ஒளிரும் மேலுடல் மினுக்க
நெருஞ்சி முட்புதர் ஊடே ஊர்கிறது.
சுற்றி அணையும் சுவர்கள்
நெருக்குந்தோறும்
விரிவடைகின்றன அதன் மூலைகள்.
கூட்டின் அமைதி பொழுதெல்லாம்
நச்சுப்பை முடைந்து
விடம் செறிகின்றது.
வால் குலைத்து
போகும் தடமெல்லாம்.
பற்றி எரிகிறது காடு.
கை பற்றி ஏறி வந்து
தோள் சுற்றி
முறுக்கிக் கொள்கிறது.
சுடர் நெருப்பென நாக்கு நீட்டி
தலையென நிலை கொள்கிறது.
வரம்புகளற்ற அகண்ட நிசப்த வெளியில்
தன் வால் கவ்விச் சுருண்டு உறங்கும்
சர்ப்பம்.