ஈர விறகுகள் ஊறிப் பெருத்து
வெடித்து எரிகின்றன,
விரிசல்கள் வழியே
இசை ஒன்றை எழுப்பிக் கொண்டு.
உருட்டிக் கொண்டு வரப்பட்ட
உடல் மழுங்கிய கூழாங்கற்கள்
நதியின் மடியில்
புரண்டு எழுகின்றன,
மலை முகட்டுகளை
எதிரொலித்துக் கொண்டு.
பருவ மாற்றத்தை
பழகிக் கொண்ட
தடித்த மரவுச்சியிலிருந்து
பழுத்து உதிரும் இலை,
காட்டின் பரிணாமத்தை
மாற்றி அமைக்கிறது.
வடிந்தது போக ஒதுங்கிய
மழைநீரில் நொதித்த கூரை
சொட்டிக் கொண்டிருக்கிறது
துளித்துளியாக.