கங்காருக்குட்டியென
உடன் பயணிக்கும்
மடிக்கணினியிலிருந்து
கண்ணெடுக்காமலேயே
எப்போதாவது நலம் விசாரிக்கும் மகன்
காதுகருவியை கர்ணனின்
கவசகுண்டலமாக்கி
கண்களால் அனுசரணையாய்
அபிநயக்கும் மருமகள்
கருவான நாள்முதல்
கனவுக்கோட்டையைக் கைப்பற்ற
எல்லாம் கற்றுக்கொள்ள
பம்பரமாய்ச் சுழலும் பேரன்
அவசரத்தேவை ஐம்பது நூறுக்காக
தன் வீட்டுக்கதையை
விலாவரியாக விஸ்தரிக்கும்
பொன்னம்மாவின் வார்த்தைகள்
இவர்களை விட
இதமாயிருக்கிறது இப்போதெல்லாம்