்னு நாப்பத்தெட்டு நாளைக்கு சோறு போடறாருன்னு சொன்னாங்க. பொண்ணைப் பத்திப் பூரா கேட்டு தெரிஞ்சிக்கிட்டாரு. வரிசையிலக் கடைசியிலப் போயி நின்னாரு. எல்லாரும் போனபின்னாடி இவரு சும்மா வந்து நிக்கறதப் பாத்த சேவகருங்க ‘என்னா வேணும்’னு கேட்டாங்க. ‘ராசாவைப் பாக்கணும்’னு சொன்னாரு. ’புதுசா வந்திருக்கற சாமியாரு சொன்னாரு’ன்னு ராசாக்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனாங்க.

அங்க போயி. ”ராசாகிட்டத் தனியா பேசணும்”னு சொன்னாரு. “நான் ”எல்லாத்தையும் கேள்விப்பட்டேன். பொண்ணைப் பாக்கணும்”னு சொன்னாரு. பொண்ணு வந்தவுடனே அவரே இம்மா குண்டான்னு அசந்து போயிட்டாரு. கைரேகையெல்லாம் நல்லாப் பாத்தாரு. அப்பறம் “நீ போம்மா”ன்னு அனுப்பிட்டாரு. ராசாவையும் ராணியையும் வச்சுக்கிட்டு, “ரேகையைப் பாத்தா இது காட்டேரி செய்யற வேலைன்னு தெரியுது. நான் என்னா சொன்னாலும் செய்வீங்களா”ன்னு கேட்டாரு. “சாமி நீங்க எது சொன்னாலும் செய்வோங்க எப்படியாவது எளச்சுடணும்’ எங்க சமீனுக்கு நல்ல காலம் பொறக்கணும்னு கோமளவல்லி சொன்னாங்க”

”ஒரு பத்து நாளு இது அரண்மனையை உட்டு வெளியில வந்து என்னோடத் தங்கணும். தெனம் ஒக்காறவச்சுப் பூசை செய்யணும். ஒண்ணும் பயப்படறமாதிரி பூசையெல்லாம் இல்ல. சாதாரண பூசைதான். பலியும் இல்ல. ஆனா ஒருத்தரு கண்ணுலயும் படக் கூடாதுன்”னு சொன்னாரு. எங்க தங்கலாம்னு கேட்டதுக்கு இந்த மலையிலயே தங்கலாம். இன்னிக்கே போயி மலையில பாதி தூரத்துல எனக்கு ஒரு ஆசிரமும் பொண்ணுக்குத் தங்க ஒரு குடிசையும் கட்டிடு. தெனம் காலைல அடிவாரத்துல தேனு, பாலு பழம்லாம் நெறைய ரெண்டு வேளை சாப்பிடறமாதிரி வச்சுடு. சூரியன் உழறதுக்குள்ள ராத்திரி சாப்பிடப் பாலும் கோதுமை அப்பங்களும் வச்சுடு. நான் தெனம் கீழ வந்து எடுத்துக்கிட்டுப் போவேன்.

மரகதம் மொதல்ல பயந்தாலும் சாமியாரு தொணை இருக்கார்லன்னு ஒத்துக்கிட்டா. மலையிலேந்து ஏற எறங்க நாலு வழி இருக்கு. அந்த வழியில எல்லாம் சமீன்தாரு சரியான காவலு போட்டுட்டாரு. மூணாம் நாளு சாமியாரு மொதல்லியே போயிட்டாரு. மரகதத்தைப் பல்லக்கில ஏத்திக்கிட்டு ராசாவும் ராணியும் கொண்டு போயி உட்டுட்டு வந்தாங்க. அன்னிக்குப் பூரா சாமியாரு நெறய சிவனைப் பத்தி, பெருமாளைப் பத்திக் கதையெல்லாம் சொல்லிக்கிட்டிருந்தாரு. மறுநாள் சூரியன் வர்றதுக்குள்ள போயி பக்கத்துல இருக்கற அருவியிலப் போயிக் குளிச்சுட்டு வரச்சொன்னாரு.

அவ வந்ததும் சாமியாரு போயிக் குளிச்சுட்டு வந்து மரகதத்தை ஆசிரமத்தில ஒக்காற வச்சு மண்ணால சிவலிங்கம் செஞ்சு பூசை செஞ்சாரு. அப்பறம் ஆகாரமா தேனு பழமெல்லாம் எவ்ளோ வாணா தின்னுனு சொன்னாரு; தின்னு முடிச்சதும் சின்னதா ஒரு மூலிகை உருண்டை கொடுத்து ஒரே வாயில முழுங்கிட்டுத் தண்ணி குடிக்கச் சொன்னாரு. போயிப் படுத்துக்க; பயமா இருந்தா இந்தக் கத்தியை வச்சுக்கன்னு குறுவாள் ஒண்ணு கொடுத்தாரு. எதுக்கும் இருக்கட்டும்னு அதைத் தலை அடியில வச்சுக்கிட்டு மான் தோலில் போயிப் படுத்தவ அப்படி ஒரு தூக்கம் தூங்கிட்டு சூரியன் உழும்போதுதான் முழிச்சா. மறுபடியும் காலைல செஞ்ச மாதிரி பூசை. ஆகாரம்; மூலிகை உருண்டை; தூக்கம்.

அஞ்சாம் நாளு ”ஒனக்கு இப்ப எப்படித் தெரியுது”ன்னு கேட்டாரு. “சட்டையெல்லாம், வளையலு எல்லாம் கழலுது சாமி. எளைக்க ஆரம்பிச்சுட்டேன்”னு வெக்கத்தோட மரகதம் சொன்னா. “ஆனா சாமி, தூக்கம்தான் நல்லா வருது; எங்க அரண்மனையிலக் கூட அப்படி வராது”ன்னா. “மலைக் காத்து வருதில்ல; அதான்”னு சொன்னாரு. ஒம்பதாம் நாளு மரகதம் குளிக்கச்சத் தண்ணியிலப் பாத்து நாமதானான்னு ஆச்சரியப்பட்டா. அந்த அளவுக்கு மெல்லிசாப் போயிட்டா. அன்னிக்கு ராத்திரி ஒரு கரடி வந்து அவ தூங்கச்சே மேல வந்து படுத்த மாதிரி இருந்திச்சு. தள்ளத் தள்ள ராத்திரி பூரா போகவே இல்ல.

காலையில சாமியாருக்கிட்ட சொன்னா எதாவது கனா கண்டிருப்பன்னு சொல்லிட்டாரு. பத்தாம் நாளு ராத்திரி தூங்கக் கூடாதுன்னு இருந்தா. ஆனா அவள மீறித் தூங்கிட்டா. இருந்தாலும் கரடி வந்து போனதைக் கண்டு புடிச்சுட்டா; அவருகிட்டச்சொன்னா அவரே பயந்துட்டாரு. காலையிலப் பல்லக்கோட வந்த ராசாவுக்கும் ராணிக்கும் மரகதத்தைப் பாத்துட்டு அடையாளமே தெரியல; ஒரே சந்தோஷம் அவங்களுக்கு. ”அவரு குளிச்சுட்டுப் பூசை செஞ்சுட்டு வராறாம். நம்மப் போகச் சொல்லிட்டாரு”ன்னு மரகதம் சொன்னா.

”அவரைப் பாத்துச் சொல்லிட்டுப் போனாதான மரியாதை”ன்னு கோமளவல்லி சொன்னாரு. ”அவரு சொன்னதை மீறினா அவருக்குக் கோவம் வந்திரும்னு மரகதம் சொன்னதால எல்லாரும் கெளம்பினாங்க. மத்தியானம் சாமியாரு வரல; சேவகருங்க போயித் தேடிக் கண்டுபுடிச்சா அவரு அருவிக்கரையிலே மயங்கிக் கெடக்காரு. பாத்தா முதுகிலக் கத்திக் குத்து உழுந்திருக்கு. தூக்கி வந்து காயத்துக்குக் கட்டுப் போட்டாங்க; ஒரே வார்த்தைதான் சொன்னாரு. ”காட்டேரி வந்து குத்திடுச்சு” அவ்ளோதான் பூட்டாரு.

முனுசாமி இருந்ததால் வழி எளிதாக இருந்தது. ஆனால் மலை உச்சிக்குச் சென்று பார்த்தபோது கேசவனுக்கும் கண்ணனுக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சி இருந்தது. மூன்று கற்கள்தாம் இருந்தன. மலை உச்சியிலிருந்து பார்த்தால் இயற்கையின் விருந்து அழகாகக் காட்சியளித்தது. பிஸ்கட்டு. தண்ணிப் பாட்டில் எல்லாம் காலி. முனுசாமி ஒன்றும் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் எப்பொழுது விலகினாரென்றும் தெரியாமல் சட்டென்று அவர் விலகிவிட்டார். அவருக்கு வழியெல்லாம் தெரியும் இங்கியே பழகினவருதான” என்று கோவிந்தன் சொல்ல இருவரும் இறங்கிவந்து விட்டனர்.

”பரவா இல்லியே, சீக்கிரம்தான் வந்துட்டீங்க; வழி தெரிஞ்சுதா” ஊர்த்தலைவர் கேட்டார். முனுசாமின்னு ஒரு பெரியவரு அவருதான் வழி காட்டினாரு” என்றான் கண்ணன். கேட்டவருக்கு ஆச்சரியம். யாரும் வராத மலையிலயும் ஒங்களுக்கு வழிகாட்ட ஆளு கெடச்சிருக்கு” என்றார் அவர்.

மறுநாள் மதியம் பதினோரு மணி இருக்கும். பள்ளியிலிருந்து ஒரு மாணவன் வந்து, கணக்கு வாத்தியாரும், தமிழய்யாவும் பள்ளிக்கூடத்துக்கு வரலியாம்; என்னான்னு ஹெட்மாஸ்டரு கேட்டுட்டு வரச்சொன்னாரு” என்றான்.

கோவிந்தனுக்கு ஒரே ஆச்சரியமாய் இருந்தது. உடனே எதிர் வீட்டுக்குப் போனார். கதவு உள்புறம் தாழிடப் பட்டிருந்தது. தட்டிக் கொண்டே, “கண்ணா. கேசவா” என்று உரக்கக் குரல் கொடுத்தார். பதிலே இல்லை. சன்னல் கதவுகளும் சாத்தப்பட்டிருந்தன. கை வலித்ததால் வீட்டின் உள்ளே இருந்து உலக்கை கொண்டு வந்து கதவை இடித்தார். மாணவனும் “சார், சார்” என்று கத்தினான்.

சற்று நேரம் கூச்சலிட்டு இடித்த பின்னர் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கேசவன்தான் வந்து திறந்தான், கலைந்த தலையுடனும், சிவந்த கண்களுடனும் ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு இருந்தான். ஆனாலும் அவன் உடம்பு லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. ”வாங்க” என்று மெல்லிய குரலில் கூப்பிட்டவன், ”ரெண்டு பேருக்கும் ரொம்பக் காய்ச்சலுங்க” என்று கூறி உள்ளே சென்றான்.

உள்ளே சென்று பார்த்தால் கண்ணனும் கழுத்துவரை இறுக மூடிக்கொண்டு தூங்குவது போல இருந்தான். அருகில் சென்றாலே உடம்பு அனல் அடித்தது. “கண்ணா, கண்ணா” என்று கோவிந்தன் குரல் கொடுக்க அவன் கண் விழித்தான். ஏதோ முனகுவது போலக் கேட்டது. தலைவர் குனிந்து அவன் வாயருகே காதைக் கொண்டு போன போது மெதுவாகக் “காட்டேரி, காட்டேரி” என்று கண்ணன் முனகுவது கேட்டது.