கவிதை

சர்ப்பம் – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

ஒளிரும் மேலுடல் மினுக்க
நெருஞ்சி முட்புதர் ஊடே ஊர்கிறது.
சுற்றி அணையும் சுவர்கள்
நெருக்குந்தோறும்
விரிவடைகின்றன அதன் மூலைகள்.
கூட்டின் அமைதி பொழுதெல்லாம்
நச்சுப்பை முடைந்து
விடம் செறிகின்றது.
வால் குலைத்து
போகும் தடமெல்லாம்.
பற்றி எரிகிறது காடு.
கை பற்றி ஏறி வந்து
தோள் சுற்றி
முறுக்கிக் கொள்கிறது.

சுடர் நெருப்பென நாக்கு நீட்டி
தலையென நிலை கொள்கிறது.

வரம்புகளற்ற அகண்ட நிசப்த வெளியில்
தன் வால் கவ்விச் சுருண்டு உறங்கும்
சர்ப்பம்.

பேரமைதி – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

சரவிளக்கொளியால் மெருகேற்றப்பட்ட
அகண்ட அரங்கத்தில்,
நறுவிசாய் உடுத்திய
கனவான்களும் குணவதிகளும்
சீரான வரிசையில்
தூசியற்ற தரைவிரிப்புக்கு நோகாதபடி
ஊர்ந்து செல்கிறார்கள்,
கரம் பற்றியும், மெலிதாக கட்டியணைத்தும்,
ஆறுதல் சொற்களை அளந்து பரிமாறியபடி.

பேரமைதியை குலைத்தபடி
வெடித்து கிளம்புகிறது
ஓர் அழுகைக் குமுறல்,

மலர் ஜோடனையுடனான மரப்பெட்டியினுள்
லினன் விரிப்பின் மேல்
நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டுக் கிடந்தவரை
இரத்தமும் சதையுமாக
இழுத்து வெளியில் போட்டது.

இப்படியுமோரமைப்பு – ஆகி

ஆகி

கண்ணாய் தாய்மார்
தந்தைமார் தோளாய்
கேசமாய் மெத்தப்படித்தோர்
மதம்பிடித்தோர் மயக்கமாய்
இதயமாய் வீடற்றோர்
பாலியக்கமற்றோர் இயல்பாய்
இயலுணர்வாய் திருனர்கள்
கலைஞர்கள் நுண்ணுயிர்கட்டாய்
உணர்கொம்பாய் தாவரங்கள்
தோட்டத்திற்கு நீர்பாசனத்தை சட்டெனத்துண்டித்த உணவதிகாரியை
நீயதை வாசிக்காதே என்றாணையிட்டறைந்த நூலதிகாரியை
ஆசைப்பட்டானென்று பட்டென்றுதைத்தக் காதலதிகாரியை
பாதிக்கப்பட்டோரனைவரின் உயிரணுக்களில் வசிக்கும் தீங்கற்ற
இச்சைகளனைத்தும் முடிவிலிவரை ஒத்திசைத்து பச்சைபச்சையாய்
வசை பாடுகின்றன
குரல்நாணாய் மகள்கள்
மகன்கள் செவியாய்
நனவாய் விலங்குகள்
பறவைகள் கனவாய்
இப்படி யோரமைப்பு
பிறப்புறுப்பாய் இச்சைகள்
இச்சைகள் இரைப்பையாய்
மூளையாய் இச்சைகள்
குறிக் கோள்களற்ற
பரிசுத் தமான
இச்சைகள்

இக்கவிதை – சரவணன் அபி

சரவணன் அபி

வானின்று பொழியும் நீர்ச்சரங்களில்
மழை வில்லை மண் இறக்கிவிடும்
பிரயத்தனங்களின் கனமில்லாத கவிதை

பதிந்து சென்ற தடங்களின் அழுத்தமும்
புதுப்பாதை சமைக்க நேரும்
நிர்பந்தங்களின் எடையுமற்ற கவிதை

தன் சிறகின் இளைப்பு தவிர
எதன்பொருட்டும்
தோள்தர நேர்ந்துவிடும் கட்டுப்பாடற்ற கவிதை

எளிதில் உருவழிந்துபோகும்
எதிலும் குறிக்கப்பெறா
இந்தக்கணம் போலும்
இக்கணம் வாழும்
இக்கவிதை