
தேன்துளிகளை உப்புக்கரைசலை
கருப்பஞ்சாற்றை திராவகத்தை
கொட்டிவிட்டுப் போகிறது
நிறையாத கோப்பையினுள்
வெட்டும் மின்னலொன்று இறங்கி
கோப்பையை உடைத்துவிட்டு
விட்டுச் செல்கிறது
பற்றிப் பெய்யும் பெருமழையை

தேன்துளிகளை உப்புக்கரைசலை
கருப்பஞ்சாற்றை திராவகத்தை
கொட்டிவிட்டுப் போகிறது
நிறையாத கோப்பையினுள்
வெட்டும் மின்னலொன்று இறங்கி
கோப்பையை உடைத்துவிட்டு
விட்டுச் செல்கிறது
பற்றிப் பெய்யும் பெருமழையை
ஈர விறகுகள் ஊறிப் பெருத்து
வெடித்து எரிகின்றன,
விரிசல்கள் வழியே
இசை ஒன்றை எழுப்பிக் கொண்டு.
உருட்டிக் கொண்டு வரப்பட்ட
உடல் மழுங்கிய கூழாங்கற்கள்
நதியின் மடியில்
புரண்டு எழுகின்றன,
மலை முகட்டுகளை
எதிரொலித்துக் கொண்டு.
பருவ மாற்றத்தை
பழகிக் கொண்ட
தடித்த மரவுச்சியிலிருந்து
பழுத்து உதிரும் இலை,
காட்டின் பரிணாமத்தை
மாற்றி அமைக்கிறது.
வடிந்தது போக ஒதுங்கிய
மழைநீரில் நொதித்த கூரை
சொட்டிக் கொண்டிருக்கிறது
துளித்துளியாக.
காமப்பெருங்குன்றின் முகட்டில்
வசிக்கின்றவன்
முகர்கின்றான்
கேட்கின்றான்
மல்லாந்து கிடக்கின்றான்
உரையாடுகின்றான்
…
வியர்க்கின்றான்
இறங்கி நிற்கின்றான்
கண்ணிமைக்கின்றான்
அவன் காதற்பள்ளத்தாக்கினுள்
எப்போதைக்குமாக
இறங்கிக்கொண்டிருக்கின்றான்
அக்காதற்பள்ளத்தாக்கினடியில்
வசிக்கின்றவள்
…
குப்புறக் கிடக்கின்றாள்
உரையாடுகின்றாள்
மூச்சிழுக்கின்றாள்
மெல்ல முயங்குகின்றாள்
மூச்சிரைக்கின்றாள்
வியர்க்கின்றாள்
கண்ணிமைக்கின்றாள்
எழுந்து நிற்கின்றாள்
அவள் அக்காமப்பெருங்குன்றின் முகட்டுக்கு
எப்போதைக்குமாக
ஏறிக்கொண்டிருக்கின்றாள்
கங்காருக்குட்டியென
உடன் பயணிக்கும்
மடிக்கணினியிலிருந்து
கண்ணெடுக்காமலேயே
எப்போதாவது நலம் விசாரிக்கும் மகன்
காதுகருவியை கர்ணனின்
கவசகுண்டலமாக்கி
கண்களால் அனுசரணையாய்
அபிநயக்கும் மருமகள்
கருவான நாள்முதல்
கனவுக்கோட்டையைக் கைப்பற்ற
எல்லாம் கற்றுக்கொள்ள
பம்பரமாய்ச் சுழலும் பேரன்
அவசரத்தேவை ஐம்பது நூறுக்காக
தன் வீட்டுக்கதையை
விலாவரியாக விஸ்தரிக்கும்
பொன்னம்மாவின் வார்த்தைகள்
இவர்களை விட
இதமாயிருக்கிறது இப்போதெல்லாம்
அள்ளிச்செருகிய குடுமியுடன்
அதக்கிய வெற்றிலை ஊறிவழிய
ஓலைப்பெட்டியில் சேர்த்து வைத்த
தலைச்சன் மண்டையோட்டு மையுடன்
நட்டநடு நிசியில் சுடுகாட்டிலிருந்து
அள்ளி வந்த சாம்பலுமாய்
குறி சொல்ல வரும் சாமக்கோடங்கி
புதைச்சு வச்ச சூனியத் தகடு
சோற்றில் சிக்கும் சுருள் முடி
பற்றி எரியும் கூரை
சுற்றி வரும் நாகம்
பரிகாரங்கள் எல்லாம் பாட்டில் இருக்கும்.
ஆழாக்கு அரிசிக்கும், பூச்சி அரித்த போர்வைக்கும்
இணக்கமாக ஜக்கம்மாவின் அருள் உரைக்கும்..
வெயில் ஏறிய வெக்கை வேளைகளில்
தலையில் சுற்றிய துண்டோடு
கல்திண்ணையில் சாக்கட்டியில் வரைந்த
வெட்டுப்புலி ஆட்டம் விளையாட
அள்ளையை சொறிந்து கொண்டு
குத்த வைத்து உட்கார்ந்திருக்கும்.
oOo
ஒளிப்பட உதவி – Board Games of India